Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

              பெருந்திணை மெய்யழகா ?

                                    - சோம.அழகு

    நான் வெகுவாக ரசித்து ரசித்துக் கழுவி ஊற்றிய ‘96’ திரைப்படத்தின் இயக்குநரது அடுத்த படம் ஒரு நல்ல மலையாளப் படம் போல இருப்பதாகச் சிலர் சொன்னதைக் கேட்டு காணச் சென்றேன். திரு. கமல் அவர்கள் பாடிய பாடலோ வேறொரு பிம்பத்தைத் தந்தது. சொந்தங்கள், பந்தங்கள், பாசங்கள், நேசங்கள், துக்கங்கள், துயரங்கள் என முகம் பதினெட்டு கோணலாகும் வரை கிட்னி, கணையம், கல்லீரல், மண்ணீரல் எல்லாவற்றையும் பிழி பிழியென்று பிழிந்தெடுக்கப்போகிறார்கள் என்ற என் எண்ணம் தவிடு பொடியானதில் மகிழ்ச்சியே. நன்னெறிப் பிரசங்கங்கள் எல்லாம் இல்லாமல் போகிற போக்கில் மனதை வருடி நல்லுணர்வைத் தந்த படம். இந்த இயக்குநருக்குப் படமாக்கல் சிறப்பாக வருகிறது என்பதில் சந்தேகமில்லை.

    ‘மெய்யழகன்’ என்பதை ஒரு முழு நீளப் படம் என்பதை விட நல்ல தேர்ந்த நான்கைந்து சிறுகதைகள் மிக இயல்பாக ஒன்றாகக் கோர்க்கப்பட்ட தொகுப்பு. கம்பீரமாகச் சீறி வரும் ‘தோனி’ காளை, சைக்கிள் கதை – உணர்வுப்பூர்வமாகப் புன்னகை பூக்கச் செய்பவை. அதிலும் போலீஸ் ஒருவர் வந்து காளையைப் பார்த்ததும் காக்கியைக் கழற்றி விட்டு ஏறு தழுவுதலில் கலந்து கொண்டு காக்கிச் சட்டை அணிந்து மீண்டும் போலீஸ் ஆக மாறிய பின் பொய்யான விறைப்புடன் ‘தடை செஞ்சிருக்காங்கன்னு தெரியும்ல? அப்புறம்?’ என மென்னகையுடன் மெய்யழகனின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டுச் செல்லும் காட்சி ரொம்பவே ரசனையாக இருந்தது. வெண்ணாற்றின் கரையோரம் அமர்ந்து சோழ வரலாற்றில் தொடங்கி ஈழம் சென்று தூத்துக்குடி வரையிலான பயணம் – ‘தோழர்’ மெய்யழகனின் கதாபாத்திரத்தை மனதிற்கு மிக நெருக்கமாக அழைத்து வந்தது. எல்லோருக்குள்ளும் இருக்க வேண்டிய சக உயிருக்கென கண்ணீர் விடும் உணர்வைக் கடத்திய அழுத்தமான வசனங்களும், அதை அழுகையும் சோகமும் கலந்து உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்திய மெய்யழகனின் முகமும் என் கண்களிலும் லேசாக நீர்த்திரையிட்டது. ‘பேசிட்டே இருக்காங்க’ என பெரும்பாலானோரால் சலித்துக்கொள்ளப்பட்ட இரண்டாம் பகுதிதான் கலவையான உணர்வுகளைத் தந்து ரொம்பவே ரசிக்க வைத்தது. 

    ‘படத்தின் நீளத்தைக் குறைக்க’ என்ற காரணம் சொல்லப்பட்டாலும் கத்தரிக்கப்பட்ட காட்சிகளின் தெரிவு எழுப்பும் ஒரே கேள்வி ‘இந்த அளவு கூட உண்மையையும் நியாயத்தையும் ஒருவன் பேசக் கேட்கும் துணிவில்லையா? மனசாட்சி உறுத்துகிறதா?’ 

முதல் பாதி முழுக்க கல்யாண வீட்டைச் சுற்றியே கதை நிகழ்ந்ததில் ‘அய்யயோ! அடுத்த பாதியில் சொந்தங்களுடன் மீண்டும் சேர்வதான வழக்கமான(cliché) பூச்சுவேலைகள் நிரந்திருக்குமோ’ என கொஞ்சமே கொஞ்சம் சலிப்பு படர்ந்தது. பின் அமைந்திருந்த கதை அமைப்பு அதை வேரோடு பிடுங்கி எறிந்து ஆசுவாசமளித்தது. இரு தனி நபர்களுக்கு இடையிலான தூய்மையான அன்பு அழகியல் ததும்ப பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. 

படம் முடிந்த உடன், அதன் தாக்கம்  மனதில் இருத்திச் சென்ற குறுநகையில் நானும் ஒரு நொடி மனம் பிறழ்ந்து உறவுகளை நினைத்தபடியே இருள் தெளிக்கப்பட்ட வானைப் பரிவோடு பார்த்தவாறே வந்து கொண்டிருந்தேன். உறவுகளில் அரிதான வெகு சில நல்ல உள்ளங்கள் அகக்கண்ணில் வந்து குளிர்ச்சியைப் படர விட்டுச் சென்றன. சடாரென்று மீதமுள்ள வன்மக் கிடங்குகள் வரிசையாக நினைவில் ‘இந்தா நானும் வந்துட்டேன்ல...’ என வரத் துவங்க, ‘சில்லென்று ஒரு காதல்’ திரைப்படத்தில் வரும் வடிவேலுவின் மனைவி கதாபாத்திரத்தைப் போல் ஒரு நொடி யோசித்துப் பின் முகம் சுழித்தவாறே ‘ச்சை…முடியாது…முடியாது’ என்று அபூர்வமாக என்னுள் எட்டிப் பார்த்த சினிமாத்தனத்தை எள்ளி நகையாடியது மனம். 

 “உங்க வீட்டுக்கு என் பங்களிப்பு இருக்கக் கூடாதா?” என அருள்மொழி கேட்காமலேயே அவரின் தேவைக்காகத் தனது மொத்த சேமிப்பு, காணாததற்கு மனைவியின் நகைகளையும் அடகு வைத்துத் தருவதாகக் கூறும் மெய்யழகனின் பாத்திரப் படைப்பு எதார்த்தத்தில் இருந்து சற்றே துருத்திக் கொண்டு மிகையாகவும் மடமையாகவும் தோன்றியது. ஒரு காட்சியில் மெய்யழகன் அருள்மொழியிடம் பல காலம் முன்பு அவர் அப்பாவிடம் இருந்து அடித்துப் பிடுங்கி வீட்டை வாங்கிக் கொண்ட உறவுகளைத் தனக்காக மன்னிக்கும்படி கேட்பார். எனக்குச் சிரிப்பை வரவழைத்த இடம் அது. 

நம்மை ஏமாற்றியவர்கள், நமது இயல்பே மொத்தமாக மாறி நம்முள் இறுக்கம் படரக் காரணமானவர்கள் மீது எழும் வெறுப்பு அவர்களிடமிருந்து நம்மை ஒதுங்கி இருக்கச் சொல்லிப் பணிக்கும். மனம் காலப்போக்கில் அவர்களை முற்றிலும் அந்நியர்களாக்கிவிடும். பிறகு ‘மன்னிப்பு’ என்னும் வார்த்தைக்கு என்ன பெரிய பொருள் இருக்கப் போகிறது? அவர்களுக்குத் தீங்கும் நினைக்க வேண்டாம்; கவலையும் கொள்ள வேண்டாம். மீண்டும் போய் உறவைப் புதுப்பிக்கும் எண்ணம் இல்லாத பட்சத்தில் நமக்கு நிகழ்ந்ததையும் நிகழ்த்தியவர்களையும் அடியோடு மறப்பதுதானே இயற்கையாக இருக்கும்? ‘ஒருவருக்கொருவர் குறுக்கிடாமல் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் செல்ல இந்த செயற்கைப் பெருந்தன்மை எல்லாம் எதற்கு?’ என்றே தோன்றியது. 

    இயக்குநரின் இரண்டு படங்களுக்கும் இரண்டு ஒற்றுமைகள் – எரிச்சலூட்டும் பெருந்திணை மற்றும் அநியாயத்திற்கு நல்லவனாகக் கட்டமைக்கப்பட்ட ஓர் ஆண் கதாபாத்திரம். ஒரு வேறுபாடு – முழுக்க முழுக்க இப்படி ஒருவர் இருக்க வாய்ப்பில்லையெனினும் எல்லாவற்றையும் மீறி ‘இப்படத்தில்’ மெய்யழகனின் கதாபாத்திரம் ரசிக்கக்கூடியதாக இருந்தது. இன்னோரு படத்த பத்திலாம் எதுக்குப் பேசீட்டு? 

அருள்மொழியின் உறவுக்காரப் பெண் வந்து தன் கணவன் வியாபாரத்தில் படுதோல்வி அடைந்த சொந்தக் கதை, அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட சோகக் கதையைக் கூறிய பின் “பேசாம உன்னையே கல்யாணம் பண்ணிருக்கலாம்” என்று அருள்மொழியிடம் ஏக்கத்தோடு கூறுவார். இருவருக்கும் தனித்தனி குடும்பங்கள் இருக்கின்றன. அப்பெண் தனது மணவாழ்வில் இருந்து வெளிவரவில்லை. மணமுறிவு ஆகியிருந்தாலும் கூட மணவாழ்க்கையில் இருக்கும் இன்னொரு ஆணிடம்(நகைச்சுவையாகக் கூட) இப்படிச் சொல்வது எப்படிச் சரியாகும்? 

பின்னர் கல்யாண வேலையில் தன்னை ஈடுபடுத்தும் பொருட்டு எழுந்து செல்கையில் தற்செயலாகத்(என்று நம்ப நாம் என்ன…?!) தவறான திசையில் நடக்கத் தொடங்கித் திரும்பிப் போகும் போது பட்டும் படாமல் அருள்மொழியின் தோளைத் தடவிச் செல்வார். அந்தத் தொடுதலில் தென்படும் வாஞ்சை நெருடவில்லையா? இன்னொரு காட்சியில் பந்தியில் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருக்கும் அருள்மொழியை ஏக்கத்தோடு/பாசத்தோடு… ஏதோ ஒரு கண்றாவியான உணர்வோடு திரும்பிப் பார்ப்பார். இவ்வகையான ஒழுக்கத்திற்கு மாறான பொருந்தாக் காதல் மீது இயக்குநருக்கு ஏன் இவ்வளவு தீராக் காதல்? Emotional affair தவறில்லை என்பது போல அதை இவ்வளவு மேன்மையாகக் காட்டுவதன் பெயர் ரசனை அல்ல. இவரது முதல் படத்தின் கதைக்கரு முழுக்க முழுக்க இதுதான். அழகியல், மென்னுணர்வுகள் என்ற போர்வையில் அநாகரிகத்தை நியாயப்படுத்தவோ சாதாரணமாக்கவோ முடியாது. இதுவெல்லாம் கவித்துவம் என்று நினைப்பவர்களுக்குத் தங்கள் துணை இதைப் போல் வேறு ஒருவரிடம் சொல்வதும் அதே கவிதை மண்ணாங்கட்டியாகத்தான் தெரியுமா? என்று மண்டையில் உறைக்குமாறு கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. 

படத்தின் மொழியிலேயே கூறுவதாயிருந்தால் இந்தப் புளிப்புக் காட்சிகள் நீங்கலாக ‘நெல்லிக்காய் சாப்டுட்டுத் தண்ணி குடிச்சாப்ல இருந்துச்சு’ படம். வெகு சில எழுத்துப் பிழைகளோடு வாசிக்கக் கிடைத்த ஓர் அருமையான கவிதை!

 

நன்றி 'திண்ணை' இணைய இதழ்.

https://puthu.thinnai.com/2024/10/06/பெருந்திணை-மெய்யழகா/

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு விமர்சனம், நன்றி. நானும் திரையில் பார்த்தேன். வெண்ணாற்றின் கரையோரம் அமர்ந்து சோழ வரலாற்றில் தொடங்கி ஈழம் வரை செல்லும்போது உறவுகளை இழந்தது கண் முன் வந்து நின்றது. அதிலும் கரிகாலன் கதையை தெரிவு செய்திருக்கிறார்கள். சூர்யா முன்பு ஒரு படத்தில் சொன்னதை திரும்பவும் ஞாபகப்படுத்துகிறார். "1 லட்சம் சனம் பக்கத்து நாட்டிலே சாகிற போது எங்களால் என்ன செய்ய முடிந்தது".

இது பிரேம் குமாரின் இரண்டாவது படமாகும், மேலும் அவரது முதல் படமான 96 போலவே கதைக்களமும் மிக எளிமையானது. அங்கு, இரண்டு பிரிந்த காதலர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். இங்கு, பிரிந்த இரண்டு உறவினர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.