Everything posted by ஏராளன்
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka' நிதியத்துக்கு அபிவிருத்தி லொத்தர் சபை 15.5 மில்லியன் ரூபாய் நிதியுதவி 02 Feb, 2026 | 06:20 PM 'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும், பாதிப்புக்குள்ளான நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு, அபிவிருத்தி லொத்தர் சபை 15.5 மில்லியன் ரூபாய் நிதி உதவியை வழங்கியுள்ளது. இதற்குரிய காசோலையை அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஹேமந்த சுவர்ணதிலக, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (2) கையளித்தார். இந்நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் அநுர ஜயரத்ன, பிரதிப் பொது முகாமையாளர் (நிதி) கசுன் ஜயசூரிய மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் (விற்பனை) சாணக்க தொடங்கொடகே ஆகியோரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/237644
-
மலையகத் தமிழர்கள் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் மாநாடு ஹட்டனில் ஏற்பாடு
மலையகத் தமிழர்கள் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் மாநாடு ஹட்டனில் ஏற்பாடு 02 Feb, 2026 | 05:57 PM மலையகத் தமிழ் மக்களின் காணி, வீட்டு உரிமை, முறையான மாதாந்த சம்பளம் மற்றும் குடியுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சம உரிமை இயக்கம் மற்றும் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஆகியன இணைந்து எதிர்வரும் புதன்கிழமை (04) ஹட்டனில் மாபெரும் மக்கள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. 'மலையகத் தமிழ் மக்களே தளராது போராடுவோம்' எனும் கருப்பொருளின் கீழ் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஹட்டன் கிருஷ்ணபவன் கலாசார மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் இம்மாநாட்டில், மலையகத் தமிழர் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து கொட்டகலை ஆசிரியர் கலாசாலை உப அதிபர் ஜே. சத்குருநாதன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.Politics அத்துடன், பெருந்தோட்டக் கம்பனிகளின் இலாபம் மற்றும் தொழிலாளர் சுரண்டல் குறித்து பேராதனை பல்கலைக்கழக கலாநிதி கஸ்ப ராஜபக்ஷவும், காணி உரிமை சார்ந்த சட்டக் கோணங்கள் குறித்து சட்டத்தரணி விஜயகுமாரும் விசேட கருத்துரைகளை வழங்கவுள்ளனர். இம்மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மலையக மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை உள்ளடக்கிய 'மாநாட்டுப் பிரகடனம்' உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. 2026ஆம் ஆண்டை மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் ஆண்டாக மாற்றியமைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த மக்கள் மாநாட்டிற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பையும், பொதுமக்களின் பங்களிப்பையும் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/237641
-
“கரிநாள்” : வடக்கு, கிழக்கில் பேரணி ஏற்பாடு ; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு
வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் “கரிநாள்” போராட்டங்களை நடத்த ஏற்பாடு 02 Feb, 2026 | 05:45 PM எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. அந்த நாளை “கரி நாளாக” அனுஷ்டிக்குமாறு அனைத்து தமிழ் பேசுகின்ற மக்களையும் அழைப்பு விடுப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் அ.அபிஷேக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் இணைந்து இந்த கறுப்பு நாள் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். அந்த வகையில் 4ஆம் திகதி வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் காலை 10 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. எமது உரிமைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வழி கல்வியாகத் தான் காணப்படுகிறது. எங்களது மக்களின் நலனுக்காகவே நாங்கள் பல்கலைக்கழகம் சென்றோம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் நாங்கள் என்ன காரணத்துக்காக பல்கலைக்கழகம் சென்றோமோ அந்த காரணம் தற்போது பின்னோக்கிச் செல்லப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் தமக்கான நிலம் வேண்டும் என்று போராடியவர்கள் தான் தமிழ் மக்கள். இன்றைய அரசாங்கம் வடக்கு - கிழக்கு மக்களை இணைத்து ஒன்றாக பயணிப்போம் என்று கூறினாலும் தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை செய்துகொண்டே இருக்கின்றனர். உங்களது ஆக்கிரமிப்புகளை எந்த அளவிற்கு விரைவாக நிறுத்துகின்றீர்களோ அந்த அளவிற்கு தான் இந்த நாட்டினை ஒன்றாக மாற்ற முடியும். அரசாங்கம் சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று. இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிரான நிலையில் செல்லலாம். எனவே அரசாங்கம் அனைத்து மக்களையும் சம கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237642
-
தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பையும் மீறி வலி கிழக்கில் கிவுல் ஓயா எதிர்ப்பு பிரேரணை நிறைவேற்றம்
தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பையும் மீறி வலி கிழக்கில் கிவுல் ஓயா எதிர்ப்பு பிரேரணை நிறைவேற்றம் 02 Feb, 2026 | 03:58 PM தமிழ் மக்களின் பூர்விக தாயகமான வடக்குக் கிழக்கில் தமிழ் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் அரச கொள்கையின் திட்டமிட்ட தொடர்ச்சியாகவே கிவுல் ஓயாத்திட்டம் அமைகிறது எனத் தெரிவித்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சபைக் கூட்டம் இடம்பெற்றது. கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான பிரேரணை சபையில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்னால் முன்வைக்கப்பட்டது. இப் பிரரேரணையினை சபையில் முன்வைக்க முடியாது என மத்தியில் ஆளும் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர். அவ் எதிர்ப்பினையும் மீறி தமிழ்க் கட்சிகள் அனைத்தும் பிரேரணைக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியினரின் கருத்தை எதிர்த்தன. இறுதியில் தேசிய மக்கள் சக்தியினர் நிகழ்ச்சி நிகழ்ச்சி நிரலில் இல்லாததை எவ்வாறு தவிசாளர் சபைக்கு ஆற்றுப்படுத்த முடியும் என வாதிட்டனர். நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாத ஒன்றை சபையின் அனுமதியுடன் தவிசாளர் அறிவிப்பாக முன்வைப்பதற்கு ஏற்பாடுகளில் இடமுண்டு. எனவே தயவு செய்து இனம் சார்ந்த பிரச்சினையில் உங்கள் கட்சி சார்ந்த நிலைப்பாடுகளுக்காக நீங்கள் தடையினை ஏற்படுத்தாதீர்கள் என பலதடவைகள் தேசிய மக்கள் சக்தியினரின் வினயமாகக் கோரினார், எனினும் கூச்சல் தொடர்ந்தது. தவிசாளர், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான காரணங்களுள் ஒன்றாக அரச அனுசரனையுடன் திட்டமிட்ட சிங்கள பேரினவாதக் குடியேற்றங்கள் வரலாற்று ரீதியாக இடம்பெற்றுள்ளன. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அதிகாரசபைகள் ஊடாக குறிப்பாக மகாவலி அதிகார சபை ஊடாக ஏற்கனவே பல சிங்கள குடியேற்றங்கள் தமிழர் இன விக்தாசாரத்தினையும் அடையாளத்தினையும் இருப்பையும் அழிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளன. அரசாங்கம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூறாது இனப்பிரச்சினை தீர்வை முன்வைக்காது கடந்த அரசாங்கங்கள் போலவே தொடர்ந்து செயற்படுகின்றது. அதனை ஏற்க முடியாது. ஆரம்பமாக அரசாங்கம் 2500 மில்லியன்களை ஒதுக்கி சூட்சுமமான முறையில் ஆரம்பித்துள்ள இத்திட்டத்தினை எதிர்கின்றோம். மேலும் பல கோடிகள் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படவுள்ள நிலையில் அரசாங்கம் தமிழர்களின் வரலாற்றத் தாயக இயல்பு வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். தவிசாளரை உரையாற்ற விடாது செயற்பட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினரை ஒருமாத காலத்திற்கு சபையில் இருந்து வெளியேற்ற வேண்டிவரும் என தவிசாளர் எச்சரித்த நிலையில் சபையில் சற்ற அமைதி ஏற்பட்டது. இதில் சபை உறுப்பினர்களின் விவாதத்திற்கு அனுமதிக்கப்பட்டது. விவாதத்தில் தேசிய மக்கள் சக்தியைத் தவிர பிரசன்னமாகியிருந்த தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்கள் கண்டனத் தீர்மானத்திற்கு முழு ஆதரவைத் தெரிவித்தனர். இந் நிலையில், சபையில் தேசிய மக்கள் சக்தியின் ஒன்பது உறுப்பினர்களில் தலைமை தாங்கும் உறுப்பினர் இத் தீர்மானத்திற்கு எதிராகவும் ஏனைய எட்டு உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர். தேசிய மக்கள் சக்தியைத் தவிர தமிழ்க் கட்சிகள் அனைத்தினதும் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. https://www.virakesari.lk/article/237616
-
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்; அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு
கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; பெருந்திராளான மக்கள் பங்கேற்பு 02 Feb, 2026 | 02:05 PM தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் வகையில் மகாவலி அதிகாரசபையின் (எல்) வலயத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப்பேரணியொன்று இன்று திங்கட்கிழமை (02) இடம்பெற்றது. அந்தவகையில் ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டப்பேரணியானது நெடுங்கேணி பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமாகி, வவுனியாவடக்கு பிரதேசசெயலகம் வரையில் இடம்பெற்றதுடன், வவுனியா வடக்கு பிரதேச செயலக முன்றலிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டப்பேரணியில் கலந்துகொண்டார் கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் கோசங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் ஜனாதிபதிக்கான மகஜர் இதன்போது ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளால் வவுனியா வடக்குபிரதேசசெயலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. மேலும் இவ்வார்ப்பாட்டப் பேரணியில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சாந்தி சிறீஸ்கந்தரசா, மு.சந்திரகுமார், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கியஸ்தரான க.துளசி, சிறீரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சமூகசெயற்பாட்டார்கள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237602
-
சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு
சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு Feb 2, 2026 - 07:22 PM 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை தரவிறக்கம் செய்வது மற்றும் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தனியார் விண்ணப்பதாரர்கள் தமது அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திணைக்கள இணையத்தளத்திற்குச் சென்று தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்தத் திருத்தங்களை மேற்கொள்ளும் கால அவகாசம் 2026.02.10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும். திருத்தங்களுக்கான இந்தத் திகதி மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். இம்முறை சாதாரண தரப் பரீட்சையானது பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 3,545 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிப்பத்திரங்கள் தற்போது அந்தந்த பாடசாலைகளுக்குரிய வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அனைத்து அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலயக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பாடத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளரிடமிருந்து அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk இணையத்தளத்தின் ஊடாக அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மேலதிக விபரங்களுக்கு: உடனடி அழைப்பு இலக்கம்: 1911 தொலைபேசி இலக்கங்கள்: 0112784208, 0112784537 பெக்ஸ் இலக்கம்: 0112784422 மின்னஞ்சல்: gceolexamsl@gmail.com https://adaderanatamil.lk/news/cml58bcw404r7o29n8o6dhwq0
-
பட்ஜெட் 2026: எவையெல்லாம் விலை அதிகரிக்கும்?
'முழு நிதியும் செலவிடப்படாத திட்டங்களுக்கு மீண்டும் அதிக நிதி ஏன்?' - மத்திய பட்ஜெட் பற்றி நிபுணர்கள் அலசல் பட மூலாதாரம்,SANSAD TV கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 பிப்ரவரி 2026, 03:13 GMT 2026 - 27ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் நிதிநிலை அறிக்கை ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ச்சியாக அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது நிதி நிலை அறிக்கை இது. பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவில் தாக்கல் செய்யப்பட்ட இந்த நிலை அறிக்கையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் பெரிய அளவில் இடம்பெறவில்லை. ஆனால், கவனிக்கத்தக்க சில அம்சங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. சுமார் 53.47 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்த நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சரியாகச் சொன்னால், 53,47,315 கோடி ரூபாய். நிதிப் பற்றாக்குறை 16,95,768 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. வருவாய் பற்றாக்குறையைப் பொறுத்தவரை கடந்த நிதியாண்டைவிட அதிகரித்து 5,92,344 லட்சம் கோடி ரூபாயாக இருந்தாலும், அதே 1.5 சதவீதமாக நீடிக்கும் என இந்த நிதிநிலை அறிக்கை கூறுகிறது. கடந்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக இருந்தது. அது இந்த நிதியாண்டில் 4.3 சதவீதமாகக் குறையும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. கடன்களைப் பொறுத்தவரை, ஜிடிபியில் 56.1 சதவீதத்தில் இருந்து 55.6 சதவீதமாகக் குறையும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில்தான் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் செய்யப்பட்டது என்பதால், கடந்த நிதியாண்டில் இருந்த அளவுக்குத்தான் வரி வருவாய் இருக்குமென மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த வரி வருவாய், 8 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவுகளைப் பொறுத்தவரை, இந்த நிதி நிலை அறிக்கையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது முதலீட்டுச் செலவுகள்தான். மொத்தச் செலவான 53.47 லட்சம் கோடி ரூபாயில் 12,21,821 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டுச் செலவுகள் செய்யப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. நிதிப் பற்றாக்குறை குறைப்பு, மூலதனச் செலவு அதிகரிப்பு போன்ற அம்சங்கள் இருந்தபோதும் பங்குச் சந்தை நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது. நிதியமைச்சர் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டிருந்தபோதே, பங்குச் சந்தை வீழ ஆரம்பித்தது. நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்த மற்றொரு அம்சம், வீழ்ச்சியை இன்னும் துரிதப்படுத்தியது. அதாவது, ஃபியூச்சர்ஸ் (Futures) வர்த்தகம் மீதான பங்குப் பரிவர்த்தனை வரி (STT) தற்போதைய 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் ஆப்ஷன்ஸ் பிரீமியம் (options premium) மற்றும் ஆப்ஷன்ஸ் செயல்படுத்தல் (exercise of options) ஆகிய இரண்டிற்குமான பங்குப் பரிவர்த்தனை வரி முறையே தற்போதைய 0.1 சதவீதம் மற்றும் 0.125 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார். சிறு முதலீட்டாளர்கள் ப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட்டு தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்துவருவதாக 'செபி' சுட்டிக்காட்டிவந்த நிலையில் இந்தக் கட்டண அதிகரிப்பு, அந்தத் திசையில் ஒரு கவனிக்கத்தக்க நடவடிக்கையாக இருந்தது. ஆனால், பங்குச் சந்தை இதனை எதிர்மறையாக அணுகியதில், பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. பட மூலாதாரம்,Getty Images மோதி பாராட்டு மத்திய பட்ஜெட்டைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோதி, உள்கட்டமைப்பை வலுப்படுத்த பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். "இந்த பட்ஜெட் நிகழ்கால கனவுகளை நனவாக்குகிறது மற்றும் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது. உள்கட்டமைப்பை வலுப்படுத்த பட்ஜெட் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், நாடு முழுவதும் நீர்வழிகளை விரிவுபடுத்துதல், அதிவேக ரயில் வழித்தடங்கள், அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களின் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்துதல் மற்றும் நகரங்களுக்கு வலுவான பொருளாதார அடித்தளத்தை வழங்க நகராட்சி பத்திரங்களை ஊக்குவித்தல், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை மேலும் துரிதப்படுத்தும்." என்று அவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் விமர்சனம் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இல்லாத இந்த நிதி நிலை அறிக்கை எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம், நிதி நிலை அறிக்கை குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். "வேலை வாய்ப்பின்மை, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது போன்ற நிஜமான பிரச்னைகளை நிதியமைச்சர் கவனத்தில் கொள்ளவில்லை" என்று குறிப்பிட்டார் ப. சிதம்பரம். பொருளாதார நிபுணர்களைப் பொறுத்தவரை நிதி நிலை அறிக்கையின் சில அம்சங்கள் கவனிக்கத்தக்கவை என்றாலும் வேறு சில எதிர்பார்ப்புகளை இந்த நிதி நிலை அறிக்கை பூர்த்தி செய்யவில்லை என்கிறார்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் "2025 - 26ஆம் நிதியாண்டில் 4.4 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறை, வரும் நிதியாண்டில் 4.3 சதவீதமாக இருக்கும் என்கிறது நிதிநிலை அறிக்கை. இது பேரியல் பொருளாதாரத்தில் (Macro Economics) நல்ல குறியீடாகப் பார்க்கப்படும். ஆகவே, அது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துவருகின்றன. கடந்த மூன்று மாதங்களில் நிறைய வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியிருக்கின்றன. நேரடி அந்நிய முதலீடும் வருவதில்லை, பங்குச் சந்தையிலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில்லை. இந்தியாவில் உள்ள தொழில் முனைவோரும் இங்கு முதலீடு செய்வதில்லை. காரணம், பொருளாதாரம் மீதான நம்பிக்கையின்மைதான். அதற்கு இந்த நிதி நிலை அறிக்கையில் தீர்வில்லை" என்கிறார் ஓய்வுபெற்ற பொருளாதாரப் பேராசிரியரான கே. பிரபாகர். ஆனால், இந்த நிதி நிலை அறிக்கை இந்தியப் பொருளாதாரம் குறித்து கவலை அளிக்கக்கூடிய தகவலைச் சொல்கிறது என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் முன்னாள் பேராசிரியரான ஜோதி சிவஞானம். "கடந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கைக்கும் இந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கைக்கும் பெரிய வித்தியாசமில்லை. கடன்கள், நிதிப் பற்றாக்குறை ஆகியவை கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கிறன. " என்கிறார் அவர். படக்குறிப்பு,ஓய்வுபெற்ற பொருளாதாரப் பேராசிரியரான கே. பிரபாகர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பால், பொருளாதாரத்திற்குப் பலன்கள் ஏதும் கிட்டவில்லை என்ற நிலையில் அந்தச் சலுகையைத் தொடர்வது ஏன் என்கிறார் கே. பிரபாகர். "இந்த நிதிநிலையை அறிக்கையைப் பார்க்கும்போது வருமான வரியும் ஜிஎஸ்டியும்தான் பெரும் அளவிலான வருவாயைத் தருகின்றன. கார்ப்பரேட்களுக்கு வரியைக் குறைத்தால், அவர்களுக்குக் கிடைக்கும் லாபத்தில் அவர்கள் கூடுதலாக முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது." "ஆனால், அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு முதலீடு செய்யவில்லை. காரணம், ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்தே 75 சதவீதம்தான் உற்பத்தி செய்கிறோம் எனும்போது, புதிதாக முதலீடுசெய்து என்ன செய்வது என்கிறார்கள். அதற்குக் காரணம், நுகர்வு குறைந்திருப்பதுதான். கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிதாக முதலீடுசெய்வதில்லை என்பதால் அவர்களுடைய லாபம் அதிகரித்திருக்கிறது. இருந்தும் இந்தச் சலுகை தொடர்கிறது" என்கிறார் கே. பிரபாகர். இந்த இரு பொருளாதார பேராசிரியர்களும் சுட்டிக்காட்டும் இன்னொரு விஷயம், மாநிலங்களோடு பகிரப்படாத வருவாயை மத்திய அரசு அதிகரித்துக்கொண்டே செல்வது. கே. பிரபாகர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக விதிக்கப்படும் சிறப்பு வரி (cess - செஸ்) அதிகரித்துக்கொண்டே போவதைச் சுட்டிக்காட்டுகிறார். "2014ல் 10 சதவீதமாக இருந்த செஸ் தற்போது 18 சதவீதமாகிவிட்டது. இந்த சிறப்பு வரிகளில் இருந்து கிடைக்கும் வருவாய் மாநிலங்களோடு பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை. இதற்கென தேசிய அளவில் திட்டங்களைத் தீட்டி, நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். இதில் எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கிறது என்பது தெரியவில்லை" என்கிறார் கே. பிரபாகர். படக்குறிப்பு,சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் முன்னாள் பேராசிரியரான ஜோதி சிவஞானம் (கோப்புப் படம்) ஜோதி சிவஞானம் இதேபோன்ற மாநிலங்களோடு பகிரப்படாத மற்றொரு வருவாயைச் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் ஈவுத் தொகை, ரிசர்வ் வங்கியில் இருந்து கிடைக்கும் டிவிடென்ட் போன்ற வரி அல்லாத வருவாய் இந்த ஆண்டில் 6.6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டிருக்கிறது. "இப்படி மாநிலங்களோடு பகிரப்படாத தொகை அதிகரித்துக்கொண்டே போவது நல்லதல்ல" என்கிறார் அவர். பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திற்கு மேல் இருக்கும் எனக் கணிக்கப்பட்டாலும் அந்தப் புள்ளிவிவரங்கள் சரியானவையா என பல பொருளாதார நிபுணர்கள் கேள்வியெழுப்புவதைச் சுட்டிக்காட்டுகிறார் கே. பிரபாகர். "சராசரி பணவீக்கத்தை மிகக் குறைவாகக் கணக்கிட்டு வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது. இந்தியாவின் ஜிடிபி மதிப்பீடுகள் தற்போதைய பொருளாதாரத்தின் நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்பதால், இந்தப் புள்ளிவிவரங்களுக்கு சர்வதேச நிதியம் சி கிரேடு (C Grade) கொடுத்திருக்கிறது. அரவிந்த் சுப்ரமணியம் போன்ற பொருளாதார நிபுணர்கள் இந்தியாவின் வளர்ச்சி 2.5 சதவீதம் அதிகமாகக் கணக்கிடப்படுகிறது என்கிறார்கள். மத்திய அரசு சொல்வதைப் போல வளர்ச்சி இருந்தால் ரூபாயின் மதிப்பு ஏன் சரிந்துகொண்டே வருகிறது என்பதற்கு விளக்கமில்லை" என்கிறார் கே. பிரபாகர். மத்திய அரசே செயல்படுத்தக் கூடிய வகையில் பல திட்டங்களை அறிவித்தாலும், அவை சரியாக செயல்படுத்தப்படுவதில்லை என்கிறார் அவர். அவர் சொல்வதைப் போலவே கடந்த நிதியாண்டில் பல மத்திய அரசின் திட்டங்களுக்கு பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு குறிப்பிடப்பட்டாலும் மிகக் குறைந்த அளவில் செலவிடப்பட்டதை இந்த நிலை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக, கடந்த நிதி ஆண்டில் தேசிய ஆயுஷ் மிஷனுக்கு 1,275 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு 781 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு 7,500 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் 4,500 கோடி ரூபாய் மட்டுமெ செலவிடப்பட்டது. பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புறம் 2.0 திட்டத்திற்கு 3,500 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு 300 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கு 67,000 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு 17,000 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டங்கள் அனைத்திற்கும் இந்த நிதி நிலை அறிக்கையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அளவுக்கு அல்லது அதைவிட அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. "இப்போது நிறைய நகரங்களை மேம்படுத்த வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே இதற்கென போடப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ன ஆனதெனத் தெரியவில்லை. இப்போது, கிளஸ்டர் மேம்பாடு (Clusters Development) குறித்துச் சொல்கிறார்கள். 200 கிளஸ்டர்கள் மேம்படுத்தப்படும் என்கிறார்கள். இந்தியாவில் ஏற்கனவே தொழில் சார்ந்து 5,000 கிளஸ்டர்களாவது இருக்கும். உதாரணமாக, கோயம்புத்தூர் கிரைண்டர் உற்பத்தி தொழிலுக்கான ஒரு கிளஸ்டர். இப்போது உள்ள 5,000 கிளஸ்டர்களில் இருந்து 200ஐ எப்படி தேர்வுசெய்வார்கள் என தெரியவில்லை. இறுதியாகப் பார்க்கும்போது நம் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையோடு இருக்கலாம். ஆனால், நாம் போகும் பாதை சரியா என்ற கேள்வி இருக்கிறது" என்கிறார் கே. பிரபாகர். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c931v04e9elo
-
கிராமி விருதை வென்றார் தலாய் லாமா
கிராமி விருதை வென்றார் தலாய் லாமா Published By: Digital Desk 3 02 Feb, 2026 | 02:05 PM திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது 90 ஆவது வயதில் உலகின் உயரிய இசை விருதாகக் கருதப்படும் கிராமி விருதை (Grammy Award) வென்று புதிய சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 68 ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில், "சிறந்த ஓடியோ புத்தகம், கதை சொல்லல் மற்றும் பதிவு" (Best Audio Book, Narration, and Storytelling Recording) என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. Meditations: The Reflections of His Holiness the Dalai Lama என்ற அல்பத்திற்காக தலாய் லாமாவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதில் தலாய் லாமாவின் அமைதியான குரலில் ஒலிக்கும் தியானக் குறிப்புகளும், இந்துஸ்தானி இசைக்கலைஞர் அம்ஜத் அலி கான் மற்றும் அவரது மகன்களின் சாரோட் (Sarod) இசையும் இணைந்து ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன. கருணை, மன அமைதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலகளாவிய கருத்துக்களை மையமாகக் கொண்டு இந்த அல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் அமெரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ட்ரெவர் நோவா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அவர்களைக் கடந்து தலாய் லாமா இந்த விருதைத் தட்டிச் சென்றுள்ளார். இந்த அங்கீகாரம் குறித்து தலாய் லாமா, "இந்த விருதை நான் ஒரு தனிப்பட்ட வெற்றியாகப் பார்க்கவில்லை. மாறாக, மனிதநேயம் மற்றும் உலகளாவிய பொறுப்புணர்வுக்கான அங்கீகாரமாகவே கருதுகிறேன். அமைதி, கருணை மற்றும் உலக மக்கள் அனைவரும் ஒன்றே என்ற எண்ணம் எட்டு பில்லியன் மக்களுக்கும் சென்றடைய இந்த விருது உதவும் என்று நம்புகிறேன்." எனக் கருத்து தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/237601
-
யாழ். மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி நபரொருவர் பலி!
யாழ். மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி நபரொருவர் பலி! 02 Feb, 2026 | 04:55 PM பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பகுதியில் இன்று திங்கட்கிழமை (02) மதியம் இராணுவ வாகனம் மோதியதில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த நபர் வீதியை கடக்க முயன்றபோது அவர்மீது இராணுவ வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தை செலுத்திய பெண் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பலாலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/237632
-
சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!
இந்தியக் கடலோரக் காவல்படையின் தாக்குதல்: அமைச்சர் சந்திரசேகர் கடும் கண்டனம் Feb 2, 2026 - 07:17 PM பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மீனவர்கள் குழுவொன்றின் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நடத்திய தாக்குதலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இச்சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். வென்னப்புவ, வெல்லமன்கரை துறைமுகத்திலிருந்து கடற்தொழிலுக்காகப் புறப்பட்டுச் சென்ற இரண்டு படகுகளில் இருந்த 12 மீனவர்கள் மீது, கடந்த 29ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருந்த போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான மீனவர்களில் நால்வர் கடற்படையினரின் படகு மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டு காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 மீனவர்களை அழைத்து வருவதற்காகக் கடற்படைக் கப்பல் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இச்சம்பவம் குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என அகில இலங்கைநெடுநாள் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டிரோன் மென்டிஸ் வலியுறுத்தியுள்ளார். "மூன்று படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு படகுகள் இலங்கை கடற்பரப்பிலேயே தாக்கப்பட்டுள்ளன. எல்லையில் இருந்து எமது கடற்பரப்பிற்குள் நுழைந்தே அவர்கள் தாக்கியுள்ளனர். அவ்வாறு தாக்கும் வரை எமது அதிகாரிகள் என்ன செய்தார்கள் என நாம் முதலில் கேட்க வேண்டும். இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆராயுமாறு நாம் எமது இரு அமைச்சர்களிடமும் கோருகிறோம். கடற்படையினரிடமும் முறையான விசாரணையைக் கோருகிறோம். எமது மீனவர்களைத் தாக்கிவிட்டுச் செல்லும் வரை என்ன செய்தீர்கள் எனக் கடற்படையினரிடமும் கேட்கிறோம்." என அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், இலங்கை கடற்பரப்பிற்குள் மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை நடத்திய இத்தாக்குதலின் போது, மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து 'அத தெரண' கடற்படையினரிடம் வினவியது. இதற்குப் பதிலளித்த கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் புத்திக சம்பத், இலங்கை கடற்பரப்பை முழுமையாக ஒரே நேரத்தில் கண்காணிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cml584kzb04r6o29nuwy6a6x6
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
உலகளவில் பாதி: இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் பாம்பு கடித்து பல ஆயிரம் பேர் பலியாக என்ன காரணம்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50,000 இந்தியர்கள் பாம்புக்கடியால் இறக்கின்றனர். இது உலகளவில் ஏற்படும் இறப்புகளில் பாதி. கட்டுரை தகவல் செரிலன் மொல்லன் 2 பிப்ரவரி 2026, 08:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தேவேந்திரா என்பவர் ஒரு இந்திய விவசாயி. மல்பெரி இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பாம்பு தன் காலில் பற்களைப் பதித்த அந்தத் தருணத்தை அவர் இப்போதும் நினைவில் வைத்திருக்கிறார். "பாம்பு கடித்த நான்கு நாட்களுக்குப் பிறகு, வலி தாங்க முடியாததாக மாறியபோது தான் நான் மருத்துவமனைக்குச் சென்றேன். தாமதமாகச் சென்றதால் எனது காலை இழக்க நேரிட்டது," என்று உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு (Global Snakebite Taskforce - GST) வெளியிட்டுள்ள ஒரு குறும்படத்தில் அவர் கூறுகிறார். ஆனால் உயிர் பிழைத்த சில அதிர்ஷ்டசாலிகளில் தேவேந்திராவும் ஒருவர். மத்திய அரசின் கூற்றுப்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50,000 பேர் பாம்புக்கடியால் உயிர் இழக்கின்றனர். இது உலகெங்கிலும் ஏற்படும் இறப்புகளில் பாதியாகும். சில மதிப்பீடுகள் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறுகின்றன. 2000 முதல் 2019 வரை, இந்தியாவில் 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் உயிர் இழந்திருக்கலாம், அதாவது ஆண்டுக்கு சராசரியாக 58,000 இறப்புகள் நேர்ந்திருக்கலாம் என்று 2020 ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. தற்போது, உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 99% சுகாதாரப் பணியாளர்கள் விஷமுறிவு மருந்தை வழங்குவதில் சவால்களை எதிர்கொள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது விஷத்தின் நச்சுத்தன்மையை நீக்கும் உயிர் காக்கும் ஆன்டிபாடிகள் ஆகும். பாம்புக்கடியால் அதிக பாதிப்புகளை சந்திக்கும் இந்தியா, பிரேசில், இந்தோனீசியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 904 மருத்துவ நிபுணர்களிடம் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மோசமான உள்கட்டமைப்பு, மருந்து கிடைப்பதில் சிக்கல் மற்றும் போதிய பயிற்சி இல்லாமை போன்ற தடைகள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். சிகிச்சையில் ஏற்படும் தாமதத்தால் நோயாளிகளின் உடல் உறுப்புகள் துண்டிக்கப்படுதல் , அறுவை சிகிச்சைகள் அல்லது வாழ்நாள் முழுவதுமான உடல்நலப் பாதிப்புகள் போன்ற கடுமையான சிக்கல்கள் ஏற்படுவதாகப் பாதிக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பாம்புக்கடியால் ஏற்படும் அதிகப்படியான உயிரிழப்புகள் காரணமாக, 2017ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (WHO) இதை "மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய, புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்" என்று அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிட்டது. உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள தகவல்படி, உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 54 லட்சம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள்; 1,00,000-க்கும் அதிகமானோர் இதனால் உயிரிழக்கின்றனர். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள ஏழை கிராமப்புற மக்களே பாம்புக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது. பட மூலாதாரம்,Strike Out Snakebite படக்குறிப்பு,மல்பெரி இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததால் தேவேந்திராவின் காலை துண்டிக்க வேண்டியிருந்தது. மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் பாம்புக்கடியால் அதிகப்படியான உயிர் இழப்புகளும் காயங்களும் பதிவாகின்றன என்று மத்திய சத்தீஸ்கர் மாநில ஜிஎஸ்டி உறுப்பினரும் பயிற்சியாளருமான மருத்துவர் யோகேஷ் ஜெயின் கூறுகிறார். குறிப்பாகப் பண்ணைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் ஏழை பழங்குடி மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார். 2030-ஆம் ஆண்டிற்குள் பாம்புக்கடி இறப்புகளைப் பாதியாகக் குறைக்கும் நோக்கத்தில், 2024-ஆம் ஆண்டில் இந்தியா பாம்புக்கடி தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயல் திட்டத்தை (NAPSE) அறிமுகப்படுத்தியது. இது கண்காணிப்பு, விஷமுறிவு மருந்து கையிருப்பு, ஆராய்ச்சி, மேம்பட்ட மருத்துவத் திறன் மற்றும் பொது விழிப்புணர்வு பிரசாரங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. நிபுணர்கள் இது ஒரு சரியான முயற்சி என்று ஒப்புக்கொண்டாலும், அது சரியாக செயல்படுத்தப்படுவது இல்லை. "இந்தியாவில் பாம்புக்கடி என்பது ஏழைகளின் பிரச்னையாகவே பார்க்கப்படுகிறது. அதனால் தான் இந்த முற்றிலும் தவிர்க்கக்கூடிய மரணங்களுக்கு எதிராகப் போதிய எதிர்ப்போ அல்லது நடவடிக்கையோ இல்லை. பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிப்பதைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நொடியும் முக்கியமானது"என்கிறார் ஜெயின். பாம்பு விஷம் சில நிமிடங்களில் ரத்த ஓட்டத்தில் கலந்து, பாம்பு வகையை பொறுத்து நரம்புகள், செல்கள் அல்லது சுற்றோட்ட மண்டலத்தைத் தாக்குகிறது. மருந்து செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் சுவாசக் கோளாறு, பக்கவாதம், திசு பாதிப்பு அல்லது உறுப்பு செயலிழப்பு ஏற்படலாம் என்று அவர் விளக்குகிறார். கிராமப்புற இந்தியாவில் மோசமான சாலைகள், மருத்துவமனைகள் செல்வதற்கான தூரம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி இல்லாமை போன்றவற்றால் மருத்துவமனையில் சேர்ப்பதில் தாமதம் ஏற்படுவது பொதுவான ஒன்றாக இருக்கிறது. கடந்த செப்டம்பரில், குஜராத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஒரு கர்ப்பிணி இறந்ததாகக் கூறப்படுகிறது. அவரது கிராமத்துக்குப் போதுமான வாகன வசதி இல்லாததால் குடும்பத்தினர் அவரை 5 கி.மீ (3 மைல்) தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. சில மாநிலங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விஷமுறிவு மருந்துகளை கையிருப்பு வைத்து நிலைமையை மேம்படுத்த முயற்சிப்பதாக ஜெயின் கூறுகிறார். இருப்பினும், அதை சரியாக நிர்வகிப்பது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. பல சுகாதாரப் பணியாளர்களுக்குப் போதிய பயிற்சி இல்லை மற்றும் நோயாளிகளுக்குச் செலுத்தப்படும் மருந்து எதிர்வினைகளை உண்டாக்குமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. "விஷமுறிவு மருந்து சலைன் திரவத்துடன் கலந்து ஒரு மணி நேரம் நரம்பு வழியாகச் செலுத்தப்பட வேண்டும். ஆனால் பல மையங்களில் பக்கவிளைவுகளைக் கையாளும் வசதிகள் இல்லை" என்று ஜெயின் கூறுகிறார். மற்றொரு பிரச்னை என்னவென்றால், கிராமப்புறங்களில் உள்ள பலர் இன்னும் நாட்டு வைத்தியம் அல்லது உள்ளூர் மருத்துவ முறைகளை நம்பியிருக்கிறார்கள். நிலைமை மோசமான பிறகு மட்டுமே அவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதால் , அது ஆபத்தில் முடிகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,The Liana Trust படக்குறிப்பு,ஜெர்ரி மார்ட்டினின் தி லியானா டிரஸ்ட், பிராந்திய பாம்பு இனங்களின் கடிக்கு மாற்று மருந்துகளை ஆராய்ச்சி செய்து வருகிறது. கர்நாடகாவில் மனித-பாம்பு மோதல்களைக் குறைக்கப் பணியாற்றும் 'தி லியானா டிரஸ்ட்'அமைப்பின் இணை நிறுவனர் ஜெர்ரி மார்ட்டின், உயர்தர விஷமுறிவு மருந்து கிடைப்பதில் உள்ள சிக்கலே மற்றொரு பெரிய தடையாக இருப்பதாகக் கூறுகிறார். தற்போது இந்தியாவில் உள்ள விஷமுறிவு மருந்து, இந்தியாவில் பாம்புக்கடியால் ஏற்படும் அதிக உயிரிழப்புகளுக்குக் காரணமான "பிக் ஃபோர்" என்று அழைக்கப்படும் நான்கு நச்சுப் பாம்புகளுக்கு எதிராக மட்டுமே செயல்படுகிறது. அவை, நாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகும். இந்தியாவில் பெரும்பாலான பாம்புக்கடிகளுக்கு இவை காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பாம்புகளின் விஷத்தை குதிரைகளுக்கு செலுத்தி, அவற்றின் உடலில் உருவாகும் ஆன்டிபாடிகளைப் பிரித்தெடுத்து மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுவதாக இந்த விஷமுறிவு மருந்து தயாரிக்கும் முறை பற்றி மார்ட்டின் விளக்குகிறார். "ஆனால், இந்தியாவில் இன்னும் பல்வேறு வகையான விஷப் பாம்புகள் உள்ளன, அவற்றுக்கான பிரத்யேக விஷமுறிவு மருந்துகள் நம்மிடம் இல்லை." இமாச்சல பிரதேசத்தில் காணப்படும் க்ரீன் பிட் வைப்பர் (Green pit viper), தென்னிந்தியாவில் உள்ள மலபார் பிட் வைப்பர் (Malabar pit viper), ஹம்ப் நோஸ்ட் பிட் வைப்பர் (hump-nosed pit viper) மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு இனங்கள் இதில் அடங்கும். கடந்த ஆண்டு ஜோத்பூர் எய்ம்ஸ் (AIIMS) நடத்திய ஆய்வு இந்த சிக்கலை உறுதிப்படுத்தியது. சுருட்டை விரியன் பாம்புக்கடிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் விஷ முறிவு மருந்து 105 பாம்புக்கடி நோயாளிகளுக்கு (கடித்த பாம்புகளின் இனங்கள் தெரியவில்லை) வழங்கப்பட்ட போது, மூன்றில் இரண்டு பங்கு பேருக்குச் சிகிச்சைக்கு எதிர்பார்த்த பலனை தரவில்லை என்று கண்டறியப்பட்டது. "மேற்கு இந்தியாவில் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற பிரத்யேக விஷமுறிவு மருந்துகள் உடனடியாகத் தேவைப்படுவதாக" அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, 'தி லியானா டிரஸ்ட்' இந்த நான்கு நச்சுப் பாம்புகள் தவிர பிற பாம்புகளின் விஷம் குறித்து ஆய்வு செய்து, அவற்றுக்கான மாற்று மருந்துகளை உருவாக்கி வருகிறது. ஆனால், இது அதிக உழைப்பும் காலமும் தேவைப்படும் செயல் என்பதால் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது என மார்ட்டின் கூறுகிறார். கர்நாடக அரசால் 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அந்த உத்தரவில் பாம்புக்கடியை "தெரியப்படுத்தப்பட வேண்டிய நோய்" என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாம்புக்கடி சம்பவங்களை மருத்துவ பணியாளர்கள் கட்டாயமாக அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதையும், இதனால் பாம்புக்கடி சம்பவங்கள் குறைவாகப் பதிவு செய்யப்படுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. "அரசியல் விருப்பம் எங்கு முடிகிறதோ, அங்குதான் பாம்புக்கடி மரணங்கள் தொடங்குகின்றன" என்று மருத்துவர் ஜெயின் கூறுகிறார். "ஏழை மக்கள் மோசமான சுகாதார கட்டமைப்பைப் பெறக்கூடாது என்பதில் அரசாங்கங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அவர்கள் சிறந்ததைப் பெற தகுதியானவர்கள்" என்றும் அவர் வலியுறுத்துகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgqede7wwxlo
-
49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு
49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு Feb 2, 2026 - 06:50 PM 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு, அவர்கள் பூர்த்தி செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வாரம் என்ற அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், 75,000 ரூபாவுக்கும் குறைந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறியமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனை காலமும் ரத்து செய்யப்படவுள்ளது. https://adaderanatamil.lk/news/cml57706i04r5o29nh8nh67xg
-
இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான் கடற்படையின் அதிரடி மீட்பு நடவடிக்கை: இலங்கை பிரஜை மீட்பு
இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான் கடற்படையின் அதிரடி மீட்பு நடவடிக்கை: இலங்கை பிரஜை மீட்பு 02 Feb, 2026 | 04:34 PM மனிதாபிமான அடிப்படையிலும், கடலில் ஆபத்தில் இருப்பவர்களைக் காக்கும் கடமையுணர்வோடும் பாகிஸ்தான் கடற்படை இந்தியப் பெருங்கடலில் ஒரு மிகப்பெரிய மீட்புப் பணியைச் செய்து முடித்துள்ளது. பாகிஸ்தான் கரையில் இருந்து சுமார் 1,500 கி.மீ (800 கடல் மைல்) தொலைவில், நடுக் கடலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இலங்கை பிரஜை ஒருவரை பாகிஸ்தான் கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். சர்வதேச அளவில் விடுக்கப்பட்ட அவசர அழைப்பை ஏற்று, மிக விரைவாகச் செயல்பட்டு இந்த நீண்ட தூர மருத்துவ மீட்புப் பணியை அவர்கள் வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்தச் செயல் பாகிஸ்தான் கடற்படையின் திறமையை உலகிற்குக் காட்டுவதுடன், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான சகோதரத்துவ உறவையும், ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மீட்புப் பணிக்குப் பிறகு, மீட்கப்பட்ட இலங்கை பிரஜையின் குடும்பத்தினர் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்குச் சென்று பாகிஸ்தான் அரசுக்கும், கடற்படைக்கும் நேரில் நன்றி தெரிவித்தனர். சரியான நேரத்தில் கடற்படையினர் எடுத்த முடிவால்தான் தங்கள் உறவினரின் உயிர் பிழைத்தது என்று அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர். அவர்களை வரவேற்ற இலங்கைக்கான பாகிஸ்தான் தூதர், "பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான நட்பு வெறும் அரசியல் சார்ந்தது அல்ல; இது மனிதாபிமானத்தின் அடிப்படையில் உருவானது. கடல் பாதுகாப்பு முதல் மற்ற அனைத்து உதவிகள் வரை, இலங்கை சகோதரர்களுக்குத் தோள் கொடுக்க பாகிஸ்தான் எப்போதும் தயாராக இருக்கும்," என்று உறுதியளித்தார். இந்தச் சம்பவம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆபத்து காலங்களில் பாகிஸ்தான் கடற்படை ஒரு நம்பகமான நண்பனாக இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. https://www.virakesari.lk/article/237620
-
பட்ஜெட் 2026: எவையெல்லாம் விலை அதிகரிக்கும்?
ராணுவத்திற்கு ரூ.7.8 லட்சம் கோடி ஒதுக்கீடு: சீனா, பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இது போதுமானதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வரும் நிதியாண்டில் பாதுகாப்பு பட்ஜெட் ரூ. 7.84 லட்சம் கோடியாக உள்ளது. கட்டுரை தகவல் முகமது ஷாஹித் பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை மக்களவையில் 2026-27 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதன்படி, பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் சுமார் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட் ரூ.6,81,210 கோடியாக இருந்தது, அதே சமயம் வரும் பட்ஜெட்டில் இது ரூ.7,84,678 கோடியாக உள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட தகவல்படி, வரவிருக்கும் பட்ஜெட் உயர்வின் நோக்கம் நவீனமயமாக்கல், புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்பு மற்றும் சிறந்த வளப் பயன்பாட்டிற்காக கொள்முதல் முறையை எளிதாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்துவதாகும். பாதுகாப்பு பட்ஜெட்டில் எந்தப் பிரிவில் எவ்வளவு தொகை? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மூலதனச் செலவினத்திற்கான ஒதுக்கீடு கணிசமான உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பட்ஜெட்டின் கீழ் வரும் 'மூலதனச் செலவினம்' (Capital Outlay) அதிகபட்சமாக 21.84 சதவீத உயர்வு கண்டுள்ளது. முன்னதாக இது ரூ.1.80 லட்சம் கோடியாக இருந்தது, தற்போது அது ரூ.2.19 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களின் கொள்முதல் இந்த மூலதனச் செலவின ஒதுக்கீட்டிலிருந்தே செய்யப்படுகிறது. இது தவிர, பாதுகாப்பு சேவைகள் (வருவாய்) பிரிவில் 17.24 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இது ரூ.3.11 லட்சம் கோடியாக இருந்தது, தற்போது ரூ.3.65 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு சேவைகள் (வருவாய்) பிரிவில்தான் அன்றாட செயல்பாட்டுச் செலவுகள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் கீழ் பராமரிப்பு, எரிபொருள், பழுதுபார்ப்பு மற்றும் ஊதியம் போன்ற செலவுகள் அடங்கும். ஓய்வூதியம் 6.53 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது, இது தற்போது 1.71 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பாதுகாப்பு பட்ஜெட்டில் இந்த 15 சதவீத உயர்வு, கடந்த ஆண்டு மே மாதம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் இந்தியாவிற்கு ராணுவ மோதல் ஏற்பட்ட ஒரு கால கட்டத்தில் வந்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களை தாக்கியதாக இந்தியா கூறியது. இந்த நடவடிக்கைக்கு இந்தியா 'ஆபரேஷன் சிந்துார்' என்று பெயரிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் தொடங்கியது. பாகிஸ்தான் ராணுவத்தின் டிஜிஎம்ஓ விடுத்த போர் நிறுத்தக் கோரிக்கையைத் தொடர்ந்து ராணுவ மோதல்கள் நின்றதாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. அதன் பிறகு இந்தியா தனது பாதுகாப்பு பட்ஜெட்டை உயர்த்தக்கூடும் என்று ஊகிக்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளார். "பட்ஜெட் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்கும். பாதுகாப்புத் துறைக்கு 7.85 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததற்காகப் பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார். பட்ஜெட்டில் 15 சதவீத உயர்வு அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறதா? என்கிற கேள்விக்குப் பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி, புதிய பாதுகாப்பு பட்ஜெட்டை 'போதுமானதாக இல்லை' என்று கூறுகிறார். "பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த வகையில் பார்த்தால், 15 சதவீத உயர்வு என்பது பூஜ்யமாகிவிடும். இதன் காரணமாக இதை ஒரு 'மாற்றமில்லாத பட்ஜெட்' என்றே அழைக்க வேண்டும்" என்கிறார். ராணுவத்தை நவீனப்படுத்த இது போதுமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ராணுவத்தின் நவீனமயமாக்கல் குறித்து ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் ஏற்கனவே கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் ராணுவ மோதலின் போது, டிரோன்கள் மற்றும் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட ஒரு மாறுபட்ட போர் முறை காணப்பட்டது. சிடிஎஸ் ஜெனரல் அனில் சவுகான் கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில், இந்திய ஆயுதப் படைகள் 'நெட்-சென்ட்ரிக்' (Net-centric) போரிலிருந்து 'டேட்டா-சென்ட்ரிக்' (Data-centric) போரை நோக்கி நகர்ந்து வருவதாகவும். இதில் எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு முக்கிய விஷயமாக உருவெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேம்பட்ட சென்சார் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் போர்க்களத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதால், எதிரிகளுக்கு அதிர்ச்சி கொடுப்பது கடினமாகி வருவதாகவும், வெற்றிக்குத் தொழில்நுட்ப மேன்மை அவசியம் என்றும் அவர் கூறினார். நவீன தொழில்நுட்பம் இருப்பது மட்டும் போதாது, ராணுவத் தலைமை அறிவுப்பூர்வமாக தயாராகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவர் இதேபோன்ற கருத்தை முன்பும் கூறியிருக்கிறார். இந்த பாதுகாப்பு பட்ஜெட் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா? இந்தக் கேள்விக்கு ராகுல் பேடி பதிலளிக்கையில், இந்தியா 114 புதிய போர் விமானங்களையும் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களையும் வாங்குவதற்கான ஒப்பந்தத்தைச் செய்ய வேண்டியுள்ளது என்றார். "ஜெர்மனியுடன் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான 10 பில்லியன் டாலர் ஒப்பந்தம் உள்ளது. மேலும் 114 புதிய போர் விமானங்கள் வாங்கப்படும், இந்த 30-35 பில்லியன் டாலர் ஒப்பந்தம் யாருடன் செய்யப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதற்கான பணம் ஒரே நேரத்தில் வழங்கப்படாது, ஆனால் அதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் பேரங்கள் நடத்தப்பட வேண்டும்." என்கிறார். "ஆபரேஷன் சிந்துாருக்குப் பிறகு, ராணுவத் தளபதி, சிடிஎஸ், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோர் ராணுவம் தொழில்நுட்ப ரீதியாக நவீனப்படுத்தப்படும் என்று கூறி வருகின்றனர். இதற்குப் பணம் தேவைப்படுகிறது, பட்ஜெட்டில் 15 சதவீத உயர்வைக் கொண்டு இதைச் சாதிப்பது கடினமாகத் தெரிகிறது." ஆங்கில இதழான 'தி வீக்' இதழின் மூத்த உதவி ஆசிரியர் சஞ்சீவ் குமார் பருவா அந்த இதழின் யூடியூப் சானலில் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகமே மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டை பெறும் அமைச்சகமாகும். மொத்த பட்ஜெட்டில் இதன் பங்கு 14.68 சதவீதமாகும், இது கடந்த ஆண்டு 13.45 சதவீதமாக இருந்தது என்று கூறினார். "பாதுகாப்பு பட்ஜெட் குறித்த ஆலோசனைகள் ஒருபோதும் எளிதானவை அல்ல. பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட வேண்டிய நிதியைப் பற்றி விவாதிக்கவும் கணக்கிடவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமர்ந்தபோது, பல காரணிகள் அவரை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியிருக்க வேண்டும். உதாரணமாக, 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் அதற்குப் பிந்தைய நிலைமை, சீனாவின் வேகமான தொழில்நுட்ப மற்றும் ராணுவ முன்னேற்றம், இந்தியாவின் தற்சார்பு முன்னெடுப்புகள் மற்றும் அதிநவீன ராணுவ உபகரணங்களின் உடனடித் தேவை போன்றவை." "2026-27-க்கான இந்த ஒதுக்கீடு கடந்த ஆண்டின் பாதுகாப்பு பட்ஜெட்டான ரூ. 6.81 லட்சம் கோடியை விட 15.27% அதிகமாகும். பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதையும், ராணுவ நவீனமயமாக்கலின் வேகம் நீடிப்பது மட்டுமல்லாமல், மேலும் துரிதப்படுத்தப்படும் என்பதையும் இது குறிக்கிறது." நவீனமயமாக்கலுக்குப் போர் விமானங்கள் அல்லது நீர்மூழ்கிக் கப்பல்கள் மட்டும் போதுமா? இதற்கு ராகுல் பேடி கூறுகையில், "இன்றைய காலத்தில் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் டிரோன்கள் மற்றும் சைபர் போரின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. தற்போது நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்குத் தட்டுப்பாடு உள்ளது" என்கிறார். "இந்திய விமானப்படையில் 42 படையணிகளுக்கு (Squadron) அனுமதி உள்ளது, ஆனால் இன்று 29-30 படையணிகள் மட்டுமே உள்ளன. ஒரு படையணியில் சுமார் 20 விமானங்கள் இருக்கும், இதன் மூலம் 250-300 விமானங்கள் தேவை என்பதைப் புரிந்துகொள்ளலாம். நீர்மூழ்கிக் கப்பல்கள் பழையதாகிவிட்டன, அவற்றை மாற்ற வேண்டும். ஹெலிகாப்டர்கள் மற்றும் பயிற்சி விமானங்கள் பழையதாகிவிட்டன, அவற்றின் இடத்திற்குப் புதியவை வரவேண்டும்." "நாம் இந்த வழியில் பார்த்தால், பல தேவைகள் உள்ளன மற்றும் இந்த அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய, பட்ஜெட்டில் பணம் தேவைப்படுகிறது." சீனா, பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இந்திய பாதுகாப்பு பட்ஜெட் எங்கே உள்ளது? பட மூலாதாரம்,AFP கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவுடனான மோதலுக்குப் பிறகு, ஜூன் மாதம் பாகிஸ்தான் தனது 2025-26 நிதியாண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட்டை 20.2 சதவீதம் உயர்த்தியது. பாகிஸ்தானின் பாதுகாப்பு பட்ஜெட் 2122 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயிலிருந்து 2550 பில்லியனாக உயர்த்தப்பட்டது. இது பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.97 சதவீதமாகும். சீனாவைப் பொறுத்தவரை, 2024-இல் பாதுகாப்பு பட்ஜெட் அதன் 18.74 டிரில்லியன் டாலர் ஜிடிபியில் 1.7 சதவீதமாக இருந்தது. வங்கதேசத்தின் பாதுகாப்பு பட்ஜெட் 2024-ல் அதன் 450 பில்லியன் டாலர் ஜிடிபியில் வெறும் 0.9 சதவீதமாக இருந்தது. மறுபுறம், இந்தியாவின் மொத்த பாதுகாப்பு பட்ஜெட் அதன் மொத்த ஜிடிபியான 4 டிரில்லியன் டாலரில் 1.9 சதவீதமாகும். இந்தத் தரவுகளின்படி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் பாதுகாப்பு பட்ஜெட் இந்தியாவை விட மிகச் சிறியது. ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் சீனாவை விட மிகச் சிறியது. மூன்று நாடுகளின் பட்ஜெட் ஒப்பீடு குறித்து ராகுல் பேடி கூறுகையில், "சீனாவின் பட்ஜெட் நம்மை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளது. பாகிஸ்தானின் பட்ஜெட்டைக் குறைத்து மதிப்பிடக் கூடாது, ஏனெனில் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பல அண்டை நாடுகளுக்கும் சீனா உதவுகிறது. எனவே ஒப்பீடு செய்ய முடியாது" என்கிறார். இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் அதன் தேவைகளுக்கு ஏற்ப எவ்வளவு இருக்க வேண்டும்? ராகுல் பேடி கூறுகையில், பாதுகாப்பு பட்ஜெட் மொத்த ஜிடிபியில் 3 சதவீதமாக இல்லாதவரை தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிக்கல்கள் இருக்கும் என்கிறார். "1962-இல் சீனாவுடன் போர் ஏற்பட்டதிலிருந்து இன்று வரை மொத்த பாதுகாப்பு பட்ஜெட் ஜிடிபியின் இதே புள்ளிவிவரத்தைச் சுற்றியே உள்ளது. நமது நாட்டின் ஜிடிபி பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் பாதுகாப்பு பட்ஜெட் 2 சதவீதத்தை ஒட்டியே உள்ளது. ராணுவத்தின் தேவை எப்போதும் மொத்த ஜிடிபியில் 3 சதவீதமாகவே இருந்து வருகிறது." "நாம் ராணுவத்தை விரைவில் நவீனப்படுத்த வேண்டுமானால், பாதுகாப்பு பட்ஜெட்டை மொத்த ஜிடிபியில் 3 சதவீதமாக தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crml9knp80ro
-
வெனிசுவேலாவுக்குச் சென்றார் அமெரிக்க தூதுவர் லாரா டோகு
வெனிசுவேலாவுக்குச் சென்றார் அமெரிக்க தூதுவர் லாரா டோகு Published By: Digital Desk 3 02 Feb, 2026 | 08:46 AM வெனிசுவேலாவில் 07 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவதாக் அறிவிக்கப்பட்டுள்து. இதனை அடுத்து அமெரிக்க தூதுவர் லாரா டோகு வெனிசுவேலாவுக்கு சென்றார். அவர் வெனிசுவேலாவில் அமெரிக்க தூதரகத்தை திறப்பதற்காக அங்கு சென்றடைந்தார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில், நானும் எனது குழுவும் பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் வெனிசுலாவும் தூதரக உறவுகளைத் துண்டித்து, தங்கள் தூதரகங்களை மூடின என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237593
-
உலக சதுப்பு நில தினம் இன்று!
உலக சதுப்பு நில தினம் இன்று! Feb 2, 2026 - 07:17 AM உலக சதுப்பு நில தினம் இன்று ( 02) இன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி 'உலக சதுப்பு நில தினமாக' ராம்சார் சதுப்பு நில உடன்படிக்கையின் பொதுச் செயலகம் அறிவித்தது. பின்னர், இது ஐக்கிய நாடுகள் சபையினாலும் அங்கீகரிக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ஈரானின் ரம்சார் (Ramsar) நகரில் சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை எட்டப்பட்டது. இலங்கை இந்த உடன்படிக்கையில் 1991 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டது. அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் புகலிடமாக இது விளங்குகின்றது. அத்துடன் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றலை வழங்குவதுடன், நீரைச் சேமித்து வைத்து வெள்ள அபாயத்தைக் குறைப்பதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் தடுக்கின்றது. மேலும் மனிதர்களின் நல்வாழ்விற்கு சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு அத்தியாவசியமானதாக கருதப்படுகின்றது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு உலக சதுப்பு நில தினத்தின் கருப்பொருளாக "சதுப்பு நிலங்களுக்காகச் செயற்படுங்கள், இயற்கைச் சூழலுக்காகச் செயற்படுங்கள்" என அறிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cml4ifvgz04puo29ndvszflta
-
“கரிநாள்” : வடக்கு, கிழக்கில் பேரணி ஏற்பாடு ; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு
“கரிநாள்” : வடக்கு, கிழக்கில் பேரணி ஏற்பாடு ; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு 02 Feb, 2026 | 03:56 PM சுதந்திர தினத்தை “கரிநாள்” என பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணியில் அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (1) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இவ்விதமாக அழைப்பு விடுத்தனர். மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்தனர். https://www.virakesari.lk/article/237614
-
‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழிகளுக்கு முரண் – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு
‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழிகளுக்கு முரண் – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு Published By: Vishnu 02 Feb, 2026 | 04:41 AM கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் அமைகிறது. நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழி களுக்கு முரணானதாக அமைந்துள்ளது என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (01) முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கில் கிழக்கு மாகாண ஓய்வு பெற்ற முன்னாள் காணி ஆணையாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் வளவாளராக கலந்துகொண்டதுடன், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டதோடு, வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர், வவுனியா வடக்கு, கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் கிவுல் ஓயா திட்டத்தால் பாதிக்கப்படும் மக்கள், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். குறித்த விழிப்புணர்வு கருத்தமர்வு முடிவடைந்த நிலையில்,வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வின் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் இலங்கையின் தற்போதைய அரசாங்கம், சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவமான அபிவிருத்தி என்பவற்றை தனது கொள்கை உறுதி மொழிகளாக முன்வைத்து ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், 'நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில், குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம்,மேற்கூறிய உறுதிமொழி களுக்கு முரணானதாக அமைந்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். நாங்கள் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. அபிவிருத்தி என்பது நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாகப் பயனளிக்க வேண்டிய ஒரு அடிப்படை அரசுப் பொறுப்பாகும். இருப்பினும், அபிவிருத்தி என்ற போர்வையில் அரசின் காலனித்துவ நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில், காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சூழலில், இம்மக்களை அபிவிருத்தி திட்டங்களில் முன்னுரிமையுடன் இணைத்து, அவர்களின் வாழ்வாதார நிலைகளை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அரசாங்கம், அதனை விடுத்து வெளி பிரதேசங்களில் இருந்து மக்களை கொண்டு வந்து இப்பிரதேசங்களில் குடியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பது கவலைக்குரியதாக உள்ளது. இவ்வாறான குடியேற்றங்கள் தேவையற்ற அரசியல், கலாச்சார மற்றும் சமூக தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மகாவலி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள திட்ட அறிக்கையின் படி, 'கிவுல் ஓயா' நீர்த்தேக்கம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில், தமிழர்களின் பூர்வீக கிராமமான வெடிவைத்த கல்லு கிராமத்திற்கு அண்மையாக, வடகிழக்கு திசையில் அமைக்கப்படவுள்ளது. சுமார் 37 மீற்றர் (121.37 அடிகள்) உயரமுடைய அணையின் மூலம் உருவாக்கப் படவுள்ள இந்த நீர்த்தேக்கம், பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த நீர் தேக்கத்திற்கான எல்லைகள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வெடிவைத்த மகாவலி அதிகார சபையினால் எல்லைக்கல்லிடப்பட்டு காட்டப்பட்டுள்ளன. இதன்விளைவாக, கல்லு,ஈச்சங்குளம்,கூழாங்குளம்,காட்டு பூவரசங்குளம்,காஞ்சூர மோட்டை உள்ளிட்ட பாரம்பரிய கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும்குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாய நிலை உருவாகியுள்ளது. பெரியமேலும், 1921 ஆம் ஆண்டு வர்த்தமான அறிவித்தலின் மூலம் 'ஒதுக்குக் காடாக' அறிவிக்கப்பட்ட கட்டிக்குளம் ஒதுக்குக்காடு, சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். இந்தப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியும், கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ் முழுமையாக அமிழ்ந்து போகும் நிலை உருவாகியுள்ளமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. அதேபோல், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளப்படுத்தப்பட்ட 47 தொல்லியல் பிரதேசங்கள், கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் நீரில் மூழ்க போவதாக மகாவலி அதிகார சபையின் சொந்த திட்ட ஆவணங்களின் மூலம் தெரிய வருகிறது. இது, நாட்டின் மரபுரிமை மற்றும் தொல்லியல் பாதுகாப்பு கொள்கைகள் ஒரே மாதிரியான முறையில் நடைமுறைப் படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. இத்தகைய பின்னணியில்,இந்த நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை பிரதேசத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப் படுவதை 'தொல்லியல் பாதுகாப்பு' என்ற பெயரில் கட்டுப்படுத்தும் நிலையில், அதே சமயம் பல தொல்லியல் பிரதேசங்கள் முழுமையாக அழிவடைய அனுமதிக்கப்படுவது தொடர்பில் தெளிவான, வெளிப்படையான விளக்கங்கள் அரச நிறுவனங்களால் வழங்கப்பட வேண்டும். மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவு களுக்குரிய ஆமையன் குளம், உந்தராயன் குளம், அடையகர்த்தான், படுகாட்டுக் குளம், சாம்பான் குளம் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 2,000 ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் ஏற்கனவே அபகரிக்கப்பட்டுள்ளமை பதிவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனுடன், கொக்குத்தொடுவாய் சூரிய நாற்றுப் பகுதியில், தமிழ் மக்களுக்கு மத்திய வகுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 1,990 ஏக்கர் காணிகள், தற்போது கிவுல் ஓயா திட்டத்தில் உள்வாங்கப்பட்டு திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இது, இப்பிரதேசங்களில் இனப்பரம்பல் அமைப்பையும், சமூகச் சமநிலையையும் மாற்றக்கூடிய ஒரு நவீன காலனித்துவ செயல்முறையாக பார்க்கப்படுகிறது. எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தின் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு தாக்கங்களை மீளாய்வு செய்யவும், உள்ளூர், காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அபிவிருத்தி திட்டங்களில் முன்னுரிமை உடன் இணைக்கவும், வெளிப்பிரதேச குடியேற்றங்களை தவிர்க்கவும், உள்ளூர் சமூகங்களின் காணி, வாழ்வாதாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாக்கவும் தெளிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இலங்கையில் நிலையான அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால், அது உள்ளூர் மக்களின் உரிமைகள், மரியாதை மற்றும் வரலாற்றுப் பிணைப்புகளை மதிக்கும் அணுகுமுறையின் மூலம் சாத்தியமாகும் என்பதை அரசிற்கு தெளிவாக சுட்டிக்காட்டுகிறோம் .என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/237583
-
சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!
சர்வதேச கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல்; 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி Published By: Vishnu 02 Feb, 2026 | 04:46 AM ( செ.சுபதர்ஷனி) சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் நிறைவு செய்ததன் பின்னர் மீண்டும் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த 12 மீனவர்களில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வென்னப்புவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தினிதி துவ உள்ளிட்ட இரு ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் 12 மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளனர். கடந்த 28 ஆம் திகதி அவர்கள் மீன்பிடிப் பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் வென்னப்புவ நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது, சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்படையினரின் கப்பலொன்று இவர்களை வழிமறித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மீன்பிடி படகிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய அதிகாரிகள், மீனவர்களிடம் போதைப்பொருள் மற்றும் செய்மதித் தொலைபேசிகள் உள்ளனவா எனக் கேட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், இந்திய கடற்படையினர் மீனவர்களை விலங்குகளைப் போலக் கீழே தள்ளி மிதித்தும், ஐஸ் கட்டிகள் மீது படுக்க வைத்தும் முதுகுப் பகுதியில் கடுமையாகத் தாக்கியதாகக் குறிப்பிட்டனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகச் சந்தேகம் எழுப்பி, படகிலிருந்த உபகரணங்கள் மற்றும் உடமைகளைச் சேதப்படுத்தியதோடு, மீனவர்களுக்குக் கடும் உடல் ரீதியான சித்திரவதைகளை இந்திய அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இலங்கை எல்லைக்கு மிக அண்மித்த பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர். காயமடைந்த மீனவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டு இன்று அதிகாலை கரைக்கு அழைத்து வரப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் இருவரது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனைய மீனவர்கள் படகுகளுடன் கரைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இந்த விவகாரத்தை அரசாங்கம் மிகவும் தீவிரமாகக் கையாள்வதாகக் குறிப்பிட்டார். இது தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு இலங்கை கடற்படைக்கும் வெளிவிவகார அமைச்சுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உறவினர்களால் வைத்தியசாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/237584
-
சென்னை குடிநீருக்காக மாமல்லன் நீர்த்தேக்கம்
"சென்னை குடிநீருக்காக வாழ்வாதாரத்தை பறிப்பதா?" - மாமல்லன் நீர்த்தேக்கத்தை எதிர்க்கும் மீனவர்கள் படக்குறிப்பு, சென்னைக்கு அருகே அமையுள்ள புதிய மாமல்லன் நீர்த்தேக்கத்தால் தங்களுக்கு பாதிப்பு என மீனவர்கள் கூறுகின்றனர். கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "டேமை எங்க வேணும்னாலும் கட்டலாம். 5,000 குடும்பங்கள் பாதிக்கற மாதிரி இங்க தான் கட்டணுமா?" "கடல் தொழில் எனக்குத் தெரியும், போனாலும் அதுல அதிகமாக வருமானம் கிடைக்காது. 10 ஆயிரம் கிடைத்தாலும் அதை வைச்சு குடும்பத்தை நடத்த முடியுமா?" சென்னைக்கு அருகே அமையுள்ள புதிய மாமல்லன் நீர்த்தேக்கத்தால் தங்களுக்கு பாதிப்பு வரும் என்று அஞ்சும் மீனவர்கள் எழுப்பும் கேள்விகள் இவை. சென்னை மாநகரின் அதிகரித்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த நீர்த்தேக்கம் கட்டப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது. ஆனால், இந்த நீர்த்தேக்கம் அமைந்தால் மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடி இடங்கள் அழிந்து மீன்வளமும், 5000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என பிபிசி தமிழிடம் பேசிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர். நகரமயமாக்கலின் விளைவாக அனைத்து திசைகளிலும் வளர்ந்து வரும் சென்னை பெருநகரத்தின் குடிநீர் தேவை ஒருபக்கம் இருக்க சூழலியல் பார்வையில் இயற்கையான நீர்நிலைகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்புவது ஏன்? சென்னை அருகே புதிய நீர்த்தேக்கத்திற்கான தேவை என்ன? மீனவர்கள் எழுப்பும் கவலைகள் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காண பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது. மாமல்லன் நீர்த்தேக்கம் எங்கு அமைகிறது? படக்குறிப்பு,கடந்த ஜனவரி 19-ஆம் தேதி மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கான அடிக்கல்நாட்டு விழா நடத்தப்பட்டது. சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலை (ஈசிஆர்) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்) இடையே 'மாமல்லன் நீர்த்தேக்கம்' அமைகிறது. 5,161 ஏக்கர் பரப்பளவில் இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ளது. முதல் கட்டமாக சுமார் 342 கோடி ரூபாய் மதிப்பில் 4,375 ஏக்கரில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 19-ஆம் தேதி இதற்கான அடிக்கல்நாட்டு விழா நடத்தப்பட்டது. சில அரசியல் கட்சிகளும் சூழலியல் அமைப்புகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. படக்குறிப்பு,முதல்கட்டமாக சுமார் 342 கோடி ரூபாய் மதிப்பில் 4,375 ஏக்கரில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. "சென்னையின் குடிநீர் தேவை அதிகரிப்பு" சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் துறையின் தரவுகளின்படி, 2020-ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் தினசரி குடிநீர் தேவை நாள் ஒன்றுக்கு 1,720 மில்லியன் லிட்டராக உள்ளது. இது 2035-இல் 2,523 மில்லியன் லிட்டராகவும், 2050-இல் 3,746 மில்லியன் லிட்டராகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மாமல்லன் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 1.66 டிஎம்சி ஆகும். இதன் மூலம் தினமும் 170 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும், அதன் மூலம் சென்னையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 13 லட்சம் பேரும் மற்றும் கோவளத்தைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்களும் பயனடைவார்கள் என, தமிழ்நாடு அரசின் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பயனடையும் பகுதிகள்": சோழிங்கநல்லூர் மேடவாக்கம் பள்ளிக்கரணை சிறுசேரி கேளம்பாக்கம் மாமல்லபுரம் இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ள இடம் தனித்துவமான சூழலியல் அமைப்பு கொண்டதாக உள்ளது. வடக்கே முட்டுக்காடு முகத்துவாரம் வழியாகவும் தெற்கே கொக்கிலமேடு முகத்துவாரம் வழியாகவும் கடல்நீர் உள்ளே வந்து செல்கிறது. பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து வரும் உபரிநீரும் இங்கு வந்து கலக்கிறது. படக்குறிப்பு,இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ள இடம் தனித்துவமான சூழலியல் அமைப்பு கொண்டதாக உள்ளது. நன்னீரும் கடல்நீரும் கலக்கும் இடம் இந்த கழுவெளி பகுதிக்கென பிரத்யேகமான உயிரினங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன். "அங்கு வரும் வலசைப் பறவைகளும் உள்ளன. நன்னீரும் உப்புநீரும் கலக்கும் இடம் என்பதால் அங்கு மட்டுமே சில உயிரினங்கள் வாழும். அதனை வாழ்வாதாரமாக கொண்ட ஒரு மீனவ சமூகம் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் சில அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தது. ஆனால், இந்த அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்," என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம்,TNWRB படக்குறிப்பு,இந்த நீர்த்தேக்கத்தைச் சுற்றி 34 கிலோமீட்டர் தூரத்திற்கு கரை அமைக்கப்பட உள்ளது. புதிய நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வரும்? இந்த நீர்த்தேக்கத்தைச் சுற்றி 34 கிலோமீட்டர் தூரத்திற்கு கரை அமைக்கப்பட உள்ளது. கோவளம் வடிநிலப் பகுதிகளில் உள்ள 69 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீர் புதிய கால்வாய்கள் மூலம் இதில் தேக்கி வைக்கப்பட உள்ளன. இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ள இடத்தில் பக்கிங்காம் கால்வாய் செல்வதால் அது சீரமைக்கப்பட்டு, நீரோட்டத்திற்காக அணையின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் புதிய கால்வாய் அமைக்கப்பட உள்ளது. தெற்குப் பகுதியில் தண்ணீர் திறந்துவிடுவதற்கான மதகுகள் அமைக்கப்பட உள்ளன. "பாதிக்கப்படும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்" படக்குறிப்பு,மீனவ கிராமங்களின் மீன்பிடி பகுதிகளை காண்பிக்கும் புகைப்படம் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் தொடங்கி கடற்கரையை ஒட்டி பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் கடலுக்கு சென்றாலும் அவர்களின் பெரும்பாலான வாழ்வாதாரம் இந்த நீர்நிலையை நம்பியே உள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல, பழைய மகாபலிபுரம் சாலையிலும் பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன. இவர்களின் வாழ்வாதாரம் இதை நம்பி மட்டுமே இருப்பதாகவும் கூறுகின்றனர். பிபிசி தமிழ் குழு இவர்கள் மீன்பிடிக்கும் பகுதிக்குச் சென்றபோது மீனவர்கள் வலை பின்னும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கோவளம் தொடங்கி கொக்கிலமேடு வரை இதேபோல் பல்வேறு மீன்பிடி நிலைகள் உள்ளன. ஒவ்வொரு ஊர்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கான பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் வழக்கம் இங்கு இருந்து வருகிறது. பல தலைமுறைகளாக இந்தத் தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறும் கோவளம் குப்பத்தைச் சேர்ந்த மகேந்திரன், கடந்த 25 வருடங்களாக மீன்பிடித் தொழிலில் இருந்து வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இங்கு இறால், நண்டு மற்றும் சிலவகை மீன்களை இங்கு பிடிக்கிறோம். இது தான் எங்களின் வாழ்வாதாரம். தண்ணீர் கொண்டு வருவதற்கு நீர்த்தேக்கம் அமைப்பது என்றால் வேறு எங்கு வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாமே, 5,000 பேரை பாதித்து இந்த இடத்தில் நீர்த்தேக்கம் வர வேண்டுமா? இங்கு சேறும் உப்பும் தான் இருக்கிறது." எனத் தெரிவித்தார். படக்குறிப்பு,கோவளம் குப்பத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஆனால், இந்தப் பகுதியில் நீர்த்தேக்கம் அமைய வேறு மாற்று இடம் இல்லை என திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு இந்தத் தொழிலில் தான் நிலையான வருமானம் கிடைப்பதாகக் கூறுகிறார் கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ். "எனக்கு ஃபைபர் தொழில் தெரியும், ஆனால் வாழ்வாதாரம் குறைவு தான், அதில் கிடைக்கும் 300, 400 ரூபாயை வைத்து குடும்பத்தை நடத்த முடியாது. என் இரண்டு குழந்தைகள் படிக்கிறார்கள். இதை வைத்து தான் நான் குடும்பத்தை நடத்த முடியும்." என்றார். படக்குறிப்பு,கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ் அரசு கூறும் 3 முதன்மை தேவைகள், முதலமைச்சரின் உத்தரவாதம் இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனத் தெரிவித்திருந்தார். அந்த நிகழ்வில் பேசிய அவர், "இந்தப் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயை 15 கிலோமீட்டர் நீளம், 311 ஏக்கர் பரப்பளவில் சீரமைப்பதால் உவர்நீர் மீன்வளத்தை நம்பி இருக்கக்கூடிய மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும் அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய மீனவர்களுக்கு மீன்பிடி உரிமம் வழங்கப்படும்," எனத் தெரிவித்தார். குடிநீர் தேவை, வெள்ள தடுப்பு, கடல் நீர் உட்புகுவதைத் தடுத்து நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்குவது ஆகிய மூன்றும் தான் இந்தத் திட்டத்துக்கான முதன்மையான தேவைகள் என அரசு கூறுகிறது. கடல் மீன்வளத்திற்கு பாதிப்பு உள்ளதா? இந்தத் திட்டத்திற்காக வழங்கப்பட கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் சி.ஆர்.இசட் (CRZ) அனுமதியில் 36 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதில் இந்தப் பகுதியின் பாரம்பரிய மீன்பிடி முறைகளில் எந்த தாக்கமும் இருக்காது என்பதை உறுதி செய்யும் விதத்தில் மீன்வளத் துறையிடம் ஆட்சேபனை இல்லா சான்று பெற வேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளின் முக்கியமான ஒன்று. கழுவெளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்க மதிப்பீட்டு ஆய்வின்படி அந்தப் பகுதியில் இயற்கை நீரியல் முறை மீட்டெடுக்கப்படும் வரை இறால் மற்றும் மீன்வளம் மற்றும் வலசைப் பறவைகளின் வாழ்விடம் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு,இந்தத் திட்டத்தால் கடல் மீன்வளமும் பாதிக்கப்படும் என்கிறார், சூழலியல் செயற்பாட்டாளரான நித்யானந்த் ஜெயராமன். ஆனால், இந்த நீர்த்தேக்கம் அமைந்தால் கழிமுக மீன் வளம் மட்டுமல்லாமல் கடல் மீன் வளமும் பாதிக்கப்படும் என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளரான நித்யானந்த் ஜெயராமன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "உப்பங்கழியும், முகத்துவாரமும், இந்தப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களும் தான் கடலில் உள்ள மீன்களுக்கு தாய். இங்கு குஞ்சு பொறித்து பெரிதாகி கடலுக்குச் செல்லும் மீன்கள் தான் கடல் மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன. இறால், நண்டு போன்ற பல உயிரினங்கள் அப்படித்தான் உள்ளன. இந்தச் சூழலில் இதனால் ஏற்படும் பின் விளைவுகள் கடலிலும் தெரியும்," எனத் தெரிவித்தார். அரசு கூறுவது என்ன? இந்தச் சூழலில் மீன்வளத்தைப் பாதுகாக்கவும் வலசைப் பறவைகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கவும் அரசு சில திட்டங்களை முன்வைத்துள்ளது. இதற்கு ஈடாக ஏற்கெனவே கொக்கிலமேடு பகுதியில் உள்ள ஈர நிலங்கள் மேம்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட உப்பங்கழி அமைந்துள்ள இடங்கள் புதிய ஈர நிலங்களாக மாற்றப்படும் என்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 6 செயற்கை தீவுகளும் உருவாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என அரசாங்கத்திடம் பலமுறை தெரிவித்ததாக மீனவர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி மீன்வளத் துறையிடம் இந்தத் திட்டத்திற்கு ஆட்சேபனை இல்லா சான்று வழங்கக்கூடாது என மீனவர்களின் சார்பில் கோரிக்கை கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் முன்மொழிந்திருப்பதாகவும் சட்ட வழிகளைப் பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கிறார் கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சௌந்தர பாண்டியன். படக்குறிப்பு,கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சௌந்தர பாண்டியன் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நாங்கள் சந்தித்தபோது எங்களுக்கு திட்டத்தை வரைபடம் போட்டுக் காண்பித்தார்கள். பக்கிங்ஹாம் கால்வாயை நாங்கள் விட்டுவிடுகிறோம். ஆனால், மற்ற இடங்கள் எங்களுக்குத் தேவை என்றார்கள். உங்களுக்கு தண்ணீர் போக்குவரத்துக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்றார்கள்." "ஆனால், அவர்கள் அமைக்கின்ற கால்வாயால் எங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் கிடையாது. கிளைக் கால்வாய்களில் தண்ணீர் பரவுவதால் தான் இரால், நண்டு, மீன் போன்றவை குஞ்சு பொரிக்கின்றன. அதை அவர்கள் ஆக்கிரமித்துவிட்டு எங்களுக்கு கால்வாய் கொடுத்தால் நாங்கள் அதில் படகு ஓட்டச் செல்வதா? படகு சவாரி வேண்டுமானால் செய்யலாம், அது மீன்பிடிப்பதற்கான இடம் கிடையாது." என்றார். இந்தத் திட்டம் வருவதால் தங்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறும் சௌந்தர பாண்டியன், "காட்டுக் குப்பத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வந்தது. அதிலிருந்து கோவளத்திற்கு குடிநீர் கிடைக்கவில்லை. நெம்மேலி குப்பத்தில் இரண்டாவது திட்டம் உருவாகி வருகிறது. அதிலிருந்தும் எங்களுக்கு குடிநீர் வரப்போவதில்லை. இந்த மூன்றாவது திட்டமும் சென்னைக்குத் தான் போகப் போகிறது. எங்கள் இடத்தில் தண்ணீர் எடுத்து, வாழ்வாதாரத்தை கெடுத்து அதனால் எங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை." என்று தெரிவித்தார். நீர்வளத் துறை கூறுவது என்ன? இந்த நிலையில் நீர்த்தேக்கத் திட்டம் மற்றும் மீனவர்கள் எழுப்பும் கவலைகள் தொடர்பாக விளக்கம் பெற தமிழ்நாடு நீர்வளத் துறையை பிபிசி தமிழ் பலமுறை தொடர்புகொண்டது. ஆனால் அவர்களின் விளக்கத்தைப் பெற முடியவில்லை. இந்தத் திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவின்போதே பதிலளிக்கப்பட்டு விட்டதாக நீர்வளத் துறையின் சார்பில் பிபிசி தமிழிடம் தெரிவிக்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy05j19l040o
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
வட்டு தெற்கு பரராஜசிங்கம் ஐயா வீட்டு மலசலகூடம், குழி கட்டும் பணி நடைபெறுகிறது. வங்கிப் பரிவர்த்தனை விபரம். தற்போதைய வங்கி மீதி சேமிப்பு வட்டியுடன் ரூபா 168,123.35 சதம்.
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ரி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் பங்கேற்கும், ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாடாது Published By: Vishnu 01 Feb, 2026 | 09:29 PM (நெவில் அன்தனி) இந்த வருட ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கும் எனவும் ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாது எனவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. சுமார் ஒரு வாரம் நீடித்த நிச்சயமற்றத் தன்மைக்கு பின்னர் பாகிஸ்தான் அரசாங்கம் தனது அணியை ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற அனுமதிக்க இன்று முடிவுசெய்தது. ஆனால், பெப்வரி 15ஆம் திகதி இந்தியாவை எதிர்த்தாடாமல் இருக்க பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது. தனது பரம வைரியான இந்தியாவை பி குழுவுக்கான முதலாவது சுற்றில் பாகிஸ்தான் எதிர்த்தாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. 'ஐசிசி ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் பங்குபற்றுவதற்கு பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிராக பெப்ரவரி 15ஆம் திகதி அட்டவணை படுத்தப்பட்டுள்ள போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களம் இறங்காது' என பாகிஸ்தான் அரசாங்கத்தின் டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து பங்களாதேஷ் விலகியதை அடுத்து ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்கும் நிலை தோன்றியதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரிபை கடந்த திங்களன்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரும் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி சந்தித்தார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விடயம் குறித்து பிரதமரிடம் விளக்கியதாக இந்த சந்திப்பின் பின்னர் குறிப்பிட்ட நக்வி, இது தொடர்காக வெள்ளிக்கிழமை அல்லது திங்களன்று இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார். பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்கொட்லாந்தை இணைத்ததை அடுத்து பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றது. அயல் நாடுகளான இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் அரசியல் உறவுகளில் கசப்புணர்வு ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பு காரணத்தைக் காட்டி இந்தியாவுக்கு செல்ல முடியாது என பங்களாதேஷ் அறிவித்தது. அதன் பின்னர் பங்களாதேஷுக்கு பதிலாக உலகக் கிண்ணத்தில் ஸ்கொட்லாந்து இணைத்துக்கொள்ளப்பட்டதாக ஜனவரி 24ஆம் திகதி ஐசிசி அறிவித்தது. தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் பங்களாதேஷ் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதனை நிராகரித்த ஐசிசி, உலகக் கிண்ணப் போட்டி நெருங்கிவரும் நிலையில் இடத்தை மாற்றுவதற்கு சாத்தியம் இல்லை என தெரிவித்திருந்தது. https://www.virakesari.lk/article/237579
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@வீரப் பையன்26 ஓடி வாங்கோ, போட்டி தொடங்கப்போகிறது.
-
பட்ஜெட் 2026: எவையெல்லாம் விலை அதிகரிக்கும்?
பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனின் ஒரு அறிவிப்பால் ஆட்டம் கண்ட பங்குச்சந்தை பட மூலாதாரம்,Getty Images 1 பிப்ரவரி 2026, 08:30 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரை பங்குச் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. நிதி அமைச்சரின் உரை முடிவடைவதற்குள், பங்குச் சந்தை குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் (Sensex) 2,000 புள்ளிகள் வரை சரிந்தது. நிஃப்டி 500 புள்ளிகள் வரை சரிந்தது. பங்குச் சந்தையில் ஃபியூச்சர்ஸ் (Futures) வர்த்தகத்தின் மீதான பங்குப் பரிவர்த்தனை வரியை (STT) அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டதே இந்த எதிர்வினைக்குக் காரணம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தை இயங்குவது மிகவும் அரிதான ஒன்றாகும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் காரணமாக பங்குச்சந்தை இன்று இயங்கியது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் முதல் கல்வி மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்னைகள் வரை சில முக்கியமான அறிவிப்புகளை பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். ஆனால் அவர் வெளியிட்ட ஓர் அறிவிப்பு பங்குச் சந்தைகளை ஆட்டம் காணச் செய்தது. மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின்படி, ஃபியூச்சர்ஸ் ((Futures) மீதான பங்குப் பரிவர்த்தனை வரி (STT) தற்போதைய 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயர்கிறது. ஆப்ஷன்ஸ் பிரீமியம் (options premium) மற்றும் ஆப்ஷன்ஸ் செயல்படுத்தல் (exercise of options) ஆகிய இரண்டிற்குமான பங்குப் பரிவர்த்தனை வரி முறையே தற்போதைய 0.1 சதவீதம் மற்றும் 0.125 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக அதிகரிக்கப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புக்குப் பிறகு பங்குச் சந்தைகளில் கடுமையான சரிவு காணப்பட்டது. எஸ்டிடி என்றால் என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் எஸ்டிடி என்பது 'பங்குப் பரிவர்த்தனை வரி' (Securities Transaction Tax) என்பதைக் குறிக்கும். இது பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் விதிக்கப்படுகிறது. ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் மீதான பங்குப் பரிவர்த்தனை வரியை இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார். எஃப் அண்ட் ஓ மீதான எஸ்டிடி 0.02% ஆக இருந்தது. இப்போது அதனை 0.05% ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. எஸ்டிடி என்பது அடிப்படையில் மற்ற வரிகளிலிருந்து தனித்துவமானது. வருவாய் ஈட்டவும், நிதிச் சந்தைகளில் நிலைத்தன்மையை அதிகரிக்கவும் பங்குப் பரிவர்த்தனைகள் மீது இந்த வரி விதிக்கப்படுகிறது. இது முற்றிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலானது, அதாவது சம்பந்தப்பட்ட தனிநபர் பங்குப் பரிவர்த்தனையில் லாபம் ஈட்டினாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், வர்த்தகம் செய்யப்படும் பங்குகளின் மதிப்பு எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு எஸ்டிடி வரி விதிக்கப்படும். வருமான வரி தொடர்பான அறிவிப்பு பட மூலாதாரம்,SANSAD TV படக்குறிப்பு,மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார். வருமான வரித் தாக்கல் (ITR) தொடர்பான காலக்கெடு மற்றும் விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஐடிஆர்-1 (ITR-1) மற்றும் ஐடிஆர்-2 (ITR-2) படிவங்களைத் தாக்கல் செய்பவர்கள் இனி ஜூலை 31 வரை வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். இந்த முறை வருமான வரி வரம்புகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி விதிப்பின் கீழ், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது. சம்பளதாரருக்கான நிலையான கழிவு ₹75,000 ஆகும். எனவே ரூ.12.75 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இருக்காது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c14rdlv87npo
-
பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு!
கிளிநொச்சியில் லொறி மீது துப்பாக்கிச் சூடு Feb 1, 2026 - 05:11 PM கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் கட்டளையை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இன்று (01) அதிகாலை தருமபுரம் பகுதியில் லொறி ஒன்று, வேகமாக பயணித்த நிலையில், அதனை வீதித் தடையில் நிறுத்தி பொலிஸார் சோதனையிட முற்பட்டுள்ளனர். எனினும் பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி அந்த லொறி பயணித்த நிலையில், அதன் சில்லுகளை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் சந்தேகநபரான சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அந்த லொறியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cml3o6s1i04pdo29nqn1t4u9g -கிளிநொச்சி நிருபர் சப்தன்-