போராளிகளுடன் இணைந்து செயற்பட்ட பொதுமக்கள்
ஒட்டுசுட்டான் பொலீஸ் முகாம் மீதான தாக்குதலில் பரமதேவா முக்கியமான பாத்திரத்தினை வகித்திருந்தார். ஆகவே, அவரை கிழக்கு மாகாணத்தில் புலிகளின் நடவடிக்கைகளை முடுக்கிவிட பிரபாகரன் அனுப்பிவைத்தார். அடுத்துவந்த இரு மாதங்களுக்கு கிழக்கில் இராணுவத்தினருக்குத் தலையிடியைக் கொடுக்கும் நடவடிக்கைகளில் பரமதேவா ஈடுபட்டார். களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற தாக்குதல் முயற்சியொன்றில் அவர் மரணமடைந்தார். அவரது இழப்பு புலிகளை பெரிய அளவில் பாதித்திருந்தது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஐந்தாவது இரவாக மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றன. கடைகளை உடைத்துத் திறந்த இராணுவத்தினர் அவற்றைக் கொள்ளையிட்டதுடன், தீவைத்து எரித்தனர். வீதிகளிலும், வீடுகளிலும் இருந்த பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். போராளிகளும் தொடர்ச்சியாக இராணுவத்தினர் மீதும், பொலீஸார் மீதும் யாழ்ப்பாணத்து வீதிகளில் தாக்குதல்களை நடத்தி வந்தனர். இவ்வாறான தாக்குதல்களில் இராணுவத்தினரிடமிருந்து ஆயுதங்களும் வெடிபொருடகளும் அவர்களால் கைப்பற்றப்பட்டன. இடைக்கிடையே வாகனங்களும், பணமும் அவர்களால் கொள்ளையிடப்பட்டன. இதே காலப்பகுதியில் சமூகவிரோதிகளுக்கும், இராணுவத்தினருக்காக உளவுபார்த்தவர்களுக்கும் ஆங்காங்கே மின்கம்ப மரணதண்டனைகளும் வழங்கப்பட்டு வந்தன.
காங்கேசந்துறைச் சீமேந்துத் தொலிற்சாலையிலிருந்து நான்கு துப்பாக்கிகள், குண்டுவெடிக்கவைக்கும் கருவிகள், ஜீப் வண்டி ஆகியவை போராளிகளால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. சுண்ணாம்புக் கற்களை அகழ்ந்து எடுக்கும் சுரங்கப்பகுதியில் பாறைகளை வெடிக்கவைத்து விட்டு , நான்கு ஆயுதம் தரித்த காவலாளிகள் பாதுகாப்பு வழங்க, பொறியியலாளர் ஏ. ஜேசுதாசன் மீதி வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு ஜீப் வண்டியில் வந்துகொண்டிருந்தார். திடீரென்று வாகனத்திற்கு முன்னால் வீதியில் குதித்த ஐந்து ஆயுதம் தரித்த இளைஞர்கள் ஜீப் வண்டியை மறித்தனர். பின்னர், ஜீப் வண்டியையும், காவலர்கள் வைத்திருந்த ஆயுதங்கள், ரவைகள், வெடிபொருட்கள் என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்றனர்.
அவ்வாறே, வங்கிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், அரச திணைக்களங்கள் ஆகியவற்றிலிருந்தும் போராளிகளால் ஆயுதங்களும், ரவைகளும் எடுத்துச் செல்லப்பட்டன. தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்திற்கு வந்த நான்கு ஆயுதம் தரித்த இளைஞர்கள், கட்டடத்தின் கதவுகளை உடைத்துத் திறந்து அங்கிருந்த பணத்தையும், துப்பாக்கி ஒன்றையும் எடுத்துச் சென்றனர். இன்னொரு குழு பண்டைத்தரிப்பு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கட்டடத்திலிருந்து பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த அரச திணைக்களம் ஒன்றிற்குள் புகுந்த இளைஞர் குழு ஒன்று காவலாளியை மிரட்டி அங்கிருந்த தட்டச்சுச் செய்யும் இயந்திரத்தையும், ரோனியோ இயந்திரத்தையும், காவலாளியின் துப்பாக்கியையும் எடுத்துச் சென்றது.
ஒட்டுமொத்த யாழ்ப்பாணக் குடாநாடுமே கலவர பூமியாகக் காட்சியளித்தது. பொதுமக்களும் வீதிகளுக்கு இறங்கியிருந்தனர். தம்மால் எடுத்துவரக்கூடிய மரக்குற்றிகள், சீமேந்துத் தூண்கள், கற்கள் ஆகியவற்றை வீதிகளுக்குக் குறுக்கே இட்டு தடைகளை ஏற்படுத்தினர். சிலவிடங்களில் டயர்களும் வீதிக்குக் குறுக்கே போடப்பட்டு எரிக்கப்பட்டன. இராணுவ முகாம்களையும் , பொலீஸ் நிலையங்களையும் சூழவுள்ள வீதிகளில் இத்தடைகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களை முடக்குவதே பொதுமக்களின் நோக்கமாக இருந்தது. பொதுமக்களால் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடைகளுக்கு அருகே போராளிகள் கண்ணிவெடிகளைப் புதைக்கத் தொடங்கினர்.
இவ்வாறான பதட்டமான சூழ்நிலையில் அரசுக்குச் சொந்தமான வங்கியொன்று இரு போராளிக் குழுக்களால் கொள்ளையிடப்பட்டது. ஸ்டான்லி வீதியில் அமைந்திருந்த இலங்கை வங்கியினைக் கொள்ளையிடும் நோக்கத்தில் பலநாட்களாக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு அதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிட்டும் தகவல்களைச் சேகரித்தும் வந்திருந்தது. இன்னொரு சிறிய போராளி அமைப்பான தமிழீழ தேசிய விடுதலை முன்னணி எனும் அமைப்பும் இதே வங்கியைக் கொள்ளையிட நடவடிக்கைகளை எடுத்து வந்தது. பொதுமக்களின் எழுச்சியைப் பாவித்து அன்றிரவு ஸ்டான்லி வீதி வங்கியைக் கொள்ளையிடுவதே அந்த அமைப்பின் நோக்கம்.
அதற்காக இரு பாரவூர்திகளையும் ஒரு வான் ரக வாகனத்தையும் தமிழ் ஈழத் தேசிய விடுதலை முன்னணி கடத்திச் சென்றது. அந்த வாகனங்களில் அவ்வமைப்பின் போராளிகள் ஏறிக்கொண்டார்கள். வங்கிக்கொள்ளை விசாரணைகளின்போது சாட்சியங்கள் கூறுகையில் குறைந்தது 50 போராளிகளாவது அந்த வாகனங்களில் இருந்தார்கள் என்று கூறியிருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு உப இயந்திரத் துப்பாக்கியும் (எஸ் எம் ஜி) சில கிர்னேட்டுக்களும், சில சுழழ்த் துப்பாக்கிகளும் இருந்தன. வங்கியின் முன்னால் அமைந்திருந்த கதவினை உடைத்துத் திறந்த அவர்கள், உள்ளே நுழைந்து குண்டுகளை வெடிக்க வைத்தனர். வங்கியின் உட்பகுதியில் இருந்த பலமான கதவு குண்டுவெடிப்பினால் உடைந்து வீழ்ந்தது. பணமும், நகைகளும் பாதுகாப்பாக வைத்திருந்த ஒரு பெட்டகத்தை அவர்கள் எடுத்துச் சென்றார்கள். அத்துடன் உள்ளேயிருந்த ரைபிள்களையும் எடுத்துச் சென்றார்கள். ஆனால், ஏனைய நகைகளும் பணமும் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பான அறையினை அவர்களால் உடைக்கமுடியவில்லை. ஆகவே, நேரத்தை விரயமாக்காது தாம் வந்த வாகனங்களிலேயே தப்பிச் சென்றார்கள்.
இந்த வங்கிக்கொள்ளை பற்றி ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு அறிந்துகொண்டது. உழவு இயந்திரம் ஒன்றினை எடுத்துக்கொண்டு வங்கியை நோக்கிச் சென்றது அவ்வமைப்பின் குழு ஒன்று. வங்கிக்கொள்ளையினை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களின் உதவியுடன், மீதமாகவிருந்த நகைகளும் பணமும் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை அவர்கள் எடுத்துச் சென்றனர்.
"எங்கள் பிள்ளைகளே எங்கள் காவலர்கள்"
ஆவணி 6 ஆம் திகதி, அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டத்தினப் பாவித்து இராணுவம் தொடர்ச்சியாக அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்தது. தம்மீதான போராளிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்குவதற்காக பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலை அது நடத்தி வந்தது. ஆனால், போராளிகளும் தொடர்ச்சியாக இராணுவத்தின் மீது தாக்குதல்களை நடத்தியே வந்தனர். அரசின் ஒடுக்குமுறையினால் ஏலவே பாதிக்கப்பட்டிருந்த தமிழர்களைப் பொறுத்தவரை தம்மைக் காக்கவேண்டிய இராணுவமும், பொலீஸும், கடற்படையும் தம்மீது தாக்குதல் நடத்தி, பலரைக் கொன்றும், சொத்துக்களைச் சூறையாடியும் வந்தமை கடுமையான அதிருப்தியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, இயல்பாகவே அவர்கள் போராளிகளின் பக்கம் சாயவேண்டிய நிலை ஏற்பட்டது. போராளிகளுக்கு, தாமாகவே முன்வந்து, விருப்புடன் தமிழர்கள் உதவும் சூழ்நிலை அங்கு உருவானது. போராளிகளுக்கான மக்களின் ஆதரவு பல்கிப் பெருகத் தொடங்கியது. "எங்கள் பிள்ளைகளே எங்கள் காவலர்கள்" எனும் மனோநிலை அனைவர் மனதிலும் ஆழமாக வேரூன்றிக்கொண்டது. அரச படைகளை, "சிங்கள இராணுவம், சிங்களப் பொலீஸ், அந்நியர்கள், ஆக்கிரமிப்பாளர்கள்" என்று தமிழர்கள் அழைக்கும் நிலை உருவானது.
ஆவணி 6 ஆம் திகதி, யாழ்ப்பாணம் மக்கள் வங்கிக்கிளை தனது நாளாந்த அலுவல்களை ஆரம்பித்த வேளை மக்களோடு மக்களாக பத்து இளைஞர்கள் சுழழ்த் துப்பாக்கிகளுடன் உள்நுழைந்தனர். சிறிது நேரத்தின் பின்னர், 'நாங்கள் இங்கே குண்டுகளை வைத்திருக்கிறோம், அனைவரும் ஓடித் தப்புங்கள்" என்று அவர்கள் கூச்சலிட்டார்கள். அங்கிருந்த பொதுமக்கள், ஊழியர்கள், முகாமையாளர் என்று அனைவருமே வங்கியை விட்டு வெளியே ஓட ஆரம்பித்தார்கள். இந்தக் கலவரத்தில் அங்கிருந்த மூன்று காவலாளிகளிடமிருந்த துப்பாக்கிகளையும் குண்டுகளையும் அந்த இளைஞர்கள் பறித்துச் சென்றார்கள்.
வவுனியாவில் இடம்பெற்ற பழிவாங்கல்ப் படுகொலைகளும், கூட்டுப் பாலியல் வன்புணர்வும்
வவுனியா நகரிலும் அன்று போராளிகளால் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பொலீஸ் அத்தியட்சகர் ஆர்தர் ஹேரத் வழமைபோல தனது காரியாலயத்திற்குள் நுழைந்து தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார். அவரது மேசைக்குக் கீழே பொறுத்தப்பட்டிருந்த நேரம் குறித்து வெடிக்கும் குண்டு செயற்பட வைக்கப்பட, பொலீஸ் அத்தியட்சகர் உடல்சிதறி மரணமானார். புளொட் அமைப்பே இந்தக் குண்டினை வைத்திருந்தது. காந்தியம் அமைப்பில் அக்காலத்தில் செயற்பாடு வந்த சந்ததியாரே இக்குண்டுவெடிப்பைத் திட்டமிட்டு நடத்தியதாக கூறப்பட்டது. காந்தியம் தலைவர்கள் மீது பொலீஸார் நடத்திய அடாவடித்தனம், இந்திய வம்சாவளித் தமிழர்களை காந்தியத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றியமை ஆகிய காரணங்களுக்காக பொலீஸார் மீது இத்தாக்குதலை புளொட் நடத்தியிருந்தது. ஹேரத் மரணிப்பதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் மாங்குளம் வாடி வீட்டில் அவரைச் சந்தித்தேன். லலித் அதுலத் முதலியின் விஜயத்தை செய்தியாக்குவதற்காக நான் அங்கு சென்றிருந்தேன்.
ஹேரத்தின் மரணத்திற்குப் பழிதீர்க்க இராணுவமும் பொலீஸாரும் செயலில் இறங்கினார்கள். வவுனியா நகரப்பகுதிக்கு வாகனங்களில் வந்திறங்கிய 25 பொலீஸார், அங்கிருந்த தமிழருக்குச் சொந்தமான அனைத்துக் கடைகளையும் அடித்து நொறுக்கியதுடன் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமும் செய்தனர். நகரில் இயங்கிவந்த "வேல் கபே" எனும் உணவு விடுதிக்குள் நுழைந்த பொலீஸார் அதன் உரிமையாளரையும், உணவருந்திக்கொண்டிருந்த ஆறு பொதுமக்களையும் சுட்டுக் கொன்றனர்.
அன்றிரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தனியார் பேரூந்தொன்றில் பயணம் செய்த நான்கு தமிழ்ப் பெண்களை, பேரூந்தினை மறித்த விமானப்படடையினர் தம்முடன் இழுத்துச் சென்றனர். கூட்டாகப் பாலியல் வன்புணர்வுள்ளாக்கப்பட்ட அந்த நான்கு பெண்களும் பின்னர் விமானப்படையினரால் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டனர். மறுநாளான ஆவணி 7 ஆம் திகதி, வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் வழியில், நகரில் இருந்து மூன்று கிலோமீட்டர்கள் தொலைவில் கொல்லப்பட்ட மேலும் 10 தமிழர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், வழமைபோல பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட லியனகே, இத்தமிழர்கள் அனைவரும் போராளிக் குழுக்களுக்கிடையிலான மோதலில் அகப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று கூறினார். மேலும், ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத் தாக்குதலுக்குப் பழிவாங்கிய பொலீஸார் சரித்திர முக்கியத்துவம் பெற்ற தம்பலகாமம் சிவன் கோயிலை இடித்து நொறுக்கியதுடன், பூசகரையும் அடித்து இழுத்துச் சென்றனர்.
சுண்ணாகம் பொலீஸ் நிலையப் படுகொலை
ஆவணி 9 ஆம் திகதி, மொத்தத் தமிழினத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய படுகொலையொன்று நடந்தேறியது. யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையத்திற்கு அடுத்ததாக, சுண்ணாகத்தில் அமைந்திருக்கும் பொலீஸ் நிலையமே வடபகுதியில் இருந்த பொலீஸ் நிலையங்களுக்குள் பெரியதாக இருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாக கைதுசெய்யப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் சுண்ணாகம் பொலீஸ் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள். யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை வீதியில் அமைந்திருந்த இரண்டு மாடிகளைக் கொண்ட இப்பொலீஸ் நிலையம் மீது புதன்கிழமை டெலோ அமைப்பினர் நடத்திய தாக்குதல் முயற்சி பொலீஸாரினால் முறியடிக்கப்பட்டிருந்தது . ஆனால், புதன் இரவும் இன்னொரு தாக்குதல் முயற்சியில் டெலோ அமைப்பினர் இறங்கப்போகிறார்கள் என்கிற செய்தி பொலீஸாருக்குக் கிடைத்தது. பின்னாட்களில் நடந்த விசாரணைகளின்போது, அன்றிரவே சுண்ணாகம் பொலீஸார் யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையம் நோக்கிச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், அவ்வாறு யாழ்ப்பாணத்திற்குப் போகும் முன்னர், தாம் அடைத்துவைத்திருந்த இளைஞர்கள் அனைவரையும் ஒரு அறைக்குள் அடைத்துப் பொலீஸார் பூட்டினர். அந்த இளைஞர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டும், கண்கள் மறைக்கப்பட்டும், அவர்கள் கூச்சலிடாதபடி வாய்களுக்குள் துணிகள் பொதிந்தும் அடைக்கப்பட்டார்கள். பின்னர், அவ்வறையின் கதவினை எவராவதுதிறக்க எத்தனித்தால், அவ்வறையினை முற்றாக இடித்துத் தரைமட்டமாக்கக் கூடியவகையில் பாரிய குண்டொன்றைப் பொலீஸார் பொறுத்திவிட்டுச் சென்றார்கள். அன்று உயிர்தப்பிய சிலர் விசாரணைகளின்போது பேசுகையில், தம்மில் சிலர் ஒருவாறு கைக்கட்டுக்களையும், வாயில் அடைக்கப்பட்ட துணிகளையும் அகற்றிவிட்டு உதவி கோரிக் கூச்சலிட்டிருக்கிறார்கள். பொலீஸார் வெளியேறியபின்னர் அப்பகுதியில் குழுமிய பொதுமக்கள் உள்ளிருந்து வரும் கூச்சல்களைச் செவிமடுத்தவுடன், கதவினை உடைத்துத் திறக்க எத்தனித்திருக்கிறார்கள். இதன்போது கதவில் பொறுத்தப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இக்குண்டுவெடிப்பில் உள்ளே அடைக்கப்பட்டிருந்த இளைஞர்களும், உதவிக்கு வந்த பொதுமக்களுமாக குறைந்தது 20 பேர் அவ்விடத்திலேயே உடல்சிதறிக் கொல்லப்பட்டார்கள்.
பொலீஸாரினால் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களின் மரணங்களை கொழும்பு ஊடகங்கள் பின்வருமாறு தலைப்பிட்டு மகிழ்ந்தன, "பயங்கரவாதிகளின் தாக்குதலை பொலீஸார் முறியடித்து விட்டனர்". இப்படுகொலை பற்றிய பொய்ப்பிரச்சாரத்தை அவை முடுக்கிவிட்டிருந்தன. சண்டே ஒப்சேர்வர் தனது செய்தியில் பயங்கரவாதிகளின் தாக்குதலை பொலீஸார் முறியடித்து விட்டதாகவும், மேலதிக ஆளணி உதவி பொலீஸாரால் விடுக்கப்பட்டதாகவும் எழுதியது. மேலும், சுண்ணாகம் பொலீஸாரின் உதவி கோரலினையடுத்து யாழ்ப்பாணத்திலிருந்த ஏனைய பொலீஸ் நிலையங்களில் இருந்து பொலீஸார் விரைந்து சென்று சண்டையில் ஈடுபட்டதாகவும், கடுமையான சண்டையில் இருபதிற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அச்செய்தி கூறியது.
நாவற்குழி படுகொலை
மறுநாள், ஆவணி 10 ஆம் திகதி இரவு, குருதியை உரையவைக்கும் இன்னொரு கொடூரமான படுகொலை ஒன்று இராணுவத்தினரால் அரங்கேற்றப்பட்டது. 10 பேர் கொண்ட குடும்பம் ஒன்று கைதடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி தனியார் வாகனமொன்றில் பயணம் செய்துகொண்டிருந்தனர். இவர்களுள் ஆறு பேர் குழந்தைகள். நாவற்குழி இராணுவத் தடைமுகாமின் அரணில் நின்ற இராணுவத்தினர் அவ்வண்டியை மறித்தனர். முகாமின் அருகிலிருந்த ஆள் ஆரவாரம் அற்ற இடமொன்றிற்கு இழுத்துச் செல்லப்பட்ட அக்குழந்தைகளும் பெற்றோரும் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இப்படுகொலையினை அரச வானொலி பிரச்சாரப்படுத்திய விதம் தமிழ் மக்களை மேலும் ஆத்திரம்கொள்ள வைத்தது. "கைதடிப்பகுதியில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள் " என்று பொதுமக்களின்படுகொலை பிரச்சாரப்படுத்தப்பட்டது.