Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபைத் தேர்தலும் தயாராகும் தமிழ்க் கட்சிகளும்

Featured Replies

பொதுத் தேர்தல் முடிவடைந்த உடனேயே அடுத்தாக இடம்பெறப்போவது வடமாகாண சபைக்கான தேர்தல்தான் என அரசாங்கத் தரப்பினர் தெரிவித்திருந்த போதிலும், இப்போதுதான் அதற்கான தயாரிப்புக்களில் பிரதான கட்சிகள் இறங்கியிருக்கின்றன. பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கான தமது பிரதான வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கும் அதேவேளையில், ஆளும் கட்சியின் சார்பில் அமைச்சரும் ஈ.பி.டி.பி. அமைப்பின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராகக் களம் இறங்கவிருக்கின்றார். தனியாகக் களம் இறங்குவதிலுள்ள நெருக்கடிகளை உணர்ந்திரக்கும் டக்ளஸ், ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் கூட்டணி ஒன்றை அமைத்துக்கொண்டு களம் இறங்குவதற்கான வியூகங்களை வகுத்துவருகின்றார். இந்த நிலையில் வடமாகாண சபை தேர்தல் தொடர்பாகவே அனைத்துத் தரப்பினரது கவனமும் இப்போது திரும்பியிருக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் மாகாண சபைகள் அமைக்கப்பட்டதே இன நெருக்கடிக்கான தீர்வைக் காண்பதற்காகத்தான். வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு மட்டும் தனியான அதிகாரங்களை வழங்கி இனநெருக்கடியை அரசாங்கம் தீர்த்திருக்க முடியும். ஆனால், தமிழர்களுக்கு வழங்கப்படும் அதிகாரப் பரவலாக்கல் சிங்களவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே நாடு முழுவதற்கும் மாகாண சபைகள் அமைக்கப்பட்டது. ஆனால் இதிலுள்ள விசித்திரம் என்னவென்றால் யாருக்காக மாகாண சபைகள் அமைக்கப்பட்டதோ அவர்களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மட்டும்தான் கடந்த பல வருட காலமாக மாகாண சபைகள் செயற்பட்டுவந்திருக்கின்றன.

இலங்கை - இந்திய உடன்படிக்கையின்படி 1988 இல் வட, கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு அதற்கான தேர்தல்கள் நடைபெற்ற போதிலும், இந்தியப் படையின் வெளியேற்றத்துடன் மாகாண சபையும் செயலிழந்தது. இந்தநிலையில் கடந்த சுமார் இரண்டு தசாப்த காலமாக வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மட்டுமே மாகாண சபைகள் செயற்பட்டன. ஆனால், கடந்த வருடத்தில் கிழக்கு மாகாணத்தைத் தமது கட்டப்பாட்டுக்குள் படையினர் கொண்டுவந்ததன் பின்னணியில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின்படி பிளவுபடுத்தப்பட்டு, கிழக்கு மாகாணத்துக்கான தேர்தல் கடந்த வருடத்தில் நடத்தப்பட்டது. இந்த நிலையில் வட மாகாண சபைக்கான தேர்தல் மட்டுமே நடைபெற வேண்டிய நிலையில் உள்ளது.

வடமாகாண சபைக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என்பது இதுவரையில் திட்டவட்டமாக அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் இவ்வருட இறுதியில் அல்லது ஜனவரியில் இதற்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் பிரதான அரசியல் அணிகள் அனைத்தும் இந்தத் தேர்தலை இலக்கு வைத்த காய்நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளன.

வடமாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.டி.பி.யின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை முதன்மை வேட்பாளராகக் களம் இறக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. டக்ளஸ் தலைமையில் இறக்கப்படும் குழுவினர் ஈ.பி.டி.பி.யின் வீணைச் சின்னத்தில் போட்டியிடுவார்களா அல்லது ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவார்களா என்பதையிட்டு திட்டவட்டமான தீர்மானம் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

டக்ளஸைப் பொறுத்தவரையில் தமது கட்சியின் வீணைச் சின்னத்தில் போட்டியிடுவதைத்தான் விரும்புவதாகத் தெரிகின்றது. பொதுத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டாலும், மாகாண சபைத் தேர்தல் என்று வரும் போது தனது தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என டக்ளஸ் விரும்புவதாகத் தெரிகின்றது. அதற்காகத்தான் அவர் மற்றைய கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்தி தன்னைப் பலப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆளும் கட்சியைப் பொறுத்தவரையில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதையே விரும்புவதாகத் தெரிகின்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் தலைமையிலான குழுவினர் ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டே கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அதேபோல டக்ளஸ் தலைமையிலான குழுவினரும் ஆளும் கட்சியின் சின்னத்தில் களம் இறங்க வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் விரும்பமாக இருக்கின்றது. இதற்கான அழுத்தங்களையும் அரசாங்கம் கொடுத்துவருகின்றது.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் பேச்சுக்கு அழைத்த டக்ளஸ், தமிழ்க் கட்சிகளின் பேரவை என்ற பெயரில் புதிய கூட்டணி ஒன்றை அமைத்துக்கொண்டுள்ளார். டக்ளஸின் கோரிக்கையை ஏற்று பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் அவருடன் பேச்சுக்களை நடத்தின. பொது உடன்பாடு ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பாகவே இந்தப் பேச்சுக்கள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாகாண சபைக்கான தேர்தலை இலக்குவைத்ததாகவே இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகள் அனைத்தும் டக்ளஸின் அழைப்பை ஏற்று பேச்சுக்களுக்குச் சென்றிருந்தன. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இதில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் கடிதம் ஒன்று கையளிக்கப்படவிருக்கின்றது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இந்தப் பேரவையில் இணைந்து கொள்வதற்கான சாத்தியங்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கூட்டமைப்பு கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கில் அமோக வெற்றி பெற்று 14 ஆசனங்களைக் கைப்பற்றியது. அதற்கு அடுத்ததாகவுள்ள ஈ.பி.டி.பி. வசம் 3 உறுப்பினர்கள்தான் உள்ளனர். இந்த நிலையில் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என சம்பந்தன் கருதுவதாகத் தெரிகின்றது. இவ்வாறான கூட்டணி ஒன்றை அமைத்துக்கொள்வதற்காக மக்கள் தமக்கு ஆணை தரவில்லை என கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் கருத்தத் தெரிவித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

தேவானந்தாவுடன் பேச்சு நடத்தி தமிழ்க் கட்சிகளின் பேரவையில் இணைந்திருக்கும் கட்சிகளைப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலானவை கடந்த பொதுத் தேர்தலில் 500 வாக்குகளைக் கூடப் பெற்றுக்கொள்ளாதவை. மக்களால் நிராகரிக்கப்பட்ட மக்களுடைய செல்வாக்கைப் பெற்றிருக்காத கட்சிகள். குறிப்பிட்ட கட்சிகளால் சில நூறு வாக்ககளைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாது என்பது உண்மையாக இருந்தாலும், இவ்வாறான கூட்டணியை அமைத்துக்கொள்வதன் மூலம் பல கட்சிகளின் ஆதரவு தமக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்வதன் மூலம் வாக்காளர்கள் மத்தியில் உளவியல் ரீதியான தாக்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகின்றது.

தேவானந்தா அமைத்திருக்கும் இந்தக் கூட்டணியில் ஒன்பது அரசியல் கட்சிகள் இணைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் அரசியல் கட்சிகளின் பேரவை என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டமைப்பு, இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்கான வழிவகைகளைக் காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் என உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும் வடக்கு கிழக்கில் அதிகளவு வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களைக் கைப்பற்றிக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம்பெறாத வகையில் இவ்வாறான கூட்டமைப்பு எதுவும் அர்த்தமற்றவையாக இருக்கும் என்பதால் தேர்தலை நோக்கமாகக் கொண்டே இவ்வாறான கூட்டமைப்பை டக்ளஸ் உருவாக்குகின்றார் என்பதே உண்மை.

வட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்., கிழக்கு முதலமைச்சர் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், சித்தார்த்தன் தலைமையிலான புளொட், எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சி, ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவற்றுடன் மற்றும் சில சிறிய கட்சிகள் இந்த அமைப்பில் இணைந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. மனித உரிமைகளுக்கான அமைப்பு ஒன்றே இவற்றை இணைப்பதன் பின்னணியில் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் இந்தக் கூட்டமைப்பில் இணைந்துகொள்ளுமாறு தேவானந்தா அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்க் கூட்டமைப்பு தந்திரோபாயமாக இதில் பங்குகொள்ளாமல் தவிர்த்துக்கொண்டது. இந்தக் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னணியில் மறைமுகமான நிகழ்ச்சி நிரல் ஒன்று இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா ஏற்கனவே தெரிவித்திருக்கின்றார். உடனடியாக தேர்தலை நோக்கமாகக் கொண்டுதான் இந்த அமைப்பு உருவாக்கப்படுவதாக தேவானந்தா காட்டிக்கொள்ளாத போதிலும், அவரது மறைமுக நோக்கம் அதுதான் என தமிழ் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்ற போது, தேர்தலை நடத்துவதற்கு உகந்த தருணம் வரவில்லை எனத் தெரிவித்து அதனைப் புறக்கணித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்கப்போவதில்லை. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அதனைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தமிழ்க் கூட்டமைப்பு செயற்பட்டுவருவதாகத் தெரிகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் மாகாண சபைக்கான தேர்தலிலும் தம்மால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை கூட்டமைப்புக்குக் கொடுத்திருக்கின்றது.

வடமாகாண சபைக்கான தேர்தலில் டக்ளஸ் தேவானந்தபவுடன் நேரடியாக மோதப்போவது இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான்! இது நேரடி மோதலாக மட்டும் அன்றி கடுமையான ஒரு மோதலாகவும் இருக்கும். ஏனெனில் இதில் வெற்றி பெறுவதற்காக அரசாங்கமும், டக்ளஸ் தரப்பும் தமது வளங்களை முழுமையாகக் குவித்துப் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பூராயத்துக்காக

கொழும்பிலிருந்து சத்தியன்.

http://www.pooraayam.com/news-analysis/607-2010-08-10-06-55-04

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.