Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்துக்குமார் ... மன்னித்து விடு... சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !!

Featured Replies

ஜனவரி 29 அன்று காலை 10.45 - லிருந்து 11 மணிக்குள் இருக்கும். சென்னை சாஸ்திரி பவனுக்கு ஒரு வேலையின் நிமித்தம் சென்றிருந்த என் நண்பர். படபடப்போடு தொலைபேசி மூலம் அந்தத் தகவலைச் சொன்னார். ''இங்கே ஒருவர் ஈழப் பிரச்சினைக்காக தீக்குளித்து விட்டார். அவர் எரிந்தபடியே கீழே விழுகிறார்... எரிந்து கொண்டிருக்கிறார்'' என்றார். ஒரு விதமான பரபரப்பு என்னிடம் தொற்றிக் கொண்டது. உணர்வலைகளால் உந்தப்பட்டு எரிந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் தமிழக அரசியல் வரலாற்றில் ஆழமான பாதிப்பு ஒன்றை ஏற்படுத்தப் போகிறான் என்றும் நான் நினைத்தேன்.

என்னிடம் தகவலைச் சொன்ன என் நண்பரிடம் ''அங்கே என்ன இருக்கு?" என்றேன். ''நிறைய பேப்பர்ஸ் வைத்திருக்கிறார் அந்த பேப்பர்களும் அவரோடு எரிகிறது'' என்றார். ''நீ உடனே அந்த பேப்பரை எடு"என்று சொல்லி விட்டு நானும் அங்கே சென்றேன்.

அந்த இளைஞர் விழுந்து கிடந்த இடத்தில் கரும்படலம் பரவியிருந்தது. இருபத்தைந்து லிட்டர் தண்ணீர் பிடிக்கக் கூடிய வெள்ளை நிற கேன் ஒன்று அங்கே காலியாகக் கிடந்தது. எரிந்து கிடக்கும் அந்த மனிதர் தன் மேல் ஊற்றுவதற்கான பெட்ரோலை அந்த வெள்ளை நிற கேனில்தான் எடுத்து வந்திருக்க வேண்டும். போலிசார் அவரோடு சேர்ந்து அந்தக் கேனையும் எடுத்துச் சென்றனர். முதலில் அவர் குப்புற விழுந்து கிடந்ததாக நினைவு. போலீசார் வந்து கூட்டத்தை விலக்கி விட்டு எரிந்து கிடந்த அந்த இளைஞரின் அருகே அமர்ந்து வாக்குமூலம் பெறும் முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள். குடும்ப பிரச்சனையா? காதல் தோல்வியா? என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தனர். முழுக்க கருகி கரிக்கட்டையாகிக் கிடந்த அந்த இளைஞனோ ''யோவ் அதான் எரிஞ்சுட்டேன்ல தூக்கிட்டுப் போய்யா'' என்று ஈனஸ்வரத்தில் வெறுப்போடு முனகிக் கொண்டிருந்தான். காக்கிச் சட்டைகள் கைபிசைந்து நின்றார்கள். பிறகு முத்துக்கமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வரை அருகிலேயே செய்வதறியாது யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்புறம்தான் அந்தக் கடிதத்தை நான் வாசித்த போது அந்த நேரத்தில் இந்த மரணமும் அவர் எழுதி வைத்துள்ள மரணசாசனமும் எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது என்பதை புரிந்து கொண்டேன். உடனடியாக அக்கடிதத்தை ஸ்கேன் செய்வதற்காக வெளியில் வந்தேன். சாலையின் சந்திப்பில் இருந்த கடையில் ஸ்கேன் செய்து அக்கடிதத்தின் ஜெராக்ஸ் நகலை ஒரு முக்கியமான ஊடகவியலாளருக்கும் கொடுத்தேன். என்னுடன் இருந்த பத்திரிகை நண்பர் ஒருவர் அங்கிருந்த படியே முக்கியமான சில முக்கிய பிரமுகர்களுக்கு அக்கடிதத்தின் முக்கியத்துவம் உள்ள வரிகளை வாசித்துக் காட்டத் துவங்கினார். அவர் வாசித்துக் காட்டிய அந்த பிரமுகர்கள் அனைவருமே ஈழத் தமிழர் போராட்டங்களை வழி நடத்தியவர்கள். ஈழப் போராட்டத்திற்கு தாங்கள் மட்டுமே உண்மையானவர்கள் என்ற தோற்றத்தையும் உருவாக்கியிருந்தார்கள்.

"உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள்.''

''என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.'' என்ற வரிகளை வாசித்துக் காட்டி விட்டு, அத்தோடு நிற்காமல் எனக்குத் தெரிந்த எல்லா நண்பர்களுக்கும் தொலைபேசி மூலம் கடிதத்தை வாசித்துக் காட்டி "இதை விடக் கூடாது, ஈழத் தமிழ் மக்கள் மீதான போரை முன்னெடுக்கும் இந்தியாவுக்கு தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காட்டவும், போர் நிறுத்தம் கோரவும் வந்து வாய்த்திருக்கும் அரிய தருணம் இது. ஒரு மாபெரும் எழுச்சியையும் மக்கள் திரள் போராட்டங்களையும் தூண்டி விடும் சாத்தியங்களை இக்கடிதம் கொண்டிருக்கிறது. ஆகவே நாம் போராட்டங்களைத் தூண்டி விட வேண்டும்" என்று சொன்னேன்.

நான் தொலைபேசியில் வாசிப்பதைக் கேட்ட சில நண்பர்கள் உணர்வெழுச்சியால் உந்தப்பட்டு அப்படியே அலுவலக வேலைகளைப் போட்டு விட்டு ஒன்று கூடினோம். கடிதத்தை முதலில் டைப் செய்து சில இணையதளங்களில் சில மணிநேரங்களில் வெளியிட முடிவு செய்தோம்.

முத்துக்குமாரின் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். அங்கே நெடுமாறன், வைகோ, வெள்ளையன் ஆகியோர் முத்துக்குமாரின் உடலருகே இருந்தனர். அங்கு எடுத்துச் செல்லப்பட்ட முக்கால் மணிநேரத்திற்குள் முத்துக்குமார் இறந்து போனார். பொதுவாக அறுபது சத தீக்காயம் அடைகிறவர்கள் கூட இரண்டு நாள் உயிரோடு இருந்துதான் மரணிப்பார்கள். ஆனால் முத்துக்குமார் எரிந்து ஒரு மணிநேரம் கூட உயிரோடு இருக்க வில்லை. ஏனென்றால் அவரது உடலில் எரிந்த தீ நின்று எரிந்த தீ. அது உடலை மட்டுமல்ல இதயத்தை கடுமையாக பாதித்தபடியால் உடனடியாக உயிர் போகும்படியாயிற்று.

சாவது என்று முடிவெடுத்து அதை ஒரு உண்மையான வீரனாக செய்து முடித்தவன் முத்துக்குமார். பொதுவாக தற்கொலையை அமல்படுத்துவது கண நேர முடிவு என்பார்கள். அந்தக் கணத்தில் சிந்தனை தடுமாற்றம் ஏற்பட்டால் அவர் அந்த முடிவைக் கைவிட நேரும். ஆனால் முத்துக்குமார் செத்தே தீருவது என்ற முடிவோடும், யாரும் தன்னைக் காப்பாற்றி விடக் கூடாது என்பதிலும் உறுதியாக நின்றான். தான் பலியாகி தமிழகத்தில் ஈழ மக்களுக்கான ஒரு எழுச்சியை உருவாக்குவது; தனது மரணத்திற்கான சாசன வாக்குமூலம் ஒன்றை எழுதுவது என்பதும்தான் முத்துக்குமாரின் இறுதித் திட்டம்.

உண்மையில் முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி எது என்று யாராவது கேட்டால் மரணசாசனத்தை விட அவர் செத்துப் போவதென்று முடிவெடுத்த அந்த தருணம். ஆம். அந்தக் காலத்தில் இங்குள்ள ஆட்சியாளர்கள் ஈழ மக்களுக்காக ஏதாவது செய்து விட மாட்டார்களா? என்கிற ஏக்கம் எல்லோருக்கும் இருந்தது. எங்கே ஈழம் என்கிற இழவு வீடு நம் சந்தோசத்தை பிடுங்கி பதவியைப் பறித்து விடுமோ என்று பதறினார் கருணாநிதி. அந்த பயம்தான் கருணாநிதியை அசிங்கமான பல நாடகங்களை அரங்கேற்றத் தூண்டியது. கருணாநிதி மட்டுமல்ல ராமதாஸ், வைகோ, திருமாவளவன் என எல்லோருமே கருணாநிதிக்கு இணையான நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஊடகங்களுக்கோ, ஆளும் வர்க்கங்களுக்கோ, தமிழார்வலர்களுக்கோ, கருணாநிதிக்கோ, ஜெயலலிதாவுக்கோ, நடிகை, நடிகர்களுகோ யாருக்குமே ஈழ மக்களின் கண்ணீர் பற்றிய அக்கறை இல்லை. போரால் கொல்லப்பட்ட மக்களின் கொடூரப் படங்கள் முதலில் இணையதளங்களில் மட்டுமே வெளியாகின . ஜெயா, கலைஞர், சன் என எந்தத் தொலைக்காட்சிகளும் போர் குறித்தும் தமிழ் மக்கள் கொல்லபடுவது குறித்தும் ஒரு வார்த்தை கூட வாயே திறக்கவில்லை. ஊடகங்களின் மௌனம், கருணாநிதியின் நாடகம், ஜெயலலிதாவின் பொறுப்பற்ற பேச்சுக்கள் என மக்கள், ஈழம் தொடர்பாக அருவறுப்படைந்திருந்தார்கள்.

இந்த அருவறுப்பு மக்களிடம் இருந்தது என்று சொல்வதை விட தமிழார்வலர்கள், முற்போக்குச் சக்திகள், அறிவுஜீவிகள் மத்தியில் அதிகம் இருந்தது. அப்போது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திடமும் இருந்தது கழிவிரக்கமும்,கையாலாகாத்தனமும் மட்டுமே. இந்த இரண்டு உண்மைகளையும் புரிந்து கொண்ட முத்துக்குமார் தன் உடலை முதல் முதலாக பலீபிடத்தின் மீது வைத்தான். தானே பலியானான் அதுதான் தீக்குளிப்பின் வரலாற்றுத் தருணம்.

சரி சம்பவத்திற்கு வருவோம். கீழ்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலைக் காண அங்கே கொஞ்சம் இளைஞர்கள் கூழுமியிருந்தனர். அங்கே இருந்த ஒரு போலீஸ் அதிகாரியின் மீது இளைஞர்கள் கோபத்தைக் காட்டினார்கள். அங்கே குழுமியிருந்த தலைவர்கள் முத்துக்குமார் தொடர்பாக என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நான் எனது பத்திரிகை நண்பரிடம் கேட்டேன். அவர் ஒரு முக்கியமான தலைவரிடம் பேசியதைக் கூறினார். அதன்படி முத்துக்குமாரின் உடலை கொளத்தூருக்குக் கொண்டு சென்று ஒரு மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்க தீர்மானித்திருப்பதை அறிந்தேன்.

இந்த செய்தி எனக்கு ஏமாற்றமாக இருந்தது. என் நண்பர் சில மணி நேரங்களுக்கு முன்பு அந்தத் தலைவரிடம் பேசும் போது ‘‘முத்துக்குமாரின் உடலை ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் முன்னால் வைத்தி நீதி கேட்க வேண்டும்’"’ என்றிருக்கிறார். அவர் ஆமாம் ஆமாம் என்று தலையாட்டிருக்கிறார். இப்போதோ அவர் சொன்ன பதில் எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. என் நண்பர் அவரிடம் உணர்ச்சிவசப்பட்டு ‘‘முத்துக்குமாரின் உடலை சட்டக் கல்லூரி மாணவர்களிடமும், வழக்கறிஞர்களிடமும் ஒப்படைத்து விடுவதுதானே சரி. வேண்டுமென்றால் நீங்கள் பின்னால் இருந்து அவர்களுக்கு வழிகாட்டலாம் இல்லையா?" என்று கேட்டிருக்கிறார். அவர் என் நண்பருக்கு உருப்படியாக எந்தப் பதிலையும் சொல்லவில்லை.

பல பிரமுகர்களிடம் பேசிய போதும் முழுமையான விபரங்களையோ, என்ன செய்யப் போகிறார்கள் என்பதையோ மறுத்து விட்ட்னர். நானும் எனது நண்பரும் கொளத்தூருக்குக் கிளம்பினோம், அங்கே ஒரு பந்தலின் கீழ் முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்தது. சாயங்காலம் 6.45 மணி இருக்கும். அப்போது சுமார் முப்பது பேர் அங்கு குழுமியிருந்தனர்.

அப்போதே தலைவர்கள் மீதாதன நம்பிக்கை தகர்ந்து விட்டது. நாங்கள் எங்கள் கைகளில் இருந்த பணத்தைப் போட்டு முத்துக்குமாரின் கடிதத்தை நம்மால் முடிந்தவரை மாணவர்களிடமும் வழக்கறிஞர்களிடமும் கொண்டு செல்வோம் என்று இரவோடு இரவாக பிரதி எடுத்தோம். முத்துக்குமாரின் செய்தியை மாணவர்களிடமும் வழக்கறிஞர்களிடமும் கொண்டு சென்று சம்பவ இடத்திற்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தோம். இது போன்ற எண்ணம் ஏராளமான இளைஞர்களுக்கு இருந்த படியால் அவர்களும் இது போன்ற போராட்டங்களை தூண்டி விடும் வேலைகளில் இறங்கினார்கள். கிளர்ச்சியை நம்பும் ஒருவன் என்ன செய்வானோ அதை நேர்மையாகச் செய்தோம்.

ஆனால் முத்துக்குமாரின் மரணசாசனம் குறித்து திருமாவளவனின், ராமதாஸின், வைகோவின், நெடுமாறனின் ஆதரவாளர்கள் இன்று வரை மௌனம் சாதிக்கிறார்கள்.

அப்பந்தலின் வலது புறமாக உள்வாங்கியிருந்த ஒரு வீட்டினுள் முக்கியஸ்தர்கள் அமர்ந்து ஆலோசனை நடத்தினார்கள்....நடத்தினார்கள்... நடத்திக் கொண்டே இருந்தார்கள். ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள்? முத்துக்குமாரின் இறுதி நிகழ்வுகள் தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள், என்பது குறித்த கேள்விகள் அந்த இரவே பலருக்கும் எழுந்தது.

ஆனால் அந்தக் கேள்வியை கேட்கும் துணிச்சலோ, இவர்களுக்கு மாற்றாக முத்துக்குமாரின் விருப்பங்களை நிறைவேற்றும் மாற்று அரசியல் தலைமையோ அங்கு இல்லை. தலைமையற்ற இந்த கையறு நிலைதான் வைகோவையும், நெடுமாறனையும், திருமாவளவனையும் முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தின் அதாரிட்டிகளாக தாங்களே அந்த உரிமையை எடுத்துக் கொள்ள வைத்தது. ஆனால் மாணவர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அனைவருமே முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தில் இவர்களுக்கு தங்களுடைய கடும் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினார்கள்.

ஒரு கட்டத்தில் வேக வேகமாக முத்துக்குமாரின் சடலத்தை புதைக்கத் திட்டமிட்டவர்கள், எழுந்து வரும் எதிர்ப்பை சமாளித்து எப்படியாவது சவ அடக்கத்தை நடத்தி முடித்து விடுவது என்று காய் நகர்த்தினார்கள். முத்துக்குமாரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக இருந்தால் அவரது உடலை அடக்கம் செய்யாமல் ஈழப் போராட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். இதுதான் முத்துக்குமார் சொல்கிற போராட்டத்தை கூர்மையாக்குதல். இரண்டாவது அவர் சுட்டிக் காட்டுகிற சட்டக்கல்லூரி மாணவர்கள். அவர்களிடமும், தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்த வழக்கறிஞர்களிடமும் முத்துக்குமாரின் உடலை ஒப்படைத்திருக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளின் முதிர்ந்த வடிவமாக இன்னொரு கோரிக்கையும் அங்கு முன் வைக்கப்பட்டது. முத்துக்குமாரின் உடலை தமிழகம் முழுக்க ஊர்வலமாகக் கொண்டு சென்று தூத்துக்குடியில் இருக்கிற அவனது சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை. (இவர்களோ முத்துக்குமாரின் அஸ்தியை ஒரு அம்பாஸ்டர் காரில் கொண்டு சென்று கடலில் கரைத்தார்கள். அது யாருக்கும் தெரியாமல் போனது.)

மறு நாள் எப்படியாவது உடலை புதைத்து விட வேண்டும் என்பதுதான் அங்கிருந்த நெடுமாறன், ராமதாஸ், வைகோ, திருமா, ஆகியோரின் முடிவு. முத்துக்குமாரின் விருப்பத்தை மீறி, அங்கு குழுமியிருந்த ஏராளமான உணர்வாளர்களின் விருப்பத்தையும் மீறி அவர்கள் அந்த முடிவை எடுத்தார்கள். ஆனால் மாணவர்களும், வழக்கறிஞர்களும் வந்து நிலைமை சிக்கலான பின் அவர்கள் அடக்கத்தை ஒரு நாள் தள்ளிப் போட்டார்கள். தலைவர்கள் அவசரப்படுவதன் நோக்கமென்ன? ஒரு தன்னெழுச்சியான கிளர்ச்சி பிறந்து அது கையை விட்டுப் போய்விட்டால், ஈழத்திற்கான போராளிகள் என்ற வேடம் கலைந்து விடும் என்ற அச்சமே. தேர்தல் வழியில் அதிகார வர்க்க முறையில் இந்திய அரசின் ஒப்புதலோடுதான் ஈழத்தில் தலையிட முடியும் என்ற அடிமைத்தனமாக சிந்தனையும் யதார்த்தமும் அவர்களை இயக்கின.

அதனால்தான் "உண்ணாவிரதம், மனுகொடுப்பது என சம்பிரதாய போராட்டங்களை தூக்கி எரிந்து களம் காணுங்கள்" என்று அறைகூவல் விட்ட முத்துக்குமாரின் விருப்பத்திற்கு மாறாக முத்துக்குமாரின் உடலை உடனே புதைப்பதில் அக்கறை காட்டினார்கள். முத்துக்குமாரின் உடலை வைத்து கிளர்ச்சியை உருவாக்கும் அளவுக்கு மாணவர்களிடம் அரசியலோ, தலைமையோ இல்லாத சூழல். ஆதலால் தலைவர்கள் முத்துக்குமாரின் வீரச்சாவை ஒட்டி இயல்பாக எழும் ஈழ ஆதரவு கொந்தளிப்புகளை மீண்டும் மீண்டும் சடங்காக மாற்றுவதன் மூலம் அந்த சடங்கிற்குள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்த கருணாநிதிக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார்கள்.

சந்தர்ப்பவாதிகளிடம் எப்படித் தோற்றோம்?

சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் ஒன்று சேர்ந்து ஒரு எதிர்ப்பியக்கத்தை கட்டினால் என்ன நடக்கும் என்பதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பியக்கம் ஒரு உதாரணம். அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே, தனது மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக வைத்துக் கொண்டே ஈழப் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக போராடுவதாக நாடகமாடினார் டாக்டர் இராமதாஸ். அதனால்தான் ''யாரும் யாரையும் திட்டக் கூடாது, துண்டறிக்கை வெளியிடக் கூடாது, கொடும்பாவி கொளுத்தக் கூடாது, வன்முறையில் இறங்கக் கூடாது, பந்த் நடந்தால் அமைதியாக வீட்டில் இருக்க வேண்டும்'' என்றெல்லாம் பேசி ஈழப் போராட்டங்களுக்கு ஆப்பு வைத்தார் ராமதாஸ்.

இப்படி ஈழத் தமிழினத்திற்காக போராட வந்த தைலாபுரத்து நாயகன் கடைசியில் போயஸ் கார்டனில் போய் கூட்டு வைத்தார். அந்தக் கூட்டு காங்கிரஸ், திமுகவின் கூட்டணிக்கு முன்னால் தோல்வியுற்ற பின்பு இப்போது மீண்டும் காங்கிரஸ், திமுக கூட்டணியில் சேர தூது விடுகிறார் இந்த தமிழினப் போராளி.

சாதாரதண போராட்ட வடிவங்களையே தவிர்க்கச் சொல்லும் தமிழினப் போராளிகளின் காலத்தில்தான் முத்துக்குமார் '' உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! '' என்று ஒடுக்கபப்டும் மக்கள் குறித்து சரியாகவே உணர்த்தி விட்டுச் செல்கிறான்.

திருமா அப்போது திமுகவோடும் கருணாநிதியோடும் அனுசரணையோடு இருந்தார். ராமதாஸ் காங்கிரஸ் கூட்டணியில் பதவியை பங்கிட்டிருந்தார். வைகோ ஜெயலலிதா கூட்டணியில் இருந்தார். தா.பாண்டியன் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரும் முடிவில் இருந்தார். இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்த நெடுமாறனோ ஜெயலலிதா கூட்டணியின் ஆதரவாளராக இருந்தார். திருமா, வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன், இவர்களுடன் இல.கணேசன் உள்ளிட இந்துத்துவ சக்திகள். இந்த இந்துத்துவ சக்திகளையும் தமிழார்வலர்களையும் இணைக்கும் புள்ளியாய் நெடுமாறன். இதுதான் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை.

இவர்கள்தான் ஈழப் போருக்கு எதிராக தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்தும் பொறுப்பை ஏற்று களம் கண்டவர்கள். புலிகளும் தங்களின் தமிழக ஆதரவாளர்களாக நம்பியது இவர்களைத்தான். ஆனால் முத்துக்குமாரின் மரணசாசனமோ கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட எல்லா ஒட்டுண்ணி துரோகிகளையும் சம தூரத்தில் விலக்கி வைத்து எழுச்சிக்கான புதிய பாதையைக் கோரி நின்றது. ஆனால் உணர்வு கொண்டு எழும் இளைஞர்களுக்கு வழிவிடாமல் முத்துக்குமாரை கொண்டு போய் வெகு வேகமாக புதைத்ததன் மூலம் இவர்கள் துரோகம் செய்தது முத்துக்குமாருக்கு மட்டுமல்ல ஈழத்தை ஒரு கருவியாகக் கொண்டு தமிழகத்தில் ஏற்பட்டிருக்க வேண்டிய அரசியல் எழுச்சியையும் பாழ் படுத்து தமிழ் மக்களுக்கும் சேர்த்தே இவர்கள் துரோகம் செய்தார்கள். அந்த மரணசானத்தை வைகோவோ, திருமாவளனோ, ராமதாஸோ மேடையில் கடைசி வரை வாசிக்கவே இல்லை.

ஏனென்றால் அதை வாசித்தால் கருணாநிதி மனம் புண்படும் என்று திருமாவளவன் நினைத்தார், சோனியாவின் மனம் புண்படும் கூட்டணிக்கு குடைச்சல் வரும் என்று இராமதாஸ் நினைத்தார், ஜெயலலிதாவின் மனம் புண்படும் என்று வைகோ நினைத்தார், உண்மையிலேயே தமிழகத்தில் கிளர்ச்சி எதுவும் ஏற்பட்டு விடுமோ என நெடுமாறன் நினைத்தார். அத்தனை பேரும் சேர்ந்து முத்துக்குமாரை ஊத்தி மூடினார்கள்.

''உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.'' என்று முத்துக்குமார் எச்சரித்தது கருணாநிதியை.... ஆமாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பலனை திருடி அதை வைத்து பதவிக்கு வந்த சந்தர்ப்பவாதியான கருணா குறித்த எச்சரிக்கைதான் அது. ஆனால் ஈழப் போராட்டத்தில் கருணாநிதியின் துரோகத்தை மட்டுமே பேசிய இவர்கள் முத்துக்குமாருக்குச் செய்த துரோகத்தை நாம் என்ன பெயரிட்டு அழைப்பது? முத்துக்குமார் சொன்ன சுயநலமிகள் என்ற வார்த்தை இவர்களுக்கு எவ்வளவு கச்சிதமாக கடைசியில் பொருந்திப் போயிற்று....

முப்பதாம் தேதி மாலை தூத்துக்குடியில் இருந்து அவரது பாட்டி உள்ளிட்ட சில உறவினர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் போய் நாங்கள் பேசினோம். ஆனால் அவர்களிடம் பேச விடாமல் எங்களை தடுத்தார்கள் சிலர், அவர்கள் நிலத் தரகர்கள் சங்க நிர்வாகிகள். அவர்கள் நாடார் என்கிற சாதியின் அடிப்படையில் முத்துக்குமாரின் உறவினர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். கடைசியில் முத்துக்குமாரின் உடலை துருப்புச் சீட்டாக பயன்படுத்த முடியாமல் ஊர்வலமாக கொண்டு சென்று புதைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஒரு பக்கம் கருணாநிதி போலீசின் கொடூரமான அடக்குமுறை, இன்னொரு பக்கம் சந்தர்ப்பவாத ஓட்டுண்ணி அரசியல் தலைவர்கள் என மாணவர்களும் இளைஞர்களும் அவர்களால் தாக்கப்படும் சூழலும் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் நடந்தது.

ஜனவரி 31&ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு மேல் முத்துக்குமாரின் ஊர்வலம் கொளத்தூரில் இருந்து புறப்பட்ட போது பெரும் உணர்ச்சி நெருப்பும் மக்கள் வெள்ளமும் அந்த இடத்தை நிறைவித்திருந்தது. சாலையெங்கும் மக்கள் வெள்ளம். அவனது உடலை எடுத்துச் செல்ல ஊர்வலம் புறப்பட்ட போது தன்னெழுச்சியாக ஐம்பதாயிரம் பேர் வரை திரண்டிருந்தார்கள். வீதியெங்கும் மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். வட இந்திய மார்வாடிப் பெண்கள் தண்ணீரும் மோரும் கொடுத்தார்கள். பலரும் தங்களின் வீடுகளுக்கு முன்னே வாசலில் நின்றபடி மெழுகுவர்த்தி ஏந்தி முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இவர்கள் எல்லாம் யார் திருமாவின் தொண்டர்களா? அல்லது வைகோவின் ரத்தத்தின் ரத்தங்களா? அல்லது இராமதாஸின் கைப்பிள்ளைகளா? இல்லையே? பொது மக்கள்............ எங்கோ நடக்கும் ஒரு பிரச்சினையைப் பார்த்து பொறுக்க முடியாமல் தன்னை எரித்துக் கொண்ட ஒரு தியாகிக்கு வணக்கமாவது செலுத்துவோம் என்று வீதிக்கு வந்தவர்கள்.

உண்மையில் இவர்கள் உட்பட, நாங்கள் உட்பட அனைவருமே தமிழகத்தில் நாம் எதிர்பாத்த எழுச்சி ஏற்பட்டு விட்டது என்றே நம்பினோம். அது உண்மையும் கூட. எழுச்சிக்கான கருவியைத்தான் நாம் சுமந்து சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் அது சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சடலமல்ல. மாறாக தமிழக மக்களை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டிய ஆயுதம் அது. ஒரு எழுச்சியை ஏற்படுத்த வல்ல எல்லா சாத்தியங்களோடும்தான் முத்துக்குமார் மரணித்திருக்கிறான். ஆனால் எழுச்சிக்கான மிகச் சிறந்த கருவியாக இருந்த.............. இனி எப்போதும் வரலாற்றில் கிடைக்க வாய்ப்பில்லாத முத்துக்குமாரை இவர்கள் வீணடித்து விட்டார்கள் என்கிற கோபம் எல்லோருக்குமே அந்த இடத்தில் இருந்தது.

கிட்டத்தட்ட ஏழு கிலோ மீட்டர் நீளமான ஊர்வலப்பாதை எங்கிலும் மக்கள் வெள்ளம். இறுதிவரை நாங்கள் சோர்ந்து போகவில்லை. மக்களும் சோர்ந்து போகவில்லை. சுடுகாட்டை ஊர்வலம் நெருங்கிய போது தமிழகத்தின் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் காலவரையற்று இழுத்து மூடியது கருணாநிதி அரசு. இந்தச் செய்தி மாணவர்களுக்கு எட்டியதும் சினமடைந்த அவர்கள் முத்துக்குமாரின் உடலோடு சாலையிலேயே அமர்ந்தனர். உடலை திருப்பி கோபாலபுரத்தில் இருக்கும் கருணாநிதியின் வீட்டுக்குக் கொண்டு செல்வோம் என்று ஆக்ரோஷமாக கிளம்பினார்கள். ஆனால் அப்போது மாணவர்களைத் தாக்கி முத்துக்குமாரின் உடலை வேக வேகமாக சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று புதைத்தவர்கள் யார் தெரியுமா?

"நான் ராஜபட்சேவை நேரில் பார்த்தால் கொல்வேன்" என்று சொல்லி விட்டு பின்னர் கொழும்புவிற்குச் சென்று நேரில் பார்த்து கைகுலுக்கி பொன்னாடை போர்த்தி பரிசும் வாங்கி சிரித்துப்பேசி வந்துவிட்டு... இப்போது மீண்டும் இனப்படுகொலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் அல்லவா, அந்த திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள்தான் மாணவர்களைக் கடுமையாக அங்கே தாக்கினார்கள். அவர்கள்தான் முத்துக்குமாரின் உடலை தரதரவென இழுத்துச் சென்று புதைத்தார்கள். ஆனால் முத்துக்குமாரின் உடல் எரிந்த சுடுகாட்டில் போடப்பட்டிருந்த மேடையில் எல்லா சந்தர்ப்பவாதிகளுக்கு முன்னால் முதல் ஆளாக மேடையில் ஏறி நின்றார் உலகத் தமிழர்களின் உள்ளூர்க் காவலன் திருமாவளவன்.

இப்படித்தான் முத்துக்குமார் மூட்டிய தீயை ராமாதாசும், வைகோவும், திருமாவும், நெடுமாறனும் சேர்ந்தே நீரூற்றி அணைத்தனர். கருணாநிதியோ அதை மணல் மூடி புதைத்தார். முத்துக்குமார் இன்று ஒரு நினைவாக மட்டுமே வேதனை கலந்த நினைவாக மட்டுமே நம்மிடம் இருக்கிறான். இவ்விதமாய் அந்த நாடகம் நள்ளிரவு ஒரு மணிவரை நீண்டது. சுடுகாட்டில் எரிந்த நெருப்பை விட கனதியான தீயொன்று எங்கள் உள்ளங்களின் எரியத் துவங்கியது அன்றுதான்.

முத்துக்குமாரின் மரண சாசனம் ஒரு அப்பாவியான புலி ஆதரவாளரின் கோணத்தில் முக்கியமாக ஈழமக்களின் துயரங்களை நினைத்து எழுதப்பட்டதுதான். அந்தக்கடிதம் அரசியல் தொலைநோக்கில் எழுதப்பட்டத்தல்ல. ஆனால் தமிழகத்தின் இயலாமை குறித்து உணர்ச்சிப் பிழம்பாய் எழுதப்பட்டது. அதில் கருணாநிதி, ஜெயாவைத் தாண்டி மற்ற தலைவர்களின் சந்தர்ப்பவாதங்கள் குறித்து இல்லை. எல்லோரையும் போல முத்துக்குமாரும் அவர்களை நம்பியிருக்கக்கூடும். முத்துக்குமாரை விடுங்கள், புலிகளும் கூட தேர்தல் முடிவு வரை இவர்களைத்தானே நம்பினார்கள். இன்று முத்துக்குமார் உயிரோடு இருந்திருந்தால் துரோகிகளின் பட்டியலை முழுமையாக உணர்ந்திருப்பார். ஈழத்திற்கான வீழ்ச்சியை அறிவுப்பூர்வமாக பரிசீலிக்க முனைந்திருப்பார். ஆயினும் இன்று அவர் இல்லை. ஆனால் தமிழார்வலர்களும், புலி ஆதரவாளர்களும் இருக்கிறார்கள். அவர்களாவது முத்துக்குமாருக்குப் பதில் அந்த சுயபரிசீலனையை செய்வார்களா?

மறுநாள் பிப்ரவரி ஒன்றாம் தேதி அதிகாலை அங்கிருந்து கலைந்து சென்றோம். முத்துக்குமார் உயிர்த்தியாகம் செய்து ஒரு வருடம் ஓடிக்கழிந்து விட்டது. இப்போது மறுபடியும் இவர்கள் முத்துக்குமாரின் நினைவைப் போற்றுவதாக அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். ஊர்வலங்கள், மலர்க் கோபுரம், என முத்துக்குமாரை நினைவு படுத்துகிறார்கள்.

ஆனால் அந்த நினைவுகளில் மனம் இன்னொறு முறை ஏமாற மறுக்கிறது. காரணம் தான் சந்தர்ப்பவாதிகளிடம் தோற்றுப் போனதைக் காண முத்துக்குமார் இல்லை. அவரது மரண சாசனத்தை வாசித்த நாம் மட்டுமே இருக்கிறோம். மீண்டும் மீண்டும் அந்த அறையை நான் கடந்து செல்லும் போதெல்லாம் பாதி எரிந்த அந்தக் கடிதம் என்னை தொல்லையுறுத்துகிறது. மரணத்தை ஆயுதமாகத் தந்து போராடு என்றவனுக்கு உயிரோடு இருப்பவர்கள், வாழ்க்கையை நேசிப்பவர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் என்னைச் சித்திரவதை செய்கிறது. தோற்கடிக்கப்பட்டவனின், ஏமாற்றப்பட்டவனின் மனச்சாட்சியாய் உள்ளுக்குள் இப்போதும் குமைந்து கொண்டிருக்கிறேன்.

முத்துக்குமார் எங்களை மன்னித்துவிடு..........

வினவு தளத்த்திலிருந்து - http://www.vinavu.com/2010/01/27/muthukumar/

முத்துக்குமாரின் எரிந்த அந்த கடிதம், மற்றும் அவிரின் இறுதி நிமிட வீடியோ மற்றும் படங்கள்

தொடர்புடைய பதிவுகள்

* முத்துக்குமாரின் இறுதிப் பயணம் – படங்கள் !

* முத்துக்குமாரின் இறுதிப் பயணம் - அங்கே நடந்த்து என்ன? ! நேரடி ரிப்போர்ட் !!

* முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !- நிறைவுப் பகுதி !

* ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் – நமது கடமை என்ன?

* ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!

* ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

* “நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பாரின் ஒப்புதல் வாக்குமூலம்!

* ஜூ.வி ஆசிரியர் விகேஷ் நீக்கம் ஏன்? – இலங்கை அரசின் கைக்கூலி பத்திரிகையாளர்கள் – தெரியாத செய்திகள்!

* ஈழப்படுகொலையில் மகிழும் இந்திய ஊடகங்கள் !

* வீழ்ந்தது ஈழம்! ‘மார்க்சிஸ்டு’ மனமகிழ் மன்றம் கொண்டாட்டம்!!

* தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பழ.நெடுமாறன் – கககபோ!

* எங்கே தமிழன்? எங்கே எட்டாவது சீட்டு? ராமதாசு சீற்றம் !

* ஈழத்தின் இரத்தத்தை வியாபாரம் செய்யும் பா.ம.க ராமதாஸ் !

* அழியும் ஈழத் தமிழினம்…அதிகாரத்திற்கு அலையும் கருணாநிதி !

* ஜெ மாறிவிட்டார் ! விரக்தி ->பிரமை ->நம்பிக்கை ->சந்தர்ப்பவாதம்

* சீமான் கைது : கதர் வேட்டி நரிகளின் திமிரை வீழ்த்துவோம்!

* ஈழப் பிரச்சினை : வைகோ விடுதலை!

* ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !

* ஈழம் – இந்தியா முதுகில் குத்துவது ஏன்?

* ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?

* ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடும் ஈழ ஆதரவாளர்களுக்கு சில கேள்விகளும் !

* ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் ! – வெளியீடு – PDF டவுன்லோட்

* ஈழம்-ரதி-இரயா-வினவு: வறட்டுவாதம் மார்க்சியமல்ல !!

* புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.

* பிற ஈழம் தொடர்பான கட்டுரைகள்-காணொளிகள்-கவிதைகள்-கார்டூன்கள்-ஓவியங்கள்

தனக்கென வாழாது எமெக்கென உயிர்தந்த அந்த அற்புத மனிதனை துதிப்போம்.நன்றி வினவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்துக்குமார் ... மன்னித்து விடு... சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !!

முத்துக்குமார் விதைத்த அந்த புரட்சி நெருப்பு அடங்கியதற்கு முக்கிய காரணம் நம் பத்திரிக்கைகள் தான்(ஒரு படத்திற்கு 4 பக்க விமர்சனம் எழுதும் இவர்கள் 2 பக்கத்தில் கூட இதை பற்றி எழுதவில்லை )....

இவரின் உயிர் தியாகத்தை ஒரு செய்தியாக மட்டுமே வெளியிட்ட அவர்கள் முத்துக்குமாரின் மரண சாசனத்தை முழுமையாக வெளியிடவில்லை..

முத்துகுமாரின் படத்தையும் அவரின் குடும்பத்தினரின் பேட்டியையும் பிரசுரித்த இவர்கள் ஏனோ அவரின் இறுதி ஆசைகளை முழுமையாக வெளியிடவில்லை.

உங்களின் இந்த கட்டுரையை படிக்கும் முன்பு வரை எனக்கு பழ.நெடுமாறன் மீதும் வைகோ மீதும் ஒரு நல்ல நம்பிக்கை இருந்தது..

திருமாவும் ராமதாஸும் பச்சோந்திகள் என்பது அறிந்ததே....

ஆனால் இவர்கள் செய்ததை படிக்கும் பொழுது இவர்களுக்கு இவர்களை தவிர யாரும் ஈழ மக்களின் மீது அக்கரை உள்ளாவர்களாக இருக்கக்கூடது என்பதே இவர்களின் விருப்பம்(இந்த அணுகுமுறையின் படி இவர்களுக்கும் கருணநிதிக்கும் பெரிய விதியாசம் இருப்பதாக தெரியவில்லை)...

எது எவ்வாறு ஆயினும் ஒரு முறை நாம் ஏமாந்துவிட்டோம் இனி ஒரு முறை இதை நடக்க விடாமால் தடுப்போம்(ஆனால் அது எப்படி??)...

நாம் அமைதியாக இருக்கும் வரை அனைவரிடமும் ஏமாந்து கொண்டு தான் இருப்போம்.....

  • கருத்துக்கள உறவுகள்

முத்துக்குமாருக்கு வீர வணக்கம்.

:lol:

Edited by ஈழமகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.