Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொப்பி என்பது புனைபெயர்

ஷோபாசக்தி

பொப்பி என்பது புனைபெயர்


பூமியில் ஆதி காலம் முதலே இந்தக் கதை இருக்கிறது. எனினும், பிரெஞ்சு இளைஞனான பேர்னா பப்டிஸ்ட் ஆந்ரே இந்தக் கதைக்குள் பத்து வருடங்களுக்கு முன்புதான் வந்தான். அப்போது, அவனுக்கு இருபத்தாறு வயது. ‘கலே’ நகரத்துக் கடற்கரை வீதியிலுள்ள சின்னஞ் சிறிய ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளையின் கூண்டுக்குள் தனியாளாக உட்கார்ந்தவாறே அலுப்பூட்டும் பணியைச் செய்துகொண்டும், நாள் முழுவதும் தனிமையில் உழன்றுகொண்டுமிருந்தான். இந்தக் கதையில் இன்னொரு முதன்மைப் பாத்திரமாக இருக்கும் இளம் பெண்ணுடைய பெயர் பொப்பி.

அந்தப் பெண்ணின் உண்மையான பெயர், நாடு, இனம், தாய்மொழி, மதம் போன்ற விவரங்களைச் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தக் கதையில் குறிப்பிட முடியவில்லை. இந்தக் கதைக்காக மட்டுமே அவளுக்கு ‘பொப்பி’ என்ற புனைபெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால், அவளைக் குறித்து மூன்று விவரங்களை முன்கூட்டியே வாசகர்களுக்குச் சொல்லிவைக்க முடியும். அவளுக்கு அப்போது இருபது வயது. ஆங்கில மொழி பேசக்கூடியவள். ஆங்கில மொழியைப் பேசும்போது, B மற்றும் V ஒலியை அவளால் உச்சரிக்க முடியாது. கலே நகரத்தில் இருந்த ‘ஜங்கிள்’ அகதி முகாமில் அவள் காணப்பட்டாள்.

கருமையான சுருள் தலைமுடியும் வெளிறிய சருமமும் கொண்ட பொப்பி சற்றுக் குள்ளமானவள். அவளது முழுவட்ட முகத்தில் தலைமுடி சுருள் இழைகளாய் விழுந்து பேரிச்சம் பழங்கள் போன்றிருக்கும் அவளது கண்களின் ஓரங்களை மறைக்கும். அவள் பேசும்போது, சிவந்து தடித்த கீழுதடு ஒருபுறமாகக் கோணிக்கொள்வது போலிருக்கும். எப்போதுமே அவளுடைய குரல் கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பதுபோல் அவளுடைய குரலில் எதிரொலியும் கலந்திருக்கிறது. அவளுடைய தங்கையும் உருவத்தில் ஏறக்குறைய பொப்பியைப் போலவே இருந்தாள். தங்கைக்குப் பதினைந்து வயதிருக்கும்.

சகோதரிகள் இருவரும் ஆந்ரே பணியாற்றிய ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளைக்கு முதன்முதலாக வந்தபோது, ஆந்ரே கைகளில் விரித்து வைத்திருந்த செய்தித்தாளுடன் உட்கார்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தான். பிறந்ததிலிருந்தே உற்சாகமற்ற மனநிலையுடனும், நான் ஏன்தான்  எப்போதுமே சோகமாக இருக்கிறேன் எனத் தனக்குள்ளேயே கேட்டுக் கேட்டுச் சோகத்தைப் பெருக்கியவாறும் இருக்கும் ஆந்ரே காலையில் ஒன்பது மணிக்குக் கிளையைத் திறந்து வைத்துக்கொண்டு, மதியம் பன்னிரண்டு மணிவரை ஒரேயொரு வாடிக்கையாளர்கூட வராத இடத்தில் தூங்குவதைத் தவிர வேறென்னதான் செய்ய முடியும்!

சில மாதங்களுக்கு முன்புவரை கலே நகரத்தின் இந்தக் கடற்கரை  உல்லாசப் பயணிகளால் நிரம்பித் ததும்பியது. அவர்களைக் குறிவைத்துக்  கடற்கரை வீதியில் நான்கைந்து  ‘பணப் பரிவர்த்தனை’ கிளைகள் இருந்தன. இப்போது, ஆந்ரே பணியாற்றும் இந்தக் கிளை மட்டுமே இருக்கிறது. கலே கடற்கரை, அகதிகளாலும் அவர்களைத் தடுத்து நிறுத்தும் பிரெஞ்சு சிறப்புக் காவல்படையினராலும் மட்டுமே இப்போது நிறைந்துள்ளது.

வடக்கு பிரான்ஸின் விளிம்பில் கலே நகரம் இருக்கிறது. இந்த நகரத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஆங்கிலக் கால்வாயில் விரிந்து கிடக்கும் டோவர் நீரிணையின் நீளம் முப்பத்து மூன்று கிலோ மீட்டர்கள். இந்த நீரிணை மிக ஆழமானது. வருடம் முழுவதும் குளிர்ந்த நீரைக் கொண்டது. இந்த அபாயமான நீரிணையைக் கடந்து இங்கிலாந்துக்குச் செல்வதற்காகப் பத்தாயிரம் அகதிகள் கலே நகரத்தில் காத்திருக்கிறார்கள்.

திடீரெனக் குவிந்த இந்த அகதிகளால் நகரத்தில் ஒரு தடுமாற்றம் ஏற்படத்தான் செய்தது. நகரத்தின் ஒவ்வொரு சதுர மீட்டரிலும் ஒரு அகதி இருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பாக அந்த நகரம் சந்தித்திருக்கும் மிகப் பெரிய நெருக்கடி இதுவே என்று நகர மக்கள் பேசிக்கொண்டார்கள். சுற்றுலாப் பயணிகள் கலே நகரத்திற்கு வருவதை நிறுத்திக்கொண்டார்கள். அவர்களை நம்பியிருந்த பல தங்கும்விடுதிகளும் உணவகங்களும் கடைகளும் நிரந்தரமாக மூடப்பட்டன. இதனால்  நகரத்து மக்கள் பலருக்கு வேலைகள் பறிபோயின. ஆந்ரே வேலை செய்யும் கிளை எப்போது மூடப்படுமோ என்ற கிலியிலும் அதனால் பெருகிய துக்கத்துள்ளும் ஆந்ரே மூழ்கியிருந்தான்.

காற்று நிரப்பிய சிறிய ரப்பர் படகுகளில் மூட்டைகள் போல அகதிகளை அள்ளிப் போட்டு இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல் குழுக்கள் நகரத்தின் பல இடங்களிலும் மறைந்திருந்தார்கள். இதைத் தவிர, பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்குக் கப்பல்களில் ஏற்றப்பட்டுக் கொண்டுசெல்லப்படும் சரக்குந்துகளைப் பயன்படுத்தி நீரிணையைக் கடந்து செல்லும் முயற்சியிலும் அகதிகள் இறங்கியிருந்தார்கள். நெடுஞ்சாலையில் வரும் சரக்குந்துகளின் முன்னால் வீதித் தடைகளை ஏற்படுத்தி அவற்றை வேகம் குறைக்கச் செய்து, சரக்குந்துகளுக்குள் திருட்டுத்தனமாக அகதிகள் நுழைந்துகொண்டார்கள். அந்த நீரிணைக்குக் கீழாக அமைக்கப்பட்டிருக்கும் அய்ம்பது கிலோ மீட்டர்கள் நீளமான ரயில் சுரங்கப் பாதைக்குள் இறங்கி நடந்துசெல்ல முற்பட்ட பல அகதிகள் ரயில் மோதி இறந்து போனார்கள். அவர்களின் பிணம் கூட இங்கிலாந்தைச் சென்றடையவில்லை.

கலே நகரத்து மக்கள் மட்டுமல்லாமல், பிரான்ஸ் – இங்கிலாந்து இருநாட்டு அரசாங்கங்கள், காவல்துறையினர், கடற்படையினர், எல்லைப்படையினர் எல்லோருமே குழப்பத்தில் இருப்பது போலத்தான் தோன்றியது. தெளிவாக இருந்தவர்கள் அந்தப் பத்தாயிரம் அகதிகள் மட்டுமே. எப்படியாவது கடலைக் கடந்து இங்கிலாந்திற்குள் நுழைந்துவிட வேண்டும் என்பதில் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்கள். ரப்பர் படகுகள் கடலில் மூழ்கி அகதிகள் நாளாந்தம் இறப்பதாலோ, சரக்குந்துகளில் மறைந்திருந்து சென்றவர்கள் மூச்சுத் திணறிக் கொத்தாக இறப்பதாலோ, சுரங்கப் பாதையில் ரயில் மோதி இறப்பதாலோ இந்த அகதிகள் தங்களது பயணத்தைக் கைவிட ஒருபோதுமே தயாராக இருக்கவில்லை. எப்படியாவது ஒருநாள் உயிரோடு கடலைக் கடந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் கலே நகரத்தில் அலைந்துகொண்டிருந்தார்கள்.

அவ்வாறு அலைந்துகொண்டிருந்த பொப்பியும் அவளது சகோதரியும் ‘வெஸ்டர்ன் யூனியன்’  கிளைக் கூண்டுக்கு முன்னால் வந்துநின்று, கூண்டின் முகப்புக் கண்ணாடியில் தட்டியபோது, ஆந்ரே தூக்கக் கலக்கத்துடன் கண்களைத் திறந்து பார்த்துவிட்டு, மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டான். அவனது முக்கோண வடிவ முகத்திற்கு அந்த வட்டமான  மூக்குக் கண்ணாடி பொருத்தமில்லாமல் இருந்தது. செந்நிற ஆட்டுத்தாடியைச் சொறிந்துகொண்டே கண்களைத் தாழ்த்தி, தெருவின் எதிர்ப் பக்கத்திலிருந்த காவல் கூண்டைப் பார்த்தான். அந்தக் கூண்டுக்குள் நின்றிருந்த பொலிஸ்காரர் அந்தப் பெண்களையே கவனித்துக்கொண்டிருந்தார்.

பொப்பி தனது குளிரங்கிக்குள் கையை நுழைத்து ஒரு பொதியை எடுத்துப் பிரித்தாள். இரண்டு பிளாஸ்டிக் பைகளுக்குள் பத்திரமாகச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பாஸ்போர்ட்டை எடுத்து முகப்புக் கண்ணாடியில் இருந்த அரைவட்டத் துளை வழியாக உள்ளே தள்ளிக்கொண்டே “மிஸ்டர்! நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா?” என்று ஆந்ரேயிடம் கனத்த குரலில் கேட்டாள்.

“ஆம். பேசுவேன்” என்றான் ஆந்ரே.

“எங்களுடைய தந்தை ‘வெஸ்டர்ன் யூனியன்’ மூலமாக எங்களுக்குப் பணம் அனுப்பியிருக்கிறார். அதைக் கொடுங்கள்.”

பொப்பியின் பாஸ்போர்ட்டை ஆந்ரே எடுத்து விரித்துப் பரிசீலித்துவிட்டு, கணினியைத் தட்டி உசுப்பியவாறே “ட்ரான்சக்ஸன் நம்பர்?” என்று கேட்டான்.

பொப்பி தன்னுடையை சகோதரியைப் பார்த்தாள். அந்தச் சிறுமி பத்து இலக்கங்களை மனப்பாடமாகச் சொல்லச் சொல்ல, ஆந்ரே கணினி விசைப்பலகையில் மெதுமெதுவாகத் தட்டினான்.

பொப்பியிடம் கையொப்பம் வாங்கிக்கொண்டு, ஆந்ரே பச்சைநிற ஈரோத் தாள்களை எடுத்து அரைவட்டத் துளை வழியாக வெளியே தள்ளிவிட்டான். பொப்பி அந்தப் பணத்தை எடுத்து நிதானமாக மூன்று தடவைகள் எண்ணிப் பார்த்துவிட்டுத் தனது குளிரங்கிக்குள் நுழைத்துக்கொண்டாள். ‘நன்றி’ என்பது போலச் சகோதரிகள் இருவரும் ஆந்ரேக்குத் தலையைத் தாழ்த்தினார்கள். ஆந்ரே சோர்வுடன் தலையை மெதுவாக அசைத்தான்.

இரண்டு நாட்கள் கழித்து, மாலை அய்ந்து மணிக்கு ஆந்ரே  கணினியை அணைத்துவிட்டு, தனது குளிர் மேலங்கியை எடுத்து அணிந்துகொண்டு கிளையை மூடுவதற்குத் தயாரானபோது, கிளையின் முகப்புக் கண்ணாடியில் படபடவெனத் தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சகோதரிகள் இருவரும் தெருவில் நின்றிருந்தார்கள். ஆந்ரே கைகளைக் கத்தரிக்கோல் போல் குறுக்கே வைத்து அசைத்து  ‘மூடியாகிவிட்டது’ எனச் சைகை காட்டினான். பொப்பி பதிலுக்கு மீண்டும் முகப்புக் கண்ணாடியைப் பலமாகத் தட்டினாள். ஆந்ரே அரைவட்டத் துளையை மூடியிருந்த மறைப்பை நீக்கிவிட்டு, அந்தத் துளையை நோக்கிக் குனிந்து “மூடியாகி விட்டது. நாளைக்கு வாருங்கள்” என்று சொன்னான்.

இன்று தன்னுடைய தாயாரின் வீட்டுக்கு இரவு உணவுக்கு வருவதாக அவன் சொல்லியிருந்தான். சந்தை மூடுவதற்கு முன்பாக அங்கே சென்று தாயாருக்குப் பிடித்தமான நத்தைகளையும் தாயாருக்கு அந்த வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களையும் வாங்கிச் செல்ல வேண்டும். நகரம் முழுவதும் குழப்பமான முறையில் அகதிகள் நடமாட்டம் இருப்பதால், அவனது தாயார் பயந்துகொண்டு சந்தைக்குப் போவதில்லை. சென்ற வாரம் ஆந்ரே தாயாரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, தாயார் தனது வற்றிப் போன உடம்பை ஆடாமல் அசையாமல் வைத்துக்கொண்டு, கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். “இந்த நகரத்தை விட்டு நாங்கள் போய்விட வேண்டும்” என்றார்.

அந்தச் சகோதரிகள் அங்கிருந்து நகருவதாக இல்லை. “மிஸ்டர்! எங்களுக்குப் பணம் வந்திருக்கிறது. அவசரமாக எங்களுக்குப் பணம் தேவை. தயவு செய்து கொடுத்துவிடுங்கள்” என்றாள் பொப்பி.

“கிளையை மூடியாகி விட்டது. கணினியை அணைத்துவிட்டேன். நாளைக்குக் காலையில் ஒன்பது மணிக்கு வாருங்கள்!”

அதைக் கேட்டதும் பொப்பியின் சகோதரி பெருங்குரலெடுத்து அழத் தொடங்கிவிட்டாள். தெருவின் எதிர்ப் பக்கம் காவல் கூண்டுக்குள் நின்றிருந்த பொலிஸ்காரர் இங்கேயே கவனித்துக்கொண்டிருந்தார்.

பொப்பி ஏதோவொரு மொழியில் உரக்கக் கத்தியதும் அழுதுகொண்டிருந்த சிறுமி தனது உதடுகளை இறுக மடித்து வாயை மூடிக்கொண்டே சத்தம் வராமல் விம்மினாள். அவளது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

விம்மியவாறே தனது கால்களைத் தரையில் மாறி மாறி உதைத்துத் தெருப் புழுதியைக் கிளப்பிகொண்டிருந்த அந்தச் சிறுமியைப் பார்த்து ஆந்ரே உண்மையிலேயே பதறிவிட்டான். “பொறுங்கள்…பொறுங்கள்…” எனச் சொல்லியவாறே நாற்காலியில் அமர்ந்து கணினிப் பொத்தானைச் சொடுக்கினான். விம்மிக்கொண்டிருந்த பெண் விம்மலுக்கிடையே பத்து எண்களைச் சொன்னாள். ஆந்ரே பணத்தை எடுத்துக் கொடுத்ததும், பணத்தை எண்ணிப் பார்க்காமலேயே சுருட்டி பொப்பி தனது உள்ளங்கைக்குள் வைத்துக்கொண்டு, தங்கையின் கையைப் பிடித்துக்கொண்டு வேகமாக ஓடத் தொடங்கினாள். எதிர்ப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பொலிஸ்காரர் ‘என்ன?’ என்பது போல ஆந்ரேயைப் பார்த்தார். ஆந்ரே அவரைப் பார்த்து ஒரு சமாதானமான புன்னகையைச் செய்துவிட்டு, கிளையை மூடிவிட்டு, தனது சைக்கிளை மிதித்துக்கொண்டு சந்தைக்குப் போனான்.

அடுத்த நாள் காலையில், செய்தித்தாள் வாங்குவதற்காக வீதியோரப் பத்திரிகைக் கடையில் ஆந்ரே நின்றிருந்தபோது, அவனது தோளை யாரோ தட்டினார்கள். ஆந்ரே திடுக்கிட்டுத் திரும்புவதானால் கூட மிக மெதுவாகவே திரும்புவான். அதற்குள் தோளில் தட்டுவது யாராக இருக்கும் என யோசித்தான். அவனுக்குத்தான் நண்பர்கள் என்று யாருமே இல்லையே. வேலை! வேலையை விட்டால் மலிவு விலைச் சந்தை! சந்தையை விட்டால் அவனுடைய சிறிய அறை! வாரத்திற்கு ஒருமுறை தாயாரின் வீடு என்பதுதானே அவனது சிறிய வாழ்வு.

ஆந்ரேயின் தோளைத் தட்டியவள் பொப்பி. “மிஸ்டர் என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். நேற்று உங்களுக்கு ஒரு நன்றிகூடச் சொல்லாமல் ஓடிவிட்டேன்.”

ஆந்ரே மங்கலான புன்னகையைச் செய்தவாறே “உங்களது சகோதரி எங்கே? தனியாக வரமாட்டீர்களே” என்று சும்மா கேட்டு வைத்தான்.

உடனேயே பொப்பியின் வட்ட முகம் மலர்ந்து விரிந்துபோனது. “நேற்று இரவே அவள் படகில் இங்கிலாந்துக்குப் போய்விட்டாள். படகில் அனுப்பிவைக்கும் கடற்காகங்களுக்கு – அந்தக் குழுவை அப்படித்தான் எங்களது ஜங்கிள் முகாமில் குறிப்பிடுவார்கள் – பணம் கொடுக்க வேண்டும் என்பதால்தான் நேற்று உங்களைத் தொந்தரவு செய்துவிட்டோம். நீங்கள் சிரமம் பாராமல் பணத்தை எடுத்துக் கொடுக்கவில்லையென்றால், நேற்று அவளால் போயிருக்கவே முடியாது. நன்றி மிஸ்டர்” என்றாள்.

“பரவாயில்லை… என்னுடைய பெயர் ஆந்ரே. நீங்கள் தங்கையுடன் போகவில்லையா?”

“இல்லை. ஆனால், சீக்கிரமே நானும் போய்விடுவேன். அப்பா அனுப்பிவைத்த பணம் அவளை அனுப்ப மட்டுமே போதுமானதாக இருந்தது. அவள் சின்னப் பெண். அவளைத்தானே முதலில் அனுப்ப வேண்டும். வரும் வியாழக்கிழமை அப்பா மீண்டும் பணம் அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார். அதைப் பெற்றுக்கொள்ள உங்களிடம்தான் வருவேன். அடுத்த படகில் நான் இங்கிலாந்துக்குப் போய்விடுவேன். உங்கள் பெயர் என்னவென்று சொன்னீர்கள்…மறுபடியும் ஒருமுறை சொல்லுங்கள்…”

இரவு படுக்கையில் கிடந்து புரண்டுகொண்டிருந்த ஆந்ரே புகை பிடிப்பதற்காக எழுந்துசென்று, கடற்கரையை நோக்கியிருந்த ஜன்னலைத் திறந்தான். அந்த நேரத்திலும் கடற்கரையில் அகதிகள் உரக்கப் பேசியவாறே கூட்டம் கூட்டமாக அலைந்துகொண்டிருந்தார்கள். இன்று இரவும் ரப்பர் படகுகள் கடலைக் கடக்கவிருக்கின்றன என ஆந்ரே நினைத்துக்கொண்டான். பொப்பியும் இரண்டு நாட்களில் போய்விடுவாள் என்ற நினைப்பு அவனுள் வந்தபோது, அவனுக்குள் ஏனோ துயரம் பெருகியது. இது பொப்பிக்கான உபரித் துயரமா அல்லது எப்போதுமே தன்னோடு ஒட்டியிருக்கும் பெரும் துக்கம்தானா எனப் புரியாமல் அவன் குழம்பிப்போனான். உண்மையில், அவனில் துக்கம் மெல்ல மெல்லக் கரைந்துகொண்டிருக்கிறது என்பதைச் சற்றுச் நேரத்திலேயே உணர்ந்துகொண்டான். அவனுக்குள் பெரும் உளக் கொந்தளிப்பு ஏற்படவும், அந்தப் பதைபதைப்பைத் தாங்க இயலாமல் எழுந்து கட்டிலில் நின்றுகொண்டான்.

பொப்பியின் முகம் அவனுள் மெதுமெதுவாக நுழைந்து வெள்ளி முத்திரை போன்று பதிந்துகொண்டது. அவன் இதுவரை காதல் வயப்பட்டதில்லை. தனக்குள் தோன்றியிருக்கும் உணர்வு காதல்தானா? இது எப்படிச் சாத்தியம்? என்று அடுத்துவந்த நாட்களில் அவன் தத்தளித்துக்கொண்டிருந்தான்.

வியாழக்கிழமை காலையிலிருந்து அவன் பொப்பிக்காகக் காத்துக்கொண்டிருந்தான். மதிய உணவுக்குக்கூட கிளையை மூடாமல் பக்கத்துக் கடையில் ஒரு  வரட்டு ‘சாண்ட்விச்’ வாங்கிப் பாதியைச் சாப்பிட்டுவிட்டு மீதியைத் தாளில் சுற்றி வைத்துக்கொண்டான். வெறுமனே கணினியைத் தட்டிக்கொண்டிருந்தான். பொப்பியின் பாஸ்போர்ட் விவரங்கள் கணினியில் இருந்தன. கிளையை மூடும் நேரமாகியும் பொப்பி வரவில்லை. ஆந்ரே அன்று பத்து நிமிடங்கள் தாமதமாகவே கிளையை மூடினான். பொப்பி ஏன் வரவில்லை? என்ன நடந்திருக்கும்? என்றெல்லாம் மூளையைப் போட்டுக் கசக்கியவாறே தனது சைக்கிளில் ஏறி ஆந்ரே அமர்ந்தபோது, காவல் கூண்டுக்குள் இருந்த பொலிஸ்காரர் “என்ன தம்பி இன்று கிளையைத் தாமதமாக மூடுகிறாய்? அய்ந்து மணிக்குமேல் ஒரு விநாடிகூட நீ இங்கே இருக்கமாட்டாயே…” என்று கேட்டார்.

ஆந்ரே ஏதோ ஒரு யோசனையில் சைக்கிளை மிதித்தான். மூன்று மிதிகளில் அது தெருவைக் கடந்து காவல் கூண்டருகே போய் நின்றது. “மிஸியூ. ஜோன் மிஷெல்… ஏன் இன்று நகரம் வழமையைவிட அமைதியாக இருக்கிறது? தெருவில் மனித நடமாட்டமே இல்லையே. ஏதாவது அகதிகள் பிரச்சினையா?” என்று ஆந்ரே பொலிஸ்காரரைக் கேட்டான்.

“கெட்டது போ! தம்பி நீ கண்களைத் திறந்து வைத்துக்கொண்டே கனவு காண்பவன். தெருவில் எப்போதும் போல அகதிகள் அலைந்துகொண்டுதானே இருக்கிறார்கள். அவர்களை யாருமே ஒன்றும் செய்துவிட முடியாது. ஒரு மனிதனிடம் வதிவிட அனுமதி இல்லை என்ற காரணத்திற்காக அவனைச் சிறையில் அடைக்கக்கூடாது என்றொரு பாழாய்ப்போன சட்டம் இந்த நாட்டில் இருக்கிறது. அந்தச் சட்டம் மட்டும் ஒழிக்கப்பட்டால், நீ சொல்வது போல உண்மையிலேயே இந்த நகரம் அமைதியாகத்தான் இருக்கும்” என்றார் பொலிஸ்காரர்.

சைக்கிளை மிதித்துக்கொண்டிருக்கையில் பொப்பியின் ஞாபகமே ஆந்ரேயை முழுவதுமாக நிறைத்திருந்தது. சைக்கிள் அவனது அறையைச் சிறிய தயக்கத்துடன் கடந்து, ஜங்கிள் முகாமை நோக்கிச் சென்றது.

2

ஜங்கிள் முகாம், கலே நகரத்தை ஒட்டியிருந்த சிறு காட்டில் தோன்றியிருந்தது. இந்த முகாம் பிரெஞ்சு அரசாங்கத்தாலோ அல்லது வேறெந்தத் தொண்டு நிறுவனங்களாலோ அமைக்கப்பட்டதல்ல. அகதிகளால் உருவாக்கப்பட்ட இந்த முகாமை ‘அய்ரோப்பாவின் மிகப் பெரிய சேரி’ என்றுதான் ஊடகங்கள் வர்ணித்தன.

முகாமில் காணப்பட்ட தேசிய இனங்களையும் மொழிகளையும் கணக்கெடுப்பது அரசாங்கங்களாலேயே இயலாத காரியம். விவிலியக் கதையில் வரும் அழிந்த பாபேல் கோபுரம் போல அந்த முகாம் இருந்தது. அரபுக்கள், ஈரானியர்கள், துருக்கியர்கள், ஆப்கானியர்கள், சீனர்கள், ஆபிக்கர்கள், வங்காளிகள், இந்தியர்கள், இலங்கையர்கள், அல்பேனியர்கள் எனப் பல இனத்தவர்கள் அங்கே இருந்தார்கள்.

ஆயிரக்கணக்கான ஒழுங்கற்ற சிறு கூடாரங்கள் அந்தச் சிறு காட்டில் அகதிகளால் அமைக்கப்பட்டிருந்தன. மின்சாரம், சூடேற்றும் கணப்புகள், சுகாதாரம் எதுவுமற்ற அந்தக் கூடாரங்களில் பசி பட்டினியும் கடுங்குளிரும் நோயும் நிறைந்திருந்தன. மனிதக் கடத்தல்காரர்களைத் தேடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, நள்ளிரவில் கூடாரங்களுக்குள் நுழைந்து அகதிகளின் முகத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சித் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடும் பிரெஞ்சுக் காவல்துறையின் தொல்லை ஒவ்வொரு நாளுமே இருந்தது. தங்களுடைய நிம்மதியான உறக்கம் முப்பத்துமூன்று கிலோ மீட்டர்களுக்கு அப்பால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது, அதை ஒருநாள் கண்டடைவோம் என்று அகதிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அந்தத் திடீர் முகாமில் முனைப்புள்ள சில அகதிகளால் சிறிய மளிகைக் கடைகளும் உணவகங்களும் கூட அமைக்கப்பட்டிருந்தன. அந்த உணவகங்களுக்கு முன்னால் ‘காபூல் ரொஸ்ரோரண்ட்’, ‘தாஜ்மகால் தர்பார்’, ‘இஸ்தான்புல் கஃபே’ என்றெல்லாம் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. பொரித்த கோழிக்கால் விற்கும் கடையொன்றுக்கு ’10 டவுனிங் ஸ்ட்ரீட்’ என்று பெயரிடப்பட்டிருந்தது.

மரத் தூண்களாலும் தடிகளாலும் பலகைகளாலும் சிறிய மசூதி, கிறிஸ்தவ தேவாலயம், இந்துக் கோயில் போன்றவையும் முகாமில் அமைக்கப்பட்டிருந்தன. அகதிகளிலேயே மதகுருமார்களும் இருந்ததால் அந்த வழிபாட்டிடங்கள் குழப்பமில்லாமல் இயங்கி வந்தன.

அந்த முகாமில் ஏழாயிரம் அகதிகள் இருந்தார்கள். அவர்களில் ஆயிரம் குழந்தைகளும் இருந்தன. முகாமிலிருந்த அகதிகளுக்குப் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உணவுப் பொருட்களையும் குளிர்காப்பு ஆடைகளையும் மருந்துகளையும் விநியோகித்தன. என்றாலும், அவை அகதிகளுக்குப் போதுமானவையாக இருக்கவில்லை. விநியோகம் நடக்கும் நாட்களிலெல்லாம் அகதிகளிடையே தள்ளுமுள்ளுகளும் சண்டை சச்சரவுகளும் ஏற்படுவதுண்டு.

முகாமில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படும். இவ்வாறான ஒரு அகதி முகாம் இதற்கு முன்பு உலகில் எங்கும் இருந்ததாகத் தெரியவில்லை. பெரும்பாலும் ஒரே நாட்டை அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டுதான் அகதி முகாம்கள் அமைக்கப்படும். அந்த முகாம்களை ஓர் அரசாங்கமோ அல்லது தொண்டு நிறுவனங்களோ பொறுப்பேற்று நடத்துவதாக இருக்கும். ஆனால், இந்த அகதி முகாம் அவ்வாறனதல்ல. பெருமழை, பெரும் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் போல் தோன்றிய முகாம் இது.

ஒரு நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் இரண்டு இனத்தவரோ அல்லது இரண்டு மதத்தவரோ நேருக்குநேர் போர் புரிந்திருப்பார்கள். அவர்களிடையே காலங்காலமாகப் பகையுணர்ச்சியும் வெறுப்பும் மண்டிக் கிடக்கும். ஆனால், ஜங்கிள் முகாமிலோ இந்த இரண்டு பிரிவினரும் சேர்ந்து தங்கியிருக்க வேண்டியிருந்தது. பல நாடுகளினதும் இயக்கங்களினதும் கொடிகள் கூடாரங்களின்மீது ஏற்றப்பட்டு அலங்கோலமாக இருந்தன. அந்தக் கொடிகள் எதிர்த் தரப்பால்  இரவுகளில் கிழித்து எறியவும்பட்டன. இதனால், அங்கே அடிக்கடி மோதல்களும் கைகலப்புகளும் ஏற்பட்டன. இதற்கொரு முடிவு கட்டுவதற்காக அங்கே பேச்சுவார்த்தைகளும் அகதிகளால் நடத்தப்பட்டன. பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்து கடைசியில் ஒரு முடிவும் எடுக்கப்பட்டது. அந்த முடிவின்படி, கூடாரங்களில் பறந்த எல்லா நாடுகளினதும் இயக்கங்களினதும் கொடிகளும் இறக்கப்பட்டு, முகாமின் நடுவில் ஒரேயொரு கொடி மட்டும் உயரமான கம்பத்தில் ஏற்றப்பட்டது. அது பிரித்தானியாவின் ‘யூனியன் ஜாக்’ கொடி.

ஜங்கிள் முகாமின் உச்சியில் யூனியன் ஜாக் கொடி பறந்துகொண்டிருப்பதைக் கண்ட பிரெஞ்சு அதிகாரிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த யூனியன் ஜாக் கொடியை பிரெஞ்சு மண்ணில் நாட்டுவதற்கு ஆங்கிலேயர்கள் நூறாண்டு காலம் போர் செய்தும் அது நடக்காமல் போனது. ஆனால், இந்த அகதிகள் அதை நிமிடத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்கள்.

ஆந்ரே வீதியோரத்தில் சைக்கிளை நிறுத்திவைத்து, அந்தக் கொடியைக் கொஞ்ச நேரம் அண்ணாந்து பார்த்தவாறே இருந்தான். உண்மையில், அவன் இப்போதுதான் அந்தக் கொடியை நேரில் பார்க்கிறான். அவன் இதுவரை இங்கிலாந்துக்குச் சென்றதில்லை.

ஜங்கிள் முகாம் மாரிகாலக் கடல் போன்று இரைந்துகொண்டிருந்தது. காடு முழுவதும் மனிதர்கள் திரிந்துகொண்டிருந்தார்கள். இதில் எங்கே போய், எப்படிப் போய் பொப்பியைக் கண்டுபிடிப்பது என ஆந்ரேக்குப் புரியவில்லை. வீதியிலிருந்து கிளைத்த ஒரு ஒற்றையடிப் பாதை புற்களுக்குள்ளால் ஜங்கிள் முகாமை நோக்கித் தாழ்வாகச் சென்றது. ஆந்ரேயின் சைக்கிள் அந்த ஒற்றையடிப் பாதையால் இறங்கிச் சென்றது.

ஆந்ரே அகதிக் கூடாரங்களை நெருங்கியபோது, அங்கே ஏற்கெனவே தொண்டு நிறுவனமொன்றைச் சேர்ந்த மருத்துவர்கள் ஒரு திறந்த வாகனத்திலிருந்து அகதிகளுக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னே மிக நீண்ட வரிசை வளைந்து வளைந்து நின்றுகொண்டிருந்தது. பொப்பி ஏதாவது நோயில் விழுந்து, அந்த வரிசையில் நின்றிருப்பாளோ என்றுகூட ஆந்ரேக்குக் கற்பனை வந்தது. சைக்கிளைத் தள்ளிக்கொண்டே அங்குமிங்கும் பார்த்துக்கொண்டே போனான். ஒரு தேநீர்க் கடையைக் கண்டதும் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு, அங்கேயிருந்த ப்ளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.

தேநீர்க் கடையை நடத்திக்கொண்டிருந்த கிழவர் நீண்டதாடி வைத்து, தலையில் தொப்பி அணிந்திருந்தார். பிரெஞ்சு மொழி நன்றாகப் பேசினார்.

“நீங்கள் மருத்துவக் குழுவோடு வந்தவர் என நினைக்கிறேன். உங்கள் முகத்தைப் பார்த்தாலே மருத்துவர் என்பதைக் கண்டுபிடித்துவிடலாமே. தேநீர் அருந்துகிறீர்களா? புதினாவும் ஏலக்காயும் கலந்த கறுப்புத் தேநீர் உள்ளது.”

ஆந்ரே தேநீரைப் பருகியவாறே அந்தக் கிழவரிடம் “அய்யா… நான் பொப்பி என்ற ஒரு பெண்ணைத் தேடி வந்தேன்” என ஆரம்பித்து, அவளது பாஸ்போர்ட்டில் அவன் பார்த்து ஞாபகத்தில் வைத்திருந்த அவளது வயது, நாடு போன்ற விவரங்களையும் சொல்லிவிட்டு “அவளை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

கிழவர் வாய்க்குள் என்னவோ முணுமுணுத்துக்கொண்டார். பிறகு “பொப்பி… இந்தப் பெயரை இங்கேதான் எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறதே. எனக்கு எழுபது வயதாகிறதல்லவா…காலையில் கேட்டது மதியம் மறந்துவிடுகிறது” என்றவாறே கண்களைச் சுருக்கினார்.

“அவளது தங்கைகூட சமீபத்தில் இங்கிலாந்துக்குப் போய்விட்டாள்…” என்றான் ஆந்ரே.

“நீங்கள் நாளைக்கு வாருங்களேன். நான் விசாரித்து வைக்கிறேன். நாளைக்கு கறுவாப்பட்டையும் எலுமிச்சை இலைகளும் போட்டுத் தேநீர் தயாரிக்கவுள்ளேன்.”

ஆந்ரே தனது மேலங்கிப் பைக்குள் இருந்து சதுர வடிவமான ‘வெஸ்டர்ன் யூனியன்’ அட்டையை எடுத்து அந்தக் கிழவரிடம்  கொடுத்தவாறே “ஒருவேளை நான் சொல்லும் பொப்பியை நீங்கள் கண்டுபிடித்தால், இந்த அட்டையிலுள்ள அலைபேசி இலக்கத்திற்கு அழைக்கச் சொல்லுங்கள்” என நம்பிக்கையில்லாமலேயே சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டான். இரவு கவிந்துகொண்டிருந்ததால் அந்தக் காடு முழுவதும் மெழுகுவத்திகள் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. ஆந்ரே வீதிக்கு வந்ததும் ஜங்கிள் முகாமை ஒருதடவை திரும்பிப் பார்த்தான். ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் இறங்கியிருப்பது போல் அந்தக் காடு ஒளிர்ந்துகொண்டிருந்தது.

அடுத்தநாள் காலையிலிருந்தே அய்ந்து நிமிடத்துக்கு ஒருமுறை தனது அலைபேசியை எடுத்து ஆந்ரே பார்த்தவாறேயிருந்தான். அன்றைக்கென்று ஆங்கிலேய மாலுமிகள் கூட்டமொன்று நாணய மாற்றுச் செய்வதற்காக வந்து அவனை மொய்த்துப் பிடித்துக்கொண்டது. அதைப் பெரிய தொந்தரவாகக் கருதிக்கொண்டே தனது கவனம் முழுவதையும் ஆந்ரே அலைபேசியிலேயே வைத்திருந்தான். மாலையாகி, கிளையை மூடும் நேரமும் வந்தபோதுதான், முகப்புக் கண்ணாடியில் பொப்பி மெல்லத் தட்டினாள்.

“ஆந்ரே… என்னைத் தேடி முகாமுக்கு வந்தீர்களா என்ன! இந்த அட்டையைத் தேநீர்க்கடை அய்யா எனது கூடாரத்திற்கு வந்து கொடுத்தார்.”

“ஆம். எனக்கு அந்தப் பக்கம் ஒரு வேலையிருந்தது. அப்படியே முகாமுக்கும் வந்து எட்டிப் பார்த்தேன்.நேற்று வியாழக்கிழமை. பணம் பெற்றுக்கொள்ள நீங்கள் வரவில்லை…”

“கடவுள் உங்களுக்கு நன்மை செய்வார் ஆந்ரே! அப்பா அலைபேசியில் தகவல் அனுப்பியுள்ளார். அவரால் பணம் அனுப்ப முடியவில்லையாம். எங்கள் பகுதியில் போர் இப்போது மிக உக்கிரமாக நடந்துகொண்டிருப்பதால், எங்களது பழத்தோட்டத்தை விலைக்கு வாங்குவதாகச் சொல்லியிருந்தவர்கள் பின்வாங்கிவிட்டார்களாம். அப்பா என்னை இன்னும் சில நாட்கள் காத்திருக்கச் சொன்னார். எப்படியும் பணம் அனுப்பிவிடுவார். நீங்கள் கிளையை மூடும் நேரத்தில் வந்து பணத்தைத் தருமாறு உங்களுக்குத் தொந்தரவு கொடுக்கமாட்டேன்” என்றவாறே தலையைச் சாய்த்து வணக்கம் சொல்லிவிட்டு, பொப்பி அங்கிருந்து புறப்பட்டாள்.

ஆந்ரே கிளையை மூடும்போது, பொப்பி கடலைக் கடந்துவிடுவாள் என்ற எண்ணம் அவனுக்குள் மீண்டும் துக்கத்தைப் பெருக்கலாயிற்று. இது என்ன மாதிரியான பைத்தியகாரத் துக்கம் என்றே அவனுக்குப் புரியவில்லை.

அவன் சைக்கிளில் ‘தேசிய வீரர்கள் நினைவுச் சின்னம்’ அமைந்திருந்த சதுக்கத்தைக் கடந்தபோது, பொப்பி வீதியில் நடந்து போய்க்கொண்டிருப்பதைக் கண்டான். அவளருகே ஆந்ரேயின் சைக்கிள் தானாகவே நின்றது.

“ஆந்ரே என்ன இந்தப் பக்கம்?” என்று பொப்பி கீழுதட்டைக் கோணிக்கொண்டே கேட்டாள். “எனது அறை இந்த வீதியில்தானே இருக்கிறது. அதைக் கடந்துதான் நீங்கள் ஜங்கிள் முகாமுக்குப் போக வேண்டும்” என்றான் ஆந்ரே. சைக்கிளைத் தள்ளியவாறே பொப்பியோடு சேர்ந்து நடந்துகொண்டே கேட்டான்:

“உங்களின் தங்கை இங்கிலாந்தில் எப்படியிருக்கிறாள்? உங்களுக்காகக் காத்திருப்பாளே…”

“உண்மைதான். அவள் எனக்காகக் காத்திருப்பாள். அவள் என்னைப் போல் தைரியமானவள் கிடையாது. எங்களது அம்மா போல் எல்லாவற்றுக்கும் பயந்தவள். அதுதான், அன்று அவள் தெருவில் நின்று எப்படிக் குழறி அழுதாள் என்று நீங்கள் பார்த்தீர்களே! இங்கிலாந்துக்குப் போவதற்கு அவள் படு உற்சாகமாகத்தான் இருந்தாள். ஆனால், அன்றிரவு கூடாரத்திலிருந்து அவள் கடற்காகங்களோடு கிளம்பும்போது, என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்று சொல்லிவிட்டாள். சந்தர்ப்பங்களை ஒருபோதும் தவறவிடக்கூடாது எனச் சொல்லி, அவளைத் தைரியப்படுத்தி அனுப்பிவைத்தேன். ஒரு அகதியின் எதிர்காலத்தை அந்த அகதி தீர்மானிப்பதில்லை. சந்தர்ப்பங்கள்தானே அதைத் தீர்மானிக்கின்றன. இல்லையா ஆந்ரே… அவள் அந்தக் கரையைப் போய்ச் சேர்ந்ததும் இங்கிலாந்து அரசாங்கம் அவளைப் பொறுப்பெடுத்து மான்செஸ்டர் நகரத்திலுள்ள ஒரு விடுதியில் வசதியாகத் தங்க வைத்திருக்கிறது எனக் கடற்காகங்கள் என்னிடம் சொன்னார்கள். இங்கிலாந்து எண்ணிலிருந்து எனக்கு இரண்டு அழைப்புகள் வந்திருந்தன. ஜங்கிள் முகாமில் அலைபேசிக்கு சிக்னல் கிடைக்காததால் அழைப்பைத் தவறவிட்டுவிட்டேன். அவள் பொதுத் தொலைபேசிக் கூண்டிலிருந்து அழைத்திருக்க வேண்டும்…” என்று பொப்பி பேசிக்கொண்டே போக, ஆந்ரேக்கு ஒரேயொரு யோசனைதான் அப்போது மூளைக்குள் ஓடியது. பொப்பி எவ்வளவு தெளிவாக, அர்த்தமாகப் பேசுகிறாள். எனக்கு இவ்வளவு வயதாகியும் இதெல்லாம் வரவில்லையே. கிளையைத் திறந்து வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கும் இந்த வேலை போய்விடுமா? போனால் என் எதிர்காலம் என்னவாகும் என்றெல்லாம் இரவு முழுவதும் பினாத்திக்கொண்டு இருக்கிறேனே.

இருவரும் பேசிக்கொண்டே ஆந்ரேயின் அறையை நெருங்கியபோது “பொப்பி எனது அறைக்கு வந்து என்னோடு தேநீர் அருந்திச் செல்வீர்களா?” என்று ஆந்ரே சட்டெனக் கேட்டான்.

“ஆந்ரே!” என்று வியப்புடன் கண்களை விரித்த பொப்பி “போகலாம்” என்றாள்.

இருவரும் எதிரெதிரே அமர்ந்து தேநீர் அருந்தும்போது, பொப்பி நாற்காலியில் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு, தேநீர் மேசையில் முழங்கைகளை ஊன்றிக்கொண்டாள். அறையைச் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, ஆழமாக மூச்சை உள்ளிழுத்தாள்.”உங்களது அறை மிகச் சுத்தமாகவும் கதகதப்பாகவும் இருக்கிறது ஆந்ரே. எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு என்னுடைய தேகம் கதகதப்பாகிறது” என்றாள்.

“பொப்பி உங்களிடம் நான் ஒன்று கேட்க வேண்டும். எனக்கு அந்த விஷயம் புரியவே இல்லை. ஜங்கிள் முகாமிலுள்ளவர்கள் பிரான்ஸிலேயே அகதியாகப் பதிவு செய்து இருக்கலாமே. ஏன் உயிரைப் பணயம் வைத்து ரப்பர் படகுகளில் கடலைக் கடக்கிறீர்கள்?”

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் ஆந்ரே. சிலருக்கு இங்கிலாந்தில் உறவுகள் இருப்பதால் அவர்களிடம் போகிறார்கள். பிரான்ஸை விட இங்கிலாந்தில் அகதிகளுக்கான சலுகைகள் அதிகம், இலகுவாக வேலை கிடைக்கும் என்றெல்லாம் கேள்விப்பட்டுச் சிலர் கடலைக் கடக்கிறார்கள். ஆனால், நான் போகும் காரணம் வேறு.”

“உங்கள் தங்கை அங்கே இருக்கிறாள்…”

அது மட்டும் இல்லை. எங்களது கிராமத்திலிருந்து கிளம்பும்போதே இங்கிலாந்துதான் இறுதி நிலம் என்ற உறுதியான முடிவோடுதான் புறப்பட்டேன். யாராவது ஒருவர் என்னைப் பிரெஞ்சுக் குடிமகள் ஆக்குகிறேன் என்று சொன்னால்கூட அதை மறுத்துவிட்டு, நான் இங்கிலாந்துக்குத்தான் போவேன்.”

ஆந்ரேக்கு ஏமாற்றம் தலைக்கேறி அடித்தது. அவன் ஒரு பரிதாபமான புன்னகையைச் செய்து அதைச் சமாளித்தவாறே “ஏன் அப்படி ஒரு உறுதியான தீர்மானம்? என்று கேட்டான்.

“உங்களிடம் அதைச்  சொல்லலாம் ஆந்ரே… தவறில்லை. எங்களது குடும்பம் ஓரளவு வசதியான குடும்பம்தான். சொந்தமாகப் பழத் தோட்டங்கள் இருந்தன. காய்கறி விவசாயமும் உண்டு. பெற்றோருக்கு நாங்கள் இரண்டு பிள்ளைகள்தான். எங்களது வீடு கிராமத்திற்குச் சற்று ஒதுக்குப்புறமாகப் பழத் தோட்டங்களுக்கு நடுவே இருக்கிறது.

யுத்தம் எங்களது பகுதிக்கு வந்தபோது எல்லாமே குலைந்துபோயின. பத்துப்பேர் ஆயுதங்களுடன் அணிவகுத்து வந்து ஒரு பெண்ணை அவளது வீட்டிலிருந்து தூக்கிச் செல்வதை நினைத்துப் பாருங்கள். பயந்து போய்விடுவீர்கள். ஆனால், அவர்களிடம் உதைவாங்கித் தரையில் இரத்தத்திற்குள் விழுந்து கிடந்த அப்பா “தைரியமாக இரு! பொப்பி தைரியமாக இரு!’ என்று கத்தினார். தங்கை அப்போது பாடசாலைக்குப் போயிருந்ததால் தப்பித்துக்கொண்டாள்.

என்னைத் தூக்கிச் சென்றவர்களுக்கு அவர்களது முகாம் வரை என்னைக் கொண்டு செல்லப் பொறுமையில்லை. வழியிலேயே புதர்களைக் கண்ட இடத்திலெல்லாம் என்னை உள்ளே தூக்கிப்போட்டு என்மீது படுத்துக்கொண்டார்கள். அவர்கள் என்னை முகாமுக்குக் கொண்டு சென்றபோது, எனது உடலின் எல்லாத் துவாரங்களிலிருந்தும் இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்! எல்லாத் துவாரங்களிலிருந்தும்!”

ஆந்ரேயின் கால்கள் நடுங்கத் தொடங்கின. அவன் சட்டென மேசைக்கு அடியில் கால்களை நுழைத்துக்கொண்டான். ஏன் இவளிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்? இவள் எப்போது பதிலை நிறுத்துவாள்? என மருகத் தொடங்கினான். பொப்பி தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தாள்:

“அவர்கள் யாருக்கும் எங்களுடைய மொழி தெரியாது. எங்களுக்கும் அவர்களுடைய மொழி தெரியாது. அவர்களுக்கு ஆங்கிலமும் பேசத் தெரிந்திருக்கவில்லை. என்னைப் போலவே பிடித்து வரப்பட்டிருந்த பெண்கள் சாறு பிழிந்த சக்கைகளானதும் அவர்களை ஒவ்வொருவராகச் சுட்டுக் கொன்றார்கள். என்னையும் இரண்டொரு நாட்களில் சுட்டுவிடுவார்கள் என நான் எண்ணினேன். ஆனால், நான் தைரியமாகவே இருந்தேன். எனது உடலில் சக்தி, இரத்தம், வெப்பம் எல்லாமே போயிருந்தாலும் தைரியம் மட்டும் என்னோடிருந்தது.

அந்த முகாமுக்குப் புதிதாக ஓர் அதிகாரி வந்தான். அவன் இளைஞன். அவன் எனது முகத்தைக் கைகளால் நிமிர்த்திப் பார்த்தபோது, நான் ஆங்கிலத்தில் அவனிடம் பேசினேன். அந்த இளைஞன்தான் என்னைக் காப்பாற்றினான் என்பதைக் காட்டிலும் ஆங்கிலமே என்னைக் காப்பாற்றியது என்றுதான் சொல்வேன். இதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது என்றுதான் நினைக்கிறேன்.”

ஆந்ரே முழுவதுமாகத் துக்கத்துள் மூழ்கியிருந்தான். இப்படியான கதைகளைக் கேட்கும் சக்தி அவனுக்கு இல்லை. அழுகையைப் பெரும்பாடுபட்டு அடக்கிக்கொண்டிருந்தான்.

3

அதற்குப் பின்பு ஆந்ரே, பொப்பியைச் சந்திக்கவேயில்லை. அவள் வருவாள் என அவன் காத்துக்கொண்டிருக்கவுமில்லை. பொப்பி அவனது கழுத்துவரை துக்கத்தை நிரப்பிவிட்டுப் போயிருந்தாள். அவன் கண்களை மூடியவாறே துக்கத்தில் அமிழ்ந்திருந்தான். பொப்பி என்னவானாள் என எப்போதாவது யோசனை வரும். அவள் தெளிந்த புத்தியுள்ள பெண், கண்டிப்பாக ஏதோவொரு வழியில் இங்கிலாந்துக்கு -அவளது இறுதி நிலத்திற்கு – போய்ச் சேர்ந்திருப்பாள் என நினைத்துக்கொள்வான்.

மூன்று மாதங்கள் கழிந்தபோது, குளிர் மடிந்து வசந்தம் தொடங்கியது. ஜங்கிள் அகதி முகாமை முற்றாக அகற்றப் பிரெஞ்சு அரசாங்கம் முடிவெடுத்தது. அதிரடிக் காவல்படை ஜங்கிள் முகாமுக்குள் இறக்கப்பட்டு, அகதிகள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக பிரான்ஸின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். முகாமில் அமைக்கப்பட்டிருந்த அகதிக் கூடாரங்கள் பிரிக்கப்பட்டு, குப்பை வண்டிகளில் ஏற்றப்பட்டன. அகதிகளால் அமைக்கப்பட்டிருந்த தேவாலயமும் பள்ளிவாசலும் கோவிலும் கடைகளும் புல்டோசர்கள் வைத்து உடைத்துத் தள்ளப்பட்டன. அந்தச் சிறு காட்டில் அதீத மனித நடமாட்டத்தால் செத்துக் கிடந்த புற்கள் இயந்திரங்களால் ஆழ உழுது புரட்டப்பட்டபோது, நிலத்துக்குள் ஒரு பெண்ணின்  சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. ‘அந்த பெண் மூன்று மாதங்களுக்கு முன்பாகத்தான் அங்கே புதைக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று சட்ட மருத்துவ நிபுணர்களின் அறிக்கை தெரிவிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.

ஆந்ரே காலை ஒன்பது மணிக்குக் கிளையைத் திறந்துவிட்டு, தனது நாற்காலியில் அமர்ந்தவாறே பத்திரிகையை விரித்தபோதுதான் அந்தச் செய்தியை அறிந்தான். புதைக்கப்பட்டிருந்த உடல் பொப்பியுடையதாக இருக்குமோ என ஆந்ரேக்கு ஏனோ சந்தேகம் எழுந்தது. அவளாக இருக்காது என்றும் மனம் சொன்னது. அவன் தடுமாறினான். மெல்ல நாற்காலியிலிருந்து எழுந்து வெளியே வந்து, மெதுவாக நடந்து வீதியைக் கடந்து காவல் கூண்டை நோக்கிச் சென்றான். காவல் கூண்டுக்குள் நின்றிருந்த பொலிஸ்காரர் “ஏய் தம்பி! சாலையில் வாகனங்களைக் கவனி! தூக்கத்தில் நடக்கும் வியாதியும் உனக்கு வந்துவிட்டதா?” என்று சத்தம் போட்டார்.

“மிஸியூ.ஜோன் மிஷெல்…ஜங்கிள் முகாமில் ஒரு பெண்ணின் உடல் அகழ்ந்தெடுக்கப்பட்டதாகச் செய்தி படித்தேன். என்னதான் நடக்கிறது கலே நகரத்தில்? உங்களுக்கு இதுபற்றி ஏதாவது தெரியுமா?”

அந்தப் பொலிஸ்காரர் சற்றே குரலைத் தாழ்த்தியவாறே “நான் கேள்விப்பட்டதைச் சொல்கிறேன் தம்பி… விஷயம் உன்னோடேயே இருக்கட்டும். கொலையாளிகளில் ஒருவனை இன்று அதிகாலையில் பெல்ஜியத்தில் வைத்து நமது ஆட்கள் கைது செய்துவிட்டதாகக் கேள்விப்படுகிறேன். அவன் குற்ற ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்துவிட்டானாம். ஜங்கிள் முகாம் விஷயமென்றால் எங்களது ஆட்கள் வேகமாகத்தான் செயற்படுகிறார்கள் பார்த்தாயா” என்றார்.

ஆந்ரே மறுபடியும் வீதியைக் கடந்து, கிளைக்குள் நுழைந்து நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு வெறுமனே கணினியைத் தட்டிக் கொண்டிருந்தான். அவனது மூளை ஜங்கிள் முகாமில் அலைந்துகொண்டிருந்தது. அப்போது, அலைபேசி மணி ஒலித்தது. சோர்வுடன் அலைபேசியை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு “வணக்கம்! வெஸ்டர்ன் யூனியன்” என்றான். அவனது காதிற்குள் கனத்த குரல் எதிரொலியுடன் கேட்டது:

“ஆந்ரே! நான் பொப்பி. லண்டனிலிருந்து பேசுகிறேன்…”

ஆந்ரே எதுவும் பேசாமல் அலைபேசியைக் காதுக்குள் வைத்தவாறே முகப்புக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது சிறிய விழிகள் அங்குமிங்குமாக அசைந்துகொண்டிருந்தன.

“ஆந்ரே…பொப்பி பேசுகிறேன். கேட்கிறதா?”

“பொப்பி! உண்மையிலேயே நான் ஒரு கடைந்தெடுத்த முட்டாள். உங்களைக் கொன்று புதைத்துவிட்டார்கள் என்று இப்போதுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.”

“அது என்னுடைய தங்கை. நான் இங்கிலாந்து வந்தவுடனேயே அவளைத் தேடியலைந்துவிட்டு, அவளைக் காணவில்லை என இங்கிலாந்துக் காவல்துறையிடம் முறையீடு செய்திருந்தேன். இப்போதுதான் அவர்கள் என்னை அலைபேசியில் அழைத்துத் தகவலைச் சொன்னார்கள். என்னால் பிரான்ஸுக்கு வர முடியாது. அங்கே எனக்குத் தெரிந்தவர் நீங்கள் ஒருவர்தான். அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது எனக் கொஞ்சம் விசாரித்து எனக்குச் சொல்கிறீர்களா?”

“நிச்சயம் விசாரித்துச் சொல்கிறேன். இந்தத் துயரம் நிகழ்ந்தே இருக்கக்கூடாது” எனச் சொன்ன ஆந்ரே ஒரு விநாடி நிறுத்தி “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் பொப்பி?” என்று கேட்டான்.

“தைரியமாக இருக்கிறேன்” என்றாள் பொப்பி.


Art : meithu

https://thadari.com/poppy-is-a-nickname-shobasakthi/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை நீண்ட நாட்களுக்கு மனதில் நிற்கப் போகின்றது. கதை சொல்லப்பட்ட  விதம் அப்படி இருக்கிறது. இணைப்புக்கு நன்றி கிருபன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.