Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணசபை - தமிழர்களின் இருப்பை அச்சுறுத்துமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கிழக்கு மாகாணசபை - தமிழர்களின் இருப்பை அச்சுறுத்துமா?[/size]

சிவகுமாரன் நடராஜா

கிழக்கு மாகாண சபை விவகாரம் அதாவது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து நிர்வாகத்தினை அமைத்துக் கொண்டமையும், மாகாண சபையின் முதலமைச்சர் பதவி, நான்கு அமைச்சர் பதவிகள், சபைத் தவிசாளர் பதவி, பிரதி தவிசாளர் பதவி ஆகிய ஏழு பதவிகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டமையும் கிழக்குத் தமிழர்களிடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பில் எதிரானதொரு மனப்பாங்கினைத் தோற்றுவித்திருக்கிறது.

கிழக்கு வாழ் முஸ்லிம்களின் அரசியலானது வட, கிழக்குத் தமிழர்களின் அரசியலுடன் இணைந்து செல்ல வேண்டும் என்பதை எழுதப்படாத அரசியல் விதியாகக் கொள்ள முடியாது. அவ்வாறனதொரு அரசியல் நோக்கு தமிழ் குறுந்தேசியவாதமாக அமைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பதனை எவரும் மறுத்துவிடவும் முடியாது.

கிழக்கு மாகாண சபை விவகாரம் தொடர்பில் முனைப்பான விடயம், 'தமிழ் முக்கியஸ்தர்கள் எவரும் இல்லாத மாகாண சபை' என்ற அதன் தற்போதைய நிலையுடன் தொடர்புடையதாகும். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் இரண்டு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களால் தமிழ் முதலமைச்சர், முஸ்லிம் முதலமைச்சர் என்ற கோஷங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. தேர்தல் முடிவுகளின் பின் நிர்வாகத்தை அமைப்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்க்கமான சக்தியாக மாறியிருந்த நிலையில் 'இணைந்து நிர்வாகத்தை அமைக்க' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸிற்கு அழைப்பு விடுத்துமிருந்தது. ஆயினும் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.ம.சு.கூட்டமைப்புடனேயே இணைந்து நிர்வாகத்தினை அமைத்தது. ஜ.ம.சு.கூட்டமைப்பைச் சேர்ந்த நஜீப் அப்துல் மஜீத் முதலமைச்சராக (18.09.2012) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், கிழக்கு மாகாண சபையில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பதவிகளில் தமிழர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் கிழக்குத் தமிழர்களால் முன்வைக்கப்பட்டது. ஆயினும் இறுதியில் முக்கிய பதவிகளுக்கு தமிழர்கள் எவரும் தெரிவாகவில்லை. இறுதியில், 'தமிழர்கள் முதன்மைப்படுகிற கிழக்கில்' தமிழர்கள் எவரும் பங்கு பற்றாத மாகாண சபை அமைக்கப்பட்டிருக்கிறது. இது ஜ.ம.சு.கூட்டமைப்பின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையா? அல்லது முஸ்லிம்களின் பதவி ஆசைகளினால் ஏற்பட்டதா? என்ற கேள்வி தற்போது முன்னெழுந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பல்வேறு முஸ்லிம் கட்சிகளும் முக்கிய பதவிகளைக் கட்டாயப்படுத்திய நிலையில் தமிழர்கள் எவருக்கும் முக்கிய பதவிகளை வழங்க முடியாமல் போனது என்றே தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண சபையில் தமிழர்களின் பங்குபற்றல் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரிஸ் கருத்துத் தெரிவிக்கையில், 'கிழக்கு மாகாணத்தில் இன்று ஒரு ஆட்சிக் கட்டமைப்பு உருவாகக் காரணம் தமிழ் இளைஞர்களின் தியாகமாகும். இதை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் மறந்து விடாது. தமிழ் இளைஞர்களின் உயிர்த் தியாகம், அவர்களுடைய போராட்டம், தமிழ்த் தலைமைகளின் தன்னலம் கருதாத போராட்ட முன்னெடுப்புக்கள் காரணமாகத்தான் மாகாண சபை முறைமை ஏற்படுத்தப்பட்டது எனத் தெரிவித்திருப்பதுடன், '... தியாகம் செய்த சமூகத்திற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையில் ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போன விடயம் மிகவும் கவலையளிக்கும் விடயமாகும்,' எனவும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் அமைச்சராக இருந்தவரும், இம்முறை ஐ.ம.சு.கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும், போனஸ் பிரதிநிதித்துவம் மூலம் தெரிவு செய்யப்பட்டவருமான துரையப்பா நவரெட்ணராஜா, 'கிழக்கு மாகாண சபையின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஐ.ம.சு.முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும் முதலமைச்சர் பதவி, நான்கு அமைச்சர் பதவி, சபைத் தவிசாளர் பதவி, பிரதி தவிசாளர் பதவி ஆகிய ஏழு பதவிகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். இந்த ஏழு பதவிகளும் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் பகிரப்பட்டதனால் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகள் எதுவும் கிடைக்கவில்லை' எனக் குறைப்பட்டிருக்கிறார்.

மேலும் 'ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் தங்களுக்குள் பேரம் பேசி பதவிகளைப் பகிர்ந்து கொண்டார்களே தவிர, தமிழ் மக்களை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. தங்களுடைய இனத்தை மையப்படுத்தி தங்களுடைய அரசியலை முன்னெடுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழ் மக்களை அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை' எனவும் 'கடந்த முப்பது வருடகால யுத்தத்திற்கு முகம் கொடுத்து பாரிய இன்னல்களையும் துன்பங்களையும் சந்தித்த தமிழ் மக்களுக்கு ஒரு பதவியையாவது கொடுத்து அவர்களை கௌரவப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு வரவில்லை' எனவும் துரையப்பா நவரெட்ணராஜா தெரிவித்திருக்கிறார்.

ஆனால் எச்.எம்.எம்.ஹரிஸ், தமிழர்கள் எவரும் அமைச்சர்களாக தெரிவாகாததற்கு முன்னாள் முதலமைச்சரே காரணம் எனக் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த எச்.எம்.எம்.ஹரிஸ், 'கிழக்கு மாகாண சபை ஆட்சியில் தமிழர்களுக்கு இடமளிக்க வேண்டுமென அரசு விருப்பம் கொண்டிருந்தது. ஜனாதிபதியும் விரும்பினார். ஆனால் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விடாப்பிடியாக தமிழர் ஒருவர் அமைச்சராக வரக்கூடாது என இருந்தார் என்பதே உண்மை நிலையாகும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கான காரணத்தை விளக்கிய எச்.எம்.எம்.ஹரிஸ், 'தமிழர் பிரதிநிதித்துவம் கிடைக்காமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணமெனப் பிரச்சாரம் செய்து கிழக்கில் தமிழ் மக்களைக் கூட்டமைப்பு மீது அதிருப்தி கொள்ளச் செய்வதே பிள்ளையானின் நோக்கம்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள துரையப்பா நவரெட்ணராஜாவும், முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை உதறித் தள்ளியது அவர் விட்ட தவறாகும். தனக்கு அந்தப் பதவி தேவையில்லாவிட்டாலும் தனது கட்சியில் போட்டியிட்ட ஒருவருக்கு கிடைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவில்லை' எனவும் கவலை தெரிவித்திருத்திருக்கிறார். ஆனால் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முக்கிய பதவிகளை எதிர்பார்த்தே முக்கியமற்ற பதவி எதனையும் பெற விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

புதிய முதலமைச்சர் உத்தியோகபூர்வ கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் செயலகத்தில் உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் தமிழர் ஒருவர் அமைச்சராக இல்லாத குறைபாட்டை நிச்சயமாக நிவர்த்தி செய்வேன்.' எனத் தெரிவித்திருந்தார். எனினும் தொடர்ந்து அவரது உரையில், 'மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன்' எனவும் '...முக்கியமான பொறுப்பை முதலமைச்சராகிய நான் அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவேன்' எனவும் தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சரின் உரையின் அர்த்தம் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் தமிழர் ஒருவரை அமைச்சராகத் தெரிவு செய்வது என்பதல்ல. மாறாக தமிழர்களின் பிரதிநிதியாக தானே செயற்படுவேன் என்பதாகவே தெரிகிறது. கிழக்கு மாகாண சபையில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்க அரசாங்கம் முயற்சித்திருந்தது எனத் தெரிவிக்கப்படுகிற நிலையில், ஒரு அமைச்சராவது தமிழர் சார்பில் தெரிவாக வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் - முஸ்லிம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்ட நிலையில் அவை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் முதலமைச்சர் 'தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன்' எனத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம்கள் சார்பில் முதலமைச்சரும் மூன்று அமைச்சர்களும் பேரம் பேசலூடாகவே தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தொடர்பான அரசாங்கத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவது தவிர வேறு வழியேதுவும் அவர்களுக்கு இருக்கப் போவதில்லை என்ற அச்சமே நிலவுகிறது.

கிழக்குத் தமிழ் மக்கள், தங்கள் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாகக் கூட அராசங்கத்தின் அடக்குமுறைகளைச் சந்தித்து வரும்போது, அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டுள்ள முஸ்லிம் தலைவர்கள் எவ்வாறு தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது? இதற்கப்பால், இனம் சாராது தமிழ் மக்களுக்கு மாகாண சபை சேவைகைள வழங்கங்கூட முடியுமா என்பதுவும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே பொருளாதார, சமூக அரசியல் அதிகாரப் போட்டி நிலையொன்று காணப்பட்டு வருவது வெளிப்படையான விடயம். எனவே இந்த முரண்பாடுகளின் மத்தியில் இனம் சாராது பணியாற்றுவது என்பது முஸ்லிம் அரசியல் தலைமைகளால் சாத்தியப்படுமா என்ற கேள்வியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையில், கிழக்கு மாகாணத்தில் 753 தமிழ் மொழி மூலப் பாடசாலைகளும் 15,432 தமிழ் மொழி மூல ஆசிரியர்களும், 270350 தமிழ் மொழி மூல மாணவர்களும் உள்ள நிலையில், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு சிங்களவர்கள் வசம் இருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் இல்லையா? எனக் கல்வியியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சை முதலமைச்சரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வித்துறை ஆர்வலர்களும் கல்விமான்களும் பத்திரிகையில் விடுத்துள்ள பகிரங்க வேண்டுகோளிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கையில், 'கிழக்கு மாகாண கல்வி அமைச்சு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர் தொடர்ச்சியாக சிங்கள மொழிமூலமான அமைச்சரிடமும் செயலாளரிடமும் வழங்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தின் ஆட்சி மொழியான தமிழ் மொழி மூலமான ஆசிரியர்களும், அதிபர்களும் பாதிக்கப்பட்டு வருவதுடன் அவர்களின் அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாண ஆளுநர் தமிழ் மொழி மூலமான மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலோ, ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதிலோ எவ்வித அக்கறையும் இன்றி இருந்து வருவதுடன், சிங்கள மொழி மூலமான பாடசாலைகளையும் வலயங்களையும் மேற்பார்வை செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சராக உள்ள விமல்வீர திசநாயக்க எவ்வித பாரபட்சமும் இன்றி செயற்படும் நோக்கில் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக தமிழ் பேசும் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்த போதும் அது சாத்தியமாகாத நிலையில், அந்த முதலமைச்சருடன் ஆளுநர் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு, கல்வி அமைச்சின் முழுச் செயற்பாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளார். ஒரு சிறிய ஆசிரிய இடமாற்றத்தையோ ஒரு சிற்றூழியர் நியமனத்தையோ செய்ய முடியாத நிலைக்கு கல்வி அமைச்சு ஆளாக்கப்பட்டுள்ளது என்ற விசனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எப்படியோ, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது, தமிழர்களை ஒதுக்கிவிட்டு, முஸ்லிம் முதலமைச்சர், முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் முக்கியஸ்தர்கள் என கிழக்கு மாகாண சபையில் பதவியேற்க ஒத்துக்கொண்டதன் வழியாக, எதிர்காலத்தில் முஸ்லிம்களை ஓரங்கட்டிவிடுவதற்கான நியாயப்பாடாகவும் இது அமைந்து விடுகிறது. இதற்கிடையில், கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்விலேயே, பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள 'திவிநெகும' சட்டமூலத்தினை விவாதித்து எடுத்துக் கொண்டு அரசாங்கத்திற்குச் சார்பாகவே முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. 'திவிநெகும' சட்டமூலத்தினை ஆதரித்துப் பேசிய முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், 'எம்மைப் பொறுத்த வரையில் இது முக்கிய சட்டமாகும். மத்திய அரசு மாகாண அரசு என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை' எனத் தெரிவித்திருக்கிறார். இதன் வழியாக முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை அதிகாரங்களை பெறும் அல்லது காப்பாற்றும் நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ள முடியாத கையறு நிலையில் இருக்கிறது என்பது புலனாகிறது.

ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், 'அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு அமைவாக மாகாண சபைகளுக்கு உரியமுறையில் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்வதன் அவசியமும், இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவமும் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பில் மக்கள் ஆணையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது' எனக் கூறியிருக்கிறார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க உதவி இராஜங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் அவர்களை நியூயோர்க்கில் அமைந்துள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியின் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

இறுதியாக, முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த சந்தர்ப்பமானது, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதனைச் சார்ந்து நிற்கிற முஸ்லிம்களின் அரசியலை அம்பலப்படுத்தவே உதவிடும் போலிருக்கிறது. இதற்கு ஒரு நீண்ட காலம் நாம் காத்திருக்கத் தேவையில்லை போலும். முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் தேடலை நோக்கி நகராத வரைக்கும் மாற்றங்கள் எதனையும் காணமுடியாது.

கிழக்குத் தமிழ் மக்கள், முஸ்லிம்கள் இந்தச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி கிழக்கின் வளங்களை கையகப்படுத்தி விடுவார்கள், அபிவிருத்திகளை தங்கள் பகுதிக்குள் முடக்கி விடுவார்கள் என்ற கவலைகளுடன், வட,கிழக்கு இணைப்பு மற்றும் அரசியல் கோரிக்கைளில் எதிரானதொரு நிலைக்கு சென்று விடுவார்கள் என்ற பயத்தினையும் கொண்டுள்ளார்கள். கிழக்கு, முஸ்லிம்களின் மாகாணமாக ஆக்கப்பட வேண்டும் என்ற முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் கோரிக்கைகள் எதிர்காலத்தில் வளருமா? அது தமிழர்களின் இருப்பை அச்சுறுத்துமா என்ற கேள்வியும் உண்டு.

தமிழர்கள் முஸ்லிம்களின் அரசியல் தனித்துவத்தினை கணக்கிலெடுத்தும், கிழக்கின் பல் இனப்பரம்பல் பாங்கினைக் கணக்கில் எடுத்தும் மற்றும் மக்கள் விடுதலைக்கான அரசியல் வழிமுறைகளை கைக்கொண்டும் வளர்ச்சி பெறுவதன் மூலமே தங்கள் அரசியலை முன்னகர்த்த முடியும் என்பதனை உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு காத்திரமான அரசியல் தேடல் தேவை. அரசியல் தலைமை தேவை.

http://www.pongutham...4e-0c8f5c33c58a

குட்யேற்றம் எப்போ ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ஆனல் இப்போது நடப்பது வேறு. தீர்வின் போது தமிழர்களின் பூர்வீக நிலங்கள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் எச்.எம்.எம்.ஹரிஸ், தமிழர்கள் எவரும் அமைச்சர்களாக தெரிவாகாததற்கு முன்னாள் முதலமைச்சரே காரணம் எனக் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த எச்.எம்.எம்.ஹரிஸ், 'கிழக்கு மாகாண சபை ஆட்சியில் தமிழர்களுக்கு இடமளிக்க வேண்டுமென அரசு விருப்பம் கொண்டிருந்தது. ஜனாதிபதியும் விரும்பினார். ஆனால் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விடாப்பிடியாக தமிழர் ஒருவர் அமைச்சராக வரக்கூடாது என இருந்தார் என்பதே உண்மை நிலையாகும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கான காரணத்தை விளக்கிய எச்.எம்.எம்.ஹரிஸ், 'தமிழர் பிரதிநிதித்துவம் கிடைக்காமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணமெனப் பிரச்சாரம் செய்து கிழக்கில் தமிழ் மக்களைக் கூட்டமைப்பு மீது அதிருப்தி கொள்ளச் செய்வதே பிள்ளையானின் நோக்கம்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பிள்ளையான் தனக்கு வராத பதவி எந்த தமிழருக்கும் கொடுக்கக்கூடாது என்பதாக இருக்கலாம்.மகிந்த பிள்ளையானை கேட்டு செய்கிறார் என்பது நகைப்புக்கு இடமானது.கிழக்கில் சிங்களவர்கள் பலரும் மகிந்தவின் கட்சிக்கு வாக்களித்து இருந்தார்கள்.அந்த வகையில் கிழக்கு மாகாண சபையில் சிங்களவர்கள் கூட இல்லாதது ஆச்சரியமளிக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ் தனது கட்சிக்கு முதலமைச்சர் பதவி தராத நிலையில் ஏனைய பதவிகளை பெறுவதன் மூலம் அரசுக்கு தனது ஆதரவை தெரிவித்து இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.