Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுக்கு போதனை செய்த தமிழன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு போதனை செய்த தமிழன்.

ஏழாவது நிமிடத்திலிருந்து அவரது உரை ஆரம்பமாகிறது.

யாரும் மொழி பெயரக்க்க கூடியவரகள் இருந்தால் அவரது உரையை தமிழாக்கம் செய்யவும்.

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு நிமிடங்களில் மகிந்தவுக்கு உச்சந் தலையில் உறைக்கக் கூடியதாக என்ன சொல்ல முடியும் என்று ஒரு கேள்வி கேட்டால், அதற்கு இந்த அரிய உரை தான் பதில். அமெரிக்க ரெக்சாஸ் மாநிலத்தின் ஹுஸ்ரன் நகரில் மகிந்த கூட்டத்துக்கு அங்குள்ள சிங்களவர்கள் விருந்து வைத்திருக்கிறார்கள். அதே நகரில் தலை சிறந்த குடிவரவுத் துறை வழக்கறிஞராக இருப்பவர் தான் ஜோர்ஜ் வில்லி என அழைக்கப் படும் இந்த யாழ்ப்பாணத் தமிழர். தனது உழைப்பினால் சிறி லங்காவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் நல்ல நிலையில் இருக்கும் இவரை "லங்கா மாதாவின்" புத்திரன் என்று அறிவிப்பாளர் பெருமையோடு பேச அழைத்த பிறகும், எங்கள் சில சராசரி "தமிழ்ப் புத்தி ஜீவிகள்" போல சிங்கள/சிறி லங்கா விசுவாசம் காட்டாமல், உண்மையோடு மகிந்தவுக்கு மெல்ல ஊசியேற்றியிருக்கிறார் ஜோர்ஜ் வில்லி. உரையின் சுருக்கமான தமிழ் வடிவம் இது தான்:

"யாழ்ப்பாணம் எனது பிறந்த ஊர். பத்து வயதாக இருக்கையில் நான் கொழும்புக்கு குடி பெயர்ந்தேன். எனது மனைவி சாந்தி பிறந்தது பதுளையில், வளர்ந்தது தியத்தலாவையில், அவரது தந்தை (சிறி லங்கா) இராணுவத்தில் மதிப்பு மிக்க கப்ரனாக இருந்தவர். இப்படி எங்கள் தந்தை, தாய் பாட்டன் பாட்டிகள் புதைக்கப் பட்ட புண்ணிய பூமி என் தாய்நாடு. யாழ்ப்பாணத்தின் வேம்பு வாசனையை நான் நுகர்ந்திருக்கிறேன். பள்ளிக்குச் செல்லும் சிறுவனாக, கொழும்பின் வீதிகளில் காய்த்துக் குலுங்கும் ஜம்புப் பழங்களின் சிவப்பு நிறத்தை என் வெள்ளைச் சட்டையில் அணிந்திருக்கிறேன். நன்கு பழுத்து விட்ட பலாப்பழங்களை காகங்கள் கொத்தித் தின்னும் போது வெளிப் படும் பலாப்பழ சுகந்தமும் அதன் சுவையும் அனுபவித்திருக்கிறேன் என் தாய் நாட்டில். ஆனால், எழுபதுகளில் நான் சிறி லங்காவை விட்டு வெளியேறிய பிறகு அந்த நாட்டில் ஆழமான வேதனையும், யுத்தமும், துன்பமும் தலை விரித்தாட ஆரம்பித்தன. வயலுக்கு நீர் பாய்ச்சிய புனித நதி மகாவலி, தமிழர்களதும் சிங்களவர்களதும் குருதியைப் பாய்ச்சியது. இங்கே அமெரிக்காவில் இருந்த படி சொர்க்கபுரியான என் தாய்நாடு ஆழமான நரகத்தினுள் மெல்ல மெல்லப் புதைந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். யார் இவ்வழிவுக்கெல்லாம் காரணம் என்று தெரியாது, எவரையும் பழி சொல்லும் காலமும் இப்போது கடந்து விட்டது. மேதகு ஜனாதிபதி அவர்களே, நீங்கள் துட்டகைமுனுவின் வழிவந்தவராக இருக்கக் கூடும். எனது மக்கள் (தமிழர்கள்) எல்லாளன் வழித் தோன்றல்கள். துட்டகைமுனு எவ்வாறு எல்லாளனை கண்டுலம் எனப்படும் தனது யானையிலிருந்து போர் செய்து வெற்றி கொண்டான் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். இன்று வரை இலங்கைத் தீவை முதன் முதலில் ஒன்றாக்கி ஆட்சி செய்த மன்னனாக துட்டகைமுனு நினைவுகூரப் படுகிறான். இன்னுமொரு விதத்திலும் துட்டகைமுனு இன்றுவரை நினைகூரப் படும் ஒருவனாக இருக்கிறான். போரில் இறந்த தன் மதிப்பிற்குரிய எதிரியான எல்லாளனுக்கு துட்டகைமுனு நினைவாலயம் கட்டி, அவ்வழி செல்லும் எல்லோரும் மறைந்த எல்லாளனுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டவன் தான் துட்டகைமுனு. இது துட்டகைமுனுவை ஒரு கனவானாக மட்டுமன்றி தமிழர்களை போரின் வெற்றிக்குப் பிறகு எப்படி நீதியாக ஆளவேண்டுமென்று அறிந்த ஒரு நல்ல அரசியல் வாதியாகவும் காட்டி நிற்கிறது. மேதகு ஜனாதிபதி அவர்களே, இனி வரும் காலங்களில் உங்களை 21 ஆம் நூற்றாண்டின் துட்டகைமுனு என்று குழந்தைகள் பாடத்தில் படிக்கக் கூடும். ஆனால், துட்டகைமுனுவின் பெருமையை நீங்களும் அணிந்து கொள்ள வேண்டுமெனில், நீங்களும் ஒரு நினைவாலயம் கட்ட வேண்டும். நீங்கள் வகுக்க வேண்டிய நீதியான கொள்கைகளும் அவற்றின் அமுலாக்கமுமே உங்கள் நினைவாலயமாக இருக்க வேண்டும்.1958 இன் தவறுகளைத் திருப்பியும் நடைபெற அனுமதிக்காதீர்கள். பல்கலை. செல்லவேண்டிய தமிழ் இளைஞர்களைத் தடுக்காதீர்கள்.தமிழர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக உணரச் செய்யாதீர்கள். தமிழர்களின் மொழியை, மதத்தை மதித்து நடவுங்கள். மேதகு ஜனாதிபதி அவர்களே, தமிழர்களைப் பற்றி உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும்: அவர்களது மொழி அவர்களுக்குக் கடவுள் மாதிரி. உலகிலேயே, தங்கள் மொழியின் பால் பெரும் பற்றுக் கொண்ட இனக்குழுமங்கள் மிகச் சிலவே உண்டு, அவர்களுள் தமிழர்களும் அடங்குவர்.நீங்கள் ஒரு வழக்கறிஞர். உங்கள் ஆரம்ப காலத்தில் நீங்கள் ஒர் துடிப்பான மனித உரிமை ஆர்வலராக இருந்தவர். இப்போது, உங்களிடம் அதிகாரம் இருக்கிறது. நாடுகளை வென்ற பின்னர் உரோமாபுரிக்குத் திரும்பி வரும் ஜூலியஸ் சீசர் போல இருக்கும் உங்களுக்கு யாரும் எதையும் மறுக்கப் போவதில்லை. உங்கள் பாராளுமன்றத்திடம், நீங்களும் நானும் சட்டக் கல்லூரியில் பயின்ற சோல்பரி யாப்பில் இடம்பெற்ற நல்ல சரத்துக்களை சட்டமாக இயற்றும் படி கேளுங்கள். தேவையெனின் என் சேவையை இலவசமாகவே தரத் தயாராக இருக்கிறேன். தமிழ் மக்கள் உடையின்றி உணவின்றித் தவிக்கிறார்கள். தங்களுக்கென ஒரு இடத்தை நீங்கள் தருவீர்கள் என எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு உரிய இடம் (சிறி லங்காவில்) கிடைப்பதை உறுதி செய்யுங்கள். நீங்கள் ஒரு பிரபாகரனைக் கொன்றிருக்கிறீர்கள், இன்னுமொரு பிரபாகரன் உருவாக அனுமதிக்காதீர்கள். இனி வரும் பிரபாகரன்களை ஆயுதங்களால் அழிக்க முடியாது. இதய சுத்தியாலும், ஞானத்தினாலும் மட்டுமே அது முடியும்.தம்மபதத்தில் கூறியுள்ள படி, வெறுப்பை வெறுப்பினால் இல்லாதொழிக்க முடியாது, வெறுப்பை அன்பினால் மட்டுமே இல்லாதொழிக்க முடியும். நீங்கள் கற்ற இந்த புத்த தர்மத்திற்கேற்ப செயலாற்றுங்கள். மேதகு ஜனாதிபதி அவர்களே, இந்த நகரை விட்டு நீங்கள் சிறி லங்காவுக்குத் திரும்பிச் செல்லும் போது, எனக்கு உறுதி கொடுங்கள்: நாளை பள்ளிக்குச் செல்லும் பையனின் வெள்ளைச் சட்டையை ஜம்புப் பழங்கள் மட்டுமே சிவப்பாக்க வேண்டும். காலை நேரக் காகங்கள் பலாப்பழங்களை மட்டுமே கொத்திக் குதற வேண்டும். வேப்பமரங்களில் அதன் வாசனையைத் தவிர வேறெதுவும் தொங்க விடப்படக் கூடாது. மேதகு ஜனாதிபதி அவர்களே, எங்களை சொர்க்கத்திற்குத் திரும்பவும் கூட்டிச் செல்லுங்கள், சொர்க்கத்திற்குத் திரும்பவும் கூட்டிச் செல்லுங்கள்! நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.