Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோமாக்கள் - அந்நியர்கள் ஆக்கப்பட்ட வரலாறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]ரோமாக்கள் - அந்நியர்கள் ஆக்கப்பட்ட வரலாறு[/size]

[size=5]நந்தின் அரங்கன் [/size]

அண்மையில் வந்த ஒரு சொல்வனம் இதழில் அ.முத்துலிங்கம் குறித்து வெங்கட் சாமிநாதன் கட்டுரையொன்று எழுதியிருந்தார், “ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்”. அதில் வெங்கட் சாமிநாதன், “தமிழும் அழிந்துதான் போகும். ஒரு சில மில்லியன் பேரே பேசும் மால்டீஷ், (மால்டா), திவேஹி (மாலத்தீவு), ஐஸ்லாண்டிக் (ஐஸ்லாந்து) இவையெல்லாம் அழியாது. ஆனால் தனக்கென ஒரு நாடு இல்லாத தமிழ் அழிந்துவிடும்” என்று சொல்லும் இராக்கியை மேற்கோள் காட்டுகிறார் (’சுவருடன் பேசும் மனிதர்’ என்ற அ.முத்துலிங்கம் எழுதிய சிறுகதை). அ.முத்துலிங்கமோ, வெங்கட் சாமிநாதனோ ஒவ்வொரு மொழிக்கும் ஒரு நிலப்பரப்பு இருப்பதென்பது சாத்தியமில்லை என்பதை அறியாதவர்களல்ல. தமிழ் மீது கொண்ட அக்கறையால் மட்டுமே இதைப் பேசுவதாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்தத் தர்க்கத்தை நீட்டித்துச் சென்றால் தமிழகத்தில் உள்ள, தமிழகத்துக்கு உரிய. தமிழைவிடத் தொன்மையான, தமிழைவிட அழிவுக்கு மிக அருகில் உள்ள மொழிகளுக்கும் தமிழகத்தையும் துண்டாக்கித் தர வேண்டியிருக்கும்.

இன்றைய பண்பாடும், ஆட்சிமுறையும், மையத்தில் தம் அதிகாரத்தைக் குவித்து வைத்திருக்கின்றன. நம் நாகரிகம் இந்தக் குவிமையத்தை நோக்கி நம்மைச் செலுத்துவதாக இருக்கிறது. நிலத்தை வரையறையாகக் கொண்ட தேசிய அமைப்பொன்று மொழி, பண்பாடு, மற்றும் இன அடையாளங்களைக் காக்கும் என்பது எதிர்பார்ப்பு. இதில் உண்மையும் இருக்கலாம்.

ஆனால், வேலிகள் காப்பதோடு பிரிக்கவும் செய்கின்றன. புதிதாய் அமைக்கப்படும் வேலிகள் ஒரு சமூகத்தின் பெரும்பான்மை மக்களுக்குப் பாதுகாப்பளிக்கும் அதே நேரத்தில் ஒரு புதிய சிறுபான்மையினரை உருவாக்கி, அவர்களுக்கும், அவர்களுடைய மொழி, பண்பாடு, இனம் மற்றும் வாழ்வுமுறைகளுக்கும் அச்சுறுத்தலாகவும் இருக்கின்றன. இன்றைய தலைமுறைக்குச் செல்லப்பிள்ளைகளாக இருக்கும் சிறுபான்மையினர் நாளைய தலைமுறையின் வெறுப்புக்கும் காழ்ப்புக்கும் ஆளாகக்கூடிய சாத்தியத்தை நீக்க வழியில்லை. அதிகாரக் குவிமையங்களைக் குலைக்க வேண்டுமேயல்லாமல், புதிய குவிமையங்கள் உருவாவது சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது.

எங்கும் சிறுபான்மையினர் நிறைந்துள்ள இந்தியாவின் பிரச்சினைகள் வேறென்றாலும், ஒன்றுபட்ட ஐரோப்பா குறித்த விவாதங்கள் இந்திய ஒருமைப்பாட்டின் சிக்கல்களைப் புரிந்து கொள்ள ஓரளவு உதவுவதாக இருக்கின்றன. நாமறிந்த நவீனத்துவம் ஐரோப்பியக் கொடையாக இருக்கிறது. நம் சாபங்களில் பலவும் ஐரோப்பிய நவீனத்துவம் அளித்த வரங்களின் பக்க விளைவுகளே.

சல்லடைக் கண்களாய் இருந்த வேலிகள் சிறைக்கம்பிகளாய் உருமாற்றம் பெற்ற வரலாறே ஐரோப்பிய தேசியவாதத்தின் வரலாறு என்றும் சொல்லலாம். வரலாற்றில் நவீனத்துவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியோடு தேசியவாதமும் பிணைந்திருப்பது தற்செயல் நிகழ்வல்ல - பெரும்பாலும் ஐரோப்பிய காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட தேசங்கள்தான் தமக்குள்ளும் வெளியிலும் தீவிரமான எல்லைப் போர்களைச் சந்திக்கின்றன. தேசியவாதத்தின் வேர்கள் நவீனத்துவத்தில் இருக்கின்றன. நாகரிகம் வளர்ச்சியுற்று தேசியமாக உருவாகி, ஐரோப்பிய மண்ணில் எல்லைக் கம்பங்களை நட்டு, அதன் வரைபடங்களில் எல்லைக் கோடுகளைக் கீறியது. தேசியம் நிலப்பரப்புக் கோட்பாட்டைத் தழுவி, ஒரே மொழி, ஒரே சமயம், ஒரே மக்கள் என்ற ஒருமைப்பட்ட பண்பாட்டைத் தோற்றுவித்தது.

பண்பாட்டை நிலம் சார்ந்த வரைகள் கொண்டதாக நவீனத்துவ சிந்தனை கருதியது. இதையொட்டி நிலத்தில் நிறுவப்பட்ட வேலிகள், மொழிகளையும், சமயங்களையும், பண்பாடுகளையும், இனங்களையும் வெவ்வேறாக, வெவ்வேறு நிலப்பரப்புகளுக்கு உரியனவாகப் பிரித்தன. கண்முன் நிற்கும் வேலிகள், கண்ணுக்குத் தெரியாத வேலிகளுக்கு இருபுறமும் மக்களை எதிரெதிர் நிறுத்தின. இதன் விளைவுகள் மிகக் கொடுமையாக இருந்தன. இந்தப் பிரிவினையின் உச்சம்தான் போர்.

தேசியங்களுக்கு இடையான வேற்றுமையைத் தீர்க்க, போர் ஒரு பொதுமொழியாய் அமைந்ததால், இந்த தேசிய வேலிகளுக்குள் அகப்பட்ட சிறுபான்மையினர் மேல் தினமும் தொடர்ந்து போர் நிகழ்த்தப்பட்டது. அனைத்து தேசங்களிலும் இருந்ததால், அவற்றின் வேலிகளுக்குள்ளும், தமக்கென்று தேசிய உரிமை கோர எந்த நிலப்பரப்பும் இல்லாததால் தேசிய வேலிகளுக்கிடையிலும், சிக்கிக் கொண்ட ரோமாக்களின் வரலாறு ஐரோப்பிய நவீனத்துவத்தின் மீதான கடுமையான விமரிசனமாக அமைகிறது.

கம்யூனிச கிழக்காகவும், ஜனநாயக மேற்காகவும் பிளவுபட்ட ஐரோப்பா இன்று ஒருமைப்பாட்டைத் தேடுகிறது. பல்வேறு மொழிகளாகவும், தேசிய இனங்களாகவும் அறியப்பட்ட ஐரோப்பியர்கள், பொருளாதார நிர்பந்தங்களால் ஒன்றுபட்ட ஐரோப்பிய அமைப்பை உருவாக்கும் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல் நெறிமுறைகள் மட்டும் மக்களை இணைப்பதில்லை - இவற்றைத் தாண்டியும் அனைவரையும் ஒன்றுபடுத்தக்கூடிய பொதுப் பண்பாட்டை அடையாளம் காணும் முயற்சி தொடர்ந்தபடியே இருக்கிறது.

r1.jpg

பொது ஐரோப்பிய வரலாறு என்ற ஒன்றை நோக்கி இக்கால விவாதங்கள் செல்வதாக இருக்கின்றன. வரலாற்றால் ஒன்றுபட்ட மக்களே எதிர்காலத்தை ஒருமித்த உணர்வுடன் அணுகக்கூடியவர்களாக உள்ளனர். பொதுத்தன்மை கொண்ட ஐரோப்பிய மக்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் இன்று அனைவருக்கும் பொதுவான ஒரு ஐரோப்பிய வரலாறு உருவாக்கப்படுகிறது. ஆனால், நம்மவர் என்ற பேச்சு அன்னியரை அடையாளப்படுத்துவதாகவும் இருக்கிறது. பொதுப் பண்புகளைக் கண்டறிதல், தனிப் பண்புகளை மறைப்பதாகவும் இருக்கிறது. இங்கு சட்டங்களைக் கொண்டும் அரசியல் நடைமுறைகளைக் கொண்டும் ஒருமித்த ஐரோப்பிய அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் எதிர்பார்த்திராத சிக்கல்களைச் சந்திக்கின்றன.

ஐரோப்பிய வரலாறு பல்வகைகளில் தனித்துவம் கொண்ட சமூக, அரசியல் அனுபவங்களின் தொகுப்பாக இருக்கிறது. ஒன்றுபட்ட ஐரோப்பா என்ற லட்சியத்தின் பெயரால் இவற்றைப் பின்னுக்குத் தள்ளி ஒற்றைத்தன்மை கொண்ட, அனைத்தினும் மேலாதிக்கம் செலுத்தும் வரலாற்றை எழுத முற்படுவது ஆபத்தானது. தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வரலாற்று, சமூக, பண்பாட்டு போக்குகள் பேசப்படுவதே இந்த சிக்கல்களைப் புரிந்து கொள்ள உதவுவதாக இருக்கும்.

கடந்த காலம் குறித்த வேறுபட்ட பார்வைகள் நிகழ்காலத் தாக்கம் கொண்டவை. இவை எதிர்காலத்தையும் தீர்மானிக்கக் கூடியவை. இவற்றை எப்படி எதிர்கொள்ள முடியும், தற்சார்பு கொண்ட பண்பாட்டுத் தளத்தை அமைப்பது எத்தகைய அறச் சிக்கல்களுக்கும் வரலாற்றுப் பிழைகளுக்கும் காரணமாக இருக்க முடியும் என்பதை இந்தக் கட்டுரை விவாதிக்கிறது.

ஒற்றுமையும் வேற்றுமையும்

ஐரோப்பாவின் கிழக்கையும் மேற்கையும் ஒரு பொது ஐரோப்பியக் வரலாற்றில் இணைக்கக்கூடிய “மாபெரும் கதையாடல்” இன்று முயற்சிக்கப்படுகிறது. இதை சாதிப்பது எப்படி என்பது அண்மைக் காலங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதன் அங்கமாக ஐரோப்பாவின் கிழக்கு-மேற்கு என்ற வரலாற்றுப் பிளவைக் குறித்து கேள்விகள் எழுப்பப்படுவதை நாம் இன்று காண்கிறோம். இந்தக் கேள்விக்கு அப்பாலும் ஐரோப்பிய வரலாற்றை விரித்துப் பேசத் தூண்டும் ஒரு புதிய கவனக் குவிப்பாக ஒரு கட்டுரையை யூரோஸைன் வெளியிட்டிருக்கிறது.

சரித்திர மற்றும் சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய நம் முரண்படும் புரிதல்கள் சமகாலச் சூழலில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துவனவாக இருக்கின்றன? எவ்வகையில் இவை ஐரோப்பாவை ஒரே சமயத்தில் இணைக்கவும் பிரிக்கவும் செய்கின்றன? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் எவையாக இருக்கக்கூடும் என்பதைப் பேச இந்தக் கட்டுரை ரோமாக்களின் வரலாற்றை எடுத்துக் கொள்கிறது.

நாஜி இனஒழிப்பு நிகழ்ந்த காலகட்டத்தில்தான் ரோமாக்கள் ஐரோப்பிய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இடம் பெறுகின்றனர் - இன்றைய ஆய்வுகள் இத்தகைய ஒரு முடிபை நிறுவ முற்படுகின்றன. ஆனால் இந்தப் பார்வை ரோமாக்களின் தனித்துவம் கொண்ட அறுநூறாண்டு கால வரலாற்றை அலட்சியப்படுத்துவதாக இருக்கிறது.

நீண்ட காலம் நாடோடிகளாக வாழ்ந்த ரோமாக்கள், எழுத்தைப் பயன்படுத்தும் பண்பாட்டுக்கு உரியவர்களாக இருக்கவில்லை. அதன் காரணமாகவே அவர்கள் தங்கள் வரலாற்றை ஆவணங்களாகப் பதிவு செய்யத் தவறினார்கள். ரோமாக்களின் பாரம்பரியத்தில் அதற்கான இடமில்லை. தீவிர அடக்குமுறைக்கு (persecution) ஆளாகித் தங்கள் தாய் மண்ணைவிட்டு வெளியேற்றப்பட்ட பிரஞ்சு ஹ்யூகோநாட்டுகளை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. அவர்களுடைய வரலாற்றை அணுகுவதுபோல் ரோமாக்களின் வரலாற்றை நாம் அணுக முடியாது.

ஆனால் ரோமாக்களுக்கான சான்றுகள் நம் கலைகளிலும் இலக்கியங்களிலும் காணக் கிடைக்கின்றன. குடியுரிமை கொண்ட (settled), ப்யூடலிய அமைப்பில் தன்னையும் ஒருங்கிணைத்துக் கொண்ட ஐரோப்பிய மக்கள்திரள் தனக்கு அச்சுறுத்தலாய் உணர்ந்த ஒரு வாழ்க்கை முறையை எதிர்கொண்ட அனுபவத்தை நாம் அறியக்கூடிய ஆதாரங்களாக இவை இருக்கின்றன. ஐரோப்பியர்கள் தம்மைத் தற்காத்துக் கொள்ள அமைத்துக் கொண்ட ‘திருகல்’ கதைகளும் காட்சிகளும்தான் இவை. இருப்பினும் ஐரோப்பிய ரோமாக்களின் அறுநூறு ஆண்டுகால வரலாற்று ஆய்வுக்குத் துணை செய்ய இவை போதுமான ஆதாரங்களாக இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக, இனப்பகுப்பைத் (segregation) தன் இயல்பாய்க் கொண்ட பண்பாட்டுக் கைப்பற்றுதல் (cultural appropriation) என்ற அளவில் ஐரோப்பிய வரலாற்றைப் புரிந்து கொள்ள இத்தரவுகளே போதுமானவையாக இருக்கின்றன. ரோமாக்கள் உணர்ந்த உலகின் மிச்சம் மீதிகளை அவர்களுக்கு முழுக்க முழுக்க அன்னியர்களாக இருந்தவர்களின் ஆக்கங்களைக் கொண்டே நாம் அறிமுகப்படுத்திக் கொள்ள முடிகிறது. சித்தரிக்கப்பட முடியாதவை என்று கருதப்பட்ட பகுதிகளை இவற்றைக் கொண்டுதான் நாம் கற்பனை செய்தாக வேண்டும். ஜிப்சிக்கள், ஜிக்யூனர், டோடெம், சிகானி, ஜின்ஜெனெலர் என்று பலவாறு அழைக்கப்பட்டனர் ரோமாக்கள். இவர்களைக் குறித்த புறவயப்பட்ட பண்பாட்டு விவரணைகளே நம்மிடம் உள்ளன. ரோமாக்களின் ‘அழிக்கப்பட்ட’ அடையாளங்களும், அடையாளப்படுத்தப்பட்ட பண்பாட்டு இயல்புகளும் (cultural attributes) சீரற்ற அலகுகளாகக் கிடைக்கின்றன. ஐரோப்பியப் பண்பாட்டைச் சேர்ந்தவன் தன்னை உலகில் நாகரிக முன்னேற்றத்தைப் பரப்பும் கருவியாக (civilising agent) உருவாக்கிக் கொண்டதன் மறைபகுதிதான் ஜிப்சியின் உருவாக்கம் (invention).

துவக்கம் முதற்கொண்டே ரோமாவின் நிலை தனித்துவமிக்க ஒன்றாக இருந்தது. அவர்கள் இடையே நுழைந்தவர்கள், அழையாமல் வந்தவர்கள். எனவே மறைய வேண்டியவர்கள். ‘எங்கும் மறைத்திருக்கிறார்கள்,’ புரிந்துகொள்ள முடியாத விதிகளைப் பின்பற்றி வந்து போகிறார்கள், என்பனவற்றைக் காரணங்களாகக் கொண்டு அவர்கள் தீயவர்களாகக் கருதப்பட்டனர். இது புலப்பாட்டுக்கும் எதிர்கொள்தலுக்கும், காழ்ப்புக்கும் ஈர்ப்புக்கும் சமகணம் தருவதாக இருந்தது. வெகு காலம் முன்னரே, இடைக்காலம் முதல் நவீன காலம் வரையான இடைப்பட்ட காலத்தில் ரோமாக்கள் குறித்த கருத்துகள் பழகிய வார்ப்புகள், தோற்றங்கள், வடிவமைப்புகள், நடைமுறைப் போக்குகள் மற்றும் முதற்கதைகளின் தொகுப்பாகத் தோற்றம் பெற்றுவிட்டது (A repository of stereotypes, images, motifs, behavioural patterns and legends). வேரோடு அழிப்பது குறித்த கற்பனைகள் திரும்பத் திரும்ப அழிப்புச் செயல்களாக நடந்தேறின.

துவக்கங்களின் ரகசியம்

1400-ஆம் ஆண்டையொட்டிய காலத்தில் ரோமாக்கள், வெவ்வேறு வழிகளில் ஐரோப்பா வந்தடைந்தனர். அவர்கள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து இருந்த தெளிவின்மை, ரோமாக்களை ‘ஏற்றுக் கொள்வதற்கு’ ஒரு தடையாக இருந்தது. ஜெர்மன்கள், கால்கள், ஆங்கல்கள் மற்றும் சாக்சன்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியையொட்டித் தங்கள் வருகைக்கும் ஆக்கிரமிப்புக்கும் நியாயம் கற்பித்துக் கொண்டனர். அவர்கள் தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்ளும் வகையில் தமக்குரிய தேசிய துவக்கம் மற்றும் அதிகார அமைப்பை வலுப்படுத்தும் தொன்மங்களைக் கட்டமைத்துக் கொண்டார்கள். ஆனால் ரோமாக்களைக் குறித்த முதற்கதைகள் (legends) அவர்களின் தொலைதூரத் துவக்கங்களையும் குடியேறத் தவறியமையையுமே பேசின. ரோமாக்களின் வம்சாவளி குறித்த ஊகங்கள் அவர்களை வகைமைப்படுத்த முயன்ற முதல் முயற்சிகளுக்கு வழி செய்தன. ரோமாக்களே சொல்லிக் கொண்டதுபோல், ரோமாக்கள் கிறித்துவின் காலத்தில் எகிப்தில் வாழ்ந்தார்கள் என்பதும் அவர்கள் எகிப்திலிருந்து ஐரோப்பாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என்பதும் உண்மையாக இருந்தால், ‘எகிப்தியர்கள்’ தங்கள் மூதாதையர்களின் மண்ணான எகிப்துக்கே திரும்பிச் செல்ல வேண்டும் என்பது ரோமாக்கள் அழையாமல் குடிபுகுந்த ஐரோப்பிய தேசங்களின் வாதமாக இருந்தது.

அக்காலத்தில் அடிப்படைக் கேள்வியாக இருந்த சமயச் சார்புடன் ரோமாக்களின் பாரம்பர்யம் குறித்த விசாரணை நெருங்கிய தொடர்பு கொண்ட ஒன்றாகவும் இருந்தது. ரோமாக்களின் சமுதாய அமைப்பு திருச்சபை, பாதிரியார், தேவாலயம் என்ற வகையிலான நிறுவனப்படுத்தப்பட்ட கிருத்துவத்தைப் பின்பற்றுவதாயில்லை. எனவே ரோமாக்களின் சமயம் குறித்து மூவகைப்பட்ட நம்பிக்கைகள் தோற்றம் பெற்றன.

முதன்மையான நம்பிக்கை - ரோமாக்கள் கிறித்தவ நம்பிக்கைகளை மேம்பாக்காக மட்டுமே ஏற்றுக் கொண்டனர் என்பதாக இருந்தது. பரிசுப் பொருட்களையும் ஆவணங்களையும் பெற்றுக் கொள்ள பலமுறை ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வதை ரோமாக்கள் வழக்கமாக வைத்திருந்தனர் என்று மார்டின் லூதர் உட்பட பலரும் நம்பினார்கள். ரோமாக்கள் துருக்கிய உளவாளிகள் என்ற குற்றச்சாட்டு இரண்டாம் வகை நம்பிக்கைக்கு ஆதாரமாக இருந்தது. இதனால் ரோமாக்கள் இஸ்லாமியர்களாகக் கருதப்பட்டனர். மூன்றாம் வகை நம்பிக்கை மிகத் தீவிரமானது. ரோமாக்கள் தெய்வநம்பிக்கையற்றவர்கள் (heathen), சாத்தான் சடங்குகளை ரகசியமாக நிகழ்த்தி வழிபட்டனர் என்ற நம்பிக்கைதான் அது. ரோமாக்களின் குறிசொல்லல், மருத்துவ மந்திரங்கள் மற்றும் சபித்தல்கள் இதற்கான ஆதாரங்களைத் தருவதாக எண்ணப்பட்டது. இதே காரணங்களை முன்வைத்து, மனிதர்களை உண்பவர்கள் என்ற குற்றச்சாட்டு ரோமாக்களின் மீது திரும்பத் திரும்ப சுமத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டிலும் இந்த மூன்று ஊகக் கருத்துகளும் (theories) நம்பிக்கைக்குரியனவாக இருந்தன.

ஆனால் இந்த மூன்று நம்பிக்கைகளையும் விட அறிவியலுக்கு நெருக்கமான நான்காவது காரணம், ரோமாக்கள் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்பது. மரபியல் ரீதியான ஆராயச்சிகள் மூலம் ரோமாக்கள் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த ஜாட் இனத்தவர்கள் என்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ரோமாக்களின் மொழியில் இந்திய மொழிகளின் பல வார்த்தைகள் புழங்குகின்றன. அவர்களின் கடவுள்களுக்கு சிவன், அனுமன் என்றெல்லாம் பெயர்களிருக்கின்றன. ஆனால் இவர்கள் இவ்வாறு இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்ததற்கு வரலாற்று ரீதியான தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. கஜினிமுகமது இந்தியப் படையெடுப்புக்குப் பின் அடிமைகளாகக் கூட்டிச் சென்று அவனால் கைவிடப்பட்ட மக்களாக இருக்கலாம் என்று ஒரு யூகம் இருக்கிறது. ரோமாக்களிடையேயும் பலருக்குத் தாங்கள் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்ற நம்பிக்கை வழிவழியாக உண்டு. 2009-ஆம் ஆண்டு உறுதிப்படுத்தப்பட்ட மரபியல் முடிவுக்குப்பின் இந்த நம்பிக்கை இன்னும் தீவிரமாகத் தொடங்கியிருக்கிறது.

ரோமாக்களின் சமூக அமைப்பு மிக எளிமையான ஒன்றாகக் கருதப்பட்டது. அதன் ஆட்சியாளர்களின் குடும்ப வரலாறுகள் ஆய்வுக்குரியனவாக மதிக்கப்படவில்லை. ஒருபுறம் முத்திரை (insignia) மற்றும் உடையால் ‘அரசர்’ அல்லது ‘ட்யூக்’ என்று அடையாளம் காட்டப்படக்கூடிய ஒரு தலைமை இருந்தது. பதினைந்தாம் நூற்றாண்டிலும் இவர்கள் சுதந்திரமான சிற்றரசர்கள், பேரரசர்கள் மற்றும் போப்புகள் தங்களுக்கு அளித்திருந்த பிதுரார்ஜித (patrimony) மற்றும் பாதுகாப்பு ஆவணக் கடிதங்களை வைத்திருந்தனர். மறுபுறம் அவர்களுடைய மக்கள் இருந்தனர். இவர்கள் அதிக பட்சம் சில டஜன் நபர்கள் என்ற அளவில் மட்டுமே இருந்தனர்.

ரோமாக்களைக் கருதும்போது, தவறான அவதானிப்புகளும் அக்கறையில்லாத விவரணைகளும் கொண்ட ஒரு கவனம் குலைந்த வெளியையே இடம் பெயர்ந்தவர்களைப் பேசும் ஆவணங்களும் இலக்கியப் படைப்புகளும் உருவாக்குகின்றன என்பதை நாம் காண்கிறோம். இவற்றில் மாற்றார் விவரிக்கப்படுவதில்லை, புதிதாய்ப் படைக்கப்படுகிறார்கள்.

தேசமற்று, வீடற்று, இடமற்று

ரோமாக்கள் எந்த ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புக்கும் உரியவர்களாக இருக்கவில்லை. அவர்கள் ஐரோப்பியர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இது இன்னுமொரு தடையாக இருந்தது. பெரும்பான்மையான ரோமாக்கள் துவக்க காலங்களில் நாடோடி வாழ்க்கை முறையைக் கடைபிடித்ததால் அவர்கள் அகதிகளாகவும் யாத்திரிகர்களாகவும் அடையாளம் காணப்பட்டு, பின் விரைவில் கைவிடப்பட்டனர். மிகக் குறைவான அளவிலிருந்தாலும், நம்மிடமுள்ள தரவுகளின் அடிப்படையில் இதை அறிய முடிகிறது.

r2-1024x698.jpg

நவீன காலகட்டத்தின் துவக்கங்களில் தேசிய நிலப்பரப்புக் கோட்பாடு வலுப்பெற்றது. அதன் அடித்தளமாக இருந்த நிலப்பரப்பு சார்ந்த சிந்தனை அமைப்பு ரோமாக்களின் வாழ்க்கை முறையை குலைவுத் தன்மை கொண்டதாக எண்ணி அச்சமுற்றது. ஏனெனில், ரோமாக்கள் சமூக, சட்ட, பொருளாதார, பண்பாட்டுப் பிணைப்புகளிலிருந்து தங்களைத் துணித்துக் கொள்ள முற்பட்டனர். நிலம் உட்பட, பூமியில் உள்ளவை அனைத்தும், யாரோ ஒருவருக்கு உரியது என்றும், எதற்கும் உரியவர் ஒருவர் உண்டு என்றும் நவீன நிலப்பரப்புச் சிந்தனை கருதலாயிற்று. இதனால், இயல்பாய் அமைந்த நிலப்பரப்புடன் உணர்வு அடிப்படையிலான சுய அடையாளம் நிலைபெற்றது.

“ஹெய்மத்” (அகம்) என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜெர்மானியக் கோட்பாடு இதன் உச்சத்தைத் தொடுவதாக இருந்தது. ‘சொத்து’, ‘அகம்’ போன்ற தற்சார்பில் எழும் உணர்வுகளின் தன்மைகள் சட்டத்தாலும் அதிகாரத்தாலும் நிறுவப்பட்டு, அத்தாட்சியளிக்கப்பட்டு, அதன் எல்லைகள் வகுக்கப்பட்டு வரைமுறைப்படுத்தப்பட்டாக வேண்டும் என்ற நிலை உருவாயிற்று. தனக்குரிய வாழ்க்கை முறையே இயல்பு நிலையின் முழுமையான வரையளவாக அறியப்படுவதை உறுதி செய்யும் புரிதலாக நிலப்பரப்புக் கோட்பாடு மாற்றம் பெற்றது. இப்படிப்பட்ட சூழலில் தெருக்கள், தரிசுகள், மக்களற்ற வனாந்தரங்கள், ஐரோப்பிய நாகரிகத்தின் வாழமுடியாத விளிம்புகளாக உள்ள சதுப்புகளும் பாலைகளுமன்றி வேறெங்கு ரோமாக்களுக்குரிய இடம் தரப்பட முடியும்?

ஐரோப்பிய நிலஅமைப்பு குறியீட்டு வலுப்பெறலும் நிலப்பரப்பு சார்ந்த புதிய அதிகார அமைப்பும் ரோமாக்களின் ஒதுக்கத்தை அதிகரித்தன. பொதுவாகச் சொன்னால், பல தலைமுறைகளாக குறிப்பிட்ட ஒரு புவி ஆரத்தையொட்டி அவர்கள் வாழ்ந்திருந்தாலும் தமக்கென்று ஒரு அகமோ இடமோ அற்ற அன்னியர்களாக மட்டுமே அறியப்பட்டனர். 1650க்கும் 1750க்கும் இடையே நிலப்பரப்புச் சிந்தனை ரோமாக்களுக்கு எதிரான அரசமைப்பின் பயங்கரவாதமாக மாறிற்று. ‘ஊர்சுற்றிகள்’ என்று கேவலப்படுத்தப்பட்ட ரோமாக்கள் பெரும்பாலான அரசுகளில் இனியும் அனுமதிக்கப்படவில்லை. எல்லைகள் சிலவற்றில் அவர்களுக்காகவே தனியாக ஜிப்சி பலகைகள் அமைக்கப்பட்டன. வாசிக்கத் தெரியாதவர்களுக்கான அந்தப் படங்கள் அத்துமீறி நுழைபவர்களுக்காகக் காத்திருக்கும் தண்டனைகளைப் படம் போட்டுக் காட்டின: அடித்தல், சூடு வைத்தல் என்று துவங்கி முறி சக்கர மரணம் வரையான அனைத்தும்.

தேசிய நிலப்பரப்புகளுக்குள் நுழையக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்த துன்புறுத்தல்களுக்கும் வெளியேற்றங்களுக்கும் காரணமாயின. இதனால் தொலை நோக்கு திட்டமிடல் ரோமாக்களுக்கு சாத்தியமில்லாமல் போனது. நடைமுறையில் ஏழ்மையாலும், சத்துணவுப் பற்றாக்குறையாலும் உடல்நலமின்மையாலும் ரோமாக்களின் ஆயுட்காலம் குறைபட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில், ஸ்பெயின், மரியா தெரஸியா மற்றும் இரண்டாம் ஜோசப்பின் ஆஸ்திரியா போன்ற தேசங்கள் கட்டாயக் குடியமர்த்தலால் ரோமாக்களின்பால் நிலபரப்புக் கோட்பாட்டைத் திணிக்க முயன்றன. இந்த நடவடிக்கைகள் நாடோடி வாழ்க்கை முறையைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. தங்கள் மொழியைக் கைவிட்டு கத்தோலிக்க சமயத்தை ஏற்கும்படி ரோமாக்களைக் கட்டாயப்படுத்தின.

ஜிப்ஸி கூடாரங்களுக்கும் அதன் அச்சுறுத்தும் மக்களுக்கும் இருந்த உருவம் ‘அகம்’ என்பதைத் தலைகீழாக்கியது. காடுகளில் உள்ள திருடர்களின் குகைகளிலிருந்து ஐரோப்பாவின் தென்கிழக்கு பாலைகளின் ரோமா க்ரால்கள் (கூடாரங்கள்) வரையும், ஸ்பானிய கிடானோக்களின் குகைக் குடியிருப்புகள் முதல் ஆஷ்விட்ஸ்-பிர்கனாவில் தனித்து அமைக்கப்பட்ட ஜிக்யூனர்டாகர் வரையும் ரோமாக்களின் வசிப்பிடங்கள் விரிந்திருந்தன. அவர்களின் வாழ்விடங்கள் மரியாதைக்குரிய தனித்துவம் கொண்டவையாகவும் நினைக்கப்படவில்லை, பாதுகாக்கப்படவேண்டிய மதிப்பு கொண்ட பண்பாட்டு சொத்துகளாகவும் நினைக்கப்படவில்லை. மாறாக அவற்றின் அழிப்பை நாகரிகப்படுத்தும் செயலாக எண்ணற்ற இலக்கியப் படைப்புகள் போற்றின.

‘அழகிய ஜிப்ஸி’ என்ற படிமம் ஐரோப்பியப் பண்பாட்டுக் கருத்தோட்டத்தில் ஆற்றல் மிக்க ஒன்றாக உள்ளது. அது ஐரோப்பிய ரொமாண்டிக் கற்பனையின் விளைவோ, ஆங்கில விக்டோரிய இலக்கியத்தின் விளைவோ அல்ல. செம்பிராக்களும் எஸ்மரல்டாக்களும் கார்மன்களும்தான் நம் பண்பாட்டு நினைவில் அழிக்கமுடியாதபடி நிலைபெற்றுள்ளனர் என்றாலும் இதுதான் உண்மை. 1613ல் செர்வான்டஸ் எழுதிய லா ஜிடரில்லா என்ற குறுநாவல் ‘ஸ்பானிஷ்’ உடையை நினைவு கூர்ந்திருந்தது, தன்னடக்கத்தால் கட்டுப்படுத்தப்படாத ‘தறிகெட்ட’ பெண்மையும் ஆடலும் பாடலும் நமக்குப் பழகிப் போனவை- இவை பின்னர் பரவலாக விரும்பப்பட்டன. ‘அழகிய ஜிப்ஸிக்களை’ எதிர்கொள்ளுதலை நினைத்துப் பார்க்கும் இந்தக் கதைகளில் கவனிக்கத்தாக அம்சம் வேறொன்று: அவர்கள் பெரும்பான்மை சமூகத்தின் ஆண்களை மணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. இந்தப் பெண்கள் தங்கள் நாடோடி வாழ்க்கை முறையை நிரந்தரமாகக் கை விடுவதுமில்லை. பொதுவாக அவர்கள் வாழ்வின் கதையாடல் உச்சத்தைத் தொட்டு நிறைவடையாமல் முடிகிறது. பொறாமை மேலிட்ட தங்கள் காதலர்களின் கைகளில் இறக்கிறார்கள், அல்லது, சிறையனுபாவமாக உணரப்படும் நாகரிக சமுதாயத்தில் சோபையிழந்து வாடி மறைகிறார்கள்.

கீழை மற்றும் அன்னியப்பாட்டின் ஈர்ப்பைப் பேசும் கதையாடல்களுக்குரிய பொது இயல்பு இது: அவற்றையொத்த “அழகிய ஜிப்ஸி’ ஆணின் பாலுணர்வு விழைவை நிறைவு செய்யும் இலக்காக மட்டுமே இருக்கிறது. பூர்ஷ்வாக்களுக்கு எதிரான நடத்தை, ‘இயல்பான’ பெண்மை, அச்சுறுத்தும் கட்டற்ற தன்மை, ஒழுக்கமின்மை, ஏன், சிறுபிள்ளைக் காதல் கனவுகளும் அவள்மேல் ஏற்றப்படுகின்றன. ‘அழகிய ஜிப்ஸி’ மிக நெருக்கமான பொழுதுகளிலும் ரகசியமானவள், அடையப்பட முடியாதவள், அவள் மறைக்கப்பட்ட, நாகரிகமற்ற அமைப்பினுள்ளோ விலங்கு வட்டத்தினுள்ளோ பின்வாங்கிக் கொள்கிறாள் - இதனால் அவள் தன்னை வேற்றாளாக்கிக் கொள்கிறாள். ஷந்தலா (1889) என்ற ஆகஸ்ட் ஸ்ட்ரின்ட்பர்க்கின் கதையின் நாயகன் குழந்தைப் பருவத்தைக் கடக்காத ஒரு இளம் ஜிப்ஸியுடனான பாலுறவு அனுபவத்தை விவரிக்கிறான்:

“அவன் ஒரு விலங்கைக் கட்டியணைத்திருந்தான். அணைப்புக்குப்பின் அந்த விலங்கு அவனை ஒரு பூனையைப் போல் முத்தமிட்டது. நச்சுக் காற்றை சுவாசிக்க அஞ்சினாற்போல், அந்த உதடுகளின் விலங்கு ஆன்மாவைச் சந்திக்க அவனது ஆன்மா அஞ்சியதுபோல், அவன் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.”

இக்கட்டுரை எழுத உதவியாக இருந்த யூரோஸைன் கட்டுரைகள்:

1.http://www.eurozine.com/articles/2011-02-28-eurozine-en.html

2.http://www.eurozine.com/articles/2012-02-24-bogdal-en.html

http://solvanam.com/?p=20520

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமூகப் பிறழ்நிலை

ஐரோப்பியர்களின் சுய அடையாளம் ரோமாக்களின் தனி அடையாளத்தை மறுப்பதாக இருந்தது. என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம். ஐரோப்பிய நாகரிக வளர்ச்சியில் வெவ்வேறு தேசங்களுக்கும் உருவான தன் அடையாளம் மாற்றாருக்கு எதிரான அடக்குமுறைச் சாதனமாகவே செயல்பட்டது. ஆனால் இந்த நிலையிலும் தங்களைத் தங்களுக்குரிய இடத்தில் இருத்திக் கொள்ளக்கூடிய தனி அடையாளத்தை ரோமாக்கள் உருவாக்கிக் கொள்ளவேயில்லை. எங்கும் அடையாள இழப்பு அதிகார இழப்பாகவே இருந்தது.

ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக்கும், அந்த வரலாற்றை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் பிணைத்துக் கொள்ளவும் ரோமாக்கள் உடன்படவில்லை என்பது இந்த அடையாள இழப்புக்கு ஒரு முக்கியமான காரணம். ஐரோப்பாவெங்கும் அவர்கள் சுற்றித் திரிந்தார்கள். தேசம், அதையொட்டிய இன, சமூக அடையாளம் என்ற அமைப்புக்கு ரோமாக்களின் இந்த வாழ்வுமுறை ஒரு அச்சுறுத்தலாக இருந்தது. ஆகவே ரோமாக்களின் தனி அடையாளம் மறுக்கப்பட வேண்டியதாயிற்று..

ரோமாக்கள, முன்நவீன ஐரோப்பிய சமூக அமைப்பின் படிநிலைக்கு வெளியே, தாழ்நிலையில், நாடோடிகள் என்ற அளவில் இருத்தி வைக்கப்பட்டனர். கிடைக்கும் வேலையைச் செய்து பிழைப்பவர்கள், பிச்சைக்காரர்கள், திருடர்கள் என்ற முகமற்ற கூட்டத்தில் ரோமாக்களின் தனி அடையாளம் மறைக்கப்பட்டது. தேசிய இனங்களாகப் பிரிந்த ஐரோப்பிய அரசியல் அமைப்பில் ரோமாக்களின் இன அடையாளம் மொத்தமாகவே அழிக்கப்பட்டது. ஏனைய மக்களைப் போல் பொதுப் பாரம்பரியமும் இயல்பும் கொண்ட இனமாக ஐரோப்பியர்களால் இனியும் ரோமாக்கள் கருதப்படவில்லை. மாறாக ரோமாக்களின் செயல்பாடுகள் சமூகப் பிறழ்வும் குற்றத்தன்மையும் கொண்ட பின்னணியின் வெளிப்[பாடுகளாகப் புரிந்து கொள்ளப்பட்டன.

உதாரணத்துக்கு, ஜெர்மனியில் 1510ல் பதிப்பிக்கப்பட்ட "லிபர் வாகடோரம்" என்ற பிரசுரம், பிழைப்புக்காக இடம் மாறும் ஏழைகளை வெவ்வேறு திருட்டுச் சங்கங்களையும் பிச்சைக்காரர் சங்கங்களையும் சேர்ந்தவர்களாக வகைமைப்படுத்தி விவரிக்கிறது.[1] பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் குற்றவாளிகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்ட சுவரொட்டிகளை இதன் நீட்சியாகப் பார்க்கலாம். குற்றவாளிகளைக் குறித்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொகுக்கப்பட்ட உளவியல் கோப்புகளும் இத்தகையவையே. உடல் மற்றும் அது சார்ந்த உளச் சீரழிவே குற்ற மனநிலைக்குக் காரணம் என்ற 1900ஐ ஒட்டி எழுந்த கிரிமினல் பயாலஜியின் கோட்பாடுகளுக்கும் இந்த மனச்சாய்வு உண்டு.

இத்தகைய அறிவுப்புலத்தில் ரோமாக்களின் வேறுபட்ட புறத் தோற்றமும் பழக்க வழக்கங்களும் வெற்றிகரமாகத் திருத்தி எழுதப்பட்டன : இயல்புத்தன்மை இருட்டடிக்கப்பட்டு, குற்றப்பின்னணி கொண்ட, ஒட்டுண்ணி வாழ்க்கை வாழும் கூட்டங்களுக்குரிய அடையாளங்களாக ரோமாக்களின் தனியடையாளங்கள் மாற்றம் கண்டன. தனி அடையாளமற்ற ரோமாக்கள் குற்றவாளிக் கூட்டத்தில் சேர்க்கப்பட்டுத் தொலைந்து போயினர். குற்றவாளிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் பிறப்பிலேயே சட்டத்தை மீறுபவர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதை இந்த பிம்பம் நியாயப்படுத்துவதாக இருந்தது..

ரோமாக்கள் ஒவ்வொருவரும் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். ஆண்கள் மட்டுமல்ல, கிழவிகளும், பெண்கள் மட்டுமல்ல குழந்தைகளும் ஒவ்வொரு இயல்பு கொண்ட குற்றவாளிகளாக அறியப்பட்டனர். திருடுதல், ஏமாற்றுதல் போன்ற குற்றங்களுடன் குழந்தைகளைக் கடத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் அன்று முதல் இன்று வரை ரோமாக்களைத் தொடர்கின்றன - மொத்தத்தில், பெரும்பான்மை மக்கள்திரளின் பாரம்பரியத்தைக் குறுக்கிட்டுக் குலைத்துச் சீரழிப்பவர்களாக ரோமாக்கள் அஞ்சப்பட்டனர்.

r11.jpg

அறிவியலின் விளக்கவுரை

ரோமாக்கள் எங்கிருந்து வந்தனர், அவர்களுடைய மொழியின் வேர்கள் எவை என்பன குறித்த ஐரோப்பாவின் முன்நவீன காலகட்ட ஊகங்களுக்கு பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விளக்கம் கிடைத்தது. அறிவியல் அடிப்படையிலான மானுடவியல் ஆய்வுகளும் மொழித்துறையின் வரலாற்று ஆய்வுகளும் ரோமாக்களின் மொழி தனித்துவம் கொண்டதாக இருப்பதையும், அதன் வேர்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதையும் தெளிவாக நிரூபித்தன. ரோமாக்களின் இந்திய வேர்கள் குறித்த கண்டுபிடிப்பு ஐரோப்பியர்கள் மத்தியில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மொழியியல் ஆய்வுகள் ரோமாக்கள் ஐரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்த பாதையை சந்தேகத்துக்கிடமின்றி வரையறுக்க உதவின. ஜெர்மனியில் இது குறித்து வெளியிடப்பட்ட ஆய்வு ஆவணங்கள் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டன, மொழிபெயர்க்கப்பட்டும் மாற்று வடிவில் எழுதப்பட்டும் இத்தகவல்கள் பரவலாக அறியப்பட்டன.

அறிவொளி காலகட்டத்தைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர்கள், “இந்தோ-ஜெர்மானிய” இனத்தையும் மொழியையும் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் என்ற அளவில் ரோமாக்களுக்கு ஒரு அடையாளம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து ஜிப்ஸிக்கள் ஒழுக்கமற்ற கூட்டமாகக் கருதப்படாமல் அதைவிட உயர்ந்த சமூகப் படிநிலையில் இருத்தப்பட வேண்டும் என்பது அவர்களது முடிவாக இருந்தது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டிருந்த தனி மொழி ஒன்றுக்கு உரியவர்களாக இருந்ததே ரோமாக்களின் மிக முக்கியமான கலாசாரச் சொத்தாக இருந்தது- ரோமாக்களின் மொழி அவர்களுக்கு ஏற்றமளிக்கும் கலாசாரக் குவையாக மானுடவிலாளர்களால் கருதப்பட்டது. அடுத்த சில பத்தாண்டுகளில் ரோமாக்களைக் குறித்த அறிவுபூர்வமான புரிதலும் வகைமைப்படுத்தலும் கல்வி வட்டங்களில் சாத்தியப்படும் என்பதற்கான அறிகுறிகள் புலப்பட்டன; புனைவுகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இதற்கான முன்னோட்டங்கள் தென்பட்டன. இவற்றில் மிக முற்போக்கான சிந்தனைகள் ரோமாக்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டுமென்று மென்குரலில் சுட்டின.

ஆனால் நீண்ட கால வரலாற்றில் இத்தகைய போக்குகளால் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை. ஒரு நிலப்பரப்பைத் தம் உடைமையாய் காப்பாற்றி அதில் பயிர் செய்யும் திறன், அரசு மற்றும் நிர்வாக அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளும் திறன், எழுத்துப் பண்பாட்டு வளர்ச்சி - இவை முக்கியத்துவம் பெற்றன. அந்நாளைய மானுடவியலின் பார்வையில் குறிப்பட்ட ஒரு மக்களின் நாகரிகத்தைத் தீர்மானிக்கும் அலகுகளாக இவை உருப்பெற்றன. பொருட்படுத்தத் தக்க ஒரு உதாரணத்தைச் சொல்வதானால், பாஸ்க்குகள் தங்கள் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்து தங்கள் “அடையாள அரசியலை’ ஒரு புதிய தளத்துக்கு முன்நகர்த்திச் சென்றனர். ரோமாக்கள் இத்திசையில் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

ரோமாக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கம் கொண்ட முரட்டுத்தனமான குடியிருப்புத் திட்டங்கள் ஒரு சில உருவாகவும் அறிவொளி காலகட்டத்து சிந்தனையாளர்கள் காரணமாக இருந்தனர். ஆனால், ரோமாக்களைத் தங்களுடன் சமதளத்தில் ஒருங்கிணைத்துக் கொள்வதற்கு மாறாக ஐரோப்பாவின் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினருக்கு இணையான வாழ்க்கைத் தரத்துக்கே அவர்களை ‘உயர்த்த’ முயற்சித்தனர்.

பல காரணங்களால் அவர்கள் இந்த முயற்சியில் தோல்வியடைந்தனர். ரோமாக்களின் வாய்மொழியை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டம் இத்தகைய இணைப்புத் திட்டங்களில் மிக முக்கியான ஒன்று. நாடோடிக் குழுக்களுடன் அவர்கள் தொடர்பு வைத்துக் கொள்வதைத் துண்டிப்பதற்கான ஒரு முயற்சி இது.. இவையனைத்தும் தொல்வியுற்றதும், தர்மசிந்தை படைத்த சீர்திருத்தவாதிகளின் பார்வையில், ரோமாக்கள் நாகரிக சாத்தியங்கள் இல்லாதவர்களாய் உறுதிப்படுத்தப்பட்டனர். அனைத்து வகைகளிலும் முன்னேற்ற முடியாதவர்கள், எத்தகைய பண்பாடும் இல்லாதவர்கள் ரோமாக்கள் என்ற கருத்து வலுப்பட்டது.

இதன்பின் மானுடவியலின் புரிதல்கள் முக்கியத்துவம் இழந்தன. அவற்றுக்கு மாற்று விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மொழி குறித்தும் இத்தகைய ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டது : ஜெர்மானிய மொழியியலாளரும் எழுத்தாளருமான குஸ்டாவ் ஃப்ரைடாக் எழுதியது போல், ”நம்’ மொழியுடன் ரோமாக்களின் மொழிக்குத் தொடர்பு இருந்தாலும், அது ‘புனிதமான சமஸ்கிருதத்தின் சீரழிந்த பெண்ணைப் போன்றது’ என்ற கருத்து வேரூன்றியது.. மேலும், தங்கள் தாய் நாடான இந்தியாவில் சுத்தமற்றவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் தாழ்ந்த சாதியினரான ரோமாக்கள் கருதப்பட்டனர் என்ற காரணமும் ரோமாக்களை விலக்கி வைக்கத் துணை செய்தது.. மானுடவியலாளர்களின் இனப் படிநிலையின் தாழ்ந்த மட்டத்தில் இருத்தப்பட்ட ஹோட்டன்டாட்டுகள், நீக்ரோக்கள், படகோனியர்கள் வரிசையில் திரும்பவும் ரோமாக்கள் ஒழுங்கற்ற, கேவலமான குடியினர் என்ற அடையாளத்துடன் இணைக்கப்பட்டனர்.

ஆக, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி முப்பது ஆண்டுகளில் ரோமாக்கள் குறித்து இருந்த விலகலும் அறியாமையும் குறைந்தன, ரோமாக்களின் துவக்கங்கள், பழக்க வழக்கங்கள், மொழியின் வேர்கள் குறித்து தொடர்ந்து அதிகரிக்கும் புரிதலுக்கு இடமிருந்தது. ஆனால் மேலும் துல்லியமானதாகவும் நம்பத்தகுந்ததாகவும் இருந்தாலும், இந்த அறிதல் ரோமாக்கள் குறித்த வேறுபாட்டைக் குறைக்காமல் அதிகரிக்கவே செய்தது. ரோமாக்களின் வேற்றுத் தன்மையை முன்நவீன காலத்து அறிவியல் வலியுறுத்துவதாக இருந்தது, அடிப்படையான நாகரிக வேற்றுமைகளைக் காரணம் காட்ட அறிவியல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்பின், ரோமாக்களுடனான தொலைவைக கொண்டே ஐரோப்பிய நாகரிக வளர்ச்சி கணக்கிடப்பட்டது. ஜிப்ஸிகளுடன் ஒப்பிட்டு கிழக்கு ஐரோப்பாவின் மிகவும் ‘பின்தங்கிய’ மக்களும் தங்களைத் தேற்றிக் கொண்டனர். தங்களைவிடத் தாழ்ந்த மக்கள் இருப்பதான கற்பனை அவர்களுடைய தன்னம்பிக்கையைக் காப்பாற்றியது.

கற்பனாவாதத்தின் ஈர்ப்பு

ஐரோப்பிய கற்பனாவாதமும் கற்பனாவாத காலகட்டத்துக்குப் பிந்தைய இசைப் படைப்புகளும் ஓவியங்களும் ‘சந்தோஷமான ஜிப்சி வாழ்க்கை முறை’ என்ற கருத்து பரவலான கவனம் பெற்றதில் பெரும்பங்காற்றின. 1838ம் ஆண்டில் நிக்கொலாஸ் லீனாவ் எழுதிய டி ட்ரை ஸிகொய்னர் (Die drei Zigeuner) என்ற கவிதை பல்வேறு இசை வடிவங்களாய் உருப்பெற்றது. நாளெல்லாம் புகை பிடித்துக் கொண்டும் வயலின் இசைத்துக் கொண்டும் உறங்கிக் கொண்டுமிருக்கிற அதன் நாயகர்கள் ஜிப்ஸி வாழ்க்கை முறையின் குறியீடுகளாக மாறினர். கற்பனாவாதக் கலைஞர்கள் அறிவொளி கால மானுடவியலையும் மொழிவரலாற்றையும் வாசித்து உள்வாங்கிக் கொண்டனர். ரோமானி மொழியைக் கற்க விரும்பினர். அவர்களது நோக்கம் தங்கள் ஆதர்சங்களை அவர்களுக்கு இயல்பான காட்டுவெளியில் சந்தித்து அவர்களின் ரகசியங்களைத் தெரிந்து கொள்வதாக இருந்தது.பரவலாக அறியப்பட்ட பெருங்கதைகளிலும், தொல்தன்மை கொண்டவற்றிலும் அமானுடத் தன்மை வாய்ந்தவற்றிலும் பூர்ஷ்வாக்களுக்கு எதிரான கிளர்ச்சியிலும் ஆர்வம் கொண்ட கற்பனாவாத காலகட்டத்தில் ஏராளமான ஆக்கங்களில் பல்வகைப்பட்ட ஜிப்ஸி பாத்திரங்கள் படைக்கப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்ககட்ட எழுத்தாளர்கள் ஜிப்ஸிக்களால் மறைத்து வைக்கப்பட்ட ஒரு ரகசிய வெளியைக் கற்பனை செய்தார்கள். கண்ணுக்கு மறைவான ஒரு காட்டுவெளி. ஜிப்ஸிகளின் கரிய ஆன்மாவில் ஓர் ரகசியம் - நவீன தொழில்மய சமுதாயத்தில் தொலைக்கப்பட்ட சொர்க்கம், சுயேச்சையான வாழ்வெனும் தீவு.

r2.jpg

இருப்பதற்கும் இல்லாததற்கும், சாமானியத்துக்கும் அதிசயத்துக்கும், அவலட்சணத்துக்கும் அழகுக்கும் இடையிலுள்ள, உறவைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. கற்பனாவாதக் கவிஞர்கள் தங்களைக் கலைக் கண் கொண்டு புதிதாய்த் தரித்துக் கொண்டனர். ஜிப்ஸி வாழ்க்கை என்று தாங்கள் நினைத்த வாழ்க்கை முறையோடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலக் கட்டத்தில் கலைஞர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர் . இவர்கள் தங்களை லா பொஹிமெ என்றும் பொஹிமியர்கள் என்றும் அழைத்துக் கொண்டனர். இவர்களுடைய லட்சியவாத, மிகையுணர்ச்சி விவரிப்புகள் ஜிப்ஸி கற்பனாவாதம் என்ற வடிவம் பெற்றது.

இந்தக் கற்பனாவாத எழுத்தாளர்கள் ஜிப்ஸிக்களை தொழில்மயமாக்கப்பட்ட நவீன நிகழ்காலத்தில் பேசவில்லை. மாறாக, தொழில்மய உலகுக்கு முந்தைய காலகட்டத்தின் பின்னணியில் இவர்கள் சித்தரிக்கப்பட்டார்கள். ஒரு பாழடைந்த ஸ்காட்டிஷ் கோட்டையின் இடிபாடுகளில் வாழ்ந்த வால்டர் ஸ்காட்டின் மெக் மெரிலீஸ் (Meg Merrilies) இதற்கு ஒரு உதாரணம். இந்தக் கற்பனை, மிகுந்த பயன்பாடுடைய கலைப் படைப்புகளைத் தந்திருக்கிறது; ஜிப்ஸிக்களை அழகியல் அடிப்படையில் அணுகுவதற்குத் தேவையான மிக அதிகமானதும் நிலையானதுமான உந்துதலைக் கற்பனாவாதமே தந்திருப்பதாகத் தெரிகிறது.

ஒழுக்கத்தின் தளைகளில் கட்டுண்டிருந்த நவீன சமூக அமைப்பின் விளிம்புகளிலும் அதன் இருள் பிரதேசங்களிலும் பழங்காலத்தைச் சேர்ந்த, சுதந்திரமான, அவ்வப்போது அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய ஒரு குழு இருப்பது குறித்து ஏராளமான கதைகளும் பிம்பங்களும் ஏறத்தாழ அனைத்து ஐரோப்பிய பண்பாடுகளிலும் புழங்கலாயிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஜிப்ஸிக்கள் பரவலான கேளிக்கை சாதனங்களாகினர். ஜிப்ஸி கதைகள் அடையாளம் தெரியாத அளவுக்குக் கடன்வாங்கி உருமாற்றி ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவை மிகவும் எளிய வடிவைப் பெரும்பாலும் அடைந்தன. இந்தப் படைப்புகள் ரோமாக்களைக் குறித்த அறிதலைப் பகிர்ந்து கொள்ளும் ஊடகங்களாக இருக்கவில்லை. மாறாக, பெண்ணின் காமத்தையும் பால் விழைவையும் பேசுவதற்கான ஊடகமாகவே ஜிப்ஸி கற்பனாவாதம் செயல்பட்டது. பூர்ஷ்வா ஒழுக்கம் காமத்தை முழுதாக மறைப்பதாகவும், அது முடியாத இடத்தில் தொட்டுச் செல்வதாகவும் மட்டுமே இருந்தது.

ஊடகப்படுத்தல் இந்தக் கலைப்படைப்புகளை வேற்றுமைகள் கொண்ட சமகாலத் தன்மைகளிலிருந்து விடுவித்தது. என்றாலும் ஒரு கலைப்படைப்பாய், ஜிப்ஸிக்களை நுட்பமாகவும் அடையாள வகைமைகளுக்குப் பொருத்தமானவர்களாகவும் சித்தரிப்பதற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் யதார்த்தத்தை அலட்சியப்படுத்துவதாக இருந்தது; இதனால் உயர்ந்த அழகியல் தன்மைகள் கொண்ட. புதிய புரிதலை வெளிப்படுத்தும் எழுத்துகள் மிகச் சிலவே படைக்கப்பட்டன. விரைவில் இது சுவையற்ற, போலியானதொரு நாட்டார் ஜிப்சி கற்பனாவாதமாக உருவானது. அதன் அடையாளங்களாக ஹங்கேரிய வயலின் கலைஞனும் அன்டுலேசிய ப்ளாமென்கோ நடனக் கலைஞனும் இருந்தனர். சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்ததால் புதிதாக எதுவும் உருவாகவில்லை, மொழியின் குறியீட்டு வெளியில் ஒரு வெற்றிடம் உருவானது. ரோமாக்களின் வாழ்க்கை முறையைத் திரித்துச் சித்தரிப்பதான ஒரு மாய உலகை இந்த அற்பப்படுத்தப்பட்ட ஜிப்ஸி கற்பனாவாதப் படைப்புகள் சாதித்தன. அல்லது உண்மையை மறைக்குமளவுக்கு இந்த பிறழ் சித்திரங்கள் யதார்த்தத்தின்மேல் விரிக்கப்பட்டன. யதார்த்தத்தோடு ஒப்பிட்டால் ஜிப்ஸி கற்பனாவாதம் கலையைக் கொண்டு ரோமாக்களைக் கேவலப்படுத்துவதாக இருந்திருக்கிறது.

இனவியல்- ரோமாக்களின் ஐரோப்பிய அடையாளமழிப்பு

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய இனவியல் செழுமையான வளர்ச்சி கண்டது. ரோமாக்கள் உபயோகமுள்ள முடிவுகளை அளிக்கக்கூடிய ஆய்வுப் பொருட்களாக இருந்தனர். இந்த வாய்மொழிச் சமூகம் நவீனமயமாக்கத்தை வெற்றிகரமாகத் தவிர்த்திருந்தது என்பது இனவியலாளர்களுக்குப் பயன்பட்டது. ஆய்வு முறைமைகளைத் தங்கள் நேரடிப் பார்வைக்குட்பட்ட அண்மைப் பகுதியிலேயே முயற்சித்துப் பார்க்க முடிந்தது.

தன்னார்வத்தால் ஆய்வு செய்தவர்கள் மற்றும் தொழில்முறை பண்டிதர்கள் அதிக அளவில் செயல்பட்டனர். ஐரோப்பிய ஜிப்ஸி நண்பர்கள்’ என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அது பத்திரிக்கைகளிலும் தனிக் கடிதங்களிலும் ரோமாக்களை விவாதித்தது. இதன் உச்சமாக பிரிட்டிஷ் ஜிப்ஸி கதைச் சங்கம் துவக்கப்பட்டது. அது ஜிப்ஸிக்களின் வாழ்க்கை முறையை ஆய்வு செய்து பதிப்பித்தது. இந்த அமைப்பு இன்றும் தன் ஆண்டுமலரைப் பதிப்பித்துக் கொண்டிருக்கிறது. நகைச்சுவைத் துணுக்குகள், தேவதைக் கதைகள், பழங்கதைகள் என்று ஜிப்ஸிக்களின் வாய்மொழி மரபை இனவியலாளர்கள் முறைப்படி ஆவணப்படுத்தினர். அதிக அளவில் விவாதிக்கப்பட்ட பிரான்ஸ் லிஸ்ட்டின் ஜிப்ஸி இசை வாசிப்புகள் இத்தகைய முயற்சிகளில் ஒன்று.

ஒவ்வொரு மக்களின் மதிப்பையும் அதன் சமூக அமைப்பின் கட்டமைப்பைக் கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு இனவியல் மதிப்பீடு செய்தது. அடித்தளத்தில் குடும்பத்தில் துவங்கி, குழு அல்லது குடி என்று உயர்ந்து அந்த மக்கள் அனைவரையும் பிணைக்கும் தேசம், அரசு என்று முடிவதாக அதன் மதிப்பீடுகள் இருந்தன. மானுடவியல் ஆய்வுகள் இனவியல் ஆய்வாக மாற்றம் காண்கையில் ரோமாக்கள் மக்கள் என்ற நிலையில் இருந்து பழங்குடிகள் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டனர். பழங்குடிகள் என்ற வகையில் அவர்கள் முன்நவீனத்துவர்களாக இனியும் கருதப்படுவதற்கில்லை. நாகரிகத்துக்கு முந்தைய மக்கள் தங்கள் பண்படுத்தப்படாத இயற்கை நிலையில் வாழ்பவர்கள் - ஆப்பிரிக்கர்களைப் போலவும் வட அமெரிக்க இந்தியர்களைப் போலவும். ஜிப்ஸிக்களும் வளர்ச்சியற்ற, அடித்தள சமூகங்களே என்று மானுடவியல் மற்றும் இனவியல் விவரணைகள் வரையரை செய்தன. ரோமாக்களுக்கு வளர்ச்சி சாத்தியமில்லை என்று சொல்லப்பட்டது. ரோமாக்களின் ஒட்டுண்ணி வாழ்க்கை முறை அவர்களுக்கு இடம் கொடுக்கும் மக்களுக்கு ஒரு அச்சுறுத்தல் என்று நம்பப்பட்டது..

தகவல் குறைகளும் பிழைகளும் நிறைந்திருந்தாலும் ரோமாக்களின் அந்நியத்தன்மை குறித்த சில குழப்பங்களை இனவியல் ஆய்வுகள் தெளிவித்தன. ஆனால் அவர்களுடன் இருந்த தொலைவை அது குறைப்பதாக இல்லை. மிக முக்கியமான அளவை - ‘நம்’ அளவை, ‘நம்’ உயர்ந்த நாகரிக விழுமியங்கள் - மாறவில்லை.

சுகாதாரம், மருத்துவம், உணவுப் பழக்கம் போன்ற அடிப்படைச் செயல்பாடுகளை நெருங்கி ஆய்ந்த இனவியலாளர்கள் தங்கள் பண்பாட்டிலிருந்து ரோமாக்கள் தொலை தூரத்தில் உள்ளதாகவே உணர்ந்தனர். வேறுபாட்டை நிறுவ உதவும் இனவியல் பாகுபாடுகளை மெய்ப்பிக்கும் கேள்விகளாக இவை இருந்தன. ஐரோப்பாவின் உயர் பண்பாட்டின் விளிம்பில் இருந்த மக்களாக ஜிப்ஸிக்களை இனவியல் தோற்றுவித்தது. நாகரிகமடைந்த மக்கள் எதைக் கொடுக்கிறார்களோ அதற்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டியவர்கள் இவர்கள். குப்பைக் குவியல்கள், மாசுற்ற தொழிற்சாலைகளின் வீண்நிலங்கள், மேம்பாலங்களின் கீழிருக்கும் பயனற்ற இடங்கள் என்று இன்று நாம் ஐரோப்பாவெங்கும் ஜிப்ஸிக்களுக்கான கொடுப்பினைகளாகக் காண்பதல்ல - விவசாயம் செய்யப்படாத கிராமத்து விளிம்புகள் - இங்குதான் அவர்கள் மந்தைகளாக ஓட்டிச் செல்லப்பட்டனர்.

அறிவொளி காலத்து மானுடவியல் முதல் முறை ரோமாக்களை ஐரோப்பியர் அல்லாதவராகச் செய்திருந்தால், இரண்டாம் முறை இவர்கள் புரிந்து கொள்ளப்பட்டு வகைமைப்படுத்தப்பட்ட விதம் ரோமாக்களிடம் எஞ்சியிருந்த ஐரோப்பிய அடையாளங்களையும் குலைப்பதாக இருந்தது. ரோமாக்களின் உடல், மற்றும் நடத்தைக்கு அச்சுறுத்தும் வடிவைக் கொடுக்கும் விவரணைகள் மீண்டும் தொகுக்கப்பட்டன. இனி ஜிப்ஸிக்களுக்கு ஐரோப்பாவில் இடமில்லை. இனவொழிப்பு எப்போதும் காகிதத்தில்தான் துவங்குகிறது.

r3.jpg

யதார்த்தமும் இனஅரசியலும்

அறுநூறு ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்டிருந்த ஜிப்ஸிக்கள் குறித்த பிம்பத்தை இனவாதச் சித்தாந்தங்கள் உறுதிப்படுத்தின. அவர்களைக் குறித்த ஏளனமும் சிறுமைப்படுத்துதலும் மறுவரை செய்யப்பட்டுத் தீவிரப்படுத்தப்பட்டன. அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இந்த மாற்றம் சம அளவில் நிகழ்த்தப்படவில்லை என்றாலும் ஜெர்மனியிலும் ஏறத்தாழ அனைத்து மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பௌதிகம் சார்ந்த குற்றவியல் கோட்பாடுகள் புதிய வடிவம் பெற்றன. இவை ஜிப்ஸிக்களைக் காவல் துறையும் நிர்வாகத்துறையும் தொடர்ந்து கண்காணித்து மேலும் மேலும் தண்டிக்கக் காரணமாக இருந்தன.

இருபதாம் நூற்றாண்டின் முன்பாதியில் ஏமாற்றுக்காரர்கள், திருடர்கள், குழந்தைகளைக் கடத்துபவர்கள் இணைந்த கூட்டமே ஜிப்ஸிக்கள் என்ற பிம்பம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு பரவலான முக்கியத்துவம் பெற்றது. தடயவியல் துறைகள் ஜிப்ஸிக்களைப் பிறவி குற்றவாளிகளாகக் கருதியது, அவர்கள் தங்கள் குற்ற இயல்பை பரம்பரை பரம்பரையாகப் பெற்று வருவதாக நம்பினர். ஒற்றைக் குடும்ப அலகுகளாக இல்லாமல், ஒட்டுமொத்த இனக் குழுவாகவே அவர்கள் ‘சமூக ஒழுங்குக்கு எதிரானவர்கள்”, “சமூக ஒழுக்கம் பிறழ்ந்தவர்கள்,” “வேலை செய்ய விரும்பாதவர்கள்” என்று முத்திரை குத்தப்பட்டனர். ரோமாக்கள் ஒரு இடத்திலும் நிலைத்து நில்லாததும் நோய்குறியாகக் கருதப்பட்டது.

நாஜி ஆட்சியில் இந்தக் கருத்துகள் மேலும் மேலும் சமூக வெளியை ஆக்கிரமித்தன.. ரோமாக்களை ஒட்டுமொத்தமாகக் கொலை செய்வதை நியாயப்படுத்தும் நோக்கத்தில் இந்தக் கருத்துகள் திட்டமிட்டுப் பிரசாரம் செய்யப்பட்டன. ரோமாக்களைப் பற்றிய அறிதல் மட்டுமே அரசு வன்முறையை அவசிமாக்கப் போதுமானதாக இருக்கவில்லை. மாறாக, 1933க்குப் பின் சமூக மற்றும் அரசமைப்பு சார்ந்த வாழ்வெளியை ஒற்றைத்தன்மை கொண்ட ஒரு அறிதல் கைப்பற்றியது. அதைக் கட்டாயப்படுத்தக்கூடிய அதிகார மையம் ஒன்று உருவானதே அரசு வன்முறையைச் சாத்தியமாக்குவதாக இருந்தது. அமெரிக்காவிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி முதலே இனம், பௌதிகம் சார்ந்த குற்றவியல் மற்றும் சமூகவியல் கோட்பாடுகள் பரவலான தாக்கம் கொண்டவையாக இருந்தன. இந்த தேசங்களிலும் அடிப்படை தனி உரிமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் சமூக அரசியல் விதிகளைத் திட்டமிடவும், நடைமுறைப்படுத்தவும், நியாயப்படுத்தவும் இனவியல் கோட்பாடுகள் உதவின. இயன்ற இடங்களில் தனியுரிமைகள் முழுமையாக நீக்கப்பட்டன.

காலங்காலமாகக் கடுமையான கண்காணிப்பு இருந்தாலும், ரோமாக்கள் தொடர்ந்து விளிம்புக்குத் தள்ளப்பட்டு சட்டங்களால் தண்டிக்கப்பட்டாலும், இனவாதம் அறிவியல் பாவனைகளோடும் அதன் பிரசாரகர்களோடும் தலையெடுத்த பின்னரே கூண்டோடு அழிப்பதற்கான கனவுகள் உடல் சார்ந்த அரசியல் நடவடிக்கைகளாக மாற்றம் கண்டன. ஜிப்ஸிகள் ஐரோப்பியர் அல்லாதவர் என்ற பழங்கருத்து மீண்டும் முக்கியத்துவம் பெற்றது. ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அவர்கள் ஐரோப்பிய கண்டத்தில் தொடர்ந்து இருந்து வந்திருக்கினர் என்ற உண்மை இத்தகைய எண்ணத்தைப் பொய்யாக்குகிறது என்பதை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருபதாம் நூற்றாண்டில் ரோமாக்கள் சொல்லமுடியாத துயரை எதிர்கொண்ட வரலாறு புரிந்து கொள்ள முடியாதது. ஹோலோகாஸ்டுக்கு முந்தைய பத்தாண்டுகளின் இலக்கியப் படைப்புகளில் பெரும்பாலானவை உரத்த குரலில் அவர்களை ஒரு அச்சுறுத்தலாகச் சித்தரித்தன. அவர்கள் கடத்திய குழந்தைகளின் குடும்பங்களுக்கு, அவர்கள் திருடிய சொத்துகளின் உரிமையாளர்களுக்கு, அவர்கள் சீரழித்த ஆண்களுக்கு, அனைத்துக்கும் மேலாக அவர்களால் அடைய முடியாத நாகரிகத்துக்கு ரோமாக்கள் அச்சுறுத்தலாக இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டனர்.

ஆனால் வரலாற்று உண்மை என்னவோ இந்தக் கற்பனையின் கற்பிதங்கள் அனைத்தும் ஒரு இனவொழிப்பில் முடிந்ததைத்தான் பதிவு செய்கிறது. ஐரோப்பிய ரோமாக்களுக்கு ஏற்பட்ட கதி, இன ஒழிப்புக் குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டித்தல் குறித்த ஐநா மாநாட்டு முடிவுகளின் வரைமுறையின் கீழ் விசாரிக்கப்பட முடியும் என்பதில் சந்தேகமில்லை.

(முற்றும்)

[1] Liber Vagatorum என்கிற பிரசுரத்தின் ஒரு பக்கம் இங்கே காணக் கிடைக்கிறது. பார்க்க-

http://commons.wikimedia.org/wiki/File:Liber_Vagatorum_(Titelblatt).jpg

http://solvanam.com/?p=20872

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இவர்களது, பாட்டுகள் சிலவற்றைப் பார்க்க நேர்ந்தது!

அந்தப் பாடல்களுக்கு, அவர்கள் கைதட்டிய விதம் ஒரு தனித்துவமாக இருந்தது!

அவர்களது நடனமும், ஓரளவுக்கு, தென்னமெரிக்க 'flemingo' நடனம் போல இருந்தது!

ஆனாலும், இந்தியர்களுக்கே உரிய சில சங்கீத ஓசைகளும் அதில் காணப்பட்டன!

இவர்கள் வட இந்தியா அல்லது நேபாளம் போன்ற இடங்களில் இருந்து, ஐரோப்பாவுக்கு புலம் பெயர்ந்திருக்கலாம்!

அவுஸ்திரேலிய பூர்வீக குடிகள், தென்னிந்தியாவில் இருந்து, புலம் பெயர்ந்திருக்கலாம்!

இவர்கள் பேசும் மொழியிலும், 'தண்ணீ' போன்ற சொற்கள் பேசப்படுவதை அவதானித்திருக்கின்றேன்!

பகிர்வுக்கு நன்றிகள், கிருபன்!

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது... ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் சிங்களக் குடியேற்றம், முஸ்லீம் மக்களின் இனப்பெருக்கம் போன்றவற்றால்...

அடுத்த ஐம்பது ஆண்டுகளில்... ஈழத்தில் தமிழ் அழிந்து போகும்.

இதனைக் கூட புரிந்து கொள்ளாமல்... சிங்களத்துடன் சேர்ந்து தமிழனை அழிக்கும் ஒட்டுக் குழுக்களும், முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்கும் எம்மவர்களின்... நிலையை நினைக்க... ஆத்திரம் வருகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.