Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நட்சத்திரங்களுக்கு அப்பால்

---------------------------------------------
உடனடியாக உங்களுடன் நாங்கள் கதைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்ன போது நேரம் இரவு 10:30 மணி. நேற்றிலிருந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன். இந்த இரண்டு நாட்களில் எங்களுடன் வேலை செய்யும் வேறு பலரும் மாறி மாறி எங்களுடன் வந்து நின்றனர். இன்றிரவு மற்றவர்களை வீடுகளுக்கு போகச் சொல்லி விட்டு நானும் நண்பனும் மட்டுமே அங்கே இருந்தோம்.
 
இங்கிருக்கும் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் இது ஒன்று. உலகத்திலேயே மிகச் சிறந்தவற்றில் இது ஒன்று. அதி அவசர மற்றும் இதயம் சம்பந்தான பிரிவுகளிற்கு என்று இருக்கும் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் நண்பனின் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு வாரங்களாக இன்னொரு மருத்துவமனையில் இருந்த அவர், நேற்றிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டிருந்தார். இங்கு ஒருவருக்கு எப்பொழுது, எங்கே, என்ன சிகிச்சைகள் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் மருத்துவ காப்புறுதி நிறுவனங்களின் பங்கு பெரியது.
 
நான்கு மருத்துவர்களும், ஒரு ஆலோசகரும், நண்பனும், நானும் ஒரு அறையில் அமர்ந்திருந்தோம். அந்த ஆலோசகர் நண்பனுக்கு அருகில் அமர்ந்திருந்தார். இன்னும் ஒரு நாலோ அல்லது ஆறோ மணித்தியாலங்கள் தான் நண்பனின் மனைவி தாங்குவார் என்று ஒரு மருத்துவர் மெதுவாக, ஒரு அமைதியுடன் சொன்னார். எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டோம், ஒவ்வொன்றாக ஒவ்வொன்றும் செயலிழந்து போய்க் கொண்டிருக்கின்றன என்றனர் மற்ற மருத்துவர்கள். நண்பனின் மனைவியின் கையில் ஏற்கனவே ஊதா நிற காப்பு கட்டி விட்டதாகவும் சொன்னார்கள். நண்பன் அழுது கொண்டே வெளியில் ஓடினான், அவன் பின்னால் ஆலோசகர் ஓடினார்.
 
நடுகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நடுங்கியபடியே, அப்படியே நடந்தால், இங்கு மருத்துவமனையில் எவ்வளவு நேரம் வைத்திருக்க முடியும் என்று கேட்டேன். அதன் பின் 24 மணி நேரங்கள் என்றனர். அதன் பின்னர் எங்கு கொண்டு போகலாம் என்ற பல தெரிவுகள் அடங்கிய ஒரு விபரக்கொத்தை கையில் கொடுத்தனர். பக்கங்களை புரட்டினாலும் எதையும் கோர்வையாக வாசிக்க முடியவில்லை.
 
'இப்ப என்ன செய்வது.........' என்று கேட்டான் என் தோளில் சாய்ந்திருந்த நண்பன். பல வயதுகள் இளையவன். திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகியிருக்கவில்லை.
 
'ஒன்றும் ஆகாது........ அப்படியே என்றாலும் நான் பார்க்கின்றேன்........' என்றேன். இன்னும் அழுதான்.
 
இங்கு பொதுவாக எல்லா மருத்துவமனைகளிலும் இரவு எட்டு மணியுடன் பார்க்க வருபவர்களை தங்க விடமாட்டார்கள். ஆனால் இந்த மருத்துவமனையில் அந்தக் கட்டுப்பாடு கிடையாது. இங்கிருக்கும் நோயாளிகள் எல்லோருமே இறுதிக் கட்டத்தில் இருப்பவர்கள். ஆதலால் உறவினர்கள், நண்பர்கள், வேண்டியவர்கள் எந்த நேரத்திலும் வந்து போகலாம். பலர் அங்கு இருக்கும் பெரிய வரவேற்பறை மற்றும் சில வெறுமையாக இருக்கும் அறைகளில் களைப்பிலும், அசதியிலும் கண்ணயர்ந்தும் விடுகின்றனர். அங்கு காத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களை அதே பரிதாபத்துடனும், இரக்கத்துடனும் பார்க்கின்றனர், ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் என்ன சொல்வதென்று ஒருவருக்கும் தெரிவதில்லை.
 
நேற்றிலிருந்து இப்படியே இருப்பதால் எங்கள் இருவருக்கும் கொஞ்ச ஓய்வு தேவை என்று அங்கிருந்த அறை ஒன்றில் போய் இருக்குமாறு சொன்னார் அந்த நேரத்திற்கு வந்திருந்த தாதி ஒருவர். கேரளாவைச் சேர்ந்தவர். தமிழிலேயே கதைத்தார். சிறிது நேரத்திலேயே நண்பன் கண்ணயர்ந்து விட்டான்.
 
ஆறாவது தளத்தின் பால்கனியில் நின்று வானத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். முற்றிலும் கருமை, அந்தக் கருமையின் மேலே எண்ண முடியாத அளவு நட்சத்திரங்கள் பூத்துக் கிடந்தன. நட்சத்திரங்களை தவிர்த்து, அவற்றின் இடையே இருக்கும் இடைவெளிகளின் ஊடாக ஏதோ ஒன்று எல்லாவற்றிற்கும் மேலே இருக்குதா என்று தேடிக் கொண்டிருந்தேன். 
 
தாதி என்னை தட்டி எழுப்பும் போது ஆறு மணியாகி விட்டது. எழும்பியவுடனேயே நடுங்கவும் ஆரம்பித்து விட்டது. நண்பன் இன்னும் கண் முழிக்கவில்லை. தாதியைப் பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை என்றார்.
 
ஒரு மாதம் வரை நண்பனின் மனைவி அங்கிருந்தார். பின்னர் 40 நாட்கள் உடலை அசைக்கும், நடக்கும் தெரபிகளுக்கு என்று அவரை வேறு ஒரு இடத்திற்கு மாற்றினர். அதன் பின்னர் மூன்று மாதங்களில் அவர்கள் இருவரும் இந்த நாடு போதும் என்று இந்தியாவிற்கே போய்விட்டார்கள்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிரமமான சூழ்நிலைதான்......ஆனால் சொந்த நாட்டில் அவர் சுகமாகி விடுவார் என்று நம்புகின்றேன்........!   😁

கைவசம் நிறைய குறுங்கதைகள் இருக்கும் போலிருக்கின்றது ........ கொட்டி விடுங்கள்....... நல்லாயிருக்கு.......! 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரசோதரன் said:

இங்கு ஒருவருக்கு எப்பொழுது, எங்கே, என்ன சிகிச்சைகள் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் மருத்துவ காப்புறுதி நிறுவனங்களின் பங்கு பெரியது.

இங்கு அதிகூடிய மருத்துவ காப்புறுதி வைத்திருந்தாலும் பிரச்னை தான்.

ஊருக்கு போனவர்கள் எப்படி இருக்கிறார்கள்?

சில பேருக்கு திகதி கொடுத்த பின் கனகாலம் வாழ்ந்தவர்களும் உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

மிகவும் சிரமமான சூழ்நிலைதான்......ஆனால் சொந்த நாட்டில் அவர் சுகமாகி விடுவார் என்று நம்புகின்றேன்........!   😁

கைவசம் நிறைய குறுங்கதைகள் இருக்கும் போலிருக்கின்றது ........ கொட்டி விடுங்கள்....... நல்லாயிருக்கு.......! 

நன்றிகள் சுவி ஐயா.........🙏.

சமீபத்தில் ஒரு பெரிய வங்காள எழுத்தாளர் 'I didn't write anything that I didn't see' என்று சொல்லியிருந்ததாக ஒரு இடத்தில் பார்த்தேன். அதன் பின்னரேயே இப்படி எழுதலாம் என்று நினைத்து, என் அனுபவங்களை சில மாற்றங்களுடன் முயன்று கொண்டிருக்கின்றேன்.

ஆனாலும் நடந்தவைகளை அப்படியே எழுத முடியாமல் இருக்கின்றது, சுவி ஐயா.  உண்மையில் நடந்தவைகளிலும், நடந்து கொண்டிருப்பவைகளிலும் பல நிகழ்வுகள் பொதுவான நம்பிக்கைக்கு எதிரானவை. இந்தக் கதையில் வரும் சம்பவத்தில் கூட, அந்தப் பெண் உயிர் பிழைத்தாலும், அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள்.........😔. ஒரு குறுங்கதையிலோ அல்லது ஒரு சிறுகதையிலோ இந்த உண்மையிலேயே நடந்த முடிவை எழுதினால், அது மிகவும் செயற்கையான ஒரு முடிவாக தோன்றக்கூடும்.

 

  

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஈழப்பிரியன் said:

சில பேருக்கு திகதி கொடுத்த பின் கனகாலம் வாழ்ந்தவர்களும் உண்டு.

அந்தப் பெண் உடல்நலம் முற்றாக தேறிவிட்டார், அண்ணை. எங்களின் பார்வைக்கும், அறிவிற்கும் அப்பாற்பட்டவையாகவே பல விசயங்கள் இந்த உலகத்தில் இருக்கின்றன, நடக்கின்றன என்று சொல்ல முயன்றிருக்கின்றேன்........  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.