Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையாளிகளை எதிர்த்த சிங்கள பேரினவாதம், மறந்த வரலாறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளிகளை எதிர்த்த சிங்கள பேரினவாதம், மறந்த வரலாறு


 

எழுதியது இக்பால் செல்வன்
 


teashop.jpg

தமிழ் நாட்டில் சிங்கள சிறிலங்கா அரசுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வந்தனர். இதனால் தமிழகம் மட்டுமில்லாமல் இந்திய அளவில் அது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. 

 

குறிப்பாகத் திமுகக் கட்சி மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து விலகியது. அது மட்டுமில்லாமல் தஞ்சாவூரில் வைத்து இரு பௌத்த சிங்கள பிக்குகள் தாக்கப்பட்டனர். ஐநா சபை மனித உரிமைகள் கூட்டத்தில் இந்திய அரசு இலங்கைக்கு எதிராகவும் வாக்களித்திருந்தது. சென்னையில் அமைந்துள்ள சிறிலங்காவின் துணை தூதரகத்துக்கு அருகே கடுமையான ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. 

 

இந்நிலையில் இத் துணைத் தூதரகத்தைக் கேரள மாநிலத்துக்கு மாற்றிவிட இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. வரலாறு எவ்வாறு திரும்புகின்றது என்பதைச் சற்றே நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. 

 

இலங்கையைப் பண்டைய காலங்களில் ஆட்சி புரிந்த தம்பபண்ணி அரசர்கள் காலம் முதல் இன்று வரை தமிழகத்தோடு (தமிழ்நாடு, கேரளம்) மிக நெருங்கிய தொடர்புகள் இருந்து வந்துள்ளன. சொல்லப் போனால் இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக தேசிய இனங்கள் என அனைவரும் தென்னிந்தியாவில் இருந்து குடியேறிய மக்களின் வழித்தோன்றல்கள் என்பதை நாம் மறுக்கவே முடியாது. 

 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட சிங்கள பௌத்த ஆரிய பேரினவாத சிந்தனையாக்கம் வெறுமனே தமிழர்களுக்கு எதிரான ஓர் இயக்கமாக நாம் பார்க்க முடியாது. உயர்சாதி சிங்களவர்களால் உருவாக்கப்பட்ட பாசிச பௌத்தவாதம் என்பது முதலில் குறி வைத்தது இலங்கையின் கத்தோலிக்கர்களைத் தான். 1883-களில் கொழும்பில் குணாந்தா தேரர் என்ற பௌத்த பிக்குவின் தூண்டுதல்களால் இலங்கை வரலாற்றின் முதல் இனக் கலவரம் தோன்றியது. குணாந்தா தேரரின் வழிகளையே பின்னாளில் அனகாரிக தருமபாலர், வலிசிங்க ஹரிச்சந்திரா போன்றோரும் பின்பற்றினர். 

 

இதனைத் தொடர்ந்து 1915-யில் சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம் வியாபாரிகளைக் குறி வைத்து இலங்கையின் பல பாகங்களில் கலவரங்கள் உருவாகின. அதன் பின் முஸ்லிம்கள் சிங்கள பேரினவாதத்துக்கு முழுவதுமாக அடங்கிப் போனார்கள் என்பது வரலாற்று உண்மை. 

 

சிங்கள பௌத்த பாசிசவாதம் என்பது சிங்கள பௌத்தர்களைத் தவிர ஏனைய அனைத்து மக்களையும் விதேசிகளாக, அந்நியர்களாகக் காட்ட முனைந்தது. இவ்வாறே இலங்கையின் தேசபக்தியை உருவாக்கிக் கொண்டார்கள். இன்றளவும் கூட இலங்கையில் பரவலாக இந்திய எதிர்ப்புணர்வு இருந்து வருகின்றது. இந்த இந்திய எதிர்ப்புணர்வு மிகுதியாகச் சிங்கள பௌத்த உயர்சாதியினர் மத்தியிலும், தமிழ் வேளாள உயர்சாதியினர் மத்தியிலும் மிகுதியாகவே உள்ளன. 

 

திருவாங்கூர் சமஸ்தானம் மற்றும் கொச்சி பகுதிகளில் இருந்து இலங்கைக்குக் குடியேறியவர்களே இலங்கை மலையாளிகள். இவர்கள் இலங்கை முழுவதும் பல்வேறு வியாபாரம், தொழில்களில் ஈடுபட்டு வந்திருந்தனர். இலங்கையில் அப்போதிருந்த தொழிலாளர்களில் மலையாளிகளே பெரும்பங்கானவர்களாக இருந்தனர். அவர்கள் தொழிற்சாலைகளில், தொடர் வண்டி நிலையங்களில், கடைகளில், செல்வந்தர்கள் வீடுகளில் பணியாற்றி வந்தனர். அது மட்டுமில்லாமல் பல்வேறு மலையாளிகள் ஆசிரியர்களாகவும், கணக்கர்களாகவும், சிறு வியாபாரிகளாகவும், தேநீர் கடைகள், உணவகங்கள் நடத்துபவர்களாகவும் இருந்தனர். கள்ளிறக்கும் தொழில் செய்யவும் பல்வேறு மலையாளிகள் இருந்துள்ளனர். 1930-களில் சுமார் 30, 000 மலையாளிகள் இருந்துள்ளதாகக் குமாரி ஜெயவர்த்தனா எழுதுகின்றார். முன்னாள் தமிழக முதல்வரான எம்.ஜி. ராமச்சந்திரன் கூட இலங்கையில் பிறந்த ஒரு மலையாள வம்சாவளி என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. 

 

CEYLON_ISLAND.gif

கத்தோலிக்கர்கள், முஸ்லிம்களைத் தொடர்ந்து சிங்கள பேரினவாதத்தின் கண்கள் விழுந்தமை மலையாளிகள் மீது தான். 1920-களில் தொழிற் சங்க தலைவராக விளங்கிய ஏ.ஈ. குணசிங்கா என்பவர் வெளிப்படையாக மலையாளிகள் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொழிற்சங்கத்தின் சார்பாகப் பிரசுரிக்கப்பட்டு வந்த சிங்கள இதழான வீரயாவில் அவர் தொடர்ந்து மலையாளிகள், கரையோர முஸ்லிம்கள் மீதும் வன்மங்களைத் தெளித்து வந்தார். 

 

சிங்களவர்களின் வேலை வாய்ப்புக்களை மலையாளிகள் பறிப்பதாகவும், அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு வேலைக் கொடுக்கக் கூடாது எனவும், மலையாளிகளின் கடைகளில் உணவருந்தக் கூடாது எநவும் பிரச்சாரப் படுத்தி வந்தார். அனகாரிக தருமபாலாவின் சிங்கள பாசிசவாதத்தைத் தொடர்ந்து வளர்த்தெடுத்தவர் இவரே எனலாம். இவரது கண்களில் எதிரியாகக் கிடைத்தவர்கள் அப்பாவி மலையாளிகளே. கொழும்பு நகரத்தில் அக் காலக் கட்டத்தில் மலையாளிகள் பல இடங்களில் கடுமையாகத் தாக்கப்பட்டனர், வீடுகள் கொடுக்காமல் அலைகழிக்கப்பட்டனர். 

 

ஏ.ஈ.குணசிங்கா மலையாளி எதிர்ப்பியக்கத்துக்கு ஆதரவாகச் சிங்களவரை மட்டும் திரட்டாமல் இலங்கைத் தமிழர்களின் ஆதரவையும் திரட்டினார். '' இலங்கையில் மரபு வழி வந்த நிரந்தரவாசிகளான சிங்களவரும், பிற இனத்தவரும் வேலையின்மையால் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்ற நிலையில், ஆயிரக் கணக்கான மலையாளிகள், வேலைகளைப் பெற்று வருகின்றனர் '' என வீரயா இதழ் ( 26 பிப்ரவரி. 1936 ) குறிப்பிட்டது. 

 

அக் காலக் கட்டத்தில் மலையாளிகளை ஒதுக்குவதில் சிங்களவரும், இலங்கைத் தமிழர்களும் ஒன்றாகச் செயல்பட்டனர் எனவும், ஒரு தரும யுத்தத்தின் ஆரம்பம் எனவும் வீரயா இதழில் தொடர்ச்சியாக எழுதப்பட்டு வந்தன. இதே காலக் கட்டத்தில் தான் ஐரோப்பாவில் ஆரிய மேன்மை பாராட்டும் பாசிசவாதம் எழுச்சி பெற்று வந்தது. இட்லர், முசோலிணி போன்ற தலைவர்கள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள இந்துத்வ, சிங்கள பாசிசவாதிகளை வளர்த்தெடுத்தனர். ஆரிய இன மேன்மை போதிக்கப்பட்டது. இதுவே சிங்கள பாசிசவாதத்துக்கும் புத்துணர்ச்சி கொடுத்தது. இதே காலக் கட்டத்தில் தான் எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிகளும் எழுச்சியடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

அக் காலக் கட்டத்தில் இலங்கையில் வாழ்ந்த மலையாளிகள் சிங்கள, தமிழ் பெண்களை மணந்தும் வந்தனர். இதனை வீரயா ஏடு பலமுறை கண்டித்தது எனக் குமாரி ஜெயவர்த்தனா பின்னாட்களில் எழுதி உள்ளார். குறிப்பாக மலையாளிகள் தந்திர, மந்திரங்கள் செய்யக் கூடியவர்கள் எனவும். அவர்கள் இலங்கைப் பெண்களை ( குறிப்பாகச் சிங்களப் பெண்களை ) வசியம் செய்து வருகின்றனர் எனவும் பிரச்சாரங்கள் எழுந்தன. அது மட்டுமில்லாமல் மலையாளிகளைக் காதலித்து வந்த எண்ணற்ற சிங்களப் பெண்கள் தாக்கப்பட்டமையைப் புகழ்ந்தும் எழுதி வந்தனர் அவர்கள். 

 

மலையாளிகளைக் காதலித்துத் திருமணம் செய்யும் சிங்கள பெண்கள் கைவிடப்படுவார்கள், ஏமாற்றப்படுவார்கள் என்ற கருத்தை வீரயா இதழில் சிறிசேனா என்பவர் ஒரு கட்டுரையாகவே எழுதினார். இது இக்காலத்தில் தமிழகத்தில் தலித்களை மணக்கும் ஆதிக்கச் சூத்திரப் பெண்களை எச்சரித்து வரும் ராமதாஸ் போன்றோரின் கருத்தோடு ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது. 

 

ஆனால் இலங்கையில் அக்காலக் கட்டத்தில் தோன்றிய லங்கா சமசமாசக் கட்சி என்ற இடது சாரி சோசலிசக் கட்சி மலையாளிகளைச் சிங்களவர்கள் புறக்கணிப்பதை கடுமையாக விமர்சித்தது. அத்தோடு அனைத்து தொழிலாளர்களும் ஒன்றாகவே கருதப்பட வேண்டும் எனவும், மலையாளிகளின் உரிமைகளுக்காகவும் அது குரல் கொடுத்தது. மலையாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட எஸ்.ஏ விக்கிரமசிங்கை, டி.சொய்சா போன்றோரை சிங்கள பாசிசவாதிகள் துரோகிகள் எனப் பரப்புரை செய்து வந்தனர். 

 

1939-களில் கேரளத்தில் புகழ் பெற்று விளங்கிய கம்யூனிஸ்ட தலைவர்களில் ஒருவரும், தொழிலாளர் நலன்களுக்காகப் போராடியவருமான ஏ.கே.கோபாலன் என்பவர் இலங்கைக்கு வந்தார். இலங்கை வாழ் மலையாளிகள் லங்கா சமசமாசக் கட்சியோடு இணைந்து செயல்படுமாறு ஊக்கமளித்தார். கொழும்பில் நடைப்பெற்ற பல கூட்டங்களில் அவர் பேசினார், அவரது கூட்டத்தைச் சிங்கள பாசிசவாதிகள் கடுமையாக எதிர்த்தனர், குழப்பவும் செய்தனர். பின்னாளில் இலங்கைவாழ் மலையாளிகள் ஐக்கியச் சோசலிசக் கட்சியோடு இணைந்து செயல்பட்டனர். இலங்கை வர்த்தகச் சங்கங்களின் கூட்டணியில் பல மலையாளிகள் முக்கியப் பங்காற்றினார். அவர்களில் கே.மாதவன், வாசு தங்கப்பன் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

 

1940-களில் பல மலையாளிகள் கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் திரும்பிச் சென்று விட்டனர். இலங்கை விடுதலையடைந்த பின் குடியுரிமைச் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட இடர்பாடுகளால் பலரால் தொடர்ந்து இலங்கையில் வாழ முடியவில்லை. இலங்கையில் தங்கிய சில மலையாளிகள் சிங்களவரோடும், தமிழரோடும் கலப்புத் திருமணம் செய்து இரண்டறக் கலந்து விட்டனர். 

 

பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை என்பவரும் கேரள பூர்விகம் கொண்ட்வர் எனவும் ஒரு செய்தி அண்மையக் கால இந்திய ஊடகங்களில் வெளியானது. குறிப்பாக வேலுப்பிள்ளையின் உறவினராக 77 வயதான ஜானகி அம்மாள் என்பவர் அறியப்பட்டார். இவர் கொல்லத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள பூந்தளத் தாழத்தில் வசித்து வருகின்றார். 

 

தாம் சிறு வயதாக இருந்த போது தமது தாய் மாமனான வேலுப்பிள்ளையைக் கண்டிருப்பதாகவும். தனது தாயாரோடு பிறந்த ஐந்து சகோதரர்களில் ஒருவரே வேலுப்பிள்ளை எனவும் கூறினார். அது மட்டுமில்லாமல், யாழ்ப்பாணத்தில் இருந்து 18.12.1953-யில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தையும் அவர் வைத்திருக்கின்றார். அக் கடிதத்தில் வேலுப்பிள்ளை, வளை பீடாக் கடை, 224, காங்கேசன் துறை ரோடு, யாழ்ப்பாணம் என்ற முகவரியும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

பின்னாளில் தொடர்புகள் இழந்து விட்டதாகவும், 1991-களில் ராஜிவ் காந்தி கொலையான சமயத்தில் காவல் துறையினர் இவர்களை அழைத்து விசாரித்ததாக 81-வயது நிரம்பிய ஜானகி அம்மாளின் கணவன் பரமேஸ்வரன் பிள்ளை கூறினார். 

 

மலையாளிகள் இன்று சிங்களவருக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்ற கருத்து உள்ளது. அதில் உண்மையும் உள்ளது என்ற போதும், சிங்கள பாசிசவாதிகளின் மலையாள எதிர்ப்பியக்க வரலாற்றை இன்று நாம் அனைவருமே மறந்தே போய்விட்டோம். மலையாளிகள் இன்று இந்திய வெளியுறவுக் கொள்கையில் பெரும் பங்காற்றி வருகின்றனர்.

 

smash_fascism-555px.png

இன்றையக் கட்டத்தில் இந்தியாவில் வலுவான நிலையில் இருக்கும் மலையாளிகளின் பங்கை சிங்கள பேரினவாத அரசாங்கம் எதிர்ப்பார்க்கின்றது. அதனால் தான் சென்னையில் இருந்து தூதரகத்தை பெரு நகரான பெங்களூருக்கு கூட மாற்றாமல் திருவனந்தபுரத்துக்கு மாற்ற ஏற்பாடு செய்கின்றது. மலையாளிகளில் நாயர், மேனன், நம்பூதிரி என ஆதிக்கச் சாதி சக்திகள் சிங்கள பேரினவாதத்துக்கு துணை போகின்றன. 

 

ஆனால் பல மலையாளிகள் இன்றளவும் தமிழர்களை நட்போடு பார்க்கின்றனர். குறிப்பாக கேரளத்தின் ஈழவா, கிறித்தவ, இஸ்லாமிய சமூகங்களோடு நட்புறவை வளர்த்து கொள்வதன் மூலம் ஆதிக்க சாதி மலையாளிகளை கட்டுப்படுத்த முடியும் என நினைக்கின்றேன். மறைக்கப்பட்ட சிங்கள பாசிசவாதிகளின் மலையாள எதிர்ப்புணர்வு வரலாற்றை மலையாளிகள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டிய ஒரு அவசியமான கட்டத்தில் நாம் இருக்கின்றோம். 

 

இலங்கைத் தீவின் தமிழர்களின் உரிமைகளைப் பெற மலையாளிகளின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும் என்பதை மட்டும் மீண்டும் ஒரு முறை இங்கு நினைவூட்டல் செய்து கொள்கின்றேன். 

 

நன்றிகள்: குமாரி ஜெயவர்த்தனா, இலங்கை இன வர்க்க முரண்பாடுகள் (1987)
 

 

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டே ராச்சியத்தின் சிங்கள மன்னன் சங்கபோதி புவனேகபாகு ஒரு மலையாளி. இவனது இயற்பெயர் செண்பகப் பெருமாள் என்பது அதனைச் சிங்களத்தில் சப்புமல் குமாரயா என்று கூறுவர்.

 

சிங்களவருக்கும் மளையாளிகளுக்கும் இன்னும் பல வரலாற்றுத் தொடர்புகள் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.