Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு : ஸ்கொட்லாந்து, வடஅயர்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளின் சுயாட்சி முறைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு : ஸ்கொட்லாந்து, வடஅயர்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளின் சுயாட்சி முறைகள் – பகுதி 1

 

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ன

POWER SHARING : THE INTERNATIONAL EXPERIENCE என்ற நூலை அரசியல் யாப்புக்கான கற்கை நிறுவனம், இலங்கை – ராஜகிரிய என்ற அமைப்பு 2011 ஆம் ஆண்டில் வெளியிட்டது. இந்நூலின் பதிப்பாசிரியர்கள் ரஞ்சித் அமரசிங்க மற்றும் ஜயம்பதி விக்கிரமரட்ன ஆவர். இந்நூலில் ரஞ்சித் அமரசிங்க ஸ்பெயின் நாட்டின் அசமத்துவ அதிகாரப் பகிர்வு குறித்த ஒரு கட்டுரையை எழுதிச் சேர்த்திருந்தார். அதனை தமிழாக்கம் செய்து எழுநாவில் முன்னர் பிரசுரித்தோம். இவ்விதழில் ஐக்கிய இராச்சியம் பற்றிய விக்கிரமரட்ன எழுதிய கட்டுரையைத் தருகிறோம். சமஷ்டி முறைமை பற்றிய இத்தொடரில் ஆறு நாடுகளின் அரசியல் அதிகாரப் பகிர்வு முறை பற்றி விளக்க இருப்பதாக முன்னர் குறிப்பிட்டிருந்தோம். இவற்றோடு தகுநல் பொருத்தப்பாடு இருப்பதால் ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரப் பகிர்வு முறையையும் இத்தொடரில் ஏழாவது நாடாக அறிமுகம் செய்வதாக எண்ணியுள்ளோம்.

ஒற்றையாட்சி நாடு எனப் பெயர் பெற்றுள்ள ஐக்கிய இராச்சியம் (UK) இன்று சமஷ்டி முறைக்கு நிகரான அரசியல் யாப்பு முறைமையை நோக்கி முன்னேறிச் செல்கிறது. அந்நாட்டில் 1998 இல் ஸ்கொட்லாந்துச் சட்டம் (Scotland Act) இயற்றப்பட்டது. இந்தச்சட்டம் ஸ்கொட்லாந்துக்கென தனியான பாராளுமன்றம் ஒன்றை அமைப்பதற்கும் அதற்குச் சட்டவாக்க நிர்வாக அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவும் வகை செய்தது. இதையடுத்து வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய பகுதிகளும் அதிகாரப் பகிர்வு (Devolution) முறை மூலம் சுயாட்சியை வலுப்படுத்தும் செயல்முறையில் முன்னேறிச் செல்கின்றன. மேற்குறித்த நூலின் பத்தாவது அத்தியாயம் Devolution in the United Kingdom: Unitary in Theory Otherwise in Practice என்ற தலைப்பில் அமைந்துள்ளது. இக்கட்டுரையை எழுதியவர் ஜயம்பதி விக்கிரமரட்ன ஆவார். அவரின் கட்டுரையைத் தழுவியும் சுருக்கியும் இவ்வாக்கம் தமிழில் எழுதப்பட்டுள்ளது.

Federalism in UK

ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு

ஒற்றையாட்சி நாடென அழைக்கப்படும் அரசின் நடைமுறை வேறுவிதமானது (Unitary in Theory Otherwise in Practice) என்று கூறும் இக் கட்டுரையாசிரியர் ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வில் அடையப்பட்ட முன்னேற்றத்தை விளக்குகிறார். வெளித்தோற்றத்தில் கண்டுகொள்ளாத, காணத் தவறும் யதார்த்த உண்மைகளை இக் கட்டுரை தெளிவுற எடுத்துரைக்கிறது. ஐக்கிய இராச்சியம் (ஐ.இ) ஒற்றையாட்சி அமைப்பைக் கொண்டது. அதற்கு எழுதப்பட்ட அரசியல் யாப்பு என ஒன்றும் கிடையாது. இதனால் அந்நாட்டு பாராளுமன்றம் இயற்றும் சட்டங்கள் அரசியல் யாப்புக்கு முரண்படாதனவா என்று அவற்றின் வலிதுடமையைப் பரிசோதிப்பதற்கு வழிமுறைகள் எதுவும் அங்கு கிடையாது. அங்கு உள்ளூராட்சி என்ற வகையில் அரசு செயற்படுகின்றது என்பது உண்மையே. ஆயினும் ஐக்கிய இராச்சியம், ஒற்றையாட்சி முறையின் மூலவடிவம் என்ற பெயரைப் பெற்றுவிட்டது. கால மாற்றத்தால் அங்கு ஏற்பட்ட மாறுதல்கள் பலவாகும். ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் ஆகியன அதிகாரப் பகிர்வு செயல் முறையின் பல படிநிலைகளில் முன்னேறிச் சுயாதீனமாக செயற்படுகின்றன. ஆனால் இங்கிலாந்திற்கு அதிகாரப் பகிர்வு இல்லை. இங்கிலாந்திலே அமைந்திருக்கும் வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்றம் எழுதப்பட்ட யாப்பு ஒன்று இல்லாவிடினும் வழமைகளுக்கு (Conventions) மதிப்பளிக்கிறது. அதிகாரப் பகிர்வு மூலம் ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் என்பன ஒரு விடயத்தில் அதிகாரம் பெற்றிருந்தால் அந்த விடயத்தில் தலையிடும் வகையில் சட்டமியற்றுவதில்லை என்ற உடன்பாட்டை அந்நாட்டுப் பாராளுமன்றம் வழமையாகப் பேணி வருகிறது. இதனை இக் கட்டுரையின் பிறிதோர் இடத்தில் விளக்கிக் கூறுவோம்.

ஸ்கொட்லாந்து

Battle of Bannockburn (1)

ஸ்கொட்லாந்து 843 தொடக்கம் ஐக்கியப்பட்ட சுதந்திர இராச்சியமாக இருந்து வந்தது. 1296 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் முதலாம் எட்வாட் மன்னர் அந்நாட்டை வெற்றிகொண்டு அதன் சுதந்திரத்தைப் பறிக்க முனைந்தாரேனும் 1314 ஆம் ஆண்டில் Bannockburn என்ற இடத்தில் நடை பெற்ற போரில் இங்கிலாந்தின் படைகளை ஸ்கொட்லாந்தினர் தோற்கடித்தனர். 1328 இல் எடின்பேர்க் – நோதாம்டன் உடன்படிக்கையின் படி இங்கிலாந்து, ஸ்காட்லாந்தின் சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டது. 1603 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்து அரசரான ஆறாம் யேம்ஸ் இங்கிலாந்தின் அரசராக முடி சூட்டப்பட்டார். இரு பகுதிகளுக்கும் ஒரே அரசர் என்ற நிலை இதனால் அவ்வேளையில் உருவானது. எனினும் 1707 ஆம் ஆண்டு வரை ஸ்கொட்லாந்து இறைமையுடைய தனி நாடாகவே இருந்து வந்தது. 1707 இல் ஒன்றிணைந்த பெரிய பிரித்தானிய இராச்சியம் (United Kingdom of Great Britain) உடன்படிக்கையின் படி உருவாக்கப்பட்டது. The treaty of union என்னும் இவ் உடன்படிக்கை ஸ்கொட்லாந்தின் பாராளுமன்றத்தாலும் அங்கீகரிக்கப்பட்டது. அவ்வேளை ஸ்கொட்லாந்தின் தலைநகர் எடின்பேர்க்கில் கலகம் வெடித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கலகக்காரர்களுக்கு அஞ்சி, உடன்படிக்கையில் கைச்சாத்திட்டோர், இரகசியமாக அதனை நிகழ்த்தி ஸ்கொட்லாந்தை ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக ஆக்கினர்.

treaty of union

தனித்துவ அடையாளங்களின் தொடர்ச்சி

மேற்குறித்த உடன்படிக்கையின் விளைவாக ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து என இரு பகுதிகளுக்கும் தனித்தனியாக இருந்து வந்த பாராளுமன்றங்கள் இல்லாது ஒழிக்கப்பட்டன. வெஸ்ட்மினிஸ்டரில் அமைந்திருக்கும் பெரிய பிரித்தானியாவின் பாராளுமன்றம் தோற்றம் பெற்றது. 1707 இல் இம்மாற்றம் நிகழ்ந்தபோது ஸ்கொட்லாந்தின் நிறுவனங்கள் பல தொடர்ந்து செயல்பட்டு வந்தன. உடன்படிக்கையில் பல புறநடையான விடயங்களும் உள்ளடக்கப்பட்டன.

அ) ஸ்கொட்லாந்தின் சட்டமுறைமை

ஆ) கல்வி முறைமை

இ) ஸ்காட்லாந்தின் பிரிஸ்பிரிட்டேரியன் கிறிஸ்தவ திருச்சபை (Presbyterian Church)

ஈ) உள்ளூராட்சி முறைமை

ஆகியன ஸ்கொட்லாந்துக்கே உரிய தனித்துவ இயல்புகளுடன் தொடர்ந்து செயற்பட்டன. இந்நிறுவனங்கள் ஐக்கிய இராச்சியத்தின் பிற பகுதிகளில் இருந்து வேறுபட்டனவாய் இருந்து வந்தமை, ஸ்கொட்லாந்தின் தேசிய அடையாளம் தனித்துவத்தோடும் வீரியத்தோடும் நிலைத்து நிற்பதற்குக் காரணமாயிற்று.

தணியாத சுதந்திர வேட்கை

19 ஆம் நூற்றாண்டில் ஸ்கொட்லாந்தின் கைத்தொழில் மயமாக்கம் வேகமாக நடைபெற்றது. இதனால் அந்நூற்றாண்டில் ஸ்கொட்லாந்து தேசியவாதம் தணிவுற்றது. 1870 இல் பாராளுமன்றம், ஸ்கொட்லாந்தின் கல்வி முறைமையில் தலையீடு செய்து ஸ்கொட்லாந்தின் எஞ்சியிருந்த சுயாதீனத்திலும் மூக்கை நுழைத்தது. ஸ்கொட்லாந்தின் சுயாட்சி அச்சுறுத்தலுக்கு ஆளானது. 1885 இல் ஸ்கொட்லாந்திற்கான இராஜாங்க செயலாளர் (Secretary of State) என்ற பதவி உருவாக்கப்பட்டது. இவர் வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்றத்தில் ஸ்கொட்லாந்து நலன்களுக்கு ஆதரவாகச் செயற்படுவார் எனக் கூறப்பட்டது. ஆயினும் ஸ்கொட்லாந்துத் தேசியவாதம் மீண்டெழுவதை இதுபோன்ற ஏற்பாடுகளால் தடுக்க முடியவில்லை. பிரித்தானியாவின் திறைசேரிக்கு ஸ்கொட்லாந்தின் வரிப்பணம் மிகையான அளவில் விகிதாசார எல்லைக்கு மேலாகச் செல்வதைச் சுட்டிக்காட்டிய ஸ்கொட்லாந்தியர் தமக்கு கிடைக்கும் நன்மைகள் குறைவு எனக் குற்றம் சாட்டினர். எடுத்துக் காட்டாக இங்கிலாந்தின் பண்பாட்டுக் கழகங்களின் நடவடிக்கைகளுக்கு நிதி கொடுத்து ஊக்குவித்த திறைசேரி, ஸ்கொட்லாந்துக் கழகங்கள் தாமே தமது நிதியை தேடிக்கொள்ள வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது. அயர்லாந்தின் தாயக ஆட்சி (Home Rule) இயக்கம் ஸ்கொட்லாந்தியருக்கு உளத்தூண்டலை வழங்கியது. 

home rule party (1)

ஸ்கொட்லாந்திற்கும் அயர்லாந்துக்கு கொடுப்பது போலவே தாயக ஆட்சி வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி 15 ஆண்டு காலத்தில் ஸ்கொட்லாந்திற்கும் தாயக ஆட்சி வேண்டும் என 7 தடவைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அயர்லாந்து பிரிந்து போனால் பாராளுமன்றத்தில் அதன் பிரதிநிதித்துவம் குறையும். இவ்வாறான உறுப்பினர் எண்ணிக்கை வீழ்ச்சி, தம்மையும் பாதிக்கும் என ஸ்கொட்லாந்தியர்  உணர்ந்தனர்.

லிபரல் கட்சி அயர்லாந்தின் ஹோம் ரூல் கோரிக்கையை ஆதரித்தது. பழமைவாதக் கட்சி, அயர்லாந்து சுயாட்சி பெறுவதால் ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்படக்கூடிய அரசியல் யாப்புசார் குழப்பத்தைச் சரி செய்வதற்காக ஸ்கொட்லாந்திற்கு அதிகாரப் பகிர்வை வழங்கத் தயாராக இருந்தது. இவை எதுவும் செயல் வடிவம் பெறுவதற்கு முன்னர் முதலாம் உலக மகா யுத்தம் குறுக்கிட்டது. இவ் யுத்தத்தின் பின்னர் 1920 இல் அயர்லாந்திற்கு சுயாட்சி (ஹோம் ரூல்) வழங்கப்பட்டது. 1921 இல் அயர்லாந்து முழுமையான சுதந்திரத்தை பெற்றது. அயர்லாந்திற்குக் கிடைத்த இந்த சுதந்திரம், ஸ்கொட்லாந்தினர்க்கு ஓர் அகத் தூண்டலைத் தந்தது.

1921 – 1939 ஏற்பட்ட தளம்பல்

முதலாம் உலக யுத்த முடிவில் பிரித்தானியா வித்தியாசமான நாடாகியது. லிபரல்கள் பலமற்றவர்களாக விளங்கினர். பழமைவாதக் கட்சிக்கு மாறான கட்சியாக தொழிற்கட்சி உருவானது. ஸ்கொட்லாந்தியரில் பலர் தொழிற் கட்சியில் இணைந்தனர். ஸ்கொட்லாந்திற்குச் சுயாட்சி வேண்டும் எனக் கூறியோர் ஸ்கொட்டிஷ் தேசிய கட்சி (Scottish national party – SNP) என்னும் கட்சியை 1920 களில் ஆரம்பித்தனர். இக்காலகட்டத்தில் ஸ்கொட்லாந்தியர்கள் என்ன முடிவை எடுக்கலாம் என்பதில் குழப்பமடைந்திருந்ததனர். ஸ்கொட்லாந்து பிரித்தானியா என்ற ஐக்கிய அரசில் இணைந்திருப்பதால் ஸ்காட்லாந்து உற்பத்திகளுக்கு பிரித்தானியாப் பேரரசின் காலனிகளில் சந்தை வாய்ப்புகள் கிடைத்தன. குறிப்பாக கனரக உற்பத்தி தொழில் துறை நன்மை பெற்றது.

பெருமந்தம் ஏற்பட்டபோது, பிரித்தானியா சமூக நலன் திட்டங்களை விரிவாக்கியது. இந்த நன்மைகள் ஸ்கொட்லாந்துக்கும் கிடை த்தன. 1939 இல் ஸ்கொட்லாந்துடன் தொடர்புபட்ட திணைக்களங்கள் யாவும் எடின்பேர்க் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. ஆயினும் இந்த இடமாற்றத்தால் அரசின் நிர்வாகத்தில் ஸ்கொட்லாந்தின் பங்களிப்பு உயர்ந்தது எனக்கூற முடியாது.

இரண்டாம் உலக யுத்தம்

A partnership for good (1)

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முடிவில் 1945 இல் முதல் தடவையாக ஸ்கொட்டிஸ் தேசிய கட்சி (எஸ். எம்.பி) பாராளுமன்றத்தில் ஓர் ஆசனத்தை பெற்றுக் கொண்டது. ஆயினும் வெஸ்ட்மினிஸ்டர் நிர்வாகம் ஸ்கொட்லாந்து விடயத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. ஸ்கொட்லாந்தின் தேவைகள் குறித்து தொழிற்கட்சி அக்கறை கொண்டு செயற்பட்டது. றிச்சாட் ஜே பின்லே (Finlay) எழுதிய A Partnership for Good : Scottish Politics and The Union Since 1880 (1997) என்ற நூலில் பல உதாரணங்களைத் தருகிறார். தொழிற்கட்சி ஏற்படுத்திய பல திட்டங்கள் சுயாட்சி இயக்கத்தை வலுவிழக்க செய்தன, பல கைத்தொழில்கள் தேசிய மயமாக்கப்பட்டன, புதிய தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டன, வீடமைப்பு – சுகாதாரம் – சமூகச் சீர்திருத்தம் ஆகிய சமூக நலத் திட்டங்கள் பலப்படுத்தப்பட்டன. இவற்றின் பயனாக பிரித்தானியாவின் அரச கட்டமைப்புக்குள் ஸ்கொட்லாந்தின் நிலை உயர்ந்தது.

1960 களிலும் 70 களிலும் ஸ்கொட்டிஸ் தேசிய கட்சி தன்னை பலப்படுத்திக் கொண்டது. இக்காலத்திலே பொருளாதார நிலைமைகள் மோசமடைந்தமை இதற்கு காரணமாயிற்று. தொழிற்கட்சி இந்நிலையில் அதிகாரப் பகிர்வு வழங்கலாம் எனக் கீழிறங்கி வரவில்லை. அது Scottish Development Agency என்ற பெயரில் ஸ்கொட்லாந்தின் அபிவிருத்திக்கான முகவர் அமைப்பு என்ற ஸ்தாபனத்தை நிறுவியது. அந்த ஸ்தாபனத்தால் ஸ்கொட்லாந்தை உயர்நிலைக்கு மேம்படுத்த முடியவில்லை. பழமைவாத கட்சியினர் அப்போது ஸ்கொட்லாந்திற்கு ஒரு சட்டசபையை (Assembly) கொடுக்கலாம் என முன்மொழிந்தனர்.

1979 இன் சர்வசன வாக்கெடுப்பும் தேசியவாதத்தின் பின்னடைவுகளும்

அதிகாரப் பகிர்வு தொடர்பாக 1979 மார்ச் 7 ஆம் தேதி சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஸ்கொட்லாந்து சட்டசபைக்கு குறைந்த அளவு அதிகாரங்களை வழங்கும் 1978 இன் ஸ்கொட்லாந்து சட்டம் (The Scotland Act of 1978) நடைமுறைப்படுத்தலாமா, இல்லையா? என்பதே சர்வசன வாக்கெடுப்புக்கு விடப்பட்ட விடயம். 63.8 % வாக்காளர்கள் மட்டுமே இவ் வாக்கெடுப்பில் பங்கு கொண்டனர். இவர்களில் 51.6% வாக்காளர்கள் ‘ஆம்’ என வாக்களித்தனர். இது பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் தொகையில் 40% என்ற எல்லைக்கும் குறைவான ஆதரவு வாக்குகளாக இருந்தது. பாராளுமன்றம் விதித்த நாற்பது வீத எல்லைக்கு குறைவான வாக்குகள் கிடைத்ததால் யோசனை நிராகரிக்கப்பட்டது. அடுத்து வந்த பொதுத்தேர்தலில் ஸ்கொட்டிஸ் தேசிய கட்சி தனது வாக்கு வங்கியில் மூன்றில் ஒரு பங்கை இழந்தது.

மார்கிரேட் தச்சர்

Margaret Thatcher

மார்கிரேட் தச்சரின் (MARGARET THATCHER) பழமைவாத கட்சியினர் ஸ்கொட்லாந்து தேசியவாதம் மீள் எழுச்சி பெற காரணமாக இருந்தனர். அவர்கள் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஆனால் ஸ்கொட்லாந்தில் பழமைவாதக் கட்சிக்கு மொத்த வாக்குகளில் 17% மட்டுமே கிடைத்தது. ஸ்கொட்லாந்தில் இருந்து ஒருவர் கூட அவரது அமைச்சரவையில் இருக்கவில்லை. பழமைவாத கட்சியினர் ஆட்சியில் சமூக நலத்திட்டங்கள் கைவிடப்பட்டன. இந் நடவடிக்கை ஸ்கொட்லாந்து அரசியல் பண்பாட்டின் மீதான தாக்குதல் என்றே கருதலாம். தொழிற்கட்சி ஸ்கொட்லாந்திற்கு சுயாட்சி கொடுப்பதை எதிர்த்து வந்தமை தவறு என இக்கட்டத்தில் உணர்ந்தது. ஸ்கொட்லாந்தின் பாராளுமன்றம் பழமைவாதிகளுக்கு (Tories) எதிரான காப்பரணாக விளங்க முடியும் என தொழிற்கட்சியினர் சிந்தித்தனர். பழமைவாத கட்சியை அதிகாரத்திலிருந்து நிரந்தரமாக ஒதுக்கி தள்ளி விடவும் இதுவே வழி எனவும் தொழிற்கட்சி சிந்தித்தது.

கீற்றிங் (Keating) என்ற எழுத்தாளர் இங்கிலாந்திற்கும் ஸ்கொட்லாந்திற்கும் தத்துவார்த்த வேறுபாடு உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார் : ஸ்கொட்லாந்தியர் சமூக நல அரசு (Welfare State) என்ற இலட்சியத்தை விரும்புபவர்கள். இங்கிலாந்துக்காரர்கள் பழமைவாதிகள்.

தொழிற்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமும் சர்வசன வாக்கெடுப்பும்

1994 தேர்தலில் ரோனி பிளேயரின் தொழிற்கட்சி ஆட்சியை பிடித்தது. ஆயினும் இங்கிலாந்துகாரர்களின் போக்கில் மாற்றமேற்படவில்லை. இத் தேர்தலின் போது தொழிற்கட்சி ஸ்கொட்லாந்து, வேல்ஸ் என்ற இரு பகுதிகளுக்கும் அதிகாரப் பகிர்வு மூலம் வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்தின் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கப் போவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்தது.

உள்ளூர் மட்டத்திலான விடயங்களை அந்தந்த மட்டத்தில் உள்ள மக்களே கவனித்துக் கொள்வது சிறந்தது என்ற அரசியல் தத்துவம் (Subsidiarity) பிரித்தானியாவுக்கு பொருத்தமானது என்பது அரசியல் கோட்பாட்டளர்களின் கருத்தாகும். ஐரோப்பாவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தத்துவப்படியான அதிகார பகிர்வு (Devolution) சமஸ்டியில் இருந்து வேறுபட்டது. இறைமையுடைய வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்றம் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் என்ற இரண்டிற்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும். இதனால் பிரித்தானியாவின் ஐக்கியம் பலப்படுத்தப்படும். பிரிவினை என்ற அச்சுறுத்தல் நீங்கும்.

1997 செப்டம்பர் 11 ஆம் தேதி சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 74.3% வாக்காளர்கள் ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் அமைவதை ஆதரித்தனர். இவர்களில் 60% வாக்காளர்கள் வரி அறவிடும் அதிகாரமும் ஸ்கொட்லாந்திற்கு வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த சர்வசன வாக்கெடுப்பு 60.4% ஆதரவாக அமைந்தது.

 ஸ்கொட்லாந்து சட்டம் 1998

1997 டிசம்பர் 17 ஆம் தேதி ஸ்கொட்லாந்து சட்ட மசோதா முன்வைக்கப்பட்டது. அரசியின் அங்கீகாரத்தை பெற்றதும் 1998 நவம்பர் 19 இல் இது சட்டம் ஆகியது. இச்சட்டம் வெஸ்ட்மினிஸ்டர் மாதிரியில் ஸ்கொட்லாந்திற்கு பாராளுமன்றம் ஒன்றையும், நிர்வாக அதிகாரத்தையும் (ஸ்கொட்லாந்து மந்திரிசபை) வழங்கியது.

ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் 129 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அவர்களை ஸ்கொட்லாந்துப் பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பர். வேட்பாளர்கள் எவர் கூடிய வாக்குகளை பெறுகிறாரோ அவரைத் தெரிதல் என்னும் ‘FIRST PAST THE POST’ முறை பிரதேச அட்டவணை (Regional List) என்ற இரண்டின் கலப்பான தேர்தல் முறையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதேவேளை வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தொகுதிகளில் இருந்து 73 உறுப்பினர்கள் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்திற்கும் தெரிவாயினர். 8 பிராந்தியங்களில் இருந்து 7 மேலதிக உறுப்பினர்கள் விகிதாசார முறைப்படி தேர்வு செய்யப்பட்டனர். ஒரு வாக்காளருக்கு இரு வாக்குகள் இருக்கும். ஒன்றை தொகுதியின் வேட்பாளருக்கும் மற்றயதை தனது பிராந்தியத்தின் கட்சிக்கும் வாக்காளர் தனது வாக்காக அளிப்பார்.

ஒற்றையாட்சி நாடுகளில் அதிகாரம் பகிர்ந்தளிக்கும் போது அதிகாரத்தை பெறும் அலகுக்கு எவ்வெவ் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பட்டியலிடப்படும். ஆனால் ஸ்கொட்லாந்து சட்டத்தில் இவ்வாறு ஸ்கொட்லாந்து சட்டசபையின் இயலுமைகள் எவையென பட்டியலிடப்படவில்லை. இது ஒரு தனித்துவமான அம்சமாகும். ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் (Reserved Powers) அட்டவணை 5 இல் பட்டியலிடப்பட்டுள்ளது. அட்டவணை 4, திருத்தம் செய்ய முடியாதவற்றை பட்டியலிட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் தவிர்ந்த எஞ்சிய அதிகாரங்களை ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் பிரயோகிக்கலாம். ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் ஐரோப்பிய மனித உரிமை சாசனம் (Convention on Human Rights) ஐரோப்பிய சமூகச் சட்டம் (European Community Law) என்பவற்றோடு முரண்படும் சட்டங்களை இயற்ற முடியாது. அட்வகேட் பிரபு ஸ்கொட்லாந்தில் நிகழும் இறப்புக்கள் தொடர்பான குற்றவியல் வழக்குத்தொடுத்தலையும் விசாரிக்கும் அதிகாரத்தையும் உடையவராய் இருப்பார். இவரை இந்தப் பதவி நிலை பொறுப்பில் இருந்து அகற்ற முடியாது.

வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்திற்கு பின்வரும் விடயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசியல் யாப்பு, பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, வருவாய், பொருளாதாரம், நாணயம், வர்த்தகமும் தொழிலும் (நுகர்வோர் பாதுகாப்பும் உட்பட), போக்குவரத்து (ஸ்கெட்லாந்தின் போக்குவரத்து நீங்கலாக), ரெயில்வே உட்பட போக்குவரத்தும் பாதுகாப்பும் ஒழுங்கமைப்பும், சமூக பாதுகாப்பு, மருத்துவ ஒழுக்கநடைமுறை, பிறப்புரிமையியல் (GENETICS), ஒலி – ஒளிபரப்பு, வெளிநாட்டு அலுவலகங்கள், சிவில் சேவை, குடிவரவும் தேசியகுடி அந்தஸ்தும் (IMMIGRATION AND NATIONALITY), சக்தி – மின்சாரம் – நிலக்கரி – எண்ணை – எரிவாயு – அணுசக்தி, தொழில்வாய்ப்பு, சமத்துவமான வாய்ப்புகள்.

வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்திற்கு உரியன என ஒதுக்கப்பட்டனவும் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தின் இயலுமைக்குரியனவுமான அதிகாரங்கள் பின்வருவன : சுகாதாரமும் கல்வியும் பயிற்சியும், உள்ளூராட்சி, சமூகப் பணி (SOCIAL WORK), வீடமைப்பு, திட்டமிடல், சுற்றுலாத்துறை, பொருளாதார அபிவிருத்தி, கைத்தொழிலுக்கு நிதி உதவி, போக்குவரத்து துறையின் சில அம்சங்கள், உள்ளூர் வீதிவலையமைப்பு உட்பட பேருந்து சேவைக் கொள்கை, துறைமுகங்கள், சட்டமும் உள்நாட்டு அலுவல்களும் (குற்றவியல் குடியியல் சட்டங்களின் பெரும்பாகம் இதனுள் அடங்கும்), நீதிமன்றங்களும் வழக்கு தொடுத்தலும், பொலிஸ், தீயணைப்பு சேவை, சூழல் பாதுகாப்பு, இயற்கை மரபு உரிமையும் கட்டிட மரபுரிமையும், விவசாயம், வனங்கள், மீன்பிடி, விளையாட்டுக்கள், புள்ளிவிபரம், பொதுப் பதிவேடுகளும் ஆவணங்களும்.

ஸ்கொட்லாந்தில் நிர்வாக அதிகாரம் உடைய மந்திரிகள் சபைக்கு ஸ்கொட்லாந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் இருந்து மந்திரிகள் நியமிக்கப்படுவர். முதலமைச்சர் பாராளுமன்றத்தின் தெரிவுப்படி மகாராணியால் நியமிக்கப்படுவார். ஏனைய மந்திரிகள் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் முதலமைச்சரால் நியமிக்கப்படுவார். ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம் மேலதிகமான நிர்வாக அதிகாரங்களை ஸ்கொட்லாந்து மந்திரி சபைக்கு வழங்கலாம். இதனால் ஸ்கொட்லாந்துப் பாராளுமன்றத்தின் நிர்வாக அதிகாரங்களுடன் ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம் வழங்கக் கூடிய சட்ட வழி அதிகாரங்களையும் (Statutory Powers) ஸ்கொட்லாந்து மந்திரி சபை பிரயோகிக்கலாம். ஸ்கொட்லாந்து நிர்வாகத்துறை விரிந்தளவு அதிகாரங்களை உடையது. அது ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறவேண்டும். வெஸ்ட்மினிஸ்டர் விதிகள் (Westminster Rules) அதற்கு ஏற்புடையதாக இருக்கும்.

ஸ்கொட்லாந்தின் நிதியின் பெரும்பங்கு ‘Block Grant’ என்ற வகையில் ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தில் இருந்து கிடைக்கிறது. இதை வழங்குவதில் பார்னற் வாய்ப்பாடு (Barneztt Formula) என்னும் முறை பிரயோகிக்கப்படுகிறது. இது புதியதன்று ; 1978 முதல் வழக்கத்தில் இருந்து வந்த முறையாகும். இந்த முறையின் சிறப்பம்சம் ஒன்றை உதாரணம் மூலம் விளக்கலாம். ஐக்கிய இராச்சிய பாராளுமன்றம் சுகாதாரத்திற்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டை ஒரு பில்லியன் பவுன்களால் அதிகரிக்கிறது எனக் கொள்வோம். இந்த வாய்ப்பாட்டின் படி ஸ்கொட்லாந்திற்கு அதன் மக்கள் தொகை விகிதாசாரப்படி 85 மில்லியன் பவுன்கள் அதிகரிக்கப்படும். இதன் பொருள் இங்கிலாந்தின் தலா வீத அதிகரிப்புக்கு சமனான தொகையில் ஸ்கொட்லாந்து பெறும். இவ்வாறு பெற்ற நிதியை சுகாதாரத்துக்கே செலவழிக்கலாம். அல்லது அதிகாரம் பெற்றுள்ள துறைகளின் தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

செவெல் வழக்காறு (Sewel Convention)

ஐக்கிய இராச்சியத்தின் அதிகார பகிர்வு முறையின் சிறப்பு அம்சங்களில் ஒன்று அதிகாரப் பகிர்வு மூலம் ஸ்கொட்லாந்து சட்டசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் (Devolved Powers) சம்பந்தப்பட்ட விடயங்களில் வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றம் தலையீடு செய்யும் முறையில் சட்டம் இயற்றமாட்டாது. அவ்வாறு சட்டமியற்றினால் அது ஸ்கொட்லாந்து சட்டசபையின் சம்மதத்துடனேயே செய்யப்படும் என்பதாகும். இது எழுதப்பட்ட அரசியல் யாப்பு விதியாக அல்லாமல், ஐக்கிய இராச்சியத்தில் பின்பற்றப்படும் வழக்காறுகள் (Conventions) என்ற அரசியல் தத்துவம் சார்ந்தாக உள்ளது. இது செவெல் பிரபு என்பவர் பெயரால் அழைக்கப்படுகிறது. இவர் ஸ்கொட்லாந்து அலுவல்களுக்கான இராசாங்க அமைச்சராக இருந்தவர். பிரபுக்கள் சபையின் இருந்து மசோதாவின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார் : “A convention to be established that Westminster would not normally legislate with regard to devolved matters in Scottish, without the consent of Scottish parliament” என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றம் பொதுவாக ஸ்கொட்லாந்துக்கு கையளிக்கப்படும் அதிகாரங்களில் தலையிட்டு சட்டமியற்றாது. அவ்வாறு சட்டம் இயற்றுவதாயின் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தின் சம்மதத்துடனேயே செய்யும் எனவும் இதை ஒரு வழக்காறாக அரசாங்கம் ஏற்றுப் பின்பற்றும் எனவும் செவெல் கூறினார். இந்த உறுதிமொழி பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கமும் ஸ்கொட்லாந்தின் நிர்வாகத்துறையும் செய்து கொண்ட புரிந்துணர்வு மனுவில் (Memorandum of Understanding) சேர்த்துக் கொள்ளப்பட்டது.

மேற்குறித்த உடன்பாடு பின்னர் ஐக்கிய இராச்சியமும் ஸ்கொட்லாந்து நிர்வாகமும் இணைந்து தயாரித்த சட்ட மூலத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வழக்காறு வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்தில் இருந்து ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் போன்றவற்றை பாதுகாப்பதோடு, அதிகாரப் பகிர்வை பெற்ற ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் சம்மதத்துடன் வெஸ்ட்மினிஸ்டர் சட்டம் இயற்றவும் இது வழிவகுத்தது.

செவெல் வழக்காறு பின்னர் வட அயர்லாந்து, வேல்ஸ் என்பனவற்றுக்கும் பொருந்துவதாக விஸ்தரிக்கப்பட்டது. செவெல் வழக்காறுடன் கூடவே டிசம்பர் 2001 முதல் அதிகாரப் பகிர்வு பெற்ற அலகுகளுடன் நிர்வாக விடயங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைக் கூறும் புரிந்துணர்வு மனுவும் (M.O.U) நடைமுறைக்கு வந்தது. ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் என்ற மூன்று அலகுகளுக்கும் இடையில் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரத்தின் அளவு வேறுபட்டு இருந்தது.  இவ்வாறு வேறுபட்டிருந்த அதிகாரப் பகிர்வே சமத்துவமின்மை அல்லது அசமத்துவம் என்ற பண்பை உணர்த்தும் சான்றாகும்.

தொடரும்.

https://ezhunaonline.com/federalism-in-the-united-kingdom/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு : ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளின் சுயாட்சி முறைகள் – பகுதி 2

August 12, 2023 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ன

கல்மன் ஆணைக்குழு

ஸ்கொட்லாந்தின் அதிகாரப் பகிர்வு பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஆணைக்குழு ஒன்றை ஐக்கிய  இராச்சிய அரசு நியமித்தது. இந்த ஆணைக்குழு, கல்மன் ஆணைக்குழு (CALMAN COMMISSION) என அழைக்கப்படுகிறது. 1995 ஆம் ஆண்டின் ஸ்கொட்லாந்து சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னரான அனுபவங்கள் பற்றி ஆராய்ந்து அரசியல் யாப்பு தொடர்பாக செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் எவையென சிபாரிசு செய்தலும், ஸ்கொட்லாந்தின் பாராளுமன்றம் ஸ்கொட்லாந்து மக்களுக்கு உயரிய சேவையை வழங்குவதற்கு மேலும் செய்ய வேண்டிய வழி வகைகளையும், ஸ்கொட்லாந்துப் பாராளுமன்றத்தின் நிதிப் பொறுப்புக் கூறலை (FINANCIAL ACCOUNTABILITY) மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும், ஐக்கிய இராச்சியத்தின் ஒரு அங்கமாக ஸ்கொட்லாந்து நீடித்திருக்கும் நிலையை உறுதி செய்வதற்கான வழிகளையும் ஆராய்ந்து அறிக்கையிடுதல் கல்மன் ஆணைக்குழுவின் பணியாக இருந்தது. அதன் அறிக்கை 2009 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது.

Kenneth C. Calman

கல்மன் ஆணைக்குழு அறிக்கை ஸ்கொட்லாந்தின் அதிகார பகிர்வு உண்மையான ஒரு வெற்றி (REAL SUCCESS) என அறிவித்தது. ஐக்கிய இராச்சியத்திற்குள்ளே தனியான பாராளுமன்றம் ஒன்றை இயங்க வைப்பதும், நடைமுறையில் அது சாத்தியமானது என்பதை உறுதி செய்வதும் பத்து ஆண்டுகால அனுபவம் உறுதிப்படுத்தியுள்ளது என இவ்வறிக்கை குறிப்பிட்டது. மேலும் ‘ஸ்கொட்லாந்தில் ஒரு பாராளுமன்றம் செயற்படுவது மட்டுல்லாமல், அது ஸ்கொட்லாந்து மக்களிடம் பேராதரவை பெற்றுள்ளது. ஸ்கொட்லாந்து பிரச்சனைகள் ஸ்கொட்லாந்திற்குள்ளேயே விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் நிலை உருவானதை அவர்கள் வரவேற்கிறார்கள். ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் யாப்பில் நிலையாக வேரூன்றி நிற்பது மட்டுமல்லாமல், ஸ்கொர்ட்லாந்து மக்கள் மனதிலும், அவர்களின் உணர்வு நிலையிலும் ஆழமாக பதிந்தும் உள்ளது.’ 

கல்மன் ஆணைக்குழு, சிவெல் வழக்காறு நடைமுறையில் சிறப்பாகச் செயல்படுவதாகவும் குறிப்பிட்டது. சிவெல் வழக்காறு செயல்படும் விதமானது, ஸ்கொட்லாந்தினதும் ஐக்கிய இராச்சியத்தினதும் நிறுவனங்கள் இணைந்து கூட்டுறவுடன் செயற்படுவதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது எனவும் அது குறிப்பிட்டுள்ளது. கல்மன் ஆனைக்குழு முக்கியத்துவம் வாய்ந்த பல சிபாரிசுகளை செய்துள்ளது அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளன.

  1. வரிவருமான அளவிடுதல் முறை என்பன பற்றி திருத்தங்கள் மூலம் ஸ்கொட்லாந்தின் நிதிச்சுயாதீனத்தை மேம்படுத்தல்.
  2. ஸ்கொட்லாந்தின் அமைச்சர்களுக்கு கடன் பெறுதல் (BORROWING) தொடர்பாக மேலதிக அதிகாரங்களை வழங்குதல்.
  3. ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய நிறுவனங்களின் முடிவு எடுத்தலிலும் நியனமங்களிலும் ஸ்கொட்லாந்து அமைச்சர்களின் பங்கேற்பை ஏற்படுத்தல். (B B C, THE CROWN ESTATE, AND THE HEALTH IN SAFETY EXECUTIVE)
  4. ஸ்கொட்லாந்து பாராளுமன்றம், ஐக்கிய இராச்சியப் பாராளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் (RESERVED POWERS) தொடர்பான விடயங்களில் அதன் சம்மதத்துடன் சட்டங்களை இயற்றுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தல்.

ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்திற்கான தேர்தல்

ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்திற்கான முதலாவது தேர்தல் 1999 இல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகளின் படி,

  • தொழிற்கட்சி – 56 இடங்கள்
  • ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி (SNP) – 35 இடங்கள்
  • ஸ்கொட்லாந்து லிபரல் ஜனநாயகக் கட்சி (LDP) – 17 இடங்கள்

தேர்தலின் பின்னர் தொழிற்கட்சியும் ஸ்கொட்லாந்து ஜனநாயகக் கட்சியும் இணைந்து ஆட்சியை அமைத்தன. பழமைவாதக் கட்சி (CONSERVATIVE PARTY) எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. பிராந்தியங்களில் மட்டும் அதற்கு 18 ஆசனங்கள் (விகிதாசார முறையில்) கிடைத்தன.

தொழிற்ட்சியைச் சேர்ந்த டெவார் முதலமைச்சரானார். டெவார், 2000 ஆம் ஆண்டு காலமானார். அவரை அடுத்து ஹென்றி மக்லீஷ் (HENRY McLEISH) தெரிவு செய்யப்பட்டார். அவர் 2001 ஆம் ஆண்டில் இராஜினாமா செய்ததும், ஜக் மக்கொனல் (JACK McCONNELL) முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இரண்டாவது தேர்தல் 2003 இல் நடைபெற்றது. அப்போது தொழிற்கட்சியே ஆட்சியில் அமர்ந்தது. அதன் ஆசனங்கள் 50 ஆக குறைந்தன. ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியும் முன்னையை விட குறைந்ததாக 27 ஆசனங்களைப் பெற்றது. பழமைவாதக் கட்சியும், லிபரல் ஜனநாயகக் கட்சியும் 1999 இல் பெற்ற அளவு விகிதாசார வாக்குகளையே பெற்றன. இவை இரண்டும் 1999 இல் பெற்ற அதே அளவு ஆசனங்களைப் பெற்றன. மெக்கொனல் (McCONNELL) முதலமைச்சராக தொடர்ந்து இருந்தார். தொழிற்கட்சி, லிபரல் ஜனநாயகக் கட்சிக் கூட்டணியும் தொடர்ந்தது. ஸ்கொட்டிஸ் பசுமைக் கட்சி, ஸ்கொட்டிஸ் சோசலிசக் கட்சி போன்ற சிறு கட்சிகளும் 1999 தேர்தலையும் விட தம் ஆதரவை அதிகரித்துக் கொண்டதைக் காண முடிந்தது.

2007 தேர்தலில் ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி 47 ஆசனங்களை பெற்று முன்னிடத்தில் இருந்தது. தொழிற்கட்சி 46 ஆசனங்களைப் பெற்றது. பழமைவாதக் கட்சி 17 ஆசனங்களைப் பெற்றது. ஜனநாயகக் கட்சி 16 ஆசனங்களையும், ஸ்கொட்டிஷ் பசுமைக் கட்சி 2 ஆசனங்களையும் பெற்றன. தேசியக் கட்சி (SNP) அரசை அமைத்தது. முதலமைச்சராக அலெக்ஸ் சல்மொண்ட் (ALEX SALMOND)  இருந்து வருகிறார் (2011).

ஸ்கொட்லாந்தின் சுதந்திரமும் அதிகார பகிர்வும், மனப்பாங்குகளின் மாற்றமும்

2001 இல் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின்படி ஸ்கொட்லாந்தின் மக்களில் 54 வீதத்தினர் ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக ஸ்கொட்லாந்து  தொடர்ந்து இருப்பதை விரும்பினர். அதற்குத் தனியான பாராளுமன்றமும், வரிவிதிப்பு அதிகாரமும் வேண்டுமென்று அவர்கள் கருதினர். 37 வீத ஸ்கொட்லாந்தியர், ஸ்கொட்லாந்து எதிர்காலத்தில் தனியாகப் பிரிந்து போகும் சாத்தியம் உள்ளது எனக் கருதினர். 2006 இலும் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள், ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் திருப்தியாக செயல்படுவதாகவும் அதற்கு மேலதிக அதிகாரங்கள் தேவையென்றும் மக்கள் கருதுவதை எடுத்துக்காட்டியது. 2009 தேர்தல் முடிவுகள் அங்கு ஏற்பட்டுவரும் மாற்றத்தை உறுதி செய்துள்ளன.

பெரும்பான்மையான ஸ்கொட்லாந்தியர்கள் இப்போது இருக்கும் நிலை தொடர்வதையே விரும்புகிறார்கள். ஸ்கொட்லாந்தின் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் விரிவாக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் விரும்புகிறார்கள். ஸ்கொட்லாந்து தனி நாடாக வேண்டும் என்பது இன்று பிரதான விவாதப் பொருளாக அங்கு இல்லை.

வட அயர்லாந்து

வட அயர்லாந்துப் பிரச்சனை 17 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்தது. ஆங்கிலேயர்கள் அயர்லாந்து மக்களின் பல கிளர்ச்சிகளை அடக்கியபின், அயர்லாந்து தீவின் ஆட்சியைப் பிடித்தனர். அங்கு பெருந்தோட்டங்களை ஆங்கிலேயர் ஆரம்பித்தனர். வட அயர்லாந்து, ஆங்கிலம் பேசும் இடமாகவும் புரட்டஸ்தாந்திய கிறிஸ்துவப் பகுதியாகவும் மாறியது. எஞ்சிய அயர்லாந்து, ஐரிஷ் மொழிப் பிரதேசமாக இருந்தது. அப்பகுதியின் மக்கள் கத்தோலிக்கராவர்.

Northern Ireland and republic of Ireland

காலப்போக்கில் அயர்லாந்தில் வடக்கு – தெற்கு இடைவெளி அதிகரித்தது. வடபகுதியில் கைத்தொழில் விருத்தி ஏற்பட்டதால் அது செல்வச் செழிப்புள்ளதாக மாறியது. தென் அயர்லாந்து விவசாயப் பகுதியாக இருந்தது. தெற்கு விவசாய நிலங்களில் உடைமையாளர்களாக கிறிஸ்தவர்களான ஆங்கிலேயர் விளங்கினர். இது அங்கு அமைதியின்மைக்கு காரணமாயிற்று.

இருபதாம் நூற்றாண்டில் அயர்லாந்தில் ஹோம் ரூல் (HOME RULE) இயக்கம் வலுப்பெற்றது. இங்கிலாந்தின் பாராளுமன்றம் அயர்லாந்துக்குச் சுயாட்சி வழங்குவதை வன்மையாக எதிர்த்து வந்தது. அயர்லாந்தின் கத்தோலிக்கர்கள் பூரண சுதந்திரத்தைக் கோரினார்கள். அங்கிருந்த கிறிஸ்தவர்கள், அயர்லாந்துக்குள் சிறுபான்மையினராக இருக்க விரும்பவில்லை.

1920 ஆம் ஆண்டு பிரித்தானியப் பாராளுமன்றம் அயர்லாந்து அரசாங்க சட்டத்தை  (GOVERNMENT OF IRELAND ACT) இயற்றியது. இச்சட்டப்படி அயர்லாந்துத் தீவில் இரு அரசியல் அலகுகள் உருவாக்கப்பட்டன. உல்ஸ்ரர் (ULSTER) என்ற பெயரால் அழைக்கப்படும் வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக தொடர்ந்து இருந்தது. அங்கு ஓரளவு சுயாட்சி முறை (SELF GOVERNMENT) இருந்தது. உல்ஸ்ரர் ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக இருப்பதை கிறிஸ்தவர்கள் ஆதரித்தனர். ஆனால் அங்கு இருந்த கத்தோலிக்கர்கள் வட அயர்லாந்து, அயர்லாந்துடன் ஒன்றிணைய வேண்டும் என்று கோரினர். இறைமையுடைய ஒன்றிணைந்த அயர்லாந்து என்ற கத்தோலிக்கர்களின் கோரிக்கையை முன்வைத்து ஐ ஆர் ஏ (IRA) எனப்படும் ஐரிஷ் குடியரசு இராணுவம் (IRISH REPUBLICAN ARMY) என்னும் இயக்கம், கொரில்லா யுத்தத்தில் இறங்கியது. ஐ ஆர் ஏ பிரித்தானிய இராணுவத்தை எதிர்த்துப் போராடியது.

1921 இல் அயர்லாந்திற்கு சுதந்திரம் கிடைத்தது. புதிய சுதந்திர அயர்லாந்து அரசின் கீழ், தென் அயர்லாந்தின் 23 கவுண்டிகளும் (COUNTIES) உல்ஸ்ரர் பகுதியின் 30 கவுண்டிகளும் கொண்டுவரப்பட்டன. உல்ஸ்ரரின் எஞ்சிய கவுண்டிகள் ஐக்கிய இராச்சியத்தின பகுதியாக, வட அயர்லாந்து என அழைக்கப்பட்டு வந்தது. 1949 இல் ஐரிஷ் சுதந்திர அரசு ஐரிஷ் குடியரசு ஆகியது.

கத்தோலிக்கர்களுக்கும் புரட்டஸ்தாந்தியருக்கும் இடையிலான மோதல்கள் 1921 இன் பின்னர் தணிந்தன. ஆயினும் 1960 களில் வன்முறை மோதல்கள் தொடங்கின. 1968 இல் லண்டன்டெரியிலும் (LONDONDERRY) 1969 இல் லண்டன்டெரி, பெல்பாஸ்ட் (BELFAST) ஆகிய இரு நகரங்களிலும் வன்முறைகள் வெடித்தன. பிரித்தானிய இராணுவம் கலகங்களை அடக்குவதற்காகக் களமிறங்கப்பட்டது. ‘ஐ ஆர் ஏ’ உம் ஆயுதம் தாங்கிய புரட்டஸ்தாந்து குழுக்களும் குண்டுவைத்தல் போன்ற தீவிரவாத செயல்களில் இறங்கின. இந்த மோதல்கள் 1990 கள் வரை தொடர்ந்தன.

சமாதானச் செயல்முறை

3000 மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்ட மோதல்களை அரசியல் தீர்வு மூலம் முடிவுக்கு கொண்டு வருவதற்கு 70 களிலும் 80 களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1985 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியமும் அயர்லாந்துக் குடியரசும் ஆங்கில ஐரிஸ் உடன்படிக்கை (THE ANGLO IRISH AGREEMENT) ஒன்றை செய்து கொண்டன. வட அயர்லாந்தின் சமாதான செயல்பாட்டின் தொடக்கப் புள்ளியாக இவ் உடன்படிக்கை அமைந்தது. அரசியல் யாப்பில் ‘வட அயர்லாந்து பெறும் இடம் பற்றி, வட அயர்லாந்து மக்களில் பெரும்பான்மையினரின் சம்மதம் இன்றி திருத்தம் செய்வதில்லை’ என இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டன. வட அயர்லாந்தை நிர்வாகம் செய்வதில், அயர்லாந்துக் குடியரசுக்கு ஆலோசகர் என்ற அந்தஸ்து வழங்குவதனை இருதரப்பும் ஏற்றுக் கொண்டன. வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்துடனே இணைந்திருக்க வேண்டும் எனக் கூறிய ஐக்கியவாதிகள் (UNIONIST) ஆங்கில ஐரிஸ் உடன்படிக்கையை எதிர்த்தனர். ஆங்கில ஐரிஸ் உடன்படிக்கை என்னும் சட்டப்படியான உடன்படிக்கை சமாதான செயல்முறையை தொடக்கி வைத்தது. இரு அரசுகளும் வட அயர்லாந்து பற்றிய சட்ட நிலை பற்றிய வரையறையைச் செய்து கொண்டன.

வட அயர்லாந்தின் போரிடும் இரு பிரிவுகளதும் ஆதரவுடன் அரசியல் தீர்வு எட்டப்படுமானால், வன்முறைகள் அடங்கிப் போய்விடும் என இரு அரசுகளும் நம்பிக்கை கொண்டன. 1985 இற்கு பிந்திய காலத்தில் வட அயர்லாந்தின் அரசியல் கட்சிகள் இடையே உறவுகளை மேம்படுத்த இரு அரசுகளும் முயற்சித்தன. இரு பிரிவுகளிடையேயும் செயற்பட்ட தீவிரவாதக் குழுக்களை தனிமைப்படுத்த வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் கடும் பிரயத்தனத்துடன் மேற்கொள்ளப்பட்டன.

முதற்கட்டமாக 1990 களில் பேச்சு வார்த்தைகள் பற்றிய பேச்சு ஆரம்பிக்கப்பட்டது. இதன் பயனாக எந்தவித உடன்பாடும் ஏற்படாத போதும் நீண்ட காலத்தில் உடன்பாட்டை அடைவதற்கு இந்தப் பேச்சு உதவியது. உடன்பாடு ஒன்று அடையப் பெறும் போது, அது எல்லா வகை உறவுகளையும் உட்படுத்திய முழுமையான தீர்வாக அமைய வேண்டும் என இரு அரசுகளும் விரும்பின. காலப்போக்கில் மூன்று வகை நோக்கில் உடன்பாடு அணுகப்பப்பட்டது. முதலாவது அயர்லாந்துக்குள்ளே அமைய வேண்டிய உள்ளக உறவுகள் பற்றியது. இரண்டாவது வட அயர்லாந்துக்கும், அயர்லாந்துக் குடியரசுக்கும் இடையிலான உறவுகள் பற்றியது. மூன்றாவதாக ஐக்கிய இராச்சியத்திற்கும் அயர்லாந்துக் குடியரசுக்கும் இடையிலான உறவுகள் பற்றியது.

IRA

இக்காலத்தில் குடியரசு இராணுவத்தினுள்ளும் (IRA) அதன் ஆதரவாளர்கள் மத்தியிலும் ஏற்பட்ட சிந்தனை மாற்றம் அமைதிச் செயல்முறையின் முன்னேற்றத்திற்கு உதவியது. யுத்தத்தைத் தொடர வேண்டுமா என்ற விசாரணை நடத்தப்பட்டது. யுத்தத்தால் களைப்படைந்த நிலையில் பிரித்தானிய அரசு கடுமையான ராணுவத் தந்திரோபாயங்களைக் கையாள வேண்டியிருந்தது. ஆயினும் புரட்டஸ்தாந்திய தீவிரவாதிகளின் வன்முறை ஓயாமல் தொடர்ந்தது. அயர்லாந்து சமூகத்தின் மத்தியிலும் தேசியவாத உணர்வு தொடர்பாக மாற்றம் ஏற்பட்டது. கெடுபிடி யுத்தம் (COLD WAR) முடிவுக்கு வந்ததால் யுத்தத்தை நீடிப்பதில் பயனில்லை எனும் கருத்து மேலோங்கியது. இவை போன்ற பல்வேறு காரணிகள், மோதல்கள் பற்றிய மறுபரிசீலனைக்கும் விவாதத்திற்கும் உள்ளாகின.

ஐ ஆர் ஏ இயக்கத்தின் அரசியல் பிரிவான சின்பியன் (SINN FEIN) தீவிரவாத புரட்டஸ்தாந்திய பிரிவுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்ற பிடிவாதத்தை கைவிடச் செய்வதில் ஐக்கிய இராச்சிய அரசாங்கமும், அயர்லாந்துக் குடியரசு அரசாங்கமும் வெற்றி கண்டன. இதன் பயனாக தேசியவாதிகளுக்கும் பிரித்தானிய அரசாங்கத்திற்கும் இடையே உரையாடல் ஆரம்பித்தது.

பிரித்தானியாவின் பிரதமர் யோன் மேயரும், அயர்லாந்தின் பிரதமர் அல்போர்ட் ரெயினால்ட்ஸ் அவர்களும் அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்க முயற்சித்தனர். 1993 இல் இரு அரசாங்கங்களும் கூட்டாக டவுணிங் வீதி பிரகடனத்தை (DOWNING STREET DECLARATION) வெளியிட்டன. 1994 ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஐ ஆர் ஏ (IRA) போர் நிறுத்தத்தை அறிவித்தது. 1994 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி புரட்டஸ்தாந்தியக் குழுக்களும் போர் நிறுத்தத்தை அறிவித்தன. இவ்வாறு இரு தரப்பும் போர் நிறுத்தத்தை அறிவித்தமை சமாதான செயல்முறைக்கு பெரும் துணையாக அமைந்தது.

போர் நிறுத்தப்பட்ட போதும் அடிப்படையான பிரச்சனைகள் (CORE ISSUES) பற்றிய பேச்சு வார்த்தைகள் நடைபெறவில்லை. தேசியவாதிகள் பிரித்தானிய அரசாங்கம் சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டும் என எதிர்பார்த்தனர். ஆயினும் பிரித்தானிய அரசாங்கம் ஐ ஆர் ஏ இன் போர் நிறுத்தம் உறுதிப்படும் வரை காலதாமதம் செய்தது. புரட்டஸ்தாந்தியப் பிரிவினர் ஐ ஆர் ஏ இன் போர் நிறுத்தம் தற்காலிகமான ஓய்வா அல்லது நிரந்தர போர் நிறுத்தம் தானா என்பதில் சந்தேகம் கொண்டனர்.

தீவிரவாத குழுக்கள் ஆயுதங்களை களைந்து சமாதான வழிக்குத் திரும்புதல் தொடர்பான பிரச்சனைகள் எழுந்தன. பிரித்தானிய அரசாங்கமும், ஐக்கியவாதிகளும் தீவிரவாதிகள் ஆயுதங்களை கைவிட்டு, அரசியல் யாப்பு பற்றிய பேச்சில் தமக்கு உண்மையான விருப்பம் உள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என வாதிட்டனர். தீவிரவாதிகளின் முன்னணிப் பிரிவினர் அரசியல் உடன்பாடு எட்டப்படும் வரை ஆயுதங்களைக் களைதல் பற்றிப் பேசுவது பகுத்தறிவுக்கு பொருந்தாதது என வாதிட்டனர். ஆயுதக் களைவு தொடர்பான இந்தச் சிக்கலால் பேச்சுவார்த்தை தடைப்பட்டது.

1995 பிப்ரவரி மாதம் பிரித்தானிய அரசும், அயர்லாந்து அரசும் இணைந்து எதிர்காலம் குறித்த திட்டம் (FRAMEWORK FOR FUTURE) என்னும் ஆவணத்தை வெளியிட்டனர். இந்த ஆவணத்தில் முன்னர் குறிப்பிட்ட மூவகை நோக்கு மீளவும் அழுத்திக் கூறப்பட்டது.

தேசியவாதிகள், பிரித்தானிய அரசாங்கம் சர்வ கட்சிக் கூட்டத்தை கூட்டுவதைத் தாமதிப்பதாக குற்றம் சாட்டினர். அரசாங்கம் ஆயுதக் களைவில் உறுதியாக நின்றது. ஐக்கியவாதிகள் ஆயுதங்கள் களையப்படும் வரை சின்பியனுடன் எதிர் எதிரே பேச்சுவார்த்தை மேசையில் இருந்து உரையாடுவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். இதனால் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் தடைப்பட்டது.

1996 ஜனவரி மாதம் பிரித்தானிய அரசாங்கமும், அயர்லாந்து அரசாங்கமும் ஆயுதக் களைவுக்கான சர்வதேச ஆணைக்குழுவை அமைப்பதென உடன்பட்டன. ஆயுதக்களைவும் பேச்சுவார்த்தையும் சமாந்தரமாக செயற்படும் என அறிவிக்கப்பட்டது. பிரதமர் யோன் மேயர் சர்வ கட்சிக் கூட்டத்திற்கு முதற்படியாக வட அயர்லாந்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற ஆலோசனையை முன் வைத்தார்.

பிரித்தானிய அரசாங்கம் அரசியல் தீர்வு காண்பதை விரும்பவில்லை அல்லது அரசியல் தீர்வை காணும் சக்தியற்றது என ஐ ஆர் ஏ கருதியது.  இதனால் ஐ ஆர் ஏ போர் நிறுத்தத்தை 1996 பெப்ரவரியில் வாபஸ் பெற்றது. ஆயினும் ஐக்கியவாதிகள் போர் நிறுத்தத்தை வாபஸ் பெறாது சமாதான செயல்முறையில் பங்கெடுத்தனர்.

1996 யூன் மாதம் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. அயர்லாந்தின் பத்து அரசியல் கட்சிகளும் பிரித்தானியா, அயர்லாந்து அரசுகளும் இதில் பங்கேற்றன. முன்னாள் அமெரிக்க செனேட்டர் ஜான் மிக்செல் பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்தார். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நடைமுறை சார்ந்த விடயங்களில் அதிக நேரம் செலவிட்டப்பட்டது. ஐ ஆர் ஏ போர் நிறுத்தத்தை வாபஸ் பெற்ற காரணத்தால், சின்பியன் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்படவில்லை. ஆண்டுதோறும் வட அயர்லாந்தில் புரட்டஸ்தாந்தியர் நடத்தும் ஊர்வலங்களின் போது 1996 ஆம் ஆண்டில் தாக்குதல்கள் இடம்பெற்றன.

மே 1997 இல் ரொனி பிளயரின் தொழிற்கட்சி அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்தபோது பேச்சுவார்த்தையில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது. சின்பியன் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வரப்பட்டது. சின்பியன் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதற்கு மூன்று நிபந்தனைகளை விதித்தது. அவை ஏற்கப்பட்டதும் ஐ ஆர் ஏ 1997 யூலை 20 ஆம் திகதி போர் நிறுத்தத்தை அறிவித்தது.

தொடரும்.

https://ezhunaonline.com/federal-system-in-uk-2/?fbclid=IwAR2yyb3ppy5EeEKsVNP3sFQoM-oJ_5TfhsMAQpC_NfzRK1Amb-FB9WAuevM

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி @nunavilan 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு : ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளின் சுயாட்சி முறைகள் – பகுதி 3

August 22, 2023 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ன

பெரிய வெள்ளி உடன்படிக்கை (GOOD FRIDAY AGREEMENT)

Ulster party

வட அயர்லாந்தின் உல்ஸ்ரர் யூனியனிஸ்ட் கட்சி (ULSTER UNIONIST PARTY) அப் பகுதியின் பெரும்பான்மை கட்சியாகும். அது சமாதானச் செயல் முறையில் பங்கேற்றது. பிரித்தானியாவும் அயர்லாந்தும் ஒரு தீர்வைக் கொண்டு வரும் எனவும் தனது பங்கேற்பு அதற்கு உதவும் என்றும் இக் கட்சி நம்பியது. ஆனால் அயர்லாந்தின் இரண்டாவது பெரிய கட்சியான ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி (DEMOCRATIC UNIONIST PARTY)  சமாதானச் செயல் முறையில் இருந்து வெளிநடப்புச் செய்தது. ஆயுதக்களைவு செய்யப்படாமையை எதிர்த்தே அது வெளிநடப்புச் செய்தது. பேச்சுவார்த்தையானது ஐக்கிய இராச்சிய அரசாங்கமும் அயர்லாந்து அரசாங்கமும் பெரிய வெள்ளி உடன்படிக்கையில் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி கையெழுத்திடும் நிகழ்வுடன் முடிவுற்றது. பலகட்சிகளின் கூட்டத்தில் இரு அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்ட முடிவுகளின்படி இந்த உடன்படிக்கை அமைந்தது.

அதன் முக்கியமான முடிவுகளாவன :

  1. பெரிய பிரித்தானியாவுடன் இணைந்திருப்பதா அல்லது தனி நாடாகப் பிரிந்து இறைமையுள்ள அயர்லாந்தாக இருப்பதா என்பது, அயர்லாந்து தீர்மானிக்க வேண்டிய விடயமாகும்.
  2. வட அயர்லாந்தையும் தெற்கு அயர்லாந்தையும் இணைத்த ஐக்கிய அயர்லாந்தாக உருவாகுவதைத் தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமையை, அயர்லாந்து மக்களே சுயமாக, சுதந்திரமாக இரு பகுதியினரதும் சம்மதத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.
  3. வட அயர்லாந்து மக்களின் குறிப்பிடத்தகுந்த அளவு மக்கள் தொகையினர் அயர்லாந்துத் தீவின் பெரும்பான்மையினரான மக்களின் நியாயமான விருப்பமான, ஒன்றிணைந்த அயர்லாந்திற்கு ஆதரவாக இருந்தபோதும், வட அயர்லாந்தின் பெரும்பான்மை மக்கள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து இருப்பதையே விரும்புகிறார்கள். ஆதலால், வட அயர்லாந்தின் அந்தஸ்து பற்றி எவ்வித மாற்றத்தையும் செய்வது தவறானது. அத்தகைய மாற்றம் வட அயர்லாந்து மக்களின் பெரும்பான்மையின் சம்மதமின்றிச் செய்ய முடியாது.
  4. மேலே 1 ஆம் 2 ஆம்  பிரிவுகளில் குறிப்பிட்டபடி ஐக்கிய அயர்லாந்து உருவாகுவதற்கு, எதிர்காலத்தில் அயர்லாந்துத் தீவு மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை பிரயோகிப்பார்களேயானால், இருநாட்டு அரசாங்கங்களினதும் பாராளுமன்றத்தில் அதற்கான சட்டத்தை நிறைவேற்றி, அயர்லாந்துத் தீவு மக்களின் அபிலாசையை நிறைவு செய்யும் கடப்பாடு இரு அரசாங்கங்களுக்கும் உள்ளது.

மேற்குறித்தவை சமாதானச் செய்முறையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் நன்மையான அல்லது ‘இருதரப்பிற்கும் வெற்றி’ (WIN- WIN) என்ற நிலையைத் தோற்றுவித்தன. எத்தரப்பும் தோற்கவில்லை என்ற நிலை உருவானது. அயர்லாந்துக் குடியரசுடன் வட அயர்லாந்து இணையக்கூடிய சாத்தியத்தை உடன்படிக்கை மறுக்கவில்லை. ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்து இருப்பதா அல்லது அயர்லாந்து குடியரசுடன் இணைவதா என்பதை வட அயர்லாந்து மக்களே தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. பிரித்தானியாவினதும் அயர்லாந்தினதும் யாப்புக்களில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய உறுப்புரைகளும் வரைவாகத் தரப்பட்டிருந்தன.

goodfriday agreement signed

வட அயர்லாந்தின் ஜனநாயக நிறுவனங்கள்

உடன்படிக்கையில் வட அயர்லாந்தின் ஜனநாயக நிறுவனங்களின் அமைப்பு, செயற்பாடு என்பன பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. வட அயர்லாந்தின் பாராளுமன்றம் (ASSEMBLY) 180  உறுப்பினர்களை கொண்டதாக இருக்கும். அவர்கள் தனிமாற்று  வாக்கு முறை (SINGLE TRANSFERABLE VOTE – STV) மூலம் பல அங்கத்தவர் தொகுதிகளில் (MULTI-MEMBER CONSTITUENCIES) இருந்து தெரிவு செய்யப்படுவார்கள் என உடன்படிக்கையில் குறிப்பிட்டப்படிருந்தது. வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்றத்திற்கான தொகுதிகள் 06 உறுப்பினர்களை தெரிவு செய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடுகள் வட அயர்லாந்தின் எல்லாச் சமூகங்களையும் (COMMUNITIES) பங்கேற்புச் செய்வதற்கும் அவையாவற்றினதும் நலன்களைக் காப்பதற்கும் அவசியமானவை என்று கருதப்பட்டது.

குழுக்களில் தவிசாளர்கள், மந்திரிகள், குழுக்களின் உறுப்பினர்கள் ஆகியோரின் தெரிவில் சமூகங்களின் விகிதாசாரங்களின் படி சமநிலைப்பலம் பேணப்படும். வட அயர்லாந்தின் பாராளுமன்றமும் ஏனைய நிறுவனங்களும் ஐரோப்பிய யூனியனின் மனித உரிமைகள் சமவாயத்தை (CONVENTION ON HUMAN RIGHTS) மீறக்கூடாது. அதேபோல் வட அயர்லாந்து இயற்றும் உரிமைகள் சட்டத்தையும் மீறக்கூடாது. வட அயர்லாந்துக்கு ஒரு மனித உரிமை ஆணைக்குழுவும் சமத்துவ ஆணைக்குழுவும் (EQUALITY COMMISSION) நியமிக்கப்படும்.

எல்லாச் சமூகங்களினதும் கருத்துக்களையும் கேட்டறிவது மட்டுமல்லாமல் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவுகளை எடுக்கும் புத்தாக்க நடைமுறைகளை உடன்படிக்கை அறிமுகம் செய்தது. இத்தகைய முடிவு எடுத்தல் (DECISION MAKING) CROSS COMMUNITY BASIS முடிவுகள் என அழைக்கப்படும்.

உதாரணமாக அ) பாராளுமன்றம் அவைத்தலைவரைத் தெரிவு செய்தல், ஆ) முதலமைச்சரையும் பிரதி முதலமைச்சரையும் தெரிவு செய்தல், இ) வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு என்பன போன்ற முடிவுகளில் எல்லாச் சமூகங்களும் பங்கேற்புச் செய்வதை உறுதி செய்தல் என்பன இவ்வகையில் அடங்கும். இவ்வாறான முடிவுகள் எடுக்கும்போது,

  • PARALLEL CONSENT –  சமாந்தர சம்மதம்
  • WEIGHTED MAJORITY –  பெறுமதியிட்ட பெரும்பான்மை 

போன்ற உத்திமுறைகள் பயன்படுத்தப்படும். சமாந்தர சம்மதம் என்பதை விளக்குவதற்கு ஒரு உதாரணத்தை கூறலாம். ஒரு தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் போது யூனியனிஸ்ட் கட்சியின் பெரும்பான்மை வாக்குகளும் தேசியவாதிகளின் (NATIONALISTS) பெரும்பான்மை வாக்குகளும் கிடைப்பதை உறுதி செய்தல் வேண்டும். பெறுமதியிட்ட பெரும்பான்மை வாக்குகளுக்கு உதாரணம், ஒரு தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் போது யூனியனிஸ்ட் உறுப்பினர்கள் 40 வீதத்தினரும் தேசியவாதிகளில் 40 வீதத்தினரும் சமூகமாயிருந்து வாக்களித்து மொத்த வாக்குகளில் 60 வீதமான வாக்கைப்பெற்று நிறைவேற்றுதல்.

(CROSS COMMUNITY BASIS) முடிவெடுத்தலை செயற்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வின் போதே தமது சார்பு எது என்ற அடையாளத்தை (உதாரணம் – யூனியனிஸ்டா அல்லது தேசியவாதியா அல்லது வேறு ஏதேனும் ஒன்றா) உறுப்பினர்கள் தெரிவித்தல் வேண்டும்.

வட அயர்லாந்துப் பாராளுமன்றம் வட அயர்லாந்துக்குரிய அதிகார விடயங்களில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் கொண்டதாக உள்ளது. அப் பாராளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டருக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களில் கூட இராஜாங்க செயலாளரின் (SECRETARY OF STATE) சம்மத்துடன் சட்டங்களை இயற்றலாம்.

வடக்கு  / தெற்கு மந்திரிகள் சபை (NORTH / SOUTH MINISTERIAL COUNCIL)

வடக்கு / தெற்கு மந்திரிகள் சபை என்ற அமைப்பு வட அயர்லாந்தினதும் அயர்லாந்துக் குடியரசினதும் மந்திரிகளை உள்ளடக்கிய ஒரு சபையாகும். இச்சபை வட அயர்லாந்தின் நிர்வாக விடயங்களில் சம்பந்தப்பட்டவர்களான இருதரப்பு மந்திரிகளும் ஒன்றிணைந்து ஆலோசிப்பதற்கும்  செயற்படுவதற்குமான சபையாகும். அயர்லாந்து அரசாங்கத்துடன் ஆலோசனைக் கூட்டுறவு மூலம் எல்லை கடந்த தொடர்புகள் (CROSS BORDER RELATIONS), இருதரப்பிற்கும் பொதுவான நலத்திட்டங்கள் என்பவற்றை செயற்படுத்த இச்சபை உதவும். இச்சபையின் முடிவுகள் உடன்படிக்கையின் படி நிறைவேற்றப்படும். இச்சபையில் வட அயர்லாந்தின் முதலமைச்சர், பிரதி முதலமைச்சர், தொடர்புடைய அமைச்சர்கள் என்போர் உறுப்பினராக இருப்பர். அயர்லாந்து அரசாங்கத்தின் சார்பில், பிரதம மந்திரியும் தொடர்புடைய அமைச்சர்களும் பங்குகொள்வார்கள். வடக்கு  / தெற்கு கூட்டுறவுச் செயற்பாடுகளுக்குரியனவாக பின்வரும் விடயங்கள் உள்ளன.

  1. கால்நடை, சுகாதாரம், பயிர் நோய்
  2. ஆசிரியர்களின் தகைமை பரிமாற்றம்
  3. தந்திரோபாயப் போக்குவரத்து திட்டமிடல்
  4. சூழல் பாதுகாப்பு, சூழல் மாசடைதல்
  5. நீர் வளங்கள் தரம் பேணல்
  6. கழிவு முகாமைத்துவம்
  7. உள்ளூர் கால்வாய் போக்குவரத்து
  8. எல்லை கடந்த தொழில் செய்யும் தொழிலாளர் விவகாரம்
  9. மோசடித் தடுப்பு
  10. சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு
  11. சந்தைப்படுத்தல்
  12. ஆராய்ச்சியும் உற்பத்திப் பொருள் மேம்பாடும்
  13. ஐரோப்பிய யூனியன் திட்டங்களில் பொருத்தமுடையவை
  14. நன்னீர் மீன்பிடி, மீன் வளர்ப்பு, கடல் போக்குவரத்து
  15. சுகாதாரத்துறை, விபத்து அவசர சிகிச்சை
  16. நகர அபிவிருத்தியும் கிராம அபிவிருத்தியும்

பிரித்தானியா – அயர்லாந்து சபை (BRITISH – IRISH COUNCIL)

பிரித்தானியாவிற்கு அயர்லாந்து தீவுகளுக்கும் இடையிலான பொதுவான விடயங்கள் பற்றி கலந்தாலோசித்து பரஸ்பர நன்மை தரும் விடயங்களில் நடவடிக்கை எடுப்பதற்காக பிரித்தானிய – அயர்லாந்து சபை (BIC) என ஒரு சபை இருக்கும் என உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிரத்தானிய – அயர்லாந்து சபையின் உறுப்பினர்களாக பிரித்தானிய அயர்லாந்து அரசாங்கங்களின் பிரதிநிதிகள் இருப்பார்கள். இதனைவிட வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகியவற்றின் அதிகாரப் பகிர்வுடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பிரித்தானிய இராச்சியத்தின் பகுதிகளான ISLE OF MEN (மான்தீவு), CHANNEL ISLAND ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பொருத்தமானவிடத்து உள்ளடக்கப்படலாம்.

உடன்படிக்கையில், எல்லா துணைப்படைக் குழுக்களினதும் ஆயுதங்களைக் களைதல் முக்கியமான விடயமாக குறிப்பிடப்பட்டது. இதனை கண்காணிப்பதற்காக சர்வதேச உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவை நியமிப்பதெனக் குறிப்பிடப்பட்டது.

1998 நவம்பர் 19 ஆம் திகதி நடத்தப்பட்ட சர்வசன வாக்கெடுப்பில் வட அயர்லாந்து, அயர்லாந்துக் குடியரசு ஆகிய இரு பகுதி மக்களாலும் பெரிய வெள்ளி உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. வட அயர்லாந்தில் 71.1 வீதத்தினர் ஆதரவாக வாக்களித்தனர். அயர்லாந்து குடியரசில் அதனிலும் கூடிய பெரும்பான்மையான 94.4 வீதத்தினர் ஆதரித்து வாக்களித்தனர். சர்வசன வாக்கெடுப்பில் ஆதரவைப் பெற்ற பின்னர் வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்றம் 1998 இல் வட அயர்லாந்துச் சட்டத்தை இயற்றியது.

அயர்லாந்துச் சட்டத்தின்படி அயர்லாந்து பாராளுமன்றம் ‘கைமாற்றப்பட்ட விடயங்கள்’ (TRANSFERRED MATTERS) தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் உடையதாக உள்ளது. ஒதுக்கப்பட்டது அல்லது விதிவிலக்கானது என குறித்துரைக்கப்படாத எந்த விடயமும் (ANY MATTER IS NOT AN EXPECTED OR RESERVED MATTER) ‘கைமாற்றப்பட்ட விடயம்’ என வரையறை செய்யப்பட்டிருந்தது.

வெஸ்ட் மினிஸ்டரால்  ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் இரு வகைப்படும்.

  1. EXCEPTED MATTER  – விதிவிலக்கான விடயங்கள்
  2. RESERVED MATTER – ஒதுக்கப்பட்ட விடயங்கள்

இவற்றில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு.

விதிவிலக்கான விடயங்கள் :

முடி, பாராளுமன்றம், சர்வதேச உறவுகள், பாதுகாப்பு, குடிவரவும் பிரஜா உரிமையும், வரிவிதிப்பு, தேசிய காப்புறுதி (INSURANCE), தேசிய பாதுகாப்பு, அணுசக்தி, வான்வெளி ஆராய்ச்சி இவை கைமாற்றப்பட முடியாதன. இவற்றை கைமாற்றுவதாயின் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

ஒதுக்கப்பட்ட  விடயங்கள் :

இவை எதிர்காலத்தில் கைமாற்றப்படலாம். கைமாற்றப்படகூடிய ஒதுக்கப்பட்ட விடயங்களில் சில வருமாறு : கப்பற்போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, கடல் வளங்கள், தபாற்சேவை, ஏற்றுமதி இறக்குமதிக் கட்டுப்பாடு, வெளிநாட்டு வர்த்தகம், தொலைத்தொடர்பு முதலியன.

ஐக்கிய இராச்சிய அரசாங்கத்திற்கும் அதிகாரப் பகிர்வை பெற்ற பகுதிகளுக்கும் இடையே 2001 டிசம்பர் மாதம் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் (MEMORANDUM OF UNDERSTANDING) சிவெல் வழக்காறு (SEWEL CONVENTION) வட அயர்லாந்திற்கும் பொருந்துவதாயிற்று.

அதிகார பகிர்வு நடைமுறையில் முன்னேற்றம்

1998 இல் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் பின்வருமாறு அமைந்தன.

  • உல்ஸ்ரர் யூனியனிஸ்ட் கட்சி (UUP) – 28 ஆசனங்கள்
  • ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி (DUP) – 20 ஆசனங்கள்
  • ஐக்கிய இராச்சிய யூனியனிஸ்ட் (UK UNIONIST PARTY) –  05 ஆசனங்கள்
  • சுதந்திர யூனியனிஸ்டுகள் – 03 ஆசனங்கள் 

குடியரசு சார்பானவர்களில்,

  • ஜனநாயக தொழிற்கட்சி (SDLP) – 24 ஆசனங்கள்
  • சின்பியன் – 18 ஆசனங்கள்
  • கூட்டணி(ALLIANCE) – 06 ஆசனங்கள்                                                                       
  • வட அயர்லாந்துப் பெண்கள் கூட்டணி (NIWC) – 02 ஆசனங்கள்

பெரிய வெள்ளி உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. 1998 தேர்தலுக்கும் 2003 தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் படிப்படியாக முன்னேற்றங்கள் ஏற்பட்டன. 2006 இல் ஸ்கொட்லாந்தில் எல்லாத் தரப்பினரும் பங்கு பற்றிய பேச்சுவார்த்தையின் முடிவில் புனித அன்ட்ரூஸ் உடன்படிக்கை (ST.ANDREWS AGREEMENT) நிறைவேற்றப்பட்டது. இந்த உடன்படிக்கை நிறைவேறியபின் 2007 மே 8 ஆம் தேதி மூன்றாவது தேர்தல் வட அயர்லாந்தில்  நடத்தப்பட்டது. தேர்தலின் முடிவில் வண. இயன் பெய்ஸ்லி (REV.IAN PAISLEY) முதலமைச்சராகவும், மார்டின் மக்கின்ஸ் (MARTIN MCGUINNESS) பிரதி முதலமைச்சராகவும் பதவியேற்றனர். பெய்ஸ்லி,  ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியைச் (DUP) சேர்ந்தவர். மார்ட்டின் மக்கின்ஸ், சின்பியன்  தலைவர். இருவரும் ஒருவருக்கொருவர் எதிரெதிரான தீவிரவாதிகள். பெரிய வெள்ளி உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட 1998 இல் இவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவார்கள் என்பது கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத விடயமாக இருந்தது. வட அயர்லாந்து 2007 இல் அமைதிப் பாதையில் முன்னேற்றிக் கொண்டிருந்ததன் அடையாளம் இதுவெனலாம்.

வேல்ஸ்

இங்கிலாந்து நாட்டின் அரசர்கள் வேல்ஸ் பகுதியை அடிமைப்படுத்த நீண்ட காலம் முயற்சி செய்து வந்தனர். இறுதியாக 1282 இல் எட்வார்ட் வேல்ஸ்சை கைப்பற்றி ‘வேல்ஸ் இளவரசன்’ என்ற பட்டத்தை சூடிக்கொண்டார். வேல்ஸ் நாட்டில் இங்கிலாந்துக்கு எதிரான புரட்சிகள் இடைவிடாது தொடர்ந்தன. 16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசு வேல்ஸ்சை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் சட்டங்களான 1536, 1542 ஆகியவற்றை இயற்றியது. வேல்ஸின் நிர்வாகத்தை ‘வெல்ஸ்’ மொழியில் நடத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. 1707 இல் வேல்ஸ்  பெரிய பிரித்தானியாவின் பகுதியாயிற்று. 1801 இல் வேல்ஸ் ஐக்கிய இராச்சியம் (UNITED KINGDOM) என்ற அரசின் பாகமாக்கப்பட்டது. 1746 இற்கும் 1967 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் இங்கிலாந்திற்கு பிரயோகமாகும் அதேவேளை, தாமாகவே வேல்ஸ் சட்டங்களாகவும்  கருதப்பட்டன.

wales (1)

ஆங்கிலேயர்களின் மேலாதிக்கம் அதிகரித்தபோதும், வேல்ஸ் மக்கள் தமது மொழியையும் பண்பாட்டையும் பேணிப் பாதுகாத்து வந்தனர். 20 ஆம் நூற்றாண்டில் பாடசாலைகளில் வெல்ஸ் மொழி கற்பிக்கப்பட்டது. குறிப்பாக வடமேற்கு வேல்ஸ் பகுதியில் பாடசாலைகளில் வெல்ஸ் மொழி கற்பிக்கப்பட்டது. வெல்ஸ் மொழியில் தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலைக் கல்வித்திட்டத்தில் வெல்ஸ் மொழி  இணைப்புற்றது. 1993 ஆம் ஆண்டின் வெல்ஸ் மொழிச் சட்டம், நீதிமன்றுகளில் வெல்ஸ் மொழி பேசுவோர் தம் மொழியிலேயே வழக்குகளை தொடர்வதற்கு உரிமை வழங்கியது. அதேபோல பொதுத்துறை அலுவலகங்கள் யாவற்றிலும் வேல்ஸ் மக்கள் தங்கள் அலுவல்களை வெல்ஸ் மொழியில் நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. வெல்ஸ் மொழிக்கும் ஆங்கிலத்துக்கு சமத்துவ அந்தஸ்து வழங்கப்பட்டது

18 ஆம் நூற்றாண்டில் வேல்ஸ் பகுதியில் மெதடிஸ்ட் கிறிஸ்தவம் மறுமலர்ச்சியடைந்து  மக்களிடையே பரவியது. மெதடிசம் ஓர் மறுப்பு கொள்கைச் சமயமாகும். வேல்ஸ் 18 ஆம் நூற்றாண்டில் தொழிற் புரட்சியின் தாக்கத்திற்கு உள்ளானது. 19 ஆம் நூற்றாண்டில் தென்கிழக்கு வேல்ஸ் பகுதியில் கரிச்சுரங்கத் தொழில், இரும்புக் கைத்தொழில் என்பவற்றின் முன்னேற்றத்தினால் கைத்தொழில் வளர்ச்சி துரிதமாக ஏற்பட்டது. அத்தோடு சனத்தொகையும் விரைவாக அதிகரித்தது. 20 ஆம் நூற்றாண்டில் கைத்தொழில் துறையின் வீழ்ச்சியால் வேல்ஸின் தேசியவாத உணர்வுகள் தூண்டப்பட்டன. 1940 களில், அரசியலில் லிபரல்களின் இடத்தை  தொழிற்கட்சி பெற்றுக்கொண்டு முன்னிலைக்கு வந்தது. பிளெய்ட் சிம்றுவின் (PLAID CYMRU) தேசியக்கட்சி 1960 களில் தன் ஆதரவுத்தளத்தை விரிவாக்கி முன்னிலைக்கு வந்தது.

1974 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த தொழிற்கட்சி அரசாங்கம், வேல்ஸ்சுக்கு அதிகாரப்பகிர்வை வழங்குவதில் அக்கறை கொண்டது. ஸ்கொட்லாந்துக்கு ஒரு சட்டசபையையும் வேல்ஸ்சுக்கு ஒரு சபையையும் அமைக்க முடிவாயிற்று. 1979 மார்ச் முதலாம் திகதி நடைபெற்ற சர்வசன வாக்கெடுப்பில் 20% வாக்காளரின் ஆதரவு மட்டுமே இதற்கு கிடைத்தது. மொத்த வாக்காளர்களில் 58.8% பங்குபற்றினர். இச் சர்வசன வாக்கெடுப்பு, தொழிற்கட்சியின் ஆதரவு வீழ்ச்சி கண்டிருந்த ஒரு தருணத்தில் நடைபெற்றது. சர்வசன வாக்கெடுப்பு நடந்து ஒரு மாதத்தின் பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் அக்கட்சி ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டது. இதனை அடுத்து நடைபெற்ற பொதுத்தேர்தலில் தச்சரின் பழமைவாதக் கட்சி வெற்றி பெற்றது. மார்க்கிரேட் தச்சரதும் மேஜரதும் ஆட்சிக் காலத்தில் அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமற் போயிற்று. பழமைவாதக் கட்சியின் ஆட்சியில் வேல்ஸ்சின் கைத்தொழில் வலயம் பேரழிவுக்கு உட்பட்டது. வேலையின்மை அதிகரித்தது. வட வேல்ஸ் பகுதியில் பிளெய்ட் சிம்று (PLAID CYMRU) வின் தேசியக் கட்சி தன் பலத்தை அதிகரித்தது.

1997 மே மாதம் நடைபெற்ற தேர்தலின் போது ரோனி பிளயரின் (TONY BLAIR) தொழிற்கட்சி, வேல்ஸ்சிற்கு அதிகாரப் பகிர்வுடைய சட்டசபையை வழங்குவதாக நம்பிக்கையளித்தது. 1997 செப்டம்பர் இல் நடைபெற்ற சர்வசன வாக்கெடுப்பில் 50.3% மக்கள் அதிகாரப் பகிர்வுக்குச் சாதகமாக வாக்களித்தனர். இங்கிலாந்திற்கு அயலில் உள்ள வேல்ஸ் பகுதிகள் அதிகாரப் பகிர்வை நிராகரித்து வாக்களித்தன.

வேல்ஸ் அரசாங்கச்சட்டம் (GOVERNMENT OF WALES ACT) 1998 இல் இயற்றப்பட்டது. இச் சட்டத்தின்படி வேல்ஸ்சிற்கு ஒரு தேசியச் சட்டமன்றம் (NATIONAL ASSEMBLY) அமைக்கப்பட்டது. இச் சட்டமன்றத்திற்கு தனி அங்கத்தவர்கள் தொகுதிகளில் இருந்து 40 பேர் தெரிவு செய்யப்பட்டனர். பட்டியல் முறையின்படி பிராந்தியங்களில் இருந்து 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். வேல்ஸ் சட்டமன்றத்தில் நிர்வாகத்திற்கும் சட்ட ஆக்கத்திற்குமான முறைசார் (FORMAL) பிரிப்பு இருக்கவில்லை. கட்டளைகள், பிரமாணங்கள் என்ற வகையிலான துணைநிலைச் சட்டவாக்கம் (SECONDARY LEGISLATION) தொடர்பான கையளிக்கப்பட்ட அதிகாரம் (DELEGATED POWER) உடையதாக  வேல்ஸ் சட்டமன்றம் விளங்கியது. முதனிலைச் சட்டங்களை இயற்றுதல் வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்றத்திற்கு உரியதாக இருந்தது. இருப்பினும் சட்டமன்றம் குறிப்பிடத்தக்களவுக்குச் சுயாதீனம் உடையதாக இருந்தது.

வேல்ஸ் பகுதிக்கான இராஜாங்க செயலாளரின் (SECRETARY OF STATE FOR WALES) நிர்வாக அதிகாரங்கள் சட்டமன்றத்திற்கு மாற்றப்பட்டன. இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் பின்வருவன.

  • விவசாயம், வனத்துறை
  • மீன்பிடியும் உணவும்
  • பண்டைய நினைவுச் சின்னங்களும் வரலாற்று முக்கியத்துவமுடைய கட்டங்களும் 
  • பண்பாடு (அருங்காட்சியகங்கள், கலைக் கட்டடங்கள், நூலகங்கள்)
  • பொருளாதார விருத்தி
  • கல்வியும் பயிற்சியும்
  • சூழல்
  • சுகாதாரமும் சுகாதார சேவைகளும்
  • நெடுஞ்சாலைகள், வீடமைப்பு, கைத்தொழில்
  • உள்ளூராட்சி
  • சமூக சேவைகள், விளையாட்டு, பொழுதுபோக்கு
  • சுற்றுலாத்துறை
  • நகர, கிராம திட்டமிடல்
  • போக்குவரத்து
  • நீர் விநியோகம், வெள்ளப் பாதுகாப்பு
  • வெல்ஸ் மொழி

2002 ஆம் ஆண்டில் அதிகாரப் பகிர்வு ஒழுங்கமைப்புச் செயற்பாடு பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக றிச்சார்ட் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. சீர்திருத்தம் வேண்டிய விடயங்கள் குறித்து பல சிபாரிசுகளைச் செய்தது. அச் சிபாரிசுகளில் சில வருமாறு.

  1. சட்டமன்றத்தின் கூட்டிணைவு (CORPORATE BODY) என்ற அந்தஸ்தில் இருந்து மாற்றி சட்டமன்றம் என்ற அந்தஸ்தை வழங்குதல்.
  2. சட்டமன்றத்திற்குப் பதில் நிர்வாகத்துறை,  சட்டவாக்கத்துறை என்ற நிறுவன அமைப்புகளை உருவாக்குதல்.
  3. 80 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையை உருவாக்குதல். அச் சட்டசபையின் உறுப்பினர்கள் தனிமாற்று வாக்கு முறையிலான விகிதாசார பிரதிநிதித்துவ முறைப்படி தெரிவு செய்யப்படுவர். இச் சட்டசபை 2011 அளவில் முதனிலைச் சட்டவாக்க அதிகாரம் உடையதாய் மாற்றமுறும்.

2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வேல்ஸ் அரசாங்கச் சட்டம் றிச்சார்ட் ஆணைக்குழுவின் சிபாரிசுகள் பலவற்றை உள்ளடக்கியதாய் இருந்தது. வேல்ஸ் அதிகாரப்பகிர்வின் படிமுறை வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாய் 2006 சட்டம் விளங்கியது. இச் சட்டம் வேல்ஸ்சில் மூன்று தனித்துவமான அரசியல் நிறுவன அமைப்புகளை உருவாக்கியது.

  1. வேல்ஸ்சின் தேசிய அசெம்பிளி (NATIONAL ASSEMBLY FOR WALES).  இது கூட்டிணைப்பு அல்லாத நிறுவன அமைப்பு (UNINCORPORATED BODY).
  2. முதலமைச்சரின் தலைமையிலான வேல்ஸ் அசெம்பிளியை அமைத்தல். அதனை நிர்வாக அதிகாரம் உடையதாக்குதல்.
  3. தேசிய அசெம்பிளி ஆணைக்குழுவை அமைத்தல். அதனை கூட்டிணைவு அமைப்பாக (BODY CORPORATE) அமைத்தல். இந்த அமைப்பு முற்கூறிய அசெம்பிளிக்கு ஆதரவு தரும் கருமங்களை ஆற்றுவதாக இருத்தல்.

1999 இல் வேல்ஸ் அசெம்பிளிக்கு நடைபெற்ற தேர்தலின்  முடிவுகள் பின்வருமாறு.

  • வெல்ஸ் தொழிற்கட்சி – 28 ஆசனங்கள்
  • பிளய்ட் சிம்று (PLAID CYMRU) – 17 ஆசனங்கள்
  • வெல்ஸ் பழமைவாதக்கட்சி – 09 ஆசனங்கள்
  • வெல்ஸ் லிபரல் தேசியவாதிகள் – 06 ஆசனங்கள்

2003 ஆம் ஆண்டு தேர்தலில் வெல்ஸ் தொழிற்கட்சி 30 ஆசனங்களை பெற்றது. சிம்றுவின் ஆசனங்கள் 12 ஆகக் குறைந்தன. வெல்ஸ் லிபரல் ஜனநாயகவாதிகள் 6 ஆசனங்களை பெற்றனர். 2007 தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

  • வெல்ஸ் தொழிற்கட்சி – 26
  • பிளய்ட் சிம்று – 15
  • பழமைவாதிகள் – 12
  • லிபரல் ஜனநாயகவாதிகள் – 06
  • கட்சி சாராத தனி அங்கத்தவர் – 01

வேல்ஸ் நிர்வாகத்துறையில் தொழிற்கட்சியும் பிளய்ட் சிம்றுவும் முறையே 5 பதவிகள், 3 பதவிகள் எனப் பதவிகளைப் பங்கிட்டுக்கொண்டுள்ளனர். தொழிற்கட்சியின் HYWEL RHODRI MORGAN, வேல்ஸ் முதலமைச்சராகவும் (2000 ஆண்டு முதல் 2003 வரை) அக்கட்சியின் CARAWAY HOWELL TONES, பிரதமராகவும் இருந்துள்ளனர்.

1997 முதல் வேல்ஸ்சின் அதிகாரப் பகிர்வுக்கான ஆதரவு அதிகரித்துச் செல்வதை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இன்னும் வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்தின் செல்வாக்கு வேல்ஸ்சில் இருந்து வருவதைப் பற்றிய உணர்வு இருந்து வருகிறதாயினும் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தைப் போன்ற சட்டவாக்க மன்றம் வேல்ஸ்சிற்கு வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது. 1997 இற்கும் 2003 இற்கும் இடையிலான கருத்துக்கணிப்பு மாற்றங்கள் பின்வருமாறு.

chart 1 (2)

ஏறக்குறைய 14% வீதத்தினர் வேல்ஸ் தனித்த சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்ற கருத்துடையவராக இருந்து வந்துள்ளனர். மேற்படி புள்ளிவிபரங்கள் அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதை காட்டுகின்றன. 2010 பெப்ரவரி மாதம் பி.பி.சி நடத்திய கருத்துக்கணிப்பிலும் அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அதிகரித்திருப்பதை அறிய முடிந்தது.

ஐக்கிய இராச்சியத்தின் அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளக்கூடிய படிப்பினைகள்

ஐக்கிய இராச்சியம் இன்று அடைந்துள்ள அரசியல் முன்னேற்றத்திற்கு, 

  1. பிரித்தானியாவின் அரசியல் பண்பாடு (POLITICAL CULTURE)
  2. புதுமைகளை புகுத்துவதில் உள்ள விருப்பமும் உறுதியும் 

என்று இரு பண்புகள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன.

ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுவான ஐ ஆர் ஏ (IRA) அதிகாரப் பகிர்வுத் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்ததோடு ஆயுதப் போராட்டத்தை கைவிடுவது என்ற தீர்மானத்தை எடுத்தது மிக முக்கியமான திருப்பமாகும். வட அயர்லாந்தின் தேசியவாதிகள் சிவெல் வழக்காறு போன்ற எவ்வித வாக்குறுதிகளும் இல்லாமலே அதிகாரப் பகிர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். சிவெல் வழக்காறு, பெரிய வெள்ளி உடன்படிக்கையின் பின்னரேயே நடைமுறைக்கு வந்தது. அயர்லாந்து அரசும் அமெரிக்க அரசும் நேரடியாக உடன்படிக்கையில் சம்பந்தப்படுவதும் உடன்படிக்கையின் வெற்றிக்கு சாதகமான செல்வாக்கை பிரயோகித்தது. தேசியவாதிகள் பிரித்தானியாவின் அரசியல் மரபுகளில் நம்பிக்கை வைத்தனர். அதிகாரப்பகிர்வு மூலம் தரப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறப்படமாட்டா என்பதை நம்பினர். சிவெல் வழக்காறு இருந்திருக்காவிட்டால் ஸ்கொட்லாந்து மக்கள் அதிகாரப்பகிர்வை ஏற்றிருக்கமாட்டார்கள். அவ்வகையில் சிவெல் வழக்காறு ஒரு புத்தாக்கமான அரசியல் நடவடிக்கையாகும்.

வட அயர்லாந்திற்கும் வேல்ஸ்சிற்கும் சிவெல் வழக்காறு  பிரயோகிக்கப்பட்டமை ஒரு முன்னேற்றமான அரசியல் நடவடிக்கையாகும். ஸ்கொட்லாந்துச் சட்டம் (SCOTLAND ACT), அயர்லாந்துச் சட்டம் (IRELAND ACT) என்று இரண்டு அதிகாரப்பகிர்வை, முறையே ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து என்பனவற்றிற்கு வழங்கின. இப்போது இச் சட்டங்கள் காரணமாக ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்றம்  ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து என்பன தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரத்தை இழந்துவிட்டதா? சிவெல் வழக்காறு சட்டம் அன்று. ஆனால் பிரித்தானியாவின் அரசியற் பண்பாடு (POLITICAL CULTURE) உயர்வானது. சிவெல் வழக்காறை மீறி வெஸ்ட் மினிஸ்டர், பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களில் அப்பகுதிகளின் சம்மதம் இன்றிச்சட்டம் இயற்றமாட்டாது.

ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் ஆகியவற்றில் அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு பிரதான கட்சிகள் யாவும் பங்களிப்பை வழங்கின. பிரதான இரு கட்சிகளான தொழிற்கட்சியும் பழமை பேணும் கட்சியும் நாட்டின் நன்மை கருதிப் பொதுவான விடயங்களில் ஒற்றுமையாக செயற்படும் மனப்பாங்கையும் அணுகுமுறையையும் (BIPARTISAN APPROACH) கடைப்பிடித்தன. லிபரல் ஜனநாயக கட்சியும் தீர்வு ஒன்று அடையப்பட வேண்டும் என்பதில் சாதகமான கருத்தைக் கொண்டிருந்தது. அதிகாரப்பகிர்வை குழப்பிச் சிக்கலை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறவில்லை.

கட்சிகள் புத்தாக்கமான நடைமுறைகளைப் பற்றிச் சிந்திக்கவும் செயற்படவும் தயாராக இருந்தன. ஆயுதக்களைவு செயற்படுத்த முடியாத சிக்கலுடையதாகத் தோன்றியபோது சர்வதேச ஆணைக்குழு அமைப்பது சிபாரிசு செய்யப்பட்டது. தேசியவாதிகள் பகிரங்கமாக ஆயுதங்களைக் கையளிப்பதை விரும்பவில்லை. அதை அவர்கள் தமக்கு அவமரியாதை அளிப்பதாகக் கருதினர். யூனியனிஸ்டுகள் ஆயுதக்களைவைப் பகிரங்கமாக நடத்தப்படுவதை வற்புறுத்தவில்லை. அவர்கள் சர்வதேச ஆணைக்குழுவிடம் அப்பொறுப்பை அளிப்பதை விரும்பினர்.

வட அயர்லாந்தில் யூனியனிஸ்ட் பெரும்பான்மையினராக உள்ளதால் வெஸ்ட் மினிஸ்டர் மரபின்படி ஆட்சி அதிகாரம் பெரும்பான்மையினரிடமே இருக்கும். ஆகையால் நிர்வாக அதிகாரத்தில் தேசியவாதிகளிற்கு பங்கேற்பு இல்லாவிடில் அவர்கள் எந்தவித உடன்பாட்டிற்கும் வரமாட்டார்கள். வட அயர்லாந்தின் நிர்வாகத்தில் பலகட்சிகளும் பங்கேற்கும் முறை (MULTI- PARTY EXECUTIVE) முன்மொழியப்பட்டது. யூனியனிஸ்டுகளையும் தேசியவாதிகளையும் ஒருங்கே சந்திக்கவைத்துப் பேச வைப்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. வட அயர்லாந்தில் தொடக்கத்தில், இரு கட்சிகளின் மிதவாதிகள்கூட இணைந்து செயற்பட முன்வரவில்லை. காலப்போக்கில் இக் கட்சிகளின் தீவிரவாதிகள் கூட ஒன்றாகச் செயற்படுகிறார்கள். ஒருவரோடு ஒருவர் சிரித்துப் பேசுகிறார்கள். உடன்பாடு நன்முறையில் செயற்படுவதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும்?

jayampathi

மனித உரிமைகள் சட்டம், அரசியல் யாப்புச் சட்டம் ஆகிய துறைகளில் புலமையாளராக விளங்குகின்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியலில் B.SC பட்டத்தைப் பெற்றபின்னர் சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டத்தைப் பயின்றார். இவர் சட்டத்துறையில் நிபுணத்துவம் மிக்கவராக சிறப்புப்பெற்றார். பொதுநிர்வாகவியல் துறையில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் MPA பட்டத்தையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். 2015 – 2020 காலத்தில் இலங்கைப் பாராளுமன்றத்தில் தேசிய பட்டியல் உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகித்தார். இவர் Institute of constitutional studies நிறுவனத்தின் பணிப்பாளரும் ஆவார்.

தொடரும். 

 

 

ஒலிவடிவில் கேட்க

 
 
 
4-a-150x150.png

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

https://ezhunaonline.com/federal-system-in-uk-3/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.