Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசியவாதியின் சொந்த தேசியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசியவாதியின் சொந்த தேசியம் -முதல் பகுதி

- யமுனா ராஜேந்திரன்

- குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக

Pen_CI.jpg

இரு பெரும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அப்பால் ஈழப்பிரச்சினை குறித்து நிறைய எழுதி வந்திருக்கிற, மாவோகால சீனசார்பு கொண்ட மார்க்சியரான எஸ்.வி.ராஜதுரை தொடர்ந்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடையதும் ஈழம் தொடர்பான பாரா முகங்களைக் கடுமையாக விமர்சித்து வந்தவர். ஈழம் தொடர்பாக அவர் எழுதி வந்த எழுத்துக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்துக் கடுமையான விமர்சனங்களையே கொண்டிருந்தன. தனித் தமிழீழத்தை அவர்கள் அங்கீகரிக்காதது குறித்து தனது கடுமையான விமர்சனங்களை ராஜதுரை தொடர்ந்து முன்வைத்து வந்திருக்கிறார். திருநாவுக்கரசு மற்றும் சேரன் போன்றோர் எழுதிய ஈழப் போராட்டம் குறித்த அரசியல் மற்றும் கவிதை நூல்களைத் தமிழகத்ததில் எஸ்.வி.ராஜதுரைதான் பதிப்பித்தார். மனித உரிமைப் பிரச்சினையினாலும் இன்னபிற அரசியல் மாறுபாட்டினாலும் விடுதலைப் புலிகள் மீது கொண்ட விமர்சனத்தினால், ‘அவரது நாட்டில்’ செய்வதற்கு அவருக்கு நிறைய வேலை இருப்பதாலும் அவரது ‘சர்வதேசீயம்’ அவரை முள்ளிவாய்கால் பேரழிவின் பின் எதுவும் எழுதவியலாமலேயே செய்துவிட்டது.

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பதுதான் சர்வதேசீயத்தின் ஆன்மகீதம். முதலாளித்துவம் என்பது உலகவயமான அமைப்பு. எனவே உலகவயமான தொழிலாளர்களின் ஒற்றுமையே உலகவயமான முதலாளித்துவத்தை முறியடித்து உலகவயமான கம்யூனிச சமூகத்தை உருவாக்கும். அது அரசுகளற்ற சர்வதேசீயத்தையும் உருவாக்கும். ஓரு நாட்டிலுள்ள தொழிலாளர்களின் நலன் என்பது இதனால் பிற நாடுகளிலுள்ள தொழிலாளர்களின் நலன்களோடும் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே உலகு தழுவிய அடிப்படையிலான சர்வதேசீய அமைப்பும் போராட்டமுறையும் தேவைப்படுகிறது. மார்க்ஸ் துவங்கிய முதலாம் அகிலம் முதல் லெனின் பங்கு பற்றிய இரண்டாம் அகிலம், பிற்பாடாக ரஸ்யப் புரட்சி தோற்றுவித்த புதிய நிலைமைகளில் தோன்றிய மூன்றாம் அகிலம் போன்றன இந்த சர்வதேசீயத்தை நடைமுறைப்படுத்துவது என்பதற்கான திட்டங்களை வகுத்த அமைப்புக்களாகவே இருந்தன.

சோவியத் யூனியனது தோற்றத்தின் பின், தொழிலாளி வர்க்க சர்வதேசீயம் என்பது காலனியாதிக்க தேசீய விடுதலைப் போராட்டத்தனை, காலனியாதிக்க அரசுகளான உலக முதலாளித்துவ அரசுகளுக்கு எதிரான போராட்டம் என்பதால் நிபந்தனையின்றி அதனை ஆதரித்தது. இந்த விடுதலைப் போராட்டங்கள் இரண்டு குணாம்சங்களைக் கொண்டிருக்குமாறு சோவியத் யூனியன் பார்த்துக் கொண்டது. முதலாவதாக இந்த நாடுகள் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் சோவியத் யூனியன் சார்பு நிலைமையும் கொண்டிருக்குமாறு பார்த்துக் கொண்டது. இரண்டாவதாக தொழிலாளிவர்க்க சர்வதேசீயம் என்பதனை, ஒரு வழிப்பாதையாக, சோவியத் யூனியனது இருத்தலுக்கு உகந்ததான ஒரு நிலைப்பாட்டைக் காலனியாதிக்க எதிர்ப்புத் தொழிலாளி வர்க்கம் ஏற்க வேண்டும் என்பதனையும் ஆக்கியது. உள்நாட்டில் தொழிலாளிவர்க்கம் தனது அதிகாரத்தைப் பெறுவது, தனது இருத்தலுக்காகப் போராடும்போது, தொழிலாளிவர்க்க சர்வதேசீயக் கடமையைத் தான் ஆற்றுவது என்பதற்கு மாற்றாக, சோவியத் யூனியனைக் காப்பதற்காக ஒவ்வொரு நாட்டினதும் தொழிலாளி வர்க்கம் தமது சொந்;தப் போராட்டத்தைக் கைவிடும் நிலைக்கு இதனால் வந்து சேர்ந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியசோசலிச அரசுகளின் கீழும், காலனியாதிக்க எதிர்ப்பு தேசிய அரசுகளின் கீழுமிருந்த தொழிலாளிவர்க்கம் இதனால் கடும் ஒடுக்குமுறைக்கும் அழிவுக்கும் ஆளாகியது. இதனை, சோவியத் யூனியனின் வெளிநாட்டுக் கொள்கைக்கு விசுவாசமாக இருப்பதுதான் தொழிலாளிவர்க்க சர்வதேசீயமாக வியாக்யானப்படுத்தப்பட்டது எனலாம். இந்த நிலைபாடு சமாதான சகவாழ்வு எனும் கொள்கையாகவும் பின்னாட்களில் ஆகியது.

இது குறித்த இடதுசாரி விமர்சனமாக மாவோயிசத்தைப் பார்த்தவர்கள் உண்டு. மூன்றாவது உலகக் கோட்பாட்டை முன்வைத்த மாவோ, அதனது நீட்சியில் அமெரிக்காவை விட சோவியத் யூனியன்தான் ஆபத்தானது என்ற அதீத எல்லைக்கும் மாவோ வந்து சேர்ந்தார். சோவியத் யூனியனை விடவும் அதிபுரட்சிக்காரராகக் கோரிக் கொண்ட மாவோ, அமெரிக்காவுடன் நேரடியாக அரசியல் பொருளியல் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளத் துவங்கினார். சோவியத் யூனியனாவது வரலாற்றுரீதியில் குறைந்தபட்சம் அமெரிக்க-மேற்கத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்தங்களை ஆதரிக்கும் நாடாகவாவது இருந்திருக்கிறது. ஆனால் சோவியத் எதிர்ப்பு எனும் போர்வையில் மாவோ கால சீனா ஏகாதிபத்திய ஆதரவு அரசியலையே மேற்கொண்டிருந்தது. மத்தியக் கிழக்கில் அமெரிக்க தாசனான ஈரான் மன்னர் ஷாவை மாவோ ஆதரித்தார். ஆப்ரிக்கக் கண்டத்தில் அங்கோலா பிரச்சினையில் அமெரிக்க ஆதரவாளரான, தென் ஆப்ரிக்க நிறவெறி அரசின் ஆதரவாளனான சாவிம்பியை அகஸ்டினோ நெட்டோவுக்கு எதிராக மாவோ ஆதரித்தார். தென் அமெரிக்காவில் சிலியில் கம்யூனிஸ்ட்டான அலண்டேவின் ஆட்சி அமெரிக்க உளவுப்படையின் ராணுவக் கவிழ்ப்பினால், இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டபோது, அமெரிக்க ஆதரவுக் கொடுங்கோலன் பினோசேவை மாவோவின் சீன அரசு ஆதரித்தது. சிலியிடமிருந்து நிக்கல் இறக்குமதியையும் மாவோவின் சீனா பெற்றுக் கொண்டது. இவையனைத்தும் மாவோவின் காலத்தில்தான் நடந்தன. சீனாவினது இருத்தலைத் தக்கவைத்துக் கொள்கிற நோக்கில், சீனாவினது வெளிநாட்டுக் கொள்கையின் பகுதியாகத்தான் மாவோவின் சீனா இந்த நிலைபாடுகளை மேற்கொண்டது.

அறுபதுகளிலும் எழுபதுகளிலுமான சீன-சோவியத் முரண்பாட்டை இன்றைய நிலையில் வைத்துப் பார்க்கிறபோது, இரண்டு நாடுகளும் தத்தமது தேசிய நோக்கங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உலகப் புரட்சியாளர்களைக் காவு கொண்டிருக்கிறது எனும் நிலைபாட்டுக்குத்தான் நம் வரமுடியும். டெங்சியாவோ பிங்கின் காலத்தில் சீனா வியட்நாமின் மீது போர்தொடுத்ததோ அல்லது மே 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பேரழிவின் போது இலங்கைக்கு சீனா ஆயுதம் வழங்கியதோ திடீரென்று நேர்ந்த மாற்றங்கள் அல்ல. மாவோ காலத்திலிருந்து சீனா தொடர்ந்து கடைப்பிடித்து வந்த தனது தேசிய நலன்களின் அடிப்படையிலான வெளிநாட்டுக் கொள்கையின் தொடர்ச்சிதான் சீனாவின் இன்றைய நிலை. வியட்நாமின் மீது படையெடுத்ததற்கு சீனா சொன்ன காரணம், சீன இனத்தவர் வியட்நாமில் துன்புறுத்தப்படுகிறார்கள், அவர்களைக் காப்பதற்கத்தான் நாம் படையெடுக்கிறோம் என்பதுதான். போல்பாட்டின் இறுதிக்காலத்தில்; அமெரிக்காவும் சீனாவும் சேர்ந்துதான் அவரை ஆதரித்தன. இன்று பின்திரும்பிப் பார்க்கிறபோது சோவியத்-சீன-வியட்நாமிய முரண்பாடுகள் என்பது அவரவரது தேசிய நலன்களின் பாற்பட்டது தானேயொழிய உலகப் புரட்சியாளர்களின் நலன்களின் பாற்பட்டது என்று சொல்ல முடியாது.

முழு இலத்தீனமெரிக்க இடதுசாரிகளையும் எதிரியாக்கிக் கொண்டு, தமது நாட்டின் இடதுசாரிகளையே வேட்டையாடிய சைனிங்பாத் கெரில்லாக்களைக் கொண்டாடிய மாவோவின் சீனா, எல் ஸால்வடார் புரட்சி இயக்கமான எப்எம்எல்என் ஐ திரிபுவுவாத இயக்கம் என்றது. சே குவேராவின் பொலிவிய நடவடிக்கையில் தனது ஆதரவை மறுத்த ரஸ்ய சார்பு கம்யூனிஸ்ட் கட்சி சே குவேராவை பொலிவியன் அல்லாத அன்னியன் என்றது. சேவின் கெரில்லா நடவடிக்கையில் ஆரம்பத்தில் பங்கு பற்றி அதனை விட்டோடிய மாவோயிஸட்டுகள் குவேராவையும் தோழர்களையும் பொலிவிய ராணுவத்தி;ற்குக் காட்டிக்கொடுத்தார்கள். இதனால்தான் சே குவேரா தனது கண்டம் தழுவிய புரட்சிக்கு சோவியத் யூனியனையோ அல்லது சீனாவையோ நம்பியிருக்கவில்லை. சே குவேராவின் மரணத்தைக் கூட சோவியத் யூனியன் மற்றும் சீன வெளிவிவகாரக் கொள்கைகளின் துரோகத்தினால் நிகழ்ந்தது என இன்று நாம் சொல்ல முடியும். அன்று முதல் இன்று வரையிலும் மாவோயிராகத் தன்னை முன்னிறுத்திவரும் எஸ்.வி.ராஜதுரை இந்த விடயங்கள் குறித்து என்ன கூறுகிறார்?

பாதுகாப்பு நலன்கள் என்ற முழக்கத்தின் கீழ்தான் ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் விரிவாக்க நோக்கத்தை விரிவு செய்து வந்துள்ளன. சோசலிச நாடுகளும் கூட தமது தவறான நடவடிக்கைகள் சிலவற்றை நியாயப்படுத்த இந்த முழக்கத்தைப் பயன்படுத்தியதுண்டு (ஈழப் பேராட்டமும் தேசபக்தியும் கம்யூனிஸ்ட்டுகளும் : எஸ்.வி.ராஜதுரை : முதல் பதிப்பிற்கான முன்னுரை : 21 டிசம்பர் 1987).

1987 ஆம் ஆண்டு இப்படிச் சொல்கிற எஸ்.வி.ராஜதுரை, சரியாக 22 ஆண்டுகளின் பின் என்ன சொல்கிறார்?

மாவோ காலத்தில் அதனது அயல் உறவுக் கொள்கைகள் அனைத்தும் சோசலிசத் தன்மை வாய்ந்தவையாக இருந்தன என்று கூறமுடியாது. உலகம் முழுவதும் முதலாளியக்; கட்டமைப்பு இருந்தச் சூழலில், அந்தக் கட்டமைப்புக்குள் சில சமரசங்களைச் செய்துகொண்டுதான் சீனா தனது நாட்டில் சோசலிசத்தை உருவாக்க வேண்டியிருந்தது

எஸ்.வி.ராஜதுரை இப்படிச் சொல்கிறபோது, இயல்பாகவே எழும் இரண்டு கேள்விகளுக்கு அவர் பதில் காண மறுத்துவிடுகிறார்.

முதல் கேள்வி : வெளிநாட்டில் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவும், உள்நாட்டில் தனது பொருளியல் நலன்களுக்காகவும் செயல்படும் ஒரு நாடு, அந்த நாட்டுக்குள் கட்டுவது சோசலிசமாக இருக்குமா?

இரண்டாம் கேள்வி : அப்படியே மாவோ தனது சீனநாட்டில் சோசலிசத்தைக் கட்டினாலும், அவரது ஏகாதிபத்திய ஆதரவு நடவடிக்கைகளால், அந்தந்த நாடுகளில் உள்ள புரட்சியாளர்கள் அழித்தொழிக்கப்படுவது குறித்து அவரது ‘புரட்சிகரக்’ கோட்பாடு என்ன சொல்கிறது?

இந்த இரண்டு கேள்விகளில் இருந்தும் எழும் மிகப் பிரம்மாண்டமான மூன்றாவது கேள்வி இதுதான் : இப்படியான நிலைமையில், தத்தமது நாடுகளில் தமது புரட்சிகர இருப்பையும் தமது நடவடிக்கைகளையும் அழித்தொழிக்க உதவும் சீனப் புரட்சியை, அது சோசலிசப் புரட்சியாகவே இருந்தாலும் எதற்காக பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள புரட்சியாளர்கள் ஆதரிக்க வேண்டும்?

இந்த மூன்று கேள்விகளும் அந்தரத்தில் இருக்க, முள்ளிவாய்க்கால் பேரழிவு நடப்பதற்குக் கொஞ்சம் முன்பாக எஸ்.வி.ராஜதுரை இப்படி எழுதுகிறார் :

சீனா ஏன் இலங்கையில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு நவீன, வலுவான போர் ஆயுதங்களை வழங்கியிருந்தது? எல்லாம் அதனது சொந்த நலன்களை முன்னிட்டுத்தான். (ஈழத் தமிழ் மக்களும் நாடாளுமன்றத் தேர்தலும் : உயிரெழுத்து : மே 2009)

சீனா, மாவோ முதல் இன்று வரையிலும் உலகப் புரட்சிகர இயக்கங்களுக்குச் செய்துவருகிற துரோகங்களுக்குக் காரணம் என்ன? உலகம் முழுவதும் முதலாளியக்; கட்டமைப்பு இருந்தச் சூழலில், அந்தக் கட்டமைப்புக்குள் சில சமரசங்களைச் செய்துகொண்டுதான் சீனா தனது நாட்டில் சோசலிசத்தை உருவாக்க வேண்டியிருந்தது என மாவோவின் செயல்படுகளை மட்டும் வெறுமனே தந்திரோபாயம் என நிரல்படுத்துவது நேர்மையான வாதமாகவா இருக்கிறது?

சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்ட வேண்டும், அதற்காக மத்தியக் கிழக்குப் புரட்சியாளர்கள் விலை தரவேண்டும். சீனாவில் மாவோ சோசலிசத்தைக் கட்ட வேண்டும், அதற்காக ஆப்ரிக்க இலத்தீனமெரிக்கப் புரட்சியாளர்கள் விலை தரவேண்டும். இதன் பெயர் புரட்சிகர சர்வதேசீயமா அல்லது தத்தமது நாட்டின் நலன் பேணும், அரசியல்- பொருளியல் நலன் பேணும் வெளியுறவுக் கொள்கை அரசியலா? அனைத்துக்கும் மேலாக, உலகின் ‘பிற’ புரட்சியாளர்களின் சவத்தின் மேல்தான் சீனாவின் சோசலிசம் கட்டப்பட வேண்டுமானால், அத்தகைய சோசலிசம் பற்றி எதற்காகப் ‘பிற’ புரட்சியாளர்கள் கவலைப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

மாவோ என்ன காரணத்திற்காக சிலியின் சர்வாதிகாரி பினேசோவை ஆதரித்தாரோ அதே காரணத்திற்காகத்தான், மகிந்த ராஜபக்சேவுக்கு இன்றைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு நவீன ஆயுதங்களைக் கொடுத்துத் தமிழர்களைக் கொலை செய்திருக்கிறது. இங்கிருந்துதான் துவங்குகிறது ஈழப் பிரச்சினையில் எஸ்.வி.ராஜதுரையில் நேர்ந்த பின்னாளைய அரசியல் மாற்றம்.

இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளைக் கடந்துவிட்ட நமக்கு முன், 1991 இல் துவங்கிய பின்-சோவியத், 2001 இல் துவங்கிய பின்-செப்டம்பர், 20009 மே 18 துவங்கிய பின்-முள்ளிவாய்க்கால் அனுபவங்களைப் பெற்றுள்ள நமக்கு முன்னால், நாம் இதுவரை நம்பிய சோசலிசம் குறித்த, உலகு குறித்த, இனத்தேசிய விடுதலைப் போராட்டம் குறித்த அடிப்படையான தந்திரோபாயக் கேள்விகள் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கின்றன. மார்க்சியர்கள் முதல் விடுதலைப் புலிகள் வரை இந்த யதார்த்தங்களுக்கு முகம் கொடுத்துத்தான் தீர வேண்டும்.

ஈழ விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த எண்பதுகளின் ஆரம்பத்தில் எஸ்.வி.ராஜதுரை இவ்வாறு எழுதிச் செல்கிறார் :

இன்றுள்ள சூழலில், ஈழப் புரட்சிகர மக்கள், சிங்கள மக்களும் சேர்ந்து ஒரே புரட்சிகர அமைப்பில் சேர்ந்தது சமூக மாற்றத்துக்காகப் போராட முடியாது என்பது உண்மை. மெய் நிலைமைகள் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தப் போராடுமாறு அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றன. ஆனால் சிங்கள மக்களும் தம்மை ஒடுக்கிவருகின்ற இனவெறி அரசக்கு எதிராகக் கிளர்ந்தெழுகையில்தான் ஈழத் தமிழர்,மலையகத்தமிழர் இருவரது விடுதலையம் எளிதாகும்;, விரைவுபடுத்தப்படும். சிங்கள மக்களின் நம்பிக்கையைப் பெறுவது இன்று கடினமானதுதான். ஆயினும் இத்திசை நோக்கிய முயற்சிகள் இன்றே தொடங்கப்பட வேண்டும். விடுதலை என்பது எளிதாகச் சாதிக்கக் கூடியது அல்ல. தைப்பொங்கல் என்று நாள் குறித்து அடையப்பெறுவதும் அல்ல. இந்திய அரசு உட்பட யாராலும் வெள்ளித்தட்டில் வைத்து வழங்கப்படக் கூடியதுமல்ல! (இலங்கைத் தமிழ்ச் சிக்கல் : ஒரு வரலாற்றியல் ஆய்வை நோக்கி : 1985)

எண்பதுகளின் ஆரம்பத்தில் ‘நல்லெண்ணத்தின்’ அடிப்படையில், ‘இலங்கை யதார்த்தத்துக்கு ஒவ்வாத’ ஒரு அரசியல் அபிலாஷையை முன்வைத்த எஸ்.வி.ராஜதுரை, 22 ஆண்டுகளின் பின் 2007 ஆம் ஆண்டும் அதே கிளிப்பிள்ளை வாதத்தினையே முன்வைக்கிறார் :

ஏறத்தாள 22 ஆண்டுகளுக்குப் பின்னும் விடுதலைப் புலிகள் இயக்கம் சிங்கள மக்களிடையே உள்ள முற்போக்கான, புரட்சிகர சக்திகளுடன் ஏதேனும் ஒரு வகையான உறவை வளர்க்க முயற்சி செய்யவில்லை. சிங்கள வெறியர்களின் இனவாதத்திற்கு எதிரான விடுதலைப்புலிகளின் பிரச்சாரங்களில் தொடர்ந்து தமிழ் இனவாதம் தான் இடம்பெற்று வருகிறது. சிறிலங்கா அரசின் சிங்கள தேசிய வெறிக்கு எல்லா சிங்கள மக்களும் அடிமையாகிவிட்டார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஈழத்தமிழர்களில் கணிசமான பகுதியினர் சிங்களப் பகுதிகளில் வாழ்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அத்தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், புலிகளின் தாக்குதலைச் சந்திக்க நேருமே என்ற அச்சமல்ல, மாறாக சிங்கள மக்களின் சகிப்புணர்வே.

அதே போல விடுதலைப்புலிகள் 1989 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றிய பிறகும், மனித உரிமைப் போராளிகள் சிலரை ஒழித்துக் கட்டிய பிறகும், அந்த இயக்கத்தின் மீது எனக்கு எந்தவிதமான தனிப்பட்ட பற்றும் இல்லாது போயிற்று. தமிழ் ஈழம் கிடைக்கப்பெற்றால் எத்தகைய பண்பாட்டு அரசியல் சமூகப் பொருளாதார மாற்றங்களை அந்த இயக்கம் ஏற்படுத்தும் என்பது குறித்த தகவல் ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆகவேதான் விடுதலைப் புலிகள் பற்றிய எந்த ஆதரவு நிலைப்பாட்டையும் நான் 1989க்குப் பிறகு தெரிவிக்கவில்லை.

எனினும், விடுதலைப் புலிகள் பற்றிய விமர்சனம் எனும் பெயரால், ஈழத்தமிழர்களின் உரிமைகளையே மறுத்து, ஒற்றை ஆட்சி முறைக்குள் அவர்களைப் பிணைத்து வைக்க இந்திய அரசும் பார்ப்பனியச் சக்திகளும் செய்துவரும் முயற்சியை நான் கண்டனம்செய்து வந்திருக்கிறேன். விடுதலைப் புலிகள் பற்றிய எனது நிலைபாடு என்ன என்பதை தோழர் தியாகு, பெரியார் திராவிடர் கழகத்தினர் போன்றோர் நன்கு அறிவர். நமது நாட்டில் செய்ய வேண்டிய வேலைகள் நமக்கு நிறைய உள்ளன. பெ. மணியரசனைப் போல விடுதலைப் புலிகளை ஆதரித்து (அதுவும் பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், கொளத்தூர்.மணி போன்றோரைப் போலல்லாமல்) வெகு ஜாக்கிரதையாகப் பேசி அதனையே தொழிலாகக் கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை. இரண்டாவதாக, எனது தமிழ்-தமிழன் அடையாளத்தை நிலை நிறுத்த நான் விடுதலைப்புலிகள் ஆதரவாளனாக மாற வேண்டியதுமில்லை. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகவும் தமிழ் பண்பாட்டின் காவலர்களாகவும் காட்டிக் கொள்ளும் சில அரசியல்வாதிகள், அனைத்திந்தியப் பெருமுதலாளி வர்க்கத்தின், பன்னாட்டு மூலதனத்தின் பாதுகாப்புக் கோட்டையாக விளங்கும் இந்திய அரசாங்கத்தைத் தூக்கி நிறுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது வேறோர் விஷயம் (எஸ்.வி.ராஜதுரை : மார்க்சியம் - பெரியாரியம் - தேசியம் : ஜூலை 2007)

2007 ஆம்ஆண்டு இதனை எழுதிய எஸ.வி.ராஜதுரை 2009 ஆம் ஆண்டிலும் மீளவும் இதே விஷயங்களோடு, புவிகளின் ராணுவவாதம் குறித்தும் அவர்களது ஜனநாயக மறுப்பும் குறித்து கீழ்வருமாறு சொல்கிறார் :

விடுதலைப்புலிகள் ராணுவவாதத்திலேயே மூழ்கி அரசியலைப் பின்னுக்குத் தள்ளிவிட்டனர் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான அவர்களது எதிர்விணைகள் சிங்கள முஸ்லீம் பாமர உழைக்கும் மக்களையும் சிங்களப் பேரழினவவாதத்திpற்குத் தாக்குப் பிடித்து நிற்கிற சிங்கள இடதுசாரிச் சக்திகளையும் அந்நியப்படுத்திவிட்டன. தமிழ் மக்களிடையே அவர்கள் உருவாக்கியிருந்த மேலாண்மை ஜனநயாக வழிமுறையின் மூலமாக அன்றி ராணுவ வலிமையின் மூலமே சாதிக்கப்பட்டதாக இருந்தது. 1991 ஆண்டுக்குப்பிற்கு உலக அளவில் ஏற்பட்ட பெரும்மாற்றங்கள அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளவோ உலக மக்களின் அபிப்பிராயத்தைத் தமக்குச் சாதகமாகத் திரட்டவோ செய்யவில்லை. மாறாக ‘சர்வதேசச் சமூகம்’ எனத் தவறாக அழைக்கப்படும்; ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளின் நல்லெண்ணத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தது. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் எனத் தனது பதாகையில் பொறித்திருககும் அந்த அமைப்பின் அரசியல், பொருளாதார சமூகக் கொள்கைகள் என்ன என்பது ஓரு போதும் வெளியுலகத்திற்குத் தெளிவாக விளக்கப்பட்டதில்லை ( ஈழப் போராட்டமும் வர்க்கப் பிரச்சினையும் : எஸ்.வி.ராஜதுரை : தமிழர் முன்னணி முதல் இதழ் : தமிழ்நாடு : மே 2009 ).

மேற்கொண்ட இரு மேற்கோள்களையும் எதிர்கொள்வதற்கு முன்பாக இலங்கை அரசியலில் உள்ள இனக்குழக்கள், அவர்களைப் பிரதநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகள் தொடர்பாக நாம் ஒரு நிலைபாட்டுக்கு வருவது நல்லது. சிங்கள மக்களுக்கு இடையிலும், முஸ்லீம் மக்களுக்கு இடையிலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நேசசக்திகளை அல்லது புரட்சிகர சக்திகளைத் தேடுவது என்பது சாத்தியமாகவா இருக்கிறது? இலங்கை சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி போன்றவற்றில் ஈழத்தமிழர்களின் நேசசக்திகளைக் காண்பது என்பது சாத்தியமில்லை. இடதுசாரி-இனவாதக் கட்சியான ஜேவிபி தமிழ் மக்களின் நேசசக்தி என ராஜதுரை கருதுவார் என நினைக்கவில்லை. மகிந்த அரசில் இடம்பெற்றிருக்கிற சம சமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி போன்ற இலங்கை-சிங்கள தேசபக்தக் கட்சிகள் ஈழத்தமிழர் நேசசக்திகள் ஆவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இந்த இடதுசாரி அமைப்புக்களின் கீழுள்ள தொழிலாளி; வர்க்கம் இனவாதம் பீடிக்கப்பட்டிருக்கிறது. மிஞ்சிய ஒரேயொரு கட்சியான நவ சமாஜக் கட்சி ஈழத்தமிழர்பால் நேசம் கொண்டிருக்கிறது. அவருடன் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் நேசம் கொண்டுதான் இருக்கிறார்கள். இதுவன்றி மிஞ்சியிருக்கிற சிங்கள மனித உரிமையாளர்கள், பத்திரிக்கையாளர்களுடன் ஈழத்தமிழர் நேசம் கொண்டுதான் இருக்கிறார்கள். நவ சமாஜக் கட்சி, மனித உரிமையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மிகவும் சிறுபான்மையினர். பாராளுமன்ற அதிகாரம் அற்றவர்கள். இவர்கள் தொடர்ந்து அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். காணாமால் போகச் செய்யப்படுகிறார்கள். பெரும்பாலுமானோர் நாடுவிட்டு வெளியேறிவிட்டார்கள். இந்தச் சிறுபான்மையினர் குறித்து, அவர்களின் மீதான ஒடுக்குமுறை குறித்து, இலங்கை அரசுடன் இருக்கிற கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஏதேனும் ஆதரவான நிலைபாடு எடுத்திருக்கிறதா? இல்லையே! சிங்கள அரசியல் தரப்பில் பின் எவரை ஈழத்தமிழர் தமது நேசசக்தியாகக் கொள்ள முடியும்? இலங்கை யதார்த்தத்தில் கால்பாவாத வெறும் சொல்லணிகள் எஸ்.வி.ராஜதுரையின் கோரிக்கைகள். தமிழ் இனப் பிரச்சினையை ஏகாதிபத்திய ஆதரவு எனப் பார்த்து, ஏகாதிபத்திய எதிர்ப்பாளனாக மகிந்த ராஜபக்சேவை முன்னிறுத்தும் தேசபக்த அரசியல்தான் இலங்கை இடதுசாரிகளின் அரசியல். இதில் ராஜதுரை பேசுகிற நேசசக்திகளைத் தேடுவது என்பது வெறும் கானல் நீர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/70739/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசியவாதியின் சொந்த தேசியம் - இரண்டாம் பகுதி

- குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

Pen.Edit_CI.JPG

முஸ்லீம்களிடையிலான நேசசக்திகளைத் தேடுவது குறித்த பிரச்சினைக்கு வருவோம். இலங்கை முஸ்லீம் அரசியலை பொதுவாக பாதிக்கப்பட்டவரின் அரசியலாகப் பார்ப்பது என்பதுவே பிழையான அரசியல் என்றே கருதுகிறேன். இந்துத்துவ அடிப்படைவாதிகளுக்கு எதிர் நிலையில் தற்பாதுகாப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிற இந்திய முஸ்லீம்களின் நிலையுடன் இலங்கை முஸ்லீம்களை ஒப்பிட முடியாது. இலங்கை முஸ்லீம் அரசியல் எப்போதுமே தமது இருப்பிற்காக சிங்கள ஆளும் தரப்புடன் சமரசம் செய்துகொள்கிற, பல வேளைகளில் ஈழத்தமிர் மீதான ஒடுக்குமுறைகளைப் பாராமுகமுடன் நோக்குகிற பேரம் பேசும் அரசியலாகவே இருந்து வருகிறது. இலங்கை அரசின் நீதியமைச்சர் ஹக்கீம், ஆளுனர் அலவி மௌலானா போன்றவர்கள் இந்த அரசியல் நிலைபாட்டின் குறியீடுகளாக இருக்கிறார்கள். ஆளும் தரப்பினருடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிற அவர்களால் தமக்கான அரசியல் தீர்வை அவர்களிடம் வலியுறுத்துவதன் மூலமே பெறமுடியும். அத்தகைய அரசியலை ஒருபோதும் அவர்கள் மேற்கொண்டது இல்லை. யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது என்பதன் பின்னுள்ள அரசியல் காரணிகளை நிதானமாக எவரும் அலசுவதில்லை, மாறாக முஸ்லீம்கள் எனும் ஒரு சமூகத்தையே குற்றவாளிகளாக்கி அவர்களை வெளியேற்றிய விடுதலைப்புலிகளின் பாரிய அரசியல் தவறு மட்டுமே எப்போதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஓடுக்கப்பட்ட இனம் தமக்கு வெளியே நேசசக்திகளைத் தேடுவது என்பதும், ஒடுக்கும் இனம் சார்ந்தவர்கள் ஒடுக்கப்பட்ட இன மக்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்பதனையும் இலங்கைச் சூழலில் வெறுமனே ஜடவயமாகப் பிரயோகிக்க முடியாது. இந்த வகையில் அரசியல் யதார்த்தமற்ற ஒரு பார்வையையே எஸ்.வி.ராஜதுரை முன்வைத்து வருகிறார்.

கொழும்பில் சிங்கள மக்கள் விடுதலைப் புலிகளுக்குப் பயந்து தமிழர்களைத் தாக்காமல் இருக்கவில்லை, மாறாக அவர்களிடம் சகிப்புத்தன்மை இருக்கிறது என்கிறார் ராஜதுரை. எஸ்.வி.ராஜதுரை சகிப்புத்தன்மை எனும் வார்த்தையை பிரக்ஞையுடன்தான் பாவித்திருக்கிறாரா என்பதில் எனக்குச் சந்தேகம் இருக்கிறது. சகித்துக் கொள்கிற அளவுக்குத் தமிழர்கள் என்ன அசுரர்களா? கொழும்பில் தமிழர்கள் மீளவும் தாக்கப்படாமல் இருப்பதற்கு சிங்களவர்களின் சகிப்புத்தன்மை மட்டும் காரணைமல்ல, எண்பதுகளின் பின் இலங்கைப் பிரச்சினை அதிக அளவில் சர்வதேசீய மயப்பட்டிருப்பது காரணம். இனக்கொலை என்பதனை முன்வைத்துத்தான் புதிய நாடுகள் உருவாகி இருக்கிறது என்பது ஒரு காரணம். நேரடியிலாக அல்லாமல் யாப்பின் அடிப்படையிலேயே தமிழர்களை ஓரங்கட்ட முடியும் என்பது ஒரு காரணம். முழு உலகமும் இலங்கையைக் கண்காணித்துக் கொண்டு இருக்கிறது என்பதும் காரணம்.

விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றமை குறித்து எஸ்.வி.ராஜதுரையுடன் எவரும் முரண்பட அவசியமில்லை.

தமிழ் ஈழம் கிடைக்கப்பெற்றால் எத்தகைய பண்பாட்டு அரசியல் சமூகப் பொருளாதார மாற்றங்களை அந்த இயக்கம் ஏற்படுத்தும் என்பது குறித்த தகவல் ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆகவேதான் விடுதலைப் புலிகள் பற்றிய எந்த ஆதரவு நிலைப்பாட்டையும் நான் 1989க்குப் பிறகு தெரிவிக்கவில்லை என்கிறார் எஸ்.வி.ஆர். 2007 ஆம் ஆண்டு இதனை அவர் எழுதுகிறார். அவர் சொல்கிற 1989-1991 என்பது ஒரு முக்கியமான வரலாற்றுத் தருணம். எஸ்.வி.ராஜதுரைக்கே கூட மார்க்சியத்தின் எதிர்காலம் அல்லது இனியான சோசலிஷம் எத்தகையது என்பது குறித்த திட்டவட்டமான பார்வைகள் இருந்திருக்க முடியும் என நான் நினைக்கவில்லை. எஸ்.வி.ராஜதுரை அறியாமல் இருக்கிறார் என்பதற்காக விடுதலைப்புலிகள் என்னவிதமாக தமது அரசியல்-பொருளியல் பண்பாட்டு மாற்றங்களைக் கொண்டிருப்பார்கள் என அவர்கள் சொல்லாமலும் இருக்கவில்லை.

சோசலிசத்தினுள் தனிநபர் உரிமையையும் ஜனநாயகத்தையும் குர்திஸ் விடுதலை இயக்கத் தலைவரான அப்துல்லா ஒச்சலான் இத்தருணத்தில் பேசினார். தனது மார்க்சிய-லெனினியக் கடந்த காலத்தை கிழக்கு திமோர் விடுதலை இயக்கத்தின் தலைவர் குஸாமா விட்டுவிலகியதும் இத்தருணத்தில்தான். கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோவியத் யூனியனும், நிலவிய சோசலிசமும் வீழ்ந்த தருணமும் இதுதான். விடுதலைப் புலிகளின் அரசியல் பார்வையையும் இது மாற்றியமைத்தது. இன்னும் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் தாக்குதலுக்குப் பின்னான உலகில் விடுதலைப் புலிகளின் இலட்சிய சமூகத் திட்டம் முற்றிலுமாகவே மாறிப்போனது.

1983 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அரசியல் குழுவுக்காக அவர்களது மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளும் தமிழீழ விடுதலையும் என ஒரு அறிக்கையை எழுதி வெளியிடுகிறார் (Liberation Tigers and the Tamil Eelam Freedom Struggle : Political Committee of the Liberation Tigers of Tamil Eelam: 1983 : written by Anton S. Balasingham). அதில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

எமது முழமையான தந்திரோபாயம் என்பது தேசிய விடுதலையையும் வர்க்கப் போராட்டத்தையும் இணைப்பது, தேசியத்தையும் சோசலிசத்தையும் இணைப்பது, இதன் மூலம் இரு வகையிலும் எமது மக்களை விடுவிக்கும் ஒரு புரட்சிகரத் திட்டத்தை முன்வைப்பதாகும், தேசிய ஒடுகுடகுமுறையிலிருநதும், மனிதனை மனிதன் சுரண்டும் ஒடுக்குமுறையிலிருந்தும் விடுவிப்பதாகும். எமது சமூக உருவாக்கத்தில் தேசிய விமோசனத்தையம் சோசலிச மாற்றத்தினையும் உந்திச் செல்வதற்காக பரந்துபட்ட மக்களின் முற்போக்கான தேசிய உணர்வையும், பாட்டாளி வர்க்கப் பிரக்ஞையையும் கலக்கச் செய்வதுதான் எமது தந்திரேபாயமாகும்.

இவ்வாறு தமது எதிர்கால சமூகத்திட்டம் பற்றி வரையறுத்த விடுதலைப் புலிகள் 1989 இன் பின்னும் 2001 இன் பின்பும் தமது எதிர்காலச் சமூகத்திட்டத்தை மாற்றித்தான் அமைத்துக் கொண்டார்கள். அமெரி;க்க ராஜதந்திரப் பிரதிநிதியும் நோர்வே பேச்சுவார்த்தைகளின்; காலகட்டங்களில் அதில் ஈடுபட்டவருமான ரிச்சர்ட் ஆர்மிடேஜின் கேள்வியொன்றுக்கு பதிலிறுக்குமகமாக அன்டன் பாலசிங்கம் இவ்வாறு (Norwegian Peace Initiative : Anton Balasingham responds to US Ambassador : Tamil Net : 25 April 2003) சொல்கிறார் :

தாராளவாத ஜனநாயக மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளதாரத்திற்கு சாதகமாக இருப்போம் என்பதனை மட்டும்தான் நான் சொல்ல முடியும்.

இலங்கைக்குள் ஒரு பெடரல் அமைப்பினுள் ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசும் வேளையில்தான் அன்டன் பாலசிங்கம் இதனைச் சொல்கிறார். குறிப்பான பொருளாதாரக் கொள்கைகள் குறித்துப் பிற்பாடுதான் விரிவாகச் சொல்ல முடியும் என்பதனையும் அவர் பேசுகிறார். தொண்ணூறுகளின் பின் புதிதாதகப் பிறந்த எந்த நாடும் சோசலிச அரசியல் பொருளாதாரத்தைச் தேரவில்லை என்பதனை நாம் கவனம் கொள்வோமாயின் அன்டன் பாலசிங்கத்தில் நேர்ந்த மாற்றத்தினையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.

எஸ்.வி.ராஜதுரை பெரியாரிய ஆய்வாளர் எனும் அளவிலும், சாதிய ஒழிப்பில் கடப்பாடு கொண்டவர் எனும் அளவிலும், முஸ்லீம் மக்களின் மீதான ஒடுக்குமுறைகளையும் கவனம் கொள்பவர் எனும் அளவில் இப்பிரச்சினைகள் தொடர்பாக விடுதலைப்புலிகளின் கொள்கைகளையும் நடைமுறைகளையும் நாம் பார்ப்பதும் இங்கு பொருத்தமாக இருக்கும்.

விடுதலைப் புலிகள் 1980 ஆம் ஆண்டு துவக்கம் தமது கட்டப்பாட்டுப் பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை (banned caste descrimination and criminalised it) தடைசெய்திருந்த காரணத்தினால் சாதி தொடர்பான எந்த விவாதங்களையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. எண்பதுகளிலிருந்து தொண்ணூறுகளின் மத்திவரையிலும் சாதி-நிலம்-பெண்ணொடுக்குமுறை தொடர்பாக உள்ளுர் மத்தியஸ்தக் குழக்களின் உதவியுடன் வழக்குகளைக் கவனித்து வந்த விடுதலைப் புலிகள், 1994 ஆம் ஆண்டு தமிழீழ தண்டனை வழிகாட்டு நெறிகளையும், குடிமைச் சமூக நெறிகளையும் உருவாக்குகிறார்கள். சட்டரீதியாக விடுதலைப் புலிகள் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை குற்றச்சட்டத்தின் கீழ் கொண்டு வருகிறார்கள் (The Tamil Eelam Penal Code and the Tamil Eelam civil code, which were enacted in 1994 : criminalise caste descrimination : Tamil Eelam:A-De-Facto-State : Tamil Eelam Legal System : E.Pararajasingham, Head of Tamil Eelam Judicial Division : Tamil net : 30 October 2003) விடுதலைப் புலிகள் தலைமையேற்றதிலிருந்து சாதியப் போராட்டம் தொடர்பான இரண்டு பண்புகள் வெளிப்படலாயின. முதலாவதாக விடுதலைப் புலிகள் சாதிய ஒதுக்குதலை தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் தடை செய்தனர். இந்தத் தடையில் உள்ளார்ந்திருந்த பிறிதொரு அம்சம், சாதிப் பிரச்சினை என்பது தமிழீழ தேசிய ஒற்றுமையை முதன்மையாக் கொண்டு இரண்டாம் படசமானது என அவர்கள் கருதி, சகல சாதியினரதும் மதத்தினரதும் ஒற்றுமையை வலியுறுத்தியதால், சாதியம் தொடர்பான எந்தவிதமான உரையாடல்களையும் விடுதலைப்புலிகள் மௌனிக்கச் செய்தார்கள். அவ்வகையில் கம்யூனிஸ்ட்டுகளால் திரட்சியாக வெளிப்பட்டிருந்த சாதிய எதிர்ப்பு இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் பின்தள்ளப்பட்டன. தொடர்ந்து விடுதலைப் புலிகள் உருவாக்கிய சாதிய ஒதுக்கம் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்கள் சாதிசார்பற்ற மதச்சார்பற்ற (secular) தன்மையினையே கொண்டிருந்தன. வரதட்சணை தடைசெய்யப்பட்டது. கருக்கலைப்பு பெண்ணின் உரிமை ஆகியது. பெண்ணுக்கு சொத்துரிமை நிலைநாட்டப்பட்டது. சாதி ஒதுக்குதல் குற்றமாக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காகச் சமராடி மரணமுற்ற இஸ்லாமியப் போராளிகளையும் - இளைஞர்களையும் யுவதிகளையும் - விடுதலைப் புலிகள் தமது முள்ளியாவளை மாவீரர் நினைவில்லத்தில்; ஒன்றாகவே புதைத்தனர். இஸ்லாமிய முறையின்படி, இஸ்லாமிய சமாதியில் அப்போராளிகள் புதைக்கப்படவில்லை எனும் வருத்தம் கூட ஈழத்து இஸ்லாமிய மக்களிடம் இருக்கிறது. ஆனால் சாதி மதம் கடந்தவர்களாகத் தம்மை வரித்துக் கொண்ட விடுதலைப் புலிகள் அனைவரையும் போலவே தமது அமைப்பின் இஸ்லாமியப் போராளிகளையும் ஒரே மாவீரர் சமாதியில் புதைப்பது தவிர வேறு விதமாகச் செயல்பட்டிருக்க முடியாது.

சாதியைத் தாங்கள் ஒழித்துவிட்டதாக விடுதலைப் புலிகள் எங்கும் பிரகடனம் செய்யவில்லை. சாதி ஒதுக்குதலைக் குற்றமாக்கியிருக்கிறோம், சாதிய ஒதுக்குதலைத் தடை செய்திருக்கிறோம் என்றுதான் அவர்கள் சொன்னார்கள். சாதிய ஒதுக்குதலுக்குத் தண்டனை அளிப்போம் என்றுதான் அவர்கள் சொன்னார்கள். குறிப்பிட்ட சாதியைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகத் தமது அமைப்பை அவர்கள் அடையாளப்படுத்த விரும்பவில்லை. அவர்களது அமைப்பில் அவர்கள் திட்டமிட்ட வகையில் கலப்புத்திருமணங்களை ஆதரித்து வந்திருக்கிறார்கள். திருமணச் சடங்குகளில் தாலியை நிராகரித்திருக்கிறார்கள் சாதிகடந்த வகையில் மாவீரர்களின் கல்லறைகளை அமைத்திருக்கிறார்கள். நடைமுறையில் தேசிய ஒற்றுமை கருதி சாதியப் பிரச்சினையில் மௌனம் காத்தினரே ஒழிய, அமைப்பில் சாதியையும் சாதி வெறியையும் அவர்கள் ஒரு போதும் கட்டிக் காக்கவில்லை. இஸ்லாமியர் தொடர்பாக அவர்கள் செய்த தவறுகளை அவர்கள் ஒரு போதும் நியாயப்படுத்தியதில்லை.

சாதி ஒழிப்பு என்பது கருத்தியல் மட்டும் உளவியல் மட்டத்திலும் சட்டமுறையின் மட்டத்திலும் ஒரே சமயத்தில் நடத்த வேண்டிய போராட்டம். நிறவெறி ஒழிப்பு, அடிமை முறை ஒழிப்பு போன்றவற்றை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சட்டஆக்கலின் மூலம்தான் நடைமுறைப்படுத்த முடிந்தது. சோசலிச நாடுகளிலும் கட்சியின் அதிகாரம் என்பதனை விடவும் சட்டத்தின் ஆட்சியைத்தான் அதனது விமர்சகர்கள் கோருகிறார்கள். அம்பேத்காரும் பெரியாரும் சாதியை ஒழிப்பதில் சட்டமுறைகளின் முக்கியத்துவம் பற்றிப் பேசுவதையும் நாம் இங்கு கவனம் கொள்ள வேண்டும். இந்த வகையில்தான் அதனது நடைமுறைப் பண்புகளுக்கும் கோருதல்களுக்கும் அப்பால் விடுதலைப் புலிகளின் சட்ட ஆக்கலையும், இச்சூழலினான குறைந்தபட்சமான சுயாதீன ஆய்வுகளையும் கூட நாம் ஆக்கபூர்வமாகப் பார்க்க வேண்டியுள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகவும் தமிழ் பண்பாட்டின் காவலர்களாகவும் காட்டிக் கொள்ளும் சில அரசியல்வாதிகள், அனைத்திந்தியப் பெருமுதலாளி வர்க்கத்தின், பன்னாட்டு மூலதனத்தின் பாதுகாப்புக் கோட்டையாக விளங்கும் இந்திய அரசாங்கத்தைத் தூக்கி நிறுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது வேறோர் விஷயம் என்கிறார் ராஜதுரை.

சாதியத்தையும் இந்துத்துவத்தையும் கடுமையாக எதிர்க்கிற இன்குலாபும் தியாகுவும் விடுதலை. ராசேந்திரனும்; கொளத்தூர் மணியும் கோவை கு.ராமகிருட்டிணனும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்களே, எனில் விடுதலைப் புலிகள் பெரியாரினது வாரிசுகள் அல்லவா? தலித்தியக் கோட்பாட்டாளரான ரவிக்குமாரும், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரான தொல்.திருமாவளவனும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்களே, எனில் விடுதலைப் புலிகள் அம்பேத்காரின் வழித்தோன்றல்கள் அல்லவா? பல்வேறு சாதிகளும் பல்வேறு மதங்களும் பல்வேறு அரசியல் போக்குகளும் இயங்குகிற ஒரு புவிப்பகுதியில் நடக்கிற இனத்தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெறும் சக்திகள் ஒற்றைப்பட்டைத் தன்மையுடன் இருப்பது எவ்வாறு சாத்தியம்? இதே நிலை அவர்களை ஆதரிக்கிற தமிழக சக்திகளிடமும் இருப்பதற்கு விடுதலைப்புலிகள் எவ்வாறு பொறுப்பேற்றுக் கொள்தல் சாத்தியம்?

ஈழத்தமிழர்கள், சிங்கள-முஸ்லீம் மக்களினிடையில் நேசசக்திகளைத் தேடுவது, விடுதலைப்புலிகளின் ராணுவாதம், ஜனநாயக மறுப்பு, அரசியல் தவறுகள், அவர்களது சமூகப் பொருளாதார- அரசியல்-பண்பாட்டுத் திட்டம் என்றெல்லாம் விமர்சனங்களை வைப்பது பிரச்சினையின் ஒரு பகுதிதான். இவையெல்லாம் இதுவரைத்திய அனுபவங்களிலான பகுப்பாய்வுகள் மட்டும்தான். எஸ்.வி.ராஜதுரை, ஈழத்தமிழ் மக்கள் அல்லது ஒரு விமரிசனபூர்வமான ஈழ விடுதலை இயக்கத்தின் முன் வைக்கிற மாற்று வழிமுறைதான் என்ன? அவர் சொல்கிறார் :

அவர்களது விடுதலை வேட்கை மீண்டும் கிளர்ந்தெழுகையில், அவர்கள் இலங்கைத்திவிலுள்ள சிங்கள் முஸ்லீம் உழைக்கும் மக்களுடனும் தென்னாசியப் பகுதியில்-குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள உழைக்கும் மக்களுடனும்-தங்களை இணைத்துக் கொள்ளும்போராட்ட வடிவத்தை மேற்கொள்வார்கள் என்று கருதலாம். எனினும் இந்தப்பிரதேசம் முழுவதையும்தழுவக் கூடிய அகநிலைச் சக்திகள் (subjectiv forces) கருத்து நிலையிலேயே உள்ளது என்பதனை ஒப்புக் கொள்ளும் அதேவேளை அவை உறுதியான உறுத்தோற்றம் கொள்ள வேண்டும் நமது அவாவையும் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை (ஈழத்தமிழ் மக்களும் நாடாளுமன்றத் தேர்தலும் : எஸ்.வி.ராஜதுரை : தமிழர் முன்னணி : தமிழ்நாடு : மே 2009)

மேற்கண்ட எஸ்.வி.ராஜதுரையின் கூற்றை வாசிக்கும்போது முற்றிலும் யதார்த்தங்களை மறுத்த மனோரதிய உலகில் அவர் வாழ்கிறார் எனவே சொல்ல முடிகிறது. இலங்கையில் சிங்கள-முஸ்லீம் மக்களில் நேசசக்திகளைத் தேடுவது ஈழத்தமிழர்களை மட்டுமே பொறுத்த விடயம் இல்லை. புறநிலையில் சிங்கள-முஸ்லீம் மக்களினிடையில் இருக்கிற அரசியல் பிரக்ஞையினாலும் அது தீர்மானிக்கப்பட்டதாக இருக்கிறது. இன்றைய நிலையில் இலங்கையில் அதற்கான வாய்ப்புக்கள் மிக மிக அருகியே காணப்படுகிறது. இந்தியாவிலுள்ள உழைக்கும் மக்கள்-முஸ்லீம்கள் குறித்துப் பேசுகிறார் ராஜதுரை. இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து ராஜதுரை அறியாதவர் இல்லை. குறிப்பாக மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. இந்திய-தமிழக முஸ்லீம் மக்களுடையதும் முன்னுரிமைகளை அவர் அறியாதவர் இல்லை. இந்தியா மற்றும் தமிழகத்தைப் பொறுத்து ஈழத்தமிழர்கள் சாத்தியமான தந்திரோபாயத்தினையே கொண்டிருக்கிறார்கள். பெரியாரியர்களும் அர்களை ஆதரிக்கிறார்கள். தலித்துக்களும் அவர்களை ஆதரிக்கிறார்கள். தமிழ் தேசியர்களும் அவர்களை ஆதரிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒருபடித்தான அரசியல் கருத்தியல் கொண்டவர்கள் இல்லை. இதுவன்றி சிறுபான்மையினரான இந்துத்துவவாதிகளும் ஈழத்தமிழர்களை ஆதரிக்கிறார்கள். அவர்களோடு நேசம் பாராட்டும் ஈழத்தமிழ் அமைப்புக்களும் இருக்கின்றன, புகலிடத்தமிழர் அமைப்புக்களும் இருக்கின்றன. இந்திய அரசியலில் வேறுவேறு மட்டங்களில் இருக்கிற அனைவரதும் தமக்கான அரசியல் ஆதரவைத்திருப்புவதாகவே ஈழத்தமிழரது தந்திரோபாயம் இருக்க முடியும். இந்திய அரசியலில் அவர்கள் கட்டுப்பாடு கொண்டிருத்தலும் சாத்தியமில்லை.

எஸ்.வி.ராஜதுரையின் மேற்கோளிலுள்ள மிகப் பலவீனமான பகுதி இது : இந்தப்பிரதேசம் முழுவதையும் தழுவக் கூடிய அகநிலைச் சக்திகள் (subjective forces) கருத்து நிலையிலேயே உள்ளது என்பதனை ஒப்புக் கொள்ளும் அதேவேளை அவை உறுதியான உறுத்தோற்றம் கொள்ள வேண்டும் நமது அவாவையும் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. தென்னாசியப் பிராந்தியத்தில் பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அல்லது நேபாளத்தில் எந்தவிதமான நேசசக்திகளை ஈழத்தமிழர் தேடுதல் முடியும்? தத்தமது நாடுகளின் நலனால் தீர்மானிக்கப்படும் அரசியல் கொண்ட இந்த நாடுகளில் ஈழத்தமிழர் நேசசக்திகள் யார்? நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்களானால் அவர்கள் ஈழத்தமிழர் போராட்டத்தை ஆதரிப்பார்கள் எனச் சொல்ல முடியாது. இலங்கையில் கல்வி பற்றி விவாதிப்பதற்கு நான் கேட்டுக் கொண்டு மகிந்த ராஜபக்சேவைச் சந்தித்தேன் எனச் சொன்ன மாவோயிஸ்ட் தலைவர் பிரசன்டாவின் கூற்றையும் இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. கருத்து நிலையிலேயே உள்ள ஒரு அரசியலைத் தேர்ந்து கொண்டு போராட வேண்டும் என, கடந்த அரைறூற்றாண்டாக இனக்கொலைக்கு உள்ளாகி வரும், இரண்டு இலட்சம் உயிர்களைப் பறிகொடுத்த ஒரு மக்கள் கூட்டத்திடம் சொல்வது ஒரு கனவுத்திட்டம் அன்றி வேறு இல்லை.

எஸ்.வி.ராஜதுரையைத் தொடர்ந்து கற்று வருபவன் எனும் அளவில், சர்வதேசீயவாதியாத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் அவரிடமிருந்து பின்வரும் சொற்களைக் கேட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது:

நமது நாட்டில் செய்ய வேண்டிய வேலைகள் நமக்கு நிறைய உள்ளன.

பெ. மணியரசனைப் போல விடுதலைப் புலிகளை ஆதரித்து (அதுவும் பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், கொளத்தூர்.மணி போன்றோரைப் போலல்லாமல்) வெகு ஜாக்கிரதையாகப் பேசி அதனையே தொழிலாகக் கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை. இரண்டாவதாக, எனது தமிழ்-தமிழன் அடையாளத்தை நிலை நிறுத்த நான் விடுதலைப்புலிகள் ஆதரவாளனாக மாற வேண்டியதுமில்லை.

சர்வதேசீயவாதி, தன்னையும் அறியாமல் தனது சொந்த நாட்டின் தேசியவாதியாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட தருணம் அது. நாவு தடுக்கிவிட்டது என இதனை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/70837/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.