Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சனைக்கான அரசியற் களம்: மாறுபட்ட அணுகுமுறைகளுக்கான தேவை குறித்து...

Featured Replies

இனப்பிரச்சனைக்கான அரசியற் களம்:

மாறுபட்ட அணுகுமுறைகளுக்கான தேவை குறித்து...

ஈழத் தமிழர்களின் அரசியல் வழிமுறைகள், அரசியல் நிலைப்பாடுகள், அவர்களுடைய அரசியற் சிந்தனைகள், அரசியல் எதிர்பார்ப்புகள், அரசியல் நம்பிக்கைகள் போன்றவற்றைப் பற்றிய ஆய்வுகளுக்கு இன்று மிக அவசியமான ஒரு நிலை தோன்றியிருக்கிறது.

இதைப் பார்ப்பதற்கும் விளங்கிக் கொள்வதற்கும் கடந்தகால இலங்கைத் தமிழர்களின் அரசியல் வழிமுறைகள், அரசியல் நிலைப்பாடுகள், அவர்களுடைய அரசியற் சிந்தனைகள், அரசியல் எதிர்பார்ப்புகள், அரசியல் நம்பிக்கைகள், இவற்றிற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியற் செயற்பாடுகள் போன்றவற்றைப் பற்றிய ஆய்வுகள், மதிப்பீடுகள், விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் எல்லாம் இன்று அவசியமாக உள்ளன.

இதற்கு, கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியற் செயற்பாடுகள் தொடர்பாகவும் அரசியல் வழிமுறைகள் பற்றியும் அரசியல் நிலைப்பாடுகள் சம்மந்தமாகவும் அந்த அரசியலை மேற்கொண்ட தரப்பினர்களைப் பற்றியும் பல சந்தர்ப்பங்களிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன என்பதை இங்கே முதலில் நாம் நினைவு கூரவும் கவனத்திற் கொள்ளவும் வேண்டும்.

ஏனெனில், இவ்வளவு காலமும் எத்தகைய விமர்சனங்களும் முன்வைக்கப்படாமல், மாற்றுக் கருத்தாடல்கள் எதுவும் நிகழாமல், இப்போதுதான் 'மாபெரும் உண்மைகளை'க் கண்டறிந்தமாதிரி நாம் எந்த ஆய்வையும் செய்ய முடியாது. ஏற்கனவே பலரும் இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் அரசியற் போராட்டங்களைப் பற்றியும் அவர்களுக்கான அரசியல் வழிமுறைகளைப் பற்றியும் தாராளமாகப் பேசியிருக்கிறார்கள்.

ஆனால், அவை உரிய முறையில் மதிக்கப்படவில்லை. உரிய கவனங்களைப் பொதுப்பரப்பில் பெறவுமில்லை. இதற்கு தமிழ் மக்களின் பொதுவெளியில் நிகழ்த்தப்பட்ட வன்முறை முக்கியமாகும்.

இந்த வன்முறையானது, தனியே ஆயுத ரீதியான வன்முறை மட்டுமல்ல. ஆயுதத்தையும் விடக் கூர்மையான புறக்கணிப்பு மற்றும் அவமதிப்பு, திரிவு படுத்தல், எதிர்த்தல், கவனிக்காது விடல், அவதூறு பரப்புதல், எதிரிகளுடன் இணைத்துப் பேசுதல், மாற்றுக் கருத்துகளை முன்வைப்போரைச் சந்தேகித்தல் என்ற வகையில் அமைந்த மாபெரும் வன்முறையாகும்.

எனவே, இந்தக் கொடிய வன்முறையினால், நமது எல்லாக் கண்களும் (அகக் கண் உட்பட) குருடாகி விட்டன. இதனால் ஏற்பட்ட விளைவுகள் கொஞ்சமல்ல. அவை சாதாரணமானவையுமல்ல. இந்தக் குறைபாடுகளினால், தமிழர்கள் பெரும் இரத்தக்களரியிலும் பெருந்தோல்வியிலும் பெரும் இழப்பிலும் பெரும் பின்னடைவிலுமே தள்ளப்பட்டிருந்தனர்.

கடந்த அறுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றில் பல தலைமுறைகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. பல தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றபோதும் தமிழ் மக்களுடைய அரசியல் என்பது நெருக்கடி நிலையிலேயே உள்ளது. இன்று அது இன்னும் பலவீனமானதாக இருக்கிறது.

இப்பொழுது தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுப்பதற்காக பல கட்சிகள் இருக்கின்றன. பல தலைவர்களும் இருக்கிறார்கள். பல அணிகளும் உள்ளன. நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலும் பல தரப்பினர் இயங்கி வருகின்றனர். ஆனால், இவை எவையும் நம்பிக்கை அளிக்கக்கூடிய அரசியற் செயற்பாட்டை உடையனவாகத் தென்படவில்லை.

முக்கியமாக மாற்று உபாயங்கள், புதிய சிந்தனைகள், தோல்வியிலிருந்தும் பின்னடைவிலிருந்தும் கற்றுக் கொண்ட வரலாற்றுப் பாடங்களைப் படிப்பினையாகக் கொள்ளல் போன்ற அரசியல் வழிமுறைகளைக் கடைப்பிடிப்போராகத் தெரியவில்லை. குறிப்பாக தலைமைத்துவப் பண்போடு எந்தத் தரப்பும் இப்போது தமிழர் அரசியலில் இல்லை என்றே சொல்ல வேண்டும். மாண்புடைய தலைமைத்துவப் பண்பை எவரொருவர் பெற்று மேலெழுகின்றாரோ அவரின் பின்னால், அனைவரும் அணிதிரள்வர். அங்கே பல முரண்பாடுகளும் தணிந்து விடும். அந்தத் தலைமைத்துவம் இதையெல்லாம் செய்யும் வல்லமையைப் பெற்றிருக்கும். ஆனால், இதுதான் இன்றில்லையே.

கடந்த அறுபது ஆண்டுகால ஈழத்தமிழரின் அரசியலில் சரிபிழைகளுக்கு அப்பால் செல்வாக்குச் செலுத்திய சக்திகள் 'தனித் தமிழரசு' என்ற நிலைப்பாட்டை உடையனவாகவே இருந்துள்ளன. இடதுசாரி இயக்கங்களும் கட்சிகளும் தமிழர்களின் அரசியற் பரப்பில் மிகப் பரந்த செல்வாக்கைச் செலுத்தவில்லை. அதாவது, தேர்தல் வெற்றிகளைத் தீர்மானிக்கும் அளவுக்கு இடதுசாரிகளின் செல்வாக்கு உயரவில்லை. ஆகவே ஈழத்துக்கு ஆதரவான - ஈழத்தின் பெயரைத் தமது கட்சியின் பெயரிலும் இயக்கத்தின் பெயரிலும் தாங்கிய தரப்புகளே தமிழர் அரசியலில் அதிக செல்வாக்கைச் செலுத்தியிருக்கின்றன. இப்போதும் இதுதான் நிலைமை.

இந்தச் சக்திகள் சில பிரதான அடிப்படைகளை வலியுறுத்தின.முக்கியமாக,

1. வடக்குக் கிழக்கு என்பது வரலாற்று ரீதியாக தமிழர்களின் - தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலப்பகுதியாகும். ஆகவே இந்த இரண்டு மாகாணங்களும் இணைந்ததே தமிழர் தாயகம் என்பதாகும் எனக் கூறிவருபவை.

2. அந்தத் தாயகத்துக்கு - தமிழீழ அரசுக்கு - தலைநகர் திருகோணமலையாகும் என்று வலியுறுத்தியவை.

3. வடக்குக் கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஏற்கப்பட முடியாதவை என்பதுடன் அவை இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கத்தையுடையவை. எனவே அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டியவை என்ற நிலைப்பாட்டையுடையவை.

4. தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்கள் கல்வியில் திட்டமிட்டுப் புறக்கணிக்கணிக்கப்படுகிறார்கள் என்று கூறுபவை.

5. வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இராணுவ விரிவாக்கம் நடைபெற்றுள்ளது. இந்தப் படை விரிவாக்கத்தின் மூலம் மக்களுடைய காணிகள் பறிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மக்கள் தொடர்ச்சியாக இராணுவ அச்சுறுத்தலுக்குள்ளும் இராணுவ அடக்குமுறைக்குள்ளும் வைத்திருக்கப்படுகிறார்கள் என்று சொல்லுபவை.

6. வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இருக்கும் தமிழ்மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அத்துடன் நாட்டில் அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள் என்று கண்டிப்பவை.

7. வடக்குக் கிழக்கின் அபிவிருத்தி திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறது என்று கூறுபவை.

இந்த மாதிரியாக ஏராளம் குற்றச்சாட்டுகளும் அபிப்பிராயங்களும் தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுத்த – முன்னெடுக்கின்ற தரப்புகள் சொல்லி வந்துள்ளன. இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.இவற்றில் அடிப்படையான உண்மைகள் உண்டு. ஆனால், இந்த நிலைமைகளுக்கு முற்று முழுதாக இதுவரையில் ஆட்சியில் இருந்த சிங்கக் கட்சிகளோ ஆட்சியாளர்களோ மட்டும் பொறுப்பாளிகள் இல்லை. இந்த நிலைமைக்கு தமிழ்த் தரப்பும் பிரதான காரணமாக – முக்கிய பாத்திரமாக இருந்துள்ளது. அதிலும் ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் சிங்களத்தரப்புக்கு அதிக வாய்ப்பை அளித்ததில் தமிழ்த்தரப்புக்குப் பெரும் பங்குண்டு.

இன்றுகூட - இவ்வளவு இழப்புகளுக்குப் பின்னரும் - இத்தனை காலப் போராட்டத்துக்குப் பின்னரும் கூட - இதுதான் நிலைமை.இதை இந்தப் பத்தி மிகச் சுருக்கமாக விவரிக்க முற்படுகிறது. அதிலும் இன்றைய நிலையில் மீண்டும் ஒரு 'அபாய அரசியல்நிலை' தோற்றுவிக்கப்படும் சூழலில் இதைப் பற்றிப் பேசியே ஆகவேணும்.

இலங்கையில் 1950 களில் இருந்த நிலைமைக்கும் இன்றுள்ள நிலைமைக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் - வித்தியாசங்களைச் சரியாக ஆராய்ந்து பார்த்தால், தமிழர்கள் எவ்வளவு தூரம் பின்னடைந்திருக்கிறார்கள் என்று தெரியும். குறிப்பாக தமிழர் தாயகம் என்று சொல்லப்படும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அம்பாறை, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பகுதியான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் போன்ற பகுதிகள் உட்படக் கணிசமான இடங்களில் சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் உருவாகிவிட்டன.(இப்போது மன்னாரின் தென்மேற்குப் பகுதிகளில் இதேமாதிரியான குடியேற்றத் திட்டங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. அத்துடன் வன்னியிலும் சில பகுதிகளில் இந்த மாதிரியான குடியேற்றத் திட்டங்களுக்கான வாய்ப்புகள் ஏற்படலாம்).இந்தக் குடியேற்றத்திட்டங்கள் இன்று சக்திமிக்கனவாக மாறிவிட்டன. அதிலும் தேர்தலில் விகிதாரசார ரீதியிலும் பிரதிநிதித்துவ ரீதியிலும் செல்வாக்கைச் செலுத்தக்கூடிய அளவுக்கு அவை பலம் பெற்றும் விட்டன.

குறிப்பாக தமிழர்களின் தலைநகர் - தமிழீழத்தின் தலைநகர் என்று சொல்லப்படும் திருகோணமலை மாவட்டத்தில் இன்று தமிழர் பிரதிநிதித்துவம் கேள்விக்குரிய ஒன்றாகியுள்ளது. கடந்த தேர்தலின்போது, இந்த மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமை வேட்பாளராகிய திரு. இரா. சம்பந்தன் மட்டுமட்டான நிலையில் (தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்றமாதிரியான நிலையில்) வெற்றிபெற்றார் என்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும்.இந்தச் சிங்களக் குடியேற்றத்திட்டங்களுக்கு எதிராக தமிழர்களின் அரசியற் போராட்டங்களும் ஆயுதப் போராட்டமும் நடந்திருந்தாலும் குடியேற்றத் திட்டங்கள் வளர்ச்சியடைந்ததை அவற்றால் தடுக்க முடியவில்லை. (ஆயுதப் போராட்டம் இந்தக் குடியேற்றத்திட்ட ஏற்பாடுகளை விரிவடைய விடாது கடந்த இருபது ஆண்டுகளாகத் தடுத்திருக்கிறது. இல்லையெனில் வடக்கில் கணிசமான பகுதிகளில் இது விரிவாக்கமடைந்திருக்கலாம்).உண்மையில் ஆயுதப் போராட்டத்துக்கு வெளியே இருந்த தமிழ்த்தரப்பின் அரசியல் நடவடிக்கைகளால் இந்தக் குடியேற்றத் திட்டங்களைக் கட்டுப்படுத்தவோ தடுத்து நிறுத்தவோ முடியவில்லை.

பாராளுமன்ற நடவடிக்கை மூலம் அல்லது பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் மூலம் சிங்களக் குடியேற்றத் திட்டத்தை நிறுத்தவும் முடியவில்லை. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணவும் முடியவில்லை.பதிலாக இந்தக் குடியேற்றத்தை ஒரு பிரச்சாரக் கருவியாக்கி, பிரச்சாரத்துக்கான காரணியாக்கி அரசியல் ஆதாயத்தையே இவர்கள் தேடிக் கொண்டனர்.

இப்போதும் இதுதான் கதை. அதேவேளை, இவர்களின் இந்த மாதிரிப் பலவீனமான அரசியல் வழிமுறைகளால்தான் அநேக தவறுகள் நடந்திருக்கின்றன. இது குற்றச்சாட்டல்ல. உண்மை.கடந்த அறுபது ஆண்டுகளில்தான் சிங்களக் குடியேற்றம் என்பது தமிழர் பகுதிகளில் தீவிர நிலையை அடைந்தது. அதிலும் குறிப்பாக பிரித்தானியர்களின் வெளியேற்றத்தை அடுத்தே இந்தப் பிரச்சினை இலங்கையில் தலையெடுத்தது.இன்று இனப்பிரச்சினை என்பதில் இந்தக் குடியேற்றத் திட்டங்கள் மிகப் பெரிய சிக்கலையும் நெருக்கடியையும் உருவாக்கியிருக்கின்றன. இந்தக் குடியேற்றத் திட்டங்களில் இருந்து பின்வாங்க முடியாத ஒரு நிலைமை சிங்களத் தரப்பில் உருவாகியிருக்கிறது.

அதேவேளை இந்தக் குடியேற்றத் திட்டங்களை ஏற்றுக் கொள்ளமுடியாத நிலை தமிழ்த்தரப்பில் இருக்கிறது. இந்த இருவேறு முரண் நிலைகளில் தீர்வு காணமுடியாத அளவுக்கு இந்தப் பிரச்சினை மேலும் மேலும் சிக்கலடைந்து செல்கிறது.இந்த விவகாரத்தை எப்படி அணுகலாம் என்பதைக் குறித்து இதுவரையில் இலங்கையில் எந்தத் தரப்பினரிடமிருந்தும் பொருத்தமான நடைமுறைக்குச் சாத்தியமாகக் கூடிய முன்வைப்புகள் எவையும் வைக்கப்படவில்லை.பதிலாக ஒரு தரப்பு இதை எதிர்ப்பதிலும் அடுத்த தரப்பு இதை ஆதரிப்பதிலும் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், இதில் அதிகமாகப் பாதிக்கப்படுவது தமிழ்பேசும் மக்கள்தான். ஏனெனில், அவர்களுடைய பிரதேசங்களில்தான் இந்தக் குடியேற்றத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. அத்துடன் தமிழ் பேசும் மக்களின் காணிகளும் பொது இடங்களும் பறிபோயும் கொண்டிருக்கின்றன.இந்த இடத்தில் தமிழ் அரசியற் தரப்பினர்கள் இந்தக் குடியேற்றத் திட்டங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம். பல போராட்டங்களை முன்னின்று நடத்தலாம். அப்படிச் செய்யும்போது இந்தக் குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பாரிய சிக்கல்களை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும். குடியேற்ற நடவடிக்கையும் இடைஞ்சலுக்குள்ளாகும். இது அரசியல் ரீதியில் பெரியதொரு வெற்றியைத் தமிழ் பேசும் மக்களுக்குத் தரும்.ஆனால், இதுவரையில் அப்படியொரு போராட்டத்தை எந்தத் தமிழ்த்தலைமையும் நடத்தவில்லை. இப்போதும் இதற்கு யார் தயார்? என்ற நிலையே காணப்படுகிறது. ஆகையால் குடியேற்றத் திட்டங்களை நிறுத்துவது எப்படிச் சாத்தியப்படுத்தப்படும்? அல்லது இப்படியே அரசியல் ஆதாயங்களுக்காக இன்னும் பல ஆண்டுகள் இப்படியே சொல்லப்பட்டும் கண்டித்துக் கொண்டும் இருக்கப்படுமா?

வடக்குக் கிழக்கு என்பது வரலாற்று ரீதியாக தமிழர்களின் - தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலப்பகுதியாகும். ஆகவே இந்த இரண்டு மாகாணங்களும் இணைந்ததே தமிழர் தாயகம் என்று கூறப்பட்டாலும் இதை மறுதலித்து சிங்கள அதிகாரத் தரப்பினர் வடக்குக் கிழக்கைத் தனித்தனி மாகாணங்களாகப் பிரித்துள்ளனர்.இந்தப் பிரச்சினையிலும் தமிழ் பேசும் மக்கள் மிகப் பின்னடைந்த நிலையிலேயே இருக்கின்றனர். இந்தப் பிரிப்பை சட்டரீதியாக மறுதலிக்கும் அளவுக்கு தமிழ்பேசும் மக்களின் அரசியற் கட்சிகளும் இல்லை. மக்கள் அமைப்புகளும் இல்லை. வடக்குக் கிழக்கில் சிங்கள ஆதிக்கத்துக்கு எதிராக திரட்சியுறவேண்டுமெனில் அதற்குத் தமிழ்பேசும் மக்களின் ஒன்றுபடுதல் அவசியமாகும். அதாவது, தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒருமுகப்பட்டிருத்தல் வேண்டும்.ஆனால், தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவு நிலை என்பது பாதகமாகவே உள்ளது. இது வடக்குக் கிழக்கின் பிரிப்பை விரும்புகின்ற சிங்களத் தரப்புக்கு வாய்ப்பானதாகும்.

இப்போதுகூட வடக்குக் கிழக்கைத் தமது தாயகம் என்றும் இணைந்த வடக்குக் கிழக்கே அரசியற் தீர்வில் ஏற்கப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்படப் பல தமிழ்த்தரப்பினரும் சொல்லி வருகின்றனர்.ஆனால், இவர்கள் வடக்கு கிழக்கு இணைப்புக்கு முக்கியமாக இருக்கின்ற முஸ்லிம்களைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை. அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்தப் பேச்சுக்களில் வடக்குக் கிழக்கின் நிலைமைகளைப் பற்றியோ இந்தப் பிராந்தியத்தின் விவகாரங்களைப் பற்றியோ பேசும்போது அங்கே முஸ்லிம்கள் இல்லை.இந்த நிலைமையில் எப்படி ஒரு நிரந்தரத் தீர்வுக்குச் செல்ல முடியும்? முஸ்லிம்களைத் தவிர்த்து விட்டு எப்படி இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணமுடியும்? முஸ்லிம்களை உள்ளடக்காத எந்தப் பேச்சும் பயனற்றது. மட்டுமல்ல இந்த விடுபடல் என்பது மேலும் மேலும் விரிசலையே தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் உருவாக்கும்.தமிழர்கள் முஸ்லிம்களைப் பற்றிச் சிந்திக்கத் தவறும்போதெல்லாம் முஸ்லிம்கள் அரசாங்கத்தின் பக்கமாகவும் தமிழர்களை விட்டும் தனி ஒழுங்கொன்றைப் பேண முற்படுவர். அது தவிர்க்க முடியாதது.ஆகவே வடக்குக் கிழக்கு இணைப்பு என்பது முதலில் நடைமுறைக்குச் சாத்தியமாகக் கூடியவாறு, சிந்திக்கப்படவேண்டும். அந்தச் சிந்தனையில் நிச்சயமாக முஸ்லிம்களுக்குச் சமநிலை வழங்கப்படுவது அவசியம். அத்துடன், வடக்குக் கிழக்கில் இருக்கின்ற சிங்களவர்கள் தொடர்பாக நடைமுறைக்குப் பொருத்தமான திட்டமொன்றும் வகுக்கப்படுவது அவசியம்.

தமிழர்களின் தாயகம் என்பது, வெறும் வார்த்தைகளிலும் கற்பனையிலும் இருப்பதல்ல. அது தொடர்பாக யதார்த்தத்தில் எட்டப்படக்கூடிய வரைவு என்ன என்பது தொடர்பாகவும் அதன் அமைவு எவ்வாறானது என்பதைப் பற்றியும் தெளிவான பார்வைகள் அவசியம்.நீண்டகாலமாக தமிழர்களின் தாயகத்தைப் பற்றிப் பேசியும் கனவு கண்டும் வருகின்ற பலருக்கு அதுதொடர்பாக இருக்கின்ற பிரச்சினைகளைப் பற்றியும் இந்தப் பிரச்சினைகளின் இறுக்கமான நிலைமையைப் பற்றியும் புரிவதில்லை.வடக்குக் கிழக்கில் நிலைகொண்டிருக்கும் படையினர் என்றாவது ஒரு நாள் - ஏதாவது ஒரு அரசியற் தீர்மானத்தின் பொருட்டு வெளியேறலாம். ஆனால், சிங்களக் குடியேற்றங்கள் அப்படிப்பட்டவையல்ல. அவை சட்டப்பிரச்சினைகளோடு சம்மந்தப்பட்டவையாகிவிட்டன. ஆகவே அவற்றைத் தீர்வின்போது எப்படிச் சாதகமாகச் சாத்தியமாக்குவது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.தீர்வு தொடர்பாக உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டாலும் அதை நடைமுறைப்படுத்தும்போது இந்தப் பிரச்சினை பெரிதாகவே இருக்கும். ஆகவே இதைப் பற்றிய புரிதல் அவசியமானது. இந்தப் புரிதல் இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் கதைத்துக் கொண்டிருந்த பழைய கதையையே பெரும்பாலான தமிழர்கள் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் இன்னமும் திருகோணமலையைத் தலைநகராகவே கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருகோணமலையில் - தமிழர்களின் தலைநகரில் - பாடல் பெற்ற திருத்தலநகரில் - ஒரு பிரதிநிதித்துவத்துக்கே பெரும்பாடுபடுகின்றனர் தமிழர்கள் என்பது கவனத்திற்குரியது.

திருகோணமலையைத் தலைநகர் ஆக்குவதெனில் அதை எப்படிச் சாத்தியப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும். பொருத்தமான சிந்தனையும் சிறந்த திட்டமிடலும் இல்லாத வெறும் கற்பனைகளும் விருப்பங்களும் ஒரு போதுமே யதார்த்தமாகுவதில்லை. ஆகவே, இதைக் குறித்து தமிழ்பேசும் மக்கள் சிந்திக்க வேண்டும்.

அடுத்த விடயம், வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இராணுவ விரிவாக்கம் நடைபெற்றுள்ளது. இந்தப் படை விரிவாக்கத்தின் மூலம் மக்களுடைய காணிகள் பறிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மக்கள் தொடர்ச்சியாக இராணுவ அச்சுறுத்தலுக்குள்ளும் இராணுவ அடக்குமுறைக்குள்ளும் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்பது. இது முற்றிலும் உண்மையான ஒரு நிலைமை. இந்தப் படை விரிவாக்கம் ஆயுதப் போராட்டத்துக்கு எதிர்வினையாக உருவாகிய ஒரு நிலைமையின் விளைவு என்பதை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளத்தான் வேணும். ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் வீழ்ச்சி என்பது மிகப் பெரிய சிக்கலான நிலையை இந்த இடத்தில் உருவாக்கியிருக்கிறது.இப்பொழுது எங்கேயும் படைகள் என்ற நிலை உருவாகியுள்ளது. படையினர் இல்லாத ஊர்களும் இல்லை. படையினர் இல்லாத நகரங்களும் இல்லை. படையினர் இல்லாத கடற்கரையோ காடோ என்று வடக்குக் கிழக்கில் ஒரு இடத்தையும் யாரும் காட்ட முடியாது. இந்தப் படைகள் நிரந்தர முகாம்களை அமைத்துள்ளன. இன்னும் படை முகாம்களின் விரிவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.பல கிராமங்களும் நகரங்களும் படையினரின் முழுமையான ஆதிக்கத்தின் கீழுள்ளது. குறிப்பாக உயர்பாதுகாப்பு வலயம் என்று சொல்லப்படும் பகுதிகளும் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் போன்ற எல்லைப் பகுதிகளும் இதில் முக்கியமானவை.

சிங்களத் தரப்பின் படைகளைத் தமிழ்த்தரப்பின் துப்பாக்கிகளாலும் பீரங்கிகளாலும் துரத்த முடியாமற் போய்விட்டது. இனி இவ்வாறு விரிவாக்கம் பெற்ற படைத்தரப்பை விவேகத்தினாலும் அரசியல் வியூகத்தினாலுமே அகற்ற முடியும். அவ்வாறே அகற்றவும் வேண்டும்.ஆகவே இன்று முற்றிலும் மாற்றப்பட்ட புதிய அணுகுமுறைகள் தமிழ் பேசும் மக்களின் அரசியலில் கையாளப்படவேண்டும். இதைத் தவிர்த்துவிட்டு வடக்குக் கிழக்கில் பிரச்சினைகளைப் பற்றியும் தமிழ் பேசும் மக்களின் தீர்வைப் பற்றியும் பேசவும் முடியாது. சிந்திக்கவும் முடியாது.

http://ponguthamil.com/aayirampookal/aayirampookalcontent.asp?sectionid=10&contentid={160B1556-2D55-42D3-B9C3-5F50D9A40ABF}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.