Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராணியின் கதை : இலங்கையில் இடம்பெற்ற பாலியல் சித்திரவதைகளின் வாழும் சாட்சிகளில் ஒருவர்...

Featured Replies

அந்த முகவரியை இலகுவாக கண்டுபிடிக்க முடிய வில்லை. நான் தாமதமாக வந்திருந்தேன். மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.


 

பிறகு, ஒரு தற்சமைய முடிவில் வாங்கிய மலர்கொத்தைக் அவர் கையில் தந்தேன்.

அது
ஒரு விபரணம் இல்லாத பெப்ருவரி நாள்.  சூரிய வெளிச்சத்தை காணவில்லை.  ஈரமான
காற்று மழைவருமென பயமுறுத்தியது. இந்தப் பேட்டிக்காக லண்டன்வரை
பயணித்துவிட்டு, ரயில் நிலையக் கடையில் அந்தப் பதுமராக மலர்கொத்தை
வேண்டியிருந்தேன்.

நான் பேட்டிகாணபவிருப்பர் ராணி. இருபத்தியாறு
வயது. எனது புர்வீகம் கூட இலங்கையாக இருப்பதால் இந்த பேட்டியில் அதிக கவனம்
வந்திருந்தது. ஆனாலும் இந்தப் பேட்டியை மேற்கொள்வதில் நிறைய
யோசித்திருந்தேன்.

நான் ஒரு பத்திரிகையாளனல்ல. ஒரு ஆலோசகனோ,
சட்டத்தரணியோ, வைத்தியனோ கூட அல்ல. இப்படியான ஒரு நபரைச் சந்திப்பதில்
எந்தவிதமான அனுபவமும் எனக்கில்லை.

ஆகவே ஒரு நிச்சயமற்ற
பரிசுப்பொருளாக, மதிப்பளிக்கும் நிலைப்பாட்டாக மலர்கொத்தை
வாங்கியிருந்தேன்; வானத்தின் நீல நிறத்துடன், சிறுமைகளைத் தொலைத்துவிட்ட
காற்றின் நறுமணத்துடன்.

இந்த மலர்க்கொத்தை நீட்டியபோது ஒரு பாழடைந்த
சோகம் மட்டும் அவர் முகத்தில் குடியிருந்தது. சுற்றுப்புறங்களிலின்
செல்வாக்கினின்று அவர் மிகவே விடுபட்டிருந்தார்.

அவரைச் சந்தித்த
அறை மிகச்சிறியதாக இருந்தது. ஒரு பதிவான படுக்கை, வெறுமை யான மேசை, ஓடாத
கணணி, தாவரங்களின்றி, சுவர்களில் படங்களின்றி, தனதென்று சொல்லிக்கொள்ள
எதுவுமற்ற வெறுமை.

Roma Tearne
சுவரில் பதித்திருந்த
ரேடியேட்டரில் இரண்டு சாம்பல் நிறக் காலுறைகள் காயந்து கொண்டிருந்தன. சற்று
மெலிதான ஊதுபத்தி வாசைன காலையில் பிரார்த்தனைகள் நடந்ததை வெளிக்காட்டின.
கதவுத் திரையின் மறைவுகளில் எங்கள் சம்பாசனையை ஒட்டுக்கேட்கக்
காத்திருப்பவர்களின் சிலும்பல்கள் போலும்.

“சொல்லுங்கள்” - நான் வினவினேன். மற்ற எண்ணங்களை முற்றாக மறைத்துவிட்டு, நான் எங்கே இருக்கிறேன் என்பதையும் மறந்துவிட்டு.

“முதலிலிருந்து சொல்லுங்கள்”

ஆனால்
அவரால் முடியவில்லை. அவரது நினைவுகள் துண்டு துண்டாகத்தான் வருவது போலும்.
வரவிரும்பாத நினைவலைகளை வெளியே சொல்லும்போது மட்டும் திரும்பத் திரும்ப
வாழ்வதுபோல.

“அவர்களைக் கொன்றுவிட்டார்கள்”
- நான் ராணியின் விளக்கத்திற்காக காத்திருந்தேன்.

முதலில் ஆறுபேராக இருந்த குடும்பம். தற்போது ராணி மட்டும்தான். தனியாக.

“ஒன்பதாவது
நாள், ஏழாம் மாதம், கடந்த வருடம்” - ராணி சொல்கிறார், கண்களை மூடியபடி,
கரங்களை குறுக்கே கட்டி தனது தனிமையைப் பாதுகாத்தபடி.

“எனது
சின்னம்மாதான் தொலைபேசி மூலம் அறிவித்தார். எமது வீட்டை கொளுத்தி
விட்டார்கள் என்றார். எனது அம்மாவையும் தங்கச்சியையும் வீட்டுக்குள்ளே
வைத்து உயிரோடு எரித்து விட்டார்கள். நான் போய்ப் பார்த்தபோது
எலும்புக்கூடுகள் மட்டும் தான் எஞ்சியிருந்தன.”

ராணியின்
வார்த்தைகள் எம்மிடையே ஒரு அதிர்வான அமைதிபோல பரவியிருந்தது. அவரது மனதில்
உறுத்திக்கொண்டிருந்த முதல் நினைவு இதுதான் போலும்.

வெளியே லண்டன் தெருக்களில் ஒரு போலீஸ் வண்டி ஊளையிட்டுச் சென்று கொண்டிருந்து பின்னர் அச்சத்தம் மறைந்து விட்டது.

ராணியின்
கதை 2004ம் ஆண்டு தொடங்குகிறது. அவருக்குப் பதினேழு வயதில். ஒரு சாதாரண
குடும்பத்தில் பிறந்துள்ள ராணி எதிர்காலத்தில் ஒரு ஆசிரியராக வந்து தமிழ்
குழந்தைகளை அறிவாற்றலை வளர்க்க விரும்புகிறார். நான்கு பிள்ளைகள் கொண்ட
குடும்பத்தின் மூத்தவர்தான் ராணி.

குடும்பத்தின் அனைவரும் சிறிலங்கா
ராணுவத்தின் அடக்குமுறை விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். கிராமங்களை
வளைத்துப் பிடித்து கிராமத்தவர்களை விசாரித்து கொடுமைபடுத்தும் இராணுவம்
அழைத்துச்சென்று மீண்டும் திரும்பாத அனேக நண்பர்களை ராணிக்குத் தெரியும்.

ஆனால் 2004ம் ஆண்டு மற்றச் சிறுவர், சிறுமிகளைப்போல நிரம்பி வழியும் எதிர்காலக் கனவுகளுடன் வாழ்ந்தவர்தான் ராணி.

ஒருநாள்
இயக்த்திற்கென ஆட் சேர்க்கும் ஒருவர் வீட்டுக்கு வந்து கதைத்துக்
கொண்டிருந்த வேளையில், ஏதோ ஒரு உத்வேகத்தில் தானும் உதவி செய்ய போவதாக ராணி
தெரிவிக்க அன்றுடன் வாழ்க்கை திசை திரும்பியது.

இயக்கத்திற்கென
உளவு பார்க்கும் பணியில் ராணி நியமிக்கப்பட்டார். ஆனால் அது என்னவென்றே
ராணிக்கு விளங்கியிருக்கவில்லை. ஒரு அரசுசாரா நிறுவனத்தில் தான் அவருக்கு
நாளாந்த வேலை. கிராமம் கிராமமாகச் சென்று சுகாதார மேம்பாட்டுப் பணிகளில்
இயக்க வைத்தியர்களுடன் சேர்ந்து வேலை செய்த அதே வேளை ராணி ஏ-லெவல்
பரீட்சையிலும் தேர்வானார்.

2007 ஆண்டு போர்க்காலம் கடினமாகியது. வீட்டிற்கொரு வீரரென இயக்கம் ஆட்சேர்த்துக் கொண்டிருந்தது; சிறுவர்கள் உட்பட.

“உங்களது தம்பிகளும் இயகத்தில் சேர்க்கப்பட்டார்கள் என எப்போது தெரிந்தது?”
- நான் கேட்டேன்.

அந்தக்
கேள்வியில் ராணி உடைந்து போனார். தலையைப் திடீரென பின்படுக்கையில்
சரித்துக்கொண்டு விம்மி வெடித்தார். அது அழுகையென்று கூறமுடியாது. எனது
நாடிகளை ஊடறுத்துச்சென்ற ஒரு வெறித் தனமான உணர்வு வெளிப்பாடு. அந்தப்
பேரழுகை தொடர்ந்து கொண்டே போனது.

ஒன்றும் இயலாதவளாக நான் காத்திருந்தேன், புயல் ஓய்வதற்காக.

தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ராணி தொடர்ந்தார்.

ஆதரவுக்காக
கைகளைப் கோர்த்துக்கொண்டு இயக்கத்தை நோக்கிச்சென்ற ராணியின் இரண்டு
தம்பிகளுக்கும் இன்றுவரை என்ன நடந்ததென்று யாருக்கும் தெரியாது.

2008ம்
ஆண்டுப் போர் வடகிழக்கு இலங்கையை விட்டு தூரச் சென்றுவிட ராணியின்
இயக்கதிற்கான தொடர்பும் துண்டிக்கப்பட்டது. குடும்பத்தை காப்பாற்றவென ராணி
தையல் வேலை மற்றும் கேக் செய்தல் தொழில்களை கற்றுக்கொண்டார்.

ஆனாலும்
இராணுவத்தின் கிராம வளைப்புகள், விசாரணைக் கொடுமைகள் தொடர்ந்தன. ராணியின்
இயக்கத் தொடர்புகள் வெளியே தெரியவந்து விடுமோவென பயந்த அவரது பெற்றோர்கள்
அவரை இன்னமொரு தொலைதூர கிராமத்துக்கு சொந்தங்களுடன் இருக்கவென அனுப்பி
வைத்தனர்.

நாட்கள் கடந்து போரும் முடிவுக்கு வர, பெற்றோரை
பிரிந்திருந்த ராணி ஏப்ரல் 2011ம் ஆண்டு பிறந்த ஊருக்குத் திரும்பினார்.
ஆனால் திரும்பிய சில நாட்களிலேயே சிறிலங்கா உளவுத்துறையால் ராணி கைது
செய்யப்பட்டார்.  10 நாட்கள் சிறைவாசம்.

“என்னை அந்த பத்து
நாட்களில் ரொம்பத்தான் கொடுமைப்படுத்தினார்கள்” - ராணி ரகசியம் பேசுவது
போல் கூறுகின்றார். அவருக்கென கொண்டுவரப்பட்ட கோப்பி தொடுவாரின்றி
ஆறிக்கிடக்கின்றது.

நான் கேள்வி கேட்பதை மறந்து மௌனமாகி யிருக்கின்றேன், வரப்போகின்ற பதில்களை எதிர்கொள்ளப் பயந்து.

ராணியை
சிறிலங்கா உளவுத் துறையினர்  தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தினார்கள்.
அவர் கற்பழிக்கபட்டார், பல தடவைகள். அவரது கால் பெருவிரல் வெட்டப்பட்டது.

“எனது மனதை கொடுமைப்படுத்தி விட்டார்கள்”
-ராணி தன் உடலை குறுகிப்படுத்திக்கொண்டு அழுகிறார்.

ஒரு பாராளுமன்ற உறுபபினரின் உதவியுடன் ராணி விடுதலை செய்யப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகிறார்.

ஒரு
மாதகாலமாக, குழந்தையைப் போல் தாயாரின் மடியின் பாதுகாப்பில்
படுத்திருந்தது மட்டும் ராணிக்கு இன்னும் நினை விருக்கின்றது. இதை
நினைவுறுத்தும்போது ராணியும் ஒரு தாலாட்டுப்போல கண்களை மூடிக்கொண்டு
முன்னும் பின்னும் அசைகிறார். நான் வெளியே பார்க்கின்றேன். பெப்ருவரி மாத
வெளிச்சம் கொஞ்சமாகத்தான் உள்ளே வருகின்றது. வார்த்தைகள் என்னை
தோற்கடிக்கின்றன.

கடைசியாக ஒரு உடைந்த மனிதையாக ராணி வைத்தியசாலையை விட்டு வெளியேறுகிறார்.

மற்றவர்களால்
உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டவர்கள் உலகை விட்டு நீங்கிய வர்களாகவே
வாழ்கிறார்கள். ராணிக்கும் அப்படித் தான்.  சாப்பாடு, தூக்கம்
எல்லாவற்றையும் வெறுத்து வாழ்ந்தார்.

எல்லோரும் பழசை மறந்துவிடு என்கிறார்கள். அது சுலபம், சொல்பவர்களுக்கு மட்டும்.

தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் தினம் தினம் மனத்திரையில் ஓடும்போது அதை அழிப்பதென்பது இயலாமல்  போய்விடுகிறது.

வைத்தியசாலையிலிருந்து
விடுபட்ட ராணிக்கு வாரா வாரம் பொலிஸ் நிலையத்துக்கு வந்து கையொப்பம்
இடுமாறு உத்தரவு வருகின்றது. ஆனால் அந்தத் தினங்கள் கொடுமையின் உச்சங்கள்.

பொலிஸ்
நிலையத்தில் வைத்து பாலியல் சித்திரவதைகள் தொடர்ந்தன. தலை முடியைப்
பிடித்து இழுப்பார்கள், உடல் அங்கங்களை தொட்டழுத்துவார்கள். இதைத் தவிர்க்க
ஒரு வழியுமில்லை. இயலாமல் தனது தகப்பனாரிடம் முறையிட, ஒன்றும்
செய்யமுடியாத அவர் ராணியை பொலிஸ் நிலையம் செல்லாமல் நிறுத்தினார்.

தொடர்ந்து
ராணியை கண்காணித்து வந்த இராணுவமும் பொலிசாரும் இதனால் கோபம் கொண்டு ஒரு
நவம்பர் மாதம் ராணியின் தகப்பனரை கடத்திக் கொண்டு சென்றனர்.

அவரது ரத்தம் தோய்ந்த உடல் அதே நாள் கடற்கரையருகே கண்டுபிடிக்கப்பட்டது.

“எல்லாம் என்னால்தான் நடந்தது” – ராணி மீண்டும் அழுகிறார்.

“என்னால்தான்
அவர் கொல்லப்பட்டார். அதன்பிறகு சாவதாக முடிவெடுத்து விஷம் சாப்பிட்டேன்.
ஆனால் சாவதற்குக்கூட கொடுத்துவைக்கவில்லை. நான் செத்திருந்தால் இப்போது
எனது அம்மாவும் தங்கச்சியும் உயிருடன் இருந்திருப்பார்கள்.”

தகப்பனாரின்
இறப்பைத் தொடர்ந்து ராணி மீண்டும் பொலிஸ் நிலையம் செல்லத் தொடங்கினார்.
ஆனால் அங்கே நடந்த பாலியற் கொடுமைகளை அவரால் தாங்க முடியவில்லை.

மே
2012ம் ஆண்டு தாயாரின் உதவியுடன் ராணி ஒரு ரகசிய இடத்தில் தங்கத்
தொடங்கினார். மூன்று மாதங்களாக அவர் திருகோணமலையிலிருந்த அந்த ரகசிய
வீட்டைவிட்டு வெளியே வரவேயில்லை.

ஆனால் இராணுவம் விட்டுவைக்கவில்லை. ராணியின் இருப்பிடத்தை தெரிவிக்காவிடில் தாயாராக் கொன்றுவிடுவதாக பயமுறுத்திவந்தனர்.

ஜூலை 8ம் திகதிதான் ராணியின் தாயார் அவருடன் கடைசியாக செல்பேசி மூலம் கதைத்தது. “வீட்டிற்கு வராதே” – என தாயார் வேண்டிக்கொண்டார்.

அதன் பின்னர் வந்த செல்பேசி அழைப்பு அவரது சின்னம்மாவிடமிருந்து.

வீட்டைக்கொழுத்தி விட்டார்கள். தாயும் தங்கச்சியும் உயிரோடு உள்ளே.

“நான் திரும்பிப் போனேன்” - ராணி சொல்கிறார். அவரது குரலில் ஒரு உணர்வுமில்லை.

அயலவர்கள்
எரிந்த வீட்டைச் சுற்றி நின்றார்கள், மௌனமாக. ஒரு வெப்பம் கூடிய நாள்.
தீர்ந்த பெற்றோல் மணம் வீட்டைச்சுற்றி. யாரோவொருவர் ராணியை எரிந்து
சாம்பலான வீட்டினுள்ளே கூட்டிச்சென்றார். இரண்டு எலும்புக் கூடுகள்
சாம்பலுக்கு நடுவே. தனக்கு பரிச்சயமான ஒரு உடையின் ஒரு பாகம் எரிந்தும்
எரியாமலும் தங்கச்சியின் அருகில். அவ்வளவு தான் ராணியின் நினைவில். ஆனால்
அவ்வளவும் நிலையான நினைவாக.

இப்போது ஒளிந்திருப்பதற்கு ஒரு காரணமும் இருக்கவில்லை. எல்லாவற்றையும் இழந்தாயிற்று. தாய், தகப்பன், தம்பிகள், தங்கச்சி.

அயலாரும்,
கிராமத்தவர்களும் அவரை தப்பித்துச் செல்லுமாறு வலியுறுத்தினார்கள். ஆனால்
ராணியின் மனம் மரத்துவிட்டது. அடுத்து வரும் கஷ்டம் இதுவரை பட்டதைவிட
கொடுமையாக இருக்க முடியாதென ராணி நினைத்திருந்தார்.

அதுதான் அவர்விட்ட மிகப்பெரிய தவறு.

சிறிலங்கா
இராணுவத்தின் பிடியில் சென்ற நவம்பர் மாதம் தொடக்கம் 47 நாட்கள் ராணி
சேதலிக்கப்பட்டார். கூட்டம் கூட்டமாக சிங்கள இராணுவத்தால் தினமும்
பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். சிகரட்டுகளால் அவரது உடல் முழுக்க சுடப்பட்டது.
துடுப்பற்ற படகுபோல், திசையின்றி, திக்கின்றி ராணியின் உடலும் உள்ளமும்
உடைந்து நொறுங்கியது. மனிதாபிமானம் கொண்ட ஒரு மனிதனைக்கூட அந்த 47
நாட்களில் ராணி எதிர்கொள்ளவில்லை என்பது மனித குலமே அவமானப்படக்கூடிய
விடயம்.

ஒரு கடிகாரத்தின் முள்ளொலி மட்டும் கேட்டுக்கொண்டிருக்கும்
இந்த சின்ன  அரையிருண்ட அறையில் அடுத்து என்ன நடந்தி ருக்கும் என நான்
யோசித்துப் பார்க்கிறேன். அழுதழுத வேதனையிலும் களைப்பிலும் ராணியின்
வார்த்தைகள் கோர்வைகளின்றி வந்து தடுமாறி விழுந்து மீண்டும் அவரது உடைந்து
போன மனக்குவளைகளில் தேங்கிவிடுகின்றன.

ஒரு உறவினரால் கொடுக்கப்பட்ட
லஞ்சப் பணம் ராணியை அரக்கரர்களின் பிடியிலிருந்து விடுவிக்கின்றது. மன்னார்
மூலமாக படகில் ராணி அரக்கத்தனங்களிலிருந்து விடுபட்டுச் செல்கிறார். ஆனால்
அந்த அரக்கர்களால் கொடுக்கப்பட்ட வடுக்கள் அவரது உடலை விட்டு விடுபட
மறுக்கின்றன.

“என்னை லண்டனிலிருந்து திருப்பியனுப்பினால் நான் செத்துவிடுவேன்” -  உடலாலும் உள்ளத்தாலும் ஏமாற்றப்பட்ட ராணி சொல்கிறார்.

உற்சாகமற்ற
பெப்ருவரி மாதத்தின் பனிமூடிய பகல்வெளிகள் ராணியை சமாதானப்படுத்த ஒரு
வழியுமின்றி ஏங்கி நிற்கின்றன. பதுமராக மலர்க்கொத்தின் நீல நறுமணம் மட்டும்
அறை யில் தங்கி நிற்கின்றது.

நோபல் பரிசு வென்ற அமெரிக்க எழுத்தாளர் எல்லி வீசல் பின்வருமாறு சொல்லியிருந்தார்.

“நான்
எனது நினைவுகளை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறேன். நினைவுகளை
மறப்பவர்கள் குற்றவாளிகள். அவர்கள் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு உடன்
போனவர்கள்.”

இதைத்தான் நானும் செய்யவேண்டும்.

“மலர்களை
மறக்கவேண்டாம்” - நான் சொல்லிவிட்டு மலர்க்கொத்தை எடுத்து ராணியிடம்
அளிக்கிறேன். அதை அவர் மேலே தூக்கி நறுமணத்தை முகர எத்தனிக்கிறார்.

மலர்ந்து கொண்டிருக்கும் மொட்டுக்களின் நடுவே நான் ராணியின் கண்களைக் காண் கிறேன்.
அவை இப்போதும் அகன்று, இளமை யுடன், இலங்கையில் எம் இரண்டு பேருக்குமே
பரிச்சயமான நீல நிற இறக்கைகள் கொண்ட இலைப்பறவைபோல தெரிகின்றன.

 

http://akkinikkunchu.com/new/index.php

  • கருத்துக்கள உறவுகள்

எத்தகைய வார்த்தைகளாலும் விவரிக்க முடியாத கோரமான அனுபவம்..

  • கருத்துக்கள உறவுகள்

உஸ் இதென்ன உண்மையாக இவ்வளவு கொடுமை இந்த பெண்ணுக்கு நடந்ததா? அல்லது ஊடகங்களின் மிகைப்படுத்தப்பட்ட கற்பனையா?...ராணியின் தங்கச்சியை வன்புணர்பு செய்யாமல் உயிரோடு எரித்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் ராணியை மட்டும் திரும்ப,திரும்ப வன்புணர்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்[அவ்வளவு அழகான பெண்ணோ :unsure: ]

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் வாசித்துக்கொண்டும் மட்டுமே இருக்க முடிந்த கோளைகளில் ஒருத்தியாகி வெட்கப்படுகிறேன்.

மே 2012 திருகோணமலையில் ராணி தங்க வைக்கப்பட்டதாக சொல்கிறது. அதன் பிறகுதான் குடிசை எரிப்புச் சம்பவம் இடம்பெற்று தாயும் மகளும் கொல்லப்படுகிறார்கள். 2012இல் இப்படி ஒரு குடிசை எரிந்து இரண்டு தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம் எங்களின் ஊடகங்களில் வந்ததாக தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.