Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்துக் கதைகள் - காசி ஆனந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்துக் கதைகள் - காசி ஆனந்தன்

கடலோரத்தில் நண்டு நடந்துகொண்டிருந்தது. மணலில் பதிந்த நண்டின் கால்தடத்தை அலை அழித்துக் கொண்டே இருந்தது.

நண்டுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஒருநாள் நரி கடற்கரை ஓரம் நண்டின் கால்தடம் இருக்கிறதா என்று தேடி அலைந்தது.

வளைக்குள் இருந்த ஓரக்கண்ணால் எட்டிப் பார்த்த நண்டுக்கு அலை தன் கால் தடத்தை அழித்த காரணம் இப்போதுதான் தெளிவானது.

அலையின் நட்பை அடிமனத்தால் போற்றியது நண்டு.

தனக்குள்ளேயே அது சொல்லிக்கொண்டது:-

'முன்பே காப்பான் அன்பே நட்பு"

நெருஞ்சிப்புல் வருகிறவர் போகிறவர் கால்களையெல்லாம் தன் முள்ளினால் குத்திப் புண்ணாக்கிக் கொண்டிருந்தது.

'மனிதர்களின் காலைக் குத்தி அவர்களுக்குச் சினத்தை உண்டாக்குகிறாயே - பார்.. பார்.. அவர்கள் என்றோ ஒருநாள் வேரோடு உன்னைப் பிடுங்கி எங்காவது பயிர்களுக்கு எருவாய்ப் புதைத்துவிடப் போகிறார்கள்" என்றது அறுகம்புல்.

நெருஞ்சி சூடானது.

'என்னைக் காலால் மிதித்து வதைக்கிறவர்களையெல்லாம் நான் தாங்கிக் கொள்ள வேண்டுமாக்கும்.."

நெருஞ்சிப்புல் சொன்னது:-

'வதைபடுவதை விட புதைபடுவது மேல்"

காற்றாடி நூலின் துணையோடு உயர்ந்து உயர்ந்து வானின் உச்சியில் ஏறியது.

'பார்த்தீர்களா...? நான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன்..." என்று தன் பெருமையைப் பறைசாற்றியது.

பழைய வரலாற்றை அடியோடு மறந்தது காற்றாடி..

'நூல் இனி எதற்கு?" என்று கூறிக்கொண்டே நூலைப் பட்டென்று அது அறுத்துக்கொண்டது.

கொஞ்ச நேரத்தில -

ஊரின் மூலையில் - ஒரு முள் மரத்தில் விழுந்து - கிழிந்து உருக்குலைந்து கிடந்தது காற்றாடி.

காற்றாடியின் கதை தெரிந்த முள்மரம் சொன்னது:-

'ஏற்றி வைத்தவனை மறக்கிறவன் இறக்கி வைக்கப்படுவான்!"

புல் மேய்ந்து கொண்டிருந்தது மாடு.

மரத்தில் இருந்த குருவிக்குஞ்சு தாயைக் கேட்டது:-

'ஏனம்மா மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு இல்லை?"

தாய்க்குருவி சிரித்தது.

'மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு தேவையில்லை'

என்றது தாய்.

தாய்க்குருவி சொன்னது:-

'வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும்'

நகைக் கடைக் கண்ணாடிப் பெட்டியில் கண்ணைப் பறித்த இரத்தினக் கல்லைப் பார்த்துத் தெருவில் கிடந்த குறுணிக்கல் பொறாமைப்பட்டது.

'எனக்கு ஏன் மதிப்பில்லை? நானும் ஒரு கல்தானே..." என்று ஓலமிட்டது.

தெருவோரத்தில் கிடந்த கடப்பாரை கூறியது:-

'ஏ குறுணி! காலம் முழுதும் உன்னை நீயே பெரிதாக எண்ணிக்கொண்டு பலரும் பார்க்க தெருவில் கிடக்கிறாய். ஆனால், இரத்தினக்கல் அப்படியா? நிறைந்து வளர்ந்து இரத்தினமாகும்வரை வெளியில் தலைகாட்டியதே இல்லை. எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டிருந்தது..."

'அப்படியென்றால்..?" என்று இழுத்தது குறுணிக்கல்.

கடப்பாரை சொன்னது:-

'நிறைவாகும்வரை மறைவாக இரு'.

குனிந்த தலை குனிந்தபடியே மூட்டை சுமந்துசெல்லும் கழுதையை வேம்பில் இருந்த காக்கைகள் கவனித்து வந்தன.

ஒருநாள் காக்கைகளில் ஒன்று மற்றதைப் பார்த்து, 'இந்தக் கழுதைமேல் உனக்கு இரக்கம் வரவில்லையா? எப்போது பார்த்தாலும் மூட்டை சுமந்து துன்பப்படுகிறதே.." என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டது.

'நாம் என்ன செய்யமுடியும்? கழுதைதான் தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டும்" என்றது மற்றக் காக்கை.

'ஏன் அப்படிச் சொல்கிறாய்?"

இறக்கைகளைக் கோதிக்கொண்டே இரண்டாம் காக்கை சொன்னது:-

'குனிந்துகொண்டே இருப்பவன் சுமந்துகொண்டே இருப்பான்

ஆறு, கடலில் ஓடிக் கலப்பதையும் - அலை கரையைத் தேடித் தழுவுவதையும் அன்றாடம் பார்த்து வந்த வானம்பாடி சிந்தனையில் ஆழ்ந்தது.

'உலகம் புரிந்துகொள்ளமுடியாத ஒன்றுதான்.." என்றது வானம்பாடி.

பிறகு அது பாடியது:-

'மண்ணில் இருக்கிற ஆற்றுக்கு

மண்ணில் வெறுப்பு: கடலில் ஆசை

கடலில் இருக்கிற அலைக்கு

கடலில் வெறுப்பு: மண்ணில் ஆசை"

மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டுக் கோடரியும் கயிறும் விறகு வெட்டிக்குப் பக்கத்தில் மனம்விட்டுப் பேசிக் கொண்டிருந்தன.

காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களைத் தன் அலகால் கொத்திவிட்டுப் பறந்து போனது.

'இந்த மரங்கொத்தியைப் பார்த்தாயா? நான்கு மரங்களை மாறி மாறித் தன் அலகால் வெட்டியது - ஒரு மரத்தையாவது அதனால் உருப்படியாக வீழ்த்த முடிந்ததா?" என்று கயிற்றைப் பார்த்துக் கேட்டது கோடரி.

'மரங்கொத்தியால் அது முடியாது" என்றது கயிறு.

'ஏன் அப்படிச் சொல்கிறாய்?"

கயிறு சொன்னது:-

'நாலு மரத்தையும் வெட்டுகிறவன் ஒரு மரத்தையும் விழுத்துவதில்லை"

'மழை வழங்கும் வானமே நீ வாழ்க" என்று நான்கு திசைகளும் வானத்தை வாழ்த்தின.

காற்றுக்குச் சினம் பொங்கியது.

'என்ன கொடுமை! வானமா வழங்கியது?"

பூமிக்காகக் காற்று பொருமியது:-

'நீர் கொடுப்பதோ பூமி பேர் எடுப்பதோ வானம்"

சிறகு முளைக்காத குருவிக் குஞ்சுகள் சிரித்து ஆரவாரித்தன.

மரத்தில் இருந்த அணில், குருவிக் கூட்டுக்குத் தாவி, 'உங்களுக்கு இன்னும்

சிறகு முளைக்கவில்லை - சுதந்திரம் இல்லாத உங்களுக்கு என்ன சிரிப்பு" என்று

கேட்டது, குஞ்சுகள் கவனிக்கவில்லை.

பாம்புக்கு இது வாய்ப்பானது.

குஞ்சுகளின் சிரிப்பொலி கேட்டு, பாம்பு கூட்டுக்குள் நுழைந்தது.

நொடிப்பொழுதில் -

பாம்பின் வாயில் குஞ்சுகள் பலியாகிப்போயின. அணிலுக்கோ துயரம் தாங்கவில்லை.

அது மீண்டும் இரைந்து கத்தியது:-

'சிறகு விரி பிறகு சிரி"

  • கருத்துக்கள உறவுகள்

கடுகு சிறிது காரம் பெரிது

நன்றி நுணாவிலான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நுணா அண்ணா.

இந்தக்கதைகளை வேறுதளத்திலும் போடலாம் தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணா அண்ணா.

இந்தக்கதைகளை வேறுதளத்திலும் போடலாம் தானே?

போடுங்கோ தமிழ் தங்கை. எல்லோருக்கும் சேர்த்து தானே கவிஞர் அவர்கள் எழுதியுள்ளார். :lol:

பின்னூட்டத்துக்கு நன்றி காவலூர் கண்மணி.

  • கருத்துக்கள உறவுகள்

காசியானந்தனின் கதைகள் நல்லாயிருக்கு

இவை

"முள்முடி மன்னர்கள்" (காசியானந்தனின் கதைத் தொகுப்பு) கதையில் வந்ததாக ஒரு ஞாபகம் சரியா.........?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.