Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓர்மை இல்லடா கோந்தே…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மறதி என்பது பெரிய வரம் என்று சிலர் சொல்வதுண்டு. அதிலும் குறிப்பாக தேவையில்லாத குப்பைகளை மனச்சிறையில் பூட்டி வைத்துக்கொண்டு கவலைப்படுவதை விட மறப்பது மேல். வெகு சிலருக்கு மட்டுமே இந்த மறதி என்பது ஒரு வரமாக அமைகிறது. எல்லோருக்கும் இந்த வரம் கிடைப்பதில்லை. மறக்க வேண்டிய விஷயங்களை மனதில் போட்டு குழப்புவதை விட மறந்து விடுவது மேல் தானே. ஆனால் அது அத்தனை சுலபம் அல்ல. தேவையான விஷயங்கள் மறந்து விடுவதும் தேவையற்ற விஷயங்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விடுவதும் இயல்பு தானே.
 
Post%2015%20June%202023%20-%201.png
 
படம்: இணையத்திலிருந்து….
நண்பரின் தாயார்: நாங்கள் எப்போது நண்பரின் வீட்டிற்குச் சென்றாலும் அவரது தாயார் எங்களையும் அவரது மகன் போலவே பாவித்து, "சாப்பிட்டு போடா கோந்தே" என்று சொல்வதோடு சாப்பிட வைத்தும் அனுப்புவார். அவரது கை வண்ணத்தில் எத்தனையோ முறை சாப்பிட்டு இருக்கிறேன். அதுவும் பாசத்தோடு அவர் எங்களுக்கு உணவு பகிர எப்போதையும் விட கொஞ்சம் அதிகமாகவே உணவு எங்களுக்கு உள்ளே சென்று இருக்கும். ஆனாலும் அவர் எங்களைச் செல்லமாக திட்டுவார் "நல்லா சாப்பிடுங்கடா கோந்தேளா….. இந்த வயசுல நல்லா சாப்டா தானே வயசான காலத்துல தெம்பா இருக்க முடியும்?"என்றும் சொல்வார். நண்பரின் வீட்டுக்கு எப்போது சென்றாலும் அங்கே உணவு சாப்பிடாமல் அவர் எங்களை அனுப்பியதே இல்லை. எப்போதும் பாசத்தினை பொழிபவர். தலைநகரில் குடும்பத்தினரை விட்டு விலகி, தனியே இருக்கும் என் போன்ற சில நண்பர்களுக்கு அவர் எப்போதும் தனி கவனிப்பு தந்தவர் - குறிப்பாக எனது திருமணத்திற்கு முன்னர். திருமணத்திற்குப் பிறகும் கூட, என்னிடமும், மனைவி மற்றும் மகளிடம் பாசத்தினை தொடர்ந்து காட்டியவர். தலை நகர் தில்லியில் இப்படியான சில பெரியவர்கள் எனக்கு அமைந்தது ஒருவித வரம் என்று தான் சொல்ல வேண்டும்.
 
 
சில வருடங்கள் நண்பர், அவரது அலுவலகத்தில் பணி மாற்றம் காரணமாக தில்லியை விட்டு விலகி வேறு ஊர்களில் பணிபுரிந்தார். பல ஊர்களுக்கு மாறினாலும், கூடவே அவரது அம்மாவும் சென்று விடுவார். தில்லியில் நண்பரின் குடும்பத்தினர் இருக்க, நண்பரும் அவரது அம்மாவும் ஊர் ஊராக சென்று கொண்டிருந்தார்கள். சில மாதங்கள் முன்னர், அவரது அம்மாவின் உடல்நிலை காரணமாக, அவரது பணியில் விருப்ப ஒய்வு பெற்று மீண்டும் தில்லி திரும்பியிருக்கிறார். சென்ற வார இறுதியில் நண்பர் வீடு இருக்கும் பகுதிக்கு வேறு ஒரு வேலையாக செல்ல நேர்ந்த போது நண்பரையும் அவரது அம்மாவையும் பார்த்து வரலாம் என்று நண்பரது இல்லத்திற்குச் சென்று இருந்தேன். குரல் கேட்டு, உள்ளே படுத்திருந்தவர் வெளியே நடந்து வந்தார். சிறிது நேரம் என்னை பார்த்துக் கொண்டிருந்தவர் "நீ மீனாவோட புள்ள தான? எப்படி இருக்காய்? மீனா எப்படி இருக்கா? நீ எப்படி இருக்க? சௌக்கியம் தானே?" என்று வரிசையாகக் கேள்விகளை அடுக்கினார். நான் அவரது வீட்டிற்குச் செல்லும் முன்னர் நண்பரை அழைத்து வரப்போவதைச் சொல்லி இருந்தேன். நண்பர் அவரது அம்மாவிற்கு இருக்கும் மறதிப் பிரச்சனைகள் குறித்து சொல்லி இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக Dementia தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று சொல்லி இருந்ததால், நண்பரின் அம்மா கேட்ட கேள்விகள் என்னை அதிகம் பாதிக்கவில்லை.
 
 
நான் இன்னார், என் பெயர் இது, எப்படி அவர் எனக்கு பாசமாக உணவு தருவார் என்று அவரிடம் நண்பரும் நானும் சொன்னாலும், அவர் மனதில் நான் மீனாவின் மகன் என்று உருவகம் ஆகிவிட்டது என்பதால் என்னை அவரால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. சில நிமிடங்கள் மீண்டும் மீண்டும் கேட்ட பிறகு, “ஓர்மை இல்லைடா கோந்தே…. எல்லாம் மறந்து போயிடறது” என்று சொல்ல எனக்கு அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவ்வப்போது மறதி மட்டுமல்லாது கோபமும் அதிகம் வருகிறது என்றும், சின்ன வயதில் ஒரு முறை கூட மகனை அடித்திராத அவர் இப்போதெல்லாம், ரெண்டு மூன்று தட்டு தட்டிவிடுகிறார் என்றும் கேட்டபோது மனதுக்குள் ஒரு வித வலி. பல பெரியவர்கள் இப்போது இது போன்ற பிரச்சனைகளால் அதிகம் வாடுகிறார்கள். வேறு ஒரு நண்பரின் தாயாரும் இப்படி Dementia பிரச்சனையால் அதிகம் அவதிப்பட்டார். எதனால் இந்த பிரச்னை உருவாகிறது, என்னதான் மாத்திரை மருந்துகள் என மருத்துவர்கள் கொடுத்தாலும், சரியான தீர்வு கிடைப்பதில்லை என்று தான் தெரிகிறது. இவர்களை கவனித்துக் கொள்வதும் ஒரு சவாலான விஷயமாகவே இருக்கிறது.
 
 
நண்பர் வீட்டிலிருந்து நண்பரும் நானுமாக ஒரு வேலையாக வெளியே புறப்பட, எங்கே போகிறோம் என்று குறைந்தது ஐந்து முறையேனும் கேட்டு இருப்பார் - ஒவ்வொரு முறையும் நாங்கள் பதில் சொன்ன பிறகும். அவருக்கு பதில் சொல்ல, அவரை பொறுமையாக கவனித்துக் கொள்ள தேவையான சக்தியை எல்லாம் வல்ல இறைவன் தரவேண்டும் என்று மனதுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டேன் – அதைத் தவிர என்னால் செய்ய முடிந்தது வேறு ஒன்றும் இல்லை. நண்பருடன் வெளியே சென்று வேலை முடிந்த பின்னர் நான் வீடு திரும்ப, நண்பர் அவரது வீட்டிற்குச் சென்றார். அங்கே சென்று வந்த பிறகு என் மனதில் நண்பரின் அம்மாவினைப் பற்றிய எண்ணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காதில் தொடர்ந்து அவர் சொன்ன வார்த்தைகள் - “ஓர்மை இல்லடா கோந்தே…” - தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எப்படியும் இந்த வார்த்தைகளை என்னால் இன்னும் சில காலமேனும் மறக்க இயலாது!
 
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து

Edited by ஏராளன்
எழுத்தாளரின் பெயரை சேர்த்துள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்படியான அனுபவம் ஒன்று இருக்கிறது. அந்த அம்மா இப்பொழுது உயிரோடு இல்லை. அவர் பற்றி எழுதியும் இருக்கிறேன்.

 ஓர்மை இல்லடா கோந்தே எனக்கு பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்க உதவியது. நன்றி ஏராளன்

  • கருத்துக்கள உறவுகள்

எனது தாயாருக்கும் கடைசி காலத்தில் மறதி அதிகமாய் இருந்தது.......எனக்கும் இப்பவே ஆரம்பிக்கிறது போலத்தான் கிடக்கு.......அனால் மனிசியை போய்காட்டேலாது, உது காரியவிசர் எண்டு சொல்கிறா.....!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

எனது தாயாருக்கும் கடைசி காலத்தில் மறதி அதிகமாய் இருந்தது.......எனக்கும் இப்பவே ஆரம்பிக்கிறது போலத்தான் கிடக்கு.......அனால் மனிசியை போய்காட்டேலாது, உது காரியவிசர் எண்டு சொல்கிறா.....!  😂

ஐபிஎல் கிரிக்கெட் சம்பியன் இப்படிச் சொல்லலமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.