Everything posted by ரசோதரன்
-
குற்றமே தண்டனை
நிச்சயமாக, கற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் சேகர் போன்றோரும் நல்லாகவே வந்திருப்பார்கள். சேகரை கிணற்றுகுள் தள்ளி விட்டது போல, நாங்கள் பலரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு தவறை நிதானம் இழந்து செய்து விட்டு, அந்தக் குற்ற உணர்வை வாழ்க்கை முழுவதும் உணர்ந்து, குறுகிக் கொண்டேயிருக்கின்றோம். எல்லாவற்றையும் விட பெரிய தண்டனை இது.
-
குற்றமே தண்டனை
(குறுங்கதை) குற்றமே தண்டனை --------------------------------- நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது சேகர் எங்கள் வீட்டிற்கு வந்தான். ஒரு நாள் ஐயா சேகரை கூட்டி வந்தார். சேகருக்கும் எனக்கும் ஒரே வயது. மலையகத்தைச் சேர்ந்தவன். யாழில் ஒரு வீட்டில் வேலைக்காக அனுப்பப்பட்டிருக்கின்றான். அந்த வீட்டுக்காரர்களின் கொடுமை தாங்க முடியாமல், தப்பி ஓடிக்கொண்டிருந்த சேகரை ஐயா யாழ்ப்பாண பேரூந்து நிலையத்தில் வைத்துக் கண்டதாகச் சொன்னார். நாங்கள் அப்போது ஏழு பிள்ளைகள். எட்டாவது தம்பி இன்னும் பிறக்கவில்லை. சேகர் தற்காலிகமாக எட்டாவது பிள்ளை ஆகினான். சேகரை சேகரின் ஊர், தாய் தந்தையர் விவரம் அறிந்த பின், அவனின் வீட்டாரை எச்சரித்து, அங்கு கொண்டு போய் விடுவதாக ஐயா அம்மாவிற்கு ஒரு தகவலாக மட்டுமே ஒரு இரவில் சொல்லிக் கொண்டிருந்தார். அம்மா மிகுந்த இரக்கமுள்ளவர். ஆனாலும் ஏற்கனவே ஏழு குஞ்சுகளுக்கு தினமும் இரை தேடும் ஒரு தாய்ப்பபறவையின் நிலையிலேயே அம்மா இருந்தார். அம்மாவின் தவிப்புகள் எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஐயாவிற்கு எட்டாவது நிரந்தரப் பிள்ளை ஒன்றிற்கான திட்டம் இருந்ததும் அம்மாவிற்கு அப்போது தெரிந்தே இருக்காது. சேகரை பள்ளிக்கூடம் அனுப்பவில்லை. இது அநியாயம், அக்கிரமம் என்று உடனேயே முடிவெடுத்துவிடாதீர்கள். என்னையே அப்பொழுது தான் பள்ளிக்கூடம் அனுப்ப ஆரம்பித்திருந்தனர், அதுவும் அக்கம்பக்கம் இருந்தவர்களுக்குப் பயந்து. இரண்டாம் வகுப்பு எனக்கு அரிவரியே, முதலாம் வகுப்பின் பிற்பகுதியில் தான் நானே பாடசாலையை ஆரம்பித்திருந்தேன். நான் பள்ளிக்கூடம் விட்டு வந்தால், சேகரும் நானும் எப்போதும் ஒன்றாகவே விளையாடுவோம். சேகர் உடல் மிகவும் உறுதியானவன். வேகமானவனும் கூட. ஒருநாள் ஒரு தென்னந்தோப்பிற்கு எங்களிவரையும் கூட்டிச்சென்றனர். நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள். தென்னை மரங்களில் பாம்பு கீறும் வேலையை எங்களிருவருக்கும் கொடுத்தனர். கறுப்பு மையால் வளைச்சு வளைச்சு தென்னை மரத்தில் பாம்பு கீறவேண்டும். பாம்பின் தலைப்பக்கம் கொஞ்சம் பெரிதாக இருக்க வேண்டும், வால் பக்கம் மெல்லிதாக இருக்கவேண்டும். தேரையின் கண்ணுக்கு அது பாம்பாகத் தெரிய வேண்டும், அது தான் நிபந்தனை. தேரை தென்னையில் ஏறி, குரும்பைகளை மேய்ந்தால், தேங்காய்கள் ஒல்லித்தேங்காய்கள் ஆகிவிடும் என்பது ஐயாவினதும் அவர்களினதும் நம்பிக்கை. நான் இன்றுவரை இந்த பாம்பு - தேரை - ஒல்லித்தேங்காய் விசயத்தை எங்கும் தேடி உறுதிபபடுத்தவில்லை. பாம்பை விட வேறு ஏதாவது என்னைக் கீறச் சொல்லியிருந்தால், அது அதுவாக வந்தே இருக்காது. சித்திரம் அவ்வளவு மட்டுமட்டு. தேரையைத் தூக்கும் ஒரு பருந்தோ அல்லது ஒரு கழுகோ கீறி இருந்தால், அங்கிருந்த தேரைகள் நிச்சயமாக என் சித்திரத்தின் மேலால் தென்னைகளில் ஏறி ஒரு உயரத்தில் வாழ்ந்திருக்கும். ஒவ்வொரு பாம்புடனும் A, B, C, D இப்படி ஒரு எழுத்தையும் தென்னையின் மற்ற பக்கத்தில் போடலாமே என்று எனக்கு ஒரு யோசனை திடீரெனத் தோன்றியது. அப்பொழுது தான் நான் இரண்டாம் வகுப்பில் ஆங்கிலப்பாடம் படிக்க ஆரம்பித்திருந்தேன். நான் அதை சேகருக்கும் சொன்னேன். அவனும் அதை ஏற்றுக்கொண்டான். ஆனால் அவனுக்கு ஆங்கில எழுத்துகள் தெரியாது, தமிழ் எழுத்துகளும் தெரியாது. பாம்புகளைக் கீறி முடித்த பின், இருவருமாகச் சேர்ந்து A, B, C, D போடுவதாக முடிவெடுத்தோம். பாம்புகளை கீறிக்கொண்டிருக்கும் போது, சேகர் அடிக்கடி என்னிடம் வந்தான். இடையிடையே சின்னச் சின்ன ஓய்வு எடுப்பது போன்று. ஒவ்வொரு தடவையும் A என்றால் எப்படி இருக்கும், B என்றால் எப்படி இருக்கும் என்று கேட்டான். எழுதிக்காட்டினேன். பாவமாக இருந்தது, சேகரையும் எப்படியும் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும், அம்மாவிடம் மட்டுமே பேசலாம், அம்மாவையே கேட்போம் என்று நினைத்தபடியே என்னுடைய தென்னை மரங்களில் பாம்புகளைக் கீறி முடித்தேன். சேகர் எப்பவோ கீறி முடித்திருக்கவேண்டும். அவனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பக்கத்தை நோக்கி நடந்தேன். அவனுடைய தென்னை மரங்களையும், பாம்புகளையும் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டேன். ஒவ்வொரு பாம்பின் வாலுக்கு கீழும் ஒரு ஆங்கில எழுத்து எழுதப்பட்டிருந்தது. ஓடி ஓடிப் பார்த்தேன். 26 எழுத்துகளும் 26 பாம்புகளின் வால்களில் எழுதப்பட்டிருந்தது. அப்படியே முட்டி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு அங்கேயே நின்றேன். எனக்கு தெரிந்த முழு ஆங்கிலத்தையும் அவனுக்கு சொல்லிக் கொடுத்திருந்தேன், ஆனால் இவன் என்னை ஏமாற்றி விட்டானே என்று. கோபமும் அழுகையும் கரையை உடைக்கக் காத்திருந்தன. வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் சேகர் என்னிடம் எதுவும் கதைக்கவில்லை, நானும் தான். வீட்டிற்கு வந்த பின்னர், இருவரும் குளிப்பதற்காக கிணற்றடிக்குப் போனோம். பெரிய வட்டக் கிணறு. எப்போதும் ஆறு அடிகளுக்கு தண்ணீர் நிற்கும். மாறி மாறித் தண்ணீர் இறைத்துக் குளிப்பது எங்கள் வழக்கம். சேகர் முன்னால் நின்று தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். ஒரு கணம் தயங்கி விட்டு, அப்படியே சேகரைப் பிடித்துத் தள்ளி விட்டிட்டேன். 'அய்யோ' என்ற அவனின் குரல் முடிவதற்குள் பெரிய சத்தத்துடன் சேகர் தண்ணீருக்குள் போய்விட்டான். அம்மாவும், வேறு ஆட்களும் ஓடிவந்தனர். பக்கத்து வீட்டு அண்ணன் ஒருவர் மிக இலகுவாக கிணற்றுக்குள் காலை கீழே விட்டுப் பாய்ந்து, சேகரை தண்ணீருக்குள் இருந்து தூக்கி எடுத்தார். சேகர் தானே தவறி கிணற்றுக்குள் விழுந்ததாகவே சொன்னான். எனக்குப் பக்கத்திலேயே ஒட்டிக்கொண்டே இருந்தான். இரவாகியது. ஐயாவிற்கும் அம்மாவிற்கும் ஒரே வாய்த்தர்க்கம். அம்மா ஒரே விசயத்தையே ஐயாவிடம் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார், சேகருக்கு எதுவும் ஆகியிருந்தால் நாங்கள் இந்த உலகத்திற்கு என்ன பதில் சொல்வது என்று. நானும் சேகரும் அப்படியே நித்திரை ஆகிவிட்டோம். காலை எழும்பி அவசரம் அவசரமாக நான் பள்ளிக்கூடத்திற்கு போவதற்கு ஆயத்தமானேன். சேகரும் எழும்பி விட்டிருந்தான். பள்ளிக்கு கிளம்பும் போது, வாசலில் நின்று திரும்பிப் பார்த்தேன், சேகர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். அன்று வகுப்பில் இதே நினைவு மட்டுமே. சேகர் எப்படியும் வீட்டில் என்னை மாட்டி விட்டுவிடுவான் என்று மனம் சொல்லிக்கொண்டேயிருந்தது. பள்ளிக்கூடம் முடிந்து பயத்துடன் வீட்டிற்குள் மெதுவாக நுழைந்தேன். சேகரைக் காணவில்லை. அவனை எங்கும் காணவில்லை. மெதுவாக அம்மாவிடம் போய் சேகர் எங்கே என்று கேட்டேன். சேகரைக் கூட்டிக்கொண்டு ஐயா மஸ்கெலியாவிற்கு போயிருப்பதாக அம்மா சொன்னார். மஸ்கெலியாவில் சேகரின் தாய் தந்தை இருப்பதாகவும் அம்மா சொன்னார். சேகர் அழுதுகொண்டே போனதாகவும் அம்மா சொன்னார், சொல்லும் போதே அம்மாவின் குரலிலும் ஒரு அழுகை தெரிந்தது. நான் அன்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தேன். தொண்டை அடைத்த பின், கண்ணீர் ஓட இருந்தேன். மஸ்கெலியாவிலிருந்து ஐயா மட்டும் திரும்பி வந்தார். அதன் பின் சேகர் பற்றி எங்கள் வீட்டில் எவரும் கதைக்கவில்லை. நானும் ஐயாவையோ அம்மாவையோ எதுவும் கேட்டதும் இல்லை.
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
மிகுதி 12 வீத வாக்குகளுக்கு என்ன நடந்தது, செல்லாதவை ஆகியிருக்குமோ....😀
-
என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே
நாகர்கோயில் கடலை நாங்கள் ஆண் கடல் என்று சொல்லுவோம். எப்போதும் அலை அடிக்கும் கடல். அப்பவும் நனையவில்லை....🤣
-
கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் : மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் !
இந்த தேரரையே ஒரு பல்கலைக்கழக வேந்தர் ஆக்கியதும் கோதா என்று தான் ஒரு ஞாபகம். கோதாவின் நிர்வாகத் திறமை அங்கேயே சறுக்கி விட்டுது போல....😀 யாராவது பயத்தில் ஓட ஆரம்பித்தால் எல்லோரும் துரத்துவார்கள், எல்லாம் துரத்தும். ஓடின கோதா அப்படியே எங்காவது போயிருக்கலாம்.
-
எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல்..? முழு விவரம் இதோ..!!
ஏழு கட்ட தேர்தல், மொத்தம் ஏழு வாரம். தேர்தலே 49 நாட்களா? முந்தாநாள் வரை 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்று விவாதித்து கொதித்துக் கொண்டிருந்தார்கள்....🤣
-
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: காலம் வெளி கடந்த மனிதன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களின் 145 வது பிறந்தநாளை ஒட்டி 'அருஞ்சொல்' இதழில் இயற்பியல் விரிவுரையாளரும், அறிவியல் எழுத்தாளருமான ஜோசப் பிரபாகர் அவர்களால் மார்ச் 14, 2024 அன்று எழுதப்பட்ட கட்டுரை இது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பற்றியும், அவரது ஆராய்ச்சிகள் பற்றியும் தமிழில் எல்லோருக்கும் புரியக் கூடிய வகையில் எழுதப்பட்ட மிகச் சிறந்ததொரு கட்டுரை இது. ********* ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: காலம் வெளி கடந்த மனிதன் -------------------------------------------------------------------------------- (ஜோசப் பிரபாகர். மார்ச் 14, 2024) மனித இனம் எத்தனையோ மகத்தான சிந்தனையாளர்களைக் கண்டிருக்கிறது. அந்த வரிசையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு வரலாற்றில் ஒரு தனிச் சிறப்புமிக்க இடம் உண்டு. இன்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் 145வது பிறந்தநாள். ஏன் ஐன்ஸ்டைன் இன்றும் கொண்டாடப்படுகிறார்? காரணம் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் வாழ்வு இந்த உலகத்தை அறிவியல்ரீதியாகவும், தத்துவார்த்தரீதியாகவும் பல்வேறு வழிகளில் மாற்றியது. சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் புகழ்பெற்ற வசனம் ஒன்று உண்டு, “நான் யாரோ பத்து பேர அடிச்சி டான் ஆனவன் கிடையாது. நான் அடிச்ச பத்து பேருமே டானுங்கதாண்டா” என்று. இவ்வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஐன்ஸ்டைனுக்குச் சிறப்பாக பொருந்தும். ஏனென்றால் ஐன்ஸ்டீன் ஏதோ ஒரு துறையில் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுப் புகழ்பெற்றவர் அல்ல. அவர் வெளியிட்ட ஒவ்வொரு ஆராய்ச்சிக் கட்டுரையும் பல புதிய ஆராய்ச்சித் துறைகளை உருவாக்கின. அந்த ஒவ்வொரு ஆராய்ச்சித் துறையும் பல்வேறு புதிய கிளை ஆராய்ச்சித் துறைகளை இன்று உருவாக்கியிருக்கின்றன. அது மட்டுமல்ல ஒவ்வொரு ஆராய்ச்சிக் கட்டுரையும் ஏற்கெனவே இருந்த அறிவியல் சிந்தனையை மெருகேற்றியது மட்டுமல்லாமல் அதுவரை யாருமே யோசிக்காத கோணத்தில் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய புதிய அறிவியல் கண்ணோட்டத்தை நமக்கு வழங்கியது. இந்தச் சிந்தனைப் புரட்சிதான் மனித குலத்துக்கு அவர் வழங்கிய மாபெரும் பங்களிப்பு. இயற்பியலின் அதிசய ஆண்டு 1905 இயற்பியல் வரலாற்றில் 1905ஆம் ஆண்டை ‘அதிசய ஆண்டு’ என்று அழைக்கிறார்கள். இயற்பியல் உலகைப் புரட்டிப்போடக்கூடிய நான்கு மிக முக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார் ஐன்ஸ்டைன். இந்தக் கட்டுரைகளை வெளியிடும்போது அவர் பேராசிரியரோ, பெரிய ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தவரோ அல்ல. சாதாரண காப்புரிமை அலுவலகத்தில் ஒரு மூன்றாம் நிலை காப்புரிமை எழுத்தராக பணிபுரிந்துவந்தார். முதல் ஆராய்ச்சிக் கட்டுரை ஒளியின் மிக முக்கியப் பண்பைப் பற்றியது. இரண்டாவது கட்டுரை அணுக் கோட்பாட்டைப் பற்றியது. மூன்றாவது ஆராய்ச்சிக் கட்டுரை புகழ்பெற்ற சார்பியல் கோட்பாடு. நான்காவது கோட்பாடு உலகப் புகழ்பெற்ற E=mc2 சமன்பாட்டைப்பற்றியது. இந்த நான்கு கட்டுரைகளும் இருபதாம் நூற்றாண்டு அறிவியலின் திசையை மாற்றி அமைத்தன. ஒளி என்பது அலையா துகளா? முதல் ஆராய்ச்சிக் கட்டுரை ‘ஒளி-மின் விளைவு’ பற்றியது. ஒளியானது பருப்பொருளோடு (அணுக்களோடு) மோதும்போது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றிய கட்டுரை. ஒளியானது உலோக மேற்பரப்பில் படும்போது அம்மேற்பரப்பில் உள்ள எலக்ட்ரான்கள் மேற்பரப்பைவிட்டு வெளிவருகின்றன. இதுவே ஒளி மின் விளைவு. மேற்பரப்பில் படும் ஒளியின் நிறத்தை மாற்றும்போது வெளிவரும் எலக்ட்ரான்களின் ஆற்றல் மாறுவதைக் கண்டறிந்தார்கள், அதேபோல் மேற்பரப்பில் படும் ஒளியின் பொலிவுத்தன்மையை மாற்றும்போது வெளிவரும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை மாறுவதைக் கண்டறிந்தனர். இந்த நிகழ்வை அதுவரை இருந்த இயற்பியல் கோட்பாடுகளால் விளக்க முடியாமல் இருந்தது. காரணம், அப்போது வரை ஒளி என்பது அடிப்படையில் அலை வடிவில் இருக்கிறது, அலையாகவே பருப்பொருளோடு வினைபுரிகிறது என்று கருதிவந்தனர். ஆனால், ஐன்ஸ்டைன் ஒளி என்பது அலைப் பண்பு மட்டுமல்லாமல் துகள் பண்போடும் இருக்கும் என்ற புதிய கோட்பாட்டை முன்வைத்தார். மேலும் ஒளியைத் துகளாக கருதினால் மட்டுமே ஒளி மின் விளைவின் ஆய்வு முடிவுகளை விளக்க முடியும் என்று நிரூபித்தார். ஒளி என்பது சிறு சிறு ஆற்றல் பொட்டலங்களாக இருக்கிறது. இந்த ஆற்றல் பொட்டலங்கள் துகள் போன்று இயங்குகின்றன. இந்த ஆற்றல் பொட்டலங்கள் ‘போட்டான்கள்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டான் துகள்கள் உலோக மேற்பரப்பில் இருக்கும் எலக்ட்ரான் துகள்களோடு மோதுகிறது. ஐன்ஸ்டைனுக்கு முன்பு வரை ஒளி அலைகள் எலக்ட்ரான்களோடு மோதுகிறது என்று நினைத்துவந்தனர். ஆனால், ஐன்ஸ்டைன் ‘போட்டான் துகளும் எலக்ட்ரான் துகளும் ஒன்றுடன் ஒன்று மோதும் நிகழ்வே ஒளிமின் விளைவு’ என்று விளக்கினார். அதுவரை ஒளி என்பது அலைப் பண்போடு மட்டுமே கொண்டிருக்கும் என்ற சிந்தனையை மாற்றி ஒளி என்பது அலைப் பண்பையும், துகள் பண்பையும் கொண்டிருக்கும் என்கிற புதிய அறிவியல் உண்மையை நிரூபித்தார். இந்த ஆய்வுக் கட்டுரைக்காக ஐன்ஸ்டைனுக்கு 1921ஆம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னாளில் குவாண்டம் இயற்பியல் உருவாக்கத்திற்கு இந்தச் சிந்தனை முக்கிய பங்கு வகித்தது. அணுவும் மூலக்கூறுகளும் நடைமுறை உண்மை ஐன்ஸ்டைனுக்கு முன்பே ‘அணு’ என்ற கருத்தாக்கம் சில அறிஞர்களால் வலியுறுத்தப்பட்டிருந்தாலும் அப்போது வாழ்ந்த மிக முக்கியமான இயற்பியல் அறிஞர்களுக்கு ‘அணு’ என்ற கருத்தில் நம்பிக்கை இல்லை. அணு என்ற ஒன்று இருக்கவே முடியாது. அது உண்மையில் சில நிகழ்வுகளை விளக்குவதற்குப் பயன்படும் ஒரு கருத்தாக்கம்தானே தவிர அது உண்மையில் நடைமுறை யதார்த்தம் இல்லை என்று நினைத்துவந்தனர். ஐன்ஸ்டைன் 1905இல் வெளியிட்ட இரண்டாவது கட்டுரை ‘பிரவுனியன் இயக்கக் கோட்பாடு’ ஆகும். இது அணுக்கோட்பாடு பற்றியது. தண்ணீரில் சில மகரந்தத் துகள்களைத் தூவினால் அம்மகரந்தத்துகள்கள் அங்குமிங்கும் தண்ணீருக்குள் ஒழுங்கற்று ஓடியாடுகின்றன என்று தாவரவியலாளர் ராபர்ட் பிரவுன் 1827இல் கண்டறிந்தார். அவர் பெயரில் இந்த நிகழ்வு ‘பிரவுனியன் இயக்கம்’ என்று அழைக்கப்படுகிறது. ஏன் இந்த மகரந்தத் துகள்கள் ஒழுங்கற்று ஓடியாடுகின்றன என்பதற்கான கோட்பாட்டு விளக்கத்தை யாராலும் திருப்திகரமாக தர முடியவில்லை. ஐன்ஸ்டைன் இந்த ஆய்வுக் கட்டுரையில் “தண்ணீர் என்பது எண்ணற்ற அணுக்களால், மூலக்கூறுகளால் ஆனது. இந்த மூலக்கூறுகள் அங்குமிங்கும் ஓடியாடுகின்றன. இந்த மூலக்கூறுகள் மகரந்தத் துகள்கள் மீது தொடர்ச்சியாக மோதிக்கொண்டே இருப்பதால் மகரந்தத் துகள்களும் ஒழுங்கற்று ஓடியாடுகின்றன” என்று கூறினார். அது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இம்மகரந்தத் துகள்கள் சராசரியாக எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கும், அதன் மூலம் இந்த தண்ணீர் மூலக்கூறுகள் அளவையும் கோட்பாட்டுரீதியாகக் கணக்கிட்டார். நான்கு ஆண்டுகள் கழித்து ஜீன் பெர்ரின் என்பவர் ஆய்வகப் பரிசோதனை மூலம் ஐன்ஸ்டைன் கணக்கிட்டது சரி என்று நிரூபித்தார். இதன் மூலம் ‘அணுக்களும் மூலக்கூறுகளும்’ நடைமுறை உண்மை, அது கருத்தாக்கம் அல்ல என்று நிரூபணம் ஆனது. அதற்காக ஜீன் பெரினுக்கு 1926ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. தனிச்சார்பியல் கோட்பாடு ஐன்ஸ்டைனின் மூன்றாவது கட்டுரை ‘சார்பியல் கோட்பாடு’ பற்றியது. இதுதான் ஐன்ஸ்டைனை மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர் என்ற நிலைக்கு உயர்த்தியது. நியூட்டனின் கோட்பாட்டின்படி காலம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இதன்படி “சூரிய குடும்பத்தில் இருக்கும் நமக்கும், பிரபஞ்சத்தின் இன்னொரு மூலையில் இருக்கும் வேறொரு நட்சத்திரத்துக்கும் ஒரே மாதிரியான காலம்தான். அதேபோல் சும்மா உட்கார்ந்துகொண்டு இருப்பவரின் கையில் கட்டப்பட்டிருக்கும் கடிகாரமும், விமானத்தில் செல்லும் பயணியின் கையில் கட்டப்பட்டிருக்கும் கடிகாரமும் ஒரே நேரத்தைத்தான் காட்டும்.” ஐன்ஸ்டைன் இந்தக் கருத்தை அடியோடு தகர்த்தார். காலம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றல்ல. அது ஒவ்வொருவரின் இயக்கத்தைச் சார்ந்தது என்று கூறினார். சும்மா உட்கார்ந்துகொண்டிருப்பரின் நேரமும், பேருந்தில் பயணிக்கும் ஒரு நபரின் நேரமும் வேறு வேறு என்று சொன்னார். அதாவது, ஒருவரின் பயணிக்கும் வேகம் அதிகமாக அதிகமாக அவரின் காலம் மிக மெதுவாக நகரும் என்றார். இது அக்காலத்தில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதேபோல் காலமும் (time) வெளியும் (space) தனித்தனியானவை அல்ல. ஒன்றுக்கொன்று சார்ந்தவை. மேலும் காலம் மற்றும் வெளியைக் காலவெளி (space-time) என்றே இணைத்துப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். இவையெல்லாம் மனித குலம் மூவாயிரம் ஆண்டுகளாக நம்பிவந்த பொதுச் சிந்தனைக்கு எதிராக இருந்தது. அந்தக் காலத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த அறிவியல் அறிஞர்களால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆழமாக நம்பிவந்த பல்வேறு கருத்துகளின், கோட்பாடுகளின் ஆணிவேரை இது அசைப்பதுபோல இருந்தது. இந்தத் தனிச்சார்பியல் கோட்பாட்டின்படி (Special theory of relativity), ஒளி மட்டுமே இந்தப் பிரபஞ்சத்தில் உச்சபட்ச வேகத்தில் பயணிக்க முடியும். அதாவது, வெற்றிடத்தில் விநாடிக்கு மூன்று லட்சம் கி.மீ. எந்த ஒரு பருப்பொருளும் இந்த வேகத்தில் பயணிக்க முடியாது. வேகமாக செல்லும் ஒரு பொருளின் நீளம் குறையும். உதாரணத்துக்கு நீங்கள் ரயில் நிலையத்தில் அமர்ந்துகொண்டிருக்கிறீகள். உங்கள் கையில் ஒரு மீட்டர் அளவுகோல் இருக்கிறது. இப்போது இந்த ஒரு மீட்டர் அளவுகோலைப் புறப்பட இருக்கும் இரயிலின் உள்ளே அமர்ந்திருக்கும் ஒரு பயணியிடம் கொடுத்துவிடுங்கள். இப்போது ரயில் புறப்பட்டு வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. இப்போது அந்த ரயில் பயணியிடம் இருக்கும் அளவுகோலின் நீளம் உங்களைப் பொறுத்து ஒரு மீட்டர் அல்ல. அதற்கும் கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால், அந்த ரயில் பயணியைப் பொருத்து அந்த அளவுகோலின் நீளம் ஒரு மீட்டர்தான். அதாவது, நீளம் என்பதும் காலத்தைப் போலவே சார்புத்தன்மை உடையதுதான். உங்கள் பார்வையில் ஒரே நேரத்தில் நடக்கும் இரு நிகழ்வுகள் இன்னொருவரைப் பொருத்து வெவ்வேறு நேரத்தில் நடக்கும். ஒரே கண இரு நிகழ்வுகள் (simultaneous events) என்பதும் சார்புத்தன்மை உடையதுதான். வேகமாக செல்லும் ஒருவரின் காலம் மெதுவாக ஓடும். இரட்டைக் குழந்தைகளின் பிறந்தநாளில் ஒருவர் பூமியிலும், இன்னொருவர் விண்வெளிக்கும் சென்று சில ஆண்டுகள் பயணித்துச் சென்றுவந்தால் பூமியில் இருக்கும் இரட்டையர் விண்வெளிக்குச் சென்றுவந்த இரட்டையரைவிட வயது அதிகமாகிவிடுவார். காரணம் விண்வெளியில் வேகமாகப் பயணித்தவரின் காலம் மெதுவாக ஓடியதால்தான் அவருக்கு வயது ஆகும் வேகம் பூமியில் இருப்பவரைவிட மெதுவாக இருக்கிறது. வேகமாக செல்லும் பொருளின் நிறை அதிகமாகிறது. மேலே கூறப்பட்ட அனைத்துக் கருத்துகளும் அக்காலத்தில் அனைவருக்குமே அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தன. ஆனால், கடந்த நூறு வருடமாக நடந்த பல்வேறு ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் ஐன்ஸ்டீன் கூறியதே சரி என்று நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. நீளம் குறைவதையும், காலம் மெதுவாக ஓடுவதையும், நிறை அதிகமாவதையும் நடைமுறையில் நாம் எங்குமே பார்த்ததில்லை. உண்மையில் இவையெல்லாம் நடக்கிறதா? என்று நமக்கு ஒரு கேள்வி எழலாம். ஆம், நடக்கிறது. பைக்கில் செல்லும் ஒருவரின் காலம் தரையில் நிற்பவரைப் பொருத்து மெதுவாக ஓடுகிறது. அவரின் நீளம் சுருங்குகிறது. நிறை அதிகரிக்கிறது. ஆனால், இவை எதையும் நம்மால் உணர முடியாது. அதாவது, எந்தவொரு கருவியாலும் அளவிட முடியாத அளவுக்கு மிக மிகச் சிறியது. மேற்சொன்ன அனைத்தும் நாம் உணரும் அளவுக்கு, அதாவது அளவிடும்படி நடக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் நாம் ஒரு விநாடிக்கு ஒரு லட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்க வேண்டும். நடைமுறை உலகில் பயணிக்கக்கூடிய அதிகபட்ச அளவு மணிக்கு 600 அல்லது 700 கி.மீ.தான். ஒளியைவிட இந்த வேகம் மிக மிகக் குறைவு என்பதால் நம்மால் இந்தச் சார்பியல் விளைவுகளை உணர முடிவதில்லை. பிறகு எப்படி ஐன்ஸ்டைன் உணர்ந்தார்? முழுக்க முழுக்க கணிதரீதியாகவும், கோட்பாட்டுரீதியாகவும் சிந்தனைப் பரிசோதனை (thought experiment) மூலம் வெறும் பேப்பரையும், பென்சிலையும் வைத்துக்கொண்டு இக்கோட்பாடுகளை உருவாக்கினார். புகழ்பெற்ற சமன்பாடு உலகம் முழுக்க அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு சமன்பாடு என்றால் இந்த E=mc2 சமன்பாடுதான். இங்கே E என்பது ஒரு பொருளின் மொத்த ஆற்றலைக் குறிக்கும். m- பொருளின் நிறை, c – ஒளியின் வேகம். இந்தச் சமன்பாட்டின்படி ஆற்றலும் நிறையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஆற்றலின் ஒரு வடிவம்தான் நிறை. நிறையின் ஒரு வடிவம்தான் ஆற்றல் என்ற புதிய சிந்தனையைக் கொண்டுவந்தார். மேலும் நிறையை ஆற்றலாக மாற்ற முடியும். ஆற்றலை நிறையாக மாற்ற முடியும் என்றும் கூறினார். அணுக்கரு ஆராய்ச்சித் துறைக்கு இந்தச் சமன்பாடுதான் அடிப்படை. நியூட்டன் கோட்பாட்டின்படி ஒரு பொருள் தரையில் ஓய்வு நிலையில் இருந்தால் அதற்கு ஆற்றல் என்பது இல்லை. ஆனால், ஐன்ஸ்டைனின் இந்தச் சமன்பாட்டின்படி “ஒரு பொருள் ஓய்வு நிலையில் இருந்தால்கூட அதற்குள் மிகப் பெரிய ஆற்றல் பொதிந்துள்ளது.” இதுவும் ஒரு புரட்சிகரமான சிந்தனை. துரதிருஷ்டவசமாக இந்தச் சமன்பாடுதான் இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு செய்யவும் பயன்பட்டது. ஐன்ஸ்டைன் இதுகுறித்து மிகவும் வருந்தினார். “ஆட்சியாளர்களின் தவறு என்றாலும் எனது கண்டுபிடிப்பு இந்த அழிவுக்குப் பயன்பட்டதே” என்று மனம் வெறுத்தார். ஹிரோஷிமா, நாகசாகி நிகழ்வுக்குப் பிறகு மிகத் தீவிர அணுகுண்டு எதிர்ப்பாளராக மாறினார். இருபதாம் நூற்றாண்டின் அழகான சிந்தனை ஐன்ஸ்டைன் வாழ்க்கையில் மணிமகுடமாகத் திகழும் ஒன்று இந்தப் ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’. அவரால் 1915ஆம் ஆண்டு இக்கோட்பாடு வெளியிடப்பட்டது. நியூட்டன் கோட்பாட்டின்படி பூமி சூரியனைச் சுற்றிவரக் காரணம் சூரியனின் ஈர்ப்பு விசை. நிலா பூமியைச் சுற்றிவரக் காரணம் பூமியின் ஈர்ப்பு விசை. ஆனால், பொதுச் சார்பியல் கோட்பாட்டின்படி “ஈர்ப்பு விசை என்ற ஒன்றே இல்லை. நிறையானது தன்னைச் சுற்றி உள்ள வெளியை வளைக்கிறது, காலத்தை மெதுவாக ஓட வைக்கிறது. இது காலவெளி வளைவு (space-time curvature) என்று அழைக்கப்படுகிறது. விசை என்பது வெளியிலிருந்து கொடுக்கப்படுவதல்ல. மாறாக அது காலவெளி வளைவு என்ற இருத்தலியல் பண்பே (existential property)” என நிரூபித்தார். இந்தக் காலவெளி வளைவுதான் நமக்கு ஈர்ப்பு விசைபோல் தோன்றுகிறது. “மனித மூளையில் தோன்றிய ஆகச் சிறந்த அறிவியல் கருத்து இது என்றும் ‘இருபதாம் நூற்றாண்டின் அழகான சிந்தனை இது’ என்றும் அறிவியல் அறிஞர்கள் புகழ்கின்றனர். எடுத்துக்காட்டாக, சூரியன் தனது நிறையால் தன்னைச் சுற்றியுள்ள வெளியை (space) வளைக்கிறது. காலத்தை மிக மெதுவாக ஓட வைக்கிறது. சூரியனைச் சுற்றி உள்ள இந்த வளைந்த வெளியில் கோள்கள் நீள்வட்டப் பாதையில் செல்கிறது. நாம் பார்க்கும்போது சூரியன் கோள்களின் மீது விசை செலுத்துவதுபோல் தெரிகிறது. இப்படித்தான் ஒவ்வொரு பொருளும் தனது நிறைக்கேற்ப தன்னைச் சுற்றி உள்ள காலவெளியை வளைக்கிறது. இந்தப் பொதுச் சார்பியல் கோட்பாடு கோள்களின் இயக்கத்தை, விண்மீன்களின் இயக்கத்தை நியூட்டனின் ஈர்ப்புவிசைக் கோட்பாட்டைவிடத் துல்லியமாக விளக்குகிறது. பொதுச் சார்பியல் கோட்பாட்டின்படி இன்னொரு ஆச்சரியமான கருத்து – ஒளியானது மிக அதிக நிறையுள்ள பொருளின் அருகே செல்லும்போது வளைந்து செல்லும். எடுத்துக்காட்டாக, சூரியனைத் தாண்டி இருக்கும் நட்சத்திரங்களின் ஒளி சூரியனுக்கு அருகில் வளைந்து செல்கிறது. இப்படி வளைந்துவருவதால் நாம் பார்க்கும் நட்சத்திரம் அதன் உண்மையான இருக்கும் இடத்தைவிட கொஞ்சம் தள்ளி நமக்குத் தெரிகிறது. இதை 1919ஆம் ஆண்டு ஆர்தர் எடிங்க்டன் ஒரு முழு சூரிய கிரகணத்தின் பரிசோதனை வாயிலாக நிரூபித்தார். இந்தப் பரிசோதனைக்கு முன்பு வரை ஐன்ஸ்டைன் அறிவியல் உலகில் மட்டுமே அதிகம் அறியப்பட்டிருந்தார். இந்தப் பரிசோதனையின் வெற்றிக்குப் பிறகு உலகம் முழுவதும் அனைத்துப் பத்திரிகைகளிலும் பேசப்படும் மனிதரானார். இந்தக் கோட்பாடுதான் கருந்துளை என்ற ஒன்றைக் கணித்தது. ஈர்ப்பு அலைகள் என்பது இருந்தே ஆக வேண்டும் என்றும் கணித்தார். 2015இல் ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அந்தக் கண்டுபிடிப்பாளர்களுக்கு இயற்பியல் நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் இந்தப் பொதுச் சார்பியல் கோட்பாட்டில்தான் தனது ஆராய்ச்சிகளைச் செய்தார். ஒரு ஆச்சரியமான தகவல் இன்று நாம் ஆன்ட்ராய்டு போனில் பயன்படுத்தும் ஜிபிஎஸ் பொதுச் சார்பியல் கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது. கடந்த நூறு வருடத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கோட்பாட்டைப் பின்பற்றி ஆய்வுசெய்த பலர் நோபல் பரிசு வாங்கியிருக்கிறார்கள். ஐன்ஸ்டைன் பிற்காலத்தில் ‘அனைத்தையும் பற்றிய கோட்பாடு’ (Theory of everything) உருவாக்க முயற்சித்தார். ஆனால், அவரால் அதில் வெற்றிபெற முடியவில்லை. அரசியலும் தத்துவமும் ஐன்ஸ்டைனை நாம் கொண்டாடக் காரணம் அவரது அறிவியல் சாதனை மட்டுமல்ல. அவர் மானுடத்தை நேசிக்கும் மனிதராகவும் விளங்கினார் என்பதால்தான். அவர் வாழும்போது உலகில் நடந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்க் குரல் எழுப்பினார். ஐன்ஸ்டைன் பிறப்பால் யூதராக இருந்ததால் ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் ஜெர்மனியிலிருந்து தப்பி அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தார். ஆனால், அந்தச் சூழ்நிலையிலும்கூட அமெரிக்கர்கள் கருப்பின மக்களுக்கு எதிராக நடத்தும் கொடுமைகளைக் கடுமையாக கண்டித்தார். கட்டுரைகள் எழுதினார். நான் ‘கடவுள் நம்பிக்கை இல்லாத, ஆனால் ஆன்மீக உணர்வுள்ள மனிதன்’ என்று அடிக்கடி கூறுவார். முதலாளித்துவம் மனித குலத்துக்குச் செய்யும் தீங்கு குறித்து அதிகம் பேசினார். ‘ஏன் சோசலிஸம் வேண்டும்?’ என்பது அவரது முக்கியமான ஒரு கட்டுரை. உலகெங்கும் நடக்கும் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்பினார். அவருக்குக் காந்தியமும் காந்தியையும் மிகப் பிடித்த ஒன்றாக பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை உலக ஒற்றுமைக்கு எவ்வாறு பாடுபட வேண்டும் என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார். ஆயுதங்கள் தயாரிக்கும் நாடுகளை அவர் கடுமையாகக் கண்டித்தார். ஆயுத ஒழிப்புக்கு முன்வர வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. அவர் இறப்பதற்குச் சில மாதங்கள் முன்பு உலக நாடுகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் வலியுறுத்தி ‘ஐன்ஸ்டைன் - ரஸ்ஸல் உடன்படிக்கை’ என்ற ஒன்றை பெர்ட்ரண்ட் ரஸ்ஸலோடு சேர்ந்து உருவாக்கினார். அவரின் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்க உளவுத் துறையின் ரகசிய தொடர் கண்காணிப்பில் இருந்தார். அவரின் வீடும் அடிக்கடி சோதனை செய்யப்பட்டது. ஆனால், அவர் எதற்கும் அஞ்சாதவராக தொடர்ந்து அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பிவந்தார். இன்று பெரும்பாலான அறிவியல் அறிஞர்கள் ‘அறிவியல் ஆராய்ச்சி மட்டுமே எனது வேலை. நாட்டில் என்ன நடந்தாலும் எனக்கு கவலை இல்லை’ என்று நினைக்கிறார்கள். அவர்கள் ஐன்ஸ்டைனை நினைத்துப் பார்க்க வேண்டும். மேலும் 1950க்குப் பிறகு ஐன்ஸ்டைனின் உடல்நலம் குறைந்துகொண்டேவந்தது. 1955 ஏப்ரல் 16ஆம் நாள் அவரது உடல்நிலை இன்னும் மோசமானது. அறுவை சிகிச்சை செய்தால் பிழைக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், ஐன்ஸ்டைன் அறுவை சிகிச்சைக்கு மறுத்துவிட்டார். “நான் எப்போது போக விரும்புகிறேனோ அப்போது போக விரும்புகிறேன். செயற்கைத்தனமாக நீட்டித்துக்கொள்ளும் வாழ்க்கை சுவையில்லாதது. நான் எனது பங்கை இவ்வுலகுக்கு அளித்துவிட்டேன். இது நான் விடைபெறுவதற்கான நேரம். அமைதியாக விடைபெறுகிறேன்” என்று கூறினார். அடுத்த நாள் காலை ஏப்ரல் 17ஆம் நாள் தனது 76வது வயதில் உயிர் நீத்தார். அவரது உடல் மறைந்தாலும் அவரின் அறிவியல் கோட்பாடுகள் மனித குல வரலாற்றில் அழியா இடம்பெற்றிருக்கும். ஆம், ஐன்ஸ்டீன் காலம் கடந்து வாழும் மனிதர். காலம் வெளி கடந்து வாழும் மனிதர். உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் ஐன்ஸ்டைன். https://www.arunchol.com/joseph-prabagar-article-on-albert-einstein
-
விழல்
இந்த மாதிரியே தான் எனக்கு கிடைத்த ஆலோசனையும். என்ன, மெல்லிய கம்பிக்கு பதிலாக கொஞ்சம் மொத்த கம்பி ஒன்றை சூடாக்கி விட்டிட்டேன்....
- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
-
குறட்டை விடுவதால் உங்கள் குடும்பத்துக்கு என்ன ஆபத்து? எப்படி தடுக்கலாம்?
கடந்த வருடம் 'குட் நைட்' என்ற பெயரில் ஒரு தமிழ்ப் படம் வந்திருந்தது. குறட்டை தான் படத்தின் கரு. சில இடங்களில் கொஞ்சம் நகைச்சுவையுடனும் எடுத்திருந்தார்கள். மணிகண்டன், ரமேஷ் திலக் நடித்திருந்தனர். வினாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்தார்.
-
விழல்
தலை நிறைய முடி இருந்தாலும் பிரச்சனை. இல்லையென்றாலும் ஒரு சின்னக் கவலை. ***** விழல் ----------- சிவாஜியும் எம்ஜிஆரும் வைத்திருப்பது அவர்களின் தலைமுடி அல்ல என்று அன்று தெரியாது முடி நெற்றிக்கு மேல ஒரு சின்ன மலையாக ஏறி நெற்றியில் சுருண்டு விழ என்ன என்ன செய்ய வேண்டும் என்று அப்படி தலைமுடி இருந்தவர்களிடம் ஆலோசனை கேட்டேன் இரும்புக் கம்பி ஒன்றை மெதுவாக சூடாக்கி அப்படியே சுற்று என்றும் ஒருவன் கொடுத்தான் யோசனை பள்ளிக்கூடத்தில் சூடு அதிகமாகி புரதம் கருகி மணந்தது தான் மிச்சம் படும் பாட்டைப் பார்த்து அம்மா சொன்னார் உனக்கு வாழைக்காய் பட்டை முடி வளையவே வளையாது என்று இது தான் வடிவு என்றும் அவர் சொன்னார் நாய்க்கு மட்டும் வால் எப்படி சுருண்டே நிற்குதே என்று மெதுவாக ஒரு நாள் இழுத்துப் பார்க்க அது திரும்பிக் கடித்தது வயிற்றில் போட்டார்கள் ஊசிகளை இந்தக் குறையுடனேயே வளர்ந்து இன்னொரு ஊருக்கு போய் வாழ அங்கே ஒரு சலூன் இருக்குது அங்கே சுருட்டி விடுவார்கள் என்று நண்பன் ஒருவன் கூட்டிப் போனான் என்ன எனக்கு வேண்டும் என்று நான் சொல்ல வாயெடுக்க சிகை அலங்காரம் செய்பவர் வாயில் விரலை வைத்தார் அவர் வாயில் தான் நான் ஒன்றும் சொல்லக் கூடாதாம் ஒன்றும் சொல்லாமல் நான் ஏறி இருக்க அவரும் ஒன்றும் சொல்லவில்லை வெட்டிக் கொட்டி ஏதோ தலையில் பூசி முடிந்தது என்று சைகை காட்டினார் இவருக்கு பேச்சு வராதோ அய்யோ பாவம் என்று நான் நினைக்க 'காசு' என்று தெளிவாக கேட்டார் அங்கே கொடுத்த காசில் வெளியே இரண்டு வருடம் வெட்டியிருக்கலாம் முடி சுருளவும் இல்லை வெளியே வந்து கடையின் பெயர் என்னவென்று பார்த்தால் அது ஒரு பிரபல நகைக்கடையின் பெயர் பின்னர் கல்யாணம் காட்சி எல்லாம் வாழைக்காய் பட்டையுடனேயே தலையில் முடி இருக்குதா இல்லையா என்று தெரியாமலும் அதற்கு தேவை ஒன்றும் இல்லாமலும் வாழ்க்கை வைத்திருந்தது சில வருடங்களின் பின் என்னை நகை கடைக்கு முடி வெட்ட கூட்டிப் போன நண்பனை பார்த்தேன் தொப்பி போட்டிருந்தான் கேட்கவும் தயக்கமாக இருந்தது பொறுத்து பொறுத்து இருந்தேன் அவன் கடைசி வரை கழட்டவே இல்லை இப்ப தொப்பி நானும் வாங்க வேண்டும் இந்த தடவை கடையின் பெயர் என்ன என்று பார்த்தே உள்ளுக்குள் காலை வைக்க வேண்டும்.
-
வெள்ளிக்கிழமை வேலை
வெள்ளிக்கிழமை வேலை ---------------------------------------- இன்று வெள்ளிகிழமை, ஏன் வேலை செய்ய வேண்டும் என்று மனம் கேட்கின்றது. உண்மையைச் சொன்னால் அது ஒவ்வொரு திங்கட்கிழமையிலிருந்தும் இதே கேள்வியையே கேட்கின்றது. முன்னர் ஒரு காலத்தில், வேலை செய்ய ஆரம்பித்து இருந்த நாட்களில், நாங்கள் இவ்வளவு வயது பிந்தி வேலை செய்யத் தொடங்கியிருக்கின்றோம், வேறு பல நாட்டவர்கள் 21 வயதுகளிலேயே ஆரம்பித்து விடுகின்றார்கள் என்று கவலை கூட பட்டும் இருக்கின்றோம். படித்து முடிப்போம் என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு படித்து முடிக்கவே எங்களுக்கு 26 அல்லது 27 அல்லது அதற்கு மேலும் வயதாகி விடுகின்றது. ஆனால், அந்த கூடுதலான ஐந்தாறு வருடங்களாவது நினைவுகளாக இன்று மிஞ்சியதே என்று இப்பொழுது ஆறுதலாக இருக்கின்றது. வேலை தான் லட்சணம் என்றாகிவிட்டது. போங்கடா, நீங்களும் உங்கட வேலையும் என்று எங்களால் விட்டுவிட்டு ஓடவும் முடியாது. எங்களால் முடிந்தது அப்படி ஓடிப் போய் எழுதும் ஒருவரின் எழுத்துகளை வாசிப்பது மட்டுமே. கீழே இருப்பது லஷ்மி மணிவண்ணனின் கவிதை ஒன்று. மிக அருமையான இன்றைய கவிஞர். ------------------------------------------------------------------------------ எனக்கு நன்றாக சைக்கிள் ஓட்டத் தெரியும் நீங்கள் என்னிடம் வேறு எதையோ எதிர்பார்க்கிறீர்கள் டியூப் லைட் முதுகில் கட்டி தலைகீழாகவும் சைக்கிள் ஓட்டுவேன் விண்ணில் கட்டியிருக்கும் அந்தரக்கயிற்றில் இந்த துருவத்தில் இருந்து அந்த துருவத்திற்கு சைக்கிள் ஓட்டுவது எனக்கு தண்ணீரில் நீந்துவது போல முன்சக்கரத்தில் நிறுத்தி பின்சக்கரத்தை மேலுயர்த்தும் போது மேளதாளங்கள் முழங்கட்டும் ஆனால் நீங்கள் வேறென்னவோ கேட்கிறீர்கள் கரகரக்கும் குரலில் தகரத்தில் ஒலி கேட்கிறதா உங்களுக்கு பதிலாக அதனை உங்களுக்கு கேட்பதற்காகத் தான் வைத்திருக்கிறேன் https://lakshmimanivannan.blogspot.com/2017/06/blog-post_30.html
-
கோட்டாவை விரட்டியது சதியா? விதியா?
கோதாவை கமராவில் எடுத்தது போல இருக்கின்றது.....👍 இலங்கை டெயிலி மிரர் ஒரு கார்ட்டூன் போட்டிருந்தனர். ஒருவர் நூலகம் ஒன்றில் கோதாவின் இந்தப் புத்தகத்தை நகைச்சுவை புத்தகங்கள் என்ற பகுதியில் தேடிக் கொண்டிருப்பது போல....😀
-
ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இவருக்கு உள்நாட்டில் எதிரிகளும் உயிருடன் இல்லை. வாரிசுகளும் இல்லை. அடுத்த கட்ட தலைவர்களும் இல்லை. இவர் போன பின், ரஷ்யா ஒரு அதிகாரப் போட்டியில் சிக்கித் தவிக்கப் போகின்றது என்று நேற்று ஒரு ஆங்கில ஊடகத்தில் கட்டுரையொன்று வந்திருந்தது.
-
மையங்களால் அழித்தல்
இன்று ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இந்தக் கட்டுரை இருந்தது. ***** மையங்களால் அழித்தல்- ராமர்கோயில் பற்றி. March 14, 2024 வரலாறு முழுக்க மாபெரும் சுவரெழுத்துபோலத் தெரிவதும், ஆனால் அதேசமயம் சாமானியர்களால் புரிந்துகொள்ளவே முடியாததுமான ஒரு கருத்து உண்டு. ‘வலுவான மையம் கொண்ட அமைப்புகள் மிக எளிதில் சரிவடையும்‘ என்பதுதான் அது. ஓர் அமைப்பு வலிமையாகவும், நீடித்ததாகவும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு மிக வலிமையான மையம் தேவை என சாமானியர் நம்புகிறார்கள். ஆகவே அமைப்பை உருவாக்கும்போதே மையத்தை உருவாக்குகிறார்கள். மையத்தை வலுவாக்கிக்கொண்டே செல்கிறார்கள். அந்த அமைப்பு வலுவிழக்கும் என்று தோன்றினால் அஞ்சி மையத்தை மேலும் மேலும் அழுத்தமானதாக ஆக்குகிறார்கள். அந்த அமைப்பு ஒட்டுமொத்தமாகச் சரியும் வரை மையத்தை வலுவாக்கிக் கொண்டே செல்வார்கள். மையத்தின் எடை தாளாமல்தான் பெரும்பாலான அமைப்புகள் சரிகின்றன. சாமானியர் என இங்கே சொல்லப்படுவதில் வாழ்க்கையின் எல்லா தரப்பினரும் உண்டு.மறு சொல்லே இல்லாமல் குடும்பத்தை கட்டியாளும் குடும்பத்தலைவரை மையமாகக் கொண்ட குடும்பங்கள் வலுவானவையாக இருக்கும் என நம்பும் கோடிக்கணக்கானவர்கள் இங்குண்டு. அதே நம்பிக்கையுடன் தேசத்தை ஆட்சி செய்பவர்களும் உண்டு. சிறு வணிக நிறுவனங்கள் முதல் பெரிய நிர்வாக அமைப்புகள் வரை, சிறிய சேவை அமைப்புகள் முதல் மதங்கள் வரை இந்த நம்பிக்கையை கொண்டிருக்கின்றன. ஆனால் அது உண்மை அல்ல என்பதை நாம் கண்கூடாக நம் குடும்பங்களிலேயே காணலாம். வலுவான குடும்பத்தலைவரால் நடத்தப்படும் குடும்பங்களில் மிக எளிதில் பூசல்கள் உருவாகின்றன.பிளவுகள் தோன்றுகின்றன. அனைவருக்கும் இடமுள்ள நெகிழ்வான குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக நீடிக்கின்றன. மிக மிக ஆற்றல் கொண்ட மையம் கொண்டிருந்த தேசங்கள் ஒரு நூற்றாண்டைக்கூட கடந்ததில்லை. அண்மைக்கால உதாரணம் சோவியத் ருஷ்யா. அப்படியே பின்னுக்குச் சென்றால் ஹிட்லரின் ஜெர்மனி, பிரிட்டிஷ் பேரரசு என, ஒவ்வொரு உதாரணமும் நம்மை திகைப்பிலாழ்த்தும். அதற்கான காரணம் மிக மிக எளிதானது. அது இயற்கையின் விதி. இயற்கையிலுள்ள ஒவ்வொன்றும் பிரிந்து பிரிந்துதான் வளர்கின்றன. ஒன்றுடனொன்று போட்டியிட்டு மோதி நிலைகொள்கின்றன. மிக வலுவான ஒன்றுக்கு அதேயளவு நிகரான வலிமைகொண்ட ஒன்று உடனே உருவாகிவிடுகிறது. அந்த முரண்பாடுதான் இயற்கை இயங்கும் வழி. அதை மேலைச்சிந்தனை dialectics என்கிறது. இந்திய சிந்தனைமரபில் யோகாத்ம தரிசனம் என்பது அதுவே என நடராஜ குரு அவருடைய நூல்களில் விளக்குகிறார். வலுவான மையத்தை உருவகிப்பவர்கள் எதிர்ப்பே இல்லாத ஒரு புள்ளியை கற்பனை செய்கிறார்கள். அப்படியொன்றுக்கு இயற்கையில் இடமே இல்லை என்பதை அவர்கள் உணர்வதில்லை. இன்று இங்கே இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் அப்படி ஒரு மையப்புள்ளிக்கு இந்து மெய்யியலில் எந்த இடமும் இல்லை என்பதை அறிந்திருப்பதில்லை. இந்து மெய்யியலில் எல்லா சக்திக்கும் எதிர்சக்தி உருவகிக்கப்பட்டுள்ளது. புராணங்களில் எல்லா தெய்வத்திற்கும் எதிராகச் செயல்படும் நிகரான ஆற்றல்கொண்ட சக்திகள் உண்டு. முழுமுதல் (absolute) என உருவகிக்கப்படுவது வேதாந்திகள் சொல்லும் பிரம்மம் மட்டுமே. அது தொடக்கமும் முடிவும் அற்றது. அது அன்றி வேறேதும் இல்லை. ஆனால் அந்நிலையில் அதற்குச் செயல்தன்மையே கிடையாது. அது செயல்வடிவம் பெறவேண்டும் என்றால் அதற்குச் சமானமான எதிர்விசை தேவை. அந்த விசையாக மாயையை உருவகிக்கிறது வேதாந்தம். வேதாந்தத்தின் தொடக்கப்புள்ளி ரிக்வேதத்தில் உள்ள சிருஷ்டிகீதம். அது அனைத்தையும் இணைப்பதும், அனைத்துமாக ஆவதுமான ஒரு பிரம்மத்தையே உருவகிக்கிறது. ஒரு பதிலை முன்வைப்பதில்லை, எத்தனை விளக்கினாலும் முழுமையாக சொல்லிவிட முடியாத ஒரு கேள்வியையே முன்வைக்கிறது. மையத்தை வலியுறுத்துவதற்கு பதிலாக விரிந்து விரிந்து செல்லும் ஒரு பயணத்தை தொடங்கி வைக்கிறது. அந்தப் பயணமே உபநிடதங்களில் விரிந்தது. ஒன்றை இன்னொன்று கடுமையாக மறுக்கும் பல்வேறு ஞானவழிகளை உருவாக்கியது. தெற்கே சைவசித்தாந்தம் வரை அது வளர்ச்சி அடைந்தது. இந்து மெய்ஞானத்திற்கு அது நிலைகொள்ளும் மையம் என ஏதுமில்லை. ஏனென்றால் அது ஓர் அமைப்பு அல்ல. அது ஒரு தேடல். பலநூறு ஞானப்பயணங்கள் நிகழும் களம். எல்லா பாதையும் சென்றடைவது ஓரிடத்தையே என்று உபநிடதங்கள் கூறின. இந்தியாவின் பிரதமர் ராமர்கோயில் கட்டுவது 130 கோடி மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறுகிறார். அந்த கோடிகளில் நான் ஒருவன் அல்ல. எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. எனக்கு பதற்றமும் வருத்தமும்தான் உருவாகிறது. இந்த பூசல் தொடங்கிய காலம் முதலே இதைத்தான் எழுதி வருகிறேன். நான் சொல்வது அரசியல் அல்ல. ஓர் உறுதியான இந்துவாக, வேதாந்தியாக நின்று இதைச் சொல்கிறேன். இது இந்துமெய்ஞானத்திற்கு எதிரான ஒரு செயல்பாடு. நீண்டகால அளவில் இது அழிவையே உருவாக்கும். இந்த ஆலயத்தை இந்து மதத்தின் ஒற்றை மையமாக உருவகிக்கிறார்கள். இந்துதேசியத்தின் மிகமிக வலுவான ஒரு புள்ளியாக இதை நிறுவுகிறார்கள். இந்தியாவின் ஒவ்வொருவரும் அதை ஏற்றாகவேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதைத்தான் பிரதமரின் சொற்கள் காட்டுகின்றன. அந்த மனநிலையில் இருப்பது இந்தியத்தன்மை அல்ல, இந்துத்தன்மையும் அல்ல. இது பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் உருவாகிவந்த பண்பாட்டுத் தேசியவாத மனநிலை. அதை இங்கே நகல் எடுக்கிறார்கள். அதற்குரிய பண்பாட்டு அம்சத்தை மட்டும் இங்கே மதத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறார்கள்.அதில் முதன்மையானது ராமர் அவ்வளவுதான். பழைய மன்னராட்சிகள் கூட்டு அதிகாரம் கொண்டவை. பிரபுக்கள் மற்றும் சிற்றரசர்களின் அதிகாரத்தை நிர்வகிக்கும் மையம்தான் அன்றைய மன்னரின் சபை. ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டில் இருந்து மன்னர் முற்றதிகாரம் கொண்டவராக ஆனார். அவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகள் உருவாகி நவீன அரசுகள் அமைந்தன. அந்த அரசுகள் வலுவான ஆட்சிமையத்தை உருவாக்கிக்கொண்டன. அந்த மையத்தை உருவாக்கிக்கொள்ள அவை கண்டடைந்த வழிதான் பண்பாட்டுத்தேசியம். அது சர்வாதிகாரிகளை உருவாக்கியது. உலக வரலாற்றில் மதஅரசுகளும் மன்னர் அரசுகளும் உருவாக்கியதை விடப்பெரிய அழிவை அவைதான் உருவாக்கின. அந்த அழிவைக் கண்டபின்னர்தான் ஐரோப்பா நெகிழ்வான மையம் கொண்ட சமூகங்களையும் அரசையும் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அரசியல் என்பது முழுக்க முழுக்க பொருளியல் சார்ந்தது என்றும் அதில் மதம், இனம், மொழி போன்ற பண்பாட்டுக்கூறுகளுக்கு இடமில்லை என்றும் வகுத்துக்கொண்டது. இந்தியாவில் நாம் 1947ல் தொடங்கியபோதே ஐரோப்பாவில் நிகழ்ந்த அழிவுகளில் இருந்தும் இங்கே நிகழ்ந்த மதக்கலவரங்களில் இருந்தும் பாடம் கற்றுக்கொண்டு நெகிழ்வான, அனைத்தையும் உள்ளடக்கக்கூடிய தேசியத்தையும் அரசையும் உருவாக்கிக்கொண்டோம். இன்று மூர்க்கமாக திரும்பிச்சென்று பழைய ஐரோப்பிய பண்பாட்டுத்தேசியவாதத்தை ஏற்றுக்கொள்ள முயல்கிறோம். உறுதியான அதிகார மையங்களை உருவாக்க பண்பாட்டை பயன்படுத்தும் வழி என்பது பண்பாட்டுக்கூறுகளை அதிகாரத்தின் குறியீடுகளாக ஆக்குவது. கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதங்களை அதன்மேல் ஏற்றுவது. பண்பாட்டு தேசியவாதிகள் சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாவில் அவற்றுக்கு மாபெரும் சிலைகள், கட்டிடங்கள் போன்ற வடிவங்களை உருவாக்கினர். உச்சகட்ட பிரச்சாரங்கள் வழியாக மிகையுணர்ச்சிகளை பரப்பினர். அந்த உணர்ச்சிவேகத்தை பயன்படுத்தி அதிகாரங்களை அடைந்தனர். அந்த அதிகாரத்தின் முகங்களாக தனிமனிதர்கள் தங்களை முன்வைத்தனர். பிஸ்மார்க், முஸோலினி, ஹிட்லர், ஸ்டாலின் அனைவரும் ஒரே வார்ப்புகள் கொண்டவர்களே. அனைவருமே மாபெரும் கட்டிடங்களையும் சிலைகளையும் நிறுவியவர்கள் என்பதை நாம் கவனிக்கவேண்டும். ஏன் சர்வாதிகார மனநிலைகொண்டவர்கள் மிகப்பெரிய கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள்? ஏனென்றால் சர்வாதிகாரிகள் அஞ்சுவது காலம் என்னும் மாபெரும் ஓட்டத்தைத்தான். அது எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு செல்கிறதென அவர்களுக்கு உள்ளூரத்தெரியும். அவர்கள் நிலைத்து நிற்க ஆசைப்படுகிறார்கள். தற்காலிகத்தன்மையை அஞ்சுகிறார்கள். ஆகவே நிலையான எதையவாது உருவாக்க துடிக்கிறார்கள். பட்டேல் சிலை, ராமர் கோயில் எல்லாம் அதன் வெளிப்பாடுகள்தான். அவை உடனடியாக பயனளிக்கும். மக்களின் உணர்வுகளைத் தூண்டி, அவர்களை கும்பல்களாக ஆக்கி, அதிகாரத்தை ஈட்டித்தரும். ஆனால் நீண்டகால அளவில் அவை இணையான எதிர்விசைகளை உருவாக்கி அழிவையே அளிக்கும். அதிகாரம் என்பது கண்ணுக்குத்தெரியாத ஒரு புரிந்துணர்வு. ஒவ்வொரு கணமும் நிகழும் பலநூறு ஒப்பந்தங்களின் வழியாக நிகழ்வது. சர்வாதிகாரிகள் அதை கண்கூடான ஓர் அமைப்பாக நிறுவ நினைக்கிறார்கள். சாமானியர் அதை வியந்து பார்க்கவேண்டும், அஞ்சவேண்டும். ஆகவே மாபெரும் கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள். சொற்கள் அழியும் ஆனால் கல் அழியாமல் நின்றிருக்கும் என கற்பனை செய்துகொள்கிறார்கள். கல் நின்றிருக்கும் என்பது உண்மை. ஆனால் அதிகாரம் அழிந்தபின், அதிகாரம் என்பது அழியும் என்பதற்கான நினைவுச்சின்னமாகவே அந்த கல்லமைப்பு நிலைகொள்ளும். அதையே வரலாறு காட்டுகிறது. இந்த விவாதத்தில் எப்போதும் கேட்கப்படும் வினா, பழைய மன்னராட்சியில் ஆலயங்கள் கட்டப்படவில்லையா என்பது. மன்னராட்சிக்காலம் என்பது தீராத போர்களும் அழிவுகளும் நிகழ்ந்த யுகம். ஒரு மன்னர் உருவாக்கும் ஆலயம் இன்னொரு மன்னரால் அழிக்கப்படும். இருவருமே ஒரே மதத்தினராக இருப்பார்கள். அந்த மதச்சார்பு உருவாக்கிய அழிவைக் கண்டபின்னர்தான் உலகமெங்கும் ஜனநாயகம் உருவாகியது. ஜனநாயகத்திற்கு முதல் எதிரி பெரும்பான்மைவாதம்தான். பெரும்பான்மையினரின் பண்பாட்டை வலியுறுத்துவது நீண்டகால அளவில் அழிவைநோக்கிச் செல்வது. கண்கூடான உதாரணம் ஸ்ரீலங்கா. எழுபது ஆண்டுகளுக்கு முன்பே அங்கே அரசியல் மதஅடிப்படை கொண்டதாக ஆகியது. அதற்கு வித்திட்டவர் ஐரோப்பியர்களிடமிருந்து பௌத்தத்தை கற்றுக்கொண்டவரான அநகாரிக தம்மபாலா என்பவர். அவர் முன்வைத்தது மதத்தை அல்ல, ஐரோப்பிய பாணியில் மதத்தை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டு தேசியவாதத்தை. பௌத்தம் அரசுமதமாகவே முன்வைக்கப்பட்டது. மதகுருக்களை பணிந்து ஜனநாயகரீதியாக தேர்வுசெய்யப்பட்ட ஆட்சியாளர்கள் பதவியேற்றுக்கொண்டனர். ஒரு கட்டத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் கொண்டவர்களாக மதகுருக்கள் மாறினர். அதன் விளைவுகள் முப்பதாண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போர். உயிரழிவு, பொருளியல் பேரழிவு. அந்த மனநிலை மெய்ஞானத்தின் களத்திற்குள் வரும்போது மேலும் அழிவை உருவாக்குவதாக ஆகிவிடுகிறது. ஏனென்றால் இங்கே சிதைக்கப்படுவது சில மனிதர்களால் ஒரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட நாடு, அரசு போன்ற புறவயமான அமைப்புகள் அல்ல. அவை அழிந்தால் இன்னொருவகையில் உருவாக்கிக்கொள்ள முடியும். இங்கே சிதைவுறுவது நுண்மையான அகவய அமைப்பு. அது பல்லாயிரம் ஆண்டுகளாக தன்னியல்பாக உருவாகி வந்தது. ஞானிகள், கலைஞர்கள், தத்துவசிந்தனையாளர்களால் திரட்டப்பட்டது. நம்மையறியாமலேயே நமக்குள் உருவாகியிருப்பது. அதை இழந்தால் நாம் திரும்ப அடைய முடியாது. வேதாந்தத்தின் அணுகுமுறையில். ராமன் வைணவ மதத்தின் ஒரு தெய்வ உருவகம். வைணவம் இந்து மதப்பிரிவுகளில் ஒன்று மட்டுமே. அந்த தெய்வ உருவகத்திற்கு அதற்குரிய தனித்தன்மைகள் உண்டு. ‘அறத்தின் உருவமான அரசன்‘ என சுருக்கமாக வலியுறுத்தலாம். தொன்றுதொட்டு இருந்துவரும் தந்தைவழிபாடு, அரசன் வழிபாடு ஆகியவை அந்த உருவகத்தில் இணைகின்றன. அந்த உருவகத்தை இந்துமெய்ஞான மரபுகள் அனைத்துக்கும் தலைமையான ஒரு தெய்வவடிவமாக வலியுறுத்துவது என்பது மெய்ஞானத்தேடலின் மற்ற வழிகள் அனைத்தின்மீதுமான ஒடுக்குமுறையாகவே ஆகும். சிவலிங்கம் போன்ற உருவமற்ற உருவம் (அருவுரு) வழிபடப்படும் மதப்பிரிவுகள் இந்து மதத்திற்குள் உண்டு. உருவவழிபாட்டை ஏற்காத வேதாந்தப்பிரிவுகள் உண்டு. அவர்களெல்லாம் ராமனை ஏற்றுக்கொண்டாகவேண்டிய இடத்திற்கு தள்ளப்படுகிறார்கள். காலப்போக்கில் ராமனை மறுப்பதென்பது தண்டனைக்குரிய இறைநிந்தனையாக இங்கே மாற்றப்படலாம். அது மதத்தை ஓர் உறுதியான நிறுவனமாக ஆக்குவதில் கொண்டுசென்று நிறுத்தும். எங்கே அப்படி ஓர் உறுதியான மதமையம் உருவாக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அதற்கு எதிரான உறுதியான குரல்கள் உருவாவதை வரலாறு காட்டுகிறது. அந்த எதிர்க்குரல்களை மதநிந்தனை என்னும் குற்றம்சுமத்தி மையமரபு வேட்டையாடுகிறது. ரத்தம் தோய்ந்த போராக அது உருமாறிவிடுகிறது. அவ்வாறான ஒரு நிலைநோக்கி இன்றைய மையப்படுத்துதல் எதிர்காலத்தில் இந்து மதத்தை கொண்டுசெல்லக்கூடும். வைணவர்கள் தங்கள் தெய்வத்திற்கு என ஓர் ஆலயம் அமைத்துக்கொண்டால் அதில் எந்தச் சிக்கலும் இல்லை. அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி. அவர்கள் ராமனே முழுமுதல்வ்தெய்வம் என்று சொன்னாலும் அதில் பிழையில்லை, அது அவர்களின் நம்பிக்கை. ஆனால் அரசு அந்த ஆலயத்தை அதிகாரபூர்வமாக அமைத்து, இந்திய தேசத்தின் அனைவரின் வாக்குகளையும் பெற்ற ஆட்சியாளர்களால் அது திறந்து வைக்கப்படும் போதுதான் மையப்படுத்தல் நிகழத்தொடங்குகிறது. ஏனென்றால் இந்து மதத்தின் செயல்பாட்டு முறை என்பது மையப்படுத்துதலுக்கு எதிரானதாகவும், பன்மைத்தன்மை கொண்டதாகவும், உள்விவாதம் கொண்டதாகவும்தான் எப்போதும் இருந்து வந்துள்ளது. சைவம், வைணவம், சாக்தம் ஆகிய மூன்று பெருமதங்கள் இன்று அதற்குள் உள்ளன. வேதாந்தம் என்னும் தூய தத்துவப்பார்வை உள்ளது. இதைத்தவிர பலநூறு சிறுவழிபாட்டு முறைகள் உள்ளன. பலநூறு புதிய புதிய தத்துவப்பார்வைகள் முளைத்து வளர்ந்துகொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இன்னொன்றை மறுப்பதும் விமர்சிப்பதுமாகும். மையம் என ஒன்று திரண்டுவந்தாலே ஒடுக்குமுறை தொடங்கும். மிகச்சிறந்த உதாரண நிகழ்வு ஒன்றுண்டு. இந்தியாவில் ராமன் ஒரே வகையாக எங்கும் சித்தரிக்கப்படவில்லை. வட இந்திய ராமன் அங்கே புகழ்பெற்றிருக்கும் வைணவ பக்தி மரபான புஷ்டிமார்க்கத்தால் உருவாக்கப்பட்ட உருவகம். தென்னிந்தியாவில் அப்படி அல்ல. கேரளத்தின் பெருங்கவிஞரும், நாராயண குருவின் வேதாந்த மரபில் வந்தவருமான குமாரன் ஆசான் எழுதிய‘சிந்தனையில் ஆழ்ந்த சீதை’ என்னும் குறுகாவியம் மிகப்புகழ்பெற்றது. பல ஆண்டுகளாக கல்விநிலையங்களில் பயிலப்படுவது. அதில் சீதை ராமனை அரசனாக மட்டுமே நிலைகொண்டு கணவனாகவும் தந்தையாகவும் கடமையை மறந்தவன் என விமர்சிக்கிறாள். செப்டம்பர் 2015ல் மாத்ருபூமி நாளிதழில் அந்தக் கவிதையை பற்றி எம்.எம்.பஷீர் என்னும் புகழ்பெற்ற கல்வியாளர் ஒரு கட்டுரை எழுதியபோது கேரளத்தில் இந்துத்துவ ஆதரவாளர்களால் அவர் வேட்டையாடப்பட்டார். அந்த இதழ் அக்கட்டுரையை திரும்பப்பெற்றுக்கொண்டு மன்னிப்பு கோரியது. (நான் அந்நிகழ்வில் கடுமையாக எதிர்வினையாற்றி பஷீருக்கு ஆதரவாக எழுதினேன்) அது உண்மையில் வேதாந்தத்தின்மேல், நாராயண குருவைப்போன்ற ஞானிகள்மேல் நிகழ்த்தப்பட்ட நேரடித்தாக்குதல். இன்றைய அரசுமதம் என்னும் போக்கு சென்று சேரக்கூடிய இடம் அதுதான். இந்து மெய்ஞானத்தின் உச்சகாகவும் இந்து மதத்தை ஒருங்கிணைக்கும் சக்தியாகவும் திகழும் வேதாந்தத்தை எதிரியாக்கி அழிக்க முயல்வது. அது இந்துமதத்தையே அழிப்பது. ஆகவே ஒவ்வொரு இந்துவும் எதிர்க்கவேண்டிய ஒரு செயல் இவர்கள் செய்துகொண்டிருப்பது. https://www.jeyamohan.in/197947/
-
பால் அலெக்சாண்டர்: 78 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்த அதிசய மனிதர் காலமானார்
நேற்று ஏதோ ஒரு ஆங்கிலத் தளத்தில் இவரைப் பற்றிய செய்தியும், விபரங்களும் வெளியாகி இருந்தது. நம்பவே முடியாத ஒரு வாழ்க்கை. ஒரு மனிதருக்கு இவ்வளவு உறுதி தொடர்ந்தும் இருக்குமா என்றும் வியக்க வைத்தது. அந்தக் கட்டுரையின் கீழ் பலர் அந்நாட்களில் இருந்த போலியோ நோய் தொற்று பற்றி தங்களின் அனுபவங்களை எழுதியிருந்தனர். போலியோ தடுப்பு மருந்து, மற்றும் எல்லா நோய் தடுப்பு மருந்துகளின் முக்கியத்துவத்தை உணரக்கூடியதாக இருந்தது.
-
ஒரு கொய்யா மரத்தின் விவரம்
ஒரு கொய்யா மரத்தின் விவரம் ----------------------------------------------- நான்கு சிறு துளிர் இலைகளுடன் நிற்கும் போதே அது ஒரு கொய்யா மரம் என்று தெரிந்துவிட்டது. ஊரில் மரங்களோடும், நிலங்களோடும், கடலோடும் ஒட்டி ஒட்டியே வாழ்ந்ததால் கிடைத்த பயன் இது. மரங்களும், மண்ணும், கடலும் நன்கு பழகினவையாக, எது எது என்று தெரிந்தவையாக இருக்கின்றன. ஒரு சிசு போல பரிசுத்தமாக, எந்தப் பயமும் இல்லாமல் அது அங்கே நின்று கொண்டிருந்தது. ஒவ்வொரு பறவையும் ஐந்நூறு மரங்களை உண்டாக்குகின்றன என்று சொல்வர். ஒரு பறவையின் ஐநூறில் ஒன்று இது. முன்னும் பின்னும் கான்கிரீட் சூழ்ந்த ஒடுக்கமான ஒரு மண் கீலத்தில் பறவை ஒன்று போட்ட வித்தில் இருந்து முளைத்திருந்தது. எல்லாக் கொய்யா மரங்கள் போலவும் இதன் இலைகள் கூராக இல்லாமல், இதன் இலைகள் அகன்றதாக வந்து கொண்டிருந்தன. இளமரத்திலேயே பட்டைகள் உண்டாகி, அவை உரிந்து வீழ்ந்தன. அதனால் மரம் எப்போதும் வழுவழுப்பாக இருந்தது. அதன் காலம் வர, அது பூக்கத் தொடங்கியது. மற்றவை போலவே பூக்கள் வெள்ளையாகவே இருந்தாலும், ஓரிரு நாட்களிலேயே பூக்கள் கருகிப் போயின. பூக்களின் காம்புகள், கொஞ்சம் வித்தியாசமாக, சின்ன விரல் அளவு தடிப்பில் இருந்தன. சில மரங்கள் பூப்பதில்லை. சில மரங்கள் வெறுமனே பூக்கும், காய்க்காது. இந்த மரம் பூக்கும், காம்புகள் வரும், பின்னர் கருகி விடும், அவ்வளவுதானாக்கும் என்று விட்டுவிட்டேன். சில நாட்களின் பின் எதேச்சையாக அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால் ஒவ்வொரு காம்பிலும் இரண்டு மூன்று காய்கள். நல்லையா மாஸ்டர் கீறும் வட்டங்கள் போல ஒழுங்கான உருவங்களில் நேர்த்தியான உருண்டையாகக் காய்த்திருந்தன. காய்கள் கடும் பச்சையிலிருந்து வெளிர் பச்சையாகி, பின்னர் இளமஞ்சளாகி, கடைசியில் கடும் மஞ்சள் ஆகின. பழத்தின் வாசம் வீடெங்கும் பரவியது. அங்குதான் பிரச்சனையும் ஆரம்பம் ஆகியது. ஒருவருக்கு வாசம் என்பது இன்னொருவருக்கு மணமாகவோ அல்லது நாற்றமாகவோ ஆகலாம். இங்கு ஆகியது. வேறு கொய்யா மரங்களும் வீட்டில் இருப்பதால் இந்த மரத்தை வெட்டி எறிவதென்ற முடிவு எடுக்கப்பட்டது. வீரம், விவேகம், அறம், தர்மம் என்று சதாகாலமும் படிப்பிக்கப்பட்டு, பலவீனமானவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற பாடப்புத்தக முடிவுடன் இருந்த என்னால், அதுவாகவே முளைத்து ஆளான அழகான ஒரு கொய்யா மரம் அநியாயமாக வெட்டப்படுவதை தடுக்க முடியவில்லை. ஆகக் குறைந்தது, அன்றைய முதல்வர் கருணாநிதி செய்தது போல ஒரு அடையாள உண்ணாவிரதம் கூட நான் இருக்கவில்லை. வெட்டினாலும் அடி மரத்திலிருந்தும், அதன் வேர்களிலிருந்தும் மீண்டும் மரம் முளைக்கும் என்று ஒரு கறுப்பு இரசாயனம் அதன் அடிக்கட்டை மேல் கவிழ்த்து ஊற்றப்பட்டது. பல வல்லுநர்கள் சேர்ந்து இந்த முடிவை எடுத்து நடைமுறைப்படுத்தினர். பின்னர் இந்த ஊரில் நான்கு வருடங்கள் மழையே இல்லை. எங்கும் புழுதி எழும்பிப் பறக்கும் நிலங்கள். இரசாயனம் ஊற்றா விட்டால் கூட, அந்த மரம் வெட்டிய பின் பிழைத்திருக்கும் என்று நான் நம்பவில்லை. ஐந்தாவது வருடம் சேர்த்து வைத்தது போல மழை கொட்டியது. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிந்தன. புழுதி பறந்த நிலங்களை பச்சை புற்கள் மூடி வளர்ந்தன. மீண்டும் ஒரு நாள் எதேச்சையாக அந்தப் பக்கம் பார்த்தால், அதே அழகுடன், அகன்ற இலைகளுடன் அந்தக் கொய்யா மரம் மீண்டும் வளர்ந்து கொண்டிருந்தது. மொட்டும், பூவும் கூட இருந்தன. அருகே சென்றேன், 'நானும் தான் இங்கே வாழ்ந்து விட்டுப் போகின்றேனே' என்று சொல்வது போல அதன் சிறு கிளைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நேற்று எடப்பாடியார் தாங்கள் தேதிமுகவுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும், பாமகவுடன் பேசவே இல்லை என்றும் சொன்னார். பாமக தான் எந்தப் பக்கம் போவது என்று இன்னும் முடிவு எடுக்கவில்லை போல. மேலும் எடப்பாடியார் தங்களின் கூட்டணியே மிகப் பலமான கூட்டணி என்றும் சொன்னார், ஏனென்றால் தங்களின் அதிமுக கட்சி கூட்டணி வைத்திருப்பது மக்களுடனேயே என்று ஒரு காரணமும் சொன்னார்!!
-
மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
P.E. Teacher, 23, 'Felt Something Was Wrong' After First Marathon, Learns He Has Heart Disease a Week Later. நேற்று இந்த செய்தியை யாஹூவில் பார்த்தேன். மரதன் ஓட்டம் பற்றி இணையத்தில் தேடியிருப்பேன் போல, ஒரேயடியாக மரதன் ஓட்டம் பற்றிய செய்திகளே வந்து கொண்டிருக்கின்றன....😀 வைத்திய உதவி உடனே கிடைத்தால், ஓரளவிற்கு எவரும் தப்பிவிடலாம். சில மாதங்களின் முன், இங்கு கூடைப்பந்தாட்ட வீரர் LeBron James இன் மகன் Bronny James க்கு கல்லூரி (University of Southern California) கூடைப்பந்தாட்ட பயிற்சியின் போது Cardiac Arrest ஏற்பட்டது. ஆனால், உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டதால், அனர்த்தம் தவிர்க்கப்பட்டு, அவர் இப்பொழுது மீண்டும் கல்லூரிக்காக விளையாட ஆரம்பித்துள்ளார். https://www.yahoo.com/entertainment/p-e-teacher-23-felt-201013198.html
-
தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி
👍.... ஒரு பக்கம் அமலாக்கத்துறை, இன்னொரு பக்கம் உளவுத்துறை என்று பயம் காட்டி ஆள் பிடிக்கின்றார்கள். போன மாதம் தான், சரத்குமார் அவரின் கட்சி 234 தொகுதிகளிலும் முன்னுக்கு நிற்பதாக பேசியிருந்தார். 2026 இல் அவரே முதல்வர் என்றார், சிரிக்காமலேயே.
-
தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி
உங்களின் ஓவியங்கள் (கருத்துகளும்) அருமை....👍👍 DALL - E உபயோகிக்கின்றீர்களா?
-
மேய்ப்பன்
மேய்ப்பன் ---------------- ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று நாங்கள் ஊரில் சொல்வதுண்டு. ஒருவர் உருப்படி இல்லாமல் இருக்கின்றார் அல்லது உருப்படவே மாட்டார் என்று தெரிந்தால், அவரின் வீட்டில் குறைந்தது ஒரு ஆமையாவது இருக்க வேண்டும் என்றும் நினைக்கலாமாக்கும். ஒரு தடவை இங்கு ஒரு அயலவரின் வளர்ப்பு ஆமை காணாமல் போய்விட்டது. நேரடியாக என் வீட்டுக் கதவைத் தட்டினார். 'என்னுடைய ஆமை வீட்டை விட்டு ஓடிவிட்டது, உங்கள் வீட்டிற்கு அது வந்ததா?' என்று கேட்டார். அவரின் கேள்வி விளங்க எனக்கு சில விநாடிகள் எடுத்தது. அவரின் ஆமை இரவோடிரவாகவே ஓடியிருக்க வேண்டும் என்றும் சொன்னார். ஒரு ஆமை ஒரு இரவில் எவ்வளவு தூரம் போயிருக்கும் என்று நான் கணக்குப் போடத் தொடங்கினேன். ஆனால் அயலவரோ ஆமை என் வளவிற்குள்ளேயே இருக்கின்றது என்பது போல வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். பலத்த தேடுதலின் பின் ஆமை என் வளவிற்குள் இல்லை என்று முடிவாகியது. நிலையான ஒரு புள்ளியிலிருந்து ஒரு குறித்த மாறாத தூரத்தில் இயங்கும் ஒரு புள்ளியின் ஒழுக்கு வட்டம் என்று மனம் சொல்லிக் கொண்டேயிருக்க, கதவு மீண்டும் தட்டப்பட்டது. இன்னொரு அயலவர் கையில் ஒரு பெரிய ஆமையுடன் வாசலில் நின்றார். 'உங்களின் ஆமை என் வீட்டுக்கு வந்துவிட்டது' என்று ஆமையை என்னிடம் நீட்டினார். ஆமைக்கும், எனக்கும் எக்கச்சக்கமான தொடர்புகள் இருக்க வேண்டும் என்று ஏன் இவர்கள் எல்லோரும் நினைக்கின்றார்கள் என்று நான் நினைத்தேன். ஆமை இறைச்சி கூட இதுவரை சாப்பிட்டதும் இல்லை. அப்பொழுது தான் நான் அந்த ஆமையை முதன்முதலாகப் பார்த்தது. பெரிய ஓட்டு ஆமை. அவர் நீட்டவும், ஆமையும் ஓட்டுக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டியது. 'அடடே, உங்களின் ஆமைக்கு உங்களைத் தெரிகின்றதே' என்று அவர் ஆச்சரியம் காட்டிச் சிரித்தார். இருவருமாக ஆமையை உரியவரிடம் கொடுத்தோம். ஆமையை ஓடவிட்டவர் எனக்கு நன்றி சொன்னார், புதிதாக ஆமை புகுந்த வீட்டுக்காரர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார். ஒரு நேரும், ஒரு மறையும் சேர்ந்து ஒன்றுமில்லை என்றாகியது. ஆமை மறந்து, காலம் முயல் போன்று ஓட, இந்த வாரம் ஒரு மாறுதலுக்காக, ஏலியன்ஸ் இங்கு வந்திறங்கினால் என்ன சொல்லித் தப்பலாம் என்று வாசலில் நின்று பகலிலேயே வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏலியன்ஸ் ஏன் அமெரிக்காவில் மட்டும் வந்து இறங்குகின்றார்கள் என்று தெரியவில்லை. இதுவரை இங்கு வாழ்ந்த மொத்த காலங்களிலும் சில டோஸ் ஃபைஸர் கோவிட் மருந்து மட்டுமே இலவசமாக கொடுக்கப்பட்ட ஒரே ஒரு பொருளும், நிகழ்வும். ஏலியன்ஸ் அரிசி, பருப்பு, காசு, வீடு இப்படியானவற்றை இலவசமாக வழங்கும் ஒரு நாட்டில் இறங்கினால், அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஏதாவது தேறும். அமெரிக்காவில் எதுவும் தேறாது. கழுத்து வலித்து, ஏலியன்ஸை விட்டு பார்வையை கீழே இறக்கினால், அதே ஆமை வீதியைக் கடந்து என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த வீட்டுக்காரர் பாவம், இரவில் தான் ஆமை ஓடுகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார். இது 24 மணிகளும் ஓடுகின்ற அதே பழைய ஆமை. இந்தப் பரம்பரை இப்படித்தான் முயலை வென்றது. ஆமையை அங்கேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாலு அடிகள் பாய்ந்து நான் போக, ஆமையும் நானும் நடுரோட்டில் சந்தித்தோம். ஆமை அங்கேயே நடுரோட்டில் படுத்துவிட்டது. இந்தப் பக்கம் என்னுடைய வீடு, அந்தப் பக்கம் ஆமை வாழும் வீடு, நடுரோட்டில் ஆமையும் நானும், அப்பப்ப கார்கள் வந்து போகும் தெரு அது. ஊரில் வாத்து மேய்ப்பது என்பார்கள், சவூதியில் போய் ஒட்டகம் மேய்ப்பது என்பார்கள், அமெரிக்கா போய் ஆமை மேய்க்க வேண்டும் என்று எவரும் சொல்லவேயில்லை.
-
தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி
இது புதுசு..........இன்னும் இவர் சொல்லாத எத்தனை திருக்குறள்கள் இருக்குது, அதில் ஏதாவது ஒன்றை எடுத்து விடுவதை விட்டிட்டு, இது என்ன புதுப் பழக்கம். ராதிகா சொல்லித்தான் தான் பாஜகவில் சேர்ந்ததாக சரத்குமார் முந்தாநாள் சொல்லியிருந்தார். ஆகவே மோடிஜி ராதிகாவின் காலில் விழுவதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கின்றது.
-
டிக்டொக்கினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - முகநூல் பொதுமக்களின் எதிரி - டிரம்ப் கருத்து
ட்ரம்ப் அவர்களே, நாட்டில் இந்த இரண்டையும் நீங்கள் தடை செய்யா விட்டாலும், குறைந்தபட்சம் உங்களின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே இந்த இரண்டையும் நீங்கள் தடை செய்தால், நீங்கள் கனவில் கூட நினைத்திராத ஒரு வாக்கு உங்களுக்கு கிடைக்கும்.....😀 இங்கு டிக்டொக் ஓடுவதே உங்களின் ரசிகர்களினால் தான்.
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
👍👍..... உங்களிடம் கேட்பதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன. இந்த வருட கரப்பந்தாட்டப் போட்டிக்கு வந்து விடுங்கள்.......😀