Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய்காந்த்துக்கு தேவை அடக்கம்..ஆணவமல்ல-கருணாநிதி கடும் தாக்கு[/

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜய்காந்த்துக்கு தேவை அடக்கம்..ஆணவமல்ல-கருணாநிதி கடும் தாக்கு

திங்கள்கிழமை, பிப்ரவரி 11, 2008

சென்னை: நான் தான் புத்தர், மற்றவர் எல்லாம் அயோக்கியர் என்ற ரீதியில் விஜயகாந்த் தொடர்ந்து பேசிக் கொண்டு திரிவல் நல்லதல்ல என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேமுதிகவைச் சேர்ந்த ஒருவரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள கோவில்பட்டிக்குச் சென்ற அந்த கட்சியின் தலைவர் தான் திருமண விழாவில் அரசியல் பேசக் கூடாது என்று இருந்ததாகவும், தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி அலங்கோலத்தைப் பார்க்கும் போது பேச வேண்டிய அவசியம் வந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டு ஆட்சியிலே அப்படி என்ன அலங்கோலம்?. விருத்தாச்சலம் தொகுதி மக்கள் இவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பியது எதற்காக?!

ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்தபோது சட்டப்பேரவையிலே வந்து ஆட்சியின் அலங்கோலத்தை அங்கே வந்து பட்டியலிட்டிருந்தால் அதற்கு பதில் கிடைத்திருக்குமே?. ஆறு பேர்களைக் கொண்ட மதிமுக சார்பில் ஆளுநர் உரையிலே பேசுகிறார்கள், ஏன் சுயேச்சை உறுப்பினர் கூட ஒருவர் அங்கே பேசுகிறார்.

ஒரு கட்சியை நடத்தும் தலைவர், நான் தான் ஆட்சிக்கே வரப்போகிறேன் என்று சொல்லுபவர், சட்டப்பேரவையிலே வந்தல்லவா அவர் தமிழகத்தில் காணும் அலங்கோலங்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு எங்கேயோ சந்து முனையிலே போய் நின்று கொண்டு சிந்துபாடினால் என்ன செய்வது.

தமிழகத்திலே அப்படி என்ன அலங்கோல ஆட்சி நடக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறதே அதை அலங்கோலம் என்கிறாரா? விவசாயிகளுக்கு சுமார் ரூ.7,000 கோடி அளவிற்கு கூட்டுறவு கடன்கள் ரத்து செய்யப்பட்டதை அலங்கோலம் என்று கூறுகிறாரா?

மகளிருக்கு இலவச எரிவாயுவுடன் கூடிய அடுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறதே, அதை அலங்கோலம் என்கிறாரா?

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத ஏழை, எளியவர்களுக்கெல்லாம் தொடர்ந்து வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கி வழங்கப்பட்டு வருகிறதே, அது அவருக்கு அலங்கோலமாகத் தெரிகிறதா.

தொழிலாளர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியிலே போனஸ் என்பதே இல்லாத நிலைமை இருந்ததை மாற்றி, தற்போது அவர்கள் எல்லாம் போனஸ் பெறுகின்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறோமே, அது தேமுதிக தலைவருக்கு அலங்கோலமாகத் தெரிகிறதா?

நிலமற்ற ஏழை எளிய விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் வழங்கப்பட்டு வருகிறதே, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டுமென்பதற்காக தமிழகத்திலே புதிய புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கச் செய்து பல்லாயிரக்கணக்கானோர்க்கு வேலை கிடைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதே. அதையும் மீறி இன்னும் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு மாதந்தோறும் அரசே நிதி உதவி அளித்து வருகிறதே.

இவைகள் அனைத்தும் தேமுதிக தலைவருக்கு அலங்கேலமாகத் தெரிகிறது என்றால் அவர் கருத்தில் கோளாறு இருக்கிறது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது.

அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை சுரண்டுவதாகவும், நெல்லையிலே உள்ள மக்களிடம் அந்தத் தலைவர் கூறியிருக்கிறார். ஆட்சிக்கு வர வேண்டும், முதல்வராக வேண்டுமென்றெல்லாம் நினைக்கும் அவர் ஏதோ ஒரு சாதாரணப் பேச்சாளரைப் போல குற்றச்சாட்டுகளை பொறுப்பில்லாமல் கூறக் கூடாது. மக்களைக் சுரண்டுகிறோம் என்றால் எந்த மக்களை எப்படி என்று விளக்கம் தர வேண்டாமா?

உருப்படியாக எந்த காரியமும் செய்யப்படவில்லை என்று பேசியிருக்கிறாரே, மேலே பட்டியலிடப்பட்டுள்ள காரியங்கள் எல்லாம் உருப்படியானவைகளாக அவருக்குத் தெரியவில்லையா.

சென்னையிலே ரூ.9,700 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கிடவும் ரூ.1,340 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கிடவும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதே. அது தேமுதிக தலைவருக்கு உருப்படியான காரியமாகத் தெரியவில்லையா?

கடந்த 8ம் தேதி நடைபெற்ற ஒரே நாள் அமைச்சரவை கூட்டத்தில் ரூ.16,000 கோடி மதிப்பீட்டில் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பளிக்கத்தக்க விதத்தில் ஒப்புதல் அளிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதே. அது உருப்படியான காரியமில்லையா? தமிழ்நாட்டு மக்களே.. நீங்கள் தான் இது பற்றி தீர்ப்பு வழங்க வேண்டும்.

திமுகவிற்கு மக்கள் நலனில் அக்கறையில்லை என்கிறார் தேமுதிக தலைவர். இந்த பணிகள் எல்லாம் மக்கள் நலனில் அக்கறையில்லாமலா செய்யப்பட்டுள்ளது. பொய் சொல்வதற்கும் ஒரு எல்லை இல்லையா. திருமணம் ஆகாமல் ஆண்டு கணக்கில் காத்திருக்கும் பெண்களுக்கெல்லாம் வாழ்வளிக்க வேண்டுமென்பதற்காக திருமண நிதி உதவி திட்டம் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் ரூ.15,000 வீதம் பல்லாயிரணக்கானவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதே. மக்கள் நலனில் அக்கறை இல்லாத செயலா இது.

அது போலவே கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா ரூ.6,000 வீதம் நிதி உதவி அரசின் சார்பில் அளிக்கப்படுகிறதே. அது மக்கள் நலனில் அக்கறையில்லாத செயலா?

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது எந்த ஆட்சியிலே கழக ஆட்சியில் அல்லவா? அது மக்கள் நலனில் அக்கறை இல்லாத செயலா? இந்தியாவிலே எந்த மாநிலத்திலேயாவது அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக தமிழகத்திலே அமைக்கப்பட்டுள்ளது போல வாரியங்கள் அமைக்கப்பட்டு, அந்த தொழிலாளர்களுக்கெல்லாம் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறதா?

மக்களுக்கு இந்த ஆட்சியிலே எந்த நன்மையும் இல்லை என்று எந்த ஆதாரத்தை வைத்து அவர் கூறுகிறார்.

தேசிய கட்சியும் தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று மத்திய அரசை ஆளும் கட்சி மீதும் குறை கூறியிருக்கிறார். தேசிய கட்சி தமிழக மக்களுக்கு ஏன் ஒன்றும் செய்யவில்லை தமிழை செம்மொழியாக அறிவித்திருப்பது தற்போதுள்ள மத்திய அரசு தானே!

சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் கொடுத்தது எந்த ஆட்சியிலே. தற்போதைய ஆட்சியிலே தானே! கடல் நீரை குடிநீராக்கும் திட்டதிற்கு ரூ.1,000 கோடி தர ஒப்புதல் கொடுத்திருப்பதும் இன்றைய மத்திய ஆட்சி தானே. எல்லாவற்றையும் ஒரேயடியாக மறைத்து விட்டு நான் தான் புத்தர், மற்றவர் எல்லாம் அயோக்கியர் என்ற ரீதியில் பேசுவது நல்லதா.

எழுப்பப்படும் குற்றசாட்டுகளை புள்ளி விவரங்களோடு மறுத்திருப்பதில் கூறினால் அவருக்கு வேடிக்கையாக இருக்கிறதாம்! அவரிடம் ஆதாரம் இருந்தால், புள்ளி விவரங்கள் தெரிந்தால், தான் கூறுகின்ற குற்றச்சாட்டுகளோடு அவற்றையும் இணைத்துச் சொல்வதுதானே! எந்த விவரமும் இல்லாமல் வாயில் வந்ததை எல்லாம் பேசுவேன் என்ற பாணியில் பேசினால் என்ன செய்வது.

நடிகரைப் பார்ப்பதற்காக கூடுகின்ற ரசிகர்கள் கூட்டத்தை எல்லாம் தனது கட்சிக்காரர்களின் கூட்டம் என்று எண்ணி கொண்டு எல்லோரையும் இழிவாகப் பேச நினைப்பது தவறு.

கச்சத்தீவு பற்றி எல்லாம் கோவில்பட்டி கூட்டத்தில் பேசியிருக்கிறார். எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க நியாயமில்லை. அந்த வகையில் கச்சத்தீவு பற்றி உண்மை விவகாரங்கள் அவருக்கு தெரிந்திருக்காது. தெரிந்தவர்களிடமாவது கேட்டு பேசியிருக்கலாமே!

தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்று தற்போது அறிவிக்கப்பட்டு சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதை பற்றியும் பேசி ஏன் இத்தனை ஆண்டு காலம் கொண்டு வரவில்லை என்று கண்டுபிடித்து ஒரு கேள்வியைக் கேட்டு இருக்கிறார்.

நல்ல வேளை! அண்ணாவின் நினைவிடத்தைப் பார்த்து, ஏன் 1967 வரையில் சென்னை ராஜ்யம் என்பதை மாற்றி தமிழ்நாடு எனப் பெயரிடவில்லை எனக் கேட்காமல் போனாரே.

தமிழ்ப்புத்தாண்டு தை முதல் நாள் என்பதை நடைமுறைப்படுத்த தான் இப்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை ஏன் முன்பே கொண்டு வரவல்லை என்கிறாரே, இவர் ஏன் முன்பே கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கேட்டு நாம் சிரிக்கலாம் அல்லவா!

ஊழல் பற்றி எல்லாம் அவர் கூட்டத்திலே பேசி இருக்கிறார். எந்த திட்டத்திலே ஊழல். ஒப்பந்த புள்ளிகள் கோருவதிலே கூட திறந்த வெளி ஒப்பந்தப்புள்ளிகள் என்று குறிப்பிட்டு, எல்லாவற்றிலும் வெளிப்படையாக ஆட்சி நடைபெறுகிறது. வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை வாங்குவதற்கான சட்டப் பேரவை உறுப்பினர்கள் குழுவிலே இடம் பெறவே மறுத்து விட்டு, இப்போது ஊழல் என்று உரைக்கலாமா!

பேசுகிறவர்கள், அவர்களே ஒரு முறை தம்முடைய முகத்தை கண்ணாடிக்கு முன் நின்று பார்த்துக் கொண்டால் நல்லது. யார் ஊழல் வாதி என்பது அப்போது தெளிவாக அவருக்குப் புரியும். அதை விடுத்து பிறர் மீது புழுதியை வாரி இறைக்க நினைப்பது சரியல்ல.

சிமென்ட் பிரச்சினை பற்றி பேசும் போது 20 லட்சம் டன் சிமென்ட் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் 1500 டன் சிமென்ட் தான் விற்பனையாகியிருக்கிறது என்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். 20 லட்சம் டன் சிமென்ட் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று அரசு சார்பில் எப்போதும் கூறவில்லை. ஒரு லட்சம் டன் அதாவது 20 லட்சம் மூட்டைகள் சிமென்ட் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று தான் அரசு சார்பில் கூறப்பட்டது.

20 லட்சம் டன் சிமென்டிற்கும் 20 லட்சம் மூட்டைக்கும் வேறுபாடு தெரியாமல் பேசுவதா. எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று இல்லை. பண்ருட்டியார் போன்ற தெரிந்தவர்கள் யாரிடமாவது கேட்டு கொண்டு, அதை குறித்து வைத்து கொண்டு பேச கூடாதா.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கே யார் வேண்டு மென்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம். தலைவர் ஆகலாம். அதிலே எந்த தவறும் கிடையாது. முன்பெல்லாம் கட்சி ஆரம்பிப்பது என்றால், மக்களுக்காக பணியாற்றி உழைத்து தியாகம் செய்து சிறைக்கு சென்று பாடுபட்டு கொள்கைகளை வகுத்து அவற்றை மக்களிடம் எடுத்து சென்று பரப்பித் தான் கட்சியை வளர்க்க வேண்டி இருந்தது.

தற்போது அத்தகைய நிலையெல்லாம் தேவையில்லை என்றாகிவிட்டது. அதைப் பற்றி நமக்கு விருப்பு வெறுப்பில்லை. ஆனால் அப்படி கட்சி ஆரம்பித்து தலைவராக வருபவர்கள் உண்மை நிலையை பேசி, நியாயம், நேர்மையோடு பேசினால் அது நாட்டிற்கும் நல்லது. மக்களுக்கும் நல்லது, ஏன் அவர்களுக்கும் நல்லது, இல்லையேல் சிரிப்புக்கு ஆளாக நேரிடும். உயர்ந்திட நினைக்கும் ஒரு மனிதனிடம் வளர வேண்டியது அடக்கமே தவிர ஆணவமல்ல எனக் கூறியுள்ளார் முதல்வர்.

தொண்டர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்:

அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,

கழகத்தின் பொறுப்புகளிலே இருப்போர், குறிப்பாக அறிவிக்கப்பட வேண்டிய செய்திகளுக்கு மட்டுமின்றி எல்லா செய்திகளையுமே பெரிய பெரிய பேனர்கள் எழுதியும், சுவரொட்டிகளை ஒட்டியும் அவற்றில் யார் உருவங்கள் தான் இடம் பெறுவது என்றில்லாமல் பத்திரிகைககளில் ஒரு பக்க விளம்பரங்கள் கொடுத்து அபரிமிதமாக ஆடம்பர செயல்களில் ஈடுபடுவது என்பது மக்களின் பெரும் பகுதியினருடைய மன எரிச்சலை உருவாக்கக்கூடியது.

எதுவும் அளவுக்கு மீறினால் அதன் விளைவு கழக வளர்ச்சியில் ஏற்படும் வளைவு என்றாகிவிடும்.

எனவே தவிர்க்க முடியாத நிகழ்வுகளையன்றி வேறு எந்த நிகழ்வுகளையொட்டியும் அவற்றில் என் உருவப்படத்தைக் கூட வெளியிடுவதை தவிர்ப்பதின் மூலம் இயக்கத்தினர் எல்லோருக்கும் வழிகாட்டிகளாக விளங்க வேண்டும் என கழகத் தோழர்கள் அனைவருக்கும் இந்த கண்டிப்பான வேண்டுகோளை விடுக்கின்றேன் எனக் கூறியுள்ளார் கருணாநிதி.

http://thatstamil.oneindia.in/news/2008/02...ijayakanth.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.