Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகங்கள் மீதான சிறிலங்காவின் அரச பயங்கரவாதம்

Featured Replies

ஆக்கம்: சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

புலம் பெயர் தமிழ் மக்களால் மிகவும் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும், ஊடகவியலாளருமான, நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களை, சிறிலங்கா இராணுவம் தனது எறிகணைத் தாக்குதல் மூலம் கொன்றுள்ளது. வெளிச்சம் சஞ்சிகை, புலிகளின் குரல் வானொலி, ஈழநாதம் பத்திரிகை, மற்றும் தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்கள் வழியாக அரசியல், படைத்துறை ஆய்வுகளை வெளியிட்டு, தாயக விடுதலைப் போராட்டத்தின் கருத்துக்களைக் கட்டியெழுப்பி வந்த சத்தியமூர்த்தி அவர்களின் உடலம், சவப்பெட்டி கூட இல்லாத நிலையில், வெறும் துணி மட்டும் போர்த்தப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றமையானது ஒரு வரலாற்றுச் சோகத்தைப் பதிவு செய்துள்ளது.

இது ஒரு போர்க்கால நிகழ்வு என்பதற்கு அப்பால், சகல சிங்கள அரசுகளும் தொடர்ந்து தமிழ் ஊடகங்கள் மீதும், தமிழ் ஊடகவியலாளர்கள் மீதும் தொடர்ச்சியான வன்முறைகளை மேற்கொண்டு வருவது எவரும் அறிந்த விடயமாகும். நிர்மலராஜன், சுகிர்தராஜன், நடேசன், தேவகுமார், சிவராம் போன்ற தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அப்பால் லசந்த விக்கிரமதுங்க போன்ற சிங்கள ஊடகவியலாளர்களும் சிங்கள அரசினால் கொல்லப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாது, உதயன் நாளேட்டின் பணியாளர்கள் கொல்லப்பட்டதுடன் உதயன், சுடரொளிப் பத்திரிகை அலுவலகங்கள் மீதும் MTV, MBC போன்ற ஊடகக் காரியாலயங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. அத்தோடு மட்டுமன்றி எண்ணிலடங்காத் தமிழ் ஊடகவியலாளர்கள் சிங்கள அரசுகளாலும் தமிழ் ஒட்டுக் குழுக்களாலும் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டே வருகின்றார்கள். இவை குறித்து நாம் விரிவாக ஆராயுமிடத்து, சிங்களப் பேரினவாத அரசுகள் எவ்வாறு துல்லியமாகத் திட்டமிட்டு இவ்வகையான அராஜகச் செயல்களை - ஜனநாயகத்திற்குப் புறம்பான செயல்களை - தொடர்ந்தும் புரிந்து வருவதை நாம் கண்டு கொள்ளலாம்.

தமிழ்த் தேசிய எழுச்சியை நசுக்குவதற்கான முக்கிய திட்டங்களில் ஒன்றாகவே, தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அரச வன்முறைகளை நாம் அவதானிக்கின்றோம். இது குறித்துச் சற்று ஆழமாகத் தர்க்கிப்பதற்கு, நாம் இலங்கை சுதந்திரம் அடைந்த காலப் பகுதியை அடித்தளமாகக் கொண்டு ஆராய வேண்டும்.

1958ம் ஆண்டு இலங்கைத் தீவில் தமிழருக்கு எதிராக இனக்கலவரம் வெடித்தபின்பு, அன்றைய பிரதமரான Soloman West Ridgeway Dias என்கின்ற SWRD பண்டாரநாயக்கா அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்தினார். அத்தோடு மட்டும் SWRD பண்டாரநாயக்கா வாளாவிருந்து விடவில்லை. அவசரகாலச் சட்டத்தோடு சேர்த்து இன்னுமொரு விடயத்தையும் பண்டாரநாயக்கா அமல்படுத்தினார்.

அது செய்தித் தணிக்கையாகும்!. (Press censorship)

அந்தக் காலக் கட்டத்திலேயே செய்தித் தணிக்கையை அன்றைய பிரதமர் SWRD பண்டாரநாயக்கா ஏன் கொண்டு வந்தார் என்பதற்கு முக்கியமான காரணங்கள் உள்ளன. தமிழர்கள் மீதான இனக்கலவரத்தை நிறுத்துவதற்காக ளுறுசுனு பண்டாரநாயக்கா செய்தித் தணிக்கையைக் கொண்டு வரவில்லை. மாறாக, தமிழர்கள் மீதான வன்முறையை அவர் ஊக்குவித்ததோடு மட்டுமல்லாமல் தமிழர்களுக்கு நல்ல பாடமொன்று புகட்டப்பட்டு விட்டது என்ற திருப்தியில் அவர் இருந்தார். செய்தித் தணிக்கையை அவர் கொண்டு வருவதற்கு வேறு முக்கியமான காரணம் இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் உரிமைக்கான ஆரம்பக் கட்டப் போராட்டங்கள் ஆரம்பித்திருந்தன. தந்தை செல்வாவின் தலைமையில் அகிம்சை வழியில் வெகுசனப் போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கியிருந்தன. சத்தியாக்கிரகப் போராட்டங்களுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு வந்தது. தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பேரெழுச்சி ஆரம்பமாகத் தொடங்கியிருந்தது. அன்றைய தினம் அதாவது ஏறத்தாள ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்திப் பத்திரிகைகளும், வானொலியும் மக்கள் மத்தியில் பாரிய தொடர்பு ஊடகங்களாக இருந்தன. தொலைத் தொடர்பு வசதிகள் பெரிதாக இல்லாத அவ்வேளையில், தமிழ்ப் பத்திரிகைகள் மக்களோடு ஒட்டி உறவாடுகின்ற நண்பனாக திகழ்ந்தன.

தமிழ் மக்களின் தேசிய உணர்ச்சி கிளர்ந்தெழுவதைத் தடுக்கும் நோக்கோடுதான், செய்தித் தணிக்கையை பண்டாரநாயக்கா அன்று அமலுக்குக் கொண்டு வந்தார். அன்றிலிருந்து இன்றுவரை, தமிழ் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் நசுக்க முயல்வதன் மூலம் தமிழ் தேசிய உணர்வெழுச்சியை ஓரளவுக்கு அடக்கிவிடலாம் என்று சகல சிங்கள அரசுகளும் எண்ணி வந்திருக்கின்றன. SWRD பண்டாரநாயக்கா, செய்தித் தணிக்கையின் தகப்பனார் என்ற புகழைப்(?) பெற்றுக் கொண்டதைப் பின்பற்றி, பின்னாளில் அவரது மனைவியார் சிறிமாவோ பண்டாரநாயக்காவும், Junius Richard (JR) ஜெயவர்த்தனாவும் ஊடகங்கள் மீதான தமது இரும்புப் பிடிகளை இறுக்கினார்கள். தன்னுடைய முன்னோடிகளின் சிந்தனைகளைத்தான் சிறிலங்காவின் தற்போதைய அரச அதிபரான மகிந்த ராஜபக்சவும் பின்பற்றி வருகின்றார் என்பதனை நிகழ்காலச் சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இங்கே இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் சுட்டிக் காட்டியாக வேண்டும். துசு ஜெயவர்த்தனாவின் சிந்தனையில் உதித்த 1978ம் ஆண்டு அரசியல் யாப்பானது, கருத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்திற்கு இடமளிக்கின்றது. ஆனால் இதற்கு ஒரு LOOPHOLE என்று சொல்லப்படுகின்ற தப்பு வழியையும், JR ஜெயவர்த்தனா அமைத்திருக்கின்றார். கருத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்திற்கு சிறிலங்காவின் யாப்பில் இடமளித்துள்ள ஜெயவர்த்தனா, அதே அரசியல் யாப்பில் அத்தியாவசியம் என்று சரத்து 15(7)ல் சேர்த்துள்ள மிக நீளமான வசனம், கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் தடை செய்யப்படக் கூடிய காரணிகளை விளக்குகின்றது. அதில் ஒரு காரணம் ‘சிறிலங்காவின் தேசியப் பாதுகாப்பாகும்’. அதாவது, சிறிலங்காவின் தேசியப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய எந்தவிதக் கருத்தும், எந்தவிதப் பேச்சும் தடை செய்யப்படும் என்று சிறிலங்காவின் அரசியல் யாப்பின் அத்தியாயம் மூன்று, சரத்து 15(7) கூறுகின்றது.

தமிழ் மக்களின் தேசிய எழுச்சியையும், உரிமைப் போராட்டத்தையும் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்படுகின்ற சிறிலங்கா அரசுகளின் பயங்கரவாதத்தையும் வெளிக்கொண்டு வந்த தமிழ் ஊடகங்களிடம் மட்டும்தான் சிங்கள அரசுகள் வன்முறையைப் பிரயோகித்தன என்று சொல்லமுடியாது. 1983ம் ஆண்டு ஜீலை மாதம் தமிழருக்கெதிராக நடைபெற்ற மாபெரும் இன அழிப்பை அன்றைய அரச அதிபரான JR ஜெயவர்த்தனா கையாண்ட விதம் குறித்து, மிகக் கடுமையான கருத்துக்களை, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான SATURDAY REVIEW ஆசிரியர் காமினி நவரத்தின வெளியிட்டார். இதனால் மிகக் கடும் கோபம் கொண்ட JR ஜெயவர்த்தனா, SATURDAY REVIEW பத்திரிகையை உடனடியாகத் தடைசெய்தார். பின்னாளில் இத் தடை நீக்கப்பட்டாலும், பிரசுரமாவதற்கு முன்னால் ஒவ்வொரு வாரப்பிரதியையும் சிறிலங்காவின் தணிக்கைச் சபைக்கு சமர்ப்பித்து, அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் காமினி நவரத்தினவிற்கு இடப்பட்டது.

இடைக்காலத்தில் தமிழீழப் பகுதிகளை ஆக்கிரமித்த இந்திய இராணுவமும் தமிழ் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் நசுக்குவதில் முன்னின்றதை வரலாறு சுட்டிக்காட்டும். இந்திய இராணுவம் தன்னுடைய ‘ஒப்பரேசன் பவான் (காற்று)’ என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு முதல், செய்தி;ட்ட காரியம் தமிழ் ஊடகங்களைக் கையகப்படுத்தியும், நாசமாக்கியதும்தான். தமிழீழ விடுதலைப் புலிகளின் வானொலிச் சேவையையும், தொலைக்காட்சி சேவையையும் கையகப்படுத்திய இந்திய இராணுவம் ஈழமுரசுப் பத்திரிகையினதும், முரசொலிப் பத்திரிகையினதும் அச்சகங்களைக் குண்டு வீசித் தகர்த்தது. இதன் அடிப்படைக் காரணம் என்பது எவரும் ஊகிக்கக் கூடியதுதான்.

ஒரு மிகப் பாரிய கொடிய யுத்தத்தை ஓர் இனத்தின் மீது மேற்கொள்வதற்கு முதல், அந்த இனத்தின் அவலத்தையும், எதிர்ப்பையும் உலக நாடுகளின் கவனத்திற்கு வெளிக் கொண்டு வரக்கூடிய ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அழித்துவிட வேண்டும் என்கின்ற முன்கூட்டிய எச்சரிக்கை உணர்வுதான் இதற்கு காரணம்.

பின்னாளில் பதவிக்கு வந்த சிங்கள அதிபர்களும் விதிவிலக்கல்ல. தமிழ்ப் பத்திரிகைகளை நசுக்கவேண்டும் என்பதற்காக அதிபர் ரணசிங்க பிரேமதாசா கொண்டுவந்த (NEWS PRINT EMBARGO) அச்சுத்தாள் தடையும், சந்திரிக்கா குமாரதுங்க உதயன் பத்திரிகை மீது கொண்டு வந்த தடையும் சுதந்திர ஊடகச் சரித்திரத்தில் பதிந்த கரும் புள்ளிகளாகும்.

சிங்களப் பேரினவாத அரசுகள் வெளிநாட்டு ஊடகவியலாளர்களையும் விட்டு வைக்கவில்லை. 2001ம் ஆண்டு ஏப்பிரல் மாதம், இலண்டன் சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளரான MARIE COLIN என்பவர் மீது சிறிலங்கா இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவரை ஊனப்படுத்தியது. அவர் வன்னிப் பெருநிலத்திற்குச் சென்று அங்கு நிலவிய உண்மை நிலைமைகளை அறிந்து திரும்பியபோதே, அவர்மீது சிறிலங்கா இராணுவம் இந்தத் தாக்குதலை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழீழ மக்களின் தேசிய எழுச்சியை வெளிக்கொண்டு வருகின்ற ஊடகவியலாளர்கள் எவராக இருந்தாலும், அவர்களை அழிக்கின்ற முயற்சியில் சிறிலங்கா அரசுகள் தொடர்ந்தும் ஈடுபட்டிருப்பதை நாம் காணமுடிகின்றது. ஆனால் தமிழ் ஊடகங்களைப் பொறுத்த வரையிலும், தமிழ் ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையிலும் சிறிலங்கா அரசுகள் திட்டமிட்டு, தொடர்ந்து அவர்கள் மீது வன்முறைகளை புரிந்து வருகின்றார்கள் என்பது நன்கு புலனாகின்றது. சரித்திரச் சம்பவங்களும் இவற்றிற்கு சான்றாக இருக்கின்றன. இலங்கைத் தீவில் மட்டுமல்ல, கடல் கடந்தும் புலம் பெயர் நாடுகளிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளைச் சிறிலங்கா அரசு தன்னுடைய கைக்கூலிகள் ஊடாக மேற்கொண்டிருக்கின்றது. பாரிஸ் ஈழமுரசு ஆசிரியர் கஜன் அவர்களின் படுகொலை இதற்கு ஓர் உதாரணமாகும்.

ஓர் அரசு என்பது ஜனநாயக விழுமியங்களையும், அதன் மரபுகளையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும். ஆனால் சிங்கள அரசுகள் இவற்றைப் பேணுவதற்கு முயற்சிப்பது இல்லை. மாறாக இந்த ஜனநாயக விழுமியங்களுக்கும், அதன் உயர் மரபுகளுக்கும் எதிராகத்தான் சகல சிங்கள அரசுகளும் நடந்து வந்துள்ளன. குறிப்பாக, ஊடகத்துறையைப் பொறுத்தவரையில் சிறிலங்கா அரசுகள் தமிழ் ஊடகங்களையும், தமிழ் ஊடகவியலாளர்களையும், தமிழ் ஊடகங்களின்; ஊழியர்களையும் சகட்டுமேனிக்கு வன்முறைக்கு உள்ளாக்கியே வந்துள்ளன. ஊடகங்களை அடக்க முனைவதும், ஊடகங்களை அடக்குவதும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களாகும். இதனைச் சிறிலங்கா அரசுகள் உணராவிட்டாலும், சம்பந்தப்பட்ட உலகநாடுகள் உணர்ந்தேயாக வேண்டும்.

காலத்திற்கு ஏற்ற வகையில், சிறிலங்கா அரசும் ஊடகங்களுக்கு எதிரான தனது வன்முறைகளை மாற்றிக் கொண்டே வந்திருப்பதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். முன்னர் தொலைபேசி இணைப்புக்களைத் துண்டிப்பது, ஊடகவியலாளர்களைக் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லவிடாமல் தடுப்பது போன்ற அராஜகச் செயல்களை சிறிலங்கா அரசு புரிந்து வந்தது. இச் செயல்களில் சிறிலங்கா வெற்றி பெற்றும் வந்தது. செய்தி என்பது உடனடியாக ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அதனை தாமதப்படுத்தினால், செய்தியின் வீச்சு வலு இழந்து விடும். இவ்வாறு செய்திகளை கட்டுப்படுத்துவதிலும், தாமதப்படுத்துவதிலும் அன்றைய சிறிலங்கா அரசுகள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றன. ஆனால் இன்றைய நவீன செய்மதி யுகத்தில் ஊடகங்களின் வீச்சு மிகப் பெரிய பரிமாணத்தைத் தொட்டு, தாண்டியும் செல்கின்றது. இந்தச் செய்மதி யுகத்தில் இணையத் தளங்கள் ஊடாகத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஆற்றுகின்ற பங்கு அளப்பரியதாகும்!

சிறிலங்காவைப் பொறுத்தவரையில் அதனுடைய தேசியப் பத்திரிகையும், தேசிய வானொலியும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இவை தமிழ்த் தேசிய எழுச்சிக்கு எதிராக, தொடர்ந்தும் விசமப் பரப்புரைகளை மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம். சிறிலங்காவில் எந்தக் கட்சி பதவிக்கு வந்தாலும், அதனுடைய ஊடகங்கள் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவும், தமிழ் மக்களின் சம உரிமைக்கு எதிராகவும் செயல்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. மாற்றுக் கருத்து என்ற வகையில் தமிழத்; தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை அரச ஊடக ஆதரவுடன் ஒட்டுக் குழுக்கள் ஒலிபரப்பி வருவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஊடகவியலைப் பொறுத்தவரையில் சிறிலங்கா அரசானது ஒருபுறம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான விசமப் பரப்புரைகளை மேற்கொள்ளுகின்றது. மறுபுறம் தமிழ்த் தேசியத்தின் ஆதரவாளர்களைக் கொலை செய்கின்றது. வன்முறை சார்ந்த யுத்தத்தின்போது வன்முறையை வன்முறையூடாக எதிர்கொள்வது போரியல் வரலாறு. ஆனால் இவ்வாறு கொலையுண்டு போவதற்கு, தமிழ் ஊடகவியலாளர்கள் என்னவிதமான வன்முறையை கையாண்டார்கள்? இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கின்ற உதயன் நாளிதழின் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைப் போலத்தான் அதியுயர் இராணுவப் பாதுகாப்புக் கொண்டுள்ள கொழும்பு நகரில் வைத்து, ஊடகவியலாளர் மாமனிதர் சிவராம் கொல்லப்பட்டார். தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான கொலைகள் சம்பந்தமாகவோ, வன்முறைகள் சம்பந்தமாகவோ இதுவரை ஒருவருக்கும் தண்டனை கூட வழங்கப்படவில்லை. சரி இந்தக் கொலைகள் தொடர்ந்து நடைபெறும் காலத்தை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான காலம்’ என்று அழைக்கின்றார்களே, இது என்ன பைத்தியக்காரத்தனம்! தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும், நாட்டுப்பற்றாளர்களும், தமிழ் ஊடகவியலாளர்களும், அப்பாவித் தமிழ் பொதுமக்களும், தமிழ் மாணவர்களும் தினமும் வன்முறைகளுக்கு ஆளாகியும், கொலை செய்யப்பட்டும் வருகின்ற இந்தக் காலம்தான் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான காலமா?’ இது ‘ஊடகங்கள் மீதான சிறிலங்காவின் அரச பயங்கரவாதத்தின் காலம்!”.

அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியினூடாக தமிழ் மக்களுக்கு நியாயமான, நிரந்தரமான, நேர்மையான, கௌரவமான தீர்வு ஒன்று சமாதானப் பேச்சுவார்த்தைகள் வாயிலாகக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும் என்பதை, நாம் தொடர்ந்தும் வலியுறுத்தியே வந்துள்ளோம். சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக் காலத்திலும் சரி, ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பிரதமர் ஆட்சிக் காலத்திலும் சரி, சிங்களப் பௌத்த பேரினவாதம் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை, சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாகத் தராது என்கின்ற கருத்தை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியே வந்துள்ளோம்.

தமிழீழ மக்கள் மீது மீண்டும் ஒரு பாரிய யுத்தத்தை சிங்களப் பேரினவாத அரசு வலிந்து திணித்துள்ள இந்தக் காலகட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வெளியிட்ட கருத்து ஒன்றை எமது நினைவில் நிறுத்துவது பொருத்தமானதாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு, விடுதலைப் புலிகளின் குரல் வானொலியின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவுக்குத் தேசியத் தலைவர் வழங்கிய வாழ்த்துச் செய்தியில் உள்ள அக் கருத்து இக்காலத்திற்கும் சாலப் பொருந்தும்.

தமிழீழத் தேசியத் தலைவரின் கருத்து வருமாறு:

‘எமது இயக்கமும், எமது விடுதலைப் போராட்டமும் அனைத்துலக ரீதியாக அடைந்து வரும் பெயரையும், புகழையும் சகிக்க முடியாத சிங்களப் பேரினவாதம், எமக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஒரு விசமத்தனமான பரப்புரைப் போரை நடாத்தி வருகின்றது.

பொய்களையே ஆயுதமாகக் கொண்டு நடாத்தப்படுகின்ற சிங்களத்தின் விசமத்தனமான கருத்துப்போரை முறியடிப்பதே இன்று நாம் எதிர் கொள்கின்ற முக்கியமான சவாலாகும். எமது இயக்கத்தின் வெகுசன ஊடகங்களே இந்தப் பெரும் பணியைச் செய்ய வேண்டும்.’

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கத்திற்கு நன்றி.

சபேசன்,

கட்டுரையின் பெயரீல் 'அரச' என்னும் சொல்லைப் போட்டதனால் எம் தமிழர் தரப்பு ஊடக சுதந்திரத்திற்கு ஆற்றிய அடக்குமுறைகளை எழுதவில்லை போலும். ஒரு ஊடகவியலாளன் தன் அரசியல் நிலைப்பாடுகளுடனான பார்வையில் மாத்திரமே கட்டுரை எழுதும் போது, அது ஒருவகைப் பிரச்சாரமாக போய்விடும். எதற்கும் இம் மாதம் வந்த காலச்சுவட்டில் வந்துள்ள கட்டுரையையும் ஒரு முறை பாருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.