Everything posted by ஏராளன்
-
அரச ஊழியர்களுடன் பயன்பெறப்போகும் மற்றொரு தரப்பினர்: அநுர வெளியிட்ட அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதுடன், தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதியும் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நேற்று (02) தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நியாயமான சம்பளம் தொடர்ந்தும் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், “தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டனர், மே தினமன்று கொட்டகலையில் 1750 ரூபாய் தருவதாகச் சொன்னார்கள், ஆனால் எந்த தோட்டத் தொழிலாளிக்கும் அந்த சம்பளம் வழங்கப்படவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்குவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம். மக்கள் எப்பொழுதும் அரசை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை, பொருளாதாரம் சீராகும் வரை மக்களைக் காப்போம். கிடைத்துள்ள வாய்ப்பு அதன் பிறகு மக்கள் செய்யும் வேலைகளில் நல்ல வருமானம் கிடைக்கும், மக்கள் நலமாக வாழலாம், தேசிய மக்கள் சக்தி ஒரு சமுதாயத்தை நிறுவும். இந்த கனவு நமக்கு எவ்வளவு காலமாக இருந்தது? மக்களை முன்னேற்ற எவ்வளவு கனவு கண்டிருப்போம்? இப்போது எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.” என்றார். ” https://ibctamil.com/article/new-changes-in-2025-budget-proposal-sri-lanka-1730634021#google_vignette
-
தொழிற்சங்கங்களை இல்லாமல் செய்யும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக தொழிற்சங்கங்கள் அணி திரளவேண்டும் - நிமல்கா பெர்னாண்டோ
- எம்.ஆர்.எம்.வசீம் தொழிற்சங்கங்களை இல்லாதொழித்து ஏகாதிபத்திய ஆட்சியே முன்னெடுப்பதே தேசிய மக்கள் சக்தியின் திட்டம். அதுவே தற்போது லக்ஷ்மன் நிபுணாரச்சியின் வாயால் வெளி வந்திருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் நிமல்கா பெர்ணான்டோ தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், தெற்காசியாவிலேயே சிறந்த தொழில் சட்டம் இருப்பது இலங்கையிலாகும். என்றாலும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தொழிற்சங்க தலைவர்களின் போராட்டம் காரணமாகவே எமது வேலை நேரம் 8 மணி நேரமாக அனுமதிக்கப்பட்டது. ஆனால் தொழிற்சங்கங்களை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் லக்ஷ்மன் நிபுணாரச்சி தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். எமது நாட்டில் தொழிற் சங்கங்கள் கடந்த காலங்களில் தொழிலாளர்களின் உரிமைக்காக முன்னெடுத்து வந்த பாரிய போராட்டங்கள் காரணமாகவே நாங்கள் எமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள முடியுமாகின. அவர்களின் அர்ப்பணிப்பை மதிக்க வேண்டும். அதனால் லக்ஷ்மன் நிபுணாரச்சியின் கூற்றை நாங்கள் கண்டிப்பதுடன் அவரின் இந்த கூற்றுக்கு எதிராக இந்த நாட்டில் இருக்கும் தொழிற்சங்கங்கள் அணி திறளவேண்டும். நிபுணாரச்சி போன்றவர்களுக்கு இவ்வாறு கதைக்கவிட்டு, ஜோசப் ஸ்டாலின் போன்றவர்கள் ஏன் அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள். அவர்களின் போராட்டம் எங்கே என கேட்கிறோம். நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தொழிற்சங்க போராட்டங்களில் அதிகமானவை மக்கள் விடுதலை முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டதாகும். தற்போது அவர்கள் ஆட்சிக்கு வந்ததுடன் தொழிற்சங்கங்களை இல்லாதொழித்து, ஏகாதிபத்திய ஆட்சியை கொண்டுசெல்ல முயற்சிக்கிறார்கள். இதற்கு யாரும் இடமளிக்கக்கூடாது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடையில் வளமான நாடு அழகான வாழ்க்கை என தெரிவித்தாலும் அதன் உள்ளடக்கத்தில் அவ்வாறு எதுவும் இல்லை.மக்கள் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அட்டை பக்கத்தை மாத்திரம் பார்த்து ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்துள்ளனர். தற்போதுதான் இவர்களின் உண்மை சுயரூபம் அவர்களின் வாய்களினாலே வெளிவருகிறது. மேலும் தேசிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகளுக்கு எமது புதிய ஜனநாயக முன்னணியே பாரிய சவாலை ஏற்படுத்தி வருகிறது. இது அவர்களுக்கு பாரிய பிரச்சினையாகி உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளை பாதுகாத்துக்கொள்வதும் தற்போது அவர்களுக்கு சவாலாகியுள்ளது. அதனால் அரசாங்கத்தின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக செயற்படுவதற்கு இந்த தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணிக்கு மக்கள் பாரிய சக்தியை வழங்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/197810
-
அடர்ந்த காட்டுக்குள் புதைந்து போன 'மாயன் நகரம்' தற்செயலாக புலப்பட்டது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, அறிவியல் நிருபர் மெக்சிகோவில் காடுகளுக்கு அடியில் புதைந்திருந்த மிகப்பெரிய மாயன் நகரம் ஒன்று, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் மெக்சிகோவின் தென்கிழக்கு மாகாணமான காம்பேச்சியில் பிரமிடுகள், விளையாட்டு மைதானங்கள், மாகாணங்களை இணைக்கும் பாதைகள் மற்றும் சுற்று மாளிகை அரங்கத்தைக் (ஆம்பிதியேட்டர்) கண்டறிந்துள்ளனர். அப்பகுதியில் புதைந்துபோன வளாகம் ஒன்றையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அதற்கு அவர்கள் `வலேரியானா’ என்று பெயரிட்டுள்ளனர். `லிடார்’ (Lidar) என்னும் லேசர் சென்சார் கருவியைப் பயன்படுத்தி, பூமிக்கு அடியில் புதைந்துபோன கட்டமைப்புகளை ஆய்வாளர்கள் வரைபடமாக்கி வருகின்றனர். பண்டைய லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய மாயர்கள் நாகரிகத்தின் தொல்லியல் தளமாகக் கருதப்படும் கலக்முல் (Calakmul) நகருக்கு அடுத்தபடியாகதற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். தற்செயலாகக் கிடைத்த மாயன் நகரம் தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் இணையத்தில் ஆராய்ச்சித் தரவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, "தற்செயலாக" இந்த மாயன் நகரம் இருந்ததற்கான சாத்தியங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். அதற்குப் பிறகு அவரது குழுவினர் மூன்று தொல்லியல் தளங்களை அங்கே கண்டுபிடித்தனர். அதன் மொத்த பரப்பு ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோ அளவுக்கு இருந்துள்ளது. "நான் கூகுள் சர்ச்சின் 16வது பக்கத்தைப் பார்த்து கொண்டிருந்தேன். சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக ஒரு மெக்சிகன் அமைப்பு நடத்திய லேசர் ஆய்வு ஒன்று கண்ணில்பட்டது" என்று கூறுகிறார் லூக் ஆல்ட்-தாமஸ். அவர் அமெரிக்காவில் உள்ள துலேன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதிதாக கண்டறியப்பட்ட நகரத்தின் புகைப்படங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் அது காலக்முல்லுக்கு அருகே உள்ள பிரமிடு கட்டுமானங்கள் போன்ற கட்டுமானங்களைக் கொண்டுள்ளது எதேச்சையாக எதையோ தேட ஆரம்பித்து இந்த நகரத்தை கண்டறிந்தது எப்படி என்பது குறித்து விளக்கும் ஆல்ட் - தாமஸ், "நான் பார்த்தது ஒரு `லிடார்’ லேசர் சர்வே தான்" என்கிறார். லிடார் தொழில்நுட்பம் என்பது`ரிமோட் சென்சிங்’ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுவது. ஒரு விமானத்தில் இருந்து ஆயிரக்கணக்கான லேசர் பல்ஸ்கள் வெளியிடப்படும். அது பிரதிபலித்து அந்த சிக்னல் திரும்புவதற்கு எடுக்கும் நேரத்தைப் பயன்படுத்தி கீழே உள்ள பொருட்களை வரைபடமாக்கும் முறையே லிடார் லேசர் சர்வே." ஆல்ட்-தாமஸ் அந்த கூகுள் தேடலில், தொல்லியல் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் முறைகளைக் கொண்டு தரவுகளைச் செயலாக்கம் செய்து பார்த்தபோது ஓர் உண்மையைக் கண்டறிந்தார். இதற்கு முன்னர் ஆய்வாளர்கள் கவனிக்கத் தவறவிட்டதை தாமஸ் கண்டார். அந்த லிடார் ஆய்வு முடிவுகள் மூலம், கி.பி 750 முதல் 850 வரை வாழ்ந்த 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான மக்கள்தொகை கொண்ட ஒரு பெரிய பழங்கால நகரத்தின் இருப்பை அவர் கண்டுபிடித்தார். இது இன்று இந்தப் பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆல்ட்-தாமஸ் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் அருகில் இருந்த ஒரு குளத்தின் பெயரை அடிப்படையாக வைத்து இந்த நகரத்திற்கு `வலேரியானா’ என்று பெயரிட்டனர். நகரத்தின் அழிவுக்கு என்ன காரணம்? படக்குறிப்பு, வலேரியானா நகரத்தின் தோற்றம் ஆய்வின் இணை ஆசிரியரான பேராசிரியர் மார்செல்லோ கானுடோவின் கூற்றுப்படி, இந்தக் கண்டுபிடிப்பு `வெப்பமண்டங்களில் தான் நாகரிகங்கள் அழிந்துபோயின’ என்ற மேற்கத்திய நம்பிக்கைக்கு சவால் விடும் வகையில் இருக்கிறது. உலகின் இந்தப் பகுதி, மிகவும் ஆழமான மரபுகளைக் கொண்ட, பரந்துபட்ட சமூகக் கட்டமைப்புகள் அடங்கிய கலாசாரங்களின் தாயகமாக இருந்துள்ளதாக அவர் விவரித்தார். இந்த நகரத்தின் அழிவுக்கு காரணம் என்ன என்பதை நாங்கள் உறுதியாகக் கூற முடியாது, ஆனால் தொல்லியல் ஆய்வாளர்கள் காலநிலை மாற்றம் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். வலேரியானா, ஒரு தலைநகருக்கான அடையாளங்களைக் கொண்டுள்ளது. இந்த நகரம், அடர்த்தியான கட்டுமானங்களுடன், அற்புதமான காலக்முல் நகரத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மேலும், காலக்முல்லில் இருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மாயன் சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் எக்ஸ்புஜில் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பிரதான சாலையில் இருந்து 15 நிமிட பயண தூரத்தில் இந்தப் பகுதி அமைந்துள்ளது. மக்கள் வாழும் பகுதிக்கு மிக அருகில் இருந்தபோதிலும் யாராலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இந்தப் பகுதியை `மறைந்துள்ள நிலப்பரப்பு’ என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தப் புதைந்துபோன நகரத்தின் படங்கள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஏனெனில் யாரும் இப்பகுதிக்குச் சென்றதில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் உள்ளூர் மக்கள் தரையின் கீழ் இடிபாடுகள் இருப்பதாக சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளனர். சுமார் 16.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த இந்த நகரம், 2 கிமீ தொலைவில் பெரிய கட்டடங்களைக் கொண்ட இரண்டு பெரிய மையங்களைக் கொண்டிருந்தது, அருகருகே அமைந்த வீடுகள் மற்றும் தரைப்பாதைகளால் இணைக்கப்பட்ட பகுதிகள் இருந்தன. இங்கு வழிபடும் பிரமிடுகளுடன் இரண்டு பிளாசாக்கள் உள்ளது. அங்கு மாயன் மக்கள் வழிபட்டிருக்கலாம் அல்லது பொக்கிஷங்களை மறைத்து வைத்திருக்கலாம், அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்திருக்கலாம். மேலும், அங்கு ஒரு பழங்கால விளையாட்டு மைதானமும் இருந்தது. மொத்தத்தில், ஆல்ட் தாமஸ், பேராசிரியர் கானுடோ ஆகியோர் இந்த காட்டுப் பகுதியில் உள்ள மூன்று வெவ்வேறு தளங்களை ஆய்வு செய்தனர். அவர்கள் பல்வேறு அளவுகளில் 6,764 கட்டடங்களைக் கண்டுபிடித்தனர். மாயன்கள் வாழ்ந்த பகுதி சிதைந்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் இந்த ஆராய்ச்சியோடு தொடர்பில்லாத லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் எலிசபெத் கிரஹாம் கூறுகையில், இந்த ஆய்வின்படி, மாயன் நாகரிக மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கவில்லை. அவர்கள் சிக்கலான அமைப்பைக் கொண்ட நகரங்களில் வாழ்ந்தனர் என்ற கூற்றுகளை இந்த ஆய்வு ஆதரிக்கிறது” என்றார். "தற்போது அந்த இடங்கள் காட்டுப் பகுதிகளாக மாறியிருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அதில் மக்கள் குடியேற்றங்கள் இருந்துள்ளன” என்றும் கூறுகிறார். ஆராய்ச்சிப்படி, மாயன் நாகரிகத்தின் சரிவு கி.பி 800இல் தொடங்கி இருக்கலாம். அவர்களின் அடர்த்தியான மக்கள்தொகை மற்றும் காலநிலை தொடர்பான பிரச்னைகளைத் தாங்க முடியாமல் அழிவு நிகழ்ந்திருக்கலாம். "இப்பகுதிகளில் வறட்சி சூழல் ஏற்பட்டபோது, இந்த நிலப்பரப்பு மக்களால் நிரம்பி வழிந்தது என்பதை இது குறிக்கிறது. எனவே, மக்கள் இருப்பிடங்களை விட்டு வெகுதூரம் நகர்ந்ததால், முழு கட்டமைப்பும் சிதைந்திருக்கும்" என்று ஆல்ட் தாமஸ் கூறுகிறார். இறுதியாக, 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஸ்பெய்ன் நாட்டு படையெடுப்பும் மாயன்களின் அழிவுக்கு வழிவகுத்தது. இன்னும் பல நகரங்களைக் கண்டிபிடிக்கலாம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் பேராசிரியர் கானுடோ கூற்றுப்படி, தாவரங்கள் நிறைந்த வெப்ப மண்டலப் பகுதிகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, அழிந்த நாகரிகங்களைக் கண்டறிவதில் லிடார் தொழில்நுட்பம் புரட்சி செய்துள்ளது. அவரது தொல்லியல் பணியின் ஆரம்பக் காலத்தில், தரையை அங்குலம் அங்குலமாகச் சரிபார்க்க எளிய கருவிகளைப் பயன்படுத்தி, உடல் உழைப்பு மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மெசோ அமெரிக்கன் பிராந்தியத்தில் லிடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியபோது, தொல்லியல் ஆய்வாளர்கள் ஒரு நூற்றாண்டில் செய்த பணிகளைவிட 10 மடங்கு அதிக பகுதிகள் வரைபடமாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். ஆல்ட் தாமஸ், "தொல்லியல் ஆய்வாளர்களுக்குத் தெரியாத பல தளங்கள் அங்கு இருப்பது தெரிய வந்துள்ளது’’ என்றார். உண்மையில் பல தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஆனால் அவை அனைத்தையும் ஆய்வாளர்களால் அகழாய்வு செய்ய முடியாது. "ஏதோவொரு கட்டத்தில் வலேரியானாவுக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அது சாலைக்கு எவ்வளவு அருகில் உள்ளது என்பது தெரியாது. அதே நேரம் நாங்கள் அங்கு தொல்லியல் பணிகளை மேற்கொள்வோம் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது" என்கிறார் ஆல்ட் தாமஸ். மேலும், "லிடார் சகாப்தத்தில் பல புதிய மாயன் நகரங்களைக் கண்டறிவதால் சில பிரச்னைகளும் உள்ளன. அவற்றின் எண்ணிக்கை நம்மால் ஆய்வு செய்ய முடியாத அளவுக்கு அதிகமானவை" என்று அவர் கூறுகிறார். இந்த ஆய்வு ஆன்டிக்விட்டி (Antiquity) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyg4d5wzd7o
-
சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்ட பின்னணியில் அமித் ஷா – கனடா குற்றச்சாட்டு!
அமித் ஷா மீதான குற்றச்சாட்டு அபத்தமானது ஆதாரமற்றது: இந்தியா புதுடெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக கனடா அமைச்சர் டேவிட் மோரிசன் குற்றம்சாட்டியதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தகுற்றச்சாட்டு அபத்தமானது, ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ள இந்திய அரசு இந்த விஷயத்தில் கனடா தரப்பின் விளக்கத்தை தெரிவிக்குமாறு அந்நாட்டு தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த 2023 ஜூன் மாதம் கனடாவில் கொலை செய்யப்பட்டார். இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு உதவியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கடந்த ஓராண்டாகவே இந்தியா - கனடா இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த சூழலில் கனடாவின் குற்றச்சாட்டு குறித்து கடந்த மே மாதம் பதில் அளித்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ‘‘ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாமீது குற்றம் சுமத்தும் கனடா அரசு அதற்கான எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. கனடாவின் உள்நாட்டு அரசியல் காரணமாகவே ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்டிருப்பார். அவரது கொலைக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காலிஸ்தான் ஆதரவாளர்களில் சில பிரிவினர் கனடாவில் தங்களுக்கான வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளனர். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. தவிர சில கட்சிகளும் காலிஸ்தான் ஆதரவு தலைவர்களை சார்ந்து இருக்கின்றன. இந்த சூழலில் வாக்கு வங்கியை குறிவைத்தே நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது கனடா குற்றம்சாட்டுகிறது’’ என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது கனடா குற்றம் சாட்டியுள்ளது. கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை மிரட்டல் உளவுத் தகவல் சேகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார் என்று கனடா வெளியுறவு துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் சமீபத்தில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. ‘கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல்களுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கீகாரம் அளித்ததாகவும் அது குறித்த ஆதாரங்களை கனடா பாதுகாப்பு முகமைகள் சேகரித்துள்ளதாகவும் கனடாஅதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. ‘‘வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிடம் இந்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா பெயரை குறிப்பிட்டது நான்தான்’’ என்று கனடா வெளியுறவு துணை அமைச்சர் டேவிட் மோரிசன் தெரிவித்தார். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. கனடாவின் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது ஆதாரமற்றது என்று இந்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் கனடா தரப்பின் விளக்கத்தை தெரிவிக்குமாறு அந்த நாட்டு தூதரக அதிகாரிக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கனடாவின் பொது பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு நிலைக்குழுவின் முன்பு அந்நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் டேவிட் மோரிசன் கடந்த அக்டோபர் 29-ம் தேதி அபத்தமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கனடாவின் தூதரக அதிகாரியை அழைத்து இந்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்திய தூதரக அதிகாரிகளை கனடா அரசு மோசமாக நடத்துகிறது. அவர்களது செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன. அவர்களது பேச்சு ஒட்டுக்கேட்கப்படுகிறது. இதுபோல தூதரக விதிகளை மீறி கனடா அரசு செயல்படுகிறது. இத்தகைய நெருக்கடிக்கு இடையில்தான் கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இது தவிர உலக அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இந்தியா குறித்து தவறான கருத்துகளை கனடா பரப்புகிறது. இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் இருதரப்பு உறவுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும், என அவர் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/197780
-
நைஜீரியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு மரணதண்டனை? : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்
நைஜீரியாவில் வாழ்கைசெலவு அதிகரிப்பிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 சிறுவர்களிற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவேளை நால்வர் மயங்கி விழுந்துள்ளனர். வாழ்க்கை செலவு அதிகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 76 பேருக்கு எதிரான தேசத்துரோக குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றச்சாட்டுகளை நைஜீரியா அரசாங்கம் சுமத்தியுள்ளது. இவர்களில் 14 முதல் 17 வயதானவர்களும் காணப்படுகின்றனர். நைஜீரியாவில் வாழ்க்கை செலவு அதிகரிப்பு குறித்த விரக்தி காரணமாக பொதுமக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டனர் பலர் கைதுசெய்யப்பட்டனர். நைஜீரியாவில் 1976 இல் மரண தண்டனை நடைமுறைக்கு வந்தது, எனினும் 1996ம் ஆண்டின் பின்னர் எவருக்கும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. நைஜீரியாவின் சிறுவர் உரிமை சட்டம் சிறுவர்களை குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்துவதற்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் அனுமதிக்கவில்லை என சட்டத்தரணியொருவர் தெரிவித்துள்ளார். ஆகவே சிறுவர்களை நீதிமன்றத்தின் முன்னிலையில் கொண்டு சென்றமை தவறான விடயம், என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197788
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. எழுதியவர், ரோசா அசாத் பதவி, பிபிசி பாரசீகம் இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நவம்பர் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த காணொளி தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தப் பெண் தனது ஆடைகளை கழற்றி வீசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிபிசி பாரசீக டிஜிட்டல் குழு இந்த சம்பவம் நடந்த இடத்தை உறுதி செய்துள்ளது. டெஹ்ரானின் இஸ்லாமிய ஆசாத் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகத்தின் பிளாக் 1 பகுதியில் இது நிகழ்ந்துள்ளது. பிபிசியைப் பொருத்தவரை, இந்த சம்பவம் நவம்பர் 2-ஆம் தேதி சனிக்கிழமை நடந்தது. சமூக ஊடகங்களில் வெளியான சில புகைப்படங்களில் இளம்பெண் உள்ளாடை அணிந்தபடி அலட்சியமாக வளாகத்தில் நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. வைரலான வீடியோ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமூக வலைதளங்களில் இரான் மாணவி குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவில், உள்ளாடை அணிந்தபடி பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்துள்ளார். பல்கலைக் கழகத்தின் ஆண் மற்றும் பெண் பாதுகாப்பு அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த உரையாடலின் ஆடியோ வீடியோவில் கேட்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இந்த வீடியோ எங்கோ தொலைவில் உள்ள வகுப்பறை ஜன்னலில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். மற்றொரு வீடியோவில், இந்த பெண் பல்கலைக் கழக வளாகத்தின் பிளாக் ஒன்றின் அருகே சாலையில் நடந்து செல்வதைக் காண முடிகிறது. அந்தப் பெண் திடீரென தனது ஆடைகளை களைகிறார். சம்பவ இடத்தில் இருந்தவர்களின் எதிர்வினையும் இதை உறுதிப்படுத்துகிறது. சிறிது நேரத்தில் பல போலீஸ் அதிகாரிகளுடன் ஒரு கார் சம்பவ இடத்திற்கு வந்தது. காரில் இருந்து இறங்கிய பல அதிகாரிகள் அந்தப் பெண்ணை காருக்குள் ஏற்றிச் செல்வதை வீடியோவை காண முடிகிறது. சமூக ஊடகங்களில் எதிர்வினை இரானுக்கு வெளியே பல ஊடக தளங்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகளில் இதனை, "அந்தப் பெண் தனது ஆடைகளை களைவதன் மூலம் தன் எதிர்ப்பை தெரிவிக்கிறார்” என்று விவரித்தன. ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்திற்கும், பல்கலைக் கழக பாதுகாப்பு அதிகாரிகளின் நடத்தைக்கும் எதிரான எதிர்வினையாக அந்தப் பெண் இப்படி செய்ததாக விவரிக்கப்படுகிறது. இதுதொடர்பான பல செய்திகள் 'அமிர் கபீர் நியூஸ் லெட்டர்' என்னும் டெலிகிராம் சேனலில் வெளியாகியுள்ளன. 'அமிர் கபீர் நியூஸ்' கூற்றின்படி, “ஹிஜாப் அணியாததால் அந்தப் பெண் துன்புறுத்தப்பட்டுள்ளார். பாதுகாப்புப் படையினரால் அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டன. அதனால் கோபமடைந்த அந்தப் பெண் தனது உடைகள் அனைத்தையும் கழற்றி தன் எதிர்ப்பை பதிவு செய்தார்” என்று கூறப்பட்டுள்ளது. பிபிசி பாரசீகத்திற்கு பதிலளித்த `அமீர் கபீர் நியூஸ்’, தகவலறிந்த சிலரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அந்த செய்திகளை வெளியிட்டதாகக் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் நேரில் பார்த்தவர்களின் கருத்து என்ன? இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இரண்டு பேர் பிபிசி பாரசீகத்திடம் அது குறித்து விவரித்தனர். பிபிசி பாரசீகத்திடம் அவர்கள் கூறுகையில், "அந்தப் பெண் தனது கையில் மொபைல் போனுடன் பல வகுப்பறைகளுக்குள் நுழைந்து மாணவர்களை வீடியோ எடுத்து கொண்டிருந்தார்” என்றனர். அவர்கள் கூற்றுபடி, அனுமதியின்றி வகுப்பறைக்குள் நுழைந்ததால் கோபமடைந்த பேராசிரியர் ஒருவர், அவர் என்ன செய்கிறார் என்பதை கேட்க ஒரு மாணவியை அவருக்குப் பின்னே அனுப்பினார். அதன் பின்னர் அந்தப் பெண் சத்தம் போட ஆரம்பித்தார். பல்கலைக் கழக வளாகத்தின் சாலையில் அந்தப் பெண் தனது ஆடைகளைக் களைந்திருப்பதை கண்டதாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த சாட்சிகளின் கூற்றுப்படி, அந்தப் பெண்ணுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே எந்த சண்டையும் நடக்கவில்லை. அதேசமயம் பிபிசியிடம் பேசிய இரு சாட்சிகளும் அந்தப் பெண் வகுப்பறைக்குள் திடீரென நுழைந்த பின்னர் தான் கவனித்துள்ளனர். அவர் வகுப்பறைக்குள் வருவதற்கு முன் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர். அந்தப் பெண், வகுப்பறை இருந்த கட்டடத்தை விட்டு வெளியேறி ஆடைகளை களைவதற்கு முன்பு என்ன நடந்தது என்பது சாட்சிகளுக்கு தெரியாதா? அந்தப் பெண் தன் ஆடைகளை களைந்த பிறகே இந்த இரண்டு சாட்சிகளும் அங்கு சென்றுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, அந்தப் பெண் வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம், "உங்களை காப்பாற்ற வந்தேன்" என்று கூறியுள்ளார். இந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர் என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்ட ஒரு சமூக ஊடகப் பயனர், எக்ஸ் பக்கத்தில், "நான் உன்னைக் காப்பாற்ற வந்தேன்" என்று இந்தப் பெண் கூறியதாகப் பதிவிட்டிருக்கிறார். பல்கலைக் கழகம் கூறுவது என்ன? இஸ்லாமிய ஆசாத் பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அமீர் மஹ்ஜூப், ஒரு சமூக ஊடகப் பதிவில், அந்தப் பெண்ணை ஒரு பல்கலைக்கழக மாணவி என்று குறிப்பிட்டார். அவருக்கும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் இடையே எந்த வாக்குவாதமும் நடக்கவில்லை என்று அவர் கூறினார். "மனம் சார்ந்த பிரச்னை காரணமாக, அந்தப் பெண் தனது வகுப்பு தோழர்கள் மற்றும் ஆசிரியர்களை வீடியோ எடுக்கத் தொடங்கினார், அதற்காக அவர் கண்டிக்கப்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது." என்பது அமீர் மஹ்ஜூப்பின் கூற்று. "மாணவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை எச்சரித்ததைத் தொடர்ந்து, அவர் சாலையை நோக்கி ஓடிவந்து, இவ்வாறு செய்தார்” என்று அவர் கூறினார். இந்தப் ‘பெண்’ மாணவர்களை வீடியோ எடுத்த போது, அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதற்கு பதிலடியாக அவர் தனது ஆடைகளை கழற்றி வீசியதாகவும் ISNA உள்ளிட்ட இரானிய ஊடகங்கள் கூறியுள்ளன. "மாணவி கடுமையான மன உளைச்சல் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்" என பல்கலைக் கழகத்தை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் மாணவியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை இந்த மாணவி கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எதிர்வினை ஆற்றியுள்ளது. "இஸ்லாமிய ஆசாத் பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் ஹிஜாப் அணியாததற்காக தவறாக நடத்தப்பட்டு, நவம்பர் 2-ஆம் தேதியன்று வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட மாணவியை நிபந்தனையின்றி இரானிய அதிகாரிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ட்வீட் செய்துள்ளது. "பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சித்திரவதை செய்வதோ மோசமாக நடத்துவதோ கூடாது. அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒரு வழக்கறிஞரை அணுகுவதை உறுதி செய்ய வேண்டும். அவர் காவலில் இருக்கும் சமயத்தில் அவருக்கு எதிராக வன்முறையோ அல்லது பாலியல் தொந்தரவோ நடந்தால் அந்த குற்றச்சாட்டுகள் சுயாதீனமாகவும் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும்" என்று அம்னெஸ்டி இரான் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் இரானுக்கான சிறப்பு அறிக்கையாளராக ஆகஸ்ட் மாதம் தனது பணியைத் தொடங்கிய மை சடோ தனது எக்ஸ் பக்கத்தில், "நான் இந்த சம்பவத்தையும், அதிகாரிகளின் பதிலையும் உன்னிப்பாகக் கவனிப்பேன்." என்று குறிப்பிட்டார். ஹிஜாபிற்கு எதிரான போராட்டமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் பல்கலைக் கழக மாணவி என்ன செய்தார் என்பது பற்றி பல்வேறு கதைகள் மற்றும் கூற்றுகள் பரவி வருகின்றன. இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் பற்றி தெரியவில்லை என்றாலும், கிடைக்கக் கூடிய தகவல்களின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் பல பயனர்கள் இந்த பெண்ணைப் பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். பல பயனர்கள் பெண்ணின் இந்த செயலை ஹிஜாப்பை கட்டாயப்படுத்துவதற்கான எதிர்ப்பு மற்றும் பல்கலைக் கழக பாதுகாப்புப் படையினரின் கடுமையான அணுகுமுறைக்கு எதிரான போராட்டம் என்று குறிப்பிட்டுள்ளனர். அத்தகைய கூற்றுகளை முன்வைப்பவர்களில் மரியம் கியானார்த்தி என்ற வழக்கறிஞரும் ஒருவர், "இந்த மாணவர்களின் கிளர்ச்சி, மாணவியர் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கடுமையான மற்றும் நியாயமற்ற அழுத்தத்தின் எதிர்ப்பு" என்று அவர் பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணுக்காக கட்டணம் வாங்காமல் வழக்கை நடத்த தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார். ஹிஜாப் அணிய வேண்டிய அழுத்தம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் நடத்தை காரணமாக மாணவி தனது ஆடைகளை களைந்ததாக நம்பும் சமூக ஊடகப் பயனர்கள் அவரின் செயலை "துணிச்சல்" என்று அழைக்கின்றனர். அந்தப் பெண் பீதி மற்றும் அழுத்தத்தால் மட்டுமே இதைச் செய்ததாகவும், இது வேண்டுமென்றே செய்யப்பட்ட போராட்டம் அல்ல என்றும் சிலர் கூறியுள்ளனர். இருப்பினும், இரானிய அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் "பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம்" (Women, Life, Freedom) இயக்கத்தின் எதிர்ப்பாளர்கள் பலரும், அந்த இயக்கத்தினர் ஆடைகள் இன்றி போராடவும் தயாராக உள்ளனர் என்ற அவர்களின் கூற்றை இந்தப் பெண்ணின் செயல் உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ளனர். இந்த பெண்ணின் அடையாளத்தைக் கண்டறிய முயற்சிப்பதாக சமூக ஊடகங்களில் பல பயனர்கள் கூறுகிறார்கள். இதனால் அவர்கள் அவரைப் பற்றிய தகவல்களை வழங்கவும் சமூக ஊடகங்களில் அவருக்கு ஆதரவளிக்கவும் முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czxv1r9k4ndo
-
ஹிஸ்புல்லாவிற்கு மற்றுமொரு அடி : முக்கிய கடற்படை தளபதியை சிறைபிடித்தது இஸ்ரேல்
லெபனானிற்குள் விசேட கடல் நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேலிய படையினர் - ஹெஸ்புல்லா உறுப்பினர் கைது லெபனானிற்குள் விசேட நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேலின் விசேட படைப்பிரிவினர் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர கைதுசெய்து இஸ்ரேல் கொண்டு சென்றுள்ளனர். லெபனானின் வடபகுதியில் உள்ள பெட்ரோனில் தரையிறங்கிய இஸ்ரேலின் விசேட படைப்பிரிவினர் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினரை கைதுசெய்து கடல்வழியாக தப்பிச்சென்றுள்ளனர். ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினரை கைதுசெய்து விசாரணைக்காக இராணுவ புலனாய்வு பிரிவினரிடம் கையளித்துள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர். ஹெஸ்புல்லா அமைப்பின் கடற்படை நடவடிக்கைகளிற்கு பொறுப்பான இமாட் அம்ஹாஸ் என்பவரே கைதுசெய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை இஸ்ரேலிய படையினர் கடத்திச்சென்ற நபர் சாதாரண பிரஜை கப்பல் கப்டன் என லெபனான் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு இது குறித்து முறைப்பாடு செய்யப்போகின்றோம் என தெரிவித்துள்ள லெபனானின் காபந்து பிரதமர் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு லெபனான் இராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளார். இஸ்ரேல் இவ்வாறான லெபனானிற்குள் கடற்படை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை இதுவே முதல் தடவை. https://www.virakesari.lk/article/197775
-
குஜராத் மீனவர்கள் கடலில் அதிக மீன்களைப் பிடிக்க டால்பின்கள் உதவுவது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கட்ச் வளைகுடாவின் கடல் தேசிய பூங்கா மற்றும் கடல் சரணாலயத்தின் 1384 சதுர கிமீ பரப்பளவில் 498 டால்பின்கள் உள்ளன எழுதியவர், லக்ஷ்மி பட்டேல் பதவி, பிபிசி செய்தியாளர் குஜராத்தில், கட்ச் முதல் பாவ்நகர் வரையிலான கடற்கரை 'டால்பின்களின் வீடு' என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தில் டால்பின்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. குஜராத் வனத்துறை நடத்திய ‘2024 டால்பின் கணக்கெடுப்பு’ தரவுகளின்படி, 4,087 சதுர கி.மீ கடலோரப் பகுதியில் 680 டால்பின்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியப் பெருங்கடல் ஹம்பேக் டால்பின்களும் குஜராத்தின் கடலோரப் பகுதியில் காணப்படுகிறது. குஜராத்தில் டால்பின்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உட்பட பல முயற்சிகள் வனத்துறையால் மேற்கொள்ளப்பட்டன. மீனவர்கள் கடலின் ஆழ்பகுதிகளில் மீன்களைப் பிடிக்க டால்பின்கள் மிகவும் உதவிகரமாக உள்ளன. எனவே, குஜராத் மீனவர்கள் டால்பின்களைக் கொல்வதோ, பிடிப்பதோ இல்லை, அதை அவர்கள் புனிதமானதாகக் கருதுகிறார்கள். மீனவர்களுக்கு டால்பின்கள் எவ்வாறு உதவுகின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத்தில் 4 முதல் 5 முக்கிய ஆழ்கடல் மீன்பிடித்தல் முறைகள் மீனவர்களால் பின்பற்றப்படுகின்றன மங்கரோல் பண்டாரின் ‘தரியாலால் படகு சங்கத்தின்’ தலைவர் ஜெதாபாய் கோசியா, 35 ஆண்டுகளாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பிபிசியிடம் பேசிய ஜெதாபாய், "டால்பின்கள், மீனவர்களால் மிகவும் மதிக்கப்படுகின்றன. மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது டால்பின் மீன்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. டால்பின் மீன்கள் தனியாக பயணிப்பதில்லை" என்றார். "மற்ற மீன்கள் டால்பின்களுடன் இணைந்து குழுவாக பயணிக்கும். ஆனால் அந்த மீன்கள் கடலின் மேற்பரப்பில் காணப்படுவதில்லை. டால்பின்கள் விளையாடும் போது கடலின் மேற்பரப்பில் குதிப்பதைக் காணலாம். எனவே டால்பின் மீன்கள் இருக்கும் பகுதியில் வலைகள் அல்லது கயிறுகள் போடப்படுகின்றன. இதனால் மீனவர்களுக்கு அதிகளவிலான மீன்கள் கிடைக்கின்றன." என்று ஜெதாபாய் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "சூரை மீன்கள் (Tuna) 50 முதல் 60 கிலோ வரை இருக்கும். சூரை மீன்கள் டால்பின்களைச் சுற்றியே செல்லும். டால்பின்கள் தென்படும் இடங்களில் சூரை மீன்களை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். சூரை மீன் மட்டுமல்ல, மற்ற மீன்களையும் கண்டுபிடிக்க டால்பின்கள் உதவுகின்றன." என்றார். இருப்பினும், டால்பின்களிடம் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும். டால்பின்கள் பெரிய துடுப்புகளைக் கொண்டுள்ளன. அந்தத் துடுப்பு ஒரு சிறிய படகில் மோதினால், படகில் பெரும் சேதம் ஏற்படும். மனுபாய் தண்டேல் என்ற மீனவர் கூறுகையில், "எங்களுக்கு டால்பின்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அரசு தடை விதிக்கும் முன் கூட நாங்கள் டால்பின்களை பிடித்ததில்லை. தவறுதலாக வலையில் டால்பின்கள் சிக்கினால் கூட, வலைகளைக் கிழித்து அவற்றை காப்பாற்றுகிறோம். கடலில் டால்பின்கள் நமக்கு மிகவும் முக்கியம்.” என்றார். பட மூலாதாரம்,GUJARAT GOVERNMENT படக்குறிப்பு, டால்பின் கணக்கெடுப்பின்போது குஜராத் வனத்துறை குழு எடுத்த படம் குஜராத் வனத்துறை கூறுவது என்ன? கட்ச் மேற்குப் பிரிவின் துணை வனப் பாதுகாவலர் யுவராஜ் சிங் ஜாலா, பிபிசியிடம் பேசுகையில், "கட்ச் வளைகுடாவில் ஆழமற்ற பகுதிகள் இருப்பதால் டால்பின்களை வேட்டையாடும் பெரிய மீன்கள் வேட்டையாட அங்கே வருவதில்லை. எனவே டால்பின்கள் இனப்பெருக்கம் செய்வதற்கும், அவற்றின் குஞ்சுகளை வளர்ப்பதற்கும் மிகவும் சாதகமான சூழல் இங்கு உள்ளது.” என்கிறார். ''டால்பின்களை பாதுகாத்து, அதன் எண்ணிக்கையை அதிகரிக்க, வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பல்வேறு முயற்சிகளால், டால்பின்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.” என்று அவர் கூறினார். குஜராத் மாநிலத்தின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கட்ச் வளைகுடாவின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் தேசிய பூங்கா மற்றும் கடல் சரணாலயத்தின் (ஓகாவிலிருந்து நவல்கி வரை நீண்டுள்ள) 1,384 சதுர கிமீ பரப்பளவில் அதிகபட்சமாக 498 டால்பின்கள் உள்ளன. கட்ச் வளைகுடாவின் வடக்குப் பகுதியில், கட்ச் வட்டத்திற்குட்பட்ட 1,821 சதுர கி.மீ பரப்பளவில் 168 டால்பின்களும், பாவ்நகரின் 494 சதுர கி.மீ கடற்கரையில் 10 டால்பின்களும், மோர்பியின் 388 சதுர கி.மீ.யில் 4 டால்பின்களும் காணப்பட்டன. ஆக மொத்தம் 4,087 சதுர கிமீ கடல் பகுதியில் சுமார் 680 டால்பின்கள் தென்பட்டுள்ளன. டால்பின்கள் பற்றிய கூடுதல் விவரங்களை அளித்து, மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் முகேஷ் படேல் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், “இந்தியப் பெருங்கடல் ஹம்ப்பேக் டால்பின்கள் குஜராத்தின் கடலோரப் பகுதியில் காணப்படுகின்றன. ஹம்ப்பேக் டால்பின்கள் பெரும்பாலும் அரபிக்கடலில் காணப்படுகின்றன. இது அதன் தனித்துவமான நீளமான முதுகுத் துடுப்பு அல்லது வால் மூலம் அடையாளப்படுத்தப்படுகிறது. டால்பின்கள் அடிக்கடி அலைகளில் குதித்து விளையாடுவதைக் காணலாம். அதன் கவர்ச்சியான உடலும், 'பாட்டில்' வடிவ வாயும் அவற்றை எளிதில் அடையாளம் காண உதவுகிறது.” என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு 'கங்கை டால்பின்' என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 5, 2009 அன்று இந்திய அரசு டால்பினை இந்தியாவின் 'தேசிய நீர்வாழ் விலங்கு' என்று அறிவித்தது. குஜராத் மீனவர்களின் மீன்பிடி முறைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் பிபிசியிடம் பேசிய ‘வெராவல் பிடியா கர்வா சமாஜ் படகு சங்கத்தின்’ தலைவர் ரமேஷ்பாய் டல்கி, “ஆழ்கடலில், டால்பின்களைச் பின்தொடர்ந்து சென்று மீன்பிடிக்கப்படுகிறது. டால்பின்கள் வெளியே வரும் போது பிற மீன்களுக்கான வலை வீசப்படுகிறது. சூரை (Tuna) மீன்கள் இந்த வலையில் விழுகின்றன.” என்று கூறுகிறார். மீன்பிடி முறைகளைப் பற்றிப் பேசுகையில், "குஜராத் மாநிலத்தில் 4 முதல் 5 முக்கிய ஆழ்கடல் மீன்பிடித்தல் முறைகள் பின்பற்றப்படுகின்றன" என்று ரமேஷ்பாய் கூறுகிறார். இழுவை மீன்பிடி முறையில் (Trawling) ஆழ்கடலில் வலைகளை விட்டு, படகில் கட்டி இழுத்துச் செல்லப்படும். அதில் மீன்கள் கிடைக்கும். அதுவே வலை மீன்பிடி முறையில் (Net Fishing), கடலில் வலை வீசிய பிறகு, படகில் கட்டி வைக்கப்படுகிறது. அது இழுத்துச் செல்லப்படாது. பிறகு குறிப்பிட்ட நேரத்தில் வலையை படகிற்குள் இழுக்கிறார்கள். இது தவிர, லைன் ஃபிஷ்ஷிங் (Line Fishing) முறை மிகவும் ஆபத்தானது. இந்த மீன்பிடி முறையில் கடலில் விளக்குகளை போட்டு தண்ணீர் சூடாக்கப்படுகிறது. இதில் சிக்கும் மீன்கள் இறந்து விடும், பின் வலைகள் மூலம் அவை வெளியே இழுக்கப்படுகின்றன. இந்த மீன்பிடி முறையில் மீன்களுடன் குஞ்சுகளும் இறக்கின்றன. இந்த மீன்பிடி முறை 'மான்ஸ்டர் ஃபிஷ்ஷிங்' (Monster fishing) என்றும் அழைக்கப்படுகிறது. “இந்த மீன்பிடி முறை குஜராத்தில் பின்பற்றப்படவில்லை. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது. ” என்று ரமேஷ்பாய் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/crr9wnxzrqqo
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்தி அசத்திய நியூஸிலாந்துக்கு டெஸ்ட் தொடரில் முழுமையான (3 - 0) வெற்றி (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் நியூஸிலாந்து 3 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முழுமையான வெற்றியீட்டி வரலாறு படைத்தது. இந்திய மண்ணில் 1956இலிருந்து இந்த வருடம்வரை விளையாடிய 13 டெஸ்ட் தொடர்களில் நியூஸிலாந்து ஈட்டிய முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும். மூன்று நாட்களுக்குள் நிறைவடைந்த மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் 25 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 2ஆவது இன்னிங்ஸில் 147 ஓட்டங்களே தேவைப்பட்டது. ஆனால், மும்பையைப் பிறப்பிடமாகக் கொண்ட அஜாஸ் பட்டேல், க்ளென் பிலிப்ஸ் ஆகிய சுழல்பந்துவீச்சாளர்கள் இருவரும் தங்களிடையே 9 விக்கெட்களைப் பகிர்ந்து இந்தியாவை 121 ஓட்டங்களுக்கு சுருட்டி நியூஸிலாந்தின் அபார வெற்றியை உறுதி செய்தனர். போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 9 விக்கெட்கள் இழப்புக்கு 171 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து 174 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அதன் கடைசி விக்கெட்டை இழந்தது. இந் நிலையில் இந்தியாவுக்கு மிகவும் இலகுவான 147 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கை இலகுவாக அடைந்துவிடலாம் என இந்திய கிரிக்கெட் வீரர்களும் இரசிகர்களும் நினைத்திருக்கக்கூடும். ஆனால், மிக மோசமான துடுப்பாட்டம் காரணமாக இந்தியா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 29.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 121 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது. இந்தியா ஒரு கட்டத்தில் 5 விக்கெட்களை இழந்து 29 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. ஆனால், ரிஷாப் பான்ட் முதல் இன்னிங்ஸில் போன்றே இரண்டாவது இன்னிங்ஸிலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்தார். அவர் 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அஜாஸ் பட்டேலின் பந்துவீச்சில் பிடி ஒன்றுக்கான கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அது ஆட்டம் இழப்பில்லை என கள மத்தியஸ்தர் தீர்ப்பளித்தார். எனினும் கள மத்தியஸ்தரின் தீர்ப்பை மீளாய்வு செய்யுமாறு நியூஸிலாந்து அணியினர் கோரினர். அதனை மீளாய்வு செய்த மூன்றாவது மத்தியஸ்தர், பந்து துடுப்பில் பட்ட பின்னரே பாதகாப்பில் பட்டதாகத் தீர்மானித்து கள மத்தியஸ்தரின் தீர்ப்பை மாற்றி ரிஷாப் பான்ட் ஆட்டம் இழந்ததாகத் தீர்ப்பளித்தார். இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷாப் பான்டைவிட ரோஹித் ஷர்மா, வொஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்களையும் க்ளென் பிலிப்ஸ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். எண்ணிக்கை சுருக்கம் நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 235 (டெறில் மிச்செல் 82, வில் யங் 71, டொம் லெதம் 28, ரவிந்த்ர ஜடேஜா 65 - 5 விக்., வொஷிங்டன் சுந்தர் 81 - 4 விக்.) இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 263 (ஷுப்மான் கில் 90, ரிஷாப் பான்ட் 60, வொஷிங்டன் சுந்தர் 38 ஆ.இ., யஷஸ்வி ஜய்ஸ்வால் 30, அஜாஸ் 103 - 5 விக்.) நியூஸிலாந்து 2 ஆவது இன்: 174 (வில் யங் 51, க்ளென் பிலிப்ஸ் 26, டெவன் கொன்வே 22, டெறில் மிச்செல் 21, ரவிந்த்ரா ஜடேஜா 55 - 5 விக்., ரவிச்சந்திரன் 63 - 3 விக்.) இந்தியா - வெற்றி இலக்கு 147 - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 141 (ரிஷாப் பான்ட் 64, வொஷிங்டன் சுந்தர் 12, ரோஹித் ஷர்மா 11, உதிரிகள் 12, அஜாஸ் பட்டேல் 57 - 5 விக்., க்ளென் பிலிப்ஸ் 42 - 3 விக்.) ஆட்டநாயகன்: அஜாஸ் பட்டேல் தொடர் நாயகன்: வில் யங். https://www.virakesari.lk/article/197784
-
வீடொன்றில் கட்டிலுக்கு அடியிலிருந்து எட்டு அடி நீளமான முதலை மீட்பு
வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கட்டிலுக்கு அடியிலிருந்து முதலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (02) இரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தன்று, வீட்டிலிருந்தவர்கள் கட்டிலுக்கு அடியில் முதலை இருப்பதைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர். சத்தத்தைக் கேட்ட அயல் வீட்டார்கள், வீட்டினுள் சென்று பார்த்த போது கட்டிலுக்கு அடியில் முதலை இருப்பதைக் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் முதலையைப் பிடித்து வாகனத்தில் கொண்டு சென்று பாதுகாப்பான இடத்தில் விடுவித்துள்ளனர். எட்டு அடி நீளமுடைய முதலையொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197799
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரெய்னின் முக்கிய இரு நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல்: ஒருவர் பலி; 40 இற்கும் மேற்பட்டோர் பலி உக்ரெய்னின் கிவ் மற்றும் கார்கிவ் நகரங்கள் மீது ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த ட்ரோன் தாக்குதலால் குடியிருப்பு கட்டிடங்களை சேதமடைந்துள்ளதாக கிய்வின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி பாப்கோ தெரிவித்துள்ளார். மேலும் 40 இற்கும் மேட்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வசேத செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பொதுமக்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கிவ் நகரத்தின் மீது இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் தொடர்மாடி குடியிருப்பு மற்றும் பல தனியார் வீடுகளை சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/311448
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
அரச, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான தேர்தல் விடுமுறைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு இம்மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தேர்தல் விடுமுறைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது, அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தாம் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்லும் தூரத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த விடுமுறைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டர் அல்லது அதற்கு குறைந்த தூரத்தில் இருப்பவர்களுக்கு அரைநாள் விடுமுறையும், 40 கிலோ மீட்டரிலிருந்து 100 கிலோ மீட்டருக்கு இடையிலான தூரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நாள் விடுமுறையும், 100 கிலோ மீட்டரிலிருந்து 150 கிலோ மீட்டருக்கு இடையிலான தூரத்தில் இருப்பவர்களுக்கு ஒன்றரை நாள் விடுமுறையும், 150 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் இருப்பவர்களுக்கு இரு நாட்கள் விடுமுறைகளும் வழங்கப்படும். இதன்போது, அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் தனிப்பட்ட விடுமுறை விதிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/197793
-
குழந்தைகள் பயன்படுத்தும் உணவு பெட்டிகள், தண்ணீர் போத்தல்களில் ஆபத்து
சிறுவர்கள் பயன்படுத்தும் மதிய உணவு பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்களில் 75% வீதமானவை தரமற்றவை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றும் தரமில்லாத இவ்வாறான பொருட்கள் உள்நாட்டு சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயங்களை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த பொருட்கள் சிறுவர்களுக்கு பாரிய ஆபத்தை விளைவிப்பதாக தெரிவித்தார். இவைகள் சீனா போன்ற நாடுகளில் இருந்து கட்டுப்பாடு இல்லாமல் இறக்குமதி செய்யப்படுகிறது. இவை பிள்ளைகளை மிகவும் ஆபத்தான முறையில் பாதிக்கிறது. இருப்பினும், சந்தைக்குச் செல்லும் வாடிக்கையாளர் இந்தப் பொருட்களை வாங்கும் போது ஏதேனும் புரிதல் உள்ளதா என்று கேட்டோம். பல நுகர்வோர் தயாரிப்பின் விலை மற்றும் அதன் அழகைப் பற்றி மட்டுமே அவதானிப்பதாக தெரிவிக்கின்றனர். சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, உணவு மற்றும் தண்ணீருக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் போது, அதன் கீழ்ப்பகுதியில் BPA அல்லது கீழே 5 என்ற எண் எழுதப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இல்லையெனில், பொருட்களில் கண்ணாடியுடன் ஒரு முட்கரண்டியின் குறி இருக்கிறதா என்று சரிபார்க்கவும். இந்த இரண்டு அறிகுறிகளும் இருந்தால், இதுபோன்ற சாதனங்கள் உங்கள் குழந்தைக்கும் உங்களுக்கும் பயன்படுத்த ஏற்றது. சந்தையில் பல்வேறு இலக்கங்களுடன் விற்பனை செய்யப்படும் கவர்ச்சிகரமான மதிய உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/
-
லொஹான் ரத்வத்தவின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் லொஹான் ரத்வத்த பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவிக்கையில், லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவுக்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த 26ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி பிரதேசத்தில் வைத்து கடந்த 31ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/197781
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
ஜே.வி.பி. தமிழர்களுக்கு எதுவும் செய்யாது - பொ.ஐங்கரநேசன் ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது என சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பனை அபிவிருத்திச்சபையின் தலைவராக செல்வின் இரேனியஸ்சை கடந்த மாதம் அமைச்சர் விஜிதஹேரத் நியமித்தபோது பனை அபிவிருத்திச்சபைக்கு விடிவுகாலம் பிறந்திருப்பதாகவே நாம் நினைத்தோம். ஆனால், இருவார காலத்துக்குள்ளாகவே அவரது நியமனம் இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளம் போலப் பொருத்தமற்ற ஒருவர் பனை அபிவிருத்திச்சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந் நியமன மாற்றத்தின் மூலம் பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சி மேலும் பின்நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. எமது மக்களில் சிலரும் ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது. பனை வளத்துறை முகம்கொடுக்கும் சவால்களை எதிர்கொண்டு அதனை வினைத்திறனுடன் இயங்கவைத்து அதனூடாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனேயே பனை அபிவிருத்திச்சபை 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தோற்றத்துக்குக் காரணமாக இருந்த தொழிற்சங்கவாதி கே.சி.நித்தியானந்தா முதலாவது தலைவராக இருந்து திறம்படப் பணியாற்றினார். அதன் பின்னர் தலைவர்களாக இருந்த நடராஜா, கோகுலதாசன் போன்ற ஒருசிலரைத்தவிர பனை அபிவிருத்திச்சபைக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இதற்குப் பொருத்தமற்றவர்களாகவே இருந்தார்கள். தென்னிலங்கை அரசியல் கட்சிகளில் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோற்றவர்களும் அக் கட்சிகளின் விசுவாசிகளுமே வேறு போக்கிடமின்றி நியமனம் செய்யப்பட்டதுபோல இங்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். பனை தமிழ் மக்களின் இயற்கை வளங்களில் முதன்மையானது. நீரைப் பற்றிப்பிடிக்கும் நீர்க்காந்தம் போலப் பனை தொழிற்படுவதாலேயே நிலத்தடிநீரை நாம் பெறக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களின் பிரதானமான பொருளாதார வளமும் பனைதான். ஆனால் பனை இன்று தேடுவாரற்ற, ஒதுக்கப்பட்ட மரம் போல் ஆகிவருகிறது. பனை அபிவிருத்திச்சபை இப்போது இருப்பது போன்றே தொடர்ந்தால் பனை மரத்துக்குச் சாபவிமோசனமே கிடையாது. மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பனை அபிவிருத்திச்சபையைத் தொடர்ந்தும் நம்பாமல் மாகாண நிர்வாகத்தின் கீழ் அல்லது சுயாதீனமாகவேனும் பனை வளத்தைப்பேணிப் பனைப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு ஒரு அமைப்பை நிறுவவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். துறைசார் வல்லுநர்கள் இதற்கு முன்வரவேண்டும் என மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/311487
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
முதல் டெஸ்ட் போட்டியைத் தவிர நாணயச் சுழற்சியும் முக்கிய பங்கு வகித்துள்ளதாக எண்ணுகிறேன்.
-
வவுனியா தீ வைப்பு சம்பவம் : மேலும் ஒருவர் உயிரிழப்பு !
கனடா செல்ல முயற்சித்த வவுனியா இரட்டை கொலை சந்தேகநபர்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற வவுனியா (Vavuniya) தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கின் விசாரணை முடிவடையவில்லை எனக்கூறி சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி மனுதாக்கல் செய்ததையடுத்தே, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொலையுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர் சம்பவத்தின் பின்னர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கனடாவிற்கு அனுப்பி வைத்ததாகவும் பிணை வழங்கப்பட்ட பின்னர் அவரும் கனடாவிற்கு தப்பிச்செல்ல இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளக்கமறியல் அத்துடன், இன்னும் சில சந்தேகநபர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கொடூரமான கொலை சம்பவம் பிரதேச மக்களை அச்சமுற செய்ததாக தெரிவித்த நீதிபதி, சந்தேகநபர்களை 30.01.2025 வரையான காலப்பகுதிக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். https://tamilwin.com/article/court-order-on-vavuniya-dual-murder-suspect-1730594085#google_vignette
-
மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி வேட்பாளர் மீது தாக்குதல்
மட்டக்களப்பு ஏறாவூரில் மக்கள் போராட்ட முன்னணி கட்சியின் மாற்றுத்திறனாளி வேட்பாளர் ஒருவர் மீது வேறு கட்சி ஒன்றின் ஆதரவாளர் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் (02.11.2024) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் பன்சாலை வீதியிலுள்ள வீடொன்றில் குறித்த கட்சியின் வேட்பாளரும் அவரது தாயாரும் வாழ்ந்து வருகின்றனர். வாக்குவாதம் இந்தநிலையில், சம்பவ தினத்தன்று பகல் ஒரு மணியளவில் வேறு கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் 6 பேர் ஆதரவு கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன் பின்னர், வேட்பாளரின் தாயாரிடம் சிறுபான்மையான நாங்கள் பெரும்பான்மை இன கட்சியில் போட்டியிடக் கூடாது என தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனையடுத்து, வீட்டினுள் இருந்த வேட்பாளர் வெளியே வந்தபோது, அவருக்கும் ஆதரவு கேட்டு வந்த கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் இந்தநிலையில், வேட்பாளர் மீது ஆதரவாளர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://tamilwin.com/article/candidate-being-attacked-in-batticaloa-1730586528?itm_source=article
-
யாழ். சுழிபுரத்தில் கசிப்புடன் ஒருவர் கைது
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - வறுத்தோலை பகுதியில் ஒரு போத்தல் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (02.11.2024) இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://tamilwin.com/article/one-arrested-in-jaffna-with-illegal-alchohol-1730592459
-
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளிற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் - அதிர்ச்சியில் அறுகம் குடா - கார்டியன்
அறுகம்குடாவின் பொன்நிற மணல்கள் பொதுவாக ஆபத்தற்றவை விடுமுறையில் இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகள் நீச்சலிற்காகவும் கடல் சாகச விளையாட்டுகளிற்காகவும் கடற்கரையோரத்தில் ஓய்வாக நேரத்தை செலவிடுவதற்காகவும் அங்கு செல்வார்கள். ஆனால் கடந்தவாரம் அறுகம்குடாவின் மெதுவான தாளத்திற்கு ஒரு அதிர்ச்சியேற்பட்டது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகமும், அதன் பின்னர் இலங்கை பொலிஸாரும், இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவையும் அந்த பகுதியில் பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக எசசரிக்கைகளை வெளியிட்டனர். இந்த தாக்குதலின் இலக்காக இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளே காணப்பட்டனர் என அதிகாரிகள் கருதினர். இதன் காரணமாக அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு வேண்டுகோளை விடுத்தனர். இதன் பின்னர் நூற்றுக்கணக்கான பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் அந்த சிறிய நகரத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அங்கு தற்போது ரோந்துநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர், வீதி தடைகளை அமைத்துள்ளனர். இலங்கை பொலிஸாரும் அமைச்சர்களும் அறுகம்குடாவில் காணப்படும் அச்சுறுத்தல் குறித்து தெளிவான விடயங்களை வழங்காத போதிலும் அது காசா மற்றும் லெபனானில் இடம்பெறும் யுத்தங்களுடன் தொடர்புடைய விடயம் என்பது தெளிவான விடயம். இஸ்ரேல் மத்திய கிழக்கில் மேற்கொண்ட தாக்குதலிற்கு பழிவாங்கும் விதத்தில் இந்த தாக்குதல் திட்டம் ஈரானிலேயே உருவானது என விசாரைணைகள் குறித்து நன்கறிந்த தங்கள் பெயர்களை குறிப்பிடவிரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஈராக்கில் வசித்த இலங்கை பிரஜையும் ஒருவர். கடந்த ஒக்டோபர் முதல் பல தரப்புகள் மத்திய கிழக்கில் மோதலில் ஈடுபட்டுள்ளன என செய்தியாளர் மாநாட்டில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அது தற்போது உலகின் ஏனைய பகுதிகளிற்கும் பரவிவிட்டது என அவர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். மத்திய கிழக்கில் இடம்பெறும் சம்பவங்கள் தங்கள் அமைதியான கரையோரத்தில் எதிரொலித்துள்ளமை குறித்து அறுகம்குடாவில் ஆச்சரியம் காணப்படுகின்றது. அந்த பகுதி இஸ்ரேலின் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. தங்களின் கட்டாய இராணுவசேவையின் பின்னர் பலர் இங்கு வருகின்றனர். இவ்வாறு அருகம்குடாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்துள்ளது. சிலர் நீச்சல் போன்வற்றில் ஈடுபடுவதுடன் சுற்றுலாப்பயணிகளாக காணப்படுகின்ற அதேவேளை ஏனையவர்கள் தங்களிற்கு வழங்கப்பட்ட நீண்டகால விசாக்களை பயன்படுத்தி உணவுவிடுதிகளை மதுபானசாலைகளை ஏனைய இஸ்ரேலியர்களிற்கு சேவை வழங்கும் சுற்றுலா நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். நகரின் பல பகுதிகளில் ஹீப்ரு மொழியில் இவற்றின் பெயர் பலகைகள் காணப்படுகின்றன. குறிப்பிட்ட காலப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் காணப்படுவார்கள் என உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்தனர். யூதவழிபாட்டு நிலையமான சபாட் ஹவுசே இலக்குகளில் ஒன்று என இலங்கையின் பொலிஸ் பேச்சாளர் நிகால் தல்டுவ தெரிவித்தார். அந்த பகுதியில் அதிகமாக வசிக்கும் முஸ்லீம்களிற்கு இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் குறித்து எந்த பிரச்சினையும் இல்லை என ஜூல்பி பைசர் ( 39) என்ற சுற்றுலாப் பயணிகளிற்ககான வழிகாட்டி தெரிவித்தார். இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவு டொலர்கள் கிடைப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார். பெருமளவு முஸ்லீம்கள் இந்த பகுதியில் வசிக்கின்றனர். அவர்களிற்கு இஸ்ரேலியர்கள் குறித்து எந்த பிரச்சினையும் இல்லை, நாங்கள் அவர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவோம், உண்மையான இஸ்லாமியர்கள் அவர்களிற்கு எதிரானவர்கள் இல்லை என அவர் தெரிவித்தார். யூத சமூக நிலையத்தை ஏற்படுத்தியது எந்த பிரச்சினையையும் உருவாக்கவில்லை, முஸ்லீம்கள் மக்கள் எந்த வித தயக்கமும் இன்றி இஸ்ரேலியர்களுடன் பழகுவார்கள், எனினும் இஸ்ரேலியர்கள் உள்ளுர் மக்களை ஏமாற்றிவிட்டு இந்த பகுதியில் நிலங்களை கொள்வனவு செய்ய முயன்றதால் சிறிய முறுகல் நிலை காணப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார். இஸ்ரேலியர்கள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர், ஸ்திரமின்மையை ஏற்படுத்துகின்றனர் என உள்ளுர் அரசியல்வாதி ரெகான் ஜெயவிக்கிரம கடந்த வாரம் தெரிவித்திருந்தார். ஆடை அணிவது குறித்து இஸ்ரேலியர்களின் கலாச்சார நெறிமுறைகள் குறித்தும் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. இந்த பாதுகாப்பு அச்சுறுத்தலை தொடர்ந்து இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை தடை செய்யவேண்டும் என கருதும் உள்ளுர் மக்களில் தானும் ஒருவன் என்கின்றார் பைசர். இந்த வருடம் ஒன்பது மாதங்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட 1.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளில் 1.5 வீதமானவர்களே இஸ்ரேலியர்கள். "அவர்கள் இலங்கைக்கு நல்லவிடயங்களிற்காக வந்தால் அது எங்களிற்கு நல்ல விடயம், ஆனால் தற்போது பிரச்சினை காணப்படுகின்றது" என தெரிவிக்கும் அவர் "தாக்குதல் இடம்பெற்றால் எங்கள் மக்களும் உயிரிழப்பார்கள"; என்கின்றார். https://www.virakesari.lk/article/197489
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தல்: அரபு அமெரிக்கர்களின் ஆதரவு கமலா ஹாரிஸ், டிரம்ப் இருவரில் யாருக்கு? பட மூலாதாரம்,AFP எழுதியவர், ரபீட் ஜபூரி, மிச்சிகனில் இருந்து பதவி, பிபிசி அரபி அமெரிக்க அதிபர் தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், மிச்சிகனின் அரபு அமெரிக்க சமூகம் ஒரு குழப்பத்தில் மூழ்கியுள்ளது எனக் கூறலாம். இங்குள்ள 15 தேர்வாளர் வாக்குகள் (Electoral votes, தேர்தலின் முடிவை தீர்மானிப்பதில் முக்கியம் என்று கருதப்படுபவை) சமநிலையில் இருப்பதால், பல அரபு அமெரிக்கர்கள் முன்னெப்போதையும் விட சிக்கலானதாக உணரும் ஒரு முடிவை எடுக்கும் தருணத்தில் இருக்கிறார்கள். கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் இடையே யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற முடிவு அவர்களுக்கு அவ்வளவு எளிதானது அல்ல. உள்நாட்டுப் பிரச்னைகள், மத்திய கிழக்கு மோதல்கள் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று நினைக்கும் வாக்காளர்களுக்கு இது மிகவும் சிக்கலானது. இரு வேட்பாளர்களுக்கும் இடையிலான போட்டியை நவீனகால வரலாற்றில் மிக நெருக்கமான ஒன்றாக கருத்துக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் தற்போது தேசிய வெகுஜன வாக்குகளில் முன்னிலையில் உள்ளார். எனினும், அமெரிக்கத் தேர்தல்களில் அடிக்கடி நடப்பதைப் போல, தேர்வாளர் குழு முறையே இறுதியில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும். எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாயலாம் என்று கருதப்படும் முக்கியமான மாகாணங்களில் மிச்சிகனும் ஒன்று என்பதால் இதன் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்குள்ள அரபு அமெரிக்கர்கள், குறிப்பாக அதிக அரபு மக்கள்தொகை கொண்ட டியர்பார்ன் போன்ற நகரங்களால், வாக்குகளை திசை திருப்ப முடியும். இந்த இடங்களில் பொதுவாக வெற்றி தோல்வி மிகச் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தீர்மானிக்கப்படுகிறது. மாறுபட்ட, பிளவுபட்ட சமூகம் படக்குறிப்பு, மத்திய கிழக்குப் போர் அரபு அமெரிக்கர்களின் முக்கிய தேர்தல் பிரச்னையாக உள்ளது என்கிறார் ரிமா மெரூஹ் மிச்சிகனில் உள்ள அரபு அமெரிக்கர்கள் அனைவரும் ஒரே விதமாக வாக்களிக்கக் கூடியவர்கள் என்று கூற முடியாது. மாகாணம் முழுவதிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கையில், அரசியல் சார்புகளும், முன்னுரிமைகளும் மிகவும் வேறுபடுகின்றன. இவை அவர்களுடைய மாறுபட்ட கலாசாரப் பின்னணிகள் மற்றும் அமெரிக்க உள்நாட்டு, வெளியுறவுக் கொள்கை பற்றிய அவர்களுடைய கண்ணோட்டங்கள் இரண்டையும் பிரதிபலிக்கின்றன. டியர்போர்னில் உள்ள பொருளாதார மற்றும் சமூக சேவைகளுக்கான அரபு சமூக மையத்தில் அரபு அமெரிக்க சமூகங்களுக்கான தேசிய அமைப்பை இயக்கும் ரிமா மெரூஹ், அரபு வாக்குகளைத் துல்லியமாக எண்ணுவது சிரமமானது என்று பிபிசியிடம் கூறினார். "அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அரேபியர்களை ஒரு தனித்துவமான இனக் குழுவாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இதனால் அவர்களின் எண்ணிக்கையைக் கூறுவது கடினம். ஆனால் மிச்சிகனில் குறைந்தது 300,000 அரபு அமெரிக்க வாக்காளர்கள் இருக்கின்றனர்," என்று மெரூஹ் மதிப்பிடுகிறார். இந்த எண்ணிக்கைகளைப் புரிந்துகொள்ள மிச்சிகனில் கடந்த ஆண்டுகளில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். டிரம்ப் 2016இல் மிச்சிகனில் வெறும் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2020இல் ஜோ பைடன் இந்த மாகாணத்தைக் கைப்பற்றியபோது, 100,000 வாக்குகள் வித்தியாசம் இருந்தன. எனவே அரபு வாக்காளர்கள் மிச்சிகனின் வாக்காளர்களில் ஒரு சிறிய பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அத்தகைய நெருக்கமான போட்டியில் அவர்களால் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும். பாரம்பரியமாக, அரபு அமெரிக்க வாக்காளர்கள் ஒரு பிரச்னையை மையப்படுத்தி அணி திரண்டதில்லை என்றாலும், இந்தத் தேர்தல் வித்தியாசமானது என்கிறார் மெரூஹ். காஸா போருக்குப் பிறகு, ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல அரபு அமெரிக்கர்கள் கவனம் செலுத்தும் ஒரு முக்கியப் பிரச்னையாக மத்திய கிழக்கு விவகாரம் உள்ளதாகக் கூறுகிறார் மெரூஹ். எனினும் எதிர்காலத்தின் பாதை எப்படி இருக்க வேண்டும் என்பதில் அரபு வாக்காளர்களுக்கு வெவ்வேறு கருத்துகள் இருக்கின்றன. டிரம்பின் "அமெரிக்கா முதலில்" நிலைப்பாடு அந்தப் பிராந்தியத்தில் போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பும் சிலர் அவரை ஆதரிக்கின்றனர். மற்றவர்கள் ஹாரிஸ் ராஜ்ஜீய ரீதியாக ஈடுபடுவதற்கும் நீண்டகால தீர்வுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளதாக வாதிடுகின்றனர். இதுபோக, பசுமைக் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டெயினை ஆதரிக்கும் ஒரு குழு உள்ளது. இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவு குறித்த அவரது விமர்சனம் அவர்கள் மத்தியில் ஆழமாக எதிரொலிக்கிறது. மத்திய கிழக்கு கொள்கை குறித்த போராட்டம் படக்குறிப்பு, இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று முடிவு செய்வது மிகவும் சிக்கலானது என்கிறார் சாம் அப்பாஸ் கமலா ஹாரிஸ் அரபு சமூகத்துடன் நட்புறவுடன் இருக்க முயன்று வருகிறார். மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் கொண்டு வருவதை நோக்கிச் செயல்படுவதாக உறுதியளித்தார். அதே நேரத்தில் இஸ்ரேலுக்கு ஜனநாயகக் கட்சியின் நீண்டகால ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். இருப்பினும், அவர் பாலத்தீனியர்களின் உரிமைகள் குறித்தும் பேசியுள்ளார். பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு, கண்ணியம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுவொரு நுணுக்கமான நிலைப்பாடு, ஆனால் சாம் அப்பாஸ் போன்ற வாக்காளர்களை இதன் மூலம் ஈர்ப்பது கடினமான காரியம். தனது பரபரப்பான டியர்போர்ன் உணவகத்தில் அமர்ந்து பேசிய அப்பாஸ், பல அரபு அமெரிக்கர்களின் விரக்தியை வெளிப்படுத்துகிறார். மத்திய கிழக்கில் சிந்தப்படும் ரத்தத்திற்கு பைடனும் ஹாரிஸும் நேரடியாகப் பொறுப்பாவதாக அவர் கூறுகிறார். அவருக்குத் தெரிந்த அனைவரும் ஹாரிஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள். இந்தத் தேர்தல் ஒரு குழப்பத்தை உண்டாக்கியுள்ளதாக அப்பாஸ் கூறுகிறார். "இரண்டு தீமைகளில் குறைந்த தீமை" ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார் அவர். அவர் யாருக்கு வாக்களிப்பார் என்பது குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் தேர்தல் நாளில் தனது முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார். மறுபுறம், டிரம்ப். அவரது குடியேற்றக் கொள்கை முஸ்லிம்-விரோத, அரபு-விரோத அணுகுமுறையாக பலரால் பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் சார்பு நிலைப்பாடு மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவருக்கு நெருக்கமான உறவுகள் இருந்தபோதிலும், ஆச்சர்யப்படும் எண்ணிக்கையிலான அரபு அமெரிக்கர்களின் ஆதரவை டிரம்பால் வென்றெடுக்க முடிந்தது. அவர் அதிபராக இருந்தபோது போர்கள் எதுவும் வெடிக்கவில்லை என்ற அவரது கூற்று, அவர் பதவியில் இருந்திருந்தால் யுக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று அவர் வலியுறுத்தியது, மோதல்கள் வேண்டாம் என்று நினைப்பவர்களிடம் எடுபட்டுள்ளது. தனது அரபு நாட்டு சம்பந்தி மசாத் பவுலோஸை குறிப்பிட்டு டிரம்ப் பேசி வருகிறார். மசாத் பவுலோஸின் மகன், டிரம்பின் மகள் டிஃப்பனியை திருமணம் செய்துள்ளார். விரைவில் பிறக்கவிருக்கும் தனது பேரக்குழந்தை பாதி அரபு பின்னணியை கொண்டிருக்கும் என்பதை அவர் வெளிப்படையான பெருமிதத்துடன் குறிப்பிட்டு வருகிறார். மாறும் விசுவாசம் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜனநாயகக் கட்சி மீது உண்டாகியுள்ள விரக்தி, அரபு அமெரிக்க சமூகத்திற்குள் இன்னும் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது. முதலில் பைடனை கைவிடுங்கள் என்றும், இப்போது கமலா ஹாரிஸை கைவிடுங்கள், என்ற பெயரிலும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு பிரசாரம் வேகம் எடுத்துள்ளது. அரபு மற்றும் முஸ்லிம் பிரச்னைகளுக்கு உதட்டளவில் சேவை செய்வதாகவும், அதே நேரத்தில் மத்திய கிழக்கில் வன்முறை தொடர்வதற்கு ஜனநாயகக் கட்சி, உடந்தையாக இருப்பதாகவும் அந்த பிரசாரத்தின் நிறுவனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரசாரத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஹசன் அப்தெல் சலாம், இந்த எதிர்ப்பு ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு எதிரானது அல்ல, ஆனால் ஜனநாயகக் கட்சியின் இஸ்ரேல் சார்பு நிலைப்பாட்டிற்கான பதிலடி என்று வாதிடுகிறார். "இரண்டு அரசியல் கட்சிகளும் வெறுக்கத்தக்கவை என்ற முடிவுக்குத் தாங்கள் வந்துள்ளதாக," அவர் கூறுகிறார், முஸ்லிம் அமெரிக்கர்கள் வாக்களிக்க அணிதிரள வேண்டும், ஆனால் அவர்கள் "இரண்டு அரசியல் கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறார். டிரம்புக்கு ஆதரவாக தராசுகளை சாய்க்கும் அபாயம் இருந்தாலும்கூட, இந்தக் குழு பசுமைக் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டெய்னை வழிமொழிந்துள்ளது. அரபு மற்றும் முஸ்லிம் குரல்களைப் புறக்கணித்தமைக்கு ஜனநாயகக் கட்சியினர் பொறுப்பேற்க வேண்டும் என்று அப்தெல் சலாம் கூறுகிறார். படக்குறிப்பு, சமாரா லுக்மான் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராக இருந்தார், ஆனால் இப்போது டொனால்ட் டிரம்புக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார் ஏமன்-அமெரிக்க அரசியல் ஆர்வலரும் ரியல்-எஸ்டேட் முகவருமான சமாரா லுக்மேன் நீண்டகாலமாக ஜனநாயகக் கட்சியை ஆதரித்து வருகிறார். இருப்பினும், இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு வாக்களிக்க அவர் முடிவு செய்துள்ளார். அரபு அமெரிக்க சமூகத்தினர் மத்தியில் டிரம்பின் பிரசார அணுகுமுறையை அவர் சுட்டிக்காட்டுகிறார். டிரம்பின் பிரசாரக் குழுவினரால் தனிப்பட்ட முறையில் அவர் தொடர்பு கொள்ளப்பட்டார். பிரசார பேரணிகளுக்கு மத்தியில் முன்னாள் அதிபர் டிரம்பை அவர் சந்தித்தார். அந்தச் சந்திப்பு, டிரம்ப் மீதான பார்வையை வெகுவாக மாற்றியுள்ளதாகக் கூறுகிறார். அந்த உரையாடலின்போது டிரம்ப் "மனிதாபிமானத்தை" வெளிப்படுத்தியதாக அவர் கூறுகிறார். அரசியல்ரீதியாக, டிரம்ப் எந்தவித தூண்டுதலும் இல்லாமல், "மத்திய கிழக்கில் போரை நிறுத்த" வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியபோது, காஸாவில் நடந்து வரும் போர் குறித்த சமாராவின் சொந்தக் கவலைகளை டிரம்ப் முன்கூட்டியே கணித்திருந்ததைப் போல் இருந்தது என அவர் ஆச்சர்யப்பட்டார். தனக்குத் தெரிந்த பல அரபு அமெரிக்கர்களின் வாக்குகளுடன் சேர்ந்து தனது வாக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருக்கும் என்று அவர் நம்புகிறார். அதுகுறித்துப் பேசியபோது, "இதுவொரு தண்டனை வாக்கு," என்று சமாரா கூறினார். அரபு வாக்காளர்களை கமலா ஹாரிஸ் வெல்ல முடியுமா? படக்குறிப்பு, அரபு வாக்காளர்களை கமலா ஹாரிஸ் இன்னும் வெல்வதற்கு இன்னும் நேரமிருப்பதாகக் கூறுகிறார் சமி காலிதி. மிச்சிகனில் டிரம்புக்கான ஆதரவு அதிகரித்து வந்தாலும், ஜனநாயகக் கட்சி விட்டுக் கொடுக்கவில்லை. பல அரபு அமெரிக்கர்களிடையே வலுவான ஆதரவைப் பெற்றிருந்த கட்சி அது. குறிப்பாக செப்டம்பர் 11 தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்தின் மீதான பாதிப்புகளுக்குப் பின்னர் ஜனநாயகக் கட்சி இந்த சமூகத்தினரிடம் ஆதரவு பெற்று வந்தது. மிச்சிகனில் உள்ள ஜனநாயக கிளப்பின் தலைவரான சமி காலிதி, அரபு வாக்காளர்களை வெல்ல கமலா ஹாரிஸுக்கு இன்னமும் நேரம் இருப்பதாக நம்புகிறார். "காஸாவை மீண்டும் கட்டியெழுப்பவும், பாலத்தீனியர்களுக்கு அதிக மனிதாபிமான உதவிகளைக் கொண்டு வரவும்" ஹாரிஸ் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். "காஸாவை மீண்டும் ஆக்கிரமிப்பதில்" கமலா ஹாரிஸுக்கு உடன்பாடு இல்லை எனவும், அது அரபு அமெரிக்க வாக்காளர்களை ஈர்ப்பதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார். அரபு அமெரிக்கர்களுக்குத் தேவையான மற்றும் தகுதியான அங்கீகாரத்தை வழங்கும் ஒரே அரசியல் அமைப்பு ஜனநாயகக் கட்சி மட்டுமே என்று காலிதி கூறுகிறார். மத்திய கிழக்கிற்கான கமலா ஹாரிஸின் அணுகுமுறை அதிபர் பைடனின் அணுகுமுறையில் இருந்து வேறுபடுவதாகவும் அரபு அமெரிக்கர்களுக்கு மிகவும் சாதகமானது என்றும் அவர் நம்புகிறார். எவ்வாறாயினும், சமூகத்தில் பலருக்கு அவரது கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து தெரியாது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆகையால், இந்தச் சமூகத்துடன் ஈடுபாடு மற்றும் தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஜனநாயகக் கட்சி தொடர வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதையும் காலிதி வலியுறுத்துகிறார். விரக்தி மற்றும் அக்கறையின்மை படக்குறிப்பு, பாலஸ்தீன-அமெரிக்க கலைஞர் ஜெனைன் யாசின் இந்தத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை ஆனால் சிலருக்கு, அரசியல் கட்சிகள் எவ்வளவு முயன்றாலும், அது ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. பாலத்தீன-அமெரிக்க கலைஞரான ஜெனைன் யாசின் வாக்களிப்பதை முற்றிலுமாகப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, இஸ்ரேல் மீதான அமெரிக்க கொள்கை ஒரு சமரசத்திற்கு இடமில்லாத பிரச்னை. பாலத்தீனியர்களுக்கு எதிரான ஒரு "இனப்படுகொலை"யை இரண்டு வேட்பாளர்களும் ஆதரிப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார். இந்தத் தேர்தலில் இருந்து விலகியிருக்க யாசின் எடுத்துள்ள முடிவு பல அரபு அமெரிக்கர்களால் உணரப்படும் ஆழ்ந்த விரக்தியைப் பிரதிபலிக்கிறது. அரபு அமெரிக்கர்களைப் பொறுத்தவரை, "பாலத்தீனமே எங்கள் முழு பிரச்னை" என்பதை ஜனநாயகக் கட்சியினர் புரிந்து கொள்ளவில்லை என்கிறார் அவர். மேலும் பாலத்தீனர்களுக்கு அதே உரிமைகளைக் கோராதபோது, "கருக்கலைப்பு, பெண்கள் உரிமைகள், இனப்பெருக்க நீதி குறித்து அக்கறை காட்டுவதாக" கூற முடியாது என்பதையும் ஜனநாயகக் கட்சி புரிந்து கொள்ளவில்லை என்று அவர் கூறுகிறார். இருப்பினும், எதிர்காலம் குறித்த நம்பிக்கை தெரிவதாக அவர் கூறுகிறார். இளம் தலைமுறை மத்தியில், இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்க கொள்கைகளுக்கு எழும் எதிர்ப்புக் குரல் அதற்கான குறியீடாக இருப்பதாகவும் ஜெனைன் யாசின் குறிப்பிடுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp3njj7xqeeo
-
லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்கள் - 11 பேர் காயம்
லெபனானிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதல்களில் இஸ்ரேலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். ரொக்கட் வீடொன்றை தாக்கியது என இஸ்ரேலின் அவரசசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாங்கள் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தவேளை புழுதி மண்டலத்தையும் சிறுவர்கள் பெண்கள் அலறுவதையும் பார்த்தோம் என ரொக்கட் தாக்குதல் இடம்பெற்ற டிராவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். எங்களால் அந்த வீட்டிலிருந்தவர்களை காப்பாற்ற முடிந்தது எவரும் கொல்லப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இஸ்ரேலிய தலைநகரின் புறநகர் பகுதியில் உள்ள இராணுவ தளமொன்றை இலக்குவைத்ததாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. ரொக்கட் வெடிப்புச்சிதறல்கள் காரணமாக 11 பேர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/197753
-
கன்னி வரவு - செலவு திட்டத்தை மார்ச் மாதம் சமர்பிக்க அரசு தீர்மானம்
(லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவு திட்டம் மார்ச் மாதத்தில் சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வொஷிங்கடன் பேச்சுவார்த்தைகளின் பின்னர், மேலதிக உறுதிப்பாடுகளுக்காக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் உயர் மட்ட குழுவை கொழும்புக்கு அனுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், மூன்றாவது நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அடுத்த வருடத்திலேயே இலங்கைக்கு கிடைக்கப்பெறும். சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற வொஷிங்டன் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால மூன்றாவது நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அடுத்த வருடமே இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளது. இதற்கு முன்னர் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் தகவல்களின் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் புதிய அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவு திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் குறித்தும் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் வொஷிங்டன் பேச்சுவார்த்தைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதற்கான நிதி மூலாதாரத்தை எவ்வாறு அடைவது என்பது தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவுபடுத்த இல்லை. அதே போன்று உரம் நிவாரணம் வழங்கியமை மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரித்துள்ளமை தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் கவனத்தில் கொண்டுள்ளது. எனவே ஆட்சி மாற்றத்தின் பின்னரான இலங்கையின் பொருளாதார சூழல், ஒப்பந்தத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்யவும், மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாடல்களை முன்னெடுக்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது. இந்த விஜயத்தை சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் உறுதிப்படுத்தியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்த உடன் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளது. சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கான அர்ப்பணிப்பை இலங்கையின் புதிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மூலம் இலங்கைக்கு சிறந்த பலன்கள் கிடைத்துள்ளன. விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தத் திட்டங்கள், பொருளாதார மற்றும் நிதிக் கொள்கை அமுலாக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அண்மைய மேக்ரோ பொருளாதாரப் போக்குகள் வளர்ச்சியை காட்டுகிறது. பொருளாதார சீர்திருத்தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் தொடர்ச்சியாக மூன்று தவணைகள் அதிகரிப்பை காட்டியுள்ளதுடன் குறைந்த பணவீக்கம், அதிகரித்த அரச வருவாய் சேகரிப்பு மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு ஆகியவற்றின் மூலம் பொருளாதாரத்தை மீட்பதில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/197745
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்பின் அதிகம் அறியப்படாத பக்கங்கள் பட மூலாதாரம்,ALAMY அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் முழுவதும், இரண்டு அதிபர் வேட்பாளர்களின் பலதரப்பட்ட புகைப்படங்கள் அமெரிக்க வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. அந்த வேட்பாளர்கள் மேடைகளில் இருந்து பேசுவது, பேரணியில் கூட்டத்தை நோக்கி கையசைப்பது மற்றும் விமானத்தின் படிக்கட்டுகளில் இருந்து இறங்குவது போன்ற புகைப்படங்கள். ஆனால், இந்தக் கட்டுரையில், அதிகம் அறியப்படாத புகைப்படங்கள் வழியாக, அந்த இரண்டு வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பின்னணி குறித்த ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தை நாம் காணப் போகிறோம். மேலே உள்ள புகைப்படம், வெள்ளை மாளிகை என்றால் என்ன என்பதை டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் புரிந்து கொள்வதற்கு முன்பே, அவர்களுக்கு மூன்று வயதாக இருக்கும்போது எடுக்கப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹாரிஸ் தனது குழந்தைப் பருவத்தின் தொடக்க காலத்தை கலிஃபோர்னியாவின் ஓக்லாந்தில் கழித்தார். குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் நியூயார்க் பெருநகரத்தின் குயின்ஸில் வளர்ந்தார். கமலா ஹாரிஸ் (கீழே உள்ள இடதுபக்க படத்தில், இடமிருந்து முதலில் இருப்பவர்) மற்றும் அவரது சகோதரி மாயா (நடுவில்) ஆகியோர் இந்தியாவை சேர்ந்த அவர்களின் தாய் ஷியாமளா கோபாலன் ஹாரிஸால் வளர்க்கப்பட்டார்கள். ஷியாமளா கோபாலன் ஹாரிஸ், ஒரு புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மற்றும் சமூக ஆர்வலர். டொனால்ட் டிரம்பின் தந்தை பிரெட் டிரம்ப், ஜெர்மனியில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் மகன். அவரது தாயார் மேரி ஆன் மெக்லியோட் டிரம்ப், ஸ்காட்லாந்தில் பிறந்தவர். டிரம்பின் பெற்றோர், அவரை 13 வயதில் நியூயார்க் ராணுவ அகாடமியில் சேர்த்தனர். பட மூலாதாரம்,KAMALA HARRIS / @REALDONALDTRUMP கமலா ஹாரிஸ் கனடாவின் மாண்ட்ரீயலில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஐந்து ஆண்டுகள் படித்தார். அவரது தாயார் அங்குள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பிக்கும் பணியை மேற்கொண்டார். பின்னர் கமலா ஹாரிஸ் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள, முதன்மையான மற்றும் பழமையான கறுப்பின கல்லூரிகளில் ஒன்றான ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். டொனால்ட் டிரம்ப், ‘நியூயார்க் ராணுவ அகாடமியில் 1959ஆம் ஆண்டில் தொடங்கி ஐந்து ஆண்டுகள், தனக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், தனது தலைமைத்துவ திறன்களை வடிவமைக்க அது உதவியதாகவும்’, ஒருமுறை தெரிவித்திருந்தார். பின்னர் வியட்நாம் போரில் அவர் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால் கல்வி காரணங்களுக்காகவும், ஒருமுறை எலும்பு முறிவு ஏற்பட்டதாலும் அது ஒத்தி வைக்கப்பட்டது. பட மூலாதாரம்,ALAMY சிறு வயதிலிருந்தே, ஹாரிஸின் தாயார் சிவில் உரிமைகள் இயக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அவருக்குக் கற்பித்து வந்தார். கமலா ஹாரிஸ், 2004இல் வாஷிங்டனில் நடைபெற்ற ‘வருடாந்திர மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சுதந்திர அணிவகுப்பில்’ கலந்துகொண்டார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் பள்ளியில் பட்டம் பெற்ற டிரம்புக்கு, அவரது தந்தைக்குப் பிறகு குடும்ப வணிகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கான ஆதரவு குடும்பத்திடம் இருந்து கிடைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியாவுக்கு திரும்பினார், அங்கு அவர் மாநிலத்தின் குற்றவியல் நீதி அமைப்பின் உச்சிக்கு விரைவாக உயர்ந்தார். அதன் அட்டர்னி ஜெனரலாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் மூலம் கிடைத்த உந்துதலை, 2016இல் அமெரிக்க செனட் சபைக்கு வெற்றிகரமாகப் போட்டியிடப் பயன்படுத்திக் கொண்டார். அமெரிக்க செனட் சபையில் கமலா ஹாரிஸ் நுழைந்த அதே நேரத்தில், அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்த டிரம்ப், முதல் முறையாக வெள்ளை மாளிகைக்குள் அடியெடுத்து வைத்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கமலா ஹாரிஸ் ஒரு மந்தமான அதிபர் பிரசாரத்தை நடத்தினார். இருப்பினும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடனால், துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இருவரும், டிரம்ப் மற்றும் மைக் பென்ஸை தோற்கடித்து வெற்றி பெற்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்பின் அதிபர் பதவிக் காலத்தின் முடிவிலும், பைடன்-ஹாரிஸ் பதவிக் காலத்தின் தொடக்கத்திலும், கொரோனா ஊரடங்குகள், கட்டாய முகக்கவசம் போன்ற உத்தரவுகள், மினியாபோலிஸ் பகுதியில் ஜார்ஜ் ஃப்லாய்ட் காவல்துறையால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக அமைதியின்மை போன்ற பிரச்னைகளை அமெரிக்கா சமாளித்துக் கொண்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES துணை அதிபராக முத்திரை பதிக்க கமலா ஹாரிஸ் சில நேரங்களில் போராட வேண்டியிருந்தது. ஆனால் 2022இல் அமெரிக்க உச்சநீதிமன்றம் கருக்கலைப்புக்கான அரசியலமைப்பு உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்தபோது, தான் உரக்கப் பேசவேண்டிய விஷயம் எது என்பதை அவரால் உணர முடிந்தது. கருக்கலைப்பு உரிமைகள் இயக்கத்திற்கான வெள்ளை மாளிகையின் சாம்பியனாக கமலா ஹாரிஸ் மாறியதில், அதிபர் பைடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதேநேரம், பழமைவாதத்தை நோக்கிய உச்சநீதிமன்றத்தின் நகர்வுக்கும் கருக்கலைப்பு தொடர்பான முடிவுக்கும் காரணமாக இருந்தவர் டிரம்ப்தான். டிரம்ப், ஓவல் அலுவலகத்தில் இருந்த காலத்தில், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றியதோடு மட்டுமல்லாது குடியேற்றத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுத்தார். பட மூலாதாரம்,WHITE HOUSE / GETTY IMAGES துணை அதிபராக ஹாரிஸ் தனது முதல் சர்வதேச பயணமாக 2021இல் குவாத்தமாலாவுக்கு சென்றார். மெக்ஸிகோவுடனான அமெரிக்காவின் தெற்கு எல்லையை அடையும் லத்தீன் அமெரிக்க புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் பொறுப்பின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் இருந்தது. அவர் பதவியில் இருந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்திய வெளியுறவுக் கொள்கை தொடர்பான பிரச்னைகளில் யுக்ரேன் மற்றும் காஸா போர்கள் மற்றும் மிகவும் குழப்பமான ஒரு சூழலில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகளைத் திரும்பப் பெற்றது ஆகியவை அடங்கும். அமெரிக்க அதிபராக டிரம்பின் முதல் வெளிநாட்டு பயணம் 2017இல் சௌதி அரேபியாவுக்கு சென்றதுதான். அமெரிக்க தொழில்துறையை ஊக்குவிப்பது, சர்வதேச போர்களில் இருந்து தனது நாட்டை விலக்கி வைப்பது தொடர்பான கருத்துகளை டிரம்ப் ஆதரிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES / REUTERS கமலா ஹாரிஸ், டக் எம்ஹாஃப் (கீழே உள்ள புகைப்படம்) என்பவரை மணந்தார். டக் எம்ஹாஃப், கமலா ஹாரிஸின் சார்பாகத் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். எம்ஹாஃப்பின் முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகளான, கோல் (இடதுபுறம் இருப்பவர்), எல்லா (வலதுபுறம் இருப்பவர்) ஆகியோரை தாயாக இருந்து கவனித்துக் கொள்வதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். டொனால்ட் டிரம்பின் பல்வேறு குடும்ப உறுப்பினர்கள் அவரது அரசியல் வாழ்க்கையில் பங்கு வகித்துள்ளனர். இருப்பினும் அவரது மனைவியும், முன்னாள் ‘முதல் அமெரிக்க பெண்மணியுமான’ மெலனியா டிரம்ப் 2024 பிரசாரத்தில் அவருக்கு ஆதரவாகத் தோன்றுவது குறைவாகவே உள்ளது. டிரம்பின் முதல் மனைவி இவானாவுடன், டிரம்புக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். டொனால்ட் ஜூனியர் (கீழே உள்ள படத்தில் இடதுபுறத்தில் இருந்து இரண்டாவது), இவான்கா (வலதுபுறத்தில் இருந்து இரண்டாவது) மற்றும் எரிக் (வலதுபுறத்தில் கடைசியாக). அவரது இரண்டாவது மனைவி மார்லா மேப்பிள்ஸுடன் அவருக்கு டிஃப்பனி (இடதுபுறத்தில் கடைசியாக) என்ற மகள் உள்ளார். அவர் தனது மூன்றாவது மனைவி மெலனியாவை (இடதுபுறத்தில் மூன்றாவதாக) 2005இல் மணந்தார், இவர்களுக்கு பரோன் என்ற ஒரு மகன் உள்ளார். பட மூலாதாரம்,ALAMY / AP கமலா ஹாரிஸ், 2024 அதிபர் பந்தயத்தில் கிட்டத்தட்ட தாமதமாகவே நுழைந்தார். போட்டியிலிருந்து விலகிய ஜோ பைடனுக்கு பதிலாக அவர் அதிபர் வேட்பாளராக ஆக்கப்பட்டார். அமெரிக்காவின் ஒரு பெரிய மற்றும் முக்கியக் கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின மற்றும் ஆசிய-அமெரிக்க பெண் என்ற வரலாற்றை அவர் படைத்தார். இல்லினாயின் சிகாகோவில் நடந்த ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் அவர் உரையாற்றினார். டொனால்ட் டிரம்ப் இந்தத் தேர்தலில், குடியரசுக் கட்சியில் இருந்து மூன்றாவது முறையாக அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் என்ற அரிய பெருமையைப் பெற்றார். விஸ்கான்சின், மில்வாக்கியில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் பேசினார். பென்சில்வேனியாவில் பிரசாரத்தின்போது அவர் மீது நடத்தப்பட்ட ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய பின்னர், காதில் கட்டுப்போட்ட நிலையில் மில்வாக்கியில் அவர் உரையாற்றினார். பட மூலாதாரம்,REUTERS / EPA-EFE - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crmzjdv78kno
-
யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை! பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
யாழ்ப்பாணம் (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவை வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. நாகை - இலங்கை இடையேயான சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவையானது கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமானது. நாகை - காங்கேசன்துறை கப்பல் சேவை முதலில் தினந்தோறும் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால் வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு மூன்று நாட்களாக குறைக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதன் பின்னர் சனிக்கிழமை உட்பட 4 நாட்களாக கப்பல் சேவை நீடிக்கப்பட்டதுடன் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று முன்பதிவும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து எதிர்வரும் வாரத்தில் 5 நாட்கள் கப்பலை இயக்க கப்பல் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படும் என ‘சிவகங்கை’ கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது. https://ibctamil.com/article/jaffna-kangesanthurai-nagapattinam-ferry-service-1730548573