இல்லை கோஷான். பாரதியின் எழுத்தும், இவருடைய எழுத்தும் ஒன்றில்லை. அருகில் கூட இல்லை. பாரதியின் ஆன்மாவிலேயே இசையும், தமிழும் இருந்தது. மிகவும் இலகுவான, எல்லோருக்கும் தெரிந்த காக்கைச் சிறகினிலே நந்தலாலா! - நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா! என்ற வரிகளுக்கு எந்த இசையும் தேவையில்லை. இந்த வரிகளின் அர்த்தம் புரிவதே ஒரு கவிதையான தருணம். பாரதியாரோ, புதுமைப்பித்தனோ, அசோகமித்திரனோ கவனிக்கப்படாமல் போனதே வரலாற்றில் வந்து போன வைரமுத்துகள் போன்றவர்களாலேயே. புதுமைப்பித்தனுக்கும் கல்கிக்கும் இருந்த பிணக்கு பற்றி அறிந்திருப்பீர்கள். அன்று புதுமைப்பித்தனை தமிழ் உலகம் கண்டு கொள்ளவில்லை. ஆனால் காலத்தால் அழியாமல் நிற்பவர் அவரே. அவருடைய 'சாப விமோசனம்' சிறுகதைக்கு ஈடாக தமிழில் ஒன்று கிடையவே கிடையாது. அசோகமித்திரன் ஏழைப் பிராமணன் ஆகவே இறந்துபோனார். அவருடைய 'புலிக்கலைஞன்' உலக கிளாசிக். ஆனாலும் அவர் வாழும் காலத்தில் இயக்குனர் ஷங்கரும், பாக்யராஜும், ஏ ஆர் முருகதாஸுமே எழுத்தாளர்களாக தமிழ் மக்களுக்கு தெரிந்தார்கள். அதை தாண்டினால் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஸ்குமார் போன்றோர். இதுவே தமிழ் சமுதாயம் அன்றும், இன்றும். வைரமுத்துவின் திகட்டும் வர்ணனைகளுடனான வானம்பாடிப் பாடல்கள் இன்னும் சில வருடங்களிலேயே மறைந்துவிடும். எம் ஜிஆரின் நடிப்பு போல, ரஜனியின் ஸ்டைல் போல, விஜய்யின் டான்ஸ் போல. இந்த உலகம் இருக்கும் வரை நவீன தமிழின் தலைமகனாக பாரதி இருப்பார். வைரமுத்துவோ அவருடைய பாடல்களோ இருக்காது. சரஸ்வதியே இறங்கி வந்து தான் இதை எழுதியிருக்க வேண்டும்: காற்றிலே குளிர்ந்த தென்னே? கண்ண பெருமானே -நீ கனலிலே சுடுவ தென்னே?கண்ண பெருமானே! சேற்றிலே குழம்ப லென்னே?கண்ண பெருமானே-நீ திக்கிலே தெளிந்த தென்னே?கண்ண பெருமானே! பாரதிக்கு ஈடு இணையே கிடையாது, கோஷான்...................
By
ரசோதரன் · 1 hour ago 1 hr