Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின்  வரலாற்றுப் பொறுப்பு

June 24, 2025

— கருணாகரன் —

“ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் எதிர்காலச் செயற்பாடுகள் எப்படி இருக்கும்? அதனுடைய அரசியல் எதிர்காலம்?” என்று கொழும்பில் உள்ள மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார்.

“நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்” – அவரிடமே கேள்வியைத் திருப்பினேன்.

“என்னால் மதிப்பிடவே முடியவில்லை. காரணம், எதிரும் புதிருமாக உள்ள கட்சிகள் எல்லாம் திடீரென்று ஒரு கூட்டுக்கு வந்துள்ளன. அதற்காக ஒரு உடன்படிக்கையையும் செய்திருக்கிறார்கள். என்றாலும் இதில் யாருடைய கருத்தை –கொள்கையை – நிலைப்பாட்டை யார் ஏற்பது என்ற தெளிவில்லை. இப்போதைய சூழலில் கஜேந்திரகுமாரின் நிலைப்பாடுதான் வலுப்பெற்றுள்ளது போலிருக்கு… இந்தப் போக்குக்கு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி எந்தளவுக்குத் தன்னை விட்டுக்கொடுக்கும்?.. என்று கேள்வி உண்டு. அதனால் இந்தக் கூட்டணி எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்? அல்லது நீடிக்கும் என்று தெரியாமலிருக்கு. அதைப்பொறுத்துத்தான் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் எதிர்காலம் அமையும்” என்றார் அவர். 

ஆகவே, தன்னுடைய கருத்தை – கணிப்பை – சரிபார்த்துக் கொள்வதற்காகவே என்னிடமும் இதைப் பற்றிக் கேட்டிருக்கிறார். ‘என்னிடமும்‘ என்று நான் பிரத்தியேகமாக இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், நிச்சயமாக நண்பர் இந்தக் கேள்வியை வேறு ஆட்களிடத்திலும் கேட்டிருப்பார். 

இதே கேள்வி, இந்தக் கூட்டணியைப் பற்றியும் அது கூட்டுச் சேர்ந்துள்ள ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி – தமிழ்த்தேசியப் பேரவை தொடர்பாகவும் பலரிடத்திலும் உண்டு. ஏன், தமிழ்த் தேசியப் பேரவைக்குள்ளும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குள்ளும்  கூட இந்தக் கேள்வி உண்டு. 

இந்தக் கேள்வியை நாம் வகைப்படுத்தலாம். 

1.   ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் அதனுடைய எதிர்கால அரசியல் தீர்மானங்களும் செயற்பாடுகளும்.

2.   ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் தமிழ்த்தேசியப் பேரவையும் அதனுடைய அரசியற் தீர்மானங்களும் செயற்பாடுகளும்.

3.   ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குள்ளிருக்கும் தனி ஒவ்வொரு கட்சியினதும் அரசியலும் அவற்றின் எதிர்காலமும்.

4.   ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் பிற தமிழ் அரசியற் தரப்புகளும் அவற்றுடனான எதிர்கால அரசியல் உறவும்.

5.   தமிழ்த்தேசியப் பேரவையோடு எந்தளவுக்குச் சமரசம் செய்து கொள்வது? அந்த உறவு முறிந்தால் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் அடுத்து என்ன என்ற நிலைப்பாடு. 

இதைவிட மேலும் சில கேள்விகளும் உண்டு. 

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி (DTNA), ஐந்து கட்சிகளின் கூட்டாகும். ஐந்து கட்சிகளுக்கும் தனித்தனியான அரசியற் கட்டமைப்பும் அரசியல் நிலைப்பாடுகளும் உண்டு. கூடவே, அவற்றுக்கான செல்வாக்குப் பிராந்தியங்களும் உள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அவை பெற்றிருந்த வாக்குகள், உறுப்பினர்களின் எண்ணிக்கை, பிரதேச மட்டத்திலான பிரதிநிதித்துவம் போன்றவற்றின் மூலம் இதை மேலும் அறிந்து கொள்ள முடியும்.

இந்த ஐந்து கட்சிகளும் சில அடிப்படைகளில் புரிந்துணர்வோடு ஒரு பொது மையத்தில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியாக இணைந்துள்ளன. இந்த இணைவுக்காக ஒவ்வொரு கட்சிகளும் சில விட்டுக் கொடுப்புகளையும் சில ஏற்றுக் கொள்ளுதல்களையும் செய்துமுள்ளன. இல்லையெனில் ஐக்கியமோ கூட்டோ சாத்தியமாகியிருக்காது. ஐக்கியம், கூட்டு என்று வரும்போது விட்டுக் கொடுப்பும் ஏற்றுக் கொள்ளுதலும் தவிர்க்க முடியாதது.

இந்த விட்டுக் கொடுப்பும் ஏற்றுக் கொள்ளுதலும் இரண்டு வகையில் பிரதானமாக அமையும்.

அ) தமது (கட்சியின்) இருப்பையும் வெற்றியையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முறையில் வெளிச் சூழலைக் கையாள்வதற்குத் தேவையான விட்டுக் கொடுப்பையும் ஏற்றுக் கொள்ளலையும் மேற்கொள்ளுதல். இங்கே கட்சியின் நலனே முதன்மை பெற்றிருக்கும்.

ஆ) மக்களின் நலனை முன்னிறுத்திச் சிந்திப்பதால் அமைவது. மக்களுடைய நலன், அவர்களுடைய கோரிக்கைகளுக்குப் பலம் சேர்த்தல், அவர்களுடைய அரசியல், சமூகப் பொருளாதார  எதிர்காலத்தைப் பலப்படுத்துதல், அதை வெற்றியடையச் செய்தலுக்காக பொதுத் தளமொன்றில் அவசியப்படும் விட்டுக் கொடுப்புகளையும் ஏற்றுக் கொள்ளதல்களையும் செய்தல்.

இங்கே ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் உள்ள ஐந்து கட்சிகளும் மேற்படி இரண்டின் அடிப்படையிலும் விட்டுக் கொடுப்புகளையும் ஏற்றுக் கொள்ளல்களையும் செய்துள்ளன என்றே கொள்ள முடியும். இந்த விட்டுக் கொடுப்புகளின் – ஏற்றுக் கொள்ளல்களின் எல்லை (வரம்பு) எதுவென்று தெரியாது. அதை அந்தந்தக் கட்சியினரே சொல்ல வேண்டும். அல்லது அதைக் காலமும் சூழ்நிலையுமே தீர்மானிக்கும். 

இதற்கப்பால் சரியான – தீர்க்க தரிசனமுடைய தலைமைத்துவம் இருக்குமானால், தமது அரசியல் உறுதிப்பாட்டுடன் ஐக்கியத்துக்காக – ஒற்றுமைக்காக – முடிந்தளவுக்கு பொறுமையுடன் நெகிழ்ந்து கொடுக்கும். அத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஐக்கியத்தை அல்லது கூட்டை வளப்படுத்தும். 

இந்தப் பின்னணியில், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் அதனுடைய எதிர்கால அரசியல் தீர்மானங்களும் செயற்பாடுகளும் எப்படி அமையவுள்ளன? எப்படி அமைய வேண்டும்? என்று பார்க்கலாம்.

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் (DTNA) உள்ள கட்சிகள் ஐந்தும் ஆயுதந் தாங்கிய அரசியல் வழிமுறையின் வழியாக வந்தவை. அதாவது சரிபிழைகளுக்கு அப்பால், செயற்பாட்டு அரசியற் பாரம்பரியத்தைக் கொண்டவை. தமது அரசியல் இலக்கை அடைவதற்கு செயற்பாட்டு அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் அதற்கான வழிமுறையையும் கொண்டிருந்தவை. குறிப்பாக நடைமுறை அரசியலை உள்ளடக்கியவை. அதேவேளை உட்கட்சி ஜனநாயகப் பற்றாக்குறையை அகத்தில் கொண்டிருப்பவை என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.. 

துரதிருஸ்டவசமாகக் கடந்த 15 க்கு மேற்பட்ட ஆண்டுகால அரசியற் சூழலில் இவையும் முற்றுமுழுதாக தமிழ் மிதவாத அரசியலுக்குப் பழக்கப்பட்டவையாகி விட்டன. அதாவது, தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போலாகி விட்டன. ஒரு பொதுமகன் அல்லது இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றுக்கும் இடையில் எத்தகைய வேறுபாட்டைக் காண முடியும்? அல்லது ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியானது மக்களுக்கு ஏனைய அரசியற் கட்சிகளிலிருந்து தன்னை எப்படி வேறுபடுத்திக் காட்டுகிறது?அதில் உள்ள ஒவ்வொரு கட்சியினதும் தனித்தன்மைகள் என்ன? என அறிய முடியாது.  

இந்த வேறுபாட்டை ஒருவர் அல்லது மக்கள் சமூகம் அறியும் (உணரும்) போதுதான் அவர்கள் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியை நோக்கித் தமது ஆதரவைத் திருப்ப முடியும். ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் வெற்றிக்கான திசையை நோக்கி நகரலாம். ஏனைய தரப்போடு பேரம்பேசும் ஆற்றலைப் பெறலாம். இல்லையெனில் தமிழரசுக் கட்சியும் காங்கிரசுமே தொடர்ந்தும் மேலாதிக்கம் செலுத்தும். இது காலப்போக்கில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியிலுள்ள கட்சிகளை மங்கச் செய்து இல்லாதொழித்து விடும். 

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியானது, இதுவரையில் தன்னை வேறுபடுத்திக் காட்டக் கூடிய எந்த அடையாளத்தையும் (வேறுபாட்டையும்)உணர்த்தவில்லை. அப்படிச் செய்ய வேண்டுமானால், அதற்கான அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பை அது உருவாக்கி, அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அதைச் செய்வதற்கான அனுபவமும் ஆற்றலும் அதற்கு உண்டு. ஆனால், அதை நோக்கி செயற்படுவதற்கு அது ஆர்வம் கொள்ளாமல் இருக்கிறது. இந்த நிலை நீடிக்குமானால், விரைவில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி காணாமல் போய் விடும். 

தமிழ் மிதவாத அரசியலில் ஈடுபட்டு வரும் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டமைப்புகள் எதையும் கொண்டவை அல்ல. அதனால் அவற்றுக்கு இதில் அனுபவமும் இல்லை. வெறுமனே சம்பிரதாயமான ‘தமிழ்க்கட்சிகள்‘ என்ற லேபிளை வைத்தே 75 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலை நடத்தியுள்ளன. அவற்றுக்கு அரசியல் முதலீடாக இருந்தது, சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியலும் அது மேற்கொண்ட தமிழின ஒடுக்குமுறையுமே. இதற்கு மேலும் வாய்ப்பாக இருந்தது, தமிழ்ச்சமூகத்தில் நிலவும் சாதிய மனோபாவமாகும். தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்த்தேசியவாதத்தைக் கூர்ந்து நோக்கினால், அது தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிய உணர்வின் வளர்ச்சியும் நீட்சியுமாகும். 

சாதியத்தில் உள்ள வேறுபாடுகளையும் வேறுபடுத்தல்களையும் தேசியவாதத்தில் அப்படியே பிரயோகித்துத் தன்னை வடிவமைத்துள்ளது தமிழ்த்தேசியவாதம். அதில் ஜனநாயகத் தன்மையோ, ஜனநாயக மயப்படுத்தலுக்கான வெளிகளோ வாய்ப்புகளோ இல்லை. எப்போதும் தன்னை நியாயப்படுத்திக் கொண்டு, எதிர்த்தரப்பின் மீது அனைத்து நீதியின்மைகளையும் தேடிச் சோடித்துப் சேகரித்துப் பட்டியற்படுத்துவதோடு, வெளிப்பரப்பைப் பற்றிய சிந்தனையைக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பதுமாக உள்ளது. இதை எந்தக் கேள்வியும் இல்லாமல் அப்படியே ஆதரித்துப் பின்பற்றுகிறது தமிழ்ச் சமூகம். தமிழ்ச் சமூகம் என்று இங்கே குறிப்பிடப்படுவது, தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் தமிழ் மேல் மத்தியதரத்தினரும் மத்திய வகுப்பினருமாகும். 

இதை எதிர்க்கக் கூடிய, எதிர்த்து வெற்றியைப் பெறக்கூடிய எத்தகைய பொறிமுறை வடிவத்தையும் மேற்படி இரண்டு கட்சிகளும் கொண்டிருக்கவில்லை. அவை அப்படிச் செயற்படப்போவதுமில்லை. ஏனென்றால், அவை பிரதிநிதித்துவம் செய்வதே அந்த வர்க்கத்தினரையே. என்றாலும் இந்த இரண்டு கட்சிகளும் தமிழ்ப் பெருந்திரள் மக்கள் மத்தியில் இன்னும் செல்வாக்கோடு இருப்பது ஆச்சரியமானது. துக்கத்துக்குரியது.

ஆனால், மேற்படி இரண்டு கட்சிகளின் (தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட) தவறுகளை எதிர்த்தே ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகள் (முன்பு விடுதலை இயக்கங்கள்) தமது அரசியற் பயணத்தை ஆரம்பித்தன. 1970 களில் விடுதலை இயக்கங்களாகத் தமது அரசியற் பயணத்தைத் தொடங்கிய இந்தத் தரப்பு, தமிழரசுக் கட்சிக்கும் காங்கிரசுக்கும் எதிராகச் செயற்பாட்டு அரசியல் முறைமையை அரங்கில் அறிமுகப்படுத்தியது. அது தனியே ஆயுதம் தாங்கிய நடவடிக்கை மட்டுமல்ல. அப்படி யாரும் வியாக்கியானப்படுத்தக் கூடாது. அதற்குமப்பால், மக்களுக்கான பன்முகத் தன்மையுடைய அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார அடிப்படைகளில் கரிசனை வைத்து செயற்பாட்டு வடிவங்கள்  உருவாக்கப்பட்டிருந்தன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

அதை இன்றைய சூழலுக்கு ஏற்ற விதமாக மறுவாக்கம் செய்து  மேலும் தொடர்வதே உண்மையில் மாற்று அரசியலாகும். இதற்குரிய (பொருத்தமான) கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, அவை செயற்பாட்டுக்குச் செல்ல வேண்டும். ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி என்ற பேரமைப்பை விரிவாக்கி, பலப்படுத்தி, வலுவாக்கம் செய்ய வேண்டும் என்றால், இது அவசியமாகும். 

முப்பது ஆண்டுகளுக்கு மேலான போரும் 50 ஆண்டுகளுக்கு மேலான ஒடுக்குமுறையும் ஈழத் தமிழ்ச்சமூகத்தைப் பல வகையிலும் நிலைகுலைவுக்கு உள்ளாக்கியுள்ளன. இலங்கையில் மிஞ்சியிருக்கும் தமிழ் மக்களில் 70 விழுக்காட்டினர் பாதிப்புக்குள்ளாகியவர்களாகும். இவர்களை மீட்டெடுக்கக் கூடிய, இவர்களுக்கு வாழ்வளிக்கக் கூடிய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகள் அவசியம். அதை ஒருபோதும் தமிழரசுக் கட்சியும் காங்கிரசும் செய்யப்போவதில்லை. அவற்றின் செல்வாக்குப் பிராந்தியம் (வாக்காளர்கள்) அநேகமாக படித்த மேற்தட்டு வர்க்கத்தினர் மற்றும் மத்திய தர வகுப்பினர். அவர்களே அடித்தட்டு மக்களின் மீதும் கருத்தியல் செல்வாக்கைச் செலுத்துகின்றனர். 

இதற்குக் காரணம், அடித்தட்டு மக்கள் அல்லது கீழ் மத்தியதர வர்க்கம் சுய பொருளாதார, சமூக, பண்பாட்டு, அரசியல் தளத்தை வலுவாகக் கொண்டதல்ல. அதனால் அது தனக்கு மேலுள்ள தரப்பின் இழுவிசைக்கு தவிர்க்கமுடியாமல் உட்பட வேண்டியுள்ளது. அதனுடைய இழுவிசைக்கு வெளியிலுள்ள இன்னொரு தொகுதி மக்கள் தென்னிலைங்கைக் கட்சிகளையும் அவற்றோடு உறவான பிராந்தியக் கட்சிகளை நோக்கிச் செல்கின்றனர். 

இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் ஆய்வு (பரிசீலனை) செய்ய வேண்டியது, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பொறுப்பாகும். கதிரைகளை விட்டுக் களத்துக்குச் செல்ல வேண்டும் என்பதே இதனுடைய பொருள். தன்னுடைய இளைய உறுப்பினர்களைப் புதிய – செயற்பாட்டு அரசியலுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். களம் என்பது மக்கள் மட்டத்தில் என்று பொருள்படும். மக்களுடனான உறவு வலுப்படும்போது செல்வாக்கு மண்டலம் விரிவு பெறும்.

தன்னை வேறுபடுத்திக் காட்டுவது வேலைகளால், நடைமுறைகளால், வித்தியாசங்களால், பயன்பொருத்தமான பெறுமானங்களால் என்பதை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி உணர வேண்டும். அது சரியாக உணர்ந்து செயற்பட்டால், அந்த உணர்கை மக்களிடத்திலும் நிச்சயமாக நிகழும். அதுவே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியை விரிவாக்கிப் பலப்படுத்தும். இதில் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றின் அரசியலை ஏற்காத தரப்பினரும் இணைந்து கொள்வர். 

இது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் அரசியலையும் அதனுடைய கட்டமைப்பையும் புத்தாக்கம் செய்வதாக அமையும். மக்களிடத்திலே செல்வாக்கைப் பெறும் தரப்பு ஒன்றுதான்  தன்னுடைய அரசியலை மக்களிடத்திலே துணிச்சலாக அறிமுகப்படுத்த முடியும். ஆனால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு ஒரு தடுமாற்றம் உள்ளதைக் காண முடிகிறது. அவர்கள், வெளியே தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், மணிவண்ணன், விக்கினேஸ்வரன் போன்ற தரப்பினரால்  பேசப்படுகின்ற தமிழ்த்தேசியவாத அரசிலையையே தாமும் பேச வேண்டும். அப்படிப் பேசினால்தான் மக்கள் தங்களை அங்கீகரிப்பார்கள் என்ற தவறான எண்ணமுள்ளது. இல்லையென்றால் தமது கடந்தகாலக் குறைபாடுகள் மேலெழுந்து கருந்திரையாக எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் என்று அஞ்சுகிறார்கள்.

இது தேவையற்ற அச்சமாகும். ஈழத் தமிழ் அரசியலில் எவரும் – எந்தத் தரப்பினரும் தங்களை வெற்றிகரமான தரப்பு என்று சொல்ல முடியாது. அனைத்துத் தரப்பும் தோல்விகளையும் பலவீனங்களையும் பாதிப்புகளையும் மக்களுக்குப் பரிசளித்தவையே. எல்லாத் தரப்பும் ஏதோ ஒரு வகையில் சிங்கள மேலாதிக்கத் தரப்பிடம் தோற்றவையே. எல்லாத் தரப்பினரும் ஏதோ சந்தர்ப்பங்களில் இலங்கை – இந்திய அரசுகளோடு ஒத்துழைத்தவை அல்லது சேர்ந்து நின்றவையே. சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொன்னால், எவரும் சுத்தவாளிகளில்லை. எவரும் வெற்றிவீரர்களில்லை. 

இந்த யதார்த்தத்தை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மக்களிடம் துணிச்சலாக முன்வைப்பது அவசியம். அதற்கு வலுவானதொரு ஊடகக் கட்டமைப்பு தேவை. அது இன்றைய சூழலில் இலகுவானது. அதற்கான தொழில் நுட்பமும் அதில் தேர்ச்சியுள்ளோரும் தாராளமாக உதவுக் கூடிய நிலையில் உள்ளன.

விடுதலைப் புலிகள் களத்தில் இல்லாமற்போய் 15 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் அவர்களுடைய அரசியல் நினைவலைகளும் அரசியற் தொடர்ச்சியும் அடையாளங்களும் அவர்கள் உருவாக்கிய பண்பாட்டுச் சுவடுகளும் இன்றும் தமிழ் மனங்களிலும் சமூக வெளியிலும் பலமாகவே உள்ளன. இதற்குக் காரணம், 30 ஆண்டுகளாக ஊடகங்களின் வழியாக மக்களிடம் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கு புலிகள் மேற்கொண்ட கரிசனையும் உத்திகளுமே. அதை மேவிச் செல்ல வேண்டுமானால், அல்லது இன்றைய காலகட்டத்துக்குரிய அரசியல் முன்னெடுப்பைச் செய்ய வேண்டுமென்றால், அதற்குரிய ஊடகப் பொறிமுறை அவசியம். இதைப்பற்றி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். 

ஆனால், இன்று வரையில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கோ அதில் உள்ள எந்தவொரு கட்சிக்குமோ திறனுடைய இணையத் தளங்கூட இல்லை. அதிகமேன், சமூக வலைத்தளங்களில் ஊட அதற்கான அடையாளத்தைக் காண முடியவில்லை. இந்த நிலையில் எப்படி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தன்னை ஒரு வலுவான தரப்பாக அரசியல் அரங்கிலும் சமூக வெளியிலும் முன்னிறுத்த முடியும்? இந்தக் குறைபாட்டினால்தான் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ள இளைய – புதிய முகங்கள் எவையும் பரந்து பட்ட மக்களிடம் சென்று சேரவில்லை. இப்போதுள்ள வெகுஜன ஊடகங்களில் (mainstream media) தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றுக்கான சார்பு வெளிகளே அதிகமாக உண்டு. இதை இன்னொன்றால்தான் சமப்படுத்தவும் மேலோங்கவும் முடியும்.  

இவ்வாறான ஒரு நிலை உருவாகும்போதுதான் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் தமிழ்த்தேசியப் பேரவையும் அதனுடைய அரசியற் தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் குறித்து ஒரு தீர்க்கமான – சமனிலைப்படுத்தப்பட்ட உரையாடலைச் செய்வதற்கு வாய்ப்புண்டு. மட்டுமல்ல, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குள்ளிருக்கும் தனி ஒவ்வொரு கட்சியினதும் அரசியலும் அவற்றின் எதிர்காலமும் பாதுகாக்கப்படுவதும் அது மேற்கொள்ளக் கூடிய புத்தாக்க அரசியலினால்தான் அமையும். அதுதான் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் பிற தமிழ் அரசியற் தரப்புகளும் அவற்றுடனான எதிர்கால அரசியல் உறவையும் தீர்மானிக்கும். 

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைவர்கள் தமது தரப்பை முழுவதுமாகக் கட்டியெழுப்ப வேண்டிய வரலாற்றுச் சூழலில் உள்ளனர். அதாவது புத்தாக்கச் சிந்தனையோடு கடுமையான உழைக்க வேண்டிய நிலையில் – நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். 

மாற்று அரசியலைத் தேடி அலையும் தமிழ்ச்சமூகம் இறுதியாக வந்து சேர்ந்துள்ள இடம் தேசிய மக்கள் சக்தியாகும். நாளை அவர்கள் இன்னொரு சக்தியைத் தேடக் கூடும். மடிக்குள் மருந்திருக்கும்போது மலையெல்லாம் தேட வேண்டிய தேவை என்ன என்று தன்னை மாற்றுச் சக்தியாக உருவாக்கி நிரூபிப்பதே ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் வேலை. இதில் அது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று, கிழக்கின் அரசியல் உணர்வையும் யதார்த்தத்தையும்.  

கிழக்கு மாகாணம் வரவர தமிழ்த்தேசியவாதத் தரப்பின் அரசியலில் இருந்து விடுபடும் – விலகிச் செல்லும் ஒரு யதார்த்தத்தில் உள்ளது. அங்குள்ள பிள்ளையான் – கருணா – வியாழேந்திரன் போன்றோரின் அரசியலோடு மட்டும் சம்மந்தப்படுத்தி இதைக் குறிப்பிடவில்லை. கிழக்கிலுள்ள புத்திஜீவிகள், சமூக அமைப்புகள் போன்ற பிற தரப்புக் குரல்களையும் உணர்வுகளையும் ஏனைய அரசியல் ஈடுபட்டாளர்களையும் கவனித்தே இந்தக் கருத்து இங்கே முன்வைக்கப்படுகிறது.

கிழக்கிற்கென – கிழக்கை மையப்படுத்திய –  ஒரு இணைய ஊடகத்தைக் கூட தமிழ்த்தேசியவாதத் தரப்புகள் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. அங்குள்ள அரசியல், சமூக, பண்பாட்டு வெளியும் யதார்த்தமும் வேறானது. அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதன் வெளிப்பாடே இந்த விடுபடலும் விலக்கலுமாகும். இதை ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி புரிந்து செயற்படுவது அவசியமாகும்.

தமிழ்ப் பெருந்திரள் சமூகத்தின் விடுதலைக்கு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி பங்களிக்க வேண்டிய பொறுப்பு பல வகையிலும் உண்டு. குறிப்பாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பினர் என்ற வகையில், தமிழ்ச் சமூகம் கூடுதலான பாதிப்பை சந்திப்பதற்கு இந்தக் கூட்டணியினரும் காரணமாகியுள்ளனர். ஆகவே இதையெல்லாம் கவனத்திற் கொண்டு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி செயற்பட வேண்டும். வரலாற்றைக் கட்டமைக்க – மாற்றியமைக்க வேண்டும்.

https://arangamnews.com/?p=12114

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.