Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்டாலினால் தி.மு.கவைக் காப்பாற்ற முடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்டாலினால் தி.மு.கவைக் காப்பாற்ற முடியுமா?

 

 

“அடுத்த ஆட்சியை தி.மு.க அமைப்பதை  விரும்புகிறேனா என்றால் நிச்சயம் இல்லை.  தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இரு கட்சிகளுமே மீண்டும்  ஆட்சிக்கு வருவதை நான் விரும்பவில்லை. அதே சமயம் மக்கள்  தி.மு.கவை ஆள்வதற்குத் தேர்ந்தெடுப்பார்களானால், தி.மு.கவின் முதலமைச்சராக ஸ்டாலின் வருவதையே நான் விரும்புகிறேன். அப்பாவின் எல்லா பாவங்களுக்கும் இல்லாவிட்டாலும் பல  பாவங்களுக்குப் பரிகாரம் செய்யக்கூடியவராக செயல்படும் வாய்ப்புள்ள ஒரே வாரிசு அந்தக் குடும்பத்தில் அவர் ஒருவர்தான்.”

 

ஆகஸ்ட் 2010ல் நான் எழுதிய இந்த வரிகளைத்தான் இப்போதும் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். ஒரு வழியாக கலைஞர் கருணாநிதி தான் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத் தாமதமாகவேனும்  உணர்ந்து, அடுத்த தி.மு.க தலைவர் பதவிக்கு ஸ்டாலினைத்தான் முன்மொழிவேன் என்று பகிரங்கமாக உறுதியாக சொல்லிவிட்டது எனக்கு மகிழ்ச்சியைத்தருகிறது. இதை அவர் 1996ல் தி.மு.க தேர்தலில் ஜெயித்தபோதே செய்திருக்க வேண்டும். அப்போதே அவருக்கு வயது 72. ஸ்டாலினுக்கு அன்று வயது 43. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சரானவர். அந்த வாய்ப்பை அன்றே  மகனுக்குக் கொடுத்துவிட்டு தான் கட்சித் தலைவர் பதவியை மட்டும் வைத்திருந்தால், மூப்பனார் மறுத்ததால்,  தேவ கவுடாவுக்கு சென்ற பிரதமர் பதவியைக் கூடக் கலைஞர்  அடைந்திருக்கலாம்.

 

ஸ்டாலினை தி.மு.கவின் தலைவராக்குவதற்கோ, முதலமைச்சராக்குவதற்கோ  தி.மு.க கட்சிக்குள்ளிருந்து பெரும் எதிர்ப்பு எப்போதும் வந்ததில்லை. ஒரே எதிர்ப்பு வைகோவுடையது. அதைக் கையாளத் தெரியாமல் கலைஞர் கையாண்டதில் வைகோவை ஸ்டாலினுக்கு சமமான தலைவராக்காமல் தனக்கு சமமான தலைவர் அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டார். (அந்த வாய்ப்பைக் கையாளத் தெரியாமல் வைகோவும் வீணடித்தது இன்னொரு தனிக் கதை.)அப்படியே ஸ்டாலினுக்கு சம்மான தலைவர்தான் ஜெயலலிதா  என்று ஆக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டு தன்னை ஜெயலலிதாவுக்கு சம்மாக தானே கலைஞர் குறுக்கிக் கொண்டார்.

 

ஸ்டாலினுக்கு வந்த எதிர்ப்பெல்லாம் கருணாநிதியின் குடும்பத்துக்குள்ளேயிருந்து அழகிரி வடிவில் வந்த எதிர்ப்பு மட்டும்தான். கட்சித் தலைவராக பல சிக்கல்களை சமாளிக்கத் தெரிந்த கலைஞர் குடும்பத் தலைவராக எப்போதுமே ஒரு ஃபெயிலியர்தான். அவரது மருமகன் முரசொலி மாறன் ஒரு மிடில் க்ளாஸ் வங்கி அதிகாரி குடும்பதில் செய்வது போல தன் பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைத்து பத்திரிகைத்தொழிலைக் கற்றுக் கொடுத்து தொழிலதிபர்களாக வருவதற்கு ஊக்குவித்தது போல கருணாநிதி தன் பிள்ளைகளை வளர்க்கவில்லை. முத்து முதல் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு வரை எல்லாரையும் தன் அரசியல் பணிக்கு ஊழியர்களாகப் பயன்படுத்தியதைத் தாண்டி அவரால் சிந்திக்க முடியவில்லை.

 

எம்.ஜிஆருக்கெதிராக முத்துவை நடிகனாக வளர்த்து எம்.ஜிஆரை ஒழித்துக் கட்ட முயற்சித்தார். முத்துவின் பலம் நடிப்பு அல்ல. இசைதான். பாடுவதுதான். தன் தாய்மாமா இசைச் சித்தர் சிதம்பரம்  ஜெயராமனைப் போல கர்நாடக இசையில் பேர் எடுக்காவிட்டாலும், முத்து சினிமா இசையில் ஒரு பி.பி. ஸ்ரீநிவாஸ், ஏ.எம்.ராஜா,எஸ்.பி.பி,  வரிசையில்  போல வந்திருக்க முடியும்.  கலைஞர் அவரை எம்ஜிஆரின் க்ளோனாக்க முயற்சித்துத் தோற்றதில் அவர் வாழ்க்கையே வீணாகிப் போயிற்று.

அந்த காலகட்டத்தில் ஸ்டாலினை விட மூத்தவரான அழகிரியோ, இளையவரான தமிழரசோ அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. சொந்தமாக தொழில் செய்யும் முயற்சிகளில் இருந்தார்கள். ஸ்டாலின்தான் மாணவராகவே கட்சியில் இறங்கி வேலை செய்தவர். அதனால்தான் 1976ல் நெருக்கடி நிலையின்போது மிசாவில் கைது செய்யும்போது கலைஞர் குடும்பத்தில் அவரை மட்டுமே கைது செய்தது அன்றைய அரசியல் எதிரியான காங்கிரஸ்.

 

ஸ்டாலின்தான் அடுத்த கட்டத்தில் கலைஞரின் இடத்துக்குக் கட்சியில் வரக்கூடியவர் என்ற நிலை எண்பதுகளிலேயே வந்துவிட்டது. அதை முரசொலி மாறனும் ஆதரித்தார். அவர் தன் மகன்களை கட்சிப் பதவிகளுக்குக் கொண்டு வர முயற்சித்ததே இல்லை.பேராசிரியர் அன்பழகனும் ஸ்டாலினை ஆதரித்தார். கட்சிக்குள் ஸ்டாலின் ஆதரவு நிலைதான் பெரும்பான்மை.

 

ஆனால் சொந்த தொழில் முயற்சிகளில் தோற்றுப் போன அழகிரி அரசியலுக்குள் தாமதமாக நுழைந்தார். குடும்பத்துக்குள் இருந்துவந்த இந்த நெருக்கடியைத்தான் கலைஞரால் சுமார் 15 வருடங்களாக சமாளிக்க முடியாமல் இருந்திருக்கிறது.  அழகிரி அரசியலுக்குள் நுழையாமல் இருந்திருந்தால் கனிமொழி கூட நுழையாமல் இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லலாம். கலைஞரின் இலக்கிய கலாசாரத்துறை ஆர்வங்களுக்கு குடும்பத்தில் ஒரே வாரிசான கனிமொழி அதே துறையில் தொடர்ந்திருக்கக் கூடும். அழகிரிக்கு அரசியல் செல்வாக்கு, கட்சி, ஆட்சி பதவிகள் தரப்படவேண்டுமென்று கலைஞரின் ஒரு குடும்பத்துக்குள்ளிருந்து நிர்பந்தங்கள் தொடங்கியபிறகு கனிமொழிக்காகவும் இன்னொரு குடும்பத்தின் நிர்ப்பந்தங்களை கலைஞர் சந்திக்க வேண்டியதாயிற்று.

தங்கள் பிள்ளைகளுக்காக அன்பால் செய்த நிர்பந்தங்கள் இரு பிள்ளைகளுக்கும் உண்மையில் பயன் தரவில்லை. தி.மு.கவின் மத்திய அமைச்சர்களிலேயே கட்சிக்கு மோசமான பெயரை டெல்லியில் சம்பாதித்துக் கொடுத்திருப்பது அழகிரிதான். நிர்வாகத் திறமையற்றவர் என்று அவர் பழிக்கப்படுவதுதான் மிச்சம். கனிமொழியோ ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போக வேண்டியதாயிற்று.

 

குடும்ப நிர்ப்பந்தங்களை நம்பியிராமல் சொந்த அரசியல் செயல்பாட்டால் கட்சிக்குள் தன் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு இன்று இருக்கும் இடத்தை அடைந்த கலைஞரின் ஒரே பிள்ளை ஸ்டாலின்தான். ஆனால் கட்சித் தலைவர் கலைஞர் அவரை ஆதரித்தபோதும் குடும்பத் தலைவர் கருணாநிதியின் பலவீனங்களால் தனக்கான இடத்தை அடைய முடியாமல் ஸ்டாலினுக்கு சுமார் 14 வருடங்கள் வீணாகியிருக்கின்றன.

 

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஸ்டாலினுக்குப் பொது மக்களிடம் பெரிய நற்பெயர் இருந்ததாக சொல்ல முடியாது.  பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் ஆடம்பரமும், ஷோக்கும் அதிகார மையத்தில் இருப்பதால் வரும் அகங்காரமும் உடையவராகவே அவர் அன்று  கணிக்கப்பட்டார். அப்போது அவர் தன்னை டிவி நடிகராக இலக்கிய கலையார்வம் உடையவராக காட்ட எடுத்த முயற்சிகளெல்லாம் படு தோல்வி அடைந்தன.

 

ஆனால் ஸ்டாலின் அதே பாதையைத் தொடராமல், வெளியே வந்து தப்பித்துவிட்டார்.  தொண்ணூறுகளின் இறுதியில் சென்னை மேயர் பதவிக்கு வந்தபோது புதிய இமேஜ் அவருக்கு உருவாயிற்று. நகரப் பிரச்சினைகளில் நேரடி அக்கறை காட்டி நடுத்தர வர்க்கத்தின் கவனத்தைக் கவர்ந்து நல்ல நிர்வாகியாக இவர் இருப்பார் என்ற நம்பிக்கையை அப்போது அவர் ஏற்படுத்த முயற்சித்தார்.

 

இப்போது ஒரு வழியாக அவரைத்தான் தி.மு.கவின் அடுத்த தலைவராகத் தானே முன்மொழிவேன் என்று கலைஞர் சொல்லிவிட்டதால், அவர்தான் இனி தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவும் இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உட்கட்சி ஜனநாயகம் உள்ள இயக்கம், ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடலாம் என்றெல்லாம் கலைஞரும் அன்பழகனும் சொன்னாலும்,  தி.மு.கவில் இதுவரை கலைஞரை எதிர்த்து யாரும் வேட்பு மனு கூட தாக்கல் செய்ததில்லை. அதே நிலைதான் தொடரும்.

 

அழகிரி எதிர்த்துப் போட்டியிட்டால், கட்சி இன்று இருக்கும் நிலையில் அவருக்குத்தான் அது அவமானமாக முடியும். அந்தத் தப்பை அவர் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கலாம்.  ஸ்டாலினுடன் சமரசம், அல்லது அதிரடியாக் அ.தி.மு.கவுக்குப் போய் ஜெயலலிதாவின் வாரிசாக இடம் பிடிக்க முயற்சிப்பது என்ற இரு வழிகளைத் தவிர அவருக்கு வேறு சாய்ஸ் இனி இல்லை. அழகிரி செகண்ட் சாய்சை எடுப்பதை, கலைஞருக்குப் பின் தி.மு.கவை பலவீனப்படுத்த விரும்பும் டெல்லி காங்கிரஸ் தலைமையும் உளவுத்துறையினரும் நிச்சயம் விரும்புவார்கள். எழுபதுகளில் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திய மாதிரி இப்போது அழகிரியைப் பயன்படுத்த முடியுமா என்று முயற்சிக்கலாம். ஆனால் அழகிரி எம்.ஜி.ஆர் அல்ல. எனவே சினிமாவில் முத்துவுக்கு ஏற்பட்ட கதியே அவருக்கும் அரசியலில் ஏற்படும்.  குடும்பத்துக்குள் சமரசம் என்பதுதான் ஒரே தீர்வு.

 

கலைஞர் இனி தன் முடிவை வீட்டு நிர்ப்பந்தங்களால் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இதுவரை தன் மரணத்தைப் பற்றி பேசாத அவர் முதன்முறையாக இப்போது பேசியிருக்கிறார்.  அடுத்த உட்கட்சி தேர்தல் எப்போது? அதில் ஸ்டாலினை முன்மொழிவாரா, யாரேனும் எதிர்த்தால் என்ன செய்வார் என்ற நிருபர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது கட்சி தேர்தல் எப்போது நடக்கிறதோ “அப்போது நான் உயிரோடு இருந்தால்” ஸ்டாலினையே முன்மொழிவேன் என்று சொல்லியிருக்கிறார்.

 

தன் காலம் முடிவதற்கு முன் இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டே தான் விடை பெறவேண்டும் என்ற மன உறுதி அவருக்கு இப்போது வந்திருப்பதையே இது  காட்டுகிறது.

எனவே தி.மு.கவின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான். அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் அடுத்த முதல்வரும் அவர்தான்.

 

இப்போது முக்கியமான கேள்விக்கு வருவோம். ஸ்டாலினால் தி.மு.கவைக் கட்டிக் காப்பாற்ற முடியுமா?

 

“தி.மு.க முடிந்து போன கதை” என்று அண்மையில் ஜெயலலிதா தன் கட்சிப் பொதுக் குழுவில் அலட்சியமாக அறிவித்தார். அது அவரது ஆசை. ஆனால் அவ்வளவு சுலபத்தில் தி.மு.க முடிந்த கதையாகாது. வலுவான கட்சி அமைப்பும் மீடியா பலமும், சுமார் 25 சதவிகித ஓட்டு ஆதரவும், சமூகத்தில் காலத்தின் தேவையால் உருவான சரித்திரப் பின்னணியும் உள்ள அமைப்பு அது.

அண்ணா 1949ல் தி.மு.கவை ஆரம்பித்தபோது அவருக்கு வயது 40தான். கட்சியின் அடுத்த நிலைத் தலைவர்கள் பெரும்பாலோரின் வயது 30 லிருந்து 40க்குள் இருந்தது. அத்தனை இளமையான இயக்கமாக அது தொடங்கியது. ஆனால் 88 வயது வரை பதவியை விட்டு இறங்க மறுத்த பிடிவாதத்தால், கலைஞர் இன்று அந்த கட்சியை முதியோர் இல்லமாக மாற்றிவிட்டார். கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் வயது 75. அடுத்த நிலையினருக்கு வயது 60க்கு மேல். ஸ்டாலின் தலைவராகும்போது அவருக்கும் வயது 60ஐக் கடந்துவிட்டிருக்கும்.

 

இன்றைய 20லிருந்து 35 வயது வரையிலான இளைஞர்களைக் கட்சிக்குள்ளும் அதற்கு ஆதரவாகவும் ஈர்க்க ஸ்டாலினால் இயலுமா என்பதே கேள்வி.  இன்றைய தமிழ் இளைஞர்களில் பெரும்பாலோர் ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க பெரும் துரோகம் செய்த கட்சி என்ற கருத்திலேயே இருக்கிறார்கள். நடு வயதினர் ஊழலை விஞ்ஞானப்பூர்வமாகச் செய்ய எல்லா கட்சிகளுக்கும் வழிகாட்டிய கட்சி என்றே கருதுகிறார்கள்.

 

இந்தச் சூழலில் கடுமையான மாற்றங்களைச் செய்யவும் தன்னையும் கட்சியையும் சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் ஸ்டாலின் முன்வந்தால்தான் தி.மு.கவை பழையபடி இளைஞர் கட்சியாக, கோட்பாடுகள், லட்சியங்களுக்கான இயக்கமாகப் புதுப்பிக்கமுடியும். அதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கிறதா?

 

கலைஞரிடம் இருக்கும் பல ஆற்றல்கள் – பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, அரசியல் வீயூகம் கட்டுவது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. அதே போல கலைஞரின் பல பலவீனங்களும் ஸ்டாலினுக்கு இல்லை. வாராவாரம் பாராட்டு விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, பத்திரிகை நிருபர்களிடம் எரிந்து விழுவது, இதழாசிரியர்களுக்கு போன் செய்து கடிந்துகொள்வது, நேரடி பதில் சொல்லாமல் மழுப்புவது, வார்த்தை விளையாட்டு எல்லாம் இல்லை. கலைஞர் அளவு புகழாரம், ஆடம்பர கட் அவுட் கலாசாரம் ஆகியவற்றில் ஸ்டாலின் அதிக ஈடுபாடு காட்டவில்லை. கலைஞர் காலத்துக்குப் பின் அதிலிருந்து முற்றாக வெளியே வந்தால் கூட நல்லது.

 

எம்.ஜி.ஆர் காலத்திலேயே தொடங்கி ஜெயலலிதா காலத்தில் உச்சத்துக்கு சென்ற கலைஞரின் விரோத பாவம், நேரில் சந்திப்பதைத் தவிர்ப்பது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. நேரில் ஜெயலலிதாவை சந்திக்க அவர் தயங்கியதில்லை.

 

தி.மு.க என்ற பழைய ஜமீன் வீடு ஸ்டாலின் கைக்கு வந்துவிட்டது. அதை ஒட்டடை அடித்து, சுத்தப்படுத்தி விரிசல்களுக்கு ஒட்டு போட்டு கூரை ஓட்டைகளை அடைத்து வைத்து பயன்படுத்தப் போகிறாரா, அல்லது இது உதவாது, இது இருக்கும் திராவிட இயக்க சுயமரியாதை மனை மட்டும்தான் தேறும், முற்றாக இடித்துவிட்டு புது வீடாகக் கட்டுவோம் என்று கட்டப் போகிறாரா என்பது ஸ்டாலின் கையில்தான் இருக்கிறது.

 

கல்கி 12.1.2013

குடும்ப அரசியலுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.