Jump to content

"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 01
 
 
ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும், உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல்லது பழம் வழக்கம், நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து அல்லது தலைமுறை தலைமுறையாக வந்த சிறப்பு அல்லது வழி வழியாகச் சந்ததிகளிடம் தொடரும் ஒன்று என்று சுருக்கமாக கூறலாம்.
 
அதே வேளை மரபு என்ற சொல்லும் பலரால் பாவிக்கப் படுகின்றன, அறிவுடையோர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற் கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதல் மரபாகும். அதாவது, பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மக்களால் பின்பற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப் பட்ட நியதியே மரபு என்கிறது தமிழ் அகராதி.
 
எனவே, வழக்காறு அல்லது மரபு என்பது பெருந்தொகையான மக்களால் செய்யப்படும் ஏதாவது ஒரு நடைமுறைச் செயற்பாடுகளைக் குறிப்பதாக அமைகின்றது. மரபு, பாரம்பரியம் இரண்டும் ஒத்த கருத்துள்ள சொல்லாக பல சந்தர்ப்பங்களில் பாவிக்கப் பட்டாலும், அவை இரண்டும் ஒன்றல்ல, இன்றைய வழக்காறு அல்லது மரபு [custom] நாளைய பாரம்பரியம் [tradition] ஆகும்.
 
ஒரு மரபு அல்லது பாரம்பரியம் என்பது ஒரு சட்டம் அல்லது உரிமை அல்லது வழக்கமான வழி என்றும் கூறலாம் [a law or right or usual way], இது எழுதப் படாத ஆனால் நீண்ட காலமாக பலரிடம், பொதுவாக ஒரே நாட்டில், ஒரே பண்பாட்டில் அல்லது ஒரே மதத்தில் [the same country, culture, or religion] இருப்பவர்களிடம் நடைமுறையில் உள்ள ஒன்றாகும். உதாரணமாக ஏதாவது ஒன்று பொதுவாக, வழக்கமாக ஒரே வழியில் அல்லது அதே வழியில் கடைபிடித்தால் அதை நாம் "வழக்கமான வழி" ["customary way"] என்று பொதுவாக கூறுவது உண்டு.
 
மேலும் நாம் விபரமாக மரபு அல்லது பாரம்பரியம் பற்றி அலச முன்பு, இன்னும் ஒரு விடயத்தையும் கூற வேண்டிய அவசியம் உண்டு. அதாவது பண்பாடு என்றால் என்ன என்பதேயாகும். இதன் பொருள் மரபின் பொருளுடன் ஒத்து காணப்பட்டாலும், மரபு என்பது பொதுவாக ஒரு நடைமுறையை அல்லது செயல்பாட்டை குறிக்கிறது, ஆனால் பண்பாடு என்பது, வாழ்க்கை முறை (way of life) என்பதாகும். ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. ஒரு சமுதாயத்தில் வாழுகின்ற பெரும்பான்மை மக்களின் ஒருமித்த நடத்தைகளையும் எண்ணங்களையும் அது வெளிப் படுத்தும். ஒரு சமுதாயத்தில் அமைந்துள்ள கலை, நம்பிக்கை, பழக்கவழக்கங்கள், மொழி, இலக்கியம், விழுமியங்கள் (Values) முதலியன அந்தச் சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகள் ஆகும் .
 
பொதுவாக நாம் பின்பற்றும் நடைமுறைகள், மரபுகள், பாரம் பரியங்கள் அல்லது சடங்குகள் [practices, customs and traditions or rituals], ஏதாவது அடிப்படையை [basis] அல்லது காரணத்தை கொண்டுள்ளதுடன், அவற்றில் சில உண்மையான அறிவியலாகவும், விஞ்ஞான பூர்வமானவையாகவும் [truly scientific] உள்ளன. எனினும் ஆரம்பத்தில் ஒரு காரணத்தால் ஏற்பட்ட வழக்கம், பின் நாளடைவில், அந்த அடிப்படை காரணம் மறக்கப் பட்டு, அவை ஒரு குழுவின் பொதுவான நடை முறைகளாக இணைக்கப்பட்டதும் அல்லது மாறிவிட்டதும் அல்லாமல், அவை சூழ்நிலை வசதிகளுக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றமும் அடைந்து வளர்கின்றன.
 
உதாரணமாக, ஒரு முறை ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஒரு உண்மையான கட்டுரை ஒன்று வெளியானது, அதில் நாலாவது தலைமுறையில் வாழும் குடும்பப் பெண், தாம் ஏன் வான்கோழியை ஈஸ்டர் [Easter] அன்று மூன்று துண்டுகளாக அறுத்து சமைக்கிறோம், ஆனால் மற்ற எல்லா வீடுகளிலும் பொதுவாக வான்கோழியை [turkey] முழுமையாக சமைக்கிறார்கள் என அறிய முற்பட்டார் எனவும். அதனால் தன் தாயிடம் அதை பற்றி கேட்டார் என்றும் அதற்கு தாய் இப்படித்தான் எம் குடும்பத்தில் எப்பொழுதும் சமைப்பதாகவும், அதை தன் தாயிடம் இருந்து கற்றதாகவும் கூறினார் என்றும், அதனால் அந்த பெண் தனது பாட்டியிடம் சென்றார் என்றும், அவரும் அப்படியே விடை கூறியதால், அந்த ஆர்வமிக்க பெண் தனது பூட்டியிடம் சென்றாராம். அங்கு அந்த காலத்தில், தனது வீட்டில் நிலவிய சூழ்நிலையில் அல்லது வசதியில், தம்மிடம் இருந்த சமையல் பாத்திரத்தில் வான்கோழியை முழுமையாக சமைக்க முடியவில்லை என்றும், அதனால் அதை மூன்றாக அறுத்து சமைத்ததாகவும் கூறினார். என்றாலும் அந்த நடைமுறையை பார்த்த அவர்களின் குடும்பம் அதன் பின் அப்படியே மூன்றாக அறுத்து சமைக்க தொடங்கியதாம், அது பின்நாளில் அவர்களின் குடும்ப நடைமுறை ஆகிவிட்டது என்று அந்த கட்டுரை முடிக்கிறது. இப்படித்தான், பெரும்பாலான நடைமுறைகள், மரபுகள், பாரம்பரியங்கள் அல்லது சடங்குகள் சில அடிப்படைகளை கொண்டு உள்ளன எனலாம்.
 
உதாரணமாக, கிருமிநாசினி [disinfectant] என்று ஒன்று இல்லாத அந்த காலத்தில், பசுவின் சிறுநீர் பாவித்து உள்ளார்கள், அதே போல மாட்டுச் சாணத்தை வீடு மெழுகுவதற்கு பாவித்து உள்ளார்கள், வெள்ளி குவளையில் நீர், சூடான பானங்கள் கொடுத்து விருந்தினர் கௌரவிக்கப் பட்டார்கள். வெள்ளி ஒரு தொற்றுயிர்க் கொல்லி [germicidal], எனவே அது விருந்தினர் சில வேளை சுமந்து வரும் எந்த தொற்று நோயையும் தடுக்க உதவியது.
 
இப்படியே பல மதங்கள் அல்லது குழுக்கள் மாதவிடாய் தொடர்பான மரபுகளை கொண்டுள்ளன. மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கையான ஒன்று, எனவே அந்த சமயத்தில் ஓய்வு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று, மேலும் அந்த கால சூழ்நிலை வசதிக்கு ஏற்ப, பெண்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டும் சில மாதவிடாய் மரபுகள் கடைப் பிடிக்கப்பட்டுள்ளது.
 
இவைகளுக்கு பின்னால் சில அடிப்படைகள் இருப்பதை காண்கிறோம், எனினும் அவை இன்றும் பொருந்துமா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். மேலும் நாம் இப்போது தற்கால சூழ்நிலைகளை அறிந்து, அதற்கேற்ப எங்கள் செயல்களை, நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். பழைமையைப் பேணுவதும் முன்னோர் வழியைப் பொன்னே போல் போற்றுவதும் மரபின் முக்கியக் கூறுகளாக இருப்பினும், வழக்காறுகள் அல்லது மரபுகள் பொதுவாக மாற்றம் பெறுகின்றன. புதிய அல்லது வேறு மரபுகள் வந்து சேருகின்றன.
 
அதாவது, நடை முறையில் இருந்து வந்த அல்லது பின்பற்றப்பட்ட மரபுகள் கால மாற்றத்திற்கு ஏற்ப விலகிப்போவதனை காணலாம். அப்படியானவற்றை நாம் கட்டி இழுத்து பற்றி நிற்க முடியாது என்பது நடைமுறை உண்மை ஆகும். எனவே, பண்டைய நடைமுறைகளை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பது இன்று எம்முன் எழுகின்ற முக்கிய கேள்வியாகும். பண்டைய பாரம்பரியங்களை நாம் அப்படியே இறுகப் பிடித்துக் கொண்டிருந்தால் மனித சமூகம் முன்னேற்றம் கண்டிருக்க முடியாது. எனவே சமூக வளர்ச்சியின் காரணமாக சில தேவைகள் கருதி சில இல்லாதொழிந்து போவதும் உண்டு.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
பகுதி: 02 தொடரும்
No photo description available. No photo description available. No photo description available. No photo description available. No photo description available. 
 
Link to comment
Share on other sites

  • நியானி changed the title to "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"
  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02
 
 
தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -
 
"யாரும் இல்லை, தானே கள்வன்,
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"
 
என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.
 
இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.
 
தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.
 
எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.
 
இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என
 
"..... எல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடிப்
பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"
 
என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.
 
இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.
 
மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .
 
இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 03 தொடரும்
No photo description available. No photo description available. No photo description available. No photo description available. No photo description available.
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 03
 
 
மனிதனுக்கும் மட்டும் அல்ல, சராசரி அறிவு கொண்ட மிருகங்களுக்கும் [Average intellect animals] பாரம்பரியம் அல்லது மரபு உண்டு என இன்று விஞ்ஞானிகள் நிறுவி உள்ளனர். உதாரணமாக கீரி [mongooses] ஒரு தலை முறையில் இருந்து அடுத்த தலை முறைக்கு பாரம்பரியத்தை கடத்துகிறது என கண்டு பிடித்து உள்ளனர். எனவே இது மனிதனதோ அல்லது உயர் அறிவு கொண்ட மிருகங்களான மனித-குரங்கு உள்ளிட்ட உச்ச உயர்பாலூட்டி உயிரினத் தொகுதி மற்றும் டால்பின்கள் [Is not the sole purview of humans and intellectually advanced animals such as primates and dolphins] ஆகியவற்றின் முழு ஆதிக்கத்தில் அல்லது வரம்பிற்கு உட்பட்டவை அல்ல என்கிறது.
 
இது இன்னும் ஒன்றையும் வலியுறுத்துகிறது, அதாவது எம்மிலும் அறிவு குறைந்த மிருகங்கள் கூட தமது அடையாளத்தை, தமக்கான சிறப்பு இயல்புகளை தக்க வைக்க, தமது பண்பாடடை அடுத்த தலை முறைக்கு கடத்துகிறது என்பது தான்!, அப்படி என்றால் நாம் எம்மட்டு? நாமும், அது எமது ஒரு கட்டாய கடமையாக இல்ல விட்டாலும், அது எமக்கு குழந்தை பருவத்தில் இருந்து பழக்கப் பட்டதால், அது ஒரு வாழ்க்கை முறையாக பெற்றோரால் அறிமுகம் செய்யப் பட்டதால், அதை இன்னும் எதோ ஒரு வழியில் பின்பற்றுகிறோம்.
 
என்றாலும் சிலவேளை உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பல பாரம்பரிய முறைகளை நாம் தற்போதைய சூழலில் கைவிடுவதும் உண்டு. உதாரணமாக, எண்ணெய் ஆட்டுவதற்கு மரத்திலான செக்கை பயன்படுத்தி, அதன் பெருமையை பாரம்பரியமாக கடைபிடித்த தமிழர், இன்று இயந்திரங்களால் அதிவேகத்தில் பிழிந்தெடுக்கப்படும் நவீன முறைக்கு மாற்றம் அடைந்துள்ளனர். மேலும்,உடற்பயிற்சி அல்லது கடும் உடல் வேலைக்கு பின் ஒரு கிண்ணம் நல்ல எண்ணெய் குடிக்கும் பழக்கமும் இருந்தது. உணவுக்கு மட்டுமின்றி, குளியலுக்கும், மசாஜ் செய்யவும் நல்லெண்ணெய் பயன்படுத்தியதால், மூட்டுவலி பிரச்சினையின்றி வாழ்ந்தனர். அதனாலேயே, எள் எண்ணெய் என்பதற்குப் பதிலாக, நல்ல எண்ணெய் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
 
நவீன முறையில் இயந்திரத்தால் எண்ணெய் பிழியும் பொழுது, அது மூலப்பொருளை நன்றாகப் பிழிந்துவிடுவதால், அதில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் சூடாகவும் ஊட்டச்சத்து மதிப்பு குறைவாகவும் உள்ளது. மேலும் வர்த்தக ரீதியாக, நீண்ட பாவனைக்கு உகந்ததாக இருப்பதற்காக தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளையும் அறிமுகப்படுத்துகிறது. [“refining degrades nutritional value, and more significantly, introduces harmful trans fats in an attempt to improve shelf life for commercial reasons”]
 
ஆனால், பாரம்பரிய முறையில் மர செக்கில் மெதுவாக எண்ணெய் பிழிவதால், பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும், குளிராகவும் இருக்கும். [“Cold-pressed oils have all their nutrients intact, retaining the natural properties of the oil-seeds, unlike refined oil,”] மேலும், அதில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச் சத்துகளும் அதிகமிருக்கும்.[“It’s a bit like atta and maida; the source is the same, but atta is far superior to maida, nutritionally] இதில் கிடைக்கும் புண்ணாக்கிலும் உயிர்ச் சத்துகள் எஞ்சியுள்ளதால், அதை உண்ணும் கால்நடைகளுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
 
இப்படி பெருமை வாய்ந்த பாரம்பரிய முறை இன்று பல காரணங்களால் மறைந்து போய் புது நவீன முறை பழக்கத்திற்கு வந்துள்ளது.
எனவே, நாம் எமது ஒவ்வொரு பாரம்பரியத்தின் மூலத்தையும் அது உரைக்கும் காரணத்தையும், அதன் உண்மைத் தன்மையையும் அறிவியல் விளக்கத்தையும் அறிவது மிகவும் சாலச் சிறந்தது, அப்படியாயின் தேவையற்ற, அறிவியலுக்கு ஒவ்வாததை நாம் தவிர்த்து, எமது பாரம்பரியத்தை பெருமையடைய செய்து, எமது அடையாளத்தையும் பெருமை அடையச் செய்யலாம்.
 
இது சாத்தியமான ஒன்று, ஏனென்றால், பாரம்பரியத்திற்கு ஒரு கடுமையான விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் [Since traditions are not strict rules and regulations ] கிடையாது, எனவே சில அம்சங்கள் அங்கு மாற்றக் கூடியவை, உண்மையில், நாம் இன்று பின் பற்றும் பாரம்பரியம் , அதன் அசல் பாரம்பரியத்தின் மாறுபாடுகளே [variations of an original tradition] ஆகும் . உதாரணமாக, பதினெட்டாம் நூற்றாண்டு வரை கிறிஸ்துமஸ் மரங்கள் [Christmas trees] சாப்பிடக் கூடிய ஆப்பிள்கள் மற்றும் கொட்டைகள் மூலம் அலங்கரிக்கப் பட்டன, அதுவே கிறிஸ்துமஸ் பாரம்பரியமாக அன்று இருந்தது. அதன் பின் [illuminated by candles] மெழுகுவர்த்தியால் வெளிச்சம் கொடுக்கப்பட்டு, இன்று [electric lights and various ornaments] மின் விளக்குகள் மற்றும் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
பொதுவாக, பாரம்பரியம் நமது கலாச்சாரத்தின் முக்கியமான பகுதி எனலாம். அவை எமது குடும்பம், எமது சமுதாயம் ஆகியவற்றின் அத்திவாரம் மட்டும் இன்றி அதனை கட்டி எழுப்பும் கட்டுமானமாகவும் உள்ளன. அது எமது கடந்த காலத்தை வரையறைக்கும் வரலாற்றின் ஒரு பகுதி நாம் என்பதை, எமக்கு ஞாபகம் ஊட்டுகிறது. அது மட்டும் அல்ல, நாம் இன்று யார் என்பதையும், நாளை எப்படி நாம் இருப்போம் என்பதையும் வடிவமைக்கிறது.
 
நாம் பாரம்பரியத்தின் உண்மையான செயலை, கருத்தை புறக்கணித்தால், நாம் எமது அடையாளத்தை தொலைத்து விடுவோம் அல்லது எமது அடையாளத்திற்கு ஆபத்து ஏற்படும்.
 
உதாரணமாக, இல‌ங்கையின் க‌ரையோர‌ங்க‌ளில், குறிப்பாக புத்த‌ள‌ம், சிலாப‌ம், நீர்கொழும்பு, மாத்த‌றை வ‌ரை வாழ்ந்த‌ த‌மிழ்ப்பர‌த‌வ‌ர்க‌ள் போத்துக்கேய‌ரின் வ‌ருகையுடன் க‌த்தோலிக்க‌ ம‌த‌த்திற்கு மாறி, மெல்ல, மெல்ல தமது பாரம்பரியத்தை இழந்து, அடையாளம் தொலைத்து, நாள‌டைவில் சிங்க‌ள‌வ‌ர்க‌ளாயின‌ர் என்பதே வரலாறு உரைக்கும் கசப்பான உண்மையாகும்.
 
பாரம்பரியம் எமக்கு ஒரு ஆறுதலையும் சமுதாயத்தில் ஒரு பங்கையும் பங்களிக்கிறது. இது குடும்பத்தை இணைக்கிறது, நண்பர்களுடன் மீண்டும் இணைக்க துணை புரிகிறது. மேலும் சுதந்திரம், நம்பிக்கை, ஒற்றுமை, நேர்மை, நல்ல கல்வி, தனிப்பட்ட பொறுப்பு, ஒரு வலுவான பணி நெறிமுறை, மற்றும் தன்னலமற்ற இருப்பு [freedom, faith, integrity, a good education, personal responsibility, a strong work ethic, and the value of being selfless] போன்றவற்றை வலிவூட்டுகிறது. ஒருவரின் வாழ்க்கையில் உண்மையான முக்கிய விடயங்களை கொண்டாட இது இடமளிக்கிறது.
 
உதாரணமாக, இது ஒருவர் பங்களித்த நற்செயலுக்கு நன்றி செலுத்த சந்தர்ப்பம் கொடுக்கிறது, எங்கள் சமுதாயத்தின், குடும்பத்தின் உயர்ந்த கொள்கைகளை வெளிப்படுத்தவும், எங்கள் பன்முகத்தன்மையை [diversity] காட்டவும், ஒரு நாடாக, ஒரு இனமாக ஐக்கியப்படவும் வழிவகுக்கிறது. அது மட்டும் அல்ல பாரம்பரியம் எங்கள் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஒரு நீடித்த நினைவுகளை உருவாக்குவதுடன், எம்மை மற்றவர்களுக்கு அர்த்தமுடன் பிரதிபலிக்க ஒரு சிறந்த சூழலையையும் வழங்குகிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 04 தொடரும்
40778331_10212567716810669_8553040470740041728_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=vDHsG7_fSSAQ7kNvgEPjzS0&_nc_oc=AdhVE2d2nF_w7xDyM-m-5mYdlIC4JNPCUY8wwAkl5K3OSi9zbUgSo0KgbN0IXLUPCrc83NwVlsmy4Fatn1DYXI9t&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBamUwWjgUkXP6d60OjJiBVDqyUrk9Op5i2ZgQl8mz4AQ&oe=6657169B 40918794_10212567719530737_8249004078068137984_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=GYDi5JY-T0cQ7kNvgGy7_-A&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAZhkU0bWe_EV50IKs3V1UxbXgVevQi_DNM3JTs_TI98w&oe=66571037
40803362_10212567720530762_5979134035593527296_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=EGXO0gxL9qoQ7kNvgETCCef&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfB-qThtdmoty8qt6A-3WrUk799db711wQ5cbp8QVqDSRg&oe=665719B2 40678000_10212567722330807_5191043331034972160_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ULkbGlrEg8AQ7kNvgH5Tjb_&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAXCnzwpoHq-0TzYbC52BEdQAMXJNHBkE8Zz3y_KIowlQ&oe=66572D2A 40862245_10212567723810844_6710097590601383936_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ueTU2z08y5EQ7kNvgH7WJK5&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfC1YKV6pWHmkqmj087C44VFN1BGPa2-yuTIcZeUXmbYwg&oe=6657063F 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 04
 
 
நாம் எம் வரலாற்றை புரட்டி பார்க்கும் பொழுது, சாட்சியங்களுடன் காட்சி அளிக்கும் மிகப் பண்டைய பாரம்பரியத்தில் ஒன்றாக யோகா [Yoga] இருப்பதை காண்கிறோம். இது இந்தியாவிற்கு ஆரியர் வருகைக்கு முன் இருந்துள்ளது. இதை அத்தாட்சி படுத்துவதாக மொஹெஞ்சதாரோ தொல்லியல் தளம் அமைகிறது. அங்கு சித்தசானா காட்சியில் [Siddhasana posture] பல முத்திரைகள், கல்வெட்டுகள் [inscriptions] கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. எப்படி என்றாலும் முனி பாரம்பரியத்தில் தோன்றிய யோகா, பிற்காலத்தில் ரிஷி பாரம்பரியத்தில் வேத பண்பாட்டால் பிரபலப் படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இது மனித குலம் உருவாக்கிய மிகப் பெரியதொரு சிறப்பு வாய்ந்த பழக்கமாகும், இது உடல் மற்றும் மனப்பிரச்சினைகள் ஆகியவற்றுக்கான நல்ல ஒரு பயிற்சியாகும்.
 
நாகரிகம் முன்னேற முன்னேற பாரம்பரியமும் அதனுடன் சேர்ந்து பொதுவாக மாறுகிறது, ஏனென்றால் நாகரிகத்துடன் அறிவு மற்றும் அனுபவத்தின் எல்லைகள் விரிவு படுவதே இதற்கான காரணம் ஆகும். எனவே பாரம்பரியமும் அந்தந்த சூழ்நிலைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்கிறது எனலாம். ஒவ்வொரு நாகரிகமும் அந்தந்தக் கால கட்டத்தின் தேவையை பொறுத்து பாரம்பரியத்தை அதற்கு ஏற்றவாறு சரிப்படுத்துகிறது. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு எது சிறப்பாகவும் தேவைப் பட்ட தாகவும் இருந்ததோ, அது இன்று அப்படி இல்லாமல் போகலாம். எனவே, குருட்டு மரபுசார்ந்த அல்லது பழமைவாதவாதத்தால் [blind orthodoxy or conservatism ] அப்படியே பாரம்பரிய பாரம்பரியம் தொடர்வதை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது எம் அனைத்து முன்னேற்றத்திற்கும் ஒரு பெரிய பின்னடைவு [draw back] ஆகும்.
 
நாம் இன்றைய கால ஓட்டத்துடன் ஒவ்வாதவைகளை இறுக்க பற்றிக்கொண்டு இருக்காமல், சூழ்நிலைக்கு அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப விட்டுக்கொடுப்புகளுடன் அவ்வற்றை மாற்றி அமைக்க வேண்டும். நாம் எப்படி வாழ்ந்தோம் என பெருமை படுவது மட்டும் போதாது, எங்கள் முன்னோடிகள் தங்கள் விலை மதிப்பற்ற வம்சமாக விட்டு விட்டு சென்ற நாமும், பெருமைக்கு உரியவராக இன்றைய உலகில் இருந்து அவர்களுக்கு பெருமை தேட வேண்டும்.
 
ஒரு உதாரணமாக துடக்கு என்ற மரபை எடுப்போம், ஒரு குடும்பத்தில் மரணம், பிறப்பு, பூப்பு போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தவிடத்து இக்காலத்தில் கோயில் வழிபாடு, தனிப்பட்ட ஆத்மார்த்த பூசை, அதிதிகளை வரவேற்று உபசரித்தல் போன்ற கடப்பாடுகளில் இருந்து அக்குடும்ப அங்கத்தவர்களுக்கு ஒரு விதி விலக்கு அளிக்கப் படுகின்றது. இது அவர்களின் அதீத துக்கம் அல்லது மகிழ்ச்சியைக் கொண்டாடும் காலம் என்பதால், ஒரு தற்காலிகமாக அளிக்கப்படும் விடுமுறையே, ஆசௌச அல்லது துடக்கு காலம் ஆகும்.
 
சௌசம் என்றால் சுத்தம் எனப்படும். எனவே, ஆசௌசம் என்றால் சுத்தமற்ற அல்லது 'தீண்டத்தகாமை', 'தூய்மை இன்மை' என்று பொருள்படும். மரணம் என்றால் மறைமுகமாக அவர்களின் மனத்தேறலுக்கான கால அவகாசத்தையும், பிறப்பு என்றால் அந்த மகிழ்வை கொண்டாட, தம்மை அந்த புதிய உறவுடன் நன்கு பிணைத்துக் கொள்ள, பிறந்த குழந்தையுடனும் பெற்ற தாயுடனும் காலத்தை நன்றாக ஒன்றாக கழிக்க, இந்த துடக்கு காலம் வழி செய்கின்றது எனலாம்.
 
இவர்களை தாயத்தார்கள் என தமிழ் நாட்டிலும், துடக்குக்காரர் என யாழ்ப்பாண மரபிலும் கூறுவர். இது அக்காலத்தில் நிலவிய சமுதாயத்தின் தேவையில் தோன்றிய மரபையும் பிணைப்புகளையும் காட்டி நிற்கின்றது.
 
எனினும் இத்தகைய மரபுமுறை தற்கால சமுதாயக் கட்டமைப்புகளின் மத்தியில் நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கின்றதா என்பது ஒரு கேள்விக் குறியே!
 
ஏன், அந்த காலத்திலேயே, பெண்களை ‘தீட்டு’ என்று புறக்கணிக்கும் கொடுமைக்கு எதிராக முதன் முதலில் கலகம் செய்தவர் தமிழ் தாய் தந்த திருமூலர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
 
அவர் தனது ஒரு பாடலில் [2551], “பிறரைத் தீண்டுவது தமக்குத் தீட்டு! தீட்டு!” என்று கூறுபவர் சிறிதும் அறிவிலார். தீட்டு ஏற்படுத் தும் இடத்தை அவர்கள் அறிந்திலர். தீட்டு என்ன என்பதை மெய்யாக அறிந்து கொண்ட பின்பு, மனித உடலே உண்மையில் பெரிய தீட்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார். அதாவது பெண்கள் தீட்டு என்றால் அதிலிருந்து உருவான மானுடமும் தீட்டு என்கிறார் திருமூலர்.
 
"ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே."
 
இன்னும் ஒரு பாடலில்,[2552], தம்மை உள்ளபடி உணர்ந்து கொண்ட தத்துவ ஞானிகளுக்கு ஆசூசம் என்னும் தூய்மையின்மை என்பது கிடையாது என அடித்து கூறுகிறார்.
 
"ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு
ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு
ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு
ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே."
 
அதே போல, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 - 1898 சூலை 5) கூட, திருமூலர் வழியில் தீட்டிற்கு எதிராக உரத்துக் குரல் எழுப்பினார். அவர் காலத்திலும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோயில்களுக்குச் செல்லக்கூடாது என்று பழைமைவாதிகள் கூறி வந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் தனது ‘புலவர் புராணம்’ நூலில்,
 
“வீங்கு புண் முலையாள்
மாதவிடாயினள் ஒருத்தி
வேட்கை தாங்குறாது இரங்கி
அன்னோன் சரண் பணிந்து
அதனைச் சொன்னாள்
ஏங்குறேல் பெரு நெருப்பிற்கு
ஈரம் இன்றே என்றானே!”
 
அதாவது, பெரு நெருப்பாகிய இறைவனுக்கு தீட்டு இல்லை என்பதை திருஞான சம்பந்தர் கதை மூலம் எடுத்துரைத்தார்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 05 தொடரும்
41033394_10212582809867986_2566886555914338304_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=LVnATYknwigQ7kNvgGqbdli&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfACoBFt2K3JGEX1Fb-DjpKTTr5LJVG_BIkvIuQfbFsfaQ&oe=66588981 41194474_10212582812108042_4146547889268588544_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=XFP-6mS1bvAQ7kNvgHEvbHK&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAiTDtVGW6zgOurDWi9lzX27huybK5o_ZnH1yFwqDe58Q&oe=66588CC4 41027619_10212582814228095_4479680464872800256_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=9g9C1_1yGqsQ7kNvgE70sc-&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA0VclzE9aOrJIvSJNpwoWg3ZNY_MwLkou05LstxvhAYA&oe=6658695241046564_10212582815388124_7058909240672387072_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ltNCqJCoFG8Q7kNvgFMWyi5&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD7_WGQ10oCpW8lRw5MwVnPa0G5ugktG4HoPYF_JWicAA&oe=665869BE41113261_10212582813428075_6010787257370279936_n.jpg?stp=dst-jpg_s851x315&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=DZ17o729xAcQ7kNvgGXXDHD&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDuVIQBApY6ENWo5pmIU6YtgKRmS3FlrKPtfdZh0ARn_A&oe=665869F8 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 05
 
 
ஒரு நாட்டில் அல்லது ஒரு பகுதியில் வாழும் மக்களின் வாழ்வை பற்றி புரிந்து கொள்ள வேண்டுமாயின் நாம் அவர்களின் பெருமைக்குரிய சிறப்பு வாழ்வையும் மற்றும் பாரம்பரியங்களையும் பார்க்கவேண்டும். இது அந்த மக்களின் முக்கியத்துவத்தை மட்டும் இன்றி, அவர்கள் எப்படி ஓய்வு எடுத்தார்கள், பொழுது போக்கினார்கள், கொண்டாடினார்கள் என்பதையும் எடுத்துக் காட்டும்.
 
உதாரணமாக இலங்கையின் ஒரு பிரதேசமான புத்தளத்தின் பாரம்பரியங்களில் ஒன்றாக இன்னும் குடும்பங்களை அறிமுகப் படுத்துவதற்கு “குடும்ப பட்டப்பெயர்” பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இவை அவர்களின் வரலா ற்றை, அவர்களின் முன்னோர்களை மீட்டி பார்க்க, பரம்பரைகளின் அடையாளமாக வழக்கத்தில் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.
 
இவ்வாறான குடும்ப பட்டப் பெயர்கள் அந்த காலத்தில் அவர்கள் செய்த தொழில், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களின் செயற்பாடுகள், தோற்றங்கள் என இன்னோரன்ன அமசங்களை கொண்டு வந்திருக்கலாம். அங்கு “பாசுமணி” என்ற குடும்ப பட்டப் பெயரை கொண்ட ஒரு குடும்பம் உண்டு. விசாரித்து பார்த்ததில், அவர்களின் முன்னோர்களின் அன்றைய தொழில் பாசுமணி மாலை செய்து கொடுப்பதாக இருந்ததை அறிந்தோம். அன்றைய காலங்களில் தங்கத்தின் பாவனை பெரிதாக இருந்திராத காலமென்பதால் பாசுமணி மாலைக்கான மவுசு அதிகமாம். திருமண நிகழ்வுகள், பெண்பிள்ளைகளின் பூப்படைதல் நிகழ்வுகள், பெண் குழந்தைகளின் பிறந்தநாள் நிகழ்வுகள் என இன்னோரன்ன சடங்குகளின் போது இவ்வாறன பாசுமணி மாலைகளை மக்கள் பெரும்பாலும் அணிவதை, அன்பளிப்பாக கொடுப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தார்களாம்.
 
பெரும் பாலும் இந்தியாவிலிருந்தே இந்த பாசுமணி முத்துக்கள் பெற்றுக் கொள்வார்களாம். காலப் போக்கில் பாசுமணி மாலை செய்து கொடுக்கும் தொழில் அழிவடைந்தாலும் பாசுமணி என்ற அந்த குடும்ப பட்டப் பெயர் நிலைத்து விட்டது என்கிறார் அந்த பாசுமணி குடும்பத்தின் ஒருவர். இவ்வாறான குடும்ப பட்டப் பெயர்கள் ஒரு சில கேட்பதற்கு வெவ்வேறு விதமாக இருந்தாலும், அவை தம் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து இருப்பதை மறுக்க இயலாது என்றும், தமக்கு பின்னால் வருபவர்கள் தமது முன்னோர்களின் வாழ்க்கையினை, வழிமுறைகளினை இதன் மூலம் அறிய முடிகிறது எனவும் பெருமைப் படுகிறார் அவர்.
 
மேலே எடுத்து காட்டிய ஒரு தனிப்படட தமிழ் முஸ்லீம் குடும்பம் ஒரு பட்டப் பெயருக்கு பின்னாலேயே பெருமை கொண்டு பூரிக்கிறது என்றால், பெருமைக்குரிய பல கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் [culture and traditions] குறைந்தது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகப் பின்பற்றும் முழு தமிழ் இனம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும் என்று எண்ணி பாருங்கள்.
 
தமிழ் இனம் இன்றைய உலகின் மிகப்பழையன எனலாம். தமிழரைப் பற்றி யாராவது சிந்தித்தால், அவர்கள் பெரும்பாலும் நினைப்பது, தமிழர்கள் பட்டுத் துணியை விரும்புகிறவர்கள் என்றும், சேலை வேட்டி உடுப்பவர்கள் என்றும், மற்றவர்களை வணக்கம் செலுத்தி வரவேற்பவர்கள் என்றும், கொண்டாட்ட காலங்களில் பெரும்பாலும் மரக்கறி உணவை வாழை இலையில் உண்ணும் மரபை உடையவர்கள் என்றும், அவர்களின் முக்கிய கொண்டாட்டம் தை பொங்கல் என்றும், இது பெரும்பான்மையான மக்கள் முன்பு விவசாயிகளாக இருந்தனர் என்பதையும், மற்றும் முக்கனி என்று சொல்லப்படும் மா, பலா, வாழை பழங்களை விரும்பி பொதுவாக உண்பவர்கள் என்பதும் ஆகும்.
 
எனினும் கால ஓட்டத்தில், குறிப்பிடத் தக்க வெளிநாட்டு தாக்கங்களால், இன்று அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கலப்பால், இது தான் அவர்களின் தனித்துவமான மரபு அல்லது பாரம்பரியம் என சுட்டிக் காட்டுவது சிக்கலாகிறது.
 
இன்றைய காலத்துக்கேற்ற புதுத்தினுசானபாணி [ஃபேஷன்கள்], உணவு பழக்கம், வாழ்க்கை முறை, விழுமங்கள் [மதிப்புகள்] [fashions,food habits, life-styles, values] என்பன எமது நீண்ட வரலாற்றின் விளைவுகள் ஆகும். இன்று தமிழர்கள் பெருமளவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் தமது தாயகமாக, குறைந்தது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் பண்பாடு பல விதங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க பெருமை உடையது. அத்துடன் தமிழ் மிகவும் பண்டைய மொழிகளில் ஒன்றும் ஆகும்.
 
குறைந்தது 2500 ஆண்டுகளாக அதன் அடிப்படை மொழி அமைப்பு மாறாமல் தொடர்ச்சியாக வாழும் மொழி இது ஆகும். அது மட்டும் இல்லை இன்று மேலும் நாற்பது லட்சத்திற்கு [four million] மேற்பட்ட தமிழர்கள் பரந்து பெரும் தொகையாக பல நாடுகளில், குறிப்பாக பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, கரிபியன் தீவுகள், ரீயூனியன் தீவு, மொரிசியஸ், பிஜி, மற்றும் புலம்பெயர் தமிழர்களாக [Tamil diaspora] அவுஸ்திரேலியா, டென்மார்க், நெதர்லாந்து, நோர்வே, சுவிற்சர் லாந்து, பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் வாழ்கிறார்கள்.
 
பொதுவாக எங்கள் மரபும் பாரம்பரியமும் எமது முன்னோர்களிடம் இருந்து பெறப்பட்டு, அது எமது குடும்பத்தின் மூத்தவர்களாலும் குருவாலும் [ஆசான்] இளம் வயதிலேயே கல்வியுடன் சேர்த்து புகுத்தப் பட்டு, அது வாழ்வின் ஒரு பகுதியாக இன்றும் தொடர்கிறது.
 
ஆனால் இன்று கல்வி மேலும் அதி முன்னேற்றம் அடைந்து, இன்றைய இளைய தலைமுறை ஏதாவது ஒன்றை பின்பற்ற முன் அல்லது செய்ய முன் அதைப்பற்றி கேள்வி கேட்டு, காரணம் அறிந்து, புரிந்து கொள்ள [question, reason and understand] முனைகிறார்கள். எனவே நாம் கண்மூடித்தனமாக அதை அவர்களுக்கு புகுத்தாமல் அதன் உண்மை நிலையை காரண காரியங்களுடன், எப்படி [தூண்டுதலும் துலங்கலுமுடன்] புத்தளத்து பாசுமணி குடும்பம் விளக்கியதோ, அவ்வாறு நாம் விளக்க வேண்டும். அது அவர்களுக்கு ஒரு துடிப்பையும் மகிழ்வையும் கொடுத்து அந்த பாரம்பரியத்தின் உண்மை நோக்கத்தை மேலும் அறிய அவர்களுக்கு ஒரு ஆவலையும் தூண்டும்.
 
அதை விட்டு விட்டு, இந்த பாரம்பரியம் தானாக தொடரும் என இருந்து விட்டால், அது காலப்போக்கில், நமது வாழ்க்கை முறை நீர்த்துப் போய், தளர்வூட்டு எமக்கே அது ஒரு அந்நியமாக போய்விடும். இது உங்களின் நல்ல ஆரோக்கியம் மாதிரி, அதை நீங்கள் இழக்கும் வரை அது தானாக தொடரும் என பேசாமல் இருப்பது போல ஆகும்.
 
நாங்கள் எங்கள் விழுமியங்களை பாராமுகமாக இருந்தால், அலட்சியம் செய்தால், ஒரு நாள் நாம் எம் கண்களை திறக்கும் பொழுது, விழித்தெழும் போது, நாம் எம்மையே அடையாளம் காணாமல் போய்விடுவோம். இந்த விழுமியங்கள், எமது நாட்டின், எமது குடும்பத்தின் முதுகெலும்பு ஆகும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 06 தொடரும்
41554411_10212625667499400_4966016804552966144_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Zbfi-3S1-wYQ7kNvgFyf2WP&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAFrF6_KBmjSBD_0sl2rTS4o7VQNWXiELHD2rdsfsrD3A&oe=6659CC5F 41747591_10212625668739431_7714999154795085824_n.jpg?stp=dst-jpg_p370x247&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=U9aMgmK8a_gQ7kNvgHBXoM-&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAEUPU5_2ct88aFuoaNRUpnRGkoMu2nuA7ohyXY4uqQxw&oe=6659A64D 41769855_10212625669419448_7769483610968555520_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Kr3Lcyzp20UQ7kNvgHHASCv&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBeBce5DIgGGYHxhqI6xI25mDgbm1O0F_LA2iCr2dd-8A&oe=6659BBC8 41669221_10212625671459499_2836198206717558784_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=G7Chav7AANkQ7kNvgGlUBpV&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBD89o0ml7y3OJyM1CZ8C6SbR4oKjDjQf5zPB7V7F4kRg&oe=6659CB0F 41729561_10212625673819558_7275877240275992576_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=GRSTj_AhquMQ7kNvgHIbJc7&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfArzyPXMXK1yHEW8TCbkbWu8IlwNfJoQl6qC0RL-gseZA&oe=6659A7A6
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 06
 
 
இது வரை பாரம்பரியத்தை பற்றி பொதுவாகவும் மேலோட்டமாகவும் அதன் அறிமுகத்தை, உள்ளடக்கத்தை பார்த்தோம். இனி வரும் பகுதிகளில் சில முக்கிய தமிழர்களின் மரபையும் பாரம்பரியத்தையும் நான் சரி என நம்பும் அறிவியல் காரணங்களுடன் தர முயற்சிக் கிறேன்.
 
நான் இவ்வற்றை என்னால் முடிந்த அள வில் கவனமாக கையாண்டாலும், சிலவேளை தவிர்க்க முடியாத சில பிழைகள் மற்றும் குறை பாடுகள் [some errors and omissions] ஏற்படலாம். அதற்கு நான் இப்பவே வருத்தம் தெரிவிக்கிறேன். என்றாலும் விபரமாக நான் அவைகளை அலச முன்பு, இன்னும் ஒன்றையும் சொல்ல வேண்டி யுள்ளது.
 
அதாவது பாரம்பரியம் எமக்கு எதை தர வல்லது?
 
இது அதன் கருத்தின் படி, நீண்ட காலமாக ஒரு குறிப்பிட்ட குழு அல்லது குடும்பம் அல்லது சமுதாயம் முதலியன எப்படி சிந்தித்தனை, நடந்து கொண்டன அல்லது ஏதாவது செய்தனர் [a way of thinking, behaving, or doing something] என்பதை குறிக்கிறது எனலாம். அது அன்று அங்கு பரம்பரை பரம்பரையாக வேரூண்டி இருந்தது.
 
ஆனால் இன்று புது வழியில், சிறந்த வழியில் நாம் ஒன்றை செய்யக் கூடியதாக இருக்கையில், அந்த பழம் வழியை ஏன் பின்பற்ற வேண்டும்? எப்படி நாம் இன்னும் பாரம் பரிய வழியில் ஒழுகினால், வளர அல்லது முன்னேற அல்லது அபிவிருத்தி அடைய முடியும்?
 
உலகம் மாற்றம் அடைகிறது என்னவோ உண்மைதான், ஆனால், நாம் மனிதர்களாக இருப்பதற்கான சாரமான - எங்கள் போராட்டங்கள், எங்கள் அச்சங்கள், எங்கள் தேவைகள் மற்றும் ஆசைகள் [our struggles, our fears, our needs and desires] - ஆகியவை, பெருபாலும் மனித இயல்பை தீர்மானிக்கும் உள்ளார்ந்த பண்புகளால் [inherent characteristics] அப்படியே மாறாமல் இருக்கின்றன. -பாரம்பரியம் சில பண்புகளை, உதாரணமாக எம் மேலும் மற்றவர்கள் மேலும் ஒரு விழிப்புணர்வை, உடன் இருக்கும் உணர்வை, உறுதிப்பாட்டை [heightening our awareness of self and others, cultivating a sense of belonging and stability] எமக்கு ரகசியமாக நினைவூட்டுவதுடன் அது நம் வாழ்விலும் சமுதாயத்திலும் ஒரு வழி காட்டி சக்தியாகவும் இருக்கிறது. எனவே இந்த அர்த்தத்தில் பாரம்பரியம் எப்போதும் மேம்படுகிறது, வளர்கிறது எனலாம்.
 
இது எம்மை பார்த்து, என்னை பெறுங்கள், என்னை செம்மைப் படுத்துங்கள், என்னை மனிதத்தன்மையூட்டுங்கள் என்கிறது. ஆகவே இது தன் வளர்ச்சியை, மாற்றத்தை நிறுத்து அல்லது கேள்வி கேட்க வேண்டாம் என்று ஒரு பொழுதும் சொல்லவில்லை?
 
ஒருமுறை சீன யாத்ரிகர் ஹியூன்-ஸங் [Hiuen -Tsiang] என்பவர் இந்தியா வந்தபொழுது வட இந்தியாவில் ஹர்ஷன் [Harsha, c. 590–647 CE, also known as Harshavardhana] என்ற ஒருவன் பேரரசனாக இருந்தான். அந்த பேரரசன் தனது செல்வத்தை தனது மக்களுடன் பகிர்ந்து மகிழ்ந்து இருக்கும் அந்த மரபை கண்டு அவன் வியந்தான். அது போலவே தஞ்சாவூர் அரசன் வழிப்போக்கர்கள் மற்றும் யாத்திரீகர்கள் இளைப்பாறிச் செல்ல சத்திரம் [shelter] அமைக்கும் மரபில் புகழ் பெற்று திகழ்ந்தான். இது வறியவர்களையும் நோயாளிகளையும், தங்கள் கவனிப்பில் இருந்த இறந்தவர்களையும் கவனித் தது. ஆனால் இந்த மரபு பின்நாளில் ,காலனித்துவத்தின் வருகையால் வழக்கொழிந்து போய்விட்டது.
 
தஞ்சை மாமன்னர் சரபோஜி [Raja Sarfoji], 1801 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி அளவில் பிரிட் டிஷ் காலனித்துவ எஜமானர்களுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் தனது அரசுக்கு என்ன நடந்தாலும், இந்த விருந்தோம்பல் பாரம்பரியம் நிறுத்தப் படக் கூடாது என்று அந்த தமிழரின் பாரம்பரியத்தின் பெருமையை சுட்டிக் காட்டினான். ஆனாலும் வளங்கள் வீணாக பயன்படுகிறது எனக் கூறி நிறுத்தி விட்டார்கள். ஒரு சிறந்த பாரம்பரியம் அங்கு இறந்து விட்டது.
 
அப்படியான ஒரு பாரம்பரிய வாழ்க்கை முறை யாழ்ப்பாணத்திலும் முன்பு இருந்தது. சங்கடப் படலை என ஒரு வகையான வெளி வாசல் வேலியில் அமைக்கப்பட்ட முறை ஒன்று இருந்தது. நடை பயணமாக வரும் வழிப் போக்கர்களுக்குச் சங்கடங்களை தீர்க்கும் முகமாக அவை அமைக்கப்பட்டதால் அவை சங்கடப் படலை எனப் காரணப் பெயர் பெற்றிருக்கலாம்? அதன் அமைப்பு முறை படலைக்கு நிழல் கொடுக்கும் வகையில் ஒரு கூரை அமைப்பு, உயரத்திலும் பாதசாரிகள் இருந்தோ கிடந்தோ இளைப்பாறிப் போகும் வகையில் அமைக்கப்பட்ட மேடை, கீழேயும் அமைந்திருக்கும். அருகில் மண்பானையில் குடி தண்ணீர் வைக்கப் பட்டு இருக்கும். இப்படி தமிழ் ஒரு காலத்தே தனக்கென தனி அடையாளம் கொண்டிருந்தது என்பது என்னவோ உண்மை தான்.
 
ஆனால் புராணங்கள் எனும் தொன்மங்கள் என்ற வடநாட்டு ஆரிய மரபுகள், முக்கியமாக 7 - 8 நூற்றாண்டளவில் தமிழகத்தில் கால் பதித்த பின், தூய தமிழ் மரபு மெல்ல மெல்ல ஒழிந்து கலப்பு மரபு வேரூன்றி விட்டது. சங்க காலத் தமிழகத்தில் மக்களுக்கும் அரசர்களுக்கும் இடையில் மக்களைப் புரிந்துகொண்டு புலவர்கள் பண்பாட்டு மையங்களாக இருந்தனர். அவர்கள் பாடல்களில் பழம் தமிழ்ப் பண்பாடு இன்றும் எமக்கு தெரிய வருகின்றது.
 
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது ஒரு பாடலின் கருத்து மட்டும் அல்ல, அதைப் பாடிய புலவர் உள்நாட்டு அமைப்பைப் பற்றிக் கூறிய கருத்தாகவும் நாம் எடுக்கலாம்.
 
மேலும் புறநானுறு 239 இல், நட்டோரை உயர்பு கூறினன் [நண்பர்களைப் புகழ்ந்து கூறினான்], வலியர் என வழிமொழியலன் [வலிமை யுடையவர்கள் என்பதால் ஒருவரிடம் பணிந்து பேசமாட்டான்], மெலியர் என மீக்கூறலன் [தம்மைவிட வலிமை குறைந்தவர்களிடம் தன்னைப் புகழ்ந்து பேசமாட்டான்], பிறரைத் தான் இரப்பு அறியலன்[பிறரிடம் ஒன்றை ஈயென்று இரப்பதை அறியாதவன்], இரந்தோர்க்கு மறுப்பு அறியலன் [தன்னிடம் இரப்பவர்களுக்கு இல்லையென்று கொடுக்க மறுப்பதை அறியாதவன்], பசி தீர்த்தனன் [அவர்கள் பசியைத் தீர்த்தான், மயக்குடைய மொழி விடுத்தனன் [பிறரை மயக்கும் சொற்களைக் கூறுவதைத் தவிர்த்தான்],
 
போன்ற வரிகள் அன்றைய தமிழர்கள் போற்றி புகழ்ந்த பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது. அந்த பாடலை முடிக்கும் பொழுது இப்படி அவன் எல்லா பாரம்பரியத்தையும் முழுமையாக செய்ததால், அவனை புதைத்தாலும் சரி; அல்லது எரித்தாலும் சரி. எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கட்டும் என்று முடிக்கிறது.
 
இனி நாம் சில தமிழரின் பாரம்பரியங்களை ஒன்று ஒன்றாக விரிவாக பார்ப்போம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 07 தொடரும்
42200196_10212670700785204_4125915325940105216_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=3taqtWgezh0Q7kNvgEJFIK8&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCGqCxTAQt8hZ5Abv3EhThcoNSw2Fw_PoHRKMN5MP0WVQ&oe=665A4D71 42197947_10212670702705252_6337722019072704512_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=_JjgGaPSE20Q7kNvgGl2tuc&_nc_oc=AdiIjRrslPsCdSJy30nkWJ20dTiGHdJ9cgDYFK-y4B1S1j8tQM0dhFOySzWsOtGP1FvUtiHRtmMmZuY9f-h309rB&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD5EaO4_T-4XOgYFrPzWuUy32KzWByoYQ0j6h39NZbTLg&oe=665A3F7C 42242378_10212670704585299_8302297479680884736_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=zRjPbBhLCeMQ7kNvgFNDw7b&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAYd0X6hbhyeZxTQ8HQ4MS0PYVmRmMA-GC3GYg1h-h_Zw&oe=665A35E8 42236103_10212670712025485_8056564868620222464_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Ey-fF8TwzCkQ7kNvgFiKlRT&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCwzZrCIulFTX3Ig38pWAopC1dlBS-GvqlTidDvCQomNw&oe=665A2488 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 07
 
 
ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின், வாழும் சில வழி முறைகளை [way of life] செய் முறையில் எடுத்து கூறுவது, அந்த குடும்பத்தின் அல்லது அந்த சமுதாயத்தின் அல்லது அந்த நாட்டின் பாரம்பரியம் எனலாம். அதே போல அக்காலத்தில் அவரவர் வாழும் இடத்திற்கேற்ற ஒரு வாழ்க்கை தர்மத்தையும் வாழ்வு முறையையும் கொடுக்க ஒருவராலோ, ஒரு சிலராலோ அவரின் அல்லது அவர்களின் சிந்தனையின் படி, அவர் அல்லது அவர்கள் விரும்பும் ஒழுக்கத்தின் படி அல்லது கட்டுப்பாட்டின் படி, ஏற்படுத்தப் பட்டதே மதம் எனலாம். எனவே பெரும் பாலான பாரம்பரியங்களின் மூலத்தை நாம் இன்று மதத்தில் காணலாம். எனவே எம்முடைய பல பாரம்பரியமும், தமிழர் சமயத்தை மூலமாக கொண்டு உள்ளது ஒன்றும் வியப்பில்லை.
 
எம் தமிழர் மதம் ஆரியர், இந்தியா வருகைக்கு முன்னையது. அது அன்று இந்தியா முழுவதும் பரவி இருந்தது. அந்த தமிழர் சமுதாயம். சமூகச் சமத்துவத்தை [egalitarian] தன்னகத்தை கொண்டு இருந்ததுடன், அதிகார வர்க்கம் மற்றும் அடக்குமுறை சாதி முறையால் முடக்கப்பட்டதும் அல்ல. தமிழர்களின் உண்மையான மூல மாதமாக அன்று சைவ சமயம் [Shaivism] இருந்தது. இது பிராமண இந்து சமயத்திற்கும் [Sanskritic Hinduism ] மிகவும் முற்பட்டது. என்றாலும் மூன்றாம் நூற்றாண்டு அளவில் அல்லது அதற்கு சற்று முன், தமிழகம் குடிபெயர்ந்த, வேத, காவிய பாரம்பரியத்தால் [Vedic and epic traditions] ஈர்க்கப் பட்ட பிராமணர்களும் மற்றவர்களும் கூட தமிழ் நிலத்தின், வாழ்வின் ஒரு பகுதியானார்கள். அதே போல, முன்-நவீன கால [Pre-Modern Period] தொடக் கத்தில் இருந்து அல்லது 1500 ஆண்டில் இருந்து, ஐரோப்பிய செல்வாக்கு தமிழர் பண்பாட்டிலும் மதத்திலும் மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
 
உதாரணமாக, யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி, பின் கிறிஸ்தவ மதப் போதகர், உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல, இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை. - பைபிளுடன் தொடங்கு, அது வெற்றி தரவில்லை என்றால், வாளை எடு என்பதாகும் - அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராமவாசிகளை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போக வைத்தது. இப்படித்தான் தமிழர் மதம் மாற்றப்பட்டார்கள். விரும்பியோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட சம்மதத்துடனோ அல்லது இரு சமயத்தையும் ஒப்பிட்டு பார்த்தோ இது நடைபெறவில்லை. முழுக்க முழுக்க பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் இது நடந்தது.
 
என்றாலும் இன்னும் பெரும் பாலான தமிழர் சைவ மதத்தில் இருந்து சைவ சித்தாந்தத்தை பின்பற்றுகிறார்கள். அவர்கள் ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும், மத வெறியர்களாக [religious fanatics] இல்லை. அவர்கள் தங்களுக்கு முடிந்த நேரங்களில் ஆலயம் சென்று தொழுகிறார்கள், ஆனால் கட்டாயம் அல்ல [not compulsory]. உதாரணமாக இஸ்லாத்தில், திருக்குர்ஆனில் நேரடியாகச் சொல்ல விட்டாலும், ஐந்து வேளைத் தொழுகை கடமையாக எல்லா முஸ்லிமும் பின்பற்றுகிறார்கள். மேலும், சைவ சமயத்தில் ஆலயம் வருகைக்கு ஒரு கடுமையான மற்றும் வலுவான விதிகள் [no hard and fast rule] இல்லை. உதாரணமாக சைவ சித்தாந்தம் அருளிய திருமூலர் இறைவனை மனத்துள்ளே வைத்துப் பூசை செய்வதையே பெரிதும் வலியுறுத்துகிறார். அவர் தனது திருமந்திரம் 1823 பாடலில்:
 
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்றும்
 
சிவவாக்கியார் எனும் சித்தர், தனது பாடலில்:
 
"கோயிலும் குளங்களும் கும்பிடும் குலமாரே கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே" என்றும்,
 
'மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜபிக்க வேண்டாம்’ என்று அகத்தியரும்,
 
மனத்திலேயே கோயில் கட்டி வழிபாடு செய்த பூசலார் நாயனாரும் எடுத்துக் காட்டுகளாகும்.
 
தமிழர்கள் ஒரு குழந்தையின் முன்னேறுகிற ஒவ்வொரு முக்கியமான படிகளையும் [Every important step in the progressive life of a child] ஒரு பண்டிகை விழாவாக [festive occasion] ஒரு பாரம்பரியத்துடன் கொண்டாடுகிறார்கள்.
 
ஒருவரின் தனிப்பட்ட சுகாதாரம் [Personal hygiene], மதம், பண்பாடு, மற்றும் இடம் சார்ந்ததாக, பொதுவாக இல்லது இருந்தாலும், சில குழுக்களில், சில மக்கள்களில், கலாச்சார மற்றும் மத காரணிகள் [cultural and religious factors] ஆழ்ந்த தாக்கத்தை இவைகளில் ஏற்படுத்துகின்றன. தமிழர் பாரம்பரியத்திலும் கை சுகாதார நடைமுறைகள் சிலவற்றை காண்கிறோம்.
 
முன்னைய காலங்களில் இடது கை அதிகமாக சுத்தம் செய்ய பாவிப்பதால் [primarily used for personal hygiene purposes], இடது கையால் கொடுப்பதோ வாங்குவதோ ஒரு கௌரவமான செயல் அல்ல என்றும் அது மற்றவரை அவமதிப்பதாகவும் கருதப் பட்டது. ஒரு செத்த வீட்டிற்கு சென்றவர்கள் அல்லது பங்கு பற்றியவர்கள் தம் வீடு சென்றதும், வீட்டிற்குள் புகு முன் முதலில் குளித்து, தம் உடைகளை தோய்த்து தம்மை துப்பரவு செய்து கொள்கிறார்கள். அந்த கால சூழ்நிலையில், எந்த ஒரு தொற்று நோயும் சவ அடக்கத்திலிருந்து பரவாமல் இருக்க, இந்த முறை அன்று பின்பற்ற பட்டது. இவைகள் எல்லாம் ஒரு மரபாக மதம் கலந்து இன்னும் பெரும்பாலும் கிராமப் புறங்களில் பின்பற்றப் பட்டு வருகின்றன.
 
ஒரு மனிதன் இறந்ததும், உடல் பாக்டீரியாவிற்கு [bacteria] எதிராக போராடும் ஆற்றலை இழந்து விடுவதுடன். உடல் சிதையத் [அழுகுதல்] தொடங்குகிறது. முன்னைய காலத்தில் இறந்த உடலை பதப்படுத்துவது [embalming /எம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்பு] கிடையாது, எனவே சவ அடக்கத்தில் பங்கு பற்றியவர்கள் ஒரு பாதுகாப்பு அற்ற நிலையில் இறந்த உடலுடன் சடங்கில் ஈடுபடுகிறார்கள். இதனால் தான் அன்று மரண வீட்டிற்கு போனவர்கள் முதலில் குளித்து பின் மற்ற காரியங்கள் ஆற்றும் மரபு ஏற்பட்டது எனலாம். இது அந்த கால சூழ்நிலைக்கு வசதிக்கு ஏற்ப ஏற்பட்டவை ஆகும். இன்று நிலைமை வேறு, அன்று அந்த சகாப்தத்தில், அதில் ஒரு பயன் இருந்தது, ஆனால் இப்பொழுது அது பொருந்துமா என்பது ஒரு கேள்விக் குறியே, ஏனென்றால் இப்ப சுத்திகரிப்பு மற்றும் தூய்மைப் படுத்தும் நடைமுறைகள் [sanitation and cleanliness practices] முன்னேற்றம் அடைந்து விட்டன.
 
அத்துடன் யாராவது ஒருவர் இறந்தால் குடும்ப உறவுகள் மட்டுமன்றி, அவரின் நேரடி இரத்த சம்பந்தமுள்ளவர்களுக்கும் தீட்டு / துடக்கு [unclean] ஏற்படும் என்பது முன்னோர் நம்பிக்கை. தமிழக மொழிவழக்கில் பெரிதும் பாவிக்கப்படும் "தீட்டு" என்ற சொல்லே ஈழ மொழி வழக்கில் "துடக்கு" என்று கூறப்படுகிறது. அந்த வீட்டில் சில நாட்களுக்கு சமையல் கிடையாது. பொதுவாக உறவினர்கள், அயலவர்கள் உணவு அவர்களுக்கு வழங்குகிறார் கள்.
 
இந்த ஆழ்ந்த துக்க காலத்தில், அவர்களுக்கு ஒரு ஓய்வு கொடுத்து ஒரு ஆறுதல் அளிக்க இந்த மரபு அந்த கால கூட்டு குடும்ப சூழலில் ஏற்பட்டு இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். இந்த துடக்கு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட [quarantine] நிலை போல் எனக்கு தோன்றுகிறது? ஏனென்றால், அந்த முன்னைய காலத்தில் இறப்பிற்க்கான காரணம் சரியாக அவர்களுக்குத் தெரியாது, அன்றைய சூழ் நிலையில் மூளைக்காய்ச்சல், சின்னம்மை, காசநோய், மற்றும் சளிக்காய்ச்சல் [Meningitis, Chicken pox .Tuberculosis (TB), Influenza] இவை போன்ற காற்றால், நீரால், உணவால் பரவக் கூடிய நோயாலும் இறந்து இருக்கலாம். எனவே ஒரு பாதுகாப்பிற்காக அவர்களை தனிமை படுத்த இந்த துடக்கு என்ற நம்பிக்கை மரபு ஏற்பட்டு இருக்கலாம்? தானாக நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பெற [to let the place become sterile itself] ஒரு காலம் தேவை, அதையே துடக்கு காலம் என அன்று வரையறுத்து இருக்கலாம் என நம்புகிறேன்?
 
அது போலவே ஒருவர் சின்னம்மை போன்ற தொற்று நோய்களால் பீடிக்கப் பட்டு இருந்தால், வேப்பிலை கட்டு ஒன்று [a bundle of Neem or margosa leaves] வீட்டின் படலையில், அதை மற்றவர்களுக்கு எடுத்து கூற தொங்க விடுவார்கள். அந்த காலத்திற்கு ஏற்ற தனிமை படுத்துவதற்கான ஒரு புத்திசாலித்தனமான முறை [a brilliant method of isolation] என்று நம்புகிறேன்.
 
அது மட்டும் அல்ல வேப்பிலை ஒரு பாக்டீரியா எதிர்ப்பு, ஒட்டுண்ணி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, நுண்ணிய ஓரணு உயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு [anti bacterial, anti parasitic, anti fungal, anti protozoal and anti viral] சத்தியாகவும் தொழிற் படுகிறது. மேலும் சின்னம்மை நோயால் ஏற்படும் அரிப்பில் இருந்து விடுவிப்பதற்கும், விரைவாக சின்னம்மை நோயில் இருந்து குணமாகவும் உதவுகிறது. இதனால் தானோ என்னவோ அகநானுறு 309 இல் வரி 4 "தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்" என்கிறதோ, யார் அறிவார் பராபரமே !
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 08 தொடரும்
42673223_10212713936906080_4810991368753119232_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=IcPQ5a9T7UsQ7kNvgH4x-Ao&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDvlCurkk2iotiRA2HgrWJuIBiLfXnuXCBMkAqkKt2aHg&oe=665D001D 42681059_10212713939426143_4058131512124506112_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=sce2MjzQLcgQ7kNvgER9xmw&_nc_oc=AdjytoYwYPO8Tt3Ivlj4sp0TAEbs6PYqW42dW18ZigbahYyqyVz0V5Agl4fjJYFumVAwUD7eSIx27PaKxt2v26qt&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD_8aYzsnIR_tgIocViD16M-piaTztNz2UqpUaOlheqMg&oe=665CEB28 42727192_10212713948586372_6540976239639789568_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=XQfdqH16SQYQ7kNvgFKFNhm&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfB-FFDIfomhK5mIfhLubA4n7pdtQec-JpOmxw5sADZfpw&oe=665CF82E 42838112_10212713961626698_33842143269224448_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=vNxWz6foUkkQ7kNvgGM-EFB&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD-BzThZcDMBv50192_awXG02vil84Q4y9RsfBDNo7zKQ&oe=665CE253
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம்பரிய மும்" / பகுதி: 08
 
 
நெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என்றும், இலக்கிய வழக்கில் திலகம் என்றும் பொதுவாக கூறுவர். உதாரணமாக, திருத்தக்கத்தேவர் சிந்தாமணிக் காப்பியத்தில்: "கடலணி திலகம் போலக் கதிர்திரை முளைத்த தன்றே" என்று பாடுகிறார், அதாவது கதிரவன் கடலுக்குப் பொட்டு இட்டது போல் தோன்றியது என்கிறார்.
 
ஒருத்தி நெற்றியில் கண் கொண்ட கொற்றவை போலத் திலகம் இட்டுக் கொண்டாள் என பரிபாடல் 11 வரி 99 ,100 இல், "நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே, கொற் றவை கோலம் கொண்டு, ஓர் பெண்." என்று கூறுகி றது. முதல் பாடலில் அழகையும் இரண்டாவது பாடலில் அதற்கு ஒரு புராணத்தையும் காண்கி றோம்.
 
ஆண் பெண் படைப்பின் அடிப்படை நோக்கம் உயிர் உற்பத்தி என்பதை அறிந்த ஆதி கால மனிதன், அப்படி தாய்மை அடைந்த பெண்களை பெருமைபடுத்தி மதித்தான். அன்று ஒரு இனக் குழுவாக வாழ்ந்த மனிதனை தாய்மை யடைந்த பெண் அரவணைத்து வழி நடத்தி சென்றாள். இதனால் அவள் போற்றப்பட்டு அவளை தெய்வமாக வழிபட்டான், அப்பொழுது அவள் கொற்றவையாக ஒரு சுயாதீனமான தெய்வமாக இருந்தாள். ஆனால் அவள் பின்னர் சிவாவுடன் இணைந்தார் / விவாகம் செய்யப்பட்டார் அதற்கு ஒரு புராணமும் கற்பித்தார்கள் என்பதே உண்மை யாகும்.
 
பத்து பாடல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையும் சூரர மகளிரின் (தெய்வ மகளிரின்) மணம் கமழும் திலகமிட்ட நெற்றியை மறைக்காமல் தலை மாலை இருக்கும்படிக் கூந்தலின் மேல் அணிவித்திருந்தனர் என்பதை "பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திரு நுதல் "என்று பாடுகிறது.
 
இரு புருவங்களுக்கும் மத்தியில் உள்ள இடத்தை ஆக்ஞா சக்கரம் [Ajna Chakra or third-eye chakra] என்கிறது யோகக் கலை. நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் [seat of memory and thinking] உரிய இடம் இது வாகும். அதனால் தான், எம் மனம் துக்கம் அடையும் போது, தலைவலியும் அதிகரிக்கிறது எனலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது, இதனால் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது [prevent the loss of "energy"] என்கிறார்கள்.
 
அத்துடன் நாம் பொட்டு வைக்கும் பொழுது, அந்த இடம் அழுத்தப் படுகிறது. இது முகம் தசைகளுக்கு [face muscles] இரத்தம் வழங்க உதவுகிறது. எனவே, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஸ்டிக்கர் பொட்டுவைப் [sticker Pottu/bindi] பயன் படுத்துதல், அழகு படுத்துவதை தவிர வேறு ஒரு பெரும் பயனையும் அளிக்காது. பொட்டு வைக்கும் அந்த இடத்தின் சிறப்பை திருமூலர் அருளிய திருமந்திரம், தனது பாடல் 666 இல்: "ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில் அடங்கி அடங்கிடும் வாயு அதனுள்",என்று அழகாக கூறுகிறார், அதாவது, உள்ளம் ஒருமைப்பட்டு புருவ மத்தியில் இருந்தால், மூச்சுக் காற்றும் கட்டுப்பட்டு நின்று விடும் என்கிறார். அதையே தமிழ் ஆய்வாளர், மறைமலையடிகள், தாம் எழுதிய “யோக நித்திரை அல்லது அறிதுயில்” என்ற 1922 ஆண்டு நூலில் :" புருவங்களுக்கு நடுவே உட்செல்லும் இடை வெளியில் உயிரின் அறிவு எல்லார்க்கும் முனைத்து விளங்குகிறது” என்கிறார்.
 
சங்க காலத்து மக்கள் வண்ணங்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள். ஆண்களும் பெண்களும் அன்று இடுப்பிற்கு மேல் ஆடை ஒன்றும் அணிவதில்லை. ஆனால் அதற்குப் பதிலாக பல்வேறு வண்ணங்களில் நறுமணச் சாந்துகள் கொண்டு பொதுவாக மகளீர் தமது நெற்றியிலும், தோளிலும், மார்பகங்களிலும் அழகிய ஓவியங்களை வரைந்து கொண் டார்கள். அதை தொய்யில் எனவும் அழைப்பர்.
 
பச்சை குத்துதல், மருதாணிச் சித்திரங்கள் போன்ற உடலோவியம் அதுவாகும். சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகை - 276 இல், நான் இவளது நிமிர்ந்து எழுந்த அழகிய முலைகளில் ஒளி பெறுமாறு தொய்யில் எழுதியதும் இவளைப் பாதுகாப் பவர்கள் முற்றிலும் அறியார் என்ற "உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்" வரியும், அகநானூறு 239 இல், மகளிர் மார்பகத்தில் புள்ளியுடன் கூடிய தொய்யில் எழுதிக் கொண்டிருப்பர். அது அவர்கள் மேனியில் பொறிக்கப்பட்டிருக்கும் சுணங்கு [மகளிர் மேனி யில் தோன்றும் நிறப்பொலிவு அல்லது மேனிநிற மாற்றம்]. அணிகலன்களுடன் திகழ்வர். அவர்கள் வளரும் பிறை நிலாவைத் தொழும் மாலை நேரம். நான் இங்கே இருக்கிறேன் என்ற "புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின், ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம், புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய" வரியும் இதை உறுதி படுத்துகிறது.
 
அதே போல அழகுறப் பூங்கொடி வடிவில் எழுதியதை சோழர் காலத்தைச் சேர்ந்த பெருங்கதை யில்: “பழுதற அழகொடு புனைநலம் புனையாக் குங்குமம் எழுதிக் கோலம் புனைந்த“ என்ற வரி மூலம் காண்கிறோம். எனவே இன்று மக்கள் தங்கள் உடலில் தற்காலிக அல்லது நிரந்தர பச்சை குத்திக் கொள்வதும் மருதாணி [Henna] இட்டுக் கொள்வதும், உடலில் தொய்யில் இடும் அல்லது ஓவியம் வரையும் பண்டைய பாரம்பரியத்தின் தொடர்ச்சியே ஆகும்.
 
இன்று கைவிரல்களிலும், கால்களிலும் மருதாணி பூசுவது ஒரு சிறப்பான பழக்கமாக திகழ்கிறது. இலையின் சாறினால் சிவந்த மரு [மச்சம் மாதிரி யான சிறு புள்ளி / Skin Tag] தோன்றுவதால் மருதாணிக்கு பழைய பெயர் மருதோன்றி ஆகும். என்றாலும் இலக்கியங்களில் சுருக்கமாக தோன்றி என்றே அழைத்தார்கள். எனவே, இயற்கை அழகுப் பொருளான மருதாணி பயன்படுத்தும் வழக்கம் இன்று நேற்று அல்ல. சங்க காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது.
 
மருதாணி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்க முடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணியும் ஒன்று. மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் பெண்கள் இதனை அதிகம் பயன் படுத்தினார்கள். இது எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டதும் ஆகும். சங்க காலத்தில் மருதாணியைப் பற்றிய குறிப்பு ஒன்றை பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான மதுரை கண்ணங்கூத்தனால் எழுதிய கார் நாற்பதில் காண்கிறோம். அதில் "றெரிவனப் புற்றன தோன்றி – வரிவளை, முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும் இன்சொற் பலவு முரைத்து" என்ற வரிகளில் எறிகின்ற காட்டைப் போல செக்கச் சிவந்திருக்கிறது மருதாணி பூக்கள். ஆனாலும் வளையலை நழுவ விட்டது தலைவியின் கைகள் என்கிறது. ஆனால் இதற்கு இன்னும் ஒரு பொருளாக, எரிகின்ற காட்டைப் போன்று செக்கச் சிவந்த மருதாணி அணிந்த கைகளில் வளையல்கள் நழுவி விழுந்தன எனவும் சிலர் கூறுவார். எனவே மெஹந்தி [mehandi] என்ற சொல் வேண்டுமானால் தமிழர்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் மெஹந்தி புதியதல்ல. மிகமிகப் பழையது என்பதே சரியாகும்.
 
மேலும் தமிழர்களுக்கு இடையில் எந்த விழா நடந்தாலும் அது மகிழ்ச்சிகரமாக அல்லது துக்ககரமாக இருந்தாலும் அங்கு மலர் அலங்காரம் முதல் இடத்தை பெரும் வழக்கம் பாரம்பரியமாக இன்னும் தொடர்கிறது. ஒரு உதாரணமாக பெண்கள் கூந்தலில் மலர் சூட்டும் பழம் பழக்கத்தை பார்ப்போம்.
 
ஐங்குறுநூறு 93, பல மலர்கள் சூடிய ஒரு பெண் ணின் கூந்தலை சூழ்ந்து கொண்டு வண்டு மொய்ப் பதை, "பல் பொழில் தாது உண் வெறுக் கைய ஆகி, இவள் போது அவிழ் முச்சி ஊதும் வண்டே" என்று கூறுகிறது. அதே போல புறநானுறு 61, "கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்" என்ற வரிகளால் கொண்டையில் கூழைச்சிண்டு போட்டு தழை போடு கூடிய பூவைச்செருகியிருக்கும் உழத்தியர் என்கிறார்.
 
ஆனால் கணவன் இறந்து விட்டால் கைம்மை அடைந்த மகளிர் பூச்சூட்ட மாட்டார்கள். அந்த மரபு இன்னும் கிராமப்புறங்களில் அப்படியே காணப்படுகிறது. கைம்பெண் மட்டும் அல்ல அன்று கணவன் விலகி இருந்தாலும் மனைவி புது மலர் சூடாமல் இருப்பதை புறநானூறு 147 , உன் மனைவி தலையில் எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டுப் புதுமலர் சூடிக் கொள்ளும்படி நீ அவளிடம் செல். ஆவியர் குடி மக்களின் அரசனே! நீ எனக்குப் பரிசில் தர விரும்பினால் அது நீ உன் மனைவியிடம் செல்வது தான் என பொருள்பட " அம் மா அரிவை, நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல், மண்ணூறு மணியின் மாசு அற மண்ணிப், புது மலர் கஞல இன்று பெயரின், அது மன் எம் பரிசில் ஆவியர் கோவே" என்கிறார் புலவர்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 09 தொடரும்
43220061_10212755543066208_6233096353749139456_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Oza1qkt8-PsQ7kNvgGt5hiR&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDlb0FCISl2Idqtvcno5JbATzq5_6liIi2NzrK-w6I5BA&oe=6661F056 43226079_10212755545946280_7471625017650839552_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=c9FtSez4uuUQ7kNvgG_bQ81&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD87ff8cFv4OV4MIFqZ7fZbnZDZIrbhkolkmAq6Gszijw&oe=6661FBFB 43296409_10212755549266363_7255400773238915072_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=I-z2cb7o8_0Q7kNvgEZJoMU&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA8yJqSSA2uqJFwb1NAhH_ig4krMn06HzQ_-fZg0d1V8g&oe=6661E614 43130978_10212755552186436_2421264014706212864_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=4DoskrVCeigQ7kNvgEjuVat&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBbM04KuXirfdWmVtbhQ-CXtGSxjp1BZ2Vym9uwA-qRFg&oe=6661E66E
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 09
 
 
ஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ, அந்த ஒழுக்கம் வழக்கமாகி, மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்டு, ஒரு சங்கலித் தொடராக காலம் காலமாக காத்து வரப்படும் ஒரு வாழ்க்கை முறையாக, பாரம்பரியமாக மாறுகிறது. எனவே நாம் தமிழரின் பாரம்பரியத்தின் மூலத்தை பரந்த அளவில் அறிய நாம் பழந்தமிழர் வாழ்க்கைக் கோலங்களையும் பண்பாட்டையும் அக்கால வரலாற்றுப் போக்கையும் எடுத்துக்காட்டும் சங்க இலக்கியங்களை ஆராயவேண்டும்.
 
இவ்வகையில், தமிழர்கள் நீரின் மீது கொண்டிருந்த பண்பாட்டு தொடர்பை நிறைய அங்கு காண்கிறோம். அது மட்டும் அல்ல நீரை மையமிட்ட பழமொழிகளும் மரபுத் தொடர்களும் கூட தமிழர்களிடத்தே உண்டு. 'நீரடித்து நீர் விலகாது', 'நீர்மேல் எழுத்து', 'தண்ணீருக்குள் தடம் பிடிப்பவன்', தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே' என்பவை அவற்றுள் சில ஆகும். அத்து டன் நீர் குளிர்ச்சியினையுடையது என்பதனால் நீரைத் 'தண்ணீர்' என்றே அன்றில் இருந்து இன்று வரை தமிழர்கள் வழங்கி வருகின்றனர். அப்படியான நீரில் நீராடுவதே [குளித்தலே] ஒரு சடங்காகவும் தமிழர்களால் கருத்தப்பட்டது. குளித்தல் என்பதின் பொருள் குளிர்வித்தல், அல்லது வெப்பம் தனித்தல் (to get rid of the accumulated heat within our body to get refreshed), எனவே குளியல் அழுக்கை நீக்க மட்டும் அல்ல உடலை குளிர்விக்கவும் என்றாகிறது.
 
மனிதர்களுக்கு உள்ள பல நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். எனவே ஒரு ஒழுங்கு முறையில் உடலை குளிர்விக்க வேண்டும். காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி, வாய் மற்றும் காது வழியாக வெளியேறும் என்று அன்று நம்பினார்கள். இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அன்று குளத்திலோ ஆற்றிலோ பொதுவாக குளித்தார்கள்.
 
உதாரணமாக குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக உடல் நனையத் தொடங்கும். அப்ப வெப்பமும் கீழிருந்து மேல் எழும்பி வெளியே போகும். குளத்தில் இறங்கும் முன் உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்து விட்டு இறங்குவார்கள். இது உச்சந்தலைக்கு கீழ் இருந்து மோலாக எழும் வெப்பத்தால் அதிக சூடு ஏற்படுவதை தடுப்பதற்கான முன் ஏற்பாட்டு நடவடிக்கை ஆகும். என்றாலும் அறிவியல் ரீதியாக உடல் வெப்பம் இலகுவாக தோலினூடாக வெளியேறலாம் என்பதுடன், காலில் இருந்து தொடங்க வேண்டும் என்றோ, இல்லை உச்சியில் இருந்து தொடங்க வேண்டும் என்றோ, எந்த காரணத்தையும் அறிய முடியவில்லை. எனினும் குளிக்க தொடங்கும் பொழுது, அதன் குளிர் அல்லது வெப்ப தன்மையை அறிய, முதலில் காலை நனைப்பது அல்லது அல்லது தலை உச்சியை நனைப்பது அல்லது கையை அலம்புவது ஒரு வழமையாக இருப்பதைக் காண்கிறோம்.
 
‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி' எனும் மூதுரை நீராடலின் இன்றியமையாமையை எமக்கு வலியுறுத்துகிறது. இதனையே ஔவையாரும் “சனி நீராடு” என்று ஆத்திசூடிப் பாடலில் கூறுகிறார். இதை பெரும் பாலோர் " சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு " என பொருள் கொள்கின்றனர், எனினும் சனித்தல் என்னும் தொழிற் பெயரின் அடியாக சனி என்னும் சொல் வருவதால், அதற்கு உண்டாதல், பிறத்தல், தோன்றுதல் என அகராதியில் பொருள் இருப்பதால், சனி நீராடு என்னும் சொல் புதிதாகத் தோன்றும் நீரில் நீராடு எனவும் சிலர் பொருள் கற்பிக்கிறார்கள். எனவே அது ஊற்றுநீர் மற்றும் கிணற்றுநீரைக் குறிக்கலாம். மேலும் சிலர் அதன் பொருளை விடியல், இருள் முற்றும் நீங்காப் பொழுது என்று பொருள்கொண்டு, "வைகறையில் [dawn] நீராடு " என்றும் உரை எழுதுகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 
இனி தமிழ் இலக்கியம் நீராடலை எப்படி கூறுகிறது என்று இரு பாடல்கள் மூலம் பார்ப்போம். முதலாவதாக நதிகளில் புதுவெள்ளம் பெருகி வருகிற காலத்தில் மக்கள் அதிகம் குளித்து மகிழந்ததைக் கூறும் பரிபாடல் என்ற சங்க பாடலில், பாடல் 16 இல், இளம் பரத்தை ஒருத்தி, தன் தோழியர்களுடன் வையையில் நீராடிக்கொண்டிருந்தாள். அவர்களிற் சிலர் பீச்சாங்குழலில் சிவப்புச் சாய நீரை எடுத்து அப்பரத்தையின் மீது பீச்சி அடித்தனர். அச் சிவப்புச் சாயம் குரும்பை போல் விளங்கிய அப் பரத் தையின் மார்பகத்தின் மீது பட்டது. அதனை அவள் முற்றவும் துடையாது, தான் உடுத்திருந்த பெரிய சேலையின் முன்தானையால் ஒற்றிக் கொண்டாள். அதனால் அச்சிவப்புக் கறை அவள் முன்தானையிலும் ஏறிக் கொண்டது. அதேநேரம் தலைவன் அவளை நாடி வந்தான் என்பதை
 
"சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து,
குரும்பை முலைப் பட்ட பூ நீர் துடையாள்,
பெருந்தகை மீளி வருவானைக் கண்டே,
இருந்துகில் தானையின் ஒற்றி"
 
என்ற வரியில் காண்கிறோம். இந்த, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான, பரிபாடலுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் குளியலைப் பற்றி எழுதுகிறாள். இடைப் பட்ட நூற்றாண்டுகளில் குளியல் சமயம் சார்ந்த காரியமாகி விட்டது என்பது இங்கு புலப்படுகிறது.
 
பரிபாடலில் எல்லோரும் எல்லோரையும் பார்க்க முடிகிற பகலில்தான் குளியல் நடை பெறுகிறது. ஆனால்,
 
"கோழி அழைப்பதன் முன்னம், குடைந்து நீராடுவான் போந்தோம்"
 
என்கிறாள் ஆண்டாள், அதாவது கோழி கூவும்முன் – அதாவது இன்னும் இருள் பிரியாத நேரத்தில், அதி காலையில் குளத்தில் நீராட என்கிறது. இவள் தேர்ந்தெடுத்த பொழுது இருளாக இருப்பது பெண்கள் நீராடும் துறையில், ஆண்டாளின் காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகிறது எனலாம். ஆண்டாள் பாடலில் சுட்டிக் காட்டிய பயம் பரிபாடலில் இல்லை. பரிபாடலில் பெண் உடம்பு திறந்து காட்டப்படுகிறது. தைரியம் திறக்கிறது. பயம் மூடுகிறது.
 
பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது என கூறுவார்கள் நாமும் அதைக் கேட்டு நடந்திருப்போம். அதற்கு பின் ஒரு அறிவியல் காரணம் உண்டு. உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காது போகலாம். இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கலாம் என்பதே அந்தக் காரணம் ஆகும்
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]    
 
பகுதி: 10 தொடரும்
43788237_10212808171741892_3281420886057418752_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=-WH_LYyjcCcQ7kNvgEbLDCc&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYA8QtgSHn5nIwV0otC3FBZTq1YBH_GtPdkCMl5c4iQF1A&oe=66673F05 43745397_10212808191902396_8101903028728102912_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=TFsPxK3JaP8Q7kNvgH6Q06s&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCFRGui4o9cLr_mGi5irb6Qd13sNP87qvYPPrn5K_okRQ&oe=66673345
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம்பரிய மும்" / பகுதி: 10
 
 
‘‘உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது, சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’
 
என்கிறது ஒரு பழமொழி, உதியம் என்பது ஒரு வகை மரமாகும். பப்பாளி, முருங்கை போன்று எளிதில் ஒடியும் தன்மை கொண்டது. வைரமில்லாதது. அது பெருத்தால் வீட்டிற்குப் போடும் உத்திரத்திற்குக் [beam] கூட ஆகாது. அது போன்று சரீரமாகிய உடல் பெருத்து விட்டால் அதுவும் ஒன்றுக்கும் உதவாது, நோயின் இருப்பிட மாக மாறிவிடும் என்கிறது.
 
அதே போல சித்தமருத்துவத்தில்
 
“ஒருவேளை உண்பான் யோகி, இரு வேளை உண்பான் போகி (உல்லாசி), மூவேளை உண்பான் ரோகி (வியாதியாளர்), நான்குவேளை உண்பான் பாவி”
 
என்றும் சொல்கிறது. எனவே, மூன்று வேளை உணவு என்பது பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பழக்கம் போலும். எனவே இது இன்றைய பண்பாட்டில் ஏற்பட்ட ஒரு நடை முறையே ஆகும். உலகத்தில் உள்ள எல்லா மக்களும் - மேற்கு நாடு உட்பட - அனைவரும் என்றும் மூன்று முறை உணவு உட்கொள்ள வில்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வேளை உணவு முறையே வழக்கத்தில் இருந்ததாக BBC யின் "history of breakfast, lunch and dinner."என்ற கட்டுரை ஒன்றும் கூறுகிறது.
 
நாம் இன்று கேள்விப்படும் காலை உணவு முறை மனித வரலாற்றின் பெரும் பகுதியில் காணப்படவில்லை. ரோமர்கள் அப்படி ஒன்றை உண்ணவில்லை. அவர்கள் பொதுவாக ஒரு உணவையே மதியம் வேளை உண்டார்கள் என உணவு வரலாற்றாளர் "கரோலின் யெல்தம் [Caroline Yeldham ] கூறு கிறார். பண்டையக்கால சரித்திரத்தை புரட்டி பார்த்தோம் என்றால் அதில் கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களின் வரலாற்று நிகழ்வுகள் பெரும் பகுதியாக நிறைந்திருக்கும். அப்படி பெருமைப்படத்தக்க கல்வி, தடகள கலாச்சாரங்களை [academic and athletic cultures] கொண்ட இந்த மக்கள் ஒரு சமைத்த பெரிய விருந்தாக - முதன்மை உணவாக - ஒரு நேரம் - அதிகமாக, பின்னேரம் அல்லது பிற்பகலில் உட்கொண்டார்கள். ஆகவே, அதிகமாக அவர்கள் இரண்டு உணவு உட்கொண்டார்கள் என நாம் ஊகிக்கலாம். அவர்கள் அதிகமாக, இந்த முதன்மை உணவிற்கு முன் ஒரு சிறிய உணவு எதோ ஒரு நேரத்தில் எடுத்து இருக்கலாம்.
 
"To rise at six, dine at ten, sup at six and go to bed at ten, makes a man live ten times ten.","காலை ஆறுக்கு துயில் எழுந்து, பத்துக்கு [உணவை] உண்டு, பின் ஆறுக்கு [இரா உணவை] உண்டு, பத்துக்கு [நித்திரைக்கு] கட்டிலுக்கு போய், பத்து மடங்கு பத்து வாழவைப்போம் "
 
என்ற பதினாறாம் நுற்றாண்டு பழமொழி ஒன்று என் நினைவுக்கு வருகிறது. எனவே மூன்று முறை உணவு, சித்தமருத்துவத்தில் நாம் பார்த்தவாறு, மிக அண்மையானதே. ஆகவே முன்னைய எமது முதாதையர்கள் அதிகமாக இரு முறையே உட் கொண்டிருப்பார்கள். சூரிய உதயத்திற்கு சற்றுப் பின்பும் சூரிய மறைவிற்கு சற்று முன்பும் ஆகும். இந்த ஊகம் அதிகமாக சரியாகவே இருக்கும். ஏனென்றால் இது பகல் இரவுடன் ஒத்து போவதால். இரவு உணவு முறை, அதிகமாக மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் வந்து இருக்கலாம். நாம்,வரலாற்றில் வளர்ச்சி அடைந்து கொண்டு போகையில், எமது நடவடிக்கையும் நீண்டு பிற்பகலின் பிற்பகுதி மட்டும் சென்றது. ஆகவே அவர்களுக்கு தமது உணவை அதற்குத் தக்கதாக பரப்ப அல்லது நீட்ட வேண்டி இருந்தது.
 
மேலும் பதினெண் சித்தர்களுள் ஒருவரான திரு மூலர் உடம்பைப் பேணுவது இன்றியமையாதது என்று
 
‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார், உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’
 
என வலியுறுத் துகிறார், உணவே நம் உடலை வளர்க்கிறது. நம் உயிரைக் காக்கிறது. அதனால்தான் திருமூலர் அப்படி கூறினார். ஆகவே உடம்பை ஆரோக்கிய மாக வளர்க்க, சாப்பிடும் முறையைப் பற்றி, நமது முன்னோர்கள் வகுத்த உணவுப் பழக்கங்கள் பற்றி, நாம் சற்று அறிய வேண்டி உள்ளது.
உடலுக்கு தேவையான சத்துக்களையும் கனிமங் களையும் கவனத்தில் கொண்டு, அச்சத்துகள் பொதிந்துள்ள உணவின் சுவையையும் அறிந்து, அதன் அடிப்படையில் உணவினை துவர்ப்பு, உவர்ப்பு (உப்பு), இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் கார்ப்பு (காரம்) என அறுசுவைகளாக வகை பிரித்து, நம் முன்னோர்கள் எமக்கு வழிகாட்டி உள்ளார்கள். மேலும் அவர்களின் சமையல் சுவையோடு நில்லாமல் உடல் நலத்தையும் உணவின் மருத்துவ தன்மையையும் முதன்மையாகக் கொண்டு, நீராவியில் வேக வைத்த உணவுகள் [இடியாப்பம், புட்டு, காய்கறி அவியல்], நொதிக்க வைத்த உணவுகள் [கூல், தயிர், இட்லி, பழைய சாதம்] போன்றவை அங்கு காணப்படுகின்றன. அத்துடன் வாழை இலை, தேக்கு இலை போன்ற இயற்கையானதை, உணவு உண்ணும் பாத்திரம் போலும், மண்பானை, மர அகப்பை, செம்பு, பித்தளை மற்றும் இரும்பு பாத்திரங்கள் போன்றவற்றை சமைக்கவும் பயன்படுத்தி உள்ளனர். காலையில் செல்வந்தனாகவும் மதியம் அரசனாகவும் இரவு கஞ்சனாகவும் சாப்பிடு” என்ற பழமொழி எவ்வளவு சாப்பிடலாம் என்பதையும் அழகுற எடுத்து இயம்புகிறது.
 
தமிழர்களின் நாளாந்த பிரதான உணவு மிக எளிமையானது. அது அதிகமாக வேகவைத்த அரிசி [சோறு], சாம்பார் [தமிழ் நாடு] அல்லது வேகவைத்த அரிசி [சோறு], சொதி, மரக் கறி [இலங்கை தமிழர்] ஆகியவற்றுடன், மீன் அல்லது இறைச்சி [அசைவ உணவாளர்களுக்கு], ரசம், தயிர் போன்றவற்றை கொண்டுள்ளது. சிறப்பு சந்தர்ப்பங்களில் - அரிசி, பால், சவ்வரிசி, சேமியா, சக்கரை, ஏலக் காய், முந்திரிப்பருப்பு முதலியவற்றைக் கொண்டு செய்யப்படும், பாயாசம் பரிமாறப் படுகிறது. ஆனால், விருந்தினர்கள் அவர்கள் வீட்டில் வரும் பொழுது அல்லது திருமண வைபவம் நடை பெரும் பொழுது முற்றிலும் வேறு பாடாக, அங்கு இன்சுவை சாப்பாடு பரிமாறப்படும். அதிலும் ஒரு விழா, சடங்கு என்றால் , பாரம்பரிய முறைப்படி தலை வாழை இலையில் பரிமாறப்படும். இங்கு விருந்தினருக்கு முன்னால் இலையின் நுனி - பொதுவாக வலது கை பாவிப்பவர்கள் பெரும்பாலும் இருப்ப தால் - இடது பக்கம் இருக்கக் கூடியதாக வைக்கப் படுகிறது.
 
உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சமாக சேர்க்கக் கூடிய உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றை யெல்லாம், கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில், இலையின் குறுகிய பகுதியான இடப்பக்கத்திலும், உணவு, காய்கறிகள் இவற்றையெல்லம் பெரிய பாகமான வலப்பக்கத்திலும் உள்ளதாக பொதுவாக பரிமாறப்படும். இவர்கள் இனிப்பில் ஆரம்பித்து, உப்பு, புளி, காரம், தாவர வகை கறிகள் சாப்பிட்டு கடைசியாக துவர்ப்பில் அதாவது ஊறுகாய், தயிர், உடலுக்குத் தேவையான அனைத்துச் சுவைகளையும் சேர்த்து முடிப்பது ஒரு வழமையாகும்.
 
வாழை இலையில் உணவு பரிமாறல் 3000 ஆண்டு பழமை வாய்ந்ததாகவும், ஆகக் குறைந்தது கட் டாயம் 1500 ஆண்டுகளுக்கு முன்பே பரவலாக தமிழர் வாழ்விடங்களில் பாவிக்கப்பட்தாகவும் இருக்கலாம் எனவும் அறியப்படுகிறது. ஆகவே இது - வாழையிலையில் பரிமாறல் - ஒரு வரலாற்று ரீதியான காரணத்தையும் கொண்டுள்ளது. வாழை இலையை, அது பெரிய பரப்பளவை கொண்டதாக இருப்பதால், அதில் உணவு பரிமாறல் இலகுவாக இருந்ததாலும், மேலும் தண்ணீரை அதன் மேல் தூவுவது அல்லது தெளிப்பது மூலமே இலகுவாக கழுவக் கூடியதாக இருந்ததாலும், அதனால் சுகாதார மானதாக அமைந்ததாலும், அதே நேரம் இது நீர் உறியாதன்மையை கொண்டிருப்பதாலும் மற்றும் சில நன்மை பயக்கும் காரணங்களாலும் எமது முதாதையர்கள் இதை தெரிந்து எடுத்து இருக்கலாம்.
 
இவ் வாழை இலையில் சூடான உணவுகளை பரிமாறும் போது, அது நல்ல நறு மணத்தை கொடுத்து ரசம் போன்ற சில உணவுகளின் சுவையையும் கூட்டுகிறது. மேலும் புறநானுறு - 168, வரி11-12, கூட,
 
"கூதளங் கவினிய குளவி முன்றில் செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்"
 
என்று கூறுகிறது. அதாவது, - காட்டு மல்லிகை மணக்கும் முற்றத்தில் வளமான குலையையுடைய வாழையின் அகன்ற இலையில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்ணும் - என்கிறது. இவை அனைத்தும் வாழை இலை நீண்ட காலமாக உணவு சாப்பிட ஒரு தட்டு போல் பாவிக்கப் பட்டதை சுட்டிக்காட்டுகிறது.
 
 
கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்
 
பகுதி: 11 தொடரும்
44306292_10212843929235807_3676844892773941248_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=QjJOEJqDOwIQ7kNvgFM_dqp&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYB5pLywU4wjgqOrSkQfun72X0FyquQrjPJXHcPm62jWag&oe=666AED08 44267125_10212843931875873_998085605713772544_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=XaSrTAiiSxgQ7kNvgEHbL19&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAqX4j4jlPvX97sRcY2m7i0gJjh-SyWPNp7dLjo-HklGQ&oe=666AD111 44274899_10212843936795996_7925068685302038528_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=17KUDFPEcOAQ7kNvgEYG6gQ&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDKu5IgVXI1_FzfXb_hRtodzJoVN8hlJ0vndrCT33rAOQ&oe=666AF40D
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 11
 
 
பல பல நூறு ஆண்டு காலமாக சில மத வழக்கங்கள், தமிழர்கள் வாழ்வில் புராணங்களுடன் கலந்து, இன்றளவும் பொதுவாக பின்பற்றப் பட்டு வருகிறது, அதனை மூட நம்பிக்கை என்று சிலரும், பழம் வழக்கங்கள் என்று சிலரும், மரபுகள் என்று சிலரும் கூறுவர். இவை அன்றைய சூழலில் மற்றவர்கள் மனதில் ஒரு பயத்தை உண்டாக்குவதற்க்கான ஒரு மாற்று வழியாக இருந்து இருக்கலாம்? இப்படியான பழம் வழக்கங்கள் இன்னும் தேவையா என பலர் கேள்வி கேட்கலாம்?
 
இன்றைய நவீன, அறிவியல் நடை முறையில் இவைகளின் பங்கு எப்படி இருக்கும் என்பதை நாம் கட்டாயம் அறிய வேண்டும். அப்பொழுது தான் அதற்கு ஏற்றவாறு எம் பழக்க வழக்கங்களையும் அல்லது அதை ஒட்டிய மரபுகளையும் சரிப்படுத்தி, அடுத்த தலை முறைக்கு எமக்கு பெருமை சேர்க்குமாறு கொண்டு செல்ல முடியும். எது எவ்வாறாயினும் பொதுவாக தமிழர்களின் பல சடங்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுக்குப் பின்னால் அறிவியல் சார்ந்த அல்லது ஏதாவது பொதுக் காரணங்கள் இருப்பதை காண்கிறோம். அதனை நீங்கள் அறியும் போது கட்டாயம் உங்களுக்கு அது வியப்பை கொடுக்கும். இப்போது சில விந்தையான மரபுகளின் பின்புலத்தில் இருக்கும் அருமையான காரணங்களைப் பார்ப்போம், இவை ஒருவேளை இன்று தேவை அற்றதாகவும் இருக்கலாம்?
 
பொதுவாக இலக்கியம், கவிதை என்றாலே நமக்கு ஒரு வெறுப்புத்தான். அதுக்கும் எமக்கும் வெகு தூரம் என்று ஒதுங்கி விடுவோம். ஆனால் அவற்றிற்குள் எவ்வளவு விடயங்கள் - வானியல், அறிவி யல், மருத்துவம், கட்டிடவியல், இலக்கணம், கணிதம் இன்னும் பல - புதைத்து இருக்கின்றன என்று பார்க்கும் பொழுது எம்மை வியப்படைய வைக்கிறது. அவை அத்தனையையும் அறிவியலின் படி சரி என சொல்ல வரவில்லை, ஆனால் பல இன்றைய அறிவியலை சார்ந்து இருப்பது எம்மை ஆச்சிரியப்பட வைக்கிறது. அவைகளில் சில சங்க பாடல்களில் கிரகணத்தை பற்றி என்ன கூறி இருக்கிறது என்று பார்ப்போம்.
 
நற்றிணை 377,இல் "அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த பசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல” என்ற வரி : அகன்ற கரிய ஆகாயத்தின் கண்ணே (அரவினாற்) பாம்பினால் சிறிது விழுங்கிக் குறை படுத்தப் பட்ட பசிய கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல என்கிறது இந்த பாடல். எனினும் திங்களைப் பாம்பு விழுங்கியது என்று, புராணக் கதையை எடுத்து கூறினாரோ அல்லது அந்த பாட்டின் பொருளை, பின்னாளில் அப்படி மொழி பெயர்த்தனரோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு, ஏன்னென்றால், அங்கு, அந்த சங்க பாடலில், "அரவுக் குறைபடுத்த" என்றுதான் உள்ளது "அரவு கவ்வ அல்லது விழுங்க " என இல்லை [huge moon with cool rays, in the wide, dark sky, that is reduced by a snake], சிலர் அரவு என்ற சொல்லுக்கு வருத்து என்ற பொருளும் உண்டு என்றும், ஆகவே ஒளியை இருள் கவ்வுதல் என, அதாவது நிறைந்த குளிர்ச்சியான ஒளியை (நிலவை) இருள் கொஞ்சம் கொஞ்சமாகப் பாம்பு இரையை விழுங்குவதைப் போலத் தீண்டி வருத்துகிறது என்கின்றனர், இங்கு ஒரு அறிவியல் விளக்கத்தை காண்கிறோம், அதே போல, பரிபாடல் 11 இல், வரி 9 - 10 இல், "பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில் வாய்ந்த" [The snake hides the full moon rapidly] என்கிறது. அகநானுறு 313 யிலும் "அரவு நுங்கு மதியின்",என்று ஒரு வரி உண்டு, இங்கு "நுங்கு" என்பதற்கு பல பொருள் உண்டு, விழுங்கு, கைக்கொள்ளு, கெடு, ஆரப் பருகு ஆகும். எனவே இதன் பொருள் விழுங்கப்பட்ட அல்லது கைப்பற்றப் பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட [swallowed by or captured by or destroyed by] நிலவு என்கிறது. இங்கு அரவு என்பதற்கு வறுத்து என்று பொருள் எடுத்தால், அது வருத்தி கைப்பற்றப்பட்ட அல்லது சேதப்படுத் தப்பட்ட நிலவு என்று ஆகிறது என்பதை காண்க. இது கிரகணம் என்றால் என்ன என்பதன் முன்னைய விளக்கம் ஆகும்.
 
ஆனால், இன்றைய விஞ்ஞான உலகம் கிரகணத்தை வேறுமாதிரிப் பார்க்கிறது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது, சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால், சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறது. அதே போல, சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில், முழு நிலா நாளில் வரும்போது, சந்திர கிரகணம் உண்டாகிறது என்று இன்று அறிவியல் எமக்கு எடுத்து காட்டுகிறது.
 
கிரகணம் என்று வடமொழிச் சொல்லின் மூல வார்த்தை ஒரு தமிழ் வார்த்தை. அது கரவணம். கரத்தல் = மறைத்தல்! ஆகும். என்றாலும் கிரகணங்கள் பற்றி பல்வேறு நம்பிக்கைகள், கதைகள் தமிழர்கள் மத்தியில் பிராமண இந்து மதத்தின் தாக்கத்தால், அது கொடுத்த புராணங்களால் இன்றும் உண்டு. அது அன்றில் இருந்து இன்றுவரை தொடர்கிறது.
 
ஆனால் புராணக் கதைகள் பெரும்பாலனவைகளைப் படிக்கும் போது கடவுள்மார்கள் மக்களுக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாக சித்தரிக்கப்பட்டு உள்ளதை உணர்கிறேன். அவர்கள் செய்யும் விபரீதமான செயல்கள் எல்லாம் மனிதரே செய்ய அஞ்சும் விலக்கப்பட்ட செயல்களாக இருப்பதையும் காண்கிறேன்.
 
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிழ் மரபுக்கு ‘இந்திரனே! நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. அதன் வழியே புராணங்களும்.
 
அதனாலேயே புராணகதைகள் பெரும்பாலனவைகள் எல்லாம் சரியான கீழ்த்தரக் குணம் இருப்பவர்களாகவும், நமக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழ்ப் பாரம்பரியமோ ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது. நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி. என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே என்கிறது.
 
ஒரு சுப தின த்தின் போது ‘என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய்ப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக!’ என்ற ரீதியில் மணிக் கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அருவருப்பாக மாற்றும்?
 
மற்றும் ஒரு உதாரணமாக, திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம், ''சோமஹ ப்ரதமோ, விவேத கந்தர்வ, விவிதே உத்ரஹ, த்ருதியோ அக்னிஸடே, பதிஸ துரியஸதே, மனுஷ்ய ஜாஹ'', என்று மணமகளை நோக்கி சொல்லப்படும் இந்த மந்திரத்தின் அர்த்தம்-
 
நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான் காவதாக ஒரு மானிடனை அடைகிறாய் ஆகும். முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித்துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு. பொதுவாக புராணங்கள் இந்து சமயத்துக்கு அடிப்படையான வேதங்களைப் பின்பற்றியே எழுதப்பட்டது. அதனால் தான் அதுவும் அது போலவே உள்ளது என நான் நம்புகிறேன்.
 
உதாரணமாக பலர் இன்னும், குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், கிரகணத்தின் போது வீட்டிற்குள் இருக்கிறார்கள். அவர்கள், தம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்தவித குறைபாடும் ஏற்படக்கூடாது என்ற ஒரு பாரம்பரியமாக வந்த ஒரு பயத்தால், அல்லது அதற்கு கற்பித்த புராணக் கதையால், அப்படி தமது பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.
 
அதே போல், அந்த நேரத்தில் கிரகத்தை நேரடியாக பார்க்கவும் மாட்டார்கள். கிரகணத்தின் போது உணவருந்தவோ சமைக்கவோ கூடாது எனவும் நம்புகிறார்கள். மேலும் சில வீடுகளில் ஒவ்வொரு உணவு பண்டத்தின் மீதும் துளசி இலை போடுவார்கள். இது ஒரு ஒரு மூலிகை செடி என்பதால், அந்த உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை ஆகும்.
 
கிரகண நேரத்தில் வெளியே நடமாடக்கூடாது; சாப்பிடக்கூடாது; வானத்தைப் பார்க்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், விஞ்ஞான உலகம், நாசா [nasa] உட்பட கிரகணத்தை வேறு மாதிரிப் பார்க்கிறது. கிரகணங்களால் நம் உடல் நலனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது; அந்த இயற்கை நிகழ்வை பார்த்து ரசிக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். எனவே கிரகணங்களைப் பற்றிய நம்முடைய நம்பிக்கையும் அறிவியலும் வேறு வேறாக இருக்கின்றன. ‘கிரகணம் என்பது வெறும் நிழல் விளையாட்டு’ என்று கண்டறிந்து சொல்லியுள்ளார் கி.பி. 476 இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற இந்திய பண்டைய விஞ்ஞானி / வானியலார். [Aryabhata states that the Moon and planets shine by reflected sunlight and he explains eclipses in terms of shadows cast by and falling on Earth]
 
அதனால், கிரகணம் குறித்து பெரிதாக அச்சப்படத் தேவையில்லை. கிரகண நேரம் மட்டும் அல்ல. எப்போதுமே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. சூரியன் மட்டும் அல்ல, எந்த பிரகாசமான ஒளியையும் எப்போதும் வெறும் கண்ணால் அதிக நேரம் பார்க்கக் கூடாது. பிரகாசமான ஒளியை உற்றுப் பார்க்கும்போது, நம் கண்களில் உள்ள நிறமி [pigment] பாதிக்கப்படும்.
 
காலம் காலமாக விதைக்கப்பட்ட தவறான நம்பிக்கைகளின் விளைவு இது ஆகும். உதாரணமாக, பௌர்ணமி சமயங்களில் உடலுக்கு எப்படி பாதிப்பு கிடையாதோ அதே போல் கிரகணத்தாலும் உடலுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. வழக்கமாக பௌர்ணமியின் போது கடல் அலை சற்று அதிகமாக இருப்பது போலவே, கிரகணத்தின் போதும் கடல் அலையில் மாற்றம் சற்று அதிகமாக இருக்கலாம். என்றாலும் இதனால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 12 தொடரும்
43632649_10212882967611742_7619486100108607488_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6XGbbaQ6IrYQ7kNvgGjV4WU&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAJmkoiA63TiYNTRHPSZaBn2O5-jMvGcuqtKpblLH8NYA&oe=66701532 44738550_10212882984332160_2918777972414480384_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=rW11gN9InvsQ7kNvgE8QkLy&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCB1Fo_n0dTQ0B870yoPazMIbTdRHFLqJc6PoV0RD_mOQ&oe=66703626 
 
44690010_10212882995052428_5464094596977917952_n.jpg?stp=dst-jpg_p403x403&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ZfmMXiX9jQkQ7kNvgGb91S7&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCjmLgUkqHuLaslkc88dmvDzQgVyi8rgqnY3VAZ03VkIg&oe=667018F9 44816829_10212882998812522_5616293467555627008_n.jpg?stp=dst-jpg_p403x403&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=hIRYPythNXMQ7kNvgFK_vS-&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBuVJkJv422J8jcvd3zMQE97laUPgv1ZCxIc13KNE9yUQ&oe=6670375C
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 12
 
 
ஒரு மனிதனின் உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய அடிப்படை தேவைகளில் ஒன்று உறக்கமாகும். அவன் வாழ்வில் பொதுவாக இது மூன்றில் ஒரு பங்கு அது வகுக்கிறது. உடலிலுள்ள அத்தனை உயிரணுக்களை [cells] தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை] பெறவும், அவனுக்கு தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.
 
குறுந்தொகை 6, உறக்கம் [துயில், துஞ்சுதல், நித்திரை] பற்றி கூறுகையில், நடு இரவு இருட்டாக இருக்கின்றது. சொற்கள் அடங்கி விட்டன. வெறுப்பு எதுவும் இன்றி இனிமையாக மக்கள் உறங்கு கின்றனர். அகன்ற உலகமும் உறங்குகின்றது என
 
"நள்ளென் றன்றே யாமம், சொல் அவிந்து இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்றி, நனந்தலை உலகமும் துஞ்சும்"
 
என்கிறது. மேலும் ‘பசிக்கு ருசி வேண்டாம், நித்திரைக்குப் பாய் வேண்டாம்’ என்ற பழமொழியையும் சேர்த்து பார்க்கும் பொழுது, எமக்கு ஒன்று புலப்படுகிறது. அதாவது தூங்குவதற்கு ஏற்ற காலம், பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி குளிர்ச்சி பொருந்திய அமைதியான இரவு என்பதும், அவர்கள் அன்று பாய், அல்லது பாய் போன்ற ஒன்றில் உறங்கினார்கள் என்பதும் தெரியவருகிறது.
 
அதே போல எல்லா உயிர்களும் எதோ ஒரு நேரத்தில் உறங்குகின்றன. உதாரணமாக புறநானூறு, பாடல் 229 , "மைந்துடை யானை கைவைத்து உறங்கவும்" என்ற வரி மூலம் வலிமையான யானையும், துதிக்கையை நிலத்தில் போட்டு உறங்குவதையும், அதே போல புறநானூறு 384 "வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை" என்ற வரியில் நாரை மரத்தின் கிளையில் உறங்குவதையும் காண்கிறோம்.
 
பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை, தமிழரின் தூங்கும் முறையை கூறும் பொழுது, படுக்கும் முன் இறைவனை கை கூப்பி தொழுது, பின் வடக்கு மற்றும் கோண திசை (வட கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு) பக்கம் தலை வைக்காமல், ஒரு போர்வையாவது உடல் மேல் போர்த்தி உறங்குவது நல்ல நெறி என "கிடக்குங்காற் கைகூப்பித் தெய்வந் தொழுது வடக்கொடு கோணந் தலைசெய்யார் மீக்கோள் உடற்கொடுத்துச் சேர்தல் வழி" என்று பாடல் 30 ஆல் கூறுகிறார்.
 
'வராத வாழ்வு வந்தாலும் வடக்கே தலை வைக்ககூடாது' என்றும் 'விடக்கை ஆயினும் வடக்கு ஆகாது' என்றும் சில பழமொழிகளும் உண்டு. அதையே அவர்கள் பாரம்பரியமாக பின்பற்று கிறார்கள் எனினும், மன அழுத்தம், பணிப்பளு, பரபரப்பான வாழ்க்கை முறை [இணையம், அலைபேசி,...], இரவு வேலை என, மிகுந்த நெருக்கடிக்கு இடையே பொழுதை கழிப்பதால், எல்லோரும் அப்படி இன்று ஒழுகுவதில்லை. சிலர் பகலில் உறங்குகின்றனர்.
 
"சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண்"
 
என ஒரு சித்தர் பாடல் கூறுகிறது. அதாவது வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல், இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவ்விக் கொள்ளும் என்கிறது.
 
"வாழ்ந்தாலும் வடக்கே தலைவைக்காதே, கெட்டாலும், கிழக்கே தலைவைக்காதே", என்றும் "வடக்கே தலைவைத்தால் வாடை காத்து, தெக்கே தலைவைத்தால் தென்றல் காத்து" என்றும் சொல்லும் ஒரு வழக்கம் எம் மூதாதையர்களிடம் உண்டு. நம் உடலில் ஒரு காந்த ஆற்றல் இருப்பதாகவும், நமது தலை பகுதி வடதுருவமாக செயல்படுகிறது என்றும், பூமியின் வடதுருவமும் நம் உடலில் உள்ள வடதுருவமும் ஒன்றை ஒன்று எதிர்க்கும் என்பதால், நமக்கு நிம்மதியான தூக்கம் இருக்காது என்றும் நம்புகிறார்கள். சமீப கால ஆய்வு படுக்கும் திசை, ஆரோக்கியம், தூக்கத்தின் தரம் இவைகளுக்கு இடையில் ஒரு தொடர்பு இருப்பதை காட்டுகிறது [a significant correlation between the direction of sleep, health, and the quality of sleep].
 
மேலும் ஒரு புது ஆய்வு, சில பாலூட்டிகள் மேய்வதும் உறங்குவதும் வடக்கில் அல்லது தெற்கில் [some mammals graze and sleep facing north or south direction and the earth’s magnetic field is causing this.] என கண்டு பிடித்து உள்ளார்கள். இதற்கு காரணம் பூமியின் காந்தப்புலம் என்கின்றனர். அதை தொடர்ந்து இன்னும் ஒரு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கிழக்கு- மேற்கு நிலையில் மனிதன் தூங்கினால், அவன் வடக்கு- தெற்கு நிலையில் தூங்குபவரை விட ஒப்பீட்டு அளவில் குறைந்த குறுகிய விரைவு விழி இயக்க [விரைவான கண் இயக்கங்கள்] தூக்க சுழற்சிக்கு உள்ளாவ தாகவும் கண்டு பிடித்து உள்ளார்கள் [ it was found that the human sleeping in the East-west position has lesser shorter rapid eye movement (REM) sleep cycles when compared to people sleeping in the north-south direction].
 
நாம் தூங்கும் பொழுது நான்கு நிலைகள் சுழற்சியாக மீண்டும் மீண்டும் வருகின்றன. முதல் மூன்று நிலைகளிலும் நம் விழி அசைவற்ற [Non REM]ஆழ் நிலை தூக்கத்தில் இருக்கும். நான்காவது நிலையை அடையும் பொழுது நம் விழிகளில் அசைவு இருக்கும் [REM]. மொத்த துக்காதில் 25% மேலாக நாம் இந்த ஆர்‌ இ‌ எம் (REM)நிலையில் கழிக்கிறோம். REM அல்லது NREMன் சுழற்சி 90 நிமிடங்கள் வரை இருக்கலாம். NREMன் கடைசி கட்டத்திலேயே உங்கள் உடல் முழுமையா உறக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து 100% தளர்ந்திருக்கும். சுயநினைவும் முழுசா மங்கியிருக்கும். NREM நிலை முடிந்து REM நிலை தொடங்கும் போது உங்கள் கண்கள் கொஞ்சம் இயங்கும். கனவுகளும் தோன்றும், ஆனால் இன்னும் உடல் தளர்ச்சி நிலையிலேயே இருக்கும். எனவே எந்த நிலையில் நீங்கள் படுக்கிறோம் என்பதில், சில நன்மைகளை உங்கள் ஆரோக்கியத்தில் பெறக்கூடியதாக இருக்கும். உதாரணமாக, அது விரைவு விழி இயக்கத்தை [REM] கூட்டவும் மற்றும் உங்கள் உடலின் ஆற்றல் ஓட்டத்தை கூட்டவும் துணை புரியும். [The position in which you sleep has some beneficial effect on your health like it increases REM and the energy flow of your body]. இன்னும் இந்த ஆய்வு நடைபெறுகிறது, இது வடக்கு தெற்கு, உறங்குவதற்கு ஒரு சிறந்த நிலையாக காட்டுகிறது. ஆனால் தலை வடக்கா, கிழக்கா என்பதில் ஒரு வேறுபாடும் இல்லை.
 
உறங்குவதற்கு தெற்கு திசை மிகச்சிறப்பான திசையாக, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இது ஆய்வின் ஒரு பகுதியுடன் ஒத்து போகிறது, ஆனால் மற்றவை முரணாகின்றன, உதாரணமாக, ஆசாரக்கோவை கூறுவது போல, வாஸ்து சாஸ்திரமும் வடக்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லதல்ல என கூறுகிறது. ஒரு மொழியைப் பேசுவோரின் பண்டைய அல்லது பழம் பண் பாடு, வரலாறு, விஞ்ஞான அறிவு போன்றவற்றை அவர்கள் மொழியிலுள்ள சொற்கள் நன்றாகப் புலப்படுத்தும். இதன் அடிப்படையில் நாம் நோக்கினால், உதாரணமாக, தமிழ்நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் பழங்காலத்தில் அரணாக இருந்தது. எனவே, ஊடுருவல்கள் எல்லாம் அங்கு வடக்கிலிருந்தே ஏற்பட வாய்ப்பு அதிகம். மேலும் நான்கு திசையில் இருந்தும் வீசும் காற்றுக்கும் தமிழில் வேறு வேறு பெயருண்டு. அவை பொதுவாக காரண பெயர்களாக இருக்கவே வாய்ப்பு உண்டு. வடக்கில் இருந்து வீசும் காற்றை வாடை என்கின்றனர். இது மக்களுக்கும் மற்றும் விலங்கு, பறவைகள் முதலிய வற்றுக்கும் ஒவ்வாத குளிர் காற்று ஆகும். எனவே ஊடுருவல்கள், வாடைக்காற்று இவை இரண்டின் காரணமாகத் தமிழ் மக்கள் வட திசையை வெறுத்து வந்தனர் எனலாம். பழங்காலத்தில் வாழ்ந்த சான்றோர் மேற் கொண்ட ஒரு வழக்கு வடக்கிருத்தல் எனப் படும்.
 
வடக்கிருத்தல் என்பது பண்டைய தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் ஒன்றாகும். இதனை ஆடவர் மேற் கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தல் ஆகும்.
 
எனவே துக்ககரமான நிகழ்விற்கு, தனக்கு பிடிக்காத வடக்கு திசை நோக்கி இருப்பதை காண்கிறோம். இவை எல்லாம் தமிழர் விரும்பாத திசை வடக்கு என்பதை காட்டுகிறது, இதை உறுதிப் படுத்துவது போல ‘வாழ்ந்தவன் வடக்குப் போகான்...' என்ற பழமொழியையும் காண்கிறோம், இவைகள் அவன் மனதில் பதித்த தாக்கம் 'மதியார் வாசல் மிதியாதே' என்று ஒளவையார் கூட தெளிவாக கூறியது போல, ஒரு வேளை வடக்கில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கலாம். அதுவே வடக்கில் தலை வைத்து படுக்காததிற்கும் காரணமாக இருந்திருக்கலாம் என் நம்புகிறேன். ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை தமக்கு விரும்பாத வடக்கு - தெற்கு நோக்கி வைப்பதும், அவர்களின் அந்த வடக்கு திசையின் வெறுப்பே ஆகும் போல் எனக்குப் புரிகிறது.
 
உதாரணமாக, தமிழரின் முன்னைய நாகரிகமான சிந்து வெளி நகரத்தில் அகழாய்வு செய்கையில் அங்கு இடுகாடு [burial site] மூன்று விதமாக உள்ளது கண்டு பிடிக்கப் பட்டது. அதில் முதலாவது வகையில் இறந்தவரின் உடல் மல்லார்ந்த படுக்கை நிலையில், சவக்குழிகள் வடக்கு தெற்காக வெட்டப் பட்டு, தலைகளை வடக்குப் பக்கமாகத் திருப்பி வைத்து, புதைத்துள்ளது தெரிய வந்தது. இது அவர்களின் வெறுப்பு குறைந்தது 4500 ஆண்டுகள் பழமையானது என்பதை மேலும் எடுத்துக் காட்டுகிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 13 தொடரும்
44845522_10212888731875845_6412497996696518656_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=MC4ZzJoVm0sQ7kNvgFsZK0H&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAdRjyalHcRxHkUaHlC5NJ258mf4YHYD7-UWYI5Ngg-nQ&oe=6673648D 44813396_10212888733715891_6508851177050865664_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6kkb3oaix24Q7kNvgGP-bzo&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCHPvyJvrxIvH-VaDSGiRNT6sUTlUot0l9Jbw2ICJyr8w&oe=66738147 44730761_10212888738636014_4753149240291622912_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=VlipbacON1sQ7kNvgEOyd5k&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBbcFZQi3iSV0d4bl0oPmhzAntT_G5o6eIywfAd3BxAOQ&oe=6673689F 44824240_10212888734955922_6541210946717614080_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=rYD-OFDzonAQ7kNvgEQXkD2&_nc_oc=AdhKlKRPzE20B1QCEIwSt0cRaE-5KJxHc1Kkd61UesJiwT9anN8lK8RQndoYtDPpt0_4jdW-6Mtq9Xvo5A0XH2_u&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYA2QK9EqA3ItlQATMhTjUtgxV4y7gpL8LI0Y-RZI5jVnQ&oe=66738EE3 No photo description available.
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம் பரிய மும்" / பகுதி: 13
 
இன்று தமிழர்களின் நிலைப்பாடு சற்று மாறுபடுகிறது. இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றில் பல்வகைக் கலப்பினை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்றவாறு பாரம்பரியத்தை சரிப்படுத்தி வாழ்கின்றனர். இன்று உலகம் சுருங்கி விட்டது, அதில் வாழும் மக்கள் அனைவரும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" போல, கணியன் பூங்குன்றனார் பாடியது போல, எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான் என இன்று ஒன்றாகி விட்டனர்.
 
இத்தகைய சிந்தனை மிக சிறந்தது எனினும் எம் இனம், மொழி, பண்பாடு முதலியவற்றிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி நாம் அவற்றை சிதைய விடாமல் காப்பாற்ற வேண்டியதும் எம் கடமையாகும். இல்லா விட்டால் எம் அடையாளமே தொலைந்து விடும். நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது, ஒருவருக்கு ஒருவர் வணக்கம் கூறிக்கொள்வது உலக மாந்தர் இயல்பு ஆகும். அவரவர் தம் மொழிக்கும் பண்பாட்டிற்கும் ஏற்றவாறு இச்செயலை மேற்கொள்கின்றனர். இதில் ‘வணக்கம்’ எனக் கூறுவது தமிழர் மரபாகும்.
 
தமிழர்களின் போற்றுதலுக்குரிய சொல்லாக ‘வணக்கம்’ அமைந்துள்ளது. மன உணர்வுடன் ஒன்றிணைந்த பல்வகை சூழல்களை உணர்த்துவதற்கு இச்சொல் கையாளப்படுகின்றது. ‘வணக்கம்’ என்னும் சொல் மிக உயர்ந்த பொருளி னைக் கொண்டுள்ள சொல்லாகும். தமிழர்களின் சிந்த னைக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப இச்சொல் அமைந்துள்ளது. ‘வணக்கம்’ என்னும் சொல் வணங்குதல், தொழுதல், போற்றுதல், வாழ்த்துதல், வரவேற்றல், அன்பொழுகல், நன்றி உரைத்தல் போன்ற பல் வகைப் பொருள்களை உணர்த்தி நிற்கிறது. இதைத், தமிழர் மட்டும் அல்ல, இலங்கை இந்தியா வாழும் பிற மக்களும் இரு கை கூப்பி சொல்வார்கள். இதையே இஸ்லாமியர்கள் சலாம் என்றும், மேற்கத்தியர்கள் கை குலுக்கி, ‘குட் மார்னிங்’ (Good morning), குட் ஆஃப்டர்னூன் (Good afternoon), 'குட் ஈவினிங்' (Good evening) என்றும், ஜப்பானியர்கள் இடுப்பு வரை குனிந்தும் சொல்வார்கள். வா + இணக்கம் = வணக்கம். தங்கள் வரவை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்பதே இதன் பொருள் என நம்புகிறேன்.
 
ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்ததும், இன்று பெரும் பகுதி மறைந்து விட்டதுமான, ஒரு தமிழ் இலக்கண நூலான, தமிழ்நெறி விளக்கம், பெரியவர் ஒருவரைக் கண்டவுடன் வணக்கம் சொல்வதும் அதற்கு அவர் பதில் வணக்கம் சொல்லுவதும் இயல்பாகும் என ‘வாழ்வதி யாவது கொல்லோ வான்புகழ்ச் சூழ்கழ லண்ண னெஞ்சம் ஆழ்துய ரெய்த வணங்கிய வணங்க’ என்று பாடுகிறது. எனினும் இன்று இச்சொல்லின் பயன்பாட்டில் பிற இனத்தவர் பண்பாடு சர்வசாதாரணமாக கலந்து, காலையில் சந்திக்கும் போது ‘குட் மார்னிங்’ / Good Morning, மாலை நேரச் சந்திப்பின் போது 'குட் ஈவினிங்' / Good Evening, பின்னர் இரவின்போது 'குட் நைட்' / Good Night என, பெருமைக்குரிய வணக்கத்திற்கு பதிலாக, சொல்லும் வழக்கத்தை பெரும் பாலான தமிழர்கள் கொண்டுள்ளனர். இது தமிழரின் பண்பாட்டுடன் ஆங்கிலேயர் பண்பாடு கலப்புற்றதால் ஏற்பட்ட ஒரு விளைவு ஆகும்.
 
எனவே நாம் இனியாவது, நண்பர்கள். உறவினர்கள். விருத்தினர்கள். மற்றும் அனைவரையும் வரவேற்கும் போது, இருகரங்களையும் இதயத்தின் முன் நிறுத்தி, கைகளை கூப்பி, தலை தாழ்த்தி வரவேற்போம். நம் கைகளை இதயத்தின் முன் நிறுத்துவதால் இதயபூர்வமாகவும். தலை தாழ்த்துவதால் பணிவுடனும். வரவேற்கின்றோம் என்று இதன் பொருள்படும்.
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டத் திருக்குறள்: 09 உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்கா விட்டால் என்ன நிலையோ அதே நிலை தான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும் என்று
 
"கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை"
 
எனக் கூறுகிறது. என்றாலும் ஒருவரை வணக்கம் கூறி வரவேற்பதை பண்டைய இலக்கியங்களில் காண முடியவில்லை. சங்கம் மருவிய கால சிலப்பதிகாரத்தில் கூட, சேர மன்னர் தன் குடும்பத்துடன் கானகத்தை காணச் சென்ற போது மக்கள் அனைவரும் வாழ்த்து சொன்னார்களே தவிர வணக்கம் சொல்லவில்லை. 'வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை ஊழிதொ றூழி யுலகங் காக்கென' அதாவது எங்கள் மன்னவர் வாழ்க, பண்புகளில் பெரிய மனிதரான எங்கள் மன்னன், பல ஊழிகளிலும் இவ்வுலகத்தை காப்பதற்காக வாழ்க என்று தான் சொன்னார்கள். எனினும் அதன் பின் வந்த மணிமேகலையில் "தானம் தாங்கிச் சீலம் தலைநின்று போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள் புத்த தன்ம சங்கம் என்னும் முத்திற மணியை மும்மையின் வணங்கிச்" என்ற வரியை காண்கிறோம்.
 
அங்கு மும்மையின் வணங்கி என்பதன் பொருள் மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் வணங்குதல் ஆகும். இங்கு தமிழர் பாரம்பரியமாக இன்று உள்ள வணக்கத்தின் உண்மை அர்த்தத்தை அறிகிறோம். அதன் பின் ஒன்பதாம் நூற்றாண்டு மாணிக்கவாசகரின் சிவபுராணத்தில் "சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி," என்ற வரியைக் காண்கிறோம், மீண்டும் அதன் பின் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதியில் "கமலாலயனும்,மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி என்றும்" என்ற வரியைக் காண்கிறோம். எனவே முதலில் இறை வணக்கத்துடன் ஆரம்பித்து பின்னாளில் அதே பாணியில் விருந்தினரை, உறவினரை, நண்பரை வணங்கி வரவேற்றுகும் பாரம்பரியம் தோன்றி இருக்கலாம் என்று நம்புகிறேன்.
 
வணக்கம் என்பதும் ஒரு முத்திரை. கைகளைக் குவித்து வணங்கும் போது, முக்கியமாக எதிரில் நிற்பவரைப் பற்றிய உங்கள் விருப்பு வெறுப்புகள் மறைகின்றன. அப்போது அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தையும் உங்களால் உணர முடிவதால், உங்களால் உண்மையாகவே வணங்க முடிகிறது. இது ஒரு அன்பு தரும் யோகா என்றும் கூறலாம். எனவே இது உண்மையான நட்ப்பை காட்டி வர வேற்கும் ஒரு நல்ல சைகை ஆகும்.
 
உதாரண மாக கை குலுக்கும் பொழுது, நீங்கள் மற்றவரின் கையை தொடுகிறீர்கள். இது ஒரு நட்பு சைகையாக இருந்தாலும், சிலவேளை தொற்று கிருமிகள் [தீய உயிரிகளை (germs)] உங்களுக்கு அவர்களை தொடுவதன் மூலம் கடத்தப் படலாம். அது மட்டும் அல்ல , சிலவேளை அவரின் கை வியர்வை நிறைந்தோ அல்லது துப்பரவற்றோ இருக்கலாம். எனவே வணக்கம் மிகவும் சுத்தமான மற்றும் எளிமையான முறையாகும்.
 
 
மேலும் நாம் இரு கைகளாலும் வணங்கும் பொழுது, பத்து கை விரல்களின் நுனிகளும் ஒன்றோடு ஒன்று தொடுகின்றன அல்லது இணைக்கப் படுகிறது. இப்படியான பயிற்சியை யோகாவில் ஹாகினி முத்திரை [Hakini Mudra] என்பர். சமஸ்கிருதத்தில் ஹாகினி என்றால் சக்தி அல்லது ஆட்சி ["power" or "rule,"] எனப் பொருள்படும்.
 
பொதுவாக யோகாசனம் ஒரு அற்புதமான கலை ஆகும். தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும் என்பர். அப்படியான யோகாவில் ஒரு அம்சம் தான் இந்த கை விரல்களால் செய்யும் முத்திரைகள் ஆகும். நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள் என்றும் நரம்புகளுடன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளை இந்த முத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது.
 
இந்த ஹாகினி முத்திரை நினைவு ஆற்றலை அதிகரிக்கிறது, ஒருமித்த கவனத்தை அல்லது ஒருமுகச் சிந்தனையை அதிகரிக்கிறது, மூளை வளர்க்கிறது, மூளையின் வலது மற்றும் இடது அரைக்கோளங்களை ஒருங்கிணைக்கிறது, அமைதியையும் ஊக்குவிக்கிறது என யோகாவில் சொல்லப் படுகிறது [boosts memory power, increases concentration, energizes the brain, coordinates the right and left hemispheres of the brain, and promotes calmness].
 
எனவே, இது நம் கண்கள், காதுகள் மற்றும் மூளையின் நினைவு நரம்புகளைத் தூண்டுகின்றன என்றும் நம்புகிறார்கள். இவை எல்லா வற்றையும் எமக்கு தெரியாமலே, எமது பாரம்பரிய வணக்கம் மௌனமாக செய்து முடிப்பது அதன் இன்னும் ஒரு சிறப்பாகும்!!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 14 தொடரும்
44859415_10212897621858089_8461689303787896832_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=9z5XuoQPlYUQ7kNvgHe0lOt&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAhtscWrDV-G7Xf-S1Ygok0cTo1k6gHVlXqxJtYRzkvaQ&oe=667DB1B8 44934536_10212897581097070_7623947733610528768_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Bae0F49n9X4Q7kNvgGnpPEI&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDFwgS0APntXIsrbuJVn4Dib4MhA2FYazwt5HBD8McaZQ&oe=667D80A1 44916250_10212897586577207_8075740643466412032_n.jpg?stp=dst-jpg_p600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=wpRzPy6U8LcQ7kNvgFM7KP_&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDCfRVrgkICoAqel-G70kXSgxu2YkMh-GzHkIstLw0_gA&oe=667D97C0
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 14
 
 
இவ்வுலகம் தோன்றி படிப்படியாக மனித இனம் தோன்றியது போல, மனித இனம் தோன்றி , அது மெல்ல மெல்ல வளர, அவர்களுக்கு இடையில் பல பல பழக்க வழக்கங்களும் அன்றைய சூழ்நிலைக்கும் அவர்களின் அறிவு ஆற்றலுக்கும் ஏற்றவாறு தோன்றின, அவ்வற்றில் சில அவர்களின் சந்ததியினுடாக பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்தன. அந்த முன்னையோர்களின் மரபே இன்று பாரம்பரியமாக நிற்கிறது எனலாம்.
 
அவ்வாறு தோன்றிய பழக்க வழக்கங்களில் சில இன்றும் அப்படியே அல்லது தேவைக்கும் அறிவிற்கும் ஏற்ப சற்று மாறுபட்டு மக்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் சர்வசாதாரணமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த, தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கங்கள் பல இலக்கியங்களில், காலத்தின் கண்ணாடியாக, அங்கங்கே பிரதி பலிப்பதையும் காண்கிறோம். அவ்வாறு பிரதிபலிக்கும் பழக்கங்களில் கண்ணேறு கழித்தல் ஒரு முக் கிய இடத்தை வகுக்கிறது. அது மட்டும் அல்ல அவர்களுக்கு இடையில் இன்று நிலவும் பழமொழியிலும் காணக் கூடியதாக உள்ளது.
 
உதாரணமாக “கல்லடி பட்டாலும் கண்ணடிப் படக்கூடாது” , ‘விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது’ என்பதை கூறலாம். கண்ணேறு கழிக்கும் முறையை திருஷ்டி கழித்தல் என்றும் கூறுவர். இந்த மரபை குறைந்தது கி மு 3000 இல் இருந்து அறியக் கூடியதாக உள்ளது.
 
உதாரணமாக சுமேரியா, பாபிலோனிய மற்றும் அசீரியன் கியூனிஃபார்ம் பதிவுகளில் [Sumerian, Babylonian and Assyrian cuneiform texts] இவை காணப் படுகின்றன. தீய கண்ணால் வரும் சாபத்தை அணைக்க பிரார்த்தனைகள் பொறிக்கப்பட்ட கல் வெட்டு களிமண் பலகை [tablet contains a incantation to counter the “evil eye,”] அங்கு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது, அதே போல ஜிப்சத்தால் செய்யப்பட்ட தீய கண் உருவச் சிலைகளும் அல்லது கண் தாயத்துகளும் [Eye idols carved out of gypsum or eye amulets] தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தெற்கு மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த சுமேரியர்களின் 'igi hul' என அழைக்கப்படும் கண்ணேறுக்கான சாபத்தினை எதிர்க்கும் நடவடிக்கையை அல்லது அவர்களின் ஒரு கண்ணேறு கழிக்கும் பழக்கத்தை காட்டுகிறது.
 
அது மட்டும் அல்ல, சுமேரிய இலக்கியத்தில், இந்த தீய கண்ணின் செயல் பாட்டையும் காண்கிறோம். உதாரணமாக , தீய கண் பார்வையால் இரு வெவேறு நிகழ்வுகளில் மரணத்தை ஏற்படுத்துவதையும் [“the eye of death” / "i-bi2 uš2-a"] காண்கிறோம்.
 
முதலாவதில் அணுன்னா தெய்வங்களின் தீய கண்களால், ஈனன்னா பாதிப்பு அடைகிறார் [Inanna is the victim of the evil eye of the Anunna-gods, the seven judges]. இங்கே ஈனன்னா பாதாளத்தின் [under world of the dead / netherworld] ஏழாவது வாசலை அடைந்தபின் இந்த காட்சி நடைபெற்றது. அணுன்னா தெய்வங்கள் என அழைக்கப்படும் ஏழு நீதிபதிகளும் அவளுக்கு எதிராக தீர்ப்பை வழங்கி, அவளை பார்த்தனர் -அது மரணத்தின் கண், அவளுடன் கதைத்தனர்- அது நோய் தரும் பேச்சு, அவளுக்கு அவர்கள் கூச்சலிட் டனர், அது நரகத்தின் காலவரம்பிலா தண்டனை சத்தம், பாதிக்கப்பட்ட பெண் [ஈனன்னா] ஒரு பிணமாக மாறியது. சடலம் ஒரு கொக்கி மீது தொங் கியது என்று விபரிக்கப் பட்டுள்ளது. [They looked at her – it was the eye of death,They spoke to her – it was the speech of illness, They shouted at her – it was the shout of damnation, The afflicted woman became a corpse, The corpse was hung on a hook / igi mu-ši-in-bar i-bi2 uš2-a-kam, inim i-ne-ne inim lipiš gig-ga-am3, gu3 i-ne-de2 gu3 nam-tag-tag-ga-am3, munus tur5-ra uzu niĝ2 sag3-ga-še3 ba-an-kur9, uzu niĝ2 sag3-ga ĝiš, gag-ta lu2 ba-da-an-la2].
 
இரண்டாவதில், ஈனன்னாவே தனது தீய கண்ணால் தனது கணவர் துமுழியை கொலை செய்யும் குற்றம் புரிகிறார். [Inanna is the visual perpetrator, killing her husband, Dumuzi, with her eye of death]. சுமேரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதை இன்றைய ஆய்வுகள் எடுத்து காட்டுகின்றன. மேலும் இன்றைய சிரியாவில் உள்ள டெல் பிராக் என்னும் இடத்தில் அல்லது பண்டைய வடக்கு மெசொப்பொத்தேமியாவில் [Tall Birāk, also spelled Tell Brak, ancient site located in present Syria -ancient northern Mesopotamia] ஆயிரக்கணக்கான கண் உருவங்கள் கண்டுபிடிக்கப் பட்டது. இதனால், அந்த இடத்தை கண் ஆலயம் என அழைக்கிறார்கள் [One of the most interesting discoveries at Birāk was the Eye Temple (c. 3000), so named because of the thousands of small stone “eye idols” found there]. இந்த கண் சிலைகள் ஒரு பரிகாரமாக, அங்கு காணிக்கை வழங்கப் பட்டதாக அதிகமாக இருக்கலாம். அது மட்டும் அல்ல, ஸ்பெயின் குகைகளில் 10,000 ஆண்டு பழமைவாய்ந்த தீய கண்ணைத் துடைக்கும் அல்லது கண்ணேறு கழித்தலை சித்தரிக்கும் சுவர் ஓவிய சின்னங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது, இந்த மனித பழக்கத்தின் பழமையை மேலும் பறைசாற்றுகிறது [10,000 years old Drawings have been found on cave walls in Spain depicting symbols to ward off the evil eye].
 
இந்தியாவில் கிடைக்கப் பெற்ற மிகவும் பழைய நூல் ரிக் வேதம் ஆகும், அதில் பத்தாவது மண்டலத்தில், அதிகாரம் (சூக்தம்) 85 இல். பாடல் (சுலோகம்) 44 இல், கண்ணேறு பற்றி "மணமகளே உன் கணவனை ஒரு தீய கண்கொண்டு பார்க்க வேண்டாம், அவனுக்கு என்றுமே விரோதமாக இருக்காதே" ["O Bride ! May you NEVER look your husband with an EVIL EYE; never be hostile to him;"] என்ற ஒரு குறிப்பு உண்டு.
 
இது கி மு 1500 க்கும் கி மு 1200 க்கும் இடையில் இயற்றப்பட்டு இருக்கலாம். எனினும் "யாதும் ஊரே ; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன" என தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை, துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான் என்ற சங்க பாடல்களில், எனது தேடலில், கண்ணேறுவை காண முடியவில்லை.
 
'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்ற வரி அதற்கு விடையோ என்று எண்ணத் தோன்றுகிறது, எனினும் தாயத்து கட்டுதலை அங்கு காண்கிறோம். மகளை முன்னிலையாகக் கொண்ட பட்டினத்தார் பாடலில், அருள் அருள் புலம்பலில்,
 
"தொண்ணூற்று அறுவ ரையும் சுட்டான் துரிசு அறவே;
கண்ணேறு பட்டதடி கருவேர் அறுத்தாண்டி!"
 
என்ற வரியும்,
 
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறா யிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு,...."
 
என்று இறைவன் மேல் கண்ணேறு பட்டு விடுமோ எனக் கருதி பெரியாழ்வார் பாடிய வரியும் அதன் பின் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளாரின் (அக்டோபர் 5, 1823 - சனவரி 30, 1873) திருவருட் பாவில்
 
‘பண்ணேறு மொழியடியார் பரவி வாழ்த் தும் பாதமலர் அழகினையிப் பாவி பார்க்கின் கண்ணேறு படுமென்றோ கனவிலேனும் காட்டென் றாற் காட்டுகிலாய் கருணையீதோ.'
 
என்ற வரியும் கண்ணேறு செய்தியை கூறுகின்றன. எனவே இவை பிராமண இந்து மதம் சைவத்துக்குள் அல்லது தமிழர் மதத்துக்குள் ஊடுருவியதால் வந்த பழக்க வழக்கமோ என்று எண்ணத் தோன்றுகிறது?
 
இந்த கண்ணேறு கழித்தல் இன்றும் தமிழர் மத்தியில் காணப்படுகிறது, அவர்கள் ஒரு வித ஆராத்தி மூலம் [சுத்தி போடல்] அல்லது பூசணிக்காய்களை, பொம்மைகளை தொங்க விடுவது அல்லது காய்ந்த மிளகாய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, ஒன்றாக சேர்த்து கட்டித் தொங்க விடுவது, அல்லது கறுத்த பொட்டு பெரிதாய் போடுவது அல்லது சிலர் சுத்தி போடலுடன் பாட்டுப் பாடியும் அல்லது வேறு சில வழிகளிலும் இதை கையாளுகிறார்கள். இது அவர்களின் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமாக இன்று காணப்படுகிறது.
 
உதாரணமாக தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு, புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்களுக்கு, மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண்ணுக்கு இப்படி பல சந்தர்ப்பங்களில் ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதற்கு அவர்கள் சொல்லும் முக்கிய காரணம் எமது பிள்ளைகள் மேல் , எங்கள் வீட்டின் மேல், எங்கள் நிலைமையின் மேல் அல்லது செல்வாக்கின் மேல் ......... பொறாமை, எரிச்சல் கொண்டு பார்ப்பவர்களின் எதிமறை அலைகளின் விளைவை தவிர்ப்பதற்கு ஆகும். ஆனால் இப்படி எண்ணுவதற்கு உண்மையில் முக்கிய காரணம், நாம் எம் பிள்ளை, எமது வீடு, எமது சாதனைகள், எமது சொத்துக்கள் ....... இப்படி போன்றவற்றின் மேல் பெருமை கொள்வதே ஆகும்!
 
உதாரணமாக காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல, எமது பிள்ளைகள், எங்கள் கண்ணுக்கு மிக அழகாக தோன்றுகிறது. எமது வீடு, எங்களுக்கு மிகவும் நேர்த்தியாக தோன்றுகிறது. ஆகவே கண் திருஷ்டி, எங்களிடமிருந்து தான் முதலில் வெளி வருகிறது!
 
உதாரணமாக, கண்களுக்கு, பார்வைக்கு அதிக அதிர்கிற சக்தி உண்டு என்றால், அது சமமாக நல்ல பலனையும், கெட்ட பலனையும் நல்க வேண்டும் என்றாகிறது. அபூர்வமாக பரமாச்சாரியார் போன்ற கோடிக்கணக்கில் ஒருவருக்குத் தான் பார்வை அருள் உண்டு. மீதி அனைவரின் கண் களின் பார்வையும் தீய திருஷ்டி உடையவை என்று ஆகிவிடுகிறது. அது ஏன்? யாராவது சிந்தித்தது உண்டா?
 
மேலும் எமது கண் ஒரு கதிர்வீச்சலையும் வெளிப்படுத்துவது இல்லை, அது ஒளியை உள்வாங்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புகைப்படம் எடுக்கும் கேமராவை போன்றது ஆகும்.
 
மங்களகரமான அல்லது புனித நாட்களில், தீய சக்திகள் வீட்டிற்குள் நுழைவதை தடுக்கும் முகமாக மாவிலை, வேப்பிலை போன்றவை கதவில் கட்டும் நம்பிக்கையும் பழக்கமும் இன்னும், குறிப்பாக கிராமப் புறங்களில் இருப்பதையும் காண்கிறோம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 15 தொடரும்
46495578_10213048721755492_1795477581642858496_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=MBYj4Z9vBe0Q7kNvgHNyCB6&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBLys1G3jaJp9WtMFvkW62up-56qYXKPL7fqiGPRWgWxQ&oe=6681460B 46492330_10213048714315306_2955617667848863744_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=__fKbqjiHD4Q7kNvgG4WyAq&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCdRleQvFi0QOz9ybJaLh57BaNByCd2m9CU0XmPh7jZCg&oe=66815E06 
 
No photo description available. No photo description available. 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15
 
 
எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.
 
எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.
 
இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.
 
"நோயிலே படுப்பதென்ன பெருமானே
நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"
 
என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.
 
உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.
 
சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.
 
பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்
 
"ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"
 
என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?
 
பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.
 
உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.
 
மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.
 
ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.
 
பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 16 தொடரும்
47096290_10213093973166749_8593445049159647232_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=7Afa_EuGopkQ7kNvgG99mhi&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYC-VaferRneozX_FwD_jAPXQtbgDOXFk422Rd3C15tKqA&oe=66867D30 46972263_10213093978286877_8490847334249267200_n.jpg?stp=dst-jpg_p320x320&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=gg7YZzhD69cQ7kNvgFqIccI&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYBptthZIooX0Whni6S4v1crTvI7BMl6mV7c2NHYaU73YQ&oe=668666CB47214233_10213093983287002_5076916266044751872_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=EwaX2o9rwCMQ7kNvgEJmyMo&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYAGqX3xNlFYMBFCCfVKdi8Chm7IxUCnS1IvqAtoNRvj_w&oe=66865C39 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 16
 
 
முன்னைய, பண்டைய நாட்களில், வீட்டின், சமையல் அறையின் தரைகள் களி மண்ணால் அல்லது சாணத்தால் அல்லது இரண்டாலும் மெழுகப்பட்டதாக இருந்தன. ஆகவே எறும்புகள் இலகுவாக சாப்பாட்டு இலைக்கு ஊர்ந்து வரக்கூடியதாக இருந்தன. எனவே அவையை தடுக்கும் பொருட்டு அன்றைய நாட்களில் இலையை சுற்றி, சாப்பிட தொடங்கும் முன்பு நீர் தூவப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் அல்லது மூன்றாம் நுற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், 6] கொலைக்களக் காதை, 41-43, கண்ணகி கணவனுக்கு, வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டதை,
 
"தாலப் புல்லின் வால் வெண் தோட்டுக்
கை வல் மகடூஉக் கவின் பெறப் புனைந்த
செய் வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்,
கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர்
சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி,
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல்,
தண்ணீர் தெளித்து, தன் கையால் தடவி,
குமரி வாழையின் குருத்து அகம் விரித்து-ஈங்கு,
‘அமுதம் உண்க, அடிகள்! ஈங்கு என;"
 
என்று குறிக்கிறது. அதாவது, தாழை மரத்தின் வெண்ணிற மடல்களைக் கிழித்துக் கைத்திறன் மிக்க பெண் செய்து தந்த தடுக்கு இருக்கையில் கோவலன் அமர்ந்தான். கண்ணகி சுட்ட மண்ணால் செய்த மண்கலம் ஒன்றில் தண்ணீர் கொண்டு வந்து மணக்கும் மலர் போன்ற தன் கைகளால் காதலன் அடிகளைக் கழுவினாள். பின் நிலமடந்தையினது மயக்கத்தை ஒழிப்பவள் போல, தண்ணீர் தெளித்துத் தன் கையால், நிலத்தை தடவினாள் . வாழைக் கன்றில் அறுத்து வந்த வாழை இலைக் குருத்தை விரித்து உணவு பரிமாறி "அடிகள்! அமுதம் உண்க" என்றாள் என்கிறது.
 
இன்றைய வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பாடல், வாழை இலை விருந்து ஒன்றை வர்ணிக்கிறது. இதை "இந்திரா ரெங்கநாதன்" என்ற ஒரு பெண்மணி "PoemHunter.com" என்ற வலைதளத்தில் ஆங்கிலத்தில் பதித்துள்ளார். "Gleaming, green and live Like a tailless fish alive Neatly cut and placed Gemming sheen of water sprinkled ...", அதாவது உயிர் உள்ள வாலில்லா மீன் போன்று நேர்த்தியாக வெட்டப்பட்டு பளிச்சிடும் வாழை இலையில் படைத்து, மாணிக்கம் போல் பிரகாசிக்கும் நீரை தெளித்து, என்று பாடுகிறது.
 
ஆனால் இந்த பழக்கம் பொதுவாக சாப்பாட்டை மேசையில் வைத்து நாம் கதிரையில் இருந்து சாப்பிட தொடங்கியதும் பொருத்தம் அற்ற ஒன்றாக இருந்தாலும், சிலர், இன்னும் அதன் உண்மைப் பொருளை சரியாக புரிந்து கொள்ளாமல், அந்த பாரம்பரியத்தை கண் மூடித்த தனமாக இன்றும் பின்பற்றுகிறார்கள் என்பது ஆச்சிரியமாக உள்ளது.
 
தமிழரின் மிகவும் பெருமைக்கு உரிய மதம் சாரா பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கலுடன் மிகவும் நெருக்கிய தொடர்புடைய ஒரு பாரம்பரிய வீரம் செறிந்த, இன்றும் தொடரும் விளையாட்டு ஏறு தழுவலாகும். அவர்கள் வாள் சண்டை, மல்யுத்தம், குதிரையேற்றம், மல்லர் விளையாட்டு போன்ற வேறு பல வீர விளையாட்டுகளையும் பாரம்பரியமாக அன்று கொண்டிருந்தனர். இந்த தமிழரின் பாரம்பரிய விளையாட்டு மிகவும் தொன்மையானது.
 
 
நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக கல்முத்திரையில் ஜல்லிக்கட்டிற்க்கான ஆதாரம் கிடைத்துள்ளது. சிந்து சமவெளி நாகரிக காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த 1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அப்பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அந்த பொருட்களில் கல்லால் ஆன ஒரு முத்திரையும் அடங்கும். அந்த முத்திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் அந்த முத்திரை செதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர்.
 
ஆனால் இந்த முத்திரையில் எழுத்துகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த முத்திரை அஸ்கோ பர்போலா என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் வண்ண புகைப்படமாக இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழ் எழுத்தாளரும், சிந்து சமவெளி காலத்திய எழுத்துகளில் வல்லுனருமான ஐராவதம் மகாதேவனும் இதுபற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளார். சிந்துவெளி நாகரிகம், பண்டைய தமிழர் நாகரிகம் என்பது குறிப்பிடத் தக்கது.
 
அதே போல,கொம்புகள் கூர் சீவி விடப்பட்ட முரட்டுக் காளைகளை அடக்கும் திருவிழா சங்க தமிழகத்திலும் தனித்தன்மையுடன் விளங்கியது. இதை தமிழர் இலக்கியத்தில் ‘கொல்லேறு தழுவல்’ என்று பெயர் கூறி காளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, கலித்தொகை-103:63-64 என்ற அடிகள், "கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" என, காளையின் கொம்பு கண்டு பயப்படுகின்ற எவனோ அவனை ஆயர் மகளிர் அடுத்த பிறவியிலும் கூட தழுவ மாட்டாள் என்று கூறுகிறது.
 
எதிர்வரும் ஆளை கொன்று தூக்கி எறியும் வகையில் வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்த காளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையே மென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம் சித்தரிக்கிறது. உதாரணமாக, காளையின் கொண்டை(இமில்) முறியும்படி தழுவி, அதன் மேல் ஏறி, முடிவில் தனது இருகைகளாலும் இரு கொம்புகளையும் இறுக பிடித்தவாறு, அவன் தன் முகம் இரண்டு கொம்புகளுக்கும் இடையில் முன்னோக்கி பார்த்தவாறு அதன் மேனி தம் மார்பில் பொருந்தும்படி தழுவினான் என்றும், இது அவன் அவளின் இரு மார்பகங்களையும் மென்மையாக தழுவது போல் இருந்தது என்றும் பல சங்க கால பாடல்களில் மீண்டும் மீண்டும் வர்ணிக்கப் படுவது இதை உறுதி படுத்துகிறது.
 
இந்த ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு இதுவாகும். இந்த மற்போர் அல்லது எதிரெதிராக மனிதர் விலங்கு போராட்டம் உண்மையில், ஒரு காளை மாட்டை வேட்டையாடுவது அல்ல, இது ஒரு ஏறு தழுவுதல் ஆகும்.
 
இங்கு காளை மாட்டுக்கு எந்த தீங்கும் வரவிடுவதும் இல்லை, அந்த மாடுகளைத் துன்புறுத்துவது இல்லை. இன்றைய பெயரான ஜல்லிக்கட்டு, உண்மையில் பழமையானதும் அல்ல, மூலப் பெயரும் அல்ல, பண்டைய தமிழ் ஆயர் சமுதாயத்தில் திறமையுள்ள, தகுதியுள்ள ஒரு மணமகனை தேர்ந்து எடுக்கும் பலப் பரிட்சையாகவும் இது அன்று இருந்தது.
 
ஆயர் குலப்பெண்கள் தம்மை பின் தொடரும் ஆடவருக்கு தம்மை மணக்க வேண்டின் தமது காளையை பிடித்து அடக்கும்மாறு சவால் விடுவர். அப்படி அதை பிடித்து ஏறு தழுவிய ஆடவனை அவள் இன்முகத்துடன் விரும்பி மணப்பாள். இந்த ஏறு தழுவல் காட்சிகளை நல்லுருத்திரன் பாடிய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட முல்லைக் கலிப் பாடல்களில் விரிவாகக் காணலாம். இந்த வீர விளையாட்டின் எச்சமிச்சம் இன்னும் தமிழ் நாட்டில் தொடர்ந்து கடைப்பிடிப்பதை காணலாம்.
 
ஆனால் இந்த பாரம்பரியம் ஸ்பெயின், போர்த்துகல் போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றன. ஒரு வேளை இவைகளுக்கு இடையில் வரலாற்றுக்கு முந்தைய ஏதாவது தொடர்பு இருந்து இருக்கலாம். எனினும் அதன் வடிவமும் நோக்கமும் இன்று மாறியுள்ளன. இது இப்ப மணம் சம்பந்தப்பட்டது அல்ல, பணம் சம்பந்தப்பட்டது ஆகும். அது பிந்திய பெயரான சல்லிக்கட்டு என்ற பெயரிலேயே தெரிகிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 17 தொடரும்
47479761_10213133244988520_7962628904449998848_n.jpg?stp=dst-jpg_p403x403&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=PSsLI-H0lJ4Q7kNvgGUfjOB&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYAMqDRdSKXXlWocoRkrYwvbyfMS3CkiumFw_S8fV-9amw&oe=668C179B  47680712_10213133255428781_6082785366111158272_n.jpg?stp=dst-jpg_s851x315&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=sBHNujNiDQAQ7kNvgHUYWv7&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAJdbNJ0Gfd4yolT6HY9baDmo-4G6FzXggozdsWiiG2Pw&oe=668C46DENo photo description available. 47494723_10213133249868642_1526817743666413568_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=qJ8bFgkGKgcQ7kNvgEHJJ4D&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYC6ueAV0s9IQaSyn1Zd1T7bqVIqDL6ROBPZGigxbWDiCA&oe=668C425C
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 17
 
 
பண்டைய காலத்தில் ஆண்கள் வெளி வேலையும் பெண்கள் வீட்டு வேலையும் செய்தனர், அது மட்டும் அல்ல ஆண்களின் வேலை கடுமையானதாகவும் நிறைய தசை வேலையாகவும் இருந்தன [on field work which involved lots of muscle work], ஆனால் பெண்களின் வேலை அதிக உடல் வேலையற்று இருந்தது, இதனால், குறைந்த உடற்பயிற்சி மற்றும் செயல்பாடுகளால் பெண்களின் இரத்த அழுத்தம் கூட வாய்ப்பு இருந்தது. அவர்கள் ஒரு பொறுமையின்மை [impatience] நிலையை அடைந்தார்கள். எனவே இதை கட்டுப்படுத்த பெண்களை அவர்களின் மணிகட்டை, வயிறை, கணுக்காலை, மற்றும் கையை சுற்றி ஏதாவது ஒன்றால் கட்ட சொன்னார்கள் [women were asked to bind their wrists, stomach, ankles and arms]. இதனால் வளையல்கள், இடுப்புப்பட்டி அல்லது ஒட்டியாணம், கொலுசு, கையைச் சுற்றி அணியும் சித்தரிக்கப்பட்ட பட்டை போன்ற ஆபரணங்கள் [bangles,waist belt,anklets,armlets etc] நம் கலாச்சாரத்தில் வந்து சேர்ந்தன என ஒரு ஊகம். அதன் பின் சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாறு நகைகள் அணிவது பெண்ணின் வாழ்வின் அத்தியாவசிய அல்லது ஒருங்கிணைந்த பண்பாக மாறியது எனலாம்.
 
ஏறக்குறைய நான்காயிரம் ஆண்டு பழமைவாய்ந்த உலகின் முதலாவது படைத்தல் கதை கொண்ட சுமேரியன் முத்திரை ஒன்று பெண் தெய்வங்கள் படைக்கப்பட்டதும், அவர்களை மகிழ்ச்சியாக வைக்கும் பொருட்டு ஆண் தெய்வங்கள் மிக கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது என பதிந்து உள்ளது. அந்த பழம் முத்திரை: "மனிதனைப் போன்ற கடவுளர்கள் வேலையில் மனச்சலிப்பு அடைந்து உடல் வேதனை அடையும் போது, அவர்களின் உழைப்பு கடுமையாயிற்று, வேலை கனமாயிற்று, துன்பம் அதிகரித்தது" [ "When the gods like men bore the work and suffered the toil, the toil of the gods was great, the work was heavy, the distress was much"] என கூறுகிறது.
 
இது சங்க காலத்திற்கு முன்பே ஆண்கள் கடும் வெளி வேலை செய்து கொண்டு பெண்களை வீட்டில் அழகுபடுத்தி மகிழ்ச்சியாக வைத்திருந்தனர் என்பதை சுட்டி காட்டுகிறது எனலாம். அந்த அழகை இருபாலாருக்கும் நகைகள், உடைகள் கொடுத்து இருக்கும், எனினும் சுமேரியன் பெண்கள் மிகவும் பரந்த அளவில், உதாரணமாக தங்கத்தினால் சித்தரிக்கப்பட்ட இலைகள் மலர்கள் கொண் ட தலை பாகை, பெரிய பிறை வடிவ மூக்குத்தி, முறைப்பான கழுத்துப்பட்டை, பெரிய கழுத்தணிகள், ஒட்டியாணம், ஆடை முள், மோதிரம் போன்ற [Sumerian women wore a much wider variety of jewelry such as golden head dresses made of sheet gold in the form of foliage and flowers, huge crescent shaped earrings, chokers, large necklaces, belts, dress pins and finger-rings] பல்வேறு நகைகளை அணிந்திருந்தார்கள் என அறிய முடிகிறது.
 
கி. மு. முதல் நூற்றாண்டில் அதிகமாக எழுதப்பட்ட மனு ஸ்மிருதி அல்லது மனு நீதி, தனது மூன்றாவது சருக்கத்தின் 62-வது செய்யுளில் மகிழ்ச்சியில்லாத மனைவி இருக்கிற குடும்பம் மகிழ்ச்சியாக இருக்காது என்று அர்த்தத்தில்,"ஒரு மனைவி அழகாக மகிழ்வோடு அலங்கரித்தால், அவளுடைய வீடு முழுவதும் அழகுபடுத்தப்படும், மகிழ்ச்சி அடையும்; ஆனால், அவள் ஆபரணத்தை கைவிட்டால், அனை வரும் அழகை இழப்பர், மகிழ்வை துறப்பர் என்கிறது ["A wife being gaily adorned, her whole house is embellished; but, if she be destitute of ornament, all will be deprived of decoration."- The Laws of Manu ,chapter III, Verse 62].
 
பண்டைய சங்க பாடலும் ஆணின் அறிவையும் பெண்ணின் அழகையுமே முதன்மை படுத்துகிறது. பூவையரின் அங்கங்களில் உரிய அணிகலன்கள் ஏறியதும் அந்த அவயங்கள் புதுப்பொலிவில் ‘நகை’ ப்பது போலத் தோன்றுவதாலோ என்னவோ நம் முன்னோர்கள் அந்த அணிகளுக்கு ‘நகை’ என்னும் பொருத்தமான பெயரை சூட்டினர் எனலாம். அந்த அழகு மகிழ்வுதான் மனு நீதி சொன்னமாதிரி குடும்பத்தில் ஒரு மகிழ்வை கொடுத்தது.
 
உதாரணமாக, கோவலன் ‘மாசறு பொன்னே வலம்புரிமுத்தே” என்று கண்ணகியைப் பொன்னாகவும் முத்தாகவும் வருணித்துப் புகழ்கிறான்.
'உண்பது நாழி, உடுப்பவையிரண்டே’ என்று புறநா னூறு: 189 இல் நக்கீரர் கூறுகிறார். அதாவது இடுப்பை சுற்ற ஒரு துண்டும் மேலே போட ஒரு தூண்டும் என்கிறது. முஸ்லீம்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தமிழ் ஆண்களும், பெண்களும் "அரை யில் மட்டும் ஆடையுடுத்தி, அரைக்குமேல் பொதுவாக வெற்றுடம்பாகத்தான் இருந்தார்கள். அந்த மேலே போடும் துண்டு தோளிலோ அல்லது தலைப் பாகையாக தலையிலோ அதிகமாக இருந்தன. மார்பை மறைக்கும் உடைக்கு பதிலாக ஆண்களும் பெண்களும் பல நகைகளால் தம்மை அலங்காரம் செய்து கொண்டார்கள் என்பதை சங்க இலக்கியத்தில் பல இடங்களில் காணக் கூடியதாக உள்ளது.
 
உதாரணமாக, சிறுபாணாற்றுப்படை, வரி 26 இல் : 'பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை, முலை என' - அணிகலன் கிடக்கின்ற விருப்பம் தருகின்ற முலையும், முலையைப் போன்ற, என்று கூறுகிறது. திரு ஞான சம்பந்தர் கூட தனது தேவாரத்தில் 'மாதன நேரிழை யேர்தடங்கண் மலையான் மகள்பாடத்' - பெரிய கொங்கைகளையுடையவளாய், ஒளி பொருந்திய ஆபரணங்களை அணிந்த, பெரிய கண்களையுடைய, மலையான் மகள் பாட என்கிறார்.
 
எனவே பாரம்பரியமாகவே அன்றில் இருந்து இன்றுவரை நகைகள் அணிவது தமிழர் மத்தியில் முக்கிய இடத்தை வகிக்கிறது. தங்கம், வெள்ளி நகைகள் அணிவதன் மூலம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகள் தூண்டிவிடப்பட்டு உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கவும் இது உதவுகிறது என்றும் நம்பப்படுகிறது. வர்மம் அல்லது அழுத்துமிடம் அல்லது உயிர் நிலைகளின் ஓட்டம் என்பது மனித உடலிலுள்ள நரம்புகள் அல்லது நரம்பு புள்ளிகள் ஆகும். மனித உடலில் 108 வர்மங்கள் உள்ளன என அகத்தியர் கூறுகிறார். சித்தர்கள் அன்று நோய்களை களைய வர்ம புள்ளிகளை அதன் பயன்பாட்டை பொறுத்து கையாண்டனர் என அறிகிறோம். பொதுவாக அணிகலன்களையும் ஆடை ஆபரணங்களையும் அணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மனிதன் அளவற்ற ஆசை கொண்டவன். இதில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. எனவே மகளிரைப் போல ஆடவரும் பொன் அணிகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டதனைச் சங்க இலக்கியம் எடுத்துக் காட்டுகின்றன. உதாரணமாக, புறநானுறு 398 இல்: 'வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும் விரவுமணி ஒளிர்வரும் அரவுஉறழ் ஆரமொடு' - மலை போன்ற தன் மார்பில் அணிந்திருந்த, உலகம் எல்லாம் வியக்கும், பல மணிகள் கோத்து ஒளியுடன் விளங்கும் பாம்பு போல் வளைந்த மாலையையும் என்கிறது. மேலும் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது தமிழகத்தில் இருந்து மலையகத்துக்கு புலம் பெயர்ந்தோரின் நாட்டுப் பாடல் ஒன்றில் காதில் ஆண்கள் அணியும் கடுக்கண் பற்றி ஒரு செய்தி உள்ளது. அதில் சில வரியை மட்டும் கீழே தருகிறேன்;
 
“கலகலண்ணு மழை பெய்ய
கம்பளித் தண்ணி அலை மோத
காரியக்காரராம் நம்பய்யா கங்காணி
கடுக்கன் மின்னலைப் பாருங்கடி’’
 
இலங்கையில் 1958ம் ஆண்டில் இடம் பெற்ற இனக்கலவரத்தின் போது பெரும்பாண்மை இனத்தவர் தமிழர்களின் தலையை முகர்ந்து பார்த்தும் ( நல்லெண்ணை வைத்து படிய வாரி இழுக்கும் வழக்கம் தமிழரிடம் இருந்தது), காதுத் துவாரத்தை அல்லது கடுக்கண்ணை வைத்தும் அவர்களைத் தமிழர்களாக இனம் கண்டு கொண்டதாகவும் ஒரு செய்தி உண்டு.
 
ஆயுர்வேதத்தின் படி, வெள்ளி தங்கம் என்பன குளிரூட்டும் பண்புகளை கொண்டு இருப்பதுடன் நமது நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கும் தன்மையையும் கொண்டு உள்ளது. [metals like silver and copper have cooling properties which directly affect our nervous system]. வெள்ளி நகைகள் உடலின் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கிய மாக்குமாம். பொதுவாக தமிழர் உடலின் மேல் பகுதியில் தங்க நகைகளையும், உடலின் கீழ் பகுதியில் வெள்ளி நகைகளையும் பாரம்பரியமாக அணிகிறார்கள். உதாரணமாக காலில் அணியும் வெள்ளி கொலுசுவையும் கழுத்தில் அணியும் தங்க சங்கிலியையும் சொல்லலாம். மேலும், பொதுவாகவே ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக காணப்படுகின்றது என்றும், இதற்கு அவர்களது உடல்கூறு தான் காரணம் என்றும், அதனாலே தான் சிறுவயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசு அணிவிக்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
பகுதி: 18 தொடரும்
48370998_10213178641283399_6079487531307499520_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=HKO90UuPEUgQ7kNvgG2aNlX&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDkq-RpyujsGo1a1cCi4mnmksjyCm-Q0mBa1Ah0yUpbyw&oe=669161B5 48360134_10213178643883464_1723638906382974976_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=MC3EO3wy0LcQ7kNvgFTbipH&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCXal8bHdmglU3PoGKV2kRBxttsw3MkdwNyOGh8wgK70A&oe=66914A16 48239734_10213178654003717_1359198145199734784_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=DPhKPUOYLmQQ7kNvgFtJViI&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYA5UTF3I9gYWFyldSf8oqEFZVnNhBsSDCOyuOv3NNcboA&oe=6691567D No photo description available.
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 18 


பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் ஒரு தோப்புக்கரணம் மூலம் அனுபவித்தவர்கள் எம் மூதாதையர்கள். இவர்கள் வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தோப்புக் கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சி ஒன்றை எதோ ஒரு கால கட்டத்தில் எமக்கு தந்துள்ளார்கள்.

 

இந்த தோப்புக்கரணம் பிள்ளையார் வழிபாட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டு அதற்கு ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது. இங்கு வலது காதை இடது கையாளும், இடது காதை வலது கையாளும் பிடித்தபடி, பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி, உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் [உக்கி போடுதல்] ஆகும்.

 

தோர்பி என்றால் ‘இரண்டு கைகளினால்’ என்றும், ‘கர்ணம்’ என்றால் ‘காதைப் பிடித்துக் கொள்வது’ என்றும் பொருள் என சிலரும், தவறுக்காக வருந்தித் திருந்திச் செய்யும் செயல் தப்புக்கரணம் என்றும், அந்த தமிழ்ச் சொல் வழக் காற்றில் திரிந்து ‘தோப்புக் கரணம்’ என்றாயிற்று என்று சிலரும் விளக்கம் கொடுக்கின்றனர்.

இது தொடையை வலுவாக்கும் ஒரு உடற்பயிற்சி என்றும் கூறலாம். 

எது எப்படியாயினும் இந்த தோப்புக்கரண பழக்கம் ஒரு ஆயிரம் ஆண்டு அல்லது சற்று முன்னும் பின்னும் பழமை வாய்ந்தது என ஊகிக்கலாம், என் என்றால், இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் எந்த இலக்கியத்திலும் இல்லை. அதே போல, சங்கமருவிய கால ஐம்பெரும் காப்பியமான சிலம்பிலும் மணிமேகலையிலும் சீவகச் சிந்தாமணியிலும் கூட இல்லை.

கிருஸ்துக் குப் பின் 4 ஆம்- 5ஆம் நூற்றாண்டிலேயே தான், குப்தா காலத்தில், பிள்ளையார் ஓர் அளவு அடை யாளம் காணக்கூடிய அளவிற்கு வளரத் தொடங்கினார். பல்லவ மன்னரின் படைத் தளபதியான பரஞ்சோதி [இவரே பிற்காலத்தில் சிறுத்தொண்டராவார்], கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், வாதாபியில், போரில் வெற்றி பெற்றதன் நினைவாக அங்கிருந்து கணபதியை [பிள்ளையாரை] சோழநாட்டுக்கு எடுத்து வந்து, தமிழ் நாட்டிற்கு முறையாக அறிமுகப் படுத்தப்பட்டார். மேலும் பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் இலக்கியங்கள் அப்பர், சம்பந்தர் திருமுறைகளே ஆகும், எனினும் பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான இடங்களிலேயே குறிப்பு காணக் கூடியதாக உள்ளது. அந்த குறிப்புகளிலும் கூட எங்கும் தோப்புக்கரணம் பற்றி எதுவும் காண முடியவில்லை.


இந்து தத்துவத்தில் வினைகளை வேரறுக்கும் கடவுளான பிள்ளையாரை வழிபடும் வழிபாட்டு முறையாக தோப்புக்கரணம் இருந்தாலும், இது ஒரு தண் டனை முறையாகும். பாடசாலைகளில் ஞாபக மறதியினால் நிகழும் சிறு குற்றங்களுக்கு தோப்புக் கரணம் தண்டனையாக வழங்கப்பட்டு வந்துள்ளது. அதைவிடவும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் ஒரு தண்டனையாக தோப்புக் கரணம் இருந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது. இவைகள் எல்லாம் சில பல ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சாதாரணமாக நடக் கும் நிகழ்வுகள், எனினும் இன்று இவை அருகி விட்டன. தோப்புக்கரணம், மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் செல்லும் உயிர் சக்தியின் அளவை அதிகரிக்கிறது என்றும், மூளைக்கான அக்கு பஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுவதால், மூளையின் வேகம் அதிகரிக்கிறது என்றும் தொடர்ந்து செய்வதன் மூலம் கவனக் குறைவு நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. எனவே மனம் ஒருமுகப்பட்டு, ஞாபகசக்தி அதிகரித்து, படிப்பிலும் கவனம் கூடும் என்ற கருத்து பொதுவாக உள்ளது.


ஆனால் இன்று இந்த தோப்புக்கரணம், 'சூப்பர் பிரெ ய்ன் யோகா' என்ற பெயரில், அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? [is now being researched and enthusiastically promoted in the West as "Super Brain Yoga."] லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr. Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார் [Dr. Eric Robins, a medical doctor in Los Angeles, calls it "a fast, simple, drug-free method of increasing mental energy"].

மேலும் பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண் கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின், மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் அவர் உறுதிப்படுத்தி கூறுகிறார் [He speaks of one student who raised his grades from C's to A's in the space of one semester].

காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றது என்றும், அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாகவும், இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்றும் அவர் சொல்கிறார்.  


தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ அரசாங் கத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன், புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் செய்யும் பொழுது தமிழரின் தற்காப்புக் கலையையும் எடுத்து சென்று அங்கு அறிமுகப் படுத்தினார், ஆனால் இன்றோ நாம் தற்காப்பு கலையினை நினைக்கும் பொழுது அது சீனா அல்லது ஜப்பான் என்று கருதுகிறோம், அது போலத் தான் இந்த தோப்பு கரணமும் ஒரு காலத்தில் அமெரிக்காவினதாக மாறலாமோ என்று ஒரு ஐயப்பாடு என்னிடம் தோன்றுகிறது ?   


எனவே இந்த எமது பழம் பழக்கமான தோப்புக் கரணத்தின் பெருமையை உணருங்கள், மற்றவர்கள் அதை சொந்தம் கொண்டாட முன்பு இது தமிழரின் பாரம்பரியம் என்பதை எடுத்து கூறுங்கள்.

 

இது வெறும் மதம் சார்ந்த வழிபாடோ, நம்பிக்கையோ மட்டும் அல்ல: மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது என்று இன்று நாம் அறிவியல் அடிப்படையிலும் அறிகிறோம். எனவே தமிழர்கள் அறியாத தமிழனிடத்தில் உள்ள நல்ல பழக்க வழக்கம் இதுவாகிறது.  

'சூப்பர் பிரெய்ன் யோகா' என்ற வடிவில் பிறருக்கு நம்மிடத்தில் உள்ளவற்றின் அருமை - பெருமை இன்று புரிகிறது. ஆனால் நாம் எதற்கெடுத்தாலும் மேற்குலகத்தை வாய்பிளந்து பார்க்கிறோம். எம்மிடம் உள்ள நல்ல பாரம்பரி யங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் எமக்கு எனோ புரிவதில்லை?

எனவே இனியாவது சிந்தியுங்கள், அறிய முயலுங்கள் !! இதனாலோ என்னவோ முன்பு பாடசாலைகளில் குழப்படி செய்யும் அல்லது பிந்தி வரும் அல்லது குறைந்த புள்ளி பெரும் மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்தார்களோ என இன்று அறிவியல் பூர்வமாக மீளாய்வு செய்ய என் மனம் ஏங்குகிறது ?

 

 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி: 19 தொடரும்

48389525_10213221572276647_6654916258804269056_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=CT2T62xqzMgQ7kNvgEEIWoe&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYBtfATOcRwrGdIdtFZPcvvN44MqRQ6G63cTgbnqznPI5Q&oe=66967A2F 48376893_10213221576876762_8233149730280964096_n.jpg?stp=dst-jpg_p261x260&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6MH_ykj3VqMQ7kNvgEHKThF&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDC6VUwqo2vrBrm4Y8ozi-ch5LEZzhqvKBUdTQYHx-QaQ&oe=66965883 48375261_10213221583156919_5869341524612874240_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=PkE7gg6uv_EQ7kNvgGtP-rC&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYC_dSghDNy9KFRQrUAYRxRiSC5tdlg6PknQ0pBAMlD0zA&oe=6696692E   48428182_10213221584236946_8149868532000096256_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=nL62TYfs7KYQ7kNvgHp8Vz6&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDVl0tGnizgGtxWAhsRwQ4mXw5TKr5ehIrjY2xbQi4EAA&oe=66966779

 

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் அப்பாவுக்காக" ['கணபதிப்பிள்ளை கந்தையா' /11/06/1907 - 18/02/2000]  "பாராட்டுகள் எதிர்பாராத, பெருமை பேசாத  பாசாங்கு செய்யாத, அமைதியான அண்ணல் ! பாசம் கொண்டு, எம்மை உயிராய்நேசித்து   பார்த்து வளர்த்த, பெருந்தகை இவன் !"   "அன்னாரின் கனவுகளை, இன்று நிறைவேற்ற  அன்னாரின் விருப்பங்களை, இன்று முழுமையாக்க  அன்னாரின் கவலைகளை, இன்று நீக்கிட  அயராது நாம்என்றும், உறுதியாக இருக்கிறோம் !" "எம் வாழ்வின், அனைத்து புயல்களிலும் எம்மை கைபிடித்த, துணிவுமிக்க வீரன் ! எம் மனஅழுத்தம், சச்சரவு காலங்களில் எம்மை வழிநடத்தும், உண்மையான நண்பர் !" "நல்ல கெட்ட  நேரங்கள் எல்லாம்  நட்புடன் ஆசீர்வதித்து தேற்றிய ஆசான் !  நடுகல்லாய் நாம் இன்று மலர்தூவி   நறும்புகை ஏற்றி வழிபடும் தெய்வம் !"  "உலகம் அறியும் நாயகன் இவனல்ல  உண்மை பேசும் உத்தமன் இவன் !  உதாரணம் காட்டி தவறுகள் திருத்தி உரிமையுடன் அதட்டி மனிதனாக்கிய தலைவன் !" "நடந்தது நடந்ததே என்று கூறி  நடப்பதை எதிர்கொள்ள பலம் தந்து  நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம் என்று  நயமாக இயம்பிய தந்தை இவன் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 38     உண்மையில் உயரிய வரலாற்றுக் குறிப்பான மகாவம்சம் இலங்கையினதோ அல்லது சிங்களவர்களினதோ வரலாறாக எழுதியது என்பதை விட, அது மகாவிகாரையின் அல்லது தேரவாத பௌத்தத்தின் வரலாறு என்று கூறுவதே பொருத்தம் என்று எண்ணுகிறேன் [The Mahavamsa (Great Chronicle of historical poem) was written not as a history of Sri Lanka (or Sinhalese) but as a history of the Mahavihara (Theravada Buddhists)].   உதாரணமாக தீபவம்சம், மகாவம்சம் தேரவாத பௌத்தத்தை மட்டுமே சொல்லுகிறது, அப்பொழுது சிங்கள இனம் என்று ஒன்றும் இல்லை, எனவே சிங்கள பௌத்தம் [Sinhala Buddhists] என்ற சொல்லுக்கே இடமில்லை. எனவே உண்மையில் இலங்கையின் சரியான வரலாற்றையும், அதன் மக்களையும் [சிங்களவர், தமிழர்], அதன் பண்டைய மதங்கள் [இந்து [சைவம்], புத்த], அதன் பண்டைய மொழிகள் அல்லது எழுத்து வடிவங்கள் மற்றும் அதன் பண்பாடுகளையும் அறிய வேண்டுமாயின், [To study the history of Sri Lanka and its people (Sinhalese/Tamils), its ancient religions (Buddhism / Hinduism), its languages/scripts and its culture], நாம் வடக்கு தெற்கு இந்தியாவின் வரலாற்றையும் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.   ஏனென்றால், இலங்கையின் வரலாற்றின் மூலம் (origin / roots) அங்குதான் ஆரம்பிக்கிறது. அதுமட்டும் அல்ல அந்நியர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெரும் மட்டும் இவை இரண்டின் வரலாறும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட, தொப்புள் கொடி உறவாகவே இருந்தன எனலாம் [interconnected / umbilical cord].   நாம் இன்னும் ஒன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும், அதாவது, இந்த பாளி நூல்கள், இலங்கையின் புத்த அரசர்களின் இனப் பின்னணி [ethnic background] பற்றி குறிப்பிடவில்லை. எனவே அவர்களின் பெயர்களிலும் அதன் கருத்து அல்லது அதன் பின்னணியிலுமே நாம் அதைத் தேட வேண்டி உள்ளது.   மேலும் வரலாற்று அறிஞர்களின் படி, ஒன்பதாம் நூற்றாண்டில் தான் நாகர் என்ற பதம் அல்லது பெயர், இலங்கை வரலாற்றில் இருந்து, அதாவது கல்வெட்டுகளில் [stone inscriptions] இருந்து வழக்கொழிந்து போயின என்கின்றனர். அதன் பின் தான் மிகவும் தெளிவாக இரண்டு முதன்மை இனக்குழுக்களாக [ethnic groups], அதாவது, ஹெல / சிகல மற்றும் தமிழர் [Hela / Sihala and Demela] என அடையாளம் காணக்கூடியதாக இருந்தது எனலாம்.   ஆகவே வரலாற்று ஆசிரியர்கள், நாகர்கள் இந்த இரண்டு முதன்மை இனக்குழுக்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்டார்கள் என்று நம்புகிறார்கள். பேராசிரியர் க இந்திரபாலாவின் [Prof. K. Indrapala] கூற்றின்படி, வரலாற்றுக்கு முந்தைய காலம் [prehistoric times] மற்றும் எழுத்துகள் கண்டுபிடிக்காத, வரலாற்றின் மிகப்பெரிய நாகரிகங்கள் உருவாகாத, மக்கள் ஒருங்கிணைந்த சமூகமாகச் சேர்ந்து வாழ்ந்த புரோட்டோ [மூல அல்லது முதனிலை] வரலாற்று காலத்திலும் [proto-historic times], வாழ்ந்த பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் [As per Prof. K. Indrapala, ‘The Sinhalese and Tamils of Sri Lanka are descended from the common ancestors who lived in the country in prehistoric and proto-historic times] இவர்கள் இருவரும் என்றும் இவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக வரலாற்றை இலங்கையில் பகிர்ந்துள்ளார்கள் என்றும் கூறுகிறார்.   இதை நாம் ஏற்றுக்கொள்வோமாயின், இன்று நாம் சிங்களவர், நாம் தமிழர் என இலங்கையில் கூறுபவர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே ஆவார்கள் என்பது கண்கூடு.   நாம் மகாவம்சத்தில் விஜயனின் வருகையை பார்க்கும் பொழுது ஒரு உண்மை புலனாகிறது. அதாவது, இலங்கைக்கு புத்த மதம் வரும் முன்பே, மற்றும் சிங்களவர் என்ற ஒரு இனம் பரிணமிக்கும் முன்பே, இலங்கை, சங்க இலக்கியத்தில் கண்ட தென் இந்தியா மாதிரி, நாகரிகம் அடைந்த நாடாகவே காண்கிறோம்.   உதாரணமாக ஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயன் நாடு கடத்தப் பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, அவன் முதல் குவேனி நூல் நூற்பதை காண்கிறான். பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து,... " என்ற வரியில் நாம் காணும் நாகரிக மங்கை போல் குவேனியும் தன் அழகிய உடலுக்கு அணிந்து கொள்ள, உடை ஒன்றை பின்னுவதற்க்காக, நூற்பதை காட்டுகிறது.   இது அன்று ஒரு முன்னேறிய நாகரிகம் இலங்கையில் இருந்தது என்பதை கட்டாயம் காட்டுகிறது என்றே நம்புகிறேன். குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும், கவினி என்றால் "பேரழகு படைத்தவள்" என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இராமாயண காப்பியத்தில் இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டது போல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்" என்பது கவனிக்கத் தக்கது.   கி மு 205 க்கும் கி மு 161 க்கும் இடைப்பட்ட துட்ட காமினி, எல்லாளன் [Dutugemunu and Ellalan] பெரும் போரைப் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது. இதில் இன்னும் ஒன்றையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது. துட்ட காமினியின் பத்து மாபெரும் வீரர்கள் என வர்ணிக்கப்படுபவர்களில், நந்திமித்ரா [Nandhimitta], வேலுசுமணா என்ற இருவர் தமிழர் ஆகும். உதாரணமாக நந்திமித்ரா, எல்லாளனின் தமிழ் சேனாதிபதியான மித்ராவின் [Mitta] சகோதரி மகனாகும் [nephew]. அதே போன்று, எல்லாளனின் படையில் பின்னாளில் சிங்களவர்களாக பரிணமித்த்தவர்களின் மூதாதைய வீரர்கள் மட்டுமல்ல, சேனாதிபதிகளும் இருந்துள்ளனர். உதாரணமாக தீகபாய, தீகஜந்து, காமினி, நந்திதா …. ஆவார்கள். இந்த சேனாதிபதிகளின் பட்டியலில், துட்ட கைமுனுவின் ஒன்று விட்ட சகோதரனான தீகபாய செனாவியின் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.   என்றாலும் அந்த கால பகுதியில் சிங்களம் என்ற ஒரு இனம் இல்லை, ஆனால் இவர்களின் பவுத்த பரம்பரை பின்னாளில் சிங்களவர்களாக பரிணமித்தார்கள் என்பது தான் உண்மை. இது இந்த பெரும் யுத்தம், மொழி, இனம் அடிப்படையில் அல்ல, மத அடிப்படை மட்டுமே என்பதை மீண்டும் உறுதிப் படுத்துகிறது.   எனவே, எல்லாளன் – துட்ட கைமுனு போர் தமிழர் – சிங்களவர் போராகப் பார்ப்பது தவறானது. அன்று சிங்கள இனமோ மொழியோ தோன்றாத காலம். அந்தப் போர் சைவ மதத்தினருக்கும் – பவுத்தர்களுக்கும் இடையிலான ஆட்சி அதிகாரப் போர் என்பதே உண்மையாகும்.   துட்ட கைமுனு நாக வம்சத்தை சேர்ந்தவன். அவனது தந்தை பெயர் காகவண்ண தீசன் [Kavantissa]. காகவண்ண தீசனின் பூட்டன் பெயர் மகாநாகன் ஆகும் [Kavantissa - a great-grandson of King Devanampiyatissa's youngest brother Mahanaga]. மகானாகனது தந்தை பெயர் முத்துசிவன் [Mutasiva / மூத்தசிவா]! இது ஒன்றே துட்ட கைமுனு யார் என்று எடுத்து காட்டுகிறது.   அது மட்டும் அல்ல, துட்ட கைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய ஒரு இனம் வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. மகாவம்ச கதைப்படியே துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தைச் சேர்ந்தவன். அவனது தாய் விகாரமாதேவி கல்யாணியை ஆண்ட மணியக்கியா அல்லது களனி தீசன் என்ற அரசனின் மகள் ஆவாள் [Dutugemunu's mother was Viharamahadevi, daughter of Tissa, king of Kalyani.].   எல்லாளன் மீது போர் தொடுக்கு முன்னர் கதிர்காமத்தில் உள்ள முருகனை வழிபாடு செய்து விட்டே புறப்படுகிறான். அவனது போர் முழக்கம் “இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது. புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன். இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும்’ [Chapter XXV of Mahāvaṃsa depicts the story of the “The Victory of Duṭṭhagāmaṇi.” After having a relic placed on his spear, Duṭṭhagāmaṇi takes five hundred bhikkhus with his army to march in conquest across the Tamil occupied territories. He victoriously conquers many kings, but states, “Not for the joy of sovereignty is this toil of mine, my striving (has been) ever to establish the doctrine of the Saṃbuddha. And even as this is truth may the armour on the body of my soldiers take the colour of fire.”] என சூளுரைத்ததாக மகாவம்சம் (அதிகாரம் 25) தெரிவிக்கிறது.   “பவுத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரில் துட்ட கைமுனு என்ற சிங்கள பவுத்த மன்னன், எல்லாளன் என்ற தமிழ் சைவ மன்னனை வென்றான்” என்ற கதை பின்னாளில் புனையப்பட்டு சிங்கள பள்ளி மாணவர்களுக்கான சிங்கள மொழிப் பாட நூலில் சேர்க்கப்பட்டது என்பது வெள்ளிடை மலையாகும்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 39 தொடரும்       
    • ஒரு அரசுக்கு இருக்கும் பொறுப்பு, தன் ஆட்சிக்குட்பட்ட நிலத்தில், குற்றங்களை குறைப்பது. தமிழக அரசு இந்த விடயத்தில் பொதுவாகவே மெத்தனமாகவே நடந்து கொள்கின்றது. கள்ளச்சாராய விடயத்தில் மட்டுமல்ல, ரவுடிகளால் பெருகும் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தை விட மெத்தனமாகவே உள்ளது. கள்ளச்சாராயம் விடயத்தில், மக்களுக்கும் அறிவும் வேண்டும். கண்ணுக்கு முன் எத்தனை பேர் இவ்வாறு அ நியாயமாக கொத்து கொத்தாக இறந்தாலும் சிலர் திருந்துவதில்லை. இந்த விடயத்தில் பிரேமலதா சொல்வது மிகவும் நியாயமானது. இப்படி இறப்பவர்களுக்கு இழப்பீடு என்று காசைக் கொடுத்தால், அது ஊக்குவிப்பாகவே அமையும்.
    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள் - திமுக நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரணை வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல் Published By: DIGITAL DESK 3 20 JUN, 2024 | 03:01 PM   கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முப்பத்தைந்தாக உயர்ந்திருக்கிறது. கள்ளச்சாராயம் அருந்தி மக்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் இவ்விவகாரத்தில் கள்ளச்சாராய வணிகர்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  மேலும் இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  உயிரிழப்புகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு  நிமிடம் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயத்திற்கு இவ்வளவு பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டன என்பதையே இது காட்டுகிறது. கடந்தகால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது தான் நல்ல அரசுக்கு அழகு. அதன்படி,  கடந்த ஆண்டு மே மாதத்தில் மரக்காணம், மதுராந்தகம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த  நிகழ்விலிருந்து தமிழக அரசு விழித்துக் கொண்டு  கள்ளச்சாராய விற்பனையை தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது.  மாறாக, சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், அதில் இது குறித்து எதிர்க்கட்சிகள் சிக்கல் எழுப்பும் என்பதால், இந்த விவகாரத்தை மூடி மறைக்க அரசு முயன்றது. ஒருகட்டத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்த பிறகு தான் தமிழக அரசு உண்மையை ஒப்புக்கொண்டது. கள்ளச்சாராய வணிகத்தை தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், காவல்துறை கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் சரியான நடவடிக்கை  தான் . ஆனால், இது போதுமானதல்ல. கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய சாவுகளுக்கு முக்கியக் காரணம் அங்குள்ள கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு திமுகவினர் கொடுத்த ஆதரவு தான். இது குறித்து விசாரணை நடத்துவதுடன், கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என அதில் குறிப்பிட்டுள்ளார்.  இதனிடையே இவ்விவகாரம் குறித்து சட்டபேரவையில் எதிர்கட்சிகள் நாளை கேள்வி எழுப்பக்கூடும என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பதில் தர ஆளும் திமுகவும் தயாராகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186568
    • ஏஙக..நம்ம புல்லாவும் , ரிசாத்தும்  6000 ..7000 எக்கர் காணி புடிச்சு வச்சிருக்காங்களே...அங்கை குடியேற்  முடியாதா...😁
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.