Everything posted by பிழம்பு
-
இந்திய மீனவர்கள் அட்டூழியம்; வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்தழிப்பு!
வடமராட்சிக் கடற்பரப்பில் நூற்றுக்கணக்கில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகுகளால் வடமராட்சி மீனவர்களின் பல இலட்சம் ரூபாபெறுமதியான வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளன. இந்தவிடயம் தொடர்பில் வடமராட்சி மீனவர்கள் தெரிவித்ததாவது: வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த சில நாள்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் வடக்கு மீனவர்களின் வலைகள் வகைதொகை இன்றி அழிக்கப்படுகின்றன. இதனால், பல லட்சம் ரூபா நிதி இழப்பு ஏற்படுவதுடன். உயிர் பயத்தில் கடற்றொழில் நடவடிக்கையையும் கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் அரக்க வரும் இந்தியப் படகுகளைக் கட்டுப் படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போதைய அரசாங்கம் சொல்கின்ற போதிலும், செயலில் எந்த மாற்றத்தையும் நாங்கள் காணவில்லை. எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்தால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் கையிலெடுப்போம். அதன் பின்னர் ஏற்படும் அசம்பாவி தங்களுக்கு நாம் பொறுப்பாளியாக படைகளைப்போல் முடியாது - என்றனர். தற்போது கடற்கொந்தளிப்புக் காரணமாகவும், கடல் இரைச்சல் காரணமாவும் இந்த இழுவைப் படகுகள் மிகவும் அண்மையில் வந்த பின்னரே அவற்றை உணரக்கடியதாக உள்ளது. இராட்சத படகுகள் கடந்து செல்லும்போது ஏற்படும் கொந்தளிப்பால் எமது சிறிய படகுகள் கவிழும் ஆபத்து ஏற்படுகின்றது. மரணத்தோடு உறவடியே மீனவர்களாகிய நாம் ஒவ்வொரு நாளும் கறுக்கும் சென்று கரை திரும்புகின்றோம் ஆனால் அரக்க வரும் இந்தியப் படகுகளைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போதைய அரசாங்கம் சொல்கின்ற போதிலும், செயலில் எந்த மாற்றத்தையும் நாங்கள் காணவில்லை. எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்தால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் கையிலெடுப்போம். அதன் பின்னர் ஏற்படும் அசம்பாவி தங்களுக்கு நாம் பொறுப்பாளியாக படைகளைப்போல் முடியாது - என்றனர். இந்திய மீனவர்கள் அட்டூழியம்; வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்தழிப்பு!
-
‘திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது’ - உயர் நீதிமன்றம் வேதனை
‘திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது’ - உயர் நீதிமன்றம் வேதனை மதுரை: திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சர்வ சாதாரணமாகிவிட்டது என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்தவர் தேவா விஜய். இவர் மீது இளம் பெண் ஒருவர் வள்ளியூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். புகாரில் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக கூறி 9 ஆண்டுகளாக பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் இளம் பெண் கூறியிருந்தார். இப்புகாரின் பேரில் தேவா விஜய் மீது வள்ளியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தேவா விஜய் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரும், புகார் அளித்த இளம்பெண்ணும் ஏறக்குறைய 9 ஆண்டுகளாக பாலியல் உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த நீண்ட கால பாலியல் உறவின் போது புகார்தாரர் எதிர்ப்பு தெரிவிக்கமால் இருந்ததை பார்க்கும் போது இருவர் இடையே இருந்து வந்த பாலியல் உறவு இருவரின் சம்மதத்தின் அடிப்படையில் நடைபெற்ற உறவு என்பதை குறிக்கிறது. ADVERTISEMENT அப்போது தன்னை திருமணம் செய்வதாக கூறி மனுதாரர் ஏமாற்றினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீதிமன்றம் தற்போது சமூகத்தில் நிலவும் உண்மை நிலவரங்களை அறியாமல் இல்லை. திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. இருவர் தாமாக முன்வந்து ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டு நீண்ட காலம் உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த உறவில் முறிவு ஏற்படும் போது குற்றவியல் சட்டத்தினை பயன்படுத்துவது தவறு. சம்பந்தப்பட்ட இருவருக்கிடையே என்ன நடக்கிறது என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் எல்லைக்குள் வருகிறது. அந்த உறவு பாசத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதா, திருமண எதிர்பார்ப்பா, வெறும் பரஸ்பர இன்பம் என்பதா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்றம் உறுதியாக தீர்மானிப்பது சாத்தியமில்லை. தனிப்பட்ட நடத்தையை ஒழுக்கப்படுத்தவோ அல்லது தனிப்பட்ட ஏமாற்றத்தை வழக்காக மாற்றவோ குற்றவியல் செயல்முறையைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் நீதிமன்றங்கள் தனிமனித ஒழுக்கத்தை பார்த்து தீர்ப்பு வழங்க முடியாது, வற்புறுத்தல், ஏமாற்றுதல் அல்லது இயலாமையால் சம்மதம் என பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடுகிறது. தனிப்பட்ட முரண்பாடுகளை தவறான நடத்தையாக சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை. உணர்ச்சி ரீதியான விளைவுகளைத் தீர்ப்பதற்கு சட்டத்தை தவறாக பயன்படுத்த முடியாது. மனுதாரர் மீதான வழக்கு தொடர்வது சட்ட செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வதற்கு சமம் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். ‘திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது’ - உயர் நீதிமன்றம் வேதனை | High Court expresses concern over premarital sex becoming normal - hindutamil.in
-
ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு - தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தகவல்
17 Nov, 2025 | 04:58 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு காணப்படுகிறது. இவ்வாண்டில் புதிதாகப் பதிவான பெரும்பாலான எச்.ஐ.வி. தொற்றாளர்களில் ஆண்கயே அதிகளவில் காணப்படுவதாக தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தரவுகளுக்கமைய, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) மாத்திரம் 200 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். முதல் காலாண்டில் இந்த எண்ணிக்கை 230ஆகப் பதிவாகியுள்ளது. இது 2009ஆம் ஆண்டிலிருந்து ஒரு காலாண்டில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பதிவான புதிய தொற்றாளர்களில், 15–24 வயதுக்குட்பட்டவர்கள் 20 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆவர். மீதமுள்ளவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். மேலும், 2025ஆம் ஆண்டில் பதிவான எச்.ஐ.வி பாதிப்புகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான விகிதம் 7.6க்கு 1 என்ற குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இது ஆண்களே பெரும்பாலான தொற்று பாதிப்புகளுக்கு தொடர்ந்து காரணமாக உள்ளனர் என்பதைக் காட்டுகிறது. இந்த ஆண்டு இதுவரை, எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான 23 மரணங்கள் பதிவாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டில், 47 பேர் எச்.ஐ.விஃஎய்ட்ஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான எச்.ஐ.வி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு முதல், இலங்கையில் மொத்தம் 6759 எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் 5366 ஆண்கள் மற்றும் 1573 பெண்கள் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரித்து வரும் போக்குக்கு மத்தியில், தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், ஆணுறை பயன்பாடு, வெளிப்பாட்டிற்கு முந்தைய தடுப்பு மற்றும் வெளிப்பாட்டிற்குப் பிந்தைய தடுப்பு உட்பட எச்.ஐ.வி/எஸ்.டி.ஐ தடுப்பு கல்வியை பள்ளி பாடத்திட்டங்களில் ஒருங்கிணைக்க முன்மொழிந்துள்ளது. இருப்பினும், இந்த முன்மொழிவு இன்னும் ஆய்வில் இருப்பதாகவும் விமர்சனங்களை எதிர்கொள்வதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு - தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தகவல் | Virakesari.lk
-
யாழில் அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவு ; எதிர்வரும் 27 வரை மழை நீடிக்கும் சாத்தியம் - யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர்
18 Nov, 2025 | 12:31 PM இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ். மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் 4 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மேலும் செவ்வாய்க்கிழமை (18) வரை மழை நீடித்து குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான எதிர்ப்பு கூறல்கள் விடப்படுகின்று. வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் மழையானது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடற் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் சூறாவளிக்கான எச்சரிக்கைகள் விடப்படாத நிலையில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் கடற் தொழில் நடவடிக்கைகளின் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர் என்றார். யாழில் அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவு ; எதிர்வரும் 27 வரை மழை நீடிக்கும் சாத்தியம் - யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் | Virakesari.lk
-
சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவு!
(இணையத்தள செய்திப்பிரிவு) APEX 2026 விருது வழங்கும் விழாவில் மத்திய/தெற்கு ஆசியப் பிராந்தியத்துக்கான சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்படும் சுவையான உணவு மற்றும் பானங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி பயண ஏற்பாட்டுச் செயலியான ‘ட்ரிப்இட் பை கான்கர்’ (TripIt by Concur) மூலம் சரிபார்க்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளின் வாக்குகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகலாவிய ரீதியில் உள்ள 600க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் இந்த விருதுக்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் பாரம்பரிய உணவுகள் மற்றும் பானங்கள் பயணிகளின் மனதில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது. விமானத்தில் உள்ள உணவுகளை உண்ணும் அனுபவம் என்பது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புகழ்பெற்ற சேவையின் நீடிப்பு ஆகும். சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவு! | Virakesari.lk
-
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : சம்பவ இடத்திற்கு சென்ற கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது என்ன ?
18 Nov, 2025 | 04:05 PM திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கலகொட அத்தே ஞானசார தேரர் செவ்வாய்க்கிழமை (18) திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறுகையில், திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) இரவு வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு பின்னர் திங்கட்கிழமை (17) பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரப்பப்பட்ட நிலையில் பொதுமக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இது நாட்டு மக்கள் மத்தியில் அதிகளவு பேசப்பட்டது. இது மிகவும் கவலைக்கிடமான, கசப்பான, பாரதூரமான ஒரு விடயமாகும். கலவரத்தின் போது அதிகாரத்துடன் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அவர்களை அனுப்பிய அரசாங்கத்துக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இலங்கையில் வாழும் பௌத்த மக்களின் உரிமையில் தான் நீங்கள் கை வைத்துள்ளீர்கள். இது பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்குகிறது. பௌத்த மதம் என்பது பல ஆண்டுகளாக இலங்கையில் உள்ள ஒரு மதமாகும். புத்தருக்கு சொந்தமான இலங்கை பூமியில் தான் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் வாழுகின்றனர். புத்தர் சிலையை அகற்றுமாறு கலவரம் செய்தவர்களால் தாக்கப்பட்ட பல தேரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேரர்களை தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது மிகவும் தவறாகும். பௌத்த வணக்கஸ்தலத்தை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு யாருக்கு உரிமை உள்ளது. மக்களை தூண்டுவது அரசாங்கம் தான். கால காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது. 5 வருடங்களுக்கு தான் அரசாங்கத்துக்கு பலம் கிடைக்கும். ஆனால் பௌத்த மதத்தின் உரிமை 2 ஆயிரம் ஆண்டுகளாக இலங்கையில் உள்ளது. அது எப்போதும் மாறாது. இதுவே கடைசி. இது போன்ற செயல்கள் இனி இடம்பெறக் கூடாது. இவ்வாறான பாவ செயல்களில் ஈடுபட வேண்டாம். இது விகாரைக்கு சொந்தமான இடம். அங்கு என்ன செய்ய வேண்டும் என்பது விகாராதிபதியின் உரிமை. பௌத்த மதத்தின் உரிமைக்காக நாங்கள் போராடுவோம் என்றார். திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : சம்பவ இடத்திற்கு சென்ற கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது என்ன ? | Virakesari.lk
-
வடக்கு மாகாணம்: தேசிய பாதுகாப்பு காணிகளை விடுவிக்க கூடாது – நளின் பண்டார
18 Nov, 2025 | 05:18 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வடக்கு மாகாணத்தில் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை ஒருபோதும் விடுவிக்க கூடாது.நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெறாத வகையில் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகள் முறையாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்.தனிப்பட்ட பாதுகாப்பினை காட்டிலும் தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு காணி விடுவிப்பு குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது. தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளால் தேசிய பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகால யுத்தத்தால் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டார்கள். யுத்தம் முடிவடைந்து விட்டது என்று குறிப்பிட முடியாது. எதிர்காலத்தில் யுத்தம் ஒன்று தோற்றம் பெறலாம். ஆகவே அவதானத்துடன் செயற்பட வேண்டும். வடக்கு மாகாணம் தேசிய பாதுகாப்பின் பிரதான கேந்திரமையாக காணப்படுகிறது. வடக்கில் காணி பிரச்சினை காணப்படுகிறது. தனிப்பட்ட பாதுகாப்பினை காட்டிலும் தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு காணி விடுவிப்பு குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும். பாதுகாப்பு காரணிகளுடன் தொடர்புடைய காணிகளை விடுவிப்பதற்கு பதிலாக காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது காணிகளுக்கு பதிலாக நட்டஈடு வழங்க வேண்டும்.தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை இராணுவத்தினர் வசம் வைத்துக் கொள்ள வேண்டும். வடக்கு மாகாணத்தில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெறாத வகையில் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகள் முறையாக அடையாளப்படுத்தப்பட வேண்டும். தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை விடுவிக்க கூடாது. வடக்கு மக்களுக்கு அநீதி இழைக்க வேண்டும் என்று நாங்கள் குறிப்படவில்லை.காணிக்கு போதுமான அளவு நட்டஈடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொள்கிறேன். வடக்கு வாக்குகளை பெறுவதற்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்காமல் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் செயற்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் தேசிய பாதுகாப்பு குறித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார். வடக்கு மாகாணம்: தேசிய பாதுகாப்பு காணிகளை விடுவிக்க கூடாது – நளின் பண்டார | Virakesari.lk
-
பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்!
17 Nov, 2025 | 04:18 PM யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டம் ஒன்றினை இன்று திங்கட்கிழமை (17) காலை முன்னெடுத்துள்ளனர். கொட்டடி மீனவர்களின் படகு தரிப்பிடத்திற்காக தூர்வார்ப்பட்ட மண்ணை இதுவரை அகற்றவில்லை என தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் குறித்த மண்ணை அகற்றுமாறு கோரி தவிசாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தவிசாளர் உடனடியாக மணல் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்! | Virakesari.lk
-
திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று திங்கட்கிழமை (17) உத்தரவிட்டார். பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதி ஊடாக வீதியால் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணியான நெதர்லாந்து பெண் ஒருவரை கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி திருக்கோவில் பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஆண் ஒருவர் இடைமறித்து அவருக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக குறித்த பெண் அறுகம்பே சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்ததையடுத்து, குறித்த நபரின் புகைப்படத்தை ஊடகங்கள் ஊடாக பொலிஸார் வெளியிட்டு அவர் தொடர்பாக தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து குறித்த நபர் தொடர்பாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (16) திருக்கோவில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர். 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பொகலந்தலாவையைச் சேர்ந்தவர் எனவும், களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேசத்தில் திருமணம் முடித்து கடந்த சில வருடமாக திருக்கோவில் பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வாடகைக்கு இருந்த வீட்டை முற்றுகையிட்ட போது அவர் அங்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் வெளியேறி களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்றபோது அவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் மருதமுனை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைத்துக்கு அருகில் தனது தலையை மொட்டையடித்து, தோற்றத்தை மாற்றிக் கொண்ட நிலையில் இருந்தபோது அங்கு வைத்து குறித்த நபரை கைது செய்து பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை (17) பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 28 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார். வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல் | Virakesari.lk
-
யாழில் கரை ஒதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை
17 Nov, 2025 | 04:31 PM யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்று திங்கட்கிழமை (17) குறித்த சிலை கரை ஒதுங்கியுள்ளது. சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால் , வேறு நாட்டவர்கள் தங்கள் நாட்டு கடலில் போட்ட சிலையே வளலாய் பகுதியில் கரை ஒதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மியான்மார் நாட்டிலும் பௌத்தர்கள் வாழ்கின்ற நிலையில் , அங்கு உயிரிழந்தவர்களின் நினைவாக கடலில் விடப்படும் மூங்கிலிலான தொப்பங்கள் கடந்த காலங்களில் வடமராட்சி பகுதிகளில் கரை ஒதுங்கி இருக்கின்றன. அவ்வாறே சேதமடைந்த சிலையை கடலில் போட்ட நிலையில் அந்த சிலை வளலாய் பகுதியில் கரை ஒதுங்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த சிலை தற்போது வளலாய் கடற்தொழிலாளர் சங்க கட்டடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில், சிலை கரையொதிங்கியமை தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழில் கரை ஒதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை | Virakesari.lk
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : சட்டம் - ஒழுங்கு காக்க நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜேபால 17 Nov, 2025 | 02:07 PM ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) திருகோணமலை பகுதியில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட குழப்பகரமான நிலைமை தொடர்பாக இரவு பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து புத்தர் சிலை பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டுள்ளது. மீண்டும் துரதிஸ்டவசமான சம்பவங்கள் திருகோணமலை நகரில் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு தேவையான ஆலோசனைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற அமர்வில் போது திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்தமையால் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து சபைக்கு அறிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, திருகோணமலை கோட்டை சம்போதிதாகம் பாடசாலையின் சம்புத ஜயந்தி விகாரையுடன் தொடர்புடைய சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட குழப்பகரமான நிலைமை தொடர்பாக இரவு பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்தக்கூடிய நாசகார செயற்பாடு தொடர்பாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. இதனால் பொலிஸார் குறித்த புத்தர் சிலையை அவ்விடத்தில் இருந்து அகற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். அவசரமாக புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பிலேயே அங்கே பிரச்சினை எழுந்திருந்தது. இந்நிலையில் மீண்டும் அந்த புத்தர்சிலையை அந்த விகாரையில் பிரதிஷ்டை செய்யுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் இருந்து இது தொடர்பில் முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றிருந்தது. அங்கே சிற்றுண்டிச்சாலையொன்று நடத்திச் செல்லப்படுவதாகவும் இது சட்டவிரோதமானது என்றும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதனால் நீதிமன்ற தீர்ப்புக்கு அமையவே செயற்பட வேண்டும். இவ்வாறான நிலைமையில் அங்கே புத்தர் சிலை தொடர்பில் எழுந்த பிரச்சினைகளால் அதன் பாதுகாப்பு கருதி அந்த புத்தர்சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. அது இன்று (நேற்று) காலையில் விகாரையில் தாகம் பாடசாலை பகுதியில் பிரதிஸ்டை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த காணி தொடர்பான பிரச்சினையை நீதிமன்றம் ஊடாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும். இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்து நீதிமன்ற தீர்மானங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும். கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் முன்வைக்கப்படும் விடயங்களும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும். எவ்வாறாயினும் புத்தர்சிலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் துரதிஸ்டவசமான சம்பவங்கள் திருகோணமலை நகரில் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு தேவையான ஆலோசனைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : சட்டம் - ஒழுங்கு காக்க நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜேபால | Virakesari.lk அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் - சுமந்திரன் சீற்றம்! அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் - சுமந்திரன் சீற்றம்! அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது. அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது. தே. ம. சக்தி அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது. இக் கட்சியைச் சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும், திருகோணமலை உறப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட, உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் - சுமந்திரன் சீற்றம்!
-
முல்லைத்தீவு கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்
முல்லைத்தீவு கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம் 17 Nov, 2025 | 06:47 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்த வாரம் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அங்கு சிரமதானப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மாவீரர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையிலே கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்ல பிரதேசத்தை அண்டிய அயல் கிராமங்களில் உள்ள மக்கள் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் அனைவரையும் குறித்த சிரமதான பணிக்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் அனைத்து உறவுகளையும் கலந்துகொள்ளுமாறும் பணிக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம் | Virakesari.lk
-
"உங்களை நம்பி, நீங்கள் சொன்னதையெல்லாம் நம்பி, உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள்" - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
17 Nov, 2025 | 07:13 PM திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அகற்றிய போது, சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திங்கட்கிழமை (17) தனது பாராளுமன்ற உரையில் கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில்... திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை ஞாயிற்றுக்கிழமை (16) அகற்றிய போது, சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. ஏனெனில், இனவாதத்தையும் மதவாதத்தையும் நீக்குவதாக நீங்கள் சொன்னதை நம்பி அவர்கள் உங்களுக்கே வாக்களித்திருந்தார்கள். இங்கிருக்கும் திருமலைக்கான தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையும் அவர்கள் தெரிவு செய்திருந்தார்கள். நீங்கள் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எடுத்த நடவடிக்கையை எதிர்த்ததெல்லாம், சிங்கள காடையர்கள் மட்டுமே!! அதைக்கண்டு நீங்கள் உண்மையில் பின்வாங்கியிருக்கக்கூடாது, அந்த இனவாத மதவாத காடைத்தனத்தை கண்டு பின்வாங்கியிருந்திருக்ககூடாது. உண்மையில் நீங்கள் என்ன செய்திருக்கவேண்டுமெனில் , மக்களிடம் சென்று எது சரி எது பிழை என்பதை, எப்படியான் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நேர்மையுடன் சொல்லியிருந்திருக்கவேண்டும். ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் இப்போது செய்ததெல்லாம், நீங்கள் (இனவாதிகள் இல்லை என) சொன்னதை நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும் உங்களுக்கு வாக்களித்த சிங்களரல்லாத வாக்களருக்கும் முழுமையான தூரோகத்தை இழைத்திருக்கிறீர்கள். என, நீதி அமைச்சு மீதான விவாதத்தின் போது திருமலை சட்ட விரோத விகாரை அமைப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றில் உரையாற்றினார். "உங்களை நம்பி, நீங்கள் சொன்னதையெல்லாம் நம்பி, உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள்" - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Virakesari.lk
-
விஜய் கட்சியை சேர்ந்தவர்களை ‘தற்குறிகள் என விமர்சிக்காதீர்!’ - எழிலனின் கவனம் ஈர்த்த பேச்சும், பின்புல அரசியலும்
“விஜய் கட்சியை சேர்ந்தவர்களை தற்குறிகள் என திமுகவினர் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த இளைஞர்கள் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நாம்தான் போய் பேச வேண்டும். அவர்களிடம் பேசாமல் விட்டது நம் தவறு. தற்போது திமுகவில் 200 இளம் பேச்சாளர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். அவர்கள் இந்த இளைஞர்களிடம் பேச வேண்டும். நாம் அவர்களுடன் உரையாட வேண்டும். விமர்சனம் செய்யக் கூடாது. அவர்களை அரசியல்படுத்த வேண்டியது நமது கடமை” - இது ’திமுக 75 - அறிவுத் திருவிழா’ என்ற பெயரில் நடைபெற்ற மாநாட்டில் ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ எழிலன் நாகநாதன் பேசியது. இணையத்தில் அவரது பேச்சு வைரலாகிக் கொண்டிருக்கிறது. ‘சிலர் இது திமுக அதிருப்தி பேச்சு என்று கதை கட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அலசி ஆராய்ந்தால் எழிலனின் சிந்தனை ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தது. திமுகவுக்கு சுயபரிசோதனை பேச்சு என்பதை மறுக்க முடியாது என்பதுபோலவே தவெகவை, விஜய்யை தோலுரிக்கும் பேச்சும் கூட’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அரசியல்படுத்துவது எனப்படுவது யாதெனில்? - திராவிடக் கட்சிகளின் தொடக்கக் காலங்களில் இளைஞர், இளம்பெண்கள் பாசறைகள் வளர்த்தெடுத்தவர்கள் தான் இன்று அக்கட்சிகளில் கோலோச்சியுள்ள முகங்கள் எனலாம். இடதுசாரி கட்சிகளும் இதில் சளைத்தது இல்லை. விசிகவும் கூட இளைஞர்களை அரசியல்படுத்துவதில் தீவிரமாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால், புதிதாய் முளைத்த தவெக இந்த மாதிரியான எந்த முன்னெடுப்புகளையும் எடுக்காமலேயே ‘தொண்டர்’ படையை வைத்திருப்பதாக மார்தட்டிக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டம் பற்றிதான் அரசியல் நிபுணர்கள் தங்களின் பரந்துபட்ட பார்வையை முன்வைத்தனர். அவர்கள் கருத்துகளின் தொகுப்பு வருமாறு: ADVERTISEMENT “குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு அரசியலை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். நம்மில் எத்தனை வீடுகளில் குழந்தைகளுடன் செய்தி வாசிக்கிறோம். அரசியல் பேசுகிறோம் என்று எண்ணிப் பார்க்க பத்து விரல்கள் கூட தேவையில்லை. அந்தளவுக்கு வீடுகளில் அரசியல் தீண்டத்தகாத பொருளாக இருக்கும்போது தாங்கள் திரையில், பேஸ்புக்கில், இன்ஸ்டாவில் கொண்டாடி ரசிக்கும் ஒருவர் நான் அரசியல் செய்யப்போகிறேன், முதல்வராகப் போகிறேன் என்று வந்து நின்றால், மிக எளிதாக அவர் பக்கம் இளம் தலைமுறையினர் சாய்ந்துவிடுவர். அதுதான் விஜய் கட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. தனது சினிமா ஹீரோ படம் ஃப்ளாப் ஆனாலும் முட்டுக் கொடுப்பதுபோலத் தான் கரூர் நெரிசலில் குழந்தைகளைப் பறிகொடுத்தவர்கள் கூட விஜய்க்கு முட்டு கொடுக்கிறார்கள். வீடு என்பது வெறும் கூடாரம் அல்ல. அது அரசியல் தன் பிரக்ஞையோடு குழந்தைகளை வளர்த்தெடுபது. அதேவேளையில் முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியது அரசியல் திணிப்பாக இருக்கக் கூடாது.” இது தந்திரமா? - “விஜய் கட்சித் தொண்டர்கள் அரசியல்மயமாக்கப்படாததால் தான் அவர்கள் விஜய் பிரச்சார வாகனத்தை உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்தார்கள். அதனால்தான் செய்தியாளரை சீண்டி விளையாடுகிறார்கள். அதனால்தான் அரசியல் பிரசாரத்துக்கு குடும்ப விழா போல் குழந்தைகளைக் கூட்டி வந்து பறிகொடுத்தார்கள். ஆனால், அந்த சமூகப் பிழையை மறைத்து அவர்களை ‘தற்குறிகள்’ எனப் பொதுமைப்படுத்துவது, இழிவுபடுத்துவது ஓர் அரசியல் தந்திரம். அதுவும் நிச்சயமாக எழிலன் குறிப்பிட்டதுபோல் ஒரு குறிப்பிட்டக் கட்சியின் சதியாகவும் இருக்கலாம் என்பதில் உடன்படுகிறேன்” என்று கூறுகிறார் கள அரசியல் நிபுணர் ஒருவர். இது குறித்து அவர் மேலும் விவரிக்கையில், “விஜய் ரசிகர்களை / தவெக தொண்டர்களை நாம் தமிழர் கட்சியில் கூடிக் கலையும் தொண்டர்களோடு ஒப்பிடலாம். சீமானின் திரைபிம்ப அடையாளம், தமிழ்த் தேசிய் உத்வேகப் பேச்சால் அவர் கட்சியில் இணைந்த பலர் ஒரு சில ஆண்டுகளில் அதிலிருந்து விலகி பிற கட்சிகளிலோ இணைவதைப் பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஒரு மெட்ரோ நகருக்கு வரும் ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் போல் அவர் கட்சியில் ஒரு கூட்டம் உள்ளே வருவதும், வெளியே செல்வதுமாக இருக்கும். அதுபோல் தான் இளைஞர் பட்டாளம் ஒன்று இப்போது தவெகவில் ஐக்கியமாகியுள்ளது. கொள்கை பிடிப்போ, லட்சியமோ கோட்பாடோ இல்லை. ஈர்ப்பரசியலில் சிக்கியவர்களே இவர்கள். அரசியல் பழகாமல் ஆர்ப்பரிக்கும் கூட்டம், அது சார்ந்த கட்சிக்கு மட்டுமல்ல, மாநில அரசியலுக்கே ஆபத்து. உணர்ச்சிவசப்பட்டு கோஷம் போடுபவர்கள் இன்னும் வாக்கு அதிகாரம் பெறாத இளம் தளிர்களையும் தங்கள் பாதையில் இழுக்கும் ஆபத்து அதிகம். இது புற்றுநோய் போன்றது. ஆரம்பக்கட்டத்தில் கண்டறிந்துவிட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை சரியாகச் செய்ய வேண்டும். அதுதான் அரசியல்மயமாக்குவது. விஜய் கட்சியினரை தற்குறிகள் என்பது எலீட் அரசியல்வாதிகளின் ‘ஆர்கஸ்ட்ரேட்டட் பாலிடிக்ஸ்’. அவர்களை அரசியல்படுத்த வேண்டும் என்ற எழிலனின் யோசனையும் அரசியல்தான். ஆனால், அதன்மூலம் விட்டேத்தியாக திரியும் இளைஞர்களை அரசியல்மயமாக்கலாம். அதன்மூலம் அவர்களுக்கு திமுகவுக்கு மடைமாற்றலாம். அல்லது குறைந்தபட்சம் விழிப்புணர்வு உடையவர்களாவது மாற்றலாம்” என்றார். எப்படி உருவானது இந்த வெற்றிடம்? - “விட்டில் பூச்சிகள் விளக்கை நோக்கிப் பாய்வது போல் பெருமளவிலான இளைஞர் கூட்டம், ஏன் ஜென்ஸீ தலைமுறை என்று வைத்துக் கொள்வோம் எப்படி தவெக, தவெக என்று மார்தட்டுகிறது என்று பார்த்தால் ஓர் அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளதை மறுக்க முடியாது” என்கிறார் இன்னொரு அரசியல் விமர்சகர். அவர் கூறியதாவது: "திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி என்று வாரிசு அரசியல் பட்டவர்த்தமாகிக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் இபிஎஸ் vs ஓபிஎஸ், இபிஎஸ் vs ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன் என்று உள்கட்சி அரசியல் நீண்டு கொண்டிருக்கிறது. விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக அவர் உடல்நலம் தேய ஆரம்பத்திலிருந்தே தேய ஆரம்பித்துவிடது. விசிக, இடது சாரிகள், காங்கிரஸ் தனியாக வருவதில்லை கூட்டணி அரசியல்தான் சரி என்று சேஃப் ஜோன் பாலிடிக்ஸ் செய்து கொண்டிருக்கிறது. மலர்ந்தே தீரும் என்று தாமரைக் கட்சி தடம் பதிக்க முயன்று கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் தான் விஜய் என்ட்ரி கொடுக்கிறார். நான் கோடிகளில் வாங்கும் சம்பளத்தை உதறுகிறேன்; கரியர் உச்சத்தை கைவிடுகிறேன்; அரசியல் வாரிசும் அல்ல கட்சியை அடகுவைக்கும் செயலையும் செய்ய மாட்டேன் என்று ரவுண்டு கட்டி கம்பு சுத்துகிறார். மேம்போக்காக அவர் சொல்வதெல்லாம் ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் கூட, அதற்காக மட்டுமே அரசியல் கத்துக்குட்டி கையில் ஆட்சியை எப்படிக் கொடுக்க முடியும். இது ஆண்ட, ஆளும் கட்சியினர் சுயபரிசோதனை செய்ய வேண்டிய காலம். விஜய் தாராளமாக அரசியல் கட்சி நடத்தட்டும், ஆட்சிக்கு ஆசைப்படட்டும். ஆனால் அவரும், அவர் கட்சி விசிறிகளும் அரசியல்மயமாக்கப்படாத நிலையில் அவருக்கு ஓட்டுப்போடுவது எந்த மாதிரியான எதிர்காலத்தை உருவாக்கும் என்பது கணிக்க முடியாதது” என்று காட்டமாக விமர்சித்தார். ‘ஏன் என்ற கேள்வி கேட்காமல்...’ - தமிழகத்தில் எடுப்பார் கைப்பிள்ளையாக நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் மாற்றாக கருதிக் கொள்ளும் கட்சியாக தவெக நிற்கிறது. அதுதான் முடிவு என்று அவர்கள் தீர்மானிக்கும் முன்; அதையும் தாண்டி நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆழ்ந்து யோசித்து தேர்ந்தெடுங்கள் என்று அவர்களை அரசியல்மயமாக்க வேண்டும். “ஒரு தொண்டனுக்கு தேவைப்படும்போது அவனுடம் நிற்பவன்தான் தலைவன். திரையில் வீர ஆவேச வசனங்களும், ஃப்ரெண்ட்லி ஜெஸ்ச்சரும் காட்டுவதால் நிஜத்திலும் விஜய் அப்படியானவராகவே இருப்பார் என்று கூறிவிடமுடியாதல்லவா? இயல்பில் அவர் சற்றே தனிமை விரும்பி என்று அவரை அறிந்தவர்கள் கூறுகின்றனர். இருக்கட்டும், ஆனால் பொது வாழ்வுக்கு வருவதென்று முடிவெடுத்து, முதல் தேர்தலிலேயே முதல்வராகத்தான் ஆவேன் என்று பேசினால், ஊடகங்களை சந்திக்க, அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல துணிச்சல் இருக்க வேண்டாமா? அப்படியான சிறு அறிகுறி கூட விஜய்யிடம் இல்லையே. அவரை எப்படி நான் அரசியல் மாற்றாகப் பார்க்க முடியும்” என்று கேள்வி எழுப்பச் செய்ய வேண்டும். குடும்ப அரசியலையும் கேள்வி கேட்கச் செய்ய வேண்டும்; கோஷ்டிப் பூசலையும், அடகுவைக்கும் அரசியலையும் விமர்சிக்கக் கற்றுத்தர வேண்டும். இளைஞர்கள் அரசியலில் மூழ்கித் தெளிவார்கள். அது நிச்சயம் சாக்கடை அல்ல என்பதை அவர்களே உணர்வார்கள். ஏன் என்ற கேள்வி கேட்காவிட்டால் வாழ்க்கை மட்டுமல்ல அரசியல் வாழ்க்கையும் இருக்காது என்பதே நிதர்சனம். ‘தற்குறிகள் என விமர்சிக்காதீர்!’ - எழிலனின் கவனம் ஈர்த்த பேச்சும், பின்புல அரசியலும் | DMK MLA' viral speech about TVK cadres and an insight into Vijay's politics - hindutamil.in
-
நாட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் - சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
13 Nov, 2025 | 03:41 PM நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நாட்டில் அதிகரித்துவரும் பொது சுகாதார கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கண் அறுவை சிகிச்சை நிபுணர் கபில பந்துதிலக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கண் நோய்களாலும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அதனை தெரிவித்துள்ளார். அண்மைய தரவுகளின்படி, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் 73 சதவீத அதிகரிப்பை கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகளவில் ஒன்பது பெரியவர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில், இந்த பாதிப்பு 23 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, அதாவது ஐந்து பெரியவர்களில் ஒருவர் நீரிழிவு நோயாளர்களாக உள்ளனர். அவர்களில், மூன்றில் ஒரு பகுதியினர் கண் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்,. மேலும் இதில் 11 சதவீதமானோர் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் பார்வையற்றவர்களாக மாறும் அபாயம் உள்ளது, ஏனெனில் நீரிழிவு குறிப்பாக கண்களை பாதிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நீரிழிவு தொடர்பான குருட்டுத்தன்மை மற்றும் பார்வைக் குறைபாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 923 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், பொருளாதார விளைவுகள் கணிசமானவை என்றும் வைத்தியர் பந்துதிலக மேலும் குறிப்பிட்டார். குறிப்பாக 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கே இவ்வாறான நோய் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நோய் தடுக்கக்கூடியது எனவும். இந்த நபர்கள் பார்வையை இழக்க எந்த காரணமும் இல்லை. அதன் ஆரம்ப கட்டங்களில், வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுக் கட்டுப்பாடு மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், முழுமையான தடுப்பு சாத்தியமில்லை என்றாலும், சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சை பார்வையைப் பாதுகாக்க உதவும் என தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கண் அறுவை சிகிச்சை நிபுணர் கபில பந்துதிலக தெரிவித்துள்ளார். நாட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் - சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை | Virakesari.lk
-
நாய்களால் மனைவியிடம் விவாகரத்து கோரிய கணவர்
13 Nov, 2025 | 05:08 PM இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் தெருநாய்கள் பிரச்சினையால் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து கோரியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வந்துள்ளார். இது தொடர்பில் கணவர், 'திருமணம் முடிந்த கொஞ்சநாளில் மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார். தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அத்தோடு அந்த நாய்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். இரவு நேரம் என் அருகில் தூங்கியதைவிட அந்த நாய்களுடன்தான் அதிக நேரம் தூங்கினார்' எனத் தெரிவித்துள்ளார். மனைவியின் இந்த செயல் கணவரை எரிச்சல் படுத்தியது. பக்கத்தில் வசித்து வந்த பொதுமக்களும் அப்பெண் மீது பொலிஸில் முறைப்பாடு அளித்தனர். ஆனால் விலங்குகள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்த அவர் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டினார். இதனால் அந்த பெண்ணின் மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார். இருந்த போதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். மேலும் தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தை காட்டி தன்னை வெறுப்பேற்றுவதாகவும், இதன் காரணமாக மன அழுத்தத்தால் தனது ஆண்மை இழந்து விட்டதாகவும் அவர் புலம்ப ஆரம்பித்தார். கணவரும் பொலிஸ் நிலையத்துக்கு அலைந்தார். இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அவர் தெரு நாய்களுடன் வாழ்க்கை நடத்திய மனைவியுடன் இனியும் குடும்பம் நடத்த முடியாது என கருதி தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக்கோரி அகமதாபாத் குடும்ப நல நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துளள்ளார். மேலும் உடனடியாக தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று கண்ணீர் வடித்துள்ளார். மனைவிக்கு 15 இலட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது மனைவியோ கணவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் ரிசார்ட் நடத்தி வருவதால் தனக்கு 2 ரூபாய் கோடி வேண்டும் என கேட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. நாய்களால் மனைவியிடம் விவாகரத்து கோரிய கணவர் | Virakesari.lk
-
மன்னாரில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு
3 Nov, 2025 | 05:58 PM மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து, அவர்களை கௌரவிக்கும் முகமாக மன்னார் இரணை இலுப்பைக்குளம், முள்ளிக்குளம் பண்டிவிரிச்சான் பிரதேசத்தைச் சேர்ந்த 95 மாவீரர்களின் பெற்றோர்கள் இன்று (13) கெளரவிக்கப்பட்டனர். மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் உறவுகளுடன் 150 மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். முதலில் மாவீரர் பெற்றோர்களால் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு பின் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில் மாவீரர் தியாகங்கள் பற்றிய பேச்சுக்கள் நடைபெற்றதுடன் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டதுடன், இந்நிகழ்வின் நினைவாக மரக்கன்றுகளும் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. மன்னாரில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு | Virakesari.lk
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்திய – இந்திய எம்.பி. தொல். திருமாவளவன்
13 Nov, 2025 | 07:06 PM முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் வியாழக்கிழமை (13) முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கான திடீர் வருகையின்போது அவரை அப்பகுதி பொதுமக்கள் வரவேற்று, பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து, கவிஞர் யோ. புரட்சி அவர்கள் தன்னுடைய “ஆயிரம் கவிதைகள்” நூலை தொல். திருமாவளவன் அவர்களிடம் கையளித்தார். பின்னர் திருமாவளவன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சென்றடைந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கான பொதுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உள்ளூர் மக்களிடையே பெரும் உணர்ச்சி பூர்வமான சூழலை ஏற்படுத்தியது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்திய – இந்திய எம்.பி. தொல். திருமாவளவன் | Virakesari.lk
-
வடக்கில் நாளை தாதியர் வேலைநிறுத்த போராட்டம்!
யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் வடக்கில் நாளை தாதியர் வேலைநிறுத்த போராட்டம்! வடக்கு மாகாணத்தில் நாளை காலை முதல் 24 மணிநேரம் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படல் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம் பயன்படுத்தல் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவுக்கு எதிராக, குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது. வேலைநிறுத்தம் நாளை 12ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பித்து, நாளை மறுநாள் 13ஆம் திகதி காலை 7 மணிக்கு முடிவடையவுள்ளது. இது தொடர்பில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாண சபைகளிலோ அல்லது மத்திய அரசாங்கத்தின் மருத்துவமனைகளிலோ/ சுகாதார நிறுவனங்களிலோ இத்தகைய நடைமுறை அமுலில் இல்லாததால், வடக்கு மாகாணத்தில் மாத்திரம் இது தன்னிச்சையாக அமுல்படுத்தப்படுவது பாரதூரமான பிரச்சினையாகும். தாதியர்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடுகின்றனர். சாதாரண கடமை நேரங்கள், மேலதிக கடமை நேரங்கள், வாராந்த ஓய்வு நாட்களில், அரசாங்க பொது விடுமுறை நாட்களில் போன்ற ஒன்றுக்கொன்று வேறுபட்ட கொடுப்பனவுகளுக்கு அடிப்படையாக அமையும் கடமைகளை அவர்கள் செய்கின்றனர். தற்போதுள்ள சேவைத் தேவைகள் காரணமாக கிட்டத்தட்ட ஒவ்வொரு தாதியரும் இந்தக் கடமைகளில் ஈடுபட வேண்டியுள்ளது. அத்தகைய சிக்கலான சூழ்நிலைகளில், கொடுப்பனவுகளுக்கான தெளிவான உறுதிப்படுத்தலுக்காக, சாதாரண கடமைகளுக்கு மேலதிகமாகச் செய்யப்படும் கொடுப்பனவுகளுக்கு அடிப்படையாக அமையும் ஏனைய ஒவ்வொரு கடமை நேரங்களுக்கும் தனித்தனி வருகைப்பதிவேடுகளை பேணுவதற்கு சுற்றறிக்கையின் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நிலைமை இவ்வாறிருக்க, அனைத்து ஊழியர்களும் ஒரே வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவதால், பல்வேறு கடமை நிலைகளை இலகுவாக அடையாளம் காண்பது ஒரு பாரிய பிரச்சினை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இதனால், சேவைத் தேவையின் பேரில் செய்யப்படும் மேலதிக கடமைகளுக்கான உரிய கொடுப்பனவுகளைக் கூட இழக்கும் அபாயம் உருவாகலாம் என்பதும் தெளிவாகிறது. வடக்கில் நாளை தாதியர் வேலைநிறுத்த போராட்டம்!
-
வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு தயாரில்லை - யாழ். மாநகரின் முதல்வர்!
யாழ்ப்பாணம் 5 மணி நேரம் முன் வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு தயாரில்லை - யாழ். மாநகரின் முதல்வர்! முறையான முன்னறிவிப்போ, தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை என சுட்டிக்காட்டிய முதல்வர் மதிவதனி, சதிகளின் பின்னணிகள் மூலம் போராட்டத்தில் இறங்கியுள்ள இவர்கள், வேண்டுமானால் தன்னை எழுத்துமூலமான ஆவணத்துடன் நேரடியாக வந்து சந்தித்தால் அது தொடர்பில் பரீசலிக்கலாம் என்றும் தெரிவித்தார். பொறியியலாளரது கட்டுப்பட்டிலிருந்து தம்மை விடுவித்து பிராந்திய சுகாதார சேவை அதிகாரியின் கீழ் செயற்பட அனுமதிக்குமறு கோரி யாழ். மாநகர சுகாதார சிற்றூழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போரட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்தனர். யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (11) இடம்பெற்ற நிலையில் இது தொடர்பில் உறுப்பினர்கள் முதல்வரிடம் கேள்வி எழுப்பிய நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியிருந்தார். அனைத்து மாநகர, நகரசபைகளினது சுகாதார பகுதிகள் பிராந்திய சுகாதார அதிகாரியின் கீழ் தான் இருந்து வருகின்றது. ஆனால் யாழ். மாநகரின் சுகாதார பிரிவு மட்டும் பொறியியலாளரது கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அதனால் நாளாந்தம் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகள் உருவாகிவருகின்றது. எனவே இவ்வாறு இருக்கும் நடைமுறையை மாற்றி பிராந்திய சுகதார அதிகாரியின் கீழ் கொண்டுவரல் வேண்டும். அத்துடன் ஊழியர்களது நிரந்தர நியமனம், இடமாற்றம், உழவு இயந்திர ஒப்பந்தங்கள் மூலம் வகை தெரியப்படும் திண்மக்கழிவுகள் பிரித்தாழ்கையில் இருக்கும் குழப்பங்கள் உள்ளிட்ட சில நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு, கண்காணிப்பாளர்களது இடமாற்றம் உள்ளிட்ட விடையங்களை முன்னிறுத்தி ஊழியர்கள் போராட்டம் முன்னெடுத்துள்ளனர். இவர்களது பிரச்சினைக்கு தீர்வை வழங்க மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறுபினர்கள் வலியுறுத்தினர். வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு தயாரில்லை - யாழ். மாநகரின் முதல்வர்!
-
கெஹலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (11)குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்ததாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது. இதன்போது நீதிமன்றில் ஆஜரான இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள், ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனை பரிசீலித்த கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான், ரமித் ரம்புக்வெல்லவை குறித்த வழக்கிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ரொக்கு பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார். கெஹலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்! | Virakesari.lk
-
மானிப்பாயில் போதை மாத்திரைகள், கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது
11 Nov, 2025 | 04:12 PM யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. ஆயிரம் போதை மாத்திரைகளும் இரண்டு கிலோ 420 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவாவும் இதன்போது கைப்பற்றப்பட்டது. இருபது வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேக நபர் கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக உடுவிலில் கைது செய்யப்பட்டவரின் உறவினர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரை மானிப்பாய் பொலிஸார் ஊடாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மானிப்பாயில் போதை மாத்திரைகள், கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது | Virakesari.lk
-
பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு நாமல் ராஜபக்ஷ
பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, டி.வி. சானக, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் திங்கட்கிழமை (11) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிரிபால டி சில்வா செயலாளர் துமிந்த திஸாநாயக்கவுடன் லசந்த அலகியவன்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இருதரப்பினரும் கலந்துரையாடிய பின்னர், நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் நாங்கள் கலந்துரையாடினோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த இடத்திற்கு வந்து, அரசு நடத்தும் ஏமாற்று நடவடிக்கைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் கூட்டம் பற்றி நாங்கள் பேசினோம். கட்சியாக நமக்கென்ன கொள்கைகள் இருந்தாலும், இந்த முறை எதிர்க்கட்சியாக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, அரசு மக்களை ஏமாற்றும் திட்டங்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப் போகிறோம். எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் நாங்கள் பேசியுள்ளோம். இதில் எதிர்க்கட்சியில் உள்ள அனைவரும் பங்கேற்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். 21ஆம் திகதி என்ன நடக்கும் என்று பார்க்கலாம். ஜனாதிபதி நான்கரை மணிநேரம் பட்ஜெட் பற்றிப் பேசினார். அடுத்த வருடமும் அதே நான்கரை மணிநேரம் பேசத் தயாராக உள்ளார். ஆனால், அந்த நேரத்திலும் சொன்ன எதுவும் நிறைவேற்றப்பட்டிருக்காது. கெப் ரக வண்டிகள் வாங்குவதற்கு யார் கோரிக்கை விடுத்தார்கள்? எந்த அமைச்சகத்தில் இருந்து வாங்கப்படுகிறது? எங்கள் கட்சியின் மூன்று எம்.பி.க்களுக்கு இந்த கெப் ரக வண்டிகள் தேவையில்லை. அவற்றை நாங்கள் சுகாதார அமைச்சகத்திற்கு வழங்குவோம். ஆனால் அரசாங்க உறுப்பினர்கள் கிராமத்திற்குச் சென்று சொல்ல வேண்டியது, எங்களுக்கு கெப் வண்டிகள் கிடைத்தது என்று தான். மரக்கறி விவசாயிகள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். அரிசி மாஃபியாக்களை நிறுத்த வந்த இவர்கள், இன்று அரிசியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். கொள்ளை நிலங்களைக் கையகப்படுத்தியவர்கள் எங்களுடன் இல்லை. கொள்கலன் கப்பல்களில் கொள்ளை சரக்கு கொண்டு வந்தவர்கள் எங்களுடன் இல்லை. வெங்காயம் இறக்குமதி செய்தவர்கள் எங்களுடன் இல்லை. அரிசி இறக்குமதி செய்தவர்கள் எங்களுடன் இல்லை. 21ஆம் திகதி எங்களுடைய மேடையில் இதுபோன்ற யாரும் இல்லை. மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் விவகாரத்தில் என் பெயரை எல்லா இடங்களிலும் இவர்கள் சம்பந்தப்படுத்தினார்கள். இறுதியில் அதுவும் பெலவத்தையிலேயே முடிவுற்றது. பாதுகாப்பு செயலாளர் ஐந்து பேரை வெளிநாட்டில் இருந்து கைது செய்வதாகச் சொன்னார். இதைப் பாராளுமன்றத்தில் சொல்ல வேண்டியதில்லை, இதனை நீதிமன்றில் சொல்லுங்கள் என்றார். தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த துமிந்த திஸாநாயக்க, முன்னாள் உறுப்பினர்கள் வந்தார்கள். 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் எங்கள் கூட்டம் பற்றிப் பேச வந்தார்கள். அரசு நாட்டு மக்களுக்கு பொய் சொல்லிக்கொண்டிருக்கிறது. அந்த பொய்யை நாட்டு மக்களுக்கு நாங்கள் வெளிப்படுத்தப் போகிறோம். இந்த நேரத்தில் நாங்கள் தேர்தலைக் கோரவில்லை. கொள்கை ரீதியாக நாம் வேறுபட்டிருந்தாலும், இந்த நேரத்தில் நாம் ஒன்றாக இணைகிறோம், நாட்டு மக்களுக்காக, அரசின் அடக்குமுறை மற்றும் பொய்க்கு எதிராக. அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இப்போது மாகாண சபைத் தேர்தல்கள் உள்ளன. அதனையும் பார்த்துக்கொள்வோம். அன்றைக்கும் அரசு மீண்டும் 3% ஆதரவுக்குத் தள்ளப்படுவார்கள். யாருமே தெருவுக்கு வராதீர்கள் என்று சொல்லும் இவர்கள்தான், அன்று இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அனைவரையும் தெருக்களில் இழுத்து வந்து, எல்லாவற்றையும் நாங்கள் தருகிறோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். அரசு, 'எங்களை வீழ்த்த முடியாது, நாங்கள் வீழ மாட்டோம்' என்று கூறுகிறது. இப்போது யார் சொன்னார்கள், 'அவர்களை வீழ்த்துவோம்' என்று? நாங்கள் 'அவர்களை வீழ்த்துவோம்' என்று சொல்லவில்லை. அவர்கள் பயத்தில், 'எங்களை வீழ்த்த முடியாது' என்று கூறுகிறார்கள் என்றார். பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு நாமல் ராஜபக்ஷ | Virakesari.lk
-
யாழ்ப்பாணத்தில் வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து - இளைஞன் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ் . நகரில் பணியாற்றி வரும் நிலையில் , கடந்த 06ஆம் திகதி பணி முடிந்து , தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்துக்களான நிலையில் , படுகாயங்களுடன் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து - இளைஞன் உயிரிழப்பு! | Virakesari.lk
-
மாவீரர் நாள் சைக்கிள் கட்சிக்கான ஒன்றல்ல - யாழ் மாநகர சபையில் கடும் வாக்குவாதம்
11 Nov, 2025 | 04:17 PM நவம்பர் 27 நினைவு நாளை கொண்டாட ஒற்றுமையாக வாருங்கள் இல்லையேல் இரு தரப்பினருக்கும் நல்லூர் பகுதி நிலம் வழங்கப்படாது என முதல்வர் மதிவதனி தெரிவித்துள்ளார். யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற நிலையில் நல்லூர் மேற்கு வீதியில் இருக்கும் காணி நிலத்தில் நினைவேந்தல் செய்வதற்கு வழங்குவது தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இதன்போது சைக்கிள் கட்சி மற்றும் மான் கட்சி ஆகியனயார் நினைவேந்தலை குறித்த இடத்தில் நடத்துவது என்று கடும் வாதப் பிரதிவாதம் நடைபெற்றது. குறிப்பாக சைக்கிள் கட்சிக்கு மட்டும் நினைவேந்தல்கள் செய்யும் உரிமை கிடையாது. அனைத்து தமிழ் தேசித கட்சிகளுக்கும் அதனை நினைவேந்த உரிமை உண்டு. இதே நேரம் வருடா வருடம் சைக்கிள் கட்சி தரப்பினரே திலிபனின் நினைவு நாள், மாவீரர் நாள் போன்றவற்றை குத்தகைக்கு எடுத்து செய்வது போன்று அடாத்தாக முன்னெடுக்கின்றனர். இதை ஏற்க முடியாது. இந்நிலையில் குறித்த விடையத்தில் ஒற்றுமை இன்மையால் தான் இரு பிரிவாக நிகழ்வுகள் இரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் கீழ்த்தரமான நிகழ்வு நடக்கின்றது. அதன்படி நினைவேந்தல் நிகழ்வை நடத்த குறித்த காணியை மான் கட்சி தரபினர் இம்முறை குத்தகைக்கு கோரியுள்ளனர்.ஆனால் சைக்கிள் தரப்பினர் அதனை ஏற்க இயலாதவர்களாக குழப்பங்களை உருவாக்கி வருகின்றனர். எனவேதான் சபை ஏற்கனவே இரு தரப்பினரையும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து நிகழ்வை நடத்துவது யார் என்று முடிவை தெரிவிக்குமாறு கோரியிருந்தது. ஆனால் குறித்த காலப்பகுதியில் இரு தரப்பினரும் எந்தவொரு பதிவையும் எம்முடன் முன்னெடுக்கவில்லை. இதனால் முடிவை சபையே எடுக்க நேரிட்டுள்ளது. குறித்த விவாதத்தை ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சி புறக்கணித்திருந்த நிலையில் காணியை இரு தரப்புக்கும் வழங்குவதில்லை என்றும் பொது இணக்கபாட்டுடன் தேசிய பரப்பில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்த முன்வந்தால் அதற்கு இடம் கொடுக்கப்படும் என்றும் முதல்வரால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மாவீரர் நாள் சைக்கிள் கட்சிக்கான ஒன்றல்ல - யாழ் மாநகர சபையில் கடும் வாக்குவாதம் | Virakesari.lk