Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் பதினைந்தாம் அகவையை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவலைகள் மனிதர்கள் அனைவருக்குமே உண்டுதான். அதற்காகக் கவலைகொண்டு ஒன்றும்
செய்யாது இருக்க முடியுமா?? கவலைகள் ஆயிரம் இருந்தாலும் அதையே நினைத்து
தலையில் துண்டுடன் மூலையில் முடங்குவதால் யாருக்கும் எப்பயனும் இல்லை
என்னும் இசையின் வாதம் நியாயமானதுதான்.

கிடைத்த வாழ்வை நாம் பற்றிக்கொண்டு அதை மேலும் மேம்படுத்தவேண்டுமே தவிர இல்லாதவற்றை எண்ணி வாழ்வைக் கழிப்பதில் எப்பயனும் இல்லைத்தான்.

நாம் எங்கு வாழ்கிறோமோ அச்சூழலுக்கேற்ப எம்மை நாம் கொஞ்சமேனும் மாற்றிக் கொண்டாலன்றி, எம் வாழ்வு செழிப்புற மாட்டாது என்பது உண்மையிலும் உண்மை.

எனக்கு ஒரு சந்தேகம் இசை. கத்தரிக்காயை கழுவாமலா உங்கள் வீட்டில் பொரிச்சுக் குழம்பு வைப்பார்கள் ???

ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியா எங்களிடமே கறாராக உங்கள் பக்கம் தீர்ப்பளிக்கும் படி கூற என்ன துணிச்சல்!

  • Replies 62
  • Views 10k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இடையால் புகுந்து , குறுகுசால் எடுத்து தனது சிந்தனை தண்ணியை ஆங்காங்கே பொசியவிட்டுள்ளார் கனேடிய நாட்டு நகைச்சுவை அரசனும் , அணித்தலைவருமாகிய இசைக்கலைஞன் . இவரின் வியூகத்தைக் கண்டு நான் உண்மையிலேயே ஆடிப்போய் விட்டேன் .  தனது அணிக்கு சிரிப்புக்குறிகளைப் போட்டே பலத்தை சேர்த்திருக்கின்றார் . அதிலும், 

 

" வாழ்கிற நாட்டுக்கு ஏற்றமாதிரி நடை, உடை பாவனையை மாற்றிக்கொண்டால் ஏன் வித்தியாசமாகப் பார்க்கப்போகிறார்கள்? :blink:

சுடிதாரைப் போட்டுக்கொண்டு கடலில் குளிப்பது..! :D நண்டுக்கறி வாடையுடன் குளிர் ஆடைகளைப் போட்டுக்கொண்டு திரிவது..!  :(  வரி கட்டாமல் ஏய்ப்பது.. :blink: முகத்தில் ஒரு புன்முறுவல் இல்லை.. விட்டால் மூஞ்சியைப் பிளந்துவிடுவேன் என்பதுபோல் பிற நாட்டவரைப் பார்ப்பது.. :( வெயிலுக்கு இரண்டு துண்டு உடையுடன் அவள் போனால் :D நாக்கை தரை வரையில் நீள விடுவது..  :D  இப்படி இருந்தால் அவர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் நடுவர் அவர்களே..! :D "

 

என்று ஆள்பாதி ஆடைபாதி என்ற சொலவடையை எனக்கு நினைவூட்டினார்.  மனிதவாழ்வின் இயல்புத் தத்துவத்தை ,

 

" பிடிச்ச ஃபிகர் கிடைக்காவிட்டால் கிடைச்ச ஃபிகரைப் புடி என்பது முதுமொழி நடுவர்களே..! :D " ,

 

என்ற சிறியவிளக்கத்தால் என்னைக் கிறுங்கடித்தார் என்றே சொல்ல்லாம் . என்றாலும் எதிரணியில் இருவர் இருக்கின்றார்களே ???  எங்கே யாழ்வாலி அழையுங்கள் உங்கள் இறுதி அஸ்திரத்தை ........... கிரகநிலைகள் எப்படி இருக்கின்றன ???? என்று பார்ப்போம் .

 

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர் அவர்களே,

அடுத்ததாக எங்கள் அணியின் சார்பில் தமது வாதத்தை முன்வைக்க களத்தில் மூத்தவர், யாழ்கள நவரச நாயகன் புலனா(நா)ய் புகழ் சாத்திரி அவர்கள் வருகிறார்.

  • தொடங்கியவர்

வாங்கோ சாத்திரி ..........  எங்கே அவுழுங்கள் உங்கள் சாதகக்கட்டை !!!!!!!  எதிரணியின் கிரகநிலைகள் எப்படியிருக்கின்றன என்று பார்ப்போம் .

  • கருத்துக்கள உறவுகள்

பதினைந்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்து இளமை மிடுக்கோடு நிமிர்ந்து நிற்கும் யாழ் களத்திற்கும். எத்தனையோ தடைகள் வந்தபோதும் நேர பண விரயங்களிற்கு மத்தியிலும் மன உழைச்சல் வந்தபோதெல்லாம் சோர்ந்து போகாமல் தொடர்ந்தும் உலகத் தமிழர் எல்லோரையும் தமிழால் இணைத்து வைத்து   இழுத்து செல்லும்  மோகனிற்கும்.  மேகனிற்கு  உதவியாக   கள உறவுகளிற்கு  இடையே வரும் ஆயிரம் பிரச்சனைகளையும்   தட்ட வேண்டிய இடத்தில் தட்டி  தழுவ வேண்டிய இடத்தில் தழுவி யாழ் இணையத்தின் தங்கு தடையின்றி  இயங்க வைக்கும் மட்டடிறுத்துனர்களிற்கும்.  யாழின் பதினைந்தாவது  வருடத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்து  ஒஸ்ரேலியா பிறிஸ்பேண் கடற்கரையில் தனது சுண்டல் விற்பனையையும்  நிறுத்திவிட்டு  என்னை தொடர்பு கொண்டு பட்டி மன்றம் நடாத்த ஒழுங்கு செய்யச் சொல்லி கேட்ட சுண்டலிற்கும்.  பட்டி மன்னறத்தை  தலைமை வகித்து வழி நடாத்த சொல்லி கேட்டதும்  ஒத்து கொண்டு ஆர்வத்தோடு நடுவர்களாக இங்கு  அமர்ந்திருக்கும் இரு நடுவர்களிற்கும் எனது அன்பும் நன்றியும் கலந்த வணக்கங்கள் கூறிக்கொண்டு எனது அணித் தலைவர் யாழ் வாலிக்கும் நன்றி கூறி  நாம் புலம் பெயராது   தாயகத்திலே வாழ்ந்திருந்தால்  சிறப்பாக  வாழ்ந்திருப்போம்  என்கிற அணிக்காக எனது வாதத்தை இங்கு கொட்டுகிறேன்.

ஆகாயம் நீலம். ஆழ்கடல் நீலம். ஆதி பகாவன்  நீலம். அண்டசராசரமே  நீலம். வெள்ளைத் துணிகளை  மேலும் வெண்மையாக்க போடுவதும் நீலம்.எங்கள் அணியின் வாதங்களின்  நிறமும் நீலம். ஆனால் நீளம்  அல்ல  ஆழம்..நிலம்  எமது நிலம் நாம் அங்கிருந்தால் சிறப்பாக  இருந்திருப்போம்.


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு..எங்கள் பகைவர் ஓடி மறைந்தார்....எதிரணியினர் ஓடப் போகிறார்கள்..நடுவர்களே..


எதிரணியினரிற்கு  வாழ்வும் வளமும்  புலம் பெயர்ந்த பின்னர் தான் கிடைத்ததாம். எதிரணி சார்பில்  முதலாவது  வாதத்தை தைரியப் புயல் என்று அவர்களால் வருணிக்கப்பட்ட தமிழச்சி வைத்தார்.  ஒத்துக்கொள்ளுறம் ஜயா அவர் புயல்தான். அவர் சுற்றி சுழன்றடித்தில் குப்பை  கூழம் புழுதி எல்லாவற்றையும் இங்கு பட்டி மன்ற மேடையில் கொண்டு வந்து கொட்டிவிட்டு போயிருக்கிறார்.இன்னமும் எல்லோரும் கண்ணை கசக்கியபடியே இருக்கிறார்கள்.அவர் கேட்கிறார்  வெளி நாடு வந்தால் தானாம் கல்வியில் சிறந்து விளங்குகிறார்களாம்.  என்ன கொடுமை  இது  கல்வித் தாராதரம் என்பது  ஜரோப்பாவில் 60 வீதம் இருந்த பொழுது எமது தாயகத்தில்  95 வீதம்  இருந்திருக்கிறது.  தலைசிறந்த கல்லூரிகளையும் பல்கலை கழகங்களையும் கொண்டதாக  இருக்கிறது எமது நாடு. கல்வி என்பது இப்பொழுதும்  அதன் சிறப்போடுதான் இருக்கின்றது. . அடுத்ததாக அவர் சொல்கிறார் வெளிநாட்டில் தாராளமாக  மருத்துவ வசதி கிடைக்கிறதாம். உண்மைதான்   ஏனெனில் அதற்கு ஏற்ப  வியாதிகளும் தாராளமாய் கிடைக்கிறது..  அதனால்  மருத்துவ  வசதிகளும்  தாராளமாக கிடைக்கத்தானே வேண்டும்.   ஊரில் என்னுடைய  தாத்தா  இறக்கும் போது  அவரிற்கு வயது 96.  எனக்கு தெரிந்து  அவரிற்கு வந்த வியாதி என்றால்  தைமாதத்தில் வருகின்ற  தடிமன் காச்சல் மட்டும்தான்.  அதற்காக அவர்  கொஞ்சம் வேப்பம் பட்டை  மாதுளம் கொட்டை  தூதுவளை .மல்லி  இதையெல்லாம் அவித்து  வடிகட்டி  குடித்து விட்டு வாய் கச்சல்  போவதற்காக  கொஞ்சம் தேனை  தொட்டு நாக்கில் தடவிகொள்வார். அவ்வளவுதான்.


ஆனால் இங்கு  வருகின்ற வருத்தங்களிற்கும் பெயர் தெரியவில்லை . வருத்தங்களிற்காக  வைத்தியர் தருகின்ற  மருந்துகளின் பெயர்களும் புரிவதில்லை..இப்படித்தான் கடந்த மாதம் ஒருநாள் காலை  எழுந்து கண்ணாடியில் எனது முகத்தை பார்த்த எனக்கு அதிர்ச்சி.  உன்ரை மூஞ்சையை  நீயே கண்ணாடி பாத்தால் அதிர்ச்சி வராமல் பிறகு என்ன வரும் என எதிரணியினர் மனதிற்குள் நினைப்பது புரிகிறது. ஆனால் இது வேறை அதிர்ச்சி   எனது கழுத்தை சுற்றியும் உடலும் சிவந்து போய் சிறிய பருக்கள்  நிறைய இருந்தது . உடனேயே  பாதிநாள் வேலைக்கு லீவு போட்டு விட்டு எனது குடும்ப வைத்தியரிடம் ஓடினேன் அவரோ  வழைமைபோல  நாக்கை  நீட்டு  கண்ணை காட்டு என்று  எல்லா சோதனையையும் முடித்து  விட்டு  உதட்டை பிதுக்கி  எல்லாம் சாதாரணமாய் இருக்கு  எனவே போய் தோல் ஸ்பெசலிஸ்ற்  வைத்தியரை  பார் என்றதோடு தனது கட்டணத்தை கறந்து விட்டார்.  எல்லா வைத்தியருக்குமே தோல் இருக்கும்தானே  இவருக்கு மட்டும் ஸ்பெசலா  என்ன தோல் இருக்க போகுதென்று  நினைத்தபடி அடுத்நாள் மீண்டும் பாதிநாள் லீவு..  தோல் வைத்தியரிட்டை போய் காட்டினன். அவரும் தன் பங்கிற்கு  உருட்டி பிரட்டி  பார்த்திட்டு  நீ பாவித்த (ஸ்பிரே) வாசனை  திரவியம்  உனக்கு ஒத்து வரவில்லை  என்றவர்.  ஆங்கில எழுத்துக்கள் எல்லாத்தையும்  போட்டு  குலுக்கி கீழே போட்டது போலை  அதன் எல்லா எழுத்தையும் கலந்து  ஒரு பெயரை சொல்லி  அதுதான் உனது வருத்தம்  எனவே அந்த ஸ்பிறேயை பாவிக்காதே என்றதோடு  உடலில் பூசுவதற்காக இரண்டு வகை கிறீமும்  மூன்று வகை குளிசையும்  எழுதித் தந்தார்.


அந்த ஸ்பிறேயை நான் வாங்கியதற்கான காரணத்தையும் இங்கு சொல்லியாக வேண்டும்  அதற்கு காரணம் தொலைக்காட்சி விளம்பரம்தான். தொலைக்காட்சியில்  என்னைப்போல  கட்டழகான  ஆண்மகன் ஒருவர்  இந்த ஸ்பிரேயை  அடிப்பார்  உடனேயே வீதியால் போகும்  அழகிகள் எல்லாரும் அவரை ஓடிப்போய் தழுவுவார்கள். அந்த விளம்பரம்தான் என்னை  அந்த ஸ்பிரேயை  வாங்க வைத்தது.இப்படியான  விளம்பரமான போலி வாழ்க்கைத்தான்  நாம் வெளிநாட்டில் வாழ்கிறோம்.கடைசியாய்  வாங்கின ஸ்பிறேயை  எறியவும் மனம் வராமல் அதனை  ஆசையாய் நான் வளர்க்கும் பூனை  மீனுவிற்கு அடித்து விட்டேன் அது அப்படியே  ஓடிப்போனதுதான்  இரண்டு நாளாய் வீட்டுப் பக்கமே வரவில்லை. என்ரை நிலைமை இப்படி. அடுத்தாக தைரியப் புயல் அவர்கள் சொன்னது  வெளிநாட்டில்தான் சுத்தம் சுகாதாரமாக வாழ்கிறாராம் என்ன கொடுமை..  எதிரணியினர் ஊரில் குளிக்காமல் முகம் கழுவாமல். பல் தீட்டாமல். கூட்டி துப்பரவு செய்யாமல் இருந்ததற்கு  நாங்கள் என்ன செய்யமுடியும். வெளிநாட்டிற்கு வந்துதான் குளிக்கத்தொடங்கியிருக்கிறார்கள். என்பதை அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.சரி  தைரிய புலலை  விட்டு விடுவோம்.ஆனால் எதிரணியினரிற்கு ஒரு  தகவலை சொல்கிறேன் ஒரு பலூனை ஊதிய பின்னர் கையை விட்டால் வேகமாக வரும்  சிறிய காற்றை  புயல் என்று நம்பி ஏமாந்து விட்டீர்கள்.

 அடுத்தாக   எதையோ பிரிந்த சோகத்தில் ஜுவா  அவர்கள்  வந்து சொன்னார்  ஊரிலை மட்டுமா  இயற்கையான  பொருட்கள் கிடைக்கிறது இங்கு வெளிநாட்டில  கூடத்தான் பயோ   தரமான இயற்கை  காய் கறி கிடைக்கிறது  என்கிறார்.  இங்கு ஒரு  சந்தையில் ஒரு தடைவை  சமான் வாங்க போயிருந்தபோது  ஒரே மாதிரியன  கத்தரிக்காயை  இரண்டாக பிரித்து  ஒன்றிற்கு பயோ என்று  எழுதியிருந்ததற்கு விலையும் அதிகம்.  சந்தைக்காரன் எனக்கு தெரிந்தவன்தான் அவனிடம்   இந்த பயோ கத்தரிக்காய்க்கும் சாதாரண கத்தரிக்காய்க்கும் என்ன வித்தியம் என்று கேட்டேன். அதற்கு அவன் பயோ என்று எழுதியிருந்த  மட்டையை எடுத்து விட்டு  இதுதான் வித்தியாசம் என்றான். ஜுவா தன்னுடைய கடையில்  காய்ந்து போன  காய்கறிகளையெல்லாம்  பயோ என்று எழுதிப்போட்டு  ஏமாற்றி வியாபாரம் செய்வதை  இங்கு வந்து கூறியுள்ளார் நடுவர்களே..தன்னுடை  வியாபார தந்திரத்தை நியாயப் படுத்துவதற்காக  டாவின்சியின்  கூர்ப்பு கொள்கையை  உதாரணம் காட்டிய ஒரேயொருவர் இவர்தான்.  எனவே அவரது கடையில் சமான் வாங்குபவர்கள் கவனமாக இருங்கள்.அடுத்தாக அவர் சொல்கிறார் ஊரில் கலர் கலராக மழை பெய்ததாம். உண்மைதான்  நல்லவர்கள் இருக்கும் ஊரில்தான் மழை பெய்யும்.  அதுவும் கலர் கலராக மழை பெய்கிறதென்றால் ஊரில் இருப்பவர்கள் எவ்வளவு றெம்ப நல்லவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஜுவா போன்றவர்கள் இருக்கும் நாட்டில் இயற்கையே பொறுக்க முடியாமல்தான்  மழையே இறுகிப்போய்  பனியாக கொட்டுகிறது.


அடுத்தாக எதிரணியில் பேசிய சுபேஸ் அவர்கள் வரும்போதே நடுவர்கள் நித்திரை கொள்கிறார்கள் என்றபடி  வந்தவர்  வாத்தியார்கள் என்றாலே ஏதோ அலர்ச்சி போல் இருக்கிறது எமதணி வாத்தியாரையே  குறிவைத்து தாக்கியிருக்கிறார்.இதிலிருந்தே  புலம்பெயர்ந்து வாழும் எமது இளம் தலைமுறை  வயதானவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் பெரியவர்களிற்கும் எவ்லவளவு தூரம் மரியாதை தருகிறார்கள் என்பது புரிகிறது நடுவர்களே...இதுக்குள்ளை அவர் ஒரு கதை சொன்னார்  அவரது நண்பர் ஒருவர் விலாசம் காட்ட  ஊருக்கு போனாராம் அவரை யாரும் அங்கை மதிக்கேல்லையாம்.தெரியமல்தான கேக்கிறேன்  எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அகதி வாழ்க்கை வழும் ஒருவரிற்கு  ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அதனை எதிர்கொண்டு செந்த மண்ணில் வாழும் ஒருவர் எதற்கு  வெளிநாட்டில் இருந்து வந்தவரை ஆ..வென்று பார்க்கவேண்டும். என்று இவரை கேட்கிறேன்.அடுத்தாய் அவர் சொல்லுறார் இங்கையும் ஆறு இருக்காம் காத்து  இருக்காம்.கடற்கரை இருக்காம். எல்லா வசதியும்  இருக்காம். ஆனால் அவரை பார்த்து  ஒரு கேள்வி  இங்கு முப்பது  வயதிற்கு மேல் எத்தனை ஆண்களிற்கு மண்டையில்  மயிர் இருக்கின்றது??? 


காரணம் என்ன?தேட தேட தேவைகள் அதிகம். ஆசைகள் அதிகம் அதற்காகவே ஓடுகிறார்கள். ஆளாளிற்கு இரண்டு வேலை  திருமணமானவர்கள்  தங்கள் உறவைக்கூட நாள் குறித்து  நேரம் குறித்து  செய்யவேண்டிய  வாழ்க்கை . இரவு வேலைக்கு போகும் கணவன் பகல் வேலை முடிந்து  வரும் மனைவியிடம்  இரயில் நிலையத்தில் பிள்ளையை கொடுத்து விட்டு போகின்ற நிலைமை. இப்படித்தான் எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில்  கணவன் இரண்டு  வேலை .மகன் நித்திரையால் எழும்ப முதலேயே  வேலைக்கு போனால் அவன் நித்திரையான பிறகுதான்  வீட்டிற்கு வருவான். ஒரு நாள்  இரவு நித்திரையில் திடுக்கிட்டு விழித்த மகன்  தாய்க்கு பக்கத்தில் படுத்திருந்தவரை பார்த்து பயத்தில் அலறியபடியே  தாயாரை  தட்டி எழுப்பி  அம்மா..அம்மா உனக்கு பக்கத்திலை யாரோ  கள்ளன் வந்து படுத்திருக்கிறான் என்று கத்தியிருக்கிறான்.  டேய் அது கள்ளன் இல்லை அதுதான்தான்ரா உன்ரை அப்பா என்று தாயார் மகனை சமாதானப்படுத்தியிருக்கிறார்.இதுதான் இங்குள்ள நிலைமை.எனவே தம்பி சுபேஸ் உங்களிற்கும் இந்த நிலைமை வராமல் பாத்துக் கெள்ளவும் என வேண்டி அடுத்ததாக.
வந்தாரய்யா  யாழ் வாணன். உரை விட்டு பிரிந்த சோகத்தில் தன்னுடைய பெயரையே யாழ் வாணன்  எனவைத்துக்கொண்டு என்னமா பொய் சொல்லுறார்.அடுத்தாய் இவர் பட்டி மன்றத்திலை பேசவந்தாரா  அல்லது  தைரியப் புயல். தைரிய லக்சுமிசி  என்று  மிக்சி  அரைத்து போல் தமிழிச்சி புகழ் பாட வந்தாரா??என்று சந்தேகமாய் இருக்கிறது.அதே நேரம்  வெளிநாடு வந்ததால் தானாம்  மாணவர்கள் சாதனை செய்தார்களாம். பாவம் இவர் தாயக செய்திகளையே படிக்கிறேல்லையெண்டு நினைக்கிறேன்.கடந்த  பரீட்சையில்  கல்வியில் தமிழ் மாணவர்கள் எவ்வளவு சிரமத்தின் மத்தியிலும் அதிகளவு புள்ளிகள் எடுத்து சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பது இவரிற்கு புரியவில்லை.அதைவிட  புலம்பெயர் தேசத்தில் தான் பிள்ளைகள் பெற்றோர்களோடு  அன்பாகவும் தோழமையோடும் இருக்கிறார்களாம். உண்மைதான்  மகன் சிகரற்றை  வாயில் வைத்துக்கொண்டு அப்பாவிடம் நெருப்பு கேக்கிறான்.அம்மா தான் குடித்த பாதி வைனை மகளிடம் நீட்டுகிறார்.இதைவிட அன்பாகவும் தோழமையாகவும இருக்க முடியுமா?? அடுத்ததாக சொல்கிறார் ஊரில் இருந்திருந்தால் எமது பெண்கள் ஆணாதிக்கத்தால் பாதிக்கப் பட்டிருப்பார்களாம்.ஜயா உலகத்திற்கே பெண்கள் என்றால் எப்படி தைரியமாக இருக்கவேண்டும் என்று நிலத்திலும் காடுகளிலும் ஏன் கடலிலும் சாதனைகளை நிகழ்த்திய காட்டியவர்கள் எங்கள் தமிழ்பெண்கள்  இன்னமும் தங்கள் வாழ்விற்காக போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் இதெல்லாம்  இந்த பாழ்வாணணிற்கு தெரியாதா??இதெல்லாவற்றிக்கும் ஒரு படி மேலே போய் எங்கள் நடுவர்  கோமகனிற்கே கற்ற கசடற  என்று திருக்குறள் விளக்கம் கொடுத்திருக்கிறார் என்றால் பாருங்கள்.ஆனால் கடைசிலை  எங்கள தரப்பு நியாயங்களை புரிந்து கொண்டு தான் ஊரில் போய் வாழத் தயார் என்று  சேம் சைற் கோல் அடித்து விட்டார். இவர் தனது அவதாரில் திருச்செந்தூர் முருகன் படத்தை போட்டிருக்கிறார் ஆனால் இவரிற்கு பழனி முருகனே பொருத்தமாக இருக்கும் என்று பரிந்துரை செய்து  அடுத்ததாக  வில்லே இல்லாமல் வித்தை காட்டும் அர்ஜுன் என்ன சொல்கிறார் என்று பாக்கலாம்.


பாவம் தனக்கு கொடுத்த தலைப்பையே மறந்து போய் வந்ததுமே நடுவர் சுமேயை பார்த்து  மின்னலிடை என்று ஜொள்ளு விடத் தொடங்கியவரிற்கு எங்கள் அணியை பார்க்கும் போது  ஏதோ சாத்திரம் கிளிஜோசியம் சொல்பவர்களைப் போல இருக்கிறதாம். இவரே ஒவ்வொருநாளும் யாழ் களத்தில் கருத்து எழுத முதல் தனது தினராசி பலனை பார்த்து விட்டுத்தான் வந்து எழுதத் தொடங்குவார் என்பது எத்தனை பேரிற்கு தெரியும். இன்று உங்களிற்கு சுப யோகம் என்றால்தான் அரசியல் எழுதுவார். இன்று உங்களிற்கு கரிநாள்  என்றிருந்தால்  பேசாமல் சினிமாபற்றி எழுதிவிட்டு போய்விடுவார்.இவர் நிலைமை இப்படியிருக்க தேடல் இருந்தால் தான் மனித வாழ்வாம் அதனால் எதையொ தேடித்தானாம் கனடா வந்தாராம்.இவர் தேடி வந்தது கிடைத்து விட்டதா? ஜயா உழுகிற மாடு என்றால் உள்ளுரிலையும் உழும் வெளிநாடு வந்துதான் உழவேண்டும் இல்லை. அடுத்ததாய் சொல்கிறார் ஊரிலை அம்மா ஈரவிறகை ஊதி ஊதி சமைத்ததை இப்ப நினைத்தாலும் கண்கலங்குதாம்..அதைத்தனய்யா நாங்களும் சொல்லுறம் இப்பவும் கண் கலங்குதல்லா அதுதான் பாசம்..அதூன் அன்பு.அந்த தூய்மையான அன்பு ஊரிலைதானய்யா இருக்கு.இங்கை வெளிநாட்டிலை குக்கரிலை மனைவி சமைத்த  உணவை உங்களால் நினைவில் வைத்திருக்க முடிகிறதா?? அவர் குழம்பில் மிளாய்தூளை அதிகமா அள்ளிப்போட்டால்தான் உங்கள் கண்ணில் கண்ணீர்வரும். உண்மையான பாசத்தோடை வராது.


அடுத்தாய் வெளிநாட்டிலை இருந்தால்தானாம்  ஜமேக்கா . கியூபா போகலாமாம்.எதுக்கு கஞ்சா அடிக்கவா??எங்களிற்கு காரைநகர் கஜேரனா கடற்கரைதானய்யா  கியூபா. கீரிமலை கடல்தான் ஜமேக்கா இங்கை இல்லாத என்னத்தை அங்கை கண்டிருப்பார்.கூவிலில்  கள்ளடித்து விட்டு கீரிமலையில் குளித்துவிட்டு கடலைவடை வாங்கி கடித்தபடி கடற்கரைமண்ணில் புரண்டு விட்டு கடைசியாய் சேந்தாங்குளம் சந்தியில் வந்து சத்தியெடுத்து விட்டு போகும் சுகம். இவர் சொன்ன கியூபாவில் வருமா??அடுத்ததாய் ஊாரில் பிறேக் இல்லாத சைக்கிளில் திரிந்தவன் இங்கு காரில் போகிறானாம்.உண்மைதான் ஊரில் பிறேக் இல்லாத சைக்கிள் அவனது சொந்தப் பணத்தில் வாங்கியது நிம்மதியாய் ஓடித் திரியலாம் ஆனாய் இங்கு வாங்கிய கார் வெறும் பகட்டிற்காக  கட்டுப்பணத்தில் கடனிற்கு வாங்கியது ஓடும்போது கூட பயந்து பயந்துதான் ஓடவேண்டும் ஒரு மாத காசு ஒழுங்காய் கட்டாவிட்டாலும் காரை பிடுங்கிக் கொண்டு போய்விடுவாங்கள் இது தேவையா??களத்தில் அவ்வப்போது பச்சை பச்சையாக கருத்துக்களை வைக்கும்  அர்ஜுனிற்கு  தமது அணிக்கு கருத்து எழுதுவதற்காக    ஒதுக்கப்பட்ட நிறம் பச்சை என்பதையே கவனிக்காமல் கருத்தை வைத்திருக்கிறார். எனவே இவர்  வேறை என்னத்தைத் தான் ஒழுங்காக கவனித்திருப்பார் என கேட்கிறேன்.


அடுத்ததாக  இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்குள் இடையில் புகுந்து  விசில் அடித்தது மாதிரி பட்டி மன்றத்திலும் இடையில் புகுந்து  புங்கையூரானிற்கு  குதிரையோடி  அணித்தலைவர் இறுதியாகத் தொகுப்புரை வைக்கும் பட்டி மன்ற மரபையே  மாற்றியமைத்திருக்கிறார்  எதிரணித்தலைவர். சரி இருக்கட்டும் நடுவர்களே இவர்  இங்கு பட்டிமன்றத்தில் கருத்து வைத்தாரா அல்லது பரதநாட்டியம் ஆடினாரா என்று  சந்தேகமாக இருக்கின்றது  தயவு செய்து அவரையே கேட்டுச் சொல்லுங்கள். காரணம் அவர் வைத்த கருத்துக்களைவிட அவர் முகக் குறிகள்  போட்டு அபிநயம் பிடித்ததுதான் அதிகமாக இருக்கின்றது. பேசாமல் அடுத்த யாழ்கள ஆண்டு விழாவிற்கு பட்டிமன்றம் நடத்தாமல் இசைக்கலைஞனின் பரதநாட்டியத்தை அரங்கேற்றலாம் சுண்டல் நினைவில் வைத்திருக்கவும். அடுத்ததாக அவர் என்ன சொல்ல வந்தார் என்று பாக்கலாம் அவர் சொல்கிறார்  ""பிடிச்ச பிகர் கிடைக்காவிட்டால்  கிடைச்ச பிகரை ""பிடியாம்..என்னே தத்துவம். ஆகவே இவர்களிற்கு  ஒரு கொள்கைகிடையாது . ஒரு குறிக்கோள் கிடையாது. ஒரு தெளிவான பாதை கிடையாது எங்கேயாவது  எப்படியாவது வாழ்ந்திட்டு போவமய்யா  என்று  விலங்கு  வாழ்க்கை  வாழ்ந்து விட்டு போகலாம் என்பதில் தெளிவாக இருக்கிறார்களாம்.


அடுத்தாய்  அவர் மிகப்பெரிய ஒரு கேள்வியை கேட்டார் ஊரிலை பனியை பார்த்தீர்களா என்று..யார் சொன்னது இல்லையென்று எதிரணித் தலைவரைப்போல நிறைய பனிகளை ஊரில் பார்த்திருக்கிறோம் நடுவர்களே .அதே நேரம் ஊரில் எமது கல்வி முறையை  சப்பித் துப்பும்  மனப்பாடம் என்கிறார். எமது கல்வி முறையில் படித்ததால்தான் இவரே இன்று பொறியியலாளர் ஆகியிருக்கிறார் என்பதை மறந்து விட்டார் போலும் . எமது கல்வி முறை  பல வழிகளையும் காட்டி அனைத்து விடயங்களையும் கற்பித்து விடும்  இறுதியாக  நீ ஒன்றை தெரிவு செய்யலாம் என்று சொல்லி விடும். ஆனால் வெளிநாட்டு இன்றைய கல்வி முறை  குதிரைக்கு மட்டை கட்டி விட்து போன்ற கல்வி முறை  ஒன்றை படித்து விட்டு அதே துறையில் வேலை கிடைக்கா விட்டால் அவனிற்கு இன்னொரு துறையை பற்றிய அனுபவம் இல்லை.அவன் மீண்டும் படிக்க போக வேண்டும். அதற்குள் அவனிற்கு வயதாகிவிடும் உதவிப் பணத்தில் தான் வாழ்க்கையை ஓட்டலாம். ..இரண்டும் இரண்டும் எத்தனை என்று  கல்குலேற்றரில்  கணக்கு பார்த்து  சொல்பவர்களிற்கு   பெருக்கல் .பிரித்தல்.கழித்தல் . வகுத்தல்  என்று மனதிலேயே கணக்கு போட்டு  பட்டென்று பதில் சொல்லும்.எங்கள் கல்வியை தரமில்லாத  கல்வி என்று சொன்ன ஒரேயொருவர் இவர்தான்.


அடுத்தாக சுடிதாரை போட்டு கொண்டு குளிக்கிறாங்களாம்  குளிக்கட்டுமே . இஸ்லாமிய பெண்கள்  கனடாவில்  பர்தா போடுவதில்லையா.ஆண்கள் தாடிவைப்பதில்லையா. ஆபிரிக்கர்கள்.தங்கள் பாரம்பரிய உடை அணிவதில்லையா.யூதர்கள் சிறிய தொப்பி அணிவதில்லையா.சீனர்கள் தங்கள்  பட்டு உடையணிந்து  மேளம் கொட்டி தங்கள் புது வருடத்தையே கொண்டாடுவதில்லையா. அதெல்லாம்   ஒரு  இனத்தின் அடையாளம். நீங்கள் வேண்டுமானால் இரண்டு துண்டு உடையென்ன அது இல்லாமலே  அலையலாம். உண்மையில் உடல் முழுவதையும் மறைத்தபடி நீச்சலடிப்பதற்காக கண்டு பிடிக்கப்பட்டதொரு அற்புதமான கண்டுபிடிப்புத்தான்  சுடிதார் என்பது இவர்களிற்கு புரியவில்லை.இறுதியாக    எதிரணியினரை பார்த்து நான் கூறுவது என்னவெனில்.


விரலிற்கேற்ற வீக்கம் இருக்கவேண்டும் என்று ஊரில் பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் இங்கு வெளிநாட்டில் வசிப்பவர்கள் கைவிரல்கள் எல்லாமே விரலை மிஞ்சி வீங்கிப்போய் இருக்கின்றது.தேவைகளிற்கு அதிகமாகவே தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம் .வெளிநாட்டில் சுதந்திரமாக வாழ்கிறோம் என்பது பொய்  இங்கு நாம் பெரு முதலாளிகளின்  நுகர்வு அடிமைகள். ஊரில் ஒரு சைக்கிள் வாங்குவதென்றாலும்  அவன் தனது உழைப்பை சிறுக சிறுக சேமித்து பணத்தை கொடுத்து அதை வாங்குகிறான் ஆனால் இங்கு அப்படியா?? கார் வேண்டுமா  ஒரு கையெழுத்து வைத்துவிட்டு கரை கொண்டுபோ என்பார்கள். பத்தாயிரம் யூரோ காரை  மாதா மாதம்  வட்டியோடு பணம் கட்டி இருபதாயிரத்திற்கு வாங்கிவருவோம்.பணம் கட்டும் காலம் ஆறு வருசமோ ஏழு வருசமோ  ஆனால் பணம் கட்டி முடியும் போது கார் ஓடமுடியாமல் பழுதாகிப் போயிருக்கும் ஆனாலும் பணத்தை கட்டிமுடித்தேயாக வேண்டும்.அதே போலத்தான் சொந்த வீடு  வாங்க வேண்டும் என்கிற ஆசையில் வீட்டை வாங்கி விடுவார்கள்  . வீட்டின் வங்கிக் கடன் 30 வருடங்களாக இருக்கும் ஆனால் வீட்டை வாங்குபவரிற்கு வயது அப்போ 40 தாக இருக்கும். வீட்டுக் கடனிற்காக  ஓடியோடி உழைத்து  வீடு அவரிற்கு சொந்தமாகும்போது  ஒன்று அவர் உயிரோடு இருக்கமாட்டார் . சொந்த வீடு  செத்த வீடாக  மாறியிருக்கும்.அல்லது வருத்தங்களோடு  வயதாகி மருந்து குளிசைகள் மட்டுமே சாப்பாடாக மறிப்போயிருக்கும்.. இந்த வாழ்வு தேவையா இதே தான் ஊரில் எலிவழையாளாலும் தனிவழை என்பதுபோல  கடனே இல்லாமல் குடிசையோ  இல்லை கோயில் மடத்திலையானாலும் காலை நீட்டி சுகமாக படுத்திருக்கலாம்.அதை விட்டு இங்கு மாத கடைசி வருட கடைசி என்றாலே கடிதப் பெட்டியில் வந்து விழும்  பணம் கட்டவேண்டிய  கடிதங்கள் வரி என்று என்று எமது உழைப்பு இன்னொரு பக்கத்தால் உறுஞ்சப் படுகின்றது. ஊரில்  வருடத்திற்கு ஒருதடைவை வெறும் 15 ருபாய் சோலை வரி கேட்டு வந்த  கிரமசபை ஊழியரையே  இது என்னுடைய காணி. வரி .வட்டி. திறை .யாரிடம் கேட்கிறார் வரி மானங்கெட்டவனே  என்று கட்டபொம்மன் வசனம் பேசியபடி கொடுவா கத்திகொண்டு துரத்தியவர்கள் நாங்கள்.


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் எம் நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் எம் நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் எம் நாடே 
  எனவே எம் நாட்டில் வாழ்ந்திருந்தால் நாம் இன்னும் சிறப்பாக வாழ்ந்திருப்போம் என்றதோடு மட்டுமல்லாது மன நிம்மதியோடு வாழ்ந்திருப்போம் என்று கூறி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.

Edited by nunavilan

  • தொடங்கியவர்

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் எம் நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் எம் நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் எம் நாடே !!!!!!!!


எங்கு எதனால் அடித்தால் நடுவரை வீழ்த்தலாம் என்று தெரிந்து அடித்திருக்கின்றார் சாத்திரி  . மனிதவாழ்வை காட்டாற்று வெள்ளத்துடன் ஒப்பிடுவார்கள் . எப்படி ஒரு காட்டாறு பொங்கும் நுரையுடன் சீறிக்கிளம்பி பல நெளிவு சுளிவுகளைக் கடந்து , தெளிந்த ஓடையாக மாறி இறுதியில் கழிமுகவடிவம் கொண்டு கடலுடன் சங்கமிக்கின்றதோ அப்படியே தனிமனிதவாழ்வின் நெளிவுசுளிவுகளை சாத்திரியின் வாதத்தில் கண்டேன் . ஆரம்பத்திலே பல போரியல் பொறிமுறைகளை உருவாக்கி இறுதியில் ,

 

" வெளிநாட்டில் சுதந்திரமாக வாழ்கிறோம் என்பது பொய்  இங்கு நாம் பெரு முதலாளிகளின்  நுகர்வு அடிமைகள். ஊரில் ஒரு சைக்கிள் வாங்குவதென்றாலும்  அவன் தனது உழைப்பை சிறுக சிறுக சேமித்து பணத்தை கொடுத்து அதை வாங்குகிறான் ஆனால் இங்கு அப்படியா?? கார் வேண்டுமா  ஒரு கையெழுத்து வைத்துவிட்டு கரை கொண்டுபோ என்பார்கள். பத்தாயிரம் யூரோ காரை  மாதா மாதம்  வட்டியோடு பணம் கட்டி இருபதாயிரத்திற்கு வாங்கிவருவோம்.பணம் கட்டும் காலம் ஆறு வருசமோ ஏழு வருசமோ  ஆனால் பணம் கட்டி முடியும் போது கார் ஓடமுடியாமல் பழுதாகிப் போயிருக்கும் ஆனாலும் பணத்தை கட்டிமுடித்தேயாக வேண்டும்.அதே போலத்தான் சொந்த வீடு  வாங்க வேண்டும் என்கிற ஆசையில் வீட்டை வாங்கி விடுவார்கள்  . வீட்டின் வங்கிக் கடன் 30 வருடங்களாக இருக்கும் ஆனால் வீட்டை வாங்குபவரிற்கு வயது அப்போ 40 தாக இருக்கும். வீட்டுக் கடனிற்காக  ஓடியோடி உழைத்து  வீடு அவரிற்கு சொந்தமாகும்போது  ஒன்று அவர் உயிரோடு இருக்கமாட்டார் . சொந்த வீடு  செத்த வீடாக  மாறியிருக்கும்.அல்லது வருத்தங்களோடு  வயதாகி மருந்து குளிசைகள் மட்டுமே சாப்பாடாக மறிப்போயிருக்கும்.. இந்த வாழ்வு தேவையா "

 

என்று ஒரேயொரு " பொக்ஸ் அடியினால் "  எதிரணியை திணறடித்து விட்டார் . இதைத்தான் " தவளைப்பாச்சல் " என்று சொல்வதோ ??? யாழ் கருத்துக்களத்தின் இரண்டு மூத்த குடிமக்கள் , பலகளம் கண்டவர்கள் ஓரணியில் நின்று கொடுக்குக் கட்டியிருக்கின்றார்கள் . எனக்கு எதிரணித் தலைவரைப் பார்க்க மனசு சங்கடமாக இருக்கின்றது . இந்த நடுவர் என்ற முள் கிரீடம் எனக்கு வலிக்கின்றது .  ஆனாலும் இசைக்கலைஞனில் வைத்திருக்கும் நம்பிக்கை கலையவில்லை . எங்கே அழையுங்கள் இசைக்கலைஞன் உங்கள் கங்காருதேசத்து குரூஸ் ஏவுகணையை................

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனையில் பிறந்த யாழ் களமே,

சிற்பமென உனைச் செதுக்கி,,

சீராட்டி வளர்த்தெடுத்து,

பூரித்து மகிழ்ந்திருக்கும்,,

மோகன் அண்ணாவுக்கு முதல் வணக்கம்!,

வாசல் கதவுகளின் துவாரபாலகர்களாய்,

விழி மூடாது காத்திருக்கும்,

காவலர்களுக்கும் வணக்கம்!

பட்டிமன்றத்தின் நடுவர்களுக்கும்,

பணிவான எனது வணக்கம்!

பதிலளிக்க வார்த்தைகள் தேடும்,

எதிரணியினருக்கும் எனது வணக்கம்!

அன்றலர்ந்த தாமரைகளாய் சிரித்திருக்கும்,

எனதணியினருக்கும் வணக்கம்!

அலைகடலாய்த் திரண்டிருக்கும்,

விலை மதிப்பில்லா உறவுகளுக்கும்,

இருகரம் கூப்பிய எனது வணக்கங்கள்!



இன்று ‘புலம் பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே'
என்னும் தலைப்பில் வாதிட வந்திருக்கின்றேன். எனக்கும், எனது
அணியினருக்கும், ‘உள்ளங்கை நெல்லிக்கனி' போல ‘உண்மை' தன்னை இனங்காட்டி
நிற்கிறது. ஆனால், எதிரணியினர் ‘இல்லை’ என்று பிடிவாதம் பிடிக்கின்றார்கள்.
ஆனால், அவுஸ்திரேலியா நோக்கி வருகின்ற படகுகளின் அதிகரித்து வரும்
எண்ணிக்கையும், ஐரோப்பாவில் இருந்து உரத்துக் கேட்கும்  ‘புலத்துத்
தமிழர்களை'  நாடு கடத்தாதே, என்ற கோசங்களும் இவர்களது காதில்
விழுவதில்லையா, அல்லது இவர்கள் பத்திரிகைகள் படிப்பதில்லையா என்றே என்னை
ஆச்சரியப்பட வைக்கின்றன. பாரதத்தின் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்கக் கூட,
ஒரு புலம் பெயர்ந்த இந்தியனால் தானே முடிந்தது.


எனது பக்கத்து வாதத்தை எடுத்துக்கூற முன்பு, எதிரணியினர் கட்டி விட்ட மாய
விம்பங்களில்  சிலவற்றையாவது உடைத்தெறிந்து விட்டுச் செல்லலாம் என
நினைக்கிறேன்! விவாதத்தின் ஆரம்பத்தில் காவாலியாக இருந்து, இடைநடுவில்
திருந்தி, இன்று யாழ்வாலியாகி நிற்கும் எதிரணி நண்பர், நல்ல ஒரு நாய்க்கதை
சொல்லி விளங்கப்படுத்தினார்! அவரே, வீட்டுநாய் அனுபவிக்கும் வசதிகளை
விபரித்து விட்டுக், காட்டுநாயின் வறுமையையும் எடுத்துக் கூறினார். அவர்
 வீட்டு நாயின் கழுத்துப் பட்டியைப் பற்றிக் கூறும்போது அவரது கண்களுடன்
எங்கள்  கண்களும் சேர்ந்தே கலங்கி விட்டன! நாங்களும் தான் புலத்தில்
வாழ்கிறோம்! உங்களில் யாருக்காவது, இப்படியான பட்டிகள்
கட்டப்பட்டிருக்கின்றதா? புலத்துத் தமிழன், மட்டுமல்ல, அவனது மாமா, மாமிகள்
கூட,உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் பறந்து திரிகின்றார்களே, அவர்களின்
பட்டிகள் எங்கே இருக்கின்றன?  முந்தியதை விடத் தாலிக்கொடிகள் தான் கொஞ்சம்
மொத்தமாக இருக்கின்றன. எனதன்பான பார்வையாளர்களே, விவாதம் புலத்துத்
தமிழனின் வாழ்வு பற்றியதேயன்றி தற்காலிகமாகப் புலத்தில் வதியும், ்
தமிழனைப் பற்றியதல்ல என்பதை, இவர் புரிந்து கொள்ளவில்லையென்றே
கருதவேண்டியுள்ளது!


நண்பன் வாத்தியார் இன்னுமொரு படி மேலே போய், கேணிக்கட்டில் அமர்ந்திருக்கும்
வாழ்வுக்காக ஏங்குகிறார்! எங்களில் பல பேர் கேணிக்கட்டுகளில்
உட்காந்திருக்கிறோம்! ஆனால் புலத்தில் எமது குழந்தைகள் கேணிக்கட்டுடன்
நின்றுவிடாமல், தண்ணீருக்குள்ளும் இறங்கி விட்டனவே, அவை ஆணாக இருந்தாலென்ன
அல்லது பெண்ணாக இருந்தாலென்ன, இது தானே உண்மையான நிலை? இந்தத் துணிவு எமது
மண்ணில் வாழ்ந்திருந்தால் எங்களுக்கு வந்திருக்குமென நீங்கள் உண்மையில்
கருதுகின்றீர்களா? வெறும் கேணிக்கட்டோடு முடிந்திருக்க வேண்டிய வாழ்க்கை,
இன்று கேணிக்கட்டை விட்டு, கேணிக்குள்ளேயே, இறங்குமளவுக்குப், புலத்தில்
முன்னேறிவிட்டது! இது முன்னேற்றம் இல்லையா?


அத்துடன் நிறுத்தாது பஞ்சபூதங்களையும் அழைத்து,அவற்றின் சுத்தம் பற்றி விளக்கித்
தள்ளினார்! அவரிடம் ஒரு சின்னக் கேள்வி! நீங்கள், நல்லூர்க் கந்தனின்
திருவிழாவுக்குப் போகும்போது, உங்கள் குழந்தை இயற்கைக் கடன் கழிக்க
வேண்டும் என்று பொறுப்பாளர் ஒருவரைக் கேழுங்கள்! அவர் காட்டுகின்ற
இடத்துக்குப் போகும்போது, உங்கள் குழந்தையின் முகத்தில் ஏற்படும்
மாற்றங்களை உன்னிப்பாக அவதானியுங்கள்.!.அது சொல்லும், ஆயிரம் கதைகள்!
நல்லூர்க் கந்தனை நான் இதற்குள் இழுத்ததற்கும் காரணம் உண்டு. ஏனெனில், அவர்
ஒரு பணக்காரக் கந்தன்,

 

எனது தம்பி பகலவனின்  வாதம், மனதை உருக்கியது என்பது உண்மை தான்! புலம்
பெயர்ந்தவர்களின் வாழ்வு, அவர்களின் தெரிவே அன்றி, அவர்கள் மீது திணிக்கப்
பட்டதல்லவே! அவர்கள் எப்போதும் திரும்பிப் போகக் கூடியவாறு, எமது மண்ணின்
வாசற் கதவுகள்  திறந்துதானே கிடக்கின்றன? எமது கலாச்சாரத்தில், தாய்ப்பால்
ஊட்டப்படும் போதே அதனுடன் சேர்த்துக் பொறுப்புக்களும்  ஊட்டப்படுகின்றன!
உலகத்தின் வேறு எந்த மூலையிலும், இது நடப்பதில்லை. உனக்கொரு
தங்கச்சிப்பாப்பா பிறந்திருக்கிறாள் என்றா குழந்தைக்குச் சொல்லிக்
 கொடுக்கிறார்கள்? உனக்கொரு புதிய பொறுப்பு வந்திருக்கின்றது என்பது போலத்
தானே சொல்லிக்கொடுக்கிறார்கள்.இதன் விரும்பத்தகாத விளைவுகளே, பகலவனின்
ஆதங்கமாக ,புலம் பெயர்ந்தவனின் சொட்டைத் தலைகளாக,
வெளிப்படுகின்றனவேயன்றி,அது புலத்து வாழ்வின் விளைவுகள் அல்ல என்பதே எனது
ஆணித்தரமான கருத்தாகும்.  மதிப்புக்குரிய நடுவர் கோமகன் எழுதிய ‘;வேள்விக்
கிடாய்' என்ற  கதையொன்று, களத்தில் வந்த நினைவு உள்ளது. தம்பி பகலவன்
ஒருமுறை படித்துப் பார்க்கவும். விளக்கம், வெள்ளிடை மலையாக உள்ளது. ,புலம்
பெயர்ந்தவர்கள், திரும்பிப் போய் சொந்த மண்ணில் வாழ ஏங்குகிறார்கள்
என்பதற்கு வெறும் உணர்ச்சி பூர்வமான ஆதாரங்களைத் தவிர, விஞ்ஞான பூர்வமாக
எந்த ஆதாரங்களும் இல்லை. தம்பி பகலவன் போன்று சிலர் விதிவிலக்காக இருக்கக்
கூடும்.


தம்பி தும்பளையானின் வாதம் பெரும்பாலும் வாத்தியாரின் வாதம் போலவே இருந்தது.
ஆனால், எதையோ இழந்துதான் இன்னொன்றைப் பெற முடியும் என்ற அவரது கருத்துடன்
மட்டும் உடன்படுகிறேன். அதை இழக்காமலே, நீங்கள் வாழக்கூடிய சுதந்திரம்
உங்களிடம் தானே இருக்கிறது?அதை ஒருவரும் உங்களிடமிருந்து பறித்து
விடவில்லையே? பின்னர் எதைப் பெறுவதற்காக,அதை இழக்கின்றீர்கள்? பொதுவாக,
இருப்பதிலும் பார்க்க மேலானது ஒன்று கிடைக்கும்போதே நாம் எம்மிடம் ஏற்கெனவே
இருப்பதை இழக்கத் துணிகிறோம். அப்படியாயின் புலம்பெயர் வாழ்வுக்காக,
உங்கள் உள்ளூர் வாழ்வை இழக்கத் துணிந்தீர்கள். மிகுதியை,நான் கூற வேண்டிய
தேவையில்லை! இன்னொன்றும் சொல்ல விரும்புகின்றேன். தம்பி தேடுகின்ற
அமைதியும் சந்தோசமும் மண்ணுக்குள் இல்லை. அது அவரது மனத்துக்குள்ளேயே
மறைந்து கிடக்கின்றது..


நண்பன் கரும்பின் வாதத்தைப் புரிந்து கொள்ள முயற்சித்தேன். ஊர் என்கிறார், தமிழர்
என்கிறார், பலாக்காய் என்கிறார், பால் என்கிறார். விவாதத்திற்கு
அனுமதிக்கப் பட்ட கால இடைவெளியில் அவரது கருத்தைப் புரிந்து கொள்ளமுடியாது
என்ற அளவுக்கு மட்டும் புரிந்தது. ஆனால் ஆனால் கரும்பு ் ஏதோ முக்கியமான
விடயத்தைச் சொல்லியிருக்கவும் கூடும். அப்படியிருந்தால், அது இந்த
விவாதத்தின் வரம்புகளுக்கு, அப்பால் பட்டதாகவே இருக்கும் என எண்ணுகின்றேன்!


அடுத்ததாக, எனது பெருமதிப்புக்குரிய குமாரசாமி அண்ணையின்ர விவாதத்தில், எங்கள்
அணியினரை விழிக்கும் போதே, கால் மேல் கால் போட்டிருப்பவர்களென விழித்தார்.
விசயம் தெரிஞ்ச மனுசன்! கால் மேல கால் போட்டி்ருக்கிறோமென்றால், அது எமது
தன்னம்பிக்கையைத் தானே காட்டுகின்றது? நாங்கள் அவ்வாறு அமர்ந்திருக்கிறோம்,
ஏனெனில் எங்கள் பக்கம் நியாயம் இருக்கின்றது. அதுவே எங்கள் அவ்வாறான
அமர்வுக்குக் காரணமேயன்றி, செருக்கு அல்ல. மிடுக்கு என்றே கூறுவேன். இயற்கை
மருத்துவிச்சிகளும், பரியாரிகளும் இருண்ட கண்டமான ஆபிரிக்கா முழுவதும்
தான் பரந்திருக்கின்றார்கள். இது ஒரு நவீன சமுதாயத்தின், ஆரோக்கியத்தின்
வெளிப்பாடல்ல. மாறாக வாழ்கைத்தரம் பின்னோக்கிச் செல்வதையே இது
காட்டுகின்றது!ஒரு குறுக்குப் பிரசவம்,( a breach delivery) என்று
வரும்போது, தாயையும் குழந்தையையும் பரலோகத்துக்கு அனுப்புவதை விட,
இவர்களால் என்ன செய்து விட முடியும்? நாங்கள் இன்னொன்றை மறந்துவிடுகிறோம்.
குழந்தை பெறுதல் என்பது இயற்கையின் ஒரு நிகழ்வே! சிங்கம், புலி, கரடி, ஆடு,
மாடு எல்லாவற்றுக்குள்ளும், செவிலியர்களா இருக்கின்றார்கள்? புலத்திலும்
இவை எல்லாம் இருந்தன, ஆனால் அவர்கள் அதைத்தாண்டி நடந்துவிட்டார்கள் என்பதே
உண்மை நிலையாகும்!.


குதிரை, குதிரை என்று எனது உயிரை எடுக்கும் சாத்திரியாரின் வாதம், மிகவும்
நகைச்சுவையாக இருந்தது. சாத்திரியார் இருக்கும் இடத்தில் நகைச்சுவையும்
இருக்கும் என்பது, யாழ் களத்தின் வாசகர்களுக்கு ஒன்றும் புதிதல்ல.ஆனால்
அவரது நகைச்சுவையில் ஒரு பெரிய இயலாமை அடங்கியிருந்தது போலவே
உள்ளது..விவாதத்தைப் பலப்படுத்தும் கருத்துக்கள் எதுவுமேயில்லாது, ‘ ஆத்தா,
ஆடு வளத்தா, மாடு வளத்தா, நாய் வளக்கல...ஏன்  தெரியுமா?....நான் இருக்கேனே
என்ற மாதிரித்தான் அவரது நகைச்சுவை இருந்தது. எல்லாரும் ஏறிய குதிரையில்
சாத்திரியார் என்ற சக்கடத்தாரும் ஏறாமல்,ஒரு புதிய குதிரையில் ஏறுவார் என
நினைத்து ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். நண்பர் சாத்திரியாருக்கு, ஒரு
ரகசியம் சொல்லவேண்டும், உயிரினமே வளராத, உப்பு நிறைந்த,சாக்கடலின் நிறமும்
கூட ‘நீலம்' தானே.

 

மகாகவி பாரதியார்,  சின்னப்பையனாக, விபரம் புரியாத காலத்தில் எழுதிய கவிதையுடன்
விவாதத்தை முடித்து வைத்துள்ளார். அதே பாரதியார், உலகம் தெரிந்த பின்பு,
பின்வருமாறு பாடியுள்ளார்.


வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி

மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்

பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

மந்திரம் கற்போம் வினைத் தந்திரம்கற்போம்

வானையளப் போம் கடல் மீனையளப்போம்

சந்திரமண்டலத்தியல் கண்டுதெளி வோம்

சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.


இனி விவாதத்திற்கு வருவோம். கணியன் ் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே, யாவரும்
கேளிர்' என்ற எனைக் கவர்ந்த வரிகளுடன் தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என
எண்ணுகின்றேன். உலகம் முழுவதையுமே, எமது  ஊராகவும்,. உலகமக்கள்
முழுவதையுமே, எமது மக்களாகவும் கருதிய புற நானூறு காட்டிய தமிழன் வழியில்
வந்ததையிட்டுப் பெருமையடைகின்றேன். , ‘புலம் பெயர்வது என்பது, தமிழர்களாகிய
எங்களுக்குள் புதைந்து போய்க் கிடக்கின்றது என்பதே உண்மையாகும்! நாம்
புலம்பெயராதவர்களாக, இருந்திருந்தால், ஆபிரிக்காவின் வனாந்தரங்களில்
அமிழ்ந்து போயிருக்கக் கூடும் அல்லது பூம்புகாரின் கடற்கோளின் போது
அத்துடன் புதைந்திருக்கக் கூடும்! இன்றும் ஒரு இனமாக வாழ்கின்றோம் எனில்,
அதற்கு முக்கிய காரணம், எமக்குள் மறைந்து எம்மை இயக்கிக் கொண்டிருக்கும்
‘புலம்பெயர்வு' என்ற உயிர் அணுக்களே.  ஏன் அதிக தூரம் போகவேண்டும்? அவையில்
நடுவராக அமர்ந்திருக்கும், மதிப்புக்குரிய சுமேரியர் பெயருக்கு முன்னால்
இருக்கும் மொசப்பதேமியா என்பது, அவருக்கு நாங்கள் வழங்கிய பட்டமா என்பதை
ஒரு தடவை சிந்தியுங்கள், உண்மை தானாகத் தெரியவரும்!

நியுசீலந்தில்,கண்டெடுக்கப்பட்ட கப்பல்  மணி ஒன்றில், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்படிருக்கின்றனவே!
பாலித்தீவு முழுவதும், விநாயகர் சிலைகளால் நிரம்பி இருக்கின்றதே? இவை
எல்லாம் எதைக் காட்டுகின்றன?  புலம் பெயர்வது நமது இயல்பு என்பதைத் தானே!
அதிகம் ஏன்? ஆங்கிலத்தில் உள்ள ‘NAVY’  என்ற வார்த்தையே ‘நாவாய்'
என்பதிலிருந்து தான் வந்திருக்கின்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
தமிழன் கேணிக்குள் மிதப்பதற்காகவா கப்பல் கட்டினான்? ஒருமுறை
சிந்தித்துப்பாருங்கள். உண்மைத்தமிழனின் பெருமையால்,ஒரு முறை விம்மித்
தணிவீர்கள் என்பது மட்டும் திண்ணம்,

 

ஐரோப்பாவில் நாய்க்குட்டி போல அமைந்திருக்கும், அந்தச் சிறு தீவிலிருந்து, சென்றவர்கள்
தானே, இன்று உலகத்தின் வளமான நிலங்கள் முழுவதையும் தங்கள்
கைவசப்படுத்தியிருக்கின்றார்கள். பாலஸ்தீனத்தில் இருந்து புறப்பட்ட
யூதர்கள் தானே, இன்று உலகம் முழுவதையும் தங்கள் காலடியில்
வைத்திருக்கின்றார்கள். தென்னாபிரிக்கா, மலேசியா, இந்தோனேசியா,
சிங்கப்பூர்.தாய்லாந்து,பிஜித்தீவுகள்,மொரிசியஸ் தீவுகள் எங்கும் தமிழன்
புலம் பெயர்ந்து தானே இருக்கின்றான்? ற்றிபுனியன் தீவில் வானளாவ உயர்ந்து
நிற்கின்றதே உலகின் இரண்டாவது, மிகப்பெரிய சிவனின் சிலை, அது பறை
சாற்றுகின்றது தமிழனின் பெருமையை!,அவர்களில் எவரும் தமிழ்நாட்டுக்கோ,
இலங்கைக்கோ திரும்பிப் போகவில்லையே? எதிரணியில் உள்ளவர்களைப்போல அழுது
வடியவில்லையே?அவர்களைப் போகக் கூடாது என்று ஒருவரும் அவர்களுக்கு
நிபந்தனைகள் போடவில்லையே? இன்னும் கிட்டவந்து பார்த்தால், நாங்கள் போடும்
சால்வை, சாப்பிடும் பிட்டு, மீன்பிடிக்க வீசும், கரைவலை  எல்லாம்
இலங்கையின் வேறு பகுதிகளில் இருக்கின்றதா என்றால், இல்லை என்று தானே பதில்
கூற வேண்டும்? நாங்கள் பேசும் தமிழில் பறைதல், கரைதல் போன்ற மலையாள
வார்த்தைகள் வருகின்றனவே, இவை எவ்வாறு வந்தன என்று நாங்கள் சிந்தித்தோமா?
சரி, அதையும் விடுவோம், கிடுகு வேலி,நாங்கள் பின்னுவது மாதிரியே அவர்களும்
பின்னுகின்றார்களே, அது எப்படி? மாமாவைத் திருமணம் செய்வது, எமது
வழக்கத்தில் இல்லையே, ஆனால், தமிழ்நாட்டில் அது தானே வழக்கம்? இதையெல்லாம்,
கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, உங்களுக்கு என்ன தெரிகின்றது?

 

நாங்கள் ஏற்கனவே புலம் பெயர்ந்திருக்கிறோம், என்பது தானே! சில மலையாளிகள் வந்து,
ஒரு சமூகத்தின் பழக்க வழக்கங்களையே மாற்றிவிட்டுப் போக, நாங்கள் அதை
அனுமதித்திருப்போமா? இல்லையே! அப்படியானால், நாங்கள் தான் கேரளாவுக்குப்
புலம் பெயர்ந்திருக்கிறோம், அல்லது கேரளாவில் இருந்து, இலங்கைக்கு
வந்திருக்கிறோம் என்று ஆகவேண்டும். ஆக, புலம்பெயர்வதால், எதை
இழந்திருக்கிறோம் என்று சிந்தித்தோமா? யாருடைய கலாசாரத்தை, நாங்கள்
காவிக்கொண்டு திரிகிறோம்?



‘சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோ

விவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதி

துரியஸ்தே மனுஷ்ய ஜாஹ’


இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.

 

நீ முதலில் சோமனுக்கு  (சந்திரன்) உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன்
உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக
ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.


இதில் சொல்லப்படுவதற்கும், நாம் எமது மதமாகக் கருதும், சைவ சமயத்திற்கும் என்ன
தொடர்பு உள்ளது? யார் இவர்கள்? இத்துடன் நின்றுவிடவில்லையே நாம், பரதம்
ஆடுகின்றோம், பரதம் எங்களுடையதா? அனுமார், ஐயப்பன்,என்று வரிசை
நீண்டுகொண்டு போகின்றது.மிகவும் கசப்பான உண்மை என்னவெனில், எங்கள்
தத்துவங்களை எடுத்து, யாரோ புதிய பக்கட்டுகளில் அடைத்து யாரோ திரும்ப
எங்களுக்கு விற்கிறார்கள். நாங்களும் அதைக்காவிக் கொண்டு உலகம் முழுவதும்
திரிகிறோம் என்பது தானே உண்மை? சரியை, கிரியை,யோகம், ஞானம் என்கிறது நமது
மதம். எங்களில் எத்தனை பேர், சரியையும், கிரியையும் தாண்டிச் செல்ல
எத்தனித்திருக்கிறோம்?

 

இன்னொன்று தாலி! தமிழர் வரலாற்றில் ‘தாலி; எங்கே வருகின்றது? முதல் முதலாக,
சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கும், கண்ணகிக்கும் நடக்கும் திருமணத்திலேயே
பிராமணர்கள் ‘ஓமம்' வளர்க்க, அக்கினி சாட்சியாகவும், அருந்ததி
சாட்சியாகவும், முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாகவும், தாலி
கட்டப்படுகின்றது. இதே சிலப்பதிகாரமே, இந்திர விழாவைப் பற்றியும்
பேசுகின்றது. ஒன்றும், ஒன்றும் இரண்டு என்று, தகை சான்ற நடுவர்களுக்கு நான்
கூறித்தான் தெரியவேண்டுமா? இவ்வளவு சாட்சிகள் இருந்தும், புலத்தில்,
குடியரவுப் பிரிவினர் கேட்கும்போது, ஒரு சாட்சியையாவது  நம்மால் அழைக்க
முடியுமா? சிலப்பதிகார காலத்துக்கு முன்னர், தமிழன் கலியாணமே கட்டவில்லையா?


எனவே, கலாச்சார இழப்பு என்பதில் அர்த்தமில்லையல்லவா? எங்கள் உண்மையான
கலாச்சாரங்கள், தமிழன் வாழ்ந்தே இடமெங்கும் முதுமக்கள் தாழிகளாகவும்,
தொல்லியல் தடயங்களாகவும் புதைந்து கிடக்கின்றன. ஒருவரும் தேட மாட்டார்கள்.
ஏனெனில், தேட வேண்டியவர்களின் கலாச்சாரங்களைத் தானே, நாங்கள்
காவித்திரிகின்றோம். அதனால், தடயங்களை அழிப்பதிலும், மறைப்பதிலுமே, அவர்கள்
முனைப்புக் காட்டுவார்கள், காட்டுகிறார்கள்.


இறுதியில் மிஞ்சிப்போயிருப்பது ஒன்றேயொன்று, அது தான் வெறும் உறவுகளின் பிரிவு. அது,
எமது கண் முன்னாலேயே குறைந்து வருகின்றது. ஒரு குருவிக்கூட்டைக்
குரங்கொன்று பிய்த்து எறிகின்றது. குருவியின் குஞ்சுகள் செத்துப்போய்
விடுகின்றன. திரும்பிவரும் தாய்ப்பறவை, துயர் தாங்காமல் அழுகின்றது. ஒரு
நாள், இரண்டு நாள்,அல்லது ஒரு வாரம் என்று வைத்துக்கொள்ளுவோம். அடுத்து
அந்தப்பறவை அந்த இடத்திலேயே நின்று உயிரை விட்டுவிடுகின்றதா என்றால் இல்லை
என்று தானே சொல்லவேண்டும். பறவையின் பயணம்,இன்னொரு மரத்தை
நோக்கித்தொடர்கின்றது. புதிய மரம், புதிய கூடு,என்று அதன் வாழ்க்கை
தொடர்கின்றது, காலப்போக்கில் பிரிவுகளைப், பறவை மறந்து புதிய மரத்தை
வீடாக்கிக் கொள்ளுகின்றது. இது தான் உண்மை. இது தான் இயற்கையின் நியதி.
ஒருவர் புலம்பெயர்ந்த காலத்தின் அளவுக்கும் (வருடங்கள்),உறவுகள் பற்றிய ஒரு
பிரிவுக்கும் ஒரு வரைபடம் கீறினால், அது கீழிறங்கிய படியே செல்லும். அந்த
இறக்கத்தின் சரிவானது, ஒவ்வொரு தலைமுறைக்கும் (பதினைந்து வருடங்கள்) ஒரு
பாய்ச்சலாகக் கீழிறங்கி, விரைவில் பூச்சியத்தைத் தொட்டு நிற்கும். இதுவே
‘புங்கையின் விதி' என அழைக்கப்படுகின்றது.


எனது அணியினர், ஏறத்தாள எதிரணியினர் முன் வைத்த அத்தனை வாதங்களையும் பல
தடவைகள்,பல்முனைத் தாக்குதல்களைத் தொடுத்து,  உடைத்தெறிந்து
விட்டார்கள்.எனவே, பெருமதிப்புக்குரிய நடுவர்களே, வெறும் காவோலை வேலிகளும்,
கேணிக்கட்டுக்களும், வெயிலும், சந்திகளில் குந்தியிருக்கும் தபால்
பெட்டிகளும், கள்ளுக்கொட்டில்களும், முருங்கை மரங்களும், மட்டுமே
வாழ்க்கையல்ல.புலத்தில் வாழ்வதன் மூலம் நாம் எம்மை மேலும்
வளப்படுத்துக்கின்றோமே அல்லாது, ஒரு காலடி கூடப் பின் நோக்கிப்
பயணிக்கவில்லை. நவீன மனிதனின், பார்வை, பூமியையும் விட்டு, விண்ணைத்
தேடுகின்ற வேளையில், நாங்கள் வெறும் உணர்வுகளினால் கட்டுண்டு
போய்க்கிடப்பது வெறும் விதண்டா வாதமேயாகும் என்பதே எனது திடமான
கருத்து.தான் வாழும் சூழலுக்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ள இயலாத,அல்லது
விரும்பாத ஒரு உயிரினம், கூர்ப்பியலில் பின் தள்ளப்பட்டு அழிந்து
போய்விடும் என்பதையே அறிவியலும், அனுபவங்களும் காட்டி நிற்கின்றன.


இறுதியாக,  நிலத்தையும், புலத்தையும் நன்கறிந்தவரான எனது பெரும் அபிமானத்துக்குரிய
பாலகுமார் அண்ணாவின் வார்த்தைகளுடன் விவாதத்தை முடித்துக்கொள்கின்றேன்.



புலத்தில் விதைக்கப்பட்ட விதைகள்,

ஒரு நாளில் முளைத்தெழும்!

பெரு விருட்சங்களாகி கிளைகள்,

பரப்பி விரிந்து நிற்கும்!

அந்நாளில்,

அந்த விருட்சங்கள்,

உலகத்திடம் நீதி கேட்கும்!

வெட்டியெறிந்து வீசியெறிய,

முடியாத பலம் புலத்தில் இருக்கும்!

புதியதொரு தேசம்,

தானாகத் துளிர் விரிக்கும்!



 

அனைவர்க்கும் நன்றிகளும், வணக்கங்களும்!

  • கருத்துக்கள உறவுகள்


ம்....இறுதியாக வந்தாராயினும் ஆழமாகத் தன் கருத்தை உறுதியுடன் அறுதியிட்டுக் கூறிவிட்டுச் சென்றுள்ளார் புங்கையூரன். அவர் கூறியதுபோல் பல
மாய விம்பங்கள் பல அவர் வாதத்தால் தகர்ந்து தான் விட்டது.

இடையில் பட்டி மன்றத் தலைப்பை மறந்து தமிழர் வரலாற்றை எழுதத் தொடங்கியவுடன் வந்த வேலையை மறந்துவிட்டாரோ என எண்ணவைத்துவிட்டது. ஆனாலும் காரியத்தில் கண்ணாகவே இருக்கிறார் எனப்  பின்னர் புரிந்தது.

ஆனாலும் தாலி பற்றியதும், தேவர்கள்,அனுமார், பரதம் என பட்டிமன்றத்திற்கு தொடர்பற்ற விடயங்களை அவர் தவிர்த்திருக்லாம்.

தான் ஒரு வரைபடமும் கீறி அதற்கு "புங்கையின் விதி" என்று பெயரும் சூட்டி........எம்மையெல்லாம் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்
என்று விளங்கவில்லை.

மனிதன் தோன்றிய காலம் முதல் அவன் இடம் பெயர்கிறான் தான். அவன் நாகரிகமடையும் முன்னர் இருந்தது போல இப்பவும்
இருக்க முடியுமா என்ன? நாகரிக மாந்தன் நிலையாக ஓரிடத்தில் நிலை கொண்டவன். அதைவிட்டு எல்லா நாட்டு மக்களும் எம்மைப் போல் எங்கும் இடம்பெயர்ந்துகொண்டிருந்தால்  என்ன கதி ???

சரி இனி எதிரணித் தலைவர் யாழ் வாலியின் தொகுப்புரைதான் அந்தப் பக்கத்துக்கு வலுச்சேர்க்கப் போகிறதா??
அல்லது எதிரணியினருக்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்கப் போகிறதா எனப் பார்ப்போம்.எங்கே யாழ் வாலி?? தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள் தானே ??
??

  • தொடங்கியவர்

புங்கையூரானின் வாதம் ஏறத்தாள ஒரு தொகுப்புரை போல அமைந்து விட்டது . இறுக்கமாகவும் , நறுக்காகவும் பலவிடையங்களில் மேற்கோள்கள்களைக் காட்டி தனது அணிக்கு வலுச்சேர்திருக்கின்றார் புங்கையூரான் . நான் ஏற்கனவே எனது வரவேற்புரையில் குறிப்பிட்ட தமிழனின் புலப்பெயர்வானது அன்றைய காலகட்டங்களில் கௌரவமானதாகவே அவனுக்கு இருந்தது . ஆனால் இன்றைய காலகட்டத்தில் அவனுக்கு அந்த அந்தஸ்த்தை வழங்கியதா ??? என்ற பெரிய கேள்வி ஒன்று எழுகின்றது . புலப்பெயர்வுக்கு " புங்கையின் விதி " மனிதர்களுடன் பறவைகளின் வலசை போதலை ஒப்பிட்டதை என்னால் இலக்கிய ரீதியாகவே ரசிக்க முடிந்தது . எது எப்படியாகிலும் எதிரணித்தலைவர் யாழ்வாலியின் தொகுப்புரையை ஆராய்ந்து பார்க்காது எழுந்தமானத்தில் எதுவுமே சொல்லமுடியாதுதான் . எங்கே இறுதித்தாக்குதலுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் வாயுபுத்திரனும் எதிரணித்தலைவருமான யாழ்வாலியை தொடைதட்ட மேடைக்கு அழைக்கின்றேன்.............

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர்கள் உள்ளிட்ட அவையோருக்கு மீண்டும் என் பணிவான வணக்கம்.

 

நடுவர்களே! எமது அணியின் பேச்சாளர்கள் அனைவருமே "நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே" என்ற எமது அணியின் வாதத்தினைச் சிறப்பான வகையில்  வாதிட்டு வலுச் சேர்த்திருக்கும் இந்நிலையில்,

 

முதலாவதாக வாத்தியார்: "தாயகத்தில் இயற்கை தந்த கொடைகளை ரசித்து வாழ்வதே சிறப்பான வாழ்க்கை" என்பதனை அழகாகக் கூறினார்.  சொந்த மண்ணில், ஆலமர  நிழலில், ஆற்றங்கரையில், கேணிக்கட்டுகளில் அமர்ந்து தோழமை பேசும் சுகம் பற்றிக் கூறி எம் உள்ளங்களையெல்லாம்  குளிர்வித்து,  ஊரில் வீசும் தென்றல்க் காற்றின் சுக அனுபவத்தைக் கழுதைக்குத் தெரியுமா கற்பூர வசனை என்று எதிரணியினருக்குக் கேள்வியை ஒன்றைச் சுமையாக்கிச் சென்றார்.

 

அடுத்து வந்த பகலவன் அவர்கள், மிக மிக அருமையாக "ஒரு மனிதன் இந்த உலகில் பிறக்கும்போது அவனது அடையாளமாக அவனது பெற்றோர் மட்டுமல்ல  அவனது பிறந்த மண்ணும் ஒட்டிகொள்கிறது. எந்த ஒருத்தனுமே நான் இந்த மண்ணில் பிறந்தேன் என்று பெருமையுடன் சொல்ல வேண்டிய இடமாக அவனது தாயகம் மாறிவிடுகிறது. அதற்காக தங்களின் உயிரை கூட கொடுக்க கூடிய உணர்வுமிக்க இடமாக அது மாறுகிறது" என்று ஒரு மனிதனின் அடையாளம் அவனது பிறந்த மண்ணே, அந்த மண்ணுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று உணர்வுபொங்கக் கூறிச்சென்றார்.

 

அவரைத் தொடர்ந்து வந்த தும்பளையான், "புலம் பெயர்ந்து நாம் ஒன்றை இழந்தே இன்னொன்றை பெற்றிருக்கிறோம். எமது நேரத்தை, குடும்ப வாழ்க்கையை, உடல் சுகத்தை, பிள்ளைகளின் கலாச்சாரத்தை, எல்லாவற்றிற்கும் மேலதிகமாக மொழியை இழந்திருக்கிறோம்" என்று புலம்பெயர் வாழ்வின் உண்மை நிலையை இனி இழப்பதற்கு எம்மிடம் என்ன இருக்கிறது என்று அறிவுபூர்வமாகக் கேட்டகன்றார்.

 

சரித்திர நாயகன் கரும்பு தனதுரையில் "மூன்று" முத்தான கேள்விகளைக் கேட்டு, உங்களை யாரென்று நீங்கள்  அறிந்துகொள்ளுவீர்களானால், அது உங்கள் ஆத்மா நிதம், நிதம் சுற்றிச்சுற்றி வருகின்ற அந்த "ஊரில்" "நீங்கள்" சிறப்பாக வாழும் வாழ்க்கையாகவே அமையும்! என்று தத்துவம் பேசி வியக்கவைத்தார்.

 

யாழ் இணையத்தின் மூத்த உறுப்பினர் குமரசாமி அண்ணர், தமது அனுபவங்களையெல்லாம் ஒருங்கமைத்து, "ஈழத்தமிழன் புலம் பெயரமுன் யாரிடமும் பிச்சையெடுக்கவில்லை....சிங்களவனால் ஏற்பட்ட எத்தனையோ அழிவுகளின் பின்னரும் தானாக எழும்பி நின்றவன் ஈழத்தமிழன். புலம்பெயர் தமிழனைப்போல் போலி வாழ்க்கை வாழ்ந்தவனல்ல ஈழத்தமிழன். கஞ்சியைக் குடித்தாலும் நிம்மதியாய் குடித்தவன் ஈழத்தமிழன்." தாயகத்துத் தமிழன் விழ விழச் சாம்பலில் இருந்து உயிர்க்கும் பீனிக்ஸ் பறவை போன்றவன் , வறுமையிலும் செம்மையாக வாழத்தெரிந்தவன் என முழங்கினார்.

 

இறுதியாக, மற்றொரு மூத்த உறுப்பினர் சாத்திரி அண்ணா, புலம்பெயர் வாழ்க்கையில்,  "தேவைகள் அதிகம். ஆசைகள் அதிகம் அதற்காகவே ஓடுகிறார்கள். ஆளாளிற்கு இரண்டு வேலை  திருமணமானவர்கள்  தங்கள் உறவைக்கூட நாள் குறித்து  நேரம் குறித்துச்செய்யவேண்டிய  வாழ்க்கை." என்று மிகப்பெரிய உண்மையைப் போட்டுடைத்திருக்கின்றார். பகட்டு வாழ்க்கைக்கும் ஆடம்பரச் செலவுகளுக்குமாக இல்லறத்தின் நல்லறமாம் தாம்பத்தியம் துறவறமாகிக் கொண்டுபோய்க்கொண்டிருக்கின்றது என்று கவலையுடன் சொல்லிச் சென்றார்.

 

எனவே, நடுவர்களே! எமது அணி  உறுப்பினர்களின் நியாயமான வாதங்கள் அடிப்படையில் நீங்கள் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.

 

பூனை கண்ணை மூடிக்கொண்டு இருந்தால் உலகமெல்லாம் இருண்டிருக்கும் எண்டு நினைக்குமாம். அப்படித்தான் எனது எதிரணி அன்புத் தோழி தமிழச்சி இருக்கிறா! ஊரில் இருக்கும் போது பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே இருந்த நெருக்கத்தைவிடப் புலத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயான நெருக்கம் அதிகமாம்.  கவலைக்குரிய விடயம் புலத்தில் நமது அடுதத்த  தலைமுறையை நாம் இழந்து விட்டோம். அதுதான் உண்மை நடுவர்களே. அந்த உறவு அறுந்த கயிற்றின் மேல் நடப்பதற்கு ஒப்பான உறவு என்பதனைத் தமிழச்சி அறியவில்லையா அல்லது அறியாததுபோன்று நடிக்கின்றாரா புரியவில்லை நடுவர்களே புரியவில்லை!

 

புலத்தில் பெற்றோர்  பிள்ளைகளுக்குப் பயந்து வாழும்நிலை இன்று ஏற்பட்டிருக்கின்றது. இன்று ஒரு பிள்ளை தவறு செய்துவிட்டால் கண்டிக்க முடிகிறதா? அல்லது தண்டிக்க முடிகிறதா? புலத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கான உறவு பிள்ளைக்கு ஒரு பத்து வயது வரும்வரை மட்டுமே. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பதினைந்து வருடங்கள் தேறும். ஆனால் ஊரிலோ அந்த உறவு பெற்றோர் இறக்கும்வரை தொடர்ந்துகொண்டிருக்கும் என்பதைத் தோழி தமிழச்சிக்கும் இந்த மன்றுக்கும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன் நடுவர்களே!

 

திரைகடலோடியும் திரவியம் தேடு என்று முன்னோர்கள் சொன்னார்களாம் என்று ஜீவா சொன்னார்,  ஜீவாவைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது நடுவர்களே! நம் முன்னோர் ஏன் அப்படிச் சொன்னார்கள், அலைகடல் கடந்து வாணிபம் செய்து பொருளீட்டி வந்து, உன் சொந்த நாட்டிலே சொந்த வீட்டிலே உன் மனைவியோடு மக்களோடு உற்றார் உறவினர்களோடு சிறப்பாக வாழ்திரு என்பதற்காகச் சொன்னார்களே தவிர திரைகடல் ஓடித் திரவியம் தேடி அங்கேயே செட்டில் ஆகிவிடு என்றா நம் முன்னோர் சொல்லி இருக்கிறார்கள்? என்று ஜீவாவைப் பார்த்துக் கேட்கின்றேன் நடுவர்களே!

 

ஊரில் ஏழைகள்  இனி அடுத்து எப்படி வாழ்வது என்று தெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டு, அதனால் அங்கு களவு விபசாரம் என்று சமூகச் சீர்கேடுகள் தலைவிரித்து ஆடுகிறதாம் என்று சுபேஸ்  தனது வாதத்தில் ஏழைகளைக் கீழ்த்தரமாக எள்ளினார். பிற்போக்குத் தனமான இந்த எள்ளலை வன்மையாக் கண்டிக்கின்றேன். வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த இனம் ஈழத் தமிழினம். சுபேஸின் வாதப்படி ஓரிருவர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டு மொத்த ஏழைகளையும் குற்றம் சாட்டுதல் நியாயமாகுமோ நடுவர்களே!

 

புலத்தில் களவுகள் இல்லையா? விபசாரம் இல்லையா? போலிக் கடனட்டை செய்து சுகபோக வாழ்க்கை அனுபவித்தால அது களவாகாதா? புலத்தில் நம்மவர்களைக் "கள்ள மட்டைக்காரர்கள்" என்று பெருமைப்படுத்துவதை இவர் மறந்துவிட்டாரா? இல்லை மறைத்து விட்டாரா? இவரின் பெரிய ஒப்பாரியின்படி புலத்தில் பொருளாதாரத்தை மட்டும் வைத்துச் சிறப்பாக வாழும் குடும்பங்களில் கள்ளத் தொடர்புகளே இல்லையா? கணவனை மனைவியும், மனைவியைக் கணவனும் ஏமாற்றிக் கொள்ளும் புலம்பெயர் வாழ்க்கை விபசாரம் ஆகாதோ நடுவர்களே!

 

சொந்த நாட்டில் வாழ்ந்த ஈழத் தமிழர்கள் வாழ்க்கை சீரழிந்து கொண்டு இருந்ததால் தானே நாங்கள் புலம்பெயர்ந்தோம் என்று வாய்கூசாமல் பச்சைப்பொய் சொல்லுகிறார் யாழ்வாணன். ஈழத்தில் தமிழன் தன் கலைகளிலே, தன் கல்வியிலே, தன் கலாசாரத்திலே, தன் பொருளாதாரத்திலே கொண்டிருந்த சீரையும் சிறப்பையும் கண்டு, எமது இனத்தின் மதிநுட்பத்துக்குப் பயந்து சிங்களப் பேரினவாதம் திட்டமிட்ட இனவொழிப்பைக் கட்டவிழ்த்த நேரத்திலேயே புலம்பெயர நேரிட்டதே ஒழிய வாழ்க்கை சீரழிந்து இருந்ததனால் அல்ல என்பதனைக் கருத்திற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன் நடுவர்களே! அதுவரை சொந்த மண்ணிலே தமிழன் தன்மானத்தோடும் சிறப்போடும் சுதந்திரமாகவும் வாழ்ந்தான் என்பதைச் சரித்திரம் கூறும். வாழ்க்கைச் சீரழிவுக்கும் திட்டமிட்ட இனவழிப்புக்கும் உள்ள வேறுபாட்டைக் "கவி" புரிந்திருக்க நியாயமில்லை!

 

சுதந்திரம்,பெண்விடுதலை,மானுடம் என்ற நிஜ தேடல்தான் பாரதியை மகாகவி ஆக்கியது என்று சொல்லும் அய்யா அருச்சுன் அவர்களே, அந்தக் கற்பனையில்லாத உண்மையின் தேடலை, அவன் புலம்பெயர்ந்து வேற்று நாட்டுக்குச் சென்று தேடவில்லை தன்னுடைய செந்த நாட்டில் இருந்து கொண்டுதான் தேடினான். ஆனால் பாவம் நீங்களோ ஆற்றிலே தொலைத்துவிட்டு குளத்திலே தேடுகிறீகள் அய்யா.

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

 

என்று தாய்த் தமிழ்நாட்டில் இருந்து அந்த மகாகவி பாடியதைத் திட்டமிட்டு அய்யா அருச்சுன் அவர்கள் திட்டமிட்டு மறைத்திருக்கின்றார் நடுவர்களே!

 

சுடிதார், நண்டுக்கறி வாடை, வரி ஏய்ப்பு, முகத்தில் புன்முறுவல் இல்லை, மூஞ்சியைப் பிளக்கும் பார்வை, இரண்டு துண்டு உடை, நாக்கை நீளவிடுதல் என்று தன் வீட்டுக் கதைகளை வஞ்சகமில்லாமல் அடுக்கிக்கொண்டே போனார் எதிரணித் தலைவர் இசைக்கலைஞன் அவர்கள். நடுவர்களே, இதிலிருந்து இவருக்கும் இவர் வாழும் புலம்பெயர் சமூகத்துக்குமான நெருக்கத்தை வலுவாக நீங்கள் அறிந்து கொள்ளல்லாம். சுமார் கால்நூற்றாண்டுக்கும் அதிகமாக புலத்தில் வாழும் தமிழர்களுக்கும் புலத்தில் வாழும் மாற்று இனமக்களுக்கும் ஒரு புரிதல் இல்லையெனில் காரணம் என்ன என்பதைக் கொஞ்சம் சிந்திதுப்பார்க்கவேண்டும். ஒன்றில் இவர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது மாற்றுச் சமூகம் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இங்கு இரண்டுமே இவர்களைப் பாதித்திருக்கிறது என்பதே உண்மை. இவர்களில் பெரும்பான்மையானோர் புலத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளமுடியாது தவிக்கிறார்கள். அடுத்து எதிரணித்தலைவர் குறிப்பிட்ட இன்னோரன்ன காரணங்களினால் பிற சமூகங்கள் இவர்களைப் புறக்கணிக்கின்றன. ஊருடன் கூடிவாழ் என்ற முதுமொழிக்கேற்ப நகமும் சதையும் போன்று சிறப்புறும் தாயகத்து வாழ்க்கை எங்கே? தாமரை இலைமேல் நீர்த்துளி போன்று ஊருடன் ஒட்டாத புலத்துப் பரிதாப வாழ்க்கை எங்கே? நடுவர்களே!

 

நடுவர்களே ஆடு பார்த்திருக்கிறீங்களா ஆடு? அந்த ஆட்டைப் பற்றி நாலு வார்த்தை சொல்லச் சொன்னால், அதைக் கொண்டுபோய் மரத்தில கட்டிப்போட்டு உலகத்தில இருக்கிற மரங்களங்களைப் பற்றி  எல்லாம் நாற்பது வசனம் சொல்லுறது, இப்படித்தான் இருக்கிறது கங்காரு தேசத்தின் புங்கையூரான் அவர்களின் பேச்சு. புலம்பெயர் ஈழத் தமிழனின் கவலை பற்றிப் பேசச் சொன்னால், உலகத் தமிழனுக்கே சம்பந்தமில்லாத மந்திரங்கள், தாலி, அநுமான், சோமன் பற்றி கன்னா பின்னாவெனச்  சொல்லித் தொலைக்கிறார். அது மட்டுமில்லாமல், சாத்திரி அண்ணாவுக்கு ஒரு ரகசியம் சொல்லுகிறாராம். உயிரினமே வளராத, உப்பு நிறைந்த,சாக்கடலின் நிறமும் கூட ‘நீலம்' தானாம். என்னே அறிவு, அந்தச் சாக்கடலிலும் உயிர்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது தெரியாமல் ரகசியம் சொல்லுகிறாராம் ரகசியம். நடுவர்களே இதிலிருந்து  இவரது வாதத்தின் உண்மைத் தன்மையினை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்!

 

"பாலஸ்தீனத்தில் இருந்து புறப்பட்ட யூதர்கள் தானே, இன்று உலகம் முழுவதையும் தங்கள் காலடியில் வைத்திருக்கின்றார்கள்" என்று சொல்லும் புங்கையூரான், அதே யூதர்கள் 1948 இல் இஸ்ரவேல் நாடு உருவாக்கப்பட்டபோது உலகெங்கிலும் குறிப்பாக அமெரிக்கா, மற்றும் மேலைத்தேய நாடுகளிலிருந்தும் மீண்டும் பல சந்ததிகளின் பின்னர் குடியேறி வாழ்ந்து கொண்டிருப்பதை அறியவில்லைப் போலும். கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்குக் கூடுதலாக பிற நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் தமது தாயகம் மலர்ந்தபோது மீண்டும் திரும்பினார்கள். புலம்பெயர் வாழ்வினை விடத் தாயகத்தில் வாழும் வாழ்க்கையே சிறப்பானது என்பதை பல சந்ததிகளின் பின்னரும் யூதர்கள்  மெய்ப்பித்துக் காட்டினார்கள். பாவம் புங்கையூரான் பொல்லைக் கொடுத்து இறுதியில் வாங்கிக் கட்டிக் கொண்டார். அவரணியினர் இந்தப் புலத்துச் சிற்றின்ப வாழ்க்கையினைப் பேரின்பமாக உருவகித்துக் கொண்டு தாயகத்துக்குத் திரும்பிப் போகமாட்டார்களாம்!

 

என் உயிர் துடிக்கும் இந்த தாயகத்து மூச்சுக்காற்றிலே பரம்பரை பரம்பரையாக என் அப்பன் பாட்டன் முப்பாட்டன் என்று சுவாசித்த சுவாசத்திலே அந்தப் பேரின்பம் கலந்திருக்கின்றது. நடுவர்களே எனது அப்பனும் பாட்டனும் அவனுடைய முன்னோர்களும் புலம் பெயர்ந்தா ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்? இல்லையே! தங்கள் தாயக மண்ணிலே இருந்த வளங்களைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்தார்கள் தங்கள் சந்ததியையும் சிறப்பாக வாழவைத்தார்கள் என்பதனை பெருமையோடு புங்கையூரானுக்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

 

ஊரில கோயில் திருவிழாக்குப் போயிருக்கிறீர்களா நடுவர்களே? அதுசரி ஊரில கோயில் திருவிழாக்கு போறதா, கோயில் திருவிழா நடத்திறதே நாங்க தானே என்று நீங்கள் நினைக்கிறது புரிகின்றது. ஆம் நடுவர்களே கோயில் திருவிழா தொடங்கி முடியும் வரை ஊர் உறங்கினாலும் நாங்கள்  உறங்குவதே இல்லை கோயில் கதவுகள் சாத்தப்பட்டாலும் எங்கள் உள்ளக் கதவுகள் சாத்தப்படுவதே இல்லை. அந்த இனிய வாழ்க்கை புலம் தந்திடுமா? புலத்தில் ஒரு கோயிலைக் கண்டுபிடிக்கிறதே பெரும்துன்பம். அதில பாக்கிங்க் எடுக்கவே வேண்டாம் என்றாகிவிடும் இதில திருவிழா ஒருகேடு இதுதானே உண்மை நிலை நடுவர்களே! இதற்காகத்தானே கோயில் இல்லா ஊரிலே குடியிருக்கவேண்டாம் என முன்னோர்கள் சொன்னார்கள்.

 

நடுவர் கோமகன் அவர்களே நீங்களும் காதலித்திருப்பீர்கள். ஊரில் ஒரு பெண்ணுக்குப் பின்னால் திரிதிரி எண்டு திரிந்து அவளின் கடைக்கண் பார்வைக்காகத் தவமாய்த் தவமிருந்து தோழியைத் தூதுவிட்டுக் கடைசியில் சம்மதத்துக்கு அறிகுறியாய் அவள் வீட்டுத் திருப்பத்தைக் கடக்கும்போது அவள் எறியும் ஒரு வினாடி விழி அம்பு பட்டு நெஞ்சமதில் வெடிக்கும் ஒராயிரம் அணுகுண்டு தரும் சுகம் புலத்துக் காதல் தந்திடுமோ? தயவுசெய்து புலத்தில் அப்பிடி பண்ணீடாதீங்க நடுவர் அவர்களே, புலத்தில் ஒரு பெண்ணை அய்ஞ்சு நிமிசம் பாத்தாலே நீங்கள் வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்கினதில முடிந்து விடும். ஒருத்தனை அய்ந்து மாதம் கவனித்துக் காதலின் ஆழம் பார்த்துச் சம்மதம் தரும் நம்மவூருக் காதல்க் கண்மணிகள்  எங்கே? ஒரு அய்ந்து நிமிடப் பார்வைக்காகப் போலீசைக் கூப்பிடும் புலத்து அம்மணிகள்  எங்கே சிந்தியுங்கள் நடுவர்களே!

 

ஊரில் வாழ்ந்த வாழ்க்கையில் உற்றார் உறவினர்களுடன்  அயலவருடன் நண்பர்களுடன் இருந்த அந்தப் பாசப்பிணைப்பும் நெருக்கமும் புலத்து வாழ்க்கையில்  காணக்கூடுமோ? நடுவர் சுமேரியர் அவர்களே ஊரில் உங்கள் சகோதரர்களின் வீட்டுக்கு போகின்றபோது சொல்லிவிட்டுத்தான் போவீர்களா? இல்லையே! ஆனால் புலத்தில்சொந்தச் சகோதரங்களின் வீட்டுக்கு போகவேண்டி இருந்தால் கூட சொல்லிவிட்டுப் போகவேண்டி இருக்கு.

 

ஊரில் ஒரு சாவு வீடு என்று வந்துவிட்டால் சிறிது காலம் தினமும் அந்த வீட்டுக்குப் போய் அவர்கள் இழப்பை மறந்து இயல்பு வாழ்க்கக்குத் திரும்பும்வரை அவர்களைத் தாங்கும் பண்பாடு எமக்கு இருக்கின்றது. நடுவர் சுமேரியர் அவர்களே, நீங்களுங்கூட உங்கள் கணவர், பிள்ளைகள், பெற்றோருடன் இணைந்து அப்படிப்பட்ட வீடுகளுக்கு அடிக்கடி சென்று சாப்பாடு செய்துகொடுத்து அவர்களை ஆறுதல்படுத்தி இருப்பீர்கள். ஆனால் புலத்தில் நடப்பது என்ன? கொஞ்சப் புட்டை, இடியப்பத்தை அல்லது கொத்துரொட்டிய ஒரு சாட்டுக்கு கடையில வாங்கிக்கொண்டுபோய்க் கொடுத்து விட்டு ஒரு அரைமணி நேரம் இருந்திட்டு வந்திடுவார்கள். பிறகு நல்லடக்கம் செய்யும்  நாளில் வேண்டாவெறுப்பாகப் போய் முழிஞ்சுகொண்டு நிற்பார்கள். ஊரில் வாழ்ந்த காலத்தில் இருந்த அந்த பாசப்பிணைப்பும் அன்புப் பரிமாற்றமும் புலத்தில் வெறும் ஒப்புக்கே காட்டப்படுகின்றதே தவிர உள்ளத்தின் ஆழத்தில் இருந்து இயல்பாக வந்தது அல்ல அல்ல என இடித்துரைக்கின்றேன் நடுவர்களே!


புலம்பெயர் தேசத்திலே அடிக்கடி கேள்விப்படும் ஒரு வார்த்தை மன அழுத்தம். அதிகமானோர் மன அழுத்த நோயினால் பாதிக்கப்படுகிறார்களம். போதாக்குறைக்கு நாய் பூனைக்கும் மன அழுத்தம் என்று சிகிச்சைவேறு. ஊரிலே நாம் எவ்வளவு அழுத்தம் கொடுத்தும் நம்ம நாய் பூனைகளுக்கு மன அழுத்தம் வந்திருக்கா நடுவர்களே? இங்கு விலங்குகளுக்கே மன அழுத்தம் என்றால் மனிதரின் நிலை நிலை எப்படியோ?  கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் நடுவர்களே இதுதான் புலம்பெயர் வாழ்வின் சிறப்பா?

 

ஒரு தேசிய இனமானது, அது பேசும் மொழியைக் கொண்டே அடையாளப்படுத்தப்படுகிறது. மிகவும் கவலையுடன் சொல்லுகின்றேன் நடுவர்களே, நமது அடுத்த தலைமுறையினரின் முகங்கள் புலத்திலே தொலைக்கவிடப்பட்டிருக்கின்றன. பெயரளவில் தமிழராகவும் மனதளவில் புலத்துவாசிகளானதுமான  சந்ததி ஒன்று உருவாகிக்கொண்டு இருக்கின்றது. தமிழில் பேசச் சிரமப்படும் நிலை அல்லது கூச்சம், இன்னும் சிலர் தமிழை வெறுக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. தமது உண்மை முகத்தை இழந்துவிட்டு இரவல் கலாசாரமும் செயற்கைத் தனமுமான வாழ்க்கையைத் தம்முடையதாக நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிறர்கள். பல புலம்பெயர் பெற்றோருக்கு இது பெருமையும் கூட. குயிலின் குஞ்சுகளை காக்கைகள் எப்போதும் தம் கூட்டில் வைத்திருக்க விரும்புவதில்லை என்பதை எதிரணியினர் புரிந்துகொள்வார்களா நடுவர்களே!


இவ்வாறான இரவல் கலாசாரமும் செயற்கைத் தனமுமான புலம்பெயர் வாழ்க்கை எவ்வாறு சிறப்பானதாக இருக்க முடியும் நடுவர்களே?

 

ஆடினார்கள் ஆடினார்கள் தங்கள் இறுதிமூச்சு உள்ளவரை களமாடினார்களே வீரமறவர்கள். எதற்காக என்று உங்களைப் பார்த்துக் கேட்கின்றேன் நடுவர்களே. நமது தாயக மண்ணில் நாம் சுதந்திரமாக எம்மை நாமே ஆண்டுகொண்டு சிறப்பான பாண்பாட்டு விழுமியங்களுடன் ஒழுக்கமுள்ள ஒரு வாழ்க்கையை நாமும் நம்முடைய எதிர்காலச் சந்ததியும் வாழவேண்டும் என்பதற்காக என்பதைத் திமிராக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொல்கின்றேன். வெறும் பேச்சளவில் மட்டுமல்ல கிட்டத்தட்டப்  பத்து ஆண்டுகளுக்கு மேலாக, உலகத்  தமிழனின் ஒரே தலைவர் அவர்களின் வழிநடாத்துதலில் தாயகத்தில்  சிறப்பான ஒரு வாழ்வை மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை இந்த அவையிலே எவரேனும் மறுத்துக் கூற முடியுமா நடுவர்களே! அங்குள்ள மக்களை கேட்டுப் பாருங்கள் அந்தச் செழுமையான சிறப்பான நாள்களைக் கண்ணீருடன் நினைவுகூருவார்கள். புலத்திலுள்ள வசதி வாய்ப்புக்கள் அங்கு இல்லாமல் இருந்தாலும் அவர்கள் சிறப்பான வாழ்வையே வாழ்ந்தார்கள். புலம்பெயர் வாழ்க்கை ஒரு மாயை என்பதனை நன்கு அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.

 

இறுதியாக, " புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலை அல்ல நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே என்பதனை உறுதியாகக் கூறிக்கொண்டு, நடுவர்களினதும் முடிவும் இதுவாகத்தான் இருக்கும்! இருக்கவேண்டும்! எனக் கேட்டுக்கொண்டு அவையோரிடமிருந்து விடைபெறுகின்றேன்.

 

வாழ்க தமிழ்! வெல்க தமிழன்! மலர்க தமிழீழம்!

 

வாய்ப்பளித்தமைக்கு நன்றி வணக்கம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஒரு இக்கட்டான நிலையில் என்னைக் கொண்டுவந்து விட்டுவிட்டார் யாழ் வாலி. எல்லாவற்றையும்  ஊடறுத்துப் பாய்கிறது அவரின் ஏவுகணை. மிகத் துல்லியமாக நிதர்சனத்தை எமக்குக் காட்டுகின்றன அவர் வாதங்கள். சொந்த மண்ணின் பெருமையும் எம்நாட்டின் அருமையும் அவர் சொல்லாவிட்டாலும் கூட எமக்குத் தெரிந்தது தான்.

புலம்பெயர்ந்து காலாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தாலும் எம்மவரால் மற்றைய  நாட்டவருடனோ
அவர்தம் கலாச்சாரத்துடனோ ஒன்ற முடியாமைக்கு அவர் கூறும் விளக்கம் சரியானதே. என்னதான் நாம் இங்கு வசதியாக வாழ்ந்தாலும் எம் மனம் எப்போதும் தாயகத்தையும் அங்கு வாழ்ந்த வாழ்வையும் எண்ணி மாய்ந்து போவதனால் எம்மால் மற்ற சமூகத்துடன் ஒன்றி வாழ முடியவில்லை என்னும் அவர் கூற்று உன்மைதான்.

சரி பார்ப்போம். இன்னும் சொற்ப நேரத்தில் முடிவு தெரிந்துவிடப் போகிறது.

 

 

 

 

 

இரு தடவை வந்துவிட்டதால் எடிட் செய்யப்பட்டது.
 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்


யாழ் களத்தில் பதினைந்தாம் அகவையை முன்னிட்டு நடாத்தப்பட்ட பட்டிமன்றத்தை ஆவலோடும் பொறுமையோடும் இத்தனைநாள் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும், இரு அணியிலும் வாதாடித் தம் பக்கத்துக்கு வலுச்சேர்த்தவர்களுக்கும் முக்கியமாக யாழ் இணையத்துக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

தம் வாதத் திறமையால் இரு அணியினரும் சோடை போகாது மிகச் சிறப்பாக வாதாடி நடுவர்கள்
எம்மைத் திணற அடித்துவிட்டனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். பார்வையாளர்களின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் "நாம் புலம் பெயராது  ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம்" என்று வாதாடிய அணியினரே  முன்னணியில் உள்ளனர். ஆனாலும் அதை மட்டும் வைத்துத் தீர்ப்புக் கூற முடியாதல்லவா!

 "நாம் புலம்பெயராது இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே" என்னும் அணி சார்பாக வாதாடியோர் நாம் அங்கு இழந்த வாழ்வின் வசந்தங்களை எம் கண்முன்னே கொண்டு வந்தனர்.  இயற்கையுடன் கூடிய எம் வாழ்வும் அதன் நினைவுகளையும் மீட்டி எம்மை மனச் சங்கடத்துக்கு உள்ளாக்கினர்.

புலம்பெயர்ந்ததனாலேயே நாம் அடிமைகளாக அந்நிய மண்ணில் எம் தன்மானத்தை இழந்து வாழ்கின்றோம் என்னும் அவர்கள் வாதம் பொய்யல்ல. நாம் யார்?? எம் தேசம் எது?? என்னும்
அவர்களின் வினாக்களுக்கும் எம்மிடம் விடையில்லை. அதைவிட எம் அடுத்த சந்ததி நாடோடிகளாக வாழும் வாழ்க்கைக்குத் தம்மை பழக்கப்படுத்தி, எல்லாம் மறந்து தம் அடையாளம் இழந்து நிற்கப் போகின்றனர் என்பதும் ஆணித்தரமான உண்மை.

எம் தேசத்தில் எம் சுய சம்பாத்தியத்தின் மூலம் நாம் நிறைவு கண்டோம். ஆனால் இங்கோ எல்லாம் தந்து எம்மை வாழ்வின் உயர்நிலைக்கு இட்டுச் செல்வதான மாயம் காட்டி, வாழ்வு பூராகக் கடன் அடைத்தே வாழ்நாளின் முடிவுவரை வாழும் அவல வாழ்வையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனாலும் அவர்களின் வாதங்களை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்ததில் நாம் எம் தேசத்தில் இருந்திருந்தால் சிறப்பாக இங்கு வாழ்வதுபோல் சிறப்பாக வாழ்ந்திரும்போமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. எம்மக்களிடையே இருந்த ஏற்றத் தாழ்வும், ஆண்டாண்டுகளாக ஆழமாய் வேரூன்றிவிட்ட சாதீயமும், சமத்துவமற்ற வாழ்வும், பணமுள்ளவனுக்கே கிடைக்கும் சொகுசு வாழ்வும் எல்லோருக்கும் கிடைத்திருக்கவே முடியாது. தன்  வீட்டைக் கட்டும் கொத்தனாரையே, தன் கிணற்றில் தண்ணீர் அள்ள விடாத அறிவற்ற மக்கள், எத்தனை ஆண்டுகளானாலும் எத்தனை கல்வியறிவைப் பெறினும்,
திருந்திவிடப் போவதில்லை என்பதே உண்மை.

எமக்கு வேறு ஒன்று கிடைக்கும் வரை, எம்மிடம் இருக்கும் சிறியதே எமக்கு உயர்வாகத் தோன்றும். அதனால்த்தான் எம்மூர்க் கோயிலும் குளமும் காற்றும் கூட எமக்கு உயர்வாக இருக்கிறது. அதைவிடச்  சிறப்பாகப்  புலம்பெயர் வாழ்வில் எத்தனையோ இருந்தும் அவற்றை அனுபவிக்காது, மனதில் பதிந்தவற்றையும், இழந்தவற்றையும் எண்ணிப் புலம்புவதில் என்ன நியாயம்??

கல்வியை எடுத்துக் கொள்வோம். உலகத்துக்கே எழுத்து மொழி தந்து, உலகின் உன்னதங்கள் எல்லாவற்றுக்கும்
முன்னோடியாக இருந்தவன் தமிழன். முதன் முதலில் பள்ளிக்கூடங்களை உலகுக்கு அறிமுகம் செய்தது கூட தமிழரின் மூதாதைகள் தானெனினும், காலப் போக்கில் எல்லாச் சிறப்புக்களும் இழந்து தமிழன் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து வந்தான். பொறிமுறைகளைக் கண்டறிந்து, உலகின் முதல் பொறியியலாளர் என்னும் பெருமையும் எம்மினத்தையே சேர்ந்தாலும் அதனால் எமக்கு தற்போது என்ன பயன் எனில் ஒன்றுமே இல்லை.  

எம்மூரில் எமக்குக் கல்வி கிடைத்ததுதான். ஆனால் எப்போது?? பிரித்தானியர் ஆட்சி அங்கு வந்ததன்
பின்னர்தான். அதுவரை அனுபவக் கல்வியாகவும், திண்ணைகளின் சமய சார்பான கல்வியாக்கவுமே அங்கு இருந்திருக்கிறது. அதனால் எல்லோரும் பயனடந்தார்களா? என்றால் இல்லை. ஊரில் 95% படித்த மக்கள் என்று கூறினீர்களே தவிர, அத்தனைபேர் படித்திருந்தும் எதை அங்கு பெரிதாகச் சாதித்தீர்கள்.
வல்லரசுகளுடன்  வேண்டாம், அண்டை நாடுகளுடனாவது போட்டிபோடும் திறன் எமக்கு இருந்ததா எனில் அதுவும் இல்லை. ஆனால் புலம்பெயர்ந்ததனால் எத்தனையோ சாதனைகளைத் தமிழன் படைத்துவிட்டான் என்பதை நாம் ஒத்துக்கொள்ளவே வேண்டும்.

அடுத்து "புலம்பெயர் தமிழரது ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே" என
வாதாடியவர்கள், புலம்பெயர் தேசங்களில் எம் மக்கள், எத்தனை வசதிகளோடு வளமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை தெளிவாகவே கூறியிருக்கின்றனர்.

எம்மிடையே ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வற்ற வாழ்வு, கல்வி, பொருளாதார மேம்பாடுகள் என்பவற்றையும்,
புலம்பெயர்ந்து நாம் இங்கு வந்ததனால், எம்மினத்திற்கு ஏற்பட்டுள்ள செழுமையான  வாழ்வையும் அக்குவேறு ஆணிவேறாக அலசியுள்ளனர்.

மனித வாழ்வின் தேடல்களுக்கும், அவர்களின் அளவற்ற ஆசைகளுக்கும், அதனூடாக அவன் அடைய எண்ணிய அத்தனைக்கும் புலம்பெயர் தேசமே எல்லைகளற்ற வழிகளைக் காட்டியுள்ளது என்கின்றனர். ஒருவரிடம் திறமையும் முயற்சியும் இருந்தால் அவர் எத்துணை தூரத்தையும் எளிதில் கடந்து தன்  இலக்கை அடைவதற்கு, புலம் பெயர் தேசத்தின் வரைமுறைகளே வழிசெய்கின்றன என்பதும் உண்மைதான்.

இத்தனை வசதிகளை வாய்ப்புக்களை விட்டு நீங்கள் யாராவது மீண்டும் தாயகம் சென்று வாழ
முடியுமா?? வாழ்வீர்களா?? என்பதற்கு இல்லை என்பதுதான் என்பதில் கூட.


புலம் பெயர்ந்ததனாலன்றோ  நாம் முப்படைகளை ஆக்கும் வல்லமை பெற்றோம் என்னும் இவர்கள் வாதம்தான் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் படை நடத்தவில்லையா?? அயல்  தேசங்களை வென்று  தம் ஆட்சியின் கீழ் கொண்டுவரவில்லையா??? எம் அறிவையும் ஆற்றலையும் கண்டு அயர்ந்து யவனர்கள் கூட எமக்கு அடிபணிந்து வாழ்ந்ததெல்லாம் எம் வரலாற்றில் உண்டு. ஆனால் அதன்பின் தமிழரின் வாழ்வு காட்டிக் கொடுப்புக்களாலும் கயவர்களாலும்  பாரிய அழிவையும் சரிவையும் சந்தித்ததையும் நாம் மறுக்க முடியாது.

 நாம் எம் தேசத்தில் இருந்திருந்தால் நாம் எமக்கு மட்டுமே தெரிந்த, நாம் வசதிகள் என எண்ணிய சிலவற்றுடன் மட்டும் திருப்பதி கொண்டு, தொடர்ந்தும் அதே வாழ்வை வாழ்ந்துகொண்டு, எத்தனை ஆண்டுகள் ஆயினும் உலகமயப் படாது அப்படியேதான் இருந்திருப்போம். அதாவது கிணற்றுக்குள் வாழும் உயிரினங்களைப் போல் வெளியே  உள்ள சிறப்பான வாழ்வு பற்றி ஒன்றும் அறியாது வாழ்ந்திருப்போம். ஆனால் இன்று நாம் புலம்பெயர்ந்ததனால், உலகம் எம் கண்முன்னே விரிந்து, எமக்கான எல்லாவற்றையும் கண்முன்னே காட்டி, விரல் நுனியில் தகவல்களை உள்ளடக்க
வைத்திருக்கின்றது.

எமக்கென்றொரு அடையாளம் இன்னமும் இருக்கிறது. எம் ஆழ்மனதில் அதில் பற்றும் இருக்கிறது. எமக்கென ஒரு தேசம் என்றோ இருந்திருக்குமானால் நாமும் உலக நாட்டின் முன்னணியில் நின்றும் இருக்கலாம். ஆனால் யதார்த்தம் அதுவல்லவே. நாம் எப்போதும் இயற்கையுடன் மட்டும் ஒன்றி வாழ எண்ணாது, யதார்த்த வாழ்வுடனும் இசைந்து போவதே எமக்கும் எம்மினத்திற்கும் நன்மை பயக்கும்.  அப்படி இசைந்து போகும் தன்மை இல்லாததால்தான் நாம் இன்று இத்தனை உயிர்களையும் இழந்து, எம் தேசத்தையும் அந்நியன் கால்பதிக்க விட்டு எதுவும் செய்ய முடியாது  அனாதரவாய்  பார்த்துக்கொண்டு  நிற்கின்றோம்.

எனவே  நாம் ஊரில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருப்போம் என்னும் வாதம் யதார்த்த வாழ்வியலுக்குப் பொருந்தாதாது மட்டுமல்ல, எம்மை நாமே சமாதானப் படுத்த, நாம் கூறும் நொண்டிச் சாட்டு என்பதே உண்மையின் தரிசனம் எனக் கூறி "புலம் பெயர் தமிழரது ஊர் பற்றிய கவலையானது  வெறும் பிரிவுகளின் கவலையே" என வாதாடிய அணியினரே வெற்றி வாகை  சூடிக்கொள்கின்றனர் எனக் கூறி எனதுரையை நிறைவு செய்து உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்..

நன்றி. வணக்கம்.

  • தொடங்கியவர்

அரங்கம் நிறைந்த ரசிகப்பெருமக்களுக்கு எனது வணக்கங்கள் . தனது பதினைந்தாவது
அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கும் யாழ் இணையத்திற்கு எனது மனங்கனிந்த பிறந்த
நாள் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு எனது தீர்ப்பை வழங்கலாம் என இருக்கின்றேன் .


இந்தப் பட்டிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருக்கப்போகின்றது என்ற ஆவல் உங்கள் கணகளில் மின்னுவதை என்னால் உணரக்கூடியாக இருக்கின்றது . இரண்டு அணிகளும் அதன் தலைவர்களும் யாழ் இணையத்தின் முத்துக்கள் என்றே சொல்லலாம் . அவர்களது வாதத்திறன் புலம்பெயர்ந்தும் தமிழ் மீதுகொண்ட அடங்காப்பற்று என்னை நிலைதடுமாற வைத்தது . நான் காய்த்தல் உவத்தல் இன்றி உங்களுக்கு தீர்ப்பை சொல்லவேடிய நேரம் வந்திருக்கின்றது . ஒரு போட்டி என்று வந்தால் அதில் வெற்றி அல்லது தோல்வி தான் இருக்கமுடியும் . இரு அணியும் வெற்றிதோல்வி இன்றி முடிவுக்கு வந்தது என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை . இந்தப்பட்டிமன்றத்தில் வாசகர்களாகிய உங்களையும் வாதாட்டத்தில் ஈடுபடுகின்றவர்களுக்குத் தெரியாது நடுவர்கள் ஆக்கினேன் . அவர்கள் ஒவ்வொரு பேச்சாளர்களுக்கும் தமது விருப்பு வாக்குகளை இட்டார்கள் . நான் அவர்களது புகழ்சிகளுக்கு அடிபணியாது அவர்களது வாதங்களில் மட்டுமே கவனத்தை திருப்பினேன்.


" நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ???? 

என்ற அணியில் தமது வாதங்களை வைத்த ஏழுபேருமே


" பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும் ; நல்ல முத்துச்

சுடர்போலே நிலாவொளி முன்புவர வேணும்? அங்கு கத்துங்
குயிலோசை சற்றே வந்து காதிற்பட வேணும்; என்றன் சித்தம்
மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல்வர வேணும் " .


என்று தங்கள் வாதங்களால் என்னை ஆட்டங் காணவைத்தார்கள் . முதலாக வந்த

வாத்தியாரும் ,


“ கல்வி கல்வி என்று தான் காணாத கல்வியைப் புலம்பெயர்ந்தவன் தன்  குழந்தைக்கு கடமையாக்க பொது அறிவு என்றால் பொருளே தெரியாமல் அக்குழந்தை தவிக்கின்றது தன் கலாச்சாரம்

தெரியாமல் அவதிப்படுகின்றது இத்தனை கவலைகளும் இல்லாமல் நாங்கள் சொந்த
ஊரில்  சிறப்பாக நாம் வாழ்ந்திருப்போம் “


என்று புலம்பெயர் தமிழனது வருங்காலமும் அவனது சந்ததிகளும் ஜிப்சிகளாக மாறிவரும் அபாயநிலையை காட்டமாகத் தனது வாதத்திலே வைத்தார்.


பகலவன் தனது வாதத்திலே,

“ ஒரு மனிதனுக்கு அடுத்ததாக தேவைபடுவது சுயமரியாதை. நாங்கள் எண்களின் தாய்நாட்டை விட்டு இன்னொரு நாடுக்கு எப்போ பிழைக்க வாறோமோ என்றே எங்களின் சுயமரியாதையை இழக்கிறோம். கூனி
குறுகி அடிமையாக எத்தனை நாட்கள் வேலை செய்திருப்போம். ஊரிலே பொறியியல் படித்துவிட்டு இங்கே எத்தனை கக்கூஸ் கழுவி இருப்போம். எங்களுக்கு பக்கத்தில் வந்து அமர கூட மாட்டார்கள்.


ஒரு சாராசரி மனிதனுக்கு தர வேண்டிய மரியாதையைவிட கீழ்த்தரமாக எவ்வளவு இடங்களில் நடத்தி இருப்பார்கள். இப்போது குறைந்துவிட்டாலும், நேருக்கு நேராக காட்டாவிட்டாலும் நிற வெறி அவர்களின் மனசில் இருந்து அகற்ற முடிவதில்லை.”
 

என்றும் ,
 

" புலம்பெயர் தமிழனே உனது குழந்தைகளை தாயகத்திலே இனமானமுள்ளவர்களாக வளர்க்கப் போகின்றாயா  ??? இல்லை புலம்பெயர் சூழலிலே அவர்களை " ஜிப்சிகளாக " வளர்க்கப்போகின்றாயா ??? “


என்று பெரியகேள்வியை எழுப்பி புலம் பெயர்ந்த தமிழினின் அவலத்தை படம்பிடித்து தாயகத்தில் இதைவிட சிறப்பாக இருந்திருப்போம் என்றார்.


அதே கருத்தை பின்பு வந்த தும்பளையான்,

“ புலம் பெயர்ந்து நாம் ஒன்றை இழந்தே இன்னொன்றை பெற்றிருக்கிறோம். எமது நேரத்தை, குடும்ப வாழ்க்கையை, உடல் சுகத்தை, பிள்ளைகளின் கலாச்சாரத்தை, எல்லாவற்றிற்கும் மேலதிகமாக மொழியை
இழந்திருக்கிறோம். புலம்பெயர் தேசத்தின் பணமும் சுகங்களும் ஒரு விலையுடன் வருபவை.
ஊரின் பல நன்மைகளும் சுகங்களும் இலவசமாக வருபவை. முக்கியமாக விலைமதிப்பற்ற எமது
மண் எனும் உணர்வு விலைமதிப்பற்றது. வாழ்க்கையை அணு அணுவாக இரசித்து வாழ்வது ஊரில்
மட்டும்தான் சாத்தியம். நாம் பலவருடங்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், நாம் அந்நியராகத்தான்
அந்தந்த நாட்டு மக்களால் பார்க்கப்படுவோம். அத்துடன் நிறவெறி இல்லை எனக்
கூறுபவர்கள் தம்மைத்தாமே ஏமாற்றுகிறார்கள் என்பதையும் கூறி வைக்க விரும்புகிறேன்.”


என்றும் ,

“அடுத்ததாக விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆற்றிய பங்கு அதிகம் எனக்கூறி இருந்தார். இல்லை எனக்கூறவில்லை ஆனால் அதே போராட்டம் அழிவடைவதற்குக் காரணமாக இருந்ததும் புலம்பெயர் சார்ந்த அரசியல், வெளிநாட்டுக்கொள்கைகள் என்பது வெளிப்படை. கப்பல் கப்பலாக ஆயுதத்தை இறக்கினோம் ஆனால் அதனை எடுத்து பாவிப்பதற்கு ஆட்கள் இல்லாமல் முடக்கி வைத்தோம். புலம்பெறந்த நாம் அனைவரும் ஊரிலே இருந்திருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்குமா?”


என்றும் ஒரு மனச்சங்கடமான கேள்வியை என்முன்னே வைத்தார்.


இதிலே நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் . தமிழன் புலம்பயர்ந்துதான் போரியல் வரலாறுகளையும் முப்படைகளையும் நாடாத்தினான் என்றால் , சொந்த நிலப்பரப்பிலே இருந்துகொண்டு தங்களுக்கென்ற கடல் வாணிகப்பாதையையும் முப்படைகளையும் கொண்ட எனது பாட்டன் முப்பாட்டன்களான மூவுடை வேந்தர்களை எந்தவகையில் சேர்ப்பது?????


அடுத்து வந்த கரும்பு,

“ நாம் என்பது யார்? நமது ஊர் என்பது எது? நாம் என்பது ஒருசிலரை
குறிக்கின்றதா அல்லது அனைவரும் சம்மந்தப்பட்ட ஒட்டுமொத்த ஈழத்தமிழர் சமூகத்தை
குறிக்கின்றதா? ஊர் என்பது ஓர் குறிப்பிட்ட புவியியல் நிலப்பரப்பை குறிக்கின்றதா அல்லது பெருநிலப்பரப்பான தாயகத்தை குறிக்கின்றதா?


இவ்வினாக்களிற்கான பதில்களின் தேடல்கள் உங்கள் வாழ்வில் தொடரும்போது, அந்தப்பதில்களிற்கான புனிதப்பயணத்தில் நீங்கள் தெளிவு பெறும்போது, இவை சம்மந்தப்பட்ட உங்கள் கவலைகள் அத்தனையும்
நிச்சயம் ஆயிரங்கோடி அர்த்தங்கள் பொதிந்தனவாகவே காணப்படும். அவை உங்கள் ஆத்மா
நிதம், நிதம் சுற்றிச்சுற்றி வருகின்ற அந்த "ஊரில்" "நீங்கள்" சிறப்பாக வாழும் வாழ்க்கையாகவே அமையும்!" 

 

என்று என்னை நன்றாகவே யோசிக்க வைத்தார்.

அதன்பின்பு வந்த குமாரசாமி ஐயா ,


"ஐயா வாணரே! அமெரிக்க ஜனாதிபதிஎன்ன வெள்ளையோ எண்டுறியள்? ரொக்கற்றிலை போன கல்பனா என்ன வெள்ளையோ எண்டுறியள்? நோர்வேயிலை வேறை தமிழன் கவுன்சிலர் எண்டுறியள்? அதாவது இந்த உலகம் ஒரு சமதர்மத்தோடை நடக்குது எண்டு சொல்ல வாறிள்? அப்ப ஏன் இன்னும் தமிழீழம் கிடைக்கேல்லை வாணரே? "


என்று தனது அனுபவத்தின் பெயரால் என்னை கடுமையாகவே  சிந்திக்கவைத்தார் .

அதன்பின்பு வந்த ஊடகவியலாளர் சாத்திரி அவர்கள்


“ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி


இருந்ததும் எம் நாடே - அதன்


முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து


முடிந்ததும் எம் நாடே - அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து


சிறந்ததும் எம் நாடே !!!!!!!! “

என்று என்னைக் கிறுங்கடித்து,

" வெளிநாட்டில் சுதந்திரமாக வாழ்கிறோம் என்பது பொய்  இங்கு நாம் பெரு முதலாளிகளின்  நுகர்வு அடிமைகள். ஊரில் ஒரு சைக்கிள் வாங்குவதென்றாலும்  அவன் தனது உழைப்பை சிறுக சிறுக சேமித்து பணத்தை கொடுத்து அதை வாங்குகிறான் ஆனால் இங்கு அப்படியா?? கார் வேண்டுமா  ஒரு கையெழுத்து வைத்துவிட்டு கரை கொண்டுபோ என்பார்கள். பத்தாயிரம் யூரோ காரை  மாதா மாதம்  வட்டியோடு பணம் கட்டி இருபதாயிரத்திற்கு வாங்கிவருவோம்.பணம் கட்டும் காலம் ஆறு வருசமோ ஏழு வருசமோ  ஆனால் பணம் கட்டி முடியும் போது கார் ஓடமுடியாமல் பழுதாகிப் போயிருக்கும் ஆனாலும் பணத்தை கட்டிமுடித்தேயாக வேண்டும்.அதே போலத்தான் சொந்த வீடு  வாங்க வேண்டும் என்கிற ஆசையில் வீட்டை வாங்கி விடுவார்கள்  . வீட்டின் வங்கிக் கடன் 30 வருடங்களாக இருக்கும் ஆனால் வீட்டை வாங்குபவரிற்கு வயது அப்போ 40 தாக இருக்கும். வீட்டுக் கடனிற்காக  ஓடியோடி உழைத்து  வீடு அவரிற்கு சொந்தமாகும்போது  ஒன்று அவர் உயிரோடு இருக்கமாட்டார் . சொந்த வீடு  செத்த வீடாக  மாறியிருக்கும்.அல்லது வருத்தங்களோடு  வயதாகி மருந்து குளிசைகள் மட்டுமே சாப்பாடாக மறிப்போயிருக்கும்.. இந்த வாழ்வு தேவையா "


என்று என்னை நோக்கி ஒரு கேள்வியை எழுப்பினார். நான் இவர்களது வாதங்களை உற்று நோக்கியதில் ஒரு விடையம் தெளிவாகின்றது . இவர்களுடைய வாதங்களின் எடுகோள்களும் சிந்தனை சிதறல்களும் வாதத்தின் அடிப்படையில் மிகச்சிறந்தாகத் தெரிந்தாலும் . ஒருவிடையத்தில் கோட்டை விடுகின்றார்கள் . அதை இறுதியில் சொல்கின்றேன் .


"புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ???

 

என்ற அணியில் வாதாட வந்த தமிழிச்சி,


“புலம்பெயர்ந்திருக்கும் எமக்கான ஒரேயொரு கவலை ஊரில் எஞ்சியிருக்கும் எமது உறவினர்களே தவிர எமது புலம்பெயர் வாழ்வியல் அல்ல.  அவ்வுறவினர்களையும் அடிக்கடி சென்று பார்த்து வரும் வசதிகள் எம்மிடம் உண்டு.  தாயகத்தில், ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குச் செல்வதற்கே கணக்குப் பார்த்து செலவழிக்கும் நிலைதான் இன்றும் பலருக்கு அங்குண்டு.  நாம் புலம்பெயராது
இருந்திருந்தால் எம்மில் பலருக்கும் அந்த நிலைதான் இருந்திருக்கும்.  எதிரணியினர், இக்கரைக்கு அக்கரைப் பச்சைகள்தானே தவிர, யதார்த்தத்தை உணர்ந்தவர்களல்ல நடுவர்களே.”


என்று யதார்த்த வாதத்திற்கு உரமூட்டினார்.

அவரைத் தொடர்ந்து வந்த ஜீவாவினுடைய வாதம்,


“ நாம் புலம்பெயராது விட்டால் உலகமே போற்றும் முப்படைகளை வைத்திருந்த இராணுவம் அல்லா அமைப்பை தமிழரால் உருவாக்கியிருக்க முடியுமா? அல்லது போர்க்குற்றவாளிகளையாவது இனங்காட்ட
முடிந்திருக்குமா? ஏன் முக்கியமாக சமூக ஏற்றத்தாழ்வுகளையாவது கட்டுப்படுத்தியிருக்க முடியுமா? குறிப்பாக சாதீயம்.. சாதீயத்திலேயே ஊறிப்போன தாயகத்திற்கும், சாதீயம் பற்றியே தெரியாத அடுத்தடுத்த சந்ததிகள் வளர்வதற்கும் புலம்பெயர் வாழ்க்கை தானே காரணம்.”


என்று தமிழினுடைய பெரும் பிளவான சாதீயத்தையும் தொட்டு,

"நுகர்வுக் கலாச்சாரத்தில் தேவைகள் அதிகரிக்கும் போது அவற்றை வாங்க சம்பாதிக்கவும் வேண்டுமே. பேராசையால் ஊணுறக்கம் இன்றி அலைவது அவரவர் செய்கைகளே அன்றி புலம்பெயர்வாழ்வின் அவலமல்லவே "


என்று யாதார்தத்தை தொட்டு நின்றது.

அடுத்த வந்த சுபேஸ் இதே யாதர்த்தவாதத்திற்கு ,


"மனிதமனமே இப்படி விசித்திரமான ஒன்றுதான்...இல்லாத ஒன்றுக்காக ஏங்குவது..அதையும் ஊரில் போய் வாழ்ந்தால் சிறப்பாக வாழலாம் என்ற விவாதத்துக்கும் முடிச்சுபோடுவது காளைமாட்டை கட்டிவச்சு கட்டையால் அடித்து பால்கறக்க முயல்வது போன்றதே.. "


என்று தனது சிந்தனை வரிகளால் உரமூட்டினார்.

அவரைத்தொடர்ந்து வந்த யாழ்வாணனும் தனது வாதத்திலே,


"நீங்கள் எல்லோரும் புலம்பெயர் தேசங்களில் உங்களை கால்களை நன்கு நிறுவி விட்டீர்கள். இந்த நிம்மதியான வாழ்வை விட்டு உங்களால் இனிப் போக முடியாது. ஆகவே இனிமேலும் ஊருக்குத் திரும்பி பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க உங்களால் முடியாது நீங்களும் புலம்பெயர் வாழ்வில் நீங்கள்அனுபவித்த சுகஙகளைத் துறந்து,


பரம்பரைக் காணி

வாத்தியார் ஏங்கிய கேணி


பகலவன் முத்தமிடத் துடித்திட்ட மண்

தும்பளையான் தேடிய வெய்யில்


என்பவற்றுடன் உங்களால் நிச்சயமாக இருக்க முடியாது என்பதுதான்

உண்மை ,"


என்று யார்த்தத்தையே கோடுகாட்டி நின்றார்.

அடுத்துவந்த அர்ஜுன்,


" தேடல் இல்லாத மனிதன் வெறும் ஜடம். அந்த தேடல் இல்லாவிடில் கற்கால மனிதனாக இன்றும் மனிதர்கள் அவர் . அவர் ஊர்களில் குகைகளில் இதுதான் சந்தோசம் என்று இருந்திருப்பார்கள் . அந்த தேடல் நாம் நாட்டில் இருந்திருந்தால் எவ்வளவு வீதம் சாத்தியம். அரசியல் , பொருளாதாரம் , தொழில்நுட்பம் எல்லாமே மிக பின் தங்கிய ஊழலால் நிரம்பிய நாடு அது. அதுவும் ஒரு போர்சூழலில் எதுவும் சாத்திய மற்ற ஒரு பிடிப்பிலாத வாழ்வைத்தான் நாம் வாழ்ந்திருக்க முடியும் ."

 

என்று தனது அணி ஒரு நிலையெடுக்க தனது வாதத்தால் நிறுவினார்.

அதன்பின்பு வந்த அணித்தலைவர் இசைக்கலைஞன்,  


“ வாழ்கிற நாட்டுக்கு ஏற்றமாதிரி நடை, உடை பாவனையை மாற்றிக்கொண்டால் ஏன்
வித்தியாசமாகப் பார்க்கப்போகிறார்கள்? சுடிதாரைப் போட்டுக்கொண்டு கடலில் குளிப்பது..! நண்டுக்கறி வாடையுடன் குளிர் ஆடைகளைப் போட்டுக்கொண்டு திரிவது..!   வரி கட்டாமல் ஏய்ப்பது.. முகத்தில் ஒரு புன்முறுவல் இல்லை.. விட்டால் மூஞ்சியைப் பிளந்துவிடுவேன் என்பதுபோல் பிற நாட்டவரைப் பார்ப்பது..  வெயிலுக்கு இரண்டு துண்டு உடையுடன் அவள் போனால் நாக்கை தரை வரையில் நீள விடுவது..   இப்படி
இருந்தால் அவர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் நடுவர் அவர்களே..!


என்று புலம்பெயர்தமிழனை தனது நகைச்சுவையின்மூலம் எள்ளியதை நான் ரசிக்கவே செய்தாலும் , அவரது அடிமை மனோபாவத்தை என்னால் ரசிக்க முடியவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன் . அதாவது , புலம்பெயர் தேசங்களிலே ஒவ்வொரு இனக்குழுமங்களும் தங்களுக்கான பாரம்பரியங்களையும் கலாச்சாரங்களையும் கட்டிக்காக்க , புலம்பெயர்தேசங்கள் சட்டவரைபுகளை ஏற்படுத்தியிருக்கின்ற வேளையிலே புலம்பெயர்ந்த தமிழன் மட்டும் வெள்ளையர்களுடன் சமரசங்களையும் நெகிழ்வுத்தன்மைகளையும்  பேணவேண்டும் என்று சொல்கின்ற இசைக்கலைஞனது அடிமை மனோபாவத்தை நடுவராகியகிய நான் இந்தப் பட்டிமன்றத்தின் மூலம் மிகவும் மென்மையாகக் கண்டிக்கின்றேன்.


இறுதியாக வந்த புங்கையூரான்,

“ இறுதியில் மிஞ்சிப்போயிருப்பது ஒன்றேயொன்று, அது தான் வெறும் உறவுகளின்
பிரிவு. அது, எமது கண் முன்னாலேயே குறைந்து வருகின்றது. ஒரு
குருவிக்கூட்டைக் குரங்கொன்று பிய்த்து எறிகின்றது. குருவியின்
குஞ்சுகள் செத்துப்போய் விடுகின்றன. திரும்பிவரும் தாய்ப்பறவை, துயர் தாங்காமல்
அழுகின்றது. ஒரு நாள், இரண்டு நாள், அல்லது ஒரு வாரம்
என்று வைத்துக்கொள்ளுவோம். அடுத்து அந்தப்பறவை அந்த இடத்திலேயே
நின்று உயிரை விட்டுவிடுகின்றதா என்றால் இல்லை என்று தானே
சொல்லவேண்டும். பறவையின் பயணம்,இன்னொரு மரத்தை நோக்கித்தொடர்கின்றது.
புதிய மரம், புதிய கூடு,என்று அதன் வாழ்க்கை தொடர்கின்றது, காலப்போக்கில்
பிரிவுகளைப், பறவை மறந்து புதிய மரத்தை வீடாக்கிக்
கொள்ளுகின்றது. இது தான் உண்மை. இது தான் இயற்கையின் நியதி. ஒருவர் புலம்பெயர்ந்த
காலத்தின் அளவுக்கும் (வருடங்கள்), உறவுகள் பற்றிய ஒரு பிரிவுக்கும் ஒரு
வரைபடம் கீறினால், அது கீழிறங்கிய படியே செல்லும். அந்த இறக்கத்தின் சரிவானது, ஒவ்வொரு
தலைமுறைக்கும் (பதினைந்து வருடங்கள்) ஒரு பாய்ச்சலாகக்
கீழிறங்கி, விரைவில் பூச்சியத்தைத் தொட்டு நிற்கும். “


என்று தனது அணிக்காக வைத்த வாதங்கள் , இலக்கியத்தரமாக ஒரு தொகுப்புரையாகவும்

யதார்த்த வாதத்திற்கு வைத்த மணிமகுடமாகவுமே என்னால் சிந்திக்க முடிந்தது .


இரு அணிகளது வாதங்களுமே பயனுள்ள கருத்துகளைச் சொல்லி நின்றாலும் ,

 

" நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ???? 


என்ற அணியில் வாதிடியவர்கள் தாயகம் பற்றிய கவலையில் என் முன்னாலே தங்கள் வாதங்களினால் உயர்ந்து நிற்கின்றார்கள் என்றபோதிலும் , இவர்கள் புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்துகொண்டு இந்த வாதங்களை வைத்தது நடைமுறை யதார்த்தத்திற்கு ஏற்புடையதாக எனக்குத்தெரியவில்லை . மாறாக,


"புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ???

 

என்ற அணியில் வாதாடியவர்கள் தங்கள் வாதங்களிலே பல இடங்களிலே கோட்டை விட்டாலும் , தெரிந்தோ தெரியமாலோ நான் எதிர்பார்த்த யாதார்த்த வாதத்தில் கண்ணுங்கருத்துமாக அவர்களை அறியாது இருந்திருக்கின்றார்கள் . எனவே வாசகர்களது விருப்பு வாக்குககள் அவர்களுக்கு எதிராக இருந்தாலும்  , எனது பார்வையில்,


"புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? என்ற அணியே
இந்தப்பட்டிமன்றத்திலே வெற்றிவாகை சூடுகின்றது . இந்த சந்தர்பத்திற்கு ஆதரவளித்த யாழ்இணைய நிர்வாகிகளுக்கு நன்றி கூறிக்கொண்டு உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன் நன்றி வணக்கம் .


நடுவர்


கோமகன்
 

வாழிய தமிழ்!!!!  வாழிய யாழ் இணையம்!!!!!!!!!



 



 

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.