Everything posted by ரஞ்சித்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
திம்புப் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியதன் காரணத்தை மக்களுக்கு விளக்கிய தலைவர் பிரபாகரன் தலைவர் பிரபாகரன் - 1987 தீர்வொன்று நோக்கிப் பயணிக்கலாம் என்கிற நம்பிக்கையினை தந்த திம்புப் பேச்சுவார்த்தைகள் முற்றான தோல்வியைத் தழுவியிருந்தன. எதிர்பார்த்தது போலவே ஜெயவர்த்தன அரசாங்கம் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கியது. பேச்சுவார்த்தைகளின் தோல்விக்கான முழுப்பொறுப்பினையும் தமிழ்ப் போராளிகளின் மீது அது சுமத்தியது. தமிழர்களை உறுதியற்றவர்கள், விட்டுக் கொடுக்காதவர்கள் என்று அது குற்றஞ்சுமத்தியது. பேச்சுக்கள் தோல்வியடைந்தமையினால், தனக்கு முன்னால் இருக்கும் ஒரே தெரிவு இராணுவ முறையில் தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதுதான் என்று அது கொக்கரித்தது. இதனையடுத்து, அதுலத் முதிலியினால் "பயங்கரவாதிகளின் இடங்கள்" என்று அழைக்கப்பட்டு வந்த தமிழர்களின் எல்லையோரக் கிராமங்களில் இருந்து தமிழர்களை முற்றாகத் துடைத்தழிக்கும் செயற்பாடுகளில் இராணுவம் இறங்கியது. இலங்கையரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு மிகவும் தீர்க்கமான பதிலை பிரபாகரன் வழங்கினார். பேச்சுவார்த்தைகளில் இருந்து தாம் வெளிநடப்புச் செய்ததன் காரணத்தை விளக்கி தமிழில் அறிக்கையொன்றினை அவர் வெளியிட்டார். அவரது அறிக்கை வருமாறு. "இலங்கையில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக இதயசுத்தியுடன் முயன்ற இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் முயற்சிகளுக்குத் தடையாக இருக்கக் கூடாது எனும் நோக்கத்திற்காக மட்டுமே திம்புப் பேச்சுக்களில் ஈடுபடுவது என்று நாம் முடிவெடுத்தோம். ஆனாலும், அவரின் அந்த முயற்சிகள் வெற்றிபெறப்போவதில்லை என்பதனை நாம் அறிந்தே இருந்தோம். ஏனென்றால், சர்வாதிகாரத்தனமும், அடக்குமுறையும் கொண்ட ஜெயவர்த்தனவின் அரசாங்கம் ஒருபோதுமே சமாதானத்தில் அக்கறை காட்டப்போவதில்லை என்பது எமக்கு நன்கு தெரிந்தே இருந்தது. ஆனாலும், யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தைகளில் பங்கெடுப்பது என்று நாம் முடிவெடுத்தோம். தமிழ் மக்கள் மீதான ஜெயவர்த்தன அரசாங்கத்தின் அடக்குமுறையினையும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நீதியானதும் நேர்மையானதுமான தீர்வொன்றினை வழங்குவதில் அவருக்கு இருக்கும் வெறுப்பினையும் உலகிற்கும், இந்தியாவிற்கும் எடுத்துக்காட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இப்பேச்சுவார்த்தையினைப் பயன்படுத்துவது என்று நாம் தீர்மானித்தோம். நாம் எதிர்பார்த்தவாறே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக எந்தவித அடிப்படைகளையும் முன்வைக்க ஜெயவர்த்தன அரசாங்கம் தவறியிருந்தது. விடுதலைப் போராட்ட வீரர்களான எம்மை சமாதானப் பொறிக்குள் வீழ்த்துவதன் மூலம் அடிமைகளாக்குவதே ஜெயவர்த்தனவின் திட்டம். தமிழ்ப் புலிகளான நாங்கள் ஜெயாரின் வலைக்குள் வீழ்ந்திடப்போவதில்லை. தான் ஆடும் சமாதான நாடகத்தின் மூலம் தமிழர்கள் மீது தான் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனக்கொலையினை இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் கவனத்திலிருந்து மறைத்துவிட இலங்கை முயல்கிறது. சிங்கள இனவெறியர்களின் அழிவுத் திட்டத்தை இந்தியா உணர்ந்துகொள்ளுமா என்று நாங்கள் ஆதங்கப்படுகிறோம். முன்னாள் இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி, ஜெயாரின் கபடத் தனத்தையும், ஏமாற்றல் முயற்சிகளையும் நன்கு அறிந்தே இருந்தார். புதிய பிரதமரான ரஜீவ் காந்தி சமாதானத்தை விரும்புகிறார். தமிழ் மக்களின் நலனில் அவர் தனியான அக்கறை கொண்டுள்ளார். தமிழ் மக்கள் கெளரவமாகவும், பாதுகாப்புடனும் வாழ்வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். ரஜீவின் விருப்பங்களை தான் ஆதரிப்பதாக இலங்கை அரசாங்கம் பாசாங்கம் செய்கிறது. இந்தியாவிற்கும், தமிழீழ விடுதலை அமைப்புக்களுக்கும் இடையே பகைமையினை உருவாக்க அது முயன்று வருகிறது. இலங்கையின் சூழ்ச்சியை இந்தியா விரைவில் புரிந்துகொள்ளும் என்று நாம் நம்புகிறோம். சுதந்திரத் தமிழீழமே எமது ஒற்றை விருப்பாகும். அதனை எவராலும் அசைக்க முடியாது. அவ்விருப்பினை அடைவதற்காக எமது உயிரையும் விலையாகக் கொடுத்துப் போராடி வருகிறோம். தமிழ் ஈழத்தைத் தவிர வேறு எந்தத் தீர்வும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என்று நாம் முழுமையாக நம்புகிறோம். உலகில் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு தனது ஆதரவினை வழங்கிவரும் இந்திய நாடு, தமிழீழ மக்களினது விடுதலைப் போராட்டத்திற்கும் தனது ஆதரவினை வழங்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். எமது போராட்டத்திற்கு தமது கரங்களை நீட்டி உதவுவதற்கு இந்திய மக்களுக்குச் சற்றுக் காலம் எடுக்கலாம். அதுவரை அதற்கான ஆதரவு வேண்டி நாம் போராடிக்கொண்டிருப்போம்".
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பேச்சுவார்த்தை மேசையிலிருந்து வெளியேறிய தமிழ் தரப்பும், இந்திய அதிகாரிகளின் கெஞ்சலுக்கு மசிந்த வரதராஜப் பெருமாளும் தமிழர் தரப்பு அறிக்கையின் இறுதிப்பகுதி அந்த நேரத்தின் இலங்கையிலும், சென்னையிலும் நடந்துவரும் விடயங்கள் குறித்தே பேச விழைந்திருந்தது என்பது வெளிப்படை. ஆவணி 17 ஆம் நாள் காலையில் வவுனியாவிலும், திருகோணமலையிலும் சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்துகொண்டிருந்தது. திருகோணமலையில் தமிழ்க் கிராமங்களுக்குள் புகுந்த ஆயிரக்கணக்கான சிங்கள இராணுவமும், சிங்கள ஊர்காவல்ப் படையினரும் அங்கிருந்த தமிழ் இளைஞர்களை வீடுகளுக்குள் இருந்து இழுத்துவந்து வரிசைகளில் நிற்கவைத்துச் சுட்டுக் கொன்றனர். அன்று நாள் முழுதும் நடைபெற்ற படுகொலைகள் ஆவணி 18 காலை, கொலையாளிகள் தமிழ்க் கிராமங்களை விட்டகன்றபோதே முடிவிற்கு வந்தன. சென்னையில் தமிழ்ப் போராளிகளின் தலைவர்கள் தீவிரமான ஆலோசனைகள் ஈடுபட்டிருந்தனர். பிரபாகரன் மிகுந்த சினத்துடன் காணப்பட்டார். மற்றையவர்களும் அப்படித்தான். தமிழ் மக்களை இனவழிப்புச் செய்யும் தனது திட்டத்தினை மறைக்கவே திம்புவில் ஜெயவர்த்தன பேச்சுவார்த்தை நடத்துவதாக பிரபாகரன் தெரிவித்தார். அதனால், ஜெயவர்த்தனவின் சதித்திட்டத்தினை உலகறியச் செய்யவேண்டும் என்று அவர் கூறினார். ஆகவே, உலகளவில் பேசப்பட்டு வந்த திம்புப் பேச்சுக்களில் இருந்து வெளியேறுவது எனும் முடிவினை அவர்கள் எடுத்தனர். அவசரகால சூழ்நிலைமை நிலவியபோதிலும் பிரபாகரன் நிதானத்துடன் காணப்பட்டார். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் பேச்சுக்களில் புளொட் அமைப்பும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் கலந்துகொள்ள விரும்புகின்றனவா என்பதை அறிந்துவருமாறு பாலசிங்கம் பணிக்கப்பட்டார். அவர்களும் ஆலோசனைகளில் கலந்துகொள்ள இணங்கினர். அதன் பின்னர், தமிழ் நாட்டில் இயங்கிவந்த பயிற்சி முகாம்களை இந்திய அரசு நிறுத்திவுடுமா என்பதை அறிந்துகொள்ளுமாறு பாலசிங்கத்தைப் பிரபாகரன் பணித்தார். ஆனால், முகாம்களை மூடிவிடப்போவதில்லை என்றி ரோ உறுதியளித்தது. அதன்பின்னர் பேச்சுக்களில் ஈடுபட்டு வந்த தமிழ்த் தரப்பை பேச்சுக்களில் இருந்து வெளியேறுமாறு நேரடித் தொலைபேசி அழைப்பினூடாக சென்னையிலிருந்த போராளிகளின் தலைமைகள் பணித்தன. பிரபாகரனின் பணிப்பின் பேரில் திலகருடன் பேசிய பாலசிங்கம், புளொட் அமைப்பே வெளிநடப்பினை முதலில் செய்யும் என்றும் கூறியிருந்தார். திம்புவில் தமிழ்த் தரப்புடன் பேசிய ஹெக்டர் ஜயவர்த்தன, தமது தரப்பால் முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைகள் பேச்சுக்களுக்கான அடிப்படையாக இருக்கும் என்றும், அதனைத் அதிகாரத் தீர்வுப் பொதியாக தமிழர்தரப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறினார். ஆனால், பேச்சுக்கள் மாலை 4 மணிக்கு மீண்டும் ஆரம்பித்தவேளை சூழ்நிலை முற்றாக மாறிப்போயிருந்தது. வவுனியாவில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலும் அதனைத் தொடர்ந்து தமிழமக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களும் பி.பி.சி செய்திச் சேவையில் ஒலிபரப்பாகியபோது தமிழர் தரப்பு கொதிப்படைந்தது. பதற்றமாகி வந்த சூழ்நிலையினைத் தணிப்பதற்கு ஹெக்டர் ஜயவர்த்தன முயன்றார். அரசாங்கத்தால் பரப்பப்பட்ட செய்தியான "வவுனியாவில் குண்டுத் தாக்குதல், பத்தொன்பது பொதுமக்கள் பலி" என்று அச்செய்தியை அவர் வாசித்துக் காட்டினார். மேலும், பொதுமக்களை இராணுவத்தினரே சுட்டுக் கொன்றதாக பரப்பட்டுவருவது திட்டமிட்ட சதி என்றும் அவர் வாதாடினார். ஆனால், பேச்சுக்களில் புளொட் அமைப்புச் சார்பாகக் கலந்துகொண்டிருந்த வாசுதேவா, வவுனியாவிலும் திருகோணமலையிலும் இராணுவத்தினரின் தாக்குதல்களில் அதுவரை 250 இற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அதன்பின்னர் தனது அறிக்கையினை அவர் படித்தார், ஆவணி 16 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் முன்வைத்த புதிய ஆலோசனைகளுக்கு நாம் அளித்த பதில் அறிக்கையில் குறித்த விடயம் ஒன்று தொடர்பாக பிறிதொரு அறிக்கையில் விளக்குவோம் என்று கூறியிருந்தோம். அதன்படி அவ்விடயம் குறித்து இங்கே விளக்கவுள்ளோம் என்று அவர் கூறினார். நாம் முன்னர் இங்கு குறிப்பிட்டதுபோல், இலங்கையரசாங்கம் தமிழர்கள் மீது திட்டமிட்ட வகையில் இனக்கொலை ஒன்றினை நடத்திவருகிறது என்பதை கடந்த சில நாட்களாக தமிழர் தாயகத்தில் நிகழ்த்தப்பட்டுவரும் படுகொலைகள் உறுதிப்படுத்துகின்றன. வவுனியாவிலும், ஏனைய இடங்களிலும், தமிழர் என்கின்ற காரணத்தினால் அப்பாவிகளான சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் , வயோதிபர்கள் என்று இருநூற்றிற்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் கடந்த சில நாட்களில் படுகொலை செய்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு அவர்களின் தாயகத்திலேயே அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியாத சூழ்நிலை நிலவும் நிலையில் இப்பேச்சுக்களில் தொடர்ந்தும் ஈடுபடுவது கேலிக்குரியதாகும். பேச்சுக்களில் இருந்து வெளியேறுவது எமது விருப்பாக இல்லாத போதும். இப்பேச்சுக்களுக்கான அடிப்படையான யுத்தநிறுத்தத்தினை உதாசீனம் செய்து, எமது மக்கள் மீது படுகொலைகளை இலங்கையரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளமையானது இப்பேச்சுக்களில் தொடர்ந்தும் எம்மால் ஈடுபட முடியாத சூழ்நிலையினைத் தோற்றுவித்திருக்கிறது. வாசுதேவா தனது அறிக்கையினைப் படித்து முடித்தவுடன் தமிழர் தரப்பினர் பேச்சுக்களுக்குத் தாம் கொண்டுவந்திருந்த ஆவணங்களை எடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தை மண்டபத்திலிருந்து வெளியேறிச் சென்றனர். இதனைக் கண்ணுற்ற பேச்சுக்களில் மேற்பார்வையாளர்களாகக் கலந்துகொண்டிருந்த இந்திய அதிகாரிகள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். அவர்களைப்போன்றே இலங்கை அரச தரப்பினர் அதிர்ச்சியடைந்திருந்தனர். பேச்சுவார்த்தைகள் முற்றான தோல்வியினைத் தழுவுவதைத் தடுக்க இந்திய அதிகாரிகள் முயன்றனர். ஆகவே, சென்னைக்குத் திரும்பிச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த தமிழர் தரப்பினரை தொடர்ந்தும் திம்புவில் தங்கியிருந்து பேச்சுக்களில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து சென்னையின் கோடாம்பக்கத்தில் இரகசிய இடமொன்றில் கூடியிருந்த தமது தலைவர்களுடன் நிலைமையினை விளக்கி நேரடித் தொலைபேசியூடாக அவர்கள் பேசினர். ஆனால், பேச்சுக்களைக் கைவிட்டு விட்டு உடனடியாக சென்னை திரும்புமாறு தமிழர் தரப்பினருக்கு சென்னையிலிருந்த தலைவர்களால் பணிப்புரை வழங்கப்பட்டது. இதனையடுத்து பேச்சுக்களில் தம்மால் தொடர்ந்தும் பங்குபற்ற முடியாது என்றும், தம்மை சென்னை திரும்புமாறு தலைவர்கள் அழைத்திருப்பதாகவும் தமிழர் தரப்பினர் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் அனைத்துப் பிரதிநிதிகளும் சென்னை திரும்ப ஆயத்தமாகி வந்தவேளை ஒரேயொரு உறுப்பினர் மட்டும் சென்னை திரும்பும் முடிவிற்கு எதிராக நின்றார். அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பிரதிநிதியான வரதராஜப் பெருமாள். தனது சகாவான கேதீஸ்வரனுடன் பேசிய வரதர், "பேச்சுக்களில் தொடர்ந்தும் பங்கெடுங்கள் என்று இந்திய அதிகாரிகள் கெஞ்சும்போது நாம் எப்படி சென்னைக்குத் திரும்பிச் செல்ல முடியும்?" என்று கேட்டார். இதனையடுத்து கேதீஸ்வரன் சென்னையில் தங்கியிருந்த பத்மநாபாவிடம் வரதரின் முடிவுகுறித்துப் பேசினார். இதன்பின்னர் வரதருடன் நேரடியாகப் பேசிய பத்மநாபா, "மற்றையவர்களுடன் நீங்களும் சென்னைக்குத் திரும்பி வரவேண்டும், இல்லாவிட்டால் தெரியும் தானே?" என்று மிரட்டும் தொனியில் பேசினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
திம்புப் பேச்சுக்களில் இருந்து வெளியேறும் தமது நிலைப்பாட்டினை அறிவித்த தமிழ்த்தரப்பு திம்புவில் பேச்சுவார்த்தைகள் குழம்பும் நிலை உருவாகி வந்த அதேவேளை, வவுனியாவிலும் திருகோணமலையிலும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள் பற்றிய செய்தி பிரபாரகரனின் காதுகளுக்கு எட்டியது.இப்பகுதிகளில் இடம்பெற்ற இராணுவ அட்டூழியங்கள் குறித்து விரிவாக அவருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் அனைவரையும் சந்திக்க கூட்டமொன்றினை ஏற்பாடு செய்யுமாறு பாலசிங்கத்தை அவர் பணித்தார். மேலும், அக்கூட்டத்தில் பங்கேற்கத் தான் சென்றுகொண்டிருப்பதாகவும் பாலசிங்கத்திடம் அவர் அறியத் தந்தார். தமிழ் - சிங்கள இனங்களுக்கிடையிலான உறவின் சரித்திரத்தில் 1985 ஆம் ஆண்டு ஆவணி 17 ஆம் திகதி ஒரு முக்கிய நாளாகும். வழமை போல திம்புப் பேச்சுக்கள் அன்று காலையும் பத்து மணிக்கு ஆரம்பமாகின. அதே நேரம் சென்னையில் போராளிகளின் தலைவர்கள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவொன்றினை எட்டுவதற்காகக் கூடியிருந்தார்கள். திம்புவில் தமிழர் தரப்பு தாம் அரசாங்கத்தின் புதிய ஆலோசனைகளை நிராகரிப்பதாகக் கூறும் கூட்டு அறிக்கையினை வாசித்தார்கள். சென்னையில் சிறீ சபாரட்ணம், பத்மநாபா மற்றும் பாலக்குமாருடன் பேசிய பிரபாகரன் "தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கப் போரிடுவதைத்தவிர வேறு வழியில்லை" என்று தீர்க்கமாகக் கூறினார். "தமிழர்களை அழிப்பதற்குச் சிங்களவர்கள் கங்கணம் கட்டியிருப்பதால், அவர்களிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பது போராளிகளின் கடமை" என்று அவர் கூறினார். அன்று பிரபாகரன் தீர்க்கமான முடிவொன்றினை எடுத்தார். தமிழர்களின் உரிமைகளை ஆயுதப் போராட்டத்தின் ஊடாக மட்டுமே அடைய முடியும் என்பதுதான் அது. திம்புவில் இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனைகளை நிராகரித்திருந்த தமிழர் தரப்பின் கூட்டறிக்கை பின்வருமாறு அமைந்திருந்தது, தமிழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்கிற ஸ்த்தானத்தில் இருந்து திம்புப் பேச்சுக்களில் ஈடுபட்டு வரும் நாம், இலங்கை அரசாங்கத்தால் ஆவணி 16 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தீவிரமாகப் பரிசீலினை செய்திருக்கிறோம். தமிழ் மக்களின் சட்டபூர்வமான அரசியல் அபிலாஷைகளை புதிய ஆலோசனைகள் எந்தவிதத்திலும் பூர்த்தி செய்யாமையினால் அவற்றை நிராகரிப்பதாக நாம் முடிவெடுத்திருக்கிறோம். இந்திய அரசாங்கத்தின் முயற்சியினாலேயே திம்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இந்த முயற்சியினை நாம் பாராட்டி வரவேற்றிருந்தோம். குறிப்பாக தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றினைக் காண இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி எடுத்திருந்த முயற்சிகளை நாம் நன்றியுடன் பாராட்டுகிறோம். இப்பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் சில ஆலோசனைகளை முன்வைத்திருந்தது. அவ்வாலோசனைகள் கடந்த வருடம் சர்வகட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்டிருந்த அதே ஆலோசனைகள் தான் என்பது தெளிவானது. சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இவ்வாலோசனைகளை முற்றாக நிராகரித்திருந்த நிலையில், அதே ஆலோசனைகளை மீளவும் திம்புப் பேச்சுக்களில் முன்வைத்திருப்பதானது இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதில் இலங்கை அரசாங்கத்திருக்கும் உறுதிப்பாடு குறித்தும், அதன் நம்பகத்தன்மை குறித்தும் கடுமையான சந்தேகங்களை எமக்கு எழுப்பியிருக்கிறது. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளின் உண்மையான நோக்கம் என்னவென்பது குறித்து எம்மால் தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகிறது. மாவட்ட சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று ஆலோசனைகளில் குறிப்பிட்டிருந்தபோதிலும், மாவட்ட சபையினால் எடுக்கப்படும் எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றும் அதிகாரம் அதற்கு வழங்கப்படவில்லை. கட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு மாவட்ட சபைகள் எடுக்கும் தீர்மானத்தை நிராகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே தொடர்ந்து இருக்கும் என்றும் ஆலோசனை மேலும் கூறுகிறது. மேலும், மாவட்ட சபைக்கு ஒதுக்கப்படும் நிதி எவ்விதத்தில் பாவிக்கப்படுதல் வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது கூட ஜனாதிபதியினால் உருவாக்கப்படும் ஆணைக்குழு ஒன்றுதான் என்று கூறப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தால் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ஆலோசனைகளில், மத்தியிலிருந்து மாவட்டங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்குப் பதிலாக, மாவட்ட சபைகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டிருக்கும் அதிகாரங்களை மேலும் பலப்படுத்தும் வகையிலேயே புதிய ஆலோசனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மாவட்ட சபைகளுக்குக் கொடுப்பதாகக் கூறும் மிகச்சிறிய அதிகாரங்களைக் கொண்டு தமிழ் மக்களை அடக்கியாளவே அரசாங்கம் எத்தனிக்கிறது என்பது இதன்மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்கக் கூடிய தீர்வு அவர்களின் ஏக பிரதிநிதிகளான ஆறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களான எம்மால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கையின் ஊடாகவே உருவாக்கப்படமுடியும் என்பதனால், அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருக்கும் இவ்வாலோசனைகளை ஏகமனதாக நிராகரிக்கிறோம். பேச்சுக்களை ஆவணி 12 ஆம் திகதிக்குப் பின்போடுவதாகப் பின்னர் முடிவெடுக்கப்பட்டது. அன்றைய தினம் எம்மால் முன்வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கையினை விமர்சித்த அரசாங்கம், இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசத்திற்கு உரித்துடையவர்கள் இல்லை என்றும், அவர்களுக்கென்று சரித்திர ரீதியான தாயகம் என்று ஒன்று இலங்கையினுள் இல்லை என்றும், அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடையாது என்றும் கூறி நிராகரித்திருந்தது. மேலும், மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்ய எமக்கிருக்கும் சட்டபூர்வத் தன்மை குறித்தும் அது கேள்வியெழுப்பியிருந்தது. நாம் ஆவணி 13 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், தமிழ் மக்களின் சரித்திர ரீதியான, உறுதியான அரசியல்ப் போராட்டங்களின் முடிவாகவே சுயநிர்ணய உரிமைக்கான எமது கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதனைத் தெளிவுபடுத்தியிருந்தோம். தமிழ் ஈழத்தைச் சேர்ந்த மக்களான தமிழர்கள் தமக்கென்று தனியான தேசத்தையும், தனியான சரித்திரத்தினையும், தனியான கலாசாரத்தினையும், எம்மக்களுக்கிடையிலான பொதுவான மொழியினையும், அடையாளப்படுத்தக் கூடிய தாயகத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும், தொடர்ச்சியான ஆடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் சமூகம் என்கிற ரீதியில் அந்த அடக்குமுறையிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் சகல உரிமைகளையும் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும் விளக்கியிருந்தோம். சர்வதேசத்தில் நடைமுறையில் இருக்கும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர்கள் பிரிந்துசெல்வதற்குத் தேவையான அனைத்துத் தகமைகளையும் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் விளக்கியிருந்தோம். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களாகிய நாம் எமது அரசியலைத் தீர்மானிக்கும் அதிகாரத்தினையும், சிங்கள் தேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா அல்லது பூரண இறைமையுள்ள தனி நாடாக எம்மை உருவாக்கிக்கொள்ள வேண்டுமா என்று தீர்மானிக்கும் அதிகாரத்தினையும் கொண்டிருப்பதையும் நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். அதேவேளை, தனியாகப் பிரிந்துசெல்லும் தகமையினைக் கொண்டிருந்தபோதும், நியாயமான தீர்வினை அரசு வழங்கும் பட்சத்தில் அதனைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதனையும் நாம் அரசிற்குத் தெளிவுபடுத்தியிருந்தோம். ஆனால், ஆவணி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடைபெற்ற பேச்சுக்களின்பொழுது நாம் முன்வைத்திருந்த அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய தீர்வொன்றினை முன்வைக்க அரசாங்கம் தவறியிருந்தது. ஆக்கபூர்வமான தீர்வுகளை முன்வைய்யுங்கள் என்கிற தமிழர் தரப்பின் நியாயமான கோரிக்கைகளுக்குப் பின்னரும் அரச தரப்பு விடாப்பிடியாக முன்னர் தான் முன்வைத்த தீர்வினையே மீண்டும் வேறு பெயரில் முன்வைத்திருந்தது. ஆவணி 16 ஆம் திகதி அரச தரப்பு முன்வைத்த புதிய ஆலோசனைகள் ஏற்கனவே அரசால் முன்வைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சேர்ந்து மாகாண சபைகளாக இயங்க முடியும் என்கிற அடிப்படையிலே அமைந்திருந்தது. அரசு முன்வைத்த இப்புதிய ஆலோசனைகள் தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிக்கவில்லை. இலங்கையில் தமிழ் மக்களுக்கென்று தனியான தாயகம் இருப்பதை இந்த புதிய ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையினை புதிய ஆலோசனைகள் அங்கீகரிக்கவில்லை. இறுதியாக, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கூட இப்புதிய ஆலோசனைகள் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் ஒன்றுதான் என்பதனையும் இந்த ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தன. ஆகவேதான், இவ்வாலோசனைகள் தமிழ் மக்களின் நீதியான அரசியல் அபிலாஷைகளை எவ்விதத்திலும் பூர்த்தி செய்யப்போவதில்லை என்கிற முடிவிற்கு நாம் வரவேண்டியதாயிற்று. மேலும், எம்மைப்பொறுத்தவரையில் புதிய யோசனைகள் என்று அரச தரப்பினால் முன்வைக்கப்பட்டிருப்பவை புதியன அல்ல என்பதனையும் கூறிக்கொள்கிறோம். ஒரு பாரிய நிலப்பரப்பில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொண்டு, அப்பிரதேசத்தில் உள்ளவர்களால் நிர்வகிக்கப்படும் மாகாண ரீதியிலான தீர்வொன்றினை 1928 ஆம் ஆண்டிலேயே டொனமூர் ஆணைக்குழு முன்வைத்திருந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பண்டாரநாயக்க தலைமையில் உருவாக்கப்பட்ட உள்ளூர் சபைகளின் அதியுயர் ஆணைக்குழு டொனமூர் ஆணைக்குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையில் மாகாண சபைகளை ஏற்றுக்கொள்ளமுடியும் என்று 1940 ஆம் ஆண்டு கூறியிருந்தது. 1947 ஆம் ஆண்டு பண்டார்நாயக்க மீளவும் மாகாண சபை நடைமுறையினை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தபோதிலும் இன்றுவரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கைகளும் சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. 1955 ஆம் ஆண்டு சொக்ஸி தலைமையிலான ஆணைக்குழு கச்சேரிகளின் செயற்பாடுகளை பிராந்திய சபைகள் முன்னெடுக்கமுடியும் என்று பரிந்துரை வழங்க, 1957 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க பிராந்திய சபைகள் எனும் ஆலோசனையினை முன்வைத்திருந்தார். இதனடிப்படையில் 1957 ஆம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தத்தினூடாக பிராந்திய சபைகளுக்கு நேரடியான தேர்தல்களை நடத்துவதென்றும், இப்பிராந்திய சபைகளுக்கு விவசாயம், கூட்டுறவு, காணி மற்றும் காணி அபிவிருத்தி, குடியேற்றம் மற்றும் கல்வி ஆகிய அதிகாரங்களும் வழங்கப்படும் என்று ஒத்துக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட சிங்களக் கடும்போக்காளர்களின் எதிர்ப்பினால் அவ்வொப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. அவ்வாறே 1963 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிறிமா, கச்சேரிகளுக்குப் பதிலாக மாவட்ட சபைகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியதுடன், இதனை ஆராயவென்று மாவட்ட சபைகள் ஆணைக்குழுவினையும் நியமித்திருந்தார். இந்த ஆணைக்குழு தனது அறிக்கையினை சிறிமாவிடம் சமர்ப்பித்திருந்தபோதும் கூட, அதுகுறித்து எந்த நடவடிக்கையினையும் எடுக்க அவர் மறுத்திருந்தார். 1965 இல் பதவிக்கு வந்த டட்லி சேனநாயக்க மாவட்ட சபைகளை உருவாக்குவதற்குத் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். அதன்படி அவரது அரசாங்கத்தினால் 1968 ஆம் ஆண்டு மாவட்ட சபைகளுக்கான யோசனையும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுவரையில் பண்டாரநாயக்க தலைமையில் மாவட்ட சபைகளையும், பிராந்திய சபைகளையும் தீர்வாக 1940, 1947 மற்றும் 1957 ஆகிய ஆண்டுகளில் முன்வைத்த சுதந்திரக் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சி, 1968 இல் டட்லி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த மாவட்ட சபைகளை முன்னின்று எதிர்த்துத் தோற்கடித்தது. எதிர்க்கட்சிகளின் தீவிர எதிர்ப்பினால் கலக்கமடைந்த டட்லியும் தான் முன்வைத்த மாவட்ட சபைகள் எனும் யோசனையினை மீளப்பெற்றுக்கொண்டார். 1928 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஐம்பது ஆண்டுகள் உருண்டோடி விட்ட நிலையில் நாம் மாகாண சபைகளுக்கும், மாகாண சபைகளில் இருந்து பிராந்திய சபைகளுக்கும், பிராந்திய சபைகளில் இருந்து மாவட்ட சபைகளுக்கும், தற்போது மீளவும் மாவட்ட சபைகள் / மாகாண சபைகளுக்கும் வந்து நிற்கிறோம். இவற்றிற்குள் சிறிமாவின் "உடனடி நடவடிக்கைகளையும்" டட்லியின் "தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும்" நாம் பார்த்துவிட்டோம். இக்காலத்தில் ஆணைக்குழுக்களுக்கும், பரிந்துரைகளுக்கும், அறிக்கைகளுக்கும் குறைவே இருக்கவில்லை. தாமே முன்வைத்த தீர்வுகளை நடைமுறைப்படுத்தி தமிழர்களின் தாயகத்தின் இருப்பினை ஏற்றுக்கொள்ளும் அரசியல்த் தைரியமும், நாகரீகமும் சிங்களத் தலைமகளிடம் இன்றுவரை உருவாகவில்லை. ஆனால், இதே காலப்பகுதியில் தமிழர்களுடன் தாம் செய்துகொன்ட அனைத்து உடன்படிக்கைகளையும் கிழித்தெறிந்த அதேவேளை, தமிழரின் தாயகக் கோட்பாட்டினைச் சிதைக்கும் கைங்கரியத்துடன் தமிழ் மக்களை முற்றான அரச அடக்குமுறைக்குள் சிங்கள அரசுகள் தள்ளிவிட்டிருக்கின்றன. திம்புப் பேச்சுவார்த்தைகளில் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சங்கள் உள்ளடக்கிய தீர்வென்பது வெறுமனே கோட்பாட்டு அடிப்படையிலானது மட்டுமல்ல. அது தமிழ் மக்கள் தமது அடிப்படை உரிமைகளை அடைந்துகொள்ள முன்னெடுத்திருக்கும் இடையறாத போராட்டத்தின் அடிப்படையில் இருந்து, நிதர்சனத்திலிருந்து உருவாக்கப்பட்டிருப்பது என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கிறோம். தமிழர்களின் கோரிக்கைகள் 1950 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்விலிருந்து ஆரம்பித்து, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக முகங்கொடுத்துவரும் அரச இராணுவ அடக்குமுறைகளினூடாக உருவாக்கப்பட்டிருக்கும் நியாயமான, தர்க்கரீதியிலான அவசியத்திலிருந்து தனிநாடு எனும் தவிர்க்கமுடியாத கோரிக்கையில் வந்து நிற்கின்றன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமது இன்னுயிரை ஈர்ந்து, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது உடைமைகளையும், வாழ்வாதாரத்தினையும் இழந்து நடத்திவரும் போராட்டம் இது. தமது சகோதரர்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காக தமது இன்னுயிரை ஈர்ந்தும், வாழ்வினை இழந்தும் அவர்கள் தியாகங்களைப் புரிந்திருக்கிறார்கள். ஆகவே, திம்புவில் நாம் அறிவிக்க விரும்புவது, தமிழ் மக்களின் தேசம் குறித்து மட்டுமே திம்புவிலோ அல்லது வேறு எங்கிலோ எம்மால் பேசமுடியும் என்பதனையும், அது தவிர்த்து வேறு எது குறித்தும் எவ்விடத்திலும், எப்பொழுதிலும் நாம் இனிமேல்ப் பேசப்போவதில்லை என்பதை வெறுப்புக்கள் இன்றியும், நிதானமாகவும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். மேலும், இலங்கை அரசு இனிமேல் எம்முடன் பேசுவதானால் எம்மால் முன்வைக்கப்பட்ட நான்கம்சக் கோரிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீர்வொன்றிற்கூடாக மட்டுமே பேசமுடியும் என்பதனையும் ஐய்யந்திரிபுற தெரிவித்துக்கொள்கிறோம். இதைத்தவிரவும் இன்னுமொரு விடயம் குறித்தும் நாம் கருத்துக்குற விரும்புகிறோம். அதனை பிறிதொரு அறிக்கையினூடாக நாம் தெரிவிப்போம்.
-
சம்பந்தர் காலமானார்
என்ன ஒரு சிரிப்பு !!!!!
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட அரசின் ஆலோசனைகள் அரசால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை நிராகரிப்பதென்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் சென்னையில் கூட்டாக முடிவெடுத்தனர். தமிழர் தரப்பில் பேச்சுக்களில் கலந்துகொண்டவர்களை இணைந்து, அரசின் ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கை ஒன்றினை வெளியிடுமாறு பாலசிங்கத்தினூடாகப் போராளிகளின் தலைவர்கள் கேட்டுக்கொண்டார்கள். சத்தியேந்ந்திரா, ஏனைய போராளிகள், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் ஆகியோர் இணைந்து ஆலோசனைகளை நிராகரிக்கும் தமது அறிக்கையினை திம்பு விடுதியில் தயாரித்துக்கொண்டிருந்த அதேவேளை பேச்சுக்கள் தோல்வியடையவிருப்பதை ரொமேஷ் பண்டாரிக்கும் அவர்கள் தெரியப்படுத்தினார்கள். ஆவணி 17 ஆம் திகதி காலை திம்புவிற்குப் பயணமான ரொமேஷ் பண்டாரி அங்கு தமிழ்த் தரப்பினரைச் சந்தித்தார். அச்சந்திப்பு சுமூகமானதாக அமையவில்லை. தமிழ்த்தரப்பினர் தமது யோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். ஆனால், தமிழர்களுக்கான தனிநாட்டிற்குப் பிரதியீடான தீர்வொன்றை முன்வைப்பது அரசாங்கத்தின் கடமையென்பதால், அரசே ஆலோசனைகளை முன்வைக்கவேண்டும் என்று தமிழ்த் தரப்பினர் வலியுறுத்தினர். இதனையடுத்து கடும் கோபம் கொண்ட பண்டாரி, தமிழ்த் தரப்பினரை உறுதியான நிலைப்பாட்டில் இருக்கமுடியாதவர்கள் என்றும், நெகிழ்ச்சித்தன்மையற்றவர்கள் என்றும் கடிந்துகொண்டார். "உங்களுடைய தேறாத கொள்கைகளைக் கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்?" என்று அவர்களை நோக்கி ஆவேசமாகக் கேட்டார் அவர். பண்டாரியின் ஆவேசமான பேச்சு நடேசன் சத்தியேந்திராவைச் சினங்கொள்ள வைத்தது. பண்டாரி பாவித்த சொற்கள் ஒரு இராஜதந்திரி பாவிக்கமுடியாதவை என்று அவர் சுட்டிக் காட்டினார். மேலும், தமிழர்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து பண்டாரி கவலைப்படவில்லை என்றும் அவரைப் பார்த்துக் கூறினார் சத்தியேந்திரா. தமிழர்களை அடிமைகளைப் போல் பாவித்தே பண்டாரி பேசுவதாகவும் அவர் மேலும் கூறினார். இதனையடுத்து தமிழர்களைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக தான் அப்படிப் பேசவில்லை என்று பண்டாரி கூறினாலும், அன்றைய நிகழ்வு தமிழர் தரப்பினருக்கும் பண்டாரிக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியிருந்தது. திம்பு அன்று அரச தரப்பினரையும் பண்டாரி தனியாகச் சந்தித்தார். ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசிய பண்டாரி, இலங்கை அரசாங்கம் முன்வைத்திருக்கும் புதிய யோசனைகள் தமிழர்களின் அபிலாஷைகளையோ, இந்தியாவின் எதிர்பார்ப்புக்களையோ பூர்த்திசெய்யப் போதுமானவை அல்ல என்று கூறியதுடன், ஆலோசனைகளை மேம்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், சென்னையில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் யோசனைகள் ஒரு படி பின்னோக்கிச் சென்றிருக்கின்றன என்று கூறி தாம் அவற்றை நிராகரிப்பதாக கூறியிருந்தனர்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பாரம்பரியத் தமிழ்க் கிராமமான திரியாயின் அழிப்பு தமிழ் மக்களை அவர்களின் பூர்வீகத் தாயகத்திலிருந்து வேரோடு பிடுங்கியெறியும் திட்டத்தின் இரண்டாம் பாகம் ஆனி 1985 இல் ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலையில் அமைந்திருக்கும் தமிழ் விவசாயக் கிராமம் திரியாய். முல்லைத்தீவு மாவட்டத்தினையும் திருகோணமலை மாவட்டத்தினையும் இணைக்கும் நிலப்பகுதியில் அமைந்திருக்கிறது இக்கிராமம். வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் இப்பூர்வீக தமிழ்ச் சைவக் கிராமத்திலிருந்து தமிழர்களை முற்றாக வெளியேற்றுவதன் மூலம் இவ்விரு மாகாணங்களுக்கும் இடையில் இருக்கும் நிலத்தொடர்பை துண்டித்துவிடலாம் என்பதே ஜெயவர்த்தன அரசாங்கத்தின் திட்டமாகும். 1985 ஆம் ஆண்டு ஆவணி 18 ஆம் திகதி இங்கிலாந்தில் இருந்துவெளியாகும் பத்திரிக்கையான சண்டே டைம்ஸில் திரியா மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அகோரம் குறித்து அதன் செய்தியாளரான சைமன் விஞ்செஸ்ட்டர் எழுதுகிறார். திருகோணமலையில் இங்கிலாந்து காலத்தின் கடற்படை முகாம் அமைந்திருந்த பகுதியிலிருந்து வடக்காக சில மைல்கள் தொலைவிலேயே திரியாய் கிராமம் அமைந்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இக்கிராமம் அமைதியாகக் காணப்பட்டதோடு, இப்பகுதியில் அமைந்திருக்கும் சந்தைக்கு உள்ளூர் விவசாயிகள் மரமுந்திரிகை உள்ளிட்ட தமது விளைச்சல்களையும், கால்நடைகளையும் கொண்டுவருவது வழமை. கிழக்கிலங்கையின் நிலப்பகுதி மிகவும் வரட்சியானதுடன், வெப்பநிலை அதிகமாகக் காணப்படும் பகுதியுமாகும். அதனால், இப்பகுதியில் அமைந்திருக்கும் விவசாய நிலங்களிலிருந்து அதிகளவு விளைச்சலினைப் பெற்றுக்கொள்ள முடியாமையினால், இப்பகுதியில் இக்கிராமத்தில் வசிக்கும் 2000 விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் ஏழ்மையானவர்ககளாகக் காணப்பட்டனர். ஆனால், எவரும் பட்டினியினால் இங்கு வாடுவதில்லை. எல்லோரும் ஏதோ ஒரு வழியில் தமது வாழ்க்கையினைக் கொண்டு நடத்துகிறார்கள். வறுமையாக இருந்தபோதும் இக்கிராம வாசிகள் அனைவருமே கெளரவத்துடனும், அமைதியுடனும் வாழ்ந்து வருபவர்கள். எப்போதாவது இருந்துவிட்டு இப்பகுதிக்கு உல்லாசப் பயணிகளை அழைத்துவரும் வாகன ஓட்டிகள் அவ்வபோது எதிர்ப்படும் கட்டாக்காலி யானைகளைக் கண்டு மிரள்வதுண்டு. ஆனால், இன்று திரியாயைப் பார்ப்பதற்கு எந்த உல்லாசப் பயணியும் வரபோவதில்லை. இன்று மட்டுமில்லாமல் இனி எப்போதுமே அவர்கள் இங்கு வரப்போவதில்லை. கடந்த ஆனி 15 ஆம் திகதியிலிருந்து உல்லாசப் பயணிகள் மட்டுமல்லாமல், இந்தப் பகுதியில் காலம் காலமாக வாழ்ந்த தமிழர்களும் இன்று இங்கு இல்லை. அவர்களின் கிராமமான திரியாய் முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறது. கிராமத்திலிருந்த ஒவ்வொரு வீடும், கடைகளும், தோட்டங்களும், வயற்காணிகளும் முற்றாக எரிக்கப்பட்டிருக்கின்றன. வயல்களில் வெட்டிக் கொல்லப்பட்ட பசுக்களின் உடல்கள் இன்னமும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கின்றன. சிலநாட்களுக்கு முன்னர்வரை இக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மாட்டு வண்டிகள், மோட்டார்சைக்கிள்கள் என்பன உடைத்துச் சேதமாக்கப்பட்டு, புழுதி வாரியிறைக்கும் வீதியோரங்களில் துருப்பிடித்துக்கொண்டிருக்கின்றன. வயது முதிர்ந்த ஓரிரு பெண்கள், நடக்கமுடியாது படுக்கைகளில் குற்றுயிராய்க் கிடக்கும் வயோதிபர்களையும் சில சிறுவர்களையும் தவிர புதன் கிழமையன்று நடந்த கொடூரத்தினை நினைவில் வைத்திருக்க அங்கு வேறு எவரும் இருக்கவில்லை. அகோர நாளான அன்று காலை ஆண்கள் வயல்களுக்கு வேலைக்குச் சென்றுவிட, வீட்டில் பெண்கள் தமது அன்றாடக் கடமைகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர். திடீரென்று வானில் இரண்டு இராணுவத்தினரின் உலங்குவானூர்திகள் வட்டமடிக்கத் தொடங்கின. திரியாய்க் கிராமத்தின் மீது தாழ்வாகப் பறந்த அவை திடீரென்று மக்கள் மீது இயந்திரத் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுடத் தொடங்கின. அச்சமும் அதிர்ச்சியுமடைந்த மக்கள் அப்பகுதியில் காணப்பட்ட குட்டையான பற்றைக்காடுகளுக்குள்ளும் அவற்றிற்கு பின்னால் காணப்பட்ட காடுகளுக்குள்ளும் உயிரைக் காத்துக்கொள்ள ஓடத் தொடங்கினர். ஆனால், அவர்கள் அவ்வாறு ஓடி ஒளிய முனையும்போது குச்சவெளியிலிருந்து கடற்கரை வீதி வழியாக இராணுவத்தினர் பஸ்களிலும், ட்ரக் வண்டிகளிலும் அப்பகுதி நோக்கி வரத் தொடங்கினர். சாதாரண நாட்களில் இப்பகுதிக்கு வரும் ஜேர்மன் நாட்டு உல்லாசப் பயணிகளை ஏற்றிச்செல்ல இந்த வீதியினை சாரதிகள் பாவிப்பதுண்டு. ஆனால், அண்மைக்காலமாக உல்லாசப் பயணிகளின் வருகையும் வற்றிப்போக, இப்பகுதியில் மிகப்பெரிய இராணுவ முகாமொன்றும் அமைக்கப்பட்டு விட்டது. முற்றான ஆயுதம் தரித்த இராணுவத்தினர் போர்க்களம் ஒன்றிற்குள் செல்வதுபோன்ற தயாரிப்புக்களுடன் பஸ்களிலிருந்து இறங்கினார்கள். அவர்கள் பலரிடம் மண்ணெண்ணை நிரம்பிய கான்களும், பற்றவைக்கும் தீ ஜோதிகளும் (Flame Throwers) காணப்பட்டன. வரிசையாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்ற இராணுவத்தினர் ஓலைகளால் வேயப்பட்ட வீட்டுக் கூரையின்மீது தாம் கொண்டுவந்த எண்ணையினை ஊற்றிப் பற்றவைத்துக்கொண்டே சென்றனர். எந்தவீடும் மிஞ்சவில்லை. வீடுகளில் கட்டிவைக்கப்பட்டிருந்த கால்நடைகளை அவிழ்த்துவிட்ட இராணுவத்தினர் அவற்றைச் சுட்டுக் கொன்றனர். பின்னர் அப்பகுதியில் காணப்பட்ட சிறிய நூலகத்திற்குச் சென்ற அவர்கள், உள்ளேயிருந்த சிறிய தொகுதிப் புத்தகங்களை வெளியே எடுத்து வந்து தீமூட்டினர். அப்பகுதியில் காணப்பட்ட வயல்களில் விவசாயிகளால் பாவிக்கப்பட்டு வந்த உழவு இயந்திரங்களை ஒன்றாக இழுத்துவந்து தீமூட்டியதுடன், அவற்றின் பெட்டிகளையும் கொழுத்தினர். திரியாய்க் காடு தமது வீடுகளும், உபகரணங்களும், கால்நடைகளும் அழிக்கப்படுவதை அருகிலிருந்த காடுகளுக்குள் இருந்து அச்சம் உடல் முழுதையும் ஆக்கிரமித்து நிற்க அவதானித்துக்கொண்டிருந்தனர் அக்கிராமத்தவர்கள். அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமது கிராமத்திலிருந்து உயிரைத் தக்கவைத்துக்கொள்ள பலர் காடுகளுக்குள் நீண்டதூரம் ஓடினர். அப்படி ஓடியவர்களில் பலரை இன்றுவரை காணவில்லை. சுமார் 2000 பேர் கொண்ட அக்கிராமத்திலிருந்து காடுகளுக்குள் உயிர்காக்க ஓடி ஒளித்தவர்களில் வெறும் நூறு பேர் மட்டுமே இராணுவப் பேய்கள் கிராமத்திலிருந்து கிளம்பிச் சென்றபின்னர் எரிந்துபோய் மீதமாய்க் கிடந்தவற்றில் எதையாவது பாதுகாக்கலாம் என்கிற நப்பாசையில் இருட்டோடு இருட்டாக கிராமத்தினுள் சென்றனர். ஆனால், அங்கு எதுவுமே மீதியாக இருக்கவில்லை. எல்லாமே எரிந்து சாம்பலாகப் போயிருந்தது. ஒரு சில நெற்சாக்குகளைத்தவிர வேறு எவையுமே தீயின் நாக்குகளில் இருந்து தப்பியிருக்கவில்லை. பகுதியாக எரிந்துபோய்க்கிடந்த வீடுகளில் ஒரு சிலவற்றில் மக்கள் தங்கக் கூடிய அளவில் சில பகுதிகள் காணப்பட்டன. ஆனால், பாடசாலையும், தபால் அலுவலகமும் முற்றாக அவர்களால் எரிக்கப்பட்டிருந்தது. கிராமத்திலிருந்த இரு கடைகளும் முற்றாகச் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அங்கிருந்த சிவபெருமானினதும் விஷ்ணுவினதும் கோயில் முற்றாக அழிக்கப்பட்டு விக்கிரங்களும் துண்டுகளாகச் சிதறடிக்கப்பட்டிருந்தன. திருகோணமலைக்கு வடக்காக அமைந்திருக்கும் கடற்கரையோரம் திரியாயில் இருந்து உயிர் தப்பக் காடுகளுக்குள் ஓடி ஒளித்த பல தமிழர்கள் முள்ளியவளையினை நடந்தே வந்தடைந்தனர், அவர்களுள் சிலர் யாழ்ப்பாணத்திற்குச் சென்றார்கள். இன்னும் சிலர் அகதிகளாக தமிழ்நாட்டிற்குச் சென்றார்கள். ஆனால், சிலர் மீண்டும் தமது பூர்வீகக் கிராமத்திற்குத் திரும்பிச் சென்றனர். 1990 ஆம் ஆண்டு இரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்தபோது திரியாயில் 1475 தமிழ்க் குடும்பங்கள் இருந்ததாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தது. ஆனால், 1990 இல் இக்கிராமம் மீண்டும் அரச இராணுவத்தால் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. இராணுவத்தினருடன் வாதிடும் சம்பந்தன் 2002 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில், யுத்த நிறுத்த அமுல்ப்படுத்தப்பட்டதையடுத்து திரியாயிலிருந்து தப்பியோடிய 25 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தலைமையில் முற்றாக அழிக்கப்பட்டிருந்த இக்கிராமத்தினைப் பார்வையிடச் சென்றனர். கிராமத்தின் வாயிலில் இயங்கிவந்த பாடசாலையான தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைந்திருந்த கடற்படை முகாமிற்கு அவர்கள் முதலில் சென்றனர். கிராமத்தினுள் சென்று பார்ப்பதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், இக்கிராமத்திலிருந்து துரத்தப்பட்ட மக்களே தமது இடங்களைப் பார்வையிட வந்திருக்கிறார்கள், ஆகவே அனுமதி தரவேண்டும் என்று சம்பந்தன் தொடர்ச்சியாக வலியுறுத்தவே, சம்பந்தனையும் இன்னும் இருவரையும் முகாமினுள் அழைத்துச் சென்ற கடற்படையினர், முகாமின் பிற்பகுதியில் காணப்பட்ட மேடான இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கிராமம் அமைந்திருந்த திசைநோக்கிப் பார்க்குமாறு கூறினர். மீதிப்பேரை அருகிலிருந்த, இன்னும் முற்றாக அழிக்கப்படாமல் விட்டு வைக்கப்பட்டிருந்த வரலாற்றுப் பெருமைமிக்க வரத விநாயகர் கோயிலில் சென்று காத்திருக்குமாறு கடற்படை பணித்தது. முகாமினுள் சென்று தமது கிராமத்தைப் பார்வையிடச் சென்றவர்களைப் பெருஞ்சோகம் பற்றிக்கொண்டது. அழிக்கப்பட்ட திரியாய்க் கிராமத்தில் பற்றைகளுக்குள் அழிந்துபோன நிலையில் காணப்படும் தமிழர்களின் வீடு ஒன்று முகாமினுள் சென்றுவிட்டு வெளியே திரும்பி வந்த சம்பந்தனும் ஏனைய இருவரும், வெளியே தமக்காகக் காத்து நின்றவர்களிடம், "திரியாய் எனும் கிராமம் முற்றாக இல்லாது அழிக்கப்பட்டிருக்கிறது, அங்கு எதுவுமே இல்லை என்று கூறினர். அங்கு எதுவுமே இல்லை, வீடுகள் இல்லை, எமது முத்துமாரி அம்மன் கோயிலுமில்லை. பிள்ளையார் கோயிலின் சிலை மட்டும் தனியே நிற்கிறது. புத்தரின் படம் ஒன்றினை பிள்ளையாரின் உருவத்தின் மீது ஒட்டி வைத்திருக்கிறார்கள். அப்பெரிய கிராமத்தில் நிற்கும் ஒரே கட்டிடம் தமிழ் மகா வித்தியாலயம் மட்டும்தான். அதுகூட, கடற்படையினர் முகாமாக ஆக்கிரமித்து வைத்திருப்பதனால்த்தான் இன்னமும் இருக்கிறது" என்று கூறினர். அழிக்கப்பட்ட தமது கிராமத்தைக் கண்ணுற்றபோது வருந்திய தமிழ் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், தான் அங்கு கண்டவற்றை விவரிக்கும்போது, மக்கள் திரும்பி அக்கிராமத்தினுள் வருவதைத் தடுப்பதற்காக அக்கிராமத்தை முற்றாக அழித்திருக்கிறர்கள் என்று கூறினார். 2000 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்ந்த பூர்வீகத் தமிழ்க் கிராமம் திட்டமிட்ட முறையில் அரசினால் முற்றாக அழிக்கப்பட்டுக் கிடக்கிறது. 2004 ஆம் ஆண்டளவில் ஒரு சில தமிழர்கள் திரியாயின் அருகில் அமைந்திருக்கும் பகுதிகளில் குடியேறியிருந்தார்கள். வேறு பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் திரியாய் மக்கள் 1985 ஆம் ஆண்டு ஆனி 18 ஆம் திகதி திம்புப் பேச்சுக்களுக்கு ஏதுவாக யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்ததில் இருந்து தமிழ்க் கிராமங்களை அழிக்கும் தனது செயற்பாடுகளை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஆனால், ஆவணி 16 ஆம் திகதி ஹெக்டர் ஜெயவர்த்தன தனது சதியினை "புதிய ஆலோசனைகள்" எனும் பெயரில் திம்புவில் முன்வைத்தபோது, தமிழ்க் கிராமங்களின் முற்றான அழிப்பு மீண்டும் ஜெயாரினால் ஆரம்பிக்கப்பட்டது. அதேநேரத்தில் தமிழ்த் தரப்பும் ஹெக்டரினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளைத் தாம் முற்றாக நிராகரிப்பதாக அறிவித்திருந்தது. அரசாங்கத்தின் புதிய ஆலோசனைகள், "புதிய போத்தலில் ஊற்றப்பட்ட பழைய கள்ளு" என்று விமர்சித்திருந்தார் அமிர்தலிங்கம். தனது கட்சியினர் 1984 ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டில் நிராகரித்த அதே ஆலோசனைகளையே அரசாங்கம் மீளவும் கொண்டுவந்து காட்டுகிறது என்றும் அவர் கூறினார். தமிழர்களை அடிபணிய வைக்கும் முகமாக மிகக் கொடூரமான வன்முறைகளை தனது இராணுவத்தினரைக் கொண்டு தமிழர்கள் மீது ஏவினார் ஜெயவர்த்தன. திம்புவில் தன்னால் மும்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வைக்க வன்முறைகளைப் பாவிப்பதென்று அவர் உறுதிபூண்டார். ஆனால், 1977 ஆம் ஆண்டில் தான் தெரிவுசெய்யப்பட்ட நாளில் இருந்தே அவர் இதனைத்தான் செய்துவருகிறார். தமிழர்களை மட்டுமல்லாமல், தன்னை எதிர்த்த சிங்களவர்களையும் வன்முறைகள் மூலம் அடிபணியவைக்க முடியும் என்று அவர் நம்பினார். https://www.oaklandinstitute.org/sites/oaklandinstitute.org/files/endless-war-web.pdf https://telibrary.com/en/thiriyai-massacre-08-06-1985/ https://www.colombotelegraph.com/index.php/june-1985-may-1986-the-final-assault-on-trincomalee-and-the-trappings-of-a-colonial-war/
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தோல்வியில் முடிவடைந்த திம்புப் பேச்சுக்கள் : வவுனியாவிலும் திருகோணமலையிலும் இருநாட்களில் பலியிடப்பட்ட 220 தமிழர்கள் http://www.tchr.net/his_riots_outcome.htm தமிழர்களையும், இந்தியாவையும் தனது "புதிய யோசனைகள்" எனும் சதித் திட்டத்தினூடாக ஹெக்டர் ஜயவர்த்தன ஏமாற்றிய நாளான 1985 ஆம் ஆண்டு ஆவணி 16 ஆம் திகதி, வவுனியா - யாழ்ப்பாணம் வீதியில் விமானப்படைக்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்றின்மீது போராளிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், கண்ணிவெடித் தாக்குதலில் ஜீப் வண்டி தப்பியதுடன், அதில் பயணம் செய்த விமானப்படையினருக்கும் சேதங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனாலும், தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதனால் கொதிப்படைந்த விமானப்படையினர் பொதுமக்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டனர். வவுனியாவிலிருந்து வடக்கே செல்லும் வழியில் பதினைந்து தமிழர்களைச் சுட்டுக் கொன்ற விமானப்படையினர் வீதியின் இரு மருங்கிலும் இருந்த தமிழர்களின் வீடுகளுக்கும், கடைகளும் தீவைத்தனர். அன்றிரவு, சுமார் 400 பேர் அடங்கிய இராணுவத்தினரின் படைப்பிரிவொன்று தமிழர்களின் கிராமங்களான இரம்பைக்குளம், தோணிக்கல், கூழைப்பிள்ளையார் குளம், கூடம்குளம், மூன்றுமுறிப்பு ஆகிய பகுதிகளுக்கு ஐம்பது வாகனங்களில் வந்திறங்கியது. அக்கிராமங்கள் முற்றாகச் சுற்றி வளைக்கப்பட்டதுடன், நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வீடுகளுக்கு வெளியே வந்தோரை கைகளை மேலே தூக்கி வருமாறு பணித்த இராணுவத்தினர், சனநடமாட்டம் அற்ற பகுதிக்கு அவர்களை இழுத்துச் சென்றனர். அக்கிராமங்களின் வீடுகளுக்குள் புகுந்த சில இராணுவத்தினர் அங்கிருந்த இளைஞர்களை அவர்களின் பெற்றோரின் முன்னிலையில் சுட்டுக் கொன்றனர். மீதிப்பேரைக் கைது செய்து , ஏனையோர் தடுத்துவைக்கப்படிருந்த ஒதுக்குப்புறமான பகுதிக்கு இழுத்து வந்தனர். "ஒரு வயதான அதிகாரி அடித்தொண்டையில் கத்தினான், "நாற்பது வயதிற்குக் குறைந்த எல்லாப் பேய்களும் எனக்கு முன்னால் வந்து வரிசையில் நில்லுங்கள். மற்றையவர்கள் நிலத்தில் இருக்கலாம்" என்று அவன் கர்ஜித்தான். எனக்கோ 52 வயது. நான் நிலத்தில் இருந்துகொண்டேன். எனது இரு மகன்களும் இராணுவத்தினர் கட்டளையிட்டதன்படி வரிசையில் சென்று நின்றுகொண்டார்கள். எனது பிள்ளைகள் உட்பட சுமார் 50 இளைஞர்களை அவர்கள் வரிசையில் நிறுத்திச் சுட்டுக் கொன்றார்கள்" என்று சர்வதேச மன்னிப்புச் சபையிடம் தனது வாக்குமூலத்தைக் கொடுத்த இரு இளைஞர்களின் தந்தையான கந்தவனம் குமரன் கூறினார். 29 வயது நிரம்பிய சிவகுமாரன் எனும் இளைஞரது மனைவியான சாந்தினி தனது வாக்குமூலத்தில் அன்றிரவு அப்பகுதியில் நடந்த அகோரமான படுகொலைகளைப்பற்றி இவ்வாறு சாட்சியமளித்தார். "அன்றிரவு எனது வீட்டிற்கு இராணுவத்தினர் வந்தபோது எனது கணவரை நான் ஒளித்திருக்கச் சொன்னேன். ஆனால், வீட்டினுள் வந்த இராணுவத்தினர் அவரைக் கண்டுவிட்டனர். அவரைக் கைகளை உயர்த்துமாறு கேட்டுக்கொண்டே நெற்றியில் சுட்டுக் கொன்றனர். அவரது தலை சிதறிப்போக, மூளைப்பகுதி நிலமெங்கும் சிந்தத் தொடங்கியது. எனது பெயரைச் சொல்லிக்கொண்டே அவர் எனது கைகளில் இறந்துபோனார்" என்று அவர் கூறினார். அப்படுகொலைகள் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றன. வவுனியாவில் மொத்தமாக 120 தமிழர்களை சிங்கள இராணுவத்தினர் இரு நாட்களில் கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் 8 சிறுவர்களும் அடங்கும், அவர்கள் எவருமே 10 வயதைக் கடந்திருக்கவில்லை. அப்பகுதியின் சர்வோதய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், அவரது மனைவியும் கொல்லப்பட்டவர்களில் அடங்கும். தாம் கொன்றவர்களில் 40 பேரின் உடல்களை இழுத்துவந்த இராணுவம் வவுனியா வைத்தியசாலையில் போட்டுவிட்டுச் சென்றது. மீதி 80 பேரின் உடல்களும் படுகொலைகள் நடந்த இடத்திலேயே கிடந்தன. தமிழர்களை வேரோடு பிடுங்கி எறிதல் இவ்விரு நாட்களிலும் தமிழர் தாயகத்தின் மற்றுமொரு பகுதியிலும் சிங்கள அரச படைகள் தமிழர்கள் மீதான படுகொலைகளைப் புரிந்திருந்தனர். திருகோணமலையில் இவ்விரு நாட்களிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 100 தமிழர்களை இராணுவம் கொன்றது. பாரம்பரிய தமிழ்க் கிராமங்களான பன்குளம், இரணைக்கேணி, சாம்பல்த்தீவு ஆகியவற்றிற்குள் புகுந்த இராணுவத்தினர் அக்கிராமங்களில் இருந்து தமிழர்கள் எவரும் வெளியேற முடியாதவாறு சுற்றிவளைத்து நூறு பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். தமது உறவினர்கள் கொல்லப்பட்டதைக் கண்ணால்க் கண்ட சாட்சிகள் தமது சாட்சியங்களை சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட பல மனிதவுரிமை அமைப்புக்களுக்கு வழங்கியிருந்தனர். சாம்பல்த் தீவில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை வரிசையில் நிற்கவைத்த இராணுவம் அருகிலிருந்து சுட்டுக் கொன்றது. பன்குளம் பகுதியில் இராணுவத்தினருடன் இணைந்துகொண்ட சிங்கள ஊர்காவல்ப் படையினர் இக்கோரத் தாண்டவத்தில் ஈடுபட்டனர். சிங்கள ஊர்காவல்ப் படை ஆனால், இத்தாக்குதல்கள் நன்கு திட்டமிட்ட வகையில், இராணுவத்தினருக்கான பாதுகாப்பு வலயம் ஒன்றைனை உருவாக்கும் நோக்கில் ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தினால் நடத்தப்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்திற்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடையில் சூனிய வலயம் ஒன்றினை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்று லலித் அதுலத் முதலி இத்தாக்குதல்கள் குறித்துப் பேசும்போது கூறினார். இத்திட்டத்தினை உருவாக்கும் ஆலோசனைகளை அக்காலத்தில் இலங்கையில் தங்கியிருந்த இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் வழங்கியிருந்தனர். "வடக்கிற்குள் பயங்கரவாதத்தை நாம் ஒடுக்கி விடுவோம்" என்று லலித் அதுலத் முதலி தொடர்ச்சியாகக் கூறிவந்தார். வவுனியாவிற்கு வடக்கே இராணுவத்தினருக்கான பாதுகாப்பு வலயம் ஒன்றினை உருவாக்கி அப்பகுதியில் தமிழர்களை நடமாட தடைசெய்தமையும், திருகோணமலை முதல் முல்லைத்தீவு வரையான கடற்பரப்பினை தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவித்ததும் வடக்கையும் கிழக்கையும் முற்றாகத் துண்டித்துவிடும் நோக்கில்த்தான் என்பது வெளிப்படையானது. நிலம் வழியாக வடக்கிலிருந்து கிழக்கிற்கு போராளிகளும், ஆயுதங்களும் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே வடக்கு மாகாணத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் இடையிலான நிலத்தொடர்பினை இராணுவப் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதன் மூலம் அரசாங்கம் முற்றாகத் துண்டித்தது. அத்துடன், கடல்வழியாக போராளிகள் இந்த மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதைத் தடுக்க கடல்வலயத் தடையினையும் அரசு கொண்டுவந்திருந்தது. இலங்கையின் மாகாணங்கள் தெற்கில் காணியற்ற சிங்கள விவசாயிகளை தமிழர் தாயகத்திலிருந்து தமிழர்களை வேறோடு பிடுங்கியெறிந்த பகுதிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பு வலயங்களில் லலித் அதுலத் முதலி குடியேற்றத் தொடங்கினார். என்னுடன் பேசும்போது குறைந்தது 200,000 சிங்களவர்களையாவது குடியேற்றுவதே தனது திட்டம் என்று ஒருமுறை கூறியிருந்தார். மேற்கின் மன்னார்க் கரையிலிருந்து முல்லைத்தீவின் கிழக்கு எல்லைவரையான பகுதியில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பு வலயத்தில் இவர்கள் குடியேற்றப்பட்டு வந்தனர். மேலும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான கரையோரக் கிராமங்களில் தமிழர்களை விரட்டிவிட்டு சிங்கள மீனவர்களை குடியேற்றவும் லலித் அதுலத் முதலி திட்டமிட்டார். பெருமளவு இயற்கை வளங்கள் நிரம்பிய இப்பகுதிகளில் தமிழர்களின் பாரம்பரிய விவசாய மற்றும் மீன்பிடிக் கிராமங்கள் தொடர்ச்சியாகக் காணப்பட்டு வந்தன. வளம் நிறைந்த இக்கிராமங்களை இராணுவ ஆக்கிரமிப்பு ஒன்றின் ஊடாகக் கைப்பற்றி சிங்களவர்களைக் குடியேற்றுவதே ஜெயவர்த்தனவினதும் லலித் அதுலத் முதலியினதும் நோக்கமாக இருந்தது. இப்பாரம்பரிய தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழர்களை வேறோடு பிடுங்கியெறியும் திட்டம் லலித் அதுலத் முதலியினால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன் இந்த நடவடிக்கைகளும் அவரால் முடுக்கிவிடப்பட்டன.கென்ட் மற்றும் டொலர் சிங்களக் குடியேற்றப் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்களையடுத்து, 1984 ஆம் ஆண்டின் இறுதியிலும், 1985 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் இம்முயற்சிகளை லலித் அதுலத் முதலி தீவிரப்படுத்தினார். இக்காலப்பகுதியில் தமிழர்கள் முற்றாக அடித்து விரட்டப்பட்ட கிராமங்களாவன : கொக்கிளாய், கருநாற்றுக்கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, கென்ட் - டொலர் பண்ணைகள், ஆண்டான்குளம், கனுக்கேணி, உந்தராயன்குளம், உதங்கை, ஒதியாமலை, பெரியகுளம், தண்டுவன், குமுழமுனை கிழக்கு மற்றும் மேற்கு, தண்ணியூற்று, முள்ளியவளை, தண்ணிமுறிப்பு, செம்மலை மற்றும் அளம்பில்.
-
இலங்கை வரும் இந்திய பிரதமர்
வாறது தமிழனுக்கு அடுத்த ஆப்பைச் சொருக. அதனால இனி அடிக்க மாட்டாங்கள். 2005 இல இருந்து இண்டைக்கு மட்டும் இலங்கையின்ர உற்ற நண்பன் இந்தியாதானெண்டு சிங்களத்துக்குத் தெரியும்.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
தமது உணர்வுகளை விளங்கிக்கொள்ளாது, ஏற்றுக்கொள்ளாது, குடும்பத்தில் உன்னை ஒருவனாக அல்லது ஒருத்தியாக எம்மால் பார்க்கமுடியாது என்று பெற்றோரும், உறவினர்களும் வெறுத்து ஒதுக்கும் நிலையில் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுவரும் இளைய சமுதாயம் குறித்து நாம் அனைவரும் அக்கறை கொள்ளும் காலம் விரைந்து உருவாகி வருகிறது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இரண்டாம் கட்டப் பேச்சுக்களில் இருந்து தமிழர்தரப்பை வெளியேற்ற புதிய ஆலோசனைகள் எனும்பெயரில் தந்திரங்களை முன்வைத்த இலங்கை அரசு தமிழ்ப் பிரதிநிதிகளின் இணைந்த அறிக்கைக்குப் பதிலளித்த ஹெக்டர் பின்வரும் விடயங்களைக் கூறினார். 1. இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் இலங்கை அரசின் பேச்சுவார்த்தைக்குழு பிரதிநிதித்துவம் செய்கிறது. இலங்கையின் அமைச்சரவையில்க் கூட தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் அமைச்சர்கள் அவர்களின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். 2. இங்கு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் தமிழ் அமைப்பினர் இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களையும் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கோருகிறார்கள். ஆனால், யதார்த்தத்தில் இலங்கையரசாங்கமும் தமிழர்களை இங்கே பிரதிநிதித்துவம் செய்கிறது. இங்கு பிரசன்னமாகி இருக்கும் தமிழ் அமைப்பினர் தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கோருவதை எம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. அதை விடவும், இலங்கையர்களால் நன்கு அறியப்பட்ட தமிழ் அரசியட்கட்சியான தமிழ்க் காங்கிரஸ் இங்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை. மேலும், சில ஆயுத அமைப்புக்களும் இப்பேச்சுக்களில் கலந்துகொள்ளவில்லை. 3. தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் என்று அடையாளம் காணப்பட்டவற்றைத் தீர்த்துக்கொள்வதற்கான பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு இங்கு பிரசன்னமாகியிருக்கும் தமிழ் மக்களின் ஒரு பகுதியினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் குழு போதுமானது என்று நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அதன் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தின் பேச்சுக்குழு இப்பேச்சுக்களின் பிரசன்னமாகியிருக்கின்றது. தமிழர் தரப்புப் பிரதிநிதிகளின் சட்டபூர்வத்தன்மை குறித்த ஹெக்டரின் விளக்கத்தினால் இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் அப்போதைக்குத் தோல்வியடைவதைத் தடுக்க உதவியது. அத்துடன், இலங்கை அரச பிரதிநிதிகள் தமது புதிய யோசனைகள் முன்வைக்கவும் இது சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது. உப தேசிய அலகுகளுக்கான கட்டமைப்பு எனும் பெயரில் இலங்கை அரசு தனது புதிய ஆலோசனைகளை முன்வைத்தது. அரசின் புதிய ஆலோசனைகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அதன் முதலாவது பிரிவு, மக்கள் தமது பிரச்சினைகளையும், தேவைகளையும் கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளைத் தாமே உய்த்தறிந்துகொண்டு அவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரங்களை உப தேசிய அலகுகள் ஊடாக பெற்றுக்கொடுப்பது. இந்த உப தேசிய அலகுகள் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையினை முற்றாக ஏற்றுக்கொண்டே நடைமுறைப்படுத்தப்படும். சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கும், சட்டவாக்கல் அதிகாரமுள்ள பாராளுமன்றத்திற்கும் இந்த உப தேசிய அலகுகள் முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஆலோசனைகளின் இரண்டாம் பிரிவு, உப தேசிய அலகுகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே இயங்கமுடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறான உப தேசிய அலகுகள் மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்கும், தேவையேற்படின் நாலாவது அடுக்கும் சேர்க்கப்படலாம். அந்த மூன்று உப தேசிய அலகுகளுமாவன : மாகாண சபைகள், மாவட்ட சபைகள், பிரதேச சபைகள் என்பனவாகும். ஒவ்வொரு மாகாணத்திற்கென்று மாகாணசபைகளும், ஒவ்வொரு மாவட்டத்திற்குமென்று மாவட்ட சபைகளும், ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிற்குமென்று பிரதேச சபைகளும் உருவாக்கப்படும். தேவையேற்படின் பிரதேசங்களுக்கான கூட்டமைப்பும் உருவாக்கப்படலாம். ஆனால், இதன்படி எந்தவொரு மாகாணமும் இன்னொரு மாகாணத்துடன் இணைக்கப்படுதல் முடியாது. தற்போது நடைமுறையிலிருக்கும் மாகாணங்களின் எல்லைகளைக்குள்ளேயே உத்தேச மாகாண சபைகளும் அடங்கியிருக்கும். ஒவ்வொரு மாகாணசபைக்கும் பிரதான நிறைவேற்று அதிகாரியொருவர் நியமிக்கப்படுவார். அந்த அதிகாரி பாராளுமன்ற உறுப்பினராகக் காணப்படுமிடத்து அவர் முதலமைச்சர் என்று அழைக்கப்படுவதுடன், பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதவிடத்து பொருத்தமான இன்னொரு பெயர் கொண்டு அவர் அழைக்கப்படுவார். ஒவ்வொரு மாகாணசபைக்குமான பிரதான நிறைவேற்று அதிகாரியை, அம்மாகாணங்களின் உறுப்பினர்களின் ஆதரவோடு ஜனாதிபதியே நியமிப்பார். தனது நிறைவேற்று அதிகாரம் கொண்ட மந்திரிகள் சபையினை முதலமைச்சர் அந்த மாகாணசபை உறுப்பினர்களிடமிருந்து தெரிவுசெய்துகொள்வார். பிரதம நிறைவேற்று அதிகாரிக்கான அதிகாரங்கள் பாராளுமன்றத்தினாலேயே அவருக்கு வழங்கப்படும். முதலமைச்சர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்குமிடத்து அவருக்கான நிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதியே நேரடியாக வழங்குவார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இல்லதவிடத்து, ஜனாதிபதியினால் சில அதிகாரங்கள பகிர்ந்தளிக்கப்படும். மாகாண நிறைவேற்று மந்திரிசபைக்கென்று அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது. தமக்கென்று தனியான நிறைவேற்று அதிகாரம் கொண்ட கட்டமைப்பினை எந்தவொரு மாகாண சபையும் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு மாகாணத்தின் எல்லைகளுக்குள், குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பில், தமக்கு வழங்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட சட்டமியற்றும் அதிகாரங்களைக் கொண்டு, அந்த மாகாணசபை சில சட்டங்களை இயற்ற முடியும். ஆனால், இவ்வாறு இயற்றப்படும் உப சட்டங்களை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ ஜனாதிபதிக்கு பூரண அதிகாரம் இருக்கும். மேலும், மாகாண சபை ஒன்றி இயற்றும் உப சட்டங்கள் முதலில் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படுதல் அவசியம். எவ்வாறான விடயங்கள் தொடர்பாக மாகாண சபைகள் உப சட்டங்களை உருவாக்கலாம் என்பது தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். அரசின் அடுத்த கட்ட நிர்வாக அலகாக மாவட்ட சபைகள் இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திற்குமான பிரதம நிறைவேற்று அதிகாரி அந்தந்த மாவட்டத்திற்குப் பொறுப்பாக இருப்பார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்குமிடத்து அவர் மாவட்ட அமைச்சர் என்று அழைக்கப்படுவார். அவ்வாறு இல்லாதவிடத்து, அவர் அமைச்சர் என்று அழைக்கப்படுவார். மாவட்ட அமைச்சருக்கான நிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதியே இதுக்குவார். சாதாரண அமைச்சருக்கான அதிகாரங்கள் நேரடியாகவன்றி, பகிர்ந்தளிப்பு முறையில் வழங்கப்படும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி மாவட்ட சபைகள் தமது எல்லைக்குற்பட்ட விடயங்கள் தொடர்பாக உப சட்டங்களை இயற்றவியலும். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்பொழுது, இந்த ஆலோசனைகள் தமிழரைப் பொறுத்தவரையில் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடியவையாகத் தோன்றினாலும்கூட, அவை உண்மையிலேயே தமிழரின் பிரச்சினைகளைத் தீர்க்க எந்தவிதத்திலும் போதுமானவை அல்ல என்பது தெரியவரும். இந்த ஆலோசனைகளை ஆளமாகப் படிக்கும் எவருக்கும், அரசாங்கம் வழங்க ஆயத்தமாக இருக்கும் அதிகார அலகு மாவட்ட சபையே அன்றி மாகாண சபை அல்ல என்பது தெளிவாகத் தெரியும். மாவட்ட சபைகள் தாம் விரும்பினால் ஒன்றுடன் ஒன்று இணைந்து மாகாணசபையினை உருவாக்க முடியும் அல்லது தனித்து இயங்கமுடியும். மாவட்ட சபைகளுக்கான உறுப்பினர்களும் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களும், அந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட சபையில் உறுப்பினர்களாக இருப்பர். மேலும், இந்த மாவட்ட சபைகள் தனித்து இயங்குவதா அல்லது இன்னொரு மாவட்ட சபையினை இணைத்து மாகாண அளவில் இயங்குவதா என்பது குறித்து முடிவெடுக்க முடியும். புதிய ஆலோசனைகளில் முன்வைக்கப்பட்ட "மாவட்ட சபையாக தனித்தோ அல்லது இணைந்து மாகாண அளவிலோ இயங்க முடியும்" எனும் சரத்தினூடாக இதனை அரசு புகுத்தியிருந்தது. "மாவட்ட சபையாகத் தனித்து இயங்குதல் அல்லது இணைந்து மாகாண அளவில் இயங்குதல்" எனும் சரத்தின் கீழ் பிரிவு 10 முதல் 12 வரையான மூன்று பிரிவுகளை புதிய ஆலோசனைகள் கொண்டிருந்தன. பிரிவு 10 மாகாண சபைகளுக்கான அரசியலமைப்புக் குறித்துப் பேசுகிறது. தற்போது இருக்கும் மாகாணங்களில் இயங்கும் மாவட்ட சபைகள் குறித்தும், இயங்காநிலையில் இருக்கும் மாவட்ட சபைகள் குறித்தும் இந்தப் பிரிவு பேசுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மாவட்ட சபைகள் இயங்கியே வருகின்றன. மாவட்ட சபைகள் இயங்கும் மாகாணங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு பல மாவட்ட சபைகள் இணைந்து மாகாண அளவில் இயங்க முடியும். அவ்வாறானதொரு முடிவு எடுக்கப்படாத பட்சத்தில் மாவட்ட சபைகள் தனித்தனியாக இயங்கும். மாவட்டங்கள் இணைந்து மாகாண சபைகள் உருவாகுமிடத்து அம்மாகாணத்திற்குள் இயங்கும் மாவட்ட சபைகளின் இயக்கம் முடிவிற்கு வரும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாவட்ட சபைகள் இயங்கியிருக்கவில்லை. ஆகவே, இந்த மாகாணங்களில் இருக்கும் மாவட்ட சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு, அவை உருவாக்கப்படுதல் அவசியம். பின்னர் அந்த மாகாணத்தில் இருக்கும் மாவட்டசபைகளில் மூன்றில் இரண்டு விரும்புமிடத்து, மிகக் குறைந்த பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படும் பிரேரணை ஒன்றினூடாக தம்மை இணைத்து ஒரு மாகாணசபையாக உருவாகிக்கொள்ளுதல் முடியும். அவ்வாறு இணையும் முடிவு ஒன்று எடுக்கப்படாதவிடத்து, மாவட்ட சபைகள் தனித்தனியாக இயங்க முடியும். புதிய ஆலோசனைகளின் பிரிவு 11 மாகாணசபைகள் மற்றும் மாவட்ட சபைகளுக்கான உறுப்பினர்கள் பற்றிப் பேசுகிறது. ஒரு மாகாணத்திற்குள் அமைந்திருக்கும் மாவட்டங்களில் இருந்து தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களும், அம்மாகாணங்களிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டவர்களும் மாகாண சபை உறுப்பினர்களாக இருப்பர். அவ்வவறே, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களும், அந்த மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டவர்களும் மாவட்ட சபையில் உறுப்பினர்களாக இருப்பர். மாகாண சபைகள் எனும் அமைப்புத் தோற்கடிக்கப்படுவதை உறுதிப்படுத்தவே புதிய ஆலோசனைகளின் பிரிவு 12 சேர்க்கப்பட்டிருந்தது. ஒரு மாகாணத்தில் இயங்கும் மூன்றில் ஒரு மாவட்ட சபைகள் தாம் விரும்பினால் அந்த மாகாணசபையிலிருந்து விலகி தனித்து மாவட்ட சபையாக இயங்கமுடியும் என்பதே அந்தச் சரத்து. அரசு முன்வைத்த புதிய யோசனைகளைப் படித்துவிட்டு தம்மால் சிரிப்பதைத் தவிர வேறு எதனையும் அப்போது செய்ய முடியாது போய்விட்டது என்று பேச்சுக்களில் பங்கெடுத்த இரு தமிழ்ப் பிரதிநிதிகள் என்னிடம் தெரிவித்தனர். "சிலரோ கொதித்துப்போய் இருந்தனர், சத்தியேந்திரா அவர்களில் ஒருவர்" என்று ஒரு தமிழ்ப் பிரதிநிதி என்னிடம் கூறினார். தமிழர் தரப்பு பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்வதனை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே புதிய ஆலோசனைகளை அரசு முன்வைத்திருந்தது. தமிழர் தரப்பிற்குத் தேவைப்பட்டதெல்லாம் தகுந்த சூழ்நிலை மட்டும்தான். "பிரச்சினை என்னவென்றால், இந்தியாவைப் புண்படுத்தா வண்ணம் நாம் பேச்சுக்களில் இருந்து விலக வேண்டும்" என்று பிரபாகரன் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் பேசும்போது தெரிவித்தார். தமிழர் தரப்பு எதிர்பார்த்திருந்த சரியான சூழ்நிலையினை அன்றிரவே இலங்கை இராணுவம் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது . ஆவணி 16 ஆம் திகதி வவுனியாவிலும் திருகோணமலையிலும் சிங்கள இராணுவம் ஆடிய படுகொலைகள் தமிழர்களை வெகுவாகக் கோபங்கொள்ளச் செய்திருந்தது.
-
இலங்கை தமிழருக்கு தமிழீழம் - இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை
இந்தியா தமிழீழம் என்பதற்கு மிகவும் எதிரானது. இன்னும் சொல்லப்போனால் சமஷ்ட்டி, ஒன்றுபட்ட நாட்டிற்குள் அதிகாரம் மிக்க பிராந்தியங்கள் ஆகியவற்றிற்கும் கூட இந்தியா எதிரானது. ஆகவே, மதுரை ஆதீனம் தன் பங்கிற்கு இதனைச் சொல்லிவிட்டுப் போகலாம், மோடிக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்பது. அண்மையில்க் கூட இலங்கை அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்த இல்லாத புலிகள் மீதான தடையினை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்துக் காட்டியிருக்கிறார் அவர். தமிழர்களுக்கு ஈழத்தை எடுத்துக் கொடுப்பதில் உண்மையான அக்கறையுடன் செயற்ப்பட்டவர்கள் புலிகள் மட்டும்தான். வேறு எவரிடமும் நாம் வைக்கும் கோரிக்கைகள் செவிடன் காதில் பேசுவதற்கு ஒப்பானது.
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
தமிழருக்கெதிரான அடக்குமுறையினை அரசமயப்படுத்தியவர்களில் முதன்மையானவர் ஜெயவர்த்தன. 1983 ஆம் ஆண்டு இனக்கொலையே இதற்குச் சாட்சி. அவரால் உருவாக்கப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி எனும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியும் ஒற்றையாட்சி முறைமையுமே தமிழர்களின் அபிலாஷைகளுக்கு பிரதான முட்டுக்கட்டையாக இருந்து இனக்கொலையினை நடத்திவருபவை. இப்பதவியில் அமர்ந்த அனைத்துச் சிங்கள ஜனாதிபதிகளுமே தமிழரின் இனவழிப்பில் தமது பங்கினைத் தவறாமல்ச் செய்து வந்தவர்கள் தான். ஆகவே, இவ்வாறான இன்னுமொருவரை பதவியில் அமர்த்துவதற்குத் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டவேண்டிய தேவை இல்லையென்பதை சாதாரணமாகச் சிந்திக்கும் எவரும் இலகுவாக உணர்ந்துகொள்வார்கள். ஆகவே, இதற்கான தமது எதிர்ப்பினைக் காட்டவே தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் தேவை என்பதையும் அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால், அப்படியா எல்லோரும் இருக்கிறோம், இல்லையே?! சிலருக்கு வெளிப்படையாகத் தெரிவதையே புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமலிருக்கிறதே, என்ன செய்வது ?!
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால், இரு பெண்கள் இணைந்தும் குழந்தையை உருவாக்க முடியும் என்றும், ஆண்களும் கருத்தரிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இவை இயற்கைக்கு முரணானவையா? ஆம், ஏனென்றால் இயற்கையாக இவை நடக்கச் சாத்தியமில்லை இப்போதுவரைக்கும். ஆனால், இருவர் உறவில் இணைவதற்கு உடலுறவு மட்டுமே இருந்தால்ப் போதுமானதா? இதைத்தவிரவும் வேறு என்ன விடயங்கள் இருவர் இணையும் உறவில் இருக்கின்றன? புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பிடித்தவிடயங்களில் ஈடுபாடு, ஆறுதல், துணை....இப்படிப் பல விடயங்கள் இருக்கின்றனவே? ஆணும் பெண்ணும் இருக்கும் உறவில் இப்பிரச்சினைகள் எவ்வளவு தூரத்திற்குத் தீர்க்கப்பட்டிருக்கின்றன? எத்தனை ஆண்கள் அல்லது பெண்கள் தமது எதிர்ப்பால் துணையினைக் கைவிட்டு விட்டு ஓரினத் துணையினைத் தேடியிருக்கின்றனர்? ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைப்பதற்கு உணர்வதற்கு அவரில் காணப்படும் ஹோர்மோன்களே காரணமாவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எவருமே வேண்டுமென்று தமது பிறப்பில் இருந்த பாலினை விட்டு எதிர்ப்பாலிற்கு மாறுவதில்லை என்று நினைக்கிறேன். அது இயற்கையாக அவர்களில் நடக்கும் உளவியல், ஹோர்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றது என்றுதான் தான் நினைக்கிறேன். பாப்பாணடவர் ஓரினச் சேர்க்கையாளர் குறித்து அவதூறாகப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தனது சபையில் இவர்கள் சேர்ந்துவிட்டால், தாம் இற்றைவரை போதித்துவரும் ஓரினச் சேர்க்கைக்கெதிரான பிரச்சாரத்தை அது பாதித்துவிடும் என்று அவர் பயந்திருக்கலாம். ஆனால், ஓரினச் சேர்க்கையென்பது கிறிஸ்த்துவிற்கு முன்னைய காலத்திலிருந்து இருப்பதாக வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதைவிட, கத்தோலிக்க மதகுருக்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், ஓரினச் சேர்க்கை போன்றவை பல நூற்றாண்டுகளாக பழக்கத்தில் இருப்பவை. அவைகுறித்துப் பேசுவதைத் தவிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பாப்பாணடவர் பேசுவது தவறு. முதலில் உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசட்டும். பின்னர் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து கருத்துக் கூறலாம். ஒருவர் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இவை இரண்டிற்கு இடையில் இன்னொரு இனமாகவோ நினைப்பதும், உணர்வதும், அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வதும் அவரது விருப்பம். இதில் மற்றையவர்கள் கருத்துக் கூறவோ, கட்டுப்பாடுகள் விதிக்கவோ முடியாது.
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
சற்று விளக்கமாக நான் எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன். சரி, இதுதான் நான் சொல்ல வந்தது. இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் வரவேண்டும் என்று ஒருபோதுமே தமிழர்கள் எண்ணியதுமில்லை, விரும்பியதுமில்லை, அது அவர்களின் அரசியல் அபிலாஷையுமல்ல. இன்னும் ஒரு வழியில் கூறுவதானால், தமிழ் பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டது. தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவது இத்தேர்தலில் வெல்வதற்காக அல்ல, மாறாக மக்களின் மனங்களிலிருந்து மிகவும் சூட்சுமமான முறையில் மறக்கடிக்கப்பட்டுவரும் அவர்களது அபிலாஷைகளை, கோரிக்கைகளை இத்தேர்தலின் மூலம் உயிர்ப்பித்து, மீளவும் முன்னிற்குக் கொண்டுவருவது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை மீளவும் உணர்த்த இத்தேர்தலினைக் களமாகப் பாவிப்பதே உண்மையான நோக்கம். ஆகவேதான் தமிழ்ப் பொதுவேட்பாளர் தேர்தலில் தோற்கப்போகிறார் என்று அஞ்சுவோர், ஏளனம் செய்வோர் அரசியல்த் தெளிவில்லாமல் இதனைச் செய்கிறார்கள் என்று எழுதினேன். உங்களைத் தனிப்பட்ட ரீதியில் இது தாக்கியிருந்தால் அதற்காக எனது வருத்தத்தினை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
இரண்டாவது, தமிழர்களின் வாக்குகளை மூட்டையாக அள்ளிக்கொண்டுபோய் ரணிலின் காலடியிலோ, சரத் பொன்சேக்காவின் காலடியிலோ, சஜித்தின் காலடியிலோ, சந்திரிக்காவின் காலடியிலோ கொட்டி இதுவரையில் தமிழரசுக் கட்சியோ, தமிழ்க் கூட்டமைப்போ, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ கண்ட பலன் என்ன, தமிழர்களுக்கு இவற்றால் ஆன பயன் என்ன? இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழர்களின் வாக்குகளை அள்ளிக்கொண்டுபோய் அரசியல் வியாபாரம் செய்வதாக உத்தேசம்? தமிழ்ப் பொதுவேட்பாளரை ஏன் நிறுத்தவேண்டும் என்பதற்கான எனது நிலைப்பாடு இதுதான். 1. சிங்கள பெளத்த ஜனாதிபதிகளில் தமிழ் மக்கள் முற்றாக நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதைச் சொல்வதற்கு. 2. சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்திலிருந்து தமிழினம் பட்டுவரும் அவலங்களும், அவர்கள் மீதான அடக்குமுறைகளும் இன்றும் அப்படியே இருக்கின்றது என்பதைச் சொல்வதற்கு (தேர்தல்ப் பிரச்சாரங்களில் இவை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதும், தேர்தலுக்கான சர்வதேச ஊடகங்களின் செய்திகளில் இச்செய்தியும் சொல்லப்படுவது அவசியம்). 3. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கமைய தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வழங்கிய ஆணையினை மீளவும் சிங்கள தேசத்திற்கும், சிங்கள அரசியல்த் தலைமைக்கும் நினைவுபடுத்துவதற்கு ( யுத்தம் முடிவடைந்துவிட்டதால் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முடிவிற்கு வந்துவிட்டன என்று சர்வதேசத்தில் செய்யப்பட்டு வரும் சிங்களத்தின் பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டியது அவசியம்). 4. 2009 இற்குப் பின்னர் தமிழ் அரசியலில் மிகவும் சூட்சுமமான முறையில் செய்யப்பட்டுவரும் தேசிய நீக்கம் என்பதனை முறியடித்து, தமிழ் மக்கள் இன்னமும் தேசியத்தின்பால் நிற்கிறார்கள் என்பதனை சிங்களத் தலைமைகளுக்கும், சர்வதேசத்திற்கும் காட்டுவதற்கு (தேசிய நீக்கம் என்பதும் புலிநீக்கம் என்பதும் சுமந்திரன் தலைமையில் மிகவும் இலாவகமாக தற்போது செய்யப்பட்டு வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இவரது உள்ளடக்கமே இதனைச் செய்யத்தான் என்பது எனது கணிப்பு). 5. இன்று தமிழர்கள் சார்பாக அரசியலில் ஈடுபடுவோர் தமிழரின் நலன்களில் அக்கறையற்று இருக்கிறார்கள், தமிழரின் வாக்குகள் அவர்களைப்பொறுத்தவரை தமது சொந்த நலன்களை, பாராளுமன்றச் சலுகைகளை அடைந்துகொள்வதற்காக மட்டும்தான், ஆகவே அவர்களில் எமக்கு நம்பிக்கையில்லை, அவர்கள் கைகாட்டும் சிங்கள ஜனாதிபதியொருவருக்கு நாம் வாக்களிக்கப்போவதில்லை என்பதைக் காட்டுவதற்கு. 6. இலங்கையின் ஜனாதிபதியாக வரப்போகும் சிங்களவர் ஒருவரைத் தெரிவுசெய்வதில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை தமிழர்கள் சர்வதேசத்திற்கும், சிங்களத்திற்கும் உரத்துச் சொல்வதற்கு. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலினை தமிழரசுக் கட்சி எவ்வாறு தனிநாட்டிற்கான தமிழ் மக்களின் ஆணையாகப் பாவித்து அமோக வெற்றியிட்டீயதோ, அதுபோன்றே தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதித் தேர்தலை அதே தமிழ் மக்களின் ஆணையினைப் புதிப்பிக்க, தமிழ் மக்கள் இன்னும் அதே அபிலாஷைகளுடன் தான் இருக்கிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்க, சிங்கள தேசத்தின் ஜனாதிபதிகளில் எமக்கு நம்பிக்கையில்லை என்பதைத் தெரிவிக்க, அவர்களுக்கு கூஜா தூக்கும் தமிழ் அரசியல் வியாபாரிகளில் எமக்கு நம்பிக்கையில்லை என்பதைக் காட்டப் பாவிக்க வேண்டும். இதற்காக நாம் செய்யவேண்டியதெல்லாம் சுமந்திரன் வகையறாக்களின் கூச்சல்களை அப்படியே குப்பையில் தூரக் கொட்டிவிட்டு, தமிழ்ப் பொதுவேட்பாளரின் அவசியம் குறித்து தமிழ் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தத் தொடர்ந்து செயற்படுவதுதான். இறுதியாக சுமந்திரனிடம் ஒரு கேள்வி : உங்களைத் தமிழர்களோ, அல்லது அவர்களில் ஒரு பகுதியினரோ துரோகி என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று என்று கூறியிருந்தீர்கள். நீங்கள் அப்படிக் கூறியதன் காரணம் என்ன? (தமிழரின் நலன்களைக் காத்துக்கொள்ள நீங்கள் செய்யும் தியாகங்களுக்காக அவர்கள் உங்களைத் துரோகியாக்கப்போவதில்லை என்பது உங்களுக்குத் தெரியாதது அல்லவே). அப்படியானால் எதற்காக இந்தத் துரோகிப் பட்டம் தொடர்பான அச்சம் உங்களுக்கு வருகிறது (இதை நமட்டுச் சிரிப்புடன், "எனக்கு உதுக்கெல்லாம் பயமில்லை. எத்தினை பாத்தாச்சு" என்று சவடால் விட்டாலும்)?
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
இங்கே பலருக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த அடிப்படை அறிவே இல்லையென்பது அவர்கள் இங்கு எழுதும் கருத்துக்களில் அவ்வப்போது தெரிகிறது. முதலாவதாக, இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் வரவேண்டும் என்பது இலங்கையின் தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எப்போதாவது ஒரு கோரிக்கையாக, அபிலாஷையாக இருந்திருக்கிறதா? இல்லை. அப்படியிருக்க ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவர் நிற்பது தோல்வியைத்தான் தரும் என்று ஆளாளுக்கு கட்டியம் கூறுவது ஏன்? அப்படியானால் உங்களைப்பொறுத்தவரை தமிழருக்கு இருக்கும் பிரச்சினையெல்லாம் தம்மில் ஒருவரை ஜனாதிபதியாக்குவதுதான் என்று நீங்கள் நம்புவது போலல்லவா இருக்கிறது? ஆகவே, முதலில் இந்த மாயையில் இருந்து வெளியே வாருங்கள். இலங்கை என்பது சிங்கள பெளத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு. ஆகவே சிறுபான்மையினமான தமிழரில் இருந்து ஒருவர் ஜனாதிபதியாவது மிகவும் கடிணமானது, அது தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளில் ஒன்றும் அல்ல. இந்தத் தெளிவு இருந்தால் பொதுவேட்பாளர் குறித்த உங்களின் சர்ச்சைகளில் 50 வீதம் தெளிவாகி விடும்.
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானித்தினை 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் ஆணையாக முன்வைத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றது. தமிழ் மக்களின் "ஆணை" என்று பேசும்போது, அது 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவே தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த மக்கள் ஆணையின் அடிப்படையிலேயே தனிநாடு, சுயநிர்ணய உரிமை, இறைமை, பூர்வீக தாயகம் ஆகிய விடயங்களை முன்வைத்து அரசியல் ரீதியிலும், ஆயுத ரீதியிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆகவே, இந்த ஆணை என்பது எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று. ஆகவே, பொதுவேட்பாளர் இந்த ஆணையினைத்தான் மீளவும் புதுப்பித்து நினைவுபடுத்த தேர்தலில் நிட்கிறார் என்றால் அது எவ்வாறு தவறாக இருக்க முடியும்? சுமந்திரன் கூறும் "எமக்கு மட்டுமே தந்த ஆணை" என்பதற்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான மக்கள் ஆணை என்பதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறதா? இல்லையென்றால், தமிழ்ப் பொதுவேட்பாளரை சுமந்திரன் ஏன் எதிர்க்க வேண்டும்? நீங்கள் செய்யவேண்டியதை, ஆனால் செய்ய மறுப்பதை சிவில் சமூகம் செய்கிறது, அவ்வளவுதான். ஆனால், பிரச்சினை அதுவல்ல. சுமந்திரனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆணை ரணிலை ஜனாதிபதியாக்குவது. அது மக்களால் அவருக்கு வழங்கப்பட்ட ஆணை அல்ல. அது, ரணிலால் "தமிழரசுக் கட்சிக்கு இடப்பட்ட ஆணை". ஆகவே, அதனை அவரும், அவரது கட்சியினர் மட்டுமே செய்யமுடியும். வேறு எவரும் அதில் பங்கு கேட்க முடியாது. அது தமிழ் மக்களாக இருந்தாலென்ன, சிவில் சமூக அமைப்புக்களாக இருந்தாலென்ன.
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
சுமந்திரனின் பேச்சிலிருந்து .......1951 ஆம் ஆண்டு சமஷ்ட்டிக் கட்சியின் தீர்மானத்தில் தமிழினத்தை தனியான கலாசாரமும், மொழியும், பூர்வீக தாயகமும் கொண்ட இனம் என்று கண்டுகொண்டிருந்தது. தமிழினம் சுயநிர்ணய உரிமை கொண்ட இனம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. சிங்களக் கட்சிகளும் தமிழ் மக்கள் சமஷ்ட்டியைத்தான் வேண்டுகிறார்கள் என்பதை அறிந்தே இருக்கின்றன, அதனால் அதுகுறித்துக் கேள்வி கேட்பதில்லை. சமஷ்ட்டிக்குக் குறைவான எந்த தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 72 ஆம் ஆண்டு இறையாண்மை கொண்ட தமிழினம் தனியாகப் பிரிந்து செல்ல முடியும் என்றபோதும், அதனைச் செய்யாமல் சமத்துவ சமஷ்ட்டி முறையில் ஏனைய இனங்களுடனும் வாழ விரும்புகின்றனர். 1977 ஆம் ஆண்டு தனிநாடு கோரி முன்வைத்த கோரிக்கையினை மக்கள் ஏற்றுக்கொண்டு ஆணை வழங்கினர். இவ்வளவும் தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணை. சரி, இதற்குள் ரணிலை ஜனாதிபதியாக்குங்கள் என்றோ அல்லது சிங்களத் தலைவர் ஒருவரை ஜனாதிபதியாக்குங்கள் என்றோ கூறப்பட்டிருக்கிறதா? பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவது தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வழங்கிய ஆணையினை நிராகரிக்க வேண்டும் என்கிற நோக்கிலா? இல்லையே. தமிழ் மக்கள் அன்று வழங்கிய ஆதே ஆணையினை மீளவும் நிரூபிக்கத்தானே? மீளவும் நினைவுபடுத்தி தமிழ் மக்களை ஒன்றிணைக்கத்தானே? மக்கள் ஆணையினை மீளவும் புதுப்பிப்பது எப்படி அதே ஆணையினை நிராகரிப்பதாக மாறும்? இந்த ஆணையினை மீளவும் நினைவுபடுத்துவது யாருக்குத் தர்ம சங்கடமாக இருக்கப்போகிறது? தமிழர்கள் நிச்சயம் இதனை வரவேற்கத்தான் போகிறார்கள். ஆகவே, இதனை நினைவுபடுத்துவதால் கலவரப்படப்போவது சிங்கள தலைமைகள் தானே? அவர்களுக்குக் கூஜா தூக்கும் அடிவருடிகள் தானே? சுமந்திரன் இந்த வாக்கெடுப்பு சமஷ்ட்டிக்கான வாக்கெடுப்பு இல்லையென்கிறார். ஆனால், 1977 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தல் மட்டும் தனிநாட்டிற்கான வாக்கெடுப்பா? இல்லையே. அத்தேர்தலை தமது தனிநாட்டிற்கான ஆணையாகத்தானே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாவித்து வெற்றி பெற்றது? அபோது மட்டும் அது சர்வஜன வாக்கெடுப்பு, இப்போது அது ஜனாதிபதித் தேர்தலா? யாரை ஏமாற்றுகிறீர்? ரணிலை ஆட்சிக்குக் கொண்டுவரமுடியாவிட்டால் தமிழரின் இருப்பு முற்றாக அழிந்துவிடுமாம். இறைமையும், சுயநிர்ணய உரிமையும் இல்லாது போய்விடுமாம். இப்போதுமட்டும் உங்களுக்கு இறைமையும், சுயநிர்ணய உரிமையும், சமஷ்ட்டியும் தருவேன் என்று ரணில் சொன்னாரா? யாருக்குக் கதை விடுகிறார் சுமந்திரன்? மக்கள் தந்த ஆணை தனிநாட்டிற்கானது. 1977 இல் அது நடந்தது. இன்றுவரை அதனை பெற்றுக்கொடுக்க சுமந்திரன் என்ன செய்திருக்கிறார்? நீர் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டதே தமிழ் மக்களுக்கான தனி அரசிற்கான கோரிக்கையினை முன்வைத்துத்தான். அதில் அங்கம் வகித்துக்கொண்டே தமிழ் மக்கள் அதே தேசியத்தினை முன்னிறுத்தி பொதுவேட்பாளரை நிறுத்த எத்தனிக்கும்போது எதிர்த்துப் பிரச்சாரம் செய்வேன் என்கிறீர், நீர் யாருக்காக வேலை செய்கிறீர் என்பது மிகவும் தெளிவாக இப்போது தெரிகிறது. அரசியல்வாதிகள், தம்மைத் தெரிவுசெய்த மக்களின் நலன்களைக் கைவிட்டு, அம்மக்களின் எதிரிகளின் அரசியல் நலன்களைச் சார்ந்து முடிவெடுக்கும் சூழ்நிலை உருவாகும்போது, அம்மக்கள் கூட்டத்தின் நலன்களில் உண்மையான அக்கறை கொண்ட, அம்மக்கள் கூட்டத்தில் செயற்பட்டு வரும் சமூக அமைப்புக்கள் வெளியே வந்து அம்மக்களுக்கான அரசியல்த் தலைமையினை பொறுப்பெடுக்க முயல்வது நண்மையானதே. இதில் சுமந்திரன் கேள்விகேட்க எதுவும் இல்லை, அந்தத் தகுதியை அவர் இழந்து பல வருடங்கள் ஆகின்றன.
-
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார்.. அறிவித்த ஹமாஸ் – ஏற்குமா இஸ்ரேல்?
பலஸ்த்தீன மக்களின் போராட்டத்திற்கும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கும் இடையிலான அந்த வேறுபாட்டினை சற்று விளக்குங்களேன் கேட்கலாம். நான் ஒற்றுமைகளை மட்டுமே இங்கு கூறிவிடுகிறேன். 1. இரு இன மக்களும் தமது தாயகத்தில் சர்வதேசத்தின் உதவிகளையும் ஆதரவையும் கொண்ட இரு கொடூரமான இனக்கொலையாளிகளால் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாகிவருகிறார்கள். 2. இந்த இரு இனங்களினதும் தாயகம் நாள்தோறும் சிங்கள பெளத்த இனவாதிகளாலும், யூத மத வெறியர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. 3. பலஸ்த்தீனப் போராளிகளைக் கொல்கிறேன் என்ற போர்வையில் ஒன்றிற்குப் பத்து என்கிற விகிதத்தில் பலஸ்த்தீனப் பொதுமக்களை இஸ்ரேலிய அரசு கொன்று வருகிறது. இதே வாய்ப்பாட்டையே மொசாட் உளவிப்பிரிவு 80 களில் சிங்களத்திற்குக் கற்றுக்கொடுத்து தமிழினக்கொலையினை ஆரம்பித்து வைத்தது. 4. பலஸ்த்தீனர்களின் அகதி முகாம்கள், வைத்தியசாலைகள், நிவாரண உணவு விநியோக மையங்கள், ஐ.நா உதவியாளர்களின் கட்டடங்கள், சர்வதேசப் பத்திரிக்கையாளர்களின் நிலைகள் என்று இலக்குவைத்து இஸ்ரேலிய அரசால் தாக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான பலஸ்த்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதே வகையான படுகொலைகளையே இலங்கை அரசும் தமிழர்களின் வைத்தியசாலைகள், யுத்த சூனியப் பிரதேசங்கள், அகதி முகாம்கள், நிவாரண பணியகங்கள், ஐ.நா அமைப்புக்களின் நிலைகள், பத்திரிக்கையாளர்கள் என்று இலக்குவைத்து நடத்தி வந்தது. 5. இஸ்ரேல் தான் ஆக்கிரமிக்கும் பலஸ்த்தீன மக்களின் நிலங்களில் இராணுவ நிலைகளை அமைத்து இஸ்ரேலியர்களைக் குடியேற்றி அவர்களை ஆயுதமயப்படுத்தி வருகிறது. இதே சதியைத்தான் தமிழர் தாயகத்தில் சிங்களவர்களை குடியேற்றி, இராணுவமயப்படுத்தி, இராணுவ முகாம்களை இலங்கையும் அமைத்து வருகிறது. 6. காசாவையும், ரபாவையும் ஆக்கிரமித்து, பலஸ்த்தீன தாயகத்தை இரண்டாகக் கூறுபோட்டு நிரந்தரமான தனது இராணுவப் பிரசன்னத்தை அப்பகுதியில் இஸ்ரேல் அமைத்திருக்கிறது. தமிழர் தாயகத்தில் வடக்கையும் கிழக்கையும் கூறுபோட்டு திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவுவரை சிங்களவரை குடியேற்றி இராணுவமயப்படுத்தியிருக்கிறது சிங்களம். 7. இலங்கையில் தமிழரென்றாலே இரண்டாம்தர குடிமக்கள் என்று பார்க்கும் நிலையும், கைதுசெய்து ஆயிரக்கணக்கில் சிறையில் அடைத்து சித்திரவதை செய்து காணமலாக்கும் அதிகாரம் சிங்கள இராணுவத்திற்கு இருக்கிறது. இஸ்ரேலும் தன் பங்கிற்கு ஆயிரக்கணக்கில் பலஸ்த்தீனர்களை சிறைகளில் அடைத்துவைத்து சித்திரவதை செய்கிறது. 8. தமிழருக்கெதிரான போரில் உணவு, மருந்து, அத்தியாவசியப் பொருட்கள், கூட்டுப் பாலியல் வன்புணர்வு என்பன சிங்கள மிருகங்களால் ஆயுதங்களாகப் பாவிக்கப்பட்டன. இன்று இஸ்ரேலும் இதனையே செய்துவருகிறது. 9. தமிழர் மீதான போரில் ஒரு கையில் ஐ, நா சாசனத்தையும் மறு கையில் துப்பாக்கியையும் ஏந்தி மனிதாபிமான மீட்பு நடவடிக்கையொன்றினைச் செய்ததாக சிங்களம் கூறியது. இஸ்ரேலோ தான் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடவேயில்லை என்று சத்தியம் செய்கிறது. 10. இரு தேசக் கோட்பாட்டினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கும் இஸ்ரேல், பலஸ்த்தீனர்கள் தமது தலைநகர் என்று உரிமை கோரும் கிழக்கு ஜெருசலேமை தனது புதிய தலைநகர் என்று உரிமை கோருகிறது. தமிழருக்கு சமஷ்ட்டி தரப்போவதில்லை, உரிமைகளையோ அதிகாரங்களையோ பகிரப்போவதில்லை என்று கூறிக்கொண்டு தமிழரின் தலைநகரான திருகோணமலையினை முற்றாகச் சிங்களமயப்படுத்தி வருகிறது சிங்களப் பேரினவாதம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழினத்திற்கெதிரான போரில் 80 களின் ஆரம்பத்தில் இருந்து அமெரிக்காவினூடாக இஸ்ரேலின் மொசாட்டும், சின்பெட்டும் இலங்கையினுள் கால்பதித்து சிங்களப் பேய்களின் விசேட அதிரடிப்படைக்கும், இராணுவத்திற்கும் பயிற்சிகளும், ஆயுதங்களும், பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை எனும்பெயரில் முற்றான இனக்கொலைக்கான பாதையினையும் வகுத்துக் கொடுத்திருந்தன. போரின் இறுதிக்காலம்வரை டோரா பீரங்கிப்படகுகள், கிபிர் மிகையொலி விமானங்கள், தானியங்கித் துப்பாக்கிகள், கவச வாகனங்கள் என்று மிகப்பெரிய அளவில் இஸ்ரேலிய ஆயுதங்கள் தமிழர்கள் மீது பாவிக்கப்பட்டன. 2009 இல் இலங்கை நடத்திமுடித்த சாட்சியங்களற்ற இனக்கொலையிலிருந்து தான் கற்றுக்கொண்ட உத்திகளை இஸ்ரேல் இன்று பலஸ்த்தீனத்தில் பாவித்துவருகிறது. மறுக்கவில்லை. முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மக்களின் அவலங்களைப் பாருங்கள்.
-
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார்.. அறிவித்த ஹமாஸ் – ஏற்குமா இஸ்ரேல்?
நீங்கள் கூறிய இந்த வசனத்தில் இஸ்ரேலுக்குப் பதிலாக இலங்கை அரசையும், ஹமாசுக்குப் பதிலாக புலிகளையும் பிரதியீடு செய்து பாருங்கள். அப்போதும் இதையே கூறுவீர்களா?
-
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
- நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
- நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
https://edition.cnn.com/2024/06/12/middleeast/un-report-israel-hamas-gaza-war-crimes-intl-hnk/index.html- தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
https://www.theguardian.com/world/2009/feb/05/sri-lanka-ceasefire-tamil-tigers- தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
- நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.