Jump to content

கடவுளும் கண்ணனும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணனின் தாய் அருந்ததி தனது மகன் கண்ணனைப் பற்றி மிகவும் துக்கப் பட்டுக் கொண்டிருக்கிறாள். இதுவரை அவன் ஒரு நல்ல தமிழ் இளைஞனாக இருந்ததாகவும், தற்போது பல கேள்விகளைக் கேட்டுத் தனது தமிழ் அடையாளத்தை அவன் தேடுவதாக அவளது பேதை மனம் துடிக்கிறது. அவனுடைய பேச்சைக் கேட்டு மகள் கருணாவும் ஏதோ கேட்கத் தொடங்கி விட்டாள்.

கண்ணனின் குடும்பம் தமிழ் அகதிகளாக லண்டனில் காலடி எடுத்து வைத்தவர்கள். “கடவுள் அருளால் இவ்வளவு நன்றாக இருக்கிறோம். நீங்களும் மற்றவர்கள் மதிக்கத் தக்கதாக வாழ, உயர்ந்த எங்கள் தமிழ் கலாச்சாரம் சார்ந்த பண்பாடுகளை அறிந்து கொள்ளுங்கள். எண்ணங்களை விருத்தி செய்யங்கள். கடவுளை வணங்குங்கள்” என்று தனது இரு குழந்தைகளுக்கும் அடிக்கடி புத்தி சொல்பவள் அவள்.

%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%

ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகள் பிறந்ததும் பெரும்பாலான புலம் பெயர்ந்த தமிழர்கள் மாதிரி அவளும் அவர்களின் மூன்றாவது வயதில் குழந்தைகளைத் தமிழ்ப்பாடசாலைக்கு அனுப்பினாள். அவர்கள் மூன்றாவது வயதிலேயே தேவாரங்கள் பாடவும். திருஞான சம்பந்தர் ஞானப் பால் குடித்த புராணக் கதைகளையும கேட்டு மகிழ்ந்தார்கள். வெள்ளிக்கிழமைகளிலும் விசேட நாட்களிலும் தவறாது கோயில்களுக்கு அழைத்துச் சென்றாள். பல விரதங்களைச் செய்து தனது கணவர், குழந்தைகளின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.

தனது பிள்ளைகள் வைத்தியர்களாக வருவதற்காகப் பல ட்யூசன்களை அவர்களுக்கு ஏற்படுத்தி கெட்டிக்காரர்களாக்கிளாள்.

இப்போது மகன் அவனின் இருபத்தி ஓராவது வயதில் வைத்தியக் கல்லூரியில் மூன்றாவது வருடப் படிப்பைத் தொடர்கிறான்.

அவர்களின் மகள் கருணாவுக்குப் பத்தொன்பது வயது. மெடிகல் சயன்ஸ்சில் பட்டப் படிப்பைத் தொடங்கிருக்கிறாள். இருவரும் பலகலைக்கழக விடுமுறை நாட்களில் வீட்டில் நிற்கும்போது அருந்ததி அவர்களைக் கட்டாயம் கோயிலுக்கு அழைத்துச் செல்வாள்.

அவளின் கணவர், பரமானந்தன் இருவேலைகள் செய்து அவர்களின் குடும்பத்தையும் பராமரித்து, இலங்கையிலுள்ள உறவினர்களுக்கும் உதவி செய்கிறான். அத்துடன், ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கொருதரம் என்றாலும் ஊருக்குப் போய் வர அவனுக்கு ஏற்படும் செலவுகளுக்காகக் கடன் பட்டும் வாழ வேண்டியிருக்கிறது.

அவனுக்கு நாற்பத்தி எட்டு எட்டு வயதாகிறது. நீரிழிவு நோய், உயர்ந்த இரத்த அழுத்தம் என்ற வருத்தங்களுடன் போராடுகிறான். அடிக்கடி வைத்தியரைப் பார்த்துப் பரிசோதனைகளும் மருந்துகளும் எடுக்கிறான். மனைவி மாதிரி அடிக்கடி கோயில்களுக்குப் போகாவிட்டாலும் முடியுமானவரை செல்வான். வீட்டில் மனைவியால் நடத்தும் பூசைகளிலும் முடிந்த நேரங்களில் கலந்து கொள்வான்.

அருந்ததி, லண்டனுக்கு வந்த காலத்திருந்து ஒரு இலங்கைத் தமிழரின் கடையில் வேலை செய்கிறாள். இலங்கையிலிருந்து வரும்போது ஆங்கிலம் சரியாகப் பேச வராது. கடையில் வேலை செய்யும்போது அங்கு வரும் அன்னிய வாடிக்கையாளரிடம், அவளின் வேலை நிமித்தமாக ஏதோ தட்டுத் தடுமாறி பேசி தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். அந்த வெளியுலகத் தொடர்பைத் தவிர மற்றவர்களுடனான உறவு அருந்தததிக்குத் தெரியாது.

பெரும்பாலான தமிழர்கள் மாதிரித் தங்கள் கலாச்சாரத்தைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாகவிருக்கிறாள். இப்போது என்ன பிரச்சினை என்றால் மகன் தாயிடம் தங்கள் சமயம் பற்றிக் கேள்வி கேட்கிறான்.

முதலாவது வருட, வைத்தியக் கல்லூரிப் படிப்புக் காலத்திலேயே, அம்மா அடிக்கடி விரதம் இருப்பதன் விளக்கத்தைக் கேட்டான். அதைத் தொடர்ந்து அவன் வரும் போது ஏதோ கேள்விகள் கேட்கத் தொடங்கினான். அவன் பல இன இளம் தலைமுறையினருடன் படிப்பதும் அருந்ததிக்குத் தெரியாத புதிய வாழ்க்கையில் பல அறிவுகளைப் பெறுவதும் அதன் எதிரொலியாக அவன் கேள்விகள் கேட்பதையும் அவள் புரிந்து கொள்ளவேண்டும் என்று அவளது கணவன் அன்புடன் அறிவுரைகள் சொன்னான்.

“அம்மா நாங்கள் இந்துக்களா’’ என்று ஒருநாள் கேட்டான்.

‘’ஓமோம், அதைப்பற்றி என்ன கேள்வி.’’

‘’இந்துக்கள் என்றால் இந்தியாவில் வாழ்பவர்கள். நாங்கள் இப்போது பிரித்தானியர், இங்கு பிரித்தானியாவில் வாழ்கிறோம, அப்படி என்றால் இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் எப்படி இந்துக்களாக வரமுடியும்” என்றான் கண்ணன்.

“நாங்கள் இந்து சமயத்தைப் பின் பற்றுவதால் இந்துக்கள் என்று கூறிக் கொள்கிறோம” என்றாள்.

‘’இந்து சமயம் என்றால் என்ன?” என்ற அவனது கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

“கத்தோலிக்கருக்கு இயேசு கடவுள், இஸ்லாமியர்களுக்கு அல்லா கடவுள். எங்களுக்கு யார் கடவுள்?” கண்ணன் தனது அறிவை விருத்தி செய்யும் தொனியிற் கேட்டான்.

“மகன். நாங்கள் பல கடவுளரை வணங்குறோம். படைக்கும் கடவுளாகப் பிரம்மா இருக்கிறார். காக்கும் கடவுளாக விஷ்ணு இருக்கிறார். அழிக்கும் கடவளாகச் சிவன் இருக்கிறார்” என்றாள் அவள்.

இதெல்லாம், அவன் மூன்று நான்கு வயதுகளில் லண்டனிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் சொல்லிக் கொடுத்தவைதான் ஆனாலும் அவன் இப்போது பல கடவுள்களின் தொழில்கள் பற்றிக் கேட்பது அருந்ததிக்கு மகிழ்ச்சி.

“காக்கும் கடவுள்தானா கண்ணனாக அவதாரம் எடுத்தவர்.’’ என்று கேட்டபோது அருந்ததிக்கு மனிதில் கொஞ்சம் சந்தோசம் அரும்பத் தொடங்கிவிட்டது.

மகன் தனது பெயரின் மகிமையை உணரத்தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறான் என்று தனது மனதுக்குள் பெருமைப் பட்டாள்.

“அவர்தானே பெண்களின் ஆடைகளைத்திருடி அந்தப் பெண்களின் அவல நிலையைக் கண்டு ஆனந்தப் படுபவர். உலகத்தைப் பாதுகாப்பவர் ஏன் பெண்ணாசை வெறியன் மாதிரி பெண்கள உடைகளைத் திருடிச் சந்தோசப் படவேண்டும்” அவனின் அழகிய தமிழ் குரலில் இருந்த சந்தேகம் அருந்ததியைத் தர்ம சங்கடப் படுத்தியது.

அவனின் பெயர் கண்ணன் என்பதால், அவனின் சினேகிதர்கள் குறம்புத்தனமாக, “கண்ணன் வந்தான், கன்னியராடையைக் களவாடி மகிழ்ந்தான்’’ என்றபாடிக் கேலி செய்து மகிழ்வது அவனுக்குப் பிடிக்காது என்று அவளுக்குத் தெரியும். அப்படிச் சேட்டை விட்டால், இங்கிலாந்தில் சிறையில் தள்ளி விடுவார்கள் என்று அவனுக்குத் தெரியும். இளவயதிலிரிருந்தே மற்றவர்களைத் துன்புறத்தக் கூடாது, எல்லோரையும் சாதி. மத, பெண், ஆண், நிறம், மொழி வித்தியாசமின்றி நடத்த வேண்டும் என்று ஆரம்ப பாடசாலைகளிலேயே சொல்லிக் கொடுப்பார்கள்.

‘’அதெல்லாம் சும்மா கதைகள் மகன்’’ என்று சமாளித்து விட்டாள்.

“அம்மா சமயக்கதைகள் மக்களை நல்வழியில் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டவேண்டும் என்று சொல்வார்கள், ஏன் எங்கள் கதைகள் பல பெண்களை ஆண்களின் மகிழ்வுக்காக வாழ்பவர்களாகக் காட்டுகிறது?”

கண்ணன் மேற் கொண்டு தொடராமல் அவனின் கேள்விகளை, “மகன், உனக்காக் நெய்த்தோசை செய்திருக்கிறேன். தோசை சூடு ஆறமுதல் சாப்பிடு மகனே’’ என்று சொல்லி பேச்சை மாற்றி விட்டாள். ஆனாலும் அவனின் கேள்விகள் இதுவரை அவனின் அவனிடமிருந்து வராத புதிய தொனியில் வருவது அவளுக்குப் பயத்தைத் தந்தது.

கணவர் வந்ததும், “இவன் யூனிவர்சிட்டிக்கப் போகத் தொடங்கியதும் ஏன் இந்த விழல்க் கேள்வி எல்லாம் கேட்கிறான’’; என்று கேட்டாள்.

‘’அருந்ததி, பல்கலைக் கழகம் என்பதால் பல கலைகளையும் கற்குமிடம். அங்கு பல தரப் பட்ட மாணவர்களும் வருவார்கள், தங்களின் சமயத்தைப் பற்றிப் பேசும்போது ஒருத்தரின் சமயப் பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் பேசியிருக்கலாம். அதனால் கண்ணனின் மனதில் சில வித்தியாசமான கேள்விகள் வரும் தானே’’ என்று பதில் சொன்னான்.

அருந்ததி, ஒருநாள் வுழக்கம்போல் தனது மகளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது,அவள் தமயன் கேட்ட கேள்விகளைச் சொன்னாள். இப்போதுதான் பல்கலைகப் படிப்பை ஆரம்பித்திருக்கும் மகள் தமயன் மாதிரிக் கேள்விகள் கேட்பதை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும் என்ற நம்பிக்கையில ஒரு தமிழத் தாய்பாசம் தவித்தது.

“எங்களுக்க விளங்காத விடயங்களைப் பற்றித் தாய் தகப்பனிடம் கேள்வி கேட்பது நல்ல விடயம்தானே’’ என்றாள்.

தனது தாய் தங்களுக்காகவும் தகப்பனுக்காகவும், குடும்ப நலங்காகவும் அடிக்கடி விரதம் இருப்பதும் பட்டினி இருப்பதும் தனக்குத் தர்ம சங்கடத்தைத் தருகிறது என்றும் கருணா தனது தாய்க்குச் சொன்னாள்.

“அப்படியென்றால் நீ உனது கணவர் குழந்தைகளுக்காகக் கடவுளைக் கும்பிடமாட்டாயோ’’ என்று அருந்ததி சீறினாள். ஓரு நல்ல தமிழ்ப் பெண்ணாக இதுவரை வளர்த்த மகள் இப்படிக் கேட்டது அப்பாவி அருந்ததியைத் திகைக்கப் பண்ணியது.

“அம்மா, நான் பட்டினி இருந்துதாற்தான் கடவுள் நன்மை புரிவார் என்பதை நம்புவதில்லை. எங்களைப் படைத்தவனுக்குத் தெரியாதா எங்களின் தேவைகள்? அதாவது, என்னையும் உங்களைப் போல், கந்தஸஸ்டி விரதம், கௌரி விரதம் எல்லாம் இருக்கச் சொல்லாதீர்கள். ஓரு குடும்பத்தின் நன்மைக்கு எல்லோரும்தானே பாடுபடுகிறோம். அப்படியென்றால் பெண்கள் மட்டும்தான் விசேட விடயங்கள் செய்ய வேண்டும் என்பதெல்லாம் பம்மாத்து” என்று சொல்லி விட்டாள்.

இந்த விடயங்கள் நடந்த சில நாட்களில், அருந்ததியின் தமயன் ஊரிலிருந்து வந்திருந்தான். அவனின் மனைவியின் சித்தப்பா ஒருத்தரின் மரணத்திற்குப் போயிருந்ததாகவும், அங்கு நடக்கும் மரணச் சடங்குகளுக்கே பெரிய செலவாகிறது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

“இங்கேயும்தானே தம்பி, எல்லாச் சாமான்களும் கண்டபாட்டுக்கு விலையேறுது’’ என்றாள் அருந்ததி.

‘’ஓமோம், சனங்கள் செய்யுற கொடுமையால, ஐம்பெரும் கடவுளரும் கொதித்தெழுந்து இன்டைக்கு மழை, வெள்ளம், பூகம்பம், எரிமலை வெடிப்பு, கடல் கொந்தளிப்பு, காடுகள் எரிகின்றன. கடவுளரைக் கோபிக்கப் பண்ணினால் அவர்கள் தண்டனை தருவார்கள்தானே’’ கடவுளர்களுக்காக மிகவும் துக்கப் பட்ட பெருமூச்சுடன் சொன்னார் அருந்ததியின் தம்பியார்.

“மாமா! நீங்க சொன்னதெல்லாம் நடக்கிறது கடவுளுக்கு வந்த கோபத்தால இல்லை. இந்த உலகத்து இயற்கைகளை பேராசை பிடித்தவர்கள் அழிப்பதாற்தான் அதன் எதிரொலியாக இந்த அழிவுகள் நடக்கின்றன.’’

மருமகள் அருணா மாமானாருக்குச் சுற்றாடல் சூழ்நிலை பற்றிய விளக்கத்தைச் சொன்னாள்.

“என்ன இருந்தாலும் கருணா, அதிவேகமாக மாறிவரும் மனித சிந்தனைகளையும் அதனால் மக்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளையும் முகம் கொடுக்கத்தானே வேணும். உதாரணத்துக்க ஒரு விசயம் சொல்றன், மரணச் சடங்கை நடத்த வந்த ஐயர் தனக்குத்தரவேண்டிய தானங்களுடன் காலணிகளும் கேட்டு வாங்கினார். இதெல்லாம் முன்னோரு காலத்தில நடைமுறையில இருக்கவில்லை, ஆனா இப்ப எல்லாம் புதிய விடயங்களாக, சமய சடங்கு அணுகுமுறையாக வரத்தொடங்கி விட்டது’’ துக்கம் நிறைந்த தொனியுடன் மாமா சொன்னார்.

“மரணச் சடங்குக்கும் ஐயருக்குக் காலணிக்கும் என்ன சம்பந்தம்” மாமாவிடம் தனது சந்தேகத்தைக் கேட்டான் கண்ணன்.

“இறந்தவரின் ஆவி சொர்க்கத்திற்குப் போகும்போது காலில் கல் முள் காயப் படுத்தாமல் இருக்க காலணியை அணிந்துகொள்ளச் சொல்லி ஆவியிடம் ஐயர் பிரார்த்தனை செய்வார். அதற்காக அவருக்குக் கொடுக்க வேண்டும” மாமா விளக்கம் சொன்னார்.

“புதிதாக வந்த மொடலில் வாங்கித் தரச் சொல்லி ஐயரிடம் ஆவி கேட்டிருக்குக்கும் என்று நினைக்கிறேன்’’ கண்ணன் தனது ஆத்திரத்தைக் காட்டாமல் கிண்டலாகச் சொன்னான்.

அருந்ததிக்குத் தன் குழந்தைகளின் கேள்விகள் பல சந்தேகங்களையுண்டாக்கத் தொடங்கி விட்டன. ஏன் இந்தக் கேள்விகளைக்கேட்கிறார்கள் என்று அவள் கவலை தொடர்ந்தது.

வெளிநாடுகளுக்கு வந்த தமிழர்கள் பலர் தங்கள் சமயத்தை விட்டு வேறு சமயங்களை நாடுவது அவளுக்குத் தெரியும். ஆனாலும். தனது குழந்தைகள, தங்களின் சமயத்தை விட்டு வெளியேறி, தங்கள் தாய் தகப்பனை ஒருநாளும் மனவருத்தப் படுத்தமாட்டார்கள் என்று திடமாக நம்பினாள். தாயும் தகப்பனும் அவர்களின் வாழ்க்கையின் உயர்வுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்வது அவர்களுககுத் தெரியும்.

ஆனாலும் புதுச் சினேகிதங்கள் ஏதும் தேவயைற்ற புத்திமதிகள் சொல்லி அவர்களின் மனத்தைத் திருப்புகிறார்களோ என்ற சந்தேகமும் சாடையாக வந்தது.

அன்று பின்னேரம், அருந்ததி வழக்கம் போல் தனது வயது வந்த இரண்டு ‘குழந்தைகளையும்’ அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றாள். அன்று அவர்களின் நலவாழ்வுக்கு அர்ச்சனை செய்ய துண்டு வாங்கிக் கொண்டாள்.

கோயிலில் ஐயர், அருந்ததி கொடுத்த அர்ச்சனைச் சீட்டை கொண்டு அவர்களுக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். கண்ணன் தாயின் சொற்படி மிகவும் பக்தியுடன் கோயிற்சிலையைப் பார்த்துக் கொண்டு நினறான்.

ஐயர் கண்ணனின் பெயருடன் ஆரம்பித்து நமஹா,ஸ்வாஹா என்ற சில வார்த்தைகளைப் பாவித்து, தட்டத்தில் வைத்த தீபத்தால் கடவுளை ஆராதித்து, கண்ணனின் தரகராகக் கடவுளிடம் பேசிவிட்டுத் தாயிடம் தட்டத்தை நீட்டியபோது, தாயார் தீபத்தைத் தொட்டு வணங்கி கண்களில் ஒற்றிய பின், அவள் அர்ச்சகருக்காகத் தட்டிற் பணம் போட்டாள். அதைத் தொடர்ந்து, தட்டிற்கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு அர்ச்சனைப் பொருட்களாக ஒரு வெற்றிலையில் ஒரு பழமும் திருநிறும் தாயிடம் கொடுத்தார் ஐயர்.

அதைத் தொடர்ந்து, அங்கு நடந்தவை கண்ணன் மனதில் சில கேள்விகளை எழுப்பியது.

வீட்டுக்கு வரும் வழியில், தாயிடம் தயங்கித் தயங்கி ஒரு கேள்வி கேட்டான் அவள் மகன் கண்ணன்.

“அம்மா, அந்த ஐயர் எனக்காக் கடவுளிடம் என்ன கேட்டார்.’’

“உனது மேன்மைக்கும், உயர்வுக்கும் ஆசி அளிக்கும்படி கடவுளை வேண்டினார் ஐயர்’’ என்றாள் அருந்ததி.

“அவர் சொன்னது உங்களுக்குப் புரிந்ததா’’ மகனின் இந்தக் கேள்வி தாயைத் திடுக்கிடப் பண்ணியது.

“அவர் எனக்குத் தெரியாத கடவுள் மொழியில், எங்களுக்காகக் கடவுளிடம் கேட்பதை நாங்கள் கேள்வி கேட்கக் கூடாது மகனே” என்றாள்.

‘’அப்படி என்றால் வாழ்க்கை பூராகவும் விரதம் படித்துக் காலையில் “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே’’ என்று கண்ணீர் மல்கத் தமிழிற் பாடி உருகுகிறாயே அதைப் பற்றிக் கவலைப் படாத கடவுள், அன்னிய மொழியில் நீ தரகர் மூலம் பேசினாற்தான் அருள் புரிவார் என்று ஏன் நினைக்கிறாய்’’ என்று கேட்டான். தங்களின் நன்மைக்காகத் தாய் படும் துயர்கள் அவனால் புரிய முடியாதிருந்தது.

“மகனே அப்படி எல்லாம் கடவுளைப் பார்க்காதே. கோயிலில் ஐயர் பேசுவது தெய்வ மொழி. அதன் மகிமை வேறு’’ என்று படபடப்புடன் சொன்னாள்.

“அம்மா நீ எனக்கு அன்பு தரத் தமிழிற்தான் என்னைத் தாலாட்டினாய். எனது அறிவு வளர, எனது ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் படிப்பித்தார்கள். எனக்கு கடவுள் ஆசிர்வாதம் தருவதாயிருந்தால் எனது மொழியில் அவருடன் தொடர்பு கொள்கிறேன். ஏனென்னால கடவுள்தான உலகத்து உயிரினங்கள் அத்தனையையும் படைத்தவர் என்றால் அவருக்குத் தனது குழந்தைகளின் மொழி தெரிந்திருக்க வேண்டும்.’’

அருந்ததிக்கு மகன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை.

அவன் தொடர்ந்தான், “அம்மா, இன்று பல கோடி கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். கத்தோலிக்க மதத்தின தலைவர் போப் ஆண்டவர் 1968ம் ஆண்டில், உலகக் கத்தோலிக்க மக்கள் அனைவரும் தங்கள் மொழியிற்தான் இயேசுவை வழிபடவேண்டும, பழைய பாரம்பரிய முறைப்படி லத்தின் மொழியில பிரார்த்தனைகளைக் கேட்கத் தேவையில்லை என்று கட்டளையிட்டார். எங்களை மாதிரி ஐயர் சொல்லும் கடவுள் மொழியைத் தெரியாத தமிழர்கள் உலகமெல்லாமிருக்கிறர்கள். இவர்கள் தங்கள் மொழியிற்தான் கடவுளுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்று உங்கள் மதத் தலைவர் யாரும் சொல்லவில்லையா?”

“மகன் மற்றவர்கள் சொல்வதெல்லாம் சரியென்று நாங்கள் ஏன் எடுக்கவேண்டும், எங்கள் பாரம்பரியத்தைத் தொடர்வோம், அதில் ஒன்றும் குறை கண்டு பிடிக்காதே” என்றாள்.

“அம்மா, தயவு செய்து எனக்காக வீணாக உங்கள் நேரத்தையும் பணத்தையம் வீணாக்கவேண்டாம். எனக்கு இப்போது இருபத்தியொரு வயது. இன்னும் சில வருடங்களில் ஒரு உயிரைக் காப்பாற்றும் பொறுப்பை எடுக்கப் போகிறேன். எனக்குத் தேவையானால் கடவுளிடம் எனக்குத் தெரிந்த மொழியில் பேசிக் கொள்கிறேன். தயவு செய்து இனி என்னைக் கோயிலுக்கு வரச் சொல்லிக் கூப்பிடாதீர்கள்’’ என்றான்.

அருந்ததி என்ற தமிழ்த்தாய் திகைத்துப் போய் நின்றாள். ஆனாலும், அவள் நாளைக்கு இன்னொரு விரதம் இருப்பாள். தனது பிள்ளைகளுக்கு நல்ல புத்தியும் கடவுள் நம்பிக்கையும் தொடரவேண்டும் என்று பிரார்த்திப்பாள்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

https://www.sirukathaigal.com/குடும்பம்/கடவுளும்-கண்ணனும்/

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை சுவாரசியமாக இல்லை, தொடர்ந்து வாசிக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

கதை சுவாரசியமாக இல்லை, தொடர்ந்து வாசிக்க முடியவில்லை.

அண்ணை தாய்மொழியில் வழிபடுவதை சுட்டுகின்ற அதேவேளை புலத்தில் வளர்ந்த பிள்ளைகள் தங்கள் சிந்தனைகளை பரந்து விரிந்து படரச் செய்கிறார்கள் என நான் கதையினூடாகப் புரிந்து கொள்கிறேன்.

நேரமிருக்கையில் அரைவாசிக்கு கீழ்/முடிவை மட்டும் வாசித்துப் பாருங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

அண்ணை தாய்மொழியில் வழிபடுவதை சுட்டுகின்ற அதேவேளை புலத்தில் வளர்ந்த பிள்ளைகள் தங்கள் சிந்தனைகளை பரந்து விரிந்து படரச் செய்கிறார்கள் என நான் கதையினூடாகப் புரிந்து கொள்கிறேன்.

நேரமிருக்கையில் அரைவாசிக்கு கீழ்/முடிவை மட்டும் வாசித்துப் பாருங்கள்.

நன்றி!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.