Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காப்பாற்றுமா கோவை மாநாடு?..கரையும் தமிழ் பிம்பம்...

Featured Replies

கரையும் தமிழ் பிம்பம்...

பேசும் மொழியை வெறும் கருவி யாக மட்டும் பார்க்காமல், உயிராய் உணரக்கூடியது தமிழினம். கோவையில் ஐந்து நாட்களாக நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அந்த உணர்வை உலகுக்குச் சொல்லும் நோக்கத்தின் ஒரு கட்டமாகத்தான் நடக்கிறது. குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்த மாநாட்டு நிகழ்வுகள், அடுத்தடுத்து சிறப்பாக நடந்தவண்ணம் இருந்தாலும், ஒரே ஒரு கவலை முதல்வர் கருணாநிதி தொடங்கி யாழ்ப்பாணத்து கா.சிவத்தம்பி வரை அனைவருடைய மனதிலும் நிலைகொண்டு இருந்தது.

'கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி' என்று தமிழ்ப் பெருமை பேசப்பட்டதை உலக மொழியியல் அறிஞர்களில் முக்கியமானவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் சமீபகாலத்தில், ஐரோப்பிய

நாடுகளில் கிளம்பி இருக்கும் ஆய்வாளர்கள், அதற்கு எதிர்க் கருத்தை வைக்க ஆரம்பித்து இருப்பதுதான் மாநாட்டின் கவலைக்குக் காரணம். தமிழுக்குச் செம்மொழி மரியாதை கிடைத்திருக்கும் இந்த நேரத்தில்தான், இது மாதிரியான பின்னடைவுகளும்! கோவை மாநாட்டு ஆய்வு அரங்கங்களில் இந்தக் கவலைகள் அதிகமாகப் பரிமாறப்பட்டன.

'உலகில் இருந்த ஆறு நாகரிகங்களில் நான்கு நாகரிகங் கள் இன்று அடையாளம் இல்லாமல் போய்விட்டன. சீன மற்றும் இந்திய நாகரிகங்கள்தான் இன்றுவரை இருக்கின்றன. சீன நாகரிக மக்களின் மொழி சீன மொழி. இந்திய நாகரிகத்தின் அடையாளமாக சம்ஸ்கிருதமும், தமிழும் இருக்கின்றன. அதிலும், சம்ஸ்கிருதம் மக்கள் பேசும் மொழியாக இல்லை. தமிழ் மட்டுமே இன்னும் வழக்கு மொழியாக இருக்கிறது. இந்த இரண்டு மொழிகளுக்கும் எந்தப் பகைமையும் இல்லை.

2004-ம் ஆண்டு தமிழ் செம்மொழியானது. அடுத்த ஆண்டே சம்ஸ்கிருதமும் அந்தத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனவே, இரண்டு மொழிக்கும் இருந்த பகைமை முடிந்தது என்றே நாம் மகிழ்ந்தோம். ஆனால், தமிழுக்குப் பகையான கருத்துகள், இப்போது எதிர்பாராத திசையாக ஐரோப்பாவில் இருந்து வரத் தொடங்கி உள்ளன. 'சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் மன்னர்களின் பெயர்கள் எல்லாம் கற்பனைப் பாத்திரங்கள்; ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தமிழ் இலக்கியங்களே வந்தன' என்று ஓர் ஐரோப்பிய ஆய்வாளர் எழுதி இருக்கிறார். இன்னொரு அறிஞர், 'வடமொழியில் இருந்துதான் இந்திய மொழிகள் அனைத்தும் வந்தன' என்று பெரிய புத்தகம் போட்டு, தமிழின் மாண்பை பின்னுக்குத் தள்ளப் பார்க்கிறார். ஐரோப்பாவில், அமெரிக்காவில் வடமொழி ஆதரவாளர்கள் அதிகமாகிவிட்டதைத் தமிழர்கள் தங்கள் ஆய்வின் மூலம் தடுத்தாகவேண்டும்!'' என்று முனைவர் வா.செ.குழந்தைசாமி சொன்னதை மாநாட்டு ஆய்வரங்க மேடையில் இருந்த முதல்வரும், அரங்கில் இருந்த அறிஞர்களும் உன்னிப்பாகக் கவனித்தனர்.

'தமிழ்மொழி பிறந்தபோதே செம்மொழிதான். அதனை இந்திய அரசாங்கத்தின் மூலம் சொல்ல வைத்தவர் கலைஞர். அது ஒருவகையில் வெற்றிதான். ஆனால், அந்த வெற்றியை நிலையாக ருசிக்க விடுவார்களா?' என்ற சந்தேகக் கேள்வியைப் போட்ட அமைச்சர் அன்பழகன், 'பரிதிமாற்கலைஞரால் தொடங்கப்பட்ட போராட்டம், கலைஞரால் முடித்து வைக்கப்பட்டது. நம் மொழியின் பாரம்பரியத்தை நாமெல்லாம் சேர்ந்து நிலைநாட்டியாக வேண்டும்!'' என்று உத்தரவிட்டார்.

இந்தக் கருத்துகளை நிலைநாட்ட, தேவையான ஆதாரங்களையே முதல்வர் கருணாநிதியும் தனது பேச்சில் அடுக்கினார். வெளிநாட்டில் இருந்து வந்திருந்த மொழியியல் அறிஞர்கள் அனைவரும் ஓரளவுக்குத் தமிழைப் புரிந்துகொள்பவர்களாக இருந்ததால், முதல்வரின் கருத்துகளுக்கு கைதட்டல் எதிரொலித்தது.

'இந்தோ-ஆரிய மொழி குடும்பத்துக்கும், தமிழுக்கும் தொடர்பு இல்லை; திராவிட மொழிக் குடும்பத்தில் முதன்மையானது தமிழ் என்று எல்லிஸ், கால்டுவெல் ஆகிய இருவரும் சொன்னார்கள். சிந்து சமவெளி நாகரிகம்தான் திராவிட நாகரிகம் என்று கண்டுபிடிக்கப்பட்டபோது, தமிழின் தொன்மை எல்லோருக்கும் புரிந்தது. இந்திய நாகரிகத்தின் அடையாளமான சேலையும், வேட்டியும் திராவிட நாட்டின் கொடை என்று பேராசிரியர் சட்டர்ஜி சொல்லி இருக்கிறார். மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் கண்டறிந்த தாய் தெய்வ வழிபாடு, திராவிட வழிபாடுதான்! ஆதிச்சநல்லூரில் கண்டு எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள், சிந்து வெளியில் கிடைத்த மண்டை ஓடுகளோடு ஒத்துள்ளன. இதை எல்லாம் நாம்தான் வெளிநாட்டவருக்கு எடுத்து உரைத்திட வேண்டும். ஆனால், தமிழைத் தாய் மொழியாகக்கொள்ளாத கால்டுவெல், ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற வெளிநாட்டவர்கள் தமிழின் அருமையைச் சொல்லும் நிலைதான் தொடர்ந்து நடந்து வருகிறது...' என்று சொன்ன கருணாநிதி,

''இன்னும் தமிழுக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று அறிஞர்கள் இந்த அரசுக்கு ஆணையிட வேண்டும்!'' என்று அன்போடு கேட்டுக்கொண்டார். உலக அளவில் தமிழ் பிம்பம் கரைந்துகொண்டு இருப்பது குறித்து, கருணாநிதி ஆழ்ந்து கவலைப்படுவதையே அவரது வார்த்தைகள் உணர்த்தின.

ஐந்து நாள் மாநாட்டு ஆய்வு அரங்கங்களில் படிக்கப்படும் கட்டுரைத் தலைப்புகள் 80 சதவிகிதம் நிகழ்காலத்துக்குப் பொருத்தம் இல்லாத, எம்.ஃபில்., பி.ஹெச்டி. பட்ட ஆய்வேடுகளைப் போலவே இருந்தாலும், ஒரு சில தலைப்புகள் தமிழ் வரலாறு, தோற்றத்தை ஆராய்வதாக இருந்தன. 'சிந்துவெளி பண்பாடுகளும்... எழுத்துகளும்... திராவிடத் தொடர்புகளும்' என்ற தலைப்பில் இரண்டு மூன்று அமர்வுகள் அடுத்தடுத்து நடக்க இருக்கின்றன. மேலும், உலக அளவில் முக்கியமாகக் கருதப்படும் ஜார்ஜ் ஹார்ட், அஸ்கோ பர்ப்போலோ போன்ற அறிஞர்களும் தங்களின் ஆய்வுகளாக என்ன அறிவிக்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்தே மாநாட்டின் நோக்கம் எத்தனை தூரம் நிறைவேறியது என்பது புலப்படும்.

கோவை மாநாடு, தமிழ்ப் பெருமையை வரலாற்றை உலகம் ஒப்புக்கொள்ளத்தக்க ஆதாரத்துடன் சொல்லியாக வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது. 'நாம் நம்முடைய ஓட்டத்தை ஆரம்பித்து இருக்கிறோம். தமிழ்ச் சமுதாயம் பற்றிய ஆய்வுகளைச் சிதைந்து போகாமல், திசை மாறிவிடாமல் நெறிப்படுத்தவேண்டிய பொறுப்பு கலைஞருக்குத்தான் இருக்கிறது!' என்று தழுதழுத்த குரலில் கா.சிவத்தம்பி சொன்னார். விடாப்பிடியாகப் போராடி இந்த இலங்கைத் தமிழ் அறிஞரை இந்த மாநாட்டுக்கு வரவழைத்த கருணாநிதிக்கு, அவர் சொன்னதைச் செய்தாக வேண்டிய கடமையும் இருக்கிறது!

- ப.திருமாவேலன்

நன்றி: விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.