Everything posted by பிழம்பு
-
இந்துக்களை படுகொலை செய்வதற்காகவே 4 இலங்கையர்கள் இந்தியா சென்றுள்ளனர் - வீரசேகர
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களையும், இந்துக்களையும் படுகொலை செய்வதற்காக நான்கு இலங்கையர்கள் கடந்த 18 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள். குறுகிய காலத்தில் இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும். இல்லையேல் இலங்கையிலும் எதிர்காலத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை போன்ற அடிப்படைத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டு மக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை கண்டுப்பிடிக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகிறார்கள். குண்டுத்தாக்குதல் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் நிறைவுப் பெற்றுள்ளன. நீதிமன்றத்துக்கும் அறிக்கை செய்யப்பட்டுள்ளன. குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதான சூத்திரதாரியை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் ஒருபுறம் குறிப்பிட்டுக் கொண்டு மறுபுறம் புலனாய்வு பிரிவினரை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். குண்டுத்தாக்குதல் தொடர்பில் சகல தகவல்கள் கிடைத்திருந்தும் எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. சிறுபான்மையினரின் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை இழக்க கூடாது என்பதற்காக பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை. குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முன்னர் பயங்கரவாதி சஹ்ரானின் தரப்பினர் கிழக்கு மாகாணத்தில் 10 அடிப்படைவாத செயற்பாடுகளிலும்,குண்டுத்தாக்குதல் ஒத்திகைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். ஒத்திகையின் போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சஹ்ரானின் சகாக்களை பார்வையிடுவதற்கு ஒருசில அரசியல்வாதிகள் வைத்தியசாலைக்கும் சென்றிருந்தார்கள். இதன்போது எழுந்து கேள்வியெழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இந்தியாவில் தாக்குதல்களை நடத்த இவர்கள் அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.ஆகவே அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து மீண்டும் அச்சம் எழுந்துள்ளது.இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ற என்று கேள்வியெழுப்பினார். இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.மொஹமட் நுஸ்ரத், மொஹமட் நஃப்ரான்,மொஹமட் ரஸ்தீன் ,மொஹமட் ஃபரிஷ் ஆகிய நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் உறுப்பினர்களாவர்.இவர்கள் இந்த மாதம் 18 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள். இவர்கள் 4 இலட்சம் ரூபாவுக்காக தாக்குதல்களை நடத்த சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களையும் , இந்துக்களையும் படுகொலை செய்வதற்காக இவர்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளதாகவும் 3 அல்லது நான்கு மாதங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் அடிப்படைவாத கொள்கைகளுக்கு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுக்கள் அறிக்கைகளை சமர்ப்பித்து பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளன.ஒருசில இஸ்லாமிய அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மதரஸா பாடசாலைகள் பற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.ஆனால் அரசாங்கம் முழுமையாக பரிந்துரைகளை செயற்படுத்தவில்லை.ஆகவே பரிந்துரைகளை அலட்சியப்படுத்தாமல் செயற்படுத்த வேண்டும் இல்லையேல் இலங்கையில் மீண்டும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற அடிப்படைவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என்றார். இந்துக்களை படுகொலை செய்வதற்காகவே 4 இலங்கையர்கள் இந்தியா சென்றுள்ளனர் - வீரசேகர | Virakesari.lk
-
இலங்கையில் பின்னடைவான நிலையில் சிறுபான்மையினரின் மத சுதந்திரம் - சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டு
இலங்கையில் பின்னடைவான நிலையில் சிறுபான்மையினரின் மத சுதந்திரம் - சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டு Published By: VISHNU 23 MAY, 2024 | 01:00 AM (நா.தனுஜா) இலங்கையில் மத சுதந்திரம் என்பது கரிசனைக்குரிய மட்டத்திலேயே காணப்படுவதாகவும், மத சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் என்பன மத ரீதியிலான நெருக்கடிகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாகவும் சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச மதசுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவினால் இலங்கையில் மதசுதந்திரம் மீதான சவால்கள் தொடர்பில் அண்மையில் நிகழ்நிலை முறைமையிலான கருத்துக்கோரல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சர்வதேச மதசுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் பிரதி தவிசாளர் பிரெடெரிக் ஏ.டேவி, ஆணையாளர்களான டேவிட் ஹரி மற்றும் ஸ்டீபன் ஸ்னெக் ஆகிய மூவரடங்கிய குழாம் இதற்குத் தலைமைதாங்கியது. அதன்படி இலங்கையின் மதசுதந்திர நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்குழாமில் உள்ளடங்கும் பிரதிநிதிகள், 'போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் இலங்கை அதன் இன, மத வன்முறை வரலாற்றுடனான சமரசத்தைத் தொடர்கின்றது. இலங்கையில் மத சுதந்திரம் தொடர்பான நிலைவரம் கரிசனைக்குரிய மட்டத்திலேயே காணப்படுகின்றது. குறிப்பாக தமிழ் கத்தோலிக்கர்கள், தமிழ் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் என்பன மத ரீதியிலான அமைதியின்மையைத் தீவிரப்படுத்தியுள்ளன. பயங்கரவாத்தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் மற்றும் நிகழ்நிலைக்காப்பு சட்டம் என்பன உள்ளடங்கலாக மத சிறுபான்மையினரை இலக்குவைக்கக்கூடியவாறான பல்வேறு கொள்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள கோயில்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட மதவழிபாட்டுத்தலங்களை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தீவிர அமைதியின்மையைத் தோற்றுவித்துள்ளன' எனச் சுட்டிக்காட்டினர். அத்தோடு தமது ஆணைக்குழுவின் அதிகாரிகள் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அரசாங்கத்தின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மத சுதந்திர செயற்பாட்டாளர்கள், இன-மத சமூகக்குழுக்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும், அவற்றை அடிப்படையாகக்கொண்டு மத சுதந்திரத்தைப் பொறுத்தமட்டில் இலங்கையை விசேட கண்காணிப்புக்கு உட்படுத்தவேண்டிய பட்டியலில் வைக்கவேண்டுமெனப் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்துக்குப் பரிந்துரைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து இக்கருத்துக்கோரலில் மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பின் (பேர்ள்) நிறைவேற்றுப்பணிப்பாளர் மதுரா ராசரத்னம், இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேச (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் மத சுதந்திர ஆணைக்குழுவின் தலைவர் மைக் கேப்ரியல், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் இணை ஸ்தாபகர் ஷ்ரீன் ஸரூர் மற்றும் சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனன் ஆகியோர் பங்கேற்று சாட்சியம் அளித்தனர். இலங்கையின் மத சுதந்திர நிலைவரம் தொடர்பில் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு: ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இலங்கையின் மனித உரிமைகள் சட்டத்தரணியும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தவருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, முல்லைத்தீவு, குருந்தூர்மலை விவகாரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல எனவும், மாறாக தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலான பிரச்சினை எனவும் சுட்டிக்காட்டினார். அதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக கடந்த மார்ச் 28 ஆம் திகதி கொழும்பு நீதிமன்றத்தினால் கலகொட அத்தே ஞானசாரருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை நினைவுகூர்ந்த அவர், சிறுபான்மை மதத்தை அவமதித்தமைக்காக பௌத்த தேரர் ஒருவருக்கு இத்தகைய தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறை எனத் தெரிவித்தார். இருப்பினும் ஞானசார தேரரினால் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவந்த நடவடிக்கைகளையும், அவற்றுக்கு ஊடகங்கள் வழங்கிய முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய ஹிஜாஸ், இருப்பினும் ஞானசாரர் நீண்டகாலமாக கைதுசெய்யப்படவில்லை எனவும் விசனம் வெளியிட்டார். முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாக பயங்கரவாதத்தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் என்பன பயன்படுத்தப்பட்டமை குறித்தும், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்களின் மத சுதந்திரம் வெகுவாக ஒடுக்கப்பட்டமை குறித்தும் விரிவாக விளக்கமளித்த அவர், தற்போது நடைமுறைக்கு வந்திருக்கும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலமும் மத சுதந்திரத்தை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தக்கூடும் என சந்தேகம் வெளியிட்டார். மதுரா ராசரத்னம் 'இலங்கை அரசியலமைப்பின் ஊடாக சகல மதங்களுக்குமான சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பினும், அதில் பௌத்த மதத்துக்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே முதலிடம் அளிக்கப்பட்டுள்ள பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காக அரச கட்டமைப்புக்கள் தமிழ் இந்துக்கள், தமிழ் கிறிஸ்தவர்கள், சிங்கள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மத, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மிகத்தீவிரமாக ஒடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தன. இந்நடவடிக்கைகளே மூன்று தசாப்தகால யுத்தத்துக்குத் தூண்டுதலாக அமைந்தன. யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழர்கள் வாழும் வட, கிழக்கு மாகாணங்களை அரச அனுசரணையுடன் சிங்கள, பௌத்தமயமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன' என இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மதுரா ராசரத்னம் சுட்டிக்காட்டினார். மைக் கேப்ரியல் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேச (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் மத சுதந்திர ஆணைக்குழுவின் தலைவர் மைக் கேப்ரியல் இலங்கையில் கிறிஸ்தவ சமூகம் முகங்கொடுத்துவரும் மதரீதியான ஒடுக்குமுறைகள் தொடர்பில் விளக்கமளித்தார். '2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் கிறிஸ்தவ சமூகத்துக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் வன்முறை சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. இருப்பினும் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படாததைப்போன்று மேற்படி ஒடுக்குமுறைகளுடன் தொடர்புடையோரும் எவ்வித நடவடிக்கையுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். கத்தோலிக்க தேவாலயங்கள் பதிவுசெய்யப்படவேண்டும் எனவும், அன்றேல் வழிபாட்டு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படவேண்டும் எனவும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன' என அவர் தெரிவித்தார். அலன் கீனன் 'அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் மீதான அழுத்தங்கள் அண்மையகாலங்களில் வெகுவாக அதிகரித்துவருகின்றன' எனக் குறிப்பிட்ட சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனன், வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் மற்றும் முல்லைத்தீவு குருந்தூர்மலை விவகாரம் ஆகிய இரண்டையும் அண்மையகால உதாரணங்களாக சுட்டிக்காட்டினார். இலங்கையில் பின்னடைவான நிலையில் சிறுபான்மையினரின் மத சுதந்திரம் - சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டு | Virakesari.lk
-
சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்த வட்டுவாகல் பாலத்தை நினைவுகூர்ந்தார் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்
சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்த வட்டுவாகல் பாலத்தை நினைவுகூர்ந்தார் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்; காணாமல்போனோரின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் விசனம் 23 MAY, 2024 | 02:05 AM (நா.தனுஜா) இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வட்டுவாகல் பாலத்தின் நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாகவும், இதன்போது காணாமல்போனவர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகர் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார். மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு கடந்த சனிக்கிழமையுடன் 15 வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், முதன்முறையாக தெற்காசியப்பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்தார். இவ்விஜயத்தின்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்ட அவர், பல்வேறு முக்கிய தரப்பினருடன் விரிவான சந்திப்புக்களையும் நடத்தியிருந்தார். அதன்படி முள்ளிவாய்க்கால் விஜயத்தின்போது வட்டுவாகல் பாலத்துக்கு அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை 'வட்டுவாகல் பாலம்' எனும் மேற்கோளுடன் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், '15 வருடங்களுக்கு முன்னர் வட, கிழக்கில் விடுதலைப்புலிகளால் கையகப்படுத்தப்பட்டிருந்த பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழ் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் இப்பாலத்தைக் கடந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குச் சென்றனர். அப்போது இந்த நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்' எனக் குறிப்பிட்டுள்ளார். 'இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மிகக்குறுகியதொரு பகுதிக்குள் சுமார் 300,000 தமிழர்கள் அடைபட்டிருந்ததாக மதிப்பிடப்பட்டிருப்பதுடன், போர் முடிவுக்குக்கொண்டுவரப்படுவதற்கு முன்னைய சில மாதங்களில் சுமார் 40,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டறிந்துள்ளது' எனவும் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியவில்லை எனவும், அவர்களே வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோர் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களில் 6 மாதமேயான குழந்தை உட்பட பல குழந்தைகளும், சிறுவர்களும் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். 'இந்த 30 வருடகால யுத்தத்தில் இருதரப்பினரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சட்டவிரோத , வலிந்து காணாமலாக்குதல்கள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல் உள்ளிட்ட மிகமோசமான குற்றங்களைப் புரிந்துள்ளனர். இவற்றால் சுமார் 100,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என குறைந்தபட்சம் 60,000 பேர் காணாமல்போயுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம்' எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்த வட்டுவாகல் பாலத்தை நினைவுகூர்ந்தார் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்; காணாமல்போனோரின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் விசனம் | Virakesari.lk
-
உலக பொருளாதார பேரவை வெளியிட்ட சுற்றுலா தரவரிசையில் இலங்கைக்கு 76 வது இடம்
23 MAY, 2024 | 11:39 AM உலக பொருளாதார பேரவை ‘பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024’ என்ற தலைப்பில் உலக நாடுகளின் சுற்றுலாசெயல்பாடுகளை தரவரிசைபடுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை 76 ஆவது இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக, இலங்கை சுற்றுலா சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு, கலாச்சார வளங்கள் மற்றும் பொழுதுபோக்கு அல்லாத செயற்பாடுகள் பிரிவுகளில் மோசமான மதிப்பெண் பெற்றுள்ளது, அதே நேரத்தில் போட்டித்தன்மை மிக்க விலை மற்றும் பயணம், சுற்றுலா சமூக பொருளாதார தாக்கம் ஆகியவற்றில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் பட்டியலில் 2021 ஆம் ஆண்டு 74-வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது 119 நாடுகளில் தரவரிசையில் 76 ஆவது இடத்துக்கு சரிந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இலங்கை 77 ஆவது இடத்தை பிடித்திருந்தது. இதேவேளை, இலங்கையின் போட்டியாளர்களான வியட்நாம் (59வது), தாய்லாந்து (47வது), இந்தோனேசியா (22வது) மற்றும் மலேசியா (35வது) ஆகியவை சுட்டெண்ணில் இலங்கைக்கு மேலே தரவரிசையில் உள்ளன. மேலும், தெற்காசியாவில் இந்தியா (39வது) முதலிடத்திலும், இலங்கை இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஸ்பெயின், ஜப்பான், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன. உலக பொருளாதார பேரவை வெளியிட்ட சுற்றுலா தரவரிசையில் இலங்கைக்கு 76 வது இடம் | Virakesari.lk
-
திருகோணமலையில் கார் விபத்து : மகள் பலி, மகன் காயம், தாயும் தந்தையும் உயிர் தப்பினர்
23 MAY, 2024 | 03:17 PM திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவன் பகுதியில் இன்று வியாழக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுமியின் சகோதரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்துச் சம்பவத்தில் நிதர்சன் ஆதித்யா (வயது 6) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதாகவும், சிறுமியின் சகோதரனான நிதர்சன் அதிரேஸ் (வயது 4) படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் இரண்டு பிள்ளைகளுடன் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கையில் குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர். உயிரிழந்த சிறுமியின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். திருகோணமலையில் கார் விபத்து : மகள் பலி, மகன் காயம், தாயும் தந்தையும் உயிர் தப்பினர் | Virakesari.lk
-
மாங்குளம் வைத்தியசாலையின் பெயர் பலகையில் தமிழ் எழுத்து பிழையை திருத்துமாறு கோரிக்கை
23 MAY, 2024 | 02:50 PM வட மாகாணத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் மாங்குளம் ஆதரவைத்தியசாலை வளாகத்தை அண்டிய பகுதியிலே அமைக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட இருக்கின்றது. எதிர்வரும் 26 ஆம் திகதி நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகை தந்து இந்த வைத்தியசாலையை திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில், வைத்தியசாலை முன்பாக அமைக்கப்பட்டிருக்கின்ற பெயர் பலகையில் மாங்குளம் என்பது தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டுள்ளது. இதனை மாற்றுமாறு பல தடவைகள் உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இன்றுவரை அது மாற்றப்படவில்லை. எனவே, திறப்பு விழாக்கு முன்னதாக தமிழ் மொழியினை சரி செய்து பெயர்ப் பலகையினை மாற்றி திறப்பு விழாவினை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாங்குளம் வைத்தியசாலையின் பெயர் பலகையில் தமிழ் எழுத்து பிழையை திருத்துமாறு கோரிக்கை | Virakesari.lk
-
கிளிநொச்சியில் சகோதரியின் காதலனால் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் - சந்தேக நபர் தலைமறைவு
23 MAY, 2024 | 05:04 PM கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் தனது சகோதரியின் காதலனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த தகவல் பொலீஸாருக்கு பரிமாறப்பட்டு கிளிநொச்சி பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது. கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி சகோதரியின் காதலனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பரிசோதனைக்கு அனுமதிக்கப்படடுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. கிளிநொச்சியில் சகோதரியின் காதலனால் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் - சந்தேக நபர் தலைமறைவு | Virakesari.lk
-
படையினர் அக்கிரமங்களில் ஈடுபட்டதை தொடர்ந்தும் மறுக்கின்றது இலங்கை - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள்
படையினர் அக்கிரமங்களில் ஈடுபட்டதை தொடர்ந்தும் மறுக்கின்றது இலங்கை - பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கு செப்டம்பரில் மீண்டும் மனித உரிமை பேரவை ஆணைவழங்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் Published By: RAJEEBAN 23 MAY, 2024 | 04:32 PM இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்களை நினைவுகூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தினர் தடுத்துவைத்தனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மே 18ம் திகதி 2009இல் முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்காக சர்வதேச விசாரணைகள் மற்றும் ஏனைய பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என மே 17ம் திகதி ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது தங்கள் படையினர் இழைத்த அநீதிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் இதன் காரணமாக உண்மை நீதி இழப்பீடு போன்றவற்றை வழங்குவதற்கு பதில் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் சமூகத்தினரையும் மௌனமாக்க முயல்கின்றது என தெரிவித்துள்ளார். பாதிக்கப்ட்ட மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கும் துஸ்பிரயோகங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் மேலும் சர்வதேச நடவடிக்கைகள் அவசியம் என்பது புலனாகின்றதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார். மே 18ம் திகதி நினைவேந்தல் தினத்திற்கு முன்னர் வடக்குகிழக்கில்நினைவேந்தல் நிகழ்வுகளை இலங்கை பொலிஸார் குழப்ப முயன்றனர் யுத்தத்தின்போது நிலவிய பட்டினி நிலையை குறிக்கும் விதத்தில் வழங்கப்படும் கஞ்சியை தயாரித்து வழங்கியமைக்காக நால்வரை கைதுசெய்து ஒருவாரம் தடுத்துவைத்திருந்தனர் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. காணாமல்போனவர்களின் உறவினர்கள் சிலரும் ஏனையவர்களும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதை தடை செய்யும் விதத்தில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை பெற்றிருந்தனர் என சர்வதேச மனித உரிமைகள்கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் பொலிஸார் தலையிட்டு நிகழ்வுகளை தடுத்தனர் அல்லது மக்கள் அங்கு செல்வதை தடுத்தனர் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படி வலிந்து காணாமலாக்கப்பட்டமை இலங்கையில் இடம்பெற்றது என்பதையும் அதன் அளவையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் உடனடி நம்பகதன்மைமிக்க விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்,பாரியமனித புதைகுழிகளை தோண்டுவதற்கு சர்வதேச தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்ளவேண்டும்,எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை அரசாங்கம் ஒரு சுதந்திரமான வழக்குரைஞர் அதிகாரத்தை ஏற்படுத்த வேண்டும் பயங்கரவாததடைச்சட்டம் உட்பட துஸ்பிரயோகங்களிற்கு வழிவகுக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்கவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை வெளிநாட்டு அரசாங்கங்கள் ஐக்கியநாடுகள் அமைப்புகள் நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களிற்கு கடும் வேதனையைதுன்பத்தை ஏற்படுத்தும் வலிந்து காணாமலாக்கப்பட்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் மேலும் இது நாட்டில் மேலும் துஸ்பிரயோகங்கள் நிகழும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கான ஆணையை செப்டம்பர் அமர்வில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவை புதுப்பிப்பது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள அவர் அந்த குற்றங்களிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு உலகெங்கிலும் உள்ள வழக்குரைஞர்கள் இந்த ஆதாரங்களை பயன்படுத்துவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். படையினர் அக்கிரமங்களில் ஈடுபட்டதை தொடர்ந்தும் மறுக்கின்றது இலங்கை - பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கு செப்டம்பரில் மீண்டும் மனித உரிமை பேரவை ஆணைவழங்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் | Virakesari.lk
-
மன்னார் வங்காலையில் நிலப்பரப்பிற்குள் உட்புகுந்த கடல் : அச்சத்தில் கிராம மக்கள் !
மன்னாரில் கடல் அரிப்பால் இயற்கை அனர்த்த அபாயத்தை எதிர்கொள்ளும் வங்காலை கிராமம் 23 MAY, 2024 | 05:48 PM மன்னார் மாவட்டத்தில் தென் கடலுக்கு அருகாமையில் காணப்படும் வங்காலை கிராமத்துக்குள் கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் படகுகளையும் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மீன்வாடிகளில் காணப்படும் கடற்றொழில் உபகரணங்களையும் பாதுகாப்பான இடங்களில் வைக்கும் செயற்பாட்டில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் சீரற்ற காலநிலையால் புதன்கிழமை (22) மன்னாரிலும் கடல்சார் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. வங்காலை கிராமத்தை அண்டிய தென் கடல் திடீரென வங்காலை கடற்றொழிலாளர்களின் முக்கிய பிரதான பாதையை மேவி கிராமத்தை நோக்கி கடல் நீர் உட்புகத் தொடங்கியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடருமானால் அப்பகுதியில் கடல் அரிப்பால் பெரும் ஆபத்தான நிலை காணப்படுவதாகவும் கடல்நீர் கிராமத்துக்குள் புகாதிருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கிராமத்து மக்களால் நீண்ட காலமாக உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடல் அரிப்பு தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டுச் செல்வதாகவும் அபாயத்தை எதிர்நோக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட கால பயன்பாட்டில் உள்ள மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் நேற்று புதன்கிழமை (22) முதல் மறு அறிவித்தல் வரை பணிக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், தற்போது பயன்பாட்டில் உள்ள நீண்டகால மீன்பிடி படகுகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஊடாக செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மன்னாரில் கடல் அரிப்பால் இயற்கை அனர்த்த அபாயத்தை எதிர்கொள்ளும் வங்காலை கிராமம் | Virakesari.lk
-
மன்னாரில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக சுவீகரிக்கும் கம்பெனிகள்: பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை சந்தித்தார் சுமந்திரன்
23 MAY, 2024 | 06:15 PM மன்னார் தீவக பகுதிக்குள் தனியாருக்கு சொந்தமான காணிகளை தொடர்ச்சியாக சில காணி இடைத்தரகர்கள் ஊடாக சில தனியார் கம்பெனிகள் சட்ட விரோதமாக சுவீகரிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக கலந்தாலோசிக்கும் முகமாக மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கும் பாதிக்கப்பட்ட தனியார் காணி உரிமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் வியாழக்கிழமை (23) மன்னார் மெசிடோ அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, மன்னார் நடுக்குடா, கொன்னையன் குடியிருப்பு போன்ற பகுதிகளில் பாரம்பரியமாக தாங்கள் வசித்துவரும் காணிகளை தனியார் நிறுவனங்கள் தொடர்ச்சியாக வேலிகள் அடைத்து கையகப்படுத்துவதாகவும், இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் தனியார் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, தனியார் காணி ஒன்றை கொள்வனவு செய்யும் சில நிறுவனங்கள், அந்த காணிகளை மாத்திரமின்றி அதை சூழவுள்ள காணிகளையும் சுவீகரிப்பதாகவும் கூறியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக எடுக்கவேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றி தனியார் காணி உரிமையாளர்களுக்கு சட்டத்தரணி சுமந்திரனால் தெளிவுபடுத்தப்பட்டதுடன், இந்த பிரச்சினை தொடர்பாக வழக்கு தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்களை தயாரிப்பது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது. அதேவேளை இம்மாதம் சட்ட விரோதமாக காணி சுவீகரிப்பில் ஈடுபட்ட நிறுவனத்துக்கு எதிராக முதல் கட்டமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தனியாருக்கு சொந்தமான காணிகள் தனி நபர்களாலும் சில நிறுவனங்களாலும் அபகரிக்கப்பட்டு, கனிய மணல் அகழ்வுக்கு வழங்குவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மன்னாரில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக சுவீகரிக்கும் கம்பெனிகள் : பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை சந்தித்தார் சுமந்திரன் | Virakesari.lk
-
வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை
வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை வெடிபொருள்கள் இருக்கின்றன என்று காரணம் கூறுகின்றது இராணுவம் (புதியவன்) வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குள் வெடிபொருள்கள் இருக்கின்றன என்று தெரிவித்து அந்தப் பகுதிகளுக்குச் செல்ல இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த மார்ச் 22ஆம் திகதி வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய கிராமங்களான ஜே/244,245,252, 253, 254 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 234 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டது. நில உரிமையாளர்களும் அழைக்கப்பட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. இருந்தபோதும் அந்த நிலங்களுக்கான பாதை விடுவிக்கப்படவில்லை. இராணுவ முட்கம்பி வேலிகளும் அகற்றப்படவில்லை. இவ்வாறு விடுவிக்கப்பட்ட நிலங்களை உரிமையாளர்கள் இராணுவச் சோதனைச் சாவடி ஊடாக 5 கிலோ மீற்றர் தூரம் கால்நடையாகப் பயணித்தே பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இந்த விடயத்தை நிலங்களின் உரிமையாளர்கள் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். இதனால் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குப் பாதை திறக்கப்பட்ட போதும் முட்கம்பி வேலிகள் அகற்றப்படாமலேயே காணப்பட்டன. முட்கம்பிகள் அகற்றப்படாதமை மற்றும் ஏதேனும் காரணத்தைக் கூறி விடுவிப்புச் செய்ததாகக் கூறப்படும் நிலங்களைப் படையினர் மீள ஆக்கிரமிக்கக்கூடும் என்று அஞ்சுவதாக அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமெரிக்கத் தூதுவரிடம் நிலங்களின் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். தற்போது விடுவிக்கப்பட்ட 234 ஏக்கர் நிலங்களில் 55 ஆயிரம் சதுர அடி நிலங்களில் வெடிபொருள்கள் காணப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டு அந்தப் பகுதிகளுக்குள் நில உரிமையாளர்கள் பயணிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.(ஏ) வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை (newuthayan.com)
-
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்!
Published By: DIGITAL DESK 3 22 MAY, 2024 | 04:12 PM மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளும் மிகவும் ஆரோக்கியத்துடன் உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்ற தாயே இந்த குழந்தைகளை கடந்த ஏப்பிரல் மாதம் 5 ஆம் திகதி பிரசவித்துள்ளார். மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்தியர் சரவணன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை (22) காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்சினி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன், குழந்தை நல வைத்திய நிபுணர் மதன் ஆகியோர் இங்கு கருத்து தெரிவித்தனர். இதன்போது சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் கொண்டுவரப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் மைதிலி உட்பட வைத்தியர்கள், தாதியர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு ஒரே சூழில் நான்கு குழந்தைகள் பிறக்கும் செயற்பாடானது 5 இலட்சத்து 70ஆயிரம் தாய்மார்களிலேயே இடம்பெறுவதாகவும் அதுவும் செயற்கை முறையிலான கருத்தரிப்பு மூலமே அவ்வாறான விடயமும் சாத்தியமாக காணப்படும். இந்நிலையில், இயற்கையாக கருத்தரித்து சுகப்பிரசவமாக நான்கு குழந்தைகளை இந்த தாய் பிரசவித்ததானது மருத்துவதுறையில் மிகவும் அரிதான விடயமாக பார்க்கப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன் தெரிவித்தார். பிறந்த நான்கு குழந்தைகளும் மிகவும் ஆரோக்கியத்துடன் உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சினி தெரிவித்தார். இதேநேரம் தமது பிரசவத்திற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது தமக்கு சகல வழிகளிலும் உதவியவர்களுக்கு நான்கு பிள்ளைகளை பிரசவித்த தாயார் இதன்போது நன்றி தெரிவித்தார். ஒரே சூழில் பிறந்த 4 குழந்தைகளும் சுகதேக ஆரோக்கியத்துடன் உள்ளன - மட்டு. போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் | Virakesari.lk
-
மன்னார் வங்காலையில் நிலப்பரப்பிற்குள் உட்புகுந்த கடல் : அச்சத்தில் கிராம மக்கள் !
மன்னார் வங்காலையில் நிலப்பரப்பிற்குள் உட்புகுந்த கடல் : அச்சத்தில் கிராம மக்கள் ! 22 MAY, 2024 | 03:32 PM நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று புதன்கிழமை (22) மதியம் திடீரென கடல் நீர் உட்புகுந்துள்ளது. அத்துடன் மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் இன்று (22) காலை மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் உட்புகுந்ததோடு, கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள் நீரில் மிதந்துள்ளது. எனினும் படகுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர். திடீரென கடல் நீர் உள்வாங்கப்பட்டமையினால் வங்காலை மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் வங்காலை பங்குத்தந்தை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று நிலமையை பார்வையிட்டதோடு, உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். மன்னார் வங்காலையில் நிலப்பரப்பிற்குள் உட்புகுந்த கடல் : அச்சத்தில் கிராம மக்கள் ! | Virakesari.lk
-
எனக்கு எதிராக கருத்தடை குற்றச்சாட்டுகளை முன்வைத்த தாய்மார்கள் தற்போது மன்னிப்பு கோருகின்றனர்- குருநாகல் மருத்துவர் ஷாபி சிகாப்தீன்
குருநாகல் வைத்தியசாலை மருத்துவர் ஷாபி சிகாப்தீன் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்திய தாய்மார்கள் தற்போது தங்களை மன்னிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சில தாய்மார்கள்; போது தாங்கள் எனக்கு எதிராக முறைப்பாடு செய்தவர்கள் எனவும் தங்களை மன்னிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர் என தெரிவித்துள்ள அவர் சிசேரியன் சத்திரசிகிச்சையின் போதுஅவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தனர் என குறிப்பிட்டுள்ளார். தன்னை போதைப்பொருள்குற்றவாளி மாகந்துரே மதுசுடன் சிறையில் ஒன்றாக தடுத்துவைத்திருந்தனர் என வைத்தியர் ஷாபி சிகாப்தீன் தெரிவித்துள்ளார். நான் அவருடன் ஒன்றாக உணவை பகிர்ந்துகொண்டேன், அவருக்கு அருகில் உறங்கினேன் என தெரிவித்துள்ள வைத்தியர் வெள்ளை உடையணிந்த அரசியல்வாதிகளிடம் காணமுடியாத மனிதாபிமானத்தை அவரிடம் கண்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனது மருத்துவ தொழில்துறையை சார்ந்தவர்களே என்னை கைவிட்டனர் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அனுரத்த பாதெனிய அவர்களில் ஒருவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். எந்த தொழில்துறையிலும் தங்களின் நன்மைக்காக செயற்படும் நபர்கள் இருப்பார்கள் நேர்மையாக பேசுவதென்றால் இந்த பாதெனிய என்ற நபர் அந்தநேரத்தில் இலங்கை அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்தலைவராக பணியாற்றியவர் இந்த விடயத்தில் இன்றுவரை மௌனமாக உள்ளார் எனவும் வைத்தியர் ஷாபி சிகாப்தீன் தெரிவித்துள்ளார். எனினும் வைத்தியர் பாதெனியவின் மனைவி இரண்டாவது தடவை கருத்தரித்த போது நானே பிரசவம் பார்த்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவர்களை சமானியர்கள் தெய்வத்திற்கு ஒப்பிடுகின்றனர் ஆனால் அதே தொழில் என்னை பேய்களிடம் ஒப்படைக்க பயன்படுத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ள வைத்தியர் ஷாபி சிகாப்தீன் இந்த மோசமான நினைவுகள் எங்களிற்கு தேவையில்லை நாங்கள் ஆன்மீக ரீதியில் வளமான இலங்கையை கட்டியெழுப்புவோம் எனவும் தெரிவித்துள்ளார். எனக்கு எதிராக கருத்தடை குற்றச்சாட்டுகளை முன்வைத்த தாய்மார்கள் தற்போது மன்னிப்பு கோருகின்றனர்- குருநாகல் மருத்துவர் ஷாபி சிகாப்தீன் | Virakesari.lk
-
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
22 MAY, 2024 | 08:07 PM நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் (21.05.2024) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நயினாதீவு ஸ்ரீநாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா எதிர்வரும் 2024.06.07 தொடக்கம் 2024.06.22 வரை நடைபெறவுள்ளதோடு அனைத்து பக்தர்களும் சிறப்பான முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீ நாக பூசணி அம்பாளை தரிசிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் திருவிழாக் காலங்களில் வழமைபோல் யாழ் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை மற்றும் தனியார் பஸ் சேவைகளின் ஒருவழிக் கட்டணம் 187 ரூபா என தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை குறிகட்டுவானில் இருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 80 ரூபாய் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு கடற்போக்குவரத்து (படகு) நேரத்திற்கமைய தனியார் போக்குவரத்து மற்றும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை காலை 6.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணிவரையிலும் நடைபெறவுள்ளது. கடற்போக்குவரத்தில் ஈடுபடும் படகுகள்,படகுகளை உரியமுறையில் பேணுவதுடன் படகில் ஏற்றிச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துதல் மற்றும் பயணிகளுக்குரிய வசதிகள் இல்லாத படகுகளை சேவையில் ஈடுபடுவதை தவிர்த்தல் வேண்டும். ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள கள் விற்பனை நிலையம் திருவிழாக்காலத்தில் பூட்டப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் திருடர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்தலுடன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்த பிரதேச சபையினால் அடையாள அட்டைகள் வழங்கப்படுதல் வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டது. அத்தோடு குறிக்கட்டுவான் வீதி குன்றும் குழியுமாக உள்ளமையினால் அதனை சீர்செய்வது தொடர்பாகவும், சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை, பொலிஸ் பாதுகாப்பு, கடற்போக்குவரத்தில் பாதுகாப்பு அங்கிகளை அணிவதை உறுதிப்படுத்தல், பாடசாலை மாணவர்களின் சாரணர் தொண்டர் சேவை, தரை மற்றும் கடற்போக்குவரத்து நேர அட்டவணையை காட்சிப்படுத்தல், மின்இணைப்பு, யாசகம் பெறுவோர் உள்வருவதை கட்டுப்படுத்தல், நடமாடும் வைத்திய சேவை, சுகாதாரம் மற்றும் குடிநீர் தேவை, மின்சாரத்தேவை, அமுதசுரபி அன்னதான ஒழுங்குகள், அம்புலன்ஸ் சேவை மற்றும் புனரமைக்கவேண்டிய வீதிகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, பிராந்திய வைத்திய அதிகாரி.திரு.கேதீஸ்வரன், அறங்காவலர் சபைத் தலைவர் (நாகபூசணி அம்மன் ஆலயம்) திரு.பரமலிங்கம் மற்றும் பிரதேச செயலாளர் (வேலணை), சுகாதாரத் துறைசார் பங்குதாரர்கள், இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் தரப்பினர், பிரதேசசபை பங்குதாரர்கள், துறை சார் திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் | Virakesari.lk
-
நீர் வற்றியுள்ள விக்டோரியா நீர்த்தேக்கம்
நீர் வற்றியுள்ள விக்டோரியா நீர்த்தேக்கம் Published By: VISHNU 22 MAY, 2024 | 07:34 PM நாடு முழுவதும் கடும் மழைபெய்வதன் காரணமாக நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிந்தாலும், நீர் மின் உற்பத்திக்கு அதிக அளவில் நீர் வழங்கும் மிகப் பெரிய நீர்த்தேக்கமான விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வற்றிய நிலையின் காணப்படுகிறது. 22 ம் திகதி புதன்கிழமை பிற்பகல் எடுக்கப்பட்ட இப் படங்கள் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் எவ்வாறு வற்றியுள்ளது என்பத்தை காட்டியது. விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வற்றியுள்ளதன் காரணமாகப் பழைய தெல்தெனிய நகரின் சில பழைய பகுதிகளைக் காட்டுகிறது. கண்டி மாவட்டம் உள்ளிட்ட மத்திய மலையகப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்ற போதிலும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்போஷன பகுதிகளுக்கு போதிய மழை பெய்யாத காரணத்தினால் விக்டோரியா நீர்த்தேக்கம் வறண்டு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நீர் வற்றியுள்ள விக்டோரியா நீர்த்தேக்கம் | Virakesari.lk
-
ஓராண்டு கடந்து தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது!
சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆம் 22 திகதி புதன்கிழமை இன்று மீண்டும் ஆரம்பமானது. 22 திகதி புதன்கிழமை ஆரம்பமான இந்த போராட்டமானது எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். குறித்த விகாரையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். ஓராண்டு கடந்து தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது! | Virakesari.lk
-
நடுவானில் கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம் -பயணி ஒருவர் பலி
Flight Turbulence: நடுவானில் திடீரென குலுங்கிய சிங்கப்பூர் விமானம்; பயணி உயிரிழந்த சோகம்! Published:Today at 9 AMUpdated:Today at 9 AM சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் நடுவானில் திடீரென கடுமையாகக் குலுங்கியதால் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, லண்டனின் ஹீத்ரோவிலிருந்து நேற்று புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் SQ 321 போயிங் 777-300ER என்ற விமானம் மியான்மர் அல்லது தாய்லாந்துக்கு இடையில் நடுவானில் குலுங்கியதாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் இந்த சம்பவத்தால், விமானம் உடனடியாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில், `சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ 321 போயிங் 777-300ER, லண்டன் ஹீத்ரோவிலிருந்து சிங்கப்பூருக்கு மே 20-ம் தேதி இயக்கப்பட்டது. வழியில் விமானம் கடுமையாகக் குலுங்கியது. பின்னர், பாங்காக்குக்குத் திருப்பிவிடப்பட்ட விமானம் இன்று மாலை 03:45 மணியளவில் தரையிறங்கியது. விமானத்தில் மொத்தம் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்தனர். இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணி ஒருவர் உயிரிழந்தார். அதோடு சிலர் காயமடைந்தனர். இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் Singapore Airlines விமானத்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும், பணியாளர்களுக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதே எங்கள் முன்னுரிமை. தாய்லாந்திலுள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தேவையான மருத்துவ உதவிகளை வழங்குகிறோம். அதோடு, தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்குக்கு அனுப்புகிறோம்' என்று தெரிவித்திருக்கிறது. விமானம் திடீரென தனது வேகத்தில் வேக மாறுபாட்டைக் காணுதல் உள்ளிட்ட சில காரணங்களால் இத்தகைய நிகழ்வு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், விமானம் இதுபோன்று சிலசமயம் எந்த நேரத்திலும் குலுங்கக்கூடும் என்பதால் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் https://www.vikatan.com/trending/viral/singapore-airlines-passenger-died-after-flight-commit-severe-turbulence-in-en-route?pfrom=home-main-row
-
பொதுவேட்பாளர்: இழுத்தடிக்கும் போக்கில் தமிழரசு!
பொதுவேட்பாளர்: இழுத்தடிக்கும் போக்கில் தமிழரசு! நேற்றைய மத்தியகுழுக் கூட்டத்திலும் முடிவில்லை (ஆதவன்) எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இழுத்தடிக்கும் போக்கையே இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்கின்றது. அந்தக் கட்சியின் மத்திய குழுவில் இந்த விடயம் நேற்று ஆராயப்பட்ட போதும் முடிவு எதையும் எடுக்காமல் ஒத்திவைத்துள்ளது. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளரை ஆதரிக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் பொதுவெளியில் தெரிவித்திருந்தனர். குறிப்பாக கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தியிருந்தார். ஆனால் பொதுவேட்பாளரை ஆதரிக்கக் கூடாது என கட்சியின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் பொதுவேட்பாளர் தொடர்பில் ஆராயும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் பங்கேற்றிருந்த கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, இது தொடர்பில் மத்திய குழுவில் முடிவு எடுத்து அறிவிப்பதாக இருவாரகால அவகாசம் கோரியிருந்தார். அதற்கு அமைவாக மத்திய குழுக்கூட்டம் நேற்றுக் கூட்டப்பட்டிருந்தது. கூட்டத்தில் பொது வேட்பாளர் விடயம் ஆராயப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தலைவருமான மாவை.சோ.சேனாதிராசா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், அரசதலைவர் சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகியோர் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்டோர் அதற்கு எதிராக கருத்துத் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் கருத்துத் தெரிவித்த சிறீதரன், “சம்பந்தர் சொன்னதைப்போல ஒஸ்லோ அறிக்கையை எந்த அரசதலைவர் வேட்பாளர் ஏற்றுக்கொள்கின்றாரோ அவரை ஆதரிக்கலாம்" எனக் குறிப்பிட் டுள்ளார். அதனை பொதுவேட்பாளரை எதிர்த்ததரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனாலும் இதை உத்தியோக பூர்வமுடிவாக அறிவிக்கவில்லை. பொதுவேட்பாளர் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றே உத்தியோக பூர்வ நிலைப்பாடாக அறிவிக்கப்பட்டது. இதேவேளை, 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குறித்த ஒஸ்லோ அறிக்கையில், 'தமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழர்களின் பூர்வீக நிலத்தில் சுயாட்சி அதிகாரம் வழங்கும் அரசியல் தீர்வு தொடர்பில் அரசும் புலிகளும் ஆராய்வர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச) #jaffna_news பொதுவேட்பாளர்: இழுத்தடிக்கும் போக்கில் தமிழரசு! (newuthayan.com)
-
வீடு புகுந்து அடித்த குற்றச்சாட்டில் கனடாவாசிகள் யாழில் கைது!
வீடு புகுந்து அடித்த குற்றச்சாட்டில் கனடாவாசிகள் யாழில் கைது! (புதியவன்) சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை அத்துமீறி நுழைந்த இருவர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். வீட்டார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் கனடாவிலிருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்துள்ளனர். கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.(ஞ) வீடு புகுந்து அடித்த குற்றச்சாட்டில் கனடாவாசிகள் யாழில் கைது! (newuthayan.com)
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் 4 இலங்கையர்கள் இந்தியாவில் கைது
குஜராத்தில் கைதுசெய்யப்பட்ட இலங்கை ஐஎஸ் உறுப்பினர்கள் - யூதர்கள் கிறிஸ்தவர்கள் பாஜகவினர் ஆர்எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்களிற்கு பாடம் கற்றுக்கொடுக்க விரும்பினார்கள்- இந்திய ஊடகம் ndtv இந்தியாவின் குஜராத்தின் அஹமதாபாத் விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சில நாட்களின் பின்னர் நான்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் கருதுகின்றனர். இந்தியாவின் குஜராத்தில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுவதற்காக சந்தேகநபர்கள் அஹமதாபாத் வரவுள்ளனர் என்ற தகவல் கிடைத்த பின்னர் இவர்களை கைதுசெய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்களை ஏற்படுத்தியதாக குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் சென்னையிலிருந்து அஹமதாபாத் புறப்பட்ட இன்டிகோ விமானத்தில் புறப்பட்டனர் என குஜராத் பொலிஸ் அதிகாரி விகாஸ் சகாய் தெரிவித்துள்ளார். தென்பகுதியிலிருந்து வரும் பயணிகள் பட்டியலை சோதனை செய்த பின்னர் இவர்களை கைதுசெய்தோம் கொழும்பில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இவர்களின் விபரங்களை உறுதி செய்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் நால்வரும் சமூக ஊடகங்கள் ஊடாக அபு என்ற பாக்கிஸ்தானை சேர்ந்த நபருடன் தொடர்பிலிருந்துள்ளனர். இவர்களை இந்தியாவில் தாக்குதலை மேற்கொள்ளுமாறு அபு தூண்டினார் அவர்கள் மிக அதிகளவிற்கு தீவிரவாதமயப்படுத்தப்பட்டிருந்ததால் தற்கொலை தாக்குதலை மேற்கொள்ள தயாராகயிருந்தனர் என குஜராத்தின் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அபு அவர்களிற்கு பணம் வழங்கியுள்ளார்எனவும் அவர் தெரிவித்துள்ளார் சந்தேகநபர்களின் கையடக்க தொலைபேசிகளை ஆராய்ந்தவேளை சில ஆயுதங்களின் படங்களை கண்டுபிடித்துள்ளோம்இஅஹமதாபாத்திற்கு அருகில் உள்ள நனச்சிலோடா என்ற இடத்தின் விபரங்களும் காணப்பட்டன என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் இவர்களின் கையடக்கதொலைபேசியில் குறிப்பிடப்பட்ட நனச்சிலோடா என்ற இடத்தில் பாக்கிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளோம் பாக்கிஸ்தானை சேர்ந்த நபரே இந்த ஆயுதங்களை ஏற்பாடுசெய்துள்ளார் என குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புரோட்டன் மெயில் ஊடாக இவர்கள் பாக்கிஸ்தானில் உள்ள அந்த நபருடன் உரையாடியுள்ளனர் எனவும் குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களான முகமட்நஸ்ரட் ( 33) முகமட் பாரிஸ் ( 35) முகமட் நவ்ரான்( 27)முகமட்ரஸ்தீன் ( 47) ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர் இவர்கள் யூதர்கள் கிறிஸ்தவர்கள் பாஜகவினர் ஆர்எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்களிற்கு பாடம் கற்றுக்கொடுக்க விரும்பினார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் கைதுசெய்யப்பட்ட இலங்கை ஐஎஸ் உறுப்பினர்கள் - யூதர்கள் கிறிஸ்தவர்கள் பாஜகவினர் ஆர்எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்களிற்கு பாடம் கற்றுக்கொடுக்க விரும்பினார்கள்- இந்திய ஊடகம் | Virakesari.lk
-
பிறந்தநாளில் 20 வயது யுவதிக்கு எமனாக வந்த இராணுவ வாகனம் - யாழில் சம்பவம்!
இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் ; இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் 21 MAY, 2024 | 10:56 AM யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வாகன சாரதியான இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புத்தூர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் நேற்று திங்கட்கிழமை (20) இராணுவத்தினருக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனம் வீதியோரமாக, வீதியை கடக்க துவிச்சக்கர வண்டியுடன் காத்திருந்த யுவதியை மோதி விபத்துக்கு உள்ளானதில் யுவதி உயிரிழந்திருந்தார். வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா (வயது 23) என்பவரே தனது 23ஆவது பிறந்தநாளான நேற்றையதினம் உயிரிழந்திருந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அச்சுவேலி பொலிஸார் , வாகன சாரதியான இராணுவ சிப்பாயை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். விசாரணைகளின் பின்னர் இராணுவ சிப்பாயை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , சிப்பாயை 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது அதேவேளை, குறித்த வாகனத்தில் இராணுவ உயர் அதிகாரிகள் பயணித்ததாகவும் , அவர்களில் இருவர் காயமடைந்த நிலையில் பலாலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் ; இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் | Virakesari.lk
-
ஈழ விடுதலைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்-சீமான்
21 MAY, 2024 | 04:59 PM ஈழ விடுதலைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்என நாம் தமிழர் கட்சியின் ஏற்பட்டாளர் சீமான் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு விரைவில் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய அமெரிக்கப் பேரவை உறுப்பினர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. காலங்காலமாக அநீதி மட்டுமே இழைக்கப்பட்டு கடைசி சொட்டு கண்ணீரும் கானல் நீரான இனத்திற்குஇ தூரத்தில் தெரியும் ஒரு சிறு வெளிச்சமும் புதிய நம்பிக்கையையும் மகிழ்வினையும் அளிக்கிறது. ஈழ இனப்படுகொலை நடைபெற்ற 15 ஆம் ஆண்டு நினைவுநாட்களை முன்னிட்டு ஐக்கிய அமெரிக்கப் பேரவை உறுப்பினரான வைல்லி நிக்கல் சக 6 உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கை இனக்கொடுமைகளுக்கு சனநாயக வழியில் நிரந்தரத் தீர்வுகாண ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற அதிமுக்கிய தீர்மானத்தைப் பேரவையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். என்றழைக்கப்படும் அத்தீர்மானம் ஈழத் தமிழர்களுடனான இராசதந்திர உறவுகளை வலுப்படுத்த அமெரிக்க அரசினை வலியுறுத்துகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு முன் தமிழர்களும் சிங்களவர்களும் இறையாண்மை கொண்ட இரண்டு தனித்தனி அரசுகளைக் கொண்டிருந்ததையும் 1833ஆம் ஆண்டு தமிழ் மற்றும் சிங்கள பிரதேசங்களை இணைத்து பிரித்தானிய அரசு ஒற்றை ஆட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த வரலாற்றையும் அத்தீர்மானம் அழுத்தமாகச் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் தமிழர்களின் கருத்துக்களைக் கேட்காமல்இ அவர்களின் ஒப்புதலின்றிக் கொண்டுவரப்பட்டது என்பதையும் அதனை அன்றைய தமிழர் தலைவர்கள் நிராகரித்ததையும் சுட்டிக்காட்டியுள்ள அத்தீர்மானம் தமிழர்களின் உரிமைபெற்ற நல்வாழ்விற்கு 13வது திருத்தம் ஒருபோதும் நிரந்தரத் தீர்வாக அமையாது என்பதையும் பதிவு செய்துள்ளது. மேலும் இலங்கை இனவாத அரசு தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதையும் தமிழர்களின் தாயகத்தை தன்னாட்சி அதிகாரமற்ற பிரதேசமாகவே இன்றளவும் வைத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இறையாண்மையுள்ள மதச்சார்பற்ற தமிழீழத்தை மீட்டெடுப்பதற்காகவே 1976ஆம் ஆண்டு தமிழர்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் அத்தீர்மானம் நினைவு கூர்ந்துள்ளது. அதுமட்டுமின்றிஇ 2006ஆம் ஆண்டு இலங்கைக்குச் சென்ற அமெரிக்க அரசின் துணைச்செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறைமுகமாக அங்கீகரித்ததை மேற்கோள்காட்டி ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பை நடத்த அத்தீர்மானம் திடமாக வலியுறுத்துகிறது. இத்தனை தெளிவுமிக்கத் தீர்மானத்தை கொண்டுவந்த வைல்லி நிக்கல் மற்றும் அவருடைய சக உறுப்பினர்களுக்கு என்னுடைய அன்பையும்இ நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றம் விரைவில் நிறைவேற்றித் தருவதோடு ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான முன்னெடுப்புகளை தொடங்க வேண்டுமெனவும் தமிழினம் எதிர்பார்த்து காத்து நிற்கிறது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலைக்குள்ளாகி 15 ஆண்டுகளாக அதற்கான நீதிகேட்டு பன்னாட்டு மன்றங்களில் உலகத் தமிழினம் இடையறாது போராடியும் இதுவரை எவ்வித நீதியும் கிடைத்தபாடில்லை. துயர்மிகு இச்சூழலில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுஇ தமிழர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத அமெரிக்க உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகளெல்லாம் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழினத்தின் பக்கமுள்ள நியாயத்தை உணர்ந்து தனித்தமிழீழ விடுதலையே தமிழர்களுக்கான இறுதி தீர்வு என்ற முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஈழத்தாயகத்துடன் தொப்புள்கொடி உறவுகொண்டுள்ள இந்தியப் பெருநாடு சிங்கள இனவாதத்திற்கு ஆதரவாகச் செயல்படுவது தமிழர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். இந்திய அரசின் இத்துரோகச்செயல்பாடுகள் அனைத்தும் 8 கோடி தமிழர்களின் இதயங்களில் இந்தியன் என்ற உணர்வு முற்றாக அற்றுபோகவே வழிவகுக்கும். ஈழத்தில் ஆயுதப்போராட்டம் மௌனித்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் கற்பனைக் காரணங்களை கூறி விடுதலை புலிகள் மீதான தடையை தொடர்ந்து இந்தியா நீட்டித்து வருவது ஏன்? அமைதிக்கு ஆயுதபோராட்டமே தடையாக உள்ளது என்று ஈழ விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க துணைநின்ற இந்திய அரசு இனவழிப்பு போர் முடிந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் இலங்கை இனவாத அரசிடமிருந்து குறைந்தபட்ச அரசியல் அதிகாரத்தை கூட பெற்றுத்தர முடியவில்லை என்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு நிகழ்ந்த மிகப்பெரிய தலைகுனிவாகும். இலங்கையுடனான இந்தியாவின் வெளியுறவு கொள்கை மிகத்தவறானது என்பதையே இத்தகைய அரசியல் தோல்விகள் காட்டுகிறது. ஈழ விடுதலைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்-சீமான் | Virakesari.lk
-
நடுவானில் கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம் -பயணி ஒருவர் பலி
லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற சிங்கப்பூர் எயர்லைன்ஸ்விமானம் நடுவானில் கடுமையாக குலுங்கியதில் பயணியொருவர் உயிரிழந்துள்ளார்- 20 பேர் காயமடைந்துள்ளனர். குறிப்பிட்ட விமானத்தில் 211 பயணிகள் உட்பட 229 பேர் பயணித்துக்கொண்டிருந்தனர் என சிங்கப்பூர் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக சிங்கப்பூர் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. நடுவானில் கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம் -பயணி ஒருவர் பலி | Virakesari.lk
-
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 5 குடும்பங்கள் பாதிப்பு!
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/91 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது. வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/33 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு அங்கத்தவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது. ஜே/26 கிராம சேவகர் பிரிவிலும் ஜே/21 கிராம சேவகர் பிரிவிலும் அடிப்படை கட்டமைப்பு ஒவ்வொன்று சேதமடைந்துள்ளதுள்ளன. தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/232 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/166 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/263 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 80.7 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 5 குடும்பங்கள் பாதிப்பு! | Virakesari.lk