Everything posted by பிழம்பு
-
யாழில் எவ்வாறு நடந்துகொள்கிறீர்களோ அதுவே வன்னியில் பதிலாக இருக்கும் - இலங்கை தமிழ் அரசு கட்சித் தலைவர்கள் ரெலோவிடம் நேரில் தெரிவிப்பு
உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ரெலோ உட்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எவ்வாறு நடந்து கொள்கின்றதோ வன்னி தேர்தல் மாவட்டத்தில் அதே பதில் முறைமையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் நடந்துகொள்ளும் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள், ரெலோ தலைவர்களிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் அதன் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமியும் நேற்று முன்தினம் யாழ். நல்லூரில் சி.வி.கே. சிவஞானத்தின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். வன்னியில் வவுனியா மாநகர சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளில் தங்கள் தரப்பு நிர்வாகத்தை அமைப்பதற்கு ஆதரவு வழங்கும்படி ரெலோ தரப்பினர் இந்தச் சந்திப்பின்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்தனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளின் விடயத்தில் ரெலோ கட்சியும் அது சார்ந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் எப்படி நடந்துகொள்கின்றனவோ, அதே முறைமையில் வன்னியில் பதில் தரப்படும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவரும் பதில் பொதுச்செயலாளரும் ஒரே நிலைப்பாடாக உறுதியாக ரெலோ பிரதிநிதிகளிடம் தெரிவித்தனர். அந்தந்த சபைகளில் அதிக இடங்களைப் பெற்ற கட்சி, ஆட்சி அமைப்பதற்கு உதவும் முன்னைய பகிரங்க அறிவிப்பை ரெலோவும், அது சார்ந்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் பின்பற்றுமானால் அதே முறைமையை இலங்கை தமிழ் அரசும் தவறாமல் பின்பற்றும். அந்த முறைமைக்கு மாறான போக்கை ரெலோ உட்பட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பின்பற்றுமானால், அதேபோல் மாறான முறையைத் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வன்னியில் பின்பற்றும் என்று அக்கட்சியின் இரு தலைவர்களும் உறுதிபடத் தெரிவித்தார்கள். இதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பில் சுமந்திரன் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி செயல்பட வேண்டும். அவர்கள் அதற்கு மாறாக செயற்படுவார்களானால் வவுனியா மாநகர சபை மற்றும் வன்னிப் பிரதேசத்தில் உள்ள அனைத்து சபைகளிலும் நாமும் வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் செயற்படுவோம் என எதிர்பார்க்கக் கூடாது. இது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களுக்கும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம் என்றார். யாழில் எவ்வாறு நடந்துகொள்கிறீர்களோ அதுவே வன்னியில் பதிலாக இருக்கும் - இலங்கை தமிழ் அரசு கட்சித் தலைவர்கள் ரெலோவிடம் நேரில் தெரிவிப்பு | Virakesari.lk
-
வடக்கில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை
10 Jun, 2025 | 05:39 PM பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களுக்குமான ஆலோசனைக் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவித்தார். இதன்போது அவர், வடக்கு மாகாணத்தில் யாசகம் பெறுபவர்களால் ஏற்படும் பிரச்சினைகளையும், யாசகம் சார்ந்த சட்டங்களையும் மத்திய மாகாண ரீதியில் அல்லாது சகலரும் ஒன்றிணைந்த சட்ட ஏற்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என கோரியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களைக் கட்டுப்படுத்த கடந்த காலங்களைப் போன்று தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். வடக்கில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை | Virakesari.lk
-
வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி
09 Jun, 2025 | 05:30 PM வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள், தமக்கான சமூக மரியாதையையும் அங்கீகாரத்தையும் வலியுறுத்தி நடைபவனியொன்றை இன்று (9) முன்னெடுத்தனர். தமக்கான சுயமரியாதையுடன் கூடிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என தெரிவித்து, மூன்றாம் பாலினத்தவர்கள் ஏற்பாடு செய்த இந்த நடைபவனி, வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது. இதன்போது பேரணியினர் தமக்கான அங்கீகாரமும் சமூக மரியாதையும் கிடைக்க வேண்டும் என தெரிவித்து, பதாதைகளை தாங்கிச் சென்றதோடு, வானவில் நிறங்கள் பொருந்திய கொடிகளையும் கொண்டுசென்றனர். இந்த நடைபவனியில் மூன்றாம் பாலினத்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி | Virakesari.lk
-
இலங்கையிலிருந்து சிங்கப்பூர் கொடியுடன் மும்பை சென்ற கப்பலில் தீ பரவல் !
09 Jun, 2025 | 05:10 PM கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் கப்பலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் ‘எம்.வி. வான் ஹை 503’ என்ற கொள்கலன் கப்பல், கொழும்பிலிருந்து மும்பையின் நவா ஷேவாவுக்கு செல்லும் வழியில், கேரளாவின் பேப்பூர் கடற்கரை அருகே அரபிக் கடலில் வைத்து இன்று திங்கட்கிழமை (9) தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. கப்பலில் ஏற்பட்ட பல வெடிப்புகளைத் தொடர்ந்து தீப்பற்றியதால், 20 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கொள்கலன் கப்பலில் ஆபத்தான 4 பொருட்கள் உட்பட வேறு பொருட்கள் இருந்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கப்பலில் பணியாற்றிய 22 பணியாளர்களில் 18 பேர் கடலில் குதித்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 4 பேரை காணவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை இணைந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையிலிருந்து சிங்கப்பூர் கொடியுடன் மும்பை சென்ற கப்பலில் தீ பரவல் ! | Virakesari.lk
-
கடூழிய சிறைத் தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த மேன்முறையீடு!
உயர் நீதிமன்றம் தனக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, சதொச ஊடாக 14,000 கரம் போர்ட்களையும் 11 ஆயிரம் டாம் போர்ட்களையும் கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது. இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடூழிய சிறைத் தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த மேன்முறையீடு! | Virakesari.lk
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
‘நாயகன்’ என்ற ஒரு க்ளாசிக் படம் வெளியாகி சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைகிறது என்ற அறிவிப்பே இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளறிவிட்டது. பிறகு டைட்டில் டீசர், ட்ரெய்லர், சமூக வலைதளங்களில் ஹிட் அடித்த பாடல்கள் என இப்படத்துக்கு பெரிய ஓபனிங்கை கொடுத்தது. இந்த பெரும் எதிர்பார்ப்பை கமல் - மணிரத்னம் கூட்டணி பூர்த்தி செய்துள்ளதா? டெல்லியில் கேங்ஸ்டராக இருக்கும் ரங்கராய சக்திவேலுக்கும் (கமல்ஹாசன்), போலீஸுக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் பேப்பர் போடும் ஒருவர் தவறுதலாக சுடப்பட்டு இறக்கிறார். இதனால் அவரது மகனான சிறுவன் அமரன் (சிலம்பரசன்) ஆதரவின்றி நிற்கிறார். அவருடைய தங்கை சந்திராவும் காணாமல் போகிறார். பின்னர் அமரனை தத்தெடுத்து தன் சொந்த மகன் போல வளர்க்கிறார். தன் அண்ணன் மாணிக்கத்தின் (நாசர்) மகளின் தற்கொலைக்கு காரணமானவனை கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்கிறார் சக்திவேல். இதனால் தன்னுடைய பொறுப்புகளை (?) அமரனிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறார். ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன பிறகு தன்னை விட மற்றவர்கள் அமரனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சக்திவேலுக்கு நெருடுகிறது. தன் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதலுக்கும் கூட அமரன் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார். இது இருவருக்கும் இடையே மோதலை உருவாக்குகிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பதே ‘தக் லைஃப்’ படத்தின் திரைக்கதை. (படத்தில் இடம்பெறும் சிறிய ஸ்பாய்லர்கள் இதில் அலசப்பட்டுள்ளதால் படம் பார்க்காதவர்கள் கவனத்தில் கொள்ளவும்.) சில நேரம் நாம் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செல்லும் படங்கள் நம்மை மிகுந்த ஆச்சர்யத்துக்குள்ளாக்கி நமக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விடும். வேறு சில படங்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் செல்லும் பார்வையாளர்களை ஏமாற்றி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதில் ‘தக் லைஃப்’ இரண்டாவது வகை. காரணம், கமல்ஹாசன் - மணிரத்னம் என்ற இந்திய சினிமாவின் இரு பெரும் ஆளுமைகள் இப்படத்தில் இருந்தும் இப்படத்தை ஓரளவுக்கு கூட பார்வையாளர்கள் ரசிக்கும்படி கொடுக்க முடியாமல் போனது பேரதிர்ச்சி. படம் ஒரு ஃப்ளாஷ்பேக் உடன் தொடங்குகிறது. படத்தின் ஒரு சில நல்ல அம்சங்களில் இந்தக் காட்சியும் ஒன்று. கமலுக்கான டீஏஜிங் தொழில்நுட்பம் அசத்தலான ஆச்சர்யம். இதற்கு முன்பு வந்த படங்களில் இல்லாத நேர்த்தியும், துல்லியமும் இதில் இருந்தது. இளவயது சிம்புவுக்கும் கமலுக்கும் இடையிலான காட்சிகளும், பின்னணியில் ஒலிக்கும் ‘அஞ்சுவண்ண பூவே’ பாடலும் நன்று. ஆனால், இதன்பிறகு சமகாலத்துக்குப் படம் வந்ததும் திரைக்கதை எந்தவித சுவாரஸ்யமும் இன்றி தட்டையாக நகரத் தொடங்குகிறது. அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை. மணிரத்னம் படங்கள் என்றாலே வசனங்கள் மூலமாக கதையை சுவாரஸ்யமாக நகர்த்துவதில் வல்லவர் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் அறிவர். ஆனால், அதற்காக ‘போதும் போதும்’ என்று சொல்லும் அளவுக்கு எல்லா காட்சியையுமே வசனத்திலேயே நகர்த்தி இருக்கிறார். கமலுக்கும் சிம்புவுக்குமான பிணைப்பு, அதன் பிறகு இருவருக்குள்ளும் எழும் சின்ன ஈகோ, சிம்பு மீது கமலுக்கு ஏற்படும் பொறாமை, நாசருக்கும் கமலுக்கும் அப்படி என்ன பகை என எந்த காட்சியிலும் அழுத்தமோ, மெனக்கெடலோ இல்லை. போகிற போக்கில் வசனத்திலேயே அவரவர் தங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினையை சொல்லிவிட்டு போகிறார்கள். த்ரிஷா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. த்ரிஷா வீட்டில் இருந்து கமல் தன் வீட்டுக்குச் செல்லும் ஒரு காட்சியில் முகத்தில் வெறுப்பை காட்டுகிறார் த்ரிஷா. அதன் பிறகு இரண்டாம் பாதி முழுக்க கமலை நினைத்து உருகுகிறார். உண்மையில் அந்த கதாபாத்திரத்தின் நோக்கம் என்ன, அவர் யார் என எதிலும் தெளிவில்லை. இதே கதைதான் அபிராமி - கமல் இடையிலும். கணவன் இன்னொரு பெண்ணுடன் இருந்துவிட்டு வந்து கொஞ்சம் எமோஷனலாக பேசியதுமே விழுந்து விடுகிறார் அபிராமி. திடீரென சம்பந்தமே இல்லாமல் நேபாளம் செல்கிறார் கமல். அங்கு இடைவேளை வைக்கவேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்கப்பட்ட ஒரு காட்சி. அடிபட்டு, குண்டடி வாங்கி, மலையிலிருந்து கீழே விழுந்து எதுவுமே ஆகாமல் மீண்டும் விழுந்து, பனிப்புயலில் இருந்து தப்பித்து… உஸ்ஸ்ஸ் என்று ஆகி விடுகிறது. ஒருகணம் நாம் பார்த்துக் கொண்டிருப்பது மணிரத்னம் படம்தானா என்ற சந்தேகமும் பல இடங்களில் சற்று அதிகமாகவே வருகிறது. நேபாளத்தில் இரண்டு வருடம் கமல் தற்காப்புக் கலைகள் கற்றுக் கொள்வதாக காட்டுகிறார்கள். (அதுவும் வசனத்திலேயே வந்துவிடுகிறது) அதற்காக போகும் இடங்களுக்கு எல்லாம் அந்த தற்காப்பு உடையையே அணிந்துதான் செல்ல வேண்டுமா? முதல் பாதியில் ரங்கராய சக்திவேலாக இருந்த கமல், இரண்டாம் பாதியில் ‘இந்தியன்’ தாத்தா மோடுக்கு மாறிவிடுகிறார். படத்தில் இருந்த வெகுசில நல்ல காட்சிகளில் ஒன்றாக கமலும் ஐஸ்வர்யா லட்சுமியும் பேசிக் கொள்ளும் காட்சியை சொல்லலாம். ஒரு படத்தின் திரைக்கதை சொதப்பிவிட்டால், அதில் இடம்பெறும் நல்ல விஷயங்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் போய்விடும் என்பதற்கு இந்தப் படமே சரியான உதாரணம். கமலின் நடிப்பு, சிம்புவின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், ரஹ்மானின் பாடல்கள், ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு என பாசிட்டிவ் அம்சங்கள் இருந்தும் இவை எதுவும் நம்மை படத்துக்குள் இழுக்கவில்லை. இந்தப் படத்தில் எதற்காக ஜோஜு ஜார்ஜ், ‘மிர்சாபூர்’ அலி ஃபஸல், அசோக் செல்வன், சேத்தன் போன்ற நல்ல நடிகர்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை. வழக்கமாக நன்றாக சென்று கொண்டிருக்கும் படத்தில் பாடல்கள் ஸ்பீடு பிரேக்கர்களாக வருகின்றன என்று சொல்வோம். ஆனால், இங்கு ஏற்கெனவே தொங்கி துவண்டு போயிருக்கும் படத்தில் ஆங்காங்கே வரும் பாடல்கள்தான் சற்று நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. ‘ஜிங்குச்சா’, ‘அஞ்சுவண்ணப் பூவே’ பாடல்கள் சிறப்பு. சின்மயி வெர்ஷனா, தீ வெர்ஷனா என்ற ரசிகர்கள் இணையத்தில் அடித்துக் கொண்டிருந்த நிலையில், உங்களுக்கு இந்த இரண்டு பாடலுமே கிடையாது என்று அதை தூக்கி கடாசியிருக்கிறார் இயக்குநர். மற்றொரு வைரல் பாடலான ‘விண்வெளி நாயகா’ பாடலும் வீணடிக்கப்பட்டிருக்கிறது. முன்பே குறிப்பிட்டத்தை போல கமல் - மணிரத்னம் என்ற இருபெரும் ஆளுமைகள் இருந்தும் கூட இப்படத்தை காப்பாற்ற முடியாமல் போனது சோகம். ‘க்ளாசிக்’ அந்தஸ்தை பெற்றுவிட்ட ‘நாயகன்’ அளவுக்கு இல்லையென்றாலும் கூட ஓரளவு ஜனரஞ்சகமான முறையில் ரசிகர்களை திருப்திபடுத்தி இருந்தால் படத்துக்கு செய்த பிரம்மாண்ட விளம்பரங்களுக்கு நியாயம் கிடைத்திருக்கும். ‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா? | Thug Life Movie Review - hindutamil.in
-
”323 கொள்கலன்களில் பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் இருந்தன” - ராமநாதன் அர்ச்சுனா
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வி. பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் அடங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்கள் பிரபாகரனுடையது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு பாதுகாப்பு வழங்கப்படாததால் இதைச் சொன்னதற்காக நான் சுடப்படலாம்," என்று எம்.பி. கூறினார். "பிரபாகரன் 2009 க்கு முன்பு தாய்லாந்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முயன்றார்," என்று அவர் மேலும் கூறினார். இதற்கு பதிலளித்த அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர, வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகக் கூறினார். "அவர் ஒரு மருத்துவராக இருக்கலாம், ஆனால் அவர் பைத்தியம் பிடித்துவிட்டது போல் தெரிகிறது," என்று எம்.பி. மேலும் கூறினார். Tamilmirror Online || ”323 கொள்கலன்களில் பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் இருந்தன”
-
வவுனியாவில் வீட்டு வளாகத்தில் 9 அடி நீளமான முதலை மீட்பு
05 Jun, 2025 | 06:41 PM வவுனியா கொக்குவெளி பகுதியில் உள்ள வீடொன்றின் வளவிலிருந்து 9 அடி நீளமான முதலையொன்று வனஜீவராசிகள் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் புதன்கிழமை (4) அவ்வீட்டுக்கு பின்புறமுள்ள தோட்டப்பகுதியில் முதலை ஒன்று இருந்ததை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார். அவர் அதனை துரத்த முற்பட்டபோது, அக்காணியில் உள்ள கைவிடப்பட்ட கிணற்றில் முதலை வீழ்ந்துள்ளது. இதனையடுத்து அவர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன் பின்னர், இன்றைய தினம் (5) அப்பகுதிக்குச் சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் காணியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து முதலையினை பிடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் வீட்டு வளாகத்தில் 9 அடி நீளமான முதலை மீட்பு | Virakesari.lk
-
ஈ.பி.டி.பி. உடனோ பேரினவாத சக்திகளோடு பேச முற்படுபவர்கள் தாமாக வெளியேறலாம் அல்லது புதிய கட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் - கஜேந்திரகுமார்
05 Jun, 2025 | 12:17 PM ஈ.பி.டி.பி. உடனோ அல்லது பேரினவாத சக்திகளோடு புதிய கட்டமைப்பின் அனுமதியின்றி யாராவது பேசவோ செயற்படவோ முனைந்தால் அவர்கள் தாமாகவே வெளியேறலாம் அல்லது விலக்கப்படுவார்கள் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய பேரவை சுயாதீனமாகவும் இயங்கும். நாற்காலிகளை அலங்கரிப்பது நோக்கமல்ல. சித்தார்த்தன் டக்ளஸை அணுகியது எம்முடன் கூட்டில் உள்ள எவருக்கும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈ.பி.டி.பி. உடனோ பேரினவாத சக்திகளோடு பேச முற்படுபவர்கள் தாமாக வெளியேறலாம் அல்லது புதிய கட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் - கஜேந்திரகுமார் | Virakesari.lk
-
நாளொன்றுக்கு 6 மணி நேரம் வேலை செய்ய முடியாத அளவுக்கு அதிக வெப்பம் நிலவும் நாடாக இலங்கை ; உலக வங்கி
05 Jun, 2025 | 01:26 PM நாளொன்றுக்கு சராசரியாக ஆறு மணிநேரம் பொது வெளியில் பாதுகாப்பாக வேலை செய்ய முடியாத அளவுக்கு அதிக வெப்பநிலையைக் கொண்ட தெற்காசிய நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்த நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளும் அடங்கும். 2050 ஆம் ஆண்டுக்குள் நாளொன்றுக்கு எட்டு முதல் ஒன்பது மணிநேரமாக அதிகரிக்கலாம் என உலக வங்கியின் 'ஆபத்திலிருந்து மீள் எழுச்சி தன்மைக்கு தெற்காசியாவில் மக்கள் மற்றும் நிறுவனங்களை மாற்றியமைக்க உதவுதல்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. தெற்காசியாவில் தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. 2030 ஆம் ஆண்டில் சுமார் 90 சதவீத மக்கள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட நேரிடும் எனவும், ஐந்து பேரில் ஒருவருக்கும் அதிகமானோர் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பொது வரவு செலவு திட்டம் அழுத்தத்தில் இருப்பதால், பெரும்பாலான மாற்றங்களுக்கான முயற்சிகளை தனியார் துறை முன்னெடுக்க முன் வர வேண்டும். அடிக்கடி மாற்றம் ஏற்படும் மற்றும் சேதத்தை விளைவிக்கும் வானிலை நிகழ்வுகளுக்கு ஏற்ப வீடுகள் மற்றும் நிறுவனங்களை மாற்றியமைக்க உதவும் கொள்கை சீர்திருத்தங்களுக்கான புதிய அறிக்கை ஒன்றை உலக வங்கி வகுத்துள்ளது. இந்த தீவிர வானிலை நிகழ்வுகளால் தெற்காசியாவின் வளர்ந்து வரும் சந்தை மற்றும் பொருளாதாரங்களில் (EMDEs) மிகவும் பாதிக்கப்படக்கூடியது. கடந்த இரண்டு தசாப்தங்களில் வெள்ளம் மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு நிகழ்வுகளின் அதிக அதிர்வெண் காணப்படுவதால் இது மிகவும் சாதாரணமான ஒன்றாகவுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல், தெற்காசியாவில் சராசரியாக ஆண்டுக்கு 67 மில்லியன் மக்கள் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் வெள்ளத்தால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தீவிர வெப்பநிலையால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் விவசாயம் பெரும் ஆபத்தை சந்திக்கும் என இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. "காலநிலை மாற்றம் பிராந்தியத்தின் விவசாய முறைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதில் வெப்பநிலை அதிகரிப்பு, நீர் பற்றாக்குறை, பருவம் மாறி மழை பெய்தல் மற்றும் வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளும் அடங்கும்" என குறிப்பிட்ப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 6 மணி நேரம் வேலை செய்ய முடியாத அளவுக்கு அதிக வெப்பம் நிலவும் நாடாக இலங்கை ; உலக வங்கி | Virakesari.lk
-
உதய கம்மன்பிலவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்!
போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை நீக்கி கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோர், கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை இன்னும் நீக்கப்படவில்லை என கூறினார். இது தொடர்பில் பரிசீலித்த நீதவான், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். உதய கம்மன்பிலவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்! | Virakesari.lk
-
இலங்கையில் பதிவு செய்யப்படாத இஸ்ரேலிய சமய கலாசார நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை - சுனில் செனவி
05 Jun, 2025 | 01:48 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கையில் இஸ்ரேல் இனத்தவர்களின் சமய மற்றும் கலாசார நிலையங்களென நான்கு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த பதிவு கம்பனிகள் சட்டத்தின் கீழே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பதிவு செய்யப்படாமல் இருக்கும் ஏனைய சட்டவிரோத நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போமென புத்தசாசன, சமய மற்றும் கலாாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எம்,பி. கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தனது கேள்வியில், இஸ்ரேல் இனத்தவர்களின் சமய மற்றும் கலாசார நிலையங்கள் இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ளனவா? அவை தாபிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் யாவை? அவற்றுக்கு சட்ட ரீதியாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என கேட்டிருந்தார். அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், இலங்கையில் இஸ்ரேல் இனத்தவர்களின் சமய மற்றும் கலாசார நிலையங்கள் என பொத்துவில், எல்ல, வெலிகம மற்றும் திபிரிகஸ்யாய ஆகிய பிரதேசங்களில் தாபிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தாபிக்கப்பட்டுள்ள சமய மற்றும் கலாசார நிலையங்களில் பொத்துவில் மற்றும் திபிரிகஸ்யாய ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நிலையங்கள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. மற்ற இரண்டு நிலையங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பொத்துவில் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நிலையத்தை பதிவு செய்யாமல் இருப்பதற்கான காரணம் தெரியாது. கிராம சேவகர் அந்த பகுதியில் துறை பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், அதுதொடர்பில் தகவல் பெற்றுக்காெள்ள அங்கு யாரும் இருக்கவில்லை என்பதால் பொது மக்களிடமிருந்து தகவல் பெற்றுக்கொண்டிருக்கிறார். அதன்போது அவர்கள், இது தனியார் காணி என்றும். அதனால் அதனை பதிவு செய்யாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இஸ்ரேல் இனத்தவர்கள் சுற்றுலா பயணிகளாக இந்த பிரதேசத்துக்கு வந்தால். இந்த மத நிலையத்தில் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தற்போது அவர்கள் இலங்கையில் இருந்து சென்றுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்ததாக கிராம சேவகரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் திம்பிரிகஸ்யாய பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டடம் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் மத நிலையமாகவோ நிறுவனமாகவோ பதிவு செய்யப்பட்டதில்லை. பூஜை வழிபாட்டுக்காக என தெரிவித்து இஸ்ரேல் இனத்தவர்கள் 4பேர் அங்கு தங்கி இருந்துடன் வெளிபிரதேசங்களில் இஸ்ரேல் இனத்தவர்கள் மத வழிபாட்டுக்காக சம்பந்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள வெளிகம மற்றும் எல்ல நிறுவனங்கள், நிறுவனங்கள் பதிவு செய்யும் பதிவாளர் காரியாலயத்திலே 2024- 4-22ஆம் திகதி பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்றார். இதன்போது மேலதிக கேள்வி ஒன்றை எழுப்பி முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குறிப்பிடுகையில், கொழும்பு பிரதேசத்தில் தற்போது இரண்டு இடங்களில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. அதில் ஒன்று கொழும்பு, 7 ரெட் சினமனுக்கு முன்னால் இருக்கும் ரபாப் ஹவுஸ். தெஹிவளை அல்விஸ் பிளேஸிலும் ஒரு நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு நிலையங்களும் சட்ட பூர்வமானதல்ல என்றும் பதிவு செய்யப்படவி்ல்லை என்றும் பிரதமர் கடந்த டிசம்பர் மாதம் இந்த சபையில் தெரிவித்திருந்தார்.ஆனால் அந்த இரண்டு நிலையங்களும் அரசாங்கத்தின் பொலிஸ் மற்றும் விசேட அதிரடைப்படை பாதுகாப்புடனே செயற்பட்டு வருகின்றன. சட்ட ரீதியற்ற இந்த மத நிலையங்கள் தொடர்பில் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? என கேட்கிறேன் என்றார். அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், இலங்கையில் நான்கு மதங்கள் இருக்கின்றன. அவற்றுக்கென திணைக்களங்கள் இருக்கின்றன. அவை பதிவு செய்யப்படுவதற்கான முறையொன்று இருக்கிறது.ஆனால் இஸ்ரேலுக்கு சொந்தமான இந்த கட்டடங்கள் கம்பனி சட்டத்தின் கீழே பதிலாகி இருக்கின்றன. அவ்வாறு பதிவு செய்யப்படும்போது ஹோட்டல் அல்லது சிற்றுண்டிச்சாலை வியாபார நிலையம் போன்ற வடிவமே இருக்கும். ஆனால் அங்கு வேறு விடயங்கள் இடம்பெறுவதையே காணக்கூடியதாக இருக்கிறது. இவற்றின் தகவல்களை சேகரிப்பதும் கடினமான விடயமாகும். அது தொடர்பான தகவல்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். அதேநேரம் இந்த நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவே எனக்கு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கொழும்பு 7இல் உள்ள நிலையத்துக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை அகற்றப்பட்டுள்ள போதும் பொலிஸ் பாதுகாப்பு தற்போதும் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான மத்திய நிலையங்கள் ஊடாக இஸ்ரேல் எமது நாட்டுக்குள் மறைமுகமாக நுழைந்திருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது. நாடுகளுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்துகின்ற, மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கின்ற, காசாவில் இன அழிப்பை மேற்கொண்டுவரும் இஸ்ரேல் தொடர்பில் அரசாங்கம் ஏன் இலகுவான முறையில் நடவடிக்கை எடுக்கிறது? அத்துடன் இந்த சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு என்னும் எவ்வளவு காலம் தேவைப்படுகிறது என கேட்கிறேன். அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், யூதர்கள் எமது நாட்டுக்கு மத நடவடிக்கைகளுக்குதான் வருகிறார்கள் என எங்களுக்கு உறுதியாக தெரிவிக்க முடியாது. அவர்கள் சுற்றுலா பயணிகளாகவும் நாட்டுக்குள் வருகிறார்கள். எனவே இந்த சட்ட விரோத கட்டிடங்கள் தொடர்பில் இருக்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். என்றாலும் சுற்றுலா பயணிகளாக அவர்கள் நாட்டுக்குள் வரும்போது, சுற்றுலா பயணிகளாக அவர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகளை நாங்கள் செய்துகொடுக்க வேண்டி ஏற்படுகிறது என்றார். இலங்கையில் பதிவு செய்யப்படாத இஸ்ரேலிய சமய கலாசார நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை - சுனில் செனவி | Virakesari.lk
-
ரயில் சாரதியின் சாதுரியத்தால் தடுக்கப்பட்ட பாரிய விபத்து !
05 Jun, 2025 | 03:31 PM பாணந்துறையிலிருந்து மருதானைக்கு இன்று வியாழக்கிழமை (5) காலை, புறப்பட்ட ரயில் எண் 328, தானியங்கி ஒளி சமிக்ஞை 171 ஐ நெருங்கியபோது, ரயில் செல்வதற்கான பச்சை சமிக்ஞை காட்டப்பட்ட போதும் எதிரில் அதே தண்டவாளத்தில் ரயில் (S-11 சிவப்பு ரயில்) ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ரயில் சாரதியில் சாதுரியத்தால் பாரிய விபத்தொன்று தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான சமிக்ஞைகளை பொருத்துமாறு கோரி ரயில் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே தொழிற்சங்க செயலாளர் தெரிவித்தார். பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையிலான சமிக்ஞை கோளாறு குறித்த தகவல் கிடைத்துள்ளது. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சிக்கலை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நாட்டின் மிகவும் பரபரப்பான ரயில் மார்க்கங்களில் கரையோர மார்க்கமும் ஒன்றாக இருப்பதால் குறிப்பாக இந்த சம்பவத்தையடுத்து பயணிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். ரயில் சாரதியின் சாதுரியத்தால் தடுக்கப்பட்ட பாரிய விபத்து ! | Virakesari.lk
-
சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
05 Jun, 2025 | 04:40 PM (எம்.நியூட்டன்) சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செ.பிரணவன் தெரிவித்தார். உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு கருத்துகள்களை முன்வைக்கையில் அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது. உயிர்கொல்லி போதை மாத்திரையை வடக்குக்கு கொண்டு வரும் மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்திடமிருந்து அந்த மாத்திரைகள் விநியோகிக்கும் சங்கிலியை கண்காணித்து சோதனை செய்தாலே இதனை இலகுவாக கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றார். சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி | Virakesari.lk
-
மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் சமர்பிப்பு
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் தனிநபர் பிரேரணையாக மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் வியாழக்கிழமை (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் வழிமொழிந்தார். பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி கடந்த மே 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் 2017ஆம் ஆண்டில் செப்டம்பர் 21ஆம் திகதி வலுவிலிருந்த 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தோ்தல்கள் சட்டத்தின் ஏற்பாடுகள் 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கச் சட்டத்தினால் அதற்குச் செய்யப்பட்ட திருத்தங்கள் எவ்வாறிருப்பினும், 2017 செப்டம்பர் 22 ஆந் திகதியிலிருந்து தொடங்குகின்றதும் இந்த சட்டம் நடைமுறைக்கு வருகின்ற திகதி வரைக்குமான காலப்பகுதியின்போது செய்யப்பட்ட ஏதேனும் செயலுக்குப் பங்கமின்றிஇ அத்தகைய செயல் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்கச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு ஒவ்வாதனவாகவிராத அளவுக்குஇ இச்சட்டம் வலுவுக்குவருகின்ற திகதியிலிருந்து பயனுறுவதாக நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் நேற்றையதினம் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் சமர்பிப்பு | Virakesari.lk
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டக்ளஸ் இதனைத் குறிப்பிட்டார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். அலுவலகத்துக்கு வருகை தந்த சிவஞானம், வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ் | Virakesari.lk
-
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழ். பண்ணை கடற்கரையில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!!
2025ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது கடந்த 30 ஆம் திகதி முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது. இதனடிப்படையில் யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் அதிகார சபையின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. இதன்பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம் பிரிக்கபட்டு தூய்மைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ். பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழ். பண்ணை கடற்கரையில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!!
-
புதிய கூட்டானது சுமந்திரன் மீதான முன்னணியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே - கீதநாத் தெரிவிப்பு!
வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணையை முன்னணி, சுயநல அரசியல் லாபங்களை மட்டுமே மையப்படுத்தி, சுமந்திரன் எதிர்ப்பு அரசியலாக மாற்றுவது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான பாரிய துரோகம் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான புதிய கூட்டு குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெற்கில் அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து இந்த பித்தலாட்ட அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்டு நிற்கும் போது, தமிழ் தேசியக் கட்சிகள் மட்டும் ஏன் ஓர் அணியில் சேர்ந்து செயல்பட முடியாது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர்; 2025ம் ஆண்டின் உள்ளுராட்சி சபைத்தேர்தல், அதற்கு முன்னரான இரண்டு தேர்தல்களின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களின் வெளிப்பாடாக அமைந்ததுடன், மக்கள் தமது மேலான ஆணையை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வழங்கியிருந்தனர். மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் மக்களுக்கான சேவையினை செய்வதற்குப் பதிலாக வாக்குகளை பெற்றுக்கொண்ட கட்சிகள் தனிப்பட்ட அரசியல் பகையை மட்டும் பிரதானப்படுத்தி செயற்படுவது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான பாரிய துரோகம். குறிப்பாக அண்மையில் புதிதாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான புதிய கூட்டு, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இதுவரை பேசி வந்த கொள்கைக்கு முற்றிலும் மாறான ஒன்று என்பதுடன், கஜேந்திரகுமார் தரப்புக்கு இருக்கும் சுமந்திரன் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக்கொள்ளும் ஒரு நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடிகிறது. தமிழ் மக்கள் கொடுத்த ஆணையை, இவ்வாறான தனிப்பட்ட எதிர்ப்பு அரசியலாக வெளிப்படுத்துவதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தெற்கில் அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து இந்த பித்தலாட்ட அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்டு நிற்கும் போது, தமிழ் தேசியக் கட்சிகள் மட்டும் ஏன் ஓர் அணியில் சேர்ந்து செயல்பட முடியாது? எனவே, தமிழ் மக்களை மையப்படுத்திய அரசியல் சேவையில் ஓர் அணியாக ஈடுபடுவதே மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் எதிர்பார்க்கும் ஒன்றாக காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். புதிய கூட்டானது சுமந்திரன் மீதான முன்னணியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே - கீதநாத் தெரிவிப்பு!
-
குருந்தூர் மலையில் கைதான விவசாயிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன் போராட்டம்
04 Jun, 2025 | 01:07 PM யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (04) பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் "மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலியா, இந்த மண் எங்களின் சொந்தமண், பண்பாட்டு இனப்படுகொலையை நிறுத்து, குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், இனப்படுகொலை இராணுவமே வெளியேறு, தமிழரின் நிலம் தமிழருக்கே சொந்தம், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை" என கோஷமிட்டு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். குருந்தூர் மலையில் கைதான விவசாயிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன் போராட்டம் | Virakesari.lk
-
தமிழரசு கட்சியின் புதிய தலைவர் எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலியை சமர்ப்பிக்க வேண்டும் - நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு
04 Jun, 2025 | 01:37 PM (துரைநாயகம் சஞ்சீவன்) தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜாவின் மறைவுக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவரை இந்த வழக்கிலே முதலாவது எதிராளியாக பதிலீடு செய்துகொள்வதற்கே இன்றையதினம் குறித்த வழக்கு அழைக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆவணங்களை வழக்காளி, மன்றிலே சமர்ப்பித்திருக்கின்றார். புதிய தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கு இந்த வழக்கு தொடர்பான அறிவித்தல் கொடுத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தன்னுடைய பதிலியை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என இன்றைய வழக்கிலே நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை சில நாட்களுக்கு முன்னர் சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தான் கட்சி உறுப்பினர் எனவும் இந்த வழக்கிலே தன்னை இடைபுகு மனுதாரராக சேர்த்துக் கொள்ளும்படியாகவும் ஒரு விண்ணப்பம் செய்திருக்கின்றார். இந்த வழக்கானது சென்ற வருடம் பெப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டு யாராவது வழக்கிலே அக்கறை உள்ளவர்கள் வழக்கிலே இணைந்து கொள்வதானால் 2024 பெப்ரவரி 29ஆம் திகதிக்கு முன்னதாக மன்றுக்கு வர வேண்டும் என்று பத்திரிகைகளிலே அறிவித்தலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒன்றரை வருடங்கள் கழித்து தன்னை இடைபுகுமனுதாரராக சேர்த்துக் கொள்ளுமாறு சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் விண்ணப்பித்திருக்கின்ற காரணத்தினாலே நாங்கள் பலர் அதற்கு எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தோம். எனினும் சில எதிராளிகளின் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் எந்த எதிர்ப்பும் இல்லை அவர் சேர்த்துக் கொள்ளப்படலாம் என கூறியிருந்தார்கள். குறிப்பாக சிறிதரன், குகதாசன் மற்றும் யோகேஸ்வரன் சார்பிலே ஆஜரான சட்டத்தரணிகள் இந்த சந்தர்ப்பத்திலேயும் அவரை சேர்த்துக் கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறியிருதார்கள். சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தன்னுடைய மனுவிலே இந்த வழக்கானது இழுபட்டுக் கொண்டு செல்கின்ற காரணத்தினாலே காலம் போய்க் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேதான் தன்னை இணைத்துக் கொள்ளும்படியாக தன்னுடைய மனுவின் 9ஆம் 10ஆம் பந்திகளிலே சொல்லியிருக்கின்றார். ஆகவே அதை மேற்கோள்காட்டி நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம். அவரை சேர்த்துக் கொள்வதா?, இல்லையா? என்ற விசாரணையே ஒரு வருடம் இழுபடும் இது வழக்கை இழுத்தடிப்பதற்கான ஒரு முயற்சி. எனவே அந்த இடைபுகுநரை மனுவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்ற எங்களுடைய ஆட்சேபனைக்காக வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தவணையிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் சி.வி.கே.சிவஞானமும் தன்னுடைய பதிலியை அணைக்க வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். தமிழரசு கட்சியின் புதிய தலைவர் எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலியை சமர்ப்பிக்க வேண்டும் - நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு | Virakesari.lk
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் : நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கஜேந்திரகுமார எம்.பி முன்வைத்த விடயம் தொடர்பில் விசேட கவனத்தை செலுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், துரிதமாக விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் உங்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயத்தின் முக்கியத்துவத்தை உணர்கின்றேன். அதன்படி இது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கின்றேன் என்றார். செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் : நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன | Virakesari.lk
-
வடக்கு காணி விவகாரம் : ஒரு வாரமாகியும் இரத்துக்கான வர்த்தமானி பிரசுரிக்கப்படவில்லை; நடவடிக்கை இன்றேல் சட்டமறுப்புப் போராட்டமே வழி - சுமந்திரன்
(நா.தனுஜா) அரசாங்கத்தினால் வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், இன்னமும் அதற்குரிய வர்த்தமானி பிரசுரிக்கப்படவில்லை. இரத்துச் செய்வது குறித்த வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்படாவிடின், ஒத்திவைக்கப்பட்ட சட்டமறுப்புப் போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர தமக்கு வேறு தெரிவுகள் இல்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார். வட மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அரசாங்கத்தின் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2430 இலக்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக வாபஸ் பெறவேண்டும் எனக் கோரி வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்து, அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை இரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதாக அரசாங்கம் அறிவித்திருப்பதன் காரணமாக கடந்த மாதம் 30ஆம் திகதி வட, கிழக்கில் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த பாரிய சட்டமறுப்புப் போராட்டம் மற்றும் ஹர்த்தாலை ஒத்திவைப்பதாகவும், இரத்து செய்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெகுவிரைவில் வெளியிடப்படாவிடின், அப்போராட்டம் முழுவீச்சில் முன்னெடுக்கப்படும் எனவும் சுமந்திரன் ஏற்கனவே எச்சரித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி புதன்கிழமை (4) கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன், 'காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதாக கடந்த மாதம் 27ஆம் திகதி அரசாங்கம் அறிவித்தது. நாம் விதித்த காலக்கெடுவுக்கு முன்னைய நாள் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் ஒரு வாரம் கடந்தும், இன்று வரை அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை. வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்படாவிடின், சட்டமறுப்புப் போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர எமக்கு வேறு தெரிவுகள் இருக்காது' எனத் தெரிவித்துள்ளார். வடக்கு காணி விவகாரம் : ஒரு வாரமாகியும் இரத்துக்கான வர்த்தமானி பிரசுரிக்கப்படவில்லை; நடவடிக்கை இன்றேல் சட்டமறுப்புப் போராட்டமே வழி - சுமந்திரன் | Virakesari.lk
-
பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் - கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு
03 Jun, 2025 | 01:22 PM ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய ஏர்பஸ் A330- 200 விமானம் நாளை 4 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது. பிரான்ஸிலிருந்து வரும் இந்த விமானம், கொழும்பின் கடற்கரையோரப் பகுதியில் 1,500 அடி உயரத்தில் தாழ்வாக பறந்து தரையிறங்கவுள்ளது. மொரட்டுவை கடற்கரைப் பகுதியில் இருந்து கொழும்பு போர்ட் சிட்டியின் தெற்கு முனையம் வரை, காலை 8 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் குறுித்த விமானம் தாழ்வாகப் பறக்கும் காட்சிகளை அவதானிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிட்டியுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவையை வலுப்படுத்தும் மற்றும் ஆதரிக்கும் முகமாக புதிய விமானம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தாழ்வாகப் பறந்து இலங்கையில் தரையிறங்கவுள்ள புதிய ஏர்பஸ் விமானம் ! | Virakesari.lk
-
யாழில் பொலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வுக்கான நடைபவனி நடைபெறவுள்ளது
இலங்கையில் பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைபவனி வியாழக்கிழமை (05) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற ஊடக சந்திப்பில் நடைபவனி ஏற்பாட்டாளர் சேவ் ஏ லைஃப் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சுதர்சிகா தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பொலித்தீன் பாவனையால் இன்று மானுடர்கள் மட்டமல்லாது விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் என அத்தனை உயிரினங்களின் வாழ்வியலும் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக ஒரு நாள் பாவனை பொலித்தீன் பைகள், பிளாஸ்ரிக் குவளைகள், பிளாஸ்ரிக் போத்தல்கள் உள்ளிட்டவற்றை மக்கள் பாவனையில் இருந்து இல்லாதொழிப்பது அவசியமாகும். ஆனாலும் ஆபத்து என்று தெரிந்தும் பாவனையாளர்கள் அந்த பாவனையில் இருந்து விடுபடுவதாக தெரியவில்லை. சில பொலித்தீன்கள் ஒன்று மண்ணுள் புதையும் போது அது உக்கலடைய 1000 ஆண்டுகள் செல்கின்றன. இதனால் பல்வேறு தாக்கங்களை உயிரினங்கள் எதிர்கொள்ள நேரிடுகின்றது. அந்தவகையில் பொலித்தீன்களால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துவது சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். அதனடிப்படையில் நாம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டமானது வியாழக்கிழமை (05) காலை 7.30 மணிக்கு யாழ் பொது நூலக பின் நுழைவாயில் அருகே ஆரம்பிக்கப்பட்டு யாழ் நகர் ஊடாக பிரவேசித்து நூலகத்தின் பிரதான நுழைவாயில் வரை நடைபவனி நிறைவு பெறவுள்ளது. இதில் மாணவர்கள் பொதுநல விரும்பிகள் என பலரும் கலந்து நிகழ்வை வலுப்படுத்தி விழிப்புணர்வின் நோக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல ஒத்துழைக்க வேண்டும் என்றனர். யாழில் பொலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வுக்கான நடைபவனி நடைபெறவுள்ளது - சேவ் ஏ லைஃப் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் | Virakesari.lk
-
ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் ; பேரழிவை தடுக்குமாறும் கோரிக்கை
03 Jun, 2025 | 03:19 PM வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் எமது கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இலங்கைக் கடற் பரப்புக்குள் எல்லைத் தாண்டியதும், சட்டவிரோதமானதுமான இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் தொழில் செயற்பாடுகள் காரணமாக எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும், கடல் வளமும் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இத்தகைய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாமும் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தும், அவை முழுமை பெறவில்லை. தற்போது மீனினங்களின் இனப் பெருக்கக் காலம் என்பதால் இந்திய மீனவர்கள் எமது கடற் பரப்புக்குள் தொழில் நிமித்தம் வருவதில்லை. இது ஒவ்வொரு வருடமும் நிகழ்வதாகும். அந்த வகையில் இந்த வருடம் இக்காலகட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடங்கி எதிர்வரும் 15ஆம் திகதி முடிவடைகின்றது. இந்த காலகட்டம் முடிவடைந்த நிலையில் - அதாவது எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர் ஆயிரக் கணக்கிலான இந்திய இழுவை மடி வலைப் படகுகள் இலங்கை கடற் பரப்புக்குள் நிச்சமயாக வரும். எனவே, இவ்விடயம் தொடர்பில் தங்களது அவதானத்தைச் செலுத்தி, ஒரு பக்கத்தில் இது தொடர்பிலான இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை இந்திய அரசுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். மறு பக்கத்தில் இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டும், இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் இலங்கைக் கடற் பரப்பிற்குள்ளான செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் ; பேரழிவை தடுக்குமாறும் கோரிக்கை | Virakesari.lk