Everything posted by ஏராளன்
-
வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்
காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபொற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: VISHNU 27 MAY, 2025 | 06:57 PM காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபெற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் இணைந்து செயற்பட்டதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டது என தெரிவித்தார் . யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; வடமாகாணத்தில் இருக்கக் கூடிய மக்களுக்கு மிக மோசமான பின்னடைவை ஏற்படக்கூடிய ஆபத்திலிருந்து இந்த வர்த்தமானி வாபஸ்பெற வைத்தது பெரும் வெற்றி என்றே செல்லவேண்டும். அந்த வகையில் பாராளுமன்றத்தில் இதனை கொண்டுவந்து பாரிய அழுத்தத்தை எற்படுத்துவதற்கு பலர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதில் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேணை கொண்டுவந்தபோது அதனை வழிமொழிந்து அதனை ஆதரித்த இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் சிவஞானம் சிறிதரனுக்கு நன்றியைத் தெரிவிப்பதுடன் எனைய தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கும் நன்றியைக் கூறுவதுடன் நாங்கள் தமிழ்த்தேசிய பேரவையாகக் கொழும்பில் இருக்கக் கூடிய வெளிநாட்டு தூதரங்களுக்கு சென்று இந்த விடயம் தொடர்பில் வர்தகமானியை வாபஸ்பொறவைக்கவேண்டும் என்று கூறியிருந்தோம். அவர்களும் எமக்கு வாக்குறுதியளித்திருந்தார்கள். நாங்கள் இவற்றைக் கலந்துரையாடுவோம் என்று அவர்களும் இதனைச் செய்திருக்காவிட்டால் இவற்றைச் செய்திருக்க முடியாது எனவே இவர்களுக்கும் எமது நன்றிகள். இந்த அரசாங்கம் எங்கள் கருத்துகளைக் கேட்டு இவற்றைச் செய்யும் என்றால் இனப்பிரச்சினையே இருக்காது. பாராளுமன்றத்தில் இவற்றை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த அழுத்தங்களை வழங்காது விட்டால் இதனைச் செய்திருக்க முடியாது. மேலும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி நிசாம் காரியப்பர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் றவுப் ஹக்கிம் அவர்களுக்கும் விசேட நன்றிகள். பிரதமருடன் சந்திப்பில் இவர்கள் இருவரும் தமது நிலைப்பாட்டை வலியுறுத்தி இருந்தார்கள். இதில் முக்கியமாக இந்த வர்தகமானி வாபஸ் பெறப்பட்டமையானது தமிழ்பேசும் மக்களாக நாங்கள் இணைந்து விவாதித்தது கூட்டு முயற்சியாக வெற்றியளித்தது. இதனைத் தமிழ், முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றைய ஆட்சியாளர்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் எமக்கு வாக்களித்தார்கள் என்று கூறுவது மட்டுமல்லாது பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பொருன்பான்மைக்கு அதிகமாக அவர்கள் இருக்கும் நிலையில் தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இணைந்து செயற்பட்டதன் வெற்றியாகும். சிங்கள மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் சிங்கள மக்களுக்கு நாம் கேடுதல் செய்யவில்லை என்பதைச் சிங்கள மக்கள் உணரவேண்டும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சிங்கள மக்களுக்கு எதிராக நடக்க வேண்டும் என்பது எமது அடிப்படை கோட்பாடு அல்ல. முஸ்லிம் மக்களையும் நாம் இணைத்துச் செயற்படுவதன் மூலம் நாம் அசைக்க முடியாத பலத்தை வெற்றியை அடையலாம். இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசன், மற்றும் அருந்தவபாலன் கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/215846
-
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் 'சிவப்பு' எச்சரிக்கை
Published By: DIGITAL DESK 3 27 MAY, 2025 | 02:20 PM சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சிவப்பு எச்சரிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் 12:30 மணிமுதல் புதன்கிழமை (28) பிற்பகல் 12:30 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அ ம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோரப் பகுதிகளில் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், சில நேரங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரை கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கரையோரக் கடல் பகுதிகளிலும் அலைகளின் உயரம் (சுமார் 2.5 மீ - 3.0 மீ) அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளை கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/215810
-
விமானத்தில் மனைவியிடம் அறை வாங்கினரா பிரான்ஸ் ஜனாதிபதி? ; விளையாட்டு சண்டையா? - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ
காணொளி
-
வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்
வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானியை மீளபெற்றமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் சுமந்திரன் - இன்றிரவே வர்த்தமானியில் இதனை பிரசுரிக்கவேண்டும் என வேண்டுகோள் 27 MAY, 2025 | 01:48 PM வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானியை மீளபெற்றமைக்காக ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கும் அமைச்சரவைக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளருமான எம் ஏ சுமந்திரன் நன்றியை தெரிவித்துள்ளார் காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ்பிரசுரித்த வர்த்தமானியை மீள்கைவாங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. நாம் விதித்த காலக்கெடுவுக்கு முன் இத் தீர்மானம் எடுக்கப்படுள்ளது. இது உடனடியாக இன்றிரவே வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார் சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதிக்கு இன்று இலங்கை தமிழரசுக்கட்சி எழுதிய கடிதமொன்றையும் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மேற்படி வர்த்தமானி அறிவிப்பில் அடையாளம் காணப்பட்ட பெரும்பாலான நிலங்கள் அமைந்துள்ள வடமராட்சி கிழக்கு முல்லைத்தீவில் மூன்று சட்ட ஆலோசனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. முன்னர் அனுப்பிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டதற்கு மேலதிகமாக சுனாமிக்கு பின்னர் அரசாங்க பொறிமுறைகள் மூலம் பணம் கொடுக்கப்பட்டுஇ பல்வேறு திட்டங்கள் ஊடாக பலருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால் அவற்றிற்கான உறுதிகள் எவையும் பலருக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் இந்த காணிகளில் வீடுகளில் 10 வருடங்களிற்கு மேல் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த தருணத்தில் இந்த சட்டத்தை பிரயோகிப்பது இன்னமும் குழப்பகரமான நிலையை உருவாக்கும். இந்த பகுதிகளில் காணி நிர்ணய கட்டளை சட்டத்தின் விதிகளை குறிப்பாக இந்த காலகட்டத்தில் பயன்படுத்துவதுமிகவும் பொருதமற்றது என்பதை நாங்கள் மீள வலியுறுத்துகின்றோம். இந்த திட்டத்தை முன்னெடுத்துச்செல்வதுதாங்கள் எந்த தவறும் இழைக்காத நிலையிலும்தங்கள் நிலங்களிற்கு முழுமையாக உரிமை கோரும் நிலையிலும் இல்லாத பலருக்கு பாரிய சிரமங்களை ஏற்படுத்தும். இந்த செயற்பாடு தமிழ் மக்களிடையே பாரிய சமூக அமைதியின்மையை உருவாக்கும் என்பதுடன்போருக்கு பின்னரான சூழலில் நல்லிணக்கத்தை பாதிப்பதாக அமையும். அத்தோடு ஏராளாமான தனியார் நிலங்கள் இன்னமும இராணுவகட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்பதுடன் தேர்தல் வாக்குறுதியில் நீங்கள் விடுவிப்பதாக கூறியும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. எனவே மேலும் தாமதிக்காமல்மேற்படி வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு மீண்டும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம். இல்லையெனில் இது எமது மக்களை வெகுஜனபகிஷ்கரிப்புகளிலும்சட்டமறுப்பு போராட்டங்களிலும் நாம் வழிநடத்தவேண்டிய நிலையேற்படும். நல்லிணக்கம் சம்பந்தமாக உங்கள் அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவில் இருத்திஇவ்வர்த்தமானி பிரகடனத்தை உடனடியாக மீள கைவாங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215806
-
சென்னையில் தரையிறங்கும் விமானத்தில் பாய்ச்சப்பட்ட லேசர் ஒளி - இதன் விளைவுகள் என்ன?
பட மூலாதாரம்,CHENNAI (MAA) AIRPORT/X படக்குறிப்பு,சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரான விமானத்தின் மீது பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டது. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 54 நிமிடங்களுக்கு முன்னர் துபையில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த நிலையில், அதன் மீது சக்தி வாய்ந்த லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தரையிறங்கும் விமானங்களின் மீது பாயும் லேசர் ஒளி ஏன் விமானங்களைத் தடுமாற வைக்கிறது? மே 25ஆம் தேதியன்று துபையில் இருந்து 326 பயணிகளுடன் சென்னைக்கு எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. அந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரானபோது, அதன்மீது பரங்கிமலை பகுதியில் இருந்து பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இதனால் தொந்தரவுக்கு உள்ளான விமானிகள் விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர். இதற்குச் சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த ஒளி நின்றுவிட்டது. இதன் பிறகு, விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. ஆனாலும் இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முந்தையை சம்பவங்கள் சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு, 2023, 2024ஆம் ஆண்டுகளில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. இதையடுத்து, இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை விடுத்ததோடு, இதுபோல விமானப் போக்குவரத்துக்கு இடையூறு செய்வோர் குறித்துத் தகவல் தெரிந்தால் அருகே உள்ள காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட மே மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்துக்குள் மூன்று முறை விமானங்கள் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. சென்னை விமான நிலைய காவல்துறையினரும் இதுதொடர்பாக தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டைகளை நடத்தினர். பிறகு இந்தச் சம்பவங்கள் நின்றுவிட்டன. இந்த நிலையில், கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பெயர் தெரிவிக்க விரும்பாமல் பேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரி ஒருவர், "சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஓடுபாதையில் இறங்குவதற்காகத் தாழ்வாகப் பறக்கும் விமானங்கள் மீது இதுபோன்று பல வண்ணங்களில் லேசர் ஒளிக்கற்றைகள் அடிக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் இது நடக்கிறது. இது விமானிகளுக்குப் பல பிரச்னைகளையும் ஆபத்துகளையும் ஏற்படுத்துகிறது" எனத் தெரிவித்தார். அதாவது, "விமானத்தைத் தரையிறக்கும்போது விமானிகள் பல வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும், பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கும். அந்தத் தருணத்தில் இதுபோன்ற லேசர் ஒளிக்கற்றைகளை அடிப்பது விமானிகளைத் தடுமாறச் செய்யும். விமானிகள், ஓடுபாதையை விட்டு விலகித் தரையிறக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும்" என்று விளக்கினார். பட மூலாதாரம்,CHENNAI (MAA) AIRPORT/X படக்குறிப்பு,விமானம் தரையிறங்கும்போது இதுபோன்ற விளக்குகள் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் விமானிகள் அதேபோல, விமானக் கட்டுப்பாட்டு அறையின் மீது இதுபோன்ற லேசர் ஒளியை அடித்தால், அதுவும் அங்கு இருப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். சென்னை போன்ற விமான நிலையங்களில் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறையும் ஒரு விமானம் தரையிறங்கவோ, மேலேறவோ செய்துகொண்டிருக்கும். அத்தகைய சூழலில், மிகக் கவனமாக உத்தரவுகளை வழங்க வேண்டிய தருணத்தில் இதுபோன்ற விளக்குகள் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்று கூறினார் பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி. 'உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்' விமானிகளுக்கு இது ஆபத்தான குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார் இந்திய விமானப் படையின் முன்னாள் வீரரான செல்வ ராமலிங்கம். "விமானங்களைத் தரையிறக்குவது என்பது மிகச் சிக்கலான ஒரு செயல்பாடு. ரன்வேயின் லைட்டை ஃபோகஸ் செய்துதான் வருவார்கள். தேவையில்லாத லைட் வந்தால் குழப்பம் ஏற்படும். இந்த விளக்கு ஏன் வருகிறது என யோசிப்பார்கள். அந்தச் சந்தேகம் வரும்போது மறுபடியும் ஏடிசியை தொடர்புகொள்வர்கள். நான் லேண்ட் செய்யலாமா எனக் கேட்பார்கள். டே டைமில்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. ரன்வேயில் ஒவ்வொரு விளக்குக்கும் ஒவ்வொரு சமிக்ஞை இருக்கிறது. எல்லோர் உயிரும் அதைக் கண்டறிந்து இயக்கும் விமானியின் கையில்தான் இருக்கிறது" என்றார். சிறிய டார்ச் அளவுக்கு உள்ள லேசர் கருவிகளைக் கொண்டு ஒளியை அடித்தால், அது சில நூறு மீட்டர் தூரத்துக்கே பாயும். ஆனால், விமான நிலையங்களுக்கு அருகில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சக்தி வாய்ந்த லேசர் விளக்குகளைப் பயன்படுத்தினால், அந்த லேசர்கள் விமானத்தில் பட்டால் அது மிக உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் விமானிகளுக்கே குழப்பத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தும் என்கிறார்கள் அதிகாரிகள். தற்காலிக பார்வையிழப்பு ஏற்படும் அபாயம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகம் முழுவதுமே இந்தப் பிரச்னை இருக்கிறது என்கிறார், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை சேர்ந்த விமானியான அசோகன் ஆனால், சென்னையில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இந்தப் பிரச்னை இருப்பதாகக் கூறுகிறார், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை சேர்ந்த விமானியான அசோகன். "விமானத்தைத் தரையிறக்குவது என்பது மிகவும் சிக்கலான தருணம். அந்த நேரத்தில் விமானிகள் பல விஷயங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பார்கள். அளவைக் காட்டும் பல்வேறு மீட்டர்களை கவனித்துக் கொண்டிருப்பார்கள். ஓடுபாதையையும் விமானத்தையும் ஒரே நேர்கோட்டில் பொருத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். அப்போது ஒரு மில்லிவிநாடியைக்கூட வீணாக்க முடியாது. அந்த நேரத்தில் சக்தி வாய்ந்த லேசர் ஒளி கண்ணில் அடித்தால், தற்காலிகமாகப் பார்வையிழப்பு ஏற்படும்" என்கிறார் அவர். "இதனால் மிக அரிதான தருணங்களில் இதன் காரணமாக, missed approach செய்ய வேண்டியிருக்கும். அதாவது விமானத்தைத் தரையிறக்காமல் மீண்டும் பறக்கச் செய்து, மறுபடியும் ஏடிசியின் அனுமதியைப் பெற்றுத் தரையிறக்க வேண்டியிருக்கும். இதுபோல தீவிர கவனத்துடன் வேலை செய்துகொண்டிருக்கும் தருணத்தில் லேசர் ஒளி கண்ணில் படுவது, விமானிகளுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும், அது மிக அபாயகரமானது" என்கிறார் அசோகன். 'கண்டுபிடிப்பதே கடினம்' பிற நாடுகள் இதுபோன்ற விவகாரங்களை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என்று கூறுகிறார், இந்தியாவில் ஒரு தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றும் பெயரை வெளியிட விரும்பாத விமானி ஒருவர். "இதுபோல, லேசர் ஒளியை அடிப்பதால், விமானம் விபத்தில் சிக்காது. ஆனால், வேறு பல பிரச்னைகள் ஏற்படும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோலச் செய்தால், மிகக் கடுமையான அபராதமும் பல ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கிடைக்கும். இந்தியாவில் இதுபோலச் செய்பவர்களைக் கண்டுபிடிப்பதே கடினமாக இருக்கிறது" என்கிறார் அவர். இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வையும் அவர் முன்வைக்கிறார். "பொதுமக்களின் கையில் இதுபோன்ற கருவிகள் கிடைத்த பிறகு அவர்களைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால், இதுபோன்ற கருவிகளைத் தயாரிப்பவர்கள், இறக்குமதி செய்பவர்களைக் கட்டுப்படுத்தலாம். அவர்கள் யாருக்கு விற்கிறார்கள் என்ற விவரங்களைச் சேகரிக்கச் சொல்ல வேண்டும். அப்படித்தான் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியும்" என்கிறார் அந்த விமானி. இந்தியாவில் சென்னை தவிர, மைசூர், கொல்கத்தா விமான நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் முன்னர் நடந்துள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce81zvln4kko
-
இலங்கை தமிழரசுக் கட்சி , ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து
27 MAY, 2025 | 12:56 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஆட்சியமைப்பதற்கான பல நிபந்தனைகளுடன்கூடிய ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (27) திருகோணமலையில் உள்ள தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் திருகோணமலை தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்தௌபீக் மற்றும், இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக திருகோணமலை மாவட்ட குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் ஆகியோர் கையொப்பமிட்டனர். குறித்த ஒப்பந்தத்தில் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இரு கட்சிகளும் தலா இரண்டு வருடங்களை பகிர்ந்து கொள்வதெனவும், மூதூர் பிரதேச சபையில் முதல் இரண்டு வருடங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியை வழங்குவது எனவும் இறுதி இரண்டு வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியையும் வழங்குவது என இணங்கிக் கொண்டுள்ளனர். அதேபோன்று குச்சவெளி பிரதேச சபையில் முதல் இரண்டு வருடங்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்; உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியை வழங்குவது எனவும் இறுதி இரண்டு வருடங்களுக்கு ஸ்ரீ தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியையும் வழங்குவது எனவும் இணங்கி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுக் கொண்டனர். இதைவிட திருகோணமலை மாநகரசபை, நகரமும் சூழலும் பிரதேச சபை மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்; ஆதரவு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215799
-
மாதவிடாய் நேரத்தில் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான பழக்கங்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 27 மே 2025, 01:29 GMT மாதவிடாய் சுகாதாரம் குறித்த ஆலோசனைகளும், விவாதங்களும், பேச்சுகளும் மிகவும் அரிதாகவே இந்திய வீடுகளில் நடைபெறுகின்றன. உங்கள் வீட்டில் வெளிப்படையாக மாதவிடாய் பற்றிப் பேசுகிறீர்களா? ஆம் என்றால் எவ்வளவு முறை பேசுகிறீர்கள் என்ற கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இது தொடர்பான விழிப்புணர்வு வளர்ந்து வந்தாலும்கூட, மாதவிடாய் என்பது பேசக்கூடாத, அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பேசுபொருளாகவே இன்றும் நீடிக்கிறது. ஆம், இது தொடர்பாக சமூக ஊடகங்களில் தங்களின் மாதவிடாய் அனுபவம், அதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் உடல் பிரச்னைகள் குறித்துப் பெண்கள் பேசும் வீடியோக்களும் பதிவுகளும் வரவே செய்கின்றன. பெண் முதல்முறையாக மாதவிடாயை எதிர்கொள்ளும் போது அது இந்திய சமூகத்தில் கொண்டாட்டமாகிறது. ஆனால், இது தொடர்பான சம்பாஷனைகள் பள்ளிகளிலோ, வீடுகளிலோ மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன. இது தொடர்பாக நீடிக்கும் மௌனம், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் மாண்பைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. மாதவிடாய் சுகாதார தினம் ஒவ்வோர் ஆண்டும் மே 28ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது. சிறப்பான மாதவிடாய் சுகாதார நடைமுறைகள் என்பவை யாவை? பெண்கள் இதில் செய்யும் தவறுகள் என்ன? இது தொடர்பாக அறிந்துகொள்ள மகப்பேறு மருத்துவரும், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியருமான பிரேமலதாவிடம் பிபிசி தமிழ் பேசியது. மாதவிடாய் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான நடைமுறைகள் பற்றி அவர் அளித்த விளக்கங்களை இங்கு காண்போம். நேப்கின்களை தேர்வு செய்வது எப்படி? பருத்தி இழைகளால் ஆன நேப்கின்களை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில், அவை எளிதில் ரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டவை. மேலும், எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதையும் தவிர்க்கின்றன. நைலான் போன்ற பொருட்களால் செய்யப்படும் நேப்கின்களை காட்டிலும், இதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும், பெண்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இதற்காகப் பணம் செலவழிப்பதில் தவறில்லை. அதோடு, மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையிலான பருத்தி துணிகளால் ஆன 'ப்ரீயட் பேன்டீஸ்' மற்றும் 'மறுபயன்பாடு செய்யக்கூடிய பருத்தி பேட்கள்' போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு நன்மை தரும் வகையில் இவை தயாரிக்கப்பட்டாலும்கூட, இதுபோன்ற பொருட்களை முறையாகப் பயன்படுத்தவில்லை அல்லது சுத்தம் செய்யவில்லை என்றால், பெண்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும். மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் பொருட்களை பராமரிப்பது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES "பீரியட் பேன்டீஸ்' மற்றும் 'மறுபயன்பாடு செய்யக்கூடிய பருத்தி பேட்கள்' போன்ற பொருட்களைத் தான் அதிகம் பரிந்துரை செய்வதில்லை என்கிறார் மருத்துவர் பிரேமலதா. ஆனால், "பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இத்தகைய பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அதுபோன்ற பொருட்களை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மிதமான வெந்நீரில் அதை நனைத்து நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும்." அதோடு, "ஆன்டிசெப்டிக் போன்ற பொருட்களைப் பயன்படுத்தாமல், மிதமான சோப்பில் துவைத்து வெயிலில் நன்கு காய வைத்து எடுத்த பிறகு பயன்படுத்த வேண்டும். இப்படிச் சரியான முறையில் துவைத்து, காயவைக்கவில்லை என்றால் நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடும். எனவே, இத்தகைய பொருட்களை உபயோகிக்கும்போது சுகாதாரமான பயன்பாடு என்பதே முதலில் நினைவுக்கு வர வேண்டும்" என்றும் அவர் அறிவுறுத்துகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பருத்தி இழைகளால் ஆன நேப்கின்களை தேர்வு செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள் எவ்வளவு மணிநேரத்துக்கு ஒரு முறை பேட்களை மாற்ற வேண்டும்? "பொதுவாக நாள் ஒன்றுக்கு நான்கு முறை பேட்களை மாற்றுவது நல்லது. 'மென்ஸ்ட்ருவல் கப்' (menstrual cup) பயன்படுத்தும்போது 6 முதல் 8 மணிநேரத்துக்கு ஒரு முறை அதை 'அன்லோட்' செய்வது நல்லது. ஆனால், இதே நேர அளவைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு சிலருக்கு அதிகமான உதிரப்போக்கு இருக்கும். அப்போது நேப்கின்கள் முழுமையாக நனையும் வரை காத்திருக்காமல், மூன்று மணிநேரத்துக்கு ஒரு முறை நேப்கினை மாற்றுவது நல்லது." மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன? மென்ஸ்ட்ருவல் கப்பும் பொருளாதாரத்தைக் கவனத்தில் கொண்டுதான் அறிமுகம் செய்யப்பட்டது. நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கு ஏதுவானது. மேலும் பயணம் செய்யும் காலத்திலும் இவை பயன்படுத்தப்படும். அதுகுறித்து விளக்கிய மருத்துவர் பிரேமலதா, "பீரியட் பேன்டீஸ், மறுபயன்பாடு செய்யவல்ல பருத்தி பேட்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்வதைப் போன்றே, கொதிக்கும் நீரில் நான்கு நிமிடங்களுக்கு நன்றாகக் கொதிக்க வைத்த பிறகு, மிதமான, வாசனையற்ற சோப்பில் கழுவ வேண்டும்" என்றார். மாதவிடாய் காலத்தில் தங்களுடன் எப்போதும் ஒன்றுக்கும் மேலான கப்களை வைத்திருப்பது நல்லது. ஒரு நாள் முழுவதும் ஒரே கப்பை பயன்படுத்துவற்குப் பதிலாக, தூய்மையாக இருக்கும் மற்றொன்றைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது என்றும் அவர் தெரிவித்தார். வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வது சரியா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'கொதிக்கும் நீரில் நான்கு நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க வைத்த பிறகு, மிதமான, வாசனையற்ற சோப்பில் மென்ஸ்ட்ருவல் கப்களை கழுவ வேண்டும்' முன்பு கூறியதைப் போன்றே மாதவிடாய் என்பது மிகவும் இயல்பான இயற்கை நிகழ்வு. இந்த நேரத்தில் பலருக்கும் வயிற்று வலி ஏற்படும். இதிலிருந்து தப்பிக்க வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் பிரேமலதா. "அதில் தவறு ஒன்றும் இல்லை. வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியால் உங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடாது. அதேவேளையில், கடுமையான வயிற்று வலி இருந்தால், மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்," என்றும் பிரேமலதா தெரிவிக்கிறார். மாதவிடாய் காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய இதர ஆரோக்கியமான பழக்கங்கள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'கடுமையான வயிற்று வலி இருந்தால், மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்' காற்றோட்டமான உள்ளாடைகளை அணிய வேண்டும் மாதவிடாய் காலகட்டத்தில் பெண்ணுறுப்பைச் சுற்றி இருக்கும் முடியை சவரம் செய்வது போன்றவற்றைத் தவிர்க்கவும். இது பொதுவாக பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகளில் இருந்து உணர்ச்சி மிகுந்த பகுதியைப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்வதால், மாதவிடாய் காலத்தில் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்கலாம். அதிகப்படியான உதிரப்போக்கு, நாற்றம் போன்றவை ஏற்படும்போது மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். பெண்ணுறுப்பைச் சுத்தம் செய்யும்போது முன்பிருந்து பின்புறமாகச் சுத்தம் செய்ய வேண்டும். யூ.டி.ஐ., (சிறுநீர்ப் பாதை தொற்று) மற்றும் இதர தொற்றுகளில் இருந்து பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யும் பழக்கமாக இது பரிந்துரை செய்யப்படுகிறது. டேம்பான்கள் (Tampon) போன்றவற்றைப் பயன்படுத்தும்போது சிலருக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. ஒருவேளை நோய்த் தொற்று, எரிச்சல், துர்நாற்றம் போன்றவற்றை உணர்ந்தால் சிறிதும் யோசிக்காமல் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது. பாதுகாப்பான மாதவிடாய் பொருட்களின்றி அவதியுறும் பெண்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் உலகம் முழுவதும் தோராயமாக, 500 மில்லியன் பெண்கள், மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவதற்குத் தேவையான, பாதுகாப்பான, தூய்மையான பொருட்களின்றி அவதிப்படுவதாக 2022ஆம் ஆண்டில் வெளியான உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது. "இன்று மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்துவதற்குத் தேவையான பொருட்களின் பற்றாக்குறை மட்டுமே பெண்கள் சந்திக்கும் பிரச்னையல்ல. மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்வில் நிகழும் ஓர் இயல்பான, ஆரோக்கியமான நிகழ்வுதான் என்றாலும்கூட பல்வேறு சமூகங்களில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். பல கலாசாரங்களில் பேசக்கூடாத ஒன்றாகவும் அது இருக்கிறது" என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதனால் மாதவிடாய் தொடர்பான தகவல்கள் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. இதன் காரணமாக, ஆரோக்கியமற்ற, சுகாதாரமற்ற மாதவிடாய் கால நடைமுறைகளைப் பெண்கள் பின்பற்ற நேரிடுகிறது. மாதவிடாய் குறித்து நிலவி வரும் எதிர்மறையான கருத்துகள் பெண்களை அவமானப்படுத்த, கேலிக்கு உள்ளாக்க மற்றும் பாலினம் சார்ந்த வன்முறைகளுக்கு வழிவகை செய்வதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. அதோடு, "இதன் காரணமாகப் பல தலைமுறைகளாக, ஆரோக்கியமற்ற மாதவிடாய் செயல்பாடுகள் காரணமாக சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து, அவர்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, மனித வளர்ச்சி ஆகியவற்றைக் கடுமையாக பாதிக்கிறது," என்றும் உலக வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyvx3wx25qo
-
நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருவிழா காளாஞ்சி கையளிக்கப்பட்டது
27 MAY, 2025 | 02:05 PM நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சியை ஆலய சம்பிரதாய முறைப்படி ஆலய கணக்குப்பிள்ளை யாழ். மாநகர சபையினருக்கு இன்றைய தினம் (27) வழங்கிவைத்தார். நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவப் பெருவிழாவுக்கான ஆலயச் சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதித் தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி ஆலய கணக்குப்பிள்ளையால் கையளிக்கப்பட்டது. இதன்போது பாரம்பரிய முறைப்படி யாழ். மாநகர சபை வளாகத்தில் வாழை, தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. https://www.virakesari.lk/article/215805
-
வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்
வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானியை மீளப்பெற்றது அரசாங்கம் 27 MAY, 2025 | 12:02 PM வடமாகாண காணிதொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது. அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின் அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன் அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215797
-
வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தொடர்பில் புதிய சட்டம் - அரசாங்கம்
Published By: DIGITAL DESK 3 27 MAY, 2025 | 01:40 PM (எம்.மனோசித்ரா) வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக வினைத்திறனான சட்டரீதியான ஒழுங்குமுறையை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பணத் தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய – பசுபிக் வலயத்தின் உறுப்பினர் என்ற ரீதியில் நிதிச் செயற்பாட்டு செயலணியால் தயாரிக்கப்பட்ட நிதித் தூய்மையாக்கல், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் மற்றும் விரிவாக்க நிதியிடலுக்கு எதிராக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தராதரங்களை பயனுள்ள வகையில் அமுல்படுத்துதல் மற்றும் வலுவுறுத்தலுக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. மேலும், குறித்த செயலணியின் உறுப்பு நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்ற வகையில் நிதி செயற்பாட்டு செயலணியின் தராதரங்களுக்கு ஏற்புடையதான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை 'பரஸ்பர மதிப்பீடு' எனும் பெயரில் அழைக்கப்படும் பரஸ்பர சமமான மீளாய்வு செயன்முறைக்கு இலங்கை உட்படுகிறது. இலங்கை தொடர்பான 3 ஆவது மதிப்பீட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ள செயற்பாட்டுத் திட்டத்துக்கு அமைய வெளிவிவகார விடயத்துக்கு பொறுப்பான அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முன்மொழிவை 2178 (2014) விரைவாக பிரகடனப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு சட்டத்தை வகுப்பதன் மூலம் மேற்குறித்த முன்மொழிவின் ஏற்பாடுளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அதற்கமைய, 2026 மார்ச் மாதத்துக்கு முன்னர் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தொடர்பான சட்டத்தை தயாரிக்க வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது. எனவே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை முன்மொழிவின் 2178 (2014) அடிப்படையில் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மறறும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. https://www.virakesari.lk/article/215804
-
'சம்மதத்துடன் உடலுறவு கொண்ட பிறகு குற்ற வழக்கு தொடர முடியாது' - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஆண்-பெண் இடையே சம்மதத்துடன் கூடிய உடலுறவுக்குப் பிறகு பிளவு ஏற்பட்டாலும் குற்ற வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அந்தச் செய்தியில், "மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் 25 வயதான ஓர் இளைஞரும் ஏற்கெனவே திருமணமான ஒரு பெண்ணும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நெருக்கமாகப் பழகி வந்தனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, ஒர் ஆண்டுக்கு மேல் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக இளைஞர் மீது அப்பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கிறது அந்தச் செய்தி. இதைத் தொடர்ந்து, "விசாரணை நீதிமன்றம் இளைஞருக்கு முன்ஜாமீன் அளித்தது. பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரிய அவரது மனுவை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்" எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தது. அதில், "வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை என்று வைத்துக் கொண்டாலும், பெண்ணின் விருப்பத்திற்கு எதிராகவோ, திருமண வாக்குறுதி அளித்தோ அவரது சம்மதம் பெறப்பட்டதாகத் தோன்றவில்லை. எங்கள் ஒருமித்த கருத்து என்னவென்றால், இது திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்த விவகாரம் அல்ல. ஆணும், பெண்ணும் பரஸ்பர சம்மதத்துடன் உறவு வைத்துவிட்டு, அந்த உறவில் பிளவு ஏற்படும்போதோ, கசப்புணர்வு ஏற்படும்போதோ, குற்ற வழக்கு தொடர அந்தச் சம்மத உறவு முகாந்திரம் ஆகாது. இதுபோன்ற நடத்தைகள் நீதிமன்றத்துக்குச் சுமையாவதுடன், குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது அவப்பெயரை ஏற்படுத்துகின்றன. ஆகையால் சட்டப் பிரிவுகளைத் தவறாக பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கிறோம். திருமணம் செய்துகொள்வதாக அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குறுதியையும் போலி வாக்குறுதி என்று கூறி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்வது முட்டாள்தனம். ஏற்கெனவே திருமணமான பெண், திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் மற்றொருவருடன் உறவு வைத்துக்கொண்டதாகக் கூறுவதையும் நம்ப முடியாது. எனவே, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்கிறோம்," என நீதிபதிகள் கூறியதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn5y1z7ezpvo
-
விமானத்தில் மனைவியிடம் அறை வாங்கினரா பிரான்ஸ் ஜனாதிபதி? ; விளையாட்டு சண்டையா? - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ
27 MAY, 2025 | 10:55 AM "நாங்கள் விளையாட்டுக்கு சண்டைபிடித்துக்கொண்டோம்" - விமானத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அளித்த விளக்கம் இதுதான். வார இறுதியில் தென்கிழக்காசிய பயணத்தை ஆரம்பிப்பதற்காக விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன்னர் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி பிரிஜிட் கணவரின் முகத்தில் கைவைத்து தள்ளிவிடுவதை காண்பிக்கும் வீடியோ உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த தருணம் பிரான்சின் தலைப்புச்செய்திகளில் வேகமாக இடம்பிடித்தது. அப்போதுதான் திறந்த விமானக்கதவு ஊடாக வீடியோக்கள் பார்த்த விடயத்தை பிரான்ஸ் ஊடகங்கள் அர்த்தப்படுத்த முயன்றன. பிரான்சின் லு பரிசியன் நாளேட்டின் இணையத்தளம் அறையா அல்லது சண்டையா என கேள்வி எழுப்பியது. பிரான்ஸ் ஜனாதிபதி தனது மனைவியுடன் விமானத்திலிருந்து இறங்கும் படத்திற்கு பலர் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். இது பற்றி பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி நான் மாணவனாகயிருந்த வேளை அவர் ஆசிரியராகயிருந்தார், நாங்கள் விரும்பி திருமணம் செய்துகொண்டோம், நாங்கள் விமானத்தில் வேடிக்கையாக விளையாடினோம் என தெரிவித்துள்ளார். நாங்கள் விளையாட்டுக்கு சண்டை பிடித்துக்கொண்டோம், இந்த விடயத்தை அளவுக்கதிகமாக ஏதோ புவிகிரக பேரழிவு போல ஊதிப்பெருப்பிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். ஏபிஊடகவியலாளர் எடுத்த வீடியோவில், பிரான்ஸ் ஜனாதிபதி வியட்நாமிற்கு விமானத்தில் வந்து இறங்குவதையும், சீருடை அணிந்த நபர் ஒருவர் விமானத்தின் கதவை திறந்து பிரான்ஸ் ஜனாதிபதி உள்ளே காணப்படுவதை காண்பிப்பதையும் ஜனாதிபதி யாருடனோ கதைத்துக்கொண்டிருப்பதையும் காணமுடிகின்றது. பிரிஜிட் மக்ரோனின் கரங்கள் ( சிவப்பு ஆடை) மக்ரோனை தள்ளிவிடுவதையும், ஒரு கை மக்ரோனின் வாயையும் மூக்கின் ஒரு பகுதியையும் மூடுவதையும், மற்றை கை அவரது தாடையை பிடித்திருப்பதையும் வீடியோ காண்பித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி பின்வாங்கி, தலையை திருப்பிகொள்கின்றார், பின்னர் கமராக்கள் தன்னை பதிவு செய்வதை பார்த்ததும், புன்னகைத்து கை அசைக்கின்றார். அதன் பின்னர் ஜனாதிபதியும் மனைவியும் விமானப்படிகளில் காணப்படுகின்றார், ஜனாதிபதி தனது கரங்களை மனைவியை நோக்கி நீட்டுகின்றார், ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை, இருவரும் விமானத்திலிருந்து இறங்குவதையும் வீடியோ காண்பித்துள்ளது. இந்த படங்களும் அதற்கான எதிர்வினைகளும், தவறான தகவல்கள் குறித்து ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளன என தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி, கடந்த சிலவாரங்களாக தன்னை பற்றி வதந்திகளிற்காக வேறு வீடியோக்களும் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215789
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப் - மோதப்போவது யாருடன்? ஆர்சிபி, குஜராத் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் எந்தெந்த நிலையில் விளையாடப் போகின்றன என்பதற்கான முதல்கட்ட தெளிவு கிடைத்துள்ளது. அதன்படி எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுவது உறுதியாகியுள்ளது. மும்பை அணியைப் பொறுத்தவரை 3 அல்லது 4வது இடத்தைப் பிடித்த ஆண்டுகளில் ஒருமுறைகூட கோப்பையை வென்றது இல்லை. மும்பை கோப்பையை வென்ற 5 முறைகளிலும் அந்த அணி டாப் 2 இடங்களையே பெற்று வந்துள்ளது. பஞ்சாப் அணி முதல் தகுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பை, 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 10 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் பெற்றுள்ளது. ஆனால், ஆர்சிபி அணி இன்று நடக்கும் கடைசி லீக்கில் வென்றால் அந்த அணி முதல் தகுதிச் சுற்றில் விளையாடும். இல்லையெனில் 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டு எலிமினேட்டர் சுற்றில் மும்பையுடன் மோதவேண்டிய சூழல் ஏற்படும். ஜெய்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 69வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. 185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப் இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் தகுதிச் சுற்றில் வரும் 29ஆம் தேதி மோதவுள்ளது உறுதியாகியுள்ளது. பஞ்சாப் மோதப் போவது குஜராத் அணியுடனா அல்லது ஆர்சிபியுடனா என்பது இன்றிரவு நடக்கும் ஆட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும். இன்றிரவு நடக்கும் கடைசி லீக்கில் லக்னெள அணியை ஆர்சிபி வென்றால், முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும். ஆர்சிபி தோல்வியடைந்தால், 18 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் அணி பஞ்சாப் அணியுடன் முதல் தகுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்தும். முதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணியுடன் முதல் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த அணி, 2வது தகுதிச்சுற்றில் மோதும். அதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். ஆர்சிபி என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலி ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை இன்று நடக்கும் ஆட்டத்தில் லக்னெள அணியை வென்றாலே முதல் தகுதிச்சுற்றில் இடம் பெற்றுவிடும். ஒருவேளை முதலிடத்தில் இருந்து பஞ்சாப் அணியைக் கீழே இறக்க வேண்டுமெனில், ஆர்சிபி அணி 200 ரன்கள் சேர்த்து, லக்னெள அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். அல்லது 200 ரன்கள் சேர்த்து 21 பந்துகள் மீதம் இருக்கும் வகையில் லக்னெள அணியை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். லக்னெள அணியிடம் ஆர்சிபி எளிதாக வெற்றி பெற்றாலே முதல் தகுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுவிடும். ஒருவேளை ஆர்சிபி அணி, லக்னெள அணியை வென்றுவிட்டால், குஜராத் அணி 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, எலிமினேட்டர் சுற்றில் மும்பையுடன் மோதும். முதல் தகுதிச் சுற்றில் குஜராத் அணி பஞ்சாப் உடன் விளையாட வேண்டுமெனில், அதற்கு இருக்கும் ஒரே வழி ஆர்சிபி தோல்வி அடைவதுதான். பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது பிரியன்ஸ் ஆர்யா(63), ஜாஸ் இங்கிலிஸ்(73) ஆகியோரின் அற்புதமான பார்ட்னர்ஷிப். 2வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பையிடம் இருந்து வெற்றியைப் பறித்தனர். ஐந்தாவது ஓவரில் சேர்ந்த இருவரையும் பிரிக்க முடியாமல் சிரமப்பட்ட மும்பை பந்துவீச்சாளர்கள் 15வது ஓவரில்தான் பிரித்தனர். வெற்றிக்குத் தேவையான அற்புதமான ஆட்டத்தை வழங்கி, 42 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்த ஜாஸ் இங்கிலிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். வேறுமுகம் காட்டிய ஆர்யா, இங்கிலிஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நேற்றைய ஆட்டத்தில் பிரியன்ஸ் ஆர்யாவின் ஆட்டம் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இருந்தது பிரியன்ஸ் ஆர்யா இந்த சீசன் முழுவதும் தொடக்க வீரராக அதிரடி பேட்டிங்கில்தான் தன்னை அடையாளப்படுத்தி இருந்தார். முதலில் பேட் செய்த போதெல்லாம் ஆர்யாவின் பேட்டிலிருந்து சிக்ஸர்கள், பவுண்டரிகள் பறக்கும். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் பிரியன்ஸ் ஆர்யாவின் ஆட்டம் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இருந்தது. அணியின் சூழலை உணர்ந்து, மிகுந்த பொறுப்புடன் நிதானமாகத் தன்னால் ஆங்கர் ரோல் எடுத்தும் விளையாட முடியும் என்பதை வெளிப்படுத்திய ஒரு முதிர்ச்சியடைந்த பேட்டராக ஆர்யா இருந்தார். தொடக்கத்தில் போல்ட் ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய ஆர்யா, பிரப்சிம்ரன் ஆட்டமிழந்ததும் நிதானத்திற்கு வந்தார். ஜாஸ் இங்கிலிஸ் வழக்கத்திற்கு மாறாக 3வது இடத்தில் களமிறக்கப்பட்டார். தனக்கு வழங்கப்பட்ட பணியைத் தொடக்கத்தில் இருந்தே இங்கிலிஸ் சிறப்பாகச் செய்தார். இங்கிலிஸ், அதிரடி ஆட்டத்திற்குத் திரும்பியதும் ஆர்யா நிதானமாக பேட் செய்து, மோசமான பந்துகளில் மட்டுமே பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். ஹர்திக் பாண்டியா ஓவரில் பவுண்டரி, லாங்ஆனில் சிக்ஸர் விளாசி 27 பந்துகளில் அரை சதத்தை விளாசினார். அதுமட்டுமின்றி பும்ரா பந்துவீச்சுக்கும் அஞ்சாத ஆர்யா ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார். அஸ்வனி குமார் பந்துவீச்சில் இங்கிலிஸ் தொடர்ந்து 4 பவுண்டரிகளை விளாசினார். சான்ட்னர் ஓவரை கதறவிட்ட இங்கிலிஸ், சிக்ஸர், பவுண்டரி என 2 ஓவர்களில் 23 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக பேட் செய்த இங்கிலிஸ் 29 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். பவர்ப்ளேவில் 47 ரன்கள் சேர்த்த பஞ்சாப் அணி அதன் பின்னர் சீராக ரன்ரேட்டை உயர்த்தி 6 ஓவர்களில் 50 ரன்களையும், 10 ஓவர்களில் 100 ரன்களையும் எட்டி வெற்றியை நோக்கி ஓடியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜஸ்பிரித் பும்ரா இங்கிலிஸ், ஆர்யா கூட்டணியைப் பிரிக்க ஹர்திக் பாண்டியா பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் 10 ஓவர்களாக இருவரையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியாக சான்ட்னர் வீசிய 15வது ஓவரில் யாதவிடம் கேட்ச் கொடுத்து, ஆர்யா 62 ரன்களில்(2 சிக்ஸர், 9 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ், இங்கிலிஸுடன் சேர்ந்து அணியை வெற்றியை நோக்கி உந்தித் தள்ளினார். இங்கிலிஸ் தொடரந்து அதிரிடியாக ஆடி ரன்களையும், பந்துகளையும் சமன் செய்தார். சான்ட்னர் வீசிய 18வது ஓவரில் கால்காப்பில் வாங்கி இங்கிலிஸ் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலிஸ் ஆட்டமிழக்கும்போது பஞ்சாப் வெற்றிக்கு 15 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. களத்தில் இருந்த ஸ்ரேயாஸ், அடுத்து களமிறங்கிய நேகல் வதேரா இருவரும் சேர்ந்து அணியை வெற்றி பெற வைத்தனர். ஸ்ரேயாஸ் 26 ரன்களிலும், வதேரா 2 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பையை காப்பாற்றிய ஸ்கை அரைசதம் இந்த ஆட்டத்தில் முக்கிய நட்சத்திரங்கள் எதிர்பார்த்த பங்களிப்பை வழங்கவில்லை. ரிக்கல்டன், ரோஹித் கூட்டணியின் தொடக்கம் பெரிதாக அமையவில்லை. தனது கடைசி லீக்கில் ஆடிய ரிக்கில்டன் 27 ரன்களில் யான்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3வது வீரராகக் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ரோஹித்துடன் சேர்ந்து வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சூர்யகுமார் வழக்கமான ஆட்டத்தை வழங்கி அரைசதத்தை எட்டினார் நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா 24 ரன்களில் ஹர்பிரித் பிரார் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா ஒரு ரன்னில் வைஷாக் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார், வில் ஜேக்ஸும் 17 ரன்களுடன் வெளியேறினார். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், சூர்யகுமார் தனது வழக்கமான ஆட்டத்தை வழங்கி அரைசதத்தை எட்டினார். கேப்டன் ஹர்திக் பாண்டியா கேமியோ ஆடி 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 26 ரன்களில் ஆட்டமிழந்தார். நமன் திர் 20 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவர் வரை களத்தில் இருந்த சூர்யகுமார் 57 ரன்களில் அர்ஷ்தீப் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். மும்பை அணிக்கு நேற்று ரோஹித், ரெக்கில்டன் கூட்டணி எதிர்பார்த்த தொடக்கத்தை வழங்கவில்லை, நடுவரிசை பேட்டர்களும் ஏமாற்றினர். இதனால் சூர்யகுமார் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் அழுத்தத்துடன் ஆடினார். பஞ்சாப் அணி தரப்பில் யான்சென், அர்ஷ்தீப், வைஷாக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 'எங்களுக்கு வெற்றி பெறத் தெரியும்' மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில் "நாங்கள் 20 ரன்கள் குறைவாகச் சேர்த்துவிட்டோம். இதுவரை நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். இன்று இரவு அவ்வாறு ஆடாததால், அதற்கான விலையைக் கொடுத்துவிட்டோம். நாங்கள் 5 முறை கோப்பையை வென்றுள்ளோம். ஆகையால், எப்படி வெற்றி பெறுவது எனத் தெரியும். போட்டி கடினமாகத்தான் இருக்கும். எங்கள் அணியின் முன்னோர்களுடைய வழியைப் பின்பற்றினால், மற்ற அணிகளை வெல்ல முடியும். கடந்த காலங்களில் மும்பை பெற்ற வெற்றியின் வழிகளைப் பின்பற்றினாலே போதுமானது, நாக்-அவுட் சுற்றுக்குள் செல்லலாம்" என்று தெரிவித்தார். மேலும், "எங்கள் பேட்டிங்கில் இன்னும் 20 ரன்கள் கூடுதலாகத் தேவை, எங்கள் பந்துவீச்சும் இன்று சிறப்பாக இல்லை. ஆனால், பஞ்சாப் பேட்டர்கள் சிறந்த ஷாட்களை ஆடினர். அதிகமாக பதற்றப்படத் தேவையில்லை, அணியை முன்னோக்கி எடுத்துச் செல்வோம்" எனத் தெரிவித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy90pe2nzxyo
-
குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூஜாபூமி காணிப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடல்
Published By: VISHNU 27 MAY, 2025 | 04:18 AM குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூஜாபூமி காணிப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடலானது திங்கட்கிழமை (26) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக், குச்சவெளி வெளிக்கள போதனாசிரியர் நவசீலன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய உட்பட குச்சவெளி பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/215773
-
யாழில் சமையலில் ஈடுபட்ட இளம் குடும்பப் பெண் தீப்பற்றியதால் உயிரிழப்பு!
Published By: VISHNU 27 MAY, 2025 | 04:02 AM யாழ்ப்பாணத்தில், வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். புலவர் வீதி, நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கஜன் ஜனுயா (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் கடந்த 20ஆம் திகதி சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதன்போது அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியவேளை அது அவரது ஆடையிலும் பட்டு தீப்பற்றியது. பின்னர் அவர் குளியலறைக்குள் சென்று தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு, எரிகாயங்களுக்கு பற்பசை பூசியுள்ளார். இதன்போது அங்கு வந்த கணவர் அயல்வீட்டு பெண்ணொருவருடன் அவரை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மானிப்பாய் பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர். தீ காயத்தால் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/215770
-
போலி ஆவணங்களுடன் அல்பேனியா எல்லைக்குள் நுழைய முயன்ற 3 இலங்கையர்கள் கைது
Published By: DIGITAL DESK 3 27 MAY, 2025 | 09:47 AM போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானா (Qafë Thana) வை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும், அவை போலியானவை எனவும் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அல்பேனிய அதிகாரிகள் 36, 51 மற்றும் 57 வயதுடைய 3 இலங்கையர்களையும் கைது செய்துள்ளனர். வீசா மோசடி குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் பொருள் ஆதாரங்களாகக் கைப்பற்றப்பட்டன. https://www.virakesari.lk/article/215782
-
"நன்கொடை கொடுக்கலாம், உபயதாரர் ஆக முடியாது" திருநாகேஸ்வரம் கோவிலில் பட்டியல் சாதியினருக்கு என்ன பிரச்னை?
பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE படக்குறிப்பு, சேக்கிழார் கட்டியதாகக் கூறப்படும் இந்தக் கோவிலுக்கு கி.பி. 1182 ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் விளக்கெரிக்க தானம் அளிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 18 மே 2025 'ஒரு மனிதனின் தாழ்ந்த நிலையைக் காரணம் காட்டி கோவில்களில் நன்கொடை பெற மறுப்பது தீண்டாமையின் மற்றொரு வடிவம்' என, கடந்த ஏப்ரல் 29 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் திருநாகேஸ்வரர் கோவிலில் தங்களை உபயதாரராக சேர்க்க மறுப்பதாகக் கூறி பட்டியல் பிரிவினர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அறநிலையத்துறை அதிகாரிகளும் கோவில் அறங்காவலர்களும் மறுக்கின்றனர். தங்களிடம் மனு கொடுக்காமல் நீதிமன்றத்தை நாடிவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். கோவிலில் என்ன பிரச்னை? காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் சிறப்புகளைக் கூறுவதற்கு 45 கல்வெட்டுகள் உள்ளதாக கோவில் குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. சேக்கிழார் கட்டியதாகக் கூறப்படும் இந்தக் கோவிலுக்கு கி.பி. 1182 ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் விளக்கெரிக்க தானம் அளிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது எனவும் இணையதளம் கூறுகிறது. கி.பி. 1192 ஆம் ஆண்டு காமாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்டதாகவும் கோவிலில் பணிபுரிந்த ஆடல் மகளிரும் வழிபாட்டுக்காக தானம் அளித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி. 1546 ஆம் ஆண்டு விஜயநகர மன்னரும் திருநாகேஸ்வரம் வந்துள்ளதாகவும் பெரிய புராணம் எழுதிய சேக்கிழாருக்கு இங்கு தனிக்கோவில் உள்ளதாகவும் அறநிலையத்துறை கூறியுள்ளது. குன்றத்தூரில் திருநாகேஸ்வரம் கிராமத்தில் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்துள்ள கூலி வேலைகள் பிரதானமாக உள்ளன. 'குறிப்பிட்ட சாதி கட்டுப்பாட்டில் கோவில்' பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE படக்குறிப்பு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபரை கோவிலுக்குள் உபயதாரராக சேர்க்க மறுப்பதாகக் கூறுவது அரசியல் சாசன சட்டத்தின் 17 ஆவது பிரிவை மீறுவதாகும் என நீதிபதி தெரிவித்துள்ளார். "கோவிலுக்கு அருகில் முருகன் கோவில், பெருமாள் கோவில், சிவன் கோவில் ஆகியவற்றில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் அறங்காவலர் குழுவில் உள்ளனர். ஆனால், திருநாகேஸ்வரர் கோவிலை குறிப்பிட்ட சாதியினர் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்" எனக் கூறுகிறார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாண்டியராஜன். இவர் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தான் கோவிலில் உபயதாரராக உள்ளதாகக் கூறும் அவர், "பட்டியல் சாதியைப்போல பிற சாதியினருக்கு உபயதாரராக முக்கியத்துவம் தருவதில்லை. அனைத்து சாதிகளுக்கும் உரிமை கொடுக்க உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்தேன்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை மூன்று வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்ரவர்த்தி உத்தரவிட்டார். 'கடவுள் முன் சாதி ஒரு பொருட்டல்ல' தீர்ப்பில், 'இந்த நாட்டில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தன்னைவிட கீழ் நிலையில் உள்ள நபரிடம் நன்கொடைகளை வாங்காமல் இருப்பது தீண்டாமையின் மற்றொரு வடிவம். கடவுள் முன் சாதி ஒரு பொருட்டல்ல' என நீதிபதி கூறியுள்ளார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபரை கோவிலுக்குள் உபயதாரராக சேர்க்க மறுப்பதாகக் கூறுவது அரசியல் சாசன சட்டத்தின் 17 ஆவது பிரிவை மீறுவதாகும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இதேபோன்ற ஒரு வழக்கில் (நாமக்கல் மாவட்டம் பொன் காளியம்மன் கோவில் வழக்கு) பிப்ரவரி 5 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் நீதிபதி மேற்கோள் காட்டியுள்ளார். இந்த வழக்கில், 'காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவிலில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே உபயதாரராக இருக்க முடியும்' என இந்து அறநிலையத்துறை வாதிட்டதாகக் கூறுகிறார், வழக்கைத் தொடர்ந்த பாண்டியராஜனின் வழக்கறிஞர் சுகந்தன். "சமூக நீதி அரசை நடத்துவதாகக் கூறும் ஆட்சியில் இப்படியொரு பதிலைக் கூற முடியாது. கோவிலில் பக்தர்களிடம் நன்கொடைகளை வாங்குகின்றனர். ஆனால், குறிப்பிட்ட சாதியினரின் விழாவாக கொண்டாடுகின்றனர்" எனக் கூறுகிறார். பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE அழைப்பிதழ் சர்ச்சை திருநாகேஸ்வரர் கோவிலில் கடந்த மே 13 ஆம் தேதி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. "பத்து நாட்களாக நடைபெற்ற இந்த விழாவுக்கு அனைத்து சாதியினரிடம் இருந்தும் நன்கொடை பெற்றனர். ஆனால், விழா அழைப்பிதழில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் பெயர் மட்டும் இருந்தது" எனக் கூறுகிறார், குன்றத்தூரை சேர்ந்த வைரமுத்து. கோவில் விழா தொடர்பான அழைப்பிதழை நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு சமர்ப்பித்ததாகக் கூறும் வைரமுத்து, "குறிப்பிட்ட சாதியைத் தவிர வேறு யாரும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர்" என்கிறார். கோவில் வளாகத்தில் குறிப்பிட்ட சாதியின் பெயரில் சங்கம், திருமண மண்டபம் உள்ளதாகக் கூறும் அவர், "இது அவர்களின் மூதாதையரின் கோவிலாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்" என்றார். திருநாகேஸ்வரர் கோவில் கடந்த 1968 ஆம் ஆண்டு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறும் பாண்டியராஜன், "60 பேர் கொண்ட குழுவில் பத்து பேர் உபயதாரராக உள்ளனர். அவர்கள் 10 பேரும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழா நடத்துகின்றனர். வேறு சாதிக்கு அனுமதியில்லை" என்கிறார். "திருவிழாவுக்கு நன்கொடை வசூல் செய்தால் அதற்குரிய ரசீதுகள் கொடுக்கப்படுவதில்லை. கணக்கு வழக்குகளும் இல்லை. அனைத்தும் தங்கள் சாதிக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர்" எனவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம், "கோவிலில் வழிபாடு நடத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை" எனக் கூறும் வைரமுத்து, "கோவிலில் உபயதாரராக பட்டியல் சாதி உள்பட இதர சாதியினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். நன்கொடைகளையும் பாரபட்சம் பார்த்து தான் வாங்குகின்றனர்" எனக் கூறுகிறார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த ராஜ்பாபு முழுமையாக மறுத்தார். அறங்காவலர் குழு சொல்வது என்ன? பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE படக்குறிப்பு,திருநாகேஸ்வரர் கோவிலில் கடந்த மே 13 ஆம் தேதி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. "முறைசாரா பரம்பரை அறங்காவலர் திட்டத்தின்கீழ் இந்தக் கோவில் வருகிறது. அதன்படி அறங்காவலர் குழுவில் ஒரே சாதியினர் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அரசு உத்தரவு" எனக் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கோவிலுக்கு நியமிக்கப்படும் ஐந்து அறங்காவலர்களில் 3 பேரை அறநிலையத்துறை ஆணையரும் 2 பேரை துறையின் செயலரும் நியமிப்பார்கள்" என்கிறார். சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலை குறிப்பிட்ட சாதியினர் மட்டும் நிர்வாகம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். "எங்கள் சாதியினர் கோவிலை சிறப்பாக நிர்வாகம் செய்வதாகக் கூறி நாயக்கர், செட்டியார், வன்னியர், ஆதிதிராவிடர் என அனைவரும் சேர்ந்து கடிதம் கொடுத்தனர். அதை அடிப்படையாக வைத்து நிர்வாகம் செய்து கொள்வதற்கு அறநிலையத்துறை உத்தரவிட்டது" எனக் கூறுகிறார் ராஜ்பாபு. ஒரு சாதியினர் உரிமை கோர முடியுமா? தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சாதியினர் கோவிலை நிர்வகிக்க உரிமை கோரினால், அறநிலையத்துறை சட்டப்படி அதனை பரிசீலித்து அனுமதி வழங்கும் நடைமுறையை நிர்வாக திட்டம் (scheme) எனக் கூறுகின்றனர். இவை கிராமங்கள், ஊர்க்காரர்கள், சாதி ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், 'கோவிலுக்கு ஒரு சாதியினர் மட்டும் உரிமை கோர முடியாது' என நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொன் காளியம்மன் கோவில் வழக்கில் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூகத்தில் அமைதியின்மையை உருவாக்குவதற்கு கோவில்களை பயன்படுத்திக் கொள்வதாக தீர்ப்பில் கூறிய நீதிபதி பரத சக்ரவர்த்தி, பெரும்பாலான பொதுக் கோவில்கள் குறிப்பிட்ட சாதியினரின் கோவில்களாக முத்திரை குத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 25, 26 ஆகியவை மத உரிமைகள் மற்றும் மத நடைமுறைகளை மட்டுமே பாதுகாப்பதாகக் கூறிய நீதிபதி, 'அப்படிப் பார்த்தால் எந்த சாதியினரும் கோவிலுக்கு உரிமை கோர முடியாது' எனக் குறிப்பிட்டார். "தகவல் சொல்லாமல் வழக்கு" அதேநேரம், தங்கள் வழக்கில் உண்மைக்கு மாறான தகவல்களை மனுதாரர் வழங்கியுள்ளதாகக் கூறுகிறார் திருநாகேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த ராஜ் பாபு. "கோவிலில் உபயம் செய்வதற்கு ஏதுவாக பொறுப்பு கொடுக்குமாறு கேட்டிருந்தால் பரிசீலித்திருக்கலாம். ஆனால், எந்தவித தகவலும் சொல்லாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர்" என்கிறார். "அதேநேரம், நன்கொடை பெறுவதில் எந்தவித பிரச்னையும் இல்லை. கோவிலில் 16 உண்டியல்கள் உள்ளன. ஏராளமான கியு.ஆர் கோடு அட்டைகள் உள்ளனர். யார் வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம்" எனவும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் நடைபெற்ற பிரம்மோற்வ விழாவுக்கு உபயதாரர்கள், பக்தர்கள், ஊர் பெரியவர்கள் ஆகியோரிடம் நன்கொடை பெற்று நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். "நன்கொடை வாங்காமல் எந்த விழாவையும் நடத்த முடியாது. அனைத்துக்கும் கணக்குகள் உள்ளன. இதில் தவறு நடந்தால் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும்" என்கிறார் ராஜ்பாபு. "அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினால் அவர்களிடம் எங்கள் தரப்பு விளக்கத்தை அளிப்போம்" எனக் கூறும் ராஜ்பாபு, "கோவிலில் கருங்கல் மண்டபம் உள்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளோம். அப்போதெல்லாம் உதவி செய்வதற்கு இவர்கள் வரவில்லை" எனக் கூறினார். பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE அறநிலையத்துறை கூறுவது என்ன? கோவில் செயல் அலுவலர் சுதாகரிடம் பிபிசி தமிழ் பேசியது. "இதுவரை உபயதாரராக சேர்க்குமாறு அவர்கள் எந்த மனுவையும் கொடுக்கவில்லை. ஏதேனும் இடங்கள் காலியாக இருந்திருந்தால் மனுவை பரிசீலித்திருப்போம். ஆனால், நேரடியாக நீதிமன்றம் சென்றுவிட்டனர்" எனக் கூறினார். உபயதாரர்களையும் நன்கொடையாளர்களையும் கோவில் நிர்வாகம் வரவேற்பதாகக் கூறும் சுதாகர், "யார் வேண்டுமானாலும் நன்கொடை தரலாம். எந்த சாதி வேறுபாடுகளும் இல்லை" என்கிறார். கோவிலுக்கு குறிப்பிட்ட சாதியினர் பணம் செலவழித்து விழாக்களை நடத்துவதாகக் கூறும் சுதாகர், "உபயதாரர்களாக அவர்கள் செலவுகளை ஏற்றுக் கொள்கின்றனர். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இதனைச் செய்து வருகின்றனர்" என்கிறார். முறைசாரா பரம்பரை அறங்காவலர் திட்டத்தின்கீழ் நாகேஸ்வரம் கிராமத்தில் வசிக்கும் குறிப்பிட்ட சாதியினர் அறங்காவலராக இருக்க வேண்டும் என 1981 ஆம் ஆண்டு சென்னை அறநிலையத்துறை துணை ஆணையர் மூலமாக உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "கோவில்களுக்கு ஒரு குறிப்பிட்ட சாரார் உரிமை கோர முடியாது" என, நாமக்கல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து கோவில் செயல் அலுவலர் சுதாகரிடம் பிபிசி தமிழ் கேட்டது. "தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களை குறிப்பிட்ட சாதியினர் அறங்காவலர்களாக இருந்து நிர்வாகம் செய்கின்றனர். திருநாகேஸ்வரர் கோவில் வழக்கில் இணை ஆணையர் விசாரணை நடத்தி மனுவை பரிசீலனை செய்வார்" என்று மட்டும் பதில் அளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gk2vxx6e4o
-
கேரளாவில் சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து!
கேரளாவில் கடலில் மூழ்கிய கப்பல்; கரை ஒதுங்கும் ஆபத்தான கொள்கலன்கள் : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை 26 MAY, 2025 | 11:24 AM கேரள கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்த லைபீரியக் கொடியுடன் கூடிய எம்.எஸ்.சி எல்சா 3 (MSC ELSA 3) சரக்குக் கப்பலில் இருந்த கொள்கலன்கள் கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன. இன்று (மே 26) கொல்லம் மற்றும் ஆலப்புழாவில் நான்கு கடலோரப் பகுதிகளில் இந்த கொள்கலன்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகையப் பொருட்களிலிருந்து மக்கள் குறைந்தபட்சம் 200 மீட்டர் தூரம் விலகி இருக்குமாறு அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை கப்பலில் 640 கொள்கலன்கள் கண்டெய்னர்கள் இருந்ததாகவும் அவற்றில் 13 "அபாயகரமான சரக்குகளையும்" 12 கால்சியம் கார்பைடையும் கொண்டிருந்ததாகவும் கடலோர காவல்படை தெரிவித்திருந்தது. மேலும்கப்பலில் 84.44 மெட்ரிக் டன் டீசலும் 367.1 மெட்ரிக் டன் ஃபர்னஸ் ஆயிலும் இருந்தன. இதையடுத்து மூழ்கிய கப்பலில் இருந்து வரும் கொள்கலன்கள் பலத்த காற்று மற்றும் நீரோட்டங்களுடன் மத்திய மற்றும் தெற்கு கேரளக் கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதால் மாநில அரசு கடற்கரையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தவிர கப்பலில் இருந்து கசியும் எண்ணெய் கேரளக் கடற்கரையின் எந்தப் பகுதியையும் அடையலாம் என்பதால் அது குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் கசிந்த எண்ணெய்யின் மாசு வெளியான 36-48 மணி நேரத்திற்குள் ஆலப்புழா அம்பலப்புழா ஆற்றுப்புழா மற்றும் கருநாகப்பள்ளி ஆகிய கடலோரப் பகுதிகளை அடையலாம் என்று கூறியிருந்தது. "இந்தக் கடலோரப் பகுதிகள் மாசுபடும் அபாயத்தில் உள்ளன. சாத்தியமான சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்றும் அது குறிப்பிட்டது. கரைக்கு ஒதுங்கிய கொள்கலன்களுக்கு அருகில் செல்பவர்களுக்கு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. சில கொள்கலன்களில் அபாயகரமான பொருட்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதால் மக்கள் அவற்றில் இருந்து குறைந்தபட்சம் 200 மீட்டர் தூரம் விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதனுள் என்ன இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த சுங்கத்துறை அவற்றை ஆய்வு செய்யும். தெற்கு மற்றும் மத்திய கேரள மாவட்டங்களில் தலா இரண்டு துரித குழுக்களையும் ( வடக்கு மாவட்டங்களில் தலா ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருக்க தொழிற்சாலைகள் மற்றும் கொதிகலன்கள் துறைக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் எண்ணெய் கசிவு கரைக்கு வரும் பட்சத்தில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெற்கு மற்றும் மத்திய கடலோர மாவட்டங்களில் தலா இரண்டு துரித குழுக்களையும் வடக்கு மாவட்டங்களில் தலா ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215704
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
INNINGS BREAK 69th Match (N), Jaipur, May 26, 2025, Indian Premier League PBKS chose to field. Mumbai Indians (20 ov) 184/7 Current RR: 9.20 • Last 5 ov (RR): 53/3 (10.60) Punjab Kings Win Probability: MI 48.00% • PBKS 52.00%
-
NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும் — கருணாகரன் —
பெரும் நம்பிக்கை சிறுத்து சிறுத்து தேய்பிறையாக நிற்கிறது, அமாவாசையா பௌர்ணமியா வரும் எனத்தெரியவில்லை! உண்மை. இன்னும் ஓராண்டில் தெரியவரும்.
-
ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்ற கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபதாரம்
அண்ணை, உண்மையில் உற்பத்தியாளருக்கே தண்டனை வழங்கப்படவேண்டும். அயோடின் பற்றாக்குறையாலும் வருத்தங்கள் வருமாம், கூடினாலும் வருத்தங்கள் வருமாம். அயோடின் கலந்த உப்பு (Iodised salt) என்பது உணவில் சேர்க்கப்படும் உப்புடன் தனிம அயோடினைக் கொண்டுள்ள பல்வேறு உப்புகளை மிகச்சிறிய அளவில் கொண்டுள்ள உப்பாகும். அயோடின் உட்கொள்வது அயோடின் குறைபாட்டைத் தடுக்கிறது. உலகளவில், அயோடின் குறைபாடு சுமார் இரண்டு பில்லியன் மக்களை பாதிக்கிறது இந்தக் குறைபாடு அறிவு சார் மற்றும் வளர்ச்சி குறைபாடுகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. [1] இக்குறைபாடு தைராய்டு சுரப்பி பிரச்சினைகளையும் "ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதிக்குரிய முன்கழுத்துக் கழலை நோய்" உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. பல நாடுகளில், அயோடின் குறைபாடு என்பது ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சினையாகும், இப்பிரச்சனையை சோடியம் குளோரைடு உப்பில் சிறிய அளவு அயோடினை வேண்டுமென்றே சேர்ப்பதன் மூலம் எளிதாக தீர்க்க முடியும். அயோடின் என்பது ஒரு நுண்ணூட்டச்சத்து மற்றும் உணவுத் தாது ஆகும், இது இயற்கையாகவே சில பகுதிகளில், குறிப்பாக கடற்கரைகளுக்கு அருகில் உள்ள உணவுப் பொருள்களில் காணப்படுகிறது. ஆனால், பொதுவாக பூமியின் மேலோட்டடில் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. ஏனெனில், அயோடின் கனமான தனிமமாகும். வேதியியல் தனிமங்களின் எளிதில் கிடைக்கும் தன்மையானது அணுநிறை அதிகரிக்க, அதிகரிக்க குறைகிறது. மண்ணில் இயற்கையான அயோடின் அளவு குறைவாகவும், காய்கறிகளால் அயோடின் எடுக்கப்படாமலும் இருக்கும்போது, உப்பில் சேர்க்கப்படும் அயோடின் மனிதர்களுக்குத் தேவையான சிறிய ஆனால் அத்தியாவசியமான அயோடினை வழங்குகிறது. அயோடினுடன் கூடிய சாதாரண சமையல் உப்பின் திறந்து வைக்கப்பட்டால், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பத நிலைகளில் அதன் அயோடின் உள்ளடக்கத்தை அது ஆக்சிஜனேற்றம் மற்றும் அயோடின் பதங்கமாதல் செயல்முறையின் மூலம் விரைவாக இழக்கக்கூடும்.[2] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 உப்பில் இத்தனை வகைகளா? உடல் ஆரோக்கியத்திற்கு எது பெஸ்ட் சுருக்கம் உணவில் சுவையை கூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் உப்பில் பல வகைகள் உள்ளன. இவற்றில் எந்த வகையான உப்பை பயன்படுத்த வேண்டும்? எதை பயன்படுத்தினால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். எல்லா வகை உப்புகளின் அடிப்படை மூலக்கூறு சோடியம் குளோரைடு (NaCl) தான். ஆனால், இந்த மூலக்கூறோடு கலந்திருக்கும் கனிமங்கள் மற்றும் உற்பத்தி முறைகளைப் பொறுத்து உப்பின் சுவை, நிறம் மற்றும் ஆரோக்கியப் பண்புகள் வேறுபடுகின்றன. கருப்பு உப்பு : பெரும்பாலும் இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இது எரிமலைப் பாறைகளுடன் சேர்த்து சூடுபடுத்தப்படுவதால் கந்தகத்தின் சுவையை பெறுகிறது. இதன் தனித்துவமான சுவை இந்திய உணவு வகைகளில், குறிப்பாக சாட் மசாலா, ரைதா மற்றும் சில சாலட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது செரிமானத்திற்கு நல்லது என்று நம்பப்படுகிறது. இது கருப்பு நிறத்தில் இருந்தாலும், தூளாக்கும்போது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். கடல் உப்பு : கடல் நீரிலிருந்து ஆவியாதல் மூலம் பெறப்படுகிறது. கடல் உப்பு அதன் தோற்றுவாயைப் பொறுத்து பல்வேறு கனிமங்களைக் கொண்டிருக்கலாம். இதனால் அதன் சுவையில் நுட்பமான வேறுபாடுகள் இருக்கலாம். சில கடல் உப்புகள் பெரிய படிகங்களாக இருக்கும். சமையலில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. பெரிய படிக உப்புக்கள் உணவின் மீது தூவி அலங்கரிக்கவும், கூடுதல் சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இளஞ்சிவப்பு உப்பு : இதுவும் இமயமலைப் பகுதிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகை கல் உப்பு. இதில் இரும்பு ஆக்சைடு போன்ற தாதுக்கள் இருப்பதால் இது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இது சாதாரண உப்பை விட அதிக கனிமங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, இருப்பினும் அவற்றின் அளவு மிகக் குறைவு. சமையலிலும், ஸ்பா சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் கவர்ச்சியான நிறம் காரணமாக உணவு அலங்காரத்திற்கும் பயன்படுகிறது. அயோடைஸ் உப்பு : டேபிள் சால்ட் எனப்படும் இந்த உப்பில், சோடியம் அல்லது பொட்டாசியம் அயோடைடு போன்ற சேர்மங்கள் சேர்க்கப்படுவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. அயோடின் நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒரு கனிமம். இது தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது, இது மூளை வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு அவசியம். அயோடின் குறைபாடு தைராய்டு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எது சிறந்தது? ஒவ்வொரு வகை உப்பும் அதன் தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது. "சிறந்தது" என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொருவரின் தேவை மற்றும் விருப்பத்தைப் பொறுத்து இது மாறுபடும்: சுவை: கருப்பு உப்பு தனித்துவமான கந்தகச் சுவையைக் கொடுக்கும். கடல் உப்பு அதன் கனிமச் சத்துக்கள் காரணமாக நுட்பமான சுவை வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். இளஞ்சிவப்பு உப்பு லேசான சுவையைக் கொண்டிருக்கும். ஆரோக்கியம்: அயோடைஸ் உப்பு அயோடின் குறைபாட்டைத் தடுக்க உதவுகிறது, மற்ற உப்புகளில் உள்ள கனிமங்களின் அளவு மிகக் குறைவு, அவை குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளை அளிக்குமா என்பது கேள்விக்குறியே. அதிகப்படியான உப்பு உட்கொள்வது அனைத்து வகை உப்புகளுக்கும் பொதுவானது மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பயன்பாடு: சில உணவுகளுக்கு குறிப்பிட்ட வகை உப்பு சிறந்தது. உதாரணமாக, சாட் உணவுகளுக்கு கருப்பு உப்பு, அலங்காரத்திற்கு பெரிய படிக கடல் உப்பு அல்லது இளஞ்சிவப்பு உப்பு பொருத்தமாக இருக்கும். https://tamil.asianetnews.com/health-food/types-of-salt-which-one-is-good-for-the-body-svj332
-
கனடா தமிழினப்படுகொலை நினைவுத்தூபியும் ஈழத்தமிழர்களின் அரசியல் தந்திரோபாய தேவைப்பாடும்!
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் பேணுவதில் இனப்படுகொலை சார்ந்த வாதப்பிரதிவாதங்கள் முதன்மையாக அமைந்துள்ளது. அந்த அடிப்படையில் 2009 களுக்கு பின்னர் மே மாதம் வடக்கு – கிழக்கு தாயக நிலப்பரப்பில் மாத்திரமன்றி, ஈழத் தமிழர்கள் பரந்து வாழும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழினப் படுகொலையை மையப்படுத்திய நிகழ்வுகளும், நினைவேந்தல்களும், நினைவு உரைகளும் நிலையான தன்மையை பெற்றுள்ளது. 2025 ஆம் ஆண்டு 16 வது ஆண்டு தமிழினப்படுகொலை நினைவேந்தல்கள் ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக அண்மைய ஆண்டுகளில் இறுதி யுத்தத்தின் துயரை நினைவூட்டும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு’ தமிழினப் படுகொலை நினைவேந்தலின் முக்கிய நிகழ்வாக நிலைபெற்று விட்டது. இவ்வாண்டு கனடாவில் தமிழினப் படுகொலைக்கான நினைவுத் தூபி அந்நாட்டு அரச அங்கீகாரத்துடன் நிறுவப்பட்டுள்ளமை ஈழத்தமிழர்களிடையே புத்தெழுச்சியை கொடுத்துள்ளது. இப்பின்னணியிலேயே இக்கட்டுரை கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழினப் படுகொலை நினைவுத்தூபியும், அதனை மையப்படுத்தி எழுந்துள்ள உரையாடல்களினதும் அரசியல் வகிபாகத்தை அடையாளங் காண்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. தாயகத்தில் தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல்கள் அரச இயந்திரத்தின் நெருக்கடி பின்னணிகளுக்குள்ளேயே, மக்களின் தன்னார்வ எழுச்சிகளால் வருடா வருடம் நினைவு கூரப்பட்டு வருகின்றது. எனினும் தாயகத்தில் நினைவேந்தல்கள் நிலையான வடிவத்தை பெற முடியவில்லை என்ற குறைபாடு தொடர்ச்சியான துயராகவே காணப்படுகின்றது. இறுதி யுத்தத்தை தழுவி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மே-18 அன்று தமிழினப் படுகொலைக்கான பொது நினைவேந்தல் கடந்த ஒரு தசாப்தங்களாக நடைபெற்று வருகின்றது. எனினும், முள்ளிவாய்க்காலின் நினைவு முற்றக்காணி தொடர்பிலும் இடையிடையே சில சச்சரவான வாதங்களும் அரச ஆளுகைக்கான முனைப்புகளும் இடம்பெற்று வருகின்றது. அவ்வாறே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தினால் நிறுவப்பட்ட தமிழினப் படுகொலை நினைவுத் தூபியும் 2021 ஆம் ஆண்டு இராணுவ நெருக்கீட்டில் உடைக்கப்பட்டது. எனினும் மாணவர்கள், மக்களின் தன்னார்வ எழுச்சி எதிர்ப்பு போராட்டம் மற்றும் சர்வதேசத்தின் அழுத்தத்தினால் மீள் நிர்மாணிப்புக்கு இலங்கை அரசாங்கம் மறுக்க இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டது. எனினும் அந்நிர்மாணமும் திட்டமிடப்பட்ட முழுமையான வடிவத்தை பெறவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே தாயகத்தில் தமிழினப் படுகொலைக்கான நினைவுத்தூபி வெறுமையாக காணப்படினும், தாயகத்துக்கு வெளியே ஈழத்தமிழர் மீதான இலங்கை சிங்கள-பௌத்த பேரினவாத கட்டமைப்பினால் படுகொலை செய்யப்பட்ட வரலாறுகள் நினைவுத் தூபிகளாக பதிக்கப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு தாய்த் தமிழகத்தில் தமிழினப்படுகொலைக்கான நினைவாலயம் உருவாக்கப்பட்டது. இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நவம்பர்-08, 2013 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. மேற்கு நாடுகளில் இடம்பெறும் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் பலஸ்தீனியர்களின் துயர் வரலாறு மேற்கில் விதைக்கப்பட்டதன் விளைவானதாகும். அத்தகைய சர்வதேச ஆதரவை திரட்டுவதற்கான உத்தியை ஈழத்தமிழர்களும் வாய்ப்புக்களை பயன்படுத்தி கையாள வேண்டும். இந்த நினைவு முற்றத்தில் போரில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை 55 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்ட சுவரில் தனித்தனி கற்களால் காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த நினைவு முற்றத்தில் மாவீரர் மண்டபம், முத்தமிழ் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் தலைவர்கள் முதல் தமிழீழ விடுதலைப் போரின் போது தன் உயிரை ஈகையாக தந்த தமிழீழ விடுதலைப் புலிகள் படங்கள் போன்ற 300க்கும் மேற்பட்டோர் படங்கள் வைக்கப்பட்டது. தற்போது கனடாவின் பிராம்ப்டனில் உள்ள சிங்குகூசி பூங்காவில் கனேடியத் தமிழர்களின் தேசிய பேரவை, பிரம்டன் தமிழர் அமைப்பு மற்றும் பிரம்டன் தமிழ் சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நகர மேயரின் ஈடுபாட்டுடன் தமிழ் இனப்படுகொலைக்கான நினைவுத் தூபி மே-10, 2025 அன்று திறக்கப்பட்டது. குறித்த நினைவுத் தூபிக்கான அடிக்கல் ஆகஸ்ட் 14, 2024 அன்று நாட்டப்பட்டது. அன்றிலிருந்து இராஜதந்திர உறவின் அடிப்படையிலும், நீதித்துறையினூடாகவும் இத்தூபி நிர்மாண நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. எவையுமே சாத்தியப்படவில்லை. இதற்கான உயர்ந்தபட்ச எதிர்வினையாக பிரம்டன் நகர் மேயர் பட்ரிக் பிரவுண் நினைவுத்தூபி திறப்பு விழாவில், “இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்று கூறுபவர்களுக்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை. கொழும்புக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இது ஈழத்தமிழர்களுக்கு உயர்வான உற்சாகத்தை அளித்துள்ளது. ஈழத்தமிழர்களும் சமூக வலைத்தளங்களில் பிரம்டன் மேயரை நாயகனாய் கொண்டாடுகின்றார்கள். கனடாவில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மற்றும் தென்னிலங்கை இனவாதிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்கள். இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகரை அழைத்து தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தியிருந்தார். அது தொடர்பான படங்களில் இலங்கையின் உடல்மொழி கடுமையானதாக வெளிப்பட்டுள்ளது. அதேவேளை, போர்க்கால ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் வாரிசான நாமல் ராஜபக்சவும் தமது போர் வெற்றி வாக்குகளை பேணும் வகையில் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். “தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என்று அழைக்கப்படுவது கனேடிய அரசாங்கத்தின் அரசியல் உந்துதல் நடவடிக்கையாகத் தோன்றுகிறது. அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக பிரிவினையைத் தூண்டிவிட்டன.” என்றவாறு நாமல் ராஜக்ச தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். எனினும் கனடா அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர அழுத்தங்களையோ அல்லது இலங்கை எதிர்க்கட்சிகளின் இனவாத பிரசாரங்களையோ பொருட்படுத்துவதாக அமையவில்லை. மாறாக தமது செயற்பாட்டின் நியாயப்பாட்டையும் இலங்கையின் இனவாத அரசியலின் முகத்தை தோலுரிப்பதாகவுமே பதிலளிக்கப்பட்டுள்ளது. பிரம்டன் நகர் மேயர் பட்ரிக் பிரவுண் தனது எக்ஸ் தளத்தில் நாமல் ராஜபக்சவின் பதிவை பகிர்ந்து, “தமிழ் இனப்படுகொலை நினைவிடத்திற்கு ராஜபக்சவின் எதிர்ப்பானது, இந்தக் குடும்பத்தின் கையால் இழந்த அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களை உணர்ந்து நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞையாகும்” என்றவாறு பதிலளித்துள்ளார். தாயகத்தில் ஈழத்தமிழர்களின் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், அதற்கே உரிய இயல்பான தேர்தல் அரசியல் நலன்களுக்குள் இயங்குவதாகவே அமைகின்றது. மாறாக விடுதலைக்கு போராடும் தேசிய இனத்தின் பிரதிநிதிகளுக்குரிய இயல்பை வெளிப்படுத்த தவறுகின்றார்கள். கனடாவில் தமிழினப் படுகொலைக்கான நினைவுத்தூபி நிறுவப்பட்டதும், அது சார்ந்து எழும் உரையாடல்களும் ஈழத்தமிழர்களிடையே எழுச்சிமிகு உணர்வை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியை எதிர்கொண்டவர்களை உணர்ச்சிகள் வெகுவாக ஆட்கொண்டு விடுகின்றது. எனினும் இதனை வெறுமனவே உணர்ச்சிக்குட்பட்டதாக கடந்து விடமுடியாது. இது ஆழமான அரசியல் நடைமுறைக்கான உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. ஆதலாலேயே இலங்கை அரசாங்கம் 2024 இல் அடிக்கல் நாட்டப்பட்டதிலிருந்து அதனை நிறுத்துவதற்கு கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தது. தற்போதும் தனது விசனத்தை கடுமையான உடல்மொழிகள் உள்ளடங்கலாக வெளிப்படுத்தியுள்ளது. இதனை நுணுக்கமாக விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. முதலாவது, கனடா அரசியல் தரப்பினரது செயற்பாடுகளிலிருந்தும் உரையாடல்களிலிருந்துமான படிப்பினையை ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் தாயக மக்களும் புரிந்துகொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஈழத்தமிழர்களின் வாக்குகள் மூலம் அரசியல் அடையாளத்தை பெற்றிருந்த எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள், ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டதை இனப்படுகொலையாக குறிப்பிட முடியாதென்றவாறு கருத்துரைத்துள்ளனர். எனினும் கனடாவின் நகரமேயர் தமிழினப் படுகொலைக்கான நினைவுத்தூபி உருவாக்கியுள்ளதுடன், ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையை மறுப்பவர்கள் கனடாவிற்கு வரமுடியாது என்ற எச்சரிக்கையையும் வழங்கியுள்ளார். இது புலம்பெயர் தமிழர்களின் வாக்குப்பலத்தாலேயே சாத்தியமாகியுள்ளது. தாயத்தில் மக்கள் இத்தகைய வாக்கு பலத்தை சரியாக பயன்படுத்த தவறுகின்றார்களோ என்ற சந்தேகங்களை உருவாக்குகின்றது. கடந்த பொதுத்தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் நேரடியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதுடன், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுமந்திரனின் வட்டாரத்தில் நிறுத்தப்பட்ட தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். எனினும் தொடர்ச்சியாக சுமந்திரன் அடுத்த மாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் கனவை விதைத்து வருகின்றார். இது மக்கள் சுமந்திரனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் தமது வாக்கு பலத்தால் சரியான போதனையை வழங்க தவறியுள்ளார்கள் என்பதையே அடையாளப்படுத்துகின்றது. இரண்டாவது, சர்வதேச தளத்தில் இலங்கை அரசாங்கங்களால் ஈழத்தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை ஏற்றுக்கொள்வதனை வெறுமனவே நிகழ்வாக கடந்திட முடியாது. நீண்டதொரு தந்திரோபாய நகர்வுக்கான தளமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கனடா பூகோள அரசியலில் பிரதான சக்தியாக அமைகின்றது. கனடா இலங்கை அரசாங்கங்கள் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்திய இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டத்தை அங்கீகரித்துள்ளமையானது, ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தில் ஓர் மைல்கல்லாகும். கனடாவின் உள்ளூர் அதிகார மட்டம் முதல் கனடா மத்திய அரசு வரை இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளமையை உறுதி செய்துள்ளது. இதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதே இன்றைய தேவையாகும். குறிப்பாக கனடாவில் மே 12 – 18, தமிழர் இனப்படுகொலை கல்வி வாரமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்னரே ஒன்ராறியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டம் சட்டமாக்கப்பட்டது. தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை அங்கீகரிப்பதன் மூலம், நடந்து கொண்டிருக்கும் தமிழ் இனப்படுகொலையின் நீடித்த படிப்பினைகளைப் பற்றி சிந்திக்கவும், அதைப் பற்றி பொதுமக்களுக்கு கற்பிக்கவும் இது ஒரு வாய்ப்பாகும். இதனை வினைத்திறனாக கையாள்வதனூடாக வாக்குப்பலத்தினூடாக கிடைக்கப்பெற்ற அரசியல் தளத்துடன் ஏனைய மக்களின் ஒத்துழைப்புகளையும் பெறக்கூடியதாக அமையும். தமிழ்ச் சமூகமும் இளைஞர்களும் ஏனைய மக்களோடு தமிழ் இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்வதோடு, தமிழ் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் தலைமுறைகளுக்கு இடையேயான அதிர்ச்சியை ஏனைய சமூகங்களோடு பகிருவது அவசியமானதாகும். மேற்கு நாடுகளில் இடம்பெறும் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் பலஸ்தீனியர்களின் துயர் வரலாறு மேற்கில் விதைக்கப்பட்டதன் விளைவானதாகும். அத்தகைய சர்வதேச ஆதரவை திரட்டுவதற்கான உத்தியை ஈழத்தமிழர்களும் வாய்ப்புக்களை பயன்படுத்தி கையாள வேண்டும். மூன்றாவது, ஈழத்தமிழர்களின் அரசியலானது 2009 களுக்கு பின்னர் அடிப்படையில் இனப்படுகொலைக்கான நீதியைக் கோருவதனை மையப்படுத்தியே காணப்படுகின்றது. அதுவே ஈழத்தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான தந்திரோபாய செயற்பாடாகும். எனினும் தாயகத்தில் ஈழத்தமிழர்களின் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், அதற்கே உரிய இயல்பான தேர்தல் அரசியல் நலன்களுக்குள் இயங்குவதாகவே அமைகின்றது. மாறாக விடுதலைக்கு போராடும் தேசிய இனத்தின் பிரதிநிதிகளுக்குரிய இயல்பை வெளிப்படுத்த தவறுகின்றார்கள். கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி, இனப்படுகொலை என்ற சொல்லாடலுடன் அரசொன்றின் ஆதரவுடன் நிறுவப்பட்ட முதலாவது நினைவுத் தூபி ஆகும். இதனை ஈழத்தமிழர்கள் கொண்டாடுவதற்கு சமாந்தரமாக ஈழத்தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அரசியல் ரீதியாக எதிர்வினையாற்றி இருக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. தென்னிலங்கை அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் இனவாதிகள் என கூட்டாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றார்கள். இராஜதந்திர ரீதியான ஆட்சேபனைகளையும் இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தனியன்களாக தமது சமூக வலைத்தளங்களில் பிரம்டன் நகர் மேயர் பட்ரிக் பிரவுணை நாயகனாக கொண்டாடுகின்ற போதிலும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் சார்பாக கூட்டு நன்றியுணர்வை வெளிப்படுத்த தவறியுள்ளார்கள். உயர்ந்தபட்சம் தமிழ் பிரதிநிதிகளின் பிரசன்னம் அந்நிகழ்வில் இருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு அறிக்கையினூடாகவேனும் கனேடிய அரசாங்கத்திற்கும் செயற்பாட்டாளர்களுக்கும் கூட்டு நன்றியினை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். எனினும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அதனை செய்ய தவறியுள்ளார்கள். மாறாக உள்ளூ ராட்சி சபை தேர்தல் முடிவுகளின் பின்னரான ஆசன இழுபறிக்குள் ஓய்வின்றி உள்ளார்கள். எனவே கனடாவில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபியும் கனடா அரசாங்கத்தின் ஆதரவும், ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டத்தை உந்திவிடும் ஓர் ஊக்கக்காரணியமாக அமைகின்றது. இதனைப் பற்றிக்கொண்டு சர்வதேச அளவில் ஏனைய சமூகங்களின் ஈடுபாட்டுடனும் ஒத்துழைப்புடனும் இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டத்தை சர்வதேச போராட்டமாக மாற்றுவது ஈழத்தமிழர்களின் அரசியல் வியூகத்திலேயே தங்கியுள்ளது. புலம்பெயர் தளம் தமது வாக்குப்பலத்தினூடாக வெகுவாக அரசியல் மட்டத்தில் இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டத்தை ஒருங்கு சேர்த்துள்ளது. கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழினப் படுகொலை நினைவுத்தூபி மற்றும் சமகாலத்தில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் அதனையே உறுதி செய்கின்றது. எனினும் இம்முன்னேற்றம் அரசியல் மட்டத்தை கடந்து சமூக மட்டத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதிக் கோரிக்கையை ஈழத்தமிழர்களுக்கு சமாந்தரமாக ஏனைய சமூகங்களும் ஒன்றிணைந்து கோரும் சூழலை உருவாக்க வேண்டும். இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டங்கள் உணர்வெழுச்சிகளுக்குள் சுருங்காது, தந்திரோபாயமாக நகர்த்தப்படுகையிலேயே நிலையான தீர்வைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமையும். https://thinakkural.lk/article/318257
-
ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்ற கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபதாரம்
26 MAY, 2025 | 06:54 PM ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபதாரம் செலுத்துமாறு திங்கட்கிழமை (26) ஏறாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உப்பினை பொது சுகாதர பரிசோதகர்கள் கைப்பற்றி பகுப்பாய்வுக்கு அனுப்பியதில் அதிகளவான அயடீன் கலந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் ஏறாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ததனர். இந்நிலையில், கடை உரிமையாளருக்கு அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் உப்பு தயாரிக்கப்படும் இடத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொது சுகாதார பரிசோகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215743
-
சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் மருத்துவ முகாமும் மர நடுகை வேலைத்திட்டமும்
26 MAY, 2025 | 04:05 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் மருத்துவ முகாமும் மர நடுகை வேலைத்திட்டமும் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. கல்லூரி பழைய மாணவரும் வைத்தியருமான சசிகரனின் ஒழுங்கமைப்பில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் பங்கேற்புடன் குறித்த நிகள்வு நடைபெற்றது. இதன் போது பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொற்றா நோய்கள் மற்றும் வீதி விபத்து தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது. தொற்றா நோய்கள் தொடர்பான கருத்தமர்வை வைத்தியர் சிவரஞ்சனியும், வீதி விபத்துகள் தொடர்பான கருத்தமர்வை குழந்தை சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் சயந்தனும் மேற்கொண்டனர். https://www.virakesari.lk/article/215733
-
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மலையக மாணவர்களுக்கு நிதி உதவி
இந்த வருடம் அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மலையக மாணவர்களில் 60 பேருக்கு நம்பிக்கை கல்வி நிதியம் (Good Hope Education Fund) மூலம் நிதி உதவி வழங்கப்படவுள்ளதென நிதியத்தின் செயலாளர் பேராசிரியர் த.தனராஜ் தெரிவித்தார். இந்த நிதி வழங்கும் நிகழ்வு ஜூன் முதலாம் திகதி அட்டன் வெப்ஸ்டர் சர்வதேச பாடசாலை மண்டபத்தில் (Webster International School) நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் திரு மு. நித்தியானந்தன் கலந்துகொள்கிறார். 1960-களில் பட்டயக் கணக்காளர்களான பி. கந்தசாமி, எஸ். சொக்கலிங்கம் மற்றும் கே. வீரையா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியம், 1983 ஆம் ஆண்டு செயலிழந்து பின்னர் 2010 ஆம் ஆண்டில் இது மீண்டும் செயற்பாட்டுக்கு வந்தது. இதுவரை சுமார் 500 பேர் இந்த நிதியுதவியின் மூலம் பல்கலைக்கழக கல்விக்கான நிதி உதவியைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/318384