ஈரான் மக்களை இஸ்ரேல் கிளர்ச்சிக்கு தூண்டுகிறது
--- --- ---
*வோசிங்டன்போஸ்ட் ஊடகம் விமர்சனம்
*கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் எனவும் இஸ்ரேல் பரிந்துரை
*ஈரான் பலமாக உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடு...
--- --- ---
ஈரான் அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்யவுள்ள, ஈரானிய மக்கள் கொல்லப்படுவார்கள் என இஸ்ரேல் தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்வதாக வோசிங்டன்போஸ்ட் (washingtonpost) இன்று செவ்வாய்கிழமை பிரசுரித்த செய்திக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், கிளர்ச்சி செய்யும் மக்களுக்கு ஆதரவாக செயற்பட வேண்டும் என, அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு இஸ்ரேல் பரிந்துரைத்துள்ளது எனவும் அந்த செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளது.
அதாவது, ஈரானியர்களை வீதியில் இறங்கி கிளர்ச்சி செய்ய இஸ்ரேல் தூண்டுவதாக வோசிங்டன்போஸ்ட் கட்டுரையாளர் ஜோன் கட்சன் (John Hudson) எழுதிய செய்திக் கட்டுரையில் விபரிக்கப்பட்டுள்ளது.
வோசிங்டன்போஸ்ட் அமெரிக்காவின் பிரதான ஊடகமாகும். ஜோன் கட்சன், இந்த ஊடகத்தின் தேசிய பாதுகாப்புச் செய்தியாளர் (National security reporter).
தான் எழுதிய நீண்ட செய்திக் கட்டுரையில், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை ஈரான் பக்கம் கூடுதல் கவனத்தில் வைத்திருக்க இஸ்ரேல் முற்படுவதாக குற்றம் சுமத்துகிறார்.
ஈரானின் ஆட்சியில் "விரிசல் இல்லை" பெப்ரவரி 28 ஆம் திகதி உயர் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டாலும், அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டாலும், ஈரான் இறுதிவரை போராட தயாராக இருப்பதாகவும் இஸ்ரேல் மதிப்பீடு ஒன்றை செய்திருக்கிறது.
இந்த மதிப்பீட்டு அறிக்கையை இஸ்ரேல் அமெரிக்க இராஜதந்திரிகளுடன் ஆராய்ந்துள்ளதாக ஜோன் கட்சன் தனது கட்டுரையில் விபரிக்கிறார்.
இஸ்ரேலிய அதிகாரிகள் ஈரானில் ஒரு மக்கள் கிளர்ச்சி எழும் என நம்புவதாகவும், அப்படி ஒரு கிளர்ச்சி நடந்தால், ஈரான் அரச எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும் எனவும் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளதாக அக் கட்டுரை மேலும் கூறுகிறது.
உயர் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டபோது தான், புதிதாக பதவியேற்றுள்ள அவருடை மகன், மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததாக ஜோன் கட்சன் தனது கட்டுரையில் விளக்கியுள்ளார்.
அதேநேரம், அமெரிக்க இராஜதந்திரிகளையும் அதன் பாதுகாப்பு அதிகாரிகளையும், இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்ற தொனி ஜோன் கட்சன் எழுதிய நீண்ட செய்திக் கட்டுரையில் தெரிகிறது.
ஈரானின் பிரதான இராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர படை கூடுதல் அதிகாரம் கொண்டது என இஸ்ரேல் சுட்டிக்காட்டுவதன் மூலம் அமெரிக்க அதிகாரிகளை, இஸ்ரேல் தன் பக்கம் ஈர்த்துள்ளது என கட்டுரையாளர் கற்பிதம் செய்கிறார்.
அதேவேளை, ஈரான் தமது ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்தி வருவதாக அமெரிக்க உளவுத்துறை கூறுவதாக வோசிங்டன்போஸ்ட் மற்றொரு செய்திக் கட்டுரையை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகளின் ஆதரவுடன் தெஹ்ரானில் பலவீனமான, ஆனால் மிகவும் கடினமான அரசாங்கத்தை அமெரிக்க அதிகாரிகள் காண்பதாக வோசிங்டன்போஸ்ட் விபரிக்கிறது.
ஈரானின் ஆட்சி அப்படியே தைரியமாக இருக்கும் என்று அமெரிக்க உளவுத்துறை மதிப்பீட்டுள்ளது. போரின் ஆரம்பத்தில் இருந்து இந்த மதிப்பீட்டை அமெரிக்க உளவுத் துறை மேற்கொண்டிருக்கிறது.
ட்ரம்பை எதிர்த்து நின்று உயிர் பிழைத்ததாக ஈரான் நம்புவதாக அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பிட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக வோசிங்டன் போஸ்ட் விபரிக்கிறது.
ஈரான் அரசின் மூலோபாயம் உறுதியாக உள்ளது. ஹார்மூஸ் நீரிணை மீதான தனது செல்வாக்கை ஈரான் பயன்படுத்தி, அமெரிக்காவை சங்கடப்படுத்துகிறது. நீண்ட ஒரு போருக்கு ட்ரம்ப் தயாராக இல்லை என்பதை ஈரான் உணர்கிறது எனவும் அந்தக் கட்டுரை கூறுகிறது.
சென்ற வெள்ளிக்கிழமை வரை 15,000 இலக்குகளைத் தாக்கி, ஈரானின் இராணுவம் மற்றும் அதன் தலைமையின் மீது அமெரிக்க - இஸ்ரேல் இராணுவங்கள் தாக்குதல் நடத்தி ஏற்படுத்திய அழிவை, ட்ரம்பின் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) மீண்டும் மீண்டும் பாராட்டியுள்ளார்.
ஆனால், ஈரான் வலுவாக இருப்பதாக அக் கட்டுரை ஆதாரங்களுடன் தனது விமர்சனத்தை முன்வைக்கிறது.
அதேநேரம், ஐரோப்பிய நாடுகள், ட்ரம்பின் தவறான தீர்மானங்களுக்கு ஒத்துழைக்காமல் பாதுகாப்பாக தப்பியுள்ளன என்று வோசிங்டன்போஸ்ட் மற்றொரு செய்தியையும் வெளியிட்டுள்ளது.
அதாவது, ஐரோப்பாவில் உள்ள வோசிங்டனின் கூட்டாளிகள் போரின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பியிருப்பதாக வோசிங்டன்போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம், உலகளாவிய எண்ணெய் விலை அதிகரிப்பு மட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளரான அமெரிக்கா அனுபவிக்காத எரிபொருள் விலை உயர்வை, ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்வதால் ட்ரம்ப்புக்கு ஒத்தழைக்காமல் ஒதுங்கியிருப்பதாகவும் வோசிங்டன்போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
(The spike in energy costs is threatening to slow economic growth and increase prices in Europe more sharply than in the United States)
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-
By
ஈழப்பிரியன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.