Everything posted by ஏராளன்
-
நாடக நடிகர்களைப்போல செயற்படும் ஆட்சியாளர்கள்; தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன - ரவிகரன் எம்.பி
நாடக நடிகர்களைப்போல செயற்படும் ஆட்சியாளர்கள்; தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன - ரவிகரன் எம்.பி Published By: Vishnu 05 Feb, 2026 | 04:38 AM ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு பாரிய உதவிகளைச் செய்வதாக நாடகநடிகர்களைப்போல் ஒருபுறம் செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள்மீது பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளைப் பிரையோகிப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தவகையில் ஆட்சியாளர்களின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பெறுவதனாலேயே, அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டங்களும் வலுப்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சுதந்திரநாளினை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் 04.02.2026 புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளில் வருடாவருடம் இதேநாளில் எமது போராட்டம் தொடர்சியாக இடம்பெற்றுவருகின்றது. இலங்கையின் ஆட்சியாளர்கள் கடந்த 1948ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களையும் இந்த நாட்டின் பிரஜைகளாகக் கருதி அதிகாரங்களை முறையாகப் பகிர்ந்தளித்தாருந்தால் இவ்வாறான போராட்டங்களே இடம்பெற்றிருக்காது. ஆனால் நாட்டின் ஆட்சியாளர்கள் அனைவரும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பரப்புக்களில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பது, திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களை மேற்கொள்வது, பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை அமைப்பது, வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடுவதென அனைத்து வழிகளிலும் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளை பிரையோகித்துவந்தனர். இவ்வாறு தமிழர்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டதற்கு எதிராக கடந்த காலங்களில் எம்மவர்கள் அகிம்சைவழியில் போராட்டங்களை மேற்கொண்டதுடன், அந்த அகிம்சைவழிப் போராட்டங்கள் பயனற்றுப்போன நிலையில் எமது இளையோர் ஆயுதங்களை ஏந்திப் போராடவேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு புள்ளிவிபரத்தை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் 222006 ஏக்கர் காணிகளே வனவளத்திணைக்களத்திடம் காணப்பட்டது. ஆனால் தற்போது வனவளத்திணைக்களத்திடம் 432000 ஏக்கருக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் வன இலாகாவிடம் மாத்திரமுள்ளன. குறிப்பாக்தமிழர் தாயகப் பரப்புகளில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, படையினர் உள்ளிட அரச இயந்திரங்களைப் பயன்படுத்தி மிகப்பாரிய அளவில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எமக்கு நிலமில்லையேல் எமக்கு எதுவுமில்லை. தமிழர்களின் நிலங்கள் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டால் அந்த நிலங்களுக்குரிய தமிழ் மக்கள் எங்கு போவது. தமிழர்களுக்கு உதவிகளைச்செய்கின்றோமென ஆட்சியாளர்கள் ஒருபுறம் நாடக நடிகர்களைப்போல செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழர்களின் காணிகளை ஆட்சியாளர்கள் கபளீகரம் செய்கின்றனர். எமது கடற்பரப்புக்களில் எமது கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியாத நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துகின்றனர். நில அபகரிப்புக்களின்மூலம் எமது தமிழ் மக்கள் சுதந்திரமாக விவசாயத்தை மேற்கொள்ளமுடியாதநிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துவதுடன், கால்நடை வளர்ப்பாளர்களுக்குரிய மேச்சல் தரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கால் நடைவளர்ப்பாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஆட்சியாளர்கள் உரிய கவனஞ்செலுத்துவதில்லை. இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதியை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் தவறிவருகின்றனர். இவ்வாறாக வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்தில் வாழும் எமது தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் ஆட்சியாளர்களால் துன்பப்படுகின்றனர். தற்போது தமிழர்தாயகப் பரப்பில் பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அளவில் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே தமிழர் தாயகப்பரப்பில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இவ்வாறான திட்டமிடப்பட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அங்கு திட்டமிட்டு சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்தியதன்மூலம் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை பெரும்பான்மையினத்தவர்களின் ஆதிக்கத்தின்கீழ் தற்போது ஆட்சியாளர் கொண்டுவந்துள்ளனர். ஆட்சியாளர்களின் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்களின் அடுத்தகட்ட செயற்பாடுகள் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை நோக்கி நகர்கின்றன. எனவே இவ்வாறாக தமிழர்களுக்கு ஆட்சியாளர்களால் அநீதி இழைக்கப்படும்போது நாம் அதற்கெதிராக நீதிக்குரல் எழுப்பாமல் இருக்கமுடியாது. இவ்வாறு தமிழர்கள்மீது ஆட்சியாளர்கள் அடக்குமுறைகளைப் பிரயோகிக்கும்போது, இலங்கையின் சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் தமிழர்களால் எவ்வாறு பங்கேற்கமுடியும். ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது இவ்வாறாக அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றபோது, தமிழ் மக்கள் அதற்கெதிராக போராடுவதற்காக வீதிக்கு இறங்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனவே ஆட்சியாளர்கள் தமிழர்களை இந்தநாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்கவேண்டும். ஆட்சியாளர்களால் இவ்வாறு பலவழிகளிலும் தமிழர்கள்மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றநிலையில், சிலஅமைச்சர்கள் வேடிக்கையான கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். தமிழ் மக்களுக்கு நன்மைகளைச் செய்வதாகவும், உதவிகளைச் செய்வதாகவும் பாரிய பொய்களைக் கூறிவருகின்றனர். தமிழர் தாயகப்பரப்பிலுள்ள தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில் இல்லை. எனவே தமிழ் மக்களுக்குரிய அதிகாரங்களைப் பகிர்ந்தளியுங்கள். தமிழர்களுக்கு ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வைவழங்க முன்வாருங்கள். உரிமைகளை வழங்குங்கள். கடந்தகாலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை வழங்குங்கள். தமிழ் மக்களை இந்தநாட்டில் சுதந்திரமாகவாழவிடுங்கள். இந்தநாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரமாக இல்லை. ஆட்சியாளர்களால் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பதாலேயே இலங்கையின் சுதந்திரநாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களால் வீதியில் இறங்கி இவ்வாறான மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கு, கிழக்கு தமிழர்தாயகப் பரப்பில் தமிழ் மக்கள் தமக்குரிய அதிகாரங்கள், உரிமைகளுடன் எப்போது தன்நிறைவுபெற்று சுதந்திரமாக வாழ்கின்றார்களோ அன்று தான் தமிழ் மக்களுக்கு சுதந்திரநாள் - என்றார். https://www.virakesari.lk/article/237840
-
அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் அரசியல் தீர்வு உள்வாங்கப்படுவது அவசியம் - கலாநிதி குமாரவடிவேல் குருபரன்
அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் அரசியல் தீர்வு உள்வாங்கப்படுவது அவசியம் - கலாநிதி குமாரவடிவேல் குருபரன் 04 Feb, 2026 | 06:23 PM (நா.தனுஜா) தற்போது பேசப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும் என கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அப்புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்குவதற்காக தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்ததும், தொழில்நுட்ப ரீதியாக உறுதியானதும், உண்மையிலேயே சகலரையும் உள்ளடக்கியதுமான ஓர் அணுகுமுறையை நிறுவும் நோக்கில் 'வன் டெக்ஸ்ட் இனிஸியேட்டிவ்' (One Text Initiative) எனும் அமைப்பினால் செவ்வாய்க்கிழமை (3) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு கலந்துரையாடல் செயன்முறையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி இதுபற்றிய தகவல்களைப் பகிர்வதுடன், கருத்தாடல்களைக் கட்டியெழுப்பும் நோக்கில் citizen's constitution.lk என்ற இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துரைக்கையிலேயே குருபரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் 2022 ஆம் ஆண்டு உருவான 'அரகலய' மக்கள் எழுச்சிப்போராட்டத்தின் பின்னரேயே தீவிரமடைந்திருக்கின்றன. இருப்பினும் அதன் பின்னரான தேர்தல்களில் வாக்களித்த தமிழ்மக்கள், தமக்கான அரசியல் தீர்வுக்கு முன்னுரிமையளித்து, அதனைப் பிரதிபலிக்கும் வகையிலேயே வாக்களித்திருக்கிறார்கள். அந்தவகையில் தற்போது பேசப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும். அதேபோன்று இலங்கை ஒரு பல்லின அரசு என்பதை நாமனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறோமா என்ற கேள்விக்கான பதிலைக் கண்டறியவேண்டும். அதனூடாக மாத்திரமே சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அரசியலமைப்பை உருவாக்கமுடியும். அதுமாத்திரமன்றி அரசியலமைப்பில் சில சொற்பதங்களை உள்ளடக்கிவிட்டு, அதனை சிங்களவர்களுக்கு ஒருவிதமாகவும், தமிழர்களுக்குப் பிறிதொரு விதமாகவும் கூறி சமாளிக்கமுடியாது. அதனடிப்படையிலேயே கடந்த காலங்களில் 'ஒருமித்த நாடு' மற்றும் 'ஏக்கிய இராச்சிய' உள்ளிட்ட சொற்பதங்கள் தொடர்பான தர்க்கங்கள் உருவாகின. தற்போது பெரும்பான்மைப்பலத்துடன் ஆட்சிபீடம் ஏறியிருக்கும் இந்தப் புதிய அரசாங்கத்துக்கு, சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறான அரசியலமைப்பை உருவாக்குவதற்கும், அதனை அனைத்து மக்களையும் ஏற்றுக்கொள்ளச்செய்வதற்குமான பெருவாய்ப்பு காணப்படுகின்றது. அவ்வாய்ப்பு உரியமுறையில் பயன்படுத்தப்படவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237833
-
அரசு திரைப்பட விருதுகள் சர்ச்சையாவது ஏன்?
'வெளியாகாத ரீமேக் படத்துக்கு விருதா?' அரசு திரைப்பட விருதுகள் சர்ச்சையாவது ஏன்? பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் மீனாட்சி சுந்தரம் பிபிசி தமிழுக்காக 4 பிப்ரவரி 2026 தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களுக்கு, சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு திரைப்பட விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். கடந்த அதிமுக ஆட்சியிலும் பல ஆண்டுகளாக விருதுகள் அறிவிக்கப்படவில்லை. திமுக ஆட்சி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையிலும் விருதுகள் குறித்த அறிவிப்பு வராமல் இருந்தது. இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்கு, அதாவது 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரைக்குமான விருதுகள் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. அதேபோல், சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டன. திரைப்படம், சின்னத்திரை சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டன பிப்ரவரி 13ம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில் இந்த விருதுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார். தமிழ்நாடு அரசின் விருது பெற உள்ளவர்கள், தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். அதேசமயம், இயக்குநர்-தயாரிப்பாளர் பா.ரஞ்சித் விருது அறிவிப்பு வந்த மறுநாள் வெளியிட்ட அறிக்கையில் ''தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?" என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும், தான் இயக்கிய 'மிக மிக அவசரம்' படத்திற்கு விருது வழங்கப்படாததற்கு அதிருப்தி தெரிவித்தார். படக்குறிப்பு,இயக்குநர் பா. ரஞ்சித் சேரன் கூறியது என்ன? இயக்குநரும், நடிகருமான சேரன் தனது எக்ஸ் தள பதிவில், ''பெண்களுக்கு இலவச பாஸ், திருமணத்திற்கு அரசு உதவி இதெல்லாம் செய்கிறது அரசு. பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும், வாழ்ககைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த திருமணம் திரைப்படம் தேர்வு குழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது." என தெரிவித்துள்ளார். நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றடைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். "அரசுகள் மாறலாம். அரசின் நிலைப்பாடு என்றும் பாரபட்சமாக இருக்க கூடாது'' என சேரன் தெரிவித்துள்ளார். அதேபோல், நடிகை லட்சுமிப்ரியா, "'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்', 'மண்டேலா' திரைப்படங்கள் தேசிய விருதுகளை வென்றன. ஆனால் மாநில விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதை நான் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். தயவுசெய்து விளக்குங்கள் '' என தெரிவித்துள்ளார். படக்குறிப்பு,மண்டேலா படம் இந்த படத்துக்கு விருதா? நடிகர்கள் விமல், ஸ்ரேயா நடிப்பில் உருவான 'சண்டக்காரி' என்கிற திரைப்படத்திற்கு 2020 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது சிறந்த திரைப்படம், சிறந்த பாடகர், சிறந்த கலை இயக்குநர் ஆகிய பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு திரைத்துறையினர், நடிகர், நடிகைகள் பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதற்கு காரணம், சண்டக்காரி படம் மலையாளத்தில் உருவான, 'மை பாஸ்' என்கிற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமாகும். சண்டக்காரி இன்னும் திரையரங்குகளிலோ, ஓடிடியிலோ வெளியாகவே இல்லை. அப்படி இருக்கும்போது, எப்படி அந்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். குழந்தை நட்சத்திரங்கள் ஆதங்கம் பட மூலாதாரம்,monicasiva_offl படக்குறிப்பு,மோனிகா அதுமட்டுமல்லாமல், கைதி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மோனிகாவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார் "ஐந்து வயதிலிருந்தே நான் திரைப்படத் துறையில் நடித்து வருகிறேன். 2016 முதல் 2022 வரை, இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். அவற்றில் பல திரைப்படங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு, கொண்டாடப்பட்டன. சில திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தாலும், நான் நடித்த பல கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கக்கூடியவையாக இருந்தன." என குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும், சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றவர்கள், அங்கீகாரத்தை அளிக்கும் அளவுக்கான வேடத்தில் நடிக்கவில்லையோ என்ற கேள்வி எழுவதாக மோனிகா தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,ashwanth_ashokkumar படக்குறிப்பு,அஸ்வந்த் மற்றொரு குழந்தை நட்சத்திரமான அஸ்வந்த், "இந்த விருதில் நான் இருப்பேன் என்று நினைத்தேன். குறிப்பாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காவது கிடைக்கும் என்று நம்பினேன். அது கிடைக்கவில்லை. மை டியர் பூதம் படத்திற்காவது கிடைக்குமென மிகவும் எதிர்பார்த்தேன். அதுவும் இல்லை. தேர்வுக்குழுவினர் இம்மாதிரி படங்களை பார்க்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. ஒரு கலைஞன் நடிப்பது எதற்காக? அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் நடிப்பதே வீண்தானே?" எனக் கேட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு திரைப்பட விருதுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தயாரிப்பாளர், இயக்குநர் சுரேஷ் காமாட்சி பிபிசியிடம் கூறுகையில், "திரைப்பட விருது குழுவின் நடுவர் தேர்வில் தவறு இருப்பதாக கருதுகிறேன். இனிமேல் விருது வழங்கும் போது இப்படி மொத்தமாக பல ஆண்டுகள் சேர்த்து வழங்காமல் ஒவ்வொரு ஆண்டுக்கும் உடனே வழங்க வேண்டும்" என்றார். "விருது பெறுபவர்களை உரிய முறையில் கௌரவப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். விருதுகள் விஷயத்தில் வெளிப்பட தன்மை தேவை. பெண் போலீசாரின் உடல் மன வலியை சொல்லும் 'மிக மிக அவசரம்' படத்துக்கு தமிழக அரசு விருது கிடைக்காதது வருத்தமே" என்கிறார் அவர். விருது அறிவிப்பு குறித்து நடிகர் எஸ்.வி.சேகரிடம் பிபிசி சார்பில் பேசினோம். "விருது கிடைத்தவர்கள் சந்தோசப்படுவதும். விருது கிடைக்காதவர்கள் வருத்தப்படுவதும் வழக்கமான ஒன்றுதான். இனி விருது கமிட்டியில் தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். எனக்கு சாதனையாளர் விருது கிடைத்து இருக்கிறது." என்றார். தேர்வு குழு கூறுவது என்ன? சின்னத்திரை விருதுகள் தேர்வு குழு கமிட்டியில் இருந்த இயக்குநர் மங்கை அரிராஜன் பிபிசியிடம் கூறுகையில், " சினிமா சின்னத்திரை விருதுகளை தேர்ந்தெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் ஏழு பேர் உறுப்பினர்கள். இந்த குழு ஒவ்வொரு ஆண்டும் வெளியான படங்களில் சிறந்த படங்களை முதல் சுற்றில் தேர்வு செய்யும். பின்னர் அடுத்தகட்ட தேர்வுக்கு பின் எது சிறந்த படம், சிறந்த நடிகர் என்பதை தலைவரான நீதிபதி முடிவு செய்வார். இதில் எந்த பாகுபாடும் கிடையாது எந்த சிபாரிசும் கிடையாது தேர்வுக்குழு செயல்பாடுகள் நம்பிக்கையானவை." என்றார். சில காரணங்கள், சில ஓட்டுகள் வித்தியாசத்தில் சில படங்கள் தேர்வாகியிருக்கலாம் என்றும் சில நல்ல படங்கள் விருதை தவறவிட்டு இருக்கலாம் என்றும் இது எல்லா போட்டிகளிலும் எல்லா விருது நிகழ்வுகளிலும் நடப்பது தான் என்றார் மங்கை அரிராஜன். விருது கமிட்டியில் இருந்த இளையபாரதி பிபிசி தமிழிடம், "விண்ணப்பித்தால் மட்டுமே விருது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வோம். பலர் விண்ணப்பிக்காமல் விருது ஏன் வரவில்லை என்கிறார்கள். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மேற்கு தொடர்ச்சி மலை படங்கள் அப்படித்தான். நூற்றுக்கணக்கான படங்கள் வந்தன. இவ்வளவு படம் பார்த்து அரசியல் பாகுபாடுகள் இன்றி விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சில படங்கள் நன்றாக இருந்தன. அதனால் சில முக்கியமான படங்கள் தவறிவிட்டன. இது அனைத்து விருது நிகழ்விலும் நடப்பதே. இதில் பாகுபாடு இல்லை" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3689lp9e3ro
-
தற்காலிக விசா வைத்துள்ளவர்கள் கனடாவை விட்டு வெளியேறுகிறார்களா ? – கண்காணிப்பு முறையை அமுல்படுத்த கனடா அரசு தீர்மானம்
தற்காலிக விசா வைத்துள்ளவர்கள் கனடாவை விட்டு வெளியேறுகிறார்களா ? – கண்காணிப்பு முறையை அமுல்படுத்த கனடா அரசு தீர்மானம் Published By: Digital Desk 3 05 Feb, 2026 | 09:52 AM தற்காலிக விசாவுடன் கனடாவில் தங்கியிருக்கும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறனை உருவாக்க கனடா அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குடிவரவு அமைச்சர் லீனா டியாப் (Lena Diab) தெரிவித்துள்ளார். கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை (IRCC) மற்றும் கனடா எல்லை சேவைகள் முகமை (CBSA) சில தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான தகவல்களை கண்காணிக்கக்கூடியதாக இருந்தாலும், தற்காலிக விசாவுடன் உள்ளவர்கள் எத்தனை பேர் கனடாவை விட்டு வெளியேறுகின்றனர் என்பதைக் கணக்கிடுவதற்கான எளிய முறை தற்போது இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார். குடிவரவு துறையின் தகவலின்படி, 2026 ஆம் ஆண்டில் சுமார் 19 இலட்சம் தற்காலிக விசாக்கள் (வேலை மற்றும் கல்வி அனுமதிகள் உட்பட) காலாவதியாக உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 21 இலட்சத்துக்கும் அதிகமான தற்காலிக விசாக்கள் காலாவதியாகியுள்ளன. “உலகின் பல நாடுகள் ஏற்கனவே இத்தகைய கண்காணிப்பு முறைகளை பயன்படுத்துகின்றன. கனடாவும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து,” என லீனா டியாப் கனடியன் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலில் தெரிவித்துள்ளார். CBSA-வின் புலனாய்வு மற்றும் அமுலாக்க பிரிவின் துணைத் தலைவர் ஆரன் மெக்ரோரி, கடந்த ஒக்டோபர் 21 அன்று நாடாளுமன்ற குழுவில் வழங்கிய சாட்சியத்தில், கனடாவை விட்டு வெளியேறும் நபரின் பயண முறை, பிறந்த திகதி மற்றும் பயண ஆவணங்களை கண்காணிக்க முடியும் என்றார். ஆனால், விசா காலாவதியான காரணத்தால் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறுகிறாரா என்பதை தானாகவே கண்டறியும் வசதி தற்போது இல்லை என்றும், அவ்வாறு சரிபார்ப்பது ஒவ்வொரு வழக்காக மேற்கொள்ள வேண்டிய கடினமான செயல்முறை என்றும் அவர் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் தற்காலிக விசாவுடன் கனடாவுக்கு வந்தவர்களால் அகதி கோரிக்கைகள் அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் காட்டுகின்றன. அந்த ஆண்டில் 1,12,000-க்கும் அதிகமான தற்காலிக குடியிருப்பாளர்களும் சுமார் 22,000 மாணவர் விசா வைத்திருந்தவர்களும் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்துள்ளனர். இதில் தற்காலிக குடியிருப்பாளர்களின் விண்ணப்பங்களில் 14 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர் விசா வைத்திருந்தவர்களில் 20 சதவீத விண்ணப்பங்களே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அகதி கோரிக்கைகளை பயன்படுத்தி கனடாவில் தங்கும் காலத்தை நீட்டிக்கும் முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில், எல்லை பாதுகாப்பு சட்டமூலம் C-12 கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த சட்டத்தின் படி, 2020 ஜூன் 24க்குப் பிறகு கனடாவில் ஒரு ஆண்டுக்கும் மேலாக தங்கியிருப்பவர்கள் தாக்கல் செய்யும் அகதி விண்ணப்பங்கள், அகதி விசாரணைக்குழுவு்கு அனுப்பப்படமாட்டாது. குடிவரவு முறையில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதே அரசின் இலக்காக இருப்பதாக அமைச்சர் லீனா டியாப் கூறினார். 2024 இல் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கான இலக்கு 4,85,000 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 3,93,500 பேர் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். ஒன்லைன் கடவுச்சீட்டு புதுப்பிப்பு திட்டம் (2024 டிசம்பரிலிருந்து) மற்றும் டிஜிட்டல் விசா முயற்சி (2025 நவம்பர் 27 முதல் மொராக்கோ பயணிகளுக்கு) ஆகிய இரண்டு புதிய டிஜிட்டல் திட்டங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். “எங்கள் குடிவரவு அமைப்பு பழமையானது. அதை நவீனமயமாக்குவது ஒரு பெரிய சவால். ஆனால் அந்தப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன,” என லீனா டியாப் மேலும் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/237860
-
ஜப்பானில் கடும் பனிப்பொழிவு ; சுமார் 35 பேர் பலி ; 400 பேர் காயம் ; 126 பேர் ஆபத்தான நிலையில்!
ஜப்பானில் கடும் பனிப்பொழிவு ; சுமார் 35 பேர் பலி ; 400 பேர் காயம் ; 126 பேர் ஆபத்தான நிலையில்! 04 Feb, 2026 | 05:14 PM ஜப்பானில் பல வாரங்களாக நிலவிவரும் கடும் பனிப்பொழிவினால் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பனிப்பொழிவு நிலைமை இவ்வார இறுதியில் மேலும் மோசமாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பனிப்பொழிவினால் ஏற்படும் விபத்துக்கள் உள்ளிட்ட காரணங்களால் சுமார் 400 பேர் காயமடைந்துள்ளதாகவும் 126 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது. அத்துடன் ஜப்பானின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பனிப்பொழிவினால் ஏராளமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இன்று புதன்கிழமை (4) நிலவரப்படி, 15 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில பகுதிகளில் பனிப்பொழிவு 2 மீட்டர் உயரத்தை எட்டியுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/237831
-
தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்!
யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்! 05 Feb, 2026 | 10:55 AM தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. 04.02.1957 அன்று இலங்கையின் ஒன்பதாவது சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர். திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், சிங்கள அரச படைகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் தேசியக் கொடியுடன் மண்ணில் வீழ்ந்து மாய்ந்த நிகழ்வு அன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தையே உலுக்கியது. அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி நடராஜன் படுகொலை செய்யப்பட்டபோது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனுக்கு அகவை 3. 1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் முதல் தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் சிங்கள அரச படைகளின் துப்பாக்கி சூட்டில் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜனின் 69,வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தாயக நினைவேந்தல் பணிமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தாயக நினைவேந்தல் குழுவினர் மற்றும் தமிழ்த் தேசிய பற்றாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தியாகி நடராஜன் அவர்களின் உருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செய்து மாலை அணிவித்து கருத்துரைகள் வழங்கியிருந்தனர். https://www.virakesari.lk/article/237865
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
அதிகூடிய வெற்றி இலக்கைக் கடந்த அணி என்ற சாதனையுடன் 19இன் கீழ் உலகக் கிண்ண அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா Published By: Vishnu 04 Feb, 2026 | 09:13 PM (நெவில் இந்தியா) ஹராரே, குவின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்றைய தினம் (04) கணிசமான மொத்த எண்ணிக்கைகள் குவிக்கப்பட்ட ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட்களால் மிக இலகுவாக இந்தியா வெற்றிகொண்டது. இந்த வெற்றியுடன் பெப்ரவரி 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை இந்தியா எதிர்த்தாடவுள்ளது. ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் கடினமான 311 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 41.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 311 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதன் மூலம் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் அதிகூடிய வெற்றி இலக்கை விரட்டிக்கடந்த அணி என்ற சாதனையை இந்தியா நிலைநாட்டியது. இலங்கையில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 305 ஓட்டங்களை நியூஸிலாந்து விரட்டிக்கடந்து ஈட்டிய வெற்றியே முந்தைய விரட்டிக்கடக்கப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. இன்றைய போட்டியில் ஆரம்ப வீரர்களான ஆரோன் ஜோர்ஜ் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்ததுடன் மூன்று பெறுமதி வாய்ந்த இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்து இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கினார். ஆரம்ப விக்கெட்டில் வைபவ் சூரியவன்ஷியுடன் 57 பந்துகளில் 90 ஓட்டங்களையும் இரண்டாவது விக்கெட்டில் அணித் தலைவர் அயூஷ் மஹாத்ராவுடன் 101 பந்துகளில் 114 ஓட்டங்களையும் மூன்றாவது விக்கெட்டில் விஹான் மல்ஹோத்ராவுடன் 79 பந்துகளில் 96 ஓட்டங்களையும் ஆரோன் ஜோர்ஜ் பகிர்ந்தார். மிகவும் பொறுமையுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஆரோன் ஜோர்ஜ் 104 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 115 ஓட்டங்களைக் குவித்தார். வைபவ் சூரியவன்ஷி எப்போதும் போல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களையும் அயூஸ் மஹாத்ரா 59 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களையும் பெற்றனர். விஹான் மல்ஹோத்ரா 38 ஓட்டங்களுடனும் வேதாந்த் திரிவேதி 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் நூரிஸ்தானி ஓமர்ஸாய் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 310 ஓட்டங்களைக் குவித்தது. ஆப்கான் சார்பாக இருவர் சதங்கள் குவித்தனர். 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண நொக் அவுட் வரலாற்றில் ஒரே அணியைச் சேர்ந்த இருவர் சதங்கள் குவித்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் பைசால் ஷினோஸதா 110 ஓட்டங்களையும் உஸைரூல்லா நியாஸாய் ஆட்டம் இழக்காமல் 101 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 148 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவர்களை விட ஆரம்ப வீரர்களான ஒஸ்மான் சதாத் 39 ஓட்டங்களையும் காலித் அஹ்மத்ஸாய் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கனிஷ்க் சௌஹான் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்பேஷ் தேவேந்திரன் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஆரோன் ஜோர்ஜ் https://www.virakesari.lk/article/237838
-
அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர
அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர 04 Feb, 2026 | 06:13 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது விடுதலை புலிகள் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? சுதந்திர தின நிகழ்வில் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார். கொழும்பில் புதன்கிழமை (04) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு வரலாற்று காலங்களில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்களை சிங்கள மன்னர்களும், தலைவர்களும் தோற்கடித்து நாட்டை பாதுகாத்தார்கள். 1948 ஆம் ஆண்டு காலணித்துவ ஆட்சியில் இருந்து நாடு முழுமையாக சுதந்திரமடைந்தது. நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிராகவே விடுதலை புலிகள் அமைப்பினர் ஆயுதமேந்தி போராடினார்கள். 30 ஆண்டுகால போராட்டத்தின் பின்னர் 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உரிமை தியாகம் செய்து நாட்டை பாதுகாத்தனர். 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு நாடு இரண்டாவது தடவையாக சுதந்திரமடைந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத்தினருக்கும், தேசியத்துக்கும் முன்னுரிமை வழங்கி நாட்டை ஆட்சி செய்தார். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்காகவே செயற்படுகிறார். 78 ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது புலம்பெயர் விடுதலை புலிகள் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போது பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், மற்றும் போர் வாகனங்கள் சுதந்திர தினத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை. அதேபோல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. இதற்கு பெரும்பான்மையின மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237826
-
குளியலறையில் வழுக்கி விழுந்த நபரின் தொண்டைக்குள் சிக்கிய பல் துலக்கும் பிரஷின் முன் பகுதி - என்ன ஆனார்?
குளியலறையில் வழுக்கி விழுந்த நபரின் தொண்டைக்குள் சிக்கிய பல் துலக்கும் பிரஷின் முன் பகுதி - என்ன ஆனார்? படக்குறிப்பு,பிரேமலால் மற்றும் அவரின் எக்ஸ்ரே படம் கட்டுரை தகவல் தாரகா சம்மனா பிபிசி சிங்கள சேவை 9 மணி நேரங்களுக்கு முன்னர் பல் துலக்குவது எளிதான ஒன்றாக இருந்தாலும் அதுவே ஆபத்தானதாக மாறியது என சொன்னால் நம்ப முடிகிறதா? அப்படியான ஒன்றை தான் இலங்கையில் உள்ள பிரேமலால் எதிர்கொண்டார். சவாலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொண்டையில் சிக்கிய பிரஷின் முன்பாகத்தை (bristle) மருத்துவர்கள் அகற்றி பிரேமலால் உயிரை காப்பாற்றினர். சிகிச்சை முடிந்த பிறகு ஓய்வில் இருந்த பிரேமலாலுடன் பிபிசி சிங்கள சேவை உரையாடியது. "ஜனவரி 23-ஆம் தேதி காலை குளியலறை சென்று பல் துலக்கிய போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததில் வாயில் இருந்த பிரஷ் இரண்டாக உடைந்து ஒரு பகுதி தொண்டைக்குள் சிக்கியது. அதை பலமுறை இழுத்துப் பார்த்தும் அது என் தொண்டையில் இருந்து வராததால் ஆபத்தின் தீவிரத்தை உணர்ந்தேன்" என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால் இது மிகவும் ஆபத்தானதாக உள்ளது எங்களால் சிகிச்சை அளிக்க இயலாது என மருத்துவர்கள் மறுத்தனர்" என பிரேமலால் தெரிவித்தார். "உடனடியாக மாத்தறையில் உள்ள பொது மருத்துவமனைக்கு சென்று நிலைமையை விவரித்தேன். அவர்கள் என்னை உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சையளிக்க தொடங்கினர்" என்றார். முதலில் தன்னுடைய வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் மருத்துவர்கள் பரிசோதித்ததாகவும் ஆனால் பிரஷ்ஷின் பாகம் இருப்பதை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. பின்னர் சிகிச்சை முடிந்து விரும்பினால் கையெழுத்து போட்டு விட்டு வீட்டுக்கு செல்லலாம் என மருத்துவர்கள் சொன்னதால், தான் வீட்டுக்கு சென்றதாக பிரேமலால் பிபிசியிடம் தெரிவித்தார். இறுக்கமான தொண்டை வீட்டுக்கு சென்று ஒரு மணி நேரமான பிறகு தன்னுடைய தொண்டை இறுக்கமாவதை பிரேமலால் உணர்ந்தார். இதையடுத்து, அவர் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு சென்று, தன்னுடைய தொண்டை இறுக்கமாவதையும், இருமல் அதிகரிப்பதையும், சளியுடன் சேர்ந்து ரத்தம் வருவதையும் மருத்துவரிடம் தெரிவித்தார். அங்கிருந்த மருத்துவர் லக்மல் பிரேமலாலுக்கு உடனடியாக எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்துள்ளார். அதன்படி, அவருக்கு எக்ஸ்-ரே பரிசோதனை செய்யப்பட்டது. பல் துலக்கு பிரஷின் தலைப்பகுதி அவரது உடலுக்குள் இருப்பதை பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியது. "இது கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்ப்பது போன்றது, எக்ஸ்-ரேயில் பிரஷின் தலைப் பகுதி தொண்டைக்குள் இருப்பது தெரிகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் எக்ஸ்-ரேயில் தெரிவதில்லை என்று மாத்தறை மருத்துவமனையில் என்னிடம் கூறப்பட்டது" என்று அவர் கூறினார். மாத்தறை முதல் கல்லே வரை… படக்குறிப்பு,பிரேமலாலின் கழுத்தில் பல் துலக்கும் பிரஷின் முன்பகுதி எவ்வாறு சிக்கிக்கொண்டது என்பதை எக்ஸ்-ரே பரிசோதனை காட்டியது.. மருத்துவரின் ஆலோசனைப்படி காலி நகரில் உள்ள காது மூக்கு தொண்டை நிபுணரான மருத்துவர் அனுருத்தா விக்ரமசிங்கேவை சந்திக்க பிரேமலால் மாத்தறையில் இருந்து தன்னுடைய மகனுடன் அந்த நகருக்கு பயணம் மேற்கொண்டார். காலி நகரில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுருத்தாவை சந்திக்க சென்ற பிரேமலாலுக்கு ஏமாற்றம், அங்கு மருத்துவர் இல்லை. இருப்பினும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவ பணியாளர்கள் அவரது எக்ஸ்ரே மற்றும் மருத்துவ அறிக்கையை உடனடியாக மருத்துவர் அனிருத்தாவுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி விவரித்ததாகவும் மருத்துவ அறிக்கையை பார்த்த மருத்துவர் அனிருத்தா தன்னை அங்கேயே இருக்கும்படி அறிவுறுத்தி, சில மணிநேரத்தில் தன்னை காலி நகர தேசிய மருத்துவமனையில் அனுமதித்தாகவும் பிபிசியிடம் தெரிவித்தார் பிரேமலால். வெற்றிகரமான சிகிச்சை படக்குறிப்பு,பிரேமலாலின் தொண்டையில் சிக்கிய பிரஷின் முன்பகுதி காலி நகர தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேமலாலுக்கு மருத்துவர் அனிருத்தா மேற்பார்வையில் காலை 9 மணிக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உடைந்த பிரஷின் முன்பகுதியை அவர்களால் கண்டறிய முடியவில்லை. சில மணித்துளிகள் தனக்கு தொண்டை பகுதியில் ஏற்பட்டிருந்த வலி குறைந்ததையும் தன்னால் இயல்பாக பேச முடிந்ததையும் உணர்ந்த பிரேமலால் சிறிதி நேரத்திலேயே மீண்டும் பழைய அறிகுறிகள் தென்பட்டதையும் அதனால் தொண்டை பகுதியில் மீண்டும் ரத்தப்போக்கு ஏற்பட்டதையும் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். மருத்துவர் அனிருத்தா ஆலோசனைப்படி மீண்டும் பிரேமலாலுக்கு எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைக்கப்பட்டு அந்த முடிவுகளின்படி பிரஷின் உடைந்த பாகம் தொண்டைக்குள்ளேயே இருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர், இதனால் அவருக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பிரேமலால் நன்றாக சாப்பிட்டு பேசிக் கொண்டிருப்பதை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஜனவரி 25-ஆம் தேதி பிரேமலாலுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. "இந்தச் சம்பவம் நம்மை எப்படிப் பாதிக்கும் என்று தம்மால் துல்லியமாகக் கூற முடியாது என்று மருத்துவர் கூறினார். இலங்கையில் எங்கும் இது போன்ற ஒரு சம்பவம் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார். வெளிநாடுகளில்கூட இது பதிவாகியிருப்பதாகச் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாறு செய்தால் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் அவர் கூறினார்." என்று சிகிச்சைக்கு முன்பு மருத்துவர்கள் தன்னிடம் கூறியதாக பிரேமலால் நினைவு கூர்ந்தார். "சரியாக காலை 11.45 மணிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, நான் அறுவை சிகிச்சை அறையிலிருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டேன், இன்றும் உடைந்த பிரஷ்ஷின் பாகத்தை நான் என்னுடன் வைத்துள்ளேன்" என்றார் பிரேமலால். 'பாடமாக இருக்கட்டும்' படக்குறிப்பு,குணமடைந்த பின் பிரேமலால் வீடு திரும்பியுள்ளார். ஒரு வார காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரேமலால் தற்போது வீடு திரும்பியுள்ளார். பிபிசியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தனக்கு எந்த வித அசெளகரியமும் ஏற்படவில்லை என புத்துணர்ச்சியுடன் தெரிவித்தார் பிரேமலால். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் நம் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் எளிய பணிகளும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்று கூறி பிபிசியுடனான உரையாடலை முடித்தார் பிரேமலால். "இலங்கை மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனக்கு நடந்தது ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" "ஒரு சிறிய தவறு பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதை இதுபோன்ற சம்பவம் நமக்கு கற்பிக்கும் பாடமாக இருக்கட்டும்" என்றார் பிரேமலால். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgvl32vnpjo
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வெளியேற்றி 19இன் கீழ் உலகக் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து Published By: Vishnu 03 Feb, 2026 | 10:32 PM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வே புலாவாயோ, குவீன்ஸ் கழக விளையாட்டரங்கில் று செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை 27 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இங்கிலாந்து, ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட முதலாவது அணியாக தகுதிபெற்றது. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் முன்னாள் சம்பியன் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது இது மூன்றாவது தடவையாகும். 1998இல் நடைபெற்ற இரண்டாவது அத்தியாயத்தில் உலக சம்பியனான இங்கிலாந்து, 2022இல் உப சம்பியனாகி இருந்தது. அணித் தலைவர் தோமஸ் ரியூ மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி குவித்த சதம், கட்டுப்பாடான பந்துவீச்சகள் என்பன இங்கிலாந்தை வெற்றிபெறச் செய்தன. அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஒலிவர் பீக் தனித்து போராடி சதம் குவித்த போதிலும் அது பயனற்று போனது. இந்த வருடம் முதுல் தடவையாக தோல்வி அடைந்த அவுஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர் பென் டோக்கின்ஸ் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்த போதிலும் ஜோசப் முவர்ஸ் (25), பென் மேயஸ் (24) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சரி செய்து 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். இந் நிலையில் தோமஸ் ரியூ, காலெப் ஃபோக்னர் (40) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 135 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து இளையோர் அணியை பலப்படுத்தினர். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தோமஸ் ரியூ 107 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 110 ஓட்டங்களைப் பெற்று 6ஆவதாக ஆட்டம் இழந்தார். (236 - 6 விக்.) ரெல்பி அல்பர்ட் (15), பர்ஹான் அஹ்மத் (28 ஆ.இ.), செபஸ்டியன் மோர்கன் (15 ஆ.இ.) ஆகியோர் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் ஹேடன் ஷில்லர் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இலங்கை வம்சாவளி வீரர் நேடன் குறே 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 278 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 47.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. முதல் சுற்று, சுப்பர் சிக்ஸஸ் ஆகிய சுற்றுகளில் திறமையை வெளிப்படுத்திய வில் மலாசுக் இப் போட்டியில் வெறும் 15 ஓட்டங்களுடன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஸ்டீவன் ஹோகன் (3) ஆட்டம் இழந்தார். இந் நிலையில் இலங்கை வம்சாவளி வீரர் நிட்டேஷ் செமுவல், அணித் தலைவர் ஒலிவர் பீக் ஆகிய இருவரும் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கடெ;டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். நிட்டேஷ் செமுவல் வழமைபோல் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 47 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அலெக்ஸ் லீ யங் (3), ஜேடன் ட்ரேப்பர் (12) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (134 - 5 விக.) இதனைத் தொடர்ந்து ஒலிவர் பீக், ஆரியன் ஷர்மா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர். ஆனால், அவர்கள் இருவரும் 46 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஆரியன் ஷர்மா (34) ஆட்டம் இழந்தார். நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஹேடன் ஷில்லர் 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது களம் விட்டகன்றார். ஒரு பக்கத்தில் ஒலிவர் பீக் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினார். லம்ஸ்டென் வீசிய 16ஆவது ஓவரில் 6, 4, 4, 4, 4 என 22 ஓட்டங்களைக் குவித்த ஒலிவர் பீக்கினால் கடைசிப் பந்தில் ஒற்றையை எடுக்க முடியாமல் போனது. அடுத்த ஓவரின் முதலாவது பந்தில் சார்ள்ஸ் லெச்மண்ட் (2) ஆட்டம் இழந்தார். ஒலிவர் பீக்குடன் 9ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களை லெச்மண்ட் பகிர்ந்தார். ஒலிவர் பீக் தனித்து போராடி 88 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட சரியாக 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் ஜேம்ஸ் மின்டோ 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் செபஸ்டியன் மோர்கன் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரெல்ஃபீ அல்பர்ட் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மானி லம்ஸ்டென் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: தோமஸ் ரியூ https://www.virakesari.lk/article/237747
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் - ட்ரம்ப்
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் - ட்ரம்ப் 04 Feb, 2026 | 04:22 PM நாங்கள் ஈரானுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விடயத்தில் அவர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அரபிக் கடலின் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க கப்பலை வேகமாக நெருங்கிய ஈரான் நாட்டின் ட்ரோனை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், அவர், சிறிது காலத்துக்கு முன்பு அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது நடக்கவில்லை. அதனால் நாங்க் “மிட்நைட் ஹேமர்” என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கி தாக்குதல் நடத்தினோம். அவர்கள் தற்போது மீண்டும் “மிட்நைட் ஹேமர்” போன்ற ஒரு தாக்குதலை விரும்பவில்லை என நான் நினைக்கிறேன். பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறிய டிரம்ப், எந்த இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்று கூறவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை (3) அமெரிக்காவின் “யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்” விமானம் தாங்கிக் கப்பலை, அச்சுறுத்தும் விதத்தில் வேகமாக நெருங்கிச் சென்ற ஈரானின் ஷாஹித்-139 ட்ரோனையே அமெரிக்கப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். கப்பலிலிருந்து ஏவப்பட்ட அதிநவீன எப்-35சி போர் விமானமே அந்த ட்ரோனை நடுவானில் சுட்டு வீழ்த்தியுள்ளது. இது தற்காப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என அமெரிக்கப் படையினர் தெரிவித்திருந்தனர். ஈரான் எல்லையிலிருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் அமெரிக்க கப்பல் இருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ட்ரோன் மீதான தாக்குதலின்போது அமெரிக்க படையினர் எவருக்கும் காயமோ அல்லது உபகரண சேதமோ ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237825
-
கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!
கடாபியின் மகன் சயிப் அல்-இஸ்லாம் சுட்டுக் கொலை; லிபியாவில் பரபரப்பு Published By: Digital Desk 3 04 Feb, 2026 | 10:32 AM லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் மகனும், அவரது அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவருமான சயிப் அல்-இஸ்லாம் கடாபி (Saif al-Islam Gaddafi) சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 53 வயதான அவரின் மரணத்தை அவரது அரசியல் குழு உறுதிப்படுத்தியுள்ளதாக லிபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லிபியாவின் தலைநகர் திரிப்போலியிலிருந்து சுமார் 136 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஜின்டான் (Zintan) நகரிலுள்ள அவரது இல்லத்தில், முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கமாண்டோ குழுவினர் தாக்குதல் நடத்தியதாக அவரது அரசியல் அணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் “கோழைத்தனமான மற்றும் துரோகமான படுகொலை” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சயிப் அல்-இஸ்லாமின் வழக்கறிஞர் கலேத் அல்-சாயிதி மற்றும் அவரது அரசியல் ஆலோசகர் அப்துல்லா ஒத்மான் ஆகியோர், செவ்வாய்க்கிழமை சமூக வலைத்தளங்களில் அவரின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கிடையில், சயிப் அல்-இஸ்லாமின் சகோதரி ஒருவர் லிபிய தொலைக்காட்சியிடம், அவர் அல்ஜீரிய எல்லைக்கு அருகிலான பகுதியில் உயிரிழந்ததாக கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 1969 முதல் 2011 வரை லிபியாவை ஆட்சி செய்த முஅம்மர் கடாபியின் மகன்களில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக சயிப் அல்-இஸ்லாம் கருதப்பட்டார். 1972ஆம் ஆண்டு பிறந்த அவர், 2000ஆம் ஆண்டிற்குப் பின்னர் மேற்கத்திய நாடுகளுடன் லிபியாவின் உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக, அணு ஆயுதத் திட்டத்தை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அவர் முன்னணியில் செயல்பட்டதாக கூறப்படுகிறது. 2011ஆம் ஆண்டு கடாபி ஆட்சி வீழ்ச்சியடைந்தபோது, அரசுக்கு எதிரான போராட்டங்களை கடுமையாக ஒடுக்கியதாக சயிப் அல்-இஸ்லாம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து, அவர் ஜின்டான் நகரில் உள்ள ஒரு ஆயுதக் குழுவினரால் கைது செய்யப்பட்டு, சுமார் ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 2011 போராட்டங்களின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அவரை விசாரிக்க முயன்றது. 2015ஆம் ஆண்டு, ஐநா ஆதரவு பெற்ற திரிப்போலி நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. ஆனால், 2017ஆம் ஆண்டு பொதுமன்னிப்பு சட்டத்தின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார். விடுதலைக்குப் பின்னர், சயிப் அல்-இஸ்லாம் ஜின்டான் நகரிலேயே வசித்து வந்தார். 2021ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தாலும், அந்தத் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. கடாபி ஆட்சி வீழ்ச்சியடைந்ததிலிருந்து லிபியா பல்வேறு ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் பிரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. தற்போது நாடு இரண்டு போட்டி அரசாங்கங்களுக்கு இடையே பிளவுபட்டுள்ளது. இந்த சூழலில், சயிப் அல்-இஸ்லாமின் படுகொலை லிபிய அரசியல் நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்யக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதனிடையே, திரிப்போலியைத் தளமாகக் கொண்ட உயர் அரசியல் பேரவையின் முன்னாள் தலைவர் கலேத் அல்-மிஷ்ரி, இந்த படுகொலை தொடர்பில் அவசரமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். சயிப் அல்-இஸ்லாம் கடாபியின் மரணம், லிபிய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்படுவதுடன், நாட்டின் எதிர்கால அரசியல் சமநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. https://www.virakesari.lk/article/237781
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு 04 Feb, 2026 | 11:12 AM இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய புதன்கிழமை (04) காலை 07.30 மணிக்கு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி - தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரி, பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களின் பான்ட் (Band) வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் (Cadet) அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்றைய அணிவகுப்பில் பங்குபற்றிய மாணவர்களை கெளரவித்து மர நடுகை மற்றும் சிரமதானம் போன்ற நிகழ்வும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ராசிக், பொலிஸ் கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முப்படையின் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர். https://www.virakesari.lk/article/237785
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
மட்டக்களப்பிலும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்! Feb 4, 2026 - 05:44 PM மட்டக்களப்பில் இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வரையில் ஊர்வலம் செல்ல ஆயத்தமான நிலையில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு ஊர்வலத்தினை தடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் காந்திபூங்காவில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறுவதன் காரணமாக அங்கு செல்லமுடியாது என பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எனினும் தமது போராட்டம் வழமையாக காந்திபூங்காவில் நிறைவடைவதனால் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு காணாமல் போனவர்களின் உறவினர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டன. எனினும் அங்குசெல்வதற்கு அனுமதிக்கமுடியாது என பொலிஸார் தெரிவித்த நிலையில் கல்லடி பாலத்தில் ஆரம்பித்து தனியார் பஸ் நிலையத்தில் போராட்டத்தினை முடிப்பது என பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து போராட்டம் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து வருகைதந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உறவினர்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது கல்லடி பாலத்திலிருந்து பல்வேறு கோசங்களுடன் பேரணியானது நினைவு ஊர்தியுடன் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு திருகோணமலை வீதியுடாக மட்டக்களப்பு நகர் நோக்கிசென்றபோது வெள்ளைப்பாலம் அருகில் பொலிஸாரினால் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு போராட்டக்காரர்கள் மறிக்கப்பட்டு புதுப்பாலம் ஊடாக பேரணியானது செல்லுமாறு பணிக்கப்பட்டது. எனினும் தாங்கள் தமது போராட்டத்தினை நகர் ஊடாகவே செல்வோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் பொலிஸாருடன் முரண்பட்டு தள்ளுப்பட்ட நிலையில் பொலிஸார் அப்பகுதி ஊடாக செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் வெள்ளைப்பாலத்திற்கு அருகில் போராட்டம் மட்டுப்படுத்தப்பட்டு அவ்விடத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிழக்கு பல்கலைகழக மாணவர்களினால் பிரகடனம் வாசிக்கப்பட்டு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cml7zo5a00007356n66zcofgo
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
"இது சுதந்திர தினம் அல்ல; எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள்!" - காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! 04 Feb, 2026 | 02:09 PM காலனித்துவ முடிவில் ஏற்பட்ட அரசியலமைப்பு தோல்வியை இலங்கை அரசு சுதந்திர தினமாகக் கொண்டாடும் இந்த நாளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரி நாள் என நினைவுகூருகிறோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர். சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கும் நாள், எங்கள் குழந்தைகளின் உண்மை வெளிவரும் நாளே. இது சுதந்திர தினம் அல்ல. இது எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இன்றைய தினம் (4) அவர்கள் தமது போராட்ட பந்தலில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், 1948ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் எங்களுக்கு விடுதலையாக அமையவில்லை. அது எங்கள் குழந்தைகள் காணாமலாக்கும் ஒரு நீண்ட, இருண்ட பாதையின் தொடக்கமாக மாறியது. நாங்கள் அரசியல்வாதிகள் அல்லர். நாங்கள் சட்ட நிபுணர்கள் அல்லர். நாங்கள் தாய்மார்கள். எங்கள் குழந்தைகளைப் பெற்றவர்கள். அவர்களை வளர்த்தவர்கள். அவர்களை இழந்தவர்கள். இன்று, வவுனியா நகரில், இந்த வன்னிப்பந்தலில் 3271நாட்களாக நாங்கள் அமர்ந்திருக்கிறோம். மழையிலும் வெயிலிலும், அரசுகள் மாறினாலும், வாக்குறுதிகள் மாறினாலும், எங்கள் கேள்வி மட்டும் மாறவில்லை. 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆனால், அந்த சுதந்திரம் எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. எங்கள் மொழியை மதிக்கவில்லை. எங்கள் நிலங்களை காக்கவில்லை. எங்கள் குழந்தைகளை எங்களிடம் திருப்பித் தரவில்லை. இந்த அநீதியின் வேர்கள், சொல்பரி கமிஷன் உருவாக்கிய அரசியல் அமைப்பிலேயே உள்ளன. இங்கிலாந்து இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறி, பெரும்பான்மை ஆட்சியை ஜனநாயகமாக்கி, தமிழர்களை பாதுகாப்பு அற்றவர்களாக விட்டுச் சென்றது. காலனித்துவத்திற்கு முன்பு, தமிழர்களுக்கு தங்கள் சொந்த அரசியல் அதிகாரம் இருந்தது. தங்கள் சொந்த நிலமும் நிர்வாகமும் இருந்தது. இந்த உண்மை அரசியலமைப்பில் சொல்லப்படவில்லை. சொல்லப்படாத உண்மை, பின்னர் எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்படுவதற்கு ஒரு சட்டபூர்வ அநீதியாக மாறியது. அந்த தவறுகளின் விலையையே இன்று நாங்கள் இந்த பந்தலில் எங்கள் கண்ணீரோடு செலுத்துகிறோம். எங்கள் கேள்வி எளிமையானது. எங்கள் குழந்தைகள் எங்கே? அவர்கள் எங்கே? யார் பொறுப்பு? எப்போது நீதி? கரி நாள் எங்களுக்கு ஒரு சடங்கு நாள் அல்ல. அது ஒரு நினைவூட்டல். சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கும் நாள், எங்கள் குழந்தைகளின் உண்மை வெளிவரும் நாளே. இது சுதந்திர தினம் அல்ல. இது எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள் என்று தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/237803
-
‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயார் - ஜனாதிபதி Feb 4, 2026 - 09:00 AM நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி, வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்காக நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்று வரும் இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தாய்நாட்டினதும் மக்களினதும் பெருமைமிக்க சுதந்திரத்திற்காகப் போராடிய அனைத்து வீரர்களுக்கும் தேசத்தின் கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்தி, பெருமைமிக்க வரலாற்றின் தாற்பரியத்துடன் கட்டமைக்கப்பட்ட புதிய இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். ஒரு தேசமாக நாம் பெற்ற சுதந்திரம் பொருளாதார சுதந்திரத்தை அடைவதன் மூலம் முழுமையடைகிறது அதற்காக "இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளின் கீழ், அறிவார்ந்த மனித வளம், தேசிய ஒற்றுமை, சட்டத்தின் ஆட்சி, சுற்றாடல் பாதுகாப்பு, வலுவான சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் புதிய மாற்றத்துடன் கூடிய சகாப்தத்தை நோக்கி நாடு கொண்டு செல்லப்படுகிறது நாடு பொருளாதார ரீதியில் பெரும் வெற்றிகளின் நன்மைகள், பொருளாதாரத்தில் கீழ்மட்ட மக்களுக்குச் செல்வதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் அந்த இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cml7gzaqi04swo29nlnfz4jvf
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
சுதந்திர தினத்தில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் Feb 4, 2026 - 01:20 PM நாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களி்ல் இன்று (4) போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய கிளிநொச்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் A9 வீதி ஊடாக டிப்போ சந்தி வரை முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் அமைப்புக்கள், மதகுருமார், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றுள்ளவர்கள் கறுப்பு நிறக் கொடியினை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்ட பேரணி டிப்போ சந்தியை அண்மித்த போது, அப்பகுதியில் பிரத்தியேகமாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதன்போது அங்கு பரப்பரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அதிகளவான பொலிஸார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். எவ்வாறாயினும் போராட்ட ஏற்பாட்டுக் குழுவினரின் தலையீட்டால் பேரணியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதேநேரம் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நகரில் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://adaderanatamil.lk/news/cml7q97j404t3o29nppugd9gi
-
78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை)
சுதந்திர தினத்தில் மரியாதை வேட்டுக்களை தீர்த்த கடற்படை Feb 4, 2026 - 12:45 PM 78வது பெருமைமிக்க தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்கு கௌரவம் செலுத்தும் வகையில் இலங்கை கடற்படையினரால் இன்று (04) 25 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன. கடற்படைத் தளபதியின் ஆலோசனையின் பேரில், கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டிருந்த 'இலங்கை கடற்படைக் கப்பல் சயுர' போர்க்கப்பலில் இருந்து இந்த மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. நாட்டின் மிக உயரிய மரியாதையாகக் கருதப்படும் 25 வேட்டுக்கள் தீர்க்கும் இந்த கௌரவம், தேசத்திற்காக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cml7p19zd04t2o29nkn0hq7xp
-
ஈரான் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது
ஈரான் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது Published By: Vishnu 04 Feb, 2026 | 05:35 AM அரேபிய கடலில் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலை நோக்கி பறந்து கொண்டிருந்த ஈரானிய ஆளில்லா விமானத்தை அமெரிக்க இராணுவம் செவ்வாய்க்கிழமை (3) சுட்டு வீழ்த்தியுள்ளது. ஈரானிய ஷாஹெட்-139 ஆளில்லா விமானம் கப்பலை நெருங்கும் போது அமெரிக்க F-35 போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். இந்த தாக்குதல், இப்பகுதியில் அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டு வரும் நிலையில் நடந்துள்ளது. இந்த வார இறுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதற்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237764
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம் 03 Feb, 2026 | 03:41 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் இராசமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்துக்கான கடிதத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இதுவரை காலமும் பதவி வகித்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக பதவி வகிக்கும் எஸ். சிறீதரன் கணக்காய்வாளர் நாயகமாக ஜனாதிபதியினால் பெயரிடப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு ஆதரவாக வாக்களித்தால் அது தமிழரசுக்கட்சியினதும் தமிழ் மக்களினதும் நிலைபாடுகளுக்கு முரண்பாடானதெனத் தெரிவித்து அவரை அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகுமாறு தமிழரசுக் கட்சியின் தலைமை அறிவுறுத்தியது இவ்வாறான பின்னணில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இனி பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் குழுத் தலைவராக பதவி வகிக்க கூடாது என அவருக்கு கட்சியால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து எஸ். சிறிதரன் அண்மையில் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இலங்கைத் தமிழரசுக் கட்சித்தலைமையினால் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்ற குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/237716
-
78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை)
சுதந்திர தின நிகழ்வில் இணைந்தார் ஜனாதிபதி Feb 4, 2026 - 08:03 AM சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியுள்ளன. 78-வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் "இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறுகின்றன. 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியிடமிருந்து சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காகத் தியாகங்களைச் செய்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட சுமார் 400 விருந்தினர்களுடன், முப்படை மற்றும் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்ட படையினர் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். https://adaderanatamil.lk/news/cml7eyg2v04suo29nalv1s474
-
புற்றுநோய் என்றால் என்ன? எப்படி உருவாகிறது?
கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு முடி மீண்டும் வளருமா? புற்றுநோய் மருத்துவர் விளக்கம் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் சண்முகப்பிரியா பிபிசி தமிழுக்காக 4 பிப்ரவரி 2026, 02:51 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் உலக புற்றுநோய் தினமான இன்று மக்கள் மத்தியில் அதுகுறித்து இருக்கக்கூடிய அடிப்படை சந்தேகங்களைத் தீர்க்க உதவும் வகையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஐயப்பனிடம் பிபிசி தமிழ் பேசியது. புற்றுநோய் வருவது எப்படி? ஒரு சாதாரண கட்டி புற்றுநோய்க் கட்டியாக மாற்றமடைவது எப்படி? தொடர் மலச்சிக்கல் புற்றுநோயின் அறிகுறியா? கீமோதெரபி பற்றி நிலவும் தவறான கருத்துகள் உள்பட அவர் பகிர்ந்த பல்வேறு அறிவியல்பூர்வமான தகவல்களை விரிவாக பார்க்கலாம். புற்றுநோய் என்றால் என்ன? எப்படி உருவாகிறது? மனித உடலில் செல்கள் தொடர்ந்து பிரிகின்றன. செல்கள் இரண்டாகவும், இரண்டு செல்கள் நான்காகவும் பெருகி உறுப்புகள் உருவாகின்றன. இயல்பான நிலையில், செல் பகுப்பு ஒரு கட்டுப்பாடான செயல்முறையின் படி நடக்கிறது. ஆனால், சில நேரங்களில் இந்தக் கட்டுப்பாடான முறை செயலிழக்கும் போது, செல்கள் கட்டுப்பாடின்றி பல்கிப் பெருகத் தொடங்குகின்றன. இவ்வாறு கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும் செல்கள் கட்டியை உருவாக்குகின்றன. இந்தக் கட்டியையே புற்றுநோய் என்று அழைக்கிறோம். கட்டுப்பாடற்ற செல் பகுப்பால் உருவாகும் கட்டிகளை, சாதாரண கட்டிகள் (Benign Tumors), புற்றுநோய் கட்டிகள் (Malignant Tumors) என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். சாதாரண கட்டிகளில் இருந்து புற்றுநோய்க் கட்டிகள் வேறுபட்டவை. புற்றுநோய் கட்டிகள் உயிருக்கு ஆபத்தானவை. பிற உறுப்புகளுக்கும் பரவக்கூடியவை. புற்றுநோய் செல்களால் ரத்த ஓட்டத்தின் வழியாக நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், எலும்புகள் போன்ற உறுப்புகளுக்குப் பரவ முடியும். இதை மெட்டாஸ்டாசிஸ் (Metastasis) என்று அழைக்கிறோம். நோய் உருவான இடத்திலேயே தங்கியிருப்பது முதல் நிலை. ஆனால், மற்ற உறுப்புகளுக்கும் பரவிவிட்டால் அது முற்றிய நிலை. சாதாரண கட்டி புற்றுநோய்க் கட்டியாக மாறுமா? படக்குறிப்பு,புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஐயப்பன் சாதாரண கட்டிகள் பொதுவாக அப்படியே தொடரும். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் ரஷ்யா பதிலுக்கு என்ன செய்யக்கூடும்? சீனா மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிக்கு தடை விதித்தது ஏன்? செங்கிஸ் கான் இந்தியாவை கைப்பற்றாதது ஏன்? - 'தடையாக இருந்த காண்டாமிருகம்' ராணுவ பயிற்சி அளித்த தமிழர்: இந்தியாவில் 7 கிராமங்கள் இணைந்து தனி நாடாக இயங்கிய வரலாறு End of அதிகம் படிக்கப்பட்டது ஆனால் ஆண்டுக்கணக்கில் இருக்கும் சாதாரண கட்டிகள் திடீரென பெரிதாகத் தொடங்கினால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும். அவை புற்றுநோய் கட்டிகளாக மாறுவது மிகமிக அரிது என்றாலும், சில அரிதான சந்தர்ப்பங்களில், சாதாரண கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகளாக மாறும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இது சார்கோமா (Sarcoma) வகையில் ஏற்படலாம். நூறு பேரில் ஒருவருக்கு இத்தகைய மாற்றம் ஏற்படக்கூடும். எனவே, மருத்துவரிடம் அவ்வப்போது கட்டியைப் பரிசோதித்து அதன் நிலையை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். அது தாமதமாகக் கண்டறியப்படுவதே பல சவால்களுக்குக் காரணமாக உள்ளது. ஒரு சில உறுப்புகள் தவிர, பெரும்பாலான உறுப்புகளில் ஆண், பெண் இருபாலருக்கும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களிடையே மார்பகப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கருமுட்டைப் புற்றுநோய் ஆகியவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆண்களைப் பொறுத்தவரை, நுரையீரல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பட மூலாதாரம்,Getty Images பெருங்குடல் புற்றுநோய் அதிகரிக்க என்ன காரணம்? சமீப காலமாக பெருங்குடல் (colon) மற்றும் மலக்குடல் (Rectum) ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. பெருங்குடல், மலக்குடல் ஆகியவை செரிமான மண்டலத்தின் இறுதிப் பகுதிகளாகும். வாழ்க்கைமுறை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாற்றங்கள், உணவுப் பழக்கங்கள், போதிய காய்கறிகளை உட்கொள்ளாமல் இருப்பது, அதிக அளவிலான பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்வது ஆகியவை பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. குறிப்பாக, புகைப் பிடித்தல், மது அருந்துதல், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடலுக்கு அதிக இயக்கத்தைக் கொடுக்காமல் இருப்பது போன்றவை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும். மலம் வெளியேறுவதில் சிரமம் ஏற்படுதல், தொடர் மலச்சிக்கல், பெருங்குடலின் கடைசிப் பகுதியில் அடைப்பு போன்ற காரணங்களால் மலக்குடல் புற்றுநோய் வரலாம். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறுவதற்கான செலவு மிகக் குறைவு. சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைவாகவே இருக்கும். மலக்குடல் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்: ரத்தப்போக்கு: மலத்துடன் ரத்தம் வெளியேறுதல் மிக முக்கியமான அறிகுறி. ஆசனவாயில் ரத்தம் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ரத்தசோகை: ரத்தசோகை, மூச்சுத்திணறல், கால் வீக்கம் திடீர் எடை இழப்பு: காரணமின்றி திடீரென எடை குறைதல் ஓர் எச்சரிக்கை அறிகுறி. மலம் கழித்தலில் மாற்றங்கள்: மலத்தை வெளியேற்றுவதில் சிரமம், மலச்சிக்கல் போன்றவையும் முக்கிய அறிகுறிகள் ஆகும். பட மூலாதாரம்,Getty Images வயிற்றுப் புண் புற்றுநோயாக மாறுமா? பெருங்குடல் புண்கள் மற்றும் இரைப்பை புண்களை வேறுபடுத்தி அறிந்துகொள்ள வேண்டும். பெருங்குடலில் காணப்படும் புண்களில் 99% புற்றுநோயுடன் தொடர்புடையதாகவே உள்ளன. இவை மிகுந்த கவனத்துடன் அணுகப்பட வேண்டியவை. இரைப்பையில் காணப்படும் புண்களில் பெரும்பாலானவை சாதாரண புண்களே. அவற்றை மருந்துகளால் குணப்படுத்திவிட முடியும். ஆனால் அவற்றைக் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. அப்படி கவனிக்காமல் விட்டால், பல ஆண்டுகள் கழித்து அவை புற்றுநோயாக மாறுவதற்கான சாத்தியமுள்ளது. சாப்பிடுவதில் சிரமம் இருந்தாலோ, வலி இருந்தாலோ, எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கீமோதெரபியால் கொட்டும் முடி மீண்டும் வளருமா? புற்றுநோய்க்கான சிகிச்சைகளில், அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை என மூன்று முக்கிய வகைகள் இருக்கின்றன. இவற்றில், மருந்துகள் மூலம் புற்றுநோய் செல்களை அழிப்பது கீமோதெரபி முறை. கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கும் முறை கதிரியக்க சிகிச்சை முறை. கீமோதெரபி செய்கையில் கொட்டும் முடி மீண்டும் வளருமா என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு இருக்கும். அதற்குப் பதிலளித்த மருத்துவர் ஐயப்பன், "அதைச் செய்யும்போது முடி கொட்டினாலும், சிகிச்சை முடிந்த சில மாதங்களில் மீண்டும் நிச்சயம் நன்றாக வளர்ந்துவிடும்" என்றார். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் முக்கியம் என்ற அவர், "தொடக்க நிலையிலேயே கண்டறிதல், முறையான சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை புற்றுநோயை எதிர்கொள்வதற்கான முக்கியக் கருவிகள். தடுப்பூசிகள், தொடர் மருத்துவப் பரிசோதனைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை புற்றுநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாக" அவர் தெரிவித்தார். நவீன மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் அணுகுமுறைகள் புற்றுநோய் சிகிச்சையில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய மருத்துவர் ஐயப்பன், புற்றுநோய் தொடக்க நிலையிலேயே கண்டறியப்படுவது முழுமையாகக் குணப்படுத்துவதைச் சாத்தியமாக்கும் என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0ke03edx7do
-
நல்லிணக்கத்துக்கு தமிழ் தலைவர்கள் உதவ வேண்டும்; கரும்புள்ளியை ஏற்படுத்தி விடக் கூடாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த வேண்டுகோள்
நல்லிணக்கத்துக்கு தமிழ் தலைவர்கள் உதவ வேண்டும்; கரும்புள்ளியை ஏற்படுத்தி விடக் கூடாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த வேண்டுகோள் Published By: Vishnu 04 Feb, 2026 | 04:24 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். எனவே நாட்டில் பரந்துபட்ட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிதரன் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டுமே தவிர, அதில் கரும்புள்ளியை ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (3) வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதாக தெரிவித்துள்ளமை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்மு ஊடகவியலாளர்களால் கேட்க்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய சுதந்திர தினம் என்பது நாட்டிலுள்ள சகல மக்களுக்குமானதுமான தினமாகும். இதில் எவ்வித இன, மத, மொழி பேதமும் இல்லை. எனினும் சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர். சுதந்திர தினத்தில் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும். அதற்காக ஒன்றிணையுமாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். சில சந்தர்ப்பங்களில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் காணப்படும் போட்டி அல்லது அரசியல்வாதிகளுக்கிடையிலான போட்டி , தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு மக்கள் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். சுதந்திர தினம் அல்லது ஏனைய தேசிய நிகழ்வுகளின் போது நாட்டு மக்கள் ஒன்றிணையும் போது, இவ்வாறான கருத்துக்களை வெளியிடப்படுவதை தொடர்ச்சியாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவை சில அரசியல்வாதிகளிடத்தில் காணப்படும் பிரச்சினையே அன்றி, அது நாட்டு பிரச்சினையல்ல. எனவே அவரால் அவ்வாறானதொரு கருத்து தெரிவிக்கப்பட்டிருக்குமானால் அது கவலைக்குரியதாகும். இந்நாட்டில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். எனவே நாட்டில் பரந்துபட்ட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிதரன் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டுமே தவிர, அதில் கரும்புள்ளியை ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது என்றார். https://www.virakesari.lk/article/237756#google_vignette
-
78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை)
78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை) Feb 4, 2026 - 07:44 AM 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. "இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது. சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறும் இந்நிகழ்வை நேரலையில் பார்வையிட, சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு இன்று காலை 7.45 மணி முதல் டிவி தெரண (TV Derana) மற்றும் அத தெரண (Ada Derana) ஊடாக ஒளிபரப்பப்படும். இன்று காலை சுமார் 7.50 மணியளவில் பிரதம நீதியரசர் திரு. பிரீதி பத்மன் சூரசேன சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்தார். இதேவேளை, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவும் விழா நடைபெறும் வளாகத்திற்கு வருகை தந்துள்ளார். அத்துடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சற்றுமுன்னர் வருகைத் தந்தார். https://adaderanatamil.lk/news/cml7e95a704sto29nfweznwp5
-
சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!
'எமது வீட்டுக்குள் வந்து எங்களை தாக்குவது போன்றது' - அடையாளம் தெரியாத குழுவால் தாக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் கட்டுரை தகவல் பிபிசி சிங்கள சேவை 3 பிப்ரவரி 2026 ''இந்த சம்பவம் இலங்கை கடற்பரப்பிலேயே நடந்தது. காலி பிரதேசத்திற்கு நேராக மேற்கு கடற்பரப்பில் இந்த சம்பவம் நேர்ந்தது. இது எமக்கு புதுமையாகவுள்ளது. இந்த கப்பல் எமது நாட்டு ரேடார் கட்டமைப்பில் நிச்சயமாக பதிவாகியிருக்கும்'' ''எமது நாடு... எமது வீட்டுக்குள் வந்து, எம்மீது தாக்கியதை போன்றதொரு சம்பவம் தான் இது. எமது எல்லைக்குள் வந்து தாக்குதலை நடத்தியமையானது, எமது வீட்டுக்குள் வந்து தாக்கியதை போன்றது அல்லவா'' என இலங்கை மீனவர் சுரங்க நிசல் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற இலங்கை மீனவர்கள் மீது நடுக்கடலில் வைத்து, வெளிநாட்டவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவமானது நடந்துள்ளது. தம்மீது இந்திய பாதுகாப்பு பிரிவினரே தாக்குதல் நடத்தியதாக, தாக்குதலுக்கு இலக்கான இலங்கை மீனவர்கள் கூறி வருகின்ற நிலையில், இது ராஜீய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. 'ராஜீய ரீதியில் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னை' இது ராஜீய ரீதியில் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னை என கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். ''29ம் தேதி இரண்டு படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 30ம் தேதி மற்றுமொரு படகில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 29ம் தேதி தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், கடற்படைக்கு நாங்கள் அறிவித்து, படகொன்றை விரைவில் அனுப்பி அவர்களை காலிக்கு அழைத்து வந்தோம். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சைகளின் பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்'' ''இந்திய பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் கூறுகின்றார்கள். எனினும், எமக்கு அது தொடர்பில் உறுதியாக தெரியாது. அதனால், வெளிவிவகார அமைச்சுக்கும், கடற்படைக்கும் நாங்கள் அறிவித்தோம். தாக்குதலை நடத்துவதற்கு வருகைத் தந்த படகு இலங்கைக்கு சொந்தமானதா? அல்லது வெளிநாட்டுக்கு சொந்தமானதா என்பது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காகவே நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம்'' என்கிறார் ரத்ன கமகே. படக்குறிப்பு,இலங்கை மீனவர் சுரங்க நிசல் ''அது வெளிநாட்டுக்கு சொந்தமானது என்றால், அது அதிகாரப்பூர்வமானதா அல்லது அதிகாரப்பூர்வமற்றதா என்பது குறித்தும் ஆராயுமாறு கூறியுள்ளோம். அதன்பின்னர் போலீஸ் தரப்பிலும் விசாரணைகளை நடத்துமாறு நாங்கள் அறிவித்துள்ளோம். தாக்குதலுக்கு இலக்கான நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து, அது தொடர்பிலான முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளோம்'' என்கிறார் ரத்ன கமகே. எனினும், இந்த தாக்குதலை இந்திய தரப்பினால் மேற்கொள்ளப்பட்டது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என கடற்றொழில் பிரதி அமைச்சர் குறிப்பிடுகின்றார். ''எனினும், இது வெளிநாடொன்றுடன் தொடர்புப்பட்டுள்ளமையினால், ராஜீய ரீதியில் இதற்கு தீர்வு காண வேண்டும்'' என அவர் கூறுகின்றார். படக்குறிப்பு,தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் என்ன சொல்கின்றார்? இலங்கை கடல் எல்லைக்குள் மற்றும் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை நெடுநாள் மீன்பிடி படகிலிருந்த மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் பலத்த காயமடைந்த நால்வர் காலி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் சங்கம் தெரிவிக்கின்றது. வெல்லமன்கரய மீன்பிடி துறைமுகத்திலிருந்து தொழிலுக்கு சென்ற சிலாபம் - தொடுவாவ பிரதேசத்தின் 'தினிதி துவ' பெயரை கொண்ட இரண்டு படகுகள் மற்றும் 'சந்துன் புதா' ஆகிய மூன்று படகுகளில் சென்ற மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சங்கத்தின் செயலாளர் ருவன் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார். 'தினிதி துவ 1' மற்றும் 'தினிதி துவ 2' ஆகிய இரண்டு படகுகளில் சென்றவர்களும் ஒரு மாதத்திற்கு மேல் தொழில் செய்து, மீண்டும் வெண்ணப்புவ நோக்கி வருகைத் தந்துகொண்டிருந்த போது, கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன், தியேகோ கார்சியா தீவுக்கு அருகில் வைத்து ஜனவரி மாதம் 30ம் தேதி சந்துன் புதா படகில் சென்ற மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நடத்தப்படும் தருணத்தில் இந்திய பாதுகாப்பு பிரிவினருடன் சிங்கள மொழியை பேசிய இரண்டு நபர்கள் இருந்துள்ளதுடன், அவர்கள் மொழிபெயர்ப்பு உதவிகளை செய்துள்ள நிலையில், அவர்கள் கறுப்பு நிறத்திலான கடற்படை சீருடையை அணிந்திருந்ததாக தாக்குதலுக்கு இலக்கான இலங்கை மீனவர்கள், இலங்கை நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் சங்கத்திடம் கூறியுள்ளனர். இந்திய பாதுகாப்பு பிரிவினர் என கூறப்படும் தரப்பினர் இலங்கை மீனவர்களின் படகுகளை சோதனை செய்துள்ளதுடன், போதைப்பொருள் இருக்கின்றதா என வினவியுள்ளனர் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். "இரான் படகு, போதைப்பொருள் குறித்து கேட்டார்கள்" இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு இந்தியாவை கோர வேண்டும் என தாக்குதலுக்கு இலக்கான மீனவர்களின் உறவினர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கின்றனர். தொடுவாவ, மாரவில, குடா மடுவெல்ல, மாதம்பே, சிலாபம் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 18 பேரே இந்த மூன்று படகுகளில் பயணித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் சங்கத்திடம், மீனவர்கள் வழங்கிய அறிவிப்புக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்ததாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிடுகின்றது. தாக்குதலுக்கு இலக்கான மீனவரான சுரங்க நிசல், பிபிசி சிங்கள சேவையிடம் கருத்து தெரிவித்துள்ளார். ''சிறிய ரக படகொன்றில் ஐவர் வருகைத் தந்தார்கள். படகை சோதனை செய்து, தாக்குதலை நடத்தினார்கள். சேட்டிலைட் தொலைபேசி, இரான் படகு, போதைப்பொருள் தொடர்பில் வினவினார்கள். நாங்கள் தெரியாது என கூறிய போதிலும், அவர்கள் தாக்குதலையே நடத்தினார்கள்.'' என்கிறார் சுரங்க நிசல். அதன்பின்னர், தன்னை கப்பலுக்கு அழைத்து சென்று மீண்டும் தாக்குதலை நடத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார். ''இந்த மூன்று பேரையும், படகையும் பணயக்கைதிகளாக எடுக்குமாறு ஒருவர் வந்து கூறினார். நீ என்ன கூறுகின்றாய் என கேட்டார். 'அவர்களை கொலை செய்தாலும், என்னை கொலை செய்தாலும் என்னால் இதை மாத்திரமே கூற முடியும்' என நான் கூறினேன். 'எனக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் ஒன்றையும் கொண்டு வரவும் இல்லை. ஒன்றும் கிடைக்கவும் இல்லை.' என கூறினேன்'' ''அதிலிருந்த சிங்களவர்கள் இருவர் என்னிடம் மீண்டும் விசாரணைகளை நடத்தினார்கள். சிங்களவர்களும் எம்மீது தாக்கி விசாரணைகளை நடத்தினார்கள்'' ''எம்மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சி செய்த சந்தர்ப்பத்தில், 'என்னால் கூறுவதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை' என்று கூறினேன். அதன்பின்னர் 'இவர்களிடம் ஒன்றும் இல்லை' என கூறி விடுவித்தார்கள்'' தாக்குதலை நடத்திய கப்பலை அடையாளம் கண்டுக்கொள்ள முடியுமா என தாக்குதலுக்கு இலக்கான மீனவரிடம் வினவிய போது, ''கப்பலில் 55 என்ற இலக்கம் இருந்தது. ஆங்கில எழுத்துக்கள் இருந்தன. எனக்கு நினைவில்லை'' என குறிப்பிட்டார். ''அதில் இந்தியர்கள் இருந்தார்கள் என்பதை நூறு வீதம் உறுதியாக என்னால் கூற முடியும். இந்தியாவின் கப்பல் என என்னால் கூற முடியும். அதில் தமிழர்களும் இருந்தார்கள். தலையில் துண்டை கட்டிய பஞ்சாபியர்களும் இருந்தார்கள். ஹிந்தி மொழியிலும் கதைத்தார்கள். தமிழ் மொழியிலும் கதைத்தார்கள். சிங்களவர்கள் இருவரும் இருந்தார்கள். அந்த இரண்டு சிங்களர்களுமே என்னிடம் விசாரணை செய்தார்கள். இரண்டு சிங்களவர்களும் எம்மீது தாக்குதல் நடத்தினார்கள். கொண்டு வந்ததை கூறுமாறு சொல்லி தாக்கினார்கள். இல்லையென்றால் நிச்சயமாக கொலை செய்வோம் என அச்சுறுத்தினார்கள்'' இந்த கப்பலில் 75 முதல் 100 பேர் வரை இருந்தார்கள் என சுரங்க கூறுகின்றார். இலங்கை கடற்படை கூறுவது என்ன? கடற்றொழில் திணைக்களம் வழங்கிய தகவலுக்கு அமைய, மருத்துவ நடவடிக்கைகளுக்காக இந்த மீனவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் புத்திக்க சம்பத் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு கடற்படையினர் ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறுகின்றார். ''இலங்கையின் தெற்கு பகுதிக்கு சென்றே இவர்களை நாங்கள் மீட்டெடுத்தோம். அவர்கள் கூறும் இடம், தாக்குதல் நடத்திய தரப்பினர் யார் என்பது குறித்து கடற்படையினர் உறுதிப்படுத்திய பின்னரே கூற முடியும்." ''ஒவ்வொரு தரப்பினர் வெவ்வேறு கருத்துக்களை கூறுகின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய கடலோர காவல்படை என கூறுகின்றனர். இன்னுமொரு தருணத்தில் இந்திய கடற்படை என கூறுகின்றார்கள்.'' ''நாங்கள் தொழில்நுட்ப ரீதியில் விசாரணைக்கு ஆதரவை வழங்குவோம். அந்த இடத்தில் யார் இருந்தார்கள் என்பது குறித்து உறுதிப்படுத்திய பின்னரே எங்களால் அதனை கூற முடியும்'' என கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப்படம் கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பதில் இந்த விடயம் தொடர்பில் பிபிசி சிங்கள சேவை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்புகொண்டு வினவியுள்ளது. இந்திய கடற்படை அல்லது இந்திய கடலோர காவல்படை பிரிவினால் இலங்கை மீனவர்கள் தாக்கப்படவில்லை என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களின் ஊடாக வினவப்படுகின்றதே தவிர, அரசாங்கத்தினால் உரிய முறையில் இதுவரை தம்மிடம் அறிவிக்கப்படவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjrzwlpd713o