Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"காதல் தந்த தண்ணீர் குடம்"
 
 
நான் வேலை முடிந்து, வீடு திரும்புகையில், நான் வேலை செய்யும் ஊர் சந்தியில் இருந்த பெட்டி கடை ஒன்றில் சூடாக வடை அருந்திக் கொண்டு இருந்தேன். இது தான் என் இரவு சாப்பாடும் கூட. நான் இந்த ஊருக்கு அண்மையில் வேலை மாற்றம் பெற்று வந்தவன். எனக்கான அரச விடுதி பெற ஒன்று இரண்டு மாதம் பொறுத்து இருக்கவேண்டும். ஆகவே தற்காலிகமாக ஒருவரின் வீட்டில் ஒரு அறையில் தங்கி உள்ளேன். ஆகவே சமையலுக்கு அங்கு பெரிதாக வசதி இல்லை. எனவே காலை, மதிய உணவை வேலை தளத்திலும், இரவு உணவை இலேசாக இந்த பெட்டி கடையிலும் இப்போதைக்கு சமாளிக்கிறேன்
 
ஆனால், இன்னும் ஒன்றையும் நான் சொல்லத்தான் வேண்டும், இந்த பெட்டிக் கடையுடன் சேர்ந்த வீட்டில் தான் கடைக்காரரும் குடும்பத்துடன் இருக்கிறார். அவரின் மூத்த மகள் தான் இன்னும் ஒரு காரணம். அவர் இந்த ஊரில் உள்ள ஆரம்ப பாடசாலையில் தமிழ் கற்பித்துக் கொடுப்பதுடன் குடும்பத்துக்கும் துணையாக மாலை நேரங்களில் குடத்தில் தண்ணீர் எடுத்து வருவதுடன் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் துப்பரவு செய்வதையும் பல தடவை கண்டுள்ளேன். அவளின் அழகும், நடையும் என்னை கவர்ந்தது உண்மையே! அதுவும் தண்ணீர் குடத்தை, ஒல்லிய இடையில் வைத்து, பருத்த மார்புடன் சாய்த்து, மெல்லிய கையால் அணைத்து, நடந்து போகும் அழகை எப்படி சொல்வேன்!
 
''நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள்,
பாவை அன்ன வனப்பினள் இவள்'' என,
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,
யாய் மறப்பு அறியா மடந்தை-
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே."
[நற்றிணை - 301. குறிஞ்சி]
 
நீண்ட மலையிலே தழைந்த பெரிய தண்டினையுடைய குறிஞ்சியின் விடியலிலே விரிந்த மலர் போன்ற மேனியையும்; பெரிய சுனையிலுள்ள குவளைமலர் எதிர் எதிர் வைத்துப் பிணைத்தாற் போன்ற இமையையுடைய கரிய குளிர்ச்சி பொருந்திய கண்ணையும்; மயிலின் ஒரு தன்மை யொத்த சாயலையும்; கழுத்திலிட்ட சிவந்த வரையுடைய கிளியின் ஒரு தன்மை யொத்த சொல்லையும்; பருத்த தோளையும்; கொல்லிப் பாவை போன்ற அழகையுமுடைய ... அகிலின் நெய் பூசி நீங்ககில்லாத மணம் வீசுகின்ற கூந்தலையுடைய தலைமகள் அவள்! அவளை பார்ப்பதற்காகவே நான் அங்கு இரவு சாப்பாடு சாப்பிடுவதும் ஒரு காரணம்.
 
"உள்ளின் உள்ளம் வேமே; உள்ளாது
இருப்பின் எம் அளவைத்து அன்று ; வருத்தி
வான் தோய்வு அற்றே காமம்;
சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே"
[குறுந்தொகை - 102. நெய்தல்]
 
மாறனோ அம்புமேல் அம்பு பொழிகிறான். காமமோ வானளாவப் பெருகிவிட்டது. அவளை நினையாதிருக்கவும் என்னால் முடியவில்லை. அப்படி நினைத்தாலும் என் மனம் வேதனை அடைகிறது, அதை தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை. ஆனால் அங்கு உள்ள இருக்கையில் இருந்து, அவள் ஒவ்வொரு நாளும் , மாலை நேரம், தண்ணீர் குடத்துடன் போவதை பார்ப்பதும், அப்பொழுது சிறு புன்னகையுடன் ஹலோ என்று மெல்ல, யாருக்கும் கேட்காமல் பேச முற்படுவதும், அதற்க்கு அவள் சைகை மட்டும் காட்டி நகர்வதும் ஒரு ஆறுதலே!
 
நாள்பட நாள்பட எம் நட்பு கொஞ்சம் நெருங்கி வருவது போல எனக்கு இருந்தாலும், உண்மையில் அவள் மனது எனக்கு தெரியவில்லை, அவள் விலகி விலகியே நின்றாள். அவளுக்கு ஆசை இல்லாமல் இருக்காது. என்றாலும் பயமும் இருந்தது எனக்கு புரிந்தது. கட்டாயம் நான் அவளுக்கு ஒரு திடமான நம்பிக்கை கொடுக்கவேண்டும். அப்பத்தான் அவளும் என்னை காதலிப்பாள் என்று நம்புகிறேன்
 
"பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை"
[படம் : அன்னை, பாடல் : கண்ணதாசன்]
 
நான் கொஞ்சம் உயர்ந்த பதவியில் வேலை பார்ப்பதால், ஒருவேளை அவள் அப்படி சிந்திக்கலாம். எனவே, இப்படியான அவளின் ஐயப்பாடை நான் நீக்கவேண்டும் என்ற சிந்தனையுடன் என் தற்காலிக வீடு சேர்ந்தேன்.
 
"முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன்! யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்,
அலமரல் அசை வளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே?"
[குறுந்தொகை - 28. பாலை]
 
சுழலை உடைய அசையும் காற்று என்னை வருத்த, என்னுனடைய துன்ப நோயை அறியாமல் தூங்கும் இந்த ஊரில் உள்ளாரை முட்டுவேனா? தாக்குவேனா? ‘ஆ’ , ‘ஒல்’ என கத்துவேனா, இந்த ஊரை என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை!. இப்படி என் மனநிலை அன்று இரவு முழுவதும் இருந்தது.
 
அன்று அரைகுறை தூக்கம் என்பதால், கொஞ்சம் சோர்வாக ஆனால் நேரத்துடன் எழும்பிவிட்டேன். பசியும் கொஞ்சம் இருந்ததால், வழமையாக போகும் நேரத்திற்கும் கொஞ்சம் முந்தி, வேலைக்கு போனேன். நான் நம்பவே முடியவில்லை . அவளும் பாடசாலைக்கு அந்த நேரம் போய்க்கொண்டு இருந்தாள். மெல்ல அவளுக்கு அருகில் சென்று கதைக்க தொடங்கினேன். என்ன ஆச்சரியம் அவளும் அளவளாவ தொடங்கினாள். அப்ப தான் புரிந்தது, தந்தைக்கு முன்னாலும் , வீட்டிற்கு முன்னாலும் அவள் கொஞ்சம் விலகி கதைக்காமல் போனதின் உண்மை. ஆமாம், அவளின் அச்சம், நாணம் இரண்டினதும் காரணம் புரிந்தது.
 
"இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக்
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு என,
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,
தான் செய் குறி நிலை இனிய கூறி,
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு,
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்
கொடிச்சி செல்புறம் நோக்கி,
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?"
[நற்றிணை 204]
 
சீக்கிரம் சொல். உன்னுடைய இனிய சொல்லுக்காக என் நெஞ்சு காத்திருக்கிறது. சந்தோஷமான ஒரு பதிலைச் சொன்னால், உன்னுடைய பற்களில் இதழோடு இதழ் சேர்த்து, என் இதழை ஒற்றி முத்தமிடுவேன்!’ இப்படி அவளிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது. எனினும் காலம் கனியட்டும் என்று தள்ளி போட்டுவிட்டேன். அவளுக்கு முதலில் ஒரு நம்பிக்கை வரட்டுமே என்று, அன்றில் இருந்து, வேலைக்கு முந்தியே போகத் தொடங்கினேன். அவளும் எனக்காக கொஞ்சம் மெல்ல மெல்ல நடந்து வருவதும் புரிந்தது. அது கட்டாயம் நம்பிக்கையின் முதல் படி தானே !
 
"சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு-
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே."
[குறுந்தொகை குறிஞ்சித்திணை 119]
 
சிறிய வெண்மையான அழகிய கோடுகளை உடைய பாம்பின் குட்டியானது, காட்டு யானையை வருத்தியது போல இளமையுடையவளும், அழகிய தோற்றம் உடையவளும் மூங்கில் முளை போன்ற ஒளியுடைய பற்களைக் கொண்டவளும், வளையைக் கையில் அணிந்த ஒருத்தி என்னை வருந்தச் செய்தாள் என தடுமாறக் கூடாது என் நானும் கொஞ்சம் ஆறுதலாக அவளைப்பற்றிய முழுமையான விபரங்களை சேகரித்தேன். அது மேலும் அவள் மேல் காதலை கூட்டியது. இனியும் பொறுக்கக் கூடாது என்ற ஒரு நிலை கூட நெஞ்சில் தோன்றியது.
 
"குவளை நாறும் குவை இருங் கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்,
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி, மாஅயோயே!
நீயே, அஞ்சல்'' என்ற என் சொல் அஞ்சலையே;
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்,
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே."
[குறுந்தொகை 300]
 
குவளையின் மணம் வீசுகின்ற வளமான, கருத்த கூந்தல், ஆம்பலின் மணமும் தேனின் சுவையும் பொதிந்து சிவந்த வாய், ஆழமான நீரில் மலர்ந்த தாமரைப் பூவின் மகரந்தத்தைப் போல் சிறிய பல தேமல் புள்ளிகளுடன் கூடிய மாமை நிறம் கொண்டவளே, நான் உன்னைப் பிரிவேனோ என்று நினைத்து நீ அஞ்சவேண்டியதில்லை. குறுகலான கால்களை உடைய அன்னப் பறவைகள் நிறைந்த மணலைக் கொண்டிருக்கும் கடல் சூழ்ந்த இந்த நில மண்டிலம் மொத்தமும் எனக்குக் கிடைத்தால் கூட, நான் உன்னைப் பிரியமாட்டேன். கவலைப்படாதே! என்று அவளுக்கு கூறும் காலம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தேன். அதை விரைவில் சொல்ல வேண்டும் என்று எண்ணி இருக்கும் தருவாயில், அவளும் தண்ணீர் குடத்துடன் வெளியே போவதை கண்டேன். நான் வழமைபோல் இருக்கையில் இருந்து, ஆனால் மெல்ல மெல்ல சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். நானும் சாப்பிட்டு முடிய அவளும் திரும்பி வர நேரம் சரியாக இருந்தது. அந்த நேரம் அவளின் தந்தையும் கொஞ்சம் மற்ற வாடிக்கையாளர்களுடன் சுறுசுறுப்பாக இருந்தார். அது எனக்கும் நல்ல சந்தர்ப்பமாகவும் இருந்தது
 
"என்னடி தாகமாக இருக்குது கொஞ்சம் தண்ணி தா "
 
என்று கூறியவாறு, பதிலுக்கு காத்திராமல், அவள் கையை பிடித்தே விட்டான். அவள் சட்டென திரும்பி , சற்றும் எதிர் பாராத விதமாக "அம்மா" என அலறி விட்டாள். வீட்டுக்குள் இருந்த அவள் தாய், பதறி ஓடி வந்து "என்ன? என்ன?"என கேட்டாள். ஆனால் அவள் ஆசிரியர் ஆச்சே, என்னை காட்டி அவர் விக்குகிறார் என்று பொய் சொன்னாள். அதற்கு ஏன் இந்த சத்தம் ? ஏன் இந்த ஆர்ப்பாட்டம் ? , குடத்தில் இருந்து கொடுப்பது தானே என்றாள். தாயோ நான் உண்மையிலேயே விக்கல் ஆட்கொண்டது என என் நெஞ்சை தடவினாள். நானும் தாயின் கழுத்தில் சாய்ந்தபடி பின்புறமாக அவளை நான் பார்த்த பார்வை - அதை அவள் என்ன என்று சொல்வாள்?
 
"அன்னாய்! இவனொருவன் செய்தது காண்’ என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
உண்ணு நீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி,
நகைக் கூட்டம்
செய்தான், அக் கள்வன் மகன்"
[கலித்தொகை 51]
 
எனக்கு கம்பராமாயணத்தின் ஒரு வரி மின்னலாக மனதில் தோன்றியது என் மனைவி சீதை இருக்கிறாளே, அவளுடைய கொங்கைகள் கலசம் [சிறு பாத்திரம், குடம்] போன்றன என் ராமன் அனுமானுக்கு சொன்ன அந்த வார்த்தை தான் அது!
 
"வாராழி கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குவாள்தான்"
 
ஆமாம், குடத்தில் இருந்து அவள் தண்ணீர் தரவில்லை. அவள் தன் அழகிய மார்பில் இருந்தே காதல் ஊட்டினாள்!
 
அவள் முகத்தில் நம்பிக்கை ஒளியை கண்டேன், என் நெஞ்சில் எதிர்கால கனவை கண்டேன்! இனி அவள் என் மனைவி என்ற உணர்வே மேல் ஓங்கி உள்ளத்தில் வந்தது. அவளை மீண்டும் பார்த்தேன். காலினால் கோலம் போட்டுக்கொண்டு கொஞ்சம் தலை நிமிர்ந்து அவள் சொல்லாமல் சொன்ன 'ஆமா', இனி நாம் ஒருவரே, இருவர் அல்ல என உறுத்தியது!!
 
"பெட்டிக்கடை வீட்டு பைங்கிளி
கோடியில் நிற்குது
வெக்கத்தை விட்டு அது
ஆடிப் பாடுது
தூக்கத்தை கலைத்து எனக்கு
துடிப்பை தருகுது
ஏக்கத்தை கூட்டி மனதை
நொடியில் வாட்டுது"
 
"ஒற்றையடி பாதையில் டீச்சர்
அன்னநடை போடுது
நூற்றுக்கு மேல் சிறுவர்கள்
பின்னால் தொடருது
காற்று வேகத்தில் தாவணி
மின்னலாய் மறையுது
முற்றும் துறந்த முனியும்
தன்னை மறக்குது"
 
"கிராம வெளியில் மயில்
துள்ளி திரியுது
கயல் விழியில் கவர்ச்சியை
அள்ளி எறியுது
மயக்கம் கொடுத்து நெஞ்சை
கிள்ளி இழுக்குது
தயக்கம் கொண்டு கொஞ்சம்
தள்ளி போகுது"
 
"வீட்டு முற்றத்தில் ஆயமகள்
ஊஞ்சல் ஆடுது
முரசொலி போல என்னை
குஞ்சம் அழைக்குது
விரசமில்லா சரச புன்னகை
நெஞ்சை தாக்குது
பரவசம் அடைந்து மனம்
கொஞ்சம் தளருது"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
294238071_10221355330295514_5448753778319069065_n.jpg?stp=dst-jpg_p403x403&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=MsX7juB_qHQAb5m7FzD&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCuBb2VI7pRnRwyOzS7g0RE03gUy2w5A69MhWHvALzIrw&oe=66231B48 No photo description available.
 
 
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

நான் வேலை முடிந்து, வீடு திரும்புகையில், நான் வேலை செய்யும் ஊர் சந்தியில் இருந்த பெட்டி கடை ஒன்றில் சூடாக வடை அருந்திக் கொண்டு இருந்தேன்.

என்னய்யா சந்தி என்கிறீர்கள் வடை என்கிறீர்கள்

கடைசிவரை எந்த இடமென்று சொல்லவே இல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை உடனொடும், இளங் கன்னியோடும் உங்கள் காதலும் மலர்ந்திடுதே .......!  😂

நல்லா இருக்கு....... நன்றி தில்லை......!

30 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னய்யா சந்தி என்கிறீர்கள் வடை என்கிறீர்கள்

கடைசிவரை எந்த இடமென்று சொல்லவே இல்லையே?

கடைக்காரருக்கு ஒரு மகள்தான் சார் ........ ஆனால் ஒரு முரட்டு அண்ணன்  இருக்கிறான் பரவாயில்லையா ......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எவன் முரடோ
அங்கு பாசம் அதிகம் 
அவன் வெளிப்படையானவன்
பயப்பட தேவையில்லை 

கதை கற்பனை 
அதனால்த்தான் இடமே இல்லை  

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, suvy said:

நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை உடனொடும், இளங் கன்னியோடும் உங்கள் காதலும் மலர்ந்திடுதே .......!  😂

நல்லா இருக்கு....... நன்றி தில்லை......!

கடைக்காரருக்கு ஒரு மகள்தான் சார் ........ ஆனால் ஒரு முரட்டு அண்ணன்  இருக்கிறான் பரவாயில்லையா ......!  😂

இடம் கேட்டாலே பிரச்சனையா?

கையை பிடித்தவரையே விட்டுட்டாங்க.

31 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

கதை கற்பனை 
அதனால்த்தான் இடமே இல்லை  

இளமையில் நடந்ததை கற்பனை எனும் குதிரையில் ஏறி சவாரியா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.