Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பிறந்தநாள் வாழ்த்துகள் @குமாரசாமி அண்ணை, வளத்துடன் வாழ்க.
  2. 15 AUG, 2025 | 05:09 PM (நா.தனுஜா) இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெற்றன என்ற உண்மையை அரசும், அரசு சாராத சகல தரப்புக்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இவ்விவகாரத்துக்கு சர்வதேசத்தின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதொரு விடயமாகும். எனவே நாம் உள்ளகப்பொறிமுறையை மேலும் பலப்படுத்தவேண்டுமென காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னாள் தவிசாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். சுதந்திர ஊடகவியலாளர்களான தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் எழுதிய 'செம்மணி' எனும் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வும், அதனைத்தொடர்ந்து 'இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் மற்றும் மனிதப்புதைகுழிகள்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பிலுள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவை சபை அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து வெளியிட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னாள் தவிசாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் கூறியதாவது: 2018 ஆம் ஆண்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு வருடகாலம் அதன் தவிசாளராகப் பணியாற்றினேன். அவ்வேளையில் அலுவலகத்துக்கு ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் நாம் சென்று பார்த்தபோது எமக்கான அலுவலகம் கூட இருக்கவில்லை. எனவே எவ்வாறிருப்பினும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு அவசியமான வளங்கள் மற்றும் வசதிகள் இல்லாமலும், தீர்வுகாணவேண்டும் என்ற உண்மையான அரசியல் தன்முனைப்பின்றியும் எதனையும் செய்யமுடியாது. அதேபோன்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் நீதியமைச்சின்கீழ் இயங்குகின்றது. அவ்வாறிருக்கையில் அந்த அலுவலகத்தினால் சுதந்திரமாகச் செயற்படமுடியாது. காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உரியவாறு இயங்குவதற்கு அதற்குரிய சுதந்திரமும், வளங்களும் வழங்கப்படவேண்டும். அதேவேளை வட, கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அரசினால் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின்மீது சற்றும் நம்பிக்கை இருக்கவில்லை. அவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவியபோதிலும், எம்மால் இயலுமானளவுக்கு நாம் பல்வேறு விடயங்களைச் செய்தோம். இவ்விவகாரத்துக்கு சர்வதேசத்தின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதொரு விடயமாகும். எனவே நாம் உள்ளகப்பொறிமுறையை மேலும் பலப்படுத்தவேண்டும். அதுமாத்திரமன்றி இவ்வாறான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் உண்மையிலேயே இடம்பெற்றனவா என்ற கேள்வி தெற்கில் வாழும் பலருக்கு உண்டு. எனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன என்ற உண்மையை நாம் எவ்வாறு தெற்கு மக்களுக்குப் புரியவைக்கப்போகிறோம் என்பது பற்றிச் சிந்திக்கவேண்டும். இவ்விடயத்தில் வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் நிலவும் இடைவெளியை எவ்வாறு சீரமைக்கப்போகிறோம் என்பது பற்றிச் சிந்;திக்கவேண்டும். மேலும் இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெற்றன என்ற உண்மையை அரசும், அரசு சாராத சகல தரப்புக்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதுமாத்திரமன்றி இவ்விடயம் சார்ந்து அரச கட்டமைப்பை எவ்வாறு மாற்றியமைக்கவேண்டும் எனக் கலந்துரையாடவேண்டும் என்று வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/222634
  3. 15 AUG, 2025 | 05:56 PM (நா.தனுஜா) தற்போதைய அரசாங்கம் 'வலிந்து காணாமலாக்கப்படல்' என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்துவதில்லை. இந்த அரசாங்கத்தினாலேயே இதற்குத் தீர்வைப் பெற்றுத்தரமுடியாவிடின், வேறு எந்த அரசாங்கத்தில் இதனைச் செய்யமுடியும்? என்று தெற்கைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான பிரிட்டோ பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார். சுதந்திர ஊடகவியலாளர்களான தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் எழுதிய 'செம்மணி' எனும் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வும், அதனைத்தொடர்ந்து 'இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் மற்றும் மனிதப்புதைகுழிகள்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலும் இளம் ஊடகவியலாளர் சங்கத்தினால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பிலுள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவை சபை அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துரைத்த காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ மேலும் கூறியதாவது: வடக்கில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட அட்டூழியங்கள் தொடர்பில் தென்பகுதி மக்களுக்குத் தெளிவூட்டும் வகையில் இப்புத்தகத்தை வெளியிட்டமைக்கு முதலில் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். இதனை இடைநடுவில் கைவிடாமல், தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லுங்கள். நாட்டில் மீண்டும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெறாதிருக்கவேண்டுமாயின், முதலாவதாகக் கடந்த காலங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும். இவ்விடயத்தில் தெற்கில் கொந்தளிப்பு ஏற்படாமல் வடக்குக்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியம் மிகக்குறைவு. ஏனெனில் நாம் கடந்தகாலங்களில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுத்தோம். அவ்வாறிருந்தும்கூட 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் தெற்கிலுள்ள பெரும்பான்மை மக்கள் கோட்டாபயவுக்கே வாக்களித்தனர். நாமறிந்தவரை தெற்கில் ஜனதா விமுக்தி பெரமுன கிளர்ச்சியின்போது பெரும் எண்ணிக்கையானோர் மிகமோசமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். சிங்களமொழியைப் பேசக்கூடியவர்கள் வாழும் தெற்கின் நிலைவரம் இவ்வாறிருக்கையில், வடக்கில் என்னவெல்லாம் நடந்திருக்கக்கூடும்? எனவே இதுபற்றிய தெளிவூட்டலை சகல தரப்பினர் மத்தியிலும் ஏற்படுத்தி, இதற்கான நீதியை சகலரதும் கோரிக்கையாக மாற்றவேண்டும். ஜே.வி.பி கிளர்ச்சியின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்முடன் பேரணியாக நடந்தார். ஆனால் வடக்கில் பலர் கொல்லப்படுவதற்கு அவரே காரணமாக இருந்தார். அதேபோன்று ரணில் விக்ரமசிங்கவும் சித்திரவதைக்கூடங்களை நடாத்தினார். ஆனால் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு அவர் இணையனுசரணை வழங்கினார். இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய அரசாங்கம் 'வலிந்து காணாமலாக்கப்படல்' என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்துவதில்லை. இந்த அரசாங்கத்தினாலேயே இதற்குத் தீர்வைப் பெற்றுத்தரமுடியாவிடின், வேறு எந்த அரசாங்கத்தில் இதனைச் செய்யமுடியும்? எனக் கேள்வி எழுப்பினார். https://www.virakesari.lk/article/222639
  4. 'முழு மலையே கீழே இடிந்து வந்தது' - ஜம்மு காஷ்மீர் திடீர் வெள்ளத்தில் தப்பியவர்கள் கண்டது என்ன? படக்குறிப்பு, கிஷ்த்வார் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி 5 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்) ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் சாஷோட்டி பகுதியில் வியாழக்கிழமையன்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குறைந்தபட்சம் 45 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) பிரதீப் சிங் இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளார். பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீரிடம் பேசிய கிஷ்த்வார் மாவட்ட ஆட்சியர் பங்கஜ் ஷர்மாவும் 45 உயிரிழப்புகளை உறுதி செய்தார். மேக வெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர், இருப்பினும் இந்திய வானிலை ஆய்வு மையம் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தீயணைப்பு சேவைகள், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF), மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் சிங் தெரிவித்தார். பல தன்னார்வலர்களும் மீட்புக் குழுவுக்கு உதவி செய்து வருவதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் கூறினார். மீட்கப்பட்டவர்கள் தங்கள் பார்த்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். திடீரென சிதிலங்கள் வந்து எல்லோரையும் அடித்துச் சென்றதாக அவர்கள் விவரித்தனர். காயமடைந்தவர்கள் சொன்னது என்ன? பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, கிஷ்த்வார் திடீர் வெள்ள சம்பவத்தின் நேரடி சாட்சிகள் பிபிசி குழு வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள கிஷ்த்வார் மாவட்ட மருத்துவமனையை அடைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் சம்பவம் குறித்து விரிவாக விவரித்தனர். "என் மகளின் வாயில் மண் நிரம்பியிருந்தது. மூச்சுத் திணறி அவள் இறந்துவிட்டாள்," என அழுதுகொண்டே ஒரு பெண் பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீரிடம் கூறினார், "என் மகள் படித்து மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டாள். மருத்துவப் படிப்புக்கு தயாராகிக் கொண்டிருந்தாள். யாராவது என் மகளைத் திருப்பிக் கொடுங்கள், வேறு எதுவும் எனக்கு வேண்டாம்," என்று அவர் வேதனையுடன் கூறினார். "என்ன இருந்தாலும் சரி, எங்களை இப்போது வீட்டுக்கு அனுப்பி விடுங்கள். எட்டு மணி நேரத்துக்கு பிறகு அவளை இடிபாடுகளில் இருந்து மீட்டோம். எங்கள் மகளை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும்," என அந்த சிறுமியின் தந்தை சொல்கிறார். படக்குறிப்பு, கிஷ்த்வாரின் சாஷோட்டி பகுதியில் வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. ஒரு நபர், தனது குடும்பத்துடன் சாஷோட்டிக்கு வந்திருந்தார். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்ததாகவும், பலர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார். "நாங்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, ராணுவ வீரர்கள் 'ஓடுங்கள், ஓடுங்கள்' என்று கத்தினர். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. எழுந்தவுடன் எல்லாம் தகர்ந்து போனது," என்று அவர் கூறினார். "பாலத்தைக் கடந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் அடித்துச் செல்லப்பட்டனர்," என்று அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் அவரது சகோதரியும் உயிரிழந்தார். "நான் வீட்டுக்குச் சென்று என்ன சொல்வேன்? இது அவள் எனக்கு கட்டிய கடைசி ராக்கி. எனக்கு ஒரே ஒரு சகோதரி இருந்தாள், இப்போது நான் தனியாக இருக்கிறேன்." என பிபிசி-யிடம் தனது ராக்கியைக் காண்பித்தவாறு அவர் கூறினார் அங்கு இலவச உணவு வழங்கப்பட்ட கூடாரத்தின் கீழ் பலர் இடிபாடுகளில் சிக்கியதாகவும், அவர்களை மீட்பது கடினமாக இருந்ததாகவும் ஒரு பெண் தெரிவித்தார். ' வெடிகுண்டு வெடித்தது போல் சத்தம்கேட்டது, எல்லோரும் 'ஓடு' என கத்தினர் ' பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, கிஷ்த்வார் சம்பவத்தின் நேரடி சாட்சியான போத்ராஜ், தனது குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள் இடிபாடுகளில் சிக்கியதாக கூறினார் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தங்களது கஷ்டத்தை பகிர்ந்துள்ளனர். ஷாலு மெஹ்ரா மீட்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். "எங்களுக்கு எதுவும் புரியவில்லை. திடீரென வெடிகுண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டது, எல்லாம் புகைமூட்டமாக மாறியது. எல்லோரும் 'ஓடு, ஓடு, ஓடு' என்று கத்தினர்," என அந்த சம்பவம் குறித்து சொல்கிறார். "நான் ஓட முயன்றபோது, ஒரு பெண் என் மீது விழுந்தார். ஒரு மின்கம்பம் என் தலையில் விழுந்து மின்சாரம் தாக்கியது," என்று அவர் கூறினார். போத்ராஜ் தனது குடும்பத்தின் மற்ற 10 உறுப்பினர்களுடன் கிஷ்த்வாருக்கு வந்திருந்தார். அவரது மனைவி மற்றும் மகள் உட்பட மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கியதாக அவர் கூறினார். "திடீரென வெடிப்பு போன்ற ஏதோ ஒன்று நடந்து எல்லாம் பனிமூட்டமாக மாறியது. ஆனால் இரண்டு நிமிடங்களுக்குள் நான்கு அடி உயரத்தில் இடிபாடுகள் பரவிவிட்டன," என்று அந்த சம்பவம் குறித்து போத்ராஜ் தெரிவித்தார். "நிகழ்விடத்தில் உடல்கள் கிடந்தன. புதிய பாலம் கட்டப்படும் இடத்தில் இருந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். மேலே இருந்த எஞ்சிய 100 முதல் 150 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்," என சாஷோட்டியின் நிலைமை குறித்து அவர் விவரித்தார். "சில விநாடிகளில் சிதிலங்கள் வந்தன. அவற்றில் பெரிய மரங்களும் கற்களும் அடங்கும்," என அவர் தெரிவித்தார். "மக்கள் செனாப் நதியில் அடித்துச் செல்லப்பட்டனர்" தனது குடும்பத்துடன் சாஷோட்டிக்கு வந்திருந்த ஒரு பெண், இந்தப் பேரழிவின் வேதனையான காட்சியை விவரித்தார். "நான் ஒரு வாகனத்தின் கீழ் சிக்கிக் கொண்டேன். உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன். பின்னர் என் தந்தையைப் பார்த்து, தைரியத்துடன் வெளியேறினேன்," என்று அவர் தெரிவித்தார். "என் தாயார் ஒரு மின்கம்பத்தின் கீழ் சிக்கியிருந்தார், அவர்கள் மீது பலர் இருந்தனர். நான் எப்படியோ வெளியேறினேன், ஆனால் என் தாயார் மிகவும் காயமடைந்துள்ளார்," என்று அந்தப் பெண் மேலும் கூறினார். சாஷோட்டியில் ஏற்பட்ட அழிவு குறித்து அவர் கூறுகையில்: "அங்கு ஏராளமான மக்கள் இருந்தனர். எங்கள் கண்முன் மக்கள் செனாப் நதியில் அடித்துச் செல்லப்பட்டனர். நாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை ." "மண், கற்கள், மரங்கள் உட்பட முழு மலையே கீழே இடிந்து வந்தது. எங்கும் சேறும் சகதியும் பரவியது," என இடிபாடுகளைப் பற்றி அவர் விவரித்தார். "குழந்தைகள் பலர் இருந்தனர். அவர்கள் கால்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. என் தந்தை சிலரை மீட்டார், ஆனால் பலர் அங்கேயே உயிரிழந்தனர். சுற்றிலும் உடல்கள் கிடந்தன. நாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை," என்று அவர் கூறினார். நிர்வாகம் விரைவாக அனைவருக்கும் உதவியதாகவும், ராணுவம், சிஆர்பிஎஃப், காவல்துறை ஆகியவை ஒன்றிணைந்து மீட்பு பணிகளை விரைவாக மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். மீட்பு நடவடிக்கையின்போது ஒரு சிறுமி மீட்கப்பட்டார். "மேலிருந்து வெள்ளம் வந்து எல்லோரையும் அடித்துச் சென்றது. அங்கு பலர் உயிரிழந்தனர், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது," என்று அவர் தெரிவித்தார். "நானும் நடுவில் சிக்கியிருந்தேன். ஒரு காவலர் எனக்கு உதவினார். அவர் என்னை மீட்டார். எனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள், ஆனால் என்னால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை," என்று அவர் கூறினார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn5e1dddwv3o
  5. இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது - மறவன்புலவு சச்சிதானந்தம் 15 AUG, 2025 | 05:03 PM தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்போது அழைப்பு விடுக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் என்பது கடைந்தெடுத்த கயவர்கள் விடுத்துள்ள அழைப்பு. இதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். கடை அடைப்புக்கான தேவை இன்றைய சூழலுக்கு தேவையற்ற ஒன்று. அத்துடன் கடை அடைப்புக்கு என்பது காலத்துக்கும் ஒவ்வாத போராட்டம். முல்லைத்தீவில் இளைஞன் இறந்த சம்பவத்துக்கு அது தொடர்பில் குற்றம் சாட்டபட்டவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நேரம் இராணுவ பிரசன்னம் என்பது தோல்வி அடைந்த இனம் சந்திக்கும் ஒரு இயல்பானது தாக்கம் அல்லது அடக்கு முறைதான். மடு மாதாவின் நலன் கருதி போராட்டத்தை பின்நகர்த்திய குறித்த தரப்பினர் நல்லூர் திருவிழாவை குறிவைத்து. கடை அடைப்பு என கூறி சுயநல அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதால் நாளாந்தம் உழைத்து வாழும் மக்களின் வழ்வே பாதிக்கும். அந்தவகையில் ஏழை மக்களை பகடைக்காயாக்க முயற்சிக்கும் நரித்தன அரசியலுக்கு இடம்கொடுக்கக்கூடாது. இந்த கடை அடைப்பு போராட்டத்துக்கு வர்த்தகர்களோ, போக்குவரத்து சார் சங்கங்களோ, பொது அமைப்புகளோ எதுவானாலும் ஒத்துழைப்பு வழங்க கூடாது என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222630
  6. 15 AUG, 2025 | 03:40 PM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சூதறியாத அவரின் அயலவர் ஒருவரின் வீட்டுக்குள் மறைந்திருந்து விடுதலை புலிகள் நடத்திய சினைப்பர் தாக்குதலில் 2005 ஆகஸ்ட் 12 ஆம் திகதி கொல்லப்பட்டார். தனது வீட்டில் உள்ள நீச்சல் தட்கத்தில் வழமையான 1000 மீட்டர்கள் நீச்சலை அவர் முடித்துக்கொண்டு வெளியேறியபோது கொலைஞர் தாக்குதலை நடத்தினார். விதிவசமான அந்த தினத்துக்கு பிறகு இரு தசாப்தங்கள் கடந்து விட்டன. ஆனால், அவர் பற்றிய நினைவுகள் இன்னமும் நீடிக்கின்றன. இலங்கையின் தலைசிறந்த வெளியுறவு அமைச்சர் என்று பலராலும் கருதப்பட்ட அந்த மனிதரின் 20 வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த கட்டுரை எழுதப்படுகிறது. அவரது ஒரேயொரு மகள் அஜிதா தனது தந்தையாரைப் பற்றி வேறு எந்த பத்திரிகையாளரை விடவும் டி.பி.எஸ். ஜெயராஜே மிகவும் கூடுதலாக எழுதியிருக்கிறார் என்று தந்தையார் குறித்த தனது நூலில் குறிப்பிடுகின்ற அளவுக்கு லக்ஸ்மன் கதிர்காமரை பற்றி பல வருடங்களாக நான் விரிவாக எழுதியிருக்கிறேன். லக்ஸ்மன் கதிர்காமரை பற்றி சிறந்த வாசிப்புக்குரிய அஜிதா கதிர்காமரின் நூலுக்கு " The Cake That Was Baked At Home " என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அதன் புதிய பதிப்பு கதிர்காமரின் 20 வது நினைவு தினத்தை முன்னிட்டு இவ்வருடம் வெளியிடப்பட்டது. எனது கட்டுரைகளில் இருந்து வரிகளும் பந்திகளுமாக 78 குறிப்புகளை அஜிதாவின் நூல் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பக்கத்தில் அவர் ' லக்ஸ்மன் கதிர்காமரின் உத்தியோகபூர்வமற்ற சுயசரிதையாளர் " என்று என்னை பெரும்பாலும் குறிப்பிடலாம் என்று கூறியிருக்கிறார். அதனால், இந்த பின்புலத்தில் எனது முன்னைய எழுத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு உதவியுடன் லக்ஸ்மன் கதிர்காமர் என்ற பன்முக ஆளுமை பற்றி எழுதுகிறேன். யாழ்ப்பாணப் பூர்வீகத்தைக்கொண்ட புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ பெற்றோருக்கு 1932 ஏப்ரில் 12 ஆம் திகதி லக்ஸ்மன் கதிர்காமர் பிறந்தார். ஆனால், அந்த முத்திரையுடன் ஒத்துப்போவதற்கு அவர் தனது பிற்கால வாழ்வில் மறுத்தார். தான் ஒரு தமிழன் என்பதை அவர் ஒருபோதும் மறுத்ததில்லை. ஆனால், அத்தகைய முத்திரைகளுக்கு அப்பாற்பட்டவராக தன்னை அவர் கூறிக் கொண்டார். தமிழராக இருப்பது என்பதை புலிகளின் ஆதரவாளராக இருப்பதுடன் சமப்படுத்த விடுதலை புலிகளும் அவர்களின் பரிவாரங்களும் முயற்சித்துக் கொண்டிருந்த ஒரு நேரத்தில், அந்த கும்பலில் இருந்து வேறுபட்டவராக நின்றார் லக்ஸ்மன் கதிர்காமர். அதற்காக அவர் ' அடையாளத் தமிழர்' என்று கேலி செய்யப்பட்டதுடன் ஒரு துரோகி என்றும் அழைக்கப்பட்டார். இறுதியில் கொலை செய்யப்பட்டார். கதிர்காமர் அவரது மரணத்துக்கு சில வாரங்கள் முன்னதாக பி.பி.சி.யின் " ஹாட் ரோக் " ( Hard Talk) நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில் துரோகி என்று அழைக்கப்படுவது பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது அற்புதமான முறையில் அதற்கு பதிலளித்தார். " பிறப்பின்போது எம்மெல்லோருக்கும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. எனக்கும் அவ்வாறு ஒரு பெயர் வழங்கப்பட்டது. சிறுவர்களை படையணிக்கு சேர்ப்பது, எதிராளிகளை கொலை செய்வது, ஜனநாயகத்தையும் தாராளவாதத்தையும் நிராகரிப்பது போன்ற விடுதலை புலிகளின் நடவடிக்கைகளை ஆதரிப்பதவர் தான் தமிழர் என்று அர்த்தப்படுவதாக இருந்தால், அவ்வாறு செய்வதற்கு நான் தயாராக இல்லை. அதற்காக என்னை துரோகி என்று அழைப்பதாக இருந்தால், அதை முற்றுமுழுதான மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்" என்று கதிர்காமர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் ஆறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாக லக்ஸ்மன் கதிர்காமர் பிறந்தார். தந்தையார் சாமுவேல் ஜெபரத்தினம் கிறிஸ்ரியன் கதிர்காமர் (எஸ்.ஜே.சி.) சீனியர் ஒரு சட்டத்தரணி. அவர் மானிப்பாயின் எட்வேர்ட் மேதரின் மகளான எடித் றோஸ்மண்ட் பரிமளம் மேதரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஐந்து ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் பிறந்தனர். எல்லோருக்கும் மூத்தவரான எஸ்.ஜே.சி. ஜூனியர் அல்லது சாம் கதிர்காமர் நன்கு பிரபல்யமான இராணி அப்புக்காத்து (கியூ.சி.). செல்வநாதன் அல்லது பாய் கதிர்காமர் இராணுவத்தில் மேஜர் தரத்தில் பணியாற்றி பிறகு அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். ராஜன் கதிர்காமர் இலங்கை கடற்படையின முன்னாள் தளபதி. திருமலன் அல்லது மானா கதிர்காமர் ஒரு தோட்டத்துரை. அவர் டிக்கோயாவில் வாகன விபத்து ஒன்றில் இளவயதில் மரணமடைந்தார். லக்ஸ்மனுக்கு மூத்தவரான சகோதரி ஈஸ்வரி டொக்டர் ஏ.எம்.டி. றிச்சர்ட்ஸை திருமணம் செய்தார். சகோதரர்கள் சகலரும் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற அதேவேளை லக்ஸ்மன் மாத்திரம் கண்டி திரித்துவக் கல்லூரிக்கு சென்றார். இரண்டாவது உலகப்போர் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். திரித்துவக் கல்லூரியில் படித்த காலத்தில் (1942 -- 1950 ) இலங்கை வரலாற்றுக்காக டொக்டர் அந்திரெஸ் நெல் நினைவுப் பரிசையும் ஆங்கிலத்துக்காக நேப்பியர் கிளேவெறிங் பரிசையும் சிறந்த சகலதுறை மாணவன் என்பதற்காக றைட் தங்கப்பதக்கத்தையும் அவர் 1950 ஆண்டில் பெற்றார். விளையாட்டுக்களிலும் லக்ஸ்மன் சிறந்து விளங்கினார். 1950 ஆம் ஆண்டில் கல்லூரியின் கிரிக்கெட் அணியின் காப்டனாகவும் அவர் இருந்தார். றகர் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய அவர் 1949 ஆம் ஆண்டில் பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் 110 மீட்டர்கள் தடைதாண்டும் ஓட்டத்தில் (15.7 செக்கன்கள்) முன்னைய சாதனையை முறியடித்தார். அதே ஆண்டில் டக்கன் வைற் சவால் கிண்ணத்தையும் டி சொய்சா சவால் கிண்ணத்தையும் பெற்ற லக்ஸ்மன் சிரேஷ்ட மாணவர் தலைவராகவும் வந்தார். பேராதனை பல்கலைக்கழகத்தில் பிரவேசித்த அவர் சட்டத்துறைப் பட்டதாரியாக ( எல்.எல்.பி.) வெளியேறினார். பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் 1951 , 1952 ஆண்டுகளில் அகில இலங்கை ரீதியான போட்டியில் 110 மீட்டர்கள் தடைதாண்டும ஓட்டத்தில் வெற்றி பெற்றார். அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையில் அஹமதாபாத்திலும் (1951) அலகாபாத்திலும் ( 1952) நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 110 மீட்டர்கள் தடைதாண்டும் ஓட்டத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். இலங்கை பல்கலைக்கழக கிரிக்கெட் அணியிலும் பிறகு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பலியோல் கல்லூரியின் கிரிக்கெட் அணியிலும் உறுப்பினராக இருந்த லக்ஸ்மன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அணியுடன் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஒக்ஸ்போர்ட் அணியில் இடம்பெற்று " ஒக்ஸ்போர்ட் நீல உறுப்பினராகவும் ( Oxford Blue ) வந்தார். ஒக்ஸ்போர்ட் சட்டத்தில் இளமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு கதிர்காமர் அட்வக்கேற் இறுதிப் பரீட்சைக்கு தோற்றி மூதல் தரத்தில் சித்தியெய்தினார். ஈ.என்.ஏ. கிறேசியனுக்கு செயலாளராகப் பணியாற்றிய அவர் பிறகு இங்கிலாந்துக்கு சென்று இன்னர் ரெம்பிளின் பாரிஸ்டராக வந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பலியோல் கல்லூரியில் பிரவேசித்தார். ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவராக தெரிவாகி அவர் வரலாறு படைத்தார். நான்கு இலங்கையர்கள் அந்த ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். கதிர்காமர் ( திரித்துவக் கல்லூரி ), லலித் அத்துலத் முதலி (றோயல் கல்லூரி ), நூர்தீன் (சென். தோமஸ் கல்லூரி), ஜெயசுந்தரி வில்சன் ( மெதடிஸ்ற் கல்லூரி) ஆகியோரே அவர்கள். வில்சன் மாத்திரமே ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவராக இருந்த ஒரேயொரு இலங்கைப் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. 1958 இனக்கலவர நாட்களில் ஐக்கிய இராச்சியத்தில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் லக்ஸ்மன் கதிர்காமர் அந்த வன்செயல்கள் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க ஒரு அரசியல்வாதியே தவிர அரசியல்மேதை அல்ல என்பதை காட்டுகின்றன என்று குறிப்பிட்டிருந்தார். அடுத்த வருடம் ஒக்ஸ்போர்ட்டில் எஸ்.டபிள்யூ. ஆர்.டி.யின் உருவப்படம் தொங்கவிடப்படவதற்கு காரணமாக லக்ஸ்மன் இருந்தார். ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவராக இருந்தவர்கள் அரச தலைவர்களாக வந்தால் அவர்களது படங்களை அங்கு தொங்கவிடுவது ஒரு பாரம்பரியமாகும். அந்த யூனியனின் செயலாளராக இருந்தவர்களில் எஸ்.டபிள்யூ. ஆர்.டி.யின் படம் மாத்திரமே அங்கு தொங்கவிடப்பட்டது. ஆனால், அது தொடர்பான நிகழ்வில் பங்கேற்பதற்காக ஒக்ஸ்போர்ட்டுக்கு விஜயம் செய்வதற்கு சில வாரங்கள் முன்னதாக அவர் கொல்லப்ப்டார். பல வருடங்களுக்கு பிறகு 2005 மார்ச் 15 ஆம் திகதி ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தரான கிறிஸ் பற்றன் பிரபு லக்ஸ்மன் கதிர்காமரின் இருவப்படத்தை திரைநீக்கம் செய்து வைத்தார். அந்த நிகழ்வில் தான் கதிர்காமர் ' The cake was baked at home ' என்று குறிப்பிட்டார். ஒக்ஸ்போர்ட் யூனியனின் வரலாற்றில் அதன் கட்டிடத்தில் உருவப்படம் அல்லது மார்பளவு சிலை வைக்கப்பட்ட பதினைந்தாவது உறுப்பினராக கதிர்காமர் விளங்கினார். அவர் 1995 ஆம் ஆண்டில் இன்னர் ரெம்பிளின் கௌரவ முதுமாணியாகவும் ( Hon.Master of Inner Temple) பெருமைப்படுத்தப்பட்டார். முன்னாள் மலேசிய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானுக்கு பிறகு அந்த கொளரவத்தைப் பெற்ற இரண்டாவது ஆசியர் கதிர்காமர் என்பது குறிப்பிடத்தக்கது. அஞ்ஜெலா மாலிக் பலியோல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் கதிர்காமர் பிரெஞ்சு -- பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கலைஞரான அஞ்ஜெலா மாலிக்கை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரு பிள்ளைகள். மகள் அஜிதா கதிர்காமர் பிரபல்யமான ஊடக ஆளுமை. ஸ்ரீராகவன் ஜெபரத்தினம் கிறிஸ்ரியன் என்ற பெயர்கொண்ட மகன் ஒரு கட்டிடக் கலைஞர். அவர் ராகீ என்றே பரவலாக அறியப்படுகிறார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் ஒக்ஸ்போர்ட்டில் இருந்து அறுபதுகளில் இலங்கை திரும்பிய பிறகு லக்ஸ்மன் யாழ்ப்பாணத்துக்கு பல தடவைகள் விஜயம் செய்தார். தனது வேர்களை கண்டறிவது அதன் ஒரு குறிக்கோள். தேர்தலில் போட்டியிடுவதற்கு பொருத்தமான தொகுதி ஒன்றை தெரிவு செய்வது அடுத்த குறிக்கோள். மிகுந்த ஆர்வமுடைய சரித்திர மாணவரான கதிர்காமர் யாழ்ப்பாண இராச்சியம் குறித்து அறிவதில் பெரும் அக்கறை காட்டினார். வரலாற்றையும் யாழ்ப்பாணத்தின் பாரம்பரியங்களையும் அறியாத ஒருவர் என்று அவரை விடுதலை புலிகளுக்கு ஆதரவான விமர்சகர்கள் ஏளனம் செய்தபோதிலும், அந்த விடயங்கள் குறித்து அவர் பேசுவதைக் கேட்டவர்கள் அவரது அறிவு மற்றும் நுண்ணறிவுத்திறத்தை கண்டு வியப்படைந்தனர். அறுபதுகளில் யாழ்ப்பாணத்துக்கு செய்த விஜயங்கள் ஒன்றின்போது கதிர்காமர் யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு தலைப்பில் உரையாற்றினார்." பிளேட்டோவில் இருந்து சிறிமாவோ வரை " என்பதே அந்த தலைப்பாகும். அவரது அந்த உரை பத்திரிகைகளில் செய்தியாக வெளியானபோது திருமதி பண்டாரநாயக்க ஆத்திரமடைந்ததாக கூறப்பட்டது. பல வருடங்களுக்கு பிறகு அதே திருமதி பண்டாரநாயக்க கதிர்காமருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது மகள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அமைச்சரவையில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். அந்த அமைச்சரவையின் பிரதமராக திருமதி பண்டாரநாயக்கவே பதவியேற்றார். ஏற்கெனவே குறிப்பிட்டதை போன்று அறுபதுகளின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு சென்ற வேளைகளில் கதிர்காமர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தொகுதியொன்றை கண்டறிவதில் ஈடுபட்டார். ஆனால், ஒரு வேட்பாளராகும் அவரது ஆர்வம் இரு காரணங்களினால் நீண்டநாட்கள் நிலைக்கவில்லை. முதலாவது காரணம் வடக்கு அரசியல் நிலைவரம். தமிழ்த் தேசியவாதம் முன்னரங்கத்துக்கு வந்திருந்த நிலையில், தேர்தல் களத்தில் குதிக்க விரும்பும் எவரும் அந்த கோட்பாட்டை ஆதரிக்க வேண்டியிருந்தது. குறுகிய தேசியவாதத்தை கதிர்காமர் விரும்பவில்லை. இரண்டாவதாக, அரசியல் பேச்சுக்களை நிகழ்த்தக்கூடிய அளவுக்கு தமிழில் பேசக்கூடியவராகவும் கதிர்காமர் இருக்கவில்லை. கதிர்காமர் யாழ்ப்பாணப் பூர்வீகத்தைக் கொண்டிருந்த போதிலும், அங்கு அவருக்கு உறுதியான வேர்கள் இருக்கவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவது என்பது மாத்திரமல்ல, யாழ்ப்பாண அரசியலின் கூச்சலுக்கும் குழப்பத்துக்கும் கதிர்காமரினால் முகங்கொடுக்க முடியும் என்பதும் சந்தேகமாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் அவரது அரசியல் வாய்ப்புகள் குறித்து அங்கு இருந்த அவரது ஒன்றுவிட்ட சகோதரர்கள் நேர்மையான ஆலோசனையை வழங்கினார்கள். குடாநாட்டில் தனது அரசியல் வாய்ப்புக்கள் ஆனையிறவு கடவையை விடவும் குறுகலானது என்பதை கதிர்காமர் விளங்கிக்கொண்டார். கொழும்பில் இருந்த லக்ஸ்மனின் மூத்த சகோதரர்களான சட்டத்தரணி சாம் ஜே.சி. கதிர்காமரும் கடற்படைத்தளபதி இராஜநாதன் (ராஜன் ) கதிர்காமரும் அவரின் அரசியல் ஆசைக்கு ஊக்கமளிக்கவில்லை. அந்த ஆசையைக் கைவிடுமாறு அவர்கள் அவரை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர். அவர்களது தந்தையார் எஸ்.ஜே சி. ( சீனியர்) கொழும்பில் வளமான வருமானம் தரும் சட்டத்தொழிலை நிறுவியிருந்தார். அத்துடன் அவர் இலங்கை சட்ட சங்கத்தின் ( Ceylon Legal Society ) தாபக உறுப்பினராகவும் இருந்தார். தனது சகோதரர்களினதும் உறவினர்களினதும் ஆலோசனைகளை செவிமடுத்த லக்ஸ்மன் சட்டத்துறையில் கவனத்தைக் குவிக்க ஆரம்பித்தார். லக்ஸ்மனின் இரு மூத்த சகோதரர்களும் உயிருடன் இருந்திருந்தால், அவர் ஒருபோதும் அரசியலில் பிரவேசம் செய்திருக்கமாட்டார் என்று நம்பிய உறவினர்கள் இருந்தார்கள். 1994 ஆம் ஆண்டில் லக்ஸ்மன் அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னதாக ராஜனும் சாமும் இறந்து விட்டார்கள். ஜே.வி.பி. கிளர்ச்சி லக்ஸ்மன் கதிர்காமர் கொழும்பில் உறுதியான முறையில் சட்டத் தொழிலை ஆரம்பித்தார். அவர் வர்த்தக, கைத்தொழில், தொழில் மற்றும் நிருவாக சட்டங்களில் திறமை மிக்கவராக இருந்தார். 1971 ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கிளர்ச்சி லக்ஸ்மனின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த கிளர்ச்சியில் நேரடியாக அவர் பாதிக்கப்படாவிட்டாலும், வெளிநாட்டுக்கு போய்விட வேண்டும் என்ற உணர்வை அது அவருக்கு ஏற்படுத்தியது. ஜே.வி.பி.யின் தோற்றத்தை அடுத்து இலங்கையி் வாழ்வு மோசமடையப் போகின்றது என்று அவர் உணர்ந்தார். எவ்வளவு தீர்க்கதரிசனம் பாருங்கள். ஆனால், ஜே.வி.பி. காரணமாக இலங்கையில் இருந்து வெளியேறிய அதே கதிர்காமர் 33 வருடங்களுக்கு பிறகு ' செஞ்சகோதரர்களுடன்' நல்லுறவைக் கொண்டிருந்தார் என்பது ஒரு விசித்திமாகும். லக்ஸ்மனை நேர்மையான ஒரு நண்பர்கவும் வழாகாட்டியாகவும் ஜே.வி.பி.யினர் கருதிய அதேவேளை, அவரும் சில பிரச்சினைகளில் அவர்களின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டார். லக்ஸ்மன் இன்று உயிருடன் இருந்திருந்தால், ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இலங்கையை ஆட்சிசெய்கின்ற அளவுக்கு அண்மைக்காலத்தில் ஏற்பட்ட திருப்பங்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்திருக்கக்கூடும். புலமைச்சொத்து லக்ஸ்மன் மீண்டும் பிரிட்டனுக்குச் சென்றார். 1971 ஆம் ஆண்டு தொடக்கம் 1974 ஆம் ஆண்டு வரை அங்கு சட்டத்துறை வாழ்வை தொடர்ந்த அவர் அந்தக் காலப்பகுதியில் மனித உரிமைகள் விவகாரங்களில் மிகுந்த அக்கறை செலுத்தினார். 1973 ஆம் ஆண்டில் வியட்நாமில் பௌத்தர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையிலான வன்செயல்களை விசாரணை செயவதற்கான சர்வதேச மன்னிப்புச்சபையின் விசேட பிரதிநிதியாக அவர் செயற்பட்டார். 1976 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு (International Labour Organization) ஆலோசகராக இருந்த அவர் 1978 ஆம் ஆணடில் உலக புலமைச்சொத்து அமைப்பில் ( World Intellectual Property Organization) இணைந்து அதன் பணிப்பாளராக 1988 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். ஆசிய -- பசுபிக் பிராந்தியத்தின் வளர்முக நாடுகளுக்கு புலமைச்சொத்து விவகாரங்களில் ஆலோசகராகவும் அவர் செயற்பட்டார். உலகின் பெருவாரியான நாடுகளுக்கு பயணம் செய்த அனுவத்தைக் கொண்டவராகவும் லக்ஸ்மன் விளங்கினார். 1980 களின் முற்பகுதியில் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் விபத்துக்குள்ளான விமானத்திற்குள் இருந்த அவர் அவசரகால கதவின் ஊடாகப் பாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த சம்பவத்தில் எலும்பு முறிவுக்கு உள்ளான அவர் மூன்று மாதங்கள் படுக்கையில் இருந்து சிகிச்சை பெற்று தேறினார். 1988 ஆம் ஆண்டில் கொழும்பு திரும்பிய கதிர்காமர் சடடத்தொழிலை மீணடும இங்கு ஆரம்பித்தார். முன்னரைப் போன்றே அவர் கைத்தொழில், தொழில் மற்றும் வர்த்தக சட்டங்களிலும் புலமைச்சொத்து சட்டத்திலும் கூடுதல் கவனத்தைச் செலுத்தினார். தமிழ்த் தடுப்புக்காவல் கைதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பலவற்றில் மிகவும் விவேகமான ஒரு ஆலோசகராக பரபரப்பு காட்டாமல் கதிர்காமர் செயற்பட்டார் என்பது அவரைப் பற்றி பெரிதாக தெரியாத இன்னொரு விடயம். வன்செயல்களில் பாதிக்கப்பட்ட சில தமிழர்கள் இழப்பீடுகளைப் பெறுவதற்கு சட்ட ஆலோசனையையும் அவர் வழங்கினார். சந்திரிகா குமாரதுங்க கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளின் முற்பகுதியில் சந்திரிகா குமாரதுங்கவின் இரண்டாவது இலங்கை வருகை நாட்டின் இனத்துவ அரசியலில் ஒரு புதிய விடியலுக்கு கட்டியம் கூறியது. இனநெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலமான இணக்கத் தீர்வொன்று விரைவில் கிடைக்கும் என்று உயர்ந்த எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. இலட்சியவாத உணர்ச்சி வேகம் கொண்ட ஒரு காலப்பகுதியாக அது விளங்கியது. அத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் குமாரதுங்கவுக்கு ஆதரவாக அரசியலில் இறங்குவதற்கு கதிர்காமர் தீர்மானித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைவதற்கு 1994 ஆம் ஆண்டில் அவர் தீர்மானித்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக நோக்கப்பட்டது. ஏனென்றால் அவரின் குடும்ப உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தீவிரமான ஆதரவாளர்கள். அரசியலில் இறங்குமாறு ஆரம்பத்தில் கதிர்காமருக்கு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் கலாநிதி நீலன் திருச்செல்வம் தான் ஊக்கம் கொடுத்தார். அந்த முயற்சியில் அவருக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சரத் முத்தெட்டுவேகமவின் மனைவியும் லங்கா சமசமாஜ கட்சியின் கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வாவின் புதல்வியுமான சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகமவும் பெருமளவில் உதவினார். சுதந்திர கட்சியின் தேசியப்பட்டியல் 1994 ஆம் ஆண்டில் சுதந்திர கட்சியின் தேசியப்பட்டியலில் லக்ஸ்மனின் பெயர் இடம்பெற்றது. சுதந்திர கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் வன்னியில் வெற்றி பெறுவதற்காக வாய்ப்பைக் கொண்ட ஒரேயொருவராக சட்டத்தரணி கேதீஸ்வரனே விளங்கினார். அவர் முன்னர் வவுனியா நகரசபையின் தவைராக தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் சார்பில் பதவியில் இருந்தார். ஆனால், அவர் வெற்றி பெறவில்லை. அதனால் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தமிழர் ஒருவரை குமாரதுங்க நியமிக்க வேண்டியிருந்தது. மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான பெரியசாமி சந்திரசேகரனின் ஆதரவுடன் புதிய அரசாங்கத்துக்கு ஒரு ஆசனப் பெரும்பான்மையே இருந்தது. குமாரதுங்கவின் அரசாங்கத்தில் தொடக்கத்தில் அவரும் கதிர்காமருமே தமிழ்ப் பிரதிநிதிகள். தனது அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இருபதாக மட்டுப்படுத்த விரும்பிய குமாரதுங்க அவர்கள் இருவருக்கும் பிரதியமைச்சர் பதவிகளை வழங்க முன்வந்தார். சந்திரசேகரன் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால், கதிர்காமர் மறுத்துவிட்டார். தன்னை ஒரு தமிழர் என்று அரிதாக காட்டிக்கொள்ளாதவர் என்ற போதிலும் லக்ஸ்மன் அப்போது அவ்வாறு செய்தார். தனக்கு ஒரு பிரதியமைச்சர் பதவியை மாத்திரம் தந்தால் அதை தனது சமூகம் ஒரு நிந்தனையாக கருதும் என்று அவர் சுட்டிக் காட்டினார். சந்திரிகா அதை விளங்கி ஏற்றுக் கொண்டார். நீதியமைச்சையா அல்லது வெளியுறவு அமைச்சையா பொறுப்பேற்பது என்று தீர்மானிக்க வேண்டியிருந்தது. லக்ஸ்மன் வெளியுறவு அமைச்சை விரும்பினார். அதற்கு பெருமளவுக்கு பொருத்தமானவராக அவர் தன்னை உணர்ந்தார். வெளியுறவு அமைச்சர் வெளியுறவு அமைச்சராக இருப்பதற்கு மிகச் சிறந்த மனிதர் என்று கதிர்காமர் தன்னை நிரூபித்துக் காட்டினார். இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னரான வருடங்களில் பாதுகாப்பு அமைச்சும் வெளியுறவு அமைச்சும் பிரதமருக்கென்றே பிரத்தியேகமான பொறுப்புக்களாக இருந்தன. அந்த நடைமுறையை 1977 ஆம் ஆண்டில் மாற்றிய ஜே.ஆர். ஜெயவர்தன தனது அரசாங்கத்தில் ஏ.சீ.எஸ். ஹமீதை வெளியுறவு அமைச்சராக நியமித்தார். இலங்கை இதுவரையில் கண்ட தலைசிறந்த வெளியுறவு அமைச்சர் கதிர்காமரே என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்த காரணத்தினால் பலருக்கு கதிர்காமர் சிறந்த வெளியுறவு அமைச்சராக தெரிந்தார். ஆனால், முன்னைய வெளியுறவு அமைச்சர்கள் தங்களது உறவினர்களையும் நெருங்கிய நட்பு வட்டங்களைச் சேர்ந்தவர்களையும் பதவிகளுக்கு நியமித்து மோசமாக்கி வைத்திருந்த வெளியுறவு அமைச்சை துப்பரவு செய்ததில் தான் கதிர்காமரின் மகத்துவம் தெரிந்தது. இன்னொரு தமிழரான சேர் கந்தையா வைத்தியநாதன் நிரந்தரச் செயலாளராக சுதந்திரத்துக்கு பிறகு வெளியுறவுச்சேவையை நவீனமயப்படுத்தினார். லக்ஸ்மன் கதிர்காமர் தான் வெளியுறவுச் சேவையை மறுசீரமைத்து துறைசார் நிபுணத்துவமுடையதாக மாற்றியமைத்தார். நிரந்தரச் செயலாளர் தொடக்கம் அலுவலக உதவியாளர் வரை அவருடன் பணியாற்றியவர்கள் இதற்கு சான்று பகர்வர். ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் பிரேமதாச ஆகியோரின் ஆட்சிகளின் கீழ் பெருமளவுக்கு சீர்குலைக்கப்பட்டிருந்த இந்தியாவுடனான உறவுகளை மீட்டெடுத்தது நல்லுறவைப் பேணியது வெளியுறவு அமைச்சர் என்ற வகையில் கதிர்காமரின் சாதனைகளில் முக்கியமான ஒன்று. உண்மையில், பண்டாரநாயக்க குடும்பத்தின் ஆட்சியில் இந்தியாவுடனான இலங்கையின் உறவுகள் நல்ல நிலையிலேயே இருந்து வந்தன. ஆனால், உறவுகளை மீட்டெடுத்ததில் கதிர்காமரின் பாத்திரத்தை எளிதாக எண்ணிவிட முடியாது. இந்தியாவுடனான உறவுகள் இந்தியா நோக்கிய கதிர்காமரின் நெருக்கமும் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்துக்கு அவர் கொடுத்த அங்கீகாரமும் உணர்ச்சிபூர்வமான அடித்தளத்துடன் கூடிய அறிவார்ந்த தன்னலத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகும். அரசியல் அம்சங்களுக்கு அப்பால் தனிப்பட்ட முறையிலான ஆன்மீக அம்சங்களும் அதில் இருந்தன. லக்ஸ்மனின் தந்தையார் மகாத்மா காந்தியின் ஒரு தீவிர அபிமானி. லக்ஸ்மன் பிறப்பதற்கு முன்னர் மகாத்மா காந்தி இலங்கைக்கு வருகை தந்தபோது அவரை வரவேற்ற குழுவின் தலைவராக இருந்த தந்தையார் காந்தி கலந்துகொண்ட கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். லக்ஸ்மனின் தாயார் பரிமளம் தனது ஆட்டாகிராஃபில் கையெழுத்திடுமாறு காந்தியிடம் வேண்டினார். பரிமளம் பளபளப்பான பட்டுச்சேலையை அணிந்திருந்ததை பார்த்த காந்தி அவர் கதர் ஆடை அணிந்துவந்தால் மாத்திரமே கையெழுத்திடுவதாக கூறினார். பரிமளத்தினால் காந்தியின் கையழுத்தைப் பெறமுடியவில்லை. மகாத்மா காந்தியுடனான இந்த பிணைப்புக்கு அப்பால், லக்ஸ்மனின் உறவினர்களில் ஒருவர் சபர்மதி ஆச்சிரமத்தில் மகாத்மா காந்தியின் சீடராக இருந்தார் என்பதுடன் இன்னொரு உறவினர் சாந்திநிகேதனில் ரபீந்திரநாத் தாகூரின் மாணவராக இருந்தார். அந்த வகையில் லக்ஸ்மனும் கூட இந்தியாவுடன் இந்த வரலாற்றுப் பிணைப்பை தொடர்ந்தார். லக்ஸ்மன் தனது அறிவு மற்றும் ஆன்மீகப் பயணத்தில் இந்திய தத்துவ ஞானத்தின் கடுமையான செல்வாக்கிற்கு ஆளானார். லக்ஸ்மன் ஒரு பலமத மனிதராக வளர்ச்சியடைந்தார். இந்தியாவின் மகத்தான புதல்வரான கௌதம புத்தரினால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அவ்வாறு நேர்ந்தது சமகால அரசியல் நிர்ப்பந்தங்களின் விளைவான ஒரு பாசாங்கு அல்ல. செலஸ்ரின் பெர்னாண்டோ நினைவுப்பேருரை பல வருடங்களுக்கு முன்னர் 1992 அக்டோபர் 9 ஆம் திகதி லக்ஸ்மன் கதிர்காமர் வண. செலஸ்ரின் பெர்னாண்டோ நினைவுப் பேருரையை நிகழ்த்தினார். ' கிறிஸ்தவம் அல்லாத சமூகமொன்றில் எமது காலத்தில் பைபிளின் சமூகப் பொருத்தப்பாடு ' (The Sicial.Relevance of Bible for, our times in a non - Christian society) என்பதே அதன் தொனிப் பொருளாகும். "உருவமற்ற உண்மைகளின் வரலாற்று ரீதியான உருவாக்கங்களே வெவ்வேறு மதங்கள். புதையல் ஒன்றே, அது மாற்றமுடியாததுமாகும். ஆனால், அந்த புதையலைக் கொணடிருக்கும் கொள்கலன் அதன் காலத்தினதும் சுற்றாடலினதும் வடிவத்தையும் வரணத்தையும் எடுக்கிறது" என்று அவர் கூறினார். செலஸ்ரின் பெர்னாண்டா நினைவுப்பேருரை கிறிஸ்தவ வட்டாரங்களில் சில சர்ச்சைகளை தோற்றவித்தது. புத்தபிரான் குறித்து மிகவும் பிரகாசமான கருத்துக்களை கதிர்காமர் கூறியதே அதற்கு காரணம். "உத்வேகம் தரும் மனித உணர்வுப் புதையல்களில் ஒன்று கௌதம புத்தர் பற்றிய நினைவாகும். கோடிக்கணக்கான எமது மக்களின் சிந்தனை மீது அவர் மாபேரளவு செல்வாக்கைக் கொண்டிருக்கிறார். துணிச்சலும் மேன்மையும் கொண்ட பிறவிகள் மீது நூற்றாண்டுகளாக அவர் ஏற்படுத்திவரும் உத்வேகம் கணக்கிட முடியாததாகும். மனித உணர்வுகளை வரையறை செய்வதிலும் மனித உறவுகளுக்கு மனித நேயப்பண்பை ஊட்டுவதிலும் அவரது பங்களிப்பு அளவிடமுடியாததாகும். என்றாலும் கூட, அந்த மகத்தான ஆன்மாவின் நினைவை நிர்மூலம் செய்வதற்கும் அவரது செல்வாக்கை இல்லாமல் செய்வதற்கும் வேறு கொடிகளின் கீழ் போரிட்ட மனிதர்கள் முயற்சிகளை மேற்கொண்டார்கள். அந்த முயற்சிகளுக்கு எல்லாம் தப்பிப்பிராயங்களும் அறியாமையுமே காரணம் என்றே எம்மால் கூறமுடியும்." பௌத்தத்தின் பொதுவான விழுமியங்களையும் போதனைகளையும் கிறீஸ்துவம் கொண்டிருக்கிறது என்பதும் புத்தரின் போதனைகளின் செல்வாக்கிற்கு யேசுபிரான் ஆளாகியிருந்தார் என்பதுமே கதிர்காமரின் ஆய்வாக இருந்தது என்று அந்த நினைவுப் பேருரை நிகழ்வில் கலந்துகொண்டர்கள் சிலர் கூறினார்கள். இந்த கருத்துக்கள் "யேசு இந்தியாவில் வாழ்ந்தார் -- சிலுவையேற்றத்துக்கு முன்னரும் பின்னரும் அவரது எவரும் அறியாத வாழ்வு" ( Jesus lived in India -- His Unknown life before and after the Crucification ) என்ற தலைப்புடனான ஜேர்மன் வேதவியலாளர் ஹொல்கர் கேர்ஸ்ரினின் பிரபல்யமான நூலில் உள்ள ஆய்வை ஒத்திருந்தன. அதனால் கதிர்காமர் புத்தரின் போதனைகளினால் பெரிதும் கவரப்பட்டிருக்கக்கூடியது சாத்தியமே. ஆனால், அறிவுஜீவிப் பயணத்தில் ஒரு மைல்கல் என்பதை விடவும் அதிகமானது என்றே தோன்றுகிறது. கதிர்காமர் அவரது மத நம்பிக்கையை பொறுத்தவரை பெருமளவுக்கு ஒரு தனிப்பட்ட மனிதராகவே இருந்தார். தனியாகப் பிரார்த்தனை 1994 ஆம் ஆண்டில் லக்ஸ்மன் அமைச்சராக பதவியேற்ற தினம் அதிகாலையில் கொழும்பு புல்லேர்ஸ் வீதியில் அமைந்திருக்கும் அங்கிளிக்கன் தேவாலயத்தில் தனியாக ஒருவர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கக் காணப்பட்டார். அன்றைய ஆயர் கென்னத் பெர்னாண்டோ தேவாலயத்திற்குள் நடந்து சென்றபோது அதை அவதானித்தார். அது வேறுயாருமல்ல, லக்ஸ்மன் கதிர்காமரே தான். கிறிஸ்தவ கோட்பாட்டுப் பிடிவாதக்காரர்கள் மறுதலிப்பாளர்கள் என்ற போதிலும், கதிர்காமர் அடிப்படைக் கிறிஸ்துவத்தில் தொடர்ந்தும் நம்பிக்கையுடையவராக இருந்த அதேவேளை, மதத்தின் பொதுமையை அல்லது உலகளாவிய தன்மையை ஏற்றுக் கொண்ட ஒருவராக மாறியிருந்தார். "லங்கா அக்கடமிக்" பல வருடங்களுக்கு முன்னர் லக்ஸ்மன் கதிர்காமரினால் வழங்கப்பட்ட நேர்காணல் ஒன்றில் இருந்து சில பகுதிகளுடன் இந்த கட்டுரையை நிறைவுசெய்ய விரும்புகிறேன். "லங்கா அக்கடமிக்" இணையத்தளம் அவருடன் கேள்வி -- பதில் தொடர் ஒன்றை நடத்தியிருந்தது. அன்று அவர் கூறிய சில கருத்துக்கள் முக்கியமான சில பிரச்சினைகள் தொடர்பில் அவரது சிந்தனையை வெளிப்டுத்தின. சில கருத்துக்கள் போரின் முடிவுக்கு பின்னரான இன்றைய காலப் பகுதிக்கு பொருத்தமில்லாதவையாக இருக்கலாம். ஆனால், மற்றைய கருத்துக்கள் -- கதிர்காமரின் அனுதாபிகளாக ஒரு காலத்தில் விளங்கிய சிவப்பு தோழர்கள் அதிகாரத்தில் இருப்பதுடன் புதிய அரசியலமைப்பு ஒன்று குறித்து பேசுகின்ற இன்றைய பின்புலத்தில் மிகவும் பொருத்தமானவையாக இருக்கும். சமஷ்டி முறை பற்றி -- "இலங்கை அரசை சிதைப்பதற்கு அல்லது பிரிப்பதற்கு அனுமதிக்காத வகையில் சிறுபான்மை இனத்தவர்கள் குறிப்பாக,தமிழர்கள் தங்களது பிராந்திய விவகாரங்களில் போதுமானளவு சுயாட்சியை வழங்கக்கூடிய சமஷ்டி முறையிலான கட்டமைப்பு ஒன்றை பொதுஜன முன்னணி ஆதரிக்கிறது. அதனால், இரு கோட்பாடுகள் முக்கியமானவை ; (1) அவசியமான அளவுக்கு சுயாட்சியை அனுமதிப்பது, (2) நாட்டின் எந்த வகையான சிதைவுக்கும் அல்லது பிரிவினைக்கும் எதிரான பாதுகாப்புக்களை உறுதிப்படுத்துவது." "தற்போதைய சர்வதேச நிகழ்வுப் போக்குகளையும் சவால்களையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது மத்தியிலும் மிகவும் பலம்பொருந்திய முறைமை ஒன்று இருக்க வேண்டியது அவசியம் என்று நாம் நம்புகிறோம்." "எனவே, பிராந்தியங்களுக்கு அதிகாரப் பரவலாக்கத்தை செய்வதற்கு மேலதிகமாக மத்தியிலும் கணிசமான அதிகாரப்பகிர்வு தேவை என்று நாம் பிரேரிக்கிறோம். நாட்டில் பல சிறுபான்மைச் சமூகங்கள் இருக்கின்றன. அவர்கள் புவியியல் ரீதியில் பரந்து வாழ்கிறார்கள். பிராந்தியங்கள் தொடக்கம் மத்தி வரை சகல மட்டங்களிலும் அவர்களது பங்கேற்பையும் மனித உரிமைகளையும் முழு அளவில் நாம் உறுதிப்படுத்துவது அவசியமாகும்." "நாம் கருத்தில் எடுக்க வேண்டிய இன்னொரு காரணியும் இருக்கிறது. இந்தியாவில் ஒரு சமஷ்டி முறை இருக்கிறது. அது பல மேற்குலக நாடுகளில் இருப்பதைப் போன்று பரந்த ஒரு முறை அல்ல. இந்திய அரசியலமைப்பை வரைந்தவர்கள் சமஷ்டி முறை அரசாங்கம் ஒன்றை வகுத்தபோது நாட்டைச் சிதைப்பதற்கு அனுமதிக்காத வகையில் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் பேணவேண்டும் என்பதை பிரதானமாக மனதிற்கொண்டு செயற்பட்டார்கள்." "எம்மத்தியில் பல்வேறு பிரிவினைவாத இயக்கங்கள் இருப்பதை கருத்திற்கொண்டு பார்க்கும்போது இந்த கோட்பாடு பொதுவில் தெற்காசியாவுக்கு பிரயோகிக்கப்படக் கூடியதாகும். 1987 ஆம் ஆண்டில் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகு ஒரு வகை சமஷ்டி முறை நோக்கிய எமது படிமுறை வளர்ச்சி பற்றியும் நாம் கருத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது. எம்மிடம் ஓரளவு விரிவான அதிகாரப்பரவலாக்கல் முறை ஏற்கெனவே இருக்கிறது. அதில் கட்டமைப்பு ரீதியான முக்கியமான குறைபாடுகள் இருப்பதும் உண்மை....... ஆனால், வடக்கு, கிழக்கில் கட்டவிழ்கின்ற நிகழ்வுகளின் பின்புலத்தில் தேசிய அளவில் முழுமையான கலந்தாலோசனைகளை மேற்கொள்ள வேண்டியதே முக்கியமானதாகும். விடுதலை புலிகள் வெளிப்படையாக அறிக்கைகளை விடுக்கின்ற போதிலும் கூட, அவர்களுக்கு உண்மையில் சமஷ்டி முறை அரசாங்கம் ஒன்றில் விருப்பம் இருக்கிறதா என்ற சந்தேகத்தை நிகழ்வுகள் தோற்றுவிக்கின்றன." தமிழர்கள் மீதான பாகுபாடு பற்றி.... "உதாரணமாக, உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக தமிழ் அக்கீகரிக்கப்படாத, தமிழ்பேசும் சமூகங்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்புக்களிலும் பாகுபாடுகள் காட்டப்பட்ட காலம் ஒன்று இருந்தது. தமிழர்களுக்கு மனக்குறைகள் இருந்தன. அதை மறுதலிக்க முடியாது. நிலைவரம் இப்போது பெருமளவுக்கு மேம்பட்டு விட்டது. ஆனால், சுதந்திரத்துக்கு பின்னர் பதவிக்கு வந்த அரசாங்கங்களிடம் தொலைநோக்கு இருக்கவில்லை. முகாமைத்துவமும் தவறானதாக இருந்தது. வாக்குறுதிகளும் மீறப்பட்டன. பண்டாரநாயக்க / செல்வநாயகம், டட்லி சேனநாயக்க / செல்வநாயகம் உடன்படிக்கைகளை உதாரணமாக கூறலாம். விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டம் "விடுதலை புலிகள் நாட்டை உள்நாட்டுப் போருக்குள் இழுத்துச் செல்லாமல் இருந்திருந்தால் இலங்கை தமிழர்களின் நிலைவரம் மேம்பட்டதாக இருந்திருக்குமா என்ற உங்கள் கேள்விக்கு எனது தனிப்பட்ட பதில் சமூக - பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு போரின் மூலம் ஒருபோதுமே தீர்வைக் காணமுடியாது என்பதேயாகும். ஆனால், தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக இயக்கங்களும் அமைதிவழியிலான வேறு முயற்சிகளும் தோல்வியடைந்ததை கண்ட தமிழ் இளைய தலைமுறை ஒன்று ஆயுதமேந்துவதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்ற முடிவுக்கு ஏன் வந்தது என்பதை விளக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்." "ஆனால், ஆயுதமோதல் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், போருக்கு வழிவகுத்த பிரச்சினைகளுக்கு போரினால் தீர்வைக் காணமுடியாது என்பது தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டது. விடுதலை புலிகள் ஆயுதமேந்தாமல் இருந்திருந்தால், தெற்கில் உள்ள எந்த அரசாங்கமும் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணவேண்டிய அவசியம் குறித்து ஒருபோதும் சிந்தித்திருக்காது என்ற கருத்தை பல தமிழர்கள், மிதவாதச் சிந்தனை கொண்டவர்களும் கூட கொண்டிருக்கிறார்கள். அதே மிதவாதத் தமிழர்கள் போரினால் இப்போது அவலங்களைச் சந்தித்துவிட்டோம்; ஆயுத மோதல்களை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்; பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வொன்று காணப்பட வேண்டும் என்று கூறுவார்கள் என்பது எனக்கு நிச்சயம்." "தாயக விவகாரத்தைப் பொறுத்தவரை, இலங்கையில் தற்போது இருக்கின்ற தமிழர்களாக இருந்தாலென்ன அல்லது வெளிநாடுகளுக்கு சென்றுவிட்ட தமிழர்களாக இருந்தாலென்ன பெரும்பான்மையான தமிழர்கள் பிரபாகரனின் ஆட்சியின் கீழ் வாழ விரும்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை. சிறுபானமைச் சமூகங்களின் உரிமைகள் போதுமானளவுக்கு உத்தரவாதப்படுத்தப்படுகின்ற சுதந்திரமானதும் ஐக்கியப்பட்டதுமான ஜனநாயக இலங்கை ஒன்றில் வாழ்வதற்கே அவர்கள் விரும்புவார்கள்." தனிப்பட்ட குறிப்பு எனது தனிப்பட்ட குறிப்புடன் கட்டுரையை நிறைவு செய்கிறேன். எனது தந்தையார் லக்ஸ்மனை விடவும் வயதில் மூத்தவராக இருந்த போதிலும், 1954 ஆம் ஆண்டில் சட்டக்கல்லூரியில் அவர்கள் இருவரும் சமகாலத்தவர்கள். நான் 1954 ஆம் ஆண்டில் பிறந்தேன். புதிதாக பிறந்த இந்த குழந்தையைப் பார்க்க லக்ஸ்மன் வைத்தியசாலைக்கு வந்தார். அது மாத்திரமல்ல, எனது ஞானஸ்நானத்துக்கும் அவர் வந்தார். அறுபதுகளில் எனது தந்தையாருக்கு லக்ஸ்மனுடனான தொடர்புகள் இல்லாமல் போய்விட்டன. ஆனால், அவரின் விவேகத்தைப் பற்றி தந்தையார் எப்போதும் உயர்வாகப் பேசுவார். தமிழைப் பேசமுடியாதவர் என்றாலும், 1956 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் குறித்தும் 1958 இனவன்செயல் மற்றும் 1961 சத்தியாக்கிரகப் போராட்டம் ஒடுக்கப்பட்டது குறித்தும் லக்ஸ்மன் ஆழமான கவலைகொண்டிருந்தார் என்றும் தந்தையார் கூறினார். தமிழர்களின் அவலங்கள் கதிர்காமருக்கு தெரியாது என்ற விடுதலை புலிகளின் குற்றச்சாட்டை தந்தையார் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. தமிழ்த் தேசியப்பிரச்சினை காலஞ்சென்ற கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் முயற்சிகளின் விளைவாக, ஒரு பத்திரிகையாளன் என்ற தொழில்சார் அந்தஸ்தில் நான் 1994 ஆம் ஆண்டில் லக்ஸ்மன் கதிர்காமருடன் நான் தொடர்புகொண்டேன். அப்போது ரொறண்டோவில் எனது சொந்த தமிழ் வாரப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்தேன். கதிர்காமர் அமைச்சராக வந்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வகை்காண உதவுவதில் அக்கறை கொண்டிருந்தார். புதிய அமைச்சர் என்ற வகையில் கதிர்காமர் தமிழ்த் தேசியப் பிரச்சினை குறித்து உள்நோக்குகளை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பதால் அவருடன் பேசுமாறு நீலன் என்னைக் கேட்டுக் கொண்டார். தொலைபேசி மூலமாக அவருடன நான்கு அல்லது ஐந்து தடவைகள் பேசியதாக நினைக்கிறேன். குறிப்பாக, ஒரு தடவை சுமார் 90 நிமிடங்கள் அவருடன் பேசினேன். தமிழர் பிரச்சினையில் கதிர்காமர் மிகுந்த அக்கறை கொண்டிந்ததை நான் கண்டேன். அவர் ஆர்வத்துடன் கிரகிக்கும் பழக்கமுடையவர். நாங்கள் கூறுகின்ற சில விடயங்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அதை மிகவும் கண்ணியமான முறையில் வெளிப்படுத்தும் பண்பு இருந்தது. நான் அப்போது விடுதலை புலிகளின் நல்லெண்ணத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு தீவிரமான தமிழ்த் தேசியவாதி. விடுதலை புலிகள் தங்களின் தலைமைத்துவத்தின் நலன்களுக்காக அன்றி, தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே போராடுகிறார்கள் என்று அபாபாவித்தனமாக நினைத்தவர்களில் நானும் ஒருவன். அதேபோன்ற சிந்தனைகொண்ட பல தமிழர்களைப் போன்று, ஐக்கியப்பட்ட ஆனால் ஒற்றையாட்சியாக இல்லாத இலங்கை ஒன்றிற்குள் நீதியானதும் சமத்துவமானதும் கௌரவமானதுமான இணக்கத்தீர்வு ஒன்றுக்கு விடுதலை புலிகள் தயாராக இருந்தார்கள் என்று நானும் நினைத்தேன். சமஷ்டி முறைக்கு வரவேற்பு சமஷ்டி முறை ஒரு அசலான தீர்வாக இருக்கும் என்று கதிர்காமர் இணங்கிக் கொண்டார். இரு விடயங்களில் மாத்திரம் அவருக்கு ஐயுறவு இருந்தது. எந்தவொரு நடைமுறைச் சாத்தியமான தீர்வும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்றும் அல்லாவிட்டால் அது நடைமுறைப்படுத்தப்படக் கூடியதாக இருக்காது என்று அவர் உணர்ந்தார். அதனால், கோட்பாட்டு சமஷ்டிமுறையை தவிர்த்து அதற்கு பதிலாக உச்சபட்ச அதிகாரப் பரவலாக்கம் என்ற பதம் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அபிப்பிராயத்தை கதிர்காமர் கொண்டிருந்தார். இரண்டாவதாக, எந்தவொரு இணக்கத் தீர்வும் இந்தியாவுக்கு ஏற்புடையதான வழியில் இருக்கவேண்டும் என்று அவர் கூறினார். அதனால், பிராந்தியங்களுக்கு பரவலாக்கப்படுகின்ற அதிகாரங்கள் இந்தியாவில் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கு இடையில் உள்ள உறவுமுறையின் வீச்செல்லைக்கு அப்பால் செல்லக்கூடாது என்று கதிர்காமர் உணர்ந்தார். புலிகளுடன் அரசியல் நல்லிணக்கம் இவற்றுக்கு அப்பால், தமிழர் தரப்பில் விடுதலைப் புலிகளை மாத்திரம் ஈடுபடுத்தியதாக இணக்கத்தீர்வு அமைய வேண்டும் என்ற சிந்தனையை ஆரம்பத்தில் கதிர்காமர் ஏற்றுக்கொண்டார். எம்மை வேறுவிதமாக நம்பவைக்க விடுதலைப் புலிகள் முயற்சித்தாலும் கூட 1994 ஆம் ஆண்டில் அவர்களுடன் அரசியல் நல்லிணக்கதில் கதிர்காமர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். நிலைவரத்தை மதிப்பிடு செய்வதற்காக கதிர்காமர் பெருமளவு தமிழர்களுடன் பேசினார். அவர் மிகவும் ஆழமாகவும் வெளிப்படையாகவும் பேசியவர்களில் ஒருவர் தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண ஆயர் காலஞ்சென்ற அதிவண. டி.ஜே.அம்பலவாணர். விடுதலைப் புலிகள் இணக்கத்தீர்வு ஒன்றில் அக்கறையாக இருக்கிறார்கள், ஆனால் நிலைமாறு பாதையில் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் ஆறுதலாகவுமே அடியெடுத்து வைப்பார்கள் என்னைப் போன்ற பெரும்பாலான தமிழர்கள் அவருக்கு சொல்லியிருந்தோம் என்று நினைக்கிறேன். அதை ஏற்றுக்கொண்டு கதிர்காமர் தனது அந்த 1994 ஆம் ஆண்டிலும் 1995 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் அரசாங்கத்திற்குள் அதை வலியுறுத்தினார். விடுதலைப் புலிகள் அந்த நம்பிக்கையை தகர்த்து 1995 ஏப்பில் 18 ஆம் திகதி மோதல்களை மீண்டும் தொடங்கியபோது அவருக்கு முற்றிலும் ஏமாற்றமாகப் போய்விட்டது. அதற்கு பிறகு சில நாட்கள் கழித்து இறுதியாக நான் அவருடன் பேசினேன். வழமையான மனச் சமநிலைக்கு மத்தியிலும் அவர் ஆத்திரமடைந்தார். விடுதலை புலிகளைப் பற்றி நேர்மறையாகப் பேசிய என்னையும் மற்றவர்களையும் அவர் விமர்சித்தார். நான் மறுத்துரைத்தேன். வாக்குவாதம் நீண்டுகொண்டு போகும் அறிகுறி தெரிந்தபோது அவர் திடீரென்று சம்பாஷணையை முடித்துக்கொணாடார். அதற்கு பிறகு நாம் நேரடியாக ஒருபோதும் பேசிக்கொண்டதில்லை. https://www.virakesari.lk/article/222620
  7. 15 AUG, 2025 | 04:42 PM தமிழ்த் தேசிய இனத்தின் மீது பேரினவாத இலங்கை அரசு கடந்த காலங்களில் மேற்கொண்ட இன அழிப்பு செயற்பாடுகள் தற்போது, கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகளாக நீட்சி பெற்றுக் காணப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு - வள்ளிபுனம் இடைக்கட்டு சந்திப் பகுதியில் நேற்று (14) நடைபெற்ற செஞ்சோலை வளாகப் படுகொலை நினைவேந்தலில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், சோகமயமான ஒரு தருணத்திலே நாம் அனைவரும் ஒன்றுகூடியிருக்கிறோம். குறிப்பாக, பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள் என அனைவரும் கண்ணீர் சொரிந்து சோகத்தை வெளிப்படுத்தி, கொடூர செஞ்சோலைப் படுகொலை நினைவுகளுடன் இருக்கின்றீர்கள். நாமும் அந்த கொடூர படுகொலையின் கனத்த அந்த நினைவுகளைச் சுமந்தவர்களாக இருக்கின்றோம். ஏற்கனவே நாம் குறித்த விமானத் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் அஞ்சலிகளைச் செலுத்திவிட்டுத்தான் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளோம். உலகில் மிகக் கொடூரமான தாக்குதல்களை, படுகொலைகளை மேற்கொண்ட இராணுவங்களில் இலங்கை இராணுவமும் ஒன்றாகும். வெள்ளைச் சீருடையோடு கல்வி கற்கச் சென்ற எமது பிள்ளைகளின் மீது விமானம் குண்டுமழை பொழிந்தது. எமது பிள்ளைகளின் வெள்ளைச் சீருடைகள் குருதியால் நனைந்து சிவப்புச் சீருடையாக மாறியிருந்த கோலம், உடல்கள் சிதறிக் கிடந்த நிலைமை, இத்தகைய கெடூரமான சம்பவத்தை யாரும் மறந்துவிட முடியாது. இந்தக் கொடூரம் இடம்பெற்றும் 19 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள் கதறி அழுது தமது சோகத்தை வெளிப்படுத்துகின்றபோது, இந்தக் கொடூர படுகொலை இன்றளவும் எந்த அளவிற்கு மனங்களில் தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றது என்பதை நன்கு உணரமுடிகின்றது. இது என்றுமே மறக்கமுடியாத ஆறாத வலியாகும். இலங்கை இராணுவம் கடந்த காலத்தில் வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் வருடம் முழுவதும் தமிழ் இனப் படுகொலையை மேற்கொண்டது. அவ்வாறு இராணுவத்தால் தமிழினப் படுகொலை மேற்கொள்ளப்பட்டமைக்கான சான்றுகளும் ஆதாரங்களும் தற்போது தாயகப்பரப்பின் பல்வேறு இடங்களிலுமிருந்தும் வெளிப்பட்டுவருகின்றன. எமக்கான விடிவு கிடைக்கவேண்டுமென்ற நோக்குடனும், தமிழ்த் தேசிய இனமான நாங்கள் எம்மை நாமே ஆட்சி செய்யவேண்டுமென்ற நோக்குடனும் எமது தமிழர் தாயகத்தை வழிநடத்திக்கொண்டிருந்த எம்முடைய தலைவனின் விடுதலைப் போராட்டக் கட்டமைப்பை உலக நாடுகள் இணைந்து அழித்த வரலாறு உங்கள் அனைவருக்கும் தெரியும். தற்போது தமிழர்கள் நாங்கள் நலிவடைந்தவர்களாக, அடிமைகளாக இருக்கின்ற நிலை காணப்படுகின்றது. தற்போது தமிழர் தாயகத்தில் தமிழர்களுக்கு எதுவுமில்லை என்ற நிலையாகிவிட்டது. கடலிலே தொழில் செய்யமுடியாத நிலைமை, ஆறு மற்றும் குளங்களில் தொழில் செய்ய முடியாத நிலை, வயலில் தொழில் செய்யமுடியாத நிலையென எமது தமிழ் மக்கள் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முடக்கப்பட்டுள்ளனர். எமது தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்ட வகையில் அபகரிக்கப்படுகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன. நிலமில்லையேல் எமக்கு எதுவுமில்லை. குறிப்பாக வனவளத் திணைக்களத்திடம் மாத்திரம் 4,32,486 ஏக்கர் காணிகள் காணப்படுகின்றன. ஆனால் விடுதலைப்புலிகளின் காலத்தில் 2,22,006 ஏக்கர் நிலங்களே வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு 2 இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை வனவளத் திணைக்களம் அபகரித்து வைத்திருக்கிறது. இவ்வாறு அரச திணைக்களங்களால் எமது தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தமிழர்கள் முடக்கப்படுகின்ற நிலையில் எமது மக்கள் பெருமளவானோர் தாயகப் பரப்பிலிருந்து புலம்பெயர்ந்து செல்கின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. இவ்வாறாக தாயகப்பரப்பில் தமிழர்களின் பெருக்கம் குறைவடைந்து செல்கின்ற நிலைமைகளும் ஏற்படுகின்றன. அந்த வகையில் கடந்த காலத்தில் இலங்கை அரசால் தமிழின அழிப்புக்கள் நடத்தப்பட்டன. தற்போது தாயகப் பரப்பிலுள்ள எமது தமிழ் தேசிய இனத்தின் மீது கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகளை இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. கடந்தகால அரசாங்கங்கள் மிக அதிகளவில் ஆக்கிரமிப்புக்களையும், அபகரிப்புச் செயற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டிருந்தன. தற்போதைய அரசும் அந்த நிலையிலிருந்து மாறுபட்ட ஒரு அரசாகத் தெரியவில்லை. எமது மக்களின் அபகரிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படும் எனக் கூறுகிறார்களே தவிர விடுவிப்பதாகத் தெரியவில்லை. அந்த வகையிலே தற்போது நாம் செஞ்சோலைப் படுகொலையில் உயிரிழந்தவர்களை அஞ்சலிப்பதற்கு கூடியிருக்கின்றோம். இத்தகைய படுகொலைகளைச் செய்தவர்களுக்கு இறைவனால் உரிய தீர்ப்பு கிடைக்கும் என நம்புகின்றோம். குறிப்பாக, கோட்டாபய ராஜபக்ஷ பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்று அந்த மக்களாலேயே துரத்தியடிக்கப்பட்ட வரலாறுகளை நாம் கண்டிருக்கிறோம். எனவே, தமிழ்த் தேசிய இனத்தின் மீது இன அழிப்பு நடத்திய, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடத்தியவர்கள் அதற்கு உரிய பொறுப்புக்கூறலைச் செய்கின்ற காலம் வரும். உரிய தீர்வு கிட்டும். அதற்காக நாம் அனைவரும் காத்திருப்போம். படுகொலைகளின் போதும் எமக்கான விடுதலைக்காக போராடி உயிரிழந்தவர்களுக்கும் தொடர்ந்தும் அஞ்சலிகளைச் செலுத்துவோம் என்றும் அவர்களை நினைந்திருப்போம் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222624
  8. குமணன் மீதான துன்புறுத்தல்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டுவர வேண்டும் - மனித உரிமை பேரவை இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை புதுப்பிக்கவேண்டும் - பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு 15 AUG, 2025 | 04:14 PM தமிழ் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் மீதான துன்புறுத்தல்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு, இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தையும் புதுப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை கேட்டுக்கொண்டுள்ளது. அறிக்கையொன்றில் அந்த அமைப்பு மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளதாவது, தமிழ் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் மீதான துன்புறுத்தல்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு ஏனைய சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/222622
  9. Published By: PRIYATHARSHAN 15 AUG, 2025 | 01:36 PM இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், கொழும்பில் நடைபெற்ற முக்கிய நிகழ்வு இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான ‘இந்திய இல்லம்’ இல் நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய தேசியக் கொடியை ஏற்றி வணக்கத்தை செலுத்தினார். அணிவகுப்பு மரியாதையில் கலந்துகொண்டதுடன் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின் உரையின் சில பகுதிகளைவும் வாசித்தார். https://www.virakesari.lk/article/222610
  10. 'இரவு முழுக்க அடித்தனர்': பெண் வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாக புகார் - என்ன நடந்தது? படக்குறிப்பு, வழக்கறிஞர் ஆர்த்தி. கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "இரவு முழுக்க பெண் காவலர்கள் அடித்தனர். ஒருவர் கூட சீருடையில் இல்லை. தூய்மைப் பணியாளர்களுக்காக பேசுவீர்களா எனக் கேட்டு அடித்தனர்" என வீடியோ பதிவு ஒன்றில் பேசுகிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்த்தி. தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை ஆதரித்ததற்காக சமூக செயற்பாட்டாளர் வளர்மதி, வழக்கறிஞர் ஆர்த்தி மீது ஆகஸ்ட் 14 அன்று காவல்துறை தாக்குதல் நடத்தியதாக, வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பான வழக்கில், 'நான்கு வழக்கறிஞர்கள் மற்றும் இரண்டு சட்டக் கல்லூரி மாணவர்களை காவல்துறை உடனே விடுவிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்ன நடந்தது? சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இரண்டு மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மாநகராட்சி நுழைவு வாயில் முன்பாக ஆகஸ்ட் 1 முதல் 13-ஆம் தேதி வரை இரவு பகலாக அவர்களின் போராட்டம் நீடித்தது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் முடிவில், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, ஆகஸ்ட் 13 அன்று மாலை முதலே மாநகராட்சி வளாகம் அமைந்துள்ள சாலையில் பரபரப்பான சூழல் நிலவியது. போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லுமாறு காவல்துறை கூறியது. ஆனால், 'முடிவு தெரியும் வரை கலைந்து செல்ல மாட்டோம்' என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர். இரவு சுமார் 11.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டனர். அவர்களை சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்தனர். படக்குறிப்பு, ஆகஸ்ட் 1 முதல் 13 ஆம் தேதி வரை இரவு பகலாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நீடித்தது. இந்தநிலையில், வேளச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற சமூக செயற்பாட்டாளர் வளர்மதியை காவல்துறை கைது செய்துள்ளது. "வேளச்சேரியில் தன்னைக் காவல்துறை வளைத்துவிட்டதாக வளர்மதி கூறியுள்ளார். அதைக் கேட்டு வழக்கறிஞர் என்ற முறையில் உதவி செய்வதற்காக ஆர்த்தி சென்றுள்ளார். அவர் போராட்டத்தில் இல்லை. ஆனால், அவரையும் காவல்துறை அழைத்துச் சென்றது" எனக் கூறுகிறார், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இருவரையும் இரவு 2 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்துக்கு கூட்டி வந்துள்ளனர். அங்கு கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்" என்கிறார். "கையை உடைத்துவிட்டனர்" - வழக்கறிஞர் ஆர்த்தி ஆகஸ்ட் 14 அன்று காலை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் தங்களை சந்திக்க வந்த சமூக ஆர்வலர்களிடம் வழக்கறிஞர் ஆர்த்தியும் வளர்மதியும் பேசியுள்ளனர். அப்போது பேசிய இருவரும், "இரவு முழுக்க அடித்துக் கொண்டே இருந்தனர். ஒருவர் கூட காவல்துறை சீருடையில் இல்லை. 'தூய்மைப் பணியாளர்களுக்காக பேசுவீர்களா?' எனக் கேட்டு அடித்தனர்" என்றனர். "ஆய்வாளர் எங்கே, உதவி ஆணையர் எங்கே எனக் கேட்டோம். இருவரும் வந்துவிட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற பிறகு 15 முதல் 20 பெண் காவலர்கள் வந்தனர். அவர்கள் சுடிதார் மற்றும் புடவை அணிந்திருந்தனர். யார் எனக் கூறாமல் தொடர்ந்து அடித்தனர்" எனவும் அவர்கள் கூறினர். இதில், தனது கையை பெண் காவலர்கள் உடைத்துவிட்டதாகவும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லவில்லை எனவும் பெண் வழக்கறிஞர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இந்த காணொளி இணையத்தில் பரவியது. படக்குறிப்பு, தனது கையை பெண் காவலர்கள் உடைத்துவிட்டதாக பெண் வழக்கறிஞர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். "இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகக் கூறி காவலர்கள் அழைத்துச் சென்றனர். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி எனப் பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றனர். ஆனால், சிச்சைக்காக உள்ளே அழைத்துச் செல்லவில்லை" எனக் கூறுகிறார், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். "தாக்குதல் சம்பவத்தில் ஆர்த்தியின் விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது" என்கிறார் ராதாகிருஷ்ணன். காணாமல் போன 13 பேர்? இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. இவர்கள் தொடர்பான விவரம் எதுவும் வெளிவராததால், வழக்கறிஞர் ஆர்த்தி உள்பட 13 பேர் காணாமல் போய்விட்டதாகக் கூறி வழக்கறிஞர் எஸ்.விஜய் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். தூய்மைப் பணியாளர் போராட்டத்தை ஒருங்கிணைத்த உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான கே.பாரதி, வழக்கறிஞர்கள் சுரேஷ், மோகன்பாபு, ராஜ்குமார், ஆர்த்தி, சட்டக்கல்லூரி மாணவி வளர்மதி உள்பட 13 பேரின் பெயர்களையும் அவர் மனுவில் பட்டியலிட்டிருந்தார். இவர்கள் அனைவரும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதால் அவர்களை விடுவிப்பதற்கு காவல்துறை உத்தரவிடுமாறும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் ஆகஸ்ட் 14 அன்று விசாரணைக்கு வந்தது. "காவல் நிலையத்தில் நடந்த சித்ரவதைகள் குறித்து பெண் வழக்கறிஞர் ஆர்த்தி பேசிய வீடியோ பதிவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். இதைப் பார்த்துவிட்டு நீதிபதிகள் விசாரணையை தொடங்கினர்" என்கிறார், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டினார். 'அவர்கள் போராட்டம் நடத்துவதற்கு உரிமை இருந்தாலும் பாதைகள், நடைபாதைகள் மற்றும் சாலைகளில் போராட்டம் நடத்துவதற்கான உரிமை இல்லை' என உத்தரவிட்டுள்ளதைக் குறிப்பிட்டார். படக்குறிப்பு, மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். தமிழ்நாடு அரசு சொன்னது என்ன? 13 பேர் காணாமல் போனதாக கூறப்படுவது குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. " வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது ஏழு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை பெரியமேடு காவல்நிலையத்திலும் அண்ணா சாலை காவல்நிலையத்திலும் பதிவாகியுள்ளன" என, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் கூறினார். கு.பாரதி, சுரேஷ், மோகன்பாபு மற்றும் ராஜ்குமார் ஆகிய நான்கு வழக்கறிஞர்கள் மீதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் முத்துசெல்வன் மற்றும் வளர்மதி என ஆறு பேர் மீதும் வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற ஏழு பேரை காவல்துறை விசாரித்துவிட்டு வெளியே செல்ல அனுமதித்ததாக நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தெரிவித்தது. 6 பேர்... 9 பிரிவுகளில் வழக்கு கைதான ஆறு பேர் மீதும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் உள்பட ஒன்பது பிரிவுகளில் (191, 191(3), 125, 121(1), 126(2), 132, 324(4), 351(3) of Bharatiya Nyaya Sanhita (BNS), 2023 r/w Section 3(1) of The Tamil Nadu Public Property (Prevention of Damage and Loss) Act) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களைக் கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் காவல்துறையிடம் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதுதொடர்பாக சில வீடியோ பதிவுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கைது சம்பவத்தின்போது பெண் காவலர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படக்குறிப்பு, சமூக செயற்பாட்டாளர் வளர்மதி ஆகவே, நான்கு வழக்கறிஞர்கள் மற்றும் இரண்டு சட்டக் கல்லூரி மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது சட்டவிரோதமாக இருக்கலாம் எனக் கருதுவதால் அவர்களை உடனே விடுவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். "இவர்கள் ஆறு பேரும் அடுத்த விசாரணை தேதி வரும் வரை ஊடக நேர்காணல்கள், அறிக்கைகள், சமூக ஊடகப் பதிவுகள் என எதையும் மேற்கொள்ளக் கூடாது" எனக் கூறி ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். "சமூக செயற்பாட்டாளர் வளர்மதியை கைது செய்ததை அரசுத் தரப்பு ஒப்புக் கொண்டனர். ஆனால் ஆர்த்தி கைது செய்யப்படவில்லை எனக் கூறியது. ஆனால், அனைத்து வீடியோ பதிவுகளிலும் இருவரும் ஒரேநேரத்தில் காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்" என்கிறார், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். பெண் வழக்கறிஞர் ஆர்த்தி தாக்கப்பட்டது தொடர்பாக திங்கள்கிழமையன்று நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். காவல்துறை கூறுவது என்ன? சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரனிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. வாட்ஸ்ஆப் உள்பட அவரிடம் விளக்கம் பெறும் முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. "சீருடை அணியாத பெண் காவலர்கள் தாக்கியது உண்மையா?" எழும்பூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சமயா சுல்தானாவிடம் பிபிசி தமிழ் பேசியது. " எனக்குத் தெரியவில்லை. நான் அப்போது வேறு ஓர் இடத்தில் பணியில் இருந்தேன்" என்று மட்டும் அவர் பதில் அளித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgqnlq2vnnpo
  11. Published By: PRIYATHARSHAN 15 AUG, 2025 | 01:11 PM கரைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் செயற்படும் (லிட்டோரல்) சுயாதீன மாற்றுரு போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா (LCS 32) இட் நாளை சனிக்கிழமை (16/08) கொழும்புத் துறைமுகத்திற்கு வருகைதரவுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. கொழும்புத் துறைமுகத்திற்கு யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா வருகை தரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அமெரிக்க - இலங்கை பங்காண்மையின் உறுதியினையும், பாதுகாப்பான, வளமான மற்றும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பினையும் இந்தக் கப்பலின் வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான நீண்டகால உறவுகளையும், உறவை வரையறுக்கும் நெருக்கமான ஒத்துழைப்பையும் இது பிரதிபலிக்கிறது. கப்பல் தனது பயணத்தை மீண்டும் தொடர்வதற்கு முன்பு எரிபொருள் நிரப்புவதற்கும் மற்றும் ஏனைய தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்குமான ஒரு குறுகிய நிறுத்தமாக கொழும்புத் துறைமுகம் செயற்படும். அமெரிக்க 7ஆவது கப்பற்படையின் ஒரு அங்கமான யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா (LCS 32), நட்பு நாடுகள் மற்றும் பங்காளர்களுடனான ஈடுபாடுகள் ஊடாக பிராந்திய ஸ்திரத்தன்மையினையும் கடல்சார் பாதுகாப்பினையும் மேம்படுத்தும் அதே வேளை, மேற்கு பசிபிக் மற்றும் இந்து சமுத்திரம் ஆகிய பெருங்கடல்களில் அதன் படைகளுக்கு நடவடிக்கைக் கட்டுப்பாடு மற்றும் திட்டமிடலை வழங்குவதை முதன்மை செயற்பணியாகக் கொண்டுள்ள, உலகின் மிகப்பெரிய முன்னோக்கி அணிவகுக்கப்பட்ட கப்பற்படையினை வழிநடத்துகிறது. “யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா இலங்கைக்கு வருகை தருவதானது, அமெரிக்க மற்றும் இலங்கையின் பங்காண்மையின் சக்திவாய்ந்த ஒரு அடையாளமாகும். கடற்படையின் மிகப்பெரிய முன்னோக்கி அணிவகுக்கப்பட்ட கப்பற்படையான அமெரிக்க 7ஆவது கப்பற்படையின் ஒரு பகுதியான இக்கப்பலின் வருகையானது, கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியம் ஆகியவற்றிற்கான எமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டினை பிரதிபலிப்பதுடன் பிராந்தியம் முழுவதும் அமைதியையும், செழிப்பையும் மேம்படுத்துவதற்கு நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகையில் இலங்கையுடன் இணைந்து நிற்பதில் நாங்கள் உருவாக்க பெருமையடைகிறோம்.” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார். யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா என்பது கரைக்கு அருகிலுள்ள கடற்பிராந்தியங்களில் செயற்படுவதற்காகவும், முன்னோக்கிய பிரசன்னம், கடல்சார் பாதுகாப்பு, கடல் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு உதவி செய்வதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சுயாதீன திரிபுருவ லிட்டோரல் வகை போர்க்கப்பலாகும். 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி பெயர் சூட்டப்பட்டு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட இக்கப்பலானது தற்போது Destroyer Squadron (DESRON) 7 இன் ஒரு அங்கமாக செயற்படுகிறது. ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காகவும், கூட்டணிகள் மற்றும் பங்காண்மைகளை பலப்படுத்துவதற்காகவும், எதிர்கால போரிடும் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் சான்டா பாப்ரா இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வழக்கமான ரோந்துகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222609
  12. யாழ். பல்கலையில் செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 15 AUG, 2025 | 08:56 AM செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்றது. இதன்போது கொல்லப்பட்டவர்களின் உருவப் படங்களுக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியில் இருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி விமானப் படையினர் மேற்கொண்ட விமானக் குண்டு வீச்சில் 54 மாணவிகளும் 7 பணியாளர்களுமாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 150 இற்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222589
  13. வைத்தியர் சுதர்சனுக்கு யாழ்.வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இரங்கல் 15 AUG, 2025 | 04:53 PM மரணவாசல் அருகிலும் உயிரை காக்க முடியும் என்ற நம்பிக்கையை தொடர்ந்து பலரை மீட்டவர், வைத்தியர் சுதர்சன். அவரின் திடீர் மறைவு, யாழ் போதனா வைத்தியசாலைக்கும், இலங்கை மருத்துவ துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் இருக்கின்றது என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். குறித்த இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்படுள்ளதாவது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாகச் சேவையாற்றிய, உயர் திறமையுடன் கூடிய சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சன் அவர்கள், இன்று திடீரென உயிரிழந்தார் என்ற செய்தி, மருத்துவ உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மருத்துவம் என்பது ஒரு சேவையாகவும், ஒரு ஒப்பற்ற தர்மமாகவும் இருந்த காலத்தில், மனிதாபிமானமும், உயிருக்காக போராடும் உறுதியும் கூடிய மருத்துவராக டாக்டர் சுதர்சன் விளங்கினார். அவசர சத்திர சிகிச்சைகள், அரிய வகை அறுவை சிகிச்சைகள், மற்றும் மருத்துவக் கல்வி பயிற்சிகளில் அவர் செய்த பங்களிப்பு, யாழ் மருத்துவக் குடும்பத்தில் நீண்ட நாள் நினைவுகூரப்படும். அவரது பணிவும், நோயாளிகளுடன் கொண்ட நெருக்கமான உறவும், அவரை நோக்கி வரும் எதுவும் ஒரு "மருத்துவரின் மேன்மை" என்பதற்கான சான்றாக இருந்தது. மருத்துவ மாணவர்களிடையே அவர் முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். மரணவாசல் அருகிலும் உயிரை காக்க முடியும் என்ற நம்பிக்கையை தொடர்ந்து பலரை மீட்டவர்; அவரின் திடீர் மறைவு, யாழ். போதனா வைத்தியசாலைக்கும், இலங்கை மருத்துவ துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் இருக்கின்றது. அவரது குடும்பத்தாருக்கும், சக ஊழியர்களுக்கும், நோயாளிகளுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், உணர்வுபூர்வமான அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். "ஒரு நல்ல வைத்தியர் ஆயுள் நீட்டிக்கிறார். ஆனால் ஒரு சிறந்த மருத்துவர் நம்பிக்கையை உயிராக்குகிறார். வைத்தியர் சுதர்சன் அந்த சிறந்தவர்களில் ஒருவராகவே இருந்தார். இரங்கல் செயதியில் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/222619
  14. 15 AUG, 2025 | 03:07 PM காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு என்று விமர்சித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இது முடிவில்லாத போரை நோக்கி நகர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார். ராணுவ நடவடிக்கை மூலம் காசா நகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு அதன் பாதுகாப்பு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே காசா பகுதியில் சிக்கி உள்ள அப்பாவி மக்கள் உணவுப் பஞ்சத்தாலும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலாலும் கடும் பேரழிவை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் காசாவின் முக்கிய பகுதியான காசா சிட்டியை கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் "காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு. நிரந்தர போர் நிறுத்தத்துடன் இந்த போர் முடிவடைய வேண்டும். காசா மாநகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் முன் எப்போதும் இல்லாத பேரழிவுக்கும் நிரந்தர போருக்கும் வழி வகுக்கும். இதனால் பெரிதும் பாதிக்கப்படப்போவது இஸ்ரேலிய பணயக்கைதிகளும் காசா மக்களும்தான். காசாவை பாதுகாப்பதற்கான திட்டத்தை ஐநா முன்னெடுக்க வேண்டும். இதற்கான அமைப்பை காசாவில் நிறுவ வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சில் இதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும். இது தொடர்பாக மற்ற உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது குழுக்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஐ.நா.வால் முன்மொழியப்படும் இந்த அமைப்பு காசாவை பாதுகாப்பது அப்பாவி மக்களை பாதுகாப்பது பாலஸ்தீன அரசுக்கு ஆதரவாக பணியாற்றுவது ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் கடந்த மாதம் அங்கீகரித்தது. அதன் தொடர்ச்சியாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தனக்கு உள்ள உறுதியை இம்மானுவேல் மேக்ரான் வெளிப்படுத்தி உள்ளார். https://www.virakesari.lk/article/222616
  15. ரஸ்ய துறைமுகத்தின் மீது உக்ரைன் தாக்குதல் - ஈரானிலிருந்து ஆயுதங்களுடன் வந்த கப்பலை இலக்குவைத்தது 15 AUG, 2025 | 12:36 PM ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயுதங்களுடன் ரஸ்ய துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல் மீதுதாக்குதலை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. அஸ்ட் ராகன் பகுதியில் உள்ள ரஸ்ய துறைமுகமான ஒலியாவை தாக்கியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. ரஸ்யாவின் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தினை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஈரானில் இருந்து ஆளில்லா விமானங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்த கப்பல் மீது தாக்குதலை மேற்கொண்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆயுதங்கள் இராணுவ தளபாடங்கள் வெடிபொருட்கள் விநியோகத்திற்காக இந்த துறைமுகத்தினை ரஸ்யா பயன்படுத்திவருகின்றது என உக்ரைன் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/222606
  16. ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு 15 AUG, 2025 | 10:23 AM ஜம்மு: ஜம்மு-காஷ்மீரன் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர மலை கிராமத்தில் நேற்று மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சிஐஎஸ்எப் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உட்பட 46 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று மேகவெடிப்பின் காரணமாக தீடீர் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் சோசிட்டி மலை கிராமத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46-ஆக உள்ளது. இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படுவதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரையில் மீட்கப்பட்ட 120 பேரில் 38 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மீட்பு பணிகளில் என்டிஆர்எப், எஸ்டிஆர்எப், காவல்துறை, ராணுவம், உள்ளூர் தன்னார்வலர்கள் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை மோசமாக இருப்பதால் என்டிஆர்எப்-ன் இரண்டு புதிய குழுக்கள் உட்பட மீட்பு பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மச்சைல் மாதா கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள சோசிட்டி கிராமத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த பேரழிவு நிகழ்ந்தது. ஜூலை 25-ம் தேதி தொடங்கிய வருடாந்திர மச்சைல் மாதா யாத்திரை செப்டம்பர் 5-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதற்காக அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 9,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கான 8.5 கிலோமீட்டர் பாதயாத்திரை சோசிட்டி கிராமத்தில் இருந்தே தொடங்குகிறது. இந்த கிராமம் கிஷ்த்வார் நகரத்திலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட சமூக சமையலறை (லங்கர்) மேகவெடிப்பால் பெரிதும் பாதிப்படைந்தது. திடீர் வெள்ளம் காரணமாக கடைகள் மற்றும் பாதுகாப்பு புறக்காவல் நிலையம் உட்பட பல கட்டமைப்புகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பேரிடர் ஏற்பட்ட உடன் கிஷ்த்வார் துணை ஆணையர் பங்கஜ் குமார் சர்மா, மூத்த காவல்துறை கண்காணிப்பாளருடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். இந்த மேகவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனேஜ் சின்ஹா இரங்கல் தெரிவித்துள்ளதுடன், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, கிஷ்த்வார் மாவட்டத்தில் தொலைதூர கிராமத்தில் பெரும் மேக வெடிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கினார். https://www.virakesari.lk/article/222593
  17. இன்றுவரை, யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களை நாங்கள் பூர்த்தி செய்கின்றோம், ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்த ஒப்புக்கொள்ளுதலும் இல்லை, இது எனது சகோதரிக்கு இடம்பெற்றுள்ளது, நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு நீதியை உண்மையை வழங்குவோம் என இதுவரை அரசாங்கம் தெரிவிக்கவில்லை. நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது, புதைக்கப்படாத எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு வெளியே வந்து உலகத்தி;ற்கும் மக்களிற்கும் எங்களை உரிய முறையில் புதைக்கவில்லை, எங்களிற்கு நீதி வழங்கப்படவில்லை என தெரிவிக்க வருகின்றன.
  18. நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு உண்மையை சொல்ல வெளிவருகின்றன - சட்டத்தரணி ரனிதா ஞானராஜா Published By: RAJEEBAN 15 AUG, 2025 | 04:17 PM நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது, புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு வெளியேவந்து உலகத்திற்கும் மக்களிற்கும் எங்களை உரிய முறையில் புதைக்கவில்லை, எங்களிற்கு நீதி வழங்கப்படவில்லை என தெரிவிக்க வருகின்றன என சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்துள்ளார். தரிந்து ஜெயவர்த்தன, தரிந்து உடுவரகெதர, எம்எப்எம் பசீர் ஆகியோர் இணைந்து எழுதிய செம்மணி எனும் நூலின் வெளியீடு வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றவேளை அந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது. நான் மூன்று முக்கிய விடயங்களை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நாங்கள் ஏன் மனித புதைகுழிகளை பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் கடத்தப்பட்டவர்கள் அல்லது காணமல்போனவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களுடன் தொடர்புபடுத்த முயல்கின்றோம்? குறிப்பாக வடக்குகிழக்கில். இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக யுத்தம் இடம்பெற்றது, உலகில் அதிகளவானவர்கள் பலவந்த காணாமலாக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது என ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த குழு தெரிவித்துள்ளது. ஐநாவின் குழு பலவந்தமாக காணாமலாக்கப்பட்டிருக்ககூடியவர்கள் எண்ணிக்கை 60,000 முதல் ஒரு 100,000 என தெரிவித்துள்ளது, அவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யுத்தகாலத்தின் பயங்கரவாத தடைச்சட்டம என்ற மிகவும் கொடுரமான பயங்கரமான சட்டம் நடைமுறையிலிருந்தது, அவசரகாலசட்டம் போன்ற அதற்கு ஆதரவான சட்டங்கள் காணப்பட்டன என்பது உங்களிற்கு தெரியும், இவை பயங்கரவாதத்தை கையாள்வதற்காக நடைமுறைக்கு வந்தவை, இந்தசட்டங்களை வலுக்கட்டாயமாக மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தினார்கள், குறிப்பாக வடக்குகிழக்கில். விசாரணைக்காக அழைக்கப்பட்ட மக்கள்;, அவர்கள் ஒருபோதும் திரும்பிவரவில்லை. சோதனைச்சாவடிகள் ஊடாக நடந்துசென்று கொண்டிருந்தவர்கள், அதனை கடந்து சென்றவர்கள் ஒருபோதும் மீண்டும் திரும்பிரவரவில்லை. தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறும், சுற்றிவளைப்புகள் இடம்பெறும், மக்களை சுற்றிவளைத்து தலையாட்டி ஒருவரின் முன்னால் நிறுத்துவார்கள், அவர் தலையாட்டினால் அந்த நபரை கொண்டு செல்வார்கள், அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பலர் மீண்டும் திரும்பவில்லை. 2009 வரை இவற்றை திட்டமிட்ட முறையில் முன்னெடுத்தார்கள். வடக்குகிழக்கிலும் முழு நாட்டிலும் 2009 மே மாதத்துடன் யுத்தம் முடிவடைந்துவிட்டதை என நாங்கள்; நினைக்கின்றோம், ஆனால் நீங்கள் அங்கு சென்றால், வடக்குகிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டால், வடக்குகிழக்கில்; நிழல்யுத்தம் தொடர்ந்தும் நீடிக்கின்றது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள் . யுத்தம் முடிவடைந்த பின்னரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை மிகதீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றார்கள், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் கண்காணிப்பின் கீழ் இருக்கின்றனர், மனித உரிமை விடயங்களிற்காக செயற்படுபவர்கள் கண்காணிக்கப்படுகின்றார்கள். நாளாந்தம் ஒவ்வொரு நாளும் பலர் சிஐடி டிஐடியினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர் தொடர்ந்தும் அழைக்கப்படுகின்றனர். சிஐடி டீஐடி போன்ற அரச கட்டமைப்புகள் தங்கள் அலுவலகங்களை வடக்குகிழக்கில் ஏற்படுத்தியுள்ளன. கொழும்பில் உள்ள தங்கள் அலுவலகங்களிற்கு விசாரணைக்கு அழைப்பதற்கு பதில் வடக்குகிழக்கில் உள்ள தங்கள் அலுவலங்களிற்கு பலரை விசாரணைக்கு அழைக்கின்றார்கள். மிகச்சமீபத்தில் கேள்விப்பட்டிருப்பீர்கள், தரிந்துவும் அவரது நண்பர்களும் குமணனின் பெயரை இங்கே குறிப்பிட்டனர். குமணன் புகைப்பட ஊடகவியலாளர் அவர் தொடர்ச்சியாக தனது புகைப்படங்கள் மூலம் வடக்குகிழக்கில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசிவரும் ஒருவர். மிக வலுவான முறையில் அவர் இதனை செய்துவருகின்றார். அவரை 17ம் திகதி விசாரணைக்காக அழைத்துள்ளனர். யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் வடக்குகிழக்கில் நிலவரம் இவ்வாறானதாகத்தான் காணப்படுகின்றது. ஏன் நாங்கள் மனித புதைகுழிகளை பலவந்தமாக காணாமல்போகச்செய்தலுடன் தொடர்புபடுத்த விரும்புகின்றோம் என்றால் , யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள பல குடும்பத்தவர்கள் உள்ளனர், அவர்கள் தங்கள் நேசத்திற்குரியவர்கள் குறித்த பதிலை கோருகின்றனர், அவர்கள் சோதனை சாவடியில் காணாமல்போயிருக்கலாம் அல்லது யுத்தத்தின் இறுதி தருணத்தில் சரணடைந்திருக்கலாம். அவர்கள் சரணடைந்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் எல்எல்ஆர்சி முன்னால் சாட்சியமளிக்கையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் யுத்தவலயத்திலிருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிக்கு உயிருடன் வரவில்லை என தெரிவித்தார். நாங்கள் இந்த எண்ணிக்கை குறித்தே பேசுகின்றோம். நாங்கள் தற்போது திறக்கப்பட்ட மனித புதைகுழிகளுடன் போராடுகின்றோம், 14 மனித புதைகுழிகள் திறக்கப்பட்டு நீதிநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. முதலாவது செம்மணிமனித புதைகுழி குறித்து குறிப்பிடுவேன். கிருசாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு குறித்து இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டவேளை தனது வாயை திறந்த சோமரட்ண ராஜபக்சவினால் இந்த விடயம் தெரியவந்தது - 1999 ஜூலை 3ம் திகதி - அந்த திகதியிலிருந்து அவர்கள் அந்த விடயத்தை கையாள ஆரம்பித்தனர், விசாரணைகளை முன்னெடுத்தனர், புதைக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இருந்து 15 மனித எச்சங்களை அகழ்ந்தனர். விசாரணைகள் முடிவடைந்ததும் ஆறு சந்தேகநபர்கள் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட அறிக்கை மீண்டும் கொழும்பு நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு திரும்பிவரவில்லை. முப்பது வருடங்களாகியும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து எந்த அறிவுறுத்தல்களும் இல்லை. நாங்கள் குடும்பத்தவர்களை சென்று சந்திக்கும் போது அவர்கள் இரத்தமாதிரிகளை வழங்கியதாக மரபணு பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவிக்கின்றனர், மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை தங்கள் உறவுகள் என அடையாளம் காட்டியவர்கள் உள்ளனர். ஆனால் அதன் பின்னர் இந்த விடயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மக்களின் பங்களிப் குறைவாக காணப்படுகின்றது, அச்சுறுத்தல்களே இதற்கு காரணம். நிபுணத்துவம் இல்லை, நிபுணர்கள் தேவை. 14 மனித புதைகுழிகள் குறித்து பேசும் போது ஐந்து முக்கியமான மனித புதைகுழிகள் விவகாரத்தில் நான் ஆஜராகியுள்ளேன். ஒன்று மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி, மற்றையது மன்னார் சதொசா மனித புதைகுழி - 18 மனித எச்சங்கள் மீட்கப்பட்டன, அவை அனுராதபுரம் சட்டவைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டன, பின்னர் கொழும்பிற்கு மாற்றப்பட்டன, எலும்பு பகுப்பாய்வு இடம்பெற்றுள்ளது, இன்னமும வெளியாகவேண்டிய அறிக்கைகள் உள்ளன,. 2013 இந்த நடவடிக்கைகள் ஆரம்பமாகின எவ்வளவு காலம் என நினைத்து பாருங்கள், குடும்பத்தவர்கள் ஒவ்வொரு நீதிமன்ற நடவடிக்கையிலும் சமூகமளித்துள்ளனர். சாதொச மனித புதைகுழி 2018 இல் அடையாளம் காணப்பட்டது, 379 மனித எச்சங்கள் மீட்கப்பட்டன, கார்பன் டேட்டிங் இடம்பெற்றது, ஆய்வுகூட அறிக்கை வெளியானது. ஆனால் அது அர்த்தப்படுத்தப்படவில்லை. நாங்கள் கோரிய அறிக்கை இன்னமும் கிடைக்கவில்லை. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை எடுத்ததால் அது 2022 இல் கண்டுபிடிக்கப்பட்டது, 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. தொல்பொருள் ஆராய்ச்சி, எலும்புபரிசோதனை அறிக்கைகள் போன்றவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒன்றரை வருடங்களிற்கு முன்னர் நீதிமன்றம் தடமறிதல் செயல்முறைக்கு உத்தரவிட்டுள்ளது. காணாமல்போனோர் அலுவலகத்திற்கு இதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. காணாமல்போனவர்கள் அலுவலகத்தினால் எந்த பயனும் இல்லை. அது வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை. அது அமைச்சொன்றின் ஒரு பகுதியாக காணப்படுகின்றது, அமைச்சின் அறிவுறுத்தலிற்கு ஏற்ப செயற்படவேண்டிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் காணாமல்போனவர்கள் அலுவலகம் நீதியை பெற்றுதரும் என இன்னமும் சித்தரிக்கின்றார்கள். செம்மணி செம்மணியில் 32 வாரங்கள் மிகச்சிறிய அளவு நிலப்பரப்பினை தோண்டியவேளை 141 மனித எலும்புக்கூடுகளை மீட்டுள்ளனர். சிறிய இடத்தில் இது மிகப்பெரியது. நாங்கள் அந்த பகுதி முழுவதையும் அகழ் வதற்கான கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை குறித்து குறிப்பிடவேண்டும், அங்கு மிகவும் ஆபத்தான நிலை காணப்படுகின்றது. எலும்புக்கூடுகள் மனித எச்சங்கள் கண்ணிவெடிகளுடன் கலந்து காணப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தான விடயம். எங்களிற்கு இவற்றை கையாள்வதற்கு தொழில்நுட்ப திறன் அவசியம். நாங்கள் மண்ணிற்கு கீழே எங்கள் அன்புக்குரியவர்களை தேடுகின்றோம். காணாமலாக்கப்பட்டவர்கள் குடும்பத்தினர் உறவினர்கள் களைப்படைந்துவிட்டனர், அவர்கள் பல ஆணைக்குழுக்களின் முன் சென்றுள்ளனர். நீதி வழங்குதல் என்பது மிகவும் மெதுவான மந்த கதியிலாள செயற்பாடாக காணப்படுகின்றது. காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் பதில்களிற்காக காத்திருக்கின்றனர். அவர்களிற்கு உண்மையை அறிவதற்கான உரிமையுள்ளது, தங்கள் நேசத்திற்குரியவர்களிற்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான உரிமையுள்ளது, அவர்களிற்கு கௌரவமான இறுதி சடங்கினை முன்னெடுப்பதற்கான உரிமையுள்ளது. உண்மையான தகவல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன, தணிக்கைக்கு உள்ளாகின்றன. வடக்கில் என்ன நடந்தது நடக்கின்றது என்பது தெற்கில் உள்ளவர்களிற்கு முழுமையாக தெரியாது. உண்மையை தெரியப்படுத்துவதை அதிகரிக்கவேண்டும். உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும், இன்றுவரை, யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களை நாங்கள் பூர்த்தி செய்கின்றோம், ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்த ஒப்புக்கொள்ளுதலும் இல்லை, இது எனது சகோதரிக்கு இடம்பெற்றுள்ளது, நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு நீதியை உண்மையை வழங்குவோம் என இதுவரை அரசாங்கம் தெரிவிக்கவில்லை. நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது, புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு வெளியேவந்து உலகத்திற்கும் மக்களிற்கும் எங்களை உரிய முறையில் புதைக்கவில்லை, எங்களிற்கு நீதி வழங்கப்படவில்லை என தெரிவிக்க வருகின்றன. https://www.virakesari.lk/article/222623
  19. முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி Published By: VISHNU 14 AUG, 2025 | 09:27 PM செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு வியாழக்கிழமை (14) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் வியாழக்கிழமை (14) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006.08.14 ஆம் திகதியன்று வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானத்தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் வியாழக்கிழமை (14.08.2024) இந் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. குறித்த அஞ்சலி நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வே.கரிகாலன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்களான சி.குகனேசன், க.தர்மலவன், இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா, தாயக நினைவேந்தல் அமைப்பின் தலைவர் முல்லை ஈசன், இளைஞர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர். https://www.virakesari.lk/article/222575
  20. 13 AUG, 2025 | 06:21 PM முதலீட்டு வாரியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ஒரு திட்டமாக கஞ்சா பயிர்ச்செய்கைக்கான அனுமதி 7 வெளிநாட்டு முதலீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கடந்த 12.08.2025 அன்று தெரிவித்தார். இதன் நோக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் பயிர்ச்செய்கையின் அனைத்து பகுதிகளையும் ஏற்றுமதிக்கு மட்டுமே பயன்படுத்துவதும், நாட்டிற்கு பொருளாதார நன்மைகளைப் பெறுவதும் என்பதை அவர் மேலும் தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில், இந்த முடிவை இலங்கையில் செயற்படுத்த எத்தணித்திருந்தனர். எனினும், இலங்கை மருத்துவ சங்கம், இலங்கை மனநல மருத்துவர்கள் சங்கம், சமூக மருத்துவர்கள் சங்கம் மற்றும் ADIC நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூகங்களின் செல்வாக்கு காரணமாக முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. முந்தைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும். இந்த திட்டத்தை ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசாங்கம் இத்திட்டத்தை அமுல்படுத்த முயன்றபோது தற்போதைய தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர், அதனை கேலி செய்து எதிர்ப்பினை தெரிவித்திருந்தமை அவரது சமூக ஊடக கணக்குகளில் காணப்பட்டது. அதுபோன்ற சிறந்த நிலையில் இருந்த ஒருவர், தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சரான பின்னர், இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதானது வருந்தத்தக்கது. கஞ்சாவை சட்டப்பூர்வ பொருளாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் காணப்பட்டாலும், உலகளாவிய ரீதியில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான முயற்சியானது, பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் அறிஞர்களின் எதிர்ப்பால் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையை மாற்றுவதற்கான ஒரு நுணுக்கமாக, கஞ்சா தொழிலை 'ஜார்ஜ் சோரோஸ்' போன்ற தொழிலதிபர்களுடன் இணைந்து ஒரு பொருளாதாரப் பொருளாக, ஏற்றுமதி வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு பொருளாக, புதிய வடிவத்தில் முன்வைப்பதன் மூலம் கஞ்சாவை சட்டரீதியாக்குவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இது கஞ்சா வியாபாரத்தின் இறுதி இலக்கை அடையப் பயன்படுத்தப்படும் ஒரு மூலோபாயத் திட்டமாகும். புதிய அரசாங்கம் அந்த திட்டத்தின் ஒரு தரப்பாக மாறியுள்ளமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். சர்வதேச சந்தையில் கஞ்சா அதிகமாக காணப்படுகிறது. எனினும் சர்வதேச ரீதியாக தேவை அதிகரிக்கவில்லை. சந்தையின் இடைவெளி நிரப்பப்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச ரீதியாக கஞ்சா சந்தை தற்போது வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியாது. பொருளாதார நன்மைகள் என்று கூறும் தவறான அறிக்கைகளின் அடிப்படையில் இதுபோன்ற முடிவுகளை எடுப்பதன் மூலம் எமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மேலும் அதிகரித்து பல பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் கூற வேண்டும். தற்போதைய அரசாங்கம் அத்தகைய முடிவை எட்டியுள்ளமை ஆச்சரியமாகவும் சந்தேகமாகவும் உள்ளது. குறிப்பாக, முந்தைய அரசாங்கங்கள் எடுத்த பல நடவடிக்கைகளை விமர்சித்து தடுத்து நிறுத்தும் தற்போதைய அரசாங்கம், முந்தைய அரசாங்கங்கள் கொண்டுவந்த திட்டத்தை இவ்வளவு விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது மிகவும் வலுவான சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த முடிவை செயல்படுத்தும் அதிகாரிகள் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். 01. இலங்கையில் தற்போதும் தடைசெய்யப்பட்டுள்ள பல்வேறு போதைப்பொருட்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவுள்ளது. இத்தகைய சூழலில், பாதுகாப்பான பயிர்ச்செய்கை எனும் பெயரில் ஆரம்பிக்க முயற்சிக்கும் கஞ்சா பயிர்ச்செய்கையானது பாதுகாப்பான வலயத்தை மீறாது என்பதற்கு என்ன உத்தரவாதத்தை அளிக்க முடியும்? 02. உலக சந்தையில் கஞ்சா பயிர்ச்செய்கை மூலம் நாடும் அரசாங்கமும் ஈட்டிய சந்தைப்படுத்தலின் அளவு, விலைகள், இலாபம் மற்றும் உண்மையான அந்நிய செலாவணியை மதிப்பிடுவதற்கு ஒரு சுயாதீனமான மற்றும் நம்பகமான சர்வதேச சந்தை ஆய்வுகள் ஏதேனும் நடாத்தப்பட்டுள்ளதா? 03. சீனா மற்றும் நெதர்லாந்து போன்ற தற்போதைய 'சட்டப்பூர்வ' கஞ்சா பயிர்செய்கையாளர்களுடன் சர்வதேச சந்தையில் போட்டியிடுவதற்கு போதுமான திறன் நம்மிடம் உள்ளனவா அவை ஆராய்ந்து பார்க்கப்பட்டுள்ளதா? 04. இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிலிருந்து 'சட்டப்பூர்வ' ஏற்றுமதியுடன் எளிதாக போட்டியிடுவதற்கு, ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான டொன் கஞ்சாவை உற்பத்தி செய்யும் தற்போதைய சர்வதேச சட்டவிரோத கஞ்சா சந்தையை நீஙக்ள் கருத்தில் கொண்டீர்களா? 05. எந்தவொரு பன்னாட்டு கஞ்சா நிறுவனமும் இலங்கையில் தனியாகவோ அல்லது உள்ளாட்டு பங்குதாரர்கள், அல்லது அரசாங்கத்துடனோ கஞ்சாவை பயிரிடுவதற்கான அனுமதி வழங்கப்படுமா? 06. அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய மிகவும் பொருத்தமான பணப்பயிர்கள் (உதாரணம். ஆமணக்கு, போஞ்சி - மருத்துவ ஆமணக்கு, சிட்ரஸ் போன்றவை) தொடர்பாக பரிசீலிக்கப்பட்டுள்ளதா? 07. கஞ்சா பயிர்ச்செய்கையால் ஏற்படுகின்ற அந்நிய செலாவணி நெருக்கடிகளை எந்த நாடுகள் வெற்றிகரமாகச் சமாளித்துள்ளன? 08. கஞ்சா நிறுவனங்களில் புகையிலைத் தொழில்துறை மேற்கொண்டுள்ள பாரிய முதலீடுகள் தொடர்பாக குழு கருத்தில் கொண்டதா? கஞ்சா பயிர்ச்செய்கை சட்டரீதியாக்கப்படின், இந்த முடிவு எதிர்காலத்தில் நமது நாட்டின் சுகாதாரம், சமூகம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நாட்டை பின்னோக்கி கொண்டுசெல்லும் ஒரு திட்டமாகும் என்பதை இறுதியாக நாம் வலியுறுத்துகின்றோம். மக்களின் நட்பு அரசாங்கமாக, இந்த முடிவை உடனடியாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட வேண்டும் என்று மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வலியுறுத்துகிறது. - மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) https://www.virakesari.lk/article/222523
  21. செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு : விசாரணையில் வௌியான தகவல் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு கூறினார்: செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்ட வைத்திய அதிகாரியான பேராசிரியரும் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர். பேராசிரியரின் அறிக்கையில், ஸ்கேனர் பயன்படுத்தப்பட்ட பின்னர் குறைந்தது எட்டு வாரங்களுக்கு மேலதிக அகழ்வுப் பணிகள் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம், நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்ய அனுமதி பெற்றுள்ளது. இதனடிப்படையில், நான் இரு தடவைகள் அகழ்வு இடத்திற்குச் சென்று மேற்பார்வை செய்தேன். இதனைத் தொடர்ந்து, இன்றைய விசாரணையில் சில முக்கிய விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். இந்த அகழ்வு ஒரு மரண விசாரணையின் கீழ் நடைபெறுகிறது. குற்றவியல் நடவடிக்கைகளில் இதற்கென தனியான சட்ட ஏற்பாடுகள் இல்லை. உடல் கண்டெடுக்கப்பட்டால், அது உடனடியாக மரண விசாரணையாக மாற்றப்படுகிறது. மரண விசாரணையின் முதன்மை நோக்கம், கண்டெடுக்கப்பட்ட உடல்களை அடையாளப்படுத்துவதாகும். எனவே, அகழ்வுப் பணிகளுடன், உடல்களை அடையாளப்படுத்துவது எவ்வாறு என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. சட்ட வைத்திய அதிகாரி, இப்பணிகளில் நிபுணத்துவம் இல்லை என்று ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதாக முறைப்பாடு செய்தார். இது தொடர்பாக எழுத்து மூலம் முறைப்பாடு செய்யுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. இலங்கையில் அகழ்வுப் பணிகளுக்கு நிபுணத்துவம் இருந்தாலும், உடல்களை அடையாளப்படுத்துவதற்கு உரிய நிபுணத்துவம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. உதாரணமாக, 1999இல் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட 15 எலும்புக்கூடுகள் முதலில் இந்தியாவின் ஐதராபாத் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால், அங்கு நிபுணத்துவம் இல்லாததால், அவை திருப்பி அனுப்பப்பட்டு, பின்னர் லாஸ்கோ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன. தற்போது அவை இலங்கை பல்கலைக்கழகத்தில் உள்ளதாக அறிகிறோம். 1999இல் மரண தண்டனைக் கைதியான சோமரட்ன ராஜபக்ச, மேல் நீதிமன்றத்தில் அளித்த கூற்றின் அடிப்படையில் செம்மணியில் அகழ்வு நடத்தப்பட்டது. அவர் 300 முதல் 400 உடல்கள் புதைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்போது 15 எலும்புக்கூடுகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. தற்போது, 150 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ராஜபக்ச குறிப்பிட்ட இடத்திற்கு அருகாமையில் உள்ளதால், அவரது கூற்று உண்மையாக இருக்கலாம் என்பது தற்போது நிரூபணமாகிறது. செம்மணி விவகாரம் தொடர்பாக B2899 என்ற வழக்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பல இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் சிலர் விடுவிக்கப்பட்டு, ஐவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இவ்வழக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக முதலில் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் உள்ளது. இவ்வழக்கை மீண்டும் யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு நான் கோரியுள்ளேன். இதனைப் பரிசீலித்து, இரு வழக்குகளும் தொடர்புடையதாக இருப்பின், மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 1999இல் செம்மணி பகுதியில் பலர் காணாமல் ஆக்கப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்தன. இதனையடுத்து, கலாநிதி தெவநேசன் நேசையா தலைமையில் மூவர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு, 2003 ஒக்டோபர் 28இல் 210 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. இவ்வறிக்கையில், அரியாலை, சாவகச்சேரி, நாவற்குழி, யாழ்ப்பாண நகரம் மற்றும் அதை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு படைத்தரப்பினர் பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்கள், முகாம்களின் பொறுப்பாளர்களின் பெயர்கள் உள்ளிட்டவை அறிக்கையில் உள்ளன. இவ்வறிக்கையின் பிரதியை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். இவ்விடயத்தில் பொறுப்பு வகித்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதால், உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளேன். இதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றாலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வழமையாக, மரண விசாரணை முடிந்த பின்னரே குற்றப் புலனாய்வு ஆரம்பிக்கப்படும். ஆனால், பொலிஸ்மா அதிபரின் கோரிக்கையின் பேரில், இதற்கு இணையாக புலனாய்வு நடத்தப்படுகிறது. இன்று, சட்டத்தரணிகளான மணிவண்ணன், குருபரன் மற்றும் நான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் அளிக்க வந்தவர்களை பயமுறுத்தியதாக முறைப்பாடு செய்தோம். இதனையடுத்து, வாக்குமூலங்கள் பகிரங்கமாக, அனைவரும் காணக்கூடிய இடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார். நான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை இவ்விசாரணையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்தேன். மேலும், சான்றுப் பொருட்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படும்போது, அவை உரிய மேற்பார்வையுடன் கையாளப்பட வேண்டும் எனவும், இதற்கு அனுபவமிக்க ஆய்வகங்கள் தேவை எனவும் வலியுறுத்தினேன். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் DNA பரிசோதனைக்கான ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாகவும், தேவையான உபகரணங்கள் வந்து சேர்ந்துள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார். ஆனால், இவ்வாறு புதிதாக அமைக்கப்படும் ஆய்வகத்தில் இப்பரிசோதனைகளை மேற்கொள்வது உகந்ததல்ல என நான் குறிப்பிட்டேன். அனுபவமும் நிபுணத்துவமும் உள்ள ஆய்வகங்களே இதற்கு பொருத்தமானவை என வாதிட்டேன். எட்டு வாரங்களுக்கு அகழ்வுப் பணிகளைத் தொடர நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார். ஆகஸ்ட் 20ஆம் திகதி அகழ்வு இடம் சுத்தப்படுத்தப்பட்டு, 22ஆம் திகதி மீண்டும் பணிகள் தொடங்கும் எனவும் அவர் கூறினார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmebja1p202k7qp4k6eihllkv
  22. 14 AUG, 2025 | 05:15 PM (இராஜதுரை ஹஷான்) மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றமை வரவேற்கத்தக்கது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாண சபை தேர்தல் விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தேர்தல் உரிமையை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. நீதியானதும், சுதந்திரமானதுமான வகையில் தேர்தலை நடத்துவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் தேர்தலை சிறந்த முறையில் நடத்துவோம். கடந்த 09 மாதகாலத்துக்குள் மூன்று தேர்தல்களை சிறந்த முறையில் நடத்தினோம். மாகாண சபைத் தேர்தல் முறையில் காணப்படும் சட்டசிக்கலால் ஆணைக்குழுவினால் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க முடியாத தடை காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு பாராளுமன்றம் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். மாகாண சபைத் தேர்தல் முறையில் காணப்படும் சட்ட சிக்கல் மற்றும் அவற்றுக்கான தீர்வு குறித்து உயர்நீதிமன்றம் பலமுறை வியாக்கியானமளித்துள்ளது. நடைமுறை தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களில் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றமை வரவேற்கத்தக்கது. மாகாண சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும். அந்நிறுவனங்கள் மக்கள் பிரதிநிதிகளால் செயலாற்றப்பட வேண்டும். இலங்கையின் தேர்தல் கட்டமைப்பில் மாகாண சபைத் தேர்தல் ஒரு பிரதான அங்கமாக காணப்படுகிறது. ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/222565
  23. டிரம்ப் - புதின் சந்திப்பு அலாஸ்காவில் நடப்பது ஏன்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவிற்கு சொந்தமான பிரதேசமாக இருந்த அலாஸ்காவில் இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பு கட்டுரை தகவல் மேட்லைன் ஹால்பர்ட் பிபிசி செய்திகள் கிறிஸ்டல் ஹேய்ஸ் பிபிசி செய்திகள் 14 ஆகஸ்ட் 2025, 05:28 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதைப் பற்றி விவாதிக்க, ஆகஸ்ட் 15, வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திக்கவிருக்கின்றனர். இந்த சந்திப்பு அலாஸ்காவில் நடைபெறவிருக்கிறது. யுக்ரேனில் போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால், மேலும் பல கடுமையான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா விதித்திருந்த காலக்கெடு முடிவடையவிருந்த நாளன்று டிரம்ப் இந்த சந்திப்பு பற்றிய செய்தியை அறிவித்தார். டிரம்பின் உத்தரவின் பேரில் ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையே இந்த கோடையில் நடைபெற்ற மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் இரு தரப்பினரும் எந்தவொரு முடிவுக்கும் வரவில்லை. ஒரு காலத்தில் ரஷ்யாவிற்கு சொந்தமான பிரதேசமாக இருந்த அலாஸ்காவில் இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பைப் பற்றி இதுவரை வெளியான தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம். பட மூலாதாரம், GETTY IMAGES சந்திப்பு அலாஸ்காவில் நடப்பது ஏன்? ரஷ்யாவுக்கு சொந்தமான அலாஸ்காவை 1867ஆம் ஆண்டில் அமெரிக்கா வாங்கியது. 1959இல் அமெரிக்க மாகாணங்களில் ஒன்றாக மாறிய ரஷ்யாவின் பழைய நகரம் ஒன்றில் நடைபெறும் சந்திப்பு என்பது, இந்த சந்திப்பை சரித்திர முக்கியத்துவம் பெறச் செய்கிறது. அமெரிக்காவும் ரஷ்யாவும் அண்டை நாடுகள், பெரிங் ஜலசந்தி மட்டுமே அவற்றைப் பிரிக்கிறது என்பதை ரஷ்ய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ் சுட்டிக்காட்டுகிறார். "எங்கள் தூதுக்குழுவினர் பெரிங் ஜலசந்தியின் மீது பறப்பதும், அலாஸ்காவில் நடைபெறவிருக்கும் இரு நாடுகளின் தலைவர்களின் முக்கியமான மற்றும் எதிர்பார்க்கப்பட்ட உச்சிமாநாடும் மிகவும் தர்க்கரீதியானதாகவே தெரிகிறது" என்று உஷாகோவ் கூறினார். 2021 மார்ச் மாதத்தில், அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜோ பைடனால் புதிதாக உருவாக்கப்பட்ட ராஜதந்திர மற்றும் தேசிய பாதுகாப்புக் குழு, ஆங்கரேஜில், சீனாவின் பாதுகாப்புக் குழுவை சந்தித்தபோது, அலாஸ்கா கடைசியாக ஒரு அமெரிக்க ராஜதந்திர நிகழ்வின் மையமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருக்கவில்லை. சந்திப்பின் விளைவால் கடும் கோபமடைந்த சீனா, அமெரிக்கர்கள் "உயர்வு மனப்பான்மை மற்றும் பாசாங்குத்தனம்" கொண்டவர்கள் என்று குற்றம் சாட்டியது. அலாஸ்காவில் டிரம்பும் புதினும் எங்கு சந்திப்பார்கள்? இரு நாட்டு அதிபர்களும் அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் சந்திப்பார்கள் என்று வெள்ளை மாளிகை செவ்வாயன்று (2025, ஆகஸ்ட் 11) உறுதிப்படுத்தியது. இருதரப்பு ஒப்பந்தத்தை அறிவிக்கும் போது, அந்த இடம் "பல காரணங்களுக்காக மிகவும் பிரபலமானதாக" இருக்கும் என்று டிரம்ப் கூறினார், அது மாகாணத்தின் மிகப்பெரிய நகரத்தில் இருக்கும் என்பதை அவர் வெளியிடவில்லை. அலாஸ்காவின் மிகப்பெரிய ராணுவ நிறுவலான எல்மென்டார்ஃப்-ரிச்சர்ட்சன் கூட்டுத் தளத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்கள் தங்க வைக்கப்படுவார்கள். 64,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தளம் ஆர்க்டிக் ராணுவத் தயார்நிலைக்கு அமெரிக்காவின் முக்கிய தளமாகும். டிரம்ப்-புதின் சந்திப்பு பின்னணி யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் கடுமையாக முயற்சித்து வருகிறார், இருந்தபோதிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க வெற்றி ஏற்படவில்லை. முன்னாள் அதிபர் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தலில் தான் வெற்றிபெற்று பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நம்புவதாக வாக்குறுதி அளித்திருந்தார். மேலும், 2022இல் ரஷ்யா யுக்ரேனின் மீது படையெடுத்த சமயத்தில் தான் அதிபராக இருந்திருந்தால், இந்தப் போர் "ஒருபோதும் நடந்திருக்காது" என்றும் அவர் பலமுறை வலுவாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம்,பிபிசியிடம் பேசிய டிரம்ப், புதினால் தான் "ஏமாற்றமடைந்ததாக" தெரிவித்தார். இதுபோன்ற சூழலில், உடனடியாக ரஷ்யா போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது இன்னும் பல கடுமையான அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று ஆகஸ்ட் 8ஆம் தேதி புதினுக்கு காலக்கெடு நிர்ணயித்தார் டிரம்ப். காலக்கெடு நெருங்கிய நிலையில், ஆகஸ்ட் 15 அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தான் நேரில் சந்திப்பதாக டிரம்ப் அறிவித்தார். புதன்கிழமையன்று அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மாஸ்கோவில் புதினை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தைகள், "மிகவும் பயனுள்ளதாக" இருந்த நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தான் ரஷ்ய அதிபரை சந்திக்கவிருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். இந்த சந்திப்பிற்கு முன்னதாக, இருதரப்பும் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற ஊகங்களை வெள்ளை மாளிகை நிராகரித்தது. திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டுவர புதினை வலியுறுத்துவதே அவரை சந்திப்பதன் முக்கிய நோக்கம் என்றும் இது "உணர்ச்சிபூர்வமான சந்திப்பாக" இருக்கும் என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, யுக்ரேனின் ஐரோப்பியக் கூட்டாளிகளான பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் (இடது) மற்றும் பிரிட்டனின் பிரதமர் கியர் ஸ்டாமர் (வலது) — அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தனர் அலாஸ்கா கூட்டத்தில் யுக்ரேனும் கலந்துகொள்கிறதா? யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது சந்தேகம் என்றே தெரிகிறது. திங்களன்று இந்தக் கூட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியபோது, "அவர் கலந்துக்கொள்ளலாம் என்றே நான் கூறுவேன், ஆனால் அவர் இதுவரை பல கூட்டங்களில் கலந்துகொண்டார்" என்று தெரிவித்தார். இருப்பினும், அலாஸ்கா சந்திப்பிற்குப் பிறகு, தான் அழைக்கும் முதல் நபர் ஜெலென்ஸ்கியாகவே இருப்பார் என்று டிரம்ப் கூறினார். அமெரிக்க அதிபர் புதினுடனான நேரடி சந்திப்புக்கு முன்னதாக, புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 13) டிரம்பும் ஜெலன்ஸ்கியும் மெய்நிகர் முறையில் சந்தித்துப் பேசுவார்கள் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பின்னர் தெரிவித்தார். ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பில் பல ஐரோப்பிய தலைவர்களும் கலந்துகொள்வார்கள். டிரம்ப், புதின் மற்றும் ஜெலன்ஸ்கி என மூன்று தலைவர்களும் கலந்துகொள்ளும் முத்தரப்பு சந்திப்பை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை முன்பு கூறியிருந்தது. ஆனால், ஜெலன்ஸ்கியை விலக்க வேண்டும் என்று புதின் கோரியிருந்தார். யுக்ரேனின் ஈடுபாடு இல்லாமல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் "உயிரற்ற முடிவுகளுக்கு" சமமானதாக இருக்கும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். சந்திப்பும் இரு தரப்பினரின் எதிர்பார்ப்பும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று ரஷ்யாவும் யுக்ரேனும் நீண்ட காலமாக கூறி வந்தாலும், ஒரு நாடு கடுமையாக எதிர்க்கும் விஷயத்தையே மற்றொரு நாடு விரும்புகிறது என்பது முக்கியமான சிக்கலாக இருந்துவருகிறது. " சில பகுதிகளை [ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட] யுக்ரேனுக்குத் திரும்பப் பெற்றுத் தர முயற்சிக்கப் போகிறேன்" என்று திங்களன்று டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் "சில பரிமாற்றங்களும், நில மாற்றங்களும்" இருக்கலாம் என்றும் அவர் முன்னெச்சரிக்கையும் செய்துள்ளார். இருப்பினும், க்ரைமியா உட்பட மாஸ்கோ கைப்பற்றிய பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை ஏற்கப்போவதில்லை என்பதில் யுக்ரேன் உறுதியாக உள்ளது. பிரதேசங்களை "மாற்றிக்கொள்ளும்" எந்தவொரு யோசனையையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று இந்த வாரம் கூறிய ஜெலென்ஸ்கி, "ரஷ்யா செய்த செயலுக்கு நாங்கள் பரிசு வழங்க முடியாது" என்று தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டார். ரஷ்ய அதிபர் புதினும், தனது பிராந்திய கோரிக்கைகள், யுக்ரேன் நடுநிலைமையாக இருப்பது மற்றும் ராணுவத்தின் எதிர்கால அளவு போன்ற பிரச்னைக்குரிய பல விசயங்களில் இருந்து பின்வாங்கவில்லை. தனது படைகளை ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் கொண்டு வருவதற்காக யுக்ரேனை மேற்கத்திய தற்காப்பு கூட்டணியான நேட்டோ பயன்படுத்திக் கொள்கிறது என்று நம்பிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கினார். யுக்ரேனின் சில பகுதிகளை ரஷ்யாவிடம் ஒப்படைக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து ஐரோப்பிய தலைவர்களை சமாதானப்படுத்த, டிரம்ப் நிர்வாகம் முயற்சித்து வருவதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ரஷ்யாவை க்ரைமிய தீபகற்பத்தின் கட்டுப்பாட்டை வைத்திருக்க அனுமதிக்கும், மேலும் கிழக்கு யுக்ரேனின் டான்பாஸ் பகுதியை எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கும், இது டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா, 2014இல் க்ரைமியாவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது மற்றும் ரஷ்ய படைகள் டான்பாஸ் பிராந்தியத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், தற்போது தனது ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் கெர்சன் மற்றும் சபோரிஷியாவை ரஷ்யா விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கலாம். ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், எந்தவொரு எதிர்கால ஒப்பந்தமும் "யாரையும் முழுமையாக திருப்திப்படுத்தவோ, மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யவோ போவதில்லை" என்று கூறினார். மேலும், "இங்கே சமாதானம் செய்ய வேண்டும்... யாரையும் விரல் நீட்டி பேசமுடியாது," என்று அவர் கூறினார். "அமைதிக்கான ஒரே வழி, மக்களை ஒன்று சேரும்படி கட்டாயப்படுத்தி, வழிநடத்திச் செல்லக்கூடிய தீர்க்கமான தலைவர் ஒருவரைக் கொண்டிருப்பதாகும்" என்று அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c80dg4lj77lo
  24. 6) இன்றைய தினம் 14/08/2025 வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவும் முகமாக நவரத்தினம் சிவரஞ்சன் குடும்பம் (சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்) 20000 ரூபாவை திரு சி.லக்‌ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர். 14/08/2025 இன்றுவரை மொத்தமாக 220070 ரூபா திரு லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. பேசமுடியாத தந்தையும் மூத்த மகனும் உள்ள இந்த குடும்பத்திற்கு பலதடவைகள் அரசின் நிதி உதவியுடனான வீட்டுத்திட்டம் தவறிப்போனது. இம்முறை இதனை பூரணப்படுத்தி அவ்வீட்டில் குடியேற நல்லுள்ளங்களே உங்களால் இயன்ற பங்களிப்பை செய்து உதவுமாறு தாழ்மையோடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். தொடர்புகொள்ள +94 77 777 5448 +94 77 959 1047
  25. கருநிலம்’ (கருப்பு மண்) மன்னார் மக்கள் மாற்றத்தின் ‘காற்றை’ தொடர்ந்து எதிர்க்கின்றனர். Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 01:55 PM Kamanthi Wickramasinghe தமிழில் - ரஜீவன் மன்னாரில் கடந்த மூன்றாம் திகதி ஆரம்பமாகி தொடரும் போராட்டத்திற்கான பெயர் கருநிலம். சட்டவிரோத கனியவள - இல்மனைட் அகழ்வு - காற்றாலை மின் திட்டம் - இறால் பண்ணைகள் போன்ற மன்னார் தீவின் இயற்கை சமநிலையை அழித்துக்கொண்டிருக்கின்ற விடயங்களிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. மன்னார் இலங்கையில் அதிகளவு மணல் பரப்பை கொண்ட தீவாக கருதப்படுகின்றது. இந்தியாவிற்கு அருகில் உள்ளது. முன்னைய ஆட்சியாளர்களின் தொலைநோக்கற்ற தீர்மானங்கள் காரணமாக மன்னார் மக்கள் நிலம், நீரை பெறுவதற்கான வழிமுறைகள் உட்பட ஏனைய அடிப்படை உரிமைகளை இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். சமீபத்தில் எப்படி காற்றாலையை அமைப்பதற்கான பொருட்கள் மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டன என்பதை பொதுமக்கள் பார்வையிட்டனர். கடும் பாதுகாப்புடன் ஆறு ஏழு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட இந்த இறக்கைகளை - பொதுமக்கள் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக பொதுமக்கள் மறித்தனர் என தெரியவந்துள்ளது. மன்னாரில் ஏற்கனவே உள்ள 30 காற்றுவிசையாழிகளிற்கு அப்பால் இந்த காற்றாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர். மிகவும் பலவீனமான சுற்றுசூழல் அமைப்பை கொண்ட மன்னார் தீவிற்கு 30 விசையாழிகள் போதும் என மக்கள் நம்புகின்றனர். மன்னாரின் சுற்றுசூழல் மதிப்பும் முக்கியத்துவமும் பல்லுயிர் பெருக்கமும் பல்லாயிரக்கணக்கான வலசப்பறவைகளை ஈர்க்கின்றது. ஆனால் மன்னார் தீவில் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலை விசையாழிகள் பல பறவைகளை கொல்லக்கூடியவை என சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதானி குழுமத்தின் முன்மொழியப்பட்ட காற்றாலை மின்திட்டத்தினை நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ள போதிலும் பல நிறுவனங்கள் காற்றாலைகளை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இது பசுமை ஆற்றலை உருவாக்கும் போர்வையில் ஒரு அழகிய சுற்றுசூழல் அமைப்பை அழிப்பதற்கு சமமானது. மன்னார் மக்கள் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இப்போது அவர்களின் நீதியைக் கோருவதற்கான ஒரே வழி அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை கேட்கும் வரை தொடர்ச்சியான போராட்டத்தை நடத்துவதுதான். "ஏற்கனவே மழைக்காலத்தில் மன்னார் தீவு 3-4 மாதங்களாக நீரில் மூழ்கி அனைத்து குடியிருப்பாளர்களின் வாழ்க்கையையும் துயரத்தில் ஆழ்த்துகிறது" என்று மன்னாரில் ஏற்படும் அழிவுக்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வந்த ஒரு குடியிருப்பாளர் கூறினார். "கழிவுநீர் கசிவுகள் மற்றும் மோசமான சுகாதார நிலைமைகள் காரணமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். இது எங்கள் வீடு நாங்கள் எங்கும் செல்ல முடியாது" என்று குடியிருப்பாளர் மேலும் கூறினார். வரவிருக்கும் பேரழிவு கடந்த சில நாட்களாக கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர். மேலும் வரவிருக்கும் பேரழிவைத் தவிர்க்க அரசாங்கத்தை நம்ப வைக்கும் நம்பிக்கையுடன் தங்கள் போராட்டத்தைத் தொடர திட்டமிட்டுள்ளனர். ஜூன் 18 அன்று வெளியிடப்பட்ட "பேரழிவு தரும் திட்டங்களை நிறுத்துங்கள்!": மன்னார் மக்களிடமிருந்து ஒரு வேண்டுகோள்" என்ற தலைப்பில் முந்தைய கட்டுரையில் டெய்லி மிரர் மன்னார் தீவுக்கு ஏற்பட்ட அழிவின் அளவை வெளிச்சம் போட்டுக் காட்டியது. சமீபத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் பொதுமக்கள் அடிப்படை உயிர்வாழ்தலிற்கே சவாலை ஏற்படுத்தியுள்ள போதிலும் அடிப்படை உரிமைகளை பாதித்துள்ள போதிலும் இந்த திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கப்போகின்றார்களா என்பது குறித்து அரசாங்கத்திடமிருந்து உறுதியான பதில் எதுவுமில்லை. மன்னாரில் நடந்து வரும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் 'கருநிலம்' என்ற தலைப்பில் ஒரு அதிகாரப்பூர்வ போராட்டப் பாடலை வெளியிட்டனர். இது நிலைமையின் தீவிரத்தை ஆக்கப்பூர்வமாக எடுத்துக்காட்டுகிறது. இல்மனைட் அகழ்வினால் ஏற்படும் நீரில் அதிக அளவுகள் மற்றும் இந்த முன்னேற்றங்களால் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விளைவுகள் குறித்து இந்தப் பாடல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மௌனப் போராட்டம் நடத்தி வந்த போதிலும் அரசாங்கம் மௌனமாக இருப்பதை அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். டெய்லி மிரருக்கு பேட்டி அளித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மெலனி குணதிலகா மன்னார் தீவில் முன்மொழியப்பட்ட இல்மனைட் அகழ்வு மற்றும் பிற நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மீள்பரிசீலனை செய்யவேண்டும் என தெரிவித்தார். "மன்னார் ஒரு உள்ளூர் பிரச்சினை மட்டுமல்ல, இது உலகளாவிய சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்தது. அழிந்து வரும் பல்லுயிர் பெருக்கம் வளமான கடல் வாழ்விடங்கள் மற்றும் மத்திய ஆசிய விமானப் பாதையில் ஒரு முக்கியமான முனை 150 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இடம்பெயர்வு பாதை. இந்தப் பகுதியில் பெரிய அளவிலான தொழில்துறை சீர்குலைவு வனவிலங்குகளுக்கு மட்டுமல்ல இந்த உடையக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பைச் சார்ந்திருக்கும் பழங்குடி மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கும் மீளமுடியாத விளைவுகளை ஏற்படுத்தும்" என்று அவர் கூறினார். சர்வதேச சட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க மாநிலங்கள் சட்டப்பூர்வ கடமைகளைக் கொண்டுள்ளன இதில் சுத்தமான ஆரோக்கியமான மற்றும் நிலையான சூழலுக்கான உரிமையும் அடங்கும் என்று சர்வதேச நீதிமன்றம் ) சமீபத்தில் உறுதிப்படுத்தியதாக குணதிலகா மேலும் கூறினார். "இது தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களை தனியார் ஒழுங்குபடுத்துவதற்கும் மீளமுடியாத சுற்றுச்சூழல் சேதத்தைத் தடுப்பதற்கும் உள்ள கடமையை உள்ளடக்கியது. இதற்கு மேலதிகமாக நவ்ரு எள. ஆஸ்திரேலியா வழக்கில் அமைக்கப்பட்ட முன்னுதாரணமானது பாதிக்கப்படக்கூடிய தீவு சூழல்களில் வளங்களை பிரித்தெடுப்பதால் ஏற்படும் அழிவுக்கு மாநிலங்கள் பொறுப்பேற்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது என அவர் தெரிவித்தார் பல சுற்றுச்சூழல் ஒப்பந்தங்கள் மற்றும் மனித உரிமைகள் உடன்படிக்கைகளில் கைசாத்திட்டுள்ள இலங்கை மக்களின் மட்டுமல்ல இயற்கையின் வாழ்வுரிமையையும் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது. திட்டங்களை ஒவ்வொன்றாக அங்கீகரிப்பது மன்னாரின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஏற்படும் ஒட்டுமொத்த தாக்கத்தை புறக்கணிக்கிறது. ஒரு விரிவான முழு தீவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அவசியம். குறைவான எதுவும் சர்வதேச விதிமுறைகளை மீறுகிறது மற்றும் சுற்றுச்சூழல் பாகுபாட்டின் செயலாக மாறும் அபாயம் உள்ளது. அங்கு சிறுபான்மை சமூகங்கள் மாசுபாடு இடப்பெயர்ச்சி மற்றும் வாழ்வாதார இழப்பு ஆகியவற்றால் விகிதாசாரமாக சுமையாக உள்ளன. மன்னார் தீவு செலவிடத்தக்கது அல்ல. இது அதன் மக்களுக்கு பறவைகளுக்கு பல்லுயிர் பெருக்கத்திற்கு ஒரு சரணாலயமாகும் மேலும் தேசிய மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் அவ்வாறு நடத்தப்பட வேண்டும்” என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 'சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு அழிவுகரமான திட்டங்களையும் அனுமதிக்காது' என்று ஜனாதிபதி திசாநாயக்க உறுதியளித்தார். ஒவ்வொரு திட்டமும் மக்களின் ஒப்புதலுடனும் குறைந்தபட்ச சுற்றுச்சூழல் தாக்கத்துடனும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கு கட்சி உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார். ஆயினும்கூட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் ஆன பிறகும் மன்னார் தீவின் தொடர்ச்சியான அழிவுக்கு முடிவே இல்லாததால் மன்னார் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். https://www.virakesari.lk/article/222383

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.