Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தோஷ் சுப்ரமணியம்:ஜெயம் ரவி/ஜெனிலியா> விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ravi_jenilia.jpg

ஆக்ஷன், அடிதடிகளை ருசித்து களைத்த வாய்க்கு, குடும்ப பஞ்சுமிட்டாயை ஊட்டியிருக்கிறார்கள். சர்க்கரையாக கரைகிறது அந்த 3 மணி நேரமும்.

சட்டையிலிருந்து சம்சாரம் வரைக்கும், பிள்ளையின் விருப்பத்தை கேட்காமலே முடிவு செய்யும் அப்பா பிரகாஷ்ராஜுக்கும், மகன் ஜெயம் ரவிக்கும் நடக்கும் பாசப்போராட்டமே கதை. பத்திரமாக வைத்திருக்கிறேன் பேர்வழி என்று இறுக பிடித்த முட்டையின் கதியாக்கிவிடுகிறார் ஜெயம்ரவியை. உடைத்து வெடிக்கும் ரவியின் கோபம் என்னவெல்லாம் செய்கிறது என்பது கலகலப்பும், கவிதையும் கலந்து செய்த திரைக்கதை. இதை இறுதி வரை அலுப்பு தட்டாமல் இழுத்துச் செல்கிறது ஜெனிலியாவின் குழந்தைத்தனமான குறும்புகள்.

அப்பாவின் விருப்பத்திற்காக கீரத்தை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கும் ஜெயம்ரவி, ஒரு இன்பமான மோதலில் ஜெனிலியாவை சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார்கள் இருவரும். விஷயம் வீட்டிற்கு தெரியவர, "அவளை அழைத்து வந்து ஒரு வாரம் தங்க வைக்கிறேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அவளே வேண்டாம்" என்கிறார் ஜெயம்ரவி. அந்த ஒரு வாரம்தான் இரண்டாம் பாதி. வீட்டுக்குள் ஒரு குட்டி அணிலாக துள்ளித்திரியும் ஜெனி, அந்த குடும்பத்தை கவர்ந்தாரா? திருமணம் நிறைவேறியதா? முடிவு.

"இந்த அப்பனுங்க இருக்கானுங்களே" என்று நீட்டி முழக்கும் ரவி, அப்பா பிரகாஷ்ராஜ் முன்னிலையில் பம்மி மரியாதை கொடுப்பதை பார்த்தால், இந்த பூனையும்... ரகம்தான். அதுவும் ராவானால், ராவாக அடிக்கிற கோஷ்டிகளுடன் சேர்ந்து கொண்டு, வருங்கால மாமனாரையே நாறடிக்கிற மாதிரி நடந்து கொள்வது சூப்பர்ர்ர். ஆனால், இருவரும் பின்னாளில் சந்தித்துக் கொள்ளும் போது அவனா நீயி என்ற ஆத்திர முட்டல்கள் இல்லாதது ஆறுதல். தனக்கென்று சுதந்திரமாக ஒரு முடிவும் எடுக்க முடியாமல் திணறும் ரவி, படம் முழுவதும் சிலம்பம் ஆடியிருக்கிறார். பிரகாஷ்ராஜ் என்ற பெரும் முதலையையே நடிப்பால் விழுங்கியிருக்கிறார். "அப்பா, இப்போ கூட உங்க கைகளுக்குள்தான் என் கை இருக்கு" என்று சொல்லும்போது கிளாப்ஸ் கிழிக்கிறது தியேட்டரை. க்ளைமாக்ஸ் வசனங்களை எழுதிய கைக்கு தங்க காப்பே போடலாம்.

சற்றே செமியாக இருப்பாரோ என்று சந்தேகப்பட வைக்கிறார் ஜெனிலியா. யார் தலையிலாவது ஒரு முறை இடித்துக் கொண்டால், "ஒரு முட்டோடு நிறுத்தக்கூடாது. கொம்பு முளைக்கும்" என்றவாரே இன்னொரு முட்டு முட்டுவது கலகலப்பு. அதை பிரகாஷ்ராஜுக்கே அப்ளை செய்து பார்க்கிறாரே, சுவாரஸ்யம்... வீடே ரொம்ப சீரியசாக இருக்க, கூலாக உட்கார்ந்து கொண்டு "3 எறும்பு வரிசையா போச்சாம்" என்று கதை சொல்கிற அழகுக்காகவே திருஷ்டி சுற்றி போடலாம் ஜெனிலியாவுக்கு.

கண்டிப்பான, அதே நேரத்தில் அன்பான அப்பா கேரக்டருக்கு பிரகாஷ்ராஜை விட்டால் யாரை யோசித்து பார்க்க இயலும்? பொருத்தமான தேர்வு.

பெண்ணுக்கு ஓவர் செல்லம் கொடுக்கிற சாயாஜி ஷிண்டே, நைசாக பெண்ணை ஃபாலோ செய்கிற காட்சிகளும் கலகலப்பு. வில்லனாக மீசை முறுக்குவார் என்று எதிர்பார்த்தால், சைலண்ட் ஆகி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் .

சந்தானம் கோஷ்டிகளின் காமெடி கலகலப்பு என்றால், கூத்தபிரானாக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் காமெடி அதிரடி, சரவெடி. அதிலும் அப்துல் கலாம் கெட்டப்பில் அவர் தப்பி ஓடுவது வெடிச்சிரிப்பு. டக் அடித்திருக்கிறார் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ். துணை நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆகும் எண்ணமோ என்னவோ?

கண்ணனின் ஒளிப்பதிவும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் திருவிழா ராட்டினங்கள் போல சுகம்.

ரீமேக் என்பவர்கள் சொல்லிவிட்டு போகட்டும். ராஜாவின் தேர்வுகள் தொடரட்டும்...

சந்தோஷ் சுகப்-பிரமணியன்!

- ஆர்.எஸ்.அந்தணன்

தமிழ்சினிமா.கொம்

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சந்தோஷ் சுப்பிரமணியம்

santhoshsubramaniyamdmaho1.jpg

கண்டிப்பான தந்தைக்கும் - கலகலப்பான மகனுக்கும் இடையே சண்டை, சென்டிமென்ட் இல்லாமல் சுறுசுறுப்பாக நகரும் கதைதான் சந்தோஷ் சுப்பிரமணியம். ஜெயம், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, இப்போது சந்தோஷ் சுப்ரமணியம் என்று ஜெயம்ரவியை வைத்து ஹாட்ரிக் அடித்துள்ளார் இயக்குனர் ராஜா.

ரொம்ப கண்டிப்பான தந்தை பிரகாஷ் ராஜ். அவரது மகன் ஜெயம் ரவி புத்திசாலித்தனமான, கலகலப்பான கேரக்டர். பிரகாஷ் ராஜ், மகன் தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். என்ன டிரஸ் போட வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என மகனுக்கு எல்லாமே அவர்தான். அதேநேரத்தில் மகனின் தேவைகளை கேட்காமலேயே பூர்த்தி செய்தி பூரிப்படைய வைக்கிறார் பிரகாஷ்ராஜ். எல்லா விஷயங்களிலும் அப்பா சொல்லை தட்டாத ரவி, திருமணம் மட்டும் தனது விருப்பத்திற்கேற்பதான் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் பிரகாஷ்ராஜின் விருப்பப்படி ரவிக்கும், விஜயக்குமாரின் மகள் கீரத்துக்கும் திருமணம் நிச்சயமாகிறது. இதற்கிடையில் கண்ணெதிரே மயிலாக தோன்றும் ஜெனிலியாவை பார்த்ததும் ரவியின் மனதில் காதல் ஆசை தோகை விரிக்கிறது. தனது காதல் விவகாரத்தை தயங்கி தயங்கி தனது தந்தையிடம் சொல்ல... சீறி எழுகிறார் பிரகாஷ்ராஜ். நீ விரும்பும் பெண்ணை ஒரு வாரம் நமது வீட்டில் தங்கச்சொல். நமக்கேற்றபடி அவள் இருந்தால் திருமணம் செய்து வைக்கிறேன் என்று பரீட்சை வைக்கிறார் பிரகாஷ் ராஜ். ரிசல்ட் என்ன என்பதுதான் க்ளைமாக்ஸ்.

இன்றை இளைஞர்களின் உலகம் வீட்டுக்கு வெளியிலும், வீட்டுக்குள்ளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதை அச்சு அசலாக பிரதிபலித்து நடிப்பில் முத்திரை பதித்துள்ளார் ஜெயம்ரவி. வசன உச்சரிப்பிலும் பாஸ் மார்க் வாங்கி விட்டார். படம் முழுக்க தந்தையிடம் பதுங்கி செல்லும் காட்சிகளும், க்ளைமாக்சில் சீறி எழுவதும் ரசிக்க வைக்கிறது.

ஜெனிலியாவின் நடிப்பையும் குறை சொல்ல முடியாது. பாணிபூரி விற்பவனில் ஆரம்பித்து பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை பழக்கம் வைத்திருக்கும் வெகுளிப் பெண் கேரக்டர். துறுதுறுவென திரியும்போதும், மனநலம் பாதித்தவராக நடித்திருப்பதும் ரசிக்க வைக்கிறது. பிரகாஷ்ராஜ் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. தனது தவறுகள் சுட்டிக்காட்டப்படும் தருணங்களில் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிருபிக்கிறார். நாயகனின் நண்பர்களாக வரும் சந்தானம், பிரேம்ஜி, ஜெனிலியாவின் தந்தையாக வரும் சாயாஜி ஷிண்டே, கல்லூரி பேராசிரியராக எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் கலகலக்க வைக்கிறார்கள்.

கண்ணனின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி.தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை காதுகளுக்கு இனிமை. வசனத்தில் ராஜாவின் புதுமை என சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தின் ப்ளஸ்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சந்தோஷ் சுப்பிரமணியம் - ஜெயம்

- பட காட்சிகள் -

- தினமலர் விமர்சன குழு -

சந்தோஷ் சுப்ரமணியம் (44/100)

தெலுங்கு "பொம்மரில்லு', தமிழிலும் செமஜில்லு! நாயகியாக ஜெனிலியா, அவருக்குக் குரல் கொடுத்த சவீதா, இசைக்கு தேவி ஸ்ரீபிரசாத் ஆகிய மூவரையுமே தெலுங்கிலிருந்து அப்படியே கொண்டு வந்ததிலேயே தமிழ் இயக்குநர் ராஜாவுக்குப் பாதிவேலை முடிந்துவிட்டது!

பெயரோடு ஒட்டிக்கொண்டது போலவே வாழ்க்கையின் ஒவ்வொரு இன்ச்சிலும் அப்பா தன் மகனை அக்கறை என்ற பெயரால் ஆக்கிரமித்திருக்கும் கதைதான் சந்தோஷ் சுப்ரமணியம். பாசம் ப்ளஸ் கண்டிப்புடன் ஜெயம் ரவியை தங்க மீனாய் வளர்க்கிறார் பிரகாõஷ்ராஜ். கேரம்போர்டு காயினை பாக்கெட் செய்வது முதல் வருங்கால மனைவியை டார்கெட் செய்வதைவரை மகனின் வாழ்க்கையை இன்ச் இன்ச்சாக தானே தீர்மானிக்கும்"பொசஸிவ்" அப்பா. ரவிக்கு வாழ்க்கைத் துணையாக கீரத் சரியான ஜோடி என்று நிச்சயம் பண்ணுகிறார் பிரகாஷ்ராஜ். இந்த நேரத்தில் குறும்புத்தனமும் குழந்தைத்தன முமாக அறிமுகம் ஆகும் ஜெனிலியாவைப் பார்த்ததும் ஜெயம் ரவிக்கு லவ் மீட்டர் ஏகத்துக்கும் எகிறுகிறது.

ஆசை மகனின் ஆசையை ஏற்கவும் மறுக்கவும் முடியாதஅப்பா, ஒருவாரம் அந்தப் பொண்ணு நம்ம வீட்ல தங்கட்டும். எல்லோருக்கும் அவளைப் பிடிச்சிருந்தா ஓ.கே! என்று கண்டிஷன் போடுகிறார். ஒரு வார முடிவில் "எனக்குப் பிடிக்கலை! என்று சொல்வது ஜெனிலியா!

துறுதுறு, கலகல, ஜிலுஜிலு ஜெனிலியாதான் ஷமன் ஆஃப் தி மேட்ச்! ஹாஹாஹா... ஹாசினி என்று அறிமுகமாகும் குறும்பும், தலை சாய்த்துக் கண்ணடிக்கும் சிரிப்புமாக "துடுக்' கேரக்டரில் ஜிலீர்யா! ஜெனிலியாவின் கண்களுக்கு சவீதாவின் பின்னணிக் குரல்... பிரமாதம்!

அப்பா முன் மழைக்கோழியாக வெடவெடப்பதும் நண்பர்கள் மத்தியில் தீக்கோழியாகச் சீறுவதுமாக வெல்டன் ரவி. பொறுக்க முடியாமல் பிரகாஷ்ராஜ் முன்பொங்கும்போது சென்டிமென்ட்டிலும் சென்டம் அடிக்கிறார்! ஒவ்வொரு படத்திலும் ஸ்கோர் செய்யும் கன்சிஸ்டென்சி... பிரகாஷ்ராஜின் ஆகப் பெரிய பலம்! நிமிடங்களே தலைகாட்டினாலும் சந்துபொந்துகளில் சந்தானம், பிரேம்ஜி, ஸ்ரீநாத் கூட்டணி கிலுகிலுப்பை ஆட்டுகிறது. அப்துல்கலாம் கேரக்டரில் வரும் எம்.எஸ்.பாஸ்கர் செம நாட்டி புரொபஸர்.

இசை... தேவிஸ்ரீ பிரசாத். லேசாய் தெலுங்கு வாசம் அடித்தாலும் மனம் வருடும் மெலடி மெட்டுக்கள். டி.கண்ணனின் கேமரா ஜாலி. லவ் ஸ்டோரிக்கான சாக்லெட் விஷுவல் ட்ரீட்! குடும்பத்தோடு பார்க்க முடிகிற ரசனையான படமாக வந்திருக்கும் விதத்தில் சந்தோஷ் சுப்ரமணியம். இந்த சம்மரின் முதல் சிக்ஸர்.

- விகடன் விமர்சன குழு -

சந்தோஷ் சுப்ரமணியம் (43/100)

கண்டிப்பான அப்பா - அடங்கிப் போகும் மகன். இவர்களுக்குள் எழும் உணர்ச்சிப் போராட்டம்தான் கதை.

""எல்லா விஷயத்திலும் எங்க அப்பா விருப்பப்படியேதான் நடந்துகிட்டேன். ஆனால், என் கேரியரும், கல்யாணமும் என் விருப்பப்படிதான் நடக்கணும்'' என்று அப்பாவுக்கு சவால் விடும் மகனாக தூள் கிளப்புகிறார் ஜெயம் ரவி. காதலுக்காக ஏங்குகிறார். நண்பர்களுடன் அவர் அடிக்கும் லூட்டி ரசிக்க முடிகிறது. அப்பாவால் நிச்சயித்த பெண்ணை நிராகரிக்கும் போதும், ஹீரோயினிடம் காதலை வெளிப்படுத்தும் இடமும் ரவியை வேண்டாம் என்று சொல்லி விட்டு கிளம்பும்போதும் நாகரிகமான நடிப்பு.

""பிள்ளைகளின் தேவைகள் எதுவாக இருந்தாலும் நம்மோட விருப்பப்படி நடந்து கொள்வதுதான் பிள்ளைகளுக்கு நாம் தரும் வழிகாட்டல்'' என்று பிடிவாதம் பிடிக்கும் அப்பா கேரக்டரில் பிரகாஷ்ராஜ் ஜொலிக்கிறார்.

ஹீரோயின் ஜெனிலியாவின் வெகுளித்தனமும் துறுதுறுப்பும் ரசிக்க முடிகிறது. எதிர்பாராமல் ரவியின் நெற்றியில் முட்டுவதும், திரும்ப முட்டாமல் விட்டால் கொம்பு முளைத்து விடும்' என்று திரும்ப வந்து முட்டுவதும் நல்ல கலகலப்பு. அப்பா- மகன் சவால்படி, ஜெனி, ரவியின் வீட்டில் 7 நாட்கள் தங்கியிருக்கும்போது, ரவி நண்பர்களுடன் தண்ணியடிப்பது உள்ளிட்ட ரவியின் இன்னொரு முகத்தை தெரியவைப்பது நல்ல வெகுளித்தனம்.

சாயாஜி ஷிண்டே, எம்.எஸ்.பாஸ்கர், சந்தானம், சத்யன், பிரேம்ஜி, ஸ்ரீநாத் காமெடி கலக்கல் சிரிக்க முடிகிறது. தேவிஸ்ரீபிரசாத் இசையும், டி.கண்ணன் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம். காதலி போனதால் ஜெயித்ததாக நினைத்திருக்கும் அப்பாவிடம் ரவி பேசி, காதலில் ஜெயிப்பதுதான் க்ளைமாக்ஸ். வசனத்தில் கொஞ்சம் பிசகியிருந்தாலும் சொதப்பல் உறுதி. அங்கங்கே கொஞ்சம் நீளமான காட்சியமைப்புகள் அலுப்புத் தட்டுகின்றன.

சந்தோஷ் சுப்ரமணியம் - குடும்பத்துடன் பார்க்க சந்தோஷம்.

- குமுதம் விமர்சன குழு -

சந்தோஷ் சுப்ரமணியம்

சந்தோஷ் சுப்ரமணியம் சந்தோஷமாய் ஒரு படத்தை இரண்டரை மணி நேரம் பார்க்க முடியுமா? அதுவும் இன்றைய காலகட்டத்தில்! - முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். முதல் ரீலில் தொடங்கி படம் முடியும் வரை கலாட்டா கலக்கல்தான். குழந்தைகளை கைப்பிடித்து வளர்க்க ஆசைப்படும் அப்பாக்கள், அவர்கள் வளர்ந்த பிறகும் கையை விடுவதில்லை என்பதுதான் கான்செப்ட். எத்தனை வெகு அழகாக, ஜெனிலியா என்னும் மயிலிறகு கொண்டு வருடி சொல்லியிருக்கிறார்கள்.

ஜெயம் ரவி ஜிலீர் பட்டாசு. நண்பர்களிடம் அப்பாவை பற்றி புலம்புவதும், அப்பாவிடம் பெட்டி பாம்பாய் மருகுவதும், அடடா ரகம். உணர்வுகளை கண்களாலேயே வெளிப்படுத்தும் பிரகாஷ்ராஜ், தன் மகனது உணர்வுகளை தவறாக புரிந்து கொண்டு விட்டோமோ என்று வருந்தும்போது உள்ளம் தொடுகிறார். ஜெனிலியாவின் அழகும் இளமை கொப்பளிக்கும் நடிப்பும் படத்துக்கு மிகப்பெரிய பலம். அவர் வளவளவென பேசும்போதும் சரி, பேசாமலே மௌனம் சுமக்கும்போதும் சரி... பேசிக் கொண்டே இருக்கமாட்டார் என்று ரசிகனுக்கு தோன்றுவது கதாபாத்திர வெற்றி. ஷாயயாஜி ஷிண்டேவின் அலம்பல் அதகளம். சந்தானம் அண்ட் கோ காமெடி தர்பாரே நடத்தி விடுகின்றனர்.

முதல் பாதி கதை, எதைநோக்கி செல்கிறது என்று குழப்பம் ஏற்பட்டாலும் ஜெட் வேக திரைக்கதை எல்லாவற்றையும் மறக்க செய்து விடுகிறது. சின்ன சின்ன கதாபாத்திரங்களைக்கூட அழகாய் கட்டி ஆண்டுள்ளார் டைரக்டர் ராஜா. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் மனம் வருடுகின்றன. கண்ணனின் ஒளிப்பதிவில் உயிரோட்டம் அதிகம். நீளமாய் இருந்தாலும் நிறைவான வசனங்கள், கோடைக்கேற்ற குளீர் இளநீர் சந்தோஷ் சுப்ரமணியம்!

- கல்கி விமர்சன குழு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.