Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்களவருக்குப் புரியும் மொழியில் பேசுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவருக்குப் புரியும் மொழியில் பேசுங்கள்

-இந்தக் கட்டுரையில் உள்ளவை, கட்டுரை ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகளே)

திருப்பதிக்கு இலங்கைக் குடியரசுத் தலைவர் ராஜபக்சே வருகிறார். கோயிலில் வழிபாடு செய்கிறார். இந்திய அரசு அவருக்கு முழுமையான பாதுகாப்புக் கவசத்தை வழங்குகின்றது.

அதே நாள், அதே நேரம், நாகப்பட்டின மீனவர்கள் வேதாரணியக் கரையோரத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ராஜபக்சே முப்படைத் தலைவராக இருக்கும் இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களை நோக்கி வருகிறது. மீன்பிடிப் படகுகளை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடுகிறது. இருவர் படகுக்குள்ளேயே பிணமாகிக் கிடக்கின்றனர். மீனவர் பலருக்குப் படுகாயங்கள் ஏற்படுகின்றன. மீன்பிடிப் படகுகளைக் குண்டுகள் துளைக்க, தண்ணீர் உள்ளே குபுகுபுவெனப் பாய்கிறது. படகு மூழ்குகிறது. மீன்பிடி வளைகள் அறுந்து தொங்குகின்றன.

அந்தப் படகுக் கூட்டம், சிதறி ஓடுகிறது. குண்டடிபட்ட படகுகளைக் கட்டி இழுத்துக் கொண்டு வேதாரணியக் கரைக்கு வருகிறது. கடற்படையின் தலைவருக்குத் திருப்பதியில் பாதுகாப்பு. கடற்படையோ தமிழக மீனவரைக் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுக் கொல்கிறது.

சரியாக மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு நாள். நிகழ்விடம்: கொழும்பு - இலங்கைக் குடியரசுத் தலைவர் மாளிகை. இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன், இந்திய அயலுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர மேனன், மற்றும் இலங்கை வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரிகள், இந்தியாவின் மூத்த படைத் தளபதிகளுள் ஒருவர் யாவரும் கூடிப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தியப் பிரதமர் தெற்காசிய மாநாட்டிற்காகக் கொழும்பு வரும்பொழுது, எவ்வாறு பாதுகாப்பு வழங்கலாம் என்பதையும் அவர்கள் பேசுகிறார்கள். அதே நாள், அதே நேரம், நிகழ்விடம்: திருப்பாலைக்குடிக் கடல். இராமேச்சரத்திற்கு வடக்கே கச்சத் தீவுக்கு மேற்கே. சிலநூறு படகுகள் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றன.

அங்கு, சந்தியாகு என்ற மீனவர் பிணமாகச் சுருண்டு விழுகிறார். இலங்கைக் கடற்படை சுட்டதால் பல படகுகள் சேதம் அடைந்தன. அல்லோல கல்லோலத்துடன் அனைத்துப் படகுகளும் சந்தியாகுவின் உடலுடன் இராமேச்சரம் வருகின்றன.

தில்லியும் கொழும்பும் பேசிக்கொண்டிருக்கலாம்; ஒருவருக்கொருவர் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்களாம்; தமிழக மீனவர்களைத் தமிழகக் கடல் எல்லைகளுக்கு உள்ளேயே சுட்டு வீழ்த்த இலங்கை கடற்படை தயங்காது. ஏனென்றால் இலங்கை கடற்படைக்கும் தெரியும்; முப்படைத் தலைவர் ராஜபக்சேவுக்கும் தெரியும்; தமிழக மீனவர்களைத் தமிழகக் கடல் எல்லைக்குள் எத்தனை முறை சுட்டாலும் தில்லி திரும்பி பார்க்காது என்று.

சில ஆண்டுகளுக்கும் முன் தமிழகக் கடல் எல்லைக்குள் சிங்களக் கடற்படை வந்தது. பாம்பன் தீவை நோக்கி நகர்ந்தது. இராமேச்சுவரத்திற்கு வடக்கே உள்ள ஓலைக்குடா மீனவ கிராமத்துக்குள் கரையேறியது. வீரர்கள் திபுதிபுவென கிராமத்துள் புகுந்தனர். மீனவக் குடும்பங்களை நோக்கிச் சுட்டனர். குடிசைகளை எரித்தனர். படகுகளை வெடிவைத்து உடைத்தனர். அந்தக் கிராமத்தையே சூறையாடினர். சில மணி நேரத்தில் இலங்கைக்குத் திரும்பிச் சென்றனர்.

அடுத்த நாள் பரபரப்புச் செய்திகளை நாளிதழ்கள் வெளியிட்டன. தமிழகத்தின் கிராமம் ஒன்றில் அந்நியப் படை புகுந்தது, சுட்டது, சூறையாடியது, எரித்தது, மீனவர்களை விரட்டியது, என்றெல்லாம் இந்த நாளிதழ்களில் செய்தி வந்தாலும் தில்லி திரும்பிப் பார்க்கவில்லை. கொழும்பை வினவவில்லை, கவலை தெரிவிக்கவில்லை, எச்சரிக்கவில்லை, பதிலடி கொடுக்கும் கனவுகூடக் காணவில்லை.

தாக்குபவர்கள் சிங்களவர்கள்; அழிந்து மடிபவர்கள், கடலிலே நீர்ப் புதைகுழி காண்பவர்கள், அப்பாவித் தமிழர்கள்.

தமிழகக் கடல் எல்லைகளுக்குள் சிங்களக் கடற்படைக் கப்பல்கள் ஆயுதப் பாணிகளாய் அத்துமீறி நுழைகின்றனர். தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்கின்றனர். சுட்டும் வெடிவைத்தும் அடித்தும் மீனவர்களைக் காயப்படுத்துகின்றனர். தமிழக எல்லைக்குள் வைத்து இம்மீனவர்களைச் சிறைப் பிடிக்கின்றனர். இலங்கைத் தீவுக்குள் கொண்டு சென்று கொடுஞ்சிறைக்குள் அடைக்கின்றனர். மீன்பிடி வலைகளை அறுத்து அழிக்கின்றனர். மீன்பிடிப் படகுகளைத் துளைத்து மூழ்கடிக்கின்றனர். மிதக்கும் படகுகளைக் கைப்பற்றி இலங்கையில் சேர்க்கின்றனர்.

மாலையில் படகில் புறப்பட்டு, இரவெல்லாம் கடலில் ஓடி ஓடி உழைத்து, வலை விரித்து, மீன் பிடித்து, படகுக்குள் சேர்க்கும் மீன்கள் யாவையும் நடுக்கடலில் வைத்துச் சிங்களக் கடற்படை கைப்பற்றி, மீனவப் படகுகளைக் கையறு நிலையில் தமிழகத்திற்கு அனுப்புகிறது.

1983இல் தமிழரின் இறைச்சிக் கறி இங்கே விற்கப்படும் என்று பல இடங்களில் பெயர்ப் பலகை எழுதிக் கடைகளை வைத்தவர்கள் சிங்களவர். கொழும்பிலும் சிங்கள ஊர்களிலும் அப்பாவித் தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்றவர்கள். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தமிழர்களின் சொத்துகளைச் சூறையாடியவர்கள்.

தமிழர் இலங்கையில் இருந்தாலென்ன, தமிழகத்தில் இருந்தாலென்ன, வேரொடும் வேரின் மண்ணோடும் சாய்த்து வீழ்த்தி அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பது சிங்கள மக்களின் தலையாய கருத்து.

60 ஆண்டு காலமாக இலங்கையில், தமிழர்களைக் காலத்துக்கு காலம் வேட்டையாடுவதும் கொன்று குவிப்பதும் அவர்களுக்குப் பொழுதுபோக்கு. காடையர்கள் தாக்குவார்கள்; அரசக் காவலர்கள் கண்மூடி இருப்பார்கள். அரசக் காவலர்கள் தாக்குவார்கள்; படைவீரர் கண்மூடி நிற்பார்கள். தரைப்படையும் கடற்படையும் வான்படையும் கொண்டு படை வீரர்களே தமிழர்களை அழிப்பார்கள்; அரசுத் தலைவர்கள் கண்மூடி நிற்பார்கள்.

எவ்வித தூண்டுதலுமற்ற இந்த வன்முறையை ஈழத் தமிழர்கள் அறவழிப் போராட்டங்கள் மூலம் சந்திக்க முயன்றார்கள். ஊர்வலங்கள் போனார்கள்; மாநாடுகள் நடத்தினார்கள்; தீர்மானங்கள் இயற்றினார்கள்; உண்ணா நோன்பு இருந்தார்கள். ஆனாலும் தமிழர்கள் பேசிய இந்த மொழி சிங்களவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் புத்தர்கள்; அறநெறி அண்ணல் புத்த பெருமானின் வழி நிற்பவர்கள்; ஆனாலும் அறவழிப் போராட்ட மொழியைப் புரிந்துகொள்வதைத் தெரிந்துகொண்டே மறுத்தனர்.

அறவழிப் போராட்டங்களுக்குப் பதில் அளிக்கும் முகமாக, வன்முறை மொழியில் சிங்களவர் பேசினர். நூலகங்களைக் கொளுத்தினர்; தமிழர்களைத் தேடித் தேடிக் கொன்றனர். அறவழி மொழியைப் புரிந்துகொள்ள மறுத்தனர்.

எந்த மொழியில் பேசினால் அவர்களுக்குப் புரியுமோ எனச் சினந்து எழுந்த ஈழத் தமிழ் இளைஞர்கள் வன்முறை வழியை நாடினர். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கொலைக்குக் கொலை என்ற மொழியை 1971 முதலாகச் சிங்களவர்களிடம் தமிழர் பேசத் தொடங்கினர். வன்முறையின் வலிமை அடிப்படையில் அரசியல் தீர்வுக் கேட்டுத் தமிழர் பேசியதும் சிங்களவர் புரிந்துகொண்டனர்.

சிங்கள அரசும், அதன் முப்படையும், முப்படைத் தலைவருமான ராஜபக்சேவும் புரிந்துகொள்ளும் ஒரே மொழி துப்பாக்கிக் குண்டு மொழி. எனவே அவர்களே தமிழர்களோடு அந்த மொழியில் தான் பேசுகின்றனர்.

இந்தியக் குடிமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இந்தியக் கடலோரக் காவற்படை இதுவரை தமிழகக் கடல் எல்லைக்குள் வந்த சிங்களக் கடற்படையை விரட்டியதாக, எச்சரித்ததாக, சுட்டதாக வரலாற்றுப் பதிவே இல்லை. 25 ஆண்டுகளுக்கு மேலாக வட கடலிலும் தென் கடலிலும் இந்தியக் கடலோரக் காவற்படை நிலைகொண்டுள்ளது.

கடலிலும் கரையிலும் சமகாலத்தில் பயணிக்கக்கூடிய ஊவர் படகு போன்ற மிக நவீன கப்பல்களைக் இந்தியக் கடலோரக் காவற்படை வைத்திருக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளித் தளத்திலிருந்து பறந்து சென்று கண்காணிக்கும் விமானங்களை வைத்திருக்கிறது. கடல் மட்டத்திலும் நிலத்திலும் வான் வெளியிலும் நடமாடக்கூடிய நகர்வன அனைத்தையும் கண்காணிக்கக்கூடிய ஊடுருவும் கதிர்க் கருவிகளை வைத்திருக்கிறது.

இவற்றிக்கு உதவியாக, விண்ணில் இருந்து கண்காணிக்கும் செய்மதிகள் தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய அதிநவீன வானூர்திகளையும் கப்பல்களையும் கருவிகளையும் இந்தியக் கடலோரக் காவற்படை வாங்குவதற்குத் தமிழக மக்களும் வரிப்பணம் கொடுக்கிறார்கள்.

ஆனாலும் தமிழகக் கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்களை அந்நியப் படை வந்து வாரந்தோறும் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுக் கொல்கிறது. நாளொன்றுக்குப் பல கோடி ரூபாய்களைச் செலவுக்காக விழுங்கும் இந்தியக் கடலோரக் காவற்படையினால் இந்தியக் குடிமக்களைக் காக்க முடியவில்லை. கேட்டால், இலங்கைக் கடற்படையோடு தொடர்பாக இருக்கிறோம், காலத்துக்குக் காலம் இணைப்புக் கூட்டங்களை நடத்துகிறோம், தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறோம் என்றுதான் சொல்கிறார்கள்.

இலங்கைக் கடற்படையும் இந்தியக் கடலோரக் காவற்படையும் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன என்றால், தமிழக மீனவர்களைக் கண்ட இலங்கைக் கடற்படை முதலில் தகவலைத் தெரிவிக்க வேண்டியது இந்திய கடலோரக் காவற்படையிடம் அல்லவா?

தமிழகப் படகுகள் சந்தேகத்திற்கு இடமான முறையில் இன்ன இன்ன இடங்களில் நடமாடுகின்றன; அவர்களைத் திருப்பி அழையுங்கள் அல்லது சோதனைக்கு உள்ளாக்குங்கள் என்று இலங்கை கடற்படைத் தளபதி தன்னோடு இணக்கமாக இருக்கும் இந்தியக் கடலோரக் காவற்படைத் தளபதியிடம் சொல்ல வேண்டாமா?

இலங்கைக் கடற்படையினர் அவ்வாறு சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், சட்டம் ஒழுங்கைப் பேணும் இயல்பான மொழியைப் பேசுபவர்கள் அல்ல சிங்களக் கடற்படையினர். தமிழர்களைக் கண்டாலே குண்டு மழையைப் பொழிந்து துப்பாக்கி மொழியைப் பேசி, தமிழர்களை அழித்துவிட வேண்டும் எனத் தமக்குத் தாமே சட்டம் இயற்றி வைத்திருப்பவர்களே அவர்கள்.

இணக்க நடைமுறைகள் அவர்களுக்குத் தெரியாது. உடன்பாடுகளை எழுதுவதும், ஒப்பமிட்ட மை காயும் முன்பே, அந்த உடன்பாடுகளைக் கிழித்தெறிவதும் அவர்களுக்குக் கைவந்த கலை. அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி, துப்பாக்கி மொழி. அவர்களுக்கு தெரிந்த ஒரே விதி, தமிழர்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற விதி.

தமிழர்கள் இளிச்ச வாயர்கள்; பயந்தாங்கொள்ளிகள்; என்ன செய்தாலும் பொறுத்துக்கொள்வார்கள். அவர்களை அச்சுறுத்தலாம், மிரட்டலாம், விரட்டலாம், கொள்ளையடிக்கலாம், சூறையாடலாம், அடித்துக் காயப்படுத்தலாம், கொலையே செய்யலாம். இந்தச் சொல்லாட்சிகளே அவர்கள் மொழியில் இருக்கின்ற ஒரே ஒரு தொகுப்புச் சொல்லாட்சிகள். வேறு சொல்லாட்சிகள் அவர்கள் மொழியில் இல்லை.

இந்தியர்களே, தமிழர்களே, பொறுத்தது போதும் என்ற தொடரை அடுத்து என்ன சொல்வீர்கள்? பொங்கி எழுவோம் என்றுதானே சொல்வீர்கள்? எந்த மொழியை இலங்கை அரசும் அதன் கொடூரப் படையும் புரிந்துகொள்ளுமோ, அந்த மொழியில் பேசுங்கள்.

வடகடலிலும் தென்கடலிலும் தமிழகக் கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமைகளை 2000 ஆண்டுக்கு முற்பட்ட பட்டினப் பாலை கூறியது; நேற்று வந்த மகாகவி பாரதியும் கூறிச் சென்றார். பராம்பரீயம் மிக்க இந்த மீன்பிடி உரிமைகளும் புனிதமானவை. தமிழக மீனவர்களின் உயிர்களும் உடைமைகளும் புனிதமானவை.

-இமயவரம்பன்

- சிஃபி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.