Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்

கவிதை:தீபச்செல்வன்

IMG321-1230461976.jpg

சிலவேளை மாடுகள்

பட்டியை பிரிந்து செல்ல மறுத்திருக்கலாம்.

மேய்ச்சல் தரைகளில்

குண்டுகள் காத்திருந்தன.

மாதா மாடுகளை அழைத்து வைத்திருக்கிறாள்.

மிஞ்சியிருக்கும் இரண்டு

மாடுகளின்

சொற்கள் சேற்றில் புதைந்து கிடக்கின்றன.

மாதாவின் தலை

அவளது கைகளுக்கு

எட்டாமல் விழுந்திருக்கிறது.

மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்.

தடைசெய்யப்பட்ட பிரதேசத்தில்

வாழுகிற மாடுகளாயிருந்தன.

தடைசெய்யப்பட்ட

குழந்தைகளுக்கு பால் கொடுத்திருந்தன.

ஒரு குழந்தை

வாய்க்காலில் மறைந்து

தப்பியிருக்க

மாட்டுக்கன்றுகள்

பால் காயு முன்பாகவே

இறந்து கிடக்கின்றன.

கொம்பு முளைத்த மாடுகளிடம்

எந்தத்துவக்குகளும் இல்லை.

இராணுவ உடைகளையும்

அணிந்திருக்கவில்லை.

வெடித்துச் சிதறிய குண்டு

மாடுகளை அள்ளி எடுத்த

பட்டியில்

துணைக்கு ஒரு நாய் மட்டும் நிற்கிறது.

சிதறிய சதைகளை

தின்ன முடியாதிருக்கும் மீறிய பலிகளில்

நாய் ஊழையிடுகிறது.

பாலுக்கு அழுகிற குழந்தை

தலை துண்டிக்கப்பட்டிருக்கிற

மாதாவை தேடுகிறது

இறந்த பசுவை

தேடுகிற கன்றினைபோல.

காயப்பட்ட உடல் பகுதியிலிருந்தும்

பட்டியிலிருந்தும்

மேய்ச்சலுக்காய் திரிந்த

தரைகளிலிருந்தும்

குருதிதான் பெருக்கெடுக்கிறது.

மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்?

பசுக்கள் குழந்தைகளுக்கு

பாலினை கொடுத்தது

பெருந்தவறு என்கிறது பராசூட் கொத்தணிக்குண்டு.

வாய்களை மீறி

மாடுகளிடம் அழுகை வருகிறது.

அவைகள் எதையும் பேசப்போவதில்லை?

குண்டுகளோடும்

கட்டளையிடுகிற இராணுவத் தளபதிகளோடும்

அதிகாரத்தோடும்?

மாதாவிடமும் எந்த

திருச்சொற்களும் இல்லை.

மாதாவும் மாடுகளும்

வாய்பேசாத பிராணிகளாகவே இருக்க

மேய்ச்சல் தரைகளில்

மேலும் பல குண்டுகள் காத்திருந்தன.

---------------------------------------------------------------------------

24.10.2008. குஞ்சுப்பரந்தன், மதாகோவில், 85 மாடுகள்.

http://deebam.blogspot.com/2008/12/blog-post_26.html

மனிதம் பேசும் உலகநாடுகள் தத்தம் கண்களை எங்கள் நாட்டை பார்க்கும் விடயத்தில் மட்டும் இறுக மூடிக் கொள்கின்றன. அன்னை மார்பில் பாலின்றிப் போகின் தன் மடிப்பால் தரும் தேவமாதா கோமாதா. இது என்ன ஈழத் தமிழருக்குமட்டும் தாய் என்ற சொற்பதற்கு உரியவையெல்லாம் மாபெரும் துன்பியலுக்கு உள்ளாக்கப்படுகின்றன.

தாய்மொழி, தாய்மண், தாய்க்கு ஈடாக தன் இரத்தத்தை பாலாக்கி தரும் பசுக்கள்.....

சிதறிய சதைகளைத் தின்ன முடியாத நாய்களின் ஊளை.... ஒரு இனவாதத்தின் அகோர வெறியாட்டத்தின் உச்சத்தைச் சுட்டிக்காட்டி நிற்கிறது. தீபக் செல்வன் உங்கள் வரிகளுக்குள் மானுட அவலத்தின் உச்சம் குறிப்பாக போர்தின்னும் பூமியின் நாளாந்த வாழ்வாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. உங்கள் கவிதையை வாசிக்கும்போது நிறையவே வலியடைகிறேன்.

Edited by valvaizagara

பலிக்காக "ஆட்டின் த‌லையை வெட்ட‌ வேண்டாம் என் தலையை வெட்டுங்கள்" என்று பூசகர்களுடன் வாதிட்ட இர‌க்க‌ சொரூப‌ம் புத்த‌னை வ‌ண‌ங்குப‌வ‌ர்க‌ளின் செய‌ல்.

வாய் பேசும் பிராணிக‌ளுட‌ன் வாழ்ந்த‌ பாவ‌த்திற்காக‌ வாய் பேசாப் பிராணிக‌ள் ம‌ர‌ண‌த்தையும் வ‌லியையும் பகிர்கின்ற‌ன‌.

தாய்ப் பாவ‌ம் என்று நாங்க‌ள் பசுவை அடிப்பது கூட இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

தீபக்செல்வன் உங்கள் கவிதைகள் ஆளுமையான சொற்பிரயோகமும் யதார்த்தமான நிகழ்வுகளின் தொகுப்புமாக இருப்பதால் படிக்கும்பொழுது வலிக்கிறது. நாங்களும் எத்தனையோ இன்னல்களை அனுபவித்து இடம் பெயர்ந்தவர்கள்தான் இருந்தும் புலம்பெயர்ந்த எங்கள் எழுத்துக்களைவிட அச்சூழலில் இருந்து எழுதும் உங்கள் எழுத்துக்களின் வீச்சில் வேகம்இருக்கிறது. மனதில் சோகம் உறைக்கிறது. மக்களின் அவலநிலை எம் உணர்வுகளை வதைக்கிறது. நிச்சயம் உங்கள் எழுத்துக்கள் பொறியாக விழுந்து அனைவர் மனங்களிலும் கனலாக எரியும் என்று நினைக்கிறேன். தொடரட்டும் உங்கள் படைப்புக்கள். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்

கவிதை:தீபச்செல்வன்

IMG321-1230631652.jpg

மலைப்பாம்பு அரிசி மூட்டைகளுடன்

வருகிறது.

தனது வருகைக்கு முன்பாகவே

கொளுத்த மலைப்பாம்பு

நமது வாக்கு மூலங்களை

அவசரமாகவே தின்று விடுகிறது.

பாம்புகள் உட்புகுந்தலைகிற

நகரங்களில்

அவைகள் எழுப்புகிற புற்றுகளில்

முட்டைகளைப்போல

வாக்கு மூலங்கள்

விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மலைப்பாம்பு ஒன்றினது

வருகையை முன்னிட்டு

திருத்தப்படுகிற வீதியில்

வரவேற்பதற்காய்

குழந்தைகள் வரவழைக்கப்படுகிறார்கள்.

பிணைந்து கிடக்கிற இரண்டு

கைகளிற்குள்

பெருமெடுப்பில் அடிக்கிற

ஆயுத வெக்கையில்

முகங்கள் அவிகின்றன.

கொடிகள் நாட்டப்பட்ட

கதிரைகளின் முன்பாக

எனது நகரை

பெரும் புற்றாக்க அலைகிற

பெரும் பாம்பின் கனவுடன்

மலைப்பாம்பு பால் குடிக்கிறது.

ஒடுங்கிய பிரதேசத்தில்

அலைச்சல் மிகுந்த இரவில்

வாக்குமூலங்கள் மட்டும் மிஞ்சியிருக்கின்றன.

எல்லாவற்றையும் தின்ற பாம்பு

வானத்தையும்

சமுத்திரத்தையும்

தின்றபடி

வருகையை திட்டமிடுகிறது.

கோழிக்குஞ்சுகள்

கூடைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றன.

முட்டைகள் தின்று

அலைந்து கொண்டிருக்கிற பாம்புகளிடமிருந்து

கோழிக்குஞ்சுகளை

காப்பாற்றுகிற மலைப்பாம்பு

இன்னும் சில நாட்களில் வருகிறது.

முட்டைகளில் ஒளிந்திருக்கிற

குழந்தைகள்

வாக்குமூலங்களுடன்

வரவேற்க காத்திருக்கிறார்கள்.

--------------------------------------------------------------------------------

26.12.2008. பிரணாப்முகர்ஜியின் கொழும்பு வருகையை முன்வைத்து

http://deebam.blogspot.com/2008/12/blog-post_29.html

  • கருத்துக்கள உறவுகள்

மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்

கவிதை:தீபச்செல்வன்

IMG321-1230631762.jpg

01

மாங்குளத்தினுள் படைகள்

நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

ஒரு நாட்டை நோக்கி யுத்தம்

அறிவிக்கப்படுகையில்

மரணம் குறித்து படைகள் அறியாதிருந்தன.

கடலுக்கு மிகவும்

நெருக்கமான சனங்களை துரத்துகையில்

படங்குகளில் தென்னை மரங்கள் பெயர்ந்தன.

எனக்கு மிகவும் பிடித்த கடலே

உனக்கு தனிமை பரிசளிக்கப்படுகிற

யுத்தத்திடம் எதுவரை காயப்படப்போகிறாய்?

படைகளை நீ மூழ்கடிப்பாய்

எனத்தான் நம்பிப் பெயர்கின்றன படகுகள்.

மனிதர்களை நெடுநாளாய் தின்று கொளுத்த

யுத்தத்திடம் வீதியும் கடலும்

முதலில் பலியிடப்படுவது

கண்டு மணல்கள் அலைகின்றன.

02

புளியங்குளத்தினுள் படைகள்

நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

பசிய காடுகளே குண்டுகளை கொண்டெறிந்து

வேர்களை அறுக்கிற படைகளின்

துப்பாக்கிகள் மறைந்திருக்கின்றன.

அது இன்னும் முன்னே செல்ல

காத்திருக்கிறது.

மரங்களில் தோல்வி எழுத முனைகிறது.

எனது காடுகள் ஒடுங்காதிருக்கின்றன.

படைகள் வேர்களால்

புதைக்கப்படு நாளை அறியாதிருந்தன.

காடுகளினுள் மரங்களின்

குருதி கசிற இடைவெளிகளில்

துப்பாக்கிகள் நீட்டப்பட

மரங்களின் தலைகள் அறுத்தெறியப்பட்டிருந்தன.

காடுகளை வேட்டையாடுகிற

படைகளிடம் முதலில் சனங்கள் வேட்டையாடப்பட்டன.

பாலைமரங்களிடம் மூளுகிற

மௌனத்தின் தீயில் காடுகளால்

படைகள் எரிக்கப்படு நாளை அறியாதிருந்தனர்.

03

கனகராயன் குளத்தினுள் படைகள்

நுழைந்து நின்று வெற்றி அறிவிக்கின்றன.

மரங்கள் மிதக்கிற ஆற்றினிடையில்

சனங்களின் குருதியும்

சதைகளும் இராணுவத்தொப்பிகளில்

நிரப்பியபடி வந்தன.

வெள்ளம் ஆற்றை அள்ளிச்செல்லுகிற

மழைநாட்களில் படைகள்

துப்பாக்கிகளை நனைத்து

மெல்ல புகுந்தன.

கரைகள் மீதியற்று கரைகிறது.

ஆறுகள் அறுபட்டு திசையிழந்து திரிந்தன.

ஜனாதிபதி மாளிகையின்

தாழ்வாரங்களின் மீது மோதி

தரையிலிருந்து எழும்புகின்றன.

ஜனாதிபதி ஆற்றை வெட்டி எறிய

புதியபெயர்கள் காத்திருக்க

படைகள் ஆற்றை கால்களுக்கிடையில்

சுற்றி வைத்திருந்தனர்.

படைகள் ஆறுகளால்

இழுத்துச் செல்லப்படு நாளை அறியாதிருந்தனர்.

04

அளம்பிலினுள் படைகள்

நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

வீதிகளை பிடித்து தின்றபடி

செல்லுகிற படைகளின்

காலடியில் வீடுகள் மிதிபட

புத்தகம் கிழிந்து பறக்கிறது.

வெற்றியின் களிப்பில்

ஆளில்லாத கிணற்றில்

நாய் ஊளையிடுகிற

சத்தம் நிரம்புகிறது.

யாருமில்லாத ஊரின்

நடுவில் படைகள் விரித்து வைத்திருக்கிற

வரைபடத்தில்

நமது கிராமத்தின் ஆடுகள்

அலைவதை நான் கண்டேன்.

உடைந்த வீட்டின் மீதியை

தின்று இன்னொரு கிராமம்மீது பசித்திருக்கிற

படைகள் ஆடுகளால்

தின்னப்படு நாளை அறியாதிருந்தனர்.

05

குமுழமுனையுள் படைகள்

நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

இரவை கைப்பற்றிய படைகள்

பகலில் மீது தாக்கத் தொடங்கினர்.

சனங்கள் இருளில் திரிய சூரியனது

திசையில் அடுத்த யுத்தம் அறிவிக்கப்பட்டது.

விளக்குகள் அணைய

முகங்கள் விறைத்திருக்க படைகள்

எறிந்து விளையாடுகிற

எறிகணைகளில் தென்னைகள் பட்டெறிந்தன.

தென்னைகள் சரிகிற இரவில்

வீடுகள் நசிய படைகள் புகுந்தன.

குளத்தின் முகத்தை படைகள் பிடிக்க

தண்ணீர் வெருண்டு புகுகிற

ஊரில் கிணறுகள் மூழ்கின.

படைகள் கிணறுகளால்

விழுத்தப்படு நாளை அறியாதிருந்தனர்.

06

ஒலுமடுவினுள் படைகள்

நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

வீதியின் நடுவில் காடு

தனியே கிடந்து துடிக்கிற பகலில்

ஒரு பள்ளிக்கூடம் அகப்பட்டது.

மேலுமாய் துயரத்தை அனுபவிக்கிற

கிராமத்தில் மீண்டும்

படைகள் புகுந்த வெற்றியில்

கோழிகளின் இறக்கைகள் மிஞ்சின.

மாடுகளின் எலும்புகள்

கண்டு பொறுக்குகிற படைகள்

சனங்களின் தலைகளை தேடினர்.

கொழும்பின் பசியில்

மாடுகளை படைகள் மேய்ந்தனர்.

படைகள் மாடுகளால்

முட்டப்படு நாளை அறியாதிருந்தனர்.

07

அம்பகாமத்தினுள் படைகள்

நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

காய்கறிகளை வெட்டி வீசுகிற

படைகள் கிழங்குகளை பிடுங்கி எறிந்தனர்.

பூக்கள் மறுக்கிற பூமரங்களை

படர்ந்த கொடிகளை வேரில் சுட்டனர்.

கைகளை தேடுகிற

படலைகள் ஓட்டைகளால் நிறைய

அதனூடே ஷெல்கள் நுழைந்தன.

கடலின் படலையில் மரணம்

படைகளை பார்த்தபடி

காத்திருக்கிறது.

சனங்களின் தவிப்பில் கொந்தளிக்கிற

கடலை போர் தாக்கிக் கொண்டிருந்தது.

ஆடுகள் கடலில் அலைய

கிணறுகள் மிதந்தன.

முல்லைத்தீவிடம் கால்

பதிக்க குதிக்கிற படைகள்

கடலிடம் தோற்கப்படு நாளை அறியாதிருந்தனர்.

மற்றொரு சந்தையும்

மருத்துவமனையும் நொருங்குப்படத் தொடங்க

இரண்டு பெரிய நகரங்களினிடையில்

ஒரு வீதியில் தமது வீடுகளை

தேடுகிற சனங்கள் அலைகின்றனர்.

--------------------------------------------------------------------------------

21.12.2008. முல்லைத்தீவு. இராணுவநடவடிக்கை. பலமுனைகள்

http://deebam.blogspot.com/2008/12/blog-post_458.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.