Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓரிரவு

 

images-4.jpg?resize=600%2C400&ssl=1

மணி ஏழாகிவிட்டிருந்தது. எனது டீம் லீட் சியோக் வீ அன்று மதியம் என்னிடம் ஒரு வேலையை அளித்திருந்தாள். என்னவென்று கண்டறிய முடியாத ஒரு தவறு காரணமாக அதன் மொத்த செயல்பாட்டையே நான் வேறு மாதிரி மாற்றி எழுத வேண்டும். ஏற்கனவே அது ஒருவனிடம் கொடுத்து அவனால் அந்தத் தவறைக் கண்டறியமுடியாமல் பின் அவளும் முயற்சி செய்து பார்த்துவிட்டு இறுதியில் என்னிடம் மொத்தத்தையும் மாற்றி எழுதக் கேட்டிருந்தாள். மூன்று நாட்கள் அவகாசம் கேட்டிருந்தேன். ஆனால் அதனை சோதிக்க ஆரம்பித்த இரண்டு மணி நேரத்திலேயே என்ன தவறு என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். ஒரு சிறிய கவனக்குறைவான ‘கோட்’ பிழை. புதிய கண்களுக்கு எளிதில் அகப்பட்டு விடும் பிழைதான். எப்படியோ தவறவிட்டிருக்கிறார்கள். இரண்டு மணி நேரத்தில் அதை நிவர்த்தி செய்து விடலாம். அதைத் திருத்தி எழுதிக் கொண்டிருந்தேன். அதனால் தான் தாமதமாயிற்று. 

திங்கள் காலை வந்ததும் அவளிடம் அந்தப் பிரச்சனையை சரி செய்துவிட்டேன் என்று சொல்லி அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம். அவளிடம் இருந்து ஒரு பாராட்டு. அவள் மகிழ்ச்சி அடையும் போது கண்ணாடிக்குள் கண்ணைச் சுருக்கி, கன்னத்தில் குழி விழ சிரிப்பது அவ்வளவு அழகாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் எங்களது வேலையை மதிப்பிட்டு அவள் தான் எங்கள் நிறுவனத்தில் தெரிவிக்கவேண்டும். 

எங்களுக்கு இந்த கிளைண்ட் நிறுவனத்தில் இரு வருடம் ஒப்பந்த வேலை. அவள் இங்கு முழுநேர வேலை பார்ப்பவள். எங்களது வேலை நன்றாக இருக்கும் பட்சத்தில் எங்களது ஒப்பந்தத்தை நீட்டிப்பார்கள்.  பிடிக்கவில்லையென்றால் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றிவிடுவார்கள். பின் எங்கள் நிறுவனம் எங்களை இடமுள்ள வேறு கிளைண்ட் நிறுவனத்தில் போடுவார்கள். எங்கும் இடம் இல்லையெனில் இரண்டு மூன்று மாதம் பொறுத்துப் பார்த்துவிட்டு வேலையை விட்டு தூக்கிவிடுவார்கள். விசாவையும் ரத்து செய்து விடுவார்கள். பின் இந்தியாவுக்குதான் திரும்பப் போக வேண்டும். அதனால் தான் ஐந்து மணிக்கு ஹரிஸ் கிளம்பும் போது கூப்பிட்டும் போகவில்லை.

‘விரைவில் வரவும். காத்திருக்கிறேன்’ என்ற செய்தியோடு ஹரிஸ் இரண்டு மதுபாட்டில்கள் இருக்கும் படத்தை எனக்கு மொபைலில் அனுப்பி இருந்தார். எனது அலுவலகத்தில் இருந்து தமன்ஜெயா எல்ஆர்டி ஸ்டேஷன் செல்ல பதினைந்து நிமிடம் நடக்கவேண்டும். ஓட்டமும் நடையுமாக சென்று சேர்ந்தேன். அங்கிருந்து ரயில் பிடித்து மஸ்ஜித் ஜமக் ஸ்டேஷன் வந்து பின் ஜலன் இப்போவுக்கு பஸ் பிடித்தேன். சாதாரணமாக பதினைந்து நிமிட பஸ் பயணம் என்றாலும் வெள்ளிக்கிழமை இந்த நேரத்தின் வாகன நெரிசலில் சென்று சேர அரைமணி நேரத்திற்கும் மேல் ஆகும். இரவில் திரும்பி வரும்போது கடந்த ஆறுமாதமாக பேருந்தில் சாலையின் இடதுபுறத்தை பார்த்தவாறு ஜன்னல் ஓரத்தில் அமர்வது என் வழக்கம். அன்றும் அப்படித்தான். பேருந்து மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. 

சௌகிட்டை தாண்டி விட்டால் இந்த வாகன நெரிசல் இருக்காது. வண்டி வேகம் எடுத்துவிடும். அப்போது நிறுத்தங்களில் கூட நிறுத்தாமல் சென்று விடுவார்கள். நாம் நிறுத்தம் வருமுன்னே மணியை அழுத்திவிட வேண்டும்.சௌகிட் சிக்னலைத் தாண்டி சில நிமிடங்கள் ஆன பின் ஒன்றை அடுத்து ஒன்று மூன்று டைல்ஸ் கடைகள் வந்த பிறகு செட்டியார் மண்டபத்திற்கு முன்னதாக அந்த சாலையில் சில தூரங்கள் இரவில் எந்த மின்விளக்குகளும், ஆள் அரவமும் இருக்காது. பேருந்து அந்த இடத்தை நெருங்கும்போதே எனது மனம் படபடக்க ஆரம்பித்துவிடும். அவள் இருக்கக்கூடாது அவள் இருக்கக்கூடாது என்று மனதில் வேண்டிக்கொள்வேன். 

பகல்நேரங்களில் அந்த இடத்தின் சாலையோரத்தில் இருக்கும் கட்டிடங்களைப் பார்த்திருக்கிறேன்.  அவற்றின் பழைய சுவர்களில் சுண்ணாம்பு பெயர்ந்து ஆங்காங்கே கருமை படிந்து காணப்படும். கீழ்தளத்தில் மெக்கானிக் கடையோ அல்லது சீனப்பண்டங்களை விற்கும் சிறிய பலசரக்குக் கடையோ இருக்கும். மேல் தளத்தில் கைவிடப்பட்ட பழைய வீடுகள். சிலவற்றின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்திருக்கும். சில செய்தித்தாள்கள் ஒட்டப்பட்டு மறைக்கப்பட்டிருக்கும் ஆனால் சூரியன் மறைந்த பிறகு கீழே அந்தக் கடைகள் இருந்ததற்கான சான்றே இல்லாமல் அந்த இடமே வெறுமையாக இருக்கும். செய்தித்தாள்கள் ஒட்டப்பட்டு மூடியிருக்கும் கண்ணாடி ஜன்னல்களில் உள்ளே மங்கலான விளக்கு எரிவது தெரியும். 

அந்நேரத்தில் அந்த சாலையின் ஓரத்தில் குறைவான வெளிச்சம் இருக்கும் ஏதேனும் ஒரு பகுதியில் அந்தப் பெண் நின்றுகொண்டிருப்பாள். ஒரு அவலட்சணமான விபச்சாரி.

 மஞ்சள் இனப்பெண். மஞ்சள் இனப்பெண்களின் வயதை எனக்கு தோராயமாகக் கூட கணிக்க இயலாது. நான் ஆரம்பத்தில் சியோக் வீயின் வயதை இருபத்தியேழாக இருக்கும் என்று தான் கணித்து வைத்திருந்தேன். ஆனால் அவளுக்கு முப்பத்தாறு வயது. திருமணம் ஆகி ஒரு குழந்தை இருந்தது. இவளைப் பார்த்தால் எப்படியும் வயது நாற்பதுக்கு அருகில் இருக்கலாம் என்று தோன்றியது. நன்றாக மெலிந்த உருவம். முகவாய் கொஞ்சம் முன்னோக்கி நீண்டு, தோள்பட்டை பகுதி துருத்தி மேல்நோக்கி இருந்தது. மார்புப் பகுதியோ பிட்டம் பகுதியோ இருப்பதற்கான எந்தத் தடயமும் இல்லை. அக்குளில் ஆரம்பித்து தொடை வரை மட்டுமே இருக்கும் உடம்புக்கு கொஞ்சமும் பொருந்தாத ஒரு வெள்ளை நிற உடை அணிந்திருந்தாள். அந்த உடை, அவள் அணிந்திருந்த செருப்பு இவையெல்லாம் பளபளப்பாக இருந்தாலும் சுத்தமாக அவளுக்குப் பொருந்தவில்லை. 

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக செய்திருந்த ஒப்பனை, பளிச்சென்று பூசியிருந்த உதட்டுச்சாயம் அவளை இன்னும் பரிதாபமாகவேக் காட்டின. கடந்து போகும் ஆண்களைப் பார்த்து அவள் செய்யும் அந்த குலைவான செயற்கை சிரிப்பு எந்த விதத்திலும் உதவிகரமாக இல்லை. பேருந்தினுள் இருந்த என்னால் அவள் மேல் என்ன மாதிரியான மலிவான வாசனை திரவியத்தின் மணம் வீசும் என்பதைக் கூட உணரமுடிந்தது. 

ஆறு மாத காலமாக இவளை இந்த நேரத்தில் பேருந்தில் திரும்பிவரும் போது இங்கு அவ்வப்போது பார்க்கிறேன். ஏன் இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறாள். அந்த சாலையில் யாருமே நடந்து செல்ல மாட்டார்கள். வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருக்கும். புக்கிட் பின்டாங்க் போய் நின்றால் கூடப் பரவாயில்லை. அங்கு அது போன்ற பெண்கள் நிறைய இருப்பார்கள். அதுக்கென்றே ஆண்கள் வருவார்கள். யாரேனும் ஒருவர் கூட்டிச்செல்ல வாய்ப்பு இருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் இன்னும் மூன்று நிறுத்தங்கள் தள்ளி சௌகிட் மார்கெட் அருகே சென்று நிற்கலாம். அங்கும் இது போன்ற பெண்கள் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வேளை வேறு பெண் என்று இன்னொரு வாய்ப்பு இருந்தால் இவளை எப்படியும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்றா இங்கு தனியாக நின்றுகொண்டிருக்கிறாள். எங்கள் பேருந்து அவளைக் கடந்து சென்றது. அவள் நின்றிருந்த இடத்திலிருந்து இரண்டாவது நிறுத்தம் என்னுடையது. 

எனது அப்பார்ட்மெண்டின் தரைத்தளத்தில் இருக்கும் இந்திய மதுபானங்கள் விற்கும் கடையில் ஒரு பீர் வாங்கிக்கொண்டேன். ’உங்காளு வந்து வாங்கிட்டு போய்ட்டாரே’ என்றான் கடையிலிருந்தவன் சிரித்தவாறே. ‘நமக்கு அது பத்தாது’ என்று கூறிவிட்டு அந்தக்கடையின் பின்புறம் வழியாக சென்று எங்கள் அப்பார்ட்மெண்டின் நுழைவாயிலை அடைந்தேன். பத்தாவது மாடியில் எனது அறைக்குச் சென்று உடையை மாற்றி இரவு நேர பேண்ட்டும் டீஷர்ட்டும் அணிந்து கொண்டேன். அறையில் இருந்தவர்கள் அவர்களது லேப்டாப்பில் மும்முரமாக ஏதோ பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் என் பீரை எடுத்துக்கொண்டு கீழிறங்கி எங்கள் அப்பார்ட்மெண்டை விட்டு வெளியே வந்து இடப்புறத்தில் ஓடையைக் கடந்து செல்லும் பாலத்தின் வழியாக ஹரீஸின் அப்பார்ட்மெண்டிற்குச் சென்றேன். என்னிடம் அதன் வாயிலை திறக்கும் அட்டை இல்லையாதலால் போன் செய்த பின்பு ஹரீஸே கீழே வந்து பதினெட்டாவது மாடியில் இருக்கும் அவர் ஃப்ளாட்டுக்கு என்னைக் கூட்டிச் சென்றார். 

அவர் திருமணத்திற்கு முன் வரை எங்களது ஃபளாட்டில் தான் இருந்தார். எங்கள் கம்பெனி வெளியே சாஃப்ட்வேர் கம்பெனி என்று சொல்லிக்கொண்டாலும் அது ஒரு அவுட்சோர்சிங் கம்பெனி. பெங்களூரில் ஒரளவுக்கு நல்ல திறமையுடைய தேவைப்படும் கணினிமொழியில் இரண்டு அல்லது மூன்று வருட அனுபவம் உள்ளவர்களை வேலைக்கெடுத்து அவர்களை கோலாலம்பூருக்கு அனுப்பிவிடுவார்கள். இங்குள்ள அவர்களின் க்ளைன்ட் கம்பெனிகளில் நாங்கள் வேலை செய்யவேண்டும். தோராயமாக எப்போதும் ஒரு முப்பது பேர் இருப்போம். எல்லோரும் இந்தியர்கள். எல்லோரையும் அந்த அப்பார்ட்மெண்டில் ஃபளாட்டுக்கு நான்கு அல்லது ஐந்து பேர் என குடியமர்த்தியிருந்தார்கள். எல்லா வசதியும் கொண்ட நல்ல சௌகரியமான ஃப்ளாட்கள். நாங்கள் வாங்கும் சம்பளம் மலேசியர்களோடு ஒப்பிடும் போது குறைவு தான் என்றாலும் இந்திய மதிப்பில் நல்ல பணம்தான். 

அவர் டேபிளில் இரண்டு குவாட்டர் ப்லென்ட்ர்ஸ் ப்ரைட்டு விஸ்கியும் சிக்கனும் கடலைப்பருப்பும் தயாராக வைக்கப்பட்டிருந்தன. நான் வாங்கி வந்திருந்த எனது ஒரு பியர் கேனையும் அதனுடன் வைத்தேன். அவர் ஃப்ரிட்ஜில் இருந்து ஐஸ்குயூப்களை எடுத்து வந்து வைத்துபின்பு எங்களது ஆபீஸ் விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருவரும் மதுவருந்த ஆரம்பித்தோம். ஒரு மணி நேரத்தில் இருவரும் எங்கள் குவார்டர்களைக் காலி செய்திருந்தோம். நான் அடுத்து எனது பியரை திறந்தபோது அவர் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டார். 

‘பாபி எப்ப வராங்க’ என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்தேன்.

‘வருகிற பதினைந்தாம் தேதி. இன்னும் இரண்டு வாரங்களில்’ 

‘அப்ப கடைசியா ஒருமுறை இப்போ புகிட் பின்டாங்க் போலாமா?’ என்றேன் நமட்டுச் சிரிப்புடன்.

‘முடியவே முடியாது. கிருஷ்ணராய் இருந்த அந்த நேரம் முடிந்துவிட்டது. இப்போது இது நான் ராமராய் இருக்க வேண்டிய நேரம்’ என்றார் புன்னகையுடன்.

‘குறைந்தபட்சம் மசாஜாவது’

‘ம்ஹும். அது மசாஜோட மட்டும் நிக்காதுனு எனக்குத் தெரியும்’

‘போய் அந்த பாகிஸ்தானி கடைல சாப்பிட்டுட்டு மட்டும் வந்திடலாம்’

அவர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பார்சல் உணவைக் காண்பித்து ‘அதான் நான் ஏற்கனவே வாங்கி வச்சிட்டேன். இனி புக்கிட் பின்டாங்க் போகணும்னா வைஃப் வந்ததுக்கப்புறம் அவளோடதான் போகணும். மனச கட்டுப்படுத்தி வச்சிருக்கேன். நீ வேணா போய்ட்டு வா.’

‘தனியா போகணுமே’

‘உனக்கு போகணும்னா பனிரெண்டாவது மாடியில் இருக்கிற மஞ்சுநாத்த கூப்பிடு. அவன் எப்பவும் தயாரா இருப்பான்.’

‘மஞ்சுநாத்? எனக்கு யாருன்னே தெரியாது.’ 

‘ஃஜுரிச் க்ளைண்ட்ல இருக்கான்ல. டாட் நெட் டெவெலப்பர். கன்னடிஹா’ 

‘ம்ஹும்.’

‘நல்ல ஆளுதான் போ நீ. ஒரு வருஷமா இங்க இருக்குற, யாரச்சொன்னாலும் தெரியாதுங்கிற’

‘எனக்கு நம்ம ஃப்ளாட்ல இருக்கிறவங்க அப்புறம் 108ல இருக்கிறவங்க மட்டும் தான் தெரியும். வேற யாரையும் தெரியாது. அவனுகதான் கீழ ரெஸ்டாரண்டுக்காச்சும் வருவாங்க. மத்த யாரும் ரூம விட்டே வெளிய வரமாட்டானுக’

‘நீ தான் இப்பல்லாம் புகிட் பிண்டாங் போனாலும் ஒண்ணும் பண்றதில்லய. பீர் அடிச்சுட்டு இருப்ப. அப்புறம் ஏன் போகணும்னு சொல்ற. வேணும்னா கீழ போய் பீர் வாங்கிட்டு வா. நான் உனக்கு கம்பெனி கொடுக்கேன்’

‘வேணாம். வேணாம். சும்மாதான் கேட்டேன். ஒரு நல்ல ஹஸ்பண்டா இருக்கீங்களானு டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். டெஸ்ட்ல பாஸ் பண்ணிட்டிங்க’ என்று சிரித்தேன்.

அவர் தனது சாப்பாட்டை முடிப்பதற்கும் நான் எனது பியரை முடிப்பதற்கும் சரியாக இருந்தது. அவர் மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து விட்டு தனது கணினியில் பழைய கசல் பாடல்களை ஒலிக்கவிட்டார். நானும் அவரிடம் இருந்து ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக்கொண்டு அவர் வீட்டின் பால்கனியில் வந்து நின்று கொண்டேன். 

அந்த பதினெட்டாவது மாடியில் இருந்து கீழே பார்க்கும் போது இங்கிருந்து விழுந்தால் என்னவாகும் என்று தோன்றியவுடன் அதன் கம்பித்தடுப்பை இறுகப் பற்றிக்கொண்டேன். தூரத்தில் அந்த இரட்டைக்கோபுரம் அதன் மின் விளக்குகளோடு சிறியதாய் தெரிந்தது. அதன் அருகே தான் புகிட் பின்டாங்க் இருக்கிறது. மணி பத்தாகிறது. இப்போது அங்கு நல்ல கொண்டாட்டமாக இருக்கும். தரமான உணவகங்கள், மால்கள், இசையுடன் கூடிய பார்கள், மசாஜ் பார்லர்கள், தெருவில் நின்று ஹேப்பி எண்டிங் மசாஜுக்கு அழைக்கும் சீன முகப் பெண்கள், ஆங்காங்கே வாடிக்கையாளர்களை ரகசியமாக அழைத்து வர நிற்கும் பிம்ப்கள், அவர்கள் அழைத்துப் போகும் ஹோட்டல்கள் என்று உற்சாகம் நிரம்பி வழியும்.

முன்பெல்லாம் வெள்ளிக்கிழமை வந்தால் இந்நேரத்தில் ஹரீஸும் நானும் கிளம்பி இருப்போம். அவருக்குத்தான் இடங்கள் அத்துப்படி. நல்ல பெரிய ஹோட்டல்களில் உள்ள பார்லர்களுக்கு அழைத்துச் செல்வார். ரிசப்ஷனிலேயே வாக்கிடாக்கியுடன் ஒருவர் வந்து அழைத்துச் சென்று ஒரு தனிஅறையில் சென்று நம்மை உட்காரவைத்து அருந்த குளிர்பானம் கொடுப்பார்கள். அந்த அறையின் மணமும் அதன் அரையிருளான ஒளியமைப்புமே நம்மை பரவசமடையச் செய்யும். பின் வாக்கிடாக்கியில் அழைத்ததும் எல்லாப் பெண்களும் சிறந்த உடை ஒப்பனை நளினத்தோடு மயக்கும் பார்வையில் நம்முன் வந்து நிற்பார்கள். அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்ததும் அவளே நம்மை ஒரு அறைக்கு அழைத்துச்சொல்வாள். அவளே நம்மைக் குளிப்பாட்டி கட்டிலுக்கு அழைத்துச்சென்று காண்டம் அணிவித்து வழிநடத்துவாள். ஆரம்பத்தில் இருந்தே உங்களை உச்சத்திற்கு கொண்டுபோய் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதை முடித்துவிட எல்லா முஸ்தீபுகளையும் செய்வாள். 

ஆனால் சில செய்யக்கூடாதவைகள் உண்டு. முகம், உதட்டில் முத்தம் கொடுக்க கூடாது என்பது போன்றவை. எனக்கு முதல் சில தடவைகள் அவை பிரச்சனையாக இல்லை எனினும் பின் அந்த செக்ஸ் அவ்வளவு உல்லாசமாய் இல்லை. மேலும் ஒவ்வொரு முறையும் முடிந்தவுடன் சிலநிமிடங்கள் இருக்கும் குற்றவுணர்வு வேறு. ஆனாலும் இத்தனை பெண்களுடன் உறவு கொண்டுள்ளேன் என்ற எண்ணிக்கைக்காக சில சமயம் சென்று வந்த பின் தவிர்த்துவிட்டேன். அதன்பிறகெல்லாம் ஹரீஸுடன் சென்றால் அவர் வருவது வரை நான் ஏதேனும் பாரில் சென்று பியர் வாங்கி அருந்திக் கொண்டிருப்பேன். 

 அறை உள்ளேயிருந்து வந்த அந்த கசல் பாடல் பால்கனியில் லேசாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அதனுடன் சேர்ந்து கோலாலம்பூரின் இரவின் சப்தமும். காற்று மெலிதாக முகத்தை வருடிக்கொண்டிருந்தாலும் எனது நெற்றிப்பகுதி வியர்த்திருந்தது. மலைமேல் இருந்த கென்டிங் ஹைலேண்டின் விளக்கொளிகள் தூரத்தில் ஏதோ சிறிய நட்சத்திர கூட்டங்கள் போலத் தெரிந்தன. அந்த நட்சத்திரக் கூட்டத்திலிருந்து விலகி ஒரே ஒரு மங்கலான நட்சத்திரம் தனித்திருந்தது. அது அந்த மலைமேல் புதிதாக கட்டப்பட்டு யாருமே குடிபோகாமல் கைவிடப்பட்ட பிரசித்தியான ‘ஆம்பெர் கோர்ட்’ அப்பார்மெண்ட்டாக இருக்கலாம். 

அத்தனைப் பெண்கள் வரிசையில் வந்து நின்றால் கண்டிப்பாக அவளை யாரும் தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்ற எண்ணம் வந்து திடுக்கிடவைத்தது. மதுவின் ஆரம்பநேர ஆசுவாசத்திற்குப் பிறகு அது உள்ளிருந்து கசடுகள், கழிவிரக்கங்கள், வீண் எண்ணங்கள் என்று எல்லாவிதமான எதிர் உணர்ச்சிகளையும் கொண்டு வர ஆரம்பித்து விட்டிருக்கிறது. அவள் நின்றுகொண்டிருந்த அந்த திசையை நோக்கிப் பார்த்தேன். கட்டிடங்களும் மரங்களும் மறைத்திருந்தன. அவள் இன்னும் அங்கு தான் நின்று கொண்டிருப்பாளா? ஹரீஸும் சிகரெட்டை ஊதியவாறு பாடலை பாடிக்கொண்டே பால்கனிக்கு வந்து என் அருகில் நின்றார்.

‘ஹரீஸ் அந்த மெயின்ரோட்டுல பெட்ரோல் பங்க் பக்கத்துல ஒரு பொம்பளை நிக்கும். அதை நோட் பண்ணிருக்கீங்களா’ என்றேன்.

பாட்டுப் பாடுவதை நிறுத்திவிட்டு முகத்தைச் சுருக்கி என்னைப் பார்த்து ‘பாத்திருக்கேன். அவ்வளவு அவசரமா? அந்த மாதிரி ரோடு சைடுல இருக்கிற பொம்பளைக் கிட்டலாம் போகாத. அது சேப் கிடையாது’ என்று சிரித்தார்.

‘இல்ல இல்ல. அதுக்கில்ல. இன்னைக்கு வரும்போது பாத்தேன். பாக்க ரொம்ப கஷ்டமா இருந்திச்சு. அங்க யாரு வருவாங்கனு அங்க நின்னுகிட்டிருக்கு’

‘ஆமா பாவம்தான். பொதுவா இங்க ப்ராத்தல் பண்ற சீனப் பொண்ணுங்க எல்லாம் மலேசியாகாரங்க இல்ல. எல்லாம் சீனாவுல இருந்து வர்ரவங்க. இல்ல வியட்னாம், மியான்மர். அனேகமா அது மியான்மரா இருக்கும்னு நினைக்கேன். வேலைக்குன்னு கூட்டிட்டு வந்து இங்க இந்த வேலைக்கு தள்ளி விட்டுருவாங்க. இல்ல அவங்களே பணத்துக்காக மாறிருவாங்க. நிறைய பேருக்கு விசா வேலிட்டா இருக்காது. மாட்டிகிட்டா பிரச்சனைதான். கொஞ்சம் நல்லா இருக்கிற பொண்ணுங்க பார்லர்ல போய் சேர்ந்துகிடுவாங்க. கிடைக்கிற காசுல போலீசையும் கவனிச்சுகிடலாம். இத யார் சேத்துப்பாங்க. நீ போவியா? அதான் போலீசுக்கு பயந்து இங்க மறைவா வந்து நிக்கும் போல.’

அவள் சிறு பெண்ணாய் இருந்து இப்போது இப்படி ஆவது வரை அவள் கடந்து வந்திருக்க சாத்தியமான பல விதமான வாழ்க்கை முறைகள் என் கண்ணில் ஓடி மறைந்தன. அடக்கிவைக்க முயன்ற கோபமோ அழுகையோ தலையை கனக்கச் செய்தது. 

இருவரும் சிகரெட்டை புகைத்து முடித்தபின் ஹரிஸ் ‘இங்கயே படுத்துக்கிறியா’ என்று கேட்டார். 

‘இல்ல எனக்கு இன்னொரு பீர் வேணும் போல தெரியுது. நான் வாங்கிட்டு அப்படியே ரூமுக்கு போறேன்’ என்றேன்.

‘சரி. இது நான் என் மனைவியிடம் பேச வேண்டிய நேரம்’ என்று மீண்டும் கணினி அருகே சென்று உட்கார்ந்து கொண்டார்.

போதை மிதமாக ஏறி இருந்தது. அவரிடம் விடைபெற்று கீழே வந்தேன். அங்கிருந்த திறந்தவெளி உணவகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. எனது அப்பார்ட்மெண்ட் நோக்கி நடந்தேன். பாலத்தைக் கடக்கும் போது அந்த ஓடையின் சத்தம் தெளிவாகக் கேட்டுக்கொண்டிருந்தது. சென்று பாலத்தின் கீழ் எட்டிப் பார்த்து நின்றேன். சிறிது நேரத்தில் ஒடையின் சத்தமும் மறைந்து ஒரே நிசப்தம். ஏனோ அந்த நிசப்தம் மனதை தொந்தரவு செய்தது. ஓடை தனியாக ஓடி இருட்டில் கலந்து மறைந்தது. அவள் இன்னும் அங்கு நிற்கிறாளா என்று சென்று பார்த்துவிடலாம் என்று தோன்றியது. 

எனது அப்பார்ட்மெண்ட்டை தாண்டி அந்த சாலையை அடைந்து வலப்புறம் திரும்பி சாலையின் மறுபக்கத்தில் நடக்க ஆரம்பித்தேன். ஒரு பத்து நிமிடம் நடந்திருப்பேன். ஒரு சிறிய உணவகம் ஆளில்லாமல் அரை இருளில் திறந்திருந்தது. அதுதவிர அந்த இடத்தில் எந்த ஆள் நடமாட்டம் இல்லை, ஒருசில வாகனங்கள் இருமருங்கிலும் சென்று கொண்டிருந்தன. அவள் இன்னும் அங்கு இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டேன். பெட்ரோல் பங்க்கை தாண்டிய போது அவளைக் அங்கிருந்து காணமுடிந்தது. இன்னும் அந்த இடத்தில் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு ஏதோ யோசனையில் நின்று கொண்டிருந்தாள். 

பேருந்திலிருந்து பார்த்தபோது எப்படி இருந்தாளோ அப்படியே இருந்தாள். முகம் சோர்ந்திருந்தது. நான் அவளுக்கு நேரெதிரெ சாலையின் எதிர்புறத்தில் நின்று கொண்டிருந்தேன். இருட்டில் இருந்தது அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. சிறிது நேரம் நின்று அவளைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.  அங்கேயே முன்னும் பின்னும் எதையோ முனகியபடி நடந்து கொண்டிருப்பாள். ஏதேனும் இருசக்கரவாகனம் கடக்கும் போது ‘ஹே’ என்று சொல்லி சிரிப்பாள். பின் மீண்டும் நடை. பின் கைப்பைக்குள் இருந்து ஒரு கையடக்கமுள்ள ஒரு கண்ணாடியை எடுத்து தனது ஒப்பனையை சரிபார்த்துக் கொள்வாள். 

என்ன நினைத்துக் கொண்டிருப்பாள். தான் அவலட்சணமாக இருக்கிறோம் என்பது அவளுக்கு தெரிந்திருக்கும் அல்லவா? மனம் மேலும் கனமானது. யாருமே வரவில்லை என்றால் அவள் இதை விட்டுத்தொலைத்திருப்பாள் இல்லையா? ஆறு மாதங்களாக இங்கு இருக்கிறாள் என்றால் யாரேனும் இவளை அழைத்துச் செல்கிறார்கள் என்று தானே அர்த்தம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றேன். 

இருபது நிமிடங்கள் அவளைக் கவனித்திருப்பேன். திடீரென்று அந்த எண்ணம் தோன்றியது. எனது பேண்ட் பைக்குள் துழாவிப் பார்த்தேன். நூறு ரிங்கெட் இருந்தது. சாலையைக் கடந்து அவளை நோக்கி நடந்தேன். 

திடீரென்று அங்கு முளைத்து தன்னை நோக்கி வந்த உருவத்தைக் கூர்மையாக நோக்கினாள். பின் வெளிச்சத்தில் என்னைக் கண்டதும் ஒருவேளை சாலையைக் கடக்கிறான் என்று நினைத்துக்கொண்டாள் போல அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவளை நெருங்கும் போது நான் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ‘ஹே’ என்று உடலை அசைத்தவாறு சிரித்தாள். நான் எனது பதற்றத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ‘ஹாய் ஹௌ மச்’ என்றேன். அவளுக்கு புரியவில்லை. அவளைக் காட்டி ‘மசாஜ், ரிங்கிட்ஸ்’ என்று கூறி எவ்வளவு என்பது போல் கையைக் காட்டினேன். அவள் மலாயில் ஏதோ சொன்னாள். பின் எனக்கு புரியவில்லை என்றவுடன் ‘மசாஜ்’ என்று சொல்லிவிட்டு இல்லை என்பது போல் தலையை ஆட்டி பையிலிருந்து அவள் மொபைலை எடுத்து அதில் 80 என்று டைப் செய்து காண்பித்து ‘செக்ஸ்’ என்றாள். எண்பது ரிங்கிட்ஸ் அவளுக்கு அதிகம் தான் என்று மனதில் தோன்றி மறைந்தது. ‘காண்டம்’ என்று கேட்டதும் அவள் தனது கைப்பையைக் காட்டினாள். நான் பாக்கெட்டில் இருந்து நூறு ரிங்கட்டை எடுத்து அவளிடம் நீட்டினேன். சிரிப்புடன் அதை வாங்கி பையில் போட்டுக்கொண்டு என்னை வா என்று செய்கை செய்துவிட்டு முன்னால் நடந்தாள். 

போதை இன்னும் கொஞ்சம் வடிந்திருந்தது. அந்த சாலையில் இருந்து அவளுக்கு பின்புறம் ஒரு குறுகலான தெரு சென்றது. அதை நான் இவ்வளவு நாட்களாக கவனித்ததில்லை. அதில் நுழைந்து இடப்புறம் திரும்பினாள். அது இன்னும் கொஞ்சம் குறுகலான தெரு. அந்த தெருவிலும் ஓரிரு தெருவிளக்கைத்தவிர எந்த வெளிச்சமும் இல்லை. அதிலிருந்த இரண்டாவது கட்டிடத்தின் ஒரு ஆள் மட்டுமே செல்லக்கூடிய மேல்நோக்கி செல்லும் படிக்கட்டுகளில் ஏறினாள். அது ஒரு பழைய கட்டிடம். வெளியே சுண்ணாம்பு போய் கருப்படித்திருந்தது. சுவரின் இடைவெளியில் ஆங்காங்கே செடிகள் முளைத்துநின்றன.  தெருவிளக்கின் மீதமுள்ள வெளிச்சம் தவிர முழுக்கட்டிடமே இருண்டு இருந்தது. நான் எதுவும் பேசாமல் அவளைப் பின்தொடந்து சென்றேன். 

முதல் மாடியில் சென்று ஒரு அறையின் முன் நின்று அதன் கதவைத் திறந்தாள். அது தாழ்மட்டுமே போடப்பட்டிருந்தது. பூட்டிடப்படவில்லை. அந்த சமயத்தில் சுற்றி நோட்டமிட்டேன். அதே போல் நிறைய அறைகள் இருந்தன. சில அறைகளின் கதவின் இடைவெளியில் இருந்து மஞ்சள் விளக்கின் வெளிச்சமும் முணுமுணுப்புகளும் கசிந்து வந்து கொண்டிருந்தன. அறையின் உள்ளே நுழைந்ததும் மின்விசிறியை ஆன் செய்துவிட்டு கதவை தாழ்ப்பாள் போட்டாள். 

ஒரு சிறிய அறை ஒரு வாஷ்ரூம். அவ்வளவு தான். அந்த அறையையே ஒரே ஒரு பழைய படுக்கை நிறைத்திருந்தது. அதன் அருகே ஒரு சிறிய மேஜை. மேஜை மேல் ஒரு விளக்கு. கீழே குப்பைக்கூடை. படுக்கைக்கு பின்னேமூடி இருக்கும் கண்ணாடி ஜன்னல். அதன்மேல் செய்திதாள்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தப் படுக்கையை தவிர்த்து இரண்டு ஆட்கள் மட்டுமே நிற்க அங்கு இடம் இருந்தது. அந்த அறையை இதற்கு மட்டும் தான் பயன்படுத்துகிறாள் போலும். லேசான மஞ்சள் வெளிச்சம் அந்த மேஜை மேல் இருந்த விளக்கிலிருந்து வந்து கொண்டிருந்தது. அந்தக் குறைந்த வெளிச்சத்திலும் மூட்டைபூச்சியின் ரத்ததடங்கள் சுவர் முழுக்க தெரிந்தன. 

மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தாலும் அந்த அறையில் புழுக்கம் நிறைந்திருந்தது. அவள் தனது பையில் இருந்து ஒரு காண்டம் பாக்கெட்டை எடுத்து என்னிடம் கொடுத்து அவள் உடையை கழற்றிவிட்டு படுக்கையில் மல்லாந்து படுத்துக்கொண்டாள். அவள் உடம்பில் எந்த கவர்ச்சியும் இல்லை. நானும் எனது உடையை கழற்றிவிட்டேன். ஆனால் காண்டத்தை மாட்டும் அளவுக்கு இன்னும் உணர்ச்சி வரவில்லை. அதை கையிலேயே வைத்துக்கொண்டு அவள் உடல் மேல் சென்று படுத்து என் முகத்தை அவள் முகத்தில் இருந்து விலக்கி தலையணையை பார்த்தவாறு வைத்து கண்களை மூடி அவள் உடலை என்னுடைய உடலோடு தேய்த்தவாறு அவளது உடலை ஒவ்வொரு நடிகைகளின் உடலாக கற்பனை செய்யத்தொடங்கினேன். ஆனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. பின் அந்த உடலை சியோக் வீயின் உடலாக கற்பனை செய்த போது உடம்பு முழுக்க வெப்பம் அதிகரித்து விரைப்பு உண்டானது. அவசரமாக எழுந்து காண்டத்தை மாட்டிவிட்டு அதே நிலையில் சியோக் வீயை நினைத்து அவள் மீது வேகமாக இயங்கினேன். அவள் கைகள் என் முதுகின் மீது அலைபாய்ந்தது. அவளிடமிருந்து வந்த முனகல் சீரான இடைவெளியில் மிக செயற்கையாக இருந்தது. 

பத்து நிமிட இயக்கத்திற்கு பின் உச்சம் வெளிவரும் வேளையில் அவளிடமிருந்து விலகி எழுந்து விட்டேன். அப்போதுதான் பார்த்தேன். காண்டம் முழுவதுமாகவே கிழிந்திருந்தது. அதைப் பார்த்ததும் உடலில் கணநேரத்தில் வெப்பம் அதிகரித்து வியர்த்துக் கொட்டத்தொடங்கியது. இதயதுடிப்பின் வேகம் அதிகரித்து என் காதுகளால் தெளிவாக கேட்கமுடிந்தது. கொஞ்சநஞ்ச போதையும் மொத்தமாக வடிந்திருந்தது. எனது எண்ணங்கள் எல்லாம் சூன்யமாக ஆனது. கால்கள் தள்ளாடியது. 

அவள் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து பேயறைந்தது போல் இருந்த எனது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அனிச்சையாக காண்டத்தை கழற்றி குப்பைக்கூடையில் போட்டுவிட்டு விறுவிறுவென்று எனது உடையை மாட்டிக்கொண்டேன். இன்னும் இதயம் வேகமாகத்தான் அடித்துக் கொண்டிருந்தது. மூச்சு விட கடினமாயிருந்தது. உடலில் நடுக்கம் குறைந்தபாடில்லை. தொண்டை வறண்டுவிட்டிருந்தது. படுக்கையில் தளர்ந்து உட்கார்ந்தேன். அவள் எழுந்து வாஷ்ரூமிற்குச் சென்று வந்து மேஜை அருகே இருந்த ஹேங்கரில் இருந்து தனது உடையை எடுத்தாள்.

நான் சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு அவளைப் பாராமல் ‘எய்ட்ஸ்?’ என்று கேட்டேன். அவளிடம் இருந்து பதில் வரவில்லை. பின் அவளை நோக்கி முகத்தைத் திரும்பி அவளைக் காண்பித்து நடுங்கும் குரலில் மீண்டும் ‘எய்ட்ஸ்?’ என்று கேட்டேன். அவள் அதைப் புரிந்து கொண்டு தலையைக் குனிந்து என்னைப் பார்த்து லேசாக சிரித்துவிட்டு ‘இல்லை’ என்று தலையாட்டினாள். உட்கார்ந்திருந்தவாறே கண்களை மூடி என்னை ஒருங்கிணைக்க முயன்றேன். எனது உடல் கொஞ்சம் ஆசுவாசமடைந்திருந்தது போல் தோன்றியது. திடீரென்று அவளின் அந்தப் பார்வை நினைவுக்கு வர அது ஒரு காயம்பட்ட ஆட்டுக்குட்டியின் பார்வையை ஒத்திருந்ததை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தேன். அங்கிருந்து உடனே போகவேண்டும் போல் தோன்றியது. 

நான் அவளிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வேகமாக எழுந்து சென்று அறைக்கதவை திறக்க முயன்றேன். குறைவான வெளிச்சத்தில் அதன் தாழ்தட்டுப்படவில்லை. மீண்டும் அந்தப் பார்வையை எனது பிடரியில் உணர்ந்தபோது வெறிகொண்டு கதவைத் தள்ள முயன்றேன். அது திறக்கவில்லை. அவள் நிர்வாண உடலுடன் மெதுவாக நடந்து வந்து கதவின் மேலேயிருந்த தாழை விலக்கிவிட்டாள். நான் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் தலைகுனிந்து மௌனமாக கதவைத்திறந்து வேகமாக வெளியேறினேன். 

திங்களன்று சியோக் வீயிடம் அந்த வேலையை முடித்து விட்டதைக் கூறியதும் அவள் கண்கள் சுருங்கச் சிரித்தாள். ஏனோ அந்த சிரிப்பை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. 

அந்த இரவுக்குப்பின் இப்போதெல்லாம் நான் வேலை முடிந்து வரும்போது பேருந்தில் இடப்புற ஜன்னல் இருக்கையில் அமர்வது இல்லை. அந்தப் பெண் அதே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறாளா என்பதும் தெரியவில்லை. ஆனால் அவ்வப்போது அவளது பார்வையை எனது பிடரியில் உணருகிறேன்.

https://solvanam.com/2024/05/26/ஓரிரவு/

  • கருத்துக்கள உறவுகள்

அவளைப்போலவே இதுவும் 160 க்குமேற்பட்டோர் பார்த்துச் சென்றபின்பும் தனியாகவே நிற்கின்றது . .......ஒரு கருத்துக்கூட இல்லாமல் . ........!  😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.