Everything posted by ஏராளன்
-
மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் உடன் நடத்தாது; சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு
25 MAY, 2025 | 12:26 PM (நா.தனுஜா) அண்மையில் நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களின் அடைந்த பின்னடைவை அடுத்து, வெகுவிரைவில் மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் விரும்பாது எனவும், ஆகவே அதனைத் தொடர்ந்து இழுத்தடிப்புச்செய்து காலதாமதப்படுத்துவதற்கே முற்படும் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் தனிநபர் சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை (22) வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனை விரைவாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் மாகாணசபைகள், உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன வெள்ளிக்கிழமை (23) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட விக்னேஸ்வரன், 2018 ஆம் ஆண்டிலிருந்து மாகாணசபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாகப் பிற்போடப்பட்டுவரும் நிலையில், இனியும் தாமதமின்றி அத்தேர்தலை நடத்தவேண்டும் என்றே தான் தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதாகத் தெரிவித்தார். இருப்பினும் கடந்த பாராளுமன்றத்தேர்தலுடன் ஒப்பிடுகையில், அண்மையில் நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களின் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பின்னடைவைச் சந்தித்திருப்பதனால், மாகாணசபைத்தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பதற்கே அரசாங்கம் முற்படும் எனத் தான் கருதுவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். மாகாணசபைத்தேர்தலை நடாத்தி, அதனூடாக சில சபைகள் ஏனைய கட்சிகள்வசம் செல்வதை அரசாங்கம் ஒருபோதும் விரும்பாது. ஆகவே இவ்வருடமும் மாகாணசபைத்தேர்தலை நடத்தாமல் காலந்தாழ்த்துவதற்கே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படும் என அவர் விசனம் வெளியிட்டார். https://www.virakesari.lk/article/215617
-
யாழ். பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி
Published By: DIGITAL DESK 2 25 MAY, 2025 | 12:27 PM யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது. இந்த நடைபவணியானது, திருநெல்வேலியில் அமைந்துள்ள பட்டப்பின் படிப்புகள் பீட முன்றிலில் ஆரம்பமாகி யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் பிறவுன் வீதி மருத்துவ பீடம் ஊடாக மீண்டும் பல்கலைக்கழகத்தை அடைந்தது. நிகழ்வில் முக்கிய இடங்களில் மரம் நடுகையும் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா பட்டப்பின் படிப்புகள் பீட பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கண்ணதாசன் மற்றும் பீடாதிபதிகள் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் அலுவலர்கள் பழைய மாணவர்கள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/215616
-
அம்மாவின் ஆசையை நிறைவேற்ற பெலாரஸுக்குச் சென்ற தம்பிக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை : அண்ணனின் உருக்கமான வேண்டுகோள்!
25 MAY, 2025 | 03:36 PM எனது தம்பி வெளிநாடு செல்ல வேண்டும் என்பது எமது அம்மாவின் ஆசை. அம்மாவின் ஆசையை நிறைவேற்றி, அம்மாவின் ஆத்மா ஈடேற வேண்டும் என்பதற்காகவும், எமது வீட்டுச் சுமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுதான் எனது தம்பி தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார். பெலாரஸ் நாட்டிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்ற எனது தம்பியான விநாயகமூர்த்தி பகிரதனுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை என அவரது சகோதரன் விநாயகமூர்த்தி சசிகரன் தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எனது தம்பி விநாயகமூர்த்தி பகிரதன் என்பவர் எனது வீட்டில் இருந்து கடந்த 2025.01.07 ஆம் திகதி பெலாரஸ் எனும் நாட்டுக்கு தொழில்வாய்ப்புக்காகச் சென்றார். சட்டரீதியாகவே தொழில் வாய்ப்புக்காகத்தான் அவர் பயணமானார். அவர் திருகோணமலையைச் சேர்ந்த ஓர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஊடாகவே சென்றிருந்தார். எனது அம்மா மரணித்து ஒரு வருடமான காலத்தின் பின்னர் மிகுந்த மன வேதனைக்கு உட்பட்டு மிகவும் சிரமத்தின் மத்தியிலே தான் எனது தம்பி பெலாரஸ் நாட்டிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார். அவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்பது எமது அம்மாவின் ஆசை. அம்மாவின் ஆசையை நிறைவேற்றி, அம்மாவின் ஆத்மா ஈடேற வேண்டும் என்பதற்காகவும், எமது வீட்டுச் சுமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுதான் அவர் தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார். எனது தம்பி பெலாரஸ் நாட்டிற்குச் சென்று பின்னர் அவர் அங்கு மரணமடைந்துள்ளதாக தெரிவித்தும், அவர் தொடர்பில் இதுவரையில் எதுவித தொடர்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் அங்கு சென்று மூன்று மாதமான நிலையில் கடந்த 2025.04.06 ஆம் திகதி எமக்கு ஓர் திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றது. அவர் அங்கு தவறான முடிவெடுத்து உயிரிழந்தாக எனக்கு தகவல் கிடைத்திருந்தது. இச்செய்தி கேள்விப்பட்ட உடனேயே நாம் செய்வதறியாது திகைத்துப் போனோம். இது உண்மையானதா பொய்யானதா என நாம் தெரியாது இருக்கின்றோம். அந்த அதிர்ச்சியில் இருந்து எம்மால் இன்றும் மீள முடியாமல் இருக்கின்றது. எது நடந்தாலும் அதற்குரிய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நான் எனது தம்பி வெளிநாடு சென்ற ஆவணங்கள் அனைத்தையும் பிரதி செய்து கொண்டு பிரதேச செயலகத்திலே கடமையிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு உத்தியோகத்தரிடம் வழங்கியிருந்தேன். இவ்வாறு எனது சகோதரன் மரணம் அடைந்திருந்தால் அவருடைய சடலத்தை எனக்கு கொண்டு வந்து தருமாறு உரிய நாட்டிடம் தெரிவிக்குமாறு நான் அந்த உத்தியோதரிடம் தெரிவித்திருந்தேன். பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் அவர்கள் வெளிநாட்டு தூதரகத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்கள். இதற்கு மேலாக எனது தம்பிக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக நான் பல அரசியல்வாதிகளிடமும் தெரிவித்து இருந்தேன். கடந்த 2025.04.06 ஆம் திகதி அவர் உயிரிழந்ததாக அறிந்தோம். இன்று மே 25ஆம் திகதி ஆகிறது இரு மாதங்கள் ஆகின்றன. இதுவரைக்கும் எனது தம்பியின் தகவல்கள் எதுவும் தெரியாது. தம்பி பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பிய முகவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டு விட்டதாக எனக்கு குறுஞ் செய்தி ஒன்றை மாத்திரம் அனுப்பி உள்ளார். மீண்டும் அவருடன் தொடர்பை ஏற்படுத்த முயன்ற போது அவர் எமது அழைப்புக்கு பதில் அளிக்கின்றார் இல்லை. இவ்வாறான நிலைக்கு மத்தியிலும் மிகுந்த வேதனைக்கு மத்தியிலும் எமது வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கின்றது. மேலும் பெலாரஸ் நாட்டுடன் தொடர்புடைய ஏனைய நாடுகளின் தூதரகங்களும், இதனை கருத்தில் கொண்டு எனது சகோதரனுக்கு என்ன நடைபெற்றது என்பதை அறிந்து உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். எனது சகோதரன் உயிரோடு இருக்கிறாரா? உண்மையிலேயே மரணித்து விட்டாரா? அவர் மரணித்தால் அவருடைய உடலை எங்களது வீட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு உதவி செய்யுமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/215642
-
சோவியத் வலையில் விழுந்த சிஐஏ உளவாளி அமெரிக்காவையே கதிகலங்கச் செய்தது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆல்ட்ரிச் அமெஸ் கட்டுரை தகவல் எழுதியவர், மைல்ஸ் பர்க் பதவி, 25 மே 2025, 02:43 GMT சோவியத் ஒன்றியத்துக்கு அமெரிக்காவின் உளவுத் தகவல்களை விற்று 100-க்கும் மேற்பட்ட ரகசிய திட்டங்களை முறியடிக்க உதவி 10 மேற்கு உளவாளிகளின் இறப்புக்கும் காரணமாக இருந்த குற்றத்திற்காக ஆல்ட்ரிச் சிறையில் உள்ளார். 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வருடம் பிப்ரவரியில் அமெஸால் துரோகம் இழைக்கப்பட்ட ஒரு உளவாளியிடம் பிபிசி பேசியது. 1985-ம் ஆண்டு அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவுக்கு வேலை பார்த்து வந்த சோவியத் ஏஜெண்ட்டுகள் ஒவ்வொருவராக காணாமல் போயினர். இந்த மேற்கத்திய உளவாளிகள் எல்லாம் சோவியத் உளவு அமைப்பான கேஜிபியால் பிடிக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டனர். ஒலெக் கோர்டிவ்ஸ்கி, அப்படிப்பட்ட ஒரு டபுள் ஏஜெண்ட் (ஒரு நாட்டின் உளவுத்துறையில் இருந்துகொண்டு வேறொரு நாட்டிற்கு வேலை பார்ப்பவர்கள்). லண்டனில் கேஜிபி நிலைய தலைவராக இருந்து கொண்டு பிரிட்டனின் உளவு அமைப்பான எம்.ஐ6-ற்கு பல வருடங்களாக ரகசியமாக வேலை பார்த்து வந்தார். ஆனால், ஒரு நாள் மாஸ்கோவில் மருந்தளிக்கப்பட்டு, ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு கிட்டத்தட்ட கொலை செய்யப்படும் நிலையில் இருந்தார். எம்.ஐ6 அவரை காரின் பின்பகுதியில் வைத்து சோவியத் ஒன்றியத்துக்கு வெளியே அழைத்து வந்ததால் நூலிழையில் உயிர் தப்பினார். அதன்பின்னர் தன்னைக் காட்டிக் கொடுத்தது யார் எனக் கண்டறிய கோர்டிவ்ஸ்கி முயற்சித்தார். "நான் ஒன்பது வருடங்களாக என்னைக் காட்டிக் கொடுத்தது யார் என கணித்து வந்தேன். ஆனால் எனக்கு பதில் கிடைக்கவில்லை" என 1994-ஆம் ஆண்டு 28 பிப்ரவரி-ஆம் தேதி பிபிசியின் டாம் மேன்கோல்ட்டிடம் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். அதற்கான பதில் இரண்டு மாதங்களில் கோர்டிவ்ஸ்கிக்கு கிடைத்தது. "சிஐஏ மற்றும் இதர உளவு அமைப்புகளில் எனக்குத் தெரிந்த அனைத்து உளவாளிகளையும் காட்டிக் கொடுத்தேன்" என அமெரிக்க நீதிமன்றத்தில் சிஐஏ அதிகாரி ஆல்ட்ரிச் அமெஸ் ஒப்புக்கொண்டபோது கோர்டிவ்ஸ்கிக்கு தெரியவந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆல்ட்ரிச் அமெஸ் 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி மேற்கு நாடுகளுக்கு உளவு பார்த்த 30-க்கும் மேற்பட்ட உளவாளிகளைக் காட்டிக் கொடுத்து 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆபரேஷன்களை சமரசம் செய்துவிட்டதாக அமெஸ் ஒப்புக்கொண்டார். கேஜிபியால் கொலோகொல் என அறியப்பட்ட அமெஸின் துரோகம், சோவியத் ராணுவ உளவுத்துறையின் மூத்த அதிகாரியும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்குலக நாடுகளுக்கு தகவல்களை வழங்கி வந்தவருமான ஜெனரல் டிமிட்ரி பாலியாகோவ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சிஐஏ உளவாளிகளின் இறப்புக்கு காரணமானது. அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய கேஜிபியின் உளவாளியான அமெஸ் தண்டிக்கப்பட்டு அவருக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. "1960-களில் பிரிட்டன் உளவாளியான கிம் ஃபில்பி, சோவியத் ஏஜெண்டாக வேலை பார்த்தது அம்பலமான போது பிரிட்டன் அரசு அதிர்ந்து போனதைப் போலவே அமெஸ் ஏற்படுத்திய பாதிப்பின் வீரியத்தால் அமெரிக்க அரசு அதிர்ந்து நின்றது" என 1994-ல் அளித்த பேட்டியில் தெரிவித்தார் மேன்கோல்ட். சோவியத்துக்கு எதிரான சிஐஏவின் உளவு பிரிவுக்கு தலைமை தாங்கியதால்தான் அமெஸால் இந்த அளவு பாதிப்புகளை ஏற்படுத்த முடிந்தது. இது சோவியத்துக்கு எதிரான அமெரிக்காவின் ரகசிய ஆபரேஷன்கள் மற்றும் அதன் உளவாளிகள் அடையாளம் காண்பதற்கு உதவிய தகவல்களை தடையின்றி அணுக அனுமதித்தது. அமெஸின் பதவி இதர மேற்கத்திய உளவு அமைப்புகளின் கூட்டங்களிலும் கலந்து கொள்ள அவரை அனுமதித்தது. இவ்வாறு தான் பிரிட்டன் உளவு அமைப்புகளான எம்.ஐ6 மற்றும் எம்.ஐ5-க்கு தகவல்களை வழங்கி வந்த கேஜிபி அதிகாரியான கோர்டிவ்ஸ்கி இவருடன் தொடர்பில் வந்தார். இந்த கூட்டங்கள் தான் "கேஜிபி உளவாளியே, கேஜிபி அதிகாரியிடம் தகவல் வழங்கும் விநோதமான சூழ்நிலையை உருவாக்கியது" என்றார் மேன்கோல்ட். "அமெரிக்கர்கள் விளக்கம் அளிப்பதில் மிகவும் தீவிரமாகவும் நன்றாகவும் செயல்பட்டனர்" என்கிறார் கோர்டிவ்ஸ்கி. மேலும் அவர், "நான் மிக ஆர்வமுடன் இருந்தேன். எனக்கு அமெரிக்கர்களைப் பிடித்துப் போனது. என் அறிவை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆனால் அமெஸ் அங்கு இருந்தார் என்பதை உணர்கிறேன். என் புதிய தகவல்கள், புதிய பதில்கள் அன அனைத்தையுமே அவர் கேஜிபியிடம் கொடுத்திருப்பார்" என்றார். குடிப் பழக்கம் மற்றும் விவாகரத்து பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு,ஆல்ட்ரிச் அமெஸ் அமெஸ் மிக இளம் வயதிலே உளவு உலகிற்கு அறிமுகமானார். அவரின் தந்தை சிஐஏ ஆய்வாளராக இருந்த நிலையில் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திய தன்னுடைய மகனுக்கு அங்கேயே வேலை வாங்கிக் கொடுத்தார். ஆனால் பிற்காலத்தில் உளவு அமைப்பிற்கு துரோகம் இழைக்க வேண்டும் என்கிற அமெஸின் முடிவு அவரின் சித்தாந்த சறுக்கல்களை விடவும் பணத்தேவையைச் சார்ந்தே இருந்தது. தொடக்கத்தில் உளவு அதிகாரியாக நன்றாக வேலை செய்து வந்தார் அமெஸ். அவரின் மனைவியும் சக சிஏஐ ஏஜெண்டுமான நான்சி செகெபார்த் உடன் 1960களின் இறுதியில் துருக்கியில் முதலில் பணியமர்த்தப்பட்டார். அங்கு வெளிநாட்டு உளவாளிகளை வேலைக்குச் சேர்ப்பது தான் அவரின் பணியாக இருந்தது. ஆனால் அமெஸ் களப்பணிக்கு ஏற்றவர் அல்ல என நினைத்த அவரின் மேலதிகாரிகள் அவரை சிஐஏ தலைமையிடத்திற்கு அழைத்துக் கொண்டனர். அமெரிக்கா திரும்பிய பிறகு ரஷ்ய மொழி கற்றுக்கொண்டார். அவருக்கு ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிரான ஆபரேஷன்களைத் திட்டமிடும் பணி வழங்கப்பட்டது. குடிப்பழக்கத்தின் காரணமாக அமெஸ் தந்தையின் சிஐஏ பயணம் பாதியிலேயே முடிவுக்கு வந்தது. அதே போல அமெஸின் குடிப்பழக்கம் அவரின் வளர்ச்சியை தடம்புரளச் செய்தது. 1972-ல் அவர் குடிபோதையில் மற்றொரு பெண் சிஐஏ ஊழியருடன் சமரசமான சூழ்நிலையில் இன்னொரு ஏஜெண்டால் கண்டறியப்பட்டார். வேலையிலும் கவனக் குறைவான அணுகுமுறை அவருக்கு உதவவில்லை. 1976-ல் ஒருமுறை உளவுத் தகவல்கள் அடங்கிய பெட்டியை ரயிலில் தவறவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆல்ட்ரிச் அமெஸ் வேலையில் மீண்டும் சோபிக்கும் முயற்சியில் 1981-ஆம் ஆண்டு மாஸ்கோவில் இரண்டாவது வெளிநாட்டு பணியை ஏற்றுக் கொண்டார். அவரின் மனைவி நியூயார்க்கிலே இருந்தார். ஆனால் அவரின் நடத்தை மற்றும் நீடித்த அதீத குடிப்பழக்கத்தால் ஒரு தேர்ந்த சிஐஏ அதிகாரி எனப் பெயர் பெற தவறினார். 1981-ல் மாஸ்கோவில் ஒரு விபத்தில் சிக்கினார். எந்த அளவிற்கு போதையில் இருந்தார் என்றால் காவல்துறையின் கேள்விக்கு பதிலளிக்கவோ, அவருக்கு உதவ வந்த அமெரிக்கா தூதரக அதிகாரியையோ கூட அவரால் அடையாளம் காணவோ, முடியாத அளவுக்கு போதையில் இருந்தார். அதன் பிறகு, தூதரகத்தில் ஒரு கியூப அதிகாரியுடனான வாக்குவாதத்தைத் தொடர்ந்து அமெரிக்கா திரும்பிய பிறகு அவரின் குடிப்பழக்கத்தை மதிப்பிட அவரின் மேலதிகாரிகள் முடிவு செய்தனர். அமெஸ் தொடர்ந்து திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளில் ஈடுபட்டு வந்தார். அதில் ஒன்று தான் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. 1982-ம் இறுதியில் அவர் சிஐஏவுக்காக வேலை பார்த்த கொலம்பியரான மரியா டெல் ரொசாரியோ காசாஸ் டுபுய் உறவில் இருந்தார். அந்த உறவு தீவிரமாகவே தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ரொசாரியோவை திருமணம் செய்து அமெரிக்கா அழைத்து வர முடிவு செய்தார். சிஐஏவில் பெரிதாக சோபிக்காத நிலையிலும் அவருக்குத் தொடர்ந்து பணிகள் வழங்கப்பட்டன. 1983-ல் சிஐஏ தலைமையிடத்தில் சோவியத் ஆபரேஷன்களை முறியடிப்பதற்கான உளவு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது சிஐஏவின் ரகசிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் கிடைக்கச் செய்தது. நான்சியுடனான விவாகரத்து உடன்படிக்கையின்படி தம்பதியினராக அவர்கள் பெற்ற கடனை அடைப்பதோடு நான்சிக்கு ஜீவனாம்ச தொகையை வழங்கவும் ஒப்புக் கொண்டார் அமெஸ். இத்துடன் அவரது இரண்டாவது மனைவியின் விலையுயர்ந்த ரசனைகள், ஷாப்பிங் மீதான அவரின் தீரா விருப்பம் மற்றும் கொலம்பியாவுக்கு அவர் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளால் அவரின் பணச் சிக்கல் கட்டுப்பாடின்றி சென்றது. தனது அதிகரித்த கடன்கள் தான் தன் வசம் இருந்த ரகசியங்களை விற்க அவரைத் தூண்டியதாக பின்னாளில் அரிசோனா செனடர் டென்னிஸ் டிகோன்சினியிடம் கூறியுள்ளார். "நான் மிகுதியான பொருளாதார நெருக்கடிகளை உணர்ந்தேன். ஆனால் அதற்காக அளவு கடந்து எதிர்வினையாற்றிவிட்டேன்" என அமெஸ் தெரிவித்திருந்தார். நாட்டிற்குச் செய்த துரோகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"நான் கோட்டை கடந்துவிட்டேன், என்னால் திரும்ப முடியாது" என ஒரு செனட் அறிக்கையில் தெரிவித்திருந்தார். "அது பணத்தைப் பற்றியது. அவரின் துரோகம் பணத்தைத் தாண்டி எதற்காகவும் இல்லை என யாரையும் அவர் நம்ப வைக்க முயற்சித்ததாக நான் நினைக்கவில்லை" என அவரைக் கைது செய்த எஃப்.பி.ஐ அதிகாரியான லெஸ்சி ஜி வைஸர் 2015-ல் பிபிசியின் விட்னெஸ் ஹிஸ்டரியில் தெரிவித்தார். 1985-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி குடிபோதையில் அமெஸ் வாஷிங்டனில் சோவியத் தூதரகத்திற்குச் சென்றார். உள்ளே சென்றவர் அங்கே வரவேற்பில் இருந்தவரிடம் சில டபுள் ஏஜெண்ட்களின் பெயர் பட்டியலை வழங்கி தான் சிஐஏ அதிகாரி என்பதற்கான ஆவணங்களையும் காண்பித்து 50,000 டாலர் வேண்டும் என்கிற குறிப்பையும் வழங்கினார். இது தன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு கொண்டு வரும் நிகழ்வு. இது ஒரு முறை மட்டுமே நடக்கும் என நம்பியதாகவும், ஆனால் விரைவில் "நான் கோட்டை கடந்துவிட்டேன், என்னால் திரும்ப முடியாது" என ஒரு செனட் அறிக்கையில் தெரிவித்திருந்தார். அடுத்த ஒன்பது ஆண்டுகளுக்கு கேஜிபிக்கு அமெஸ் பல ரகசிய தகவல்களை வழங்கி வந்தார். சோவியத்தின் விண்வெளி நிலைகளை ஒட்டுக் கேட்கும் தொடர்பு சாதனங்கள் தொடங்கி சோவியத்தின் அணு ஆயுத ஏவுகணைகளை கணக்கிடும் நவீன தொழில்நுட்பம் வரை அனைத்து தகவல்கள் அடங்கிய ஆவணங்களையும் ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி சிஐஏவில் இருந்து அவர் எடுத்துச் சென்றார். அவரின் பணி சோவியத் தூதரக அதிகாரிகளுடனான அதிகாரப்பூர்வ கூட்டங்களை உள்ளடக்கியதால் தன்னைக் கையாள்பவர்களை எந்தச் சந்தேகமும் இல்லாமல் அவரால் நேருக்கு நேர் சந்திக்க முடிந்தது. அவர் ரகசிய ஆவணங்கள் அடங்கிய பைகளை முன்னரே தீர்மானிக்கப்பட்ட 'டெட் ட்ராப்' என அழைக்கப்படும் ரகசிய இடங்களில் விட்டுவிட்டு செல்வார். "அவர் ஒரு இடத்தில் ஆவணங்களை விட்டுச் செல்கிறார் என்றால் அங்குள்ள தபால்பெட்டியில் ஒரு தடத்தை வைத்துவிடுவார். அந்த அடையாளத்தை ரஷ்யர்கள் பார்த்தால் அந்த ட்ராப்பில் ஆவணங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வார்கள்" என்றார் வைஸர். "பின்னர் ஆவணங்களை எடுத்த ரஷ்யர்கள் அந்தத் தடயத்தை அழித்துவிடுவார்கள். இதனால் ஆவணப் பரிமாற்றம் பாதுகாப்பாக நடைபெற்றது என்பதை அவர் தெரிந்துகொள்வார்" அமெஸ் கசியவிட்ட ரகசிய உளவுத் தகவல்களால் சோவியத் ஒன்றியத்தில் உள்ள அனைத்து சிஐஏ உளவாளிகளையும் கண்டறிந்து அமெரிக்காவின் ரகசிய ஆபரேஷன்களையும் கேஜிபி முறியடித்துவிடும் சாத்தியம் இருந்தது. "அமெரிக்காவுக்கு இத்தகைய உயிரிழப்புகளை ஏற்படுத்திய வேறொரு உளவாளியை நான் அறிந்திருக்கவில்லை" என்றார் வைஸர். நிறைய சிஐஏ உளவாளிகள் திடீரென காணாமல் போனது 1986-ல் சிஐஏவுக்குள்ளே உளவாளியைத் தேடும் முயற்சியைத் தூண்டிவிட்டது. ஆனால் அமெஸ் அதில் சிக்காமல் பல வருடங்கள் தப்பித்துவந்தார். அவரின் துரோகத்திற்கு நன்றாக சம்பாதித்து வந்தார் அமெஸ். சோவியத் ஒன்றியத்திடமிருந்து மொத்தமாக 2.5 மில்லியன் டாலர்கள் பெற்றார். தனது புதிய செல்வத்தை மறைக்க அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வருடத்திற்கு 70,000 டாலருக்கு மேல் சம்பளம் பெறாத நிலையில் 540,000 டாலர் மதிப்புள்ள வீட்டை பணம் செலுத்தி வாங்கினார். வீட்டை மேம்படுத்த ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவு செய்தார். மேலும் ஜாகுவார் கார் ஒன்றையும் வாங்கினார். அவரின் ஆடம்பர வாழ்க்கை முறை தான் அவரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, 1994-ல் வைஸர் தலைமையிலான எஃப்.பி.ஐ குழுவால் கைது செய்யப்படுவதற்கும் வித்திட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆல்ட்ரிச் அமெஸ் கைது எஃப்.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட பிறகு அமெஸ் அதிகாரிகளுடன் விசாரணைக்கு ஒத்துழைத்தார். சோவியத் அதிகாரிகளுடனான சந்திப்பு மற்றும் பணம் பற்றி தெரியும் என ஒப்புக்கொண்ட அவரின் மனைவி ரொசாரியோவிற்கு குறைந்த தண்டனை கிடைக்க வேண்டும் என கோரிக்கைக்கு ஈடாக அவரின் உளவு நடவடிக்கைகளின் ஆழத்தை விவரித்தார். ரொசாரியோ ஐந்து ஆண்டுகள் கழித்து விடுவிக்கப்பட்டார். டபுள் ஏஜெண்டாக அம்பலமான சிஐஏ அதிகாரியான அமெஸ் இண்டியானா மாகாணத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை ஒன்றில் அவரின் தண்டனைக் காலத்தை தொடர்ந்து கழித்து வருகிறார். இதுநாள் வரை அமெஸ் தனது செயல்களுக்கோ அதனால் ஏற்பட்ட மரணங்களுக்கோ எந்த விதமான வருத்தமும் வெளிப்படுத்தவில்லை. "அவருக்கு தன்னைப் பற்றி மிக உயரிய எண்ணம் இருந்தது" என அமெஸ் பற்றி குறிப்பிடுகிறார் வைஸர். "அவர் பிடிபட்டதற்காக வருந்துகிறார். உளவாளியாக இருந்ததற்கு வருந்தவில்லை" என்றார் வைஸர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2j7dy8l89o
-
நியூசிலாந்தின் துணை பிரதமர் இலங்கை வருகை
25 MAY, 2025 | 09:57 AM நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சனிக்கிழமை (24 ) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுடன் 4 பேர் அடங்கிய குழுவினரும் வருகை தந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சனிக்கிழமை (24) இரவு 11 மணியளவில் குறித்த குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்கள் இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்துகொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் நியூசிலாந்து திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215608
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
சுப்மன் கில் கேப்டன்: இந்திய அணியில் கோலி இடத்தை நிரப்பப் போவது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுப்மன் கில் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 24 மே 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் என நமக்கு மிகப்பரிட்சயமான கிரிக்கெட் வீரர்கள் இனி இந்திய டெஸ்ட் அணியில் இல்லை. இவர்களுக்கு பதிலாக பல இளம் தலைமுறை வீரர்களுக்கான கதவு இந்திய அணியில் திறந்துள்ளது. ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள பட்டோடி டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும், 5 போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான புதிய கேப்டன் பெயரும் பிசிசிஐ தேர்வுக் கூட்டத்தில் இன்று (மே24) அறிவிக்கப்பட்டது இதன்படி, சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார், துணைக் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் வரிசையில் சுப்மன் கில் 5வது இடத்தில் உள்ளார். இவருக்கு முன்னதாக மன்சூர் அலிகான் பட்டோடி, சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், ரவி சாஸ்திரி ஆகியோர் இளம் வயதில் இந்திய அணியை தலைமை தாங்கியுள்ளனர். பிரிட்டனில் டெஸ்ட் விளையாடுவது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு. அதேநேரம் சவாலானதும் கூட. சிறந்த பேட்டர், பந்துவீச்சாளரின் திறமை பிரிட்டன் மண்ணில் அங்கீகரிக்கப்படும், மதிக்கப்படும், உலகரங்கில் உயர்த்தப்படுவார். இங்கிலாந்து தொடரிலிருந்துதான் கங்குலி, திராவிட் போன்ற ஜாம்பவான்கள் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. ஆதலால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஒரு வீரர் முத்திரை பதித்துவிட்டால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை உலகளவில் கவனிக்கப்படும். வாய்ப்பும், சவாலும் ஒன்றாகக் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து கில் தலைமையில் இந்திய அணியின் டெஸ்ட் சகாப்தம் தொடங்குகிறது. அது மட்டுமல்லாமல் 2025-27ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றுப் போட்டியும் இதிலிருந்து தொடங்குகிறது. ரோஹித் சர்மா, கோலி, அஸ்வின், ஷமி ஆகிய சீனியர் வீரர்கள் இல்லாத சூழலில், பல புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கதவுகள் இந்திய அணியில் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழக வீரர் சாய் சுதர்சன், அர்ஷ்தீப் சிங், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் முதல்முறையாக வாய்ப்புப் பெற்றுள்ளனர். அபிமன்யு ஈஸ்வரன் பலமுறை இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டதில்லை, இந்த முறையும் அதே நிலையா என்பது தொடரில் தெரிந்துவிடும். நீண்டஇடைவெளிக்குப்பின் கருண் நாயர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் டெஸ்ட் அணிக்குள் மீண்டும் திரும்பியுள்ளனர். பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஸ்பெசலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். மற்றவகையில் குல்தீப் யாதவுடன் சேர்ந்து சுழற்பந்துவீச ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குஜராத் அணியில் சாய் சுதர்சனின் பங்களிப்பு அவருக்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது 18 ஆண்டுகளுக்கு முந்தைய வெற்றி பிரிட்டனில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்கில் ஜூன் 20ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி ஜூலை 2ம் தேதி எச்ஜ்பாஸ்டனிலும், 3வது டெஸ்ட் போட்டி ஜூலை 10 ம்தேதி லார்ட்ஸ் மைதானத்திலும், ஜூலை 23ம் தேதி ஓல்ட் டிராபோர்டில் 4வது டெஸ்ட் போட்டியும், 5வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்திலும் நடக்கிறது. கடைசியாக பட்டோடி டிராபி டெஸ்ட் தொடரை 2007ம் ஆண்டு ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய அணி 1-0 என்று வென்றது. அதன்பின், கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அணி பிரிட்டன் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இளம் கேப்டன் கில் தலைமையிலான அணி சாதிக்குமா என்பது எதிர்பார்ப்புதான். இந்திய அணி குறித்த பார்வை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கர் பட்டோடி டிராபி டெஸ்ட் தொடருக்காக 18 வீரர்கள் கொண்ட இந்திய அணியை தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் இன்று (மே24) அறிவித்தனர். அந்த வகையில் கேப்டனாக சுப்மன் கில், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்கால இந்திய அணியை கட்டமைக்கும் பொருட்டு 30 வயதுக்குள் இருக்கும் வீரர்களுக்கே அதிகமான முன்னுரிமை தரப்பட்டுள்ளது. ரவீந்திர ஜடேஜா, கருண் நாயர், பும்ரா மட்டுமே 30 வயதைக் கடந்தவர்கள், மற்ற வகையில் இளம் வீரர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பேட்டிங் வரிசையில் கே.எல்.ராகுல், சுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ரிஷப் பண்ட், சாய் சுதர்சன், கருண்நாயர், துருவ் ஜூரெல் ஆகியோர் உள்ளனர். இதில் தொடக்க வீரருக்கு சுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் உள்ளனர். கோலியின் இடத்தில் யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலியின் இடத்தில் கேஎல் ராகுல் விளையாட வாய்ப்பு டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் இடத்தை நிரப்ப சாய் சுதர்சன் பயன்படுத்தப்படலாம் என்றாலும், சுப்மன் கில்லுடன் ஆட்டத்தை சாய் சுதர்சன் தொடங்கவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு இருந்தால், விராட் கோலியின் 4வது இடத்தில் கருண் நாயர் அல்லது கே.எல்.ராகுல் களமிறங்கலாம். ரிஷப் பண்டுக்கு மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெல், கே.எல்.ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர்கள் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர், நிதிஷ் குமார் ரெட்டியும், சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 5 வேகப்பந்து வீச்சாளர்கள் பிரிட்டன் மைதானங்கள் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும், நன்கு ஸ்விங் ஆகும், இந்திய அணி டெஸ்ட் ஆடும்போது அங்கு குளிர்காலம் இருக்கும் என்பதால் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்பதால் வேகப்பந்துவீச்சுக்கு முன்னுரிமை அளி்க்கப்பட்டுள்ளது. பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் ஆகியோரும், ஸ்பெசலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். முகமது ஷமி காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை, தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அளவு உடல்நிலை தகுதியாக இல்லை என்பதால், அவர் பெயர் பரிசீலனையில் இல்லை. பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்த சர்ஃபராஸ் கான், ஹர்ஷித் ராணா, தேவ்தத்படிக்கல், தனுஷ் கோட்டியான் ஆகியோர் பெயரும் பரிசீலிக்கப்படவில்லை. இந்திய அணி விவரம் சுப்மன் கில்(கேப்டன்) ரிஷப் பண்ட்(துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, சாய் சுர்சன், அபமன்யு ஈஸ்வரன், கருண் நாயகர், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், அர்ஷ்தீப் சிங். பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழக வீரர் இருவருக்கு வாய்ப்பு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சனின் அற்புதமான ஆட்டம் அவருக்கான இடத்தை டெஸ்ட் அணியில் உறுதி செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் மிஸ்டர் கன்சிஸ்டென்சி எனப் பெயரெடுத்த சுதர்சன் இங்கிலாந்து தொடரில் எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல வாஷிங்டன் சுந்தரும் தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அபிமன்யு ஈஸ்வரனின் இவரின் தந்தை தமிழர், தாய் பஞ்சாபி என்றாலும், அவர் மேற்கு வங்க அணிக்காக ஆடுகிறார். கில்லுக்கு புதிய அனுபவம் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில், இந்திய ஒருநாள் அணி அல்லது டெஸ்ட் அணியை இதற்கு முன் வழிநடத்தியது இல்லை. ஆனால் 2024ம் ஆண்டு ஜிம்பாப்பே சென்ற இந்திய T20 அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக இருந்து வழி நடத்தியிருக்கிறார். 2020-21 ம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடரில்தான் டெஸ்ட் போட்டியில் சுப்மன் அறிமுகமாகினார். இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கில் 5 சதங்கள், 7 அரைசதங்கள் உள்பட 1,893 ரன்கள் சேர்த்து 35 சராசரி வைத்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் கில் 42 சராசரியும், வெளிநாடுகளில் 27 சராசரியும் வைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக சுப்மன் கில் இதுவரை 2021-24 வரை 10 போட்டிகளில் ஆடி 592 ரன்கள் சேர்த்துள்ளார், இதில் பிரிட்டன் மண்ணில் 3 டெஸ்ட் போட்டியில் ஆடிய கில் 88 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். சொந்த மண்ணில் அதிகமான ரன்கள் குவித்த கில், வெளிநாடுகளில் பெரிதாக இதுவரை ரன்கள் குவித்ததில்லை. 8 ஆண்டுகளுக்குப்பின் கருண் நாயர் பட மூலாதாரம்,GETTY IMAGES கருண் நாயர் கடைசியாக 2017ம் ஆண்டு மார்ச் 25 முதல் 28ம் தேதிவரை நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக பங்கேற்றார். அதன்பின் 8 ஆண்டுகளுக்குப்பின் கருண் நாயர் இப்போது மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை 6 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கருண் நாயர் முச்சதம்(303) அடித்ததுதான் சிறந்த பேட்டிங்காக பார்க்கப்படுகிறது. அதைத் தவிர்த்து உள்நாட்டுப் போட்டிகளில் முதல்தரப் போட்டிகளிலும், லிஸ்ட் ஏ போட்டிகளிலும் 100 ஆட்டங்களுக்கு மேல் ஆடிய அனுபவ வீரர் என்பதாலும், பிரிட்டனில் கவுண்டி போட்டிகளில் ஆடிய அனுபவம் இருப்பதாலும் சமீபத்திய உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடியதாலும் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ், ஷமி ஏன் இல்லை பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்ரேயாஸ், ஷமி பெயர் ஏன் பரிசீலிக்கப்படவில்லை என்பதற்கு தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில் "கணுக்கால் காயத்திலிருந்து உடல்நலன் தேறி ஷமி இப்போதுதான் வந்துள்ளார். ஐபிஎல் ஆடியபின் மீண்டும் லேசாக வலிவரத் தொடங்கியுள்ளது. அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தில் அவரால் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடும் நிலையில் உடல்நிலை இல்லை எனத் தெரியவந்தது. இதனால் அவருக்கு கூடுதலாக ஓய்வு அளிக்கப்பட்டது. ஸ்ரேயாஸ் அய்யர் சிறந்த வீரர். ஒருநாள், டி20 போட்டிக்கான சிறந்த வீரர். உள்நாட்டுப் போட்டிகளிலும் சிறப்பாக ஸ்ரேயாஸ் ஆடியுள்ளார். இப்போதுள்ள நிலையில் டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸுக்கு இடமில்லை" எனத் தெரிவித்தார். வேகப்பந்துவீச்சு வலிமையாக இருக்கிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES வேகப்பந்துவீச்சாளர்கள் தேர்வு குறித்து அகர்கர் கூறுகையில் " வேகப்பந்துவீச்சுக்கு முன்னுரிமை அளித்து வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். பும்ராவால் 5போட்டிகளிலும் பங்கேற்க முடியாது, அவரின் வேலைப்பளுவை கவனத்தில் வைத்திருக்கிறோம். அர்ஷ்தீப் சிங் புதிய பந்தில் நன்கு ஸ்விங் செய்யக்கூடியவர், அதிலும் பிரிட்டன் மண்ணில் அவரால் சிறப்பாக பந்துவீச முடியும். கவுண்டி அணியிலும் அர்ஷ்தீப் ஆடியுள்ளார். நிதிஷ், ஷர்துல் இருவரும் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள். சில நேரத்தில் கடைசிவரை பேட்டர்கள் தேவை எனும் பட்சத்தில் இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். வேகப்பந்துவீச்சில் வெரைட்டி தேவை என்பதை கருதி வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தார். சுப்மன் கில் எழுச்சி எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலியுடன் சுப்மன் கில் சுப்மன் கில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தேர்வுக் குழுத்தலைவர் அகர்கர் பேசுகையில் " ரோஹித் சர்மாவுக்குப்பின் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்க பல வாய்ப்புகளை கடந்த ஓர் ஆண்டாக பரிசீலித்தோம், அலசினோம். வீரர்களிடமிருந்தும் ஓய்வறையில் இருந்து கருத்துக்களைக் கேட்டோம். அதில் சுப்மன் கில் குறித்து நல்லவிதமான கருத்துக்கள் வந்தன. இளம் வீரர், தொடர்ந்து தன்னை வளர்த்து வருகிறார். கடந்த ஆண்டைப் போல் கில் இப்போது இல்லை, அடுத்த ஆண்டு இதைவிட சிறந்தவராக இருப்பார் என நம்புகிறோம். ஏதோ ஒரு சில டூருக்காக மட்டும் கேப்டன்களை தேர்வு செய்யக்கூடாது. கடந்த ஆண்டிலிருந்து கில் ஆட்டம் வளர்ந்து வருகிறது. நிச்சயமாக சிறந்த கேப்டனாக கில் வருவார். இங்கிலாந்து தொடரில் ஒவ்வொருவரின் திறமையும் பரிசோதிக்கப்படும். ஆஸ்திரேலியத் தொடரில் கில் சிறப்பாக செயல்பட்டார். ரோஹித், கோலி இல்லாத நிலையில் இளம் வீரர்கள் கொண்ட அணிக்கு நிச்சயமாக சவாலாக இந்தத் தொடர் அமையும். பேட்டிங்கைப் பொருத்தவரை கவலை இல்லை, அனுபவம்தான் அடுத்தடுத்து வளர்த்தெடுக்கும். ரிஷப் பண்ட் கடந்த 2 ஆண்டுகளில் சிறந்த பேட்டராக உருவெடுத்துள்ளார். சுப்மன் கில்லுக்கு நிச்சயமாக ரிஷப் பண்ட் துணையாக இருப்பார். இரு இளம் வீரர்களுமே அணியை முன்னோக்கி அழைத்துச் செல்வார்கள் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd7gy40l3pdo
-
வெற்றிலைக்கேணியில் இலவச சட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று : காணி உரிமைகோரல் தொடர்பில் சட்ட ஆலோசனை பெறுமாறு சுமந்திரன் அழைப்பு
Published By: DIGITAL DESK 2 25 MAY, 2025 | 10:08 AM (நா.தனுஜா) காணி உரிமையாளர்கள் அவற்றுக்கு உரிமைகோருவதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நோக்கிலான கூட்டமொன்று இன்றைய தினம் காலை 9மணிக்கு வெற்றிலைக்கேணியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அக்கூட்டத்தில் கலந்துகொண்டு காணி உரிமைகோரல் தொடர்பில் அவசியமான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அழைப்புவிடுத்துள்ளார். அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமைகோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதுடன், அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தியிருக்கின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் பூர்வீக காணிகளை சட்ட ரீதியாகப் பாதுகாப்பதற்குத் தம்மிடம் இலவச சட்ட ஆலோசனை பெறுமாறும், இந்த இலவச சட்ட ஆலோசனையை வழங்குவதற்காக தன்னார்வ அடிப்படையில் சட்டத்தரணிகள் பலர் முன்வந்திருப்பதாகவும் சுமந்திரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதுமாத்திரமன்றி வெளிநாடுகளில் அல்லது தூர பிரதேசங்களில் வசிக்கும் காணி உரிமையாளர்களின் உரித்தை நிரூபிப்பதற்கான ஆவணத்தயாரிப்புக்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் அறிவித்திருந்த அவர், அதற்குரிய விபரங்களை உள்ளடக்கி நிரப்பவேண்டிய இணைப்பையும் அவரது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் 9 மணிக்கு வெற்றிலைக்கேணியில் உள்ள ரம்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் இலவச சட்ட ஆலோசனை வழங்கல் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்துள்ள சுமந்திரன், அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் உள்வாங்கப்பட்டிருக்கும் காணியின் உரிமையாளர்கள் அக்காணிக்கான உரித்தைக் கோருவதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து சட்ட ஆலோசனை வழங்கவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே சட்ட ஆலோசனை பெற விரும்புபவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியும் எனவும் அவர் அழைப்புவிடுத்துள்ளார். அதேவேளை இவ்வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்படவேண்டும் என தாம் வலியுறுத்தியிருக்கும் நிலையில், இவ்வர்த்தமானி அறிவித்தலை சட்ட ரீதியாக சவாலுக்கு உட்படுத்துவதற்கான சாத்தியப்பாடு குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தலை நீக்குவதற்கு இம்மாதம் 28 ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியிருக்கும் பின்னணியில், அதற்கு முன்பதாக அதனை நீக்காவிடின் மாபெரும் மக்கள் போராட்டத்துக்குத் தயாராகிவருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். https://www.virakesari.lk/article/215612
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
டெல்லிக்கு திருப்பம் தந்த புது ஹீரோ - பிளேஆஃபில் யாருக்கு எந்த இடம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சமீர் ரிஸ்வி கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. டெல்லி கேபிடல்ஸ் அணி இதற்கு முன் 22 முறை 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு 2வது முறையாக அதில் நேற்று வெற்றி பெற்றுள்ளது. ப்ளே ஆஃ சுற்று தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் டாப்-4 பட்டியலில் யாருக்கு எந்த இடம் என்பது குறித்து இன்னும் தெளிவான முடிவுக்கு வராத நிலை நீடித்து உச்சக் கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ப்ளே ஆஃப் சுற்று எந்தெந்த அணிகளுக்கு இடையே நடக்கும் என்பதை ஊகிக்க முடியாத பரபரப்பான கட்டத்தை நோக்கி ஐபிஎல் சீசன் நகர்ந்துள்ளது. ஸ்ரேயாஸ் போராட்டம், ஸ்டாய்னிஷ் அதிரடி பஞ்சாப் அணிக்கு தொடக்கத்திலேயே ஆர்யா ஆட்டமிழக்கவே, பிரப்சிம்ரன், இங்கிலிஸ் ஜோடி சேர்ந்து பவர்ப்ளேயில் ஸ்கோர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இங்கிலிஸ் 32 ரன்னில் விப்ராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழக்கவே, பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் அணி. நிலைக்காத பிரப்சிம்ரனும் 28 ரன்னில் விப்ராஜ் பந்துவீச்சில் போல்டாகினார். நடுவரிசையில் நேஹல் வதேரா(16), சஷாங் சிங்(11) ரன்களில் ஏமாற்றவே, கேப்டன் ஸ்ரேயாஸ் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தி அரைசதம் அடித்தார். 53 ரன்களில் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தபோது பஞ்சாப் அணி 172 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஸ்டாய்னிஷ் ஸ்டாய்னிஷ் களமிறங்கி 16 பந்துகளில் 44 ரன்களை விளாசினார். 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசிய ஸ்டாய்னிஷ் பஞ்சாப் அணி 200 ரன்களைக் கடக்க உதவினார். முகேஷ் குமார் ஓவரில் லாங்ஆப்பில் சிக்ஸர், மோகித் சர்மா ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள், முஸ்தபிசுர் ரஹ்மான் ஓவரிலும் சிக்ஸர் என ஸ்டாய்னிஷ் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குல்தீப் ஓவரில் ஓமர்சாய், யான்சென் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதிலும் ஸ்டாய்னிஷ் அதிரடிக்கு யாரும் கைவிலங்கிட முடியவில்லை, 16 பந்துகளில் 44 ரன்களுடன் ஸ்டாய்னிஷ் ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி தரப்பில் முஸ்தபிசுர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப், விப்ராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கருண் நாயர் கருண் நாயரின் உற்சாகம் டெல்லி அணிக்கு டூப்பிளசிஸ், ராகுல் இருவரும் வலுவான தொடக்கத்தை அளித்து வெற்றிக்கான தீர்மானத்தோடு ஆடினர். ராகுல் 31 ரன்னில் யான்சென் பந்துவீச்சிலும் அதைத் தொடர்ந்து டூப்பிளசிஸ்23 ரன்னில் பிரார் பந்துவீச்சிலும் வெளியேறினர். பவர்ப்ளேயில் ஒரு விக்கெட்டை இழந்து பஞ்சாப் 61 ரன்கள் சேர்த்தது. இந்திய டெஸ்ட் அணியில் 8 ஆண்டுகளுக்குப்பின் இடம் பெற்ற உற்சாகத்தில் ஆடிய கருண் நாயர் நடுவரிசையில் அணியை வழிநடத்திச்செல்ல முக்கியமானவராக நேற்று இருந்தார். பிரவீண் துபே பந்துவீச்சில் வந்த வேகத்தில் கருண் நாயர் தொடர்ந்து 4 பவுண்டரிகளை விளாசினார். யான்சென் பந்துவீச்சில் சிக்ஸரும், பிரார் பந்துவீச்சில் பவுண்டரியும் அடித்து ரன்ரேட்டை குறையவிடாமல் கருண் நாயர் கொண்டு சென்றார். ஆனால் பிரார் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட்ஆடமுயன்ற கருண் நாயர், போல்டானார். 27 பந்துகளில் 44 ரன்கள்(2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள்) சேர்த்து கருண் நாயர் ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரிஸ்வி அசத்தல் டெல்லி அணிக்கு வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது 21 வயது வீரர் சமீர் ரிஸ்விதான். 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 58 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ஒரு கட்டத்தில் டெல்லி அணி வெற்றிக்கு 46 பந்துகளில் 91 ரன்கள் தேவைப்பட்டது. ஓவருக்கு 12 ரன் ரேட் தேவை என்ற நிலையில் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை ரிஸ்வி வெளுத்துவாங்கினார். இளம் பேட்டர் ரிஸ்வி அச்சமின்றி பேட் செய்து ஓமர்சாய், யான்சென் பந்துவீச்சில் சிக்ஸரை பறக்கவிட்டார். ஹர்பிரித் பிரார் பந்துவீச்சில் சிக்ஸரும், ஸ்டாய்னிஷ், அர்ஷ்தீப் பந்துவீச்சில் சிக்ஸர் என மிரட்டலாக ரிஸ்வி பேட் செய்தார். ஐபிஎல் தொடரில் ரிஸ்வி 58 ரன்கள் என்பது அவரின் அதிகபட்ச ஸ்கோராகும். மோசமான பந்துவீச்சு பஞ்சாப் அணி சேர்த்த 207 ரன்கள் என்பது வலுவான ஸ்கோர்தான். இதை டிபெண்ட் செய்ய முடியாமவிட்டால் ப்ளே ஆஃப் சுற்றில் எவ்வாறு இதற்கும் குறைவான ஸ்கோரை டிபெண்ட் செய்ய முடியும். பஞ்சாப் அணியில் நேற்று 6 பந்துவீச்சாளர்களும் 10 ரன்ரேட்டுக்கு மேல்தான் வாரி வழங்கினர். வேகப்பந்துவீச்சாளர்கள் யான்சென், ஓமர்சாய், அர்ஷ்தீப், ஸ்டாய்னிஷ் ஆகியோர் 13.3 ஓவர்கள் வீசி 143 ரன்களை வாரி வழங்கினர். இவர்கள் பந்துவீச்சில் 9 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளை வாரி வழங்கி 98 ரன்களை கொடுத்தனர். பஞ்சாப் பந்துவீச்சு இன்னும் கட்டுக்கோப்பாக இருந்திருந்தால், குறிப்பாக ஓமர்சாய், யான்சென் பந்துவீச்சு துல்லியமாக இருந்திருந்தால், பஞ்சாப் அணி வென்றிருக்கும். கருண் நாயர், ரிஸ்வி பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் சிரமப்பட்டது, ரிஸ்வியை ஆட்டமிழக்காமல் சிரமப்பட்டபோதே, பஞ்சாப் அணி தோல்வியை நோக்கி செல்வது உறுதியானது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யான்சென் "பந்துவீச்சு சரியில்லை" பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் " 207 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர்தான். ஆனால், ஆடுகளத்தில் பல இடங்களில் பந்து பிட்ச் ஆகி ஒவ்வொருவிதமாக பேட்டரை நோக்கி வருவதால் பேட் செய்வது கடினமாக இருந்தது. பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகசெயல்படவில்லை. ஆடுகளத்தை அறிந்தபின் அதற்கு ஏற்றார்போல் துல்லியமான லென்த்தில் பந்துவீசியிருக்க வேண்டும். விக்கெட் எடுக்கும் முயற்சியில் அதிக பவுன்ஸர்களை வீசியது தவறு. இந்த சீசனில் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது, வெற்றிக்கு ஒவ்வொரு அணியும் தகுதியானவர்கள். நாம்தான் நிதானமாக பொறுமையாக, நேர்மறையாக செயல்பட வேண்டும். அடுத்தப் போட்டியில் இன்னும் வலிமையாக திட்டங்களுடன் வருவோம்" எனத் தெரிவித்தார். ஐபிஎல் பிளேஆஃப் சுற்றில் யாருக்கு எந்த இடம்? ப்ளே ஆஃப் சுற்றில் டாப்-2 மட்டுமல்ல டாப்-4-ல் யாருக்கு எந்த இடம் என்பது இன்னும் முடிவாகவில்லை. பஞ்சாப், ஆர்சிபி அணிகள் தலா 17 புள்ளிகளுடன் உள்ளன. நிகர ரன்ரேட்டில் பஞ்சாபை விட(0.327) ஆர்சிபி (0.255) குறைவாக இருக்கிறது. இரு அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கிறது. இதில் எந்த அணி அதிகபட்ச ரன்ரேட்டை பெறும் வகையில் வெல்கிறதோ அந்த அணி 19 புள்ளிகளுடன் முன்னேறும். அதேபோல குஜராத் அணி 18 புள்ளிகளுடன் இருக்கிறது. கடைசி லீக்கில் இன்று சிஎஸ்கேவுடன் மோதுகிறது. ஒருவேளை குஜராத் வென்றால் 20 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும். தோல்வி அடைந்தால், 18 புள்ளிகளுடன் இப்போதுள்ள 0.602 ரன்ரேட் குறையும். அதேநேரம், மும்பை அணி கடைசி லீக்கில் நாளை பஞ்சாபுடன் மோதுகிறது. ஒருவேளை பஞ்சாப் அணி வென்றால் 19 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்கும், மும்பை 16 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு செல்லும். ஆர்சிபி கடைசி லீக்கில் தோல்வி அடைந்தாலும் 3வதுஇடம் கிடைக்கும், ஒருவேளை மாபெரும் வெற்றி பெற்றால் 2வது இடத்துக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை பஞ்சாப் அணியை மும்பை வீழ்த்திவிட்டால், இன்று நடக்கும் ஆட்டத்தில் சிஎஸ்கேவிடம் குஜராத் தோல்வி அடைந்தால், 18 புள்ளிகளுடன் வலுவான ரன்ரேட்டில் மும்பை முதலிடத்தைப் பிடிக்கும். ஆர்சிபி அணி கடைசி லீக்கில் வென்றால் 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும் மும்பை வலுவான ரன்ரேட்டுடன் இருந்தாலும் 18 புள்ளிகளுடன் இருப்பதால் 2வது இடத்தையும், குஜராத் 3வது இடத்தையும், பஞ்சாப் 4வது இடத்தையும் பிடிக்கும். எதிர்வரும் முக்கிய ஆட்டங்கள் இன்றைய ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே இடம்: ஆமதாபாத் நேரம்: மாலை 3.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் நாள் – மே 26 இடம் – ஜெய்பூர் நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs லக்னெள நாள் – மே 27 இடம் – லக்னெள நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-638 ரன்கள்(13 போட்டிகள்) சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-636 ரன்கள்(13 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்) நீலத் தொப்பி பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்) நூர் அகமது(சிஎஸ்கே) 21 விக்கெட்டுகள்(13போட்டிகள்) டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள்(13 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1e6jxl4v42o
-
பூநகரியில் அரச காணிகளில் அத்துமீறல் : தடுக்க சென்ற அரச உத்தியோகஸ்தர்களுக்கு மிரட்டல்
சட்டம் எல்லோருக்கும் சமமாக இருந்திருந்தால்......
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அண்ணை, மறுபடியும் சேர்ந்திட்டோமே!!!
-
ரப் பாடகர் வேடன்
🙏என்னை நிராகரித்தவர்களுக்கும், என்னுடன் நின்றவர்களுக்கும் ஆயிரம் நன்றிகள். நான் தொடருவேன்...?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தானா சேர்ந்த கூட்டமண்ணை!
-
ரப் பாடகர் வேடன்
ரொம்ப அடிபட்டு மிதிபட்டு இங்க வந்துருக்கேன், ஆனா அது எல்லாத்தையும்! - Rapper Vedan | Manjummel Boys
-
சென்னையில் மகிழும் மாற்றுத்திறனாளி பெண்கள்
சென்னைக்கு ரயில் தவறி வந்த மாற்றுத்திறனாளி பெண் கூடைப்பந்து வீராங்கனையானது எப்படி? படக்குறிப்பு, கர்நாடகாவின் ராமநகரத்தைச் சேர்ந்த லக்ஷ்மி கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பெருநகர சென்னை மாநகராட்சி, பெட்டர் வேர்ல்டு ஷெல்டர் எனும் அமைப்புடன் இணைந்து, மாற்றுத்திறனாளி பெண்களுக்கான ஒரு காப்பகத்தையும், ஒரு பிரத்யேக உடற்பயிற்சி மையத்தையும் நுங்கம்பாக்கத்தில் நடத்தி வருகிறது. இங்கு பாரா விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் இலவசமாக தங்கி, பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். அப்படி தங்கியிருக்கும் பாரா விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவர், கர்நாடகாவின் ராமநகரத்தைச் சேர்ந்த லக்ஷ்மி. 10 வருடங்களுக்கு முன், ஒரு ரயில் பயணத்தில் வழிதவறி சென்னை வந்துசேர்ந்த லக்ஷ்மி, இன்று பாரா கூடைப்பந்து வீராங்கனையாக மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்கிறார். லக்ஷ்மி 15 வயதில், ஒரு ரயில் விபத்தில் தனது இரு கால்களையும் இழந்தவர். இவருக்கு திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் பிறந்தபிறகு, ஒரு கட்டத்தில் கணவர் இறந்துவிட, வறுமையின் காரணமாக முதல் பிள்ளை மற்றும் 3வது பிள்ளையை தனது உறவினர்களிடம் கொடுத்தார் லக்ஷ்மி. இரண்டாவது பிள்ளையான தனலக்ஷ்மியை இவரே வளர்த்து வந்தார். வேலை வாய்ப்பும், தங்குவதற்கு இடமும் அளிப்பதாக உறவினர் ஒருவர் உறுதியளிக்க, தனது மகளுடன் ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ளார். "அங்கு சிறிது காலம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தேன். அதில் பல மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்தார்கள். ஆனால் ஊதியம் மிகக்குறைவு. தினமும் தரையில் தவழ்ந்து தான் பணிக்குச் செல்வேன். ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை, ஊருக்கே செல்லலாம் என முடிவு செய்தேன். அந்த நிறுவனத்தில் இருந்த ஒருவர், அருகில் உள்ள நகரப் பகுதியில் ஒரு தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் பணமும், ஒரு சக்கர நாற்காலியும் இலவசமாக வழங்குவதாக கூறினார். சரி அதை வாங்கிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பலாம் என முடிவு செய்து, அவரை நம்பி எனது 5 வயது மகளுடன் சென்றேன்." என்று கூறுகிறார் லக்ஷ்மி. ஆனால் அங்கு கிடைத்த உதவித்தொகையை உடன் வந்தவர் எடுத்துக்கொண்டு, தென்னிந்தியாவை நோக்கிச் செல்லும் ஏதோ ஒரு ரயிலில் லக்ஷ்மியையும் அவரது மகளையும் அனுப்பிவைத்துள்ளார். ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு அன்று நடந்ததை நினைவுகூறும் லக்ஷ்மி, "'உனது ஊருக்குதான் செல்கிறது ஏறு' என அந்த நபர் என்னை மகளுடன் ஏற்றிவிட்டார். கையில் ஒரு ரூபாய் கூட இல்லை, கிடைத்த 2000 ரூபாயையும், 'நான் தானே உன்னை அழைத்துவந்தேன், அதற்கு கமிஷன்' எனக்கூறி அவர் பிடுங்கிக்கொண்டார். டிக்கெட்டோ அல்லது உணவோ வாங்கித் தரவில்லை. பசியுடன் தான் நானும் எனது மகளும் பயணித்தோம். ஒரு இடத்தில் ரயில் நின்றபோது முழிப்பு தட்டியது. எழுந்துபார்த்தபோது அருகில் வைத்திருந்த அந்த சக்கர நாற்காலியை காணவில்லை. பதறி, எனது மகளுடன் ரயில் நிலையத்தில் இறங்கி அங்குமிங்கும் தவழ்ந்து, சக்கர நாற்காலியை பார்த்தீர்களா என அங்கிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது ரயில் கிளம்பத் தொடங்கியது. தவழ்ந்து செல்வதற்குள் அது வெகு தூரம் சென்றுவிட்டது" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "மகளுடன் பிளாட்பாரத்திலேயே அமர்ந்திருந்தேன். நள்ளிரவு நெருங்க நெருங்க பயம் வந்தது. மொழி தெரியாத ஏதோ ஒரு தென்னிந்திய ஊரில் இருக்கிறேன் என்பது மட்டும் தெரிந்தது. அப்போது அங்கு வந்த ஒரு ரயிலில் மகளுடன் ஏறினேன். நான் வாழ்க்கையில் எடுத்த சிறந்த முடிவு அதுதான். அந்த ரயில் சென்னை செல்கிறது என்றோ, நான் சில வருடங்களில் ஒரு பாரா விளையாட்டு வீராங்கனையாக மாறப்போகிறேன் என்றோ அப்போது தெரியாது." என்கிறார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கி, பிளாட்பாரத்திலேயே அமர்திருந்த லக்ஷ்மியையும் அவரது மகளையும் கண்ட சிலர், விசாரித்துவிட்டு, ஒரு அரசு பெண்கள் காப்பகத்திற்கு அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். "அந்த காப்பகத்தில் சிறிது காலம், பிறகு வேறொரு தனியார் காப்பகத்தில் சிறிது காலம் என கழித்த பிறகு, பெட்டர் வேர்ல்டு ஷெல்டர் அமைப்பின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் நடத்திய காப்பகத்தில் எனது மகளுடன் தங்கினேன். மகளை ஒரு நல்ல பள்ளியில் சேர்க்க அவர்கள் உதவினர். அவ்வப்போது கர்நாடகாவில் எனது உறவினர்களிடம் வளர்ந்துவந்த இரு பிள்ளைகளிடமும் பேசி வந்தேன். ஆனால், இப்படியே வாழ்க்கை கழிந்துவிடக்கூடாது என நினைத்து தையல் தொழில் கற்று வந்தேன். அதன் பிறகு பாரா விளையாட்டு போட்டிகளைப் பற்றி அறிந்துகொண்டேன்." என்கிறார் லக்ஷ்மி. படக்குறிப்பு,சென்னையில், அரசு 'மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகத்தில்' தனது மகள் தனலக்ஷ்மியுடன் வசித்துவருகிறார் லக்ஷ்மி சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சென்னை பெருநகர் மாநகராட்சியின் 'மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகத்தில்' தற்போது தனது 15 வயது மகள் தனலக்ஷ்மியுடன் வசித்துவருகிறார் லக்ஷ்மி. தனலக்ஷ்மி இப்போது ஒரு தனியார் பள்ளியில், 7ஆம் வகுப்பு முடித்துவிட்டு, 8ஆம் வகுப்பிற்கு செல்ல காத்திருக்கிறார். பாரா விளையாட்டில் தனக்கு ஆர்வம் ஏற்பட்டதைக் குறித்து பேசிய லக்ஷ்மி, "எனக்கு எந்த பாரா விளையாட்டு ஏற்றது என குழப்பத்தில் இருந்தபோது, சக்கர நாற்காலி கூடைப்பந்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. முதலில் பயிற்சி எடுக்கத் தொடங்கியதும் எளிதாக இருப்பது போல இருந்தது. சரி என நம்பிக்கையுடன் ஒரு போட்டியில் கலந்துகொள்ள சென்றபோது, எதிரணியைச் சேர்ந்த ஒருவர் இடித்ததில் சக்கர நாற்காலியில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. அந்த வலி போகவே சில நாட்களானது. அதன் பிறகுதான் இது எளிதான ஒன்று அல்ல எனப் புரிந்துகொண்டு, தீவிரமாக பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். இப்போது நான் ஒரு மாநில அளவிலான பாரா கூடைப்பந்து வீராங்கனை." என்கிறார். மாற்றத்தை ஏற்படுத்திய மாரியப்பன் தங்கவேலுவின் சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மாரியப்பன் தங்கவேலு (கோப்புப் படம்- 2024) "லக்ஷ்மியைப் போல இன்னும் பல மாற்றுத்திறனாளி பெண்கள், பாரா விளையாட்டுகள் தங்கள் வாழ்வை உயர்த்தும் என நம்புகிறார்கள்" என்கிறார் நுங்கம்பாக்கம் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான அரசு காப்பகத்தின் நிர்வாகியும், பெட்டர் வேர்ல்டு ஷெல்டர் அமைப்பின் இயக்குனருமான, டாக்டர் ஐஸ்வர்யா ராவ். இவரும் ஒரு மாற்றுத்திறனாளியே. "லக்ஷ்மி உள்பட இங்கு தங்கியிருக்கும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தையல் போன்ற தொழில்களைதான் முதலில் கற்றுக்கொடுத்து வந்தோம். ஆனால், ஏதோ ஒரு கைத்தொழில் என்பது அவர்களுக்கான அடுத்த கட்டமாக இருக்காது என்பதை உணர்ந்தோம். அப்போது 2016 பாரா ஒலிம்பிக்கில், தமிழக வீரர் மாரியப்பன் பெற்ற வெற்றி எங்களை சிந்திக்க வைத்தது" என்கிறார். 2016இல், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் டி-42 பிரிவில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். "அந்த வெற்றியால் தமிழகத்தில் பாரா விளையாட்டுகளுக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு எங்கள் காப்பகத்தில் இருக்கும் பெண்களுக்கு பாரா விளையாட்டு பயிற்சிகளை அளித்தோம். அது பலனளிக்க ஆரம்பித்தது. எங்களது பெண்கள் பலரும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளனர்." என்கிறார் ஐஸ்வர்யா ராவ். மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு மனச்சோர்வு, ஆஸ்துமா, நீரிழிவு நோய், பக்கவாதம், உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான ஆபத்து இரு மடங்கு அதிகம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது. இதைக் குறிப்பிட்டுப் பேசிய டாக்டர் ஐஸ்வர்யா, "அதனால்தான் ஏதோ ஒரு தொழில் அல்லது வேலைவாய்ப்பு என அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதை விட பாரா விளையாட்டில் ஆதரவளித்தால், உடல்நலமும் அவர்களுக்கு மேம்படும். எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளால் உடல் உழைப்பு தேவைப்படும் அன்றாட வேலைகளை எளிதில் செய்ய முடியாது. எங்கு சென்றாலும் சக்கர நாற்காலி எனும்போது, எளிதாக எடை கூடி, உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். எனவே தான் எங்கள் காப்பகத்தின் உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி செய்வதும், பாரா விளையாட்டுகளில் கலந்துகொள்வதும் அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது." என்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக ஜிம்கள் படக்குறிப்பு,நுங்கம்பாக்கம் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான அரசு காப்பகத்தின் நிர்வாகி டாக்டர் ஐஸ்வர்யா ராவ் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவில் இருக்கும் பல பகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகளும் எளிதாக பயன்படுத்தக்கூடிய உடற்பயிற்சி மையங்கள் மிகவும் குறைவு எனக் குறிப்பிடும் ஐஸ்வர்யா, "இந்த உடற்பயிற்சி மையம்தான் தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான முதல் இலவச மையம். இதைப் போலவே தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் உருவாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறோம்." என்கிறார். இந்த அரசு காப்பகத்தில் தங்கியிருக்கும் தேசிய பாரா பளுதூக்கும் வீராங்கனையான நதியா, "சாதாரண உடற்பயிற்சி கூடத்திற்குள் மாற்றுத்திறனாளிகள் நுழைந்தாலே விசித்திரமாக பார்ப்பார்கள். காரணம், வழக்கமான ஜிம்களில் சக்கர நாற்காலி பயன்படுத்த வசதிகள் இருக்காது. எனவே நாங்கள் தவழ்ந்து செல்வோம். உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு அவர்களை அவர்கள் பார்க்கும் பார்வையை மறக்கவே முடியாது. மிகவும் அவமானமாக இருக்கும், பிறகு எங்கே நிம்மதியாக உடற்பயிற்சி செய்வது. எனவே அரசு இதுபோன்ற மேலும் சில உடற்பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும்" என்கிறார். படக்குறிப்பு,தேசிய பாரா பளுதூக்கும் வீராங்கனை நதியா மாற்றுத்திறனாளி பெண்களுக்கான புதிய பிரத்யேக உடற்பயிற்சி கூடங்கள் அமைப்பது குறித்து பேசிய சென்னை பெருநகர் மாநகராட்சியின் ஆணையர் ஜெ.குமரகுருபரன், "இப்போது நுங்கம்பாக்கத்தில் மட்டுமே காப்பகத்துடன் இணைந்த ஒரு உடற்பயிற்சி நிலையம் தொடங்கியுள்ளோம். இது பாரா வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல. அனைத்து மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் இலவசம்தான். அவர்கள் முறையாக பதிவு செய்துவிட்டு இதைப் பயன்படுத்தலாம். விரைவில் சென்னையின் பிற பகுதிகளிலும் இத்தகைய 'ஜிம்களை' நிறுவ உள்ளோம். மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகளின் ஆலோசனைபடியே இவை வடிவமைக்கப்படும்." என்று கூறினார். "பாரா விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்காகவோ அல்லது வாழ்வாதாரமாகவோ நான் பார்க்கவில்லை. ஒரு முறை சாப்பாடு இல்லை என மகள் பார்க்க பிறரிடம் கையேந்தி நின்றிருக்கிறேன். இப்போது அதே மகள் முன் பாரா விளையாட்டு வீராங்கனையாக பதக்கத்துடன் நிற்கிறேன். சீக்கிரமாக எனது மற்ற இரண்டு மகள்களையும் என்னுடன் அழைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன்" என்கிறார் லக்ஷ்மி. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyqzr45r8vo
-
ரப் பாடகர் வேடன்
அம்மா, அப்பா, அன்பு, அறிவு, அழகு, அரசியல், அஞ்சாமை....
-
ஐரோப்பாவில் முதன்முறையாக ஓய்வூதிய வயதை 70 ஆக உயர்த்தியது டென்மார்க்
Published By: DIGITAL DESK 2 24 MAY, 2025 | 09:01 PM டென்மார்க் அரசு, தனது நாட்டில் ஓய்வூதிய வயதை 70 ஆக உயர்த்தும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் டென்மார்க், ஐரோப்பாவில் ஓய்வூதிய வயதை 70-க்கு உயர்த்தும் முதல் நாடாக மாறியுள்ளது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டத்திற்கு 81 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்தனர். புதிய சட்டம் 1970 டிசம்பர் 31க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போதைய ஓய்வூதிய வயது சுமார் 67 ஆக இருந்தாலும், 1967 ஜனவரி 1 பிறந்தவர்களுக்கு அது 69 வரை உயரக்கூடியதாகும். இந்த உயர்வு, எதிர்கால சந்ததிகளுக்கு நிலையான சமூக நலன்கள் வழங்கும் நோக்கில் அமல்படுத்தப்படுகிறது என ஊதிய அமைச்சர் அண்ணே ஹால்ஸ்போ ஜோர்ஜன்சென் தெரிவித்துள்ளார். வயது அடிப்படையிலான மக்கள் விநியோகம்: டென்மார்க் நாட்டில் 60–69 வயதினரானவர்கள் சுமார் 7.13 லட்சம் பேர் உள்ளனர். அதேசமயம், 70–79 வயதினர்கள் 5.80 லட்சமாக உள்ளனர். தற்போது 80,000க்கும் மேற்பட்டோர் ஓய்வூதிய வயதுக்கு மேல் இருந்தும் பணியாற்றி வருகின்றனர். இது நல்வாழ்வு நிலை, பணியாளர் உரிமைகள் மற்றும் நிதி ஊக்குவிப்புகள் காரணமாக ஏற்பட்டுள்ளது என்று F&P அமைப்பு தெரிவித்துள்ளது. F&P இயக்குநர் ஜான் வி. ஹான்சன், “இந்த உயர்வு சிலருக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், மக்கள் நீண்ட காலம் பணியாற்றும் போக்கே அதிகமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய ஓய்வூதிய வயது நிலவரம் டென்மார்க் ஐரோப்பாவில் முதன்முறையாக ஓய்வூதிய வயதை 70-க்கு மேல் உயர்த்தும் நாடாக மாறுகிறது. இதனால், உலகளவில் லிபியாவுடன் இணையான நிலையை பெற்றுக் கொள்கிறது. பிரான்சில், கடந்த மார்ச் மாதம் 64 வயதிற்கு ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கு எதிராக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் வீதியில் பேரணி செய்தனர். செப்டம்பரில், சீன அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது, அதில் ஆண்களின் ஓய்வுபெறும் வயது 60 இருந்து 63 ஆக உயர்த்தப்படுகிறது. பெண்களின் தொழில்களுக்கு ஏற்ப 50 மற்றும் 55 ஆக இருந்த ஓய்வுபெறும் வயது, 55 மற்றும் 58 ஆக உயர்த்தப்பட்டது. இங்கிலாந்தில் 2026 முதல் 2028 வரை ஓய்வூதிய வயது 67 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் 68 ஆக உயர்த்தும் ஆய்வும் நடந்து வருகிறது. அமெரிக்காவில் ஓய்வு பெறும் வயது, ஐக்கிய இராச்சியத்தின் ஓய்வுவயதுக்கு சமானமாகவே இருக்கிறது. இருப்பினும், சில சமூக பாதுகாப்பு நலன்கள் 62வது வயதிலிருந்தே கிடைக்கத் தொடங்குகின்றன. உலகம் முழுவதும் வாழ்நாள் நீடித்தும், பொருளாதார சவால்களும் ஓய்வூதிய வயதை உயர்த்தும் ஒரு கட்டாய நிலையை உருவாக்கி வருகின்றன. டென்மார்க் இந்த மாற்றத்தில் முன்னணி நாடாக மாறி, எதிர்கால சந்ததிகளுக்கான நலத்தைக் கண்காணிக்கும் நோக்கில் 70 வயதுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளது. இது ஒரு உலகளாவிய போக்காகவே உருவாகி வருகிறது, மக்கள் நீண்ட காலம் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. https://www.virakesari.lk/article/215582
-
16 ஆண்டுகளின் பின் தீவிரமடைந்துள்ள சிக்குன்குனியா; பேராசிரியர் நீலிகா மலவிகே
24 MAY, 2025 | 01:07 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவி வருகிறது. ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மரபணு ஆராய்ச்சியில் இவ்விடயம் வெளிப்பட்டுள்ளதாக பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : தற்போது பரவி வரும் சிக்குன்குனியா வைரஸ் இந்து சமுத்திரத்தில் பரவக் கூடிய வைரஸ் பரம்பரையைச் சேர்ந்தது. இது பல தனித்துவமான பிறழ்வுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஒரு பெரிய சிக்குன்குனியா பரவலை எதிர்கொண்டு வருகிறது. தற்போது பரவி வரும் சிக்குன்குனியா வைரஸ் பிரழ்வின் முழு மரபணு ஆய்வினை நாம் மேற்கொண்டோம். மேலும் அது தெற்காசியாவில் தற்போது பரவி வரும் ஊர்ஐமுஏ பிரழ்வைப் போலவே இந்து சமுத்திர பரம்பரையைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்துள்ளோம். இந்த புதிய பிறழ்வுகளில் சில முன்னர் வகைப்படுத்தப்படாததால், அவை கொசுக்களுக்குள் உடற்தகுதி, வைரஸ் பிரதிபலிப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தவிர்ப்பை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கண்டறிவது முக்கியமானதாகும். https://www.virakesari.lk/article/215570
-
சென்னையில் மகிழும் மாற்றுத்திறனாளி பெண்கள்
"மற்ற ஜிம்களில் எங்களையே உற்றுப் பார்ப்பார்கள்" - சென்னையில் மகிழும் மாற்றுத்திறனாளி பெண்கள் 24 மே 2025, 01:14 GMT மாற்றுத்திறனாளி பெண்களுக்காக செயல்படும் இலவச உடற்பயிற்சிக் கூடம் தற்போது சென்னை மாநகராட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இங்கே உடற்பயிற்சி மேற்கொள்ள வரும் பெண்கள், இந்த உடற்பயிற்சிக் கூடங்கள் குறித்து கூறுவது என்ன? அவர்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த உடற்பயிற்சி கூடங்கள். முழு விவரம் வீடியோவில்! - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c771v21v01vo
-
ரப் பாடகர் வேடன்
வேடன் ஈழத்தமிழனா? | யாழ்ப்பாணத்து பெண் எப்படி கேரளாவில்? | Indian Rapper Vedan| voice of voiceless
-
பொலிஸ் நிலையங்களில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வேண்டும் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
24 MAY, 2025 | 04:05 PM நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசேடமாக பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறைக்கூண்டுகளில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்படும் சந்தேக நபர்கள் பொலிஸ் நிலையங்களின் சிறைக்கூண்டுகளில் உயிரிழக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/215581
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நல்லூர் ஆலயசூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு உணவகத்தை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் - வடக்கு ஆளுநரிடம் சைவ அமைப்புகள் வேண்டுகோள் 24 MAY, 2025 | 04:58 PM நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக அதனை மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும், சட்டவிரோத உணவகம் அமைக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின் செயற்பாடு தொடர்பில் விசாரணைக் குழு அமைக்குமாறும் நல்லை சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் யாழ்ப்பாணத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் அகில இலங்கை சைவ அர்ச்சகர் சபை, சைவ பரிபாலன சபை, அகில இலங்கை சைவ மகா சபை, சைவ வித்யா விருத்தி சங்கம், இலங்கை சைவசமய பேரவை உட்பட அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்துகற்கைகள் பேராசிரியர், திருக்கேதீச்சரம் அறங்காவலர் ஆகியோர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களைச் சந்தித்து வலியுறுத்தி மனுவைக் கையளித்தனர். வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப்பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (24.05.2025) இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. முதல் கட்டமாக யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட நல்லூர் ஆலயச் சுற்றாடலில் மதுபான கேளிக்கை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது எனவும் அதை சிவபுண்ணிய பிரதேசமாக மாநகர சபை வர்த்தமானி ஊடாக அறிவிப்பதற்கு ஏதுவான நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநரிடம் கோரினர். இதையே ஏனைய உள்ளூராட்சி மன்றங்களும் பின்பற்றி தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள ஆலய நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதற்குரிய அறிவுறுத்தல்களையும் வழங்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தனர். மேலும் மேற்படி உணவகம் பன்னாட்டு நிறுவனம் என்ற அடிப்படையில் இலங்கையின் சட்டம் தொடர்பாக முழுமையாக அறிந்து வைத்திருப்பார்கள் எனவும், அவர்கள் நல்லூரில் தமது நிறுவனத்தின் கிளையை எந்தவொரு அனுமதியையும் பெற்றுக்கொள்ளாது திறந்தமை திட்டமிட்ட நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டிய தமிழ்ச் சைவப்பேரவையினர், இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் அலுவலர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாகவும், அனுமதியற்ற வர்த்தக நிறுவனத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பிலும் விசாரணைக்குழு அமைத்து விசாரணை முன்னெடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர். இளைய சமூகத்தை வழிப்படுத்தும் வகையில் அறநெறிக் கல்வியை கட்டாயமாக்குவதற்கான யோசனை தொடர்பிலும் தமிழ்ச் சைவப்பேரவையினர் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான அனைத்து தனியார் கல்வி செயற்பாடுகளையும் வெள்ளி மாலையும், ஞாயிறு மதியம் வரையிலும் மூடுவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுத்து நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநரிடம் கோரினர். அத்துடன் அறநெறி வகுப்புக்கு மாணவர்கள் செல்வதை உறுதிப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் அறநெறி வகுப்புக்கான வருகை மற்றும் செயற்பாடுகளை கட்டாயக் கல்வியின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்வதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தனர். சில பாடசாலைகளில் மாணவர்களை சைவச் சின்னங்கள் அணிந்து செல்வதை தடைவிதிக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என ஆதாரங்களுடன் தமிழ்ச் சைவப்பேரவையினர் ஆளுநரிடம் முறையிட்டனர். தமிழ்ச் சைவப் பேரவையினரின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்வதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/215584
-
கொழும்பிலுள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் சென்ற பெண் கைது
துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்! 24 MAY, 2025 | 01:40 PM தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை (24) உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை (23) கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215574
-
பூநகரியில் அரச காணிகளில் அத்துமீறல் : தடுக்க சென்ற அரச உத்தியோகஸ்தர்களுக்கு மிரட்டல்
24 MAY, 2025 | 01:05 PM கிளிநொச்சி, பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத கடைகளை அகற்ற சென்ற பூநகரி பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகஸ்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதியில் நாச்சிக்குடா சந்திக்கு அருகாமையில் உள்ள அரச காணிகளுக்குள் வியாழக்கிழமை (22) இரவு அனுமதியற்ற முறையில் தற்காலிக கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில இரும்பினால் ஒட்டப்பட்ட கடைகளாகவும் காணப்பட்டுள்ளன. இது தொடர்பில் தகவல் அறிந்த பிரதேச சபை செயலாளர், வருமான வரி பரிசோதகர் உள்ளிட்ட அரச உத்தியோகஸ்தர்கள் குறித்த இடத்திற்கு சென்று அனுமதியற்ற கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் அது தொடர்பிலான அறிவித்தல்களையும் கடைகளில் ஒட்டியுள்ளனர். அந்நேரம், கும்பல் ஒன்று, அரச உத்தியோகஸ்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு , அவர்களை காணொளி எடுத்துள்ளார்கள். அதேவேளை பூநகரி பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டுமான பணிகள், அரச காணிகளில் அத்துமீறிய செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பூநகரி பிரதேச சபை செயலாளர் ரத்தினம் தயாபரன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215567
-
ஒரேயொரு வட்ஸ் அப் செய்தி மூலம் 1400 குடும்பங்களின் வயிற்றிலடித்த ஆடை தொழிற்சாலை : வேலை இல்லை, கையில் காசுமில்லை, செல்வதற்கு இடமுமில்லையென கண்ணீர் விடும் தொழிலாளர்கள்
நெக்ஸ்ட் நிறுவனம் ஒரு பில்லியன் யூரோ இலாபம் ஈட்டுகிறது; எமக்கு நஷ்ட ஈடு வேண்டாம்; தொழிலே வேண்டும் - சுதந்திர வர்த்தக வலய சேவையாளர் சங்கம் 24 MAY, 2025 | 01:09 PM (எம்.மனோசித்ரா) பிரித்தானியாவில் அதிக இலாபமீட்டும் நிறுவனங்களில் நெக்ஸ்ட் நிறுவனம் நான்காவது இடத்திலுள்ளது. நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எமக்கு ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் யூரோ இலாபம் காணப்படுகிறது. எனவே தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்து தொழிலாளர்களுக்கு தொழிலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுதந்திர வர்த்தக வலய சேவையாளர் சங்கத்தின் இணை செயலாளர் அன்டன் மார்கஸ் தெரிவித்தார். பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவுடன் தொழில் அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நெக்ஸ்ட் தொழிற்சாலை கடந்த 19ஆம் திகதி மாலை 5 மணியிலிருந்து மூடப்பட்டமை தொடர்பில் இரண்டாவது முறையாக பிரதி தொழில் அமைச்சருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. கடந்த வியாழனன்று அமைச்சர் நெக்ஸ்ட் நிறுவனத்தின் முகாமைத்துவத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார். அந்த பேச்சுவார்த்தை குறித்த அறிக்கை எமக்கு வழங்கப்பட்டது. அதற்கமைய முகாமைத்துவத்தினால் முன்மொழியப்பட்டுள்ள விடயங்களை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை காரணிகளுடன் அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். இருதரப்புக்குமிடையில் கையெழுத்திடப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் காணப்படுகிறது. அந்த ஒப்பந்தத்திலுள்ள ஏற்பாடுகளுக்கமைய நிறுவன முகாமைத்துவம் செயற்படவில்லை என்பதையும் அமைச்சரிடம் தெரிவித்திருக்கின்றோம். இருதரப்பினரையும் ஒரே சந்தர்ப்பத்தில் அழைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு அமைச்சிடம் கோரியுள்ளோம். அதற்கு அமைச்சரால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. எனவே நஷ்டஈடு செலுத்துவதற்கான நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்கு அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு மீண்டும் தொழிற்சாலையை திறக்கும் நோக்கத்துடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அமைச்சிடம் வலியுறுத்தியிருக்கின்றோம். நாம் நஷ்டஈட்டைக் கோரவில்லை. தொழிலையே கோருகின்றோம். தொழில் ஆணையாளரிடம் செல்லாவிட்டால் மேலதிகக் கொடுப்பனவை செலுத்துவதாக நிறுவனம் முன்வைத்துள்ள முன்மொழிவையும் நிராகரித்துள்ளோம். இந்த நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் யூரோ இலாபம் காணப்படுகிறது. பிரித்தானியாவில் அதிக இலாபமீட்டும் நிறுவனங்களில் நெக்ஸ்ட் நிறுவனம் நான்காவது இடத்திலுள்ளது. நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எமக்கு ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பிலும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தமாகும். அந்த வகையில் அமைச்சரும் குறித்த ஒப்பந்தத்துக்கு அமைய செயற்படுவார் என நம்புகின்றோம். https://www.virakesari.lk/article/215560
-
ரப் பாடகர் வேடன்
மலையாள ராப் பாடகர் வேடன் மீது என்ஐஏவிடம் புகார்! 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான “வாய்ஸ் ஆஃப் வாய்ஸ்லெஸ்” என்ற பாடலில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறி, வேடன் என்று பிரபலமாக அறியப்படும் ராப்பர் ஹிரந்தாஸ் முரளி மீது பாஜக தலைவர் ஒருவர் புகார் அளித்துள்ளார். மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கடந்த சில நாள்களாக கஞ்சா வழக்கில் கைதாகி வருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் பிரபல ராப் பாடகரான வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளியும் கஞ்சா பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து புலி பல் டாலருக்காக வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை அமைக்ககம் மற்றும் என்ஐஏவிடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு நகராட்சி கவுன்சிலர் மினி கிருஷ்ணகுமார் என்பவர் புகார் அளித்துள்ளார். பாடகர் வேடன் கடந்த 2019ஆம் ஆண்டு பாடிய “குரலற்றவர்களின் குரல்” என்ற பாடலில் மத்திய அரசின் உச்சத்தில் இருப்பவர்களைப் பற்றி மறைமுகமாக விமர்சித்திருந்தார். புகாரில் இந்த பாடலை குறிப்பிட்டு, பிரதமரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் பிம்பத்தை அவமதிக்கும், ஆதாரமற்ற, அவமரியாதைக்குரிய மற்றும் புண்படுத்தும் கருத்துக்கள் பாடலில் இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் சாதியின் அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தி வருவதாகவும், இவரது பின்னணி குறித்தும் விசாரணை செய்ய பாலக்காடு நகராட்சி கவுன்சிலர் மினி கிருஷ்ணகுமார் புகார் அளித்தார். சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள். https://news7tamil.live/complaint-filed-against-malayalam-rapper-vedan-with-home-ministry-and-nia.html