ஈழத்தமிழரின் அவலங்களை தனது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த நினைத்த கருநாநிதி
இந்திய சுதந்திரதின விழாவில் இந்திரா ஆற்றிய உரையும், அமிர்தலிங்கத்திற்கு அளிக்கப்பட்ட கெளரவமும் ஜெயாரைக் கோபத்தின் உச்சிக்கே இட்டுச் சென்றது. ஆகவே, தனது அரச ஊடகங்களை இந்திராவிற்கெதிராகவும், இந்தியாவுக்கெதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்குமாறு பணித்தார். ஜெயாரின் ஆணைப்படி அரச ஊடகங்கள் இந்திராவின் நம்பகத்தன்மையினையும் அவரது பக்கச்சார்பின்மையினையும் வெகுவாகக் கேள்விகேட்டு விமர்சித்திருந்தன. இந்தியாவைச் சண்டியர் என்று விளித்த இந்த ஊடகங்கள் சிறிய நாடான இலங்கையின் கைகளை மடக்கி வைக்கப் பார்ப்பதாக குற்றம் சுமத்தின. அமிர்தலிங்கத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு மரியாதையினையும், இந்திரா காந்தியின் காட்டமான உரையினையும் அவை வெகுவாக விமர்சித்தன.
ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ தனது நிலைப்பாட்டில் சற்றுத் தளர்வுப் போக்கினைக் கடைப்பிடிக்க விரும்பியது. தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமிர்தலிங்கம், "இந்திரா காந்தியுடனான பேச்சுக்களின் பின்னர் நிலைமை மாறிவிட்டது" என்று தெரிவித்தார். இந்தியாவின் நல்லெண்ண உதவிகளின்மூலம் அடிப்படை மாற்றங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன என்று அவர் கருத்து வெளியிட்டார்.
மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அமிர்தலிங்கம் கூறினார். அரசாங்கமானது தனிநாட்டிற்கு நிகரான சாத்தியப்படக்கூடிய மாற்றுத்தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் தமது தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட்டு விட்டு அதனைப் பரிசீலிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார். காத்திரமான மாற்றுத்தீர்வொன்றினை அரசு முன்வைக்கும் பட்சத்தில், தாம் அதனை தமிழ் மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களை அதற்கு இணங்கவைக்கப்போவதாகவும் அவர் கூறினார். மாற்றுத்தீர்வு எப்படி இருக்குமென்று கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், அது சமஷ்ட்டி அடிப்படையிலான , தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய தீர்வாக அமையவேண்டும் என்று கருத்து வெளியிட்டார்.
அப்படியான மாற்றுத்தீர்வொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் இந்தியா கட்டாயம் ஒரு தரப்பாக தீர்வுவிடயத்தில் பங்களிப்புச் செலுத்தவேண்டும் என்றும் கூறினார். நல்லிணக்க உதவிகளைச் செய்யும் நிலையிலிருந்து செயற்றிறன் கொண்ட மூன்றாவது தரப்பாக இந்தியா தன்னை முன்னகர்த்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு உதாரணமாக சர்வதேச பிணக்குகளளில் அமெரிக்காவின் மத்தியஸ்த்தத்துடன் இடம்பெற்ற காம்ப் டேவிட் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா அளிக்கும் பங்கிற்கு நிகராக தமிழரின் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு இருக்கவேண்டும் என்று அவர் கூறினார். மேலும், இலக்கு ஒன்று எட்டப்படுவதற்கு இந்தியா உத்தரவாதம் வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆனால், அமிர்தலிங்கம் முன்வைத்த அனைத்துப் பரிந்துரைகளையும் ஜெயார் முற்றாக நிராகரித்தார். ஊடகங்களுக்குப் பேசிய ஜெயார், இந்தியா அடக்கி வாசிப்பதே இப்போதைக்குத் தேவையானது என்று கூறினார். தேவைப்பட்டால் நாம் இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினை நாடுவோம், இப்போதைக்கு வேண்டாம் என்று அவர் கூறினார்.
தில்லியிலிருந்து திரும்பிய அமிர்தலிங்கத்தை உணவெழுச்சியினால் உந்தப்பட்ட தமிழ்நாடு வரவேற்றது. "ஈழத்திற்கான யாத்திரை" எனும் பெயரில் நெடுமாறனினால் ஆவணி 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பேரணி தோல்வியில் முடிவடைந்தது. ஆனாலும், 8 நாட்களாக, 1700 கிலோமீட்டர்கள் தூரம் நடைபவணியாக வந்த 5,000 ஈழ ஆதரவாளர்களின் முயற்சியினால் மொத்தத் தமிழ்நாடுமே உணர்வுகொண்டு எழுந்து நின்றது. ஈழத்தில் பாதிக்கப்பட்டுவரும் தமது உறவுகளுக்காக உணர்வுடன் திரண்ட ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் இந்தப் பேரணியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது உணர்வினை வெளிப்படுத்தினர். பிரபாகரனை நேசித்த மக்களைக் கொண்டவையும், அவர் சிறிதுகாலம் வாழ அடைக்கலம் கொடுத்தவையுமான இரு பழமை மிக்க நகரங்களான மதுரைக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலேயே இந்தப்பேரணி நடைபெற்றிருந்தது.
பிரபாகரனுடன் நெடுமாறன் 80 களின் இறுதிப்பகுதியில்
ஒரு தொகை மீன்பிடிப் படகுகள் மூலம் பாக்கு நீரிணையைக் கடந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்வதே நெடுமாறனின் நோக்கமாக இருந்தது. கொழும்பும், தில்லியும் நெடுமாறனின் இந்த முயற்சியினால் கடுமையான நெருக்கடியச் சந்தித்தன. தனது சிறிய கடற்படையை உசார்ப்படுத்திய ஜெயார், பாக்கு நீரிணையைக் கடக்கும் படகுகள் அனைத்தையும் தடுத்துவிடும்படி ஆணையிட்டார். இது தேவையற்ற மோதலை உருவாக்கிவிடும் என்று அஞ்சிய தில்லி, நெடுமாறனின் முயற்சியைத் தடுத்து நிறுத்தியது. எம் ஜி ஆருடன் பேசிய இந்திரா காந்தி, நெடுமாறன் யாழ்ப்பாணத்திற்குச் செல்வதை நிறுத்தும்படி கோரினார். நெடுமாறனுக்கு மீன்பிடிப் படகுகளை வழங்குவதைத் தடுத்ததன் மூலம் அவரின் முயற்சியை முறியடித்தார் எம்.ஜி.ஆர். தனது காவல்த்துறையைக் கொண்டு தமிழ்நாட்டின் கரையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகளை அகற்றினார். இந்தியாவின் சுதந்திர தினமான ஆவணி 15 ஆம் திகதி இராமேஸ்வரத்தின் கரையை வந்தடைந்த நெடுமாறனின் பேரணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் யாழ்ப்பாண செல்வதற்கென்று இரு ஓட்டை விழுந்த படகுகள் மட்டுமே அக்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அவற்றின் ஒன்றில் ஏறிக்கொண்ட நெடுமாறன், அதன் உரிமையாளரைப் பார்த்து படகினை யாழ்ப்பாணம் நோக்கிச் செலுத்துமாறு கோரினார். நெடுமாறனின் கோரிக்கயினை வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொண்ட அந்த உரிமையாளரினால் கடலில் சிறிது தூரம் மட்டுமே செல்ல முடிந்தது. படகின் அரைப்பகுதிக்கு நீர் நிரம்பிவிட, வேறு வழியின்றி படகு மீண்டும் கரையை வந்தடைந்தது.
தனது முயற்சியைத் தடுத்து நிறுத்தியது எம்.ஜி.ஆர் என்பதை நெடுமாறன் உடனடியாக உணர்ந்துகொண்டார். ஆத்திரம் மேலிட, "எம்.ஜி.ஆரே இதனைச் செய்ததது. என்னைக் கைது செய்யுங்கள், கைதுசெய்யுங்கள்" என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற பொலீஸாரைப் பார்த்துக் கோபத்துடன் கத்தினார் நெடுமாறன்.
கருநாநிதியும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.அன்பழகனும் தமிழ்நாட்டில் பெருகிவந்த ஈழ ஆதரவு சூழ்நிலையினை தமக்குச் சார்பாகப் பாவிக்க எண்ணினர். ஆகவே, தமிழ்நாட்டுச் சட்டசபையில் தாம் வகித்த பதவிகளைத் திறந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கப்போவதாகக் கூறினர். ஆனால், தொழிநுட்பக் கோளாறுகள் இருப்பதாகக் கூறி அவர்கள் இருவரினதும் இராஜினாமாக் கடிதங்களை ஏற்றுக்கொள்ள சபாநாயகர் மறுத்துவிட்டார். ஆனால், சட்டசபை அமர்வுகளை புறக்கணித்து வந்த இவர்கள் இருவரும், இந்திய மத்திய அரசு வங்கதேசப் பிரச்சினையில் வங்காளிகளுக்குச் சார்பாக நடந்துகொண்ட போதும், ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு தனிநாடு காண உதவவில்லை என்று குற்றஞ்சாட்டினர். தமிழர் பிரச்சினை தொடர்பாக தில்லிக்குப் போதிய அழுத்தத்தினைக் கொடுக்கவில்ல என்று எம்.ஜி.ஆரையும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். தி.மு.க வுக்குச் சார்பான பத்திரிக்கைகள், எம்.ஜி. ஆர் ஒரு மலையாளி என்பதாலும், இலங்கையின் கண்டியில் பிறந்ததாலும் அவர் ஈழத்தமிழருக்கு அனுதாபம் காட்டவில்லை என்று எழுதியிருந்தன.
தன்மீதான விமர்சனத்தினால் ஆத்திரப்பட்ட எம்.ஜி.ஆர் சர்வகட்சி மாநாடு ஒன்றினைக் கூட்டி தில்லிக்கு அழுத்தம் கொடுக்க எண்ணினார். தி.மு.க இக்கூட்டத்தைப் புறக்கணித்திருந்தது. ஆனால், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றதோடு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தில்லி தலையிடவேண்டும் என்று கோரி தீர்மானம் ஒன்றினையும் நிறைவேற்றியது.
அமிர்தலிங்கம் ஆவணி 16 ஆம் திகதி சென்னைக்குத் திரும்பினார். சென்னை திரும்பியதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆரைச் சென்று சந்தித்தார். பின்னர் கருநாநிதியைச் சந்திக்க விரும்பினார். ஆனால், தன்னைச் சந்திக்கும் முன்னர் எம்.ஜி.ஆரை அமிர்தலிங்கம் சென்று சந்தித்தமை கருநாநிதிக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, தன்னைச் சந்திக்கவேண்டும் என்று அமிர்தலிங்கம் கேட்டபோது, தான் திருச்சியில் மூன்றுநாட்கள் தங்கியிருப்பதால், தன்னால் அமிர்தலிங்கத்தைச் சந்திக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டார். ஆகவே, திருச்சிக்குச் சென்ற அமிர்தலிங்கம் கருநாநிதியைச் சந்தித்து அவரைச் சாந்தப்படுத்தினார்.