CSK- அஸ்வின் வீடியோ மூலம் அம்பலம்.. சிஎஸ்கே செய்த மிகப்பெரிய தவறு.. 4 இளம் வீரர்கள் மிஸ்ஸிங் By Aravinthan Updated: Wednesday, April 2, 2025, 20:49 [IST] சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த மிகப்பெரிய சொதப்பலை ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனல் வீடியோ ஒன்றின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருக்கிறது. சிஎஸ்கே அணியில் பேட்டிங் வரிசை மிக மோசமாக உள்ளது. குறிப்பாக 34 வயதான ராகுல் திரிபாதியும், 29 வயது தீபக் ஹூடாவும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் பொருந்திப் போகவில்லை என்ற விமர்சனம் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் தீபக் ஹூடாவுக்கு பதிலாக விஜய் சங்கரை ஆட வைத்தும் பலன் அளிக்கவில்லை. Chennai Super Kings Blunder in IPL 2025 mega auction Revealed by Ravichandran Ashwin இளம் வீரர்களை தேர்வு செய்வதற்கு பதிலாக 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி மீண்டும் வயதான வீரர்களை தேர்வு செய்து விட்டதாக ஒரு விமர்சனம் இருக்கும் நிலையில் அதன் பின்னணியை உடைக்கும் வகையில் அஸ்வின் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கம் இடம்பெற்றுள்ளது. சிஎஸ்கே அணிக்காக பல்வேறு உள்ளூர் டி20 தொடர்களில் இளம் வீரர்களை அடையாளம் காணும் பணியை செய்த வித்யுத் சிவராமகிருஷ்ணன் என்பவர் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அவர் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற டி20 தொடர்களில் தான் சில வீரர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு அளித்ததாகவும், அத்துடன் தனது பணி முடிவடைந்து விட்டதாகவும், ஏலத்தில் யாரை வாங்குவது என்பது சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுக்கும் முடிவு தான் எனவும் தெரிவித்து இருக்கிறார். அவர் அளித்த அந்த பட்டியலில் பிரியன்ஷ் ஆர்யா, ஸ்வஸ்திக் சிக்காரா, விப்ரஜ் நிகாம், அனிக்கேத் வர்மா ஆகிய பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களில் மூவர் தற்போது பல்வேறு ஐபிஎல் அணிகளில் இடம் பெற்று சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் பிரியன்ஷ் ஆர்யா தனது முதல் போட்டியிலேயே 23 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கும் விப்ரஜ் நிகாம் இரண்டு போட்டிகளில் 39 ரன்கள் சேர்த்து இருக்கிறார். மேலும் பந்துவீச்சில் ஒரு போட்டியில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும், மற்றொரு போட்டியில் விக்கெட் வீழ்த்தாமல் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இருக்கிறார். மேலும், ஃபீல்டிங்கில் அவர் மிக அபாரமாக செயல்பட்டு பாராட்டுகளையும் பெற்றார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பிடித்து இருக்கும் அனிக்கேத் வர்மா இதுவரை தான் ஆடிய இரண்டு போட்டிகளில் அதிரடியாக ஆடி 36 ரன்கள் மற்றும் 74 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவரது அதிரடி ஆட்டம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டும் வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது போன்ற சிறந்த இளம் வீரர்களை ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்காமல் கோட்டை விட்டுவிட்டு ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின் என மீண்டும் மூத்த வீரர்களை அதிக செலவு செய்து வாங்கியது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இனி வரும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்டிங் வரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ராகுல் திரிபாதி நிச்சயமாக துவக்க வீரராக சரியாக விளையாடவில்லை. அவரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்கியே ஆக வேண்டும். அதேபோல தீபக் ஹூடா அல்லது விஜய் சங்கரை ஆட வைப்பதும் சரியான முடிவாக இல்லை. அடுத்து ஆல்ரவுண்டராக சாம் கரனை தேர்வு செய்வதா அல்லது முழு நேர வேகப்பந்துவீச்சாளரான ஜேமி ஓவர்டனை தேர்வு செய்வதா என்ற குழப்பமும் உள்ளது. சிவம் துபேவை இம்பேக்ட் வீரராக விளையாட வைப்பதற்கு பதிலாக அவரையே ஆல்ரவுண்டராக விளையாட வைக்கலாம் என்று ஆலோசனையும் முன்னாள் வீரர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த சிக்கல்களுக்கு தீர்வு என்ன என்று பார்த்தால் துவக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இறங்க வேண்டும். மூன்றாம் வரிசையில் ஆண்ட்ரே சித்தார்த் விளையாடலாம். அவரை தொடர்ந்து நான்காம் வரிசையில் சிவம் துபே களம் இறங்கலாம். சிவம் துபே மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடுவார் என்பதால் நான்காம் வரிசை அவருக்கு ஏற்றதாக இருக்கும். பவுலிங் ஆல் ரவுண்டரான சாம் கரன் ஐந்தாம் வரிசையில் இறங்கலாம். அவரைத் தொடர்ந்து தோனி, ரவீந்திர ஜடேஜா, அன்சுல் கம்போஜ் (பவுலிங் ஆல் ரவுண்டர்) ஆகியோர் பேட்டிங் இறங்கலாம். அஸ்வினை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மற்றொரு அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலை சிஎஸ்கே அணியில் சேர்க்கலாம். கடைசி மூன்று இடங்களில் சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமது மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் மதீஷா பத்திரனா மற்றும் கலீல் அகமது இடம் பெறலாம். இந்த அணியில் அதிக ஆல்ரவுண்டர்கள் இருப்பது போன்ற ஒரு தோற்றமும் உள்ளது. எனினும், சாம் கரன் பேட்டிங்கில் கை கொடுக்கும் பட்சத்தில் இது சரியாக இருக்கும். அன்சுல் கம்போஜ் பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுப்பார் என்பதால் அவர் பின்வரிசையில் நம்பிக்கை அளிப்பார். இதன் மூலம் அணியில் நான்கு ஓவர்களையும் வீசும் ஆற்றல் உடைய மூன்று முழு நேர வேகப்பந்துவீச்சாளர்களும், மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும் இருப்பார்கள். (வேகப் பந்துவீச்சாளர்கள் - பதிரானா, கலீல் அகமது, அன்சுல் கம்போஜ், சாம் கரன், சிவம் துபே, சுழற் பந்துவீச்சாளர்கள் - நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயாஸ் கோபால்), ஆண்ட்ரே சித்தார்த்தை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தலாம். மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களுடன் பகுதி நேரமாக சாம் கரன் மற்றும் சிவம் துபே வேகப்பந்து வீச வாய்ப்பு உள்ளது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதுமே ஐபிஎல் தொடரின் இடையே மிகப் பெரிய அளவில் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யாது. முதல் பாதி முடியும் வரை ஒன்று இரண்டு மாற்றங்கள் மட்டுமே செய்யும். அதைத்தான் நாம் இதுவரை பார்த்து வந்திருக்கிறோம். எனவே, 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது பிளேயிங் லெவனை முற்றிலுமாக மாற்றி அமைக்குமா? அல்லது தங்களது திட்டத்திலிருந்து பின்வாங்காமல் பிடிவாதமாக இருந்து வெற்றிகளை பெற முயற்சி செய்யுமா என பொறுத்திருந்து பார்க்கலாம். Read more at: https://tamil.mykhel.com/cricket/chennai-super-kings-blunder-in-ipl-2025-mega-auction-revealed-by-ravichandran-ashwin-087269.html?ref_source=MK-TA&ref_medium=Article-Page&ref_campaign=More-Articles-DMP&ref_content=87395-p2