Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 18 படிப்பினைகளும் யதார்த்தமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே 18 படிப்பினைகளும் யதார்த்தமும்

இக்கட்டுரை வலைப்பூவொன்றிலிருந்து இணைக்கிறேன். பல விடயங்கள் நாங்கள் திரும்பிப்பார்க்க வேண்டிய விடயங்கள் உள்ளடக்கம் பெற்றுள்ளது.

http://naalupakkam.blogspot.com/2012/02/18.html

மே – 18 என்பது ஒரு யதார்த்தம். ஒரு படிப்பினை.

என்னதான் கசப்பானதாக இருந்தாலும் இந்த நாளின் முடிவும் விதியும் ஒரு யதார்த்தமே. ஒரு உண்மையே!

2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தொலைக் காட்சியான தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் ‘நிலவரம்’ என்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது ஆய்வாளர் நிலாந்தன் ஒரு விடயத்தைத் தெளிவுபடக்கூறியிருந்தார்.

அவர் கூறியது இதுதான்.

‘தென்னாசியப் பிராந்தியத்தில் தமிழீழம் அமையவேண்டுமானால் முற்றிலும் வேறானதோர் தீர்க்கதரிசனமிக்க அரசியல் அணுகுமுறையும் கடினமான உழைப்பும் தேவை. ஏனெனில் தென்னாசிய விடுதலைப் போராட்டங்களுக்கான பிராந்திய – சர்வதேச யதார்த்தமானது இலகுவானதாக அமையவில்லை. இந்தப் பிராந்தியத்தின் போராட்டங்களெல்லாம் குரூரமான முறையி்ல் ஒடுக்கப்பட்டதே யதார்தமாக இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும் ’

நிலாந்தனுடைய இந்தக் கருத்தை அப்போது புலிகளின் மையப்பகுதியினர் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. விரும்பவும் இல்லை. ஆனால், தன்னுடைய இந்தக் கருத்துக்கான ஆதாரங்களை நிலாந்தன் அந்த நிகழ்ச்சியில் தெளிவாக்கியிருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிலாந்தன் நிலவரம் நிகழ்ச்சியில் பங்கேற்பது தவிர்க்கப்பட்டது. பின்னர் ஈழநாதம் பத்திரிகையில் அவர் எழுதி வந்த அரசியற்பத்தியும் இடைநிறுத்தப்பட்டது.

ஏறக்குறைய இதே கருத்தை ஈரோஸ் இயக்கத்தின் தலைவராகவும் பின்னாளில் விடுதலைப் புலிகளின் முக்கியத்தராகவும் இருந்த திரு வே. பாலகுமாரனும் கொண்டிருந்தார்.

இவர்கள் சொன்னமாதிரியும் எதிர்பார்த்த மாதிரியுமே நிகழ்ச்சிகள் நடந்துமுடிந்தன.

அதாவது மே 18 நிகழ்ச்சிகள் என்பது தென்னாசியப் பிராந்திய – சர்வதேசிய நிகழ்ச்சிப் போக்கின் யதார்த்தமும் உண்மையும் என்பதையே நிரூபித்தன.

00

தென்னாசியப் பிராந்தியத்தில் ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டங்களின் முடிவுகள் அமைந்த யதார்த்தத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விதியும் விடுதலைப் புலிகளின் முடிவும் அமைந்திருக்கிறது.

தென்னாசியாவில் நடைபெற்ற போராட்டங்கள் அத்தனையையும் அந்தந்த நாடுகள் மிகக் குரூரமாக ஒடுக்கியிருக்கின்றன. இதற்காக அவை, பிராந்திய நாடுகளின் உதவிகளையும் தேவையேற்படும் பட்சத்தில் சார்புக்கமைவான சர்வதேச நாடுகளின் உதவிகளையும் பெற்றுள்ளன. இலங்கையில் நடந்ததும் இதுவே.

இவ்வாறு ஆதிக்க சக்திகள் போராட்டங்களை ஒடுக்கும்போது அதில் பெருமளவு பாதிக்கப்படுகிறவர்கள் சாதாரண மக்களே.

இலங்கையில் ஏற்கனவே நசுக்கப்பட்ட ஆயுதப் போராட்டங்களினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஒடுக்குதலின்போது தமிழ் சிங்கள மக்கள் என்ற பேதங்களை அரசு இயந்திரம் வேறு படுத்திப் பார்க்கவில்லை. அரசைப் பொறுத்தவரையில் தனக்கெதிராக இயங்குவோர் என்பதையே அது குறியாகக் கொள்கிறது.

ஜே.வி.பியின் எழுச்சிகள் இரண்டுதடவைகள் ஒடுக்கப்பட்டுள்ளன. இதற்குச் சிங்கள இளைஞர்களையே (சிங்கள இராணுவத்தையே) சிங்கள அரசு பயன்படுத்தியிருக்கிறது என்பதை நாம் கவனத்திற் கொள்ளவேணும். இந்த இரண்டு கிளர்ச்சிகளிலும் ஏறக்குறைய ஒரு லட்சம் வரையானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டமும் பல வடிவங்களில் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டு வரப்பட்டது. எனினும் இறுதியாக 2009 மே 18 டுடன் அதற்கு இறுதி ஆணி அடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையானது பிராந்திய - சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டுள்ளது என்பதுவும் நமது கவனத்திற்குரியது.

இதைப்போல இந்தியாவில் நடந்த பல போராட்டங்களும் இத்தகைய ஒடுக்குமுறையின் மூலமே நசுக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு இந்த விசயத்தில் பிராந்திய நாடுகளுக்கிடையிலான உறவும் சர்வதேச வலைப்பின்னலின் ஒழுங்கமைப்பும் உள்ளன.

ஆகவே, இதுவொரு தென்னாசியப் பிராந்திய யதார்த்தம். தென்னாசியப்பிராந்தியத்திற்குரியதொரு படிப்பினை.

எனவே -

இந்த யதார்த்தம் நமக்கு பல புதிய புரிதல்களையும் படிப்பினைகளையும் அனுபவபூர்வமாகவே இன்று தந்துள்ளது.

‘இந்த யதார்த்தத்துக்கு அப்பால் - இந்த யதார்த்தத்தை உடைத்து நாம் வெற்றியடைந்து விடலாம்’ என்றிருந்த நம்பிக்கை இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த நம்பி்க்கை வெற்றியடைந்திருக்க வேண்டுமானால், போராட்டத்தின் போக்கிலும் அணுகுமுறையிலும் அடிப்படையிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். நிகழ வேண்டும் என்பது இன்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் அத்தகைய தெளிவு எந்த மட்டத்தில் நிகழ்ந்துள்ளது? அதைப் பொதுச் சூழலானது எந்த அளவிற் புரிந்து கொண்டுள்ளது என்ற கேள்விகள் எழுகின்றன.

இதைத்தவிர்த்து - இத்தகைய படிப்பினைகளைத் தமது அரசியல் முன்னெடுப்புகளுக்கான பாடங்களாகக் கொள்வதைத் தவிர்த்து - வழமையான சிந்தனை முறையில் அரசியலைத் தொடர்வோர் நிலைமைகளை மேலும் மோசமாக்குகின்றனர்.

ஆனால், என்னதானிருந்தாரும் இலங்கையின் வரலாற்றில் மே18 – 2009 என்பது எத்தகைய படிப்பினைகளைத் தந்துள்ளது? என்பது முக்கியமான கேள்வி. நிராகரிக்கவே முடியாத கேள்வி. எப்படி அந்த நிகழ்ச்சி ஒரு யதார்த்தமோ எப்படி அது உண்மையான ஒரு அரசியல் விளைவோ அந்த அளவுக்கு அது ஏற்படுத்திய படிப்பினைகளும் கேள்வியும் முக்கியமானவை.

இந்தக் கேள்வியும் படிப்பினைகளும் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் உரியது.

2009 மே18க்குப் பின்னர் இப்பொழுது இரண்டாண்டுகள் கழிந்து விட்டன.

அதாவது யுத்தம் முடிந்து இரண்டாண்டுகள் கடந்துள்ளன.

இந்த இரண்டாண்டுகளில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகள் என்ன? முன்னேற்றங்கள் என்ன? மாற்றங்கள் என்ன? திருத்தங்கள் என்ன? படிப்பினைகள் என்ன?

சுருக்கமாகச் சொன்னால், போருக்குப் பிறகும் இலங்கையில் இனமுரண்பாடு அப்படியேதான் இருக்கிறது. பெரும்பாலான தமிழர்களும் சிங்களவர்களும் வௌ;வேறுவிதமாகவே – போருக்கு முன்னரும் போர்க்காலத்திலும் சிந்தித்ததைப் போலவே சிந்திக்கிறார்கள். யுத்தம் இவர்களுக்கு எந்தப் படிப்பினைகளையும் தந்ததாகத் தெரியவில்லை.

இதன் விளைவாக அரசியல் முரண்பாடும் இடைவெளியும் நீடிக்கின்றன. ஆகையால் இலங்கையில் வெளிச்சக்திகளின் தலையீடும் நெருக்கடியும் அதிகரித்தவாறே இருக்கிறது. மக்களின் உரிமைகளும் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுக் கொண்டே செல்கிறது.

எனவே நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்வதற்கில்லை.

குறிப்பாக, இலங்கையில் இனமுரண்பாட்டின் காரணமாக – விளைவாக - உருவாகிய போர் ஏற்படுத்திய விளைவுகள் - படிப்பினைகள் - யாரையாவது நிதானமாகச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இதற்குப் புதிய சிந்தனை முறை உருவாகினால்தான் மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் சாத்தியங்கள் உண்டு.

தமிழ் ஊடகங்களும் பெரும்பாலான தமிழ் அரசியற் கட்சிகளும் பழைய அலைவரிசையிலேயே பேசிக் கொண்டிருக்கின்றன. அரசியற் தலைவர்களின் பாராளுமன்ற உரைகளும் அறிக்கைகளும் இதற்கு நல்ல உதாரணங்கள்.

அப்படியே இலங்கை அரசும் சிங்களத் தலைவர்களும் அவர்களுடைய கட்சிகளும் பழைய பாணியிலேயே பேசியும் சிந்தித்தும் வருகின்றன. சிங்கள ஊடகங்கள் பாதை விலகாமலே பயணம் செய்கின்றன.

ஆகவே யுத்தத்தின் முடிவு எந்த முன்னேற்றத்தையும் இலங்கைத் தீவில் ஏற்படுத்தவில்லை. எத்தகைய படிப்பினைகளையும் யாருக்கும் தந்ததாக இல்லை.

எனவே இலங்கையில் ஐக்கியத்துக்கும் வழியில்லை. பிரிவினைக்கும் இடமளிப்பில்லை.

இதற்குக் காரணம் யுத்தத்தின் முடிவை இலங்கை அரசு தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டதும் அந்த வகையிலேயே மக்களைச் சிந்திக்கத் தூண்டியதுமாகும்.

யுத்தத்தின் முடிவை யுத்த வெற்றியாகக் கருதியதால் வந்த வினை இது. இதுவே அடிப்படையான பிரச்சினையாகும். இந்தப் புரிதல் முற்றிலும் தவறானது.

யுத்த வெற்றி என்பது ஒருதலைப் பட்சமானது. யுத்தத்தில் பெற்றது வெற்றி என்று உணரப்படும்போது அதன் மறுப்பக்கம் தோல்வி என்றே அர்த்தப்படும்.

இதுதான் இலங்கையில் நிகழ்ந்திருப்பது. ஆகவேதான் யுத்தத்தின் முடிவுக்குப் பிறகும் இலங்கையின் நிலைமைகள் மாற்றமடைய முடியாமல் இருக்கின்றன.

யுத்த வெற்றி என்றால் அது சிங்களத் தரப்பிற்குரிய வெற்றியாகும். அவ்வாறே கருதவும் படுகிறது. அதன் பெருமையும் பங்கும் தமக்கே என்று சிங்களத் தரப்பு கருதியுள்ளமை இதற்கு நல்ல சான்று.

இவ்வாறு சிங்களத் தரப்புக் கருதியதால் இந்த யுத்தத்தின் அடுத்த முனையிலிருந்த தமிழர்களை அது வேறுவிதமாகச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது.

இந்த யுத்தத்தில் தமிழர்கள் தோற்றவர்களாகவும் தோற்கடிக்கப்பட்டவர்களாகவும் கருதப்படுகிறார்கள். தமிழர்களும் இவ்வாறே கருதுகிறார்கள். அவ்வாறு தமிழர்களைக் கரும்படியே நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.

ஆகவே, யுத்தத்தின் முடிவு என்பது நல்விளைவுகளுக்குப் பதிலாக – மீண்டும் பகையை உள்ளே தூண்டும் விதமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் முன்னேற்றங்களைப் பற்றி எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆனால், யுத்தத்தின் முடிவினால் சில நன்மைகள் கிட்டியிருக்கின்றன. யுத்தத்தின் அழுத்தங்களும் நேரடியான உயிர் இழப்புகள், சொத்திழப்புகள், அகதியாக இடம்பெயர்தல் போன்ற பாதிப்புகளும் நீங்கியுள்ளன. போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் தடைகள் விலகியுள்ளன. சனங்கள் இறுக்கங்களிலிருந்தும் அழுத்தங்களிலிருந்தும் விடுபட்டிருக்கிறார்கள்.

ஆனால், யுத்தம் முடிந்த பின்னர் காணப்பட்டிருக்க வேண்டிய இலங்கையின் பிரதான பிரச்சினையாகிய இனமுரண்பாட்டுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறதா?

அல்லது அந்த இனமுரண்பாட்டைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு சம்மந்தப்பட்டவர்களிடம் விசுவாசமாக ஏற்பட்டுள்ளதா?

அல்லது இனப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் நேர்மையாக மேற்கொள்ளப்படுகின்றனவா?

அல்லது நாடு அமைதியடைந்திருக்கிறதா? அல்லது அது அபிவிருத்திப் பாதையில் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது?

பிரிவினைக்கோ அல்லது ஐக்கியத்துக்கோ செல்லக்கூடிய வழிவகைகளைப் பற்றி நேர்மையாகச் சிந்திக்கப்பட்டிருக்கிறதா?

குறைந்த பட்சம் நாட்டைப் பாதிக்கின்ற வகையிலான உள்நாட்டு நெருக்கடியும் வெளிச் சக்திகளின் அழுத்தங்களும் நீங்கியிருக்கின்றனவா?

சுருக்கமாகச் சொன்னால் யுத்தம் முடிந்து விட்டது என்று மக்கள் உணர்ந்து கொள்வதற்கான ஏதுக்கள் எதுவும் இல்லை. அதிலும் யுத்தப் பாதிப்புகளை நீக்கக் கூடிய நடவடிக்கைகள் கூட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால், நடைபெற்ற யுத்தம் தமிழ் பேசும் மக்களை மட்டும் பாதிக்கவில்லை. தமிழர்கள் அதிகமான பாதிப்பைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், அதேவேளை அது ஏனைய சமூகங்களையும் நெருக்கடிக்குள்ளாக்கியது.

பதற்றத்திலும் பாதிப்பிலுமே இலங்கையின் கடந்த காலம் கழிந்தது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த யுத்தம் முடிந்திருப்பது என்பது சாதாரணமானதல்லத்தான்.

அதிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைத் தின்ற யுத்தம் இது. மட்டுமல்ல, பல கோடிக்கணக்கான சொத்துகளையும் இயற்கை வளங்களையும் அழித்த யுத்தம். பலருடைய எதிர்காலத்தைச் சிதைத்த யுத்தம்.

ஆனால், இந்த யுத்தம் முடிவுக்கு வந்தபோது யுத்தத்துக்குக் காரணமாக இருந்த பிரச்சினைகள் தீர்ந்திருக்க வேணும். யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் பாதியாவது குறைந்திருக்க வேணும். யுத்தத்துக்குப் பின்னரான மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேணும்.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதுதான் பிரச்சினை.

ஆகவே, யுத்தம் முடிவுக்கு வந்த மே 18 என்பது நிச்சயமாக ஒரு படிப்பினைக்கான நாள். அது இலங்கையர்களுக்கு பல தரிசனங்களைத் தந்திருக்க வேண்டிய நாள்.

சிங்களவர்களைப் பொறுத்த அளவில், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான பெரும் பொறுப்பைப் பெற்றுக் கொண்ட நாள்.

தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளின் இயங்குநிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நாள்.

அதாவது, முப்பது ஆண்டுகளாகத் தமிழர்களின் அரசியற் சக்தியாக செல்வாக்குப் பெற்றிருந்த விடுதலைப் புலிகளிடமிருந்து வேறுபட்டதொரு அரசியல் முறைமைக்கு மாறிய நாள். இதை இன்னும் தெளிவாகச் சொன்னால், பிரபாகரனுக்குப் பின்னரான – பிரபாகரன் அற்ற - அரசியல் செயற்பாட்டைத் தொடரவேண்டிய நாள்.

இந்த நாளில் - மே 18 இல் - யுத்தத்தின் முடிவை இலங்கை அரசும் சிங்களவர்களும் யுத்தவெற்றியாகவும் தமிழர்களைத் தோற்கடித்ததாகவும் கருதியிருந்தால் -

தமிழர்கள் இந்த நாளை தங்களின் வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் ஒரு படிப்பினையாகக் கொள்வது அவசியமாகும்.

http://naalupakkam.blogspot.com/2012/02/18.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.