Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது நான் சில வருடங்களின் முன்னர் எழுதிய நாடகம் ஒன்று. இங்கு யாழ் களத்தில் இருந்தால் இது யாருக்கேனும் உபயோகப்படலாம் என்றும், அத்துடன் நான் எழுதியவை அப்படியே மறைந்து போகாமல் இருக்கவும் கூடும் என்ற நோக்கில் இங்கு இவற்றை பதிவிடுகின்றேன். மோகன் அண்ணாவிற்கும், கள நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றி.

புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்னும் அருமையான சிறுகதையை தழுவியே இந்த நாடகத்தை எழுதினேன். அவருடைய இந்தக் கதையும், வேறு பல தலை சிறந்த கதைகளும் சென்னை வாசிகசாலை இணையத் தளத்தில் கிடைக்கின்றது. அவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்.....................

https://www.chennailibrary.com/ppn/story/kadavulumkandasamyppillaiyum.html


அம்மனும் அமிர்தமும்

காட்சி  1

(அமிர்தவல்லி பாட்டி தரையில் அமர்ந்திருக்கிறார். பாட்டியின் மகள் பார்வதி கையில் வேலையுடன் அவசரத்துடன் அங்கும் இங்கும் ஓடிகிறார். பாட்டியின் பேத்தி லக்க்ஷனா மொபைல் போனை நோண்டியபடி இருக்கிறார். வீட்டு போன் அடிக்கின்றது.)

அமிர்தம்: யாராவது அந்த போனை எடுங்கோவன். (லக்க்ஷனாவை நோக்கி) இவள் ஒருத்தி காதுக்குள்ள ஒன்றை போட்டுவிடுவாள். எங்கட காலத்தில காது கேட்காவிட்டால் மிஷின் போடுவினம், இப்ப காது கேட்கக்கூடாது என்று போடினம்.

பார்வதி: (கொஞ்சம் அதட்டலாக) அது சும்மா சும்மா அடிக்கும், எடுக்கத் தேவையில்ல.

அமிர்தம்: யாரோ ஒரு ஆள் எங்கட நம்பரை தேடி எடித்து அடிக்கிறான், எடுக்காமல் விடுகிறது மரியாதை இல்லை. நாலு சனத்தை மதிச்சு பழகவேண்டும். இப்ப சனமும் இல்ல, சாத்திரமும் இல்ல, ஆத்திரம் மட்டும்தான் எல்லாரிட்டயும் இருக்குது.

லக்க்ஷனா: (காதிலிருந்து கழட்டியபடி) அம்மாச்சி, ம்ம்ம்…........ இப்பிடித்தான் நீங்கள் ஒருவனை மதிச்சு, அவனும் எறும்புக்கு மருந்து அடிக்க வந்து, இப்ப இந்த தெருவில ஒரு வீட்லயும் எறும்பே இல்ல. எல்லா எறும்பும் எங்கட வீட்லதான் குடியிருக்கிது.

பார்வதி: நான் அவனோட எவ்வளவு சண்டை போட்டன்................... அவன் கடைசியா உங்கட வீட்ல யாருக்கோ சர்க்கரை வியாதி இருக்கு, எறும்பு இந்த வீட்டைவிட்டு போகவே போகாது என்று சாபம் போட்டுவிட்டு போனான்.

அமிர்தம்: வயசு போனா எல்லாருக்கும் அது வரும். சொல்லிக்காட்டத் தேவையில்ல. நாங்கள் என்றாலும் நல்லா ஓடியாடி உழைச்சோம்......... இப்பத்தான் இது எல்லாம் வருது............ இவ்வளவு நாளும் கல்லுப் பிள்ளையார் மாதிரி அப்பிடியே இருந்தனாங்கள்தானே.

பார்வதி: நான் ஏன் சொல்லிக்காட்டிறன்? வந்தவனுக்கு தேவையில்லாத வீட்டுக் கதைகளை சொல்லி, அவன்தான் வாசலில நின்று எல்லாருக்கும் நியூஸ் வாசிச்சு விட்டுப்போனவன்.

அமிர்தம்: (மெல்ல எழுந்தபடி) லக்க்ஷனா, அந்தக் கண்ணாடியை எடுத்து தா பிள்ளை. ஏதாவது நியூஸ் பார்ப்பம்.  உறவுக்கு பகை கதை என்று என் கதை ஆயிட்டுது.

(லக்க்ஷனா காதில் விழாததால் அசையாமல் இருக்க, பார்வதி கண்ணாடியை எடுத்துக்கொடுக்கிறார்.)

அமிர்தம்: (கண்ணாடியை வாங்க்கிக்கொண்டே)  நான் என்ரை பேத்தியைத்தானே கேட்டனான்................

பார்வதி: அவவின்ட கண்ணாடியையே நான் தான் தேடவேண்டும். இந்த வீட்ல மனிசரையும் அவை அவையின்ட சாப்பாட்டுக் கோப்பையையும் தவிர மற்றதெல்லாம் மறைந்து மறைந்து தோன்றும். ஒரு நாளுக்கு நானும் இப்படியே மறைந்து போகிறன்...............

அமிர்தம்:  (சிரித்தபடியே) அவசரப் படாத மகளே,  மனிசர் மறைந்தா திரும்ப தோன்றுவினம் என்று உறுதியா சொல்ல முடியாது............. நீ வேற புண்ணியம் செய்தவள்.............. இல்லாட்டி எனக்கு மகளாக பிறந்திருப்பியே?

(பார்வதி காதில் வாங்காமல் செல்கிறார். அமிர்தம் எழும்பி பேப்பரை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறார்.)

அமிர்தம்: கடைக்கு போன பெண் கடைசிவரை திரும்பவில்ல................... எப்படி திரும்பும்? வீட்ல அதுக்கு என்ன கொடுமையோ? எங்கயும் கிணத்திலயோ குளத்திலயோ குதிச்சு இருக்குமோ................... சீச்சீ, அப்படியெல்லாம் இருக்காது, எல்லாருக்கும் நீச்சல் வேற இப்ப தெரியும். நான் தான் ஒன்றையும் பழகாமல் இருந்திட்டன்.

லக்க்ஷனா: அம்மாச்சி, அடுத்த வரியையும் படியுங்கோ.

அமிர்தம்:  காரியச்செவிடு என்று சொல்லுறது, கொம்மா இவ்வளவு சத்தம் போட்டும் தவம் கலையாமல் இருந்தாய். ம்ம்ம்…….அடுத்த வரியில என்ன இருக்குது…பக்கத்து தெருவில பையனும் மிஸ்ஸிங் ஆச்சரியக்குறி ஆச்சரியக்குறி. இதென்னடி ரெண்டு நியூஸை கலந்து போட்டிருக்கிறாங்கள்.

(பார்வதி உள்ளே வருகிறார்.)

பார்வதி:  பாட்டியும் பேத்தியும் இப்படியான கதை என்றால் சிறப்பாக ஆராய்ச்சி செய்வீங்களே. அது ரெண்டு கதை இல்ல, ஒரு கதைதான். ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டு ஓடியிட்டுதாம்.

அமிர்தம்: வேலியில இருக்கிற கதியால இழுத்துக்கொண்டு ஓடுகிற மாதிரி சாதாரணமாய் சொல்லுகிறாய்.

லக்க்ஷனா: அதொன்றும் அப்படியில்ல, அதுகள் விரும்பியிருக்கும், வீட்டுக்காரர் எதிர்த்திருப்பினம், வேற என்ன வழி இருக்குது?

அமிர்தம்: என்னடி பிள்ளை, ஆ ஊ என்றா ஓடிறம் மறையுறம் என்று  பீதியை கிளப்பிகிறீயள். ஒலிம்பிக் பக்கம் போய் ஓடுறதுதானே, பதக்கமும் கிடைச்ச மாதிரி.................... அதென்னடி பிள்ளை தணலை அள்ளி தண்ணிக்குள்ள கொட்டின மாதிரி ஒரு சத்தம் வருது.

லக்க்ஷனா:  உங்கட மகள் தான் மூச்சை புசுபுசுவென்று விடுகிறா.

பார்வதி: தணலை தள்ளி தலையில கொட்டுங்கோ. பார்த்துப் பார்த்து வளர்த்துவிட, அவை ஓடிவினமாம், இவை பதக்கத்தோட நிற்பினமாம். பிள்ளையளுக்கு நல்ல புத்திமதி சொல்லுறத விட்டிட்டு, அதுகளோட சேர்ந்து கூத்து நடக்குது இங்க.

அமிர்தம்: நான் எங்கயடி கூத்தாடிறன், சரியா நடக்ககூட முடியிதில்ல, முட்டி வாதம் வந்திட்டுது போல.

பார்வதி: சும்மா கதையை மாத்தாதேங்கோ. டொக்டரிட்டை போனா, நீங்க நல்ல சுகமாக இருக்கிற மாதிரியும், டொக்டருக்குத்தான் ஏதோ வருத்தம் மாதிரியும் கதைக்கிறது.  நீங்கள் சொல்லிச்சொல்லியே அந்தாளுக்கு இப்ப ஏதோ வந்துட்டுதாம்.

அமிர்தம்:  அடியே, அந்தாளுக்கு வருத்தம் முதலே இருந்தது. நான் ஆட்களை பார்த்தவுடனேயே அப்படியே சொல்லிவிடுவன். அந்தாளுக்கு மூச்சு வாயாலயும் பேச்சு மூக்காலயும் வந்துகொண்டிருந்தது.

பார்வதி: ஓம் ஓம், எல்லாரையும் நெளிச்சு இப்படியே நாக்கால மூக்கை தொடுங்கோ. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் சனங்கள் எங்களை பழிக்கிறமாதிரி நடந்துவிடும்.

அமிர்தம்: அம்மா தாயே, நான் இனி ஒன்றும் சொல்ல வரவில்ல. பிறகு என்னாலதான் இப்படி எல்லாம் நடந்தது என்று சொல்லவும் வேண்டாம். சரி, மெதுமெதுவா இந்த கோயிலுக்கு ஒருக்கா போட்டு வாறன்.

(தொடரும்.......................)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 2

(அமிர்தம் அம்மன் கோயிலில் கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்.)

அமிர்தம்: அம்மாளாச்சி, நான் சின்னனாக இருந்தபோது சின்னப்பிள்ளைகளை ஒருவரும் மதிக்கவில்லை. எனக்கு வயசானப் பிறகு வயசு போனவர்களை ஒருவரும் மதிக்கினம் இல்ல. பூமி சுத்துது, நான் மட்டும் ஆணி அடிச்சு வைச்ச மாதிரி அப்பிடியே நிற்கிறன். ஆயிரம் கண்ணில ஒரு கண்ணை திறந்து என்னைப் பார் தாயே....................

(அமிர்தம் கண்ணை மூடி, முணுமுணுத்து கும்பிடுகிறார். கண்ணைத் திறந்து பார்க்கும்போது அவரின் பக்கத்தில் ஒருவர் நிற்கிறார்.)

அமிர்தம்: (ஆச்சரியமாக) ம்ம்ம்….திடீரென்று வந்து பக்கத்தில நிற்கிறீங்கள், புதுசா வேற இருக்கிறீங்கள், ஆனா பழகின மாதிரியும் இருக்குது….......... எங்கயிருந்து வாறீங்கள்?

பாரதம்: (கோயில் உள்ளே கையை காட்டி) அங்கேயிருந்து தான் நான் வருகிறேன்.

அமிர்தம்: யார் நீங்கள் ஐயரோட வீட்டுக்காரியே.............. ஐயரின் ஒரு ஆளை எனக்கு தெரியும்.......... ஐயருக்கு இன்னுமொரு வீடு இருக்கிற சங்கதி எனக்கு தெரியாது............ அதுவும் சரிதான், இதெல்லாம் என்ன சொல்லிச் செய்யிற விசயமே.....................

(பாரதம் சிரிக்கிறார்).

பாரதம்: நான் ஐயரோட வீட்டுக்காரியில்ல........... ஐயனோட வீட்டுக்காரி. 

(அமிர்தம் எதுவும் புரியாமல் முழிக்கிறார்).

அமிர்தம்: எந்த ஐயன்….

பாரதம்: அண்டசராசரத்தையும் படைத்து, படைத்ததெல்லாவற்றையும் அழித்து, அழித்ததை எரித்து, எரித்ததை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு திரியும் அந்த ஐயனோட வீட்டுக்காரி நான்.

அமிர்தம்:  இது என்ன கூத்து தாயே, நேரிலயே வந்துவிட்டீர்கள். பக்தையே உன் பக்தியில் நாம் மனமுருகிவிட்டோம், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டு, கையில ஒரு வரத்தை கொடுத்துவிடாதே அம்மா................

பாரதம்: எல்லா மானிடருமே முதலில் எங்களிடம் கேட்பது வரம்தான்........... உனக்கு ஏன் வேண்டாம் என்கிறாய், அமிர்தம்?

அமிர்தம்: கடவுளிடம் வரம் வாங்கி, இதுவரை இந்த பூமியில நல்லா வாழ்ந்த ஒரு மனிதனும் கிடையாது.  கொடுக்கிற மாதிரி கொடுத்துவிட்டு, எல்லாவற்றையும் பின்னால் பிடுங்கி விடுவீர்கள். இருந்தததையும் இழந்து, ஓடி ஒழிந்து, அழிந்தவர்தான் எல்லோரும்.

பாரதம்: நன்றாகவே பேசுகிறாய் அமிர்தம். ஆனால் நான் இப்போது வரம் கொடுப்பதற்காக இங்கு வரவில்லை. பூலோகத்தில் சில நாட்கள் உன்னோடு தங்கியிருக்க வந்துள்ளேன். அங்கு எனக்கு நிம்மதியே இல்லை.

அமிர்தம்:  அது எப்படியம்மா முடியும்? கடவுள் என்று தெரிந்தாலே உன்னை நிம்மதியாகவே இருக்கவிடமாட்டார்களே. கடவுளின் அவதாரம் என்று சொன்னவர்களையே அறைக்குள் வைத்து படம் எடுத்து, அல்லோலகல்லோலம் செய்தார்கள். முதலில், நீங்கள் யாருடைய கடவுள் என்கிற பிரச்சனையிலயே உலகம் அழிந்துவிடும்.................

பாரதம்: நீ நான் கடவுள் என்று எவரிடமும் சொல்லாதே. நான் சாதாரண மானிடர் போல இருந்துவிட்டு போகிறேன்.

அமிர்தம்: அது சரி தாயே.............  நீங்கள் இங்கு வரவேண்டிய அளவிற்கு அங்கு என்ன பிரச்சனை?

பாரதம்: ஒன்றா, இரண்டா சொல்லுவதற்கு...........  சின்னவனுக்கும் பெரியவனுக்கும் சண்டை................ ஒரு மாம்பழத்திற்காக கோவணத்தோட ஓடித் திரிகிறான் சின்னவன். இவர் என்னவென்றால், தலையில் கூட ஒருத்தியை வைத்திருக்கிறார்.  நீங்கள் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்றும், மிக ஒற்றுமையாகவும், நாங்கள் படைத்த எல்லா உயிர்களிலும் மிகச்சிறப்பாக வாழ்கிறீர்கள். அதுவும் தான் எப்படியென்று பார்த்து விட்டு போகலாம் என்று வந்துள்ளேன்.

(இருவரும் நடக்கிறார்கள்)

அமிர்தம்: மனிதர்களை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை போல தெரிகிறது......... சரிதான், இருநதுதான் சில நாட்கள் பார்த்து விட்டு போங்கள். அதுசரி உங்களை யாரென்று நான் மற்றவர்களிடம் சொல்லுவது?

பாரதம்: உன் பெரியம்மாவின் மகள் என்று சொல்லு. பெயர் கூட பாரதம் என்று சொல்லிவிடு.

அமிர்தம்:  ம்ம்ம்… துருவித் துருவி கேட்பார்கள், நான் பார்த்துக்கொள்கிறேன். ஆனால் ஒன்று எக்காரணத்தைகொண்டும், எந்த சந்தர்ப்பத்திலும் உங்களின் சித்துவிளையாட்டுக்கள் எதுவும் இங்கு காட்டக்கூடாது.

பாரதம்:  நானே சித்துவேலைகளினால் மனம் நொந்துபோய் இங்கு வந்துள்ளேன்.  எதுவுமே நடக்காது, நீ பயப்படத் தேவையில்லை.

அமிர்தம்:  என்னுடைய குடும்பத்தைப் பற்றீத் சொல்லத் தேவையில்லைம், எல்லாமே உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

பாரதம்:  சில விசயங்கள் எனக்கு புரியவில்லை. உனக்கு நல்ல பெயர் அமிர்தவல்லி, உன்னுடைய மகளுக்கும் பார்வதி என்றுஎன்னுடைய பெயர்தான், உன் மகளின் மகளுக்கு மட்டும் லக்க்ஷனா என்று….

அமிர்தம்: இதுதான் மனிதனின் சின்ன சின்ன சித்துவேலைகள். என் மருமகனுக்கு நடிகை சுலக்க்ஷனாவை நல்லா பிடிக்கும், ஆனால் அப்படியே வைக்கமுடியாது, பார்வதி கொப்பரத்தில ஏறி, கொடி பிடித்துவிடுவாள். அதுதான் இப்படி ஒரு சின்ன மாற்றம். எல்லா இடமும் ஒரே கதைதான்,  அங்கே தலையில வைத்திருந்தால் இங்கே தலைக்குள்ள வைத்திருப்பார்கள்.  உரிக்க உரிக்க தோல் கழட்டும் வெங்காயம் போன்றவர்கள் மனிதர்கள்.......... கண்ணில கண்ணீர் மட்டும் தான் மிஞ்சும்...............

(தொடரும்........................)

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

இது என்ன கூத்து தாயே, நேரிலயே வந்துவிட்டீர்கள். பக்தையே உன் பக்தியில் நாம் மனமுருகிவிட்டோம்

மூக்குத்தி அம்மன் 3😊

தொடருங்கள் ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kavi arunasalam said:

மூக்குத்தி அம்மன் 3😊

தொடருங்கள் ரசோதரன்

🤣....................

'மூக்குத்தி அம்மன்' படம் வருவதற்கு சில வருடங்கள் முன்னரேயே இதை நான் எழுதிவிட்டேன்.................... ஆர். ஜே. பாலாஜி மேல் ஒரு வழக்கு போடலாம் போல் தெரிகின்றதே....................🤣.

புதுமைப்பித்தன் இறங்கி வந்து அவருடைய கதையை திருப்பி திருப்பி எழுதும் எல்லோருக்கும் ஒரு போடு போடப் போகின்றார்...................🤣.

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 3

(அமிர்தமும் பாரதமும் வீட்டு வாசலை அடைந்து, அமிர்தம் வீட்டிற்குள் செல்ல, பாரதம் அருள் புரியும் அபிநயத்துடன் வாசலில் நிற்கிறார். அமிர்தம் திரும்பி பார்த்து திகைக்கிறார்.)

அமிர்தம்: குடி கெட்டுது................. அபிநயத்தை விட்டிட்டு கொஞ்சம் அடக்கமாக வாருங்கோ. விசயம் வெளியில தெரிஞ்சா, நீங்கள் மறைஞ்சிடுவீங்க......... கும்பிடப்போன தெய்வத்தை கூட்டிட்டு வந்த சாமியார் என்று ஒரு பெயரும் வைத்து, பாத்ரூமிற்கு போனாக்கூட போட்டோ எடுத்துப்போட ஒரு ஆள் வைக்க, அந்த அதிர்ச்சியிலயே நான் என் பேத்தியின்ர கல்யாணத்தை பார்க்காமல் போய் சேர்ந்துடுவன்.

பாரதம்: கோவில் கதவைத் திறந்தவுடனேயே அப்படி நின்று நின்று பழகிப்போயிட்டுது...............

(இருவரும் வீட்டின் உள்ளே செல்கிறார்கள். உள்ளே அமிர்தத்தின் கணவர் தட்சணாமூர்த்தி அமர்ந்திருக்கிறார்.)

அமிர்தம்:  (பாரதத்தை நோக்கி) தெரியும் தானே........... இவர்தான் என் வீட்டுக்காரர்,  தட்சணாமூர்த்தி.

பாரதம்: (சிரித்தபடி) தட்சணாமூர்த்தி தெற்கு நோக்கித்தானே இருப்பார்............... இவர் ஏன் வடக்கு பார்த்து இருக்கிறார்?

தட்சணாமூர்த்தி: (ஒரு மாதிரி பாரதத்தை பார்த்தபடி) ம்................ வாடைக்காற்று முகத்தில அடிக்கட்டும் என்று இருக்கிறன். அது சரி, இது யார், புது ஆளா தெரியுது?

பாரதம்: நான் ஒன்றும் புது ஆளில்லை, உங்களிற்கு முன்னாலேயே நான் இங்கே இருக்கிறன்................

தட்சணாமூர்த்தி: வடக்கு பார்த்து இருந்த நேரத்தில வாசலிற்குள்ளால ஒரு வில்லங்கம் வந்திருக்குது போல...............

அமிர்தம்: சும்மா இருங்கோ, அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இவ என்ரை பெரியம்மாவோட மகள், பெயர் பாரதம்.

தட்சணாமூர்த்தி: உனக்கு ஒரு பெரியம்மா இருக்கிறதே எனக்கு தெரியாது.......... எந்த ஊரில இருக்கிறா?

அமிர்தம்: இப்ப பெரியம்மா இல்லை…

தட்சணாமூர்த்தி: பெரியம்மா என்றா எப்பவும் பெரியம்மா தானே........... அது என்ன இப்ப அவ பெரியம்மா இல்லை என்று, (மெதுவாக) ஏன் உங்களிக்குள்ள ஏதும் குடும்ப பிரச்சனையே.........

அமிர்தம்: (சலிச்சபடி) இப்ப அவ உயிரோடு இல்லை அப்பா............... வீட்டுக்கு வந்த பிள்ளையை வா என்று சொல்லாமல், சும்மா வளவள என்று.

தட்சணாமூர்த்தி: அதுவும் சரிதான், பாரதம் வா பிள்ளை.

பாரதம்: நீங்கள் என்ன இப்படி அநியாயத்திற்கு உடனேயே ஒத்துப்போகிறீங்கள், எங்களின் வீட்டில என்றால் தாண்டவம் தான். ஒரு ஆட்டம் ஆடித்தான் அடங்குவம்........

அமிர்தம்: தாயே, அந்த ஆட்டத்தை எல்லாம் நீ மேல போய் ஆடு, இப்ப எங்களை மாதிரி இரு.

தட்சணாமூர்த்தி: அது எங்க மேல? எங்கட வீட்ல மாடி கூட இல்லை.

அமிர்தம்: மேயில போய் ஆடு என்றது மேல என்று வாய் தவறி வந்திட்டுது............ சும்மா சும்மா கேள்வி கேட்காதேங்கோ............. எனக்கு பிரசர் வந்துடும்..................

தட்சணாமூர்த்தி: பிரசரோட இங்கிலீசும் சேர்ந்து வருது............ சரி பிள்ளை நீ மேயில போய் ஆடு. சீச்சீ, என்ன இது, இந்த மனிசியோட சேர்ந்து நானும் மேயில ஆடு, மேல ஆடு என்று புலம்பிறன்.  இது அமிர்தத்தின்ரை ஏரியா, அவளே பார்த்துக் கொள்ளட்டும்.

பாரதம்: அது என்ன அவவின்ட ஏரியா, உங்கட ஏரியா?

தட்சணாமூர்த்தி: பிள்ளை பாரதம், சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் அவளுடையது, பெரிய விசயங்கள் எல்லாம் என்னுடைய முடிவுப்படியே நடக்கும். அதால தான் எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்லை.

(அமிர்தம் முறைக்கிறார்.)

பாரதம்: அது எப்படி நீங்கள் மட்டும்தான் பெரிய விசயத்தில முடிவு எடுப்பியள்? ஏன், அவவிற்கு முடியாதோ?

தட்சணாமூர்த்தி: முடியாதோ முடியாதோ என்று முடிஞ்சு வைக்காதே பிள்ளை............. நீ ஒரு வில்லங்கம் பிடிச்ச ஆள். முதலில சின்ன விசயங்கள் எது, பெரிய விசயங்கள் எது என்று கேள்.

பாரதம்: சரி, சின்ன விசயங்கள் எது?

தட்சணாமூர்த்தி: சின்ன விசயங்கள் என்றால் என்ன சமைக்கிறது, எந்த உடுப்பு போடுறது, எவ்வளவு காசு செலவழிக்கிறது, எவ்வளவு சேர்க்கிறது, வீடு வாங்கிறது, விற்கிறது, யாரோட கதைக்கிறது, யாரோட முறைக்கிறது............... இப்படியான விசயங்கள் தான், இதெல்லாம் அமிர்தத்தின்ர முடிவுதான், நான் தலையிடுறது இல்லை.

பாரதம்: அப்ப எது பெரிய விசயங்கள்............ நீங்கள் முடிவெடுக்கிறது? இதைவிட வேற ஏதும் இருக்கிற மாதிரி தெரியவில்லை.

தட்சணாமூர்த்தி: பெரிய விசயங்கள் என்றால் அமெரிக்கா ஈரானுக்கு அடிக்காலாமோ இல்லையோ, சைனீஸ் பொருளாதாரத்தை எப்படி தூக்கி நிறுத்திறது, மகிந்தவில எப்ப வழக்குப் போடுறது............ இது மாதிரியான் விசயங்கள்......... இவை எல்லாம் என்னுடைய தனிப்பட்ட முடிவுகள் தான், அமிர்தம் தலையிட மாட்டா....................

பாரதம்: (சிரித்தபடியே)  இப்ப தெரியுது ஏன் உங்களுக்குள்ள சண்டை சச்சரவு இல்லை என்று. ம்............... எங்கட வீட்ல நிலமை வேற மாதிரி, சிவம் பெரிசா சக்தி பெரிசா என்று............ அண்டமே நடுங்கிப்போகும்...................

(அமிர்தம் தொண்டையைச் செருமிகிறார். பாரதம் வாயை கையால் மூடுகிறார்.)

தட்சணாமூர்த்தி: நான் வேணுமென்டால் உன்னுடைய வீட்டுக்காராரோட ஒருக்கால் கதைச்சுப் பார்க்கட்டே?

அமிர்தம்: நீங்கள் ஓன்றும் கதைக்கவேண்டாம், அதுகள் நல்லாத்தான் இருக்குது. பாரதம் சும்மா கதை சொல்லிறா, பாரதத்தின்ரை வீட்டுக்காரர் நல்ல ஆள் தான்.

(லக்‌ஷனா உள்ளே வருகிறார்.)

லக்‌ஷனா: (பாரதத்தை நோக்கி )அம்மாச்சி மாதிரியே இருக்கிறீங்கள், சகோதரம் என்றே சொல்லலாம்.

தட்சணாமூர்த்தி: சொல்லலாம் என்ன, சகோதரமே தான்.

லக்‌ஷனா: எனக்கு தான் இவங்களை தெரியவில்ல, அப்பப்பாவிற்கு தெரிஞ்சிருக்குது.

தட்சணாமூர்த்தி: தெரியவில்லை என்று சொன்னால், பிரசரும் வில்லங்கமும் சேர்ந்து வரும்.............  அம்மாச்சியின்ர பெரியம்மா மகள், பெயர் பாரதம்.

லக்‌ஷனா:  நைஸ் டு மீட் யூ பாரதம் அம்மாச்சி.

பாரதம்: நைஸ் டு மீட் யூ லக்‌ஷனா.

லக்‌ஷனா: அட, உங்களிற்கு இங்கிலீஷ் தெரியுது, என்னுடைய பெயரும் தெரிஞ்சிருக்குது. வெளியில ஒருக்கா போட்டு உடனே வருகிறன்............ உங்களோட நிறைய கதைக்கவேணும் போல இருக்குது.

தட்சணாமூர்த்தி: நானும் உன்னோட வருகிறன் பிள்ளை.

(இருவரும் செல்கிறார்கள்.)

அமிர்தம்: என்ன, வேலையலை காட்டிற மாதிரி தெரியுது. பேத்தியோட இங்கிலீசில நடக்குது. இந்த சித்து வேலையெல்லாம் காட்டக்கூடாது என்று முதலே சொல்லியிருக்கிறன். என்னுடைய பேத்திக்கு எப்பவும் என்னைத்தான் பிடிக்கும்.........

பாரதம்: அது பிள்ளை சொன்னதை நான் அப்படியே திருப்பிச் சொன்னனான்.......... மற்றபடி உன்னுடைய பேத்தியை நான் என்ன கூட்டிக்கொண்டு கைலாயமே போகப் போகிறன்..............  எனக்கும் ஒரு பெண்பிள்ளை இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்..................ம்..........

அமிர்தம்: உங்களுக்கும் கவலையென்றால் எங்க போய் சொல்லுறது.......... சரி வாங்கோ போய் சாப்பிடுவம்...............

(தொடரும்...................)

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

ரசோ ...நல்ல நாடகம் ...பாரதம் எங்கை வந்தாலும் பிரச்சினை வரும் ...அமெரிக்காவில் பிரச்சினை என்றால் பாரதத்தை கனடாவுக்கு காரிலை அனுப்பிவிடுங்கோ ...சும்மா பம்பல் பார்ப்பம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, alvayan said:

ரசோ ...நல்ல நாடகம் ...பாரதம் எங்கை வந்தாலும் பிரச்சினை வரும் ...அமெரிக்காவில் பிரச்சினை என்றால் பாரதத்தை கனடாவுக்கு காரிலை அனுப்பிவிடுங்கோ ...சும்மா பம்பல் பார்ப்பம்

🤣.....................

உங்களுக்கு சிலேடை நல்லாவே வருகின்றது, அல்வாயன்...................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரசோதரன் said:

🤣.....................

உங்களுக்கு சிலேடை நல்லாவே வருகின்றது, அல்வாயன்...................🤣.

விளப்பம் குறைவென்றால் அதுதானே வரும் ..ரசோ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 4

(வீட்டில் எல்லோரும் இருந்து கதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.)

தட்சணாமூர்த்தி:  பாரதம், உன்னை இங்க எல்லாருக்கும் பிடிச்சுப்போச்சு. அக்கம்பக்கத்து ஆட்கள் கூட உன்னைப் பார்க்க அடிக்கடி வருகினம். நீ பேசாம உன்னுடைய வீட்டுக்காரரையும் கூட்டிக்கொண்டு வந்து, இங்கே பக்கத்திலயே இருந்திடன்.

அமிர்தம்: அப்படியெல்லாம் இருக்க முடியாது. அவையளுக்கு எவ்வளவு வேலை இருக்கும், உங்களுக்கு அதெல்லாம் தெரியாது.

பார்வதி: வயது போன காலத்தில என்ன பெரிய வேலை இருக்குது? பெரியம்மாவிற்கு அப்படி ஒரு வேலையும் இல்லை. இங்க வந்து எங்களோட இருக்கலாம்.

அமிர்தம்: பெரியம்மாவோ?

லக்‌ஷனா: உங்கட அக்கா அம்மாவிற்கு பெரியம்மா, எனக்கு பெரிய அம்மாச்சி.

அமிர்தம்: எங்க போய் முடியப் போகுதோ தெரியவில்ல............. பாரதம், நீ ஏதாவது வாய் மலரன். அள்ளவும் முடியாமல், தள்ளவும் முடியாமல் நான் மாட்டுப்பட்டு நிற்கிறன்.

(அயலவர் இருவர் – கனகா, சசி - உள்ளே வருகிறார்கள்.)

அமிர்தம்: என்ன ரெண்டு பேரும் ஒன்றாக வாறீயள். முந்தி வருந்தி அழைச்சாலும் வரமாட்டியள், ஒரே வேலை என்று பாடுவியள், இப்ப ஓடி ஒடி வாறீயள்.................

கனகா:  அமிர்தம் மாமிக்கு எப்பவும் தமாஷுதான்..................

அமிர்தம்: என்னைப் பார்த்தா உனக்கு கோவை சரளா மாதிரி தெரியுதே............ ஒரே தமாஷு என்கிறாய். நான் கோபமா இருக்கிறன் ஆக்கும்.....................

சசி:  ஏன் மாமி கோபப்படிறியள்? பாரதம் மாமியிட்ட கேட்டால் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு சொல்லுவா.....................

தட்சணாமூர்த்தி: சசி, பிரச்சனையே பாரதம் மாமிதான்................ நாங்கள் எல்லாரும் அவவை இங்க வந்து இருக்கச் சொல்லுறம், அமிர்தத்திற்கு அதில அவ்வளவு உடன்பாடில்லை.

கனகா:  பாரதம் மாமி என்ன சொல்லுறா?

பார்வதி: அவ ஒன்றும் பேசாமல் இருக்கிறா................. அம்மா வெருட்டி வைச்சிருக்கிறா போல இருக்குது.

அமிர்தம்: சும்மா இருங்கோடி........ நானே வெருண்டு கிடக்கிறன்.......... இதுக்குள்ள வெருட்டி வைச்சிருக்கிறன், வெடிகுண்டு வைச்சிருக்கிறன் என்று நீங்கள் வேற.

லக்‌ஷனா:  பெரிய அம்மாச்சி, நீங்கள் என்ன சொல்லுறியள்................

பாரதம்: நான் இங்க நிரந்தரமாக வந்திருக்கிறது கொஞ்சம் சிரமமான விசயம், நீங்கள் எல்லாம் அங்க வரத்தானே போறீர்கள்.

அமிர்தம்: அவவின்ட இடத்திற்கு போறதிற்கு அவசரப்படாதேங்கோ............. ஆறுதலா போகலாம்.................

பார்வதி: ஏன் ஆறுதலாக போகவேணும்........... இப்பவே போவம்.

அமிர்தம்: இவள் ஒருத்தி.......... எனக்கு சுடுமென்றா கொள்ளிக் கட்டையை எடுத்து தன்ரை குடுமியிலயும் செருகுவாள்...............

தட்சணாமூர்த்தி: சரி, சரி இதுக்காக ஒருவரும் வாக்குவாதப்பட வேண்டாம்.  பாரதம் போகும் போது நாங்களும் போய் பார்த்திடுவம். சசி, நீ ஏதும் அலுவல் கதைக்க வந்தனியே......................

சசி: அலுவல் என்று ஒன்றும் இல்லை மாமா. பாரதம் மாமி சொன்ன மாதிரியே செய்தனான், பிள்ளை உடனேயே சுகம் ஆயிட்டான், அதுதான் மாமியிட்ட சொல்லிவிட்டு போகலாம் என்று வந்தனான்.

(அமிர்தம் பாரதத்தை முறைக்கிறார்.)

அமிர்தம்:  அவன் பிள்ளை சுகமாயிட்டான் என்று அப்பவே அவவுக்கு தெரியும்.

சசி: எப்பவே தெரியும்.............

அமிர்தம்: எப்ப தெரிய வேணுமோ அப்பவே தெரியும். உனக்கும் எனக்கும் தான் ஒன்றும் தெரியாது................ அப்படியும் சொல்ல இயலாது.......... எனக்கென்டாலும் கொஞ்சமாவது தெரியுது.

லக்‌ஷனா: என்ன அம்மாச்சி, முந்தி எல்லாம் தெரியும், உங்கள விட்ட ஆளில்ல என்று சொல்லுவீங்கள். இப்ப நல்லா அடக்கி வாசிக்கிறீங்கள்?

தட்சணாமூர்த்தி: பிள்ளை, சும்மா சும்மா கேள்வி கேட்காதே. பிரசர் பூதத்தை கிளப்பி விடுவா.................

கனகா: பாரதம் மாமி, பிரசருக்கு என்ன வைத்தியம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரியும் தானே. அமிர்தம் மாமிக்கு ஒருக்கால் பார்த்து விடுங்கோவன்.................

பாரதம்: அவ படிச்ச டொக்டரிட்ட மட்டும் தான் போவாவாம். நான் பார்க்கக்கூடாதாம்.

பார்வதி: படிச்ச வந்த டொக்டர் எல்லாம் அம்மாவை பார்த்தால் அடிச்சு பிடிச்சு ஊரை விட்டே ஓடுறாங்கள்.

தட்சணாமூர்த்தி: ஏன் பிள்ளை பாரதம், உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்குது, நீ என்ன படிச்சனி?

பாரதம்: எல்லாம் ஒரு அனுபவம் தான், மற்றபடி சாதாரண படிப்புத்தான்.

தட்சணாமூர்த்தி: என்னுடைய வீட்டுக்காரியும் நிறைய அனுபவம் உள்ளவள்தான், ஆனா ஏதோ ஒன்று மிஸ்ஸிங்..................

அமிர்தம்: இங்க ஒன்றும் மிஸ்ஸிங் இல்ல. மனிசருக்கு இருக்கிறது எல்லாம் எனக்கும் இருக்குது...................

தட்சணாமூர்த்தி: அப்ப பாரதத்திற்கு மட்டும் எப்படி எல்லாம் தெரியுது?

அமிர்தம்: ஐயோ,  என்னைக் கேள்வி கேட்காதேங்கோ............. எனக்கு தலயை சுத்திக்கொண்டு வருது........... கண்கூட கொஞ்சமா இருட்டுது.......... யாராவது என்னப் பிடியுங்கோ, நான் விழப்போகிறேன்...................

(எல்லோரும் பதறிப் போய் அமிர்தத்தை பிடிக்கிறார்கள்.)

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

காட்சி 4

(வீட்டில் எல்லோரும் இருந்து கதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.)

தட்சணாமூர்த்தி:  பாரதம், உன்னை இங்க எல்லாருக்கும் பிடிச்சுப்போச்சு. அக்கம்பக்கத்து ஆட்கள் கூட உன்னைப் பார்க்க அடிக்கடி வருகினம். நீ பேசாம உன்னுடைய வீட்டுக்காரரையும் கூட்டிக்கொண்டு வந்து, இங்கே பக்கத்திலயே இருந்திடன்.

அமிர்தம்: அப்படியெல்லாம் இருக்க முடியாது. அவையளுக்கு எவ்வளவு வேலை இருக்கும், உங்களுக்கு அதெல்லாம் தெரியாது.

பார்வதி: வயது போன காலத்தில என்ன பெரிய வேலை இருக்குது? பெரியம்மாவிற்கு அப்படி ஒரு வேலையும் இல்லை. இங்க வந்து எங்களோட இருக்கலாம்.

அமிர்தம்: பெரியம்மாவோ?

லக்‌ஷனா: உங்கட அக்கா அம்மாவிற்கு பெரியம்மா, எனக்கு பெரிய அம்மாச்சி.

அமிர்தம்: எங்க போய் முடியப் போகுதோ தெரியவில்ல............. பாரதம், நீ ஏதாவது வாய் மலரன். அள்ளவும் முடியாமல், தள்ளவும் முடியாமல் நான் மாட்டுப்பட்டு நிற்கிறன்.

(அயலவர் இருவர் – கனகா, சசி - உள்ளே வருகிறார்கள்.)

அமிர்தம்: என்ன ரெண்டு பேரும் ஒன்றாக வாறீயள். முந்தி வருந்தி அழைச்சாலும் வரமாட்டியள், ஒரே வேலை என்று பாடுவியள், இப்ப ஓடி ஒடி வாறீயள்.................

கனகா:  அமிர்தம் மாமிக்கு எப்பவும் தமாஷுதான்..................

அமிர்தம்: என்னைப் பார்த்தா உனக்கு கோவை சரளா மாதிரி தெரியுதே............ ஒரே தமாஷு என்கிறாய். நான் கோபமா இருக்கிறன் ஆக்கும்.....................

சசி:  ஏன் மாமி கோபப்படிறியள்? பாரதம் மாமியிட்ட கேட்டால் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு சொல்லுவா.....................

தட்சணாமூர்த்தி: சசி, பிரச்சனையே பாரதம் மாமிதான்................ நாங்கள் எல்லாரும் அவவை இங்க வந்து இருக்கச் சொல்லுறம், அமிர்தத்திற்கு அதில அவ்வளவு உடன்பாடில்லை.

கனகா:  பாரதம் மாமி என்ன சொல்லுறா?

பார்வதி: அவ ஒன்றும் பேசாமல் இருக்கிறா................. அம்மா வெருட்டி வைச்சிருக்கிறா போல இருக்குது.

அமிர்தம்: சும்மா இருங்கோடி........ நானே வெருண்டு கிடக்கிறன்.......... இதுக்குள்ள வெருட்டி வைச்சிருக்கிறன், வெடிகுண்டு வைச்சிருக்கிறன் என்று நீங்கள் வேற.

லக்‌ஷனா:  பெரிய அம்மாச்சி, நீங்கள் என்ன சொல்லுறியள்................

பாரதம்: நான் இங்க நிரந்தரமாக வந்திருக்கிறது கொஞ்சம் சிரமமான விசயம், நீங்கள் எல்லாம் அங்க வரத்தானே போறீர்கள்.

அமிர்தம்: அவவின்ட இடத்திற்கு போறதிற்கு அவசரப்படாதேங்கோ............. ஆறுதலா போகலாம்.................

பார்வதி: ஏன் ஆறுதலாக போகவேணும்........... இப்பவே போவம்.

அமிர்தம்: இவள் ஒருத்தி.......... எனக்கு சுடுமென்றா கொள்ளிக் கட்டையை எடுத்து தன்ரை குடுமியிலயும் செருகுவாள்...............

தட்சணாமூர்த்தி: சரி, சரி இதுக்காக ஒருவரும் வாக்குவாதப்பட வேண்டாம்.  பாரதம் போகும் போது நாங்களும் போய் பார்த்திடுவம். சசி, நீ ஏதும் அலுவல் கதைக்க வந்தனியே......................

சசி: அலுவல் என்று ஒன்றும் இல்லை மாமா. பாரதம் மாமி சொன்ன மாதிரியே செய்தனான், பிள்ளை உடனேயே சுகம் ஆயிட்டான், அதுதான் மாமியிட்ட சொல்லிவிட்டு போகலாம் என்று வந்தனான்.

(அமிர்தம் பாரதத்தை முறைக்கிறார்.)

அமிர்தம்:  அவன் பிள்ளை சுகமாயிட்டான் என்று அப்பவே அவவுக்கு தெரியும்.

சசி: எப்பவே தெரியும்.............

அமிர்தம்: எப்ப தெரிய வேணுமோ அப்பவே தெரியும். உனக்கும் எனக்கும் தான் ஒன்றும் தெரியாது................ அப்படியும் சொல்ல இயலாது.......... எனக்கென்டாலும் கொஞ்சமாவது தெரியுது.

லக்‌ஷனா: என்ன அம்மாச்சி, முந்தி எல்லாம் தெரியும், உங்கள விட்ட ஆளில்ல என்று சொல்லுவீங்கள். இப்ப நல்லா அடக்கி வாசிக்கிறீங்கள்?

தட்சணாமூர்த்தி: பிள்ளை, சும்மா சும்மா கேள்வி கேட்காதே. பிரசர் பூதத்தை கிளப்பி விடுவா.................

கனகா: பாரதம் மாமி, பிரசருக்கு என்ன வைத்தியம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரியும் தானே. அமிர்தம் மாமிக்கு ஒருக்கால் பார்த்து விடுங்கோவன்.................

பாரதம்: அவ படிச்ச டொக்டரிட்ட மட்டும் தான் போவாவாம். நான் பார்க்கக்கூடாதாம்.

பார்வதி: படிச்ச வந்த டொக்டர் எல்லாம் அம்மாவை பார்த்தால் அடிச்சு பிடிச்சு ஊரை விட்டே ஓடுறாங்கள்.

தட்சணாமூர்த்தி: ஏன் பிள்ளை பாரதம், உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்குது, நீ என்ன படிச்சனி?

பாரதம்: எல்லாம் ஒரு அனுபவம் தான், மற்றபடி சாதாரண படிப்புத்தான்.

தட்சணாமூர்த்தி: என்னுடைய வீட்டுக்காரியும் நிறைய அனுபவம் உள்ளவள்தான், ஆனா ஏதோ ஒன்று மிஸ்ஸிங்..................

அமிர்தம்: இங்க ஒன்றும் மிஸ்ஸிங் இல்ல. மனிசருக்கு இருக்கிறது எல்லாம் எனக்கும் இருக்குது...................

தட்சணாமூர்த்தி: அப்ப பாரதத்திற்கு மட்டும் எப்படி எல்லாம் தெரியுது?

அமிர்தம்: ஐயோ,  என்னைக் கேள்வி கேட்காதேங்கோ............. எனக்கு தலயை சுத்திக்கொண்டு வருது........... கண்கூட கொஞ்சமா இருட்டுது.......... யாராவது என்னப் பிடியுங்கோ, நான் விழப்போகிறேன்...................

(எல்லோரும் பதறிப் போய் அமிர்தத்தை பிடிக்கிறார்கள்.)

நல்லாத்தான் போயிட்டிருக்கு...தட்சணாமூர்த்தியை கண்டதும் ..பாரதம் ....பூவுலகிலேயே..தங்கிவிட யோசித்திட்டாவோ.......இல்லாத பிரசரை அமிர்தத்துக்கு குடுத்து...தன்னுடைய கணவனிடம் அனுப்பி அவரை பழிவாங்க நினைக்கிறாவோ...நல்ல சுவராசியமாக போகுது ..கொண்டுபோங்கோ தொடர்ந்து..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, alvayan said:

நல்லாத்தான் போயிட்டிருக்கு...தட்சணாமூர்த்தியை கண்டதும் ..பாரதம் ....பூவுலகிலேயே..தங்கிவிட யோசித்திட்டாவோ.......இல்லாத பிரசரை அமிர்தத்துக்கு குடுத்து...தன்னுடைய கணவனிடம் அனுப்பி அவரை பழிவாங்க நினைக்கிறாவோ...நல்ல சுவராசியமாக போகுது ..கொண்டுபோங்கோ தொடர்ந்து..

மிக்க நன்றி அல்வாயன்...................👍.

இந்தக் காலத்தில் மேடை நாடகங்களை ஒரு 25 அல்லது 30 நிமிடங்களுக்கு மேல் இழுத்தால் சனம் எழும்பிப் போக ஆரம்பித்து விடும் அல்லது கொட்டாவி விடுவார்கள்.............. ஐந்து அல்லது ஆறு காட்சிகளில் முடிக்க வேண்டியிருக்கின்றது.

தொலைக்காட்சிகளில் என்றால் மெகா சீரியல் என்று இழு இழுவென்று இழுத்து வருசக்கணக்காக போடலாம்..............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 5

(தட்சணாமூர்த்தியும் பார்வதியும் கதைத்துக்கொண்டிடுக்கிறார்கள்.)

தட்சணாமூர்த்தி: அமிர்தத்தின்ரை போக்கே வரவர சரியில்லை. பார்வதியோட எல்லோரும் நல்லா பழகிறது பிடிக்கவில்லை போல தெரியுது.  அதிலயும் தப்பு இல்லை............. அமிர்தத்திற்கு இந்த வீடுதான் உலகம். அவளை விட வேற ஒருவரை எல்லோருக்கும் பிடிக்கும் என்றால் தாங்க முடியாதுதான்........................

பார்வதி: ஓம் அப்பா, நானும் அதைக் கவனிச்சனான். அம்மா முந்தி மாதிரி இல்லை, கொஞ்சம் குழம்பின மாதிரி இருக்கிறா.

தட்சணாமூர்த்தி: (சிரிக்கிறார்) என்ன பிள்ளை, அம்மாவிற்கு மெதுவா தட்டி விட்டுதென்று சொல்லிறாய்............... எங்க ஆளைக் காணவில்லை?

பார்வதி: அம்மாவும் பெரியம்மாவும் கோயிலுக்கு போட்டினம். கோயில்ல இன்றைக்கு அம்மனுக்கு ஏதோ விசேசமாம், அம்மாதான் விடாப்பிடியா பெரியம்மாவை கூட்டிக்கொண்டு போனவா. அம்மாவிற்கு பெரியம்மாவில சரியான விருப்பம், ஆனால் நாங்கள் பெரியம்மாவோட அடுகிடைபடுகிடையாக இருக்கிறதுதான் பிடிக்கவில்லை.

தட்சணாமூர்த்தி: அதுதான் பிள்ளை. அந்த பாரதத்தின்ட முகத்தைப் சில நேரத்தில பார்த்தால், சாட்சாத் அம்மனே குடி வந்த மாதிரி இருக்குது.  பாரதத்தை முந்தி பார்த்த மாதிரி ஞாபகம் ஒன்றும் இல்லை...................

பார்வதி: நீங்கள் மறந்துவிட்டியள், அப்பா. பெரியம்மா உங்கட கல்யாண வீட்டில நடந்த எல்லா விசயங்களையும் அப்படியே சொல்லுகிறா. பழைய கதை எல்லாவற்றையும் இப்ப நடந்தது மாதிரி சொல்லுகிறா.................

தட்சணாமூர்த்தி: ஓமடி பிள்ளை, வயசும் போகுதுதானே, ஆனால் நான் எதையும் மறக்கிற ஆளில்லை.  இப்ப இதுவா முக்கியம், எப்படி அமிர்தத்தை சமாதானப்படுத்திறதென்று பார்ப்பம்.................

(அமிர்தமும் பாரதமும் கோயிலிலிருந்து வருகிறார்கள்.)

அமிர்தம்: அப்பப்பா, என்ன வெயில், சித்திரை பிறந்தாலே சுட்டெரிக்குது காண்டாவனம்...........

பாரதம்: அதுக்கும் கடவுளுக்குத் தான் பேச்சு.......... என்ன மனிதர், இயற்கையாக நடக்கிற விசயங்கள் நடக்கத்தானே வேண்டும். ஆயிரம் ஆயிரம் கோடி உயிரினத்தில ஒரு உயிரினம் தான் மானிடர். எல்லா நிகழ்வும் மனிதருக்கு மட்டுமே வசதியாக இருக்கவேணுமா.....................

தட்சணாமூர்த்தி: என்ன பிள்ளை........... என்றைக்கும் இல்லாம இன்றைக்கு கோயிலுக்கு போயிட்டு சலிச்சு போய் வந்திருக்கிறா............

அமிர்தம்: கோயிலுக்கு போய்விட்டு வாற வழியில, சனங்களின்ர பேச்சைக் கேட்டு பார்வதம் மனம் நொந்து போய்விட்டாள். ஒரே வெயில், மழையே இல்லை நிறைய நாளா, அம்மை வருத்தம், அது இது என்று சனத்தின்da பிரச்சனைக்கு பாரதம் தான் காரணம் என்று சனம் ஒரே திட்டு..............

பார்வதி: யார் திட்டினது பெரியம்மாவை? பெரியம்மா  என்ன கடவுளோ இவையினர கஷ்டங்களை எல்லாம் தீர்த்து வைக்கிறதுக்கு............. யார் திட்டினது என்று சொல்லுங்கோ, நான் போய் நல்லா நாலு கேட்டிட்டு வாறன்.................

அமிர்தம்: வாய் தடுமாறிட்டுது. பாரதத்தை சனம் ஏன் திட்டுது, கோயிலுக்குள்ள இருக்கிற கடவுளைத் தான் காரணம் என்று சொல்லுது. அதுதான் பாரதத்திற்கு ஒரே கவலையா போயிட்டுது.

தட்சணாமூர்த்தி: இதுக்குப் போய் நீ ஏன் பிள்ளை கவலைப்படுகிறாய்? சனம் அப்படித்தானே, படைக்கிறதும் அவனே, காக்குறதும் அவனே, அழிக்கிறதும் அவனே, எல்லாமே அவன் தான். நல்லது நடந்தால் போற்றிவினம், பிடிக்காதது நடந்தால் மாறிவிடுவினம்.  இதுகளையெல்லாம் காதில வாங்கிக் கொள்ளாதே பிள்ளை.............

பாரதம்:  அப்படி என்னவென்று விட்டிட்டு இருக்கிறது? எவ்வளவு ஜீவராசிகள் தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. எதுவுமே யாரையும் எதற்கும் குற்றம் சொல்வதில்லை, மனிதர் மட்டும் சகமனிதரையோ, இயற்கையையோ இல்லாவிட்டால் கடவுளையோ தேடி பழிசுமத்துகிறார்கள். தீதோ நன்றோ, இதுதான் வாழ்க்கை என்று வாழ்ந்து விட்டுப் போறதுதானே?

பார்வதி: இல்லை பெரியம்மா, ஒரே ஒரு வாழ்க்கை தான், அதை எப்படி அப்படி சாதரணமா சொல்லிறியள்........... எல்லோரும் ஏதோ முடிஞ்சளவு நல்லா, வசதியா வாழத்தான் விரும்பிவினம். மனிதர் மட்டும்தான் சிந்திக்கினம், மற்ற உயிர்கள் சிந்திக்கிறது இல்லை தானே..................

அமிர்தம்: ஏய் பார்வதி, பெரியவர்களுடன் அப்படி கதைக்ககூடாது.................. 

பார்வதி: நான் என்ரை பெரியம்மாவோட தானே கதைக்கிறன், நீங்கள் ஏதோ மூன்றாம் ஆளிடம் நான் கதைக்கிற மாதிரி சொல்லிறியள்.

பாரதம்: அமிர்தம், நீ சும்மா இரு. பிள்ளை என்னோட தானே கதைக்கிறாள். அவள் தனக்கு சரியென்று பட்டதை சொல்லுகிறாள். பார்வதி, மனிதருக்கு மட்டும் சிந்திக்கின்ற இயல்பை கொடுத்ததிற்கு ஒரு காரணம் இருக்கும், ஆனால் அது நிச்சயமாக மற்ற உயிர்களை அழித்து வாழவோ அல்லது பழித்தும், பழி சுமத்தியும் வாழவோ இருக்காது.

 தட்சணாமூர்த்தி: சரி, சரி இதை விடுங்கோ. மற்றவர்களுக்காக நாங்கள் ஏன் சண்டை போடவேணும்.............. பார்வதி, அந்த புத்தகத்தை எடுத்து தா ஒருக்கால், நான் கொண்டு போய் அதைக் கொடுத்துவிட்டு வருகிறேன்.

(தட்சணாமூர்த்தியும் பார்வதியும் செல்கிறார்கள். அவர்கள் சென்ற பின்)

அமிர்தம்: (பாரதத்தை நோக்கி) தாயே, நான் ஆரம்பத்திலயே சொன்னனான் தானே. மனிதருக்குள் எல்லாம் இருக்குது, சந்தர்ப்பம் கிடைத்தால் அது அது வெளியில வரும். இந்த அற்ப மனிதரை பார்த்து நீங்கள் பதறலாமோ................. இது எல்லாம் உண்டு, உருண்டு, உறங்கி அழிந்து போகிற ஒரு சாதாரண பிறவிதான்.........

பாரதம்: நீ சொல்வது முற்றிலும் சரியே அமிர்தம். அவரவர் அனுபவிப்பது அவை அவை செய்தவையே, மழை இல்லாமல் போனது ஏன் என்றால் மனிதன் மழையை அழித்து விட்டான். இது தெரியாமல் கழுதைக்கு கல்யாணம் முடித்து வைத்தால், மழை வருமா........... அமிர்தம், நான் திரும்பிப் போகிற நேரம் வந்துவிட்டது.

அமிர்தம்: தாயே, நான் ஒரு மிகச்சாதாரண மனிதப் பிறவி. நான் எதும் தவறு செய்திருந்தால்….

பாரதம்: உன்னை அறிந்துதான் நான் விரும்பி வந்தேன். நீ என்றும் என் விருப்பத்துக்குரியவள். என்றும் என்னுடனேயே இருப்பாய்................

(முற்றிலும் இருட்டாகின்றது.)

(அமிர்தம் மட்டும் தனித்து நிற்கிறார்.)

(தட்சணாமூர்த்தியும் வருகின்றார்.)

தட்சணாமூர்த்தி: என்ன, கோயிலுக்கு போய் வந்தனி, இன்னும் சீலைகூட மாத்தாமல் அப்படியே நிற்கிறாய்? பாரதம் எங்கே?

(அமிர்தம் ஒன்றும் பேசாமல் நிற்கிறார்.)

தட்சணாமூர்த்தி: ஏனப்பா, பாரதம் எங்கே..........

அமிர்தம்: அவ போயிட்டா..............

தட்சணாமூர்த்தி: எங்க போயிட்டா?

அமிர்தம்: எங்கேயிருந்து வந்தாவோ அங்கேயே போயிட்டா..............

தட்சணாமூர்த்தி: இப்ப எப்படி போனா…..ஒன்றுமே விளங்கவில்லை. அமிர்தம், பாரதம் உண்மையில யார்?

அமிர்தம்: பாரதம் என்னுடை பெரியம்மா மகள் தான்.

தட்சணாமூர்த்தி: உனக்கு உண்மையில ஒரு பெரியம்மா இல்லை என்ற எனக்கு தெரியும் அமிர்தம்.

அமிர்தம்: ஆ............. தலைய சுத்துதே............ யாராவது ஓடி வாங்கோவன்..............

(எல்லோரும் ஒடி வருகிறார்கள்.)

(முற்றும்.)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

எங்கேயிருந்து வந்தாவோ அங்கேயே போயிட்டா

மிக அருமையாக இருந்தது @ரசோதரன் அண்ணை. ஏனோ தெரியல்லை, இந்த வரியை வாசிக்கும் போது எனது அம்மாவை நினைத்துக் கொண்டேன் கண்களில் நீர் துளிர்த்தது. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நாடகம். மேடையில் நடிக்கும் போது பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

“உண்டு, உருண்டு, உறங்கி..” என்று எழுதியிருந்தீர்கள். இதில் ‘உருண்டு’ ஏன் வருகிறது?

அம்மனுக்கும் கஞ்சத்தனம். போகிறபோது அமிர்தத்துக்கு ஏதாவது குடுத்திருக்கலாம். ஆக மொத்தத்தில் இவர் மூக்குத்தி அம்மன் இல்லை😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, villavan said:

மிக அருமையாக இருந்தது @ரசோதரன் அண்ணை. ஏனோ தெரியல்லை, இந்த வரியை வாசிக்கும் போது எனது அம்மாவை நினைத்துக் கொண்டேன் கண்களில் நீர் துளிர்த்தது. நன்றி.

மிக்க நன்றி வில்லவன்.

ஒரு 'காமடி டிராமா' எழுதித் தாருங்கோ என்று தான் இங்கு நான் இருக்கும் இடத்தில் என்னைக் கேட்பார்கள். இந்த நாடகத்தையும் அப்படித்தான் எழுதினேன். ஆனால் அப்பொழுது எழுதி முடித்த போது, பல வருடங்களின் முன், நான் சிரிக்கவில்லை, கண்களை துடைத்துக் கொண்டே இருந்தேன். பின்னர் இன்று இங்கு களத்தில் கடைசிக் காட்சியை மீண்டும் எழுதிய போதும், காலையிலேயே, கண்கள் கலங்கிக் கொண்டேயிருந்தன................ இனி எங்கு காண்பமோ................

4 minutes ago, Kavi arunasalam said:

நல்லதொரு நாடகம். மேடையில் நடிக்கும் போது பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

“உண்டு, உருண்டு, உறங்கி..” என்று எழுதியிருந்தீர்கள். இதில் ‘உருண்டு’ ஏன் வருகிறது?

அம்மனுக்கும் கஞ்சத்தனம். போகிறபோது அமிர்தத்துக்கு ஏதாவது குடுத்திருக்கலாம். ஆக மொத்தத்தில் இவர் மூக்குத்தி அம்மன் இல்லை😊

மிக்க நன்றி கவிஞரே.

பிறப்பெடுக்கும் எல்லா உயிர்களினதும் ஒரே நோக்கம் தங்கள் சந்ததியை உருவாக்குதலே என்று சொல்லப்படுகின்றது. மரம் செடி கொடிகள் கூட. 'உருண்டு........' என்று அதையே சுட்டியிருந்தேன். ஆணும், பெண்ணும் இணைவது என்பதன் ஒரு வடிவம்...................

Edited by ரசோதரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.