Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமன்னன் எனும் மாமனிதன்                                         -சுப. சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                   மாமன்னன் எனும் மாமனிதன்

                                                           -சுப. சோமசுந்தரம்

           

இது திரை விமர்சனம் இல்லை; விமர்சனம் இல்லாமலும் இல்லை. 'மாமன்னன்' திரைப்படம் எழுப்பிய சிந்தனைச் சிதறல்கள் எனக் கொள்ளலாம்.
               சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்படுவது சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள திரைப்படமான 'மாமன்னன்'. இயக்குனர் திரு. மாரி செல்வராஜ் அவர்கள் திரைக்கடலில்  மூழ்கி எடுத்த மூன்றாவது முத்து இப்படம் - பரியேறும் பெருமாள், கர்ணன், வரிசையில் மாமன்னன். மூன்றுமே சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் நம் செவிப்பறையைத் தாக்குவன; அவர்களது வலியை நமக்குக் கடத்தி சமூகத்தின் மீது சம்மட்டி அடியாய் விழுவன. முதல் இரண்டு படங்களும் அவ்வலியின் சித்திரங்கள். 'மாமன்னன்' வலியின் நிவாரணியைக் கோடிட்டுக் காட்டுவதாகவே உணர்கிறேன். நாம் நினைக்கிற சமூக சீர்திருத்தங்களையெல்லாம் கொண்டு வர வேண்டுமென்றால் ஒரு ஜனநாயக அரசியலில் தேர்தல் களத்தை எதிர்கொண்டு ஆட்சிப் பொறுப்பிற்கு நாம் வரவேண்டும் என்று எண்ணிச் செயல்பட்ட அறிஞர் அண்ணாவை நினைவுறுத்துகிறது 'மாமன்னன்' திரைப்படத்தில் இறுதியில் சுட்டப் பெறும் வலி நிவாரணி.
            "நீங்க நீங்களாகவே இருக்கிற வரைக்கும், நான் நாயாகத்தான் இருக்கணும்னு நீங்க நினைக்கிற வரைக்கும் எதுவும் மாறாதுங்க !" என்று விரக்தி அடைந்த யதார்த்தவாதியான பரியேறும் பெருமாளிலிருந்து "உன்னால ஒருத்தனைத் திருப்பி அடிக்க முடிந்தும் நீ அவன்கிட்ட திரும்பத் திரும்ப அடி வாங்கினால் அது கோழைத்தனம்" என்று போதிக்கும் மாமன்னனாய் மாரி செல்வராஜ் காட்டும் பரிணாம வளர்ச்சி தமிழ்ச் சமூகத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சி. மூன்று படங்களையும் பற்றிய ஒரு சுருக்கமான பார்வை: 'பரியேறும் பெருமாள்' ஆணவக் கொலைகளை நேரடியாகப் பேசாவிட்டாலும் அவற்றைத் தொட்டுக் காட்டியது; 'கர்ணன்' கொடியங்குளம் கொடுமையை கண்முன் நிறுத்தியது; 'மாமன்னன்' இமானுவல் சேகரனைப் படம் பிடித்து, "சரி, இனி என்ன செய்யலாம் ?" என்ற நம்பிக்கை தரும் யதார்த்தத்திற்கு வருகிறது.
              முதற் படம் வருவதற்கு முன்பே தமது 'மறக்கவே நினைக்கிறேன்' மூலம் எழுத்துலகில் தடம் பதித்தவர் மாரி செல்வராஜ். எடுத்த எடுப்பிலேயே அவரது சான்றாண்மையை உலகிற்குப் பறைசாற்றியது அவர் எழுத்து. சாதியத்தின் வலிகளுக்குப் பெரும்பாலும் அப்பாற்பட்டது அந்த எழுத்து. சாதியக் கொடுமைகளை எழுத்தில் வடிப்பதை விட உயிரோவியமாய்த் திரையில் காட்டவே காத்திருந்தாரோ என்னவோ ! சாதித்தார். மூன்று படங்களிலும் சாதித்து விட்டார். எழுத்தாற்றலும் சொல்லாற்றலும் சிந்தனைத் தெளிவும் உள்ள ஒரு மனிதன் சாதித்துதானே ஆக வேண்டும் ! "நீ உட்காருப்பா, எந்திரிக்காதே ! என்று நாயகன் தன் தந்தைக்குக் கட்டளையிடுவதும், "அவர் உட்கார மாட்டார். அப்படித்தான் வழக்கம். யார் சொன்னாலும் கேட்க மாட்டார்" எனும் வில்லனின் சாதித் திமிரிடம், "நீங்க சொன்னீங்களா ?" என்று நாயகன் கேட்பதும் மாரி செல்வராஜின் சொல்லாற்றலுக்கும் சிந்தனைத் தெளிவிற்கும் சான்று பகர்வன. 'மாமன்னனி'ன் மேற்கூறிய இக்காட்சியிலும், முதல்வர் அறையில் அப்பா உட்கார்ந்து பேசுகிறாரா என்று பார்க்க அறையிலுள் வலுக்கட்டாயமாக நாயகன் நுழையும் காட்சியிலும், பின்னர் ஏதோ ஒரு விசேஷ வீட்டில் மேட்டிமைச் சாதியினர் முன் உட்கார்ந்து இருப்பதைத் தெளிவாகக் குறிக்கும் போதும் இமானுவேல் சேகரனும் முதுகுளத்தூரும் நம் மனக்கண்முன் வரவில்லையென்றால் நமக்கு சமூக, அரசியல், வரலாறு தெரியவில்லை என்று பொருள். நாற்காலியில் உட்காருவதெல்லாம் சமூகத்தில் ஒரு தலையாய பிரச்சனையா என்று சமூக வலைத்தளங்களில் கேட்கும் சில தற்குறிகளுக்கு மாரி செல்வராஜ் விடுக்கும் செய்தி - "நாற்காலியில் உட்காருவது, உட்காரச் சொல்வதெல்லாம் ஒரு குறியீடு". அறிவு, மானம் இவை உள்ளோர்க்கு அது புரியும். அது தலையாய பிரச்சினை இல்லையென்றால், இமானுவேல் சேகரன் ஏன் தன் உயிரைக் கொடுக்க வேண்டும் ? அது சுமார் எழுபது வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒன்று என்றால், இப்போது கூட ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் வகுப்பைச் சேர்ந்த ஒருவரைத் தரையில் உட்கார வைத்ததும், பள்ளித் தலைமையாசிரியரான தலித் ஒருவரைத் தேசியக்கொடி ஏற்ற விடாமல் செய்ததும் ஏன் செய்திகளாயின ? "இத்தனைக் காலம் கழித்து ஏன் ?" என்று தலித் தலைவர்களாய்த் தங்களை அடையாளப்படுத்துகிற சிலரே கேட்பது வேடிக்கை. நாற்காலியில் உட்கார்வது என்பது வீழ்த்தப்பட்ட சமூகம் எழுந்து நிற்பது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
             மாரி செல்வராஜ் அவர்களின் மாமன்னன் படத்தைப் பெரும்பாலும் சமூகம் பாராட்டுவதும், வெகுசிலர் பகைமை கொண்டு வன்மத்தோடு தாக்குவதும், சிலர் நடுநிலையோடு விமர்சிப்பதும் வலைத்தளங்களில் காணக் கிடைப்பன. தோழமையுணர்வுடன் சிலர் யோசனைகள் சொல்வதும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழவே செய்கின்றது. அந்த அளவில் நாமும் சில யோசனைகள் சொல்லலாமோ எனத் தோன்றுகிறது. அவ்வாறு சொல்லுகையில் மாரி செல்வராஜை முன்னிலையில் வைத்துப் பேசுவது பொருந்தியமைவது. அந்த மாமன்னனை அரியணையில் அமர வைத்து நாம் அமைச்சனாய் அவர் முன்னின்று பேசுவது அவரது சான்றாண்மைக்கு நாம் பெருமை தருவது.
          "திரு. மாரி செல்வராஜ் அவர்களே ! நீங்கள் வரலாறாய்ப் படைத்த மூன்று படங்களிலும் தலித் சமூகத்தினரைக் கொடுமைக்கு உள்ளாக்கியோர் இன்ன சாதியர் என்று சொல்லாதது பெருஞ்சிறப்பு. தானே விளங்கி நிற்பதைச் சொல்லாமல் செல்வதே தனிச்சிறப்பு. சில இடங்களில் சொன்ன சொல்லை விட சொல்லாத சொல்லுக்கே வலிமை அதிகம் என்பதை உங்கள் படங்கள் சொல்லாமல் சொல்கின்றன.
          'மாமன்னன்' இசை வெளியீட்டு விழாவில் 'தேவர் மகனை'க் குறித்தது மட்டும் ஏதோ பெருவிருந்தில் பல்லில் இடறிய சிறுகல்லாய்க் 'கடக்'கென்று ஒலித்தது என்ன மாயமோ ! பல தலைமுறைகளாய் அடிபட்டவன் ஒரு கணம் தன்னை மறந்து குமுறியதைத் தாங்கவொண்ணாத சமூகங்களைக் குறித்த வேதனையும் நமக்குத் தோன்றாமலில்லை. தேவர்மகனைக் குறித்துப் பேசியது கூட ஒரு குறியீடுதான்; ஏனைய ஆதிக்க சாதிகளுக்கும் அது பொருந்தும் என எடுத்துக் கொள்ளும் பக்குவம் எல்லோரிடமும் அமைய வாய்ப்பில்லை. முந்தைய இரு படங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்காத தேவர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இப்போது சமூக வலைத்தளங்களில் உங்களை அநாகரிகமாகப் பேசுவது எங்களுக்கும் வலிக்கிறது. எல்லாவற்றையும் மீறி ஏனைய சில ஆதிக்க சக்திகளிடமும் மாமன்னன் செய்தி சென்று சேராமலில்லை. திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், "மாமன்னன் படம் பார்த்து விட்டீர்களா ?" என்று கேட்க, "எனக்கு நேரம் இல்லீங்க !" என்று சொல்லும் தொனி இருக்கிறதே, அதில் பொதிந்துள்ள பொருள் நமக்குப் புரிய வேண்டும் என்றால் மட்டுமே புரியும். எது எப்படியாயினும் உங்கள் படத்தைப் பார்த்த உயர் சாதியினர் தாங்கள் இழைத்த, இழைக்கும் அடக்குமுறைகளுக்காகக் குற்றவுணர்வுடன் தம்மைச் சுயசாதி விமர்சனம் செய்திருந்தால், அது பண்பட்ட தமிழச் சாதியின் அடையாளமாய் அமைந்திருக்கும். சுயசாதி விமர்சனத்தை அக்காலத்திலேயே ஆதிக்க சாதியொன்றில் தோன்றிய புதுமைப்பித்தன் செய்தார். அவர் சாதிப் பெருமை பேசவில்லை. தம் சாதியைக் குறித்தே 'நாசகாரக் கும்பல்' என்று தலைப்பிட்டு சிறுகதை எழுதும் அளவு அவரிடம் நேர்மைத் திறம் இருந்தது. அந்த நேர்மையைப் போற்றும் விவேகம் அவர் பிறந்த சாதியில் அன்று சிலரிடமே இருந்தது; இன்றும் சிலரிடமே இருக்கிறது. எனவே தலித் மக்களுக்கு எதிரான ஆதிக்க சாதியினர் என்று எந்த ஒருவரை மட்டும் குறிப்பதற்கில்லை. ஆண்ட பரம்பரை என்று ஆணவக் கொலை வரை செல்வோர் தெற்கே ஒருவர் என்றால், வடக்கே வேறொருவர். 'உயர்' சாதியினர் என்று தங்களை வரித்துக் கொண்டோர் எண்ணத்தில் உயர்ந்தோர் இல்லை. சமூக சீர்திருத்தம் என்பது அவர்களைத் திருத்துவதும் உள்ளடக்கியது; வெறும் தலித் முன்னேற்றம் மட்டுமல்ல. யாரைத் திருத்த நினைக்கிறோமோ, அவர்களை நேரடியாகக் குறிப்பிடாமல் அவர்கள் அனைவரும் உணருமாறு அமைப்பதே சிறப்பாக அமையும். அப்படித்தான் உங்களது மூன்று படங்களும் அமைந்துள்ளன. பொதுவெளியிலும் பொறுமை காப்பது உங்களுக்கும், உங்களோடு கருத்தொருமித்த எங்களுக்கும் மிக அவசியமாகிறது. பக்குவம் பெறாத சிலரோடு வாதிட்டு நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை. நமக்கு சமூகத்தில் நிறைய வேலை இருக்கிறது, தோழர் !
                நீங்கள் குறிப்பிட்ட 'தேவர் மகன்' உள்ளிட்ட சில படங்களில் சாதிப் பெருமை பேசப்படுவது உண்மையெனினும், அதனை நேர்மறையாய்ப் பார்ப்பது பெரிதும் பயனளிக்கும். அப்படங்களில் பெரும்பாலும் அறம் போதிக்கப்படுகிறது. சாதி பேதமின்றி எல்லோரையும் சமமாக நடத்துவதும், பெண்ணின் மானத்தைக் காத்து நிற்பதும் தம் சாதிக்கான பெருமை என்று கூறப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாகத் தம் சாதிக்குள் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் முயற்சியாகவே இதனைக் கொள்ளலாம். அப்படங்கள் வந்த இருபது-முப்பது வருடங்களுக்கு முன்னால் அதுவே சாதியப் புரட்சியாக உணரப்பட்டு, தற்போது சாதிப் பெருமை பேசுவதும் தவறு எனும் நிலைக்கு அறிவார்ந்த சமூகம் வளர்ந்துள்ளது. இது மேலும் வளர்ச்சிப் பாதையில் செல்வது உங்களைப் போன்று இளமையிலேயே சான்றோர் நிலையெய்திய சாதனையாளர் கைகளிலேயே உள்ளது.
                நிறைவாக, சாதிய விடுதலைக்கு அப்பாற்பட்டும் ஒன்றிரண்டு வார்த்தைகள் :
திரு. கமலஹாசன் அவர்கள்  ஆக்சன் திரில்லர் (தமிழ் ? மன்னிக்கவும்) படங்களிலும், நகைச்சுவைப் படங்களிலும் மாறி மாறி நடிப்பதைப் போல் நீங்கள் அவ்வப்போது பலவகை சமூக விழிப்புணர்வுப் படங்களும் தரவேண்டும். உதாரணமாக ஊழல், நேர்மை அரசியல் போன்ற தலைப்புகளை எத்துணைப் பேர் முன்னரே கையாண்டிருந்தாலும், உங்களது ஆளுமை தனித்துவமானது; சமூகத்தைப் பரந்த அளவில் சென்றடைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. முதற் சங்ககாலம் என்பது போல் திரைப்படத்துறையின் முதற் சமூகநீதிக்காலம் அறிஞர் அண்ணா ஆகியோர் படைத்த காலம். இரண்டாம் சமூகநீதிக்காலம் மாரி செல்வராஜ் முதலியோர் படைக்கும் காலம் எனக் காற்றினில் கலந்து வரும் மெல்லிசை, எல்லோர் காதிலும் தேனாய்ப் பாயும் காலம் விரைவில்.                

 

Edited by சுப.சோமசுந்தரம்

  • சுப.சோமசுந்தரம் changed the title to மாமன்னன் எனும் மாமனிதன்                                         -சுப. சோமசுந்தரம்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு, நல்லதொரு  கட்டுரை👍, தொடர்ந்து பகிருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

எது எப்படியாயினும் உங்கள் படத்தைப் பார்த்த உயர் சாதியினர் தாங்கள் இழைத்த, இழைக்கும் அடக்குமுறைகளுக்காகக் குற்றவுணர்வுடன் தம்மைச் சுயசாதி விமர்சனம் செய்திருந்தால், அது பண்பட்ட தமிழச் சாதியின் அடையாளமாய் அமைந்திருக்கும். சுயசாதி விமர்சனத்தை அக்காலத்திலேயே ஆதிக்க சாதியொன்றில் தோன்றிய புதுமைப்பித்தன் செய்தார். அவர் சாதிப் பெருமை பேசவில்லை. தம் சாதியைக் குறித்தே 'நாசகாரக் கும்பல்' என்று தலைப்பிட்டு சிறுகதை எழுதும் அளவு அவரிடம் நேர்மைத் திறம் இருந்தது. அந்த நேர்மையைப் போற்றும் விவேகம் அவர் பிறந்த சாதியிலேயே அன்று சிலரிடமே இருந்தது; இன்றும் சிலரிடமே இருக்கிறது.

பேராசான் சுப.சோமசுந்தரம் ஐயாவிற்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.