பிரபாகரனை வெகுவாகப் பாதித்த சீலனின் மரணம்
"அவர்கள் எவராலும் கொல்லப்பட்ட இளைஞர்களை அடையாளம் காட்ட முடியவில்லை. இறந்தவர்களில் ஒருவர் வெள்ளை நிற டீ ஷேர்ட்டின் மேல் ஒலிவ நிற ராணுவச் சீருடையினை அணிந்திருந்தார். இறந்த இருவரினதும் உடல்களை யாழ் மருத்துவமனையின் பிரேத அறைக்குப் பொலீஸார் அனுப்பிவைத்தனர். ராணுவத்திற்கு தகவல வழங்கியவர்களில் ஒருவரான "சேவியர்" என்பவர் கொல்லப்பட்டது சீலன் தான் என்று அடையாளம் காட்டினார். என்னால் அதை நம்ப முடியவில்லை" என்று முனசிங்க கூறினார்.
திருகோணமலையிலிருந்து அழைத்துவரப்பட்ட சீலனின் தாயார் இறந்ததது தனது மகன் தான் என்று அடையாளம் காட்டும்வரை யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி பல்த்தசார் கூட அதனை நம்பவில்லை. கொழும்பு ஊடகங்கள், குறிப்பாக சிங்கள ஊடகங்கள் மிகுந்த வெற்றிக்களிப்போடு சீலனின் மரணச் செய்தியை வெளியிட்டிருந்தன. புலிகளின் இரண்டாம் நிலைத் தளபதியின் மரணம் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் கொண்டாடப்படவேண்டிய நிகழ்வாகவே கருதப்பட்டது. "புலிகள் முடிந்துவிட்டார்கள்" என்கிற செய்திகளும் வெளியிடப்பட்டன. சீலனின் மரணத்தினால் உற்சாகமடைந்த ராணுவ பொலீஸ் புலநாய்வுத்துறையினர், பிரபாகரனையும் செல்லக்கிளியையும் தேடும் நடவடிக்கைகளில் இறங்கினர். ஆனால், சீலனின் மரணத்திற்குப் பழிவாங்க பிரபாகரனும், செல்லக்கிளியும் திட்டமிட்டு வருவது அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. மேலும், தனது உயிரைத் தியாகம் செய்து, தனது ஆயுதத்தைத் தன்னுடன் வந்த தோழனிடம் கொடுத்தனுப்பிய சீலனின் வீரச்செயல் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அளித்திருந்த உத்வேகத்தையும் அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. சீலனைத் தமது கொமாண்டோக்களே சுட்டுக் கொன்றதாக ராணுவம் நம்பியது.
ஆனால், அப்படி நடக்கவில்லை. தனது மரணத்திற்கு சீலனே உத்தரவிட்டார்.
முனசிங்க மூன்று இளைஞர்களுக்கருகில் தனது மினிபஸ்ஸினை நிறுத்தியபோது, தமது சைக்கிள்களை எறிந்துவிட்டு ஓடியவர்கள் சீலன், ஆனந்தன் மற்றும் அருணா ஆகிய மூன்று புலிகளின் போராளிகள்தான்.ஆனந்தனும் அருணாவும் சைக்கிள்களை மிதித்துச் செல்ல, சீலன் அருணாவின் சைக்கிளில் அமர்ந்து சென்றார். சீலனின் மடியில் உப இயந்திரத் துப்பாக்கியொன்று இருந்தது.
ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு முதலில் இலக்கானவர் ஆனந்தன். ராணுவம் மறைந்திருந்த பற்றைக் காட்டிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தூரத்தில் வீழ்ந்தவர் ஆனந்தனே. அருணாவும், சீலனும் மேலும் 100 மீட்டர்கள் ஓடியபின்னர் சீலன் கீழே வீழ்ந்தார். ஆனால், முனசிங்க நினைத்தது போல சீலன் சூடுபட்டு விழவில்லை. சில காலத்திற்கு முன்னர் சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீதான தாக்குதலின்போது சீலனுக்கு முழங்காலில் சூடுபட்டிருந்தது. அக்காயம் முற்றாக ஆறாமல் இருந்ததோடு, அதனால் கடுமையான வலியும் சீலனுக்கு ஏற்பட்டு வந்தது. வீழ்ந்ததும் மறுபடியும் அவர் எழ முயற்சித்தபோதும் அவரால் அது முடியாது போய்விட்டது. சீலனின் சிறுவயது நண்பனும், திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான அருணா, சீலனை எப்படியாவது காப்பற்றி இழுத்துச் செல்ல முயன்றுகொண்டிருந்தார்.
எஸ் எம் ஜி யுடன் சீலன்
"ஓடு, ஓடு, இன்னும் கொஞ்சத்தூரம் ஓடினால்ப் போதும்" என்று அருணா சீலனைப் பார்த்துக் கெஞ்சிக்கொண்டிருந்தார். "என்னால் முடியாது" என்று வலியில் முனகியபடியே சீலன் பதிலளித்தார். ராணுவத்தினர் அவர்களை நோக்கித் தரையால் ஊர்ந்துவரத் தொடங்கியிருந்தார்கள்.
"எழுந்திரு, கிராமத்திற்கு அருகில்ச் செல்ல வேண்டும். சென்றுவிட்டால் நாம் தப்பிவிடலாம்" என்று அருணா கூறவும், சீலன் மறுபடியும் எழுந்திருக்க முயன்றார், ஆனால் அவரால் முடியவில்லை.
"என்னையோ எனது எஸ்.எம்.ஜி ஐயோ அவர்கள் கைப்பற்றிவிடக்கூடாது" என்று உறுதியுடன் கூறிக்கொண்டிருந்தார் சீலன். "நான் அவர்களிடம் உயிருடன் பிடிபடவே மாட்டேன்" என்று அக்கணத்தில் சபதம் பூண்டார். இதனைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருந்தார். நிர்மலா நித்தியானந்தனின் வீட்டில் மறைந்திருந்தபோதும் இதனையே சீலன் மந்திரம்போல சொல்லிக்கொண்டிருந்தார். அதனாலேயே சீலனை நான் எப்படியாவது பிடித்துவிடுவேன் என்று முனசிங்க கர்வத்துடன் பேசியபோது, "அவரைக் கைதுசெய்ய எத்தனிக்க வேண்டாம், ஏனென்றால் சீலனை நீங்கள் உயிருடன் பிடிக்க முடியாது" என்று முனசிங்கவிடம் நிர்மலா ஒருமுறை கூறியிருந்தார். சீலன் பயமறியாதவர், துடிதுடிப்பானவர், சமயோசிதமானவர். இலட்சியத்திற்காக உயிரையும் கொடுக்க முன்வந்திருந்தவர். பிரபாகரனுக்கு முழுமையான விசுவாசமாகச் செயற்பட்டவர். சீலனைப் பொறுத்தவரை "தம்பி" தலைவர் மட்டுமல்ல, அவரின் குருவும் அவரே. அருணாவின் கண்களை நேராகப் பார்த்து சீலன் பின்வருமாறு கூறினார், "அவர்கள் என்னை உயிருடன் பிடிக்கக் கூடாது. என்னைச் சுட்டு விட்டு எனது எஸ் எம் ஜி யை எடுத்துக்கொண்டு ஓடிவிடு" . அருணாவுக்கு தலையில் இடி ஒன்று இறங்கியதான அதிர்ச்சி. என்ன செய்வதென்று தெரியாது ஸ்த்தம்பித்துப் போனார்.
சீலனின் பொறுமை எல்லை கடந்து சென்றுகொண்டிருந்தது. அவர்களை நோக்கி ஊர்ந்துவந்த ராணுவத்தினர் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே முன்னேறி வந்துகொண்டிருந்தனர்.
"என்னடா பார்த்துக்கொண்டிருக்கிறாய்?" என்று சீலன் அருணாவைப் பார்த்துக் கத்தினார். "என்னைச் சுட்டு விட்டு ஓடு, நான் சொல்றதைக் கேள்" என்று மீண்டும் அருணாவைப் பார்த்துக் கத்தினார் சீலன். அருணாவினால் எதையுமே யோசிக்க முடியவில்லை. பிரமை பிடித்தவரைப்போன்று அசைவின்றிக் கிடந்தார் அருணா. புலிகளின் இரண்டாம் நிலைத் தளபதியைக் கொல்ல அவருக்கு மனம் இடங்கொடுக்கவில்லை. "அவர்கள் என்னை உயிருடன் பிடிக்க நான் அனுமதிக்கப்போவதில்லை, எனது எஸ் எம் ஜி யையும் அவர்கள் எடுத்துவிடக் கூடாது" என்று மீண்டும் கத்தினார் சீலன். "இது எனது கட்டளை, சுடடா" என்று இறுதியாகக் கத்தினார் சீலன். தனது நிலைகுலைந்து அருணா அழத் தொடங்கினார்.
"சுடடா .... சுடடா....சுடடா....." என்று சீலன் முனகிக்கொண்டிருக்க, அருணா துப்பாக்கியின் குழலை சீலன் நெற்றிக்கும் மூக்கிற்கும் இடையே வைத்து அழுத்தினார். தனது முகத்தினை வேறுபக்கம் திருப்பிக்கொண்டே துப்பாக்கியை இயக்கினார் அருணா. சீலன் இறந்து கீழே விழ, சீலனின் எஸ் எம் ஜி யை எடுத்துக்கொண்டு, தனது பலம் எல்லாம் திரட்டி ஓடத் தொடங்கினார் அருணா. ராணுவத்தினரின் சன்னங்களில் ஒன்று அவரின் மேல் பட்டதும் கீழே வீழ்ந்தார், ஆனால் தப்பிவிடவேண்டும் என்கிற துடிப்புடன் மீண்டும் எழுந்து ஓடத் தொடங்கினார். இரத்தம் ஓடிக்கொண்டிருக்கும் காயத்தை ஒரு கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, மறு கையில் சீலன் இயந்திரத் துப்பாக்கியைப் பத்திரமாகப் பற்றிக்கொண்டு வயல்வெளிகள் தாண்டி கிராமத்தினுள் நுழைந்து சாவகச்சேரிப் பகுதியை அடைந்தார். வீதியால் வந்துகொண்டிருந்த கார் ஒன்றினைத் துப்பாக்கியைக் காட்டி மறித்த அருணா, சாரதியை இறங்கச் சொல்லிவிட்டு அதில் ஏறி ஓட்டிச் சென்றார். மறுநாள் காலை திருநெல்வேலிப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காரினை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். காரின் ஸ்டியரிங் வீல் இரத்தத்தால் தோய்ந்திருந்தது. காரைக் கைவிட்ட அருணா, மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்வேலிப் பகுதியில் இருக்கும் புலிகளின் மறைவிடத்திற்கு வந்து சேர்ந்தார்.
நீர்வேலியில் அமைந்திருந்த புலிகளின் மறைவிடத்தில் இயக்கத்தில் நிதி நிலைமைகள் குறித்து பண்டிதர் மற்றும் கிட்டுவுடன் பிரபாகரன் பேசிக்கொண்டிருந்தார். பிரபாகரனுக்கு அருகில் ஓடிச்சென்ற அருணா, சீலனின் மரணத்தைப் பற்றி அறிவித்துவிட்டு அவர் அருகில் மயங்கிச் சரிந்தார். சீலனின் மறைவுகுறித்து அருணா கூறியபோது பிரபாகரன் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். நெடுநேரம் எவருடனும் அவர் பேசவில்லை. அந்தப் பொழுதினை பின்னாட்களின் என்னுடன் பகிர்ந்துகொண்ட கிட்டு, "அவரின் உணர்வுகள் அக்கணத்தில் எப்படியிருந்தன என்று எவராலும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஆனால், அவர் ஆழமாகச் சிந்தித்துக்கொண்டிருப்பது எமக்குப் புரிந்தது" என்று கூறினார். சீலனை அவர் அதிகமாக நேசித்தார். அவரின் மேல் பெருமதிப்பு வைத்திருந்தார். சீலன் தீரமானவர், புத்திசாதுரியம் மிக்கவர், அஞ்சாத நெஞ்சுரமும், தலைமை மீது அளவுகடந்த விசுவாசமும் கொண்டவர். ஆகவே, சீலனும் ஆனந்தனும் செய்த உயிர்த்தியாகங்கள் போற்றப்படவேண்டும் என்று பிரபாகரன் உத்தரவிட்டார்.
சீலனையும் ஆனந்தனையும் போற்றி, வணக்கம் செலுத்தும் சுவரொட்டிகள் வடக்குக் கிழக்கில் பரவலாக ஒட்டப்பட்டன. அவர்களின் இயற்பெயர்களைத் தாங்கி அவை வெளிவந்திருந்தன. சீலனின் இயற்பெயரான சார்ள்ஸ் அன்டனி மற்றும் அவரது பிறந்த ஊரான திருகோணமலை உட்பட அவரின் விபரங்கள சுவரொட்டிகளில் காணப்பட்டன. அவரது வீர மரணத்தின் பின்னர் "லெப்டினன்ட்" எனும் பதவி புலிகளால் அவருக்கு வழங்கப்பட்டது. அவ்வாறே ஆனந்தனின் இயற்பெயரான ராமநாதன் அருளானந்தன் மற்றும் அவரது பிறந்த ஊரான நீர்கொழும்பு போன்ற விடயங்கள் அவரது வீரவணக்க சுவரொட்டிகளில் காணப்பட்டன. ஆனந்தன் அந்த வருடமே புலிகளுடன் இணைந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அருணாவின் இயற்பெயர் செல்லச்சாமி கோணேசன். இவர் திருகோணமலையினைப் பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன் சீலனின் பால்ய வயது நண்பர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
சீலனின் பெயரால் உருவாக்கப்பட்ட புலிகளின் முதலாவது மரபு வழிப் படைப்பிரிவு - சார்ள்ஸ் அன்டனி சிறப்புப் படையணி