Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலையக மக்களின் போராட்ட வரலாறு – பகுதி 1

March 6, 2024 | Ezhuna
மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும் மீட்டல் செய்வதாகவும் 'மலையகம் 200' நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், செல்ல வேண்டிய தூரம் போன்ற விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தன. அதற்கேற்ப, விம்பம் அமைப்பு எழுநாவின் அனுசரணையுடன் கட்டுரைப் போட்டியொன்றை நடத்தியது. இப் போட்டியில் வெற்றி பெற்ற வெவ்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகள் 'மலையகம் 200' எனும் தலைப்பில் தொடராக எழுநாவில் வெளியாகின்றன.

“சிலோன் நாட்டில் முன்னேற்றமடைந்து வரும் கோப்பிப் பயிர்ச் செய்கையானது உண்மையிலேயே மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தோற்றப்பாடாக உள்ளது. இந்தத் தீவில் இத்தகைய நிலமைகளை முன்னர் கண்டிருக்க முடியாது. சிங்கள மக்களின் நம்பிக்கையின் படி பூதங்களே மனித குலத்துக்காக இவற்றை உருவாக்கி இருக்கக்கூடும்” 

-Ceylon Miscellany 1866-

“தேயிலை வளருகின்ற இடங்கள்; அது மலைகளாக இருக்கலாம் அல்லது பள்ளத்தாக்குகளாக இருக்கலாம். அவை புனிதமானவையாகும்.” 

-Drinking of Tea : Rules of Health, Japan. (12th century)-

இருநூறு வருடங்களுக்கு மேற்பட்ட மலையக மக்களின் வரலாறு தொழிலாளர்களின் கண்ணோட்டத்தில் ஆராயப்பட வேண்டும். அதுவே உண்மையானதாக அமையும். இந்தியாவிலிருந்த இடம் பெயரத் தொடங்கிய காலம் முதல் இன்று தனது வாழிடம் மற்றும் தொழில்சார் உரிமைகள் தொடர்பாக றம்பொடை தோட்ட மக்கள் (புஸ்ஸல்லாவ) முன்னெடுக்கும் போராட்டம் வரை இடம் பெற்றுள்ள நிகழ்வுகள் அனைத்தும்  சமூக விஞ்ஞான அடிப்படையில் அணுகப்பட வேண்டும். அயராத உழைப்பு, தொழிற் சங்கங்கள் அமைப்பதற்கான முயற்சிகள், மக்கள் எழுச்சி, வேலை நிறுத்தங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், உயிர்த் தியாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மலையக வரலாற்றைப் படைத்தளித்த உழைப்பாளர் சார்பாக, அவர்களின் எதிர்கால நன்மைக்காக ஆராயப்பட வேண்டும். வெளிக் கொணரப்படும் விடயங்கள் பல்வேறு வடிவங்களில் மீண்டும் மக்களுக்கு கொண்டு செல்லப்படுவதோடு அதனூடாக நாட்டில் சமமாக வாழ்வதற்குரிய போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதும் அவசியமானதாக உள்ளது. போராட்ட வரலாற்றைக் கற்றல் என்பது சுயலாபத்திற்காகவன்றி அல்லது மனனஞ் செய்யும் கல்வி நடவடிக்கைகளிற்காகவன்றி மக்கள்சார் செயலுக்கான தூண்டுதலாக அமைய வேண்டும்.

இந்த நாட்டினை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்திலும், உள்ளூர் ஆட்சியாளர்களின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் கைமாற்றப்பட்ட பின்னரும் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் பேரினவாத அடிப்படையிலும், முதலாளித்துவ அணுகுமுறையின் அடிப்படையிலும் ஈவிரக்கமின்றிய சுரண்டலை முன்னெடுத்த முறைகள் தொடர்பிலும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட சம்பவங்கள் தொடர்பிலும் விரிவான தேடல்களை முன்னெடுப்பது கட்டாயமானதாக அமைகின்றது. இதைவிட மலையக மக்களை ஒன்றிணையவிடாது செயற்படுகின்ற மக்கள் விரோத அரசியல், தொழிற்சங்கச் செயற்பாடுகள், மற்றும் ‘துர்நாற்றத்திற்கு வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளத் தூண்டுகின்ற’ அரச சார்பற்ற நிறுவனங்களின் மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். 

முதலாளித்துவ ஆட்சி முறை, தாராளவாதம், தனியார்மயம், பேரினவாதம், அடக்குமுறைச் சட்டங்கள் போன்றன எவ்வாறு இந்த நாட்டின் தொழிலாளர், விவசாயிகள், கீழ் மத்திய தர வர்க்கத்தினரை ஈவிரக்கமின்றி சுரண்டிக் கொழுக்கின்றன என்பதையும் இவர்களை ஒன்றிணையவிடாது தடுத்து நிற்கின்றன என்பதையும் சரியாக விளங்கிக் கொள்வதன் மூலமே எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாக இந்நாட்டின் நலனுக்காக உழைத்த மலையகத் தொழிலாளர்கள் தமது  போராட்ட வரலாற்றையும் ஒற்றுமையின் மூலமாக வெற்றி கொண்ட உரிமைகள் பற்றியும் ஆழமாக விளங்கிக் கொள்வதன் மூலம் மட்டுமே எதிர்காலப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை விளங்கிக் கொள்ளுதல் மிகவும் அவசியமானதாகும்.

மலையக மக்களின் வரலாற்றை கற்பதற்குரிய வாய்ப்புகள் வரையறைக்குட்பட்டதாகவே காணப்படுகின்றன. ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பல நூல்கள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட வேண்டியனவாக உள்ளன. மேலும் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட நூல்கள், தோட்டங்களின் அழகு – இயற்கைக் காட்சிகள் – துரைமாரின் வாழ்க்கை பற்றியே அதிகம்  பேசுகின்றன. மனிதர் அண்டாத பகுதியை வளமுள்ள பணத்தினை அள்ளித் தருகின்ற பசுஞ் சோலைகளாக மாற்றிய தொழிலாளர்கள், அவர்களது தொடர்ச்சியான போராட்டங்கள், உயிர் தியாகங்கள் போன்றன குறித்த பதிவுகள் குறைவானாகவே காணப்படுகின்றன. அவற்றை மீளவும் தேடித் தொகுப்பது காலத்தின் தேவையாகும்.

தனது சமூக வரலாற்றை மறந்த இனம் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. மானுட வரலாறையும் உலக வரலாறையும் ஆழமாகக் கற்கும் அதே வேளையில் இலங்கையின் வரலாற்றையும் மலையக மக்களின் வரலாற்றையும் சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் அணுகிக் கற்க வேண்டும். ஆனால் எமது கலைத்திட்டங்களில் மலையக மக்களின் வரலாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதிலும் பேரினவாதமும் மதவாதமும் மேலோங்கிக் காணப்படுகின்றது. வரலாறு திரிபுபடுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் பணிகளில் ஈடுபடுவோர், கலைஞர்கள், இலக்கியவாதிகள், ஆசிரியர்கள் போன்றோர் மலையக மக்களின் வரலாற்றை மாணவர்கள் கற்பதற்கான விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். பல்வேறு கலை நுட்பங்களின் மூலமாக உழைக்கும் மக்களுக்கு வரலாறு குறித்த புரிதலை ஏற்படுத்துதல் முக்கியமான பணியாக அமைகிறது. மலையக மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை வரையறை செய்து கொள்வதற்கு இத்தகைய அணுகுமுறை பெரிதும் பயன்படும்.

இந்தக் கட்டுரையானது மலையக மக்கள் மீதான அடக்குமுறைகள் குறித்தும் அதற்கெதிராக நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் பற்றியும் ஆய்வு செய்வதற்கான அடிப்படைகளை உள்ளடக்கி உள்ளது. இதனை மேலும் விரிவுபடுத்தி ஆய்வு செய்வதும், கற்றுக் கொண்டவற்றை பல்வேறு செயல்நுட்பங்களின் அடிப்படையில் மக்களிடம் கொண்டு செல்வதும் மிகவும் பயனள்ளதாக அமையும்.

இடம்பெயர்ந்து வருவதற்கு முன்னர், இந்தியாவில் பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சி தொடங்கும் காலத்தில், நிலபிரபுத்துவ சமூகத்தின் ஒடுக்கு முறை பரவலாகக் காணப்பட்டது. நிலமற்ற விவசாயிகள் பல்வேறு அடக்கு முறைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. அதேவேளையில் காலனித்துவ ஆட்சி வளச்சுரண்டலையும் இலாப நோக்கையும் அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டமையால் விவசாயம், கிராமியக் கைத்தொழில் போன்றன வீழ்ச்சியடைந்தன. வறுமை, பஞ்சம், கொள்ளை நோய்கள், சாதிய அடக்குமுறைகள் மென்மேலும் அதிகரித்தன.

17 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பனி பலமுள்ளதாக இருந்தது. அதன்மூலம், பல்வேறு  உடன்படிக்கைகள் ஆங்கிலேயருக்குச் சார்பாக மேற்கொள்ளப்பட்பட்டன. மதராஸ், ஆங்கிலக் கம்பனியின் மையமாக இருந்தது. கல்கத்தா நகரத்தில் அமைக்கப்பட்ட வில்லியம் கோட்டை காலனித்துவத்தின் செயல் மையமாக விரிவுபடுத்தப்பட்டது. தென் இந்தியாவுக்கான திறவு கோல் என்று அழைக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி கோட்டை இன்னுமொரு நிலையமாக இருந்தது. ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தாலும் படைத்துறை ஒப்பந்தங்கள் மூலமாக மக்களை அடக்கும், அடிமைப்படுத்தும் நடவடிக்கைள் இலகுவாக்கப்பட்டன. இராணுவ மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள், சட்டங்கள், அடக்குமுறை நடவடிக்கைகள் மூலமாக தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட காலனித்துவ ஆட்சி தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டன.

ஆங்கிலேயர் இந்தியாவை முழுமையாக தமது ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்த போது பொருளாதார நிலை மிகவும் சீரழிந்து காணப்பட்டது. அதேவேளை இங்கிலாந்து ஆட்சி முறை முதலாளித்துவத்தின் கோர முகங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இங்கிலாந்துக்கான பொருளாதார அணுகுமுறை இந்திய மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதாக இருந்தது. இதன் விளைவாக வறுமை தாண்டவமாடத் தொடங்கியது. நிலவரி முறைகள், குத்தகைப் பணம் என்பன காரணமாக உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. ஏழை விவசாயிகள் செத்து மடிய நேரிட்டது. பல இடங்களில் ஜமீந்தாருக்கு எதிரான போராட்டங்கள் இடம் பெற்றன. ஜமீந்தார்கள் விரட்டப்பட்டனர். எனினும் அத்தகைய நிலங்களை கிழக்கிந்திய கம்பனியே பெற்றுக் கொண்டது

நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ ஆட்சி முறை ஏற்படுத்திய சமூகப் பொருளாதார விளைவுகள் வறுமை நிலையையும் மரணத்தையும் அதிகரித்துச் சென்றன. வறட்சியும் குடிநீர் இன்மையும்  இவற்றை மேலும் தீவிரப்படுத்தின. இலஞ்சமும் ஊழலும் நிறைந்த நீதிமன்ற முறையானது பிரித்தானியச் சுரண்டலுக்கும் ஒடுக்குதலுக்கும் சாதகமாக அமைந்தது. புதிதாக ஆக்கப்பட்ட சட்டங்களும் விதிகளும் அடிமை முறையை பலப்படுத்துவனவாகவே அமைந்தன.

இத்தகைய சூழலில் கண்டிச் சீமை (சிலோன்), பினாங்கு, பிஜி, மொரிசியஸ் போன்ற இடங்களுக்குச் சென்றால் சுகமாக வாழலாம் என்ற வதந்திகள் கிராமங்களில் பரவத் தொடங்கியது. கிராமங்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பொய்யும், ஏமாற்றும் மக்களை கிராமங்களிலிருந்து வெளியே தள்ளியது. சென்றவர்கள் திரும்பி வராத காரணத்தால் உண்மை நிலை என்ன என்பதை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. சியாம் இரயில் பாதையை அமைக்கும் பொருட்டு பலியான பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பற்றிய செய்திகள் இந்தியக் கிராமங்களை சென்று சேராததைப் போல கண்டிச் சீமையிலும், மலேசியாவிலும், பிஜி தீவுகளிலும், மொரிசியசிலும் எதிர் நோக்கிய துன்பங்களும், அடக்குமுறைகளும் கிராம மக்களால் விளங்கிக்கொள்ளப்படவில்லை. இத்தகைய நிலையானது  ஆங்கிலேயத் துரைமார்களுக்கும் ‘ஆள் கட்டப் புறப்பட்ட’ கங்காணிகளுக்கும் வாய்ப்பாகப் போய்விட்டது. நாசுக்காகப் பேசி ‘ஆள் கட்டும்’ கங்காணிகளுக்கு வழங்கப்பட்ட பணமும் பொய் வாக்குறுதிகளும் வறுமை நிலையிலிருந்த மக்களை கிராமங்களிலிருந்து வேகமாகத் தள்ளிக் கொண்டு போனது. 

வாக்குறுதிகளை நம்பிச் சென்றவர்கள் மீளாத நிலை இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்வதற்குக் காரணமாகியது. ‘தேயிலைச் செடிக்குள் தேங்காயும் மாசியும்’ கிடைக்கும் என நம்பி வந்தனர் என்பதெல்லாம் வெறும் கட்டுக் கதையே ஆகும். நேர்வழியில் உழைத்தால் தேங்காயையும் மாசியையும் வாங்கி உண்ணலாம் என்ற நம்பிக்கையே இவர்களை இடம் பெயரச் செய்தது என்பதே உண்மையான வரலாறாகும். இன்றைய சூழலில் கூட மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றால் அதிக பணம் உழைக்கலாம் என்று நம்பிச் சென்று பிணமாகத் திரும்புவோரையும், காணாமல் போவோரையும், அதேவேளை அங்கு சென்று உழைப்பதற்காக ‘ஏஜென்சி’ மற்றும் ‘விசா’ காரியாலயங்களில் வரிசையில் காத்திருப்போரையும் நன்கு அவதானித்தால் அக்காலத்தின் நிலமைகளை இலகுவில் புரிந்துக் கொள்ள முடியும். 

பயணத்தின் போது முதலாளித்துவமும் காலனி ஆதிக்கமும் இலாபமீட்டுவதற்காக எதையும் செய்வதற்கு தயாராக இருந்தமையை உலக வரலாற்றைக் கற்பதன் மூலமாக அறிந்து கொள்ள முடியும். அதற்குச் சிறந்த உதாரணமாக கண்டிச் சீமைக்கான பயணத்தைக் குறித்துக் காட்ட முடியும். அந்த வகையில் இந்தியக் கிராமங்களில் தொடங்கிய பயணம் முதலில் திருச்சி, துறையூர், சேலம், நாமக்கல், மதுரை, திருநெல்வேலி, அறந்தாங்கி, தஞ்சாவூர், விழுப்புரம், அரக்கோணம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ‘ஏஜென்சி ஆபிசுகளை’ அடைந்தது. பல்வேறு பொய்களைக் கூறி ‘ஆள் கட்டும்’ இடங்களாக அவை செயற்பட்டன. ஒப்பந்தக் கூலிகளைத் திரட்டவதற்காக  ஆங்கிலத் துரைமார்கள் வழங்கிய பணத்தின் பெறுமதியை கங்காணிகளின் சிரித்த முகங்களும், ‘தங்கப் பற்களும்’  வெளிப்படுத்தின.

அந்த நிலையங்களிலிருந்து இராமேஸ்வரம் கரையை அடையும் வரை பல நூறு கிலோ மீற்றர் தூரம் கால் நடையாகவே பயணித்த வரலாற்றை காலனித்துவ அடக்குமுறையினால் விளைந்த துன்பத்தின் இன்னுமொரு விளைவாகவே அடையாளங்காட்ட முடியும். எல்லாவிதமான துன்பங்களையும் தாங்கிக் கொண்டு கண்டிச் சீமையை அடைந்து விட்டால் இன்பமாக வாழலாம் என்ற உந்துதலே முக்கிய சக்தியானது. வரிசையாகப் பயணித்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், வறுமையின் அடையாளமாக தலைகளில் வைக்கப்பட்ட சிறு மூட்டையும் கங்காணிகளின் ஏச்சும், உரத்த சத்தங்களும் ஒரு மனித பேரவலத்தின் சாட்சியமாகவே அமைந்தன. அத்தனை துன்பங்களை எதிர்கொண்டமையையும் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர்ந்தமையையும் வாழ்க்கைக்கான போராட்டத்தின் தொடர்ச்சியாகவே அடையளங்காணலாம். உயிர்வாழ போராடுதல் என்பதே இதன் அடிப்படையாகும்.

கரையைக் கடத்தலும் இறங்குதலும் 

கப்பல் மற்றும் படகுகள் மூலமான பயணமானது மக்கள் உயிர்வாழ்வதற்கான போராட்டத்தின் உச்சத்தைத் தொட்டுச் செல்லும் சான்றுகளாகும். சிறு கப்பல்கள் மூலமான பயணம் புதிய அனுபவமாகவும், அச்சம் தரும் நிகழ்வாகவும் அமைந்து விட்டது. வாந்தியும் வயிற்றோட்டமும், ஒத்துவராத பயண நிலமைகளும், உயர்ந்து எழும் கடலலைகளின் காரணமாக ஏற்பட்ட பீதியும், குளிர் நடுக்கமும், கடல் நீரின் சாரலும் இவற்றால் ஏற்பட்ட விளைவுகளும் உழைக்கும் மக்கள் மீதான பாரிய அடக்குமுறைகளே.

அளவுக்கதிகமாகப் பயணிகளை ஏற்றியதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் மிகச் சரியான வகையில் இடம்பெறவில்லை. அவை தொடர்பான செய்திகளும் குறைவாகவே காணப்படுகின்றன. தொழிலாளர்களில் சில ஆயிரம் பேர் விபத்துகளால் பலியாகும் சம்பவங்கள் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு ஒரு பொருட்டாகவே அமைவதில்லை. அவர்களுக்கு இலாபமீட்டல் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் என்பதற்கு மலையகத்தில் இடம்பெற்ற சம்பவங்களையும் சியாம் இரயில் பாதையை அமைப்பதற்காக உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் மரணங்களையும்  சிறந்த உதாரணங்களாகச் சுட்டிக்காட்ட முடியும். 

ஆதிலட்சுமி என்ற படகு  மன்னார் வங்காலையிலிருந்து ஏறத்தாழ 150 டொன் பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுடன் பயணித்த போது கடலில் மூழ்கிய சம்பவத்தை வரலாறு பதிவு செய்கிறது. 05.02.1864 அன்று அப்படகு கடலில் மூழ்கிய வேளையில் அதில் பயணித்த 120 தொழிலாளர்களில் 14 பேர் மட்டுமே உயிர் பிழைத்ததாக செய்தி எழுதப்பட்டுள்ளது. அதே போல ‘சாரா ஆர்மி டேஜ்’ என்ற சிறு கப்பல் சிலாபத்துக்கு அருகில் சீறி எழுந்த பேரலையில் சிக்குண்டு மூழ்கியதில் 560 தொழிலாளர்கள் உயிரிழந்தமையை அக்காலத்தின் ஆளுநர் ஹென்றி வார்டின் பதிவு செய்துள்ளார். தமது உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழலிலும் கடுமையான போராட்டத்துடன் பயணித்து சிலோனை வந்தடைந்த தொழிலாளர்களின் வரலாறு, அடிப்படையில் போராட்டங்கள் நிறைந்தவை என்பதை விளங்கிக் கொள்ள முடியும். 

மன்னாரிலிருந்து மலையகத்திற்கு

மன்னாரில் வந்திறங்கிய தொழிலாளர்களுக்கு இலங்கையை ஆட்சி செய்த காலனித்துவ முதலாளிகளின் நிருவாகத்தில் மென்மேலும் துன்பங்களே வந்து சேர்ந்தன. மன்னாரிலிருந்து ஏறத்தாழ 250 கிலோ மீற்றர் தூரத்தை கால் நடையாகவே நடந்து வந்த நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் சிந்திக்கப்பட வேண்டியதொன்றாகும். அடர்ந்த வன்னிக் காட்டைக் கடந்து அனுராதபுரம், மாத்தளையைக் கடந்து கண்டிச் சீமையை அடைந்த வரலாறு உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தின் அடுத்த படி நிலையாகும். மன்னாரிலிருந்து கொழும்பிற்கு சிறு கப்பல்கள் மூலமாகப் பயணித்து அங்கிருந்து புகையிரதம் மூலமாக கண்டிக்குச் செல்லும் வழி இருந்த போதிலும், போக்குவரத்துக்கான பணம் போதாமை காரணமாகவும், கங்காணிகளின் வட்டிப் பணம் கடனாக மாறும் என்ற காரணத்தாலும் கால்நடைப் பயணத்தையே மலையக மக்கள் மேற்கொண்டனர்.

கொலரா, மலேரியா, அம்மை போன்ற கொடிய நோய்களின் தாக்கம் காரணமாக வரும் வழியிலேயே பலர் மரணித்தனர். நோய்வாய்ப்பட்டவர்களை காட்டுப் பாதையிலேயே விட்டு வந்த நிகழ்வுகளை கேர்னல் ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் பதிவு செய்துள்ளார். இதை விட தேள், பாம்பு போன்றனவற்றின் தீண்டுதலுக்குட்பட்டும் பலர் மடிந்தனர். குடிநீர் இன்றிய பயணமும் பசியும் மரண பயமும் உயிர் வாழ்வதற்கான பாரிய போராட்டமாகவே அமைந்தன. கண்டிச் சீமைக்குச் சென்றுவிட்டால் தொழில் செய்து வாழலாம் என்ற நம்பிக்கை மேலெழுந்து இருந்தமையே இம்மக்கள் போராடியதற்குக் காரணமாகும்.

ஆரம்ப காலம்

பல்வேறுபட்ட இழப்புகளுக்குப் பின்னர் மலையகப் பிரதேசத்தை அடைந்த போது ஆங்கிலத் துரைமார்களினதும் கங்காணிகளினதும் அடக்குமுறையின் புதிய வடிவங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. மனிதக் காலடியே படாத காடுகளை அழித்து பசுஞ் சோலைகளை அமைப்பதற்காக தொழிலாளர்கள் தனது உயிரையே கொடுத்தனர். உழைப்பின் சாராம்சம், அதன் குவிப்பு மலைகளின் உச்சி வரை விரிந்தது. துரைமார்கள் ஆனந்தம் கொண்டாடக் கூடியதாக அனைத்தும் அமைக்கப்பட்டது. தேயிலை எனும் பச்சைத் தங்கம், இறப்பர் எனும் பால் கொட்டும் மரம் என்பன தன்னலங்கருதாத உழைப்பினால் சாத்தியமானது. ஆங்கிலத் துரைமார்கள் மலையகத்தின் எழிலை இரசித்து எழுதிய அளவுக்கு மக்களின் உழைப்புத் திரட்சியின் விளைவை பதிவு செய்ய முடியாமல் போனதற்கான காரணம் காலனித்துவ மன நிலையும் உழைப்புச் சுரண்டலின் தேவையுமாகும்.

“ஆங்கில முதலாளிகளால் குறிப்பாக தோட்டத் துரைமார்களால் அடையாளங்காணப்பட்ட பகுதிகள், இது வரை மனித குடியேற்றம் நிகழாத இடங்களாக இருந்தன. அவற்றை  தேயிலைத் தோட்டங்களாக உருவாக்கிய கூலிகள் தனித்தன்மை கொண்டவர்களாவர்” எனக் குறிப்பிடுகின்றார் ஹென்றி வில்லியம். 

இவ்வாறு உருவாக்கப்பட்ட தோட்டங்கள் மூடிய நிலையிலேயே காணப்பட்டன. சகலதும் தோட்டத்துக்குள்ளே எனும் நிலை உருவாக்கப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடியாதவாறு தோட்ட முகாமைத்துவம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. மனிதாபிமானமற்ற, அடக்கு முறை சார்ந்ததாகவே நிருவாக நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. தொழிலாளர்கள் அதிகாலை முதல் மாலை இருள் பரவும்  வரை தொடர்ந்து உழைக்கக் கூடிய வகையில் தோட்ட நிருவாகம் ஒழுங்கமைக்கப்பட்டது. 

தொழிலாளர்கள் வாழும் லயன் அறைகள், தொழில்முறை யாவும் அடக்குமுறையுடன் கூடிய நடவடிக்கைகளுக்குத் துணை புரிவனவாகவே அமைக்கப்பட்டன. வாழ்வதற்குப் பொருத்தமற்ற வீடுகள், சாதிய அடிப்படையிலான குடியிருப்புகள், உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட வெள்ளைக்காரன் பங்களா, ‘ஸ்டோர்’ நிருவாகிகளுக்கு அமைக்கப்பட்ட வீடுகள் போன்றனவற்றைச் அதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். 

குறைவான கூலியை வழங்கியதன் மூலம் தொழிலாளர்களைக் கடன் நிலையிலேயே வைத்திருந்தமை தோட்டங்களை விட்டு வெளியேற முடியாத சூழலை ஏற்படுத்தியது. கங்காணியினதும் துரைமார்களினதும் அடக்குமுறைக்குச் சாதகமாகவே, வழங்கப்பட்ட கூலியும் அமைந்திருந்தது. கங்காணிக்கு உரித்தான கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கியமை, பிழையான கணக்கு விபரங்கள் போன்றன கடன் சுமையை மேலும் இறுக்கியது. 

துண்டு முறையும் பற்றுச் சீட்டும் தொழிலாளர்களை தோட்டத்துக்குள்ளேயே அடக்கி வைத்தன. வெளியேற முயன்றவர்கள் கங்காணிகளால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். அடிமை முறையைப் பேணக்கூடியதாகவே சகல நடவடிக்கைளும் ஒழுங்கமைக்கப்பட்டன. தொழிலாளர்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டன. இதன் காரணமாக நாளாந்த வாழ்வில் பல துன்பங்களுக்கும் வன்முறைகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டது. நிருவாகத்திற்கு எதிரானவர்கள் ‘பற்றுச் சீட்டின்றி’ வெளியேற்றப்பட்டனர்; தாக்கப்பட்டனர். தொழிலாளர்கள் தமது கோபத்தை, வெறுப்பினைக் காட்டக் கூடியதாக மலைகளெங்கும் சாமிகளை உருவாக்கிக் கொண்டனர். அத்தகைய சாமிகளுக்கு சிவப்புப் பட்டு அல்லது துணியைக் கட்டியிருந்தனர். ‘நாசமா போக…அவன் வீட்டுல எழவு விழுக….கடவுளே நீ இருந்தா பார்த்துக்க’ என மண்ணை வாரி இறைத்துச் சாபமிட எவ்வித தடையும் இருக்கவில்லை. ஆனால் இந்த அடிமை முறை வாழ்வு நீண்ட காலத்திற்கு நிலைக்கவில்லை. தொழிற் சங்கம் என்ற சக்தி அவர்களை ஒன்று திரட்டியது. போராட்டம் எனும் ஆயுதத்தைக் கையிலெடுக்க வழி ஏற்பட்டது. வாழ்வதற்கான போராட்டம் என்பது தொழில் உரிமைக்கான போராட்டங்களாக வளர்ச்சி பெற்றமையானது தியாகங்களின் அறுவடையே எனத் துணியலாம்.  

தொழிற்சங்கப் போராட்டங்கள்

ஏறத்தாழ நூறு ஆண்டுகள் நீடித்த அடக்குமுறையுடன் கூடிய அடிமை முறை வாழ்வை மாற்றியமைப்பதில் தொழிற்சங்க நடவடிக்கைகள் பெரிதும் பங்களித்தன. தோட்டப்பகுதிகளில் தொழிற்சங்கங்களை அமைப்பதற்கு தொழிலாளர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாரிய சவாலுக்குரியதாகவே காணப்பட்டன. தொழிலாளர்கள் ஒன்று கூடுவதை துரைமார்களும் கங்காணிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. தொழிலாளர்களின் ஒருங்கிணைவு, பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் தங்களது அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு பாதகமாக அமையும் என்பதையும் தோட்ட நிருவாகம் நன்கு அறிந்திருந்தது. ரஷ்யப் புரட்சியின் விளைவுகளும் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் இயக்கச் செயற்பாடுகளும் தோட்டத்து ராஜாக்களுக்கு பல எச்சரிக்கைகளை ஏற்கனவே வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைவதற்கான முக்கிய சக்தியாக தொழிற்சங்கம் காணப்பட்டது. தொழிற்சங்கங்கள் தொடர்பான விளக்கத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதில் தேசபக்தன் கோ. நடேசையர் முக்கிய பங்கினை வகித்தார். 1905 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட தோட்டப் பாடசாலைகளும் இதற்கு வாய்ப்பாக அமைந்தது.  

nadesaiyar

‘தேசபக்தன்’ கோ. நடேசையர், இந்தியாவின் குஜராத் எனுமிடத்தில் பிறந்த மணிலால் மங்கன்லால் (28.07.1881 – 08.01.1956) எனும் தேசியவாதி, பொதுவுடைமைச் செயற்பாட்டாளனின் கருத்து மற்றும் நடவடிக்கைகளினால் கவரப்பட்டவராக இருந்தார். மணிலால் அவர்களால் வெளியிடப்பட்ட வாராந்தரப் பத்திரிகையான இந்துஸ்தானி தனிநபர் சுதந்திரம், ஒன்றிணையும் உரிமை மற்றும் இனங்களுக்குமான சமத்துவம் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டிருந்தது. மணிலால் 1907 முதல் 1910 வரையிலான காலப்குதியில் மொறிசியஸ் நாட்டில் சட்டத்துறை சார்ந்த கடமைகளை முன்னெடுத்தார். அந்த நாட்டில் வாழ்ந்த இந்தியத் தொழிலாளர்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவதற்கான அடிப்படைகளை வழங்கி இருந்தார். அவரது போராட்ட அரசியல் செயற்பாடுகள் காரணமாக பிஜி நாடு அவரை அங்கிருந்து வெளியேற்றியது. அவர் இலங்கையில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை நேரடியாகக் கண்டறிந்தார். நடேசையர் அவர்களும் அவரது மனைவியான மீனாட்சியம்மாள் அவர்களும் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கும் தொழிற்சங்கத்தை அமைத்து போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் மணிலால் பெரிதும் உதவினார். எனினும் மணிலால் சிலோனில் தங்கியிருக்க பிரித்தானிய ஆட்சியாளர்கள் அனுமதி அளிக்கவில்லை. 

meenatchiyammal

ஆரம்ப காலங்களில் தொழிற்சங்கங்களை அமைப்பது என்பது இலகுவானதாக அமையவில்லை. வெள்ளைக்காரத் துரைமார் மற்றும் கங்காணிகளின் கண்டிப்பு, நோட்டம் விடுதல், கருங்காலிகளைப் பயன்படுத்துதல், காவல்காரனைப் பயன்படுத்துதல், பேச்சுக் கொடுத்துப் பார்த்தல் என பல உத்திகளைப் பயன்படுத்தி தொழிற் சங்கம் பற்றி கதைப்போரை கண்டறிதல், தோட்டத்தை விட்டு பற்றுச்சீட்டில்லாமல் வெளியேற்றல், கட்டி வைத்து அடித்தல், பொலிஸ்காரர்களின் ஒத்துழைப்புடன் அடக்குமுறையை முன்னெடுத்தல், காயப்படுத்துதல், காவலில் வைத்தல், சிறைக்கு அனுப்புதல், சுட்டுக் கொல்லுதல் என நீண்டது அடக்குமுறை. 

ஆனால் இவற்றையெல்லாம் கடந்து துன்பங்களை ஏற்று தொழிற் சங்கத்தை அமைத்த தொழிலாளர்களின் போராட்ட வல்லமை இறுதியில் வெற்றியடைந்தது. இரகசியச் சந்திப்பு, இரவில் கூடுதல், வேலைத்தலத்தில் கதைத்தல் போன்ற நுட்பங்களை அவர்கள் கண்டறிந்தனர். தோட்டத் துரைமார்கள், கங்காணிகள், காட்டிக் கொடுப்போர் ஆகியவர்களோடு பொலிசும் இணைந்து எதிர் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும் தொழிற்சங்கம் அமைப்பதில் தொழிலாளர் வெற்றி பெற்றமை போராட்ட வரலாற்றில் உச்சம் தொட்ட நிகழ்வு எனக் குறிப்பிடலாம்.

தொழிற் சங்கங்களை அமைப்பதற்கான போராட்டங்கள் 

தொழிலாளர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிமுறையாக தொழிற்சங்க இயக்கம் அமைந்தது. தனியாகவும் கூட்டாகவும் செயற்பட்டதன் விளைவாக தொழிற்சங்க நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டன. இலங்கை இந்தியன் காங்கிரஸ், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், செங்கொடிச் சங்கம் போன்ற தொழிற் சங்கங்கள் இவ்வகையில் தோற்றுவிக்கப்பட்டவையே ஆகும்.

கம்பனித் தோட்டங்களில் தொழிற்சங்கங்களை ஆரம்பிப்பதை விட தனியார் தோட்டங்களில் தாபிப்பது பெரும் சவாலுக்குரியதாக இருந்தது. தோட்டச் சொந்தக்காரனும் பொலிசாரும் இணைந்து தொழிற் சங்கங்களுக்கு எதிராக செயற்பட்டதன் விளைவு பல தொழிலாளர்கள் காயப்படுவதற்கும், உயிரிழப்பதற்கும் காரணமாக அமைந்தன. தோட்டங்களுக்கு அருகில் காணப்பட்ட கிராமங்களில் வாழ்ந்த இனவாதக் காடையர்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களை தாக்கும் நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன. 

தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களில் கொட்டியாகலை தோட்டத்தில் 1939 ஆம் ஆண்டில் இடம் பெற்ற போராட்டம் முக்கியமானதாகும். மது விற்பனை மற்றும் சூது விளையாட்டு ஆகியவற்றுக்கெதிராக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வெள்ளைக்காரத் துரையால் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு எதிராக பல அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இறுதியில் தொழிலாளர் வெற்றியடைந்தனர். பிற்காலத்தில் தொழிற்சங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பினை இப்போராட்டம் பெற்றுக் கொடுத்தது. 

அக்காலத்து தொழிலாளர் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றிய ஜிம்சன் பின், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை இந்தியத் தொழிலாளர் முன்னெடுத்த முக்கியப் போராட்டமாகவும் பிற்காலத்தில் பல வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு வித்திட்டதாகவும் குறிப்பிடுகின்றார். 

அதே காலத்தில் பொலிஸ் மா அதிபராகச் செயற்பட்ட பி.என். பேங்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளதை நடேசன் எஸ். (1993) தனது நூலில் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார். 

“பல்வேறு காரணிகளின் செல்வாக்குக் காரணமாக தொழிலாளர்கள் அரசியல் சிந்தனையுடன் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. அவர்கள் தற்போதைய வாழ்க்கை மற்றும் தொழில் ஆகியன தொடர்பில் திருப்தியாக இல்லை. அதன் காரணமாக வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றனர். தோட்டத் துரைமார்கள் இத்தகைய போராட்டக்காரர்களை வெளியேற்ற நீதிமன்ற ஆணைகளைப் பெற்றுள்ளனர். ஆகவே பொலிஸார் எத்தகைய நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர்.” பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டங்களின் போது தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே தீர்மானங்கள் மேற்கொள்ளபட்டுள்ளன என்பதை இதன் மூலமாக அறிய முடிகின்றது.

கண்டி, நுவரெலியாப் பகுதிகளில் தொழிற்சங்கம் அமைக்கும் போராட்டம் வெற்றி அடைந்தாலும் இரத்தினபுரிப் பகுதியில் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வது கடினமாகவே இருந்தது. 1945 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து வருகை தந்த குட்டிப்பிள்ளை எனும் பெயருடைய செயற்பாட்டாளனின் முயற்சியால் மயிலிட்டியா தோட்டதில் இலங்கை இந்தியன் காங்கிரஸ் அமைக்கப்பட்டது. பல்வேறு அடக்குமுறைகளை வெற்றி கொண்ட எண்ணூறு தொழிலாளர்கள் தொழிற்சங்க அங்கத்தவர் ஆனார்கள். தொழிலாளர் போர்க்குணம் வெற்றியடைந்தது. 

1953 ஆம் ஆண்டு சாமிமலைப் பகுதியைச் சேர்ந்த மீரியாகோட்டை தோட்டத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கான போராட்டத்தில் தோட்ட முதலாளிக்கு ஆதரவாகச் செயற்பட்ட பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தமையால் பதினேழு தொழிலாளர்கள் காயமடைந்ததோடு பி. வெள்ளையன் என்ற தொழிலாளி மரணமானார். 

அவ்வாறே 1957 ஆம் ஆண்டு தொழிற்சங்க காரியாலயம் ஒன்றை உடபுசல்லாவ நகரில் அமைப்பதற்கான போராட்டத்தில் தொழிலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக கொம்பாடி மற்றும் பொன்னையா ஆகிய இரு தொழிலாளர்கள் தியாகி ஆனார்கள். இந்த தொழிற்சங்க காரியாலயத்தை அமைப்பதற்கு எதிராக நகர வர்த்தகர்களும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் தொடர் போராட்டத்தின் மூலமாக தொழிற்சங்க காரியாலயம் அமைக்கும் உரிமையும் வென்றெடுக்கப்பட்டது.

1961 ஆம் ஆண்டு நாவலப்பிட்டிக்கு அருகிலுள்ள மொன்டிசிரஸ்டோ தோட்டத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கான போராட்டம் உக்கிரமாக முன்னெடுக்கப்பட்ட போது ஆராயி, நடேசன், செல்லையா, மாரியப்பன் ஆகிய தொழிலாளர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். தொழிற்சங்கத் தலைவர்கள் கிராமத்தைச் சேர்ந்த காடையர்களால் தாக்கப்பட்டனர். 

தொழிற்சங்கத்தை கட்டி எழுப்புவதற்கு பெரும் தடையாக இருந்த தோட்டத் துரைமார்கள் மற்றும் முதலாளிகள் தொழிற்சங்க செயற்பாடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். உதாரணமாக, பத்தனை டெவன் தோட்டத்தில், தொழிலாளர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்த போது தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். மு. வைத்திலிங்கம் என்ற தொழிலாளி கொலை செய்யப்பட்டார். 

தோட்டத் தொழிலாளர்கள் வேலை நேரத்தில் சுகயீனம் அடைகின்றபோது, விபத்துகளை சந்திக்கும் போது, அல்லது கரப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது, வாகனம் கோரிப் பெறுவது என்பது கால தாமதத்தை ஏற்படுத்தும் செயலாகும். அதற்கான அனுமதி பெறுவது, போக்குவரத்துப் பாதைகள் முறையாக இல்லாமை, இனவாதம் போன்ற காரணங்களால் உரிய வேளைக்கு வைத்தியசாலைக்குச் செல்லாமையினால் பலர் உயிரிழந்துள்ளனர். தோட்ட வைத்தியசாலைகளிலும் முறையான மருத்துவ உதவியைப் பெற முடியாது. வாகன வசதியைப் பெறுவதற்குக் கூட பாரிய போராட்டங்களை தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ளனர். பதுளை, குயினஸ்டவுன் நகருக்கு அண்மையிலுள்ள சினாக்கொல்லை தோட்டத்தில் 1970 ஆம் ஆண்டு இதற்கான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சுமார் தொண்ணூறு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப்போராட்டத்தை அடக்குவதற்கு வழமை போல பொலிஸ் உதவி கோரப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதில் லெட்சுமண் அழகர் மற்றும் பெருமாள் இராமையா ஆகியோர் உயிரிழந்தனர். பாரிய போராட்டம் வெடித்தது. தொழிலாளர் போராடி வென்றனர். 

ஆரம்ப காலத்தில் தொழிங்சங்கங்கள் தொழிலாளர் சார்பாக செயற்பட்ட போதிலும் 1950 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அந்தப் போக்கிலிருந்து நழுவிச் சென்றமையைக் காண முடியும். அவை தொழிலாளர் ஒற்றுமையைச் சிதைத்ததோடு சில சந்தர்ப்பங்களில் தோட்ட நிருவாகத்திற்கு ஆதரவாகச் செயற்பட்ட போக்கும் பதிவாகி உள்ளது. 1956 ஆம் ஆண்டில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகிய அப்துல் அசீஸ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் எனும் தொழிற்சங்கத்தை அமைத்தார். இவ்விரு தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக பல மோதல்கள் இடம் பெற்றுள்ளன. ஐக்கியத்துக்காகப் போராட வேண்டிய தலைமைத்துவம், தொழிலாளர்களிடையே முரண்பாடுகளை விதைத்த வரலாறு இன்று வரை தொடர்வதைக் காணலாம். தொழிற்சங்கப் பலம், தொழிலாளர் நலன், உரிமைகளுக்காகப் போராடுதல், ஐக்கியத்தை வலுப்படுத்தல் போன்ற மகோன்னதமான தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கைவிட்ட தொழிற்சங்கங்களை இன்றும் காண முடியும். மலையகச் சமூகம் தனது அடையாளத்தை வென்றெடுக்க முடியாமல் இருப்பதற்கும் தொழிங்சங்க உரிமைகளை தொடர்ந்து பாதுகாத்து மேம்படுத்திக்கொள்ள முடியாமல் வலுவிழந்து நிற்பதற்கும் இத்தகைய பிற்போக்குத் தொழிற்சங்கங்களே காரணமாகும்.  

1956 ஆம் ஆண்டு மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த நல்லதண்ணி தோட்டத்தில் தொழிற்சங்க மோதல் காரணமாக நாற்பது தொழிலாளர்கள் கைது செய்யப்பட்னர். தோட்ட நிருவாகத்தின் கையாட்களால் இளம் தொழிலாளி பெ. கருமலை என்பவர் கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டில் நிகழ்ந்த தொழிற்சங்க மோதல் காரணமாக இருபத்து மூன்று வயது நிரம்பிய அப்புஹாமி ஏப்ரகாம் சிங்கோ எனும் பெயருடைய தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையைத் தொடர்ந்து தொழிலாளர்கள் நாற்பத்தெட்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. ஒரு தோட்டத்தில் ஒரு தொழிற்சங்கம் மட்டும் என்ற நிலையை மாற்றி தொழிலாளர்களின் தெரிவுக்கேற்ப மாற்றுத் தொழிற்சங்கத்தையும் அமைக்கலாம் என்ற உரிமை இந்தப் போராட்டத்தின் மூலமாக வெற்றி கொள்ளப்பட்டது. 

தோட்டத் துரைமார்களின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாகவும் தொழிலாளரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. நிருவாகத்திற்கு ஆதரவான ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்குவதன் மூலமாக தொழிலாளரிடையே காணப்படும் ஒற்றுமையைக் குலைக்க மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 1959 ஆம் ஆண்டு மாத்தளை எல்கடுவ தோட்டத்து தொழிலாளி காலக்கார முத்துசாமி கொலை செய்யப்பட்டார். அதே பகுதியில் 1964 ஆம் ஆண்டு கந்தே நுவர தோட்டத்தில் நிருவாகத்திற்கு ஆதரவாகச் செயற்பட்ட பிற்போக்குத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அழகர் மற்றும் ரெங்கசாமி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். செங்கொடிச் சங்கத்துக்கு எதிராக, நிருவாகமும் மக்கள் விரோதத் தொழிற்சங்கமும் செயற்பட்ட போதிலும் பெரும்பாலான தொழிலாளர்கள் செங்கொடிச் சங்கத்தையே ஆதரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

rosariyo fernando

துரைமார் மற்றும் பொலிஸார் இணைந்து தொழிலாளருக்கு எதிராகச் செயற்பட்டது போல தோட்டத்தில் வேலை செய்யும் கணக்குப்பிள்ளை, கண்டாக்கு, தொழிற்சாலைக் காவல்காரன் போன்ற ‘சிறு துரைமார்’களின் கெடுபிடி காரணமாகவும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1967 ஆம் ஆண்டு மடுல்கலை சின்ன கிளாப்போக்கு தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் அழகன் சோணை என்ற தொழிலாளி கணக்குப்பிள்ளையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும், மயிலிட்டியா தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது தொழிற்சாலை காவலாளி துப்பாக்கியால் சுட்டதில் அந்தோனிசாமி எனும் தொழிலாளி தியாகி ஆனதும், 1970 ஆம் ஆண்டில் மாத்தளை கருங்காலி (நாளந்தா) தோட்டத்தில் காவல்காரன் சுட்டதில் மரணமான பார்வதி (18 வயது), கந்தையா, இராமசாமி என்ற சிறுவன் ஆகியோர் மரணமானதும் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். 

தொடரும்.

 

https://ezhunaonline.com/compilation/trade-union-movement-in-upcountry-sri-lanka-part1/

Edited by யாயினி

இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல், மற்றும் ஒற்றுமை பற்றிய பிரக்ஞை உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு தொடர். 

பகிர்வுக்கு நன்றி 

22 minutes ago, யாயினி said:

மலையக மக்களின் போராட்ட வரலாறு – பகுதி 1

March 6, 2024 | Ezhuna
மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது.

இந்த மாற்றத்தை புரிந்து கொள்வது மிக அவசியம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து வரும் தொடர்களும் இந்தப் பகுதியிலே இணைக்கப்படும்...2🔽

மலையக மக்களின் போராட்ட வரலாறு – பகுதி 2

March 13, 2024 | Ezhuna
மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும் மீட்டல் செய்வதாகவும் 'மலையகம் 200' நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், செல்ல வேண்டிய தூரம் போன்ற விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தன. அதற்கேற்ப, விம்பம் அமைப்பு எழுநாவின் அனுசரணையுடன் கட்டுரைப் போட்டியொன்றை நடத்தியது. இப் போட்டியில் வெற்றி பெற்ற வெவ்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகள் 'மலையகம் 200' எனும் தலைப்பில் தொடராக எழுநாவில் வெளியாகின்றன.

இனவாதமும் தொழிலாளர் போராட்டங்களும் 

மலையக மக்களை பேரினவாத அடிப்படையில் நோக்குதலும் அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலும் ஆரம்ப காலத்திலிருந்தே இனவாத தலைவர்களாலும் அரசாங்கங்களினாலும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமையைக் காணலாம். 1948 இல் மலையக மக்களது குடியுரிமையைப் பறித்ததும் இனவாதத்தின் அடிப்படையிலே ஆகும். இதை விட 1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் நாடு முழுவதும் இடம்பெற்ற இனக்கலவரங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதை விட இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது. பாதுகாப்பற்ற சூழல் தொடர்ந்து நிலவி வருகின்றது.

up country

மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்த டி.எஸ். சேனநாயக்க அரசாங்கம் 1945 ஆம் ஆண்டுக் காலப்பகுதில் முன்னெடுத்த ‘தொழிலாளர்களை தோட்டங்களிலிருந்து விரட்டியடித்தல்’ என்ற நடவடிக்கைகளுக்கு சிறந்த உதாரணங்களாக நேஸ்மியர் மற்றும் உருளவள்ளி தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட இனவாதக் குடியேற்ற நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம். தான் உருவாக்கிய தோட்டங்களில் தொடர்ந்து வாழ்வதற்கு மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டியவர்களாக  இருந்துள்ளனர். 1942 ஆம் ஆண்டில் கந்தப்பளை பகுதியில் இடம் பெற்ற காணிப் பறிமுதல், தொழிலாளர்களை தோட்டங்களில் இருந்து வெளியேற்றியமை போன்ற நடவடிக்கைளும் இனவாத அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டன.

களனிவெளி பகுதியிலுள்ள நேஸ்மியர் தோட்டம் புளத்கோபிட்டிய நகரத்திற்கு அண்மையில் காணப்படுகின்றது. இந்தத் தோட்டம் 820 ஏக்கர் பரப்பினைக் கொண்டதாகவும்  தேயிலை மற்றும் இறப்பர் பயிரிடப்படும் பிரதேசமாகவும் காணப்பட்டது. 1900 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இந்தக் காட்டுப்பகுதி துப்பரவு செய்யப்பட்டு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. 1942 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி  515 பேர் இங்கு வாழ்ந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

1945 ஆம் ஆண்டு இவர்களை உடனடியாக தோட்டத்தை விட்டு வெளியேறும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொழிலாளர்கள் வாழ்ந்த இடங்களைச் சுற்றி முள்ளுக்கம்பி வேலியும் அமைக்கப்பட்டது. எனினும் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் வழிகாட்டலில் மூன்று வாரங்களுக்கு மேலான வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. களனிவெளி, கேகாலை, அவிசாவளை, யட்டியாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் இவ்வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு நல்கினர். அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா, ஹட்டன், நுவரெலியா பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஆதரவுப் போராட்டத்தை முன்னெடுத்தனர். நாற்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் தோட்டத்திலிருந்து வெளியேற்ற முற்படும் விரோதச் செயலுக்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் தொழிலாளர்கள் முன்னெடுத்தனர். அவர்களுக்கு எதிராக 110 வழக்குகள் தொடுக்கப்பட்டன. 14 வழக்குகள் பெண் தொழிலாளர்களுக்கு எதிரானதாக இருந்தன. தொழிலாளியான எஸ். செல்வநாயகத்திற்கு இரண்டு மாதக் கடூழியச் சிறைத் தண்டனையும் ஏனையோருக்கு இரண்டு முதல் மூன்ற வார கடூழியச் சிறையும் வழங்கப்பட்டன. மலையக மக்களின் போராட்ட வரலாற்றில் முதன் முதலாகச் சிறை சென்ற தொழிலாளி எஸ். செல்வநாயகம் என பத்திரிகைகள் எழுதின. தொடர்ச்சியான போராட்டம் காரணமாகவும் பிரிவுக் கவுன்சிலுக்கு மேன் முறையீடு செய்யப்பட்டதன் அடிப்படையிலும் இப் போராட்டம் வெற்றி கொள்ளப்பட்டது. தொழிலாளர்களின் உறுதியும் ஒற்றுமையுமே இப் போராட்டம் வெல்வதற்குக் காரணமாகியது. 

1946 ஆம் ஆண்டு புளத்கோபிட்டிய நகரத்திற்கு அருகில் அமைந்திருக்கும் உருளவள்ளி தோட்டத்தில் இன்னுமொரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை – இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தோட்டத்தில் வாழ்ந்து வந்த தொழிலாளர்கள் தமது தேவைக்காக மரக்கறித் தோட்டத்தை அமைத்து நீண்ட காலமாகப் பயிர் செய்து வந்த நிலையில், அந்தப் பகுதியில் இனவாதக் குடியேற்றத்தை மேற்கொள்ளும் பொருட்டு தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. தொழிலாளர்கள், வெளியேற மறுத்ததன் காரணமாக கைது செய்யப்பட்டனர். இதன் விளைவாக பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உருளவள்ளி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக எட்டியாந்தோட்டை மற்றும் கேகாலைப் பகுதியைச் சேர்ந்த ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் பேருக்கு மேற்பட்டவர்கள் சுமார் இருபது நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி நான்கு அம்சக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க பிரதமராகி தனிச்சிங்கள மசோதவைக் கொண்டு வந்ததோடு வாகனங்களில் ஸ்ரீ எனும் எழுத்தை பயன்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்தார். தமிழ் தலைவர்கள் இதனை எதிர்த்தனர். இதன் காரணமாக நாட்டில் இனவாதத் தாக்குதல்கள் தொடங்கின. ஏறத்தாழ நூற்றி ஐம்பது பேர் கொல்லப்பட்டனர். மலையகத்திலும் தாக்குதல்கள் இடம்பெற்றன. பொகவந்தலாவை நகரில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பொலிசார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக பிரான்சிஸ் மற்றும் ஐயாவு ஆகியோர் மரணித்தனர். 

1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் முழுமையான ஆதரவுடன்  புஸ்ஸெல்லாவ டெல்டா பகுதியில் தாக்குதல்கள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல இடங்களில் இத்தகைய வன்முறைகள் இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்டன. 

1977 ஆம் ஆண்டு மே மாதம், பத்தனை டெவன் தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டம் நில உரிமைக்காகவும், தோட்டங்களைப் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்ட பெரும் போராட்டமாகும். இப்பகுதியில் காணப்பட்ட ஏழாயிரம் ஏக்கர் தேயிலைக் காணியை இனவாத அடிப்படையில் பிரித்துக் கொடுக்க எடுக்கப்பட்ட முயற்சி போராட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப் போராட்டத்தில் இருபத்து இரண்டு வயது நிரம்பிய இளம் போராளி சிவனு இலட்சுமணன் தியாகி ஆனார். இனவாத நிலப்பறிப்பு முயற்சி ஒன்றிணைந்த போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அதே இடத்தில் இன்று தனியார் குடியேற்றங்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நபர்கள் தங்குவதற்கான உல்லாச விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளமையைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.  1997 ஆம் ஆண்டு இரத்தினபுரி வேவல்வத்த தோட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல், லயன்களுக்கு தீ வைத்தமை, 2007 ஆம் ஆண்டு இரத்தினபுரி பம்பேகம தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு விரட்டப்பட்டமை, 2000 ஆம் ஆண்டு பிந்துனுவெவ படுகொலைகளுக்கு எதிராக தலவாக்கலை நகரில் இடம்பெற்ற கூட்டத்தின் போது காராளன், மணிவண்ணன் உள்ளிட்ட நான்கு தொழிலாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டமையும் இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே ஆகும். இவை சில உதாரணங்கள் மட்டுமே ஆகும். பேரினவாத அரசாங்கம் அதற்கு ஆதரவான பொலிஸ் மற்றும் இராணுவ அமைப்புகள் திட்டமிட்ட வகையில் இத்தகைய மக்கள் விரோதச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக  ஈடுபட்ட போதிலும் தொழிலாளர்களின் மன உறுதியும் போராட்ட குணாம்சமும் அனைத்ததையும் எதிர்கொண்டன என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும்.

கூலி அல்லது சம்பள உயர்விற்கான போராட்டங்கள்

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தமக்கான உரிமைகள், சலுகைகள், அனைத்தையுமே போராட்டங்கள் மூலமே பெற்றுக் கொண்டனர் என்பதே வரலாற்று உண்மையாகும். அவற்றுள் முக்கியமானது சம்பள உயர்விற்கான போராட்டமாகும். பல்வேறு போராட்டங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், அவர்கள் 1000 ரூபாவை அடிப்படை நாளாந்தச் சம்பளமாகப் பெற முடியாதவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு முதல் இடம்பெறுகின்ற சம்பள உயர்வுப் போராட்டங்கள் சிறந்த விளைவுகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. மக்கள் விரோதத் தொழிற்சங்கங்களே இதற்குப் பிரதான காரணமாக அமைகின்றன. இதனை விளங்கிக்கொண்டு மாற்று வழிகளைத் தேடுவதும் மக்கள் சார்பான தொழிற்சங்கச் செயற்பாடுகள் மற்றும்  அரசியலை முன்னெடுப்பதுமே சரியான வழியாகும். 

முல்லோயா போராட்டம்   

முல்லோயா தோட்டம் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தோட்டம் மலையக மக்களின் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக முன்னெடுத்த வேலை நிறுத்தமும் கோவிந்தன் எனும் தொழிலாளி தியாகி ஆகியமையுமாகும். முல்லோயா வேலைநிறுத்தப் போராட்டம் மலையகத் தொழிற்சங்க வரலாற்றின் முக்கிய சாதனையாக அமைகின்றது. மலையகத்தில் தொழிற்சங்கங்கள் வேரூன்றி வளர்வதற்கும் தொழிலாளர்கள் பலம் பெறுவதற்கும் இப்போராட்டம் அடிப்படையாக அமைந்தது.

mulloya

அக்காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கூலி ஆண்களுக்கு ஐம்பத்து நான்கு சதமாகவும், பெண்களுக்கு நாற்பத்து மூன்று சதமாகவும், பிள்ளைகளுக்கு முற்பத்து இரண்டு சதமாகவும் காணப்பட்டது. அது வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்குப் போதுமானதாக அமையவில்லை. இதனை முன்வைத்து முல்லோயா பகுதியிலிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமக்கான கூலியை பதினாறு சதத்தால் உயர்த்துமாறு கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த தோட்டத்தில் வாத்தியராக இருந்த திரு. ஜெகநாதன் என்பவர் தொழிலாளர்களுடன் இணைந்து செயற்பட்டமையை அறிய முடிகின்றது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் தொழிலாளர்களுக்கான ஆலோசனைகளை வழங்குவதிலும் இவரது பங்கு அதிகமாவே இருந்திருப்பதைக் காணமுடியும். இவ் ஆசிரியர் அக்காலத்தில் உத்வேகத்துடன் இயங்கிய  லங்கா சம சமாஜக் கட்சியின் உறுதியான செயற்பாட்டாளராக இருந்துள்ளமையே இதற்கான பிரதான காரணமாகும்.

முல்லோயா தோட்டத்தின் சொந்தக்காரனாகவிருந்த வெள்ளைக்காரன் டபிள்யூ.ஈ. ஸ்பார்லிங் குறித்த ஆசிரியர் மீது கடுமையான கோபம் கொண்டதோடு அவர் தங்கியிருந்த லயன் அறையிலிருந்தும் தோட்டத்திலிருந்தும் வெளிறுமாறு கட்டளையிட்டான். தொழிலாளர்கள் இதற்கும் எதிர்ப்புக் காட்டினர். வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக தோட்ட நிருவாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதென தொழிற்சங்கத் தலைவர்கள் தீர்மானித்ததன் அடிப்படையில் முக்கிய தொழிற்சங்கத் தலைவராகவிருந்த திருவாளர் பி.எம். வேலுசாமி முல்லோயா தோட்டத்துக்குச் சென்றார். நிருவாகம் பேச்சு வார்த்தைக்கு இணக்கம் தெரிவிக்காததோடு தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வழங்கவும் மறுத்தது. தொழிலாளர்கள் உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. மேலும் தொழிலாளர்கள் ஒன்று கூடுவது, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றனவற்றை வெள்ளைக்கார துரையும் அவனுக்குக் கீழிருந்த நிருவாகமும் அங்கீகரிக்கவில்லை. தொழிலாளர்களோ தமது கோரிக்கையில் உறுதியாகவிருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

போராட்டத்துக்கு அடிப்படையாக அமைந்தது தொழிற்சங்கமே என்பதை அறிந்துகொண்ட வெள்ளைக்கார துரையும் அவனுக்குக் கீழிருந்த நிருவாகமும் அவர்களுக்கு எதிராகச் செயற்பட்டமை, வேலை நிறுத்தம் செய்யக்கூறி தொழிலாளர்களைத் தூண்டியமை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து கண்டி பொலிசார் மூலமாகத் தொழிற்சங்கத் தலைவர் திரு.பி.எம். வேலுச்சாமியைக் கைது செய்தனர். மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாமென தோட்டத் தொழிலாளர்களை எச்சரித்தனர். இவ்விரு சம்பவங்களும் தொழிலாளர்களின் உணர்வை மேலிடச் செய்தது.  

லங்கா சமசமாஜக் கட்சி, தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருந்து, தொழிலாளர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்தத்தை ஊக்குவித்தது. இதன் காரணமாக அக்காலத்தில் அரச சபை உறுப்பினராகவிருந்த அபே குணசேகர என்பவர் சமசமாஜக் கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களையும் தொழிலாளிகளின் போராட்டத்தக்கு எதிரான கருத்துகளையும் முன்வைத்தார். இவர் வேலை நிறுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் தொழிலாளர்களை அடக்கவும் பொலிசாருக்கு ஆதரவாகச் செயற்பட்டமையை அறிய முடிகின்றது.

நாளுக்கு நாள் வேலை நிறுத்தம் உத்வேகமடைந்தது. நிலமைகள் மோசமடைவதைக் கண்ட தோட்ட நிருவாகம் தொழிலாளர்களை அடக்க நினைத்தது. பல்வேறு அடாவடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தொழிலாளர்களைப் பிரிப்பதற்கு தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தொழிலாளர்களின் உறுதி, வேலை நிறுத்தச் செயற்பாடுகள் ஒரு புறமாகவும், மறுபுறம் நிருவாகத்தின் கெடுபிடிகள் காரணமாகவும் முல்லோயா தோட்டத்தில்  அமைதியின்மை தோன்றியிருந்தது.

அக்கால அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொழிலாளர்களுக்கு எதிராக இருந்தமை, வெள்ளைக்கார துரைமார்களின் அடக்கியாளும் மனநிலை, தொழிலாளர் விரோதப் போக்கு, பொலிசாரின் நடவடிக்கைகள் போன்றன நிலமைகளை மேலும் மோசமாக்கின. தொழிலாளர்களைப் பிரிப்பதற்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தை அடக்கவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. தொழிலாளர்கள் உறுதியுடன் இருந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். தோல்வி கண்ட தோட்ட நிருவாகமும் பொலிசாரும் அமைதியை ஏற்படுத்துதல், பிரச்சினையைக் கட்டுப்படுத்தல் என்ற போர்வையில் தொழிலாளர்கள் மீதான வன்முறையை ஏவி விட்டனர். தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர்.

தொழிற்சாலையிலிருந்து கையில் பெரிய கம்பு ஒன்றுடன் வந்துகொண்டிருந்த முல்லோயா தோட்டத் தொழிலாளி கோவிந்தன் மீது டி.ஜி. சுரவீர என்ற பொலிஸ்காரன் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டான். இதனால் படுகாயமடைந்த அந்தத் தொழிலாளி மரணமடைந்தான். அவனது செங்குருதி, அவன் உருவாக்கிய தோட்ட மண்ணில் கரைந்தது. கோவிந்தன் வீரத் தியாகி ஆகினான். 

கண்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ரொபினின் பணிப்புரைக்கு அமையவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனக் கூறப்பட்டது. எனினும் தொழிலாளர்களின் போராட்டத்தை அடக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட கொலையாகவே இதனை அடையாளப்படுத்த முடியும்.

இந்தப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் பொருட்டு பொலிசும் தோட்ட நிருவாகமும் பயன்படுத்திய இன்னொரு உபாயம் இன ரீதியான பிரிவை தொழிலாளர்களிடையே ஏற்படுத்த முனைந்தமையாகும். இதற்கென பபுன் என்ற பெயருடைய பொலிஸ் உத்தியோகத்தர் பயன்படுத்தப்பட்டமையையும் பதிவுகள் மூலம் அறிய முடிகின்றது. எவ்வாறாயினும் இன அடிப்படையில் தொழிலாளர்களைப் பிரிப்பதற்கு எடுத்த முயற்சி இறுதியில் தோல்வியடைந்தது.

தியாகி முல்லோயா கோவிந்தன் சுட்டுக் கொல்லப்பட்டதை நேரில் கண்ட பெரியசாமி என்ற தொழிலாளி பாதையில் வேகமாக ஓடியபோது அவர் மீது பொலிஸ் வாகனமொன்றை மோதச்செய்து படுகாயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவமும் பதிவாகி உள்ளது. கோவிந்தனை படுகொலை செய்ததைக் கண்ட சாட்சியாக இருந்த தொழிலாளியின் உயிரைப் பறிக்கச் செய்யப்பட்ட சதியாகவே இதனைக் காண முடியும்.

இச்சம்பவம் இடம்பெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் பதினாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொழிலாளர்கள் தங்கியிருந்த லயன் அறைகளுக்குச் சென்று வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறும் அவ்வாறு செய்யத் தவறின் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள் எனக் கூறி மிரட்டியுள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்து முடிந்த பின்னர் ஜனவரி பன்னிரெண்டாம் திகதி முல்லோயா தோட்டத்தின் நடுப்பிரிவுக்குச் சென்ற பொலிசார் வேலைக்குத் திரும்புமாறு கூறி எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொழிலாளர்களின் உறுதியும் தொழிற்சங்கத்தின் வழிகாட்டலும் இத்தகைய எச்சரிக்கைளுக்கு அடி பணியாத நிலையைத் தோற்றுவித்திருந்தது.

தொழிலாளர்களின் உறுதிப்பாட்டை பலவீனப்படுத்தும் பொருட்டும் கொலைக் குற்றத்தைத் திசைமாற்றும் பொருட்டும் இன்னொரு உத்தி கையாளப்பட்டமையை அறிய முடிகின்றது. அதாவது தொழிலாளர்கள் தோட்டத்தின் நிருவாகத்துக்குச் சொந்தமான பகுதியில் அனுமதியின்றி மரக்கறித் தோட்டச் செய்கையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பதின்மூன்று தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். மனிதாபிமானமற்ற வகையில் அவர்களை ஒரு வாகனத்தில் அடைத்து கண்டி நோக்கிக் கொண்டு சென்றமை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தெழிலாளர்கள் நீதி மன்றத்தின் முன்னிலையில் கொண்டு செல்லப்படாமல் நீதிபதியின் தீர்ப்புடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றில் பல்வேறு பாடங்களையும் அனுபவங்களையும் தந்த முல்லோயா போராட்டம் பிற்காலத்தில் தொழிலாளர்கள் அடக்குறைக்கு எதிராகப் போராடும் உத்வேகத்தையும் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உரிமைக்காகப் போராடிய தியாகிகளின் வரலாற்றின் முதலாவது பதிவாகவும் கோவிந்தனின் அர்ப்பணிப்பு அமைகின்றது.

முல்லோயா போராட்டத்தைத் தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைள் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உதாரணங்களாக சில:

அ. ஏப்ரல் மாதம்

  1. றம்பொடை தோட்டத்தில் சுமார் எழுநூறு தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தோட்டத்துரையின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர்.
  2. வெலிஓயா தோட்டத்தில் தோட்ட நிருவாகியின் தொழிலாளர் விரோத போக்கிற்கு எதிரான போராட்டம்.

ஆ. மே மாதம் 

  1. நேஸ்பி தோட்டத்தில் இடம்பெற்றப் போராட்டம் – இது தொழிலாளர்களுக்கிடையே மோதல்களைத் தோற்றுவித்திருந்தது.
  2. நீட்வுட் தோட்டப் போராட்டம் – பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற போராட்டத்தில் இரண்டு பொலிசாரும் தாக்கப்பட்டனர்.
  3. ரதல்லை தோட்டப் போராட்டம் – தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து பிரச்சினைகளைக் கொடுத்து வந்த பெரிய கங்காணிக்கு எதிரான போராட்டம்.
  4. வேவஸ்ஸ போராட்டம் – பாரியளவில் மேற்கொள்ளப்பட்ட இப்போராட்டம் தோட்டத் துரையை வெளியேற்றுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டது. ஊவா பகுதியெங்கும் பரவிய இப்போராட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  5. சென் அன்றூஸ் தோட்ட போராட்டம் – தோட்டத்துரையின் அடக்குமுறையை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டது.

முல்லோயா போராட்டத்தின் விளைவாக தொழிலாளர்களுக்குச் சாதகமான உடன்படிக்கை ஒன்றும் துரைமார் சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தொழிலாளர் சபையினை (Workers Council) ஏற்படுத்துவது எனவும் மேலும் தோட்டங்களுக்குள் பொலிசார் பிரவேசிக்கும் போது ஆயுதங்களைக் கொண்டு செல்லக் கூடாது என்றும் தோட்டப் பிரச்சினைகள் தொழிலாளர் சபையுடன் பேசி தீர்க்கப்பட வேண்டும் எனவும் உடன்பாடு காணப்பட்டது. தொழிலாளர் போராட்டத்தின் மூலமாக வென்றெடுத்த கோரிக்கை இதுவாகும்.

பஞ்சப்படி போராட்டம்

1965 – 1970 காலப்பகுதியில் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி பதவியில் இருந்தது. அந்த அரசாங்கத்தின் பொருத்தமற்ற பொருளாதார நடவடிக்கையினால் தேசிய வருமானம் வீழ்ச்சியடைந்த காரணத்தினால் வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் காணப்பட்டது. பெருந்தோட்ட நடவடிக்கைள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் எவ்விதமான அக்கறையும் மேற்கொள்ளப்படவில்லை. முதலாளித்துவ நாடுகளுடனான தொடர்பும் தாராள பொருளாதார முறையும் இறக்குமதிகளைச் சார்ந்து நிற்கும் பொருளாதாரக் கொள்கையும் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாதகமாகவே அமைந்தன. பல்வேறு போராட்டங்களின் விளைவாக அரசாங்க ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்பட்டது. ஆனால் வழமை போல பெருந்தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.  

வாழ்க்கைச் சுமைக்கேற்ப 17 ரூபாய் 50 சதம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்களால் தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டமே பஞ்சப்படி போராட்டமாகும். நாளொன்றுக்கு 67 சதம் சம்பள அதிகரிப்பைக் கோரி பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது. இதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்கவில்லை. போராட்டம் தொடர்ந்தது. பிரதமராகவிருந்த டட்லி சேனநாயக்க இந்தப் போராட்டம் தொடர்பாக எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சம்பள நிருணய சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு கூறி ஒதுங்கிக் கொண்டார்.

1966 ஆம் ஆண்டு நாற்பத்தைந்து நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டம் மலையகம் முழுதும் வியாபித்து இருந்தது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தப் போராட்டத்திற்கான தலைமையை ஏற்றிருந்தது. இந்தக் கோரிக்கை தொடர்பாக இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மயிலிட்டியா தோட்டத்தில் மூன்று மாத காலம் வேலை நிறுத்தம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 10 சதம் சம்பள உயர்விற்கு ஒத்துக் கொண்டது. போராட்டம் தோல்வியில் முடிந்தது. மக்கள் விரோதத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு இதுவும் சிறந்த உதாரணம் ஆகும். இத்தகைய நடவடிக்கை தொழிற்சங்கம் மீதான பற்றுதலையும் வலுவிழக்கச் செய்தது. 

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. கடந்த ஆறு வருடங்களாக இது தொடர்பில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபா என்பதைக் கூறி வந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இல்லை. தனியார் கம்பனிகள் அரசாங்கத்துக்கு மேலான அதிகாரத்தைக் கொண்டிருப்பது போல தோன்றுகின்றது. இன்றைய விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்றன தொழிலாளர்களை மேலும் அழுத்துகின்றன. உரிய சம்பளத்தை வென்றெடுப்பதற்காக தொடர்ந்து போராட வேண்டியது அவசியமாகின்றது.

இன அடையாளம் மற்றும் காணி, வீட்டு உரிமைக்கான போராட்டங்கள்

தொழிற்சங்கம் அமைத்தல், வேதன அதிகரிப்பு, தோட்டங்களைப் பாதுகாத்தல் போன்றனவற்றின் அடிப்படையில் மலையகத் தொழிலாளர் முன்னெடுத்த போராட்டங்களின் அடுத்த கட்டமாக தேசிய இன அடையாளத்தை வென்றெடுப்பதற்கான போராட்டங்கள் மேலெழுந்துள்ளன. இந்திய வம்சாவளி என்ற அந்நிய நாட்டின் அடையாளத்தை நீக்குவதோடு இந்நாட்டை உருவாக்கிய மக்களை ‘மலையகத் தமிழர்’ என அடையாளப்படுத்த வேண்டும் என்ற கருத்து முன்னிலை பெற்று வருகின்றது. இதற்கான பிரகடனமும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இந்நாட்டில் வாழ்கின்ற நான்கு தேசிய இனங்களில் ஒன்றாகக் கருதப்பட வேணடும் என்ற கோரிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

மேலும் மலையக மக்களுக்கான காணி, வீட்டுரிமை பற்றிய போராட்டங்களும் இன்னொரு கட்டத்துக்கு வளர்ச்சியடைந்துள்ளன. வீடுகளை அமைப்பதற்கான பத்து பேர்ச்சஸ் காணியும், விவசாயம் மற்றும் தோட்டச் செய்கைக்கான இருபது பேர்ச்சஸ் காணியும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு போராட்டங்கள் 1980 ஆண்டு முதல் மக்கள் சார்ந்த செயற்பாட்டாளர்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய கோரிக்கைகளை வென்றறெடுக்க, கடுமையானதும் தொடர்ச்சியானதுமான  போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது. 

என்ன செய்ய வேண்டும்? 

இயற்கையோடும் வறுமையோடும் போராடிய மலையக மக்கள் முதலாளிகளின் அடக்குமுறைகளுக்கும் இனவாத நடவடிக்கைகளுக்கும் எதிராக போராடியதன் விளைவாகவே பல்வேறு உரிமைகளைப் பெற முடிந்தது. ஐக்கியம், ஒருமைப்பாடு, தன்னலங்கருதாத செயற்பாடுகள், தலைமைத்துவம், துணிவு போன்ற காரணிகளே வெற்றிகளைப் பரிசாகத் தந்தன. தொழிற்சங்கத் தெரிவு, வேறுபாடுகளை மறந்தமை, ஒருவருக்காருவர் ஒத்தாசை நல்கியமை போன்றன அதற்கு வலுவூட்டின. மக்கள் சார்பான தொழிற்சங்கம், அவற்றின் செயற்பாடுகள், மக்கள் தலைவர்களின் துணிவு மிக்க முடிவுகள் போன்றனவும் பங்களித்தன. 

protest by people

ஆனால் இன்றைய சூழலில் இவை யாவும் நிர்மூலமாக்கப்பட்டு சிதைவடைந்த நிலைக்குச் சென்றுள்ளதைக் காணமுடியும். ஐக்கியம் சிதறடிக்கப்பட்டுள்ளது. போராட்டப் பலம் பலவீனமாக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க நடவடிக்கைகளும் அரசியல் செயற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து நம்பிக்கையற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளன. தோட்டங்களை தனியார் கையேற்ற பின்னர் எவ்வித அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படாமல் அவை காடுகள் மற்றும் புதர் நிலங்களாக மாற்றப்படுகின்றன. தனியார் தோட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் வெளியேற வேண்டுமென்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புசல்லாவை பகுதியிலுள்ள றம்பொடை தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுகின்றனர். 

women protest

முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் சீரற்ற கல்வி முறையால் சுயநல எண்ணம் மேலோங்கியுள்ளது. தொழிலாளர் உதிரிகளாக மாற்றப்பட்டுள்ளனர். கடுமையான உழைப்பாலும் போராட்டத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட மலையகம் திட்மிடப்பட்ட வகையில் சிதைக்கப்படுகின்றது. எனவே இதனை மாற்றியமைக்க சகலரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியது அவசியமாகும். இந்த நோக்கத்துக்காக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

  1. தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்குதல். தொழிலாளர் கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல். உழைக்கும் மக்கள் சார்பான தொழிற்சங்கத்தின் முக்கியத்துவத்தை அறியச் செய்தல்.
  2. அரசியல் அடிப்படையில் ஆளுமையுள்ள சமூகமாக தலை நிமிர்வதற்குரிய, மக்கள் நலன்சார்ந்த கட்சியைக் கட்டியெழுப்புதல். சலுகை அரசியலை மட்டுமன்றி உரிமை சார்ந்த விடயங்களை வென்றடுப்பதற்கான வேலைத் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்தல்.
  3. பேரினவாத முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக செயற்படும் ஏனைய அரசியல் கட்சிகள், ஜனநாய அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுதல்.
  4. சுய உற்பத்தி, நுகர்வு, பண்டப்பரிமாற்றம் போன்ற பொருளாதார நடவடிக்கைகளைப் பலப்படுத்துதல்.
  5. மலையக மக்களின் வரலாறு மற்றும் கலை, பண்பாட்டு அம்சங்களைப் பாதுகாக்கும், மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கும்  கலாசாரத்தைக் கட்டியெழுப்புதல்.
  6. மலையகத்தின் இயற்கைச் சூழலை, வளங்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பை மக்களின் ஒத்துழைப்புடன் கட்டியெழுப்புதல்.
  7. போதையற்ற இளைஞர்கள் என்ற இலக்கை அடைவதற்கு விளையாட்டு மற்றும் பயனுள்ள பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  8. பெண் தலைமைத்துவத்தை உருவாக்குதல்.
  9. மாணவர் இயக்கங்கள், சிறுவர் அமைப்புகளைப் பலப்படுத்துதல்.
  10. புதிய பண்பாட்டுப் பயணத்தினை சகல மாவட்டங்களுக்கும் விஸ்தரித்தல்.

முடிவுரை

மலையக மக்களின் வரலாறு என்பது போராட்டங்களால் வடிவமைக்கப்பட்டதாகும். தற்போதைய நிலையில் மலையக மக்கள் அனுபவித்து வரும் உரிமைகள் மற்றும்  சலுகைகள் இத்தகைய போராட்டங்களால் வெற்றி கொள்ளப்பட்டவையாகும். சாதாரண வேலை நிறுத்தம் தொடக்கம் பல நாட்கள் நீடித்த பரந்துபட்ட வேலை நிறுத்தம் வரை இத்தகைய போராட்டங்களின் தன்மைகள் படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளன. போராட்டங்களின் உச்சமாக உயிர்த் தியாகங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே மலையக மக்களின் வரலாறு செங்குருதியால் புடம் போடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட முடியும். இத்தகைய வீரம் மிகுந்த போராட்டங்களின் திரட்சியாகவே மலையகத்தை அடையாளப்படுத்த வேண்டும். பிற்போக்கு தொழிற்சங்கம் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் இத்தகைய தனித்துவ வரலாறு மேலும் வளர்ச்சி பெறாத தேக்க நிலையைத் தோற்றுவித்துள்ளது. மேலும் மாறி மாறி பதவிக்கு வந்த, பேரினவாதம் மற்றும் மதவெறி கொண்ட அரசாங்கங்களின் நடவடிக்கைகளும் போராட்டத்தின் வளர்ச்சியைத் தடை செய்துள்ளன. மேலும் திறந்த பொருளாதாரக் கொள்கை, தனியார்மயம், பொருத்தமற்ற கல்வி போன்றன காரணமாகவும் போராட்டக் கலாசாரம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. மக்கள் சார்ந்த அரசியலை முன்னெடுப்பவர்கள் இது குறித்து மிகச் சரியான தீர்மானத்தை மேற்கொண்டு போராட்ட வாழ்க்கைப் பண்பாட்டையும் வரலாறையும் மீளவும் வளர்த்தெடுக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமானதாக உள்ளது. மலையக மக்களின் போராட்டங்களில் இன்னொரு வளர்ச்சிப்படியாக இன அடையாளத்திற்கான போராட்டங்களும் காணி, வீட்டுரிமைக்கான போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. மலையகம் 200 அதனை சாத்தியமாக்குவதற்கு கடந்த கால வெற்றிகளை படிப்பினைகளாகக் கொள்வது சிறந்த விளைவுகளைத் தரும்.

உதவிய நூல்கள்

  1. இராஜேந்திரன் சிவ. 2019. தடை மலைகளை உடைத்தல், செம்பதாகை சஞ்சிகை, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, கொழும்பு.
  2. கந்தையா மு.சி. சிதைக்கபட்ட மலையகத் தமிழர்கள், 2015 விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர்.
  3. சாரல் நாடன் (1988). தேசபக்தன் கோ. நடேசையர் : ஒரு வரலாற்று ஆய்வு, மலையக வெளியீட்டகம் கண்டி.
  4. புதிய நீதி (2021). மலையகத் தமிழ் மக்களும் மாற்று அரசியல் மார்க்கமும், புதிய நீதி வெளியீட்டகம், கொழும்பு. 
  5. ரோகிணி மாத்தளை (1993). உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள், இளவழகன் பதிப்பகம், சென்னை. 
  6. லோரன்ஸ். அ (2006). மலையக சமகால அரசியல் தீர்வு, மலையகம் வெளியீட்டகம், தலவாக்கலை.
  7. Nadesan N. (1993). A history of Up country Tamil People in Sri Lanka, Nandalala Publication, Hatton.

தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் வாசிக்கவில்லை.

பெரிதாக இருப்பதால் நாள் செல்லும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.