Everything posted by ராசவன்னியன்
-
உஷாரையா, உஷாரு..!
உங்கள் இருவருக்கும் நான் எழுதியது புரியவில்லை என் நினைக்கிறேன். ஆனால் திரு.கவிக்கு புரிந்திருக்கும்..ஷோபாவை நேசிப்பவர் 'கவி அவர்கள்தான்'..! 😋 அவர் யாழில் சில மாதங்களுக்கு முன் எழுதிய இந்த திரியை ஞாபகபடுத்திதான், 'ஷோபா'வில் சாய்ந்துள்ளேன்' என எழுதினேன்.
-
உஷாரையா, உஷாரு..!
துபை தான். (ஆனால் நின்றுகொண்டல்ல..!) தூங்கப்போகும் நேரம் சாமி, ஷோபாவில் சாய்ந்துள்ளேன்..! 😎
-
உஷாரையா, உஷாரு..!
உஷாரையா, உஷாரு..! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று(04-012020) நடந்த செல்போன் பறிப்பு சம்பவக் காணொளி..! இதில் செல்போனை பறிகொடுத்தவரின் மேல்தான் தவறு அதிகம் உள்ளது..! ரயில் கிளம்பியாச்சி.. அப்புறமும் என்ன 'தொன தொன'ன்னு செல்போனில், அதுவும் ரயில் பெட்டியின் நுழைவு வாசலில் நின்று கொண்டு பேச்சு வேண்டிக் கிடக்கு..? 😡 இந்த மாதிரி ஆட்களுக்கு இதுவும் வேணும்..! இன்னமும் வேணும்..!!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆமாம், சரியாகிவிட்டது..! உடனடி நடவடிக்கைக்கு மிக்க நன்றி, திரு.மோகன்.
-
காளிதாஸ்..! எப்படி..?
ஒரு காட்சியில் சுரேஷ் மேனன் பேசுவதாக கிழேயுள்ள 'நச்'சென்ற வசனம் வருகிறது. படத்தில் பார்க்கும்போது ரசிக்கும்படியாக இருந்தது.. "வேலை கொடுத்தவன்கிட்ட பம்முற.. வாழ்க்கைய கொடுத்தவகிட்ட எரிஞ்சு விழுற..!’’ அதுதான் இந்தப் படத்தின் அடிநாதம். படத்துக்கு மட்டுமல்ல, நம் வாழ்க்கைக்கான அடிநாதமும் கூட. விமர்சனத்தில் படித்த வரிகள் சரியானதுதான்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ்கள சர்வரில் ஏதும் பிரச்சனையா..? 🤔 களத்தின் புதிய பதிவுகளின் அட்டவணையில் அடுத்த பக்கத்திற்கு செல்ல சாதாரணமாக தோன்றும் < > பொத்தான்களைக் காணோம். குழுமத்தின்(Club) முகப்பு படங்களையும் காணோம்.. திண்ணை பொட்டியில் வட்டம் மட்டுமே சுத்திக்கொண்டே இருக்குது. பதிவுகள் தெரியவில்லை..!
-
காளிதாஸ்..! எப்படி..?
டிஸ்கி: இன்று 2020 புது வருடத்தில் முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாள்..! பொழுது போகாமல் தொலைகாட்சியின் "டென்ட் கொட்டா" அப்.பில் உயர்தர HD ப்ரிண்டில் வெளிவந்துள்ள படங்களை அசிரத்தையாக முதல் சில காட்சிகளை மட்டும் ஓடவிட்டு ப்ரிவியூ பார்க்க ஆரம்பித்தேன். அதில் காளிதாஸ் என்ற இப்படத்தினை பார்க்க ஆரம்பிக்கையில், முதல் சில நிமிடங்களிலேயே ஒரு பெண்ணின் துர்மரணம்.. அதை விசாரிக்க வரும் காவல் அதிகாரி, சில கோணங்களில் விசாரணையை ஆரம்பிக்க, எனக்கும் 'இந்த மரணம் எப்படி நடந்திருக்கும்..?' என ஊகிக்க ஆரம்பித்து படத்தோடு ஒன்றி விட்டேன்..! சில 'லாகிக்' சறுக்கல்களை தவிர, கடைசி வரை விறுவிறுப்பாகவே படம் இருந்தது. இயக்குநருக்கு இதுதான் முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை. நேரம் இருந்தால் அவசியம் பார்க்கலாம்..!! விகடனில் வெளிவந்துள்ள விமர்சனம்: தொடர் தற்கொலைகள், அதன் பின்னாலிருக்கும் மர்மம், இதைத் தேடி அலையும் இரண்டு போலீஸ்காரர்கள், அவர்களின் பர்சனல் பக்கங்கள்... இந்த 2 மணி நேர சுவாரஸ்யம்தான் ‘காளிதாஸ். காதல் மனைவியுடன் தனியே வாழும் ஆய்வாளர் ‘காளிதாஸ்’ பரத். அவர் ஏரியாவில் அடுத்தடுத்து பெண்கள் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ள, பரபரக்கிறது காவல் நிலையம். புளூவேல் விளையாட்டில் தொடங்கி ஏகப்பட்ட காரணங்களை ஆராய்கிறார் பரத். பரத்துக்கு உதவ மேலதிகாரி சுரேஷ் மேனன் வந்து சேர அந்தத் தற்கொலை களுக்கான உண்மையான காரணத்தை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை. ஒரு நல்ல த்ரில்லர் கதையை சுவாரஸ்யமாகச் சொல்லி அசரடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீசெந்தில். டைட்டில் கார்டில் இருந்தே தொடங்கும் அவரின் கிரியேட்டிவிட்டி தனித்துவம். மில்லிமீட்டர் அளவுக்குக்கூட அதிகம் நடிக்காமல் நேர்த்தியான ஒரு பர்ஃபாமென்ஸைக் கொடுத்திருக்கிறார் பரத். படத்தை சுவாரஸ்யமாக மாற்றுவது சுரேஷ் மேனனின் பாத்திரம்தான். அதைச் செவ்வனே செய்திருக்கிறார் இந்த ஆறடி அட்டகாச நடிகர். பரத்துக்கு மனைவியாக அறிமுக நாயகி ஆன் ஷீத்தல். கணவன் எப்போதும் வேலை வேலை என்றிருக்க, தனிமையில் வாடும் பாத்திரம். தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவர்களைத் தவிர ஆதவ் கண்ணதாசன், கான்ஸ்டபிளாக வரும் ஜெயவேல் எனக் கச்சிதமான காஸ்ட்டிங். 2.06 மணி நேர நீளம் இதற்குப் போதுமென்ற எடிட்டர் புவன் ஸ்ரீனிவாசன், த்ரில்லர் என்பதால் இருளில் சுற்ற வேண்டாமே எனத் தெளிவாய்ப் படம்பிடித்த ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா இருவருமே கவனம் ஈர்க்கிறார்கள். விஷால் சந்திரசேகரின் பாடல்கள்கூட ஓகே. ஆனால், பின்னணி இசைதான் சில இடங்களில் இம்சிக்கிறது. த்ரில்லர் கதைகள் முழுமையடைவது க்ளைமாக்ஸில்தான். ஆனால் ‘காளிதாஸ்’ க்ளைமாக்ஸில் மட்டும்தான் சறுக்குகிறது. இணைக்க வேண்டிய பல புள்ளிகள் கடைசிவரை புள்ளிகளாகவே இருப்பதுதான் காளிதாஸை ‘வாவ்’ படப் பட்டியலிலிருந்து விலக்கிவைக்கிறது. க்ளைமாக்ஸை மட்டும் இன்னும் செதுக்கியிருந்தால், இந்த ‘காளிதாஸ்’ காலங்கள் தாண்டியும் நினைவில் நின்றிருப்பான். விகடன்
-
புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2020..!
- தமிழர்களின் எழுத்தறிவு..
தமிழர்களின் எழுத்தறிவு இந்தியாவின் முதன்மையான எழுத்துக்களாக வட இந்தியாவில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டளவில் மௌரியப் பேரரசன் அசோகனுடைய காலத்தில் வழக்கிலிருந்த பிராமி என்னும் எழுத்து வகை தான் அறிஞர்களால் இதுவரை பேசப்பட்டு வந்தது. அக்காலகட்டத்தில் தமிழகத்தில் வழக்கிலிருந்த எழுத்து வகை அசோகனுடைய பிராமியிலிருந்து மாறுபட்ட எழுத்தாகவும் தமிழ் மொழிக்கே உரிய எழுத்தாகவும் விளங்கியமையால் அதனை ”தமிழி” அல்லது ”தமிழ் பிராமி” என அறிஞர்கள் அழைத்தனர். தமிழகத்தில் மதுரையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உள்ள இயற்கையாக உள்ள குகைகளின் விளிம்புகளில் அதிகமாகவும் பிற மாவட்டங்களில் பரவலாகவும் இதுவரை 35 ஊர்களில் 120க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழி எழுத்து வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை முறையாக ஆய்வு செய்து மிக அரிய ஆய்வு நூல் ஒன்றை ஐராவதம் மகாதேவன் 2003 ஆம் ஆண்டு வெளியிட்டு அதன் திருத்திய பதிப்பை 2014 ஆம் ஆண்டு வெளியிட்டார். இக்குகைக் கல்வெட்டுகள் தவிர தமிழகத்தில் இதுவரை அகழாய்வு செய்யப்பட்ட 175 இடங்களில் சங்க காலத்தைச் சார்ந்த 36 அகழாய்வு இடங்களில் மக்கள் பயன்படுத்திய மட்கல ஓடுகளிலும் தமிழி எனப்படும் எழுத்து வகை காணப்படுகிறது. இவற்றைத்தவிர தேனி மாவட்டத்தில் புலிமான் கோம்பை, தாதப்பட்டி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4 நடுகற்களிலும் புதுக்கோட்டை நகருக்கு அருகில் உள்ள பொற்பனைக்கோட்டை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகல்லிலும் தமிழி எனப்படும் எழுத்துகள் காணப்படுகின்றன. இவை தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் கல்வெட்டுகளாகும். இவற்றைத் தவிர தமிழகத்தில் சங்க கால நாணயங்களிலும் முத்திரைகளிலும் நூற்றுவர் கண்ணனார் என சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் சாதவாகனர் நாணயங்களிலும் தமிழி எழுத்துப்பொறிப்புகள் காணப்படுகின்றன. தமிழகத்தை தவிர வட இந்திய மாநிலங்களிலும் தென்னிந்திய மாநிலங்களான கருநாடகம் ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் இதுவரை 700க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வுகளை செய்துள்ளன. வரலாற்றுப் புகழ்பெற்ற நாலாந்தா, பிரயாகை, (அலகாபாத்) ஹஸ்தினாபுரம், பாடலிபுத்திரம் (பாட்னா) குருஷேத்திரம் இந்திரப்பிரஸ்தம் அஹிச்சத்திரா,. அமராவதி, பட்டிபொருளு, நாகர்சுனகொண்டா, சன்னதி போன்ற பல வட இந்திய நகரங்களில் அகழாய்வுகள் செய்யப்பட்டன. இந்நகரங்களில் அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பானைகளில் எழுத்துப் பொறிப்புகள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் 1400க்கும் மேற்பட்ட பானை ஓடுகளில் தமிழி எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் தமிழகத்தில் ஏறக்குறைய கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழி எழுத்துக்களை எழுதுகின்ற வழக்கம் இருந்துள்ளமையையும் தமிழர்கள் எழுத்தறிவு மிக்கவர்களாக விளங்கியிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. அண்மைக்காலங்களில் கடந்த 5 ஆண்டுகளாக மதுரைக்கு அருகில் கீழடியின் நடைபெற்ற அகழாய்வில் 160 க்கும் மேற்பட்ட பானைகளில் எழுத்துப் பொறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வெழுத்துப் பொறிப்புகளின் காலத்தை அறிவியல் காலக்கணக்குப்படி தமிழக அரசு தொல்லியல் துறை அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு செய்ததில் தீதன் என்ற பெயர் பொறித்த பானை ஓட்டின் காலம் அதன் அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கரிமத்தின் கால அடிப்படையில் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என வரையறுத்துள்ளது. இக்காலக் கணிப்பு ஏற்கனவே பொருந்தல் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பானை எழுத்துப் பொறிப்பின் காலத்தை விட ஒரு நூற்றாண்டுக்கும் முற்பட்டது. பொருந்தல் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துப்பொறிப்பின் காலம் கி.மு 5 ஆம் நூற்றாண்டு ஆகும். எனவே இந்தியாவில் மிகத் தொன்மைக் காலத்திலேயே எழுத்தறிவு பெற்ற மக்களாக தமிழர்கள் இருந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. தமிழக அகழாய்வுகளில் இதுவரை ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல் என்ற இடத்தில் 1400க்கும் அதிகமான மட்கலன்களில் ஆள் பெயர்கள் தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த நிலையில் 160 க்கும் மேற்பட்ட பானை ஓடுகளில் எழுத்துப் பொறிப்புகள் கீழடி அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி அருகில் உள்ள அரிக்கமேடு இராமநாதபுரத்தில் அழகன் குளம் ஆகிய இடங்களில் செய்த அகழாய்வுகளிலும் அதிக அளவில் தமிழி எழுத்துப் பொறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆதன், அந்துவன், குவிரன், கண்ணன், கீரன், கொற்றி, நெடுங்கிள்ளி, சாத்தன் போன்ற பெயர்கள் இவற்றுள் அடங்கும் மேலும் சோழர்களின் தலைநகரமான உறையூர் அவர்களின் துறைமுகப்பட்டினமான காவேரிப்பூம்பட்டினம், பாண்டியர்களின் துறைமுகப்பட்டினமான கொற்கை, சேரர்களின் தலைநகரமான கரூவூர் அவர்களின் துறைமுகப்பட்டினமாக மேலைக்கடற்கரையில் இருந்த முசிறி ஆகிய இடங்களிலும் இவ்வகை பானை எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. இவை மட்டுமன்றி தமிழர்கள் கடல்கடந்து வாணிகம் செய்த மேலை நாடுகளான செங்கடல் பகுதிகளில் இருந்த எகிப்து நாட்டின் துறைமுகங்களாக விளங்கிய குசிர் அல் குதாம் என்ற நகரத்திலும் பெரினிகே என்ற இடத்திலும் ஓமன் பகுதியில் கோர் ஒரி என்ற இடத்திலும் அவர்கள் பயன்படுத்திய பானை ஓடுகளில் தமிழ் மொழியில் தமிழி எழுத்துப் பொறிப்புகள் அந்நாடுகளின் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கும் முன்பாகவே தமிழர்கள் கடல்கடந்து மத்தியத் தரைக்கடல் பகுதி வரை கப்பல்கள் செலுத்தி வாணிகத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதை இவை தெரிவிப்பதுடன் தமிழி எழுத்தின் பரவல் அந்நாடுகள் வரை சென்றுள்ளதை அறிய முடிகிறது. இதே போன்று தமிழகத்திலிருந்து கீழை நாடுகளுக்குச் சென்ற வணிகர்களும் தொழிலாளர்களும் தமிழி எழுத்துக்களில் எழுதியுள்ளனர். தாய்லாந்து பகுதியில் கோலங்க்தோம் என்ற இடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழகப் பொற்கொல்லர் ஒருவர் பொன்னை ஆய்வு செய்து உரசிப் பார்க்கும் கல்லில் பெரும்பதன் கல் என தனது பெயரை எழுதியுள்ளார். பத்தர் எனப்படுபவர் பொற்கொல்லர் ஆவார். இவர் பொன்னை ஆய்வு செய்து பார்க்கும் தன் உடைமையான அக்கல்லில் அவரது பெயரை தமிழி எழுத்துப் பொறிப்பில் குறித்துள்ளார். சங்க இலக்கியங்களில் ஆநிரை மீட்டல் நிரை கொள்ளல், ஊரைப் பகைவரிடமிருந்து காத்தல் போன்ற வீரச் செயல்கள் குறித்து செய்திகள் அதிமாக உள்ளன. அவ்வாறு மீட்டு இறக்கும் வீரர்களுக்கு நடுகல் எடுப்பது தமிழர் மரபு. அவ்வகையில் புலிமான் கோம்பை தாதப்பட்டி பொற்பனைக்கோட்டை ஆகிய இடங்களில் கிடைத்த நடுகற்களே இந்தியாவில் கிடைத்த தொன்மையான நடுகற்களாகும். இவற்றின் காலம் கி.மு 6 ஆம் நூற்றாண்டாகும். இவற்றின் மூலம், தமிழகத்தில் குக்கிராமமாக விளங்கிய ஊர்களிலும் மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை அறிய முடிகிறது. மேலே குறிப்பிட்டது போல் வட இந்தியாவில் பல பெருநகரங்கள் இருந்தும் அங்கு மக்கள் வழக்கில் எழுத்தறிவு மிகக் குறைவாகவே இருந்தது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் அசோகப் பேரரசன் தனது பௌத்த மதக் கொள்கைகளை சொல்வதற்கு கல்வெட்டுகளை வெளியிட்டு அவற்றைப் படித்துச் சொல்வதற்காக அதிகாரிகளை நியமித்ததாக அக்கல்வெட்டுகளில் குறிப்பிடுகின்றார். அக்காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த மெகஸ்தனிஸ் வட இந்திய மக்கள் எழுத்தறிவு அற்றவர்களாகவே பெரும்பாலும் இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றார். இவற்றை நோக்கும் பொழுது தமிழகத்தில் பாமர மக்கள் பயன்பாட்டில் நாள்தோறும் புழங்கிய மட்கலன்களில் தங்களது பெயர்களைக் குறித்து வைத்துள்ளனர் என்பதும் அசோகன் காலத்திற்கும் முற்பட்ட 3 நூற்றாண்டுகளுக்கும் முன்பாகவே தமிழகத்தில் எழுத்தறிவு உன்னத நிலையில் இருந்துள்ளதையும் நாம் உய்த்துணர முடிகிறது. ஆநிரை கவர்தல் ஆநிரை மீட்டல், ஊர்மீது படையெடுத்தவர்களை எதிர்கொண்டு மீட்டு இறந்த மறவர்கள்ளுக்கு எழுத்துடை நடுகற்கள் எடுத்து மக்கள் அதனை படித்து அறிய வகை செய்துள்ள வரலாற்றைப் பார்க்கும் பொழுது இந்தியாவில் தொன்மையான எழுத்துவகை தமிழி எனப்படும் தமிழ்-பிராமி எழுத்துக்களே என்பதும் தமிழர்கள் எழுத்தறிவில் 2600 ஆண்டுகளுக்கும் முன்பாகவே சிறந்து விளங்கினர் என்பதும் புலப்படுகிறது. எனவே தான் இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இலட்சம் கல்வெட்டுகளில் அறுபதாயிரம் கல்வெட்டுகள் தமிழ் எழுத்தில் தமிழ் மொழியில் உள்ளன என்பதும் தெளிவாகிறது. தினமணி- புதிய பறவை சிறகை விரித்து பறக்கிறதே..!
ஓய்வு நேரங்களில் யாழ்க்களம் தவிர, யூடுபில் தொழில் நுட்பம் சார்ந்த காணொளிகளை பார்ப்பது வழக்கம். உலகின் பல பகுதிகளில் வானுயுர கட்டப்படும் கட்டிடங்கள், பாலங்கள், மின்னணுவியல் போக, என்னை கவர்ந்தது இந்த விமானங்களின் வடிவபைப்பும், அதன் உற்பத்தி தொழிற்சாலைகளில் அதற்கான மெனக்கெடுதலும்..! பல்வேறு பாகங்களை பல இடங்களில் உற்பத்தி செய்து, அவற்றை ஒருங்கிணைத்து பொருத்தும் தொழிற்சாலைக்கு கொண்டு வந்து, இறுதி வடிவம் கொடுக்கும் பொறியியல் அற்புதம். ஒரு விமானம் உருவாகி முழுமை பெற்று, அது பறக்கும் வரை இந்தக் காணொளியில் சுருக்கமாக விளக்கியுள்ளது அருமை..! போயிங் 787 டிரீம்லைனர்.. இரண்டடுக்கு எர்பஸ் 380..- கலவரமாயே மதிலோ..!
இரண்டு மூன்று காணொளிகளை ஒருங்கிணைத்து காணொளி மென்பொருளால் மார்ப்பிங் செய்துள்ளார்களென நினைக்கிறேன். சில இடங்களில் அசல் காணொளியை ஒளிபரப்பிய தொலைக்காட்சியின் லோகோவை(Logo) மெல்லிய பெட்டிமூலம் மறைத்துள்ளார்கள். இருந்தாலும் நல்ல முயற்சி..!- கலவரமாயே மதிலோ..!
வழக்கமான திருமண காணொளிகளை பார்த்திருப்போம்.. "அடச் சே..! இவ்வளவுதானா..?" என அலுத்திருப்போம்..! சிலர் வித்தியாசமான முறையில் முயற்சித்திருப்பர்... அவ்வகையில் இந்தக் காணொளி தெலுங்கில் இருந்தாலும் சற்று ரசிக்கக் கூடியதுதான்..!! (கீழேயுள்ளது திருமணக் காணொளிதானா? என்ற ஐயப்பாடும் உண்டு..)- இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை: அமித் ஷா பரிசீலிப்பதாக அதிமுக தகவல்..
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை: அமித் ஷா 'பரிசீலிப்பதாக' அதிமுக தகவல் அதிமுக நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்ததின ஆண்டு கொண்டாட்ட நினைவுக்கான 2-ஆவது தேசியக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா், இரவு சுமாா் 8.10 மணியளவில் கிருஷ்ண மேனன் மாா்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அவரது இல்லத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்துப் பேசினாா். அப்போது தமிழகஅமைச்சா்கள் எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமாா் ஆகியோரும் உடனிருந்தனா். இந்நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க சரியான நேரத்தில் சட்டத்திருத்தம் ஏற்படுத்த பரிசீலிக்கப்படும் என முதல்வர் பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமித் ஷா உறுதியளித்துள்ளதாக அதிமுக அதிகாரப்பூர்வ நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது. முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று இவ்விவகாரம் தொடர்பாக பரிசீலிப்பதாக அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமணி- பரோட்டா போட பயிற்சி மையமா? புதுசா இருக்கே!
பரோட்டா போட பயிற்சி மையமா? புதுசா இருக்கே! படித்த இளைஞர்கள் தாங்கள் பெற்ற பட்டப்படிப்புக்குப் பொருத்தமான வேலையில் தான் சேருவோம் என்று பிடிவாதமாகக் காத்திருந்தது ஒருகாலம். அதனால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில் கால தாமதம் நேர்ந்து பல்வேறு விதமான உளச்சிக்கல்களுக்கு ஆட்பட்டு வாழ்க்கையை நிராசையாகக் கடத்தியதெல்லாம் அந்தக் காலம் என்றாகி விட்டது இப்போது. ஆனால் பாருங்கள்... இன்றைய இளைஞர்கள் அப்படி இல்லை. அவர்கள் தாங்கள் படித்து வாங்கிய பட்டத்திற்கு ஏற்ற வேலை கிடைக்காவிட்டால் அதற்காக நெடுங்காலம் காத்திருக்க விரும்புவதில்லை. வருமானம் ஈட்டித்தரக்கூடிய எந்த வேலையாக இருந்தால் என்ன? அதைக் கெளரவமாகக் கற்றுக் கொண்டு செய்யத் துடிக்கும் ஆர்வம் இளைஞர்களிடையே மிகுந்து வருகிறது. அதற்கொரு உதாரணம் தான் இந்த பரோட்ட பயிற்சி மையம். மதுரையைச் சேர்ந்த முகமது காசிம் எனும் இளைஞர் ‘செல்பி கோச்சிங் சென்டர்’ என்ற பெயரில் பரோட்டா போடக் கற்றுத்தரும் பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார். இவரிடம் 'பரோட்டா போடுவது எப்படி?' எனப் பயிற்சி பெற பல இளைஞர்கள் முட்டி மோதுகிறார்கள். அவர்களில் வெளியூர் இளைஞர்கள் அதிகம் என்கிறார் முகமது காசிம். பி எஸ் சி, பி ஏ என கலை மற்றும் அறிவியல் கற்ற பட்டதாரி இளைஞர்கள் மட்டுமல்ல பொறியியல் பட்டதாரிகளும் கூட இவரிடம் வந்து பரோட்டா போடக் கற்றுக் கொள்கிறார்களாம். காரணம் இந்தத் தொழிலுக்கு இருக்கும் தேவையை முன்னிட்டுத்தான். மதுரை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதிலுமே பரோட்டா பிரியர்கள் நிறைந்திருக்கிறார்கள். தமிழகம் தாண்டி சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய நாடுகள், கனடா, வளைகுடா நாடுகள் என உலகெங்கும் பரோட்டா மாஸ்டர்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரையிலும் வருமானம் ஈட்டித்தரும் தொழிலாக பரோட்டா மாஸ்டர் தொழில் இருந்து வருகிறது. இதுவே வெளிநாடு என்றால் மாதம் ரூ.40,000 முதல் ரூ.80,000 வரையிலும் வருமானம் ஈட்டித்தரும் தொழிலாக இது விளங்குகிறது. இதன் காரணமாக இளைஞர்கள் பெருவாரியாக இந்த பயிற்சி மையத்தில் இணைந்து கற்றுக் கொள்ள விரும்பி முன் வருகிறார்கள் என்கிறார் பயிற்சி மையத்தை நடத்தி வரும் முகமது காசிம். காசிமின் மாணவர்களில் ஒருவர் பேசுகையில், ‘நான் பி எஸ் சி பட்டதாரி, படித்த படிப்பைக் கொண்டு லேப் டெக்னீசியனாகச் சில காலம் வேலை பார்த்தேன். ஆனால், அதில் கிடைத்த வருமானம் போதவில்லை. அதனால் வேறு ஏதாவது நல்ல வருமானம் ஈட்டித்தரும் வேலையைச் செய்யலாமே என்று தான் பரோட்டா பயிற்சி மையத்தில் சேர்ந்தேன்’ என்கிறார். ஆக, 'பரோட்டா மாஸ்டர் வேலை' என்பது இப்போது படித்த இளைஞர்களிடையே பரவலான வரவேற்பைப் பெறும் வேலைவாய்ப்புகளில் ஒன்றாகி வருவது கண்கூடு. ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்’ - என்றார் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை. ஆன்றோர் வாக்குக்கு என்றுமே மதிப்புண்டு. அதை மெய்ப்பிக்கிறார் போலிருக்கிறது இளைஞர்களின் பரோட்டா பயிற்சி மைய ஆர்வம். தினமணி அனுபவக் குறிப்பு: இங்கு அடிக்கடி சாப்பிடும் தமிழ் உணவகங்களில் இந்த பரோட்ட வகைகளுக்கு நல்ல கிராக்கி இருக்கிறது. சாயந்திரம் வந்துவிட்டால் பரோட்டாவும், தொட்டுக்கொள்ள வடைகறி, சிக்கன் சால்னா, வெஜ் குருமா இப்படி பலவகைகள்.. அதிலும் கொத்துப் பரோட்டா போடும் சத்தமும், அதற்கு வரவேற்பும் ஒரே அடிதடிதான்.. வெகு சீக்கிரம் விற்று தீர்ந்துவிடும்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நிழலி- ஆண்கள் ஏன் நீண்ட காலம் வாழ்வதில்லை..?
லூயிஸ் ஆரோன்ஸன் எங்கெங்கும் ஆண்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். ஏழை, பணக்காரர், தொழிலாளர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்கள், அனைத்து மதங்கள், இனக்குழுக்கள் என்று அனைத்தையும் சேர்ந்த ஆண்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். பாலினம் மட்டுமல்லாமல், இறந்துகொண்டிருக்கும் இந்த ஆண்களுக்குப் பொதுவான பண்பு ஒன்று உண்டு: அவர்கள் யாரும் இளைஞர்கள் அல்ல. கோடிக்கணக்கான ஆண்கள் அவர்களின் எதிர்பாலினத்தவர்கள் இருக்கும்போது இறந்துகொண்டிருக்கிறார்கள், அதை யாரும் கண்டுகொள்வதுபோல் இல்லையே, எப்படி? அமெரிக்கா முழுவதும், ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ஆண்களின் சதவீதம் 49. ஆனால், 65 வயதைக் கடந்தவர்களில் பெண்கள் 57%. அந்த வயதில் பிழைத்திருப்போர் எண்ணிக்கை பாலினம் சார்ந்து பெரிதும் வேறுபடுகிறது. 80 வயதுக்கும் மேல் உயிரோடு இருக்கும் பெண்களின் எண்ணிக்கையில் ஆண்கள் பாதியளவுக்குத்தான் இருக்கிறார்கள். அமெரிக்காவில் 100 வயதைக் கடந்தவர்களில் 81% பெண்கள்தான். ஐநாவைப் பொறுத்தவரை அதன் கண்காணிப்பில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒருசிலவற்றைத் தவிர, பெரும்பாலானவற்றில் ஆண்களைவிடப் பெண்கள்தான் அதிக காலம் உயிர் வாழ்கிறார்கள். ஆண்களை எது சீக்கிரமே கொல்கிறது? பாலினங்களுக்கு இடையிலான இந்த வேறுபாடுகள் சில சுவாரசியமான கேள்விகளை எழுப்புகின்றன: ஏன், எதனால் வயதான ஆண்கள் இறக்கின்றனர்? உயிரியலானது உயிரோடு இருப்பதற்கான வாய்ப்பைப் பெண்களுக்கு அதிகம் வழங்குகிறதா? சமூகரீதியாக, கலாச்சாரரீதியாக, மருத்துவரீதியாக ஆண்களைக் கொல்லும் ஏதோ ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறோமா? மனித உயிரியலானது பெண்கள் அதிக காலம் வாழ்வதற்கு உதவுவதைப் போலவே தெரிகிறது. மற்ற உயிரினங்களில் அப்படி இல்லை என்பதால், இந்தத் தன்மையானது மனித குலத்துக்கே உரித்தானது என்ற முடிவுக்கு அறிவியலாளர்கள் வந்திருக்கிறார்கள். அதேநேரத்தில், ஆண்கள் குறைவான ஆண்டுகாலம் வாழ்வது என்பது, எல்லாக் காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் உரித்தானது இல்லை. ஆகவே, உயிரியல்ரீதியிலான பாலினம் என்ற வகைப்பாடானது ஆயுட்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரே சக்தி இல்லை: இங்குதான் கலாச்சாரம் உயிரியலுடன் உறவாடுகிறது. 1800-களின் நடுப்பகுதியிலிருந்து மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களில் பிரசவத்தின்போது நிகழும் மரணங்கள் குறைக்கப்பட்டிருப்பதும் பாலினம் சார்ந்த நீண்ட ஆயுளின் இடைவெளியைப் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே அதிகப்படுத்தியிருக்கும் காரணிகளில் ஒன்று. ஆனால், அதுவே பிரதானமான காரணம் அல்ல. 20-ம் நூற்றாண்டின் முதல் சில 10 ஆண்டுகளில் தொற்றுநோய்கள் பெருமளவு குறைந்திருப்பதும் ஒரு முக்கியமான காரணம். ஏனெனில், தொற்றுநோய்கள் அதிக அளவு இளம் பெண்களுக்குத்தான் முன்பு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. பெண்களைவிட ஆண்கள் விரைவில் இறப்பவர்களாக இருந்தாலும், வயது ஆக ஆகப் பெண்களைவிட ஆண்களே அதிக நலமுடன் இருப்பதும் ஒரு முரணே. வயதான காலத்தில் பெண்களுக்குத்தான் அதிகம் நாள்பட்ட நோய்கள், உடல் முடியாத தன்மை, அல்சைமர் நோய் போன்றவை ஏற்படுகின்றன. ஆண்களைவிட அவர்களுக்கே மருத்துவப் பராமரிப்பு அதிகம் தேவைப்படுகிறது. எக்ஸ் இனக்கீற்றுகள் ஹார்மோன்களில் உள்ள பாலின வேறுபாடுகள், நோயெதிர்ப்பு சக்தி, மரபணுக் கூறுகள் போன்றவை ஆரோக்கியம் குறைந்த பெண்கள் நீண்ட காலம் ஏன் உயிர்வாழ்கிறார்கள் என்பதற்கும், ஆரோக்கியமான ஆண்கள் ஏன் சீக்கிரம் இறந்துபோகிறார்கள் என்பதற்குமான விளக்கங்களாக உள்ளன. ஆண்களில் காணப்படும் டெஸ்டோஸ்டிரோன் அவர்கள் அதிகம் ஆபத்தான காரியங்களில் ஈடுபடுவதோடும் வன்முறையில் ஈடுபடுவதோடும் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால், அது உடல்ரீதியிலான தீங்குகளையும் ஏற்படுத்துகிறது. அதனால்தான், விதைநீக்கம் செய்யப்பட்ட ஆண்கள் அப்படிச் செய்யப்படாத ஆண்களைவிட பத்தாண்டுகளோ இருபதாண்டுகளோ அதிகமாக உயிர்வாழ்கிறார்கள். இதற்கு மாறுபட்ட விதத்தில், பெண்களில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் கொழுப்பை நீக்குகிறது, பணக்கார நாடுகளில் அதிகம் பேரைக் கொல்லும் இதய நோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. டெஸ்டோஸ்டிரோனில் இல்லாத அழற்சித் தடுப்புக் கூறுகளையும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்புக் கூறுகளையும் ஈஸ்ட்ரோஜன் கொண்டிருப்பதால், உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அது அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் சார்ந்த அழுத்தங்களுக்கும் அது எதிர்வினையாற்றுகிறது. மேலும், பெண்கள் இரண்டு எக்ஸ் இனக்கீற்றுகளை (குரோமோசோம்) கொண்டிருக்கிறார்கள். ஆகவே, மரபணுவில் ஏற்படும் தீய மாற்றங்களுக்கு அவர்களால் எளிதில் ஈடுகட்டிக்கொள்ள முடியும். ஆனால், ஆண்களுக்கு ஒரு எக்ஸ் இனக்கீற்றுதான் இருப்பதால், ஒய் இனக்கீற்றோடு தொடர்புடைய பாதிப்புகளை அனுபவிக்கிறார்கள். வயதானவர்களைப் புறக்கணிக்கும் மருத்துவம் எனினும், ஆண்கள் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாத தன்மை, அதிக அளவில் புகைபிடித்தல், தங்கள் குடும்பத்தைக் காத்து அவர்களின் வாழ்க்கைப்பாட்டுக்கு வழிவகை செய்வதால் ஏற்படும் மன அழுத்தம், ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றையே ஆண்களின் குறைவான ஆயுட்காலத்துக்குக் காரணமாக மக்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். சமூகப் பொருளாதார அந்தஸ்து, அலுவல் பணிகள், நடத்தைகள் எல்லாமே உடல்நலத்தில் குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதேபோல்தான் மருத்துவக் கலாச்சாரமும். நவீன மருத்துவத்தின் முதல் நூற்றாண்டில் வயதானவர்கள் மீதோ மூப்பின் மீதோ மருத்துவர்கள் கவனம் செலுத்தவில்லை. அதிர்ஷ்டவசமாக, உயிரியலும் கலாச்சாரமும் இரண்டு பாலினத்துக்கும் (எல்லாப் பாலினங்களுக்கும்தான்) நல்ல வழியைக் காட்டுகின்றன. ஆண், பெண் இருவரின் மரபணுக் கூறுகள், ஹார்மோன்கள் மற்றும் மூப்புக்குக் காரணமான பிற காரணிகள் போன்றவற்றின் தீமைகளையும் நன்மைகளையும் அறிவியலாளர்கள் ஆராய வேண்டும். தங்கள் ஒய் இனக்கீற்றும் டெஸ்டோஸ்டிரோனும் நீக்கப்படுவதைப் பெரும்பாலான ஆண்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால், முன்கூட்டியே நிகழும் மரணத்தைத் தவிர்ப்பதற்கான உயிரியல், சமூகவியல், நடத்தையியல் சார்ந்த உத்திகளை அறிவியலாளர்கள் கண்டறிய வேண்டும். அமெரிக்காவில் உடல்நலத் துறையைவிட மருத்துவப் பராமரிப்புக்கே அதிக கவனம் கொடுக்கப்படுகிறது. இதனால், ஐநாவின் உடல்நலத் தரப்பட்டியலில் உலகிலேயே அமெரிக்காவுக்கு 37-வது இடம்தான் கிடைத்திருக்கிறது. ஆரோக்கியமான மக்களைக் கொண்ட நாடுகள் மூன்று விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்: ஆரம்ப சுகாதாரம், தடுப்பு, சமூகப் பராமரிப்பு. ஆனால், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இதைப் பின்பற்றுவதில்லை. மருத்துவப் பராமரிப்பு, உடல்நலப் பராமரிப்பு என்று இரண்டு வகைகள் உண்டு. அமெரிக்காவில் இருப்பது மருத்துவப் பராமரிப்பு. இதனால், மருத்துவச் செலவுக்குத்தான் பெரிய அளவில் பணம் சென்றுசேரும்; நோயாளிக்குக் கடைசியில் கையில் பணம் இருக்காது. மருத்துவத்தையும் சந்தைப்படுத்தியதன் விளைவு இது. ஆகவே, உடல்நலப் பராமரிப்பில்தான் ஒரு நாடு அக்கறை செலுத்த வேண்டும். உடல்நலப் பராமரிப்புக் கட்டமைப்பு வேறுபட்ட விதத்தில் இயங்கக்கூடியது உடல் நலப் பராமரிப்பு. ஒருவருக்கு இளம் வயதில் அவருடைய ஆரம்ப சுகாதார மருத்துவர் அவருடைய உடல்ரீதியான செயல்பாடுகள், உணவு முறை, நோய்கள், எடை, எந்தெந்தப் பொருட்களை அவர் நுகர்கிறார், மரபணுவியல், ஆபத்தான வேலையில் இருத்தல், நடத்தைகள், வயது போன்றவற்றை அடிப்படையாக வைத்து ஆய்வுசெய்வார். ஒருவரின் வயதான காலத்திலோ அவரின் ஆரம்ப சுகாதார மூப்பு மருத்துவர் கூடுதலாக மேலும் சிலவற்றைச் சேர்த்துக் கொள்வார்: கையால் பிடிக்கும் பிடிக்கு எவ்வளவு வலு இருக்கிறது, நடை வேகம், காதின் கேட்புத் திறன், மூப்பைக் குறித்த நடத்தை, சமூகத்தோடு தன்னைப் பிணைத்துக்கொள்ளுதல் போன்றவற்றின் அடிப்படையிலும் அவரை ஆய்வுசெய்வார். வயதான ஆண்களும் (பெண்களும்தான்) உடல்நலப் பராமரிப்புக் கட்டமைப்பை நம்பியிராமல், சில காரியங்களைச் செய்ய வேண்டும். தினசரி உடற்பயிற்சி, தசையை வலுவாக்கவும் நடக்கும்போது உடலுக்குச் சமநிலை கொடுப்பதற்கும் கொஞ்சம் ஏரோபிக் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். நிறைய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் உண்ண வேண்டும். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். காதின் கேட்புத் திறன் குறைவதுபோல் இருந்தால் மூளையின் செயல்பாட்டையும் சமூக வாழ்க்கையையும் காப்பாற்றிக்கொள்ள உடனே காதொலிக் கருவியைப் பொருத்திக்கொள்ள வேண்டும். எதிலாவது ஈடுபட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஓய்வு மனப்பான்மைக்கு வந்துவிடக் கூடாது. சம்பளத்துக்கோ சம்பளம் இல்லாமலோ புதிய வேலை ஒன்றில் ஈடுபட வேண்டும். அர்த்தமுள்ள உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆகவே, உங்கள் எதிர்கால மூப்புக்கு இப்போதே தயாராகிக்கொள்ளுங்கள். அப்போதுதான் அது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். முதிய வயதில் வாழ்க்கை என்பது வித்தியாசமானதாக இருக்கும். ஆனால், மேம்பட்ட உடல்நலத்துக்கும் வாழ்க்கைநலத்துக்கும் தேவையான அடிப்படை முயற்சிகள் சிலவற்றை எடுத்தால், இளம் பருவத்தில் உள்ளதைப் போல் மட்டுமல்ல, அதைவிடச் சிறப்பானதாக முதிய வயது அமையும். தமிழ் இந்து- எங்கம்மா மேலேயா கைய வச்ச...?
எங்கம்மா மேலேயா கைய வச்ச...? பெய்ஜிங்: சீனாவில் தன் தாய் மீது மோதிய காரை கோபம் கொண்ட சிறுவன் காலால் எட்டி உதைத்து ஆவேசமாக திட்டி தனது கோபத்தை காட்டும் காட்சி வைரலாகி வருகிறது. தென்மேற்கு சீனாவின் சாங்குவிங் மாகாணத்தில் பெண் ஒருவர் தனது மகனை அழைத்து கொண்டு கடைக்கு சென்றார். பொருட்களை வாங்கிய பின்னர் தனது சிறுவனை கையில் பிடித்தவாறு சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் அந்த பெண் மீது மோதியது. இதனால் நிலைத்தடுமாறிய பெண் தனது மகனுடன் கீழே விழுந்தார். தனது தாய்க்கு காயம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என பார்த்துவிட்டு கோபம் கொண்ட சிறுவன் அந்த காரை இரு முறை எட்டி உதைத்தார். பின்னர் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்த அவரிடம் சிறுவன் ஆவேசமாக கத்தினான். பின்னர் மீண்டும் தாய்க்கு ஏதேனும் ஆகிவிட்டதா என அழுது கொண்டே பார்க்கிறான். இதையடுத்து அந்த பெண்ணையும் சிறுவனையும் அந்த நபர் தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். இந்த வீடியோ மூலம் சிறுவன் தனது தாய் மீது வைத்துள்ள பாசம் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஒன் இந்தியா- ஆறுதல் தருமா என்கவுண்டர் நீதி?
ஆறுதல் தருமா என்கவுண்டர் நீதி? ஹைதராபாத் பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 குற்றவாளிகளும் இன்று அதிகாலையில் தெலங்கானா காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட என்கவுண்டர் அல்ல எனக் கருதப்படுகிறது. ஆயினும், நீதி கிடைப்பதற்கு வருடக் கணக்கில் தாமதம் நீடித்து வரும் பாலியல் குற்ற வழக்குகளில் ஒன்றான இதில் மக்களின் மனக்கொதிப்பு அடங்குவதற்குள்ளாக காவல்துறையினரால் வழங்கப்பட்டுள்ள இந்த எதேட்சாதிகாரமான நீதியானது பெருவாரியான பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. காரணம், இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் பாலியல் பலாத்கார குற்றங்களும். அவற்றில் குற்றவாளிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகளில் நிலவும் கால தாமதங்களும் தான். உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளை அரசு செலவில் சிறைச்சாலையில் வைத்துப் பராமரித்துக் கொண்டும் அவர்கள் தரப்பு நியாயமென வாதிடும் ஒரு கூட்டம் உருவாக வாய்ப்பளித்துக் கொண்டும் இருப்பதை மக்கள் எந்நாளும் பொறுத்துக் கொள்ள விரும்புவதே இல்லை. ஆயினும், இந்தியாவில் கடந்தாண்டுகளில் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை வழக்குகளைக் கணக்கிலெடுத்து ஆராய்ந்தால் அவற்றில் முறையான தண்டனை வழக்கப்பட்ட வழக்குகள் வெகு சொற்பமே என்பது புரியும்! போரூர் சிறுமி கொலை வழக்கு போரூர், மதனந்தபுரத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான தஷ்வந்துக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்த போதும் அவருக்கான தண்டனை நிறைவேற்றத்தில் இன்று வரை காலதாமதமே நிலவி வருகிறது. இந்த வழக்கில் குற்றம் நிகழ்ந்தது 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி. அப்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கைதாகி சிறை சென்றவர் பின்னர் ஜாமீனில் வெளியில் வந்து பெற்ற தாயையும் கொன்று விட்டு மும்பைக்குத் தலைமறைவானார். தப்பிச் சென்றவரை டிசம்பர் 2018 ல் மீண்டும் காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நிகழ்த்தப்பட்ட விசாரணையில் தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆயினும் அவ்வழக்கில் உடனடியாகத் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில், தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது 2019 ஜூலை மாதம் 10 ஆம் தேதி தஷ்வந்துக்கான தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆயினும் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு இருந்ததால் அதையும் பயன்படுத்திக் கொள்ள தஷ்வந்த் தரப்பு தயங்கவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தஷ்வந்த் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து அளித்த தீர்ப்பில், அரசியல் சாசன பிரிவு 302 ன் படி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை சரி தானா? என்று கேள்வி எழுப்பியதோடு, இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்து விட்டனர். போரூர் சிறுமி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் அந்த அப்பாவிச் சிறுமிக்கான நீதி இப்படிப் பல வகையில் இன்று வரையிலும் தாமதப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீள்வதற்குள் கடந்தாண்டு காஷ்மீரின் கதுவா பகுதியில் நிகழ்த்தப்பட்ட மிகக்கொடூரமான பலாத்காரம் கொலைவழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கான நீதியும் கூட இதே விதமாக மந்தகதியில் தான் ஊர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது. தேசிய அளவில் கவனம் கிடைத்த வழக்குகள் தவிர்த்து சென்னை, திருமுல்லை வாயலில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி வழக்கில் சமீபத்தில் குற்றவாளிகள் இருவருக்கும், வயது வரம்பை முன்னிட்டு , சீனியர் சிட்டிஸன் என்ற பெயரில் சிறைவாசத்தில் இருந்து விடுபட்டு வாழ ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது மக்களிடையே பலத்த கண்டனத்திற்கு உள்ளானது. கொலை வழக்குகளுக்கே இந்தக் கதி என்றால் பாலியல் பலாத்காரம் மட்டுமே என்ற நிலையில் பதிவாகி உள்ள வழக்குகளின் குற்றவாளிகளில் பலரும் இன்றளவும் ஒன்று சிறையில் காலம் தள்ளிக் கொண்டிருப்பார்கள், அல்லது ஜாமீனில் வெளியில் வந்து மீண்டும், மீண்டும் குற்றங்களை நிகழ்த்தக்கூடிய அளவுக்கு அச்சமின்றி குளிர் விட்டுப் போயிருப்பார்கள். இதற்கொரு முன்னுதாரணம் தான் பரோலில் வெளிவந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் என நேற்று முழுவதும் இணைய ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருந்த செய்து ஒன்று. கதுவா சிறுமி கொலை வழக்கு காஷ்மீர், கதுவா மாவட்டத்தில் 8 வயதுச் சிறுமி ஒருத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அந்த வழக்கில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான நீதி விசாரணை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. அங்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஊர் தலைவர் சஞ்சய் ராம், அவரது மகன், மற்றும் காவல்துறை அதிகாரி தீபக் ஹஜூரியா உள்ளிட்ட 6 பேரை குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கினர். வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் சிறுவன் என்பதால் அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. ஆக, கதுவா சிறுமி கொலை வழக்கிலும் உரிய நீதியை உடனுக்குடன் பெற முடியாத நிலையே இன்று வரையிலும் நீடிக்கிறது. இந்த இரு சிறுமிகளின் கொலை வழக்குகளைப் போலவே 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி மேலுமொரு பாலியல் பலாத்கார வழக்கு தேசிய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பலத்த கண்டனங்களை எழுப்பி ஓய்ந்தது. நிர்பயா கொலை வழக்கு என்ற பெயரில் உலகை உலுக்கிய அந்த கொடூர பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கின் பாதிப்பில் இருந்து மக்கள் இன்றும் வெளிவந்தார்களில்லை. நிர்பயா கொலை வழக்கு புது தில்லியில், ஓடும் பேருந்தில் நிர்பயா ஓரிரவு முழுவதும் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு மிகக்கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டிருந்தார். அந்தப் பெண் குற்றுயிரும், குலையுயிருமாக மீட்கப்பட்டு அரசு செலவில் சிங்கப்பூரில் சிகிச்சை பெற அனுப்பப்பட்டும் கூட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிர்பயா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரில் ஒருவரை மைனர் எனக் காரணம் காட்டி தூக்குத் தண்டனையில் இருந்து விடுவித்தது நீதிமன்றம். அவருக்கு திருந்தி வாழவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல். எஞ்சிய குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதும், அவர்களுக்கான தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இங்கே நாம் குறிப்பிட்டாக வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம். பாலியல் பலாத்கார வழக்குகளில் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கத் தயங்கிய காலங்களும் நம் நாட்டில் இருந்திருக்கின்றன என்பதே! அருணா செண்பக் பலாத்கார வழக்கு... 1973 ஆம் வருடம் நவம்பர் 27 ம் தேதி மும்பையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியாக வேலை பார்த்து வந்த அருணா செண்பக்கை, அதே மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் மிகக்கொடூரமாகப் பாலியல் பலாத்காரம் செய்து, தன் தவறை மறைக்க அருணாவை நாய்ச்சங்கிலியால் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றிருக்கிறார். இறந்து விட்டார் என விட்டுச் சென்ற நிலையில் அருணா, உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு விட்டார் என்ற போதிலும், அவருக்கான மிகப்பெரும் துன்பமே அதற்குப் பிறகு தான் ஆரம்பமானது. ஆம், கிட்டத்தட்ட தினம் தினம் செத்துப் பிழைக்கும் விதமாக சுமார் 42 ஆண்டுகளாக அதே மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சைக்கு உட்பட வேண்டியவரானார் அருணா. இன்று அருணா இறந்து விட்டார். ஆயினும் அவர் அன்று அனுபவித்த துன்பங்கள் இல்லையென்று ஆகி விடுமா?! அருணாவின் வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான சோஹன்லாலுக்கு தூக்குத் தண்டனையெல்லாம் அப்போது விதிக்கப்படவில்லை. அவருக்கு இரண்டு 7 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்தும் 1980 களில் அவர் விடுவிக்கப்பட்டு தனக்கென ஒரு வாழ்வைத் தனது சொந்த ஊரில் மேற்கொண்டதாகத் தகவல். சோஹன்லால் தனது தண்டனைக் காலத்துக்குப் பிறகு திருந்தி விட்டதாகக் கூட மீடியாக்களில் வெகு ஆண்டுகளுக்குப் பிறகு செய்திகள் வெளியாகின. ஆயினும் அன்று அருணா செண்பக்குக்கு நிகழ்ந்த கொடூரத்துக்கு நீதி கிடைத்தது என்று சொல்ல முடியாத நிலை தானே இன்றும் நீடிக்கிறது. இப்படி பெண்ணாகப் பிறந்து விட்ட ஒரே காரணத்துக்காக வயது வித்தியாசமின்றி பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுவதும் அவர்களுக்கான உரிய நீதி கிடைக்காமல் வழக்கு நடைமுறைகள் தாமதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதும் நம் நாட்டில் தொடர்கதையாகி வருகின்றன. இவ்வேளையில்... நாட்டையே உலுக்கிய பாலியல் பலாத்கார வழக்கொன்றில் குற்றவாளிகள் மீதான மக்களின் கொந்தளிப்பு அடங்குவதற்குள் அவ்வழக்கில் தெய்வமே கொடுத்த தீர்ப்பைப் போல குற்றவாளிகள் என் கவுன்டர் செய்யப்பட்டிருப்பது பெருவாரியான மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. இப்படிப்பட்ட திடீர் திருப்பங்கள் தமிழகத்திலும் முன்பொரு பாலியல் பலாத்கார இரட்டைக் கொலை வழக்கில் நிகழ்ந்ததுண்டு. கோவை சிறுமி கொலையில் உடனடி என்கவுன்டர் நீதி 2010 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த மொத்த இந்தியாவையும் உலுக்கிய மற்றொரு பாலியல் பலாத்காரம் மற்றும் இரட்டைக் கொலை வழக்காக கோவை சிறுமி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு அமைந்தது. கோவையில் தனியார் பள்ளியில் படித்து வந்த 11 வயதுச் சிறுமி ஒருத்தி, அவளது 8 வயதுச் சகோதரனுடன் சேர்த்து அவர்களுக்கு நன்கு பழக்கமான பள்ளி வேன் டிரைவரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி அருகே மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது சிறுமி கொல்லப்படுவதற்கு முன்பு பலாத்காரத்துக்கு உள்ளானது தெரிய வந்தது. இந்த சம்பவத்தை அறிந்ததும் மொத்த தமிழ்நாடும் கொதிப்புக்கு உள்ளானது. மக்கள் ஒருமித்த குரலில் குற்றவாளிகளைத் தூக்கிலிடுமாறு குரல் எழுப்பினர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான மனோகரன் மற்றும் மோகன்ராஜ் இருவரில் மோகன்ராஜ் காவல்துறை விசாரணையில் இருக்கும் போதே காவலில் இருந்து தப்ப முயன்று என்கவுன்டருக்கு உள்ளானார். அந்த என்கவுன்டரையும் மக்கள் பலத்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். ஏன், கோவை மக்கள், மோகன் ராஜின் என்கவுன்டர் மரணத்தை நரகாசுர வதம் போல எண்ணி வெடி வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பதாக் கூட கேள்வி! இவ்வழக்கில் எஞ்சியிருந்த மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு பல கட்ட நீதி விசாரணைகளுக்குப் பிறகு தற்போது உச்சநீதிமன்றத்தில் இந்தாண்டு தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையும் நீதிக்கு கிடைத்த தாமதமான வெற்றி என மக்கள் வரவேற்றனர். என்கவுண்டருக்கு பெருகும் வரவேற்பு இப்படி சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார கொலை வழக்குகளைப் பொருத்தவரை, இந்தியாவில் நீதி கிடைப்பதென்பது தாமதப்பட்டுக்கொண்டே இருக்கும் நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரும் மன உளைச்சல்களைப் பற்றியும் தொடர்ந்து விவாதங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அப்பொதெல்லாம் மக்கள் ஒருமித்த குரலில் தங்களது கருத்தாகப் பதிவு செய்ய நினைப்பது 'தூக்கில் போடுங்க!' என்பதையும் தாண்டி ‘என்கவுண்டர் செய்யுங்க!’என்பதாகத்தான் இருக்கிறது. அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கையில், இன்று அதிகாலை நிகழ்த்தப்பட்ட ஹைதராபாத் என்கவுண்டரையும் மக்கள் ஏகோபித்த குரலில் வரவேற்றிருக்கிறார்கள் என்பது நிஜம். என்கவுண்டர்கள் நிரந்தரத் தீர்வுகள் அல்ல, எனினும் சுடச்சுட கிடைத்துவிட்ட இந்த தீர்ப்பில், குற்றவாளிகள் நால்வரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதே மக்களை ஒருவகையில் தற்காலிகமான நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் என்கவுண்டர்களை வரவேற்கிறார்களா, ஆட்சேபிக்கிறார்களா? என்பதைத் தாண்டி, இதில் யோசிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம், இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இதே விதமான நீதி கிடைக்க முடியாதே என்பதுதான்! தினமணி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை சகாறா, ரஞ்சித் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!- சென்னை மெட்ரோ ரயில் - பாகம் 2
Update: தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் வண்ணாரப்பேட்டை சென்னை விமான நிலைய மெட்ரோ வழித் தடத்தை மேலும் நீட்டிக்கும் விதமாக வண்டலூர் அருகே அமையவிருக்கும் மாநகர பேருந்து முனையமான கிளாம்பாக்கம் வரை ரூ.3500 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரயில் வரவிருக்கிறது. இந்த வழித்தடம் தென் தமிழகத்தை நோக்கி செல்லும் பிரதான சாலையின்(Grand Southern Trunk Road - GST) நடுவே 15 மீ உயர தூண்கள் அமைக்கப்பட்டு, உயர்மட்ட மெட்ரோ வழித்தடமாக இருக்கும். டைம்ஸ் ஆஃப் இந்தியா- குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்..
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால், தென் மாவட்ட மக்களுக்கு இனிப்பான செய்தி குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளால் தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் விண்வெளி ஆய்விலும், ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்துவதிலும் அமெரிக்கா, ரஷியாவுக்கு சவால் விடும் வகையில் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. உலக அளவில் மிக மிக குறைந்த செலவில் விண்ணுக்கு ராக்கெட்டுகளை அனுப்புவதில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. இதனால்தான் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து உள்பட வளர்ந்து விட்ட அனைத்து நாடுகளும் தங்களது செயற்கைகோள்களை மிக சுலபமாக விண்ணுக்கு அனுப்ப இந்தியாவின் உதவியை நாடி வருகின்றன. இஸ்ரோவின் இந்த வளர்ச்சி நமது எதிரி நாடான சீனாவின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு போட்டியாக சீனா சில புதுமையான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இஸ்ரோவுக்கு போட்டியாக புதிய ஏவுதளங்களை உருவாக்கி வருகிறது. இதையடுத்து இந்தியாவும் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆந்திராவில் சென்னைக்கு அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்துதான் ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்தி வருகிறார்கள். அங்கு இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. எதிர்காலத்தில் மேலும் 2 ராக்கெட் ஏவுதளங்கள் தேவை என்ற நிலையில் நாடு முழுவதும் பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சில மாநிலங்கள் அந்த வாய்ப்பை தட்டி பறிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கின. ஆனால் தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாட்டின் தென் பகுதியில் ராக்கெட் ஏவு தளம் அமைந்தால் அது எதிர்கால தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்ற கருத்து அதிகரித்தது. தென் தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்ட கடலோர பகுதிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இறுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு மிக அருகில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைக்கலாம் என்று முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தனர். உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய நாடுகள் அமைப்பு, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் ராக்கெட் ஏவுதளங்கள் வெவ்வேறு 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப அடிப்படையில் 2 இடங்களில் ராக்கெட் ஏவு தளம் இருப்பதுதான் சிறப்பானது, பாதுகாப்பானது என்ற அடிப்படையில் வளர்ந்த நாடுகள் அதை செய்துள்ளன. எனவே குலசேகரப்பட்டினத்தில் 3-வது, 4-வது ராக்கெட் ஏவு தளத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த வார இறுதியில் பாராளுமன்றத்தில் மத்திய அணுசக்தி துறை மந்திரி ஜிதேந்திரசிங் இதை உறுதிப்படுத்தினார். குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார். குலசேகரப்பட்டினம் இயற்கையாகவே விண்ணுக்கு ராக்கெட்டை அனுப்பும் சூழலில் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒவ்வொரு தடவையும் ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்தும்போது தெற்கு நோக்கி செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்டை ஏவும் போது அப்படி ஏவு முடிவது இல்லை. அதற்கு காரணம் இலங்கை குறுக்கிடுவது தான். சர்வதேச அளவில் ஒரு நாடு தனது விண்கலத்தை விண்ணுக்கும் செலுத்தும் போது மற்ற நாட்டின் மீது பறக்க விடக்கூடாது என்று விதி உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படும்போது அதன் நிலைகள் இலங்கை மீது விழுந்து விடாதபடி கவனமாக செலுத்த வேண்டியது உள்ளது. இலங்கை மீது பறப்பதற்கு முன்பாகவே ராக்கெட்டின் முதலாம், இரண்டாம் நிலைகள் எரிந்து கடலில் விழும் வகையில் செலுத்தப்பட வேண்டியது உள்ளது. அதுமட்டுமின்றி ராக்கெட்டை அதிகப்படியாக திசை திருப்பி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பறக்க விடப்படும் ராக்கெட்டுகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது இருப்பதோடு செலவும் அதிகமாகிறது. குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்தினால் மிக சீக்கிரத்தில் அது தெற்கு திசை சென்று விடும். அதை திசை திருப்ப வேண்டிய வேலையும் இல்லை. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளி பாதை 13 டிகிரி கோணத்தில் உள்ளது. ஆனால் குலசேகரப்பட்டினத்தில் இருந்து தெற்கு நோக்கிய விண்வெளி பாதை 8 டிகிரி கோணத்தில் அமைந்து இருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 13 டிகிரிக்கு ராக்கெட் செலுத்தப்படும்போது அது இலங்கையை சுற்றி 4 கட்டங்களாக பிரிந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டால் 3 கட்டங்களில் ராக்கெட்டை செலுத்தி விடலாம். இதனால் செலவும் மிக மிக குறைவு. அதாவது ஒவ்வொரு தடவையும் ராக்கெட்டை செலுத்தும்போதும் 120 கோடி ரூபாய் மிச்சமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான எரிபொருளும் மிக மிக குறைவாகவே தேவைப்படும். மேலும் மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருள் மையம் குலசேகரப்பட்டினத்திற்கு மிக மிக அருகில் உள்ளது. எனவே ராக்கெட்டுக்கு தேவையான திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களை மகேந்திரகிரியில் இருந்து உடனடியாக கொண்டு வந்து விட முடியும். இவை மட்டுமின்றி ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினம் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. தட்பவெட்ப சூழ்நிலையும் ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினத்தில் அதிக சாதகமாக உள்ளது. இதனால்தான் ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இது தவிர ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினத்தில் அதிக எடையுள்ள விண்கலத்தை விண்ணுக்கு செலுத்த முடியும். மங்கள்யான் விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 1,350 கிலோ எடையுடன் ஏவப்பட்டது. அது குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவப்பட்டு இருந்தால் 1,800 கிலோ எடை வரை சுமந்து சென்று இருக்கும். எனவே எதிர்காலத்தில் அதிக எடையுள்ள செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்துவதற்கு குலசேகரப்பட்டினம்தான் மிக மிக ஏற்றது என்ற முடிவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளும், மத்திய அரசும் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது முதல் கட்டமாக ராக்கெட் ஏவுதளத்துக்கு தேவயான 2,300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. குலசேகரப்பட்டினத்தில் 3 கிராமங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள மாதவன் குறிச்சி, படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி ஆகிய 3 ஊர்களில் குறிப்பிட்ட பகுதிகள் ராக்கெட் ஏவுதளத்துக்கு தேவைப்படுவதாக கருதப்படுகிறது. இந்த ஊர்களில் நிலம் கையக்கப்படுத்துவதற்காக தற்காலிகமாக திருச்செந்தூரில் அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. 8 பிரிவுகளை கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த அலுவலகத்தில் பொறுப்பு ஏற்று செயல்பட தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 13 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவும் தாசில்தார் தலைமையில் இயங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் செயல்படுவதை கண்காணிக்க டி.ஆர்.ஓ. பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்களது முதல் கட்ட பணிகளை தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அடிக்கடி பார்வையிட்டு வருகிறார். கலெக்டர் சந்தீப் நந்தூரி இது தொடர்பாக கூறுகையில், “ராக்கெட் ஏவு தளத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தனியார் நிலங்கள் கையகப்படுத்தும்போது அதற்குரிய இழப்பீடுகள் சட்டப்படி வழங்கப்படும். ராக்கெட் ஏவு தளத்துக்கான 2,300 ஏக்கரில் 80 சதவீதம் இடம் பட்டா நிலங்களாக உள்ளது. 20 சதவீதம் நிலம் அரசின் புறம்போக்கு நிலங்கள் ஆகும். மாதவன்குறிச்சி அருகில் உள்ள கூடல்நகர் என்ற கிராமத்தில் 27 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும். அவர்களுக்கு தேவையான அளவுக்கு இழப்பீடு கொடுக்கப்படும். அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். ராக்கெட் ஏவுதளத்துக்காக கையகப்படுத்தும் 2,300 ஏக்கரில் 1,781 ஏக்கர் இடம் மாதவன்குறிச்சி கிராம சுற்று வட்டாரத்தை கொண்டு இருக்கும். அங்கு 131 ஏக்கர் இடம் அரசின் புறம்போக்கு நிலங்களாக உள்ளது. படுக்கபத்து மற்றும் பள்ளக்குறிச்சியில் 491 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். திருச்செந்தூர், கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் 22 ஏக்கர் நிலம் ராக்கெட் ஏவு தளம் பகுதிக்காக கையகப்படுத்தப்படும். குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள அமரபுரம், அழகப்பப்புரம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த பணியில் கிராம நிர்வாக அலுவலர்களும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் புராதான சின்னங்கள், கோவில்கள், மரங்களை கணக்கெடுத்து வருகிறார்கள். இன்னும் சில மாதங்களில் இந்த பணிகள் அனைத்தும் முடிவு பெற்று விடும். அதன் பிறகு ராக்கெட் தளம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும். 2 ஆண்டுகளில் ராக்கெட் தளத்தை அமைத்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சில ஆயிரம் கோடி ரூபாய்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து விண்ணுக்கு ராக்கெட்டை ஏவி விடவேண்டும் என்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகளும் தீவிரமாக உள்ளனர். குலசேகரப்பட்டினத்தை விரைவாக தயார் படுத்தினால்தான் சீனாவுக்கு பதிலடி கொடுத்து சர்வதேச அளவில் விண்வெளி வர்த்தகத்தில் வெற்றி பெற முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இந்த திட்டம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இது தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு தென் மாவட்ட மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த திட்டம் பற்றி பேசப்பட்டபோது தென் மாவட்ட மக்களிடம் எதிர்பார்ப்பு உருவானது. 2013-ம் ஆண்டு முதல் இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடம் கனிமொழி எம்.பி. தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதோடு தென் மாவட்ட மக்கள் சார்பிலும் மனுக்கள் வழங்கப்பட்டன. அவை அனைத்துக்கும் வெற்றி கிடைக்கும் வகையில் தற்போது குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளத்துக்கான தொடக்க பணிகள் நடந்து வருகின்றன. இது தென் மாவட்ட மக்களுக்கு இனிப்பான செய்தியாக மாறி உள்ளது. ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி கடலோர பகுதிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி வருகின்றன. தூத்துக்குடி துறைமுகம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. அவற்றுக்கு இடையே குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தளமும் சேர்ந்து கொள்ளும்போது தென் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி பிடிக்கும். இது தென் தமிழக மக்களின் வாழ்வையே நிச்சயமாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. மாலை மலர்- பனிவிழும் மலர்முகம் - லண்டன்..!
இருபது வருடங்களாக கடும் (சில சமயம் 50பாகை) வெப்பத்ததையே பார்த்து பழகிய எனக்கு, கடந்த இரு வருடத்தில் இரண்டு முறை இங்கிலாந்து செல்லும் வாய்ப்பு கிட்டியது. வடக்கு அயர்லாந்தில் 4 பாகை குளிரைக் கண்டு அரண்டு போய் அறைக்குள்ளேயே ஒடுங்கியிருந்தேன். கடந்த மாதம் லண்டன் சென்று முக்கிய இடங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது. நான் பார்த்து ரசித்த பிரசித்திபெற்ற இடங்கள் கீழேயுள்ள காணொளியில் உறைபனியில் போர்த்தியிருப்பதை காணும்போது இன்னும் கால்கள் சில்லிடுகின்றன. வெப்பத்தையாவது தாங்கிக்கொள்ளலாம், ஆனால் இந்தக் குளிரையும், பனிக்கட்டிகளையும் காணும்போது 'எப்படி இவற்றை தாங்கி வாழ்கிறார்கள்..?' என வியப்பு மேலிடுகிறது.- தொடுவதென்ன.. தென்றலோ, மலர்களோ..?
கிராமத்தின் பள்ளிப் பருவத்தில், இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பபட்டு, நான் விரும்பிக் கேட்ட பாடல் இது..! ஏறக்குறைய 45 வருடங்கள் கழித்து, அதே பாடலை யாழ்ப்பாணத்தில்(2016) எஸ்.பி.பி பாடியபோது..! 😎- மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..!
எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது, அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..! அவள் மானுடப் பெண் என்றாலும், அவளை மணந்து, அவளுடன் வாழவேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது..!! அந்த மானுடப் பெண்ணை மணந்து, அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பன் ஆனார் எமதர்மன்.. அவர் மணந்த பெண் நல்லவள் தான்..என்றாலும் நாளாக, நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.. 'மேல் உலகம் போய் தப்பிவிடலாமா..?' என்று நினைக்க ஆரம்பித்தார்.. மனைவியை பிரிந்து செல்ல முடிவு செய்தார்..! ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால், மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை..!! தத்தளித்தார்.. மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார்.. "மகனே..! நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்.. மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்.. எப்படித் தெரியுமா..? ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால், நான் அங்கு இருப்பேன்.. உனக்கு மட்டும் நான் கண்ணுக்குத் தெரிவேன்.. நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே.. நீ வைத்தியம் செய்து, அவர் இறந்து போனால், உன் புகழ் குறையும்..! எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும், நான் அங்கு இல்லையென்றால், தைரியமாக மருந்து கொடு.. அவன் பிழைத்து எழுந்து கொள்வான்.. அதனால் உன் புகழ் மேலும், மேலும் பரவும்..!!" என்றார் எமன்.. மகனை அணைத்து கண்ணீர் விட்ட எமதர்மன், மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் இவ்வுலகை விட்டு நழுவி விட்டார்.. மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான்.. அவன் வைத்தியம் செய்தால், எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான்..! ஒருவர் கூடச் சாகவில்லை.. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள்..!! யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது, எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான்.. இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது..! கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள்.. யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை.. இவனை அழைத்தார்கள்.. "என் மகளைக் காப்பாற்றினால், அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன்" என்றார் ராஜா..! அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி..! எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார்..!! 'வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள்.. ஆனால் பிழைத்துவிட்டால், அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.. இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார்.. எப்படி அவரை விரட்டுவது..?' 'பளிச்'சென்று யோசனை பிறந்தது.. வாசல் பக்கம் பார்த்து கத்தினான்..! "அம்மா....! அப்பா உள்ளே இருக்கார்.. ரொம்ப நாளா அப்பாவைக் காணோம், காணோம்னு தேடினேயே..!! இங்க இருக்கார்..!!!" என்று அலறினான். அவ்வளவுதான், 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்' என்று எமன் ஒரே ஓட்டமாக ஓடியே விட்டார்..! நீதி.. 👇 'எமனாயிருந்தாலும் சரி, இல்லை எவனாயிருந்தாலும் சரி.. பொண்டாட்டிக்கு பயந்தே தான் ஆகணும்..!' 😎😋 - 'வாட்ஸ் அப்'பில் வந்தது..!- ராஜா ராஜா சோழன் நான் எனும் ........
வணக்கம், வருக Mr.ஏராளன்..! - தமிழர்களின் எழுத்தறிவு..
Important Information
By using this site, you agree to our Terms of Use.